மிக சீரியஸான ஒரு விஷயத்தை தமிழ்நாட்டின் ஹீரோயிச நடிகர்களால் திரையில் நிகழ்த்தவே முடியாது என்பதற்கான இன்னொரு நிரூபணம் விஜயின் பிகில் திரைப்படம். அதுவும் அட்லீ போன்ற இயக்குநர்கள், இந்த முக்கியமான விஷயங்களையெல்லாம் கூட ஏனோ தானோ என்று, ஒரு ஹீரோவின் மாஸ்ஸைக் கூட்டுவதற்காக மட்டுமே எடுப்பார்கள். இவர்களிடமெல்லாம் ஒரு சீரியஸ்தன்மையை எதிர்பார்ப்பதே நாம் நமக்குச் செய்துகொள்ளும் அவமரியாதை.
விஜய்யின் சமீபத்திய திரைப்படங்களில் இருந்த அதீத நடிப்பும் அலட்டலும் இதில் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது என்பது கொஞ்சம் ஆசுவாசம். முதல் ஐந்து நிமிடங்களில் மீண்டும் அதே அதீத அலட்டலா என்ற எண்ணம் எழுந்தது என்னவோ உண்மைதான். ஆனால் போகப் போக எப்படியோ சமாளித்து, மெல்ல முன்னேறி கொஞ்சம் நன்றாகவே நடிக்க தொங்கிவிட்டார். ஆனாலும் இடையிடையே அப்பாவைக் கட்டிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று கொஞ்சலாக நடந்து நம்மைப் பாடாகப் படுத்தவும் செய்கிறார். பல காட்சிகளில் ‘கில்லி’ படத்தில் வரும் விஜய்யின் அதே நடிப்பைப் பார்க்கமுடிகிறது. ராயப்பனாக வரும் விஜய் சுத்தமாக ஒட்டவில்லை. அவர் நடிப்பதும் இளமையான விஜய் நடிப்பது போலவே இருக்கிறது. அதேசமயம் வேறு மாதிரி நடிக்க முயன்றிருந்தால் நாம் அரண்டு மிரண்டிருப்போம் என்பதால் இதையே பாராட்டிவிடுவது நல்லது என்றும் தோன்றுகிறது.
இடைவேளை வரை கொஞ்சம் கலகலப்பாகவும் வேகமாகவும் செல்லும் திரைப்படம், இடைவெளைக்குப் பிறகு டொக்கு விழுந்த மாதிரி ஆகிவிடுகிறது. ஏனென்றால் அப்போதுதான் முக்கியமான கதைக்குள்ளே எண்ட்ரி ஆகிறார் இயக்குநர்! இதை விளையாட்டுத் துறையைப் பற்றிய படமாக எடுப்பதா, விஜய்யின் படமாக எடுப்பதா என்ற குழப்பம். (ஒருவேளை குழப்பமே இல்லையோ?) எந்தப் படத்தையும் ஹீரோவின் படமாகத் தங்களால் மாற்ற முடியும் என்று தமிழ் இயக்குநர்களின் அடியொற்றி இந்தப் படத்தையும் மாற்றி, இப்படம் எதோ ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
ஹிந்தியில் இதே போன்ற கருவுள்ள திரைப்படத்தையெல்லாம் எப்படி எடுக்கிறார்கள் என்று இவர்கள் பார்க்கவேண்டும். அவையும் வணிகத் திரைப்படங்களே. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை புல்லரிப்பு வர வைத்தே அனுப்பி வைப்பார்கள். ஆனால் அதில் ஹீரோயிஸத்தைப் பலப்படுத்த, இன்னும் மேம்படுத்த, இவற்றைப் பயன்படுத்தமாட்டாரகள். இப்படத்தின் பெரிய சறுக்கல் இங்கேதான் தொடங்குகிறது.
ஹீரோயிஸப் படம் என்று முடிவெடுத்துவிட்டால், மைதானத்தில் விஜய் ஆடவேண்டும். ஆனால் இங்கே வெளியே நின்று என்ன என்னவோ சைகைகளைச் செய்கிறார். இதை ஈடுகட்ட, ஒரு கும்பல் விஜய்யைக் கடத்த, அவர் இவர்களைப் பந்தாட, போலிஸ் ஸ்டேஷனில் மாஸ் காட்ட என்று என்ன என்னவோ செய்கிறார். இவை எதுவுமே ஒட்டவில்லை. ஏனென்றால் நமக்கு முன்னரே எப்படியும் விஜய்யின் அணி வெல்லப் போகிறது என்பது தெளிவாகத் தெரியும். அப்படி இருக்கும் போது திரைக்கதை எப்படி இருக்கவேண்டும்? கோல்ட் ஹிந்திப் படத்தில் இந்தியா ஹாக்கியை வெல்லும் என்பது நமக்குப் படம் தொடங்கும் முன்பே தெரியும். ஆனால் கடைசிக் காட்சி வரை அந்த புல்லரிப்பை அப்படியே தக்க வைப்பார்கள். அதுவும் வணிகத் திரைப்படமே.
ஒவ்வொரு காட்சியிலும் தான் விஜய்யாகத் தெரியவேண்டும் என்று விஜய் மெனக்கெடுவதுவே என்பதுவே இப்படத்தின் எரிச்சலாக ஆகிவிடுகிறது. ஏன் நம் கதாநாயகர்களை இரண்டு அல்லது மூன்று வேட வெறி பிடித்து ஆட்டுகிறது என்று புரியவில்லை. ராயப்பனாக ஒரு கெத்தான நடிகரை நடிக்க வைத்தால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? ஹிந்தியில் இதைச் செய்திருப்பார்கள்.
இதில் அட்லீ, விஜய்யின் அடையாளச் சிக்கல் வேறு குழப்புகிறது. மைக்கேல் என்று பெயர் வைத்த ஹீரோவின் அப்பாவின் பெயர் ராயப்பன். கிறித்துவர். ஏன் காவி வேட்டி கட்டி, விபூதி குங்குமம் வைத்து, கழுத்தில் சிலுவை போட்டு ஏசுவைக் கும்பிடுகிறார்? யாருக்கும் தெரியாது. கூடவே ஒரு ராவுத்தர் வேறு. பத்தாது என்று திடீரென்று பட்டை போட்டுக்கொண்டு வரும் ஆனந்தராஜ் வேறு. என் சமுதாயம் என் சமுதாயம் என்று சொல்கிறார் ராயப்பன். யார் அந்த சமுதாயம்? ஒரே சமுதாயம், அதுவும் ஒரே இடத்திலிருந்து எப்படி ஒரு தமிழக அணிக்குத் தேர்வாக முடியும்? அப்படியானால் அவர்களுக்குள்ளே நடக்கும் அந்த மோதல் யாருக்கும் யாருக்குமானது? ராயப்பனை எதிர்ப்பவரும் ஒரு கிறித்துவரே. அப்படியானால் இது எந்த சமூகத்துக்கான பிரச்சினை? ஒரு தெளிவும் கிடையாது. ஆனால் படம் முழுக்க கிறித்துவக் குறியீடுகள் வரவேண்டும் என்பதில் மட்டும் அட்லீ தெளிவாக இருந்திருக்கிறார். அதை சமன்படுத்தவே ராயப்பனின் முகத்தில் குங்குமும் விபூதியும் போல.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதை நிறுத்திவிட்டு, வேறு யாரையோ வைத்து இசையமைக்க வைக்கிறார் போல. தொடர்ச்சியாக எப்படி இப்படி மிக மோசமான பாடல்களைத் தருகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இளையராஜா உச்சத்தில் இருந்தபோது அவர் இசையமைத்து உச்ச நடிகர்களான கமல், ரஜினி படம் வருமானால் பாடல்கள் அசரடிக்கும் என்பதை எழுதியே தரலாம். ஆனால் ஏ ஆர் ரஹ்மானால் ஒரு விஜய் படத்துக்குக்கூட உருப்படியாகப் பாடல்களை அமைக்கமுடியவில்லை. சிங்கப்பெண்ணே என்று அவர் உணர்ச்சிகரமாகப் பாடும்போது பாவமாக இருக்கிறது. அட்லீ, ஏ ஆர் ரஹ்மான், விஜய் கூட்டணி ஒரு பாடலில் வரும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று தோன்றியது!
தேவர்மகன், பாட்சா, நாயகன் என்று பல படங்களில் இருந்து பல காட்சிகளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார் அட்லீ. இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களையே ஒத்திருந்தபோது அவரிடம் அதைப் பற்றிக் கேட்டதற்கு அவர் சொன்னாராம், அது எனக்குப் பெருமைதான் என்று. அட்லீயும் அதையே சொல்லிவிடக்கூடும். ஒரு படத்தை மட்டுமே காப்பி அடிப்பதால் வரும் பிரச்சினைகளை, பல படங்களில் இருந்து காப்பி அடிப்பதால் சமாளிக்கும் புதிய வித்தையை அட்லீ அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்று எதிர்காலத்தில் இயக்குநர்கள் பாராட்டக்கூடும். இப்போது வரும் பாடல்களைக் கேட்கும்போது எதாவது ஒரு பாடல் பச்சக்கெனப் பிடித்தால், அது முன்பே எப்போதோ இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றின் உருவலாக இருக்கும் என்று நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், நான் முன்பு ரசித்த படங்களின் காட்சிகள் என்பதால், இவையும் பிடித்துப் போய்விட்டன என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு காட்சிகூட தன்னியல்பான காட்சி கிடையாது. இப்படியான சில உருப்படியான காப்பி காட்சிகள், சில இடங்களில் விஜய்யின் நடிப்பைத் தாண்டி இப்படத்தில் ஒன்றுமே இல்லை.
இடைவேளை வரை இருந்த படத்தின் வேகத்தை அப்படியே கொஞ்சம் நீடித்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால், மோட்டிவேஷன் கதை, ஹீரோயிசக் காட்சிகள் போதாதென்று, பிராமணப் பெண்ணை ‘மீட்டு’க் கொண்டு வந்து ஆட வைப்பது, முகத்தில் அமிலம் அடிக்கப்பட்ட பெண்ணை மீட்டுக்கொண்டு வந்து நேரடியாக ஃபைனலில் ஆட வைப்பது போன்ற சமூகக் கருத்துகளைச் சொல்லத் தொடங்கி, இருந்த கொஞ்சம் நஞ்சம் உயிர்ப்பையும் விட்டுவிட்டு எங்கெங்கோ அலைகிறது பிகில்.
பழைய நல்ல படங்களை நினைவூட்டுவதால் ஒரு தடவை பார்க்கலாம்.
சாவர்க்கரைப் போல தமிழ்நாட்டில் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்ட,
வேண்டுமென்றே மட்டம்தட்டிச் சித்திரிக்கப்பட்ட வேறொரு தலைவர் இருக்கமுடியாது. எந்த
அளவுக்கென்றால், கருணாநிதியைத் தவிர வேறு எதையுமே அறிந்துகொள்ளாத திமுகவினர் கூட
சர்வசாதாரணமாக சாவர்க்கரை பிரிட்டிஷாரின் கால் நக்கிப் பிழைத்தவர் என்றும்,
பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டவர் என்றும் சொல்லும் அளவுக்கு. உண்மையில்
எதையும் தீவிரமாக அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் அறிந்துகொள்ளும்
நோக்கற்றவர்களின் செயலே, இந்த மன்னிப்பு என்கிற வார்த்தையை மட்டும் கொண்டு
சாவர்க்கரை அணுகுவது. சாவர்க்கரின் வாழ்க்கையை அணுகிப் பார்த்தால் தெரியும்,
இந்தியாவின் மிகச் சிறந்த தேச பக்தர்களில், தீவிரமான சுதந்திரப் போராட்ட
வீரர்களில் சாவர்க்கர் எத்தனை முக்கியமானவர் என்று.
அவரது வாழ்க்கை முழுக்கவே போராட்டம் நிறைந்தது. எந்த நிலையிலும்
தன்னம்பிக்கையைக் கைவிடாமல், ‘இதெல்லாம் எதற்காக’ என்ற எதிர்மறைச் சிந்தனைக்குத்
தன்னை இழந்துவிடாமல், பாரத அன்னைக்கு சுதந்திர மலரை அணிவிப்பது ஒன்றே குறிக்கோள்
என்று வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரால் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஒரே
தலைவர். அதாவது 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தன் மனைவியை,
குடும்பத்தைப் பிரிந்து அந்தமான் சிறையில் வாடியவர். இவர் மட்டுமல்ல, இவரது
சகோதரர்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றார்கள்.
மெர்சிலி தீவில் அவர் தப்பிக்க முயன்றதெல்லாம் நம்ப முடியாத அளவுக்கான
சாகசம். அந்தமான் சிறைத் தண்டனை குறித்து அவர் எழுதிய புத்தகம் ‘Transportation
for life’ தற்போது தமிழில் வெளியாகி இருக்கிறது. (மொழிபெயர்ப்பு: எஸ்.ஜி. சூர்யா,
கிழக்கு பதிப்பக வெளியீடு, விலை 650 ரூ). இந்தப் புத்தகம் 1927ல் மராட்டியில்
முதலில் வெளியானது. இது தொடராக வெளிவரவே பல இன்னல்களைச் சந்திக்கவேண்டி இருந்தது.
பெரும் போராட்டத்துக்குப் பிறகே ஆங்கிலத்தில் வெளியானது. 90 வருடங்கள் கழித்து
முழுமையாகத் தமிழில் வெளியாகிறது. இவரது நண்பரான வ.வெ.சு. ஐயர் இதன் தமிழ்
மொழிபெயர்ப்பை அந்தக் காலகட்டங்களில் வெளியிட்டதாகத் தெரிகிறது. முழுமையாக
வெளியிட்டாரா, சில பகுதிகளை மட்டும் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.
சாவர்க்கரின் வாழ்க்கை அல்ல, அவரது புத்தகங்கள் கூட இப்படித்தான்
வெளியாகின. முதல் இந்திய சுதந்திரப் போர் என்று முதன்முதலில் சிப்பாய்க் கலகத்தை
விளித்தவர் இவரே. அந்தப் புத்தகம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டே வெளியானது.
அவரது கையெழுத்துப் பிரதி இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு
அத்தனை முயன்றது. நாடு நாடாகச் சென்ற அந்தப் பிரதி, மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக
வெளி வந்ததை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லலாம். (தமிழில் எரிமலை என்கிற தலைப்பில்
அல்லயன்ஸ் வெளியீடாகக் கிடைக்கிறது.)
இப்படி வாழ்க்கை முழுக்க எதிர்ப்புகளிடையேயும் போராட்டங்களிடையேயும்
வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பை அவர் சிறைக்குச் சென்ற உடனே
கேட்கவில்லை. 12 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை. எப்படிப்பட்ட சிறைத் தண்டனை?
‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம் அதனை விவரிக்கிறது. ஆறு மாதங்கள் கைகளிலும்
கால்களிலும் சங்கிலி மாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார். செக்கிழுக்க
வைக்கப்படுகிறார். பாரிஸ்டர் படிப்பு படித்தவர் கயிறு திரிக்க வைக்கப்படுகிறார்.
தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். தூக்குமேடைக்கு எதிரே இவருக்கு அறை
தரப்படுகிறது. தினம் தினம் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளின்
துன்பம் இவருக்குத் தரும் பயம் மற்றும் வேதனையின் மூலம் இவரது மனச்சிதைவைத்
துரிதப்படுத்த பிரிட்டிஷ் அரசு முயல்கிறது. தினம் தினம் யாரோ ஒரு கைதி தூக்குப்
போட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார் அல்லது தூக்குப் போட்டுத் தற்கொலை
செய்துகொள்கிறார். சில கைதிகளுக்குத் தனிமைச் சிறையின் தாள முடியாத துன்பம் மனநலச்
சிதைவைக் கொண்டு வருகிறது. இத்தனைக்கும் மத்தியில் தன் வாழ்க்கை குறித்த
சிந்தனைகளுடன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் இந்தியாவில் இருக்கும் தன்
குடும்பத்தையும் எண்ணி சாவர்க்கர் தவிக்கிறார். ஏன் இந்த வாழ்க்கை என்கிற எண்ணம்
தலையெடுக்கிறது. ஆனால் மிகப் பெரிய போராட்டத்துடன் அதிலிருந்து மீள்கிறார்.
தற்கொலை என்பது தீர்வல்ல என்று அனைவரிடம் விவரிக்கிறார்.
சிறையில் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணமும் எப்பாடுபட்டாவது சிறையில்
இருந்து தப்பிப்பது என்பதை நோக்கியே இருக்கவேண்டும் என்று மிகத் தீர்மானமாகச்
சொல்கிறார் சாவர்க்கர். ஏன்? வெளியில் சென்று, தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில்
தேச சேவை செய்யலாம் என்பதே அவரது எண்ணம்.
இந்தப் புத்தகத்தில் என்னை அசர வைத்த ஒரு விஷயம். சாவர்க்கரின் எந்த ஒரு எண்ணமும்
எல்லாக் காலத்திலும் தேச சேவை என்ற ஒன்றை நோக்கியே உள்ளது. பின்பு சாவர்க்கர்
கேட்டதாகச் சொல்லப்படும் மன்னிப்பும் கூட இதன் பின்னணியிலேயே உள்ளது. விடுதலை
கிடைத்து வீட்டுக்கு வந்து சுக வாழ்க்கை வாழவில்லை சாவர்க்கர். நிபந்தனையின்
பேரில் வெளிவரும் சாவர்க்கர், இன்னும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் அரசின்
கண்காணிப்பில் (ரத்னகிரிக்குள் மட்டும் நடமாடும் அனுமதியோடு) வைக்கப்படுகிறார்.
பின்னரும் சுதந்திரப் போராட்டத்துக்குத் தேவையான, தன்னால் இயன்ற அனைத்து
வேலைகளையும் செய்கிறார். எந்த நேரத்திலும் பிரிட்டிஷ் அரசு தன்னைக் கைது செய்து
மீண்டும் அந்தமான் இருட்டுச் சிறைக்குள் தள்ளும் என்று தெரிந்திருந்தும் இதனைச்
செய்கிறார்.
அந்தமான் சிறையில் இவருடன் அடைக்கப்பட்டிருக்கும் பல தேச பக்தர்கள் பற்றிய
குறிப்புகளை எல்லாம் நினைவில் வைத்திருந்து இப்புத்தகத்தில் பதிவு செய்கிறார்.
சாவர்க்கரின் நினைவாற்றலும் நன்றி உணர்ச்சியும் அபாரமானவை. இப்புத்தகத்தின்
ஒவ்வொரு வரியிலும் அதனை உணரலாம். அதேபோல் சாவர்க்கரின் வாதத்திறமை உலகப் பிரசித்தி
பெற்றது. இந்த நூல் முழுக்க சாவர்க்கர் தனது கருத்துகளை அதன் பின்னணியோடும் தர்க்க
ஆதாரத்தோடும் மிகத் தெளிவாக முன்வைக்கிறார். அதுமட்டுமல்ல, தன் கருத்துக்கான
எதிர்க்கருத்தைச் சொல்லி அது ஏன் சரியாக இருக்கமுடியாது என்பதை விவரிக்கிறார்.
மகாத்மா காந்தி ஜி கொலை வழக்கில் அவர் தந்த எழுத்துபூர்வமான சாட்சியத்திலும் இதே
போன்ற விவரணைகளைக் காணலாம். எந்தக் காலத்திலும் அவர் தன் கருத்துகளை இப்படியான
தர்க்க நியாயம் இல்லாமல் உதிர்த்ததே இல்லை.
அந்தமான் சிறைக்குச் செல்லும்போது சாவர்க்கரின் முன்பு பல சவால்கள்
இருந்தன. முதலில் தன்னை மீட்டுக்கொள்வது, பின்பு அங்கிருக்கும் கைதிகளுக்கு
நம்பிக்கை ஊட்டுவது, கைதிகளின் தற்கொலைகளை நிறுத்துவது, ஹிந்துக் கைதிகள் முஸ்லிம்
கைதிகளால் நடத்தப்படும் விதத்தை மாற்றுவது, பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சிகளை
முறியடிப்பது, அங்கிருக்கும் கைதிகளுக்கு எழுத்தறிவிப்பது, அந்தமான் தீவில்
சுதந்திரக் கனலைப் பரப்புவது, கட்டாயப்படுத்தி அல்லது வேறு வழியின்றி அல்லது ஆசை
காட்டி மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக் கைதிகளை தாய்மதம் திரும்ப வைப்பது,
ஹிந்துக் கைதிகளிடையே அநியாயமாகப் புகுந்துவிட்ட சாதியக் கொடுமைகளை அகற்றுவது,
அந்தமான் சிறையின் நிலையை இந்தியாவில் இருக்கும் அரசுக்கும் காங்கிரஸ்
தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் தெரிவித்து சிறையின் நிலையை முன்னேற்ற
உதவுவது, இந்தியாவில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்குத் தன்னால் இயன்ற
கருத்துகளைச் சொல்வது, எப்படியாவது இந்தச் சிறையில் இருந்து தப்பித்து இந்தியா
சென்று இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடுவது – இத்தனை எண்ணங்களுடன் அலைக்கழிகிறார்
சாவர்க்கர்.
உங்களால் நம்பமுடிகிறதா? இவை அனைத்தையும் செய்து முடிக்கிறார். ஒருவர் ஏன்
தலைவர் என்று கொண்டாடப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் இவற்றில் உள்ளன. இந்தப்
புத்தகம் ஒரு பொக்கிஷம். இதனைத் தமிழில் கொண்டு வந்த ஒவ்வொருவரும், அதற்கு உதவிய ஒவ்வொருவரும்
பாராட்டுக்குரியவர்கள். பல ஆண்டுகள் நீடித்து நிற்கப் போகும் ஆவணம் இது.
அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டபோது பிரிட்டிஷாரின் ஒரே
நோக்கம், எக்காரணம் கொண்டும் சாவர்க்கர் உயிருடன் இந்தியா மீண்டுவிடக்கூடாது
என்பதாகவே இருந்தது. அஹிம்சைப் போராட்டங்களை எப்படியும் எதிர்கொண்டுவிடலாம் என்று
நம்பிய பிரிட்டிஷ் அரசு, புரட்சிப் போராட்டத்தை எதிர்கொள்ள அஞ்சியது. அதை
ஒடுக்குவதே ஒரே வழி என்று புரிந்துகொண்டது. அதுவும் வெறும் வாய் வார்த்தை பேசி
அரசை மிரட்ட மட்டுமே செய்பவர் அல்ல சாவர்க்கர், செயலையும் நிகழ்த்திக் காட்டுபவர்
என்பது புரிந்தபோது, அவரை இந்தியாவுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் விலக்கி
வைப்பது நல்லது என்ற முடிவுக்கு வருகிறது.
ஆனால் அந்தமான் சிறை அனுபவம் சாவர்க்கரை அவரளவில் பெரிய தலைவராக
உயர்த்துகிறது. (அதேசமயம் மக்கள் தலைவர் என்னும் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக
விலகவும் செய்துவிட்டது என்பது சோகமான வரலாற்று நிகழ்வு.) பிரிட்டிஷ்
அதிகாரிகள்கூட அந்தமானுக்கு வந்தால் சாவர்க்கரைச் சந்திக்காமல் செல்வதில்லை.
எல்லோருடனும் உரையாடத் தயாராக இருக்கும் சாவர்க்கர், அனைவரிடமும் இந்திய
சுதந்திரத்தைப் பற்றி விவாதிக்கிறார். சாவர்க்கரின் பரந்துபட்ட அறிவும், இலக்கியப்
பரிட்சயமும், உலக நாடுகள் பற்றிய வரலாற்று ஞானமும், அவரால் எத்தகைய
எதிர்க்கேள்விகளையும் எதிர்கொள்ள வைக்கின்றன. இந்த நூலில் அவை அனைத்தும் மிக
விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதமாற்றம் செய்யப்படும் ஹிந்துக் கைதிகள் பற்றிப் பேசும்போது மிகத் தெளிவாக
தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார். தானாக மனம் உணர்ந்து மதம் மாறுபவர்களைப் பற்றி
சாவர்க்கருக்கு எந்தப் புகாரும் இல்லை. அது அவர்களது சுதந்திரம். ஆனால், கைதிகள்
முஸ்லீமாக மதம் மாறினால் அவர்களுக்குச் சிறையில் சில சுதந்திரங்கள் தரப்படும்,
ஜமேதாராகலாம் என்பன போன்ற சலுகைகள் தரப்படுகின்றன. சிறையில் படும் கஷ்டங்கள்
தாங்காமல் பலர் மதம் மாறுகிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம்
ஹிந்துக்களிடையே உள்ள சாதி வேற்றுமை மற்றும் சில மூட நம்பிக்கை. ஒருவன் ஒரு தடவை
முஸ்லீம்களிடையே இருந்து உணவருந்தினாலும் அவன் ஹிந்து அல்ல என்று முடிவு செய்து
அவனை விலக்கி வைக்கிறார்கள். இதனால் அவன் தாய் மதம் திரும்பும் வாய்ப்பே இல்லாமல்
போய், முஸ்லீமாகவே ஆகிவிடுகிறான். அதுவும் ஒரு சக ஹிந்து பிற்படுத்தப்பட்ட
வகுப்பினராக இருந்தால் இது இன்னும் எந்த அளவுக்குப் போகும் என்று சொல்வதற்கில்லை.
சாவர்க்கர் இதையெல்லாம் எதிர்க்கிறார். முஸ்லீம்களுடன் உணவருந்திய ஒருவருடன் இவரே
அமர்ந்து உணவு உண்கிறார். பிறகு மெல்ல நான்கைந்து பேர் இவர்களுடன் சேர்ந்து உணவு
உண்கிறார்கள். பிறகு வேறு வழியின்றி அனைவரும் சேர்ந்து உணவு உண்கிறார்கள்.
இப்படியாக ஒவ்வொரு செயலையும் தானே முன் நின்று செய்கிறார்.
முஸ்லிம் கைதிகள், குறிப்பாக பதான் – சிந்தி – பலூச்சி முஸ்லீம்கள்
(தமிழகம் மகாராஷ்ட்ரம் போன்ற இடங்களில் இருந்து வந்த முஸ்லிம்கள் இத்தனை
கொடூரமானவர்கள் அல்ல என்கிறார்) அடாவடி செய்யும்போது அதே போக்கில் ஹிந்துக்
கைதிகளை அடாவடி செய்யத் தூண்டுகிறார். இதனால் சிறையில் பெரிய பிரச்சினைகள்
எழுகின்றன. மேலதிகாரிகளின் விசாரணையின்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வர, இரு
தரப்பு இந்த அடாவடிகளைச் செய்யக்கூடாது என்று முடிவாகிறது. இதை ஒரு போராட்ட
வடிவமாகவே சிறையில் செய்கிறார் சாவர்க்கர். ஹிந்துக் கைதிகளின் உணவை வேண்டுமென்றே
முஸ்லிம் கைதிகள் தொட்டுவிட்டு, அது தீட்டு என்பதால் ஹிந்துக் கைதிகள் உணவை
உண்ணாமல் இருக்க, அந்த உணவையும் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதே பாணியை
ஹிந்துக் கைதிகளை வைத்துச் செய்ய வைக்கிறார். வேறு வழியின்றி முஸ்லீம் கைதிகள்
அமைதியாகிறார்கள். அதிகாலை நேரத்தில் தொழுகையால் வரும் பிரச்சினையையும் இப்படியே
எதிர்கொள்கிறார். சங்கநாதம் எழுப்பச் சொல்லி ஹிந்துக் கைதிகளைத் தூண்டுகிறார்.
முதல் உலகப் போரின்போது கெய்சர் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார் என்ற செய்தியை
முஸ்லீம் கைதிகள் பரப்ப, இவர் பதிலுக்கு அவர் ஆர்யசமாஜி ஆகிவிட்டார் என்கிற
செய்தியைப் பரப்பச் சொல்கிறார். உருதுவில் எழுதுவதே மேன்மையானது என்கிற எண்ணத்தை
உடைத்து, ஹிந்தியில் எழுதச் சொல்கிறார். இவையெல்லாம் சிறைக்குள் அத்தனை இன்னல்களுக்குள்
சாவர்க்கரால் செய்யப்பட்டவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
சிறையிலும் சிறைக்கு வெளியே அந்தமான் தீவிலும் தாய்மதம் திரும்புவதை ஒரு
சடங்காகவே செய்ய ஆரம்பித்தார் சாவர்க்கர். இதனால் திணறிப் போன பிரிட்டிஷ் அரசு,
சிறைக்குள் எந்த ஒரு மதத்தில் இருந்தும் இன்னொரு மதத்துக்கு மதம் மாற்றுவதைத் தடை
செய்கிறது. இதுதான் சாவர்க்கர் எதிர்பார்த்ததும்கூட!
மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதரோடு முடியக்கூடியதல்ல, அடுத்தடுத்த
தலைமுறைகளில் ஒரு மதத்துக்கான அடித்தளமாக மாறும் இயல்புடையது என்கிறார்.
குற்றவாளியாகவே இருந்தாலும் ஒருவர் ஹிந்து மதத்தில் தொடரவேண்டிய அவசியத்தை, அதன்
அடுத்தடுத்த தலைமுறைகளை மனதில் வைத்துச் சொல்கிறார். இதற்காக உலக வரலாற்றில்
இருந்து பல உதாரணங்களை முன்வைக்கிறார். நூல் முழுக்க இப்படித்தான், எதிர்காலத்தில்
என்ன நடக்கும், அதற்கான உலக வரலாற்று ஆதாரங்கள் என்ன என்பதோடு நம் புராணங்களின்
ஆதாரங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.
சிறைக்குள் எழுத்தறிவிக்க சாவர்க்கர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப்
பற்றிச் சொல்லவேண்டுமானால், எழுத்தறிவிப்பவன் இறைவன் என்றால் இப்படி
எழுத்தறிவித்தவன் அதற்கு மேல் என்றே சொல்லவேண்டும். மூன்று ஆர் (Reading, wRiting,
aRithmetic) என்பதை ஒருவன் எப்பாடுபட்டாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் குறியாக
இருக்கிறார்.
தான் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதில் சாவர்க்கருக்கு இருந்த ஆர்வம்
அளப்பரியது. சிறையின் சுவர்களையே காகிதமாக்கி, சிறையில் கிடைக்கும் ஒரு ஆணியை
மறைத்து வைத்து அதிலேயே தன் கருத்துகளை எழுதுகிறார். புத்தகங்கள் பற்றிய
குறிப்புகள், புதிய கவிதை என்று எழுதுகிறார். வேறு அறைக்கு மாற்றப்பட்டால், இந்த
அறை மற்ற கைதிகளுக்கு ஒரு புத்தகமாகிறது. மாற்றப்பட்ட சிறையிலும் இப்படி வேறு
ஒன்றை எழுதுகிறார்.
சிறைக் கைதிகளுக்குள்ளே ரகசிய முறையில் செய்திகளைப் பரிமாற சாவர்க்கர்
செய்யும் விஷயங்கள் எல்லாம் கற்பனைக்குள் அடங்காதவை. code முறையில் பேசிக்கொள்வது,
பானைத் துண்டுகளில் செய்திகளைப் பரப்புவது, கிடைக்கும் காகிதங்களில் எழுதி
சுருட்டி எரிந்து பரப்புவது என்று என்னவெல்லாமோ செய்கிறார். கைதிகளையும் அதில்
பங்கெடுக்க வைக்கிறார்.
முதல் உலகப் போரின்போது சிறைக் கைதிகளுக்கு அரசியல் அறிவைப் புகட்ட வாரம்
தோறும் பிரசங்கம் செய்கிறார். அவர்களுடன் விவாதிக்கிறார். உலக அரசியல்
அறிவில்லாமல் சுதந்திரப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்று விளக்குகிறார்.
அதே சமயம் ஒரு கனிவான ஆசிரியர் போல அவர்களுக்கு போதிக்கிறார். அவசரப்படுவதில்லை.
மெல்ல மெல்ல சொல்லித் தருகிறார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது, இரண்டு
ராஜா சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் என்று யோசித்துக்கொண்டிருந்த கைதிகளுக்கு
அரசியல் சொல்லித் தருகிறார். இதைத் தொடர்ந்து சிறையில் நூலகம் தொடங்குகிறார். தன்
சகோதரர்கள் மூலம் புத்தகங்களைச் சிறைக்குக் கொண்டு வருகிறார். சிறையில் இருக்கும்
பிரிட்டிஷ் அதிகாரிகள் இதை எதிர்த்தாலும், கிண்டலாகப் பேசினாலும், உயரதிகாரிகளின்
ஆதரவைப் பெற்று, இதை வெற்றிகரமாகச் செய்து காண்பிக்கிறார் சாவர்க்கர்.
முதல் உலகப் போரின்போது கெய்சரின் படையினர் அந்தமான் சிறையைத் தகர்த்து
சாவர்க்கரை மீட்கப் போகிறார்கள் என்கிற புரளி வருகிறது. அந்தமான் கடற்கரையில்
கிடைக்கும் வெடிகுண்டு ஒன்றை வைத்து இந்த முடிவுக்கு வருகிறார்கள் பிரிட்டிஷ் சிறை
அதிகாரிகள். இதையெல்லாம் நம்பவேண்டாம் என்று எத்தனையோ சொன்னாலும், சாவர்க்கரை
பெரிய அளவில் கண்காணிக்கிறது பிரிட்டிஷ் அரசு.
காந்திஜியைப் பற்றிய இரண்டு அல்லது மூன்று குறிப்புகள் இந்த நூலில் உள்ளன.
மகாத்மா என்றே குறிப்பிடுகிறார் சாவர்க்கர். ஆங்கில மொழிபெயர்ப்பில் இப்படி
வருகிறதா அல்லது மராட்டியிலேயே இப்படித்தான் இருந்ததா என்பது தெரியவில்லை. மகாத்மா
என்று குறிப்பிட்டாலும் காந்தியின் தவறான அகிம்சை போதனைப் புரிதல்களைக்
கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்குகிறார் சாவர்க்கர். ஒத்துழையாமை
இயக்கத்தைவிட நமக்குத் தேவையானது பொறுப்புள்ள ஒத்துழைப்பு (*Responsive cooperation) என்பதுதான் என்று வாதிடுகிறார்.
ஐந்து ஆண்டுகள் அந்தமான் சிறைத் தண்டனைக்குப் பிறகு சிறைக் கைதிகளுக்குத்
தரப்படும் ஒரு உரிமை, அந்தமான் தீவில் குடும்பத்துடன் வசிக்கும் உரிமை. அது
யாருக்குத் தரப்பட்டாலும் சாவர்க்கருக்குத் தரப்படக்கூடாது என்பதில் உறுதியாக
இருக்கிறது பிரிட்டிஷ் அரசு. ஒரு வழியாக அந்த அனுமதி கிடைக்கும்போது அங்கே
சென்றும் சுதந்திரப் போராட்டக் கனலைப் பரப்புகிறார். அவற்றையெல்லாம் புல்லரிப்பு
இல்லாமல் படிக்கமுடியாது.
சிறைக்குள் வரும் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் சாவர்க்கருக்கு விடுதலை என்கிற
செய்தி வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. சிறையே இதனால் சந்தோஷம் கொள்கிறது. ஆனால்
ஒவ்வொரு முறையும் சாவர்க்கருக்கு மட்டும் விடுதலை தரப்படாது. புத்தகத்தைப்
படிக்கும் நமக்கே இது பெரிய அசதியைக் கொண்டு வரும் என்றால் அங்கே வாழ்ந்தவர்களின்
நிலையை நினைத்துப் பாருங்கள்.
முதல் உலகப் போரை ஒட்டி பொது மன்னிப்பு என்கிற விஷயம் எழுகிறது. சிறையில்
இருக்கும் கைதிகள் ஒவ்வொருவரையும் இந்தப் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்குமாறு
சாவர்க்கர் சொல்கிறார். அனைவரையும் விண்ணப்பிக்க வைக்கிறார். அப்படி
விண்ணப்பித்தவர்களுள் ஒருவரே சாவர்க்கர். அன்று பிரிட்டிஷ் அரசுக்கு மனு அளிப்பது
ஒன்றே வழி. அந்த வழியையே சாவர்க்கர் பின்பற்றினார். அதில் இருக்கும் வரிகளை
மேற்கோள் காட்டி, சாவர்க்கர் இந்த அளவுக்குப் போனார் என்பது அடுத்த குற்றச்சாட்டு.
The Mighty alone can afford to be merciful and therefore where else can the
prodigal son return but to the parental doors of the Government? சாவர்க்கரின்
கவிதை தோய்ந்த மொழி எப்போதுமே அப்படியானதுதான். உருவகமும் உலகப் புகழ்பெற்ற
காவியங்களின் வரிகளும் முழுக்க இழையோடித்தான் அவரால் எழுதமுடியும். இதில்
கவனிக்கவேண்டியவை என்ன? ஒன்று, சாவர்க்கர் எல்லாக் கைதிகளையும் பொதுமன்னிப்புக்கு
விண்ணப்பிக்கச் சொல்கிறார். காரணம், சிறையில் உழன்று அழுகிச் சாவதில் பொருளே இல்லை
என்றும், ஒரு புரட்சியாளன் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே போகவேண்டும் என்றே
நினைக்கவேண்டும் என்றும், அதற்கான காரணம் அப்படி வெளியே செல்வது பாரத அன்னைக்கு
சுதந்திர மலரைச் சூட்டப் போராடுவதற்காகத்தான் என்றும் பல முறை பதிவு
செய்திருக்கிறார். அனைவருக்கும் பொது மன்னிப்பு தரப்பட்டாலும் சாவர்க்கர்
சகோதர்களுக்கு மட்டும் அந்த நேரத்தில் தரப்படவில்லை! இரண்டாவதாகக்
கவனிக்கவேண்டியது, மிகத் தெளிவாக சாவர்க்கர் சொல்கிறார், “என் பொருட்டு ஒருவேளை
அனைவருக்கும் பொது மன்னிப்பு மறுக்கப்படும் என்றால், மற்ற அனைவருக்கும் பொது
மன்னிப்பு வழங்குங்கள், என்னைச் சிறையிலேயே வையுங்கள், மற்றவர்களுக்குத் தரப்படும்
மன்னிப்பு எனக்குத் தரப்படுவதைப் போன்றதே” என்கிறார். இதை வெறும் வாய்
வார்த்தையாகச் சொல்லவில்லை. இந்தப் புத்தகத்திலேயே இதைப் பல இடங்களில் பல
கட்டங்களில் சொல்கிறார். மூன்றாவதாக, சிறையில் இவரைச் சந்தித்து உரையாடிய
பிரிட்டிஷ் அதிகாரி சர் ரெஜினால் க்ரடாக் சொல்வது: “கருணை மனுவுக்குப்
பின்னரும்கூட, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செய்தது குறித்த எவ்வித குற்ற
உணர்ச்சியும் இவரிடம் இல்லை” என்பது. நான்காவதாக, அந்தமான் சிறையில் இருந்து 2
மே1921ல் மாற்றப்பட்டு இவர் ரத்னகிரியிலும் எரவாடா சிறையிலும் மூன்று
ஆண்டுகளுக்குச் சிறையில் வைக்கப்படுகிறார். பின்னர் ரத்னகிரி மாவட்டத்தை விட்டு
வெளியே செல்லக்கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐந்து ஆண்டுகள் ரத்னகிரியில்
கழிக்கிறார். பின்னரும் 1937 வரை தீவிரமாகக் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்.
ஆனாலும் சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்கைத் தீவிரமாகவே செலுத்துகிறார். எனவே
சாவர்க்கர் மன்னிப்புக் கேட்டார் என்பது, ஒற்றை வரி அரசியலைச் செய்பவர்களுக்கான
வெற்றரசியல் மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அதிக காலம் சிறையில்
இருந்தவர் சாவர்க்கரே. அதுவும் கொடும் சிறை, தனிமைச் சிறை. இதைப் புரிந்துகொள்ள
தேசம் பற்றிய எண்ணமும், சுதந்திரப் போராட்டம் பற்றிய புரிதலும் வேண்டும்.
அந்தமான் சிறையிலிருந்து ரத்னகிரிக்கு மாற்றப்படும் சாவர்க்கர் சகோதரர்கள்
பாரத மண்ணில் கால் பதிக்கும்போது சாவர்க்கரின் வரிகள் பெரும் கவித்துவம்
பெறுகின்றன. நாடி நரம்பெல்லாம் தேசபக்தி உள்ளவர்களால் மட்டுமே அப்படி எழுத
முடியும், அதைப் புரிந்துகொள்ள முடியும்.
சாவர்க்கர் எப்பேற்பட்ட சிந்தனையாளர், சுயமான தலைவர் என்பதற்கு இந்த நூல்
ஒரு ஆதாரம். இந்த நூலை வாசிக்காமல் போவது பெரிய இழப்பு. இன்னும் சொல்வதற்கு
எவ்வளவோ இருக்கின்றன. நூலை வாசித்தால் நான் சொல்வது புரியும். நான் இந்த நூலை
ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசித்தேன். எஸ்.ஜி. சூர்யாவின் மொழிபெயர்ப்பில் தமிழில்
மிக அற்புதமாக வெளி வந்திருக்கிறது. நண்பர் பாலாவும், நானும் இதை எடிட் செய்தோம்.
மிக முக்கியமான நூல் இது. தவற விட்டுவிடாதீர்கள். வேறென்ன சொல்வதென்று
தெரியவில்லை.
கோமாளி என்றொரு கொடுமையைப் பார்த்தேன். (ஹாட்ஸ்டாரில் விஐபி-யிலேயே கிடைக்கிறது.) ஒரு நல்ல முடிச்சை எடுத்துக்கொண்டு அதை காமெடியாக எடுப்பதா அல்லது சீரியஸாக எடுப்பதா என்று தெரியாமல் குழப்பி அடித்திருக்கிறார்கள். இதில் சோஷியல் மீடியா ஏற்படுத்தும் விலக்கம் பற்றியும் மீண்டும் மனிதாபிமானமே முக்கியம் என்ற ‘புத்தம் புதிய’ கருத்தையும் சொல்ல நினைத்து கசக்கி எறிந்துவிட்டார்கள். எல்லா சாதிகளும் இனங்களும் வேற்றுமை மறந்து வெள்ளத்தின்போது உதவினார்கள் என்பதை வலிந்து வலிந்து காட்டுகிறார்கள். அதில் பூணூல் தெரிய பிராமணர் உதவ, சிங் உதவ, இஸ்லாமியர் உதவ, கிறித்துவர் ஜோசஃப் என்று தன் பெயர் சொல்லிப் போகிறார். அப்படியும் பிராமணரை விடவில்லை. இன்னொரு காட்சியில், “தோப்பனார் கிட்ட சொல்வேன்” என்று வசனம் வைத்து, யோகி பாபு அதற்கு பதிலாக “தோப்பனார் தொண்டையை கிழிச்சிருவேன்” என்று என்னவோ சொல்கிறார். இது சின்ன விஷயம், சின்ன கிண்டல், சின்ன சீண்டல்தான். ஆனால் ஏன் இதை வைத்தார்கள் என்பதுதான் விஷயம். 40 வயதான ஆண் ஒருத்தன் ஒரு பிரச்சினைக்கு என்றைக்காவது “என் தோப்பனார்கிட்ட சொல்வேன்” என்று சொல்வானா? இந்தப் படத்தில் சொல்கிறான். சின்ன பையன் சொல்வது போலவாவது வைத்திருக்கலாம். ஒரு காட்சியை இப்படி வைக்கும்போதே உரைக்காதா என்ன? ஆனாலும் வைக்கிறார்கள் என்னும் எண்ணத்தின் பின்னணியில் உள்ள விஷயமே முக்கியமானது. ஆனாலும் இயக்குநர் மற்ற காட்சிகளில் இப்படி படுத்தவில்லை.
மோடியை யோகிபாபு என்னவோ சொல்கிறார், அது ம்யூட் ஆகிவிட்டது. ப்ளம்பர் என்று சொல்கிறார் எனக் கேள்விப்பட்டேன். ரஜினி குறித்த காட்சி நீக்கப்பட்டு நாஞ்சில் சம்பத் வருகிறார். இதுவே ஒரு குறியீடோ என்ன எழவோ. ரஜினி பற்றிய காட்சி, லாஜிக்கே இல்லாத, ஆனால் மக்கள் மனதில் இருக்கும் கருத்துடன் பொருந்திப் போன நல்ல காட்சிதான். ஏன் இத்தனை பொங்கி நீக்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 2017 வரை ரஜினி வெளிப்படையாக என்றும் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னதே இல்லை. அப்படியானால் அதைக் காட்சியாக வைத்து எப்படி ஜெயம் ரவி இன்னும் இது 1996 என்று சொல்லமுடியும்? லாஜிக் தவறான காட்சியை வைத்துவிட்டு அதை உணர்ந்து நீக்கினார்களோ என்னவோ.
மிக மோசமான, அடிப்படையற்ற ஒரு படம். லாஜிக்கே இல்லாமல் இப்படிப் படம் எடுப்பது தமிழில் புதிதல்ல. ஆனால் இதில் ஒரு புதிய சாதனை செய்திருக்கிறார்கள். ஒரு படம் முழுக்க ஹிந்து மதத்தை, ஹிந்து மதத்தின் கடவுளர்களைக் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். தமிழில் இதுபோன்ற சாதனை இதுவரை வந்ததில்லை. கூடவே ஈவெராவையும் (இன்னும் 3 தலைவர்களையும்) கிறித்துவ மதத்தையும் தெரஸாவையும் புகழ்ந்திருக்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களையும்விட மோசமான உருவாக்கத்தில் வந்திருக்கும் இப்படத்தைப் பார்ப்பதே ஒரு தியாகம்தான். இந்தப் படத்தைப் பற்றி எழுத ஒரு அவசியமுல்லை. ஆனால் தமிழ்த் திரையுலகம் எந்த அளவுக்கு ஹிந்து மத வெறுப்பையும் அதன் ஒட்டாக கிறித்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என்பதையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பார்த்தேன், எழுதுகிறேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் முத்துக்குமரன். இவருக்குப் படம் எடுக்கத் தெரியுமா என்பதையும் தாண்டி, இவர் ஒரு நல்ல படத்தையாவது பார்த்திருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதில் பெயர் மட்டும் முத்துக்குமரன். உண்மையில் இவர் ஹிந்து மதத்துக்குச் செய்யும் பெரிய சேவை ஒன்று இருக்குமானால், தன் பெயரை உடனே மாற்றிக்கொண்டு விடுவது. திரையுலகத்துக்குச் செய்யும் சேவை என்று ஒன்று இருக்குமானால், இனி படங்களையே எடுக்காமல் இருப்பது. இப்படத்தில் கதையே இல்லை என்பதோடு, திரைக்கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை, ஒன்றுமே இல்லை. ஆனால் பிரசாரம் மட்டும் பலமாக இருக்கிறது.
தமிழ்த் திரையுலகம் மிகப்பெரிய மாயவலையில் சிக்கி இருக்கிறது என்பதை எத்தனையோ முறை எத்தனையோ பேர் சொல்லி இருக்கிறார்கள். அதன் இன்னொரு நிரூபணம் இத்திரைப்படம்.
* படத்தின் முதல் காட்சியே இரட்டை அர்த்த வசனத்தில் தொடங்குகிறது. பேசுபவர் யமன்.
* யமனின் மகனாக வரும் யோகி பாபு புதிய யமனாகிறார். இவர் வாயைத் திறந்தாலே யாரையாவது எதற்காகவாவது திட்டிக்கொண்டே இருக்கிறார்.
* நடனம் என்பதை சிவன் கொச்சைப்படுத்திப் பேசி, முருகன் பிள்ளையாருடன் குத்தாட்டம் போடுகிறார்.
* சிவன் போடா வெண்ண என்றெல்லாம் வசனம் பேசுகிறார்.
* நரகத்துக்கு அழைத்துச் செல்ல கருப்பான மனிதர்கள் அரக்கர்கள் வருகிறார்கள். அவர்கள் அரக்கர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆனால் சொர்க்கத்துக்குச் செல்ல வெண்ணிற தேவதைகள், கிறித்துவ பாணியில் இறக்கைகளுடன் வருகிறார்கள். அதாவது கெட்டவர்கள் என்றால் கருப்பாக ஹிந்து அடையாளங்களுடன் இருப்பார்கள். உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் நல்லவர்கள் எல்லாம் கிறித்துவ அடையாளங்களுடன் வெள்ளையாக இருப்பார்கள்.
* பாம்புக்குப் பால் ஊற்றினால் பாம்புக் குட்டிகள் செத்துப் போகும் என்று படத்தில் சொல்கிறார்கள். யார் சொன்னது? பாம்பே சொன்னது!
* யானையைப் பிச்சை எடுக்க வைத்தால் யானை பாகனைக் கொல்லும். ஆனால் யமன் அந்த யானையை மீண்டும் திருவண்ணாமலைக்கு அனுப்புகிறார். திருவண்ணாமலைக்குப் போய் அந்த யானை என்ன செய்யும்? இவ்வளவுதான் இயக்குநர் முத்துக்குமரனின் மூளை!
* யமன் கிறித்துவ தேவாலயத்துக்குள் போய் படுத்து உறங்குகிறார். ஏசுவை யமனே ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார். ஏசுவிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் சித்திரகுப்தனை!
* இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு யமலோகம் வருகிறார்கள். அவர்களை வளர்க்க யமன் அவர்களை யாரிடம் ஒப்படைக்கிறார்? தெரஸாவிடம்! தெரஸா புகழ் வேறு உண்டு. மறந்தும் ஹிந்து சன்னியாசிகள் அனாதைக் குழந்தைகளை வளர்ப்பதாகக் காண்பிக்கமாட்டார்கள். இப்படியான பொதுப்புத்தியை வளர்ப்பதே இயக்குநர் முத்துக்குமரன்களின் நோக்கம்..
* சமூகத்தில் நடக்கும் விஷயங்களையெல்லாம் பேப்பர் கட்டிங் எடுத்து வைத்துக்கொண்டு படமெடுத்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமரன். அதில் ஒன்று, ஸ்கூட்டரில் செல்லும் தம்பதிகளை ஒரு போலிஸ் காலால் உதைத்துத் தள்ள, அதில் இறந்து போகும் ஒரு பெண்ணைப் பற்றியது. அதில் அப்படி உதைத்துத் தள்ளும் போலிஸ் நெற்றி நிறைய பட்டை போட்டு சந்தனம் குங்குமம் வைத்துக்கொண்டு, ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்ட பக்தர்! ஐயப்ப பக்தர்களைக் கேவலப்படுத்தும் காட்சி அடுத்து அரங்கேறுகிறது.
* ஹிந்துக் கடவுள்கள் என்றால், ஹிந்துக்களின் இயற்கையோடு ஒட்டிய வழிபாடு முதற்கொண்டு கிண்டல் செய்து பகுத்தறிவு பேசுவது, கிறித்துவம் என்று வந்துவிட்டால் புகழ்வது. இதற்கு எதற்கு ஒரு படம்? பேசாமல் ‘எழுப்புதல் கூட்டம்’ ஒன்றில் பேசி வீடியோவாக்கி வெளியிட்டிருக்கலாம்.
* சித்திரகுப்தன் நெற்றியில் பட்டை போட்டிருக்கிறார். அவர் மனிதனாக வரும்போது நாமம் போட்டிருக்கிறார். தெளிவாக பிராமணர் என்று காண்பிக்கிறார்கள். ஏனென்று பார்த்தால் அடுத்த காட்சியிலேயே யமன் ஈவெராவைப் புகழ்கிறார். இந்த பிராமணர் அதை மறுக்கிறார். ஆம், மறுக்கிறார், மரியாதையுடன் மறுக்கிறார், திட்டவில்லை! யமனின் சந்தேகத்தைப் போக்க அதே சித்திரகுப்தன் ஈவெராவின் பெருமைகளை அவிழ்த்துவிடுகிறார். இப்படிப்பட்டவர்களை தன் தந்தையான முதலாம் யமன் ஏன் கொல்கிறார் என்று இந்தப் புதிய யமனே நொந்துகொள்கிறார்.
* அடுத்து அம்பேத்கரைப் பாராட்டுகிறார்கள். அடுத்து சுபாஷ் சந்திர போஸின் சிலையைப் பார்த்துப் புகழ்கிறார்கள். எத்தனை விவரம் பாருங்கள். சுபாஷ் சந்திர போஸைப் புகழும்போது ஒரு வசனம், இவர்தானே உண்மையான தேசத் தந்தை என்று. அதில் உண்மையான என்ற வசனம் ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.
* அடுத்து காந்தி சிலையைப் பார்த்து ஜஸ்ட் ஒரு வார்த்தை பாராட்டிச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
* பாஸ்கி என்றொரு நடிகர், சோ-வாக நடிக்கிறார். பாஸ்கிக்கு மண்டைக்கு வெளியே மட்டுமில்லை, உள்ளேயும் ஒன்றும் கிடையாது என்று தெரிகிறது. இவர் இத்தனை நாள் சொல்லிக்கொண்டிருந்தவை எல்லாமே பொய்தானோ என்றும் தோன்றுகிறது. இத்தனைக்கும் இவர் திரைப்படங்களின் விமர்சகர் வேறு. ஒரு படத்தில் யாரை எப்படிக் காண்பிக்கிறார்கள், அதில் நாம் ஏன் நடிக்கிறோம் என்கிற அடிப்படை அறிவுகூட இவருக்கு இல்லை.
* மாமா வேலை பார்த்தே சோ அரசியல் பணி ஆற்றினார் என்றே படத்தில் காட்டுகிறார்கள். தன் வாழ்நாள் முழுக்க திராவிட வெறி அரசியலுக்கு எதிராகப் பேசியவருக்கான மரியாதை இவ்வளவுதான். இதை பாஸ்கியும் அப்படியே நடித்திருக்கிறார் என்பது நமக்குச் சொல்லும் செய்திகள் ஏராளம். இங்கே எல்லாவற்றையும் நிர்ணயிப்பது வாய்ப்பரசியல்தான். உண்மையோ தர்மமோ அல்ல.
* யமன் மாமா வேலை பார்க்கிறார் என்றெல்லாம் வசனம் வருகிறது.
* இதற்கிடையில் இயக்குநர் முத்துக்குமரனுக்கு அரசியல் பகடி செய்ய ஆசையும் வருகிறது. ‘ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலையாம், அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம்’ என்ற வசனம் எனக்கு மட்டும் கேட்டது.
* எவ்வித அறிவும் இன்றி அரசியல் பகடியை எடுப்பது என்பது நம் தமிழ் இயக்குநர்களுக்கே வந்த கலை. மேம்போக்கான வசனம் ஒன்றை ஒற்றைத் தெறிப்பில் சொல்லிவிட்டு, அசப்பில் ஒரு அரசியல்வாதியைப் போன்ற ஒருவரைக் காட்டிவிட்டு, என்னவோ பகடித் திரைப்பட வரிசையில் பெரிய சாதனை செய்துவிட்டது போல இருப்பதே நம் இயக்குநர்களின் பணி. சத்யராஜின் ‘மகா நடிகன்’ தொடங்கி இன்று வரை இதுதான் இவர்களுக்குப் பழக்கம். மிக அரிதாக சில படங்கள் (அமைதிப்படை, புதுப்பேட்டை போன்றவை) வரும். இந்தப் படத்தில் நம் இயக்குநருக்கு எதுவுமே வரவில்லை என்பதால், இந்தப் பகடியும் வரவில்லை என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை.
* ஓ பி எஸ் வருகிறார். மோடியைப் பெயர் சொல்லாமல், அதுவும் ஒரு பொய்ச் செய்தியைச் சொல்லிக் கிண்டல் செய்கிறார்கள். செல்லூர் ராஜுவைக் கிண்டல் செய்கிறார்கள். தமிழக அதிமுக அமைச்சர்களைக் கிண்டல் செய்கிறார்கள். ஒன்றிலும் ஒரு விஷயஞானமும் இல்லை. ஆனால் மிக விவரமாக இயக்குநர் ஜெயலலிதாவும் கருணாநிதியும் சொர்க்கத்தில் இருப்பதாகச் சொல்லி வைக்கிறார்!
* அடுத்து ஆணவக் கொலைக்குள் போகிறார் இயக்குநர்.
* இறுதியில் ஈவெரா, காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் என நால்வரையும் யமன் மீண்டும் உயிர்ப்பித்து அனுப்பும்போது, என்னடா இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இத்தனை பெரிய தண்டனை என்கிற எண்ணம் நமக்கு எழுகிறது.
இத்தனையிலும் நாம் கவனிக்கவேண்டியது, இத்தனை ஹிந்துக் கடவுள்கள் கிண்டல் செய்யப்பட்டபோதும் ஒரே ஒரு கிறித்துவக் கடவுள் கொண்டாடப்பட்டிருப்பதையும், மறந்தும் இஸ்லாம் என்கிற ஒரு வார்த்தைகூடப் படத்தில் வரவில்லை என்பதையுமே. தமிழில் யமனைப் பற்றிய கேவலமான முதல் படம் இதுதான் என்றில்லை. யமனுக்கு யமன் தொடங்கி லக்கிமேன் வரை பல படங்கள். அவை அனைத்திலும் இயக்குநர்களின் முட்டாள்தனம் மட்டுமே வெளிப்பட்டது. யமன் குத்தாட்டத்தை ரசிப்பதாகக் காட்சிகள் வைப்பார்கள். யமனுக்கு மூளையே கிடையாது, முட்டாள் என்று காண்பிப்பார்கள். யமனை நாடகத்தின் ஒரு நகைச்சுவை நடிகரைப் போலக் காண்பிப்பார்கள். இந்தப் படம் அதே அடிப்படையில் ஹிந்து வெறுப்பையும் கிறித்துவ ஈவெரா பிரசாரத்தையும் இணைத்து அடுத்த தளத்துக்குச் சென்றிருக்கிறது. முட்டாள்கள் இயக்குநரோ பாஸ்கியோ யோகி பாபுவோ அல்ல.
It was a lovely experience at PondyLitFest2019. Well organized, better planned compared to last year, many excellent sessions and had great interactions with many friends and writers. Most of the attendees expressed their concern in so many ways just about how we are going to take our tradition to the next generation. Many many questions were asked again and again in so many ways to express this concern only. Everybody attended had a great urge to protect and hand over our dharma to the future, but puzzled it seems how to achieve it. This fest either might have enlightened them or confused more, whichever is good. 😊 A session on economy (‘Economy: Is $5 Trillion a Mirage?’) registered so many doubts, questions, concerns, criticisms and ideas with Sanjeev Sanyal (Principal Economic Adviser in the Ministry of Finance) which we can never expect to have happened in any other government other than this current BJP government. Arif Muhammad Khan’s session was the best one I would say. Aravindan Neelakandan’s chaired many sessions, he was received a superstar there, I must say all his sessions were very good, in particular the session in which Jataayu and Ganesh participated, ‘Indigenous Traditions: Beyond conservation’. ‘What good, digging up the past?’ session was so informative that I must watch it again to get the whole data submitted there. The past two days were very insightful. Thanks #PLF2019.
தீவிரமான கமர்ஷியல் படங்களை எடுக்க நாம் இன்னும் பழகவில்லை. உண்மையில் பழக விரும்பவில்லை. வணிகத் திரைப்படங்கள் என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கிறது. ஒரு காட்சியை எப்படி எடுத்தாலும் அது ஒரு ஹீரோயிஸப் படமென்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இயக்குநர்கள் நம்புகிறார்கள். நம் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது. இதனால் வணிகத் திரைப்படங்கள் ஏனோதானோவென்று எடுக்கப்படுகின்றன.
சமீபத்தைய ட்ரெண்டாக, தற்போது நடந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை, அதன் ஆழம் புரிதல் எதுவுமின்றி அப்படியே மேம்போக்காக ஒரு வசனமாகப் பயன்படுத்தும் போக்கும் பரவலாக இருக்கிறது. அல்லது சில காட்சிகளை சும்மா பயன்படுத்திக்கொள்வது. இந்த காப்பான் படத்தில் அப்படிப் பலவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமாக இவர்கள் எடுத்துக்கொண்டிருப்பது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை.
நிலம் முக்கியம், திட்டங்கள் முக்கியமல்ல என்று எங்கெல்லாமோ சுற்றி சுற்றி வந்து சொல்லி இருக்கிறார்கள். அதை இவர்கள் கையாண்ட விதத்தைப் பார்த்தால், ‘விவசாயி தற்கொலை செய்துகொள்வதே பரவாயில்லை’ என்று மக்கள் சொல்லிவிடும் அளவுக்கு உள்ளது. ஏகப்பட்ட விஷயங்களையெல்லாம் அப்படியே படத்தில் பயன்படுத்தி, ஒட்டுமொத்தமாக இந்தப் படம் சொல்ல வருவதுதான் என்ன என்பதில் பெரிய குழப்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்திய முக்கியம், காஷ்மீர் முக்கியம், தீவிரவாதிகள் ஒழிக்கப்படவேண்டும், மிக நல்ல பிரதமர் வர்மா (மோகன்லால் – நரேந்திர மோடி போன்ற கெட்டப்), அவரது மகன் அதைவிட நல்லவர்! இப்படி ஒரு கதை. இவரை கார்ப்பரேட் சதி கொல்லப் பார்க்கிறது. பிரதமரைக் கொல்கிறார்கள். பிரதமர் மகன் (ஆர்யா) மறு பிரதமராக, அந்த நல்லவரையும் கார்ப்பரேட் சதி கொல்லப் பார்க்க, அதற்கு போலிஸில் இருப்பவர்களே உதவ என்று என்னவெல்லாமோ சுழற்றி அடிக்கிறார்கள். படத்தில் திருப்பம் இருக்கலாம், அதற்காக திருப்பங்களே படமாக இருந்தால் பார்க்கவேண்டாமா? முறுக்கு சுற்றுவது போல இழுத்துக்கொண்டே போகிறார்கள்.
ரகசிய போலிஸான சூர்யா குண்டு வைக்கிறார். அடுத்த நிமிடமே களை பறிக்கிறார், நீர் பாய்ச்சுகிறார். வெளிநாட்டில் பிரதமரைக் கொலையில் இருந்து காப்பாற்றி, காதலியிடம் இரட்டை வசனம் பேசுகிறார். மீண்டும் விவசாயியாகி விவசாயம் விவசாயம் என்று தஞ்சாவூர் விவசாயிகளுக்குக் கொடி பிடிக்கிறார். மனிதனின் மலத்தை உரமாக்கி அதைக் கொண்டு எக்கசக்கமாக உணவை விளைவிக்கிறார். அடுத்த காட்சியிலேயே பிரதமருக்கு அருகில் அவரது காப்பானாக நிற்கிறார். இத்தனை அசட்டையாக இனி யாராலும் படம் எடுக்க முடியாது.
கதையில் எதாவது பதறும்படி வைக்கவேண்டும் என்பதற்காகவும், அது புதுமையாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் ஒரு பூச்சியைக் கண்டுபிடித்து உலவ விட்டிருக்கிறார்கள். அது குட்ஸ் ட்ரைனில் கொண்டு வரப்படுகிறது. அதை சூர்யா முறியடிக்கிறார். இதற்கிடையில் காதலும் செய்கிறார். நட்பையும் கொண்டாடுகிறார். பிரதமரை அபி அபி என்று பெயர் சொல்லி அழைக்கிறார். உரம் போட்ட விவசாயத்தை வெளுத்து வாங்குகிறார். அதாவது விவசாயிகளிலும் இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமே ஆதரவாம். இதில் ஆர்கானிக் விவசாயத்தைவிட இயற்கை விவசாயம் ஒரு படி மேல் என்கிறார். இந்தியா போன்ற நாடுகளில், உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளை நம்பி விவசாயம் செய்யவில்லை என்றால், உணவுக்கு நாக்குதான் வழிக்கவேண்டி இருக்கும். அப்புறம் மனிதர்களுக்கு மலமும் வராது, அதிலிருந்து உரமும் வராது. ஆனால் இதையெல்லாம் சூர்யா கமுக்கமாகப் பேசாமல் இருந்துவிடுகிறார்.
இதற்கிடையில் சூர்யாவுக்கு ரசாயண குண்டுகளை அழிப்பது, காஷ்மீர் பணி, பாகிஸ்தான் போவது, அங்கிருந்து ஒரு நதியில் குதித்து தப்பித்து இந்தியா வருவது, இங்கே காதலித்துக்கொண்டே அங்கே பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரியைப் போட்டுத் தள்ளுவது என்று ஏகப்பட்ட வேலைகள். என்னவெல்லாமோ செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர் பிரதமராகிவிட்டால் வீட்டுக்கு ஓடி வந்துவிடவேண்டும் என்று நினைத்தேன், நல்லவேளை அப்படி எதுவும் சம்பவிக்கவில்லை.
ஹாரிஸ் ஜெயராஜ் – கொடுமை.
இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில், கெத்தாக எவ்வித அலட்டலும் இல்லாமல் நடிக்கும் மோகன்லாலைப் பார்க்க பாவமாக இருக்கிறது.
இந்திய ஆதரவு, மோடியைக் குறை சொல்லாமல் இருப்பது, அதே சமய கார்ப்பரேட்டைக் குறை சொல்வது, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று பலவற்றையும் பேசி, எதையும் உருப்படியாகச் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். சூர்யாவுக்கு வேறு ஏதேனும் கணக்குகள் இருந்தால் அது அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகவே ஆகும்.
கே.வி. ஆனந்தின் பொறுத்துக்கொள்ளவே முடியாத தரை வணிகப்படங்களில் கவணுக்கு அடுத்து இது!
சிசிடிவி கேமராக்களினால் இன்று மிகப்பெரிய நன்மை வந்துள்ளது. பல வழக்குகளை விரைந்து முடிக்க இவை உதவி உள்ளன. ஆனால் எனக்கு வேறு மாதிரியான பிரச்சினை. என்னைப் போன்றே பலர் கோடிக்கணக்கில் இருப்பார்கள் என்பது உறுதி. எதிர்பாராத நேரத்தில் யாரோ எப்படியோ செத்துப்போன அல்லது கொலை செய்யப்படும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் வீடியோக்களைப் பார்க்க நேர்ந்து விடுகிறது. இதனால் ஏற்படும் பதற்றம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதுவும் வாட்ஸப் வந்தபிறகு இந்த மாதிரி வீடியோக்கள் கொட்டுகின்றன.
பொதுவாகவே எனக்கு நல்ல வீடியோக்கள் உள்ளிட்ட எந்த வீடியோவையும் முழுவதுமாகப் பார்க்க பெரிய எரிச்சலாக இருக்கும். படிப்பதுதான் எளிதானது. ஆனால் இது வீடியோக்களின் காலம். எனவே பல முக்கியமான தகவல்களைத் தவற விடக்கூடாது என்பதற்காக வீடியோக்களைப் பார்த்தே ஆகவேண்டிய தேவை உள்ளது. அதற்கிடையில் இதுபோன்ற கொடூரமான வீடியோக்கள் தரும் எரிச்சலைச் சொல்லி முடியாது.
இருபது வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒரு வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. எதோ செய்தி என்று பார்த்தால், ஒரு கோவில் குளத்தில் ஒரு மனநிலை சரியில்லாத நபர் தன்னைக் காப்பாற்ற வந்தவரை நீரோடு முக்கிக் கொல்லும் வீடியோ! அந்த வீடியோ தந்த அச்சம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதேபோல் ஒரு யானை தன் பாகனை விரட்டி விரட்டிக் கொல்லும் வீடியோவையும் சன் டிவி ஒளிபரப்பியது. அதிலிருந்தே இது போன்ற வீடியோக்கள் மீது பெரிய அச்சம் எனக்கு.
சமீப காலமாக சிசிடிவியில் பதிவாகும் அனைத்துக் கொலைகளையும் தற்கொலைகளையும் உடனே எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புகிறார்கள். அது வாட்ஸப்பில் வருகிறது. ஃபேஸ்புக்கில் பரப்பப்படுகிறது. இவற்றிலிருந்து தப்பிக்கவே முடிவதில்லை. காலையில் எழுந்ததும் சாதாரணமாக செய்திகளைப் பார்க்கலாம் என்று தொலைக்காட்சிகளில் பார்த்தால் இதுபோன்ற கொடூரமான வீடியோக்களைத் தொடர்ச்சியாக ஒளிபரப்புவார்கள். எல்லாத் தொலைக்காட்சிகளுக்கும் இதுதான் வேலை என்றாலும், பாலிமர் நியூஸ் இதைச் சிறப்புக் கவனம் எடுத்துச் செய்யும். இன்று காலைகூட அப்படி ஒரு செய்தி. (இது பாலிமரில் அல்ல!) பேருந்தின் முன் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட ஒரு இளைஞர்! நல்லவேளை, அவர் உயிர்தப்பிவிட்டார். சில வீடியோக்களில் மனிதன் மண்ணால் பிசைந்த பொம்மை போல நசுங்கிப் போவதையெல்லாம் காண்பிப்பார்கள்.
இன்னும் சில வீடியோக்கள் சொல்ல முடியாத அளவுக்கு மிகக் கொடூரமானவையாக இருக்கும். சில நொடிகளுக்குள் அது ஓடி முடிந்துவிடும். எனக்குத்தான் பல மணி நேரம் பதற்றம் நிற்காது. எத்தனை முறை சொன்னாலும் யாராவது ஒருவர் இப்படியான வீடியோக்களைப் பார்த்துவிட்டு சரியாக நமக்கு அனுப்பித் தொலைவார்கள். இவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பது என்றே தெரியவில்லை.
இப்போதெல்லாம் எதாவது வீடியோ வந்தால், உடனே அதை அப்படியே ஃபார்வேட் செய்து கடைசி சில நொடிகளைப் பார்ப்பேன். ஒன்றும் பிரச்சினை இல்லை என்றால் மட்டுமே, முழுவதுமாக முதலில் இருந்து பார்ப்பேன். இத்தனை தவிர்த்தும், நான் சமீபத்தில் பார்க்க வைக்கப்பட்ட இதைப் போன்ற வீடியோக்கள் ஐந்தாவது இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
எப்படி இந்த வீடியோக்களை எல்லாரும் சாதாரணமாகப் பார்த்துவிட்டு சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள் என்றே தெரியவில்லை.
நம்பி நாராயணின் ‘Ready to Fire – How India and I survived the ISRO spy case’ புத்தகம் வாசித்தேன். நம்பி நாராயணன் இஸ்ரோவின் விஞ்ஞானி. அப்துல் கலாமுடன் பணிபுரிந்தவர். பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காங்கிரஸ் அரசால் 1994ல் கைது செய்யப்படுகிறார். பின்னர் சிபிஐ இதை விசாரிக்கிறது. 1996ல் இக்குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று சொல்லி சிபிஐ இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. 1998ல் உச்சநீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து இவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது. இவருக்குப் பத்து லட்சம் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. அங்கே இவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று 2018ல் தீர்ப்பாகிறது. 2019ல் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் அளித்து கௌரவிக்கிறது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, கரும்பாலையில் வேலை செய்து, பின்னர் எதேச்சையாக இஸ்ரோவுக்கு விண்ணப்பித்து, அதுவும் தாமதமாக விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்ந்து, கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை வழிநடத்துவதில் முதன்மையான விஞ்ஞானியாக இருந்து, லிக்விட் ப்ரொபல்ஷன் (ராக்கெட்டை உந்தித் தள்ள உதவும் எரிபொருளாக திடப் பொருளுக்குப் பதிலாக நீர்மத்தைப் பயன்படுத்தும்) தொழில்நுட்பத்துக்காக வாதாடி போராடி அது வெற்றி பெற்ற மிகச் சில நாள்களுக்குள் கைது செய்யப்படுகிறார் நம்பி நாராயணன். அதன் பிறகு இவ்வழக்கில் தான் பட்ட இன்னல்களையும் அதைத்தாண்டி வென்றதையும் விவரிப்பதுவே இப்புத்தகத்தின் நோக்கம். இன்னொரு இழையாக இஸ்ரோவில் இவரது பணியையும் விவரிக்கிறார். இப்புத்தகத்தின் ஆதார நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இஸ்ரோவின் வரலாறாகவே இப்புத்தகம் விரிகிறது. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.
கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவின் பழிவாங்கலே, கேரள காங்கிரஸ் அரசு மூலமாக நம்பி நாராயணன் கைது வரை நீள்கிறது. மிகத் திறமையாக ‘நாட்டுக்கு நம்பி நாராயணன் செய்த நம்பிக்கைத் துரோகம்’ என்ற கதையை உருவாக்குகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இரண்டு ஒற்றர்கள் மூலம் தொழில்நுட்பத்தின் வரைபடங்களை நம்பி நாராயணனும் அவருடன் வேலை செய்பவர்கள் சிலரும் விற்றார்கள் என்ற கதை உருவாக்கப்படுகிறது. நம்பி நாராயணன் 6வது குற்றம்சாட்டப்பட்ட நபராகக் கைது செய்யப்படுகிறார். தேசம், அறிவியல், கிரயோஜனிக் தொழில்நுட்பம், இஸ்ரோவின் சக ஊழியர்களுக்கிடையேயான ஈகோ மோதலைச் சமாளித்துத் தன் கனவை நினைவாக்குவதில் போராட்டம் என்றெல்லாம் இருந்தவருக்கு இந்தக் கைது பெரும் அதிர்ச்சியைக் கொண்டு வருகிறது. ஆனால் சிபிஐ இவர் மீது வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் மறுத்து, அனைவரையும் விடுதலை செய்கிறது.
எப்படியெல்லாம் ஒற்றுக் கதையைப் புனைகிறார்கள் என்று படித்துப் பார்த்தால் சாதாரணர்களுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்துவிடும், இப்படியெல்லாம் இவர் செய்யாமல் எப்படிக் கதையைப் புனையமுடியும் என்று. அத்தனை விஸ்தாரமாக தேதி வாரியாக இவர் மீது குற்றச்சாட்டுகள் புனையப்படுகின்றன. சாட்சிகள் அனைவரும் மிரட்டப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள வைக்கப்படுகிறார்கள். ஆனால் இவர் கடைசி வரை அஞ்சாமல் உண்மைக்காகப் போராடுகிறார். சிபிஐ விசாரிக்கும்போது அனைவரும் பிறழ்சாட்சிகளாக மாறுகிறார்கள். தாங்கள் மிரட்டப்பட்டதையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை (ஐபி) அப்படி சொல்லச் சொன்னதாகவும் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.
இந்தியா அப்போதெல்லாம் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கிறது. பிரான்சு அரசு இந்தியாவின் தொழில்நுட்பத்தில் உதவுகிறது. (இவையெல்லாம் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்படுகின்றன.) அமெரிக்கா நமக்கு உதவ கேட்கும் தொகைக்கும் பிரான்ஸு அல்லது ரஷியா கேட்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். இந்தியா அமெரிக்காவைப் புறக்கணிக்கிறது. எனவே அமெரிக்கா கிரியோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை ஒழித்துக்கட்ட தன்னைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியதாக நம்பி நாராயணன் சொல்கிறார். அதாவது பிஎஸ்எல் வி அக்டோபர் 15 1994ல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுகிறது. 30 நவம்பரில் நம்பி நாராயணன் கைதாகிறார். இந்த விளையாட்டை வைத்து கேரளாவின் கருணாகரணை வீழ்த்த ஏ.கே.அந்தோணியும் உம்மன்சாண்டியும் ஆயத்தமாகிறார்கள். கேரள அரசு வீழ்ந்து கம்யூனிஸ்ட் அரசு வருகிறது. அவர்களும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறார்கள். உள்ளார்ந்த விருப்பம் என்றில்லை. ஆனாலும் நடத்த விரும்புகிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து கேரள அரசுக்கு நஷ்ட ஈடும் விதிக்கிறது.
இந்த நூலில் உள்ள பல முக்கியமான அம்சங்களைத் தனியே தொகுத்தாலே அது பல பக்கங்களுக்கு வரும். அப்துல் கலாம், விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், டி என் சேஷன் பற்றிய அழகான சித்திரங்கள் இந்நூலில் உருவாகி வருகின்றன. விக்ரம் சாராபாயும், ஹோமி பாபாவும் திடீரென அகால மரணம் அடைவது குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார் நம்பி நாராயணன். படிக்கும் நமக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.
நம்பி நாராயணின் அபாரமான நினைவாற்றல் இப்புத்தகத்துக்குள் பல பொக்கிஷங்களைக் கொண்டு வருகிறது. அவரது சிறு வயதில் ஆசிரியர் சொல்லும் சிறிய குறிப்பு முதல் (‘எனக்கு நன்றாக சத்தமாகப் பேசத் தெரியும், ஆனால் வேண்டுமென்றே சத்தம் குறைவாகப் பேசினேன், அப்போதுதான் உங்கள் கவனம் கூடுதலாக இருக்கும் என்பதால்’), இவர் முதன்முதல் வேலைக்குச் செல்லும்போது நடுத்தர குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் தொட்டு, இவர் பிரான்ஸில் இருக்கும்போது நடக்கும் நிகழ்வுகள், பின்னர் கைது, விசாரணை எனப் பல இடங்களிலும் பல நுணுக்கமான தகவல்களையெல்லாம் சளைக்காமல் பதிவு செய்கிறார். இதனால் வழக்கு தொடர்பான தகவல்களில் நமக்கு ஒரு நம்பிக்கைத்தன்மை வந்துவிடுகிறது.
தங்களது உண்மையான பெயர்களை மறைத்து, தர்மா, சத்யா என்ற பெயர்களைச் சொல்லிக்கொண்டு விசாரிக்கிறார்கள் அதிகாரிகள். தன் பெயர் நீதி என்று சொல்ல நினைக்கிறார் நம்பி நாராயணன்.
எதாவது ஒரு முஸ்லிம் பெயரைச் சொல் என்று துன்புறுத்தப்படுகிறார் நம்பி நாராயணன். அப்துல் கலாம் என்று சொல்லவும் ஓங்கி ஒரு அடி விழுகிறது. சிறிய வயதில் கூட விளையாடிய ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே தனக்குத் தெரியும் என்று சொல்லவும், அவரையும் விசாரிக்கிறது கேரள போலிஸ்! (உண்மையில் எந்த அரசு முஸ்லிம்களையும் முஸ்லிம் பெயர்களையும் இப்படிப் பயன்படுத்தியது, அதுவும் எந்தக் காலத்தில் பயன்படுத்தியது என்பதையெல்லாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இன்று ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூடப் பெரிதாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்று இன்றைய அரசின் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.)
மிகச் சிறிய தவறுகளால்கூட இஸ்ரோவின் சோதனைகள் தோல்வி அடைகின்றன. ஒரு சுவிட்ச்சை அணைக்காமல் விட்டது போன்ற சின்ன தவறுகள்கூட ஒரு சோதனையை சொதப்பி விடுகிறது. இப்படி இஸ்ரோ தொடர்பான பல கவனக்குறைவுகளை, உள்ளே நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பான அரசியல்களை அப்படியே வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார் நம்பி நாராயணன். இவற்றையெல்லாம் மீறி இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்படுவது என்பதே ஆச்சரியம்தான் என்ற எண்ணம் நமக்கு வருமளவுக்கு உள் அரசியல் தலைவிரித்தாடுகிறது.
எது தேவை என்பதைவிட, யார் அதைச் சொல்கிறார்கள் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது இஸ்ரோவில். இதைத் தாண்டி, லிக்விட் ப்ரொபல்ஷன் தொழில்நுட்பமே சிறந்தது என்பதை அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்க நம்பி நாராயணன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியதாகிறது. இந்த உள்ளரசியல் மோதலில் ஐயானிக் ப்ரொபல்ஷனை சரியான நேரத்தில் இந்தியா கைக்கொள்ளமுடியாமலும் போகிறது.
இந்தியர்களுக்கு என்ன தெரியும் என்று வெளிநாட்டில் நிலவிய, இந்திய விஞ்ஞானிகள் மீதான பார்வையை இஸ்ரோவின் விஞ்ஞானிகள் உடைத்தெறிந்து அசரடிக்கிறார்கள்.
ஒரு மெக்கானிக் தொடங்கி வெல்டர் தொட்டு எல்லாரது முக்கியத்துவத்தையும் சொல்கிறார் நம்பி நாராயணன். இவையெல்லாம் அற்புதமான பதிவுகள்.
லஞ்சம் தரப்பட்டு கையும் களவுமாகப் பிடிக்க செய்யப்படும் தந்திரத்தில் இருந்து இயல்பான நேர்மையால் தப்பிக்கிறார் நம்பி நாராயணன்.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய இஸ்ரோவின் செயலகம் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்குப் போகிறது. காரணம் பொறுப்பற்ற, நோக்கமற்ற, லஞ்ச லாவண்யத்தில் ஊறிப் போன திமுக அரசு. இது தொடர்பான கூட்டத்துக்கு அண்ணாதுரை உடல்நலம் இல்லாததால் வரமுடியவில்லை. அமைச்சர் ஒருவர் வருகிறார். முழு போதையில் வருகிறார். அவரைப் பிடிக்கவே இருவர் தேவைப்படுகிறார்கள். விக்ரம் சாராபாய் உடனேயே முடிவெடுக்கிறார், தமிழ்நாடு இதற்கு ஒத்துவராது என. ஆனால் ஆந்திர அரசோ 26,000 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தர முன்வருகிறது. அதேசமயம் மகேந்திரகிரியில் (உண்மையில் அது மகேந்திரகிரி அல்ல, பொதிகை) அமைக்கப்படும் துணை நிலையத்துக்கு எம்ஜியார் ஆதரவு தருகிறார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, அதிரடியாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அங்கே அது வெற்றிகரமாக அமைக்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துவதில் இன்றைப் போலவே அன்றும் வெறுப்புப் பிரசாரங்களும் பொய்களும் புரட்டுகளும் பரப்பப்பட்டுத் தேவையற்ற பயம் மக்கள் மனத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது.
ஊடகங்கள் இன்றல்ல, அன்றே வெற்றுப் பரபரப்புக்காகவே பொய்களை, கட்டுக்கதைகளைப் பரப்பி இருக்கின்றன. பொறுப்பே இல்லாமல் மலையாள ஊடகங்கள் நடந்துகொண்டதையும், ராக்கெட் என்பது பற்றியோ அதன் வரைபடங்களை எப்படி விற்க முடியும் என்பது பற்றியோ, அப்படி விற்றாலும் அதனாலும் ஒரு பலனும் இல்லை என்பது பற்றியோ (இப்படி ஒரு முறை போலிஸ் விசாரணையில் நம்பி நாராயணன் சொல்லவும், அப்படியானால் விற்றது உண்மையா என்று எதிர்க்கேள்வி வருகிறது!) அடிப்படை அறிவே அற்ற ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் பற்றி விரிவாக எழுதுகிறார் நம்பி நாராயணன். அதேசமயம் ஆங்கில ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாகக் கொஞ்சமாவது அடிப்படை அறிவுடன் செயல்பட்டன என்கிறார். இஸ்ரோவின் வரைபடங்கள் மீன் வைக்கும் பெட்டியில் வைத்துக் கடத்தப்பட்டன, பாகிஸ்தான் வான் மூலம் சிறையைத் தாக்கி நம்பி நாராயணனைக் காப்பாற்றப் போகிறது என்றெல்லாம் எழுதினவாம் மலையாள ஊடகங்கள்.
ரஷ்யாவில் ஒரு கண்காட்சியில் ஒரு இயந்திரத்துக்குப் பதிலாக இன்னொரு இயந்திரத்தை வைத்து பார்வையாளர்களை ஏமாற்றுகிறார்கள். இதை நம்பி நாராயணன் பார்த்த உடனேயே கண்டுபிடிக்கிறார். இதெல்லாம் சகஜம் என்கிறார்கள் அவர்கள். காரணம், ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக்கொள்ளவாம்.
நம்பி நாராயணன் மீது பல விதங்களில் குற்றம் சுமத்திய புலன் விசாரணை அமைப்பின் தலைவர் ரத்தன் சேகல் (எம்.கே. தர்-ருடன் வேலை செய்பவர்), சி.ஐ.ஏ உடன் பல ரகசிய சந்திப்புகளை நிகழ்த்தியதைக் காரணம் காட்டி, நீக்கப்படுகிறார். இதனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பது உறுதியாகிறது என்கிறார் நம்பி நாராயணன்.
மேலே கூறியவை எல்லாம், இப்புத்தகம் எந்த அளவுக்கு எத்தனை விஷயங்களைப் பேசுகிறது என்பதைப் புரிய வைத்திருக்கும். இதில் ஹைலைட் இப்புத்தகத்தின் இறுதி அத்தியாயம்.
கேரள அரசு சொன்ன குற்றங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அதை எப்படியெல்லாம் சிபிஐ மறுத்தது என்பதைச் சொல்கிறது அந்த அத்தியாயம். இந்த அத்தியாத்தை (ஒட்டுமொத்த புத்தகத்தையும்கூட) ஒரு திரைப்படத்தின் லாஜிக் காட்சிகளைப் போன்ற விறுவிறுப்புடன் படிக்க முடிகிறது. அதில் முக்கியமானது: நம்பி நாராயணன் பிஎஸ் எல்வி2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் தான் ராஜினாமா செய்யப் போவதாக முன்பிருந்தே சொல்லி வந்திருக்கிறார். அதற்குப் பல காரணங்கள். குறிப்பாக லிக்விட் ப்ரபல்ஷன் பற்றியது. அதேபோல் பிஎஸ் எல்வி வெற்றிகரமாக ஏவப்பட்டதும் ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்தும் விடுகிறார். தன் மீதான ஒற்றர் வழக்கு வரும் என்று தெரிந்தே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்ததாக கேரள அரசு சொல்கிறது. இதைப் படிக்கும் யாருக்கும் அப்படித் தோன்றத்தான் செய்யும். ஆனால் சிபிஐ அதில் மறைக்கப்பட்ட ஒன்றைச் சொல்கிறது. அந்தக் கடிதத்திலேயே கீழே ஒரு குறிப்பாக, தான் ஏற்கெனவே இந்தத் தேதியில் ராஜினாமா செய்யப் போவதாக முன்பே சொன்னதையும் குறிப்பிட்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு இஸ்ரோ அதிகாரியும் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் கேரள அரசு நீதிமன்றத்தில் இந்தக் குறிப்பைப் பற்றி எதையும் சொல்லாமல் மறைத்திருக்கிறது. அதேபோல் மிக முக்கியக் குற்றவாளியான மரியம் ரஷீதா என்னும் ஏஜெண்ட் இவர் புகைப்படத்தைப் பார்த்து, தான் இவரைத்தான் நேரில் பார்த்ததாகச் சொல்லி இவர்தான் நம்பி நாராயணன் என்று அடையாளம் காட்டும் வீடியோ. ஆனால் அதை சிபிஐ மறுக்கிறது. இவர் பெயர் நம்பி நாராயணன் என்று சொல்ல அந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு வரவில்லை என்பதால், வீடியோவை ஒளிப்பதிவு செய்யும்போது அவர் பெயரை எழுதிக் காண்பித்து அதைப் பார்த்துப் படிக்கச் சொல்கிறார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கண்கள் மேலே செல்வதை அந்த வீடியோவில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இப்படிச் சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கிப் பல விஷயங்களை சிபிஐ மறுக்கிறது. இறுதியில் நம்பி நாராயணன் விடுதலை ஆகிறார்.
நான் முதன்முதலில் நேருக்கு நேர் என்ற சன் டிவியின் ரஃபி பெர்னாட்டின் பேட்டியில் இவரது நேர்காணலைப் பார்த்தேன். 90களின் பிற்பகுதியில் என நினைக்கிறேன். அன்றே இவர் பதில் சொன்ன விதமும் நம்பிக்கையும் தனக்கு இழைக்கப்பட்டுவிட்ட அநீதி தந்த மன உளைச்சலும் தெளிவாகப் புரிந்தன. ஆனால் அவர் சொன்ன பல விஷயங்கள் புரியவில்லை. இன்று இந்தப் புத்தகம் பலவற்றைத் தெளிவாக்குகிறது. உறுதியுடன் ஒருவேளை நம்பி நாராயணன் எதிர்கொள்ளாமல் போயிருந்தால், இந்நேரம் அவர் தேசத் துரோகியாகி விட்டிருப்பார். நேர்மையுடன் எதிர்கொண்டதால் பத்ம விபூஷனாகி இருக்கிறார். ஆனாலும் அப்துல் கலாமை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர் இழந்தவை என்ன என்று புரியலாம். அதை யாராலும் ஈடு செய்யமுடியாது.
இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டு வருபவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். யார் கொண்டு வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
பின்குறிப்பு: இந்தப் புத்தகம் பற்றிய, ஆமருவி தேவநாதனின் மதிப்புரை வலம் இதழில் வெளிவந்தது. அதைப் படிக்க தவறி விடாதீர்கள்.