Archive for ஹரன் பிரசன்னா

OTT தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தணிக்கை

அரவிந்தன் கண்ணையன் ஒரு பதிவு ஒன்றை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதாவது அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சானல்களில் திரைப்படங்களுக்கும் தணிக்கை வேண்டும் என்று சிவசேனா கட்சி கேட்டிருந்ததை நான் பார்வேர்ட் செய்ததை ஒட்டிய பதிவு அது.

சிவசேனா கேட்டதற்காக அல்ல, நான் முன்பிருந்தே இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கை வேண்டும் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். நான் கேட்டதன் காரணம் மத ரீதியானது என்பது முதற் காரணம் அல்ல. முதன்மையான காரணங்கள், அந்தத் திரைப்படங்களில் வரும் வெளிப்படையான பாலுறவுக் காட்சிகளும் மிகக் கொடூரமான வன்முறைக் காட்சிகளும்தான். அதேசமயம் மதரீதியான விஷயங்களுக்கும் தணிக்கை இருப்பதற்கு நான் எதிர்ப்பும் அல்ல. அதுவும் கிறிஸ்தவ மாஃபியா கைகளில் சிக்கி இருக்கும் இது போன்ற தளங்களுக்கு இத்தகைய தணிக்கை இல்லாமல் இருப்பதுவே ஆபத்தானது.

உண்மையில் இன்றைய திரைப்படங்கள் தணிக்கைக்குப் பின்தான் வருகின்றன. ஆனால் அங்கே எந்த வகையிலும் இந்து மதம் பாதுகாக்கப்படவில்லை. இது ஒரு மிக வெளிப்படையான உண்மை. எனவே இது போன்ற சானல்களுக்குத் தணிக்கை என்று வந்துவிட்டால் அது பாசிசம் என்றாகி விடும் என்ற கருத்து அடிப்படையற்றது.

இன்று ஹிந்து மதத்திற்காக நான் பேசுவதாக நீங்கள் வைத்துக்கொண்டாலும் கூட (அது உண்மையே), நாளை அது எந்த ஒரு மதத்திற்கும் உதவத்தான் போகிறது. இது கூடத் தெரியாமல் நான் அதைச் சொல்லவில்லை. எங்கோ மற்ற மதங்களின் மதத் தலைவர் ஒருவரின் படம் எடுக்கப்பட்டதற்கு இங்கு சென்னையும் தமிழ்நாடும் அப்படிக் கொந்தளித்தது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் இதுபோன்ற திரைப்படங்களுக்குத் தணிக்கை அவசியமா என்பதைப் பார்க்க வேண்டும்.

திரைப்படங்களுக்கான தணிக்கை என்று ஒன்று இருக்கும்பொழுது இதுபோன்ற தளங்களுக்கான படங்களுக்குத் தணிக்கை தேவையில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தணிக்கை என்பதே ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்ற மிக முற்போக்கான சமூகத்தில் நாம் வாழவில்லை. எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. அதை நம்புபவர்கள் இந்த விவாதத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல. அரவிந்தன் கண்ணையன் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

அவரது பதிவில் கிழக்கு பதிப்பகம் என்று குறிப்பிட்டு, அந்தப் பதிப்பகத்தைக் குறிப்பிடக் காரணம், நாளை கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களுக்கும் தணிக்கை வேண்டுமா என்ற அறிவார்ந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதற்கு இரண்டு பதில் சொல்ல வேண்டும். முதலாவது, புத்தகங்களும் திரைப்படங்களும் ஒன்றல்ல. அந்த இரண்டையும் ஒன்றாகவே கருதி, தணிக்கை இரண்டுக்கும் வேண்டும் என்று சொல்லும் அசட்டுத் துணிச்சல் எனக்கில்லை. உண்மையில் அரவிந்தன் கண்ணையனுக்கும் முடிந்து இருக்க முடியாது. ஆனால் ஹிந்து மதத்தை ஆதரிப்பவரை பாசிஸ்ட் என்று சொல்ல வேண்டும் என்ற அவரது பதற்றமே இதற்குக் காரணம். இரண்டாவதாக கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான பத்ரி சேஷாத்ரி இதுபோன்ற தளங்களுக்கு தணிக்கை என்பதற்கு முற்றிலும் எதிரானவர். ஆனால் இது ஒரு பொருட்டாக அரவிந்தன் கண்ணையனுக்குத் தெரியவில்லை. அதில் வேலை செய்யும் எனது கருத்தை வைத்துக்கொண்டு வேகவேகமாகக் கருத்தைச் சொல்வது அவருக்கு முதன்மை ஆகிறது. அதற்கும் காரணம் இந்து மதம்தான்.

ஹிந்து மதம் என்று வரும்பொழுது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இப்படிப் பேசுவது என்பது ஒட்டுமொத்த முற்போக்காளர்களின் செயல்பாடாகவே இருக்கிறது. பொதுவாக இதை அடிப்படையாக வைத்து எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது முற்போக்காளர்கள் என்ற பெயரில் உலாவரும் கம்யூனிஸ்டுகள்தான். இன்று அது ஒரு பொதுவான போக்காகவே மாறிவிட்டிருக்கிறது. இந்து மதத்தை வம்படியாகத் திரைப்படங்கள் தாக்கும்போது இவர்கள் யாருமே வாயைத் திறக்க மாட்டார்கள். மாறாகப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பார்கள். ஆனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தணிக்கை வேண்டும் என இப்படி ஒரு அறிக்கை விடும்போது என்று வரும் பொழுது மிகச்சரியாக ஓடி வருவார்கள்.

அந்த எனது பதிவில் ஒரு கமெண்ட்டில் நானே தெளிவாகச் சொல்லி இருந்தேன், சிவசேனா என்பது புனிதம் அல்ல என்று. அதுவெல்லாம் இவர்களுக்கு முக்கியமே அல்ல. இவர்களது நோக்கம் இந்து மதத்தை ஆதரிக்கும் ஒருவரை பாசிஸ்ட் என்று அழைப்பதும் அவர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தை இழுத்து அதற்குத் தணிக்கை வேண்டும் என்று கேட்பதும்தான். அது எந்த அளவுக்கு என்றால் திரைப்படங்களும் புத்தகங்களும் ஒன்று என்ற அளவிற்கு.

உண்மையில் இன்று புத்தகங்களுக்குத் தணிக்கை இல்லை என்பதனால் நீங்கள் எந்த ஒன்றையும் அச்சிட முடியாது. புத்தகம் வெளிவந்த மறுதினமே தடைசெய்யப்படும் அத்தனை சாத்தியங்களும் உள்ளது. மேலும் புத்தகம் வாசிப்பாளர்கள் மிகமிகக் குறைந்துவிட்ட தருணத்தில் இன்று புத்தகங்களையும் திரைப்படங்களையும் ஒன்றாக வைக்கமுடியாது. அதிலும் வீட்டுக்குள்ளே எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வரும் இது போன்ற சேனல்களில் வரும் திரைப்படங்களை, சீரியல்களை ஒப்பிடவே முடியாது. ஆனால் அரவிந்தன் கண்ணையன் தைரியத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்.

அதே பதிவில் ஒரு அறிவுக்கொழுந்து என்னைப் பற்றி, 21 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று கூறியவர்தானே இவர் என்று கேட்டிருக்கிறார். நான் சொன்னது, உண்மைதான். ஆனால் அது யாருக்குச் சொன்னது என்பது முதலாவது விஷயம். கல்யாணத்தைக் காரணம் காட்டி, மதமாற்றத்தைக் காரணம் காட்டி, பெண்களுக்குப் பாலிய விவாகம் வேண்டும் என்று கூறுபவர்களிடம், தயவுசெய்து 21 வயது வரையிலாவது பொறுத்திருங்கள் என்ற தொனியில் எழுதப்பட்ட கட்டுரை. தன் மகள் மதம் மாற மாட்டார் என்ற நம்பிக்கை உள்ள இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் 25 வயது 30 வயது வரையில் கூடக் காத்திருந்து அவர்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்ளட்டும். அதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் தன் மகள் மதம் மாறக் கூடாது என்று நினைக்கும் ஒருவர், பால்ய விவாகம் என்ற கருத்தை நோக்கிச் செல்வது அபத்தமானது, அநியாயமானது, அராஜகமானது; அது கூடாது என்ற நோக்கில் குறைந்தபட்சம் 21 வயதில் திருமணம் செய்யுங்கள் என்று சொல்லியிருந்தேன். இன்று பெண்ணுக்குத் திருமண வயது 18. நான் 21 வயதில்தான் திருமணம் செய்யலாம் என்று சொல்லியிருந்தேன். ஆண்களுக்குக் கூட அல்ல, பெண்களுக்கு மட்டுமே, அதுவும் தவிர்க்கமுடியாத பட்சத்தில். ஆனால் அந்த அறிவுக்கொழுந்துக்கு அதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒருவேளை தானும் தன் மகளும் எதிர்காலத்தில் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்பவர்களுக்கும், தானே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் அல்லது செய்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கும் இது ஒரு பிரச்சனையே அல்ல என்று தோன்றலாம். அவர்களுக்கானது அல்ல இது.

இந்து மதத்தினரும், எந்த ஒரு மற்ற மதத்தினரும் கல்யாண ஆசை காட்டி சூறையாடப்பட்டு விடக்கூடாது என்பதற்கான பதில்தான் நான் எழுதி இருந்தது. ஆனால் இந்த அறிவுக்கொழுந்து அதையெல்லாம் படித்திருப்பாரா என்பது தெரியவில்லை. படித்தாலும் புரிந்திருக்குமா என்பது இரண்டாவது விஷயம். அல்லது எந்த ஒன்றையும் ஒரே வரியில் சொல்வது இன்றைய சமூக ஊடக ஜாதியைச் சேர்ந்த ஒரு விஷயம் ஆகிவிட்டதால் அவருக்கும் அந்த வியாதி தாக்கி இருக்கலாம். எனவே அந்த அறிவுக்கொழுந்துக்கு இனியும் பதில் சொல்வது தேவையற்றது.

ஆனால் அதில் நான் நம்பும் சிலர் கமெண்ட் போட்டிருந்தார்கள். அந்தப் பதிவை நான் எழுதியபோது இதற்கு ஒரு பதில் சொல்ல நினைத்தேன். இன்று அதே நண்பர்கள் மீண்டும் அதையே செய்யும்பொழுது இதைத் தெளிவாக்குவது என் கடமையாகிறது.

அவர்களை விடுங்கள். மீண்டும் என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். உங்களுடைய மகனோ மகளோ கல்யாணம் என்ற ஒன்றைக் காட்டி மதம் மாறக் கூடாது என்று நினைத்தால் அதுவும் அதை உங்களிடம் இருந்து தொடங்குங்கள். மதம் என்பதை திருமணத்தின் போது திடீரென ஒன்றாக நுழைத்தால் இதுதான் நிகழும். நீங்களே சரியாக இருந்தால் இந்தப் பிரச்சினை உங்களுக்கு ஒருவேளை வராது. அப்படியும் மீறி இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்தால், உங்கள் மகள் கல்யாணம் என்ற ஒன்றைக் கட்டி மதம் மாற்றப்படக் கூடிய அபாயம் இருந்தால், உண்மையில் 21 வயதில் திருமணம் செய்விப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே சமயம் பால்ய விவாகத்தை ஆதரிக்கும் கட்டத்துக்குள் போய்விடாதீர்கள். இதுதான் அன்றும் இன்றும் என்றும் என் நிலைப்பாடு. இதில் வெட்கப்பட ஒன்றுமே இல்லை.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் நேரு அல்ல பிரச்சினை நேருவியர்களே என்று. அந்த நேருவியர்கள் வெற்று காங்கிரஸ்காரர்களாக மாறிவிடும் அபாயமான சூழல் இன்று சூழ்ந்திருக்கிறது என்பதை உணருகிறேன்.

Share

மகாமுனி – திரைப்பார்வை

‘மௌன குரு’ எடுத்த இயக்குநரின் படம் என்பதாலேயே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. மௌன குரு எதிர்பார்ப்பே இல்லாமல் வந்த நல்ல படம். மகாமுனிக்கு இதுவே ஒரு பெரிய அழுத்தத்தைத் தந்திருக்கும். ஒரு இயக்குநரின் இரண்டாவது படம் (என்று நினைக்கிறேன்) என்பது கத்தி மேல் நடப்பது.மிகக் கவனமாக இதைச் செய்ய நினைத்திருக்கிறார் சாந்தகுமார். பட சுவரொட்டிகளிலெல்லாம் உலகத் தரத்தில் ஒரு திரைப்படம் என்றெல்லாம் போட்டிருந்தார்கள். எனக்கு கமலின் சூரசம்ஹாரம் நினைவுக்கு வந்தது! நல்லவேளை, இது அந்த அளவுக்கு இல்லை.

இரன்டு முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். அரசியல் கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகள். அரசியல் கொலைகளில் அடியாழம் வரை தொட்டிருக்கிறார். ஆணவக் கொலையில் கொஞ்சம் மட்டுமே பேசி இருக்கிறார். எனவே அரசியல் தொடர்பான காட்சிகள் முதலில் சவசவ எனத் தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் வேகம் பிடிக்கின்றன. முனி தொடர்பான காட்சிகள் அப்படியே ஏதோ போகின்றன.

எத்தனை பெரிய இயக்குநரும் ஏன் இந்த இரட்டை வேடக் கதைகளில் விழுந்துவிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. கடைசியில் அத்தனையும் இந்த ஆள்மாறாட்டத்துக்கா என்றாகும்போது சே என்றாகிவிடுகிறது. இதை முதலிலேயே காண்பித்துவிடுகிறார்கள். சஸ்பென்ஸ் என்றெல்லாம் வைத்து காதில் பூ சுற்றவில்லை. ஆனால் எப்படியும் இப்படித்தான் ஆகப்போகிறது என்னும்போது, இத்தனை நாள் எத்தனையோ தடவை தமிழ்த் திரையுலகம் சப்பிப் போட்ட மாங்கொட்டையை மீண்டுமா என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆர்யா நன்றாக நடித்திருக்கிறார். மகாவின் மனைவியாக வரும் நடிகையும் நன்றாக நடிக்கிறார். இளவரசு வழக்கம்போல நல்ல நடிப்பு. மற்றவர்கள் யாருமே ஒட்டவில்லை. மௌன குருவில் இருந்த ஒரு கச்சிதம் இதில் இல்லை என்பதே பெரிய குறை. படம் ஆணவக் கொலை அரசியல் கொலை என்றெல்லாம் சுற்றினாலும் யாரையும் எந்த மதத்தினரையும் புண்படுத்தவேன்டும் என்ற எண்ணமெல்லாம் சாந்தகுமாருக்கு இல்லை என்பது ஆசுவாசம். மலினமான கேலிகள், வம்பிழுத்தல் என எதுவும் இல்லை. முதல் காட்சியில் வழுக்கைத் தலையுடன் கருப்புக் கண்ணாடி போட்டிக்கொன்டு மஞ்சள் துண்டுடன் ஒருவர் தமிழ்ச் செய்யுளில் ஆரம்பிக்கவும் ஆகா என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் இல்லை.

வசனங்களைக் குறைத்து, நடிகர்களின் நடிப்பைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி ஒரே ஒரு கதையை மட்டும் ஆழமாகப் பேசி இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கவேண்டிய படம் இப்போது எங்கேயோ தேங்கி நிற்கிறது. மற்றபடி உலகத் திரைப்படம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

பின்குறிப்பு: நடிகை ரோஹிணி நடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு வசனம் மட்டுமே. சாந்தகுமாரின் இந்த முன்னெச்சரிக்கையைப் பாராட்டவேன்டும்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ் வலைத்தளம்

Share

மிர்ஸாப்பூர் – அமேஸான் ப்ரைம் தொடர் – எபிசோட் 1

‘வெள்ளை ராஜா’ என்றொரு தொடர் தமிழில் அமேஸான் ப்ரைம் தயாரிப்பில் வந்தது. அதைப் பார்த்தபோதே எழுதினேன், இது போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கும் சென்ஸார் வைப்பது நல்லது என்று. இப்போது மிர்ஸாப்பூர் பார்த்தேன். வெள்ளை ராஜா எல்லாம் இதற்கு முன் ஒன்றுமே அல்ல!

அதீத வன்முறை, அதாவது பதற்றத்துடன் கண்ணை மூட வைக்கும் வன்முறை, அதீதமான உறவுக் காட்சிகள், மிக ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்கள் எனக் கலங்கடித்துவிட்டார்கள். இது ‘வெள்ளை ராஜா’அளவுக்கு மோசமில்லை. ஆஹா ஓஹோவுமில்லை. ஆனால் எப்படியோ ஒன்றச் செய்துவிடுகிறார்கள்.

மிர்ஸாப்பூர் – சாதாரண கதை. திரை உலகம் கடித்துச் சவைத்துத் துப்பிவிட்ட கேங்ஸ்டர் கதை. அதே கதையை எவ்விதத் திருப்பமும் இல்லாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள், ஆனால் பொறுமையாக. 2 மணி நேரத்தில் பாட்டு சண்டை என்றெல்லாம் வைத்து, ஹீரோவைப் புனிதமாக்கி என்பதான எவ்விதச் சிக்கலும் இல்லை என்பதால் கதையை மட்டுமே மையமாகக் கொண்டு நகர்த்துகிறார்கள். அட்டகாசமான ஒளிப்பதிவு, இசை எனக் கலங்கடிக்கிறார்கள்.

அதீதமான வன்முறைக் காட்சிகள். கிட்டத்தட்ட ஐந்து காட்சிகளிலாவது நான் கண்களை மூடிக்கொண்டிருப்பேன். அதிலும் இறுதி எபிசோடின் சில காட்சிகள் – உவ்வேக். மறந்தும் குழந்தைகளுடன் பார்த்துவிடாதீர்கள்.

பங்கஜ் திரிபாதியின் நடிப்பு – உலக லெவல். அதேபோல் ஒவ்வொரு நடிகருமே மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். ஆச்சரியப்படுத்துகிறார்கள். கதையில் எவ்விதமான புதிய தன்மையும் இல்லை என்றாலும், நடிகர்களின் நடிப்புக்காகவும் நம்மைத் தொற்றிக் கொள்ளும் பதற்றத்துக்காகவும் பார்க்கலாம், எப்போது யாரைக் கொல்வார்கள், யார் யாரை தேவையே இல்லாமல் கலவி கொள்வார்கள் என்ற அச்சத்துடன்!

தமிழில் சப்டைட்டில் கிடைக்கிறது. பல இடங்களில் அட்டகாசமாகவே மொழிபெயர்த்திருக்கிறார்கள். முக்கியமாக, ஆவோ பேட்டா என்பதையெல்லாம் கர்ம சிரத்தையாக வா மகனே என்றெல்லாம் எழுதிக் கொல்லாமல், வாப்பா என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது அடிப்படையான விஷயம்தானே, இதை ஏன் பாராட்டவேண்டும் என்றால், மற்ற மொழிபெயர்ப்புகளின் தரம் இந்த அளவில்தான் அமேஸான் ப்ரைமில் இருக்கிறது! இதில் கபூதர் என்ற வார்த்தையை புறா என்று நேரடியாக மொழிபெயர்க்காமல், கதைக்கு ஏற்றவாறு குருவி என்று மொழிபெயர்த்தது நிச்சயம் பாராட்டுக்குரியது. சில எபிசோடுகளில் கடுமையாகச் சொதப்பியும் இருக்கிறார்கள். உதாரணமாக, ‘உண்ணதானே குபத்ராங்க என் ஃப்ரண்ட் கல்யாணம் ஒளுங்கா எந்திர்சு வா’ என்பதெல்லாம் அராஜகம். எழுத்துகள் கணக்குக்காக புள்ளி கமா இல்லாமல் மொழிபெயர்ப்பதெல்லாம் அநியாயம், அக்கிரமம்.

தமிழ் சப்டைட்டிலுடம் பார்ப்பவர்கள் கவனத்துக்கு – உங்களை அதிரச் செய்யும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் அப்படியே தமிழ் சப்டைட்டிலில் வரும். எனவே கவனம். தனியாக இருந்து பாருங்கள். 🙂

இத்தனை வன்முறை, ஆபாசம் எல்லாம் வீட்டுக்குள் வருவது சரியா தவறா என்று யோசிக்கவே அயர்ச்சியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் இதைத் தவிர்க்க முடியாது என்பதுதான் யதார்த்தம். சைல்ட் லாக் போட்டு பூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இது உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்குமா, பையன்கள் பார்க்காமல் இருப்பார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. நம் மன திருப்திக்காக செய்துகொள்ளவேண்டியதுதான் போல. தமிழில் ‘வெள்ளை ராஜா’வை இதே போல் அப்படியே எடுக்க முனைந்திருக்கிறார்கள் போல. ஆனாலும் தமிழில் ஹிந்தி அளவுக்குப் போக முடியவில்லை. இனி போவார்கள் என நினைக்கிறேன்.

Share

நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்

இது அப்துல்லாவின் பதிவு. இதைப் படித்துவிடுங்கள். முக நூலில் இல்லாதவர்களுக்காகவும் சேமிப்புக்காகவும் அப்துல்லா எழுதியதை இங்கே பதிகிறேன்.

ஏதாவது நல்ல நாள், கெட்டநாள் வந்துட்டா போதும். உடனே இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க எதுனா “நம்மில் எத்னி பேருக்கு தெரியும்” டைப் கதையை தூக்கிகிட்டு கிளம்பிருவானுங்க. இன்றைக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்சியின் தந்தை எனப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் பிறந்தநாள். காலையில் எனது ஸ்கூல் வாட்ஸ் அப் குரூப்பில் கீழ் காணும் செய்தி வந்தது!

————————————-+———————-+—————

திமுக விட்ட ராக்கெட்

விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.

பின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது? இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா?

விக்ரம் சாராபாய் மேல் சொன்ன காரணங்களுக்காக கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். மப்பில் இருந்த அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.

அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட தண்ணி பார்ட்டி அமைச்சர் மதியழகன்.

கண்டு கொள்ளுவோம் கழகங்களை

இன்று விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்த நாள்.

————————————–+———————+—————-

இதுல காமெடி என்னன்னா ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 1971 இல் செப்டம்பர் மாதம்.

ஆனால் அறிஞர் அண்ணாவோ 1969 இலேயே இறந்து போனார். செத்து போன அண்ணாவை விக்ரம் சாராபாய் போயி சொர்கத்துல பார்க்க நினைச்சாரோ என்னவோ!!!

இதுல இன்னொரு காமெடி என்னன்னா.. கதை சொல்லப்பட்ட அன்றைய காலகட்டத்தில் மதியழகன் சபாநாயகராக இருந்தார். அமைச்சராக அல்ல! எந்தத் திட்டத்திற்கும் எவரும் சபாநாயகரைச் சந்திக்கவே மாட்டார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பி.ஜே.பி பாய்ஸ். அடுத்தவாட்டி கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க 🙂

#நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?

என்னவோ காலையில் கண்ணில் படவும் இது பொய்யாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுடனேயே அப்துல்லா இணையத்தில் தேடி இருக்கவேண்டும். 1971 என்ற வருடம் கண்ணில் பட்டதும், அண்ணாதுரை இறந்தது 1969 என்பது இவருக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதாலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

பொதுவாக அப்துல்லா இப்படி எழுதுபவர் அல்ல. நல்லவர். நண்பர். ஆனாலும் சரியான தகவலைச் சொல்லவேண்டும் என்பதற்காக இப்பதிவு.

அவர் ஷேர் செய்திருக்கும் கட்டுரை வலம் இதழில் வெளியானது.

ஆமருவி தேவநாதன் எதையும் வம்படியாகப் பரப்புபவர் அல்ல. அதோடு வலம் இதழ் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாது. முடிந்த வரை இதில் கவனம் எடுத்தே செய்கிறோம். அப்படியும் சில பிழைகள் வருவதுண்டு என்றாலும், இதைப் போன்ற , இல்லாத ஒன்றை கட்டி எழுப்பும் வேலைகள் வரவே வராது.

இன்று மதியமே இதைப் போட நினைத்தேன். சரியான ஆதாரத்தோடு போடுவோம் என்பதற்காக இப்போது.

இவர் சொல்லி இருக்கும் கருத்து, நம்பி நாராயணன் எழுதிய நூலில் உள்ளது. நூலின் பெயர்: அவர் எழுதப் புகுந்தது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி. எனவே இந்த சின்ன விஷயத்தில் அவர் பொய் சொல்ல முகாந்திரமே இல்லை. அப்படியே அவர் சொன்னதில் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பதாக திமுக நிரூபித்தால், அது தகவல் பிழை மட்டுமே ஒழிய, ஆர் எஸ் எஸ் புரட்டு அல்ல! நம்பி நாராயண் புத்தகத்தில் உள்ள அந்தப் பக்கங்களை ஸ்க்ரீன் ஷாட்டாக இணைத்திருக்கிறேன்.

அப்துல்லாவின் இடுகைக்கு 400+ லைக்குகள், 50+ ஷேர்கள். எனவே இப்பதிவையும் அதற்கு இணையாக வைரலாக்குங்கள். இல்லையென்றால் வழக்கம்போல திமுகவின் பொய்களே வரலாறாகும். அவர்கள் சொன்னதை கம்யூனிஸ்ட்டுகள் பரப்புவார்கள். அதை திகவினர் பரப்புவார்கள். பின்பு அதையே திமுகவினர் ஆதாரமாகக் காட்டுவார்கள். நான்கு சோனகிரிகள் தொலைக்காட்சிகளில் பேசித் திரிவார்கள். இப்படித்தான் வரலாற்றில் அவர்கள் நிற்கிறார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்துல்லா. 🙂

பின்குறிப்பு: பல நாள்களாகப் படிக்க நினைத்த புத்தகம். இதற்காகப் படிக்க ஆரம்பித்து நெருப்புப் போலப் பறக்கிறது. இதைத் தமிழில் கொண்டு வருபவர்கள் அழியாப் புகழ் பெறுவார்கள். அப்துல்லாக்கு நன்றி. 🙂

Share

66வது தேசிய திரைப்பட விருதுகள்

66வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • தமிழில் பாரம் என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும்.
  • தேசிய அளவில் சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி). சரியான தேர்வுதான். எதிர்பார்த்ததும் கூட.
  • மலையாளத்தில் நல்ல படம் – சூடானி ஃப்ரம் நைஜீரியா. நல்ல தேர்வு.
  • தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்ஷாலி – பத்மாவத் படத்துக்காக. சரியான தேர்வு.
  • தேசிய அளவில் சிறந்த பின்னணி இசை – யூரி படத்துக்காக. நல்ல தேர்வு. எதிர்பார்த்ததுதான்.
  • தேசிய அளவில் சிறந்த ஒலிப்பதிவு – யூரி படத்துக்காக. எதிர்பார்த்ததுதான்.
  • தேசிய அளவில் சிறந்த சமூகப் படம் – பேட் மேன். நல்ல தேர்வு.

தமிழுக்கு அதிகம் விருதுகள் தரப்படவில்லை என்றும் தமிழ் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்றும் ஆரம்பித்திருக்கிறார்கள். விருது கொடுத்தால் திருப்பித் தரவேண்டியது, மத்திய அரசைத் திட்டவேண்டியது, அப்புறம் விருது தரவில்லை என்று புகார் வாசிக்கவேண்டியது! விருதுக்கு எத்தனை படங்கள் இங்கே இருந்து அனுப்பப்பட்டன என்ற பட்டியலைப் பார்த்தால்தான் இன்னும் கொஞ்சம் புரியும். கிடைக்குமா என்று பார்க்கிறேன். (திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் இருந்தால் இப்பட்டியல் கிடைக்க வழி செய்யுங்கள்.)

சிறந்த அறிமுக இயக்குநராக மாரி செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். நால் என்றொரு மராத்தி படத்தின் இயக்குநர் தேர்வாகி இருக்கிறார். படத்தைப் பார்த்தால்தான் தெரியும் ஏன் இது தேர்வாகி இருக்கிறது என்று.

மற்றபடி தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. தமிழில் மிக முழுமையான முயற்சிகள் கைகூடவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு படம் வரும்போதும் அந்தப் படத்தின் குறைகளைப் பட்டியலிட்டுவிட்டு, போதாமையையெல்லாம் சொல்லிவிட்டு, விருதுகள் கிடைக்கவில்லை என்னும்போது தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதெல்லாம் அபத்தம்.

மற்றபடி இந்தத் தேசியத் திரைப்பட விருதுகளில் லாபியே இல்லை என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். லாபி இல்லாமல் எப்போதும் இருந்தால் அது சரியானது. ஆனால் காங்கிரஸ் ஆளும் வரை லாபி இருந்தால் ஓகே, ஆனால் பாஜக ஆளும்போது லாபி கூடாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமல்ல. இன்னும் சொல்லப்போனால், பாஜக அரசிலும் இந்த லாபியில் இருப்பது காங்கிரஸ் + முற்போக்காளர்கள் மட்டுமே. பாஜக காரர்களுக்கு இன்னும் ஒரு திரைபடத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. நேற்றுதான் ஹெச்.ராஜா ஒரு ஸ்டேட்டஸை ஃபேஸ்புக்கில் இது குறித்துப் போட்டிருந்தார். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. லாபியில் கொஞ்சம் இந்திய தேசிய சினிமாக்களும் இந்தியத்தையும் ஹிந்து மதத்தையும் நிந்திக்காத சினிமாக்களும் சிறிது காலமாவது வெல்லட்டும்.

Share

Pink Vs நேர்கொண்ட பார்வை

(ஸ்பாய்லர்ஸ் அஹெட்)

பின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தாலும் உறவு கொள்ளக்கூடாது என்கிறது. இந்தக் கடைசி நிபந்தனையை ஒட்டி பின்க் திரைப்படம் வெளியானபோது இந்தியா முழுக்க விவாதம் நடந்தது.

இன்று பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை ஒட்டி இத்திரைப்படம் தமிழிலும் வருவது நல்லது என்று அஜித் நினைத்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பதும் அதை செயல்படுத்துவதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் எப்போதும் குறுக்கே வந்து நிற்கும் தமிழின் துரதிர்ஷ்டம் இந்தத் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. எந்த அளவுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் அமைத்திருக்கிறது என்றால், ஏன் அஜித்தை பின்க்கைப் பார்த்தார் அல்லது ஏன் பின்க்கை நாம் முன்பே பார்த்தோம் என்ற அளவுக்கு!

ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது என்னவெல்லாம் செய்துவிடக்கூடாது என்பதற்குத் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் உதாரணமாக உள்ளன. சமீபத்திய உதாரணம் இது. அதிலும் ஒரு பெரிய நட்சத்திரம் நடிக்கும்போது சின்ன சின்ன காட்சி முதல் பெரிய காட்சி வரை என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒப்பிட பின்க் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் மிகச் சிறந்த உதாரணம்.

பின்க் திரைப்படத்தில் அமிதாப் மிகச் சாதாரண வக்கீல். ஆனால் தமிழில் அஜித்தோ அஜித்! எனவே அவர் தோன்றும் காட்சி பின்னால் இருந்து கொஞ்சம் ஸ்டார்-சஸ்பென்ஸுடன் காண்பிக்கப்படுகிறது. மற்ற பெரிய நட்சத்திரங்களின் படத்துடனும் அஜித்தின் மற்ற படங்களுடனும் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் பின்க்-க்கு இது ஒத்துவராது. அதைவிட அடுத்த காட்சியில் அஜித் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும்போது அவரை அழைக்கும் உதவியாளர் மிரள்வதெல்லாம் தாங்க முடியாத காட்சி.

அஜித்துக்கு ஒரு காதல் காட்சியும் பாட்டும் பைக் சீனும் சண்டையும் வேண்டும் என்பதற்காக ஜஸ்ட் லைக் தட் சேர்த்திருக்கிறார்கள். இவை மட்டுமே மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் வரும்! பின்க் படத்தில் அமிதாப் உடல் நிலை சரி இல்லாதவர். அவர் மனைவியும் உடல் நிலை சரி இல்லாதவர். ஆனால் நேர்கொண்ட பார்வையில் என்னவெல்லாமோ காண்பித்து அஜித் ‘நான் வாழ வைப்பேன்’ சிவாஜி ரேஞ்சுக்கு தலையைப் பிடித்துக்கொண்டு உடலைக் குலுக்குகிறார். உண்மையில் நல்ல திரைப்படத்தின் ரசிகன் அந்தக் காட்சியோடு தலை தெறிக்க தியேட்டரை விட்டு வெளியே ஓடி இருக்கவேண்டும். ஆனால் நான் சிவாஜி, ரஜினி, கமல், விஜய் எனப் பலரின் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழன் என்பதால், என்னதான் ஆகிவிடும் பார்க்கலாம் என்று தொடர்ந்து பார்த்தேன்.

பின்க் திரைப்படத்தின் காட்சிகளை ஒன்றுவிடாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மழை பின்க் படத்தில் பெய்தால் அதே காட்சியில் நேர்கொண்ட பார்வையிலும் மழை. அந்த அளவுக்கு டிட்டோ. அத்தோடு விட்டிருந்தால் படம் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும். சில காட்சிகளை இவர்களாக யோசித்துச் சேர்த்தும் இருக்கிறார்கள். எங்கெல்லாம் காப்பியோ அங்கெல்லாம் படம் நன்றாக இருப்பது போல ஒரு பிரமை (பிரமைதான்!), இவர்கள் சேர்த்த காட்சிகளில் படம் பல்லிளிக்கிறது.

பின்க் திரைப்படத்தின் வசனங்களை அப்படியே தமிழாக்கி இருக்கிறார்கள். கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஹிந்தியில் சப் டைட்டிலுடன் பார்க்கும்போது சரியாகத் தோன்றும் வசனமெல்லாம் தமிழில் கேட்கும்போது இரண்டு மூன்று விதமாகப் புரிந்து தொலைக்கிறது! We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன்!). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல? இப்படி சில நுணுக்கமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

பின்க் படத்தில் 22 கிமீ தூரத்தை எப்படி 10 நிமிடத்தில் கடக்கமுடியும், வண்டியை 125 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று வரும் வசனத்தை, தமிழுக்கேற்றவாரு மாற்றவேண்டும் என்பதற்காக, 40 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் எப்படி கடக்க முடியும், 425 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் தமிழனுக்கு எக்ஸ்ட்ரா தேவை என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார். (தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை!)

அஜித்தைப் பார்த்து வில்லன் நீதிமன்றத்தில் ஒரு கட்டத்தில் நீ என்று பேசுகிறார். அஜித்தும் பதிலுக்கு அவரை நீ என்கிறார். ஆனால் பின்க்கில் அமிதாப் தன் குரல் உயராமல் தொடர்ந்து மரியாதையுடனேயே பேசுகிறார். பின்க் படத்தில் அமிதாப் கதாநாயகியைப் பார்த்து Be careful என்கிறார். அர்த்தம் பொதிந்த வசனம் அது. ஆனால் அஜித்தோ ‘யோசிச்சி நட, யோசிச்சிக்கிட்டே நடக்காத’ என்ற பன்ச்சுடன் அறிமுகமாகிறார்.

ஒரு நல்ல திரைப்படத்தை, முக்கியமான திரைப்படத்தை, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை தடவை மூக்குடைபடுவார்கள் எனத் தெரியவில்லை. கழுதையாகவும் இல்லாமல் புலியாகவும் இல்லாமல் இவர்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

நீதிமன்றக் காட்சிக்கு முன்னர் ரங்கராஜ் பாண்டே தன் கட்சிக்காரருக்கு அறிவுரை சொல்வது போலவும் அஜித்தை ரேக்கச் சொல்வது போலவும் வருகிறது. ஹிந்தியில் இந்தக் கண்றாவியெல்லாம் கிடையாது.

வித்யா பாலன் ஏன் வந்தார் என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் யாருக்கும் புரியப் போவதுமில்லை. அதிலும் அஜித் பொதுசேவகராக நீதிமன்றத்துக்குள் நுழையும்போது ஒருவர் போன் செய்கிறார். ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் கமுக்கமாக இருந்துவிட்டேன்.

ரங்கராஜ் பாண்டே இங்கேயும் கேள்வியாகக் கேட்கிறார். ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம், ப்ளீஸ், வேண்டாம் இந்த விஷப் பரிட்சை. தாங்க முடியவில்லை. பின்க் படத்தில் இதே பாத்திரத்தில் வரும் அந்த நடிகரின் நடிப்பு எத்தனை யதார்த்தமாக இருக்கும்! ரங்கராஜ் பாண்டேவோ என் கேள்விக்கு என்ன பதில் ரேஞ்சிலேயே பேசுகிறார்.

அமிதாப்பின் நடிப்பையும் அஜித்தின் ‘நடிப்பையும்’ பற்றிப் பேசப்போவதில்லை. அது பாவக்கணக்கில் சேர்ந்துவிடும்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நன்றாக நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் தப்ஸீ – வாய்ப்பே இல்லை. வேற லெவல் அது.

இதே போல் ஒவ்வொன்றையும் ஒப்பிடலாம். பெண் போலிஸ் தமிழில் பரவாயில்லாமல் நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். வில்லனாக வரும் நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தத் திரைப்படத்தைக் கையாளும் அளவுக்கு வயதுக்கு வரவில்லை. எதையுமே உரக்கவும் ஒரு நிலைப்பாடு எடுத்தும் கருப்பு வெள்ளையாகவும் மட்டுமே இவர்களுக்கு (நமக்கு!) அணுகத் தெரியும். இடைப்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மையே முக்கியம் என்பதெல்லாம் இன்னும் இவர்களுக்குப் பழக்கப்படவில்லை. அதுவரை பின்க் படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டிவிட்டு, அதை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று அஜித் போன்றவர்கள் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் புண்ணியமாகப் போகும். அஜித் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ரசனையாளராக மட்டும் இருந்தாலும் போதாது, அதை அப்படியே எப்படித் தமிழில் கொண்டு வருவது என்றும் யோசித்திருக்கவேண்டும். அங்கே ஒட்டுமொத்தமாக அஜித் சறுக்கி இருக்கிறார்.

நன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்

Share

சந்தானத்தின் ஏ1 என்ற கொடுமை

சில படங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கும். அது என்னவென்றால், படத்தைப் பார்க்கப் போகும்போதே அப்படம் கேவலமாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்துக் கொண்டேதான் செல்வோம். நாம் எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் சுமாராக இருந்துவிட்டால்கூட அது ஒரு நல்ல படமோ என்ற மயக்கம் சிலருக்கு ஏற்பட்டுவிடும். இதை ஒட்டியே சில படங்களுக்கு மைனஸ் பாயிண்ட் உண்டு. அது என்னவென்றால், நாம் பார்த்த படம் நாம் எதிர்பார்த்ததை விட மிகக் கேவலமாக இருக்கும். ஏ1 திரைப்படம் இரண்டாம் வகையைச் சார்ந்தது.

சந்தானத்தின் இந்தப் படம் எப்படியும் மோசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேதான் நான் திரையரங்குக்குள் நுழைந்தேன். நான் எதிர்பார்த்ததை விட மிகக் கேவலமாக இருந்தது.

இப்படத்தின் டீசர், பிராமண சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதாக இருந்தது. இதை ஒட்டிப் பேசிய சந்தானம், அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்றும் சில விஷயங்களைக் கிண்டலுக்கு உள்ளாக்கினால்தான் காமெடி செய்ய முடியும் என்றும் வேலை வெட்டி இல்லாதவர்களே இதை எதிர்ப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது ஒன்று உறுதியாகிறது. வேலை வெட்டி இல்லாதவர்கள் இது போன்ற படத்தை எடுப்பவர்களும் இப்படத்தில் நடிப்பவர்களும்தான்.

இந்தப் படத்தை ஜான்சன் என்ற இயக்குநர் இயக்கி இருக்கிறார். ஜான்சன் என்ற பெயருடையவர் என்பதால் இப்படம் இப்படி பிராமணர்களைத் தாக்குகிறது என்று நினைக்க எந்தக் காரணமும் இல்லை. ஏனென்றால் இப்படம் சந்தானத்தின் திரைப்படமாகவே அறியப்படுகிறது. ஜான்சன் என்பவர் இதற்கு முன்பு ஏதேனும் திரைப்படம் எடுத்திருக்கிறாரா என்ற தகவல் கூட எனக்குத் தெரியாது. சந்தானம் போன்றவர்களே இப்படிப்பட்ட படத்தை எடுக்கத் துணியும்போது மற்றவர்களைச் சொல்லி பொருளில்லை.

நான் கூட தொடக்கத்தில் பிராமணர்களை அத்தனை கேவலப்படுத்தி இருக்கமாட்டார்கள் என்றே நினைத்தேன். ஆனால் எத்தனை முடியுமோ அத்தனை அத்தனை இப்படத்தில் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, சேரியில் வாழ்பவர்கள் முட்டாள்கள், குடிகாரர்கள் என்றும் மிகக் கேவலமானவர்கள் என்ற ரீதியிலும் இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். இந்த இரட்டை நிலையிலிருந்து தமிழ்த் திரைப்படங்கள் விடுபடாத வரை நமக்கு மோட்சம் இல்லை.

இப்படத்தில் வரும் ஒரு பிராமணக் கதாபாத்திரம் மிக நேர்மையானவராகக் காட்டப்படுகிறது. ஊரே அவரைப் போற்றுகிறது. அந்தக் கதாபாத்திரத்தை எந்த நேரத்திலும் சிதைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். படத்தின் மைய முடிச்சே அந்தக் கதாபாத்திரத்தைச் சீரழிப்பதுதான் என்பது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அதை எப்படி சீரழித்து இருக்கிறார்கள் என்பதை திரைப்படத்தில் பார்த்தால்தான் தெரியும். நேர்மையானவராகக் காட்டப்பட்ட அந்தப் பிராமணக் கதாபாத்திரத்திற்கு மூன்று மனைவியர். ஒருவர் வட இந்தியப் பெண். இன்னொருவர் சேரியில் வாழும் பெண் ரௌடி. இதில் அந்தப் பிராமணர் நடு இரவில் கருவாட்டுக் குழம்பை வாங்கிச் சாப்பிடுவார் என்றெல்லாம் வசனம் வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் பொருட்படுத்தத்தக்க அம்சம் ஒன்று கூடக் கிடையாது என்பது விஷேசம். சந்தோஷ் நாராயணன் இசை உட்பட. பிராமணர்களைக் கேவப்படுத்துவதற்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. சந்தானம் தொலைக்காட்சியில் பேசும்பொழுது சொன்னார், திரைப்படங்களை இப்படி எடுத்தால்தான் காமெடி செய்ய முடியும் என்று‌ அப்படியும் காமெடியே இல்லை என்பது ஒரு பக்கம். அவருக்கும் தெரிந்திருக்கிறது, ஜான்சனுக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது, பிராமணர்களை மட்டுமே வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்றும் இதில் வரும் இன்னொரு ஜாதி என்ன என்பதைக் காட்டவே கூடாது என்றும் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் மறந்தும் ஒரு சொல் கூடச் சொல்லிவிடக் கூடாது என்றும் இவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. பிராமணப் பெண்ணிடம் முட்டை சாப்பிட்டுத்தான் தன் காதலை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் சந்தானம் உள்ளிட்ட திரையுலகத்தினர் எந்த படத்திலாவது இஸ்லாம் பெண் தன் காதலை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா?

தமிழ்த் திரையுலகமே மிக மோசமான ஒரு சூழலில் சிக்கி இருக்கிறது. இந்திய வெறுப்பு, ஹிந்து வெறுப்பு, பிராமண வெறுப்பு என்ற மூன்றும் உள்ளடக்கி உருவாகியிருக்கும் இந்தச் சுழலில் சிக்காத நடிகர்களே இன்று கிடையாது என்று சொல்லிவிடலாம். இவர்களிடமிருந்து தமிழ்நாட்டை நாம் மீட்டாக வேண்டும்.

இந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட் காட்டப்படும்போது ஒரு நொடி மட்டுமே கவனித்தேன், அதில் லீனா மணிமேகலை என்ற பெயர் வந்ததோ? பெயரைப் பார்த்தேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்குத்தான் இப்போதைக்கு எனக்கு நினைவிருக்கிறது. ஏனென்றால் ஒரு நொடியில் அது மறைந்து விட்டது. லீனா மணிமேகலை போன்றவர்கள் சென்சார் பட்டியலில் இருப்பார்கள் என்றால் நாம் இதுபற்றி மேற்கொண்டு விவாதிக்க ஒன்றும் இல்லை.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்

(Update: நல்லவேளை, அது லீனா மணிமேகலை இல்லையாம். லீலா மீனாட்சி என்று சொன்னார் அம்பை. அதெப்படி யாரென்றே தெரியாமல் எழுதலாம் என்ற அம்பையின் கேள்விக்கு என் பதில் இங்கே. 🙂

Share

கிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு

தபால்துறையில் கிராமின் தாக் சேவா என்னும் கிராமப்புற ஊழியர்களுக்கான முடிவுகள் ஜூன் 22 2019அன்று அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இது. திடீரென சில நாள்களுக்கு முன்பு அந்த பிடிஎஃப் கோப்பை தரவிறக்கிய திமுகவினர், அதில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானவர்களின் (EWS) கட் ஆஃப் 42 என்பதை எடுத்துக்கொண்டு, ஒரு பதிவை எழுதி சுற்ற விட்டனர். அந்தப் பதிவில் ஒரு சிறிய உண்மை உள்ளது. அதேசமயம் அதில் சொல்லப்படாத பல உண்மைகளும் உள்ளன. ஒரே ஒரு உண்மையை மட்டும் உரக்கச் சொல்வது, இரண்டாம் கருத்துக்கே இடமின்றி, 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்காக மட்டுமே. அதைக்கூட நியாயப்படி எதிர்க்காமல், அவர்களுக்கே உரிய அநியாயப்படி, அதில் பயன்பெறப்போவது பிராமணர்கள் மட்டுமே என்று சொல்லி வருகிறார்கள். எவ்வித சலுகைகளும் இல்லாத அனைத்து முற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இது பொருந்தும் என்பதை மறந்தும் இவர்கள் சொல்லமாட்டார்கள். இதில் பயன்பெறும் பிராமணரல்லாத சாதியினரின் பெயர்களைச் சொல்லிவிட்டால் இவர்கள் அரசியல் வேகாது என்பதுதான் காரணம்.

கிராமின் தாக் சேவா ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் அல்ல. இன்னும் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கை நிலுவையில்தான் உள்ளது. ஆனால் பதிவை சுற்ற விட்டவர்களும், உடனே சமூக நீதி செத்துப்போய்விட்டது என்று எள்ளும் நீரும் தெளித்தவர்களும், பிராமணர்களுக்கு அரசு வேலைன்னா கசக்குதா என்று கேட்டார்கள். இந்த கிராமின் தாக் சேவா ஊழியர்கள் கிராமப்புற ஊழியர்கள். தபால் துறையால் நேரடியாக முழு நேர அலுவலகமாகவோ துணை அலுவலகமாகவோ தொடங்க முடியாத இடங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். அது கிராமமாக, பட்டிக்காடாக, மக்கள் எளிதில் செல்லமுடியாத இடங்களாக இருக்கலாம். இவர்களது சம்பளம், மற்ற பொதுவான அரசு ஊழியர்களின் சம்பளத்தைவிடப் பலமடங்கு குறைவாக இருக்கும். இவர்கள் ஐந்து வருடம் இந்த வேலையில் இருந்து, பின்னர் தேர்வெழுதி தபால்துறைக்குள் வேலைக்கு வரலாம். அப்போது இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கிராமின் தாக் சேவா ஊழியர்கள் வேலைக்கு மனு செய்யும்போதே அவர்களுக்குரிய இடத்துக்குத்தான் மனு செய்யமுடியும். அல்லது அவர்கள் எந்த இடத்துக்கு மனு செய்தார்களோ அந்த இடத்துக்கு மட்டுமே அவர்களது மனு பரிசீலிக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு மனு செய்தவர்கள், தகுதி இருக்கிறது என்ற காரணத்துக்காக, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நியமிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், எது உள்ளூர்க்காரர்களுக்கான வேலைக்கு வசதியோ அதை ஒட்டியே இந்த வேலை என்பதுதான் இதன் அடிப்படையே. ஆனால் திமுகவினர் இதையும், உள்ளூர்ல வேலைன்னா கசக்குதா என்று ஒருவரியில் சொல்லிக்கொண்டார்கள்.

கட் ஆஃப்: கட் ஆஃப் என்பது, போட்டியில் பங்கெடுத்தவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, காற்றில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மதிப்பெண் அல்ல. ஒரு தேர்வில் பங்குகொண்டவர்களின் தரத்தைப் பொருத்தே இந்த கட் ஆஃப் அமையும். கட் ஆஃப் என்பதுதான் இறுதித் தேர்வு என்றால், இதற்குப் பின் நேர்முகத்தேர்வுகூடக் கிடையாது என்றால், கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வாங்கும் அனைவருக்கும் வேலையோ மேற்படிப்போ கிடைத்துவிடும். உதாரணமாக, மிக மேம்போக்காகச் சொல்வதென்றால், 4000 பேர் தேர்வெழுதி, 400 பேர் மட்டுமே தேந்தெடுக்கப்படவேண்டும் என்றால், யார் 400வது குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களோ அதுவே கட் ஆஃப் என்று வைத்துக்கொள்ளலாம். இதையே ஒவ்வொரு இட ஒதுக்கீட்டின்படியும் செய்வார்கள்.

அம்மாபட்டினம் என்ற ஒரு கிராமத்தில் ஒருவர் 42 மதிப்பெண்கள் பெற்று EWS கோட்டாவில் வேலைக்கு வந்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?

முதலில் வேலைக்கு மனு போடும்போதே இந்த இடத்தில் ஒரே ஒரு வேலைதான் என்றும், அது EWSக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஒவ்வொரு ஊரிலிலும் எந்த கோட்டாவில் வேலை என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் இந்த ஊரில் EWS கோட்டாபடி எத்தனை பேர் வேலைக்கு மனு செய்திருந்தார்கள்? இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? அந்த விவரம் யாருக்கும் தெரியாது. தெரிந்தால்தான் இதை மேற்கொண்டு பேசமுடியும்.

இன்னும் சில ஊர்களில் 50 மதிப்பெண்களுக்கும் கீழான மதிப்பெண்கள் பெற்றவர்கள் EWS கோட்டாவில் வந்திருக்கிறார்கள். அந்த ஊர்களிலும் இதுவேதான் பிரச்சினை.

EWS கோட்டாவின்படி இந்த ஆண்டே வேலைக்கு மனு செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிச்சயம் குறைவாகவே இருக்கமுடியும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில், EWS கோட்டாவில் மனு செய்பவர்கள் அதிகரிக்கும்போது, எஸ் சி எஸ் டி பிரிவுகளுக்கான கட் ஆஃப் மற்றும் EWS கோட்டாவின் கட் ஆஃப் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு மறையும். நிச்சயம் இது நடக்கத்தான் போகிறது.

ஆனால் எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில், 42 மதிப்பெண்கள் பெற்ற ஐயரும் ஐயங்காரும் வேலைக்குப் போகிறார்கள் என்று சொல்வது எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்? அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால்! இதை எதையுமே இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.

இதை ஒட்டி இதே பதிவுகளில் அவர்கள் சொல்லத் துவங்கியது, 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்பது. 69%ல் உண்மையில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இவர்கள் இதை எப்படி ஒரு செய்தியாக உருவாக்கினார்கள்? 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்து) குறையும் அல்லவா? அதைச் சொல்லத் தொடங்கினார்கள். அதாவது EWS கோட்டாவுக்கு முன்பு எஸ் சி எஸ் டி பிரிவினருக்கான இடங்கள் எத்தனை கிடைக்கும், இப்போது எத்தனை கிடைக்கும் என்பதை மட்டும் சொல்லி, ஒரு மீம் ஆக்கி, அதைப் பரப்பினார்கள்.

இப்படிப் பொய்ச் செய்திகளை, அரைகுறை உண்மைகளைப் பரப்புவது எளிதாக இருக்கிறது. அதற்கு தேவையான பதிலைச் சொல்வது பெரிய வேலையாக இருக்கிறது. 10% EWS கோட்டா என்பது, பொதுப்பிரிவில் உள்ள இடங்களுக்குள்ளே மட்டுமே. எவ்வகையிலும் ஏற்கெனவே மாநில மத்திய அரசுகளில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அது பாதிக்காது. இதை மத்திய அரசு தெளிவாகவே சொல்லி இருக்கிறது. ஆனாலும் திமுகவினர் இதை வேண்டுமென்றே ஒரு செய்தியாகப் பரப்புகிறார்கள். அதிலும் EWS கோட்டாவின்படி பலன் பெறப் போவது ஐயரும் ஐயங்காரும் என்று சொல்வதில் உள்ள வெக்கம்கெட்டத்தனம்தான் கேவலமாக இருக்கிறது.

8 லட்சம் வருட வருமானம் என்பது நிச்சயம் கூடுதலான தொகைதான். இதை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்பதே என் தனிப்பட்ட எண்ணம். 2.5 லட்சமாக்கலாம் என்பது என் பரிந்துரை. ஆனால் இந்த 8 லட்சம் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் பரிந்துரையில் தரப்பட்டிருக்கும் தொகை இது. அதையே, உண்மையில் நேர்மையாக, மத்திய அரசு EWS கோட்டாவுக்கும் வைத்துள்ளது. EWS கோட்டாவில் 8 லட்சம் அதிகம் என்று பேசுபவர்கள், க்ரீமி லேயர் பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.

க்ரீமி லேயரையும் அறிமுகப்படுத்தி, EWS கோட்டாவின் வருட வருமானம் மற்றும் சொத்து மதிப்பையும் வரைமுறை செய்தால், இட ஒதுக்கீடும் EWS ஒதுக்கீடும் நிச்சயம் தேவையானவர்களைச் சென்றடையும். ஆனால் திமுகவினர் ஐயர் ஐயங்காருக்கு இட ஒதுக்கீடு என்றுதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறார்கள். ஐயர் ஐயங்கார்தான் என்றாலும், அவர்களில் உண்மையான பொருளாதார நலிவில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதும் அவசியம்தான். இதையும் உள்ளடக்கியதுதான் உண்மையான சமூக நீதி. 99% வாங்கிய பிராமணருக்கு வேலை இல்லை, ஆனால் 94% வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை கிடைக்கும் என்பதில் உள்ள நியாயத்தை இந்த EWS கோட்டா கொஞ்சமாவது சமன் செய்யும். உண்மையான சமூக நீதியைப் பேசுபவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.

ஒரு பிரச்சினையில் மிகச் சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டின் பாஜகதான் இதை முன்னெடுத்துச் செய்யவேண்டும். ஒரு பொய்க்கருத்தை திமுக பரப்புகிறது என்றால், அதை உடனே சரியான வல்லுநர்களுடன் ஆராய்ந்து, அதிலுள்ள தவறைக் குறிப்பிட்டு சொல்லிப் பரப்பும் செயலை தமிழக பாஜகதான் மேற்கொள்ளவேண்டும். ஒரு பொய் லட்சம் பேர்களால் பரப்பப்படுகிறது. அதற்கான உண்மை என்பதைக் கண்டறிய தனியாளால் முடியாது. பாஜகவினர் இதைச் செய்யலாம். ஆனால் பாஜகவினர் கருத்தைப் பரப்பும் ஒரு விஷயத்தில் திமுகவிடம் தோல்வி அடைந்தவர்களாகவும் அதை ஒப்புக்கொள்பவர்களாகவுமே நடந்துகொள்கிறார்கள். இதை முதலில் மாற்றவேண்டும். அப்போதுதான் உண்மையான கருத்து என்ன என்பது பரவத் துவங்கும்.

  • ஹரன் பிரசன்னா

தொடர்புடைய ஃபேஸ்புக் பக்கம்:
https://www.facebook.com/pudugai.abdulla/posts/10215186778051424

Share