Tag Archive for ஹிந்தி

Merry Christmas (H)

Merry Christmas (H) – அந்தாதூன் நினைவுக்கு வர, ஶ்ரீராம் ராகவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக இதைப் பார்த்தேன். ஜனவரியிலேயே வந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு கூகிளில் தேடினால் இந்தப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. விஜய் சேதுபதி நடித்திருந்தும் இப்படி ஒரு படம் வந்தது கூட எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. படத்தின் தொடக்கத்தில் ஹீரோவும் ஹீரோயினும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இருவரும் தங்கள் கதையைச் சொல்லி முடிக்கும்போது இருவருக்கும் இடையே ஓர் உறவு மலரும் என்று எதிர்பார்க்கிறோம். அங்கே ஒரு திருப்பம். பின்னர் அது த்ரில்லர் படமாகிறது. எப்படி ஒரு பெண் முன்பின் தெரியாத ஒருவனிடம் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்பதற்கு விடையும் கிடைக்கிறது.

படம் எடுத்த விதம் அருமை. நீட்டான திரைப்படம் என்றுதான் சொல்லவேண்டும். விஜய் சேதுபதி ஹிந்தியில் பேசினாலும் தமிழ் போலவே ஒலித்தது. படத்திலும் அவர் தமிழ்க்காரர் என்பதால் அது இயல்பாகவும் தோன்றியது. அலட்டலே இல்லாமல் நடித்தார். கத்ரினா கய்ஃபும் பிரமாதமாக நடித்தார். கடைசி பத்து நிமிடம் இசை மட்டுமே என்று என்னவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார்கள். மெல்ல செல்லும் திரைப்படம் மெல்ல முடிந்துவிடுகிறது. பிரெஞ்சு நாவலைத் திரைப்படமாக்கி இருப்பதாலோ என்னவோ, வெளிநாட்டுத் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைத்தது.

அந்த வீடு, படத்தின் கலர் டோன், நடிகர்களின் நடிப்பு – இவற்றுக்காகப் பார்க்கலாம். தமிழில் இந்த அனுபவம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

Share

சில திரைப்படங்கள்

ஒரு தெக்கன் தல்லு கேசு (M) – மிடில. மகேஷிண்ட பிரதிகாரம் போல இன்னொரு ஈகோ மோதல் திரைப்படம். அந்தப் படமே எனக்கு ஒட்டவில்லை. இது இன்னும் மோசம். அதிலாவது ஃபகத் இருந்தார். இதில் பிஜு மேனன். ஈகோவில் ஒருத்தனை வெட்டும் அளவுக்கு ஒன்றும் நடந்திருக்கவில்லை. நம்பு என்றால் நம்பவேண்டும் என்பதுதான் மலையாள ஈகோ மோதல் திரைப்படங்களின் பாணி போல. பதிலுக்கு நகைச்சுவையகப் பழி வாங்குவாராம். அடேய்களா!

பிஜு மேனன் என்னதான் நன்றாக நடித்தாலும் என்னவோ ஒட்டாது எப்போதும். பல்லைக் கடித்துக்கொண்டு எப்படியோ பார்த்து முடித்தேன்.

2018 (M) – கேரளாவில் 2018ல் வரலாறு காணாத மழை, வெள்ளம். இதனால் 450க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகிறார்கள். இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமே 2018.

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு இல்லாத மழை கேரளாவைப் புரட்டிப் போடுகிறது. கேரள மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கெல்லாம் ஆளாகிறார்கள். அவர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நமக்கு 2015 வெள்ளம் தந்த அனுபவங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னை சிறுகதைப் போட்டியில் வந்திருந்த இருந்த கதைகளில் பெரும்பாலானவை 2015 வெள்ளத்தை ஒட்டியவையே. எந்த அளவுக்கு சென்னை வெள்ளம் சென்னை மக்களை புரட்டிப் போட்டது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதேதான் 2018 திரைப்படமும். கேரளாவைப் பொறுத்தவரை பார்த்தவர்கள் நிச்சயம் கதறி இருப்பார்கள். படத்தின் கலெக்ஷனும் அதை உறுதி செய்கிறது.

இதுபோன்ற திரைப்படங்களுக்கு உரிய அதே கதைதான். ஒவ்வொரு குடும்பமாகக் காண்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எப்படி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மக்களும் தானே ஹீரோவாகி எப்படி அனைவரையும் மீட்கிறார்கள் என்பதைப் பரபரப்பாகக் காட்டுகிறார்கள். சென்னையில் நடந்தது போலவே அங்கேயும் கர்ப்பிணிப் பெண் ராணுவத்தால் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட காட்சியும் உண்டு. ஒரே ஒரு இளம் ஜோடி மட்டும் வெள்ளத்தில் ஒட்டுமொத்தமாகப் பிரிய நேர்கிறது, டைட்டானிக் போல.

கேரளாவில் குண்டு வைக்கப் போகும் தமிழன் ஒருவன் மனம் திருந்தும் தனி டிராக்கும் உண்டு. இப்படிப் பல டிராக்குகள் தனித்தனியே அலைவதுதான் படத்தின் பெரிய பலவீனம்.

இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சம், வெள்ளம் வெள்ளம் என்று பயமுறுத்தாமல் படத்தின் போக்கிலேயே வெள்ளத்தின் அளவைக் கூட்டிக் கொண்டே போனதுதான். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், பல நல்ல நடிகர்கள் சின்ன சின்ன காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.

டைட்டானிக் போலவே அந்த ஜோடியின் உண்மையான அன்பை இன்னும் ஆழமாகக் கொண்டு போயிருந்தால் படம் அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்கும். இப்போது இது கேரளாவுக்கான ஒரு படமாகவே இருக்கிறது.

ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

புருஷ பிரேதம் (M) – யாரோ ஒருவர் எப்போதோ இது மிக நல்ல படம் என்று சொல்லிவிட, இத்தனை நாள்களாக இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இன்றுதான் அந்த சனி எனக்குப் பிடித்தது.

சமீபத்தில் பார்த்த மலையாளப் படங்களில் மிக மோசமானது இதுவே. இந்தப் படத்தை யார் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என இப்போது நினைவுக்கு வரவில்லை. இரண்டரை மணி நேரத் திரைப்படத்தை 5 மணி நேரம் பார்த்தது போன்ற உணர்வு. கொஞ்சம் கூட கதையோ சுவாரஸ்யமோ இல்லை. ஆனால் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசிக் கொள்வதாகவும் மிகுந்த மாடர்னாகப் படம் எடுத்ததாக நினைத்துக் கொண்டு சாவடித்து விட்டார்கள். யதார்த்தத்துடன் ஒரு போலீஸ் சந்திக்கும் அத்தனை கஷ்டங்களையும் காண்பிப்பதாக மனதில் உருவகித்துக் கொண்டு உருவான வினோத வஸ்துவிடம் நான் மாட்டிக்கொண்டு விட்டேன்.

ஸப்த ஸாகரதாச்சே யெல்லோ – ஸைட் பி (K) – காவியம் போன்ற ஒரு படத்துக்கு இப்படி ஒரு இரண்டாம் பாகமா என்று பலர் புலம்பியிருந்தாலும், எனக்குப் பிடித்திருந்தது. தனக்குக் கிடைக்காத காதலி இன்னொருவனை மணந்துகொண்டு குழந்தையுடன் வாழ்ந்தாலும், அவள் கனவுகண்ட சின்ன சின்ன விஷயங்கள் கூட நிறைவேற வேண்டும் என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்யும் ஹீரோ கதாபாத்திரம். அதே சமயம் அதைப் பரிபூரணமாகச் செய்யவும் முடியாமல் அவனைக் கொல்லும் வரை செல்லும் சைக்கோத்தனம். இந்த இரண்டுக்கும் இடையே ரக்‌ஷித் செட்டி – க்ளிஷேவாகத் தெரிந்தாலும் சொல்கிறேன் – வாழ்ந்திருக்கிறார்.

காதலியை மையமாக வைத்து முன்னகர வேண்டிய திரைப்படத்தில் அழகிய விபத்து ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது. பாலியல் தொழிலாளியாக வரும் நடிகை நடிப்பில் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். இதனால் ஹீரோவும் கதாநாயகியும் ஒன்றாகச் சேர வேண்டும் என்னும் பரபரப்பே நமக்குள் எழாமல் போகிறது. அப்படி ஒரு பரபரப்பை இந்தப் படம் கோரவில்லை என்பதால் பெரிய இழப்பில்லை.

ஒற்றைக் காது கேட்காமல் வரும் வில்லன் நடிகர் முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகத்திலும் தன் முக அசைவுகளாலேயே அனாயசமாக நடிக்கிறார்.

முதல் பாகத்தை உணர்வுரீதியாக ரசித்தவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். முதலிரண்டு பாகங்களும் சேர்ந்த ஒற்றை நாவல் என்ற புரிதலுடன் பார்த்தால் மறக்க முடியாத அனுபவமாக மாறும்.

பிரைமில் கிடைக்கிறது.

18+ படம்.

ஒரு கட்டுரையாளர் சொன்னார் என்பதற்காக, நல்ல தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்காமல் விட்டுவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி மேலிட, எறும்பு திரைப்படத்தை 45 நிமிடங்கள் பார்த்தேன். அதுவே பல்லைக் கடித்துக் கொண்டுதான் பார்த்தேன். அதற்கு மேல் பொறுமை இல்லை. இந்தத் திரைப்படத்தை மலையாள நல்ல திரைப்படங்களுடன் ஒப்பிடுவது எல்லாம் கலைக்கும் மலையாளத் திரைப்படங்களுக்கும் செய்யும் துரோகம். இன்னும் மனதில் நிறைய கொட்டிக்கொண்டு வருகிறது. ஆனால் இதுபோன்ற திரைப்பட முயற்சிகளை, முயற்சிகள் என்ற அளவிலாவது நோகடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அமைதியாகிறேன்.

அதே சமயம் எல்லா மலையாளத் திரைப்படங்களும் நல்ல திரைப்படங்கள் அல்ல. அவற்றிலும் பல போலிகள் உண்டு. அப்படிப்பட்ட திரைப்படங்களை இங்கே பலர் ஏற்றிப் பிடிக்கிறார்கள் என்று கட்டுரையாளர் சொல்வது உண்மைதான். அது தனி.

கைவா (K) – பொழுது போகாத நேரமொன்றில் இந்தக் கன்னடப் படத்தைப் பார்த்தேன். ஏன் பார்த்தேன்? 1980களின் பெங்களூரைக் கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னதற்காக. யார் சொன்னது? படத்தை எடுத்தவர்களே! இங்கேதான் நான் ஏமாந்துவிட்டேன். அந்தக் கால பெங்களூரில் 0.1% கூட காட்டவில்லை.

படத்தின் மேக்கிங் நன்றாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட தமிழ்ப் படங்களைப் போன்ற கலர் டோனைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் கதை? அரதப்பழசான கதை. இரண்டு கேங்குகளுக்கு இடையே உள்ள பகைமையில் அப்பாவிப் பெண், அதிலும் வாய் பேச முடியாத பெண் சீரழிக்கப்பட, அவர்களைக் கொடூரமாகப் பழி வாங்குகிறான் ஹீரோ. இதில் ஹீரோ ஹிந்து, ஹீரோயின் முஸ்லிம். ஆனால் இதெல்லாம் சினிமாவில் ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லாம் அப்படி அப்படியே நடக்கிறது.

1983ல் ராஜ்குமார் நடித்த பக்த பிரகலாதா ரிலீஸாகிறது. அதில் புனித் ராஜ்குமார் பிரகலாதன். ராஜ்குமார் ஹிரண்யகசிபு. பெங்களூரில் கபாலி தியேட்டரிலும் அப்படம் ரிலீசாகிறது. அப்படத்தின் உச்சகட்ட காட்சியில் ராஜ்குமார் தன் கதையுடன் வெகுண்டெழுந்து, ‘இங்கே இருக்கிறானா உன் ஹரி?’ என்று கோபம் கொண்டு ஒவ்வொரு தூணாக உடைக்க, கடைசி தூணை உடைக்கும்போது, அருகே இருந்த கங்காராம் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து தியேட்டர் மேல் விழுந்ததில் 123 பேர் மரணமடைகிறார்கள்.

படம் திரையிடப்பட்டதும், கட்டடம் தியேட்டர் மேல் இடிந்து விழுந்து படம் பார்த்தவர்கள் இறந்ததும் உண்மை. ராஜ்குமார் அடித்தபோது இடிந்தது என்பது ஒரு மித். இதைத் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய சோகத்தை படத்தில் ஊறுகாய் போலத் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு விஷயத்தைத் தவிர படத்தில் எதுவுமில்லை.

மஞ்ஞுமெள் பாய்ஸ் (M) – ஒரு முறை பார்க்கலாம். இதுமாதிரியான சர்வைவல் வகைத் திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைப்பதில் எப்போதுமே சவால் இருக்கும். பரதனின் மாலூட்டியில் இருந்து இதைப் பார்க்கலாம். கதைக்குள் வருவதற்குள் பாடாய்ப் படுத்திவிடுவார்கள். அப்படிக் கதைக்குள் வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாது. Trapped (H), Helen (M) எல்லாம் இப்படித்தான்.

இந்தப் படத்தில் நண்பர்கள் அனைவரும் கொடைக்கானலுக்குச் செல்லும் வரை படம் படு இயல்பு. நண்பர்களின் ஆரவாரத்தைத் திரையில் அப்படியே கொண்டு வந்துவிட்டார்கள். கொடைக்கானலை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. ஒரு நண்பன் குழிக்குள் விழும் காட்சி பதைபதைப்பு. அதன்பின்பு படம் அப்படியே நிற்கிறது. மேக்கிங், நடிப்பு எல்லாம் நன்றாக இருந்தும் அதற்கு மேல் ஒன்றும் இல்லை. நண்பனை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்று இன்ச் இன்ச்சாகக் காட்டுகிறார்கள். கயிறு இழுக்கும் போட்டி வரும்போதே, இது பின்னால் உதவும் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சி புல்லரிப்பாகத்தான் இருந்தது.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது – கண்மணி அன்போடு என்ற பாடல் வரும் இடம். தொடக்கத்தில் அத்தனை பெரிய திரையில் அந்த இசையைக் கேட்டதும் மனம் திருநெல்வேலியையும் ரத்னா தியேட்டரையும் பதினைந்து வயது நண்பர்களையும் தேடத் தொடங்கியது. ஏங்க ஏங்க அழுகை வந்தது என்கிற வரி வரும் காட்சியில் நிஜமாகவே கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது. இப்படியான ஒன்றிரண்டு காட்சிகளைத் தாண்டி, பெரிதாக படத்தில் ஒன்றும் இல்லை.

***

2004ல் கல்யாணம் முடிந்து தேனிலவுக்குக் கொடைக்கானல் போனோம். குணா குகையைத் தூரத்தில் இருந்து பார்த்தோம். உள்ளே இறங்கிப் போய்ப் பார்க்கலாம் என்று மனைவி சொன்னாள். மஞ்ஞுமெள் பாய்ஸ் படத்தில் இப்போது காண்பிக்கப்படுவது போல கேட் இருந்த நினைவில்லை. இறங்கிக் கொஞ்சம் தூரம் நடந்து போய்ப் பார்க்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். அதிலிருந்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மனைவி சொல்லிக்கொண்டே இருந்தாள், குணா குகையைப் பார்த்திருக்கலாமே என்று. மஞ்சும்மெள் பாய்ஸ் பார்த்தவுடன், ‘எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சிருக்கோம் பாத்தியா?’ என்று சொல்ல நினைத்தேன். ‘குழிலயே விழுந்திருக்கலாம்’ என ஒரு பதில் சொல்லும் வாய்ப்பை அவளுக்குத் தரக் கூடாது என்பதற்காகவே அதைச் சொல்லவில்லை.

கேப்டன் மில்லர் – ஏன் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம் என்று நொந்து கொள்கிறேன். ஏன் இந்தத் திரைப்படத்தை எடுக்கிறோம் என்று யாருக்கும் தெளிவில்லை. இது சுதந்திரப் போராட்டத் திரைப்படமா அல்லது தலித்துகள் கோவிலுக்குள் செல்லும் உரிமையை மீட்கும் திரைப்படமா அல்லது காந்திய – தீவிரவாதப் போக்கினரிடையே உள்ள வேற்றுமைகளைச் சொல்லும் படமா என்று எதிலும் ஒரு தெளிவில்லை.

இன்றைய கால மனநிலையை அன்றைய கால சுதந்திரப் போராட்டக் களத்துக்குள் வைத்து எதையோ ஒட்டிச் செயற்கையாக ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, எடுத்த விதம் எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம். அந்தக் கால பீரியடைத் திரையில் கொண்டு வரத் தெரியாமல் ஒதுக்குப்புறமாகவே பெரும்பாலான காட்சிகளை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். கோவிலில் கூடவா செயற்கைத்தனம்? வசனங்களிலும் அப்படியே. மூடிட்டு இரு என்று கடந்த பத்து வருடங்களாக நாம் பேசுவதெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே திரைப்படத்தில் வசனமாக வருகிறது.

நடிப்பு – ஐயையோ. அத்தனை பேரும் ஓவர் ஆக்டிங். தனுசு இந்தக் கால ஹீரோ போல் ஸ்லோமோஷனில் நடந்து வந்து சுட்டுக் கொல்கிறார்‌. ஆங்கிலேயர்கள் வசம் இருக்கும் ஒட்டுமொத்தத் துப்பாக்கிகளை விடவும், கையெறிக் குண்டுகளை விடவும் புதைகுண்டுகளை விடவும் தனுஷிடம் கூடுதலாக இருக்கிறது. எப்படி வந்தது, யார் கொடுத்தார்கள் எதுவும் தெரியாது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதப் பாதை என்பது இத்தனை கேவலமாக இல்லை. அது கூடுதல் அர்ப்பணிப்புடன், கடவுள் நம்பிக்கையுடன், ஒட்டுமொத்த இந்திய மக்களையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்தது. இவர்கள் எடுக்க நினைத்தது நக்சலைப் பற்றிய திரைப்படம். எடுத்தது சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் ஒரு திரைப்படம்.

இந்தக் கொடுமையை எப்படித்தான் தியேட்டரில் பார்த்தார்களோ.

நேரு (M) – தொடர்ச்சியாக வளவளவென்று மலையாளம் பேசும் ஒரு திரைப்படம். மலையாள வசனங்கள் இத்தனை பேசப்பட்டாலும் பிடிக்கும் என்பவர்களுக்கான படம்.

எப்படியாவது த்ருஷ்யம் போல ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் அதே போன்ற ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்னொரு திரைப்படம். அதே ஜித்து ஜோசப். அதே மோகன்லால்.

மையம் கொஞ்சம் நம்பும்படியாக இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ். நோ மீன்ஸ் நோ என்பது போல இதைப் புரிந்து கொண்டால்தான் இந்தப் படத்துடன் ஒன்ற முடியும்‌. ஏனோ என்னால் முடியவில்லை.

When rape is inevitable என்றொரு பழமொழி உண்டு. யதார்த்தத்தில் அது கொடூரமானது. விக்டிம்களுக்குத்தான் அது புரியும். இந்தப் படம் அங்கே சறுக்குகிறது.

எம்.கே.மணியின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்து தொந்தரவு செய்தது, அக்கதைக்கும் இப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட.

Share

Pink Vs நேர்கொண்ட பார்வை

(ஸ்பாய்லர்ஸ் அஹெட்)

பின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தாலும் உறவு கொள்ளக்கூடாது என்கிறது. இந்தக் கடைசி நிபந்தனையை ஒட்டி பின்க் திரைப்படம் வெளியானபோது இந்தியா முழுக்க விவாதம் நடந்தது.

இன்று பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை ஒட்டி இத்திரைப்படம் தமிழிலும் வருவது நல்லது என்று அஜித் நினைத்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பதும் அதை செயல்படுத்துவதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் எப்போதும் குறுக்கே வந்து நிற்கும் தமிழின் துரதிர்ஷ்டம் இந்தத் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. எந்த அளவுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் அமைத்திருக்கிறது என்றால், ஏன் அஜித்தை பின்க்கைப் பார்த்தார் அல்லது ஏன் பின்க்கை நாம் முன்பே பார்த்தோம் என்ற அளவுக்கு!

ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது என்னவெல்லாம் செய்துவிடக்கூடாது என்பதற்குத் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் உதாரணமாக உள்ளன. சமீபத்திய உதாரணம் இது. அதிலும் ஒரு பெரிய நட்சத்திரம் நடிக்கும்போது சின்ன சின்ன காட்சி முதல் பெரிய காட்சி வரை என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒப்பிட பின்க் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் மிகச் சிறந்த உதாரணம்.

பின்க் திரைப்படத்தில் அமிதாப் மிகச் சாதாரண வக்கீல். ஆனால் தமிழில் அஜித்தோ அஜித்! எனவே அவர் தோன்றும் காட்சி பின்னால் இருந்து கொஞ்சம் ஸ்டார்-சஸ்பென்ஸுடன் காண்பிக்கப்படுகிறது. மற்ற பெரிய நட்சத்திரங்களின் படத்துடனும் அஜித்தின் மற்ற படங்களுடனும் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் பின்க்-க்கு இது ஒத்துவராது. அதைவிட அடுத்த காட்சியில் அஜித் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும்போது அவரை அழைக்கும் உதவியாளர் மிரள்வதெல்லாம் தாங்க முடியாத காட்சி.

அஜித்துக்கு ஒரு காதல் காட்சியும் பாட்டும் பைக் சீனும் சண்டையும் வேண்டும் என்பதற்காக ஜஸ்ட் லைக் தட் சேர்த்திருக்கிறார்கள். இவை மட்டுமே மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் வரும்! பின்க் படத்தில் அமிதாப் உடல் நிலை சரி இல்லாதவர். அவர் மனைவியும் உடல் நிலை சரி இல்லாதவர். ஆனால் நேர்கொண்ட பார்வையில் என்னவெல்லாமோ காண்பித்து அஜித் ‘நான் வாழ வைப்பேன்’ சிவாஜி ரேஞ்சுக்கு தலையைப் பிடித்துக்கொண்டு உடலைக் குலுக்குகிறார். உண்மையில் நல்ல திரைப்படத்தின் ரசிகன் அந்தக் காட்சியோடு தலை தெறிக்க தியேட்டரை விட்டு வெளியே ஓடி இருக்கவேண்டும். ஆனால் நான் சிவாஜி, ரஜினி, கமல், விஜய் எனப் பலரின் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழன் என்பதால், என்னதான் ஆகிவிடும் பார்க்கலாம் என்று தொடர்ந்து பார்த்தேன்.

பின்க் திரைப்படத்தின் காட்சிகளை ஒன்றுவிடாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மழை பின்க் படத்தில் பெய்தால் அதே காட்சியில் நேர்கொண்ட பார்வையிலும் மழை. அந்த அளவுக்கு டிட்டோ. அத்தோடு விட்டிருந்தால் படம் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும். சில காட்சிகளை இவர்களாக யோசித்துச் சேர்த்தும் இருக்கிறார்கள். எங்கெல்லாம் காப்பியோ அங்கெல்லாம் படம் நன்றாக இருப்பது போல ஒரு பிரமை (பிரமைதான்!), இவர்கள் சேர்த்த காட்சிகளில் படம் பல்லிளிக்கிறது.

பின்க் திரைப்படத்தின் வசனங்களை அப்படியே தமிழாக்கி இருக்கிறார்கள். கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஹிந்தியில் சப் டைட்டிலுடன் பார்க்கும்போது சரியாகத் தோன்றும் வசனமெல்லாம் தமிழில் கேட்கும்போது இரண்டு மூன்று விதமாகப் புரிந்து தொலைக்கிறது! We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன்!). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல? இப்படி சில நுணுக்கமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

பின்க் படத்தில் 22 கிமீ தூரத்தை எப்படி 10 நிமிடத்தில் கடக்கமுடியும், வண்டியை 125 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று வரும் வசனத்தை, தமிழுக்கேற்றவாரு மாற்றவேண்டும் என்பதற்காக, 40 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் எப்படி கடக்க முடியும், 425 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் தமிழனுக்கு எக்ஸ்ட்ரா தேவை என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார். (தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை!)

அஜித்தைப் பார்த்து வில்லன் நீதிமன்றத்தில் ஒரு கட்டத்தில் நீ என்று பேசுகிறார். அஜித்தும் பதிலுக்கு அவரை நீ என்கிறார். ஆனால் பின்க்கில் அமிதாப் தன் குரல் உயராமல் தொடர்ந்து மரியாதையுடனேயே பேசுகிறார். பின்க் படத்தில் அமிதாப் கதாநாயகியைப் பார்த்து Be careful என்கிறார். அர்த்தம் பொதிந்த வசனம் அது. ஆனால் அஜித்தோ ‘யோசிச்சி நட, யோசிச்சிக்கிட்டே நடக்காத’ என்ற பன்ச்சுடன் அறிமுகமாகிறார்.

ஒரு நல்ல திரைப்படத்தை, முக்கியமான திரைப்படத்தை, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை தடவை மூக்குடைபடுவார்கள் எனத் தெரியவில்லை. கழுதையாகவும் இல்லாமல் புலியாகவும் இல்லாமல் இவர்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

நீதிமன்றக் காட்சிக்கு முன்னர் ரங்கராஜ் பாண்டே தன் கட்சிக்காரருக்கு அறிவுரை சொல்வது போலவும் அஜித்தை ரேக்கச் சொல்வது போலவும் வருகிறது. ஹிந்தியில் இந்தக் கண்றாவியெல்லாம் கிடையாது.

வித்யா பாலன் ஏன் வந்தார் என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் யாருக்கும் புரியப் போவதுமில்லை. அதிலும் அஜித் பொதுசேவகராக நீதிமன்றத்துக்குள் நுழையும்போது ஒருவர் போன் செய்கிறார். ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் கமுக்கமாக இருந்துவிட்டேன்.

ரங்கராஜ் பாண்டே இங்கேயும் கேள்வியாகக் கேட்கிறார். ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம், ப்ளீஸ், வேண்டாம் இந்த விஷப் பரிட்சை. தாங்க முடியவில்லை. பின்க் படத்தில் இதே பாத்திரத்தில் வரும் அந்த நடிகரின் நடிப்பு எத்தனை யதார்த்தமாக இருக்கும்! ரங்கராஜ் பாண்டேவோ என் கேள்விக்கு என்ன பதில் ரேஞ்சிலேயே பேசுகிறார்.

அமிதாப்பின் நடிப்பையும் அஜித்தின் ‘நடிப்பையும்’ பற்றிப் பேசப்போவதில்லை. அது பாவக்கணக்கில் சேர்ந்துவிடும்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நன்றாக நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் தப்ஸீ – வாய்ப்பே இல்லை. வேற லெவல் அது.

இதே போல் ஒவ்வொன்றையும் ஒப்பிடலாம். பெண் போலிஸ் தமிழில் பரவாயில்லாமல் நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். வில்லனாக வரும் நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தத் திரைப்படத்தைக் கையாளும் அளவுக்கு வயதுக்கு வரவில்லை. எதையுமே உரக்கவும் ஒரு நிலைப்பாடு எடுத்தும் கருப்பு வெள்ளையாகவும் மட்டுமே இவர்களுக்கு (நமக்கு!) அணுகத் தெரியும். இடைப்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மையே முக்கியம் என்பதெல்லாம் இன்னும் இவர்களுக்குப் பழக்கப்படவில்லை. அதுவரை பின்க் படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டிவிட்டு, அதை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று அஜித் போன்றவர்கள் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் புண்ணியமாகப் போகும். அஜித் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ரசனையாளராக மட்டும் இருந்தாலும் போதாது, அதை அப்படியே எப்படித் தமிழில் கொண்டு வருவது என்றும் யோசித்திருக்கவேண்டும். அங்கே ஒட்டுமொத்தமாக அஜித் சறுக்கி இருக்கிறார்.

நன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்

Share

போட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்

டிஃபன் பாக்ஸ் (படம் பெயர் லஞ்ச் பாக்ஸ், நாங்கள் கிண்டலாக அதை அன்று அப்படிச் சொன்னோம்) படம் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. நினைவிருக்கிறது என்றால், வாழ்க்கையில் மறக்காது. குஜராத்தில் இரவுக் காட்சிக்கு அழைத்துச் சென்ற பிரதீப்பையும் கூட வந்த நண்பர்களையும் மருதனையும் அந்த இரவு முழுக்க சுற்றியதையும் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாது. படம் மெல்ல மெல்ல நகர்ந்தது. முக்கியமான படம்தான், ஆனால் அப்போதைய எங்கள் கொண்டாட்ட சூழலுக்கு ஒட்டவில்லை. ஆனாலும் பார்த்தோம். சிரித்தோம். கலைந்தோம்.

அந்த இயக்குநரின் இரண்டாவது படம் போட்டோகிராஃப். அதே போன்று மெல்ல நகரும் படம். அதேபோன்று நம்பமுடியாத ஒரு சின்ன கதைத் தொடக்கம். அதை நம்பினால் படம் பிடிக்கும். இல்லையென்றால் இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்பதற்குள்ளேயே நாம் அலைந்துகொண்டிருப்போம். லஞ்ச்பாக்ஸில் ரொம்ப அலைந்தேன். போட்டோகிராஃபில் அத்தனை இல்லை என்றாலும், நம்பமுடியாத ஒரு கதைக்கருதான்.

ஏன் இந்தக் கதைக்கு ஒரு ஹீரோ முஸ்லிமாக இருக்கிறான்? ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான்? தற்செயலா? படம் தற்செயல் என்றே சொல்கிறது. ஆனால் என்னால்தான் அந்த யோசனைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. அந்தப் பெண் எதனால் கோபமே இல்லாமல் இவன் பின்னால் வருகிறாள்? கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள்? இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன? சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள்? சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை? ஆண்களா இல்லை? ஆனால் இவனிடம் மயங்குகிறாள். இதை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரு கவிதை காத்திருக்கிறது.

நவாஸுதீன் சித்திக் ஒரு ஏழை முஸ்லிம். அவன் தன் பாட்டிக்காக ஒரு பொய் சொல்கிறான். அப்படியானால் எப்படிப்பட்ட பெண் தனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று சொல்வான்? ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான்? எதுவுமே ஒட்டவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பதால் இதை ஏற்றுக்கொண்டு அனுபவத்துக்குள் போ என்கிறார்கள். அந்த அனுபவம் உண்மையில் அட்டகாசமாகவே வந்துள்ளது. பல நுணுக்கமான காட்சிகள். ஆனால் அதன் அடிப்படைதான் நம்பமுடியாததாக இருக்கிறது.

இவர்கள் இருவரும் காதலித்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் பார்த்த முதல் படமாக இதுவே இருக்கும் என நினைக்கிறேன். ஒரு திறந்த முடிவுன் விட்டு வைக்கிறார்கள். அவள் கட்டவுட்டில் இருப்பது தன் படம் இல்லை என்பதைத் தொட்டு, அவனை ஏற்கிறாள் என்றும் சிலர் கொள்ளலாம். ஆனால் அதன் பின்பு வரும் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கில் பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்ற கிளிஷே சினிமா காட்சியின் விளக்கத்துடன் யதார்த்தமாக அவர்கள் பிரிகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியாக வருகிறது.

லஞ்ச் பாக்ஸ் படத்திலும் சரி, இப்படத்திலும் சரி, மிகக் குறிப்பாக ஈர்த்தது, ஒலிப்பதிவின் துல்லியம். அத்தனை அட்டகாசம்.

இன்னும் ஏன் இத்தனை மெல்லமாகப் படம் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவள் யோசிக்கிறாள் என்றால் யோசித்துக்கொண்டே இருக்கிறாள். நடந்து வருகிறாள் என்றால் நடந்துகொண்டே இருக்கிறாள். கடைசியில் கேம்ப கோலா ஃபார்முலாவைச் சொல்லும் ஒரு கிழவர் கதவைத் திறந்தபோது அவருக்கும் நவாஸுதீன் சித்திக்குக்கும் இடையே பத்தடிதான் இருக்கும் என்றாலும், ஐயோ இவர் நடந்து வர 10 நிமிடம் ஆகுமே என்று மனம் அரற்றியது. சட்டென ஒரு எடிட்டிங்கில் அடுத்த காட்சிக்குப் போனபோது அப்பாடி என்றிருந்தது என்றால் அடி எத்தனை பலம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

மெல்ல நகரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படத்தில் ஒரு நவீனத்தன்மை கூடுதலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தனை மெல்ல நகரும் படம், மிக அழுத்தமான கதையொன்றைச் சுற்றாத வரையில், எனக்குத் தாங்காது என்பது மீண்டும் ஒருமுறை எனக்குப் புரிந்தது.

Share

Gully Boy

Gully Boy. Highly predictable story. But an excellent experience to watch. No wonder why it had a great box office collection. Ranveer Singh, the lady acted as his mother, Alia Bhatt, the actor who appeared as Sher – everybody performed very well. What a change over in Ranveer Singh, simply amazing. Music is awesome. I was remembering AR Rahman for his Petta Rap song and No problem song. All songs in this movie have a close resemblance of those songs what I mentioned above. Santhosh Narayan took this Gana of Chennai to a different level I must agree. Tamil version of Gully Boy if planned, Santhosh Narayan would deliver some great songs I believe. But finding the perfect matching actors might be a difficult one.

Even though the movie revolves around a slum and a Muslim family, not even a single unnecessary attack on India. Tamil film might use this same plot to criticise Indian government I am sure. 🙂

Share