Archive for ஹரன் பிரசன்னா

நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)

எனது ‘நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்’ புத்தகங்களுக்கு நான் எழுதிய முன்னுரை இங்கே. முதல் பாகம் ரூ 140. இரண்டாம் பாகம் ரூ 170. இரண்டு புத்தகங்களையும் சேர்த்து ஆன்லைனில் டயல் ஃபார் புக்ஸ் மூலம் ஆர்டர் செய்ய: https://dialforbooks.in/product/1000000030652_/ (தனித்தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.)

போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ்: 044-49595818 | 9445901234

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய (மெசேஜ் மட்டும்): டயல் ஃபார் புக்ஸ்: 9500045609

பாகம் 2க்கான முன்னுரை:

தமிழ்த் திரையுலகம் புதிய அலை இயக்குநர்களின் வருகைக்குப் பின்பு மிக வேகமாக ஹிந்து – ஹிந்துத்துவ – இந்திய வெறுப்புக்குள் தீவிரமாகப் பயணிக்கிறது. ஹிந்துக்களைக் கிண்டல் செய்யும் ஒரு காட்சி இல்லை என்றால் சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்னும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது என்றாலும், எவ்வித அரசியலும் அற்ற படங்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று எந்த ஒரு படத்திலும் தேவையே இல்லாமல் ஹிந்துக்களைக் குறை சொல்வது என்பது வேண்டுமென்றே திணிக்கப்படுவதைப் பார்க்கலாம்.

தமிழ்த் திரையுலகம் இந்த வகையான ஹிந்து எதிர்ப்புச் சொல்லாடல்களை மூன்று வகைகளில் பயன்படுத்துகிறது. ஒன்று மிக நேரிடையான அரசியல் படங்கள். காலா, ஜிப்ஸி போல. அடுத்ததாக, படத்தில் குறியீடுகளைப் பரப்புவது. ஆர்.கே.நகர் போல. அடுத்ததாக, தேவையே இல்லாமல் காட்சிகளையோ அல்லது வசனத்தையோ வைப்பது. ப்ரேம் ப்யார் காதல் (கதாநாயகன் அணிந்திருக்கும் ஒரு டீ ஷர்ட்டில் சிலுவையுடன் பிலீவ் மி என்று இருக்கும்) அல்லது சிலுக்குவார்பட்டி சிங்கம் போல. அல்லது கொஞ்சம் கூட முக்கியமற்ற ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டது போவது. இப்படிப் பல முனைத் தாக்குதல்களில் இறங்கி இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது, அதற்கு தேவையற்ற கவனம் தருகிறோம் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறேன். திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை மெனக்கடலுடன் எத்தனை பேர் ஈடுபாட்டில் வருகிறது என்று புரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் அது. அவர் ஒரு ஹிந்து அமைப்புக்கு உதவும் சிறிய கிளை அமைப்பில் பொறுப்பில் இருக்கிறார். அவரது அலுவலகத்தை ஒரு படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். அலுவலகமும் அதிகம் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார்கள் போல. அந்த அலுவலகத்தின் வரவேற்பு மேஜையில் ஒரு விவேகானந்தர் சிலை இருக்குமாம். அது வரக்கூடாது என்று படத்தின் இயக்குநர் சொல்லி இருக்கிறார். படக்குழு அந்த விவேகானந்தர் சிலையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டது. பின்னர் பின்னணியில் கார்ல் மார்க்ஸ் படம் வரவேண்டும் என்று சொல்லி அங்கே மார்க்ஸை ஒட்ட வந்திருக்கிறார்கள். அப்போதுதான் அலுவலகத்துக்கு உறைத்திருக்கிறது, இதையெல்லாம் யோசிக்காமல் சம்மதித்துவிட்டோமே என்று. அந்தப் படம் வெளியாகவில்லை என்பது ஒரு நிம்மதி. ஆனால் இதில் இன்னொரு சோகமும் உள்ளது. அந்த இயக்குநர் போகும்போது அழகான அந்த விவேகானந்தர் சிலையைக் கொண்டு போய்விட்டாராம்! அதாவது படத்தின் சட்டகத்துக்குள் விவேகானந்தர் வரத் தேவையில்லை. கார்ல் மார்க்ஸ் வரவேண்டும். ஆனால் விட்டுக்கு விவேகானந்தர் சிலை வேண்டும்!

எனவே ஒரு காட்சியில் ஒருவர் நாமம் போட்டு வருகிறார் என்றாலோ அல்லது உத்திராட்சை அணிந்து வருகிறார் என்றாலோ அல்லது எவ்வித அடையாளமும் இன்றி வருகிறார் என்றாலோ அல்லது பின்னணியில் ஏதேனும் ஒரு படம் இருக்கிறது என்றாலோ அது எதுவுமே தற்செயல் அல்ல. மிகத் தெளிவாக யோசித்தே வைக்கப்படும் ஒன்றுதான். நாம் அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.

சிலர் கேட்டார்கள், முன்பெல்லாம் திரைப்படத்தில் வில்லனுக்கு கிறித்துவப் பெயர்கள் வருகின்றனவே என்று. உண்மைதான். ஆனால் அவற்றுக்கும் இன்று நிகழ்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அன்று நிகழ்ந்ததன் பின்னால், திரைப்படத்தில் தொற்றிக்கொண்டிருந்த (இப்போதும் இருக்கும்) ‘வழக்கத்தை அப்படியே பின்பற்றுவது’ என்ற எண்ணம் மட்டுமே. இதே திரைப்படங்களில் அனாதை ஆசிரமம் என்றாலே கிறித்துவ ஆசிரமங்கள் காட்டப்படுவதைப் பார்க்கலாம். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், இதன் பின்னணியில் எவ்விதக் கருத்துத் திணிப்பும் இல்லை என்பதை. ஆனால் இன்று வரும் திரைப்படங்களில் வரும் ஹிந்து எதிர்ப்பு மிகத் தீவிரமான உள்நோக்கத்தோடு, அரசியல் நோக்கத்தோடு புகுத்தப்படுகிறது. இதுதான் வித்தியாசம். எனவே அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் விஷயத்தை அதே அரசியல் நோக்கத்தோடுதான் எதிர்க்கவேண்டும். இதில் நடுநிலை என்பதும் கலை என்பதும் அடிபட்டுப் போய்விடும். எந்தப் படம் அரசியல் சார்பின்றி கலையைப் பேசுகிறதோ அந்தப் படத்தை மட்டுமே கலையை மட்டும் கொண்டு எடை போட முடியும்.

ஏன் தமிழ்த் திரையுலகம் இப்படி இருக்கிறது? மிகப் பெரிய கேள்வி இது. படத்தை யார் தயாரிக்கிறார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதை யோசிப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், அனைத்து இயக்குநர்கள் என அனைவரின் அரசியல் நிலைப்பாடும் ஹிந்து எதிர்ப்பாக இருக்கிறது என்பது முதல் காரணம். இதனால் புதியதாக வரும் இயக்குநர்கள் கூட இந்த ‘வழக்கத்துக்கு’ ஆட்பட்டாக வேண்டியது அவசியம் என்பது இரண்டாவது காரணம். பின்பு அவர்களும் இதே பழக்கத்தில் ஊறிப் போய்விடுகிறார்கள் என்பது நம் அவலம்தான். எத்தனை திட்டினாலும் ஹிந்துக்கள் ஒரு அமைப்பாகத் திரளவே போவதில்லை, அத்தனை தூரம் அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது திராவிட அரசியல் என்பது அடுத்த காரணம்.

இதற்கெல்லாம் விடிவுகாலம் இல்லையா? இருக்கிறது. தொடர்ச்சியாக இது போன்ற திரைப்படங்களைப் பற்றிப் பேசி மக்களிடம் கொண்டு போவது முக்கியமானது. சிலர் சொல்கிறார்கள், சென்சாரைக் கொண்டு இப்படங்களை முடக்கவேண்டும் என்று. நான் அதை ஏற்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியமானது. நாம் கருத்தை கருத்தால்தான் முறியடிக்க வேண்டும். அதற்குச் சில வருடங்கள் ஆகலாம். சில பத்து வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் முயன்றுதான் ஆகவேண்டும்.

இன்று OTT எனப்படும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் படங்களை வெளியிடும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. இங்கேயும் இது போன்ற படங்கள்தான் வரும் என்றாலும், இதற்கு எதிர்த்தரப்புப் படங்கள் வருவதில் பெரிய சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இதைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு.

ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியல் மற்றும் மதக் குறியீடுகளின் பின்னால் போய் ஒரு நல்ல திரைப்பட அனுபவமே இல்லாமல் போய்விட்டது. இது தமிழக மக்களுக்கு நிச்சயம் ஒரு எரிச்சலைத் தரும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு. அதற்கு நாம் தொடர்ந்து இத்திரைப்படங்களின் பின்னணி பற்றியும், இத்திரைப்படத்தின் உண்மையான நோக்கம் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அது முக்கியம். இப்படிப் பேசுவதால் ஒரு பலனும் இல்லை என்று சிலர் சொல்லலாம். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவது, தீவிரமாக இதைப் பற்றி எழுதுவது – இவைதான் நம் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு. அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

‘திரௌபதி’ என்ற ஒரு திரைப்படம் இன்று பலருக்கும் பல எரிச்சலைக் கொண்டு வந்திருக்கிறது. திரௌபதி திரைப்படம் சொல்லும் அரசியலில் எனக்குச் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் இத்தனை நாள் ஹிந்து மதத்தைக் குறை சொல்லிய படங்களுக்கு இருந்த அதே உரிமையை ஒரே ஒரு ‘திரௌபதி’ பயன்படுத்தவும் எத்தனை பதற்றம் பாருங்கள். நாம் இதைத்தான் செய்யவேண்டும். ‘கொளஞ்சி’ என்ற ஒரு திரைப்படத்தைவிட, அதைச் சாடி வெளியிடப்பட்ட குறும்படம் அதிகம் பரவலானது. நம் முன்னே உள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்பது இதுதான்.

திராவிட, கம்யூனிஸ அரசியல் தொடர்ந்து பல வருடங்களாக இந்த ஹிந்து மத எதிர்ப்பை ஒரே அணியில் நின்று ஆதரித்தும் பரப்பியும் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் தொடத் தகாதவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஹிந்து இயக்கங்கள் இத்திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போனது. இன்று அதன் பலனைப் பார்க்கிறோம். இந்த நிலை மாறத்தான் வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது ஹிந்துக்களைப் போற்றும் திரைப்படங்களையோ கிறித்துவ இஸ்லாமிய மதங்களைத் திட்டும் படங்களையோ அல்ல. நியாயமான படங்களை. நியாயமான விமர்சனங்களை. உள்ளே ஹிந்து வெறுப்பை வைத்துக்கொண்டு அதையே நடுநிலை என்றும் முற்போக்கு என்றும் வெறுப்பைப் பரப்பாத படங்களை. எல்லாக் கருத்துக்கும் இடம் இருக்கும் ஒரு சமமான களத்தை. இதுதானே நியாயமான ஆசையாக இருக்கமுடியும்? இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் யதார்த்தம் கசப்பானது.

இது போன்ற திரைப்படங்களில் வரும் குறியீடுகளைப் பற்றிப் பலரிடம் சொல்லியபோது அவர்கள் சொன்னார்கள், ‘இதுவரை எங்கள் கண்ணில் இது பட்டதே இல்லை’ என்று. ஒரு திரைப்படப் பாடலில் வரும் ஆபாசமான அங்க அசைவுகளைக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டது போல, இக்குறியீடுகளையும் தாண்டிச் செல்லப் பழக்கப் பட்டிருக்கிறோம். அதை எடுத்துச் சொல்லும்போதுதான் பலருக்கும் புரிகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது உங்களுக்கும் அப்படி ஒருவேளை தோன்றினால், இப்புத்தகத்தின் நோக்கம் நிறைவேறும்.

நான் கண்ணில் பட்ட படங்களை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். தேடி தேடிப் பதிவிடவில்லை. அப்படிச் செய்தால் நான் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களையும் புகார் சொல்ல வேண்டி இருக்கலாம் என்ற அச்சம்தான் காரணம். ஒருவேளை இன்னும் உங்களுக்கு ஆதாரங்கள் போதாமல் இருக்கலாம். இன்னும் அடுத்தடுத்துப் படங்கள் வரத்தான் போகின்றன. அவற்றைப் பற்றி நான் எழுதத்தான் போகிறேன். மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

இந்த நேரத்தில் தமிழில் சில நல்ல முயற்சிகளைத் தந்த சில இயக்குநர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். கே.பாலசந்தர் பல ஹிந்து எதிர்ப்புப் படங்களைத் தந்திருந்தாலும் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் தைரியமான இறுதிக் காட்சிக்காகப் பாராட்டப்படவேண்டியவர். அதேபோல் தமிழ் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் பல விதங்களில் ஹிந்துக்கள் ஆச்சரியப்படும் வகையில் படங்களை எடுத்தவர், கடும் நாடகத்தனமாக இருந்தபோதிலும். அதேபோல் ஏ.நாகராஜன். இவரும் பாராட்டுக்குரியவர். இந்தத் தொடர்ச்சியை நாம் இழந்திருக்கிறோம். அதை மீட்டெடுக்கவேண்டும்.

பாகம் 1க்கான முன்னுரை:

வலைப்பதிவுகள் தொடங்கி ஃபேஸ்புக் மற்றும் பல வலைத்தளங்களில் எழுதிய திரைப்படம் தொடர்பான கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. ஒரு திரைப்படம் எப்படி நடுநிலையானது இல்லையோ அதேபோல் என் விமர்சனமும் நடுநிலையானதல்ல. இதுவே இந்த விமர்சனங்களின் அடிநாதம். இப்போதெல்லாம் திரைப்படங்கள் மிக நேரிடையாகவே விஷத்தைத் தம்முள் கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது முட்டாள்தனம். இனியும் ‘படம்தானே’ என்று சொல்வதில் பொருளில்லை. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது. சோஷியல் மீடியா உலகத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்த அரை மணி நேரத்தில் ஆயிரம் விமர்சனங்கள் சிறியதும் பெரியதுமாக வந்துவிடும் இக்காலத்தில், இக்கட்டுரைகள் விரிவான விமர்சன வகைக்குள் போகாமல், இப்படங்களில் இருக்கும் அரசியலையும் குறியீடுகளையும் அதன் நடுநிலையின்மையையும் மட்டுமே பார்க்கின்றன. பெரும்பாலான விமர்சனங்கள் திரைப்படம் வந்த சில மணி நேரங்களுக்குள் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதி ஒன்றும் வெளிவரும். அதில் வரும் கட்டுரைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு அப்பாவி திரைப்பட ரசிகனை இந்தத் திரைப்பட உலகம் எப்படி ஒரு அரசியல் பார்வையாளனாக மாற்றி இருக்கிறது என்று புரியலாம்.

இப்புத்தகத்தில் வரும் கட்டுரைகள் சிலவற்றில் அரசியல் கலக்காத படங்களை ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே விமர்சித்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் எதிர்பார்ப்பது நியாயமான, எல்லோருக்கும் பொதுவான விமர்சனம் உள்ள ஒரு திரைப்படத்தை மட்டுமே. அன்றி, ஹிந்து மதத்தையோ இந்தியாவையோ விமர்சிக்காத திரைப்படங்களை அல்ல. ஹிந்து மதம் என்றதும் வசதியாக விமர்சிப்பதும் மற்ற மதங்கள் என்றதும் அமைதி காப்பதும் அல்லது புகழ்வதுமான இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

பின்குறிப்பு: கிண்டிலில் கிடைக்கும்!

Share

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜாவில் அறிமுகம் ஆனபோது காது ரெண்டும் எனக்கு ஜிவ்வென்று இருந்தது. இசை கேட்டு இல்லை, பொறாமையில்! ராஜா வெறியனான எனக்கு ரஹ்மானைத் திட்டித் தீர்ப்பதில்தான் ஆனந்தம் இருந்தது. ஆனால் செல்லும் இடமெல்லாம் ரஹ்மான் பாடல்தான். பட்டிதொட்டி எங்கும் அவரது பாடல்களே. தியேட்டரில் மாணவர்கள் அவரது பாடலுக்குப் போட்ட ஆட்டமெல்லாம் அதுவரை நான் பார்க்காதவை. ஏ.ஆர்.ரஹ்மானின் அத்தனை கேசட்டையும் முதல்நாளே வாங்கிக் கேட்டுவிடுவேன். எத்தனை முறை என்ற கணகெல்லாம் இல்லை. அப்பாடல்கள் மனப்பாடம் ஆகும் வரை.

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பத்து வருடங்களில், வண்டிச் சோலை சின்ராசு தவிர, அவரது அனைத்துப் படங்களின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்தான். வண்டிச் சோலை சின்ராசு கூட எனக்கு சூப்பர் ஹிட்தான் – பரோட்டா பாட்டு உட்பட.

கடந்த பதினைந்து வருடங்களாக அந்த ஏ.ஆர்.ரஹ்மானைக் காணவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். ரஹ்மானின் மனமுதிர்ச்சி உட்பட. அந்தப் பரபரப்பு, அந்த ஹிட், தியேட்டரில் அந்த ஆட்டம் இவை எதுவுமே இல்லை. இது ஒரு குறையா என்றால் இல்லை. ஆனால், இளையராஜா வெறுப்பாளர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்தால், இதையெல்லாம் மீண்டும் மீண்டும் வம்புக்காகவாவது சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

இளையராஜாவின் கடந்த இருபது வருடங்களில் வந்த பாடல்களில் உள்ள நுணுக்கங்களைக் கேட்டு ரசித்தால், ராஜாவின் பாடல் ஹிட்டாகவில்லை என்பார்கள். இன்று ரஹ்மானுக்கு அதே நிலை என்றால், ரஹ்மானின் பாடலில் உள்ள நுணுக்கத்தோடு ஓடி வருகிறார்கள். இதைத்தான் முன்னோடும் வாய்க்கால் பின்னோடும் என்றார்கள்.

அதிலும் கடந்த பத்து வருடங்களில் ஒரு சில ஆல்பங்கள் தவிர, சில பாடல்களைக் கேட்கக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்ட்ரீயோடைப். ராஜாவின் ஸ்ட்ரீயோடைப்பை அலசும் விற்பன்னர்களுக்கு ரஹ்மானின் ஒரே போன்ற பாடல்களைக் கேட்கும்போது காது அடைத்துப் போய்விடுகிறது என்று நினைக்கிறேன்.

இப்போதும் ரஹ்மானின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டால், அவரது ஹிட்டாகாத பாடல்கள் உட்பட, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்க ஆரம்பித்துவிடும். ராஜா ரசிகர்களும் கடந்த இருபது வருடங்களில் இதைத்தான் செய்தும் சொல்லியும் வந்தார்கள். அப்போது கிண்டலாகப் பேசினார்கள். இப்போது வரிசையில் நிற்கிறார்கள், பெரிய பலாப்பழத்துடன்.

Share

என் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும்

கல்கி பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய ரமணின் பதிவு. எத்தனையோ லாம்கள். பதில் சொல்ல-லாம்தான். ஆனால் வழக்கை எதிர்கொள்ள எனக்கு இப்போது நேரமோ திடமோ பணமோ பின்புலமோ இல்லை. எனவே அவரது பதிலை என் டைம்லைனில் பதிந்து வைக்கிறேன். நண்பர்கள் படித்துக்கொள்ளுங்கள். மூத்த பத்திரிகையாளர் ஒருவர், ரமணனிடம் சொல்லி, அதை அவர் எனக்குச் சொல்லாமல் விட்ட அந்த நான்கெழுந்து வார்த்தைக்கும், வழக்கு வேண்டாம் என்றதற்கும் நன்றி. என்றாவது ஒரு நாள் முடிந்தால் இதற்கு பதில் சொல்கிறேன். அது என் வாழ்க்கை வரலாற்றில் வரட்டும்.

யார் யாரிடம் கேட்கலாம் என்ற ஒரு பட்டியலே போட்டிருக்கிறார். பாஜக தலைவர்கள் உட்பட. யாரிடமும் நான் பேசுவதில்லை. கருத்து கேட்பதே இல்லை. என் கருத்து, என் உரிமை, என் சுதந்திரம். அது தவறோ சரியோ அதுவே என் பாணி. தேவைப்பட்டால் பாஜக தலைவர்கள் எப்போது வேண்டுமானால் என்னிடம் கருத்துக் கேட்டுக்கொள்ளலாம் என்பதே என் நிலைப்பாடு.

என் குரு பாரா என்றிருக்கிறார். அது தவறு. எனக்கு யாருமே குரு கிடையாது. ஏனென்றால் ஒவ்வொருவருமே ஒரு வகையில் ஒரு குரு. எனவே ஒரே ஒருவர் தனிப்பட்ட குரு என்று இன்று வரை இல்லை. அதனால் பாராவும் குரு கிடையாது. நாளை இந்நிலை மாறலாம். ஆனால் இன்று, இந்நிமிடம் வரை இப்படித்தான். ஆனால், இதெல்லாம் தெரியாமல் ரமணன் பதிவிட்டதற்காக வழக்குப் போடவெல்லாம் மாட்டேன். தவறாகச் சொல்வதும் ஒரு ஜனநாயகச் செயல்பாடுதான் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஏனென்றால் அவதூறு வேறு, கருத்து வேறு. நான் சொன்னது அவதூறு என்ற அளவுக்கு எடுத்துப் போனதற்கு கம்யூனிஸ்ட்டுகள்தான் வருத்தப்படவேண்டுமே அன்றி, நானல்ல.

கருத்துச் சுதந்திரத்தைப் பேணி வளர்க்கும், வழக்குப் போடாத கல்கிக்கு நன்றியும் பாராட்டும்.

பின்குறிப்பு: கிழக்கு பதிப்பகத்தின் புத்தக விமர்சனத்துக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. நான் கிழக்கில் வேலை செய்வதால் தொட்டுக் கொண்டிருக்கலாம். தெரியவில்லை. மருதனும் கிழக்கில் என் அருகிலேயே இருக்கிறார் என்பதையும் ரமணனே சொல்லி இருக்கிறார்.

கல்கி ஆசிரியர் ரமணினின் பதிவு:

கல்கி ஆக்15க்குமேல் மின்னிதழாக வரும் என்ற அறிவிப்பைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த பலர் கோபம், வருத்தம், ஆதங்கம் முடிவை மாற்றுங்கள், என்றும் இன்றைய நிலையில் இது வரவேற்கதக்க மாற்றம் என்றும் பதிவிட்டுக்கொன்டிருக்கிறார்கள். பல படைப்பாளிகளும் வாசகர்களும் கல்கிக்கும் அவர்களுக்குமுள்ள உறவை, பிணைப்பை நெகிழ்ச்சியோடு வெளியிடுகிறார்கள்.(ஒரு தொகுப்பே வெளியிடலாம்

)
ஆனால் நண்பர் ஹரன்பிரசன்னா “இது கால மாற்றம் மட்டுமே அல்ல. கம்யூனிஸ்ட்டுகள் கால் வைத்ததும், கம்யூனிஸ்ட்டுகளை உள்ளே விட்டதும் காரணம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

லஷ்மி நடராஜன் சீதா ரவி, வெங்கடேஷ், ரேவதி நான் எல்லோரும் கம்னியூஸ்ட்கள் என்கிறார். இவர்களில் யார் கம்யூனிஸ்ட், என்று அவருக்கு அடுத்த அறையிலிருக்குக்கும் தோழர் மருதனைக் கேட்டிருக்கலாம். அல்லது உலக கம்னியூஸ்ட்களின் நேற்று, இன்று, நாளை யை விரல்நுனியில் வைத்திருக்கும் அவரது குரு முன்னாள் கல்கி உதவியாசிரியர் பா. ரா வைக் கேட்டிருக்கலாம். அல்லது போலிக் கம்னியூஸ்ட்கள் உட்பட அனைத்து கம்னியூஸ்ட்களையும் நன்கு அறிந்திருக்கும் அவரது நண்பர் திராவிட மாயை சுப்புவைக் கேட்டிருக்கலாம். அல்லது இப்போது கட்டணமில்லா சேவையாக இருக்கும் கல்கி தளத்தில் கடந்த இதழ்களைகளைப் பார்த்தோ அல்லது அதில் தவறாது வெளியாகும் கிழக்கு பதிப்பகத்தின் நூல்களின் அறிமுகங்களிலாவது கம்யூனிச வாசனை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்திருக்கலாம். அல்லது கல்கிக்கு நேர்காணல்களும் கட்டுரைகளும் தந்திருக்கும் அவர் அபிமானியாக இருக்கும் பாஜக தலைவர்களான இல. கணேசன், தமிழைசை வானதி, பொன்னார், எச் ராஜா, பேரா. சீனிவாசன், முருகன் போன்றோரைவது கல்கியில் யார் கம்னியூஸ்ட் என்று கேட்டிருக்கலாம். குறைந்த பட்சம் விமர்சிக்கும் முன் சக பத்திரிகைகளில் யார், என்ன எழுதுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்ற பத்திரிகையாசிரியர்களின் பாலபாடத்தை படித்திருக்கலாம்

இப்படி எவ்வளவோ லாம்கள். ஆனால் பூனைக்காவது கண்ணை மூடிக்கொண்டால்தான் உலகம் இருட்டு. ஆனால் சில பாஜகா (கவனிக்க சில) அனுதாபிகளுக்கு பகலில் கண் திறந்திருந்தாலும் இருட்டும் அதில் கம்னியூஸ்ட்களும் தான் தெரிவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை..

ஹரனுடைய இந்த விமர்சனத்துக்கு பதிலாக ஒரு மூத்த பத்திரிகையாளர் சொன்ன 4 எழுத்து வார்த்தையை நான் இங்கு எழத நான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் கண்ணியம் தடுக்கிறது.

ஒதுக்கித்தள்ளிவிட வேண்டிய இந்த்தவறான கருத்துக்கு பதில் பதிவு வேண்டாம் என்றுதான் எண்ணினேன். எங்கள் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் (அவர் வழக்கே தொடுக்கலாம் என்றார்) மறுப்புச் சொல்லாவிட்டால் அதை ஏற்பதாகிவிடும் என்ற சட்டப்பிரிவைச் சொன்னதால் (Law of Estoppel) இந்தப்பதிவு.

Share

அந்நியன்

முனியப்பன் என்கிற வெங்கடேஷ் திருநெல்வேலியின் பஸ் ஸ்டாண்டில் கதிர்வேலைப் பார்த்தபோது, இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னால் அப்படியே தூக்கி வீசப்பட்டான். தன்னை இழுத்துப் பிடித்து நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்து, கதிவேலைப் பார்த்து ஒரு நொடி சிரித்து, இவன் வெங்கடேஷ் அவன் அடுத்த நொடியில் கண்டுபிடித்து அவனும் சிரித்து, ‘நீ எங்கல இங்க?’ என்ற கேள்விக்கு வெங்கடேஷ் சொன்ன பதில், ‘சீராளன் நம்பர் இருக்கால உன்கிட்ட?’ சீராளன் பள்ளியின் சூப்பர் ஸ்டார். ஆங்கிலம் பொளந்து கட்டுவான். கதிர்வேல் சொன்னான், ‘அமெரிக்கால இருக்கானாம்.’

தானும் சீராளனும் சேர்ந்து அடித்த கொட்டங்கள் ஒவ்வொன்றாக வெங்கடேஷுக்கு நினைவுக்கு வந்தன. உயிரியியல் வாத்தியார் வரும் முன் அவரைக் கரப்பான் பூச்சி போல வரைந்து வைத்தது, ஒரு சிட்டிகை போட்டால் நூறு முறை தும்மும் பொடியை எல்லாருக்கும் கொடுத்து தமிழ் வாத்தியார் வரும்போது ஒவ்வொருவரும் நூறு முறை தும்மி அவரை அலறி ஓட்ச வைத்தது, மாஸ் கட் அடித்துவிட்டு கலைவாணி தியேட்டருக்கு ஓடியது, நாடோடித் தென்றல் படத்துக்குப் போய் ‘ஒரு கணம் ஒரு யுகமாக’ பாடல் ஒன்ஸ்மோர் கேட்டு ராயல் தியேட்டரில் சண்டை போட்டது, பெண்ணின் படம் வரைந்து பாகங்களைக் குறித்து வைத்தது..

உணர்ச்சிப் பெருக்கில் வெங்கடேஷ் கண்ணீர் துளிர்க்க சீராளனுக்கு வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினான். ‘யார்னு தெரியுதால?’ ஐந்து நிமிடம் காத்திருந்தான். பதில் இல்லை. ‘வெங்கடேஷ்ல’ என்று அனுப்பினான். அதற்கும் பதில் இல்லை. தான் அனுப்பிய மெசேஜை சீராளன் படித்துவிட்டதாக வாட்ஸப் சொல்லியது. தன்னை மறந்துவிட்டானோ என்று வெங்கடேஷுக்குத் தோன்றியது. மீண்டும் தெளிவாக ‘வெங்கடேஷ், ப்ளஸ் டூல ஒண்ணா படிச்சோம்’ என்று மெசேஜ் அனுப்பினான். அப்போதும் பதில் இல்லை. வெங்கடேஷால் நம்பவே முடியவில்லை. சீராளனா இப்படி? இருக்காது என்று நினைத்து அவனை போனில் அழைத்தான். அழைப்பு கட் செய்யப்பட்டது. உடனே வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் வந்தது. ‘பிஸி.’ வேலையாக இருப்பான் போல என அமைதியாகக் காத்திருந்தான். அவனதுநினைவுகள் அவன் படித்த பள்ளியையே சுற்றி சுற்றி வந்தன.

அன்று முழுவதும் சீராளன் அழைக்கவோ மெசேஜ் அனுப்பவோ இல்லை. அன்று இரவு முழுவதும் சீராளன் நினைவாகவே இருந்தது வெங்கடேஷுக்கு. மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாக அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் வெங்கடேஷ். ‘ஃபீரியால?’ சீராளனிடம் இருந்து எந்தப் பதில் இல்லை. பத்து நிமிடம் காத்திருந்துவிட்டு, மீண்டும் போனில் அழைத்தான். அந்த அழைப்பையும் சீராளன் கட் செய்தான். உடனே வாட்ஸப்பில் இன்னொரு மெசேஜ் அவனிடம் இருந்து வந்தது. ‘பிஸி.’

இவன் எப்பவுமே இப்படி பிஸியாத்தான் இருப்பானா என்கிற எண்ணம் வந்தது வெங்கடேஷுக்கு. அவன் அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த மெசேஜை சீராளன் அனுப்பி இருந்தான். ‘விஜயலட்சுமி நம்பர் இருந்தா அனுப்பி வை.’ வெங்கடேஷுக்குள் இருந்த முனியப்பன் அடுத்த மெசேஜை அனுப்பினான். ‘நீ பிஸின்னா தாயோளி நான் என்ன இங்க செரச்சிக்கிட்டால இருக்கேன்? நானும் பிஸி மயிருதான்.’

Share

பிண்டம்

ஆடி அமாவாசை. ஆடி அமாவாசையில் ஆரம்பித்தால் அடுத்த மூன்று மாதத்துக்கு உட்காரவே முடியாது என்று பத்மநாபனின் அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள். வரிசையாகப் பண்டிகைகள். ஆனால் இன்று அப்படிச் சொல்ல அந்த அம்மா இல்லை. அவள் இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் அந்த வசனத்தை பத்மநாபன் சொல்ல ஆரம்பித்திருந்தார். முன் தலையில் ஒரு முடி வெள்ளையாகிவிட்டிருந்தது.

ஆடி அமாவாசைக்கு முதல்நாளே வேண்டிய எல்லா சாமான்களையும் வாங்கி வைத்துக்கொண்டார். ‘இலை வாங்கிட்டியாடா? உன் பொண்டாட்டி எதையும் ஞாபகப்படுத்த மாட்டா. இலை உங்க பையன் வாங்கிட்டு வரலைன்னா நான் என்ன பண்றதுன்னு சொல்லிக் காட்டுவா. அதோட நீங்களாவது ஞாபகப்படுத்திருக்கலாமே அத்தைம்பா’ என்று அம்மா பேசுவதைப் போலவே பத்மநாபனுக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது. கடைத் தெருவில் முதலில் இலையைத்தான் வாங்கினார்.

காலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை செய்துவிட்டு, தர்ப்பணம் விட்டுவிட்டு, பிண்டம் வைக்கத் தயாரானார். வீட்டில் செய்த அனைத்தையும் ஒரு இலையில் வைத்து, கொஞ்சம் எள்ளையும் சேர்த்துக் கொடுத்தாள் அவரது மனைவி. ‘நானும் கூட வரேன்ப்பா’ என்ற ஏழு வயது மகனிடம், ‘நீயெல்லாம் எதுக்கு? அவர் மட்டும் போகட்டும்’ என்று சொல்லிவிட்டாள் அவள். ஒரு கையில் தட்டு, அதன் மேல் இலையில் பிண்டம். இன்னொரு கையில் ஒரு செம்பில் நீருடனும், மொட்டை மாடிக்குப் போனார்.

மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றி, அதன் மேல் பிண்டம் இருக்கும் இலையைத் தட்டுடன் வைத்து, பிண்டத்தை இரண்டாகப் பரப்பி வைத்தார். அம்மாவுக்கு ஒன்று, அப்பாவுக்கு ஒன்று. இலை பறக்காமல் இருக்க, அங்கே கிடந்த இரண்டு செங்கல்லையும் இலையின் மேல் ஓரமாக வைத்தார். கா கா என்று நான்கைந்து முறை கத்தினார். பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனார். பூணூலுடன் சட்டை போடாமல் ஒரு துண்டுடன் மட்டும் வந்தது அப்போதுதான் அவருக்கு உறைத்தது. மீண்டும் கா கா என்று கத்தினார். ஒரு காக்காயும் வரவில்லை. ஐந்து நிமிடம் பொறுத்துப் பார்த்துவிட்டு, மொட்டைமாடிக் கதவைத் தாழிட்டுவிட்டுக் கீழே வந்துவிட்டார். சாப்பிட்டார். உறங்கிப் போனார்.

ஆடி மாதக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று அம்மாவின் குரல் கேட்கவும் சட்டென விழித்தார். மணி ஐந்தரை ஆகி இருந்தது. காப்பி குடித்தார். அம்மா இருந்திருந்தால், மதியம் செய்த சித்ரான்னத்தையும் ஆமவடையையும், நமத்துப் போன அப்பளத்தையும், பாயாசத்தையும் கொண்டு வந்து தருவாள். பண்டிகை அன்று மாலைக் காப்பி கிடையாது. அந்த நினைவுடனேயே மொட்டை மாடிக்குப் போனார். கூடவே அவரது மகனும் வந்தான்.

தாழ்ப்பாளைத் திறந்து மொட்டைமாடிக்குப் போனவர் முதலில் பிண்டம் வைத்த தட்டைத்தான் பார்த்தார். அதில் ஒரு பருக்கை கூட இல்லை. அவருக்கு ஆச்சரியமாகிப் போனது. ஒரு பருக்கையைக் கூட விடாமல் அம்மாவும் அப்பாவும் சாப்பிட்டுவிட்டார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார். மகனிடம் அதே சந்தோஷத்தில் சொன்னார். மகன் ‘தாத்தா பாட்டியாப்பா’ என்றான். ‘ஏம்ப்பா இவ்ளோ தூரம் வந்துட்டு கீழ வரலை’ என்று கேட்டவனை அப்படியே கட்டிக்கொண்டார். மகன் கேட்டான், ‘எங்கப்பா இலையைக் காணோம்? அதையுமா சாப்ட்டாங்க?’ என்றான். அப்போதுதான் கவனித்தார். தட்டின் மேல் இலை இல்லை. இலை பறக்காமல் இருப்பதற்காக அவர் வைத்த இரண்டு செங்கற்கள் மட்டும் இருந்தன. ஆடி மாதக் காற்றில் இலை பறந்திருக்குமோ என்று சுற்றிலும் பார்த்தார். எங்கேயும் இலை இல்லை. சுத்தமாகக் காற்றும் இல்லை. யாரும் வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒரு நொடி யோசித்தவர், ‘வாடா போகலாம்’ என்று பையனைக் கூட்டிக்கொண்டு விடுவிடுவெனக் கீழே வந்தார். மகன், ‘என்னப்பா?’ என்றான். ‘ஒண்ணுமில்லை’ என்றார்.

Share

சில மலையாளத் திரைப்படங்கள்

Spoilers ahead.

ஈட (ம) – மலையாளப் படங்கள் பொதுவாக மெல்ல நகரும் படங்கள் என்றால், இப்படம் மெல்ல மெல்ல மெல்ல நகரும் படம். ஹிந்துத்துவவாதிகளைச் சேர்ந்த ஒரு பையனும் (ஆனால் தீவிரமான ஹிந்துத்துவவாதி அல்ல), தீவிர கம்யூனிஸ்ட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். தீவிர கம்யூனிஸ்ட், தீவிர ஹிந்துத்துவவாதி என்று சொன்னால் கூடப் போதாது. இருவரும் கண்ணூர்க்காரர்கள்! தொடர்ந்து மாறி மாறி அரசியல் கொலைகள் செய்யும் ‘பழக்கம்’ உள்ளவர்கள். யார் உயிர் யாரால் எப்போது போகும் என்று தெரியாது. அப்படியான இடத்தில் ஒரு காதல். இரண்டு தரப்பையும் நியாயமாக காண்பிக்க இயக்குநர் முயன்றாலும், கம்யூனிஸப் பாரம்பரியத்தை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. உதாரணமாக, அன்பும் காதலும் உள்ள ஒரு ஹிந்துத்துவவாதி, ஹிந்துத்துவக் கொள்கைக்காக ஜெயிலுக்குப் போக ஒத்துக்கொள்ளும் ஒரு ஹிந்துத்துவவாதி, ஹீரோவுக்குப் பிடித்தமான நண்பனான ஹிந்துத்துவவாதி கம்யூனிஸ்ட்டுகளால் கொல்லப்படும் செய்தி மட்டுமே வருகிறது. அவரது பிணம் மட்டுமே காட்டப்படுகிறது. பதிலுக்குப் பழிவாங்க ஹிந்துத்துவவாதிகள் கையெறி குண்டுகள் செய்கிறார்கள். ஹீரோயினின் அண்ணனான, அன்பே உருவான கம்யூனிஸ்ட்டு கொல்லப்படுவதை வெறும் செய்தியாகச் சொல்லவில்லை. ஹிந்துத்துவவாதிகள் ஓட ஓட விரட்டிக் கொல்வதைக் காண்பிக்கிறார்கள். அதிலும் அந்த அண்ணனை நம் ஹீரோ எச்சரிக்கிறான். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த கம்யூனிஸ்ட் தைரியமாக அரசியல் கொலையை எப்போதும் எதிர்நோக்கியே இருக்கிறான். ஓட ஓட விரட்டிக் கொல்லப்படுகிறான். அத்தனை வெட்டியும் எங்கே அவன் பிழைத்துவிடுவானோ என்று ஹிந்துத்துவவாதிகள் அவன் உடலெங்கும் மண்ணையும் தூவிவிட்டுப் போகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளை அன்பே உருவாகக் காண்பிக்கிறார்கள். ஹிந்துத்துவவாதிகளுக்கு இடதுகை ட்ரீட்மெண்ட்தான். ஹிந்துத்துவவாதி தரப்பில் இருந்து ஹீரோ நியாயம் பேசுகிறான். இதெல்லாம் எதற்கு என்கிறான். ஆனால் கம்யூனிஸ்ட்டு தரப்பில் இருந்து யாரும் வாயையே திறப்பதில்லை. கம்யூனிஸ்ட் அரசியலுக்குள்ளே இருக்கும் பாதகமான விஷயங்களையும் சின்ன சின்ன காட்சிகளில் சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட் ஒருத்தன் ஹிந்துத்துவர்களின் நண்பனான ஹீரோவுக்கு அடைக்கலமெல்லாம் தருகிறான். கடைசியில் ஹீரோவை கம்யூனிஸ்ட்டுகள் ஓட ஓட விரட்டிக் கொல்லப் பார்க்கிறார்கள். நியாயமாகக் காட்டி இருக்கிறார்களே என்று நினைத்துவிடாதீர்கள். அது எல்லாத் திரைப்படங்களிலும் வரும் க்ளைமாக்ஸ் காட்சியில் விரட்டைப் போலவும் சண்டையைப் போலவும்தான் உள்ளது. ஹிந்துத்துவவாதிகள் அரசியல்படுகொலை செய்வதைப் போல இல்லை. இந்த அளவுக்காகவது எடுத்திருக்கிறார்களே என்று தோன்றுவதும் சரிதான். அதே நேரத்தில், எதை எப்படி எடுக்கிறோம், எதை எப்படி விடுக்கிறோம் என்பதில் உள்ள நிலைப்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இருபத்தைந்து வயதுப் பையனும் இருபது வயசுப் பெண்ணும் ஏன் எப்போதும் அவார்ட் பட ஹீரோ ஹீரோயின் போலக் காதலிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சிரிப்பில்லை, ஒரு கட்டிப்பிடித்தல் இல்லை, ஒரு மலர்ச்சி இல்லை. ஆனால் ஹீரோ ஷேன் நிகம் (ஷெய்ன் நிகம்!) நடிப்பு அட்டகாசம். மலையாளம் திறமையுள்ள நடிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த பத்து வருடங்களில் கிடைக்கப் போகும் எல்லா விருதுகளும் மலையாள நடிகர்களுக்கே போகப் போகின்றன. மொழி மாஃபியா என்று அப்போது கதறிப் பயனில்லை.

நால்பத்தியொண்ணு (ம) – ஒரு கம்யூனிஸ்ட் இன்னொரு கம்யூனிஸ்ட்டை சபரிமலைக்குக் கூட்டிப் போகிறான். கூட்டிக்கொண்டு போகும் கம்யூனிஸ்ட் தீவிர கம்யூனிஸ்ட். கடவுள் நம்பிக்கை, பாரம்பரியம், பண்பாடு என எதிலும் நம்பிக்கை இல்லாதவன். லெனினும் மார்க்ஸும் சொன்னது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்பவன். பாரம்பரியத் திணிப்புக்காகத் தன் திருமணத்தையே துறந்தவன். இன்னொரு கம்யூனிஸ்ட்டோ கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஒரு ஹிந்து ஆதரவாளரைக் கொன்றவன். கட்சி வேறொருவனை ஜெயிலுக்கு அனுப்ப, பார்வையற்ற தன் மகளுக்காக வெளியே இருப்பவன். பெரிய குடிகாரன். இவன் குடியைத் திருத்த சபரிமலைக்குப் போகும் ஒரு முடிவை கட்சி எடுக்கிறது. சிந்தாவிஷ்டயாய சியாயமளே படத்தின் அதே யோசனையை அரசியல் ரீதியாக அணுகி இருக்கிறார்கள். குடிகார கம்யூனிஸ்ட் தான் சபரிமலைக்குப் போகவேண்டும் என்றால், தீவிர கம்யூனிஸ்ட்டும் உடன் வரவேண்டும் என்கிறான். நம்பமுடியாத இந்த ஒரு திருப்பம் நிச்சயம் ஒரு சிரிப்பை வரவழைக்கிறது. இருவரும் போகிறார்கள். பின்பு என்ன ஆகிறது என்பதுதான் படம். கம்யூனிஸ்ட்டுகள் ஒருத்தனைத் திருத்த ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக யோசிக்கிறார்கள் என்பது நியாயமான கேள்வி. பதில் ஒன்றுதான், அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லவா! ஆனால் சமீபத்தில் நடந்த சபரிமலைப் பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் கூடப் பாரம்பரியத்தின் பக்கம் நின்றது நினைவுக்கு வரலாம். அதை ஒட்டித்தான் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இயக்குநருக்குப் பெரும் குழப்பம். யாரைத் திட்டுவது, யாரைக் கைவிடுவது என்பதில். எதோ ஒரு குன்ஸாக பேலன்ஸ் செய்து படம் எடுத்திருக்கிறார். தீவிர கம்யூனிஸ்ட் கடைசி வரை தன் பிடிப்புகளில் இருந்து விலகுவதில்லை. கடவுள் என்பதற்கான வரையறை என்ன என்பதற்கு அவனுக்கு யார் யார் மூலமெல்லாமோ விடை கிடைக்கிறது. ஆனாலும் அவன் கம்யூனிஸ்ட்டாகவே இருக்கிறான். குடிகார கம்யூனிஸ்ட் மனம் திருந்துகிறான். ஆனால் உடல்நலமில்லாமல் சபரிமலையிலேயே செத்துப் போகிறான். கடைசியில் வரும் இயக்குநரின் குரல் சொல்கிறது, ஒரு பகுத்தறிவுவாதியாக இல்லாவிட்டால் இப்படி ஒரு முடிவை எடுத்து, இறந்து போன கம்யூனிஸ்ட்டுக்கு இத்தனை பணத்தையும், அதனால் பார்வையற்ற மகளுக்குப் பார்வையும் கிடைக்கச் செய்திருக்க முடியுமா என்று. அதாவது தீவிர கம்யூனிஸ்ட் பொய் சொல்லி குடிகார கம்யூனிஸ்ட்டின் குடும்பத்துக்கு அவன் மரணத்துக்குப் பிறகு அரசாங்கத்தின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருகிறான். இந்த சமயோசிதப் பொய்க்கு ஏன் ஒருத்தன் கம்யூனிஸ்ட்டாகவோ பகுத்தறிவு வாதியாகவோ இருக்கவேண்டும்? சாதாரணமாக யாருக்குமே அந்த நேரத்தில் தோன்றுவதுதானே? உண்மையில் நியாயம் பார்க்கும் கம்யூனிஸ்ட் இதைச் செய்யக் கூடாது. பொதுவான தர்மம் என்பதைத் தன் நோக்கில் பார்க்கும் ஆன்மிகவாதி வேண்டுமானால் செய்யலாம்! ஆனால் இயக்குநர் தலைகீழ் நியாயம் கற்பிக்கிறார். அதோடு மனம் திருந்திய ஒரு கம்யூனிஸ்ட் சபரிமலைக்குப் போனதால் செத்துப் போகிறான் என்று புரிந்துகொள்ளவும் இடம் தருகிறார். யாரை அனுசரித்து நடந்துகொள்ளவேண்டும் என்பதில், குழப்பத்தைத் தாண்டிய புத்திசாலித்தனமும் தெரிகிறதுதான்.

சுமாரான படம்தான். செக்யூலரிஸ மத ஜல்லிக் காட்சிகளும் உண்டு. தீவிர ஐயப்ப பக்தர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கடுப்பாகிவிடுவார்கள். ஆனாலும், சபரிமலையைக் காண்பிக்கும் காட்சிகளுக்காகப் பார்க்கலாம். குழப்பமாகத்தான் இயக்குநர் யோசிக்கிறார் என்றாலும், இப்படியாவது யோசிக்கிறார்கள் மலையாளத்தில். தமிழைப் போல அல்ல.

*

அஞ்சாம் பாதிரா (ம) – அட்டகாசம். தமிழில் ராட்சசன் மட்டும் வரவில்லை‌ என்றால் இப்படத்தைக் குற்ற உணர்ச்சியுடன்‌ பார்க்க வேண்டி இருந்திருக்கும். இப்படம்‌ பல இடங்களில், கதையில் ராட்சசனையும் நிபுணனையும் கொஞ்சம் சைக்கோவையும் நினைவூட்டுகிறது. இது‌போன்ற படங்களுக்கு ஃப்ளாஷ்பேக் எத்தனை முக்கியம் என்பதை ராட்சசனும் இப்படமும் நினைவூட்டுகின்றன. கிறித்துவ தேவாலயங்களில் நடக்கும் பாலியல் பிரச்சினைகளை அப்படியே ஹிந்து சாமியார்களாகக் காட்டி எடுப்பதுதான் தமிழ்த் திரை உலகத்தின் வழக்கம். இப்படம் மலையாளப் படம் என்பதால் அந்தக் கிறுக்குத்தனத்தை எல்லாம் செய்யவில்லை. தமிழ்ப் படங்களில் ஹிந்து மதம் சித்திரிக்கப்படுவதை அணுகுவதைப் போல ஏன் மலையாளப் படங்களை அணுகத் தேவையில்லை என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். இப்படியான படங்களும் மலையாளத்தில் வருகின்றன. இதைப் படித்துவிட்டு இப்படம் மத ரீதியான படம் என்று நினைத்து விடவேண்டாம். சைக்கோ த்ரில்லர் படம். பொறுமையாகப் பார்க்கவும்.

*

பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே (ம) – சுமாரான படம். ஒரு புருஷனுக்குப் பல பொண்டாட்டிகள். ஒரு பொண்டாட்டிக்குப் பல காதலர்கள். 18+ கதை, ஆனால் 13+ படம். மிகப்பெரிய குண்டைக்கூட, இந்தா‌ வாழைப்பழம் என்று தருகிறார்கள். மெல்லிய நகைச்சுவை படம் முழுக்கவே இருக்கிறது. ஹீரோயின் நடிப்பு பிரமாதம். அங்காமாலி டைரீஸ், வைரஸ் மூலம் மலையாளப் படங்களுக்குள் வந்தவர்களுக்கு இப்படம் ஒத்துவராது. பொறுமையுடன் பார்க்கவேண்டிய வசனத் திரைப்படம். ஹிந்துத்துவவாதிகள் அந்த ஃபாதர் கதாபாத்திரத்துக்காகப் பார்க்கலாம். தமிழில் இப்படி எடுத்தால் ஜெமினி மேம்பாலத்தை ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள் – கிறித்துவர்கள் அல்ல, அரசியல்வாதிகள்! பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எறியுங்கள் என்று சொல்லி ஒரே வெள்ளையாக அடித்துவிட்டார்கள். பாவம் செய்திருந்தாலும் பரவாயில்லை, கல்லெறிங்கடா என்று தோன்ற வைத்துவிட்டது இறுதிக்காட்சிகள்!

*

சூஃபியும் சுஜாதயும் (ம) – ஹிந்துத்துவவாதிகள் நெஞ்சு வெடித்துவிடக்கூடாது என்பதற்காகவே முதல்‌காட்சியில் சூஃபி செத்துப் போய்விடுகிறான். அடுத்த காட்சியில் ஹிந்துவுக்கு சுஜாதா வாழ்க்கைப்பட்டுவிடுவதையும் காண்பித்துவிடுகிறார்கள். ஆனாலும் நெஞ்சு வெடித்துத்தான் போகிறது. பாங்கொலி கேட்கும்போதெல்லாம் ஆடுகிறாள். தொழத் தயாராகிறாள் சுஜாதா. சூஃபியோ பாங்கு சொல்கிறான், சுஜாதாவைக் கட்டிப்பிடிக்கிறானே ஒழிய ஹிந்துக் கடவுளைக் கும்பிடுவதில்லை. ஏனென்றால் சுஜாதா ஒரு ஹிந்து. அவள்தானே தொழவேண்டும்! சுஜாதாவாக வரும் அதிதி ராவின் கண்கள் கலங்கடிக்கின்றன. ஜெயசூர்யா கேரக்டரின் பெயரை இளிச்சவாயன் என்று வைத்திருக்கலாம். படத்தின் பெயரையே கூட சூஃபியும் இளிச்சவாயனும் என்றே கூட வைத்திருக்கலாம். பாதிக்குப் பின் வரும் ஜெயசூர்யாவின் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. பாங்கொலி‌ போக மீதம் இருக்கும் நேரத்தில் படத்தில் வசனங்களும் வருகின்றன. இன்னுமொரு ‘நடுநிலை’ திரைப்படம்.

*

Forensic (M). Very cruel one. A serial killer murders children for a pathetic motive. Worst one. Serial killing of children, my God, horrible. 🙁 Never try to watch it. Its worse as a movie too. A movie I want to forget. Director sucks. Hope some sense prevails at least in his next project.

*

Kappela (Malayalam) – பதற வைக்கும் இன்னொரு படம். இரண்டு பதற்றம். ஒன்று, திரைப்படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை தொடரும், திரைக்கதை தரும் பதற்றம். இன்னொன்று, வழக்கமான ஒன்றுதான். ஒரு அப்பாவி அழகான கிறித்துவப் பெண்ணை அப்பாவி போல் நடித்து ஏமாற்றி விற்கப் பார்க்கும் ஒரு ஹிந்துவிடம் இருந்து ஒரு ரௌடி காப்பாற்றும் கதை. இயக்குநர் பெயரை கூகிள் செய்து பார்த்துக் கொள்ளவும். அவர் பெண்ணைக் காப்பாற்ற உதவுபவராகவும் நடிக்கிறார். ஸ்ரீநாத் பாசிக்காகவும் திரைக்கதை மற்றும் அதைக் கையாண்ட விதத்துக்காகவும் பார்க்க வேண்டிய படம். எனக்கு ஒரு குறை, நல்ல ரௌடியின் மதம்தான் தெரியவில்லை. கிறித்துவராக அல்லது முஸ்லிமாக இருக்கலாம் என நினைக்கிறேன். இன்னொரு முறை பார்த்தால் கண்டுபிடித்து விடுவேன். ஆனால் பார்க்க மனம் ஒப்பவில்லை. கலைக்கு (ஹிந்து) மதம் (மட்டும்) கிடையாது என்பவர்கள் ஒன்றிப் போய்ப் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாமே தற்செயல்தானே!

பின்குறிப்பு: ஒன்றுமில்லாத‌ படத்தைத் தூக்கிப் பிடிப்பதில்லை. அடிப்படையில் நேர்மையற்ற படங்கள் எனக்குத் தேவையில்லை. மத ரீதியான ஆராய்ச்சிக்காகத்தான் இனி படமே பார்க்கப் போகிறேன். எவ்வித மதத்தையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒரு லாபத்துக்காக தூக்கிப் பிடிக்காத படங்களை மட்டுமே கலை என்ற வகையில் அணுகுவேன். இப்படி நூறு பேர் செய்யாவிட்டால் தமிழ் சினிமா போலிகளின் உலகமாகவே தொடரும்.

*

Share

திருமலை

பீட்டர் பாலாஜி என்று அவன் பெயரைச் சொல்லும்போது எல்லாருமே துணுக்குறுவார்கள். அது பீப்பாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அவன் பீட்டர் பாலாஜி என்ற பீப்பாவாகி இரண்டு வருடங்கள் இருக்கும். உடம்பும்தான். மனதோடு சேர்ந்து உடலும் ரட்சிக்கப்பட்டுவிட்டது. ஏன் ஏன் என்று யார் கேட்டாலும் அவன் ஒரு மாதம் வாயே திறக்கவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் அவனுக்கும் மேரிக்கும் கல்யாணம் ஆனது. பீப்பாவின் வீட்டுப் பக்கத்தில் இருந்து ஒரு ஈ காக்காய் கூட வரவில்லை. தான் செத்தாலும் தன் முகத்தில் விழிக்கக்கூடாது என்று பாலாஜியின் அம்மா போட்ட சாபத்தில் உண்மையில் பீப்பா கொஞ்சம் நிம்மதியானான் என்றுதான் சொல்லவேண்டும்.

அடுத்த  மூன்று மாதங்களில் குரோம்பேட்டையில் மூன்று அறை ஃப்ளாட் ஒன்று வாங்கிக் குடியேறினான். கேட்டட் கம்யூனிட்டி. மொட்டை மாடிக்குக் கூட்டிக்கொண்டு போன ப்ரோக்கர் அங்கே இருந்து தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைக் காண்பித்தான். பீப்பாவின் உள்ளம் நெகிழ்ந்தது. அந்த மலையில்தான் அவன் ரட்சிக்கப்பட்டான். அங்கேதான் அவன் முதன்முதலாக மேரியைப் பார்த்தான். மொட்டை மாடியிலேயே தேவாலயத்தின் மணி அவன் மனதுக்குள் கேட்டது. அந்த வீடுதான் என முடிவு செய்தான். வாழ்க்கை மாறியது. பழைய பழக்கங்கள், தொடர்புகள் என எல்லாவற்றையும் எளிதாக மறந்தான். புதிய வீட்டுக்குக் குடியேறினான். புது மனைவி. புதிய வாழ்க்கை.

தினம் தினம் மொட்டை மாடிக்கு வந்து தாமஸ் மவுண்ட்டை அங்கிருந்தபடியே பார்ப்பான். தாமஸ் கையில் ஜபமாலையுடன் அங்கும் இங்கும் திரிவதாகக் கற்பனை செய்துகொள்வான். ஒருநாளைப் போல ஒருநாள் மொட்டை மாடிக்கு வந்து தாமஸைப் பார்க்காவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது. எல்லாமே அற்புதம்தான். அவ்வப்போது வந்து தொந்தரவு செய்யும் அம்மாவின் முகத்தைத் தவிர. ஒருநாள் அவளும் செத்துப் போனாள். ஷவரின் கீழே நின்று அரை மணி நேரம் குளித்ததில் பழைய எதுவும் தன்னிடம் ஒட்டிக்கொள்ளவில்லை என்று நிம்மதியானான். இரண்டு வருடங்களில் இரண்டு குழந்தைகள். வாழ்க்கை இத்தனை சுவாரஸ்யமானதா? அன்றுதான் திடீரென திருமலை அவன் வீட்டுக் கதவைத் தட்டினான். ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். எரிச்சலானான். லேசாகச் சிரித்தான்.

மேரி சிரிக்கக்கூட இல்லை. உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு “ம்” என்றாள். திருமலை அவர் வீட்டை சுற்றிச் சுற்றிப் பார்த்தான். பீப்பாவுக்கு ஒட்டவே இல்லை. அவனை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனான். திருமலை லொட லொடவென பேசிக்கொண்டே இருந்தான். பீப்பா தலையைக் கூட அசைக்கவில்லை. அவன் போனால் போதுமென்று இருந்தது.

திருமலையைக் கவனிக்காமல் தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைப் பார்க்க ஆரம்பித்தான். மனதுக்குள் மணியோசை கேட்டது. தன் நெஞ்சில் இருந்த சிலுவையைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றான். திருமலை, “உன்கிட்டதான்டா பேசிக்கிட்டே இருக்கேன்” என்று சத்தமாகச் சொன்னபோதுதான் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தான். இவன் இன்னும் போகவில்லையா? பீப்பா சொன்னான், “என்ன சொன்ன?” திருமலை, “என்ன அங்க பாத்து நின்னுக்கிட்டு இருக்க?” பீப்பா சொன்னான், “தாமஸ் மவுண்ட். புனித தாமஸ். உனக்கெல்லாம் புரியாது.” திருமலை மலையைத் திரும்பிப் பார்த்தான். கூர்ந்து பார்த்தான். மலையைப் பார்த்தபடியே சொன்னான், “இதுவா? தாமஸ் மவுண்ட்டா? இந்தப் பக்கம் எப்படிடா தாமஸ் மவுண்ட்டு? இது திருநீர் மலைடா.”

தொப்பென்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோதுதான் பீப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு பீப்பாயைப் போலச் சரிந்து விழுந்து கிடந்தது திருமலைக்குத் தெரிந்தது.

Share

கனவுகள்

விதவிதமான கனவுகள். அந்த அளவுக்கு இருந்தாலும் பரவாயில்லை. கலவரமூட்டும் கனவுகள். ராமநாதனுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பயம் இல்லை, ஆனால் என்னவோ ஒரு சின்ன நெருடல். தினம் தினம் கனவா? அந்தக் கனவுகளுக்குள் என்னவோ இருப்பதாகத் தேடினான். எங்கோ ஒரு திருப்பத்தில் எதோ ஒரு பிணம் என்பதாகக் கனவு வரும். பக்கத்தில் போய்ப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருக்கும். சுற்றி இருப்பவர்களைப் பார்த்தால் எல்லாருமே உறவினர்கள் போல இருக்கும். விழிப்பு வந்துவிடும். இன்னொரு நாள் கனவில் எதோ ஒரு விபத்து என்று வரும். சுற்றிலும் உறவினர்கள் நிற்பார்கள். இவன் அருகில் நெருங்கிப் போகவும் விழிப்பு வந்துவிடும்.

இப்படி வகை வகையான கனவுகள், கொஞ்சம் நெருடலூட்டும் கனவுகள். மனைவியிடம் சொல்லலாம். உடனே அவளுக்கு நெற்றியில் வேர்க்கும். லேசாக மூச்சு வாங்கும். அப்படியே சாய்ந்துவிடுவாள். எனவே யோசித்தான்.

மலையாள மாந்த்ரீகரிடம் போனான். அவர் பிரசன்னம் பார்த்தார். மறைக்காமல் சொன்னார். “என்னவோ நடக்கப் போகிறது. எதோ ஒன்று துரத்துகிறது. முடிந்த வரை ஓடு. ஆனால் தப்பிப்பது கஷ்டம். கவனம்.”

ராமநாதன் தன் மகன் மகளிடம் சொல்லலாமா என்று யோசித்தார். காலேஜுக்குப் போகும் வயசில் இது எதற்கு அவர்களுக்கு? வேறு வழியில்லை, மனைவியிடம் சொல்லி விட வேண்டியதுதான். பக்குவமாக. மிகப் பக்குவமாக.

மனைவியை அழைத்து சூடாக ஒரு டீ கொடுத்தார். உடல்நிலையை விசாரித்தார். புதிய கணவனைப் பார்த்தது போல் அவள் கலவரத்துடன் “என்னங்க?” என்றாள். அவள் நெற்றியில் லேசாக வியர்வை. ராமநாதன் சொன்னார், “ரிலாக்ஸ். ரிலாக்ஸ். கூல்.” ஏசியை பதினெட்டில் வைத்தார். அவள் குளிர்ந்தாள்.

மெல்ல மெல்லச் சொன்னார். மூன்று மாதக் கனவுகளைச் சொன்னார். அவள் கண்கள் அகல விரிந்தன. கனவுகளின் வசீகரத்தில் அவளுக்கு வேர்க்கவில்லையோ. நிம்மதியானார். கடைசியாகச் சொன்னார், “ஒவ்வொரு கனவுலயும் என்னமோ நடக்குது. நம்ம உறவுக்காரங்க சுத்தி நிக்கறாங்க.” அவளது கண்களையே பார்த்தார்.

அவள் ஆச்சரியத்தோடு சொன்னாள், “எனக்கும் இதே கனவுங்க. அப்படியே டிட்டோ. அதே மூணு மாசமா. என்னால நம்பவே முடியலைங்க. எப்படிங்க இது? அடிபட்டு கிடக்கிறது, ஆக்ஸிடெண்ட் ஆகி கிடக்கிறது ஆம்பளைக் கால்ங்க.” ஏசியை மீறி ராமநாதனுக்கு நெற்றியில் வேர்த்தது.

Share