மோகனரங்கன் கவிதைகள் குறித்து பெருமாள் முருகன் – ஆத்மாநாம் விருது
அன்புள்ள பா. ரஞ்சித்
அன்புள்ள பா.ரஞ்சித்
அன்புடன் ஒரு கடிதம். 🙂
நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்க வாய்ப்பில்லை என்பது தெரியும். தெரிந்தும் செத்துப்போன தன் மனைவிக்கு பாசவலையில் கமல்ஹாசன் கடிதம் எழுதிக் கொன்றெடுத்தது போல என் பங்குக்கு நானும் எழுதிக்கொல்கிறேன்.
நீங்கள் மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அப்படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.
கபாலி, ரஜினியின் திரை வரலாற்றில் மிகச் சிறந்த படமாக அமைந்துவிட்டது. நீங்கள் இயக்கப்போகும் அடுத்த படமும் அப்படியே ஆகட்டும். ஆனால் கபாலி திரைப்படத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தின் திரை வரலாற்றில் என்ன இடம் நீங்கள் யோசிக்கவேண்டும். ரஜினி என்ற ஒரு உச்ச நடிகராக அப்படம் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தாலும், ஒரு முக்கியமான வளர்ந்து வரும் இளம் இயக்குநராக அப்படம் உங்களுக்கு பெருமை தரக்கூடிய, காலாகாலம் உங்கள் பெயரைச் சொல்லக்கூடிய ஒரு படமாக இருக்காது. சுருக்கமாக மெட்ராஸ் போன்ற ஒரு படமாக இருக்காது.
உண்மையில் உங்கள் கைக்கு வந்து அமர்ந்த மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. இடைவேளைக்குப் பிறகு ரஜினி வில்லனை வெல்லும் காட்சிகளில் திரைக்கதை என்பதோ புத்திசாலித்தனம் என்பதோ மருந்துக்கும் இல்லை. இங்கே நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உங்கள் திரை வரலாற்றிலும், கபாலி திரைப்படம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். இன்று கபாலி ரஜினியின் திரைப்படமாகவும் வசூலில் சாதனை செய்த படமாகவுமே அறியப்படுகிறது. இனியும் அப்படித்தான் அறியப்படும்.
அதிர்ஷ்டம் இரண்டாவது முறை கதவைத் தட்டாது என்பது இன்று பொய்யாகி இருக்கிறது. இந்த முறையாவது வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர்களைத் தவிரவும் நல்ல நடிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற எளிய உண்மையை நம்புங்கள். பாலு மகேந்திரா செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். ஒரே நடிகர்கள் தொடர்ச்சியாக நடிப்பது தரும் அலுப்பை ஓர் இயக்குநராக நீங்கள் கடந்தே ஆகவேண்டும்.
ரஜினி படம் என்பதால் எதைச் சொன்னாலும் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது உண்மைதான். ஆனால் ரசிகர்களுக்கான படம் என்பது முதல் இரண்டு நாள்களில் முடிந்துவிடும். நீங்கள் படம் செய்வது ரசிகர்களுக்காக மட்டுமே அல்ல. எனவே திரைக்கதையில் சின்ன சமரசம் கூட ரஜினிக்காகச் செய்யாதீர்கள்.
வசனத்தை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பாடலாகப் போடும் சந்தோஷ் நாராயணனிம் கொஞ்சம் மெனக்கெட்டு நல்ல பாடலாகக் கேட்டு வாங்குங்கள். ரஜினிக்கு ஓப்பனிங் சாங் வேண்டாம். அல்லது உலகம் ஒருவனுக்கே போல் வேண்டவே வேண்டாம். கபாலி திரைப்படத்தில் தனியே அதிகம் பாடல்கள் வராததுதான் நல்லதாகப் போனது. சந்தோஷ் நாராயண்தான் இசை என்றால் அப்படியே இப்படத்துக்கும் செய்துவிடுங்கள். ஒரு மாற்றத்துக்கு, இளையராஜாவை அல்லது ஏ.ஆர். ரஹ்மானை யோசிப்பது நல்லது என் எண்ணம்.
ஒன்று, தீவிரமான அரசியல் படமாகவே எடுங்கள். அல்லது அரசியலற்ற படமாகவே இயக்குங்கள். அரசியலற்ற ஒரு கேளிக்கைத் திரைப்படமாக எடுத்துவிட்டு அதை அரசியல் படமாக முன்வைக்கப் பார்க்காதீர்கள். நீங்கள் முன்வைக்காவிட்டாலும் உங்கள் ‘நண்பர்கள்’ அதை, கபாலிக்குச் செய்தது போல, அப்படி முன் வைப்பார்கள். அப்போது அதை ஆதரிக்காதீர்கள். அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.
உங்களுக்கு இருக்கும் தீவிரமான அரசியல் உணர்வு வரவேற்கத்தக்கது. ஆனால் அதையே மேடைதோறும் பேசுவது திரையுலகில் உங்களுக்கு நல்லவற்றைத் தராது என்றே நான் நிச்சயம் நம்புகிறேன். இன்று உங்களை ஏற்றிப் பேசும் உங்கள் நண்பர்கள், உங்களது தோல்விக் காலத்திலும் உங்களிடமிருந்து அரசியல் ஆதாயம் பெற மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்கள் தேடல் சினிமாவில் வெற்றி என்பதாக இருக்கும். அது இல்லாதபோது நீங்கள் அரசியல் என்ற வெளிக்குள் வேறு வழியின்றி நுழையவேண்டியிருக்கும். இருபது படங்கள் செய்வது வரை உங்கள் அரசியல் உங்களுக்குள்ளே இருக்கட்டும். உங்கள் தொடர்பு மொழி சினிமா. அதை உங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துங்கள். மணிரத்னத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளுங்கள். இது உங்கள் திரைவாழ்க்கைக்கு நல்லது. இல்லையென்றால் விளக்கம், விளக்கத்துக்கு விளக்கம் கொடுத்தே, சேரன், தங்கர்பச்சான், அமீர் வரிசையில் போய்ச்சேரவேண்டி இருக்கும்.
கடைசியாக ரகசியமாக ஒன்று. வழக்கம்போல் திரைப்படத்தின் பின்னணியில் ஈவெராவின் படத்தை எங்கேயும் வைக்காதீர்கள். கவின்மலர்களின் பேட்டியில் வழக்கம்போல் ஈவெராவின் பெண் விடுதலையை ரசிப்பவன் என்றும், கபாலியில் குமுதவல்லி போல இப்படத்தில் வரும் விகடவல்லி ஈவெராவின் பாதிப்பில் வந்ததுதான் என்று எதாவது சொல்லி நழுவிவிடுங்கள். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டது போல காட்டிவிடுவார்கள். நம் வேலை நமக்கு. அது வெற்றிகரமாகத் தொடரட்டும்.
ரஜினியை மீண்டும் இயக்கப் போகும் நீங்கள் தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சிறந்த இயக்குநராக வலம் வர வாழ்த்துகள்.
சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி – படிக்கவேண்டிய கட்டுரை
என் பெயர் என் உரிமை
என் பெயர் படும் பாடு:
ஒரு நண்பர் ஒருவர் அவர்களது தனிப்பட்ட குழும இதழை எனக்குத் தொடர்ந்து அனுப்பி வைப்பார். நண்பர் வயதானவர். உழைப்பாளி. அந்த பத்திரிகையில் ஒட்டும் பெறுநர் முகவரியில் என் பெயரை எல். ஹரிகரப்ரசன்னா என்று தட்டச்சு செய்திருந்தார்கள். நான் முதலில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு தடவை பார்க்கும்போது கொஞ்சம் துணுக்குறும். சரி, அவரிடம் சொல்லிவிடுவோம் என்று ஒரு தடவை சொன்னேன். உடனே மாற்றுகிறேன் என்றார். ஆனால் மாற்றவில்லை. கொஞ்ச நாள் கழித்து மீண்டும் சொன்னேன். மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மாற்றிவிடுவதாகச் சொன்னார். ஆனால் மாற்றவில்லை. நான் மீண்டும் சொல்ல, அவர் மன்னிப்புக் கேட்க என ஐந்தாறு முறை ஆகிவிட்டது. ஆனால் பெயர் மட்டும் மாற்றப்படவே இல்லை. என் இன்ஷியல் V. அதை எல் என்று பார்க்கும்போதெல்லாம் என் அப்பா வாசுதேவ ராவின் நினைவு வரும். இந்த முறை அந்த நண்பரை நேரில் சந்திக்கும்படி ஆனது. மெல்ல பொறுமையாக ஆனால் மிக உறுதியாக அவரிடம் பேசினேன். “ஸார், நீங்க வயசானவர். ரொம்ப உழைக்கறீங்க. மகிழ்ச்சி. ஆனால் ஒவ்வொரு தடவை என் பெயரை இப்படி தப்பா பார்க்கும்போதும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. உங்ககிட்டயும் அஞ்சாறு தடவை சொல்லிட்டேன். இதுவே வேற யாராவது இருந்தா நான் வேற மாதிரிதான் பேசுவேன். ஒண்ணு இனிஷியலை சரியா மாத்தி அனுப்புங்க. இல்லைன்னா இதழே வேண்டாம். இப்படி சொல்றதுக்கு ஸாரி. மன்னிச்சிடுங்க. இதுல எல் – வி-ன்ற எழுத்துப் பிரச்சினை மட்டும் இல்லை. என் உள்ளுணர்வு சார்ந்த தீவிரமான அகப்போராட்டமே இருக்கு. என் அப்பாவுக்கான ஒரே அங்கீகாரம் இந்த எழுத்து மட்டும்தான் இன்னைக்கு. என் அம்மாவும் இதைப் பார்க்கும்போதெல்லாம் சொல்றாங்க. இதுக்கு வேற ஒரு தனிப்பட்ட காரணமும் இருக்கு. (அதையும் அவரிடம் சொன்னேன்.) கொஞ்சம் கவனம் எடுத்துச் செய்ங்க” என்றேன். பலவாறு ஸாரி சொன்னார். எனக்கே வருத்தமாகிவிட்டது. அத்தனை வகையில் வருத்தத்துடன் அவர் பேசினார். அடுத்த முறை நிச்சயம் சரியாக வரும் என்று உறுதி சொன்னார்.
நான் 8ம் வகுப்பு எம்.எல்.டபுள்யூ.ஏ. பள்ளியில் மதுரையில் சேர்ந்தேன். அங்கே இருந்த தமிழாசிரியர் மட்டும் என் பெயரை அரிகரபிரசன்னா என்று எழுதுவார். எனக்கு தீயை விழுங்கியது போல இருக்கும். ஒரு தடவை மெல்ல அவரிடம் சொன்னேன். அவர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நானும் அப்படித்தான் எழுதவேண்டும் என்று அறிவுரையும் சொன்னார். பெயர் அப்படியே பத்தாம் வகுப்பு சான்றிதழ் வரை வந்துவிடுமோ என்று அதீதமாகக் கவலைப்பட்ட நான் என் தாத்தாவிடம் சொன்னேன். மறுநாளே தாத்தா பள்ளித் தலைமை ஆசிரியரைப் பார்க்க வந்துவிட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நெற்றியில் நாமம், நாமத்திடையே அங்காரட்சதை, கோபி முத்திரை, ஒரு சால்வை, தாத்தா கம்பு என்று என்னுடன் நடந்து வந்த அவரை பள்ளிக் கதவில் யாரும் தடுத்து நிறுத்தவில்லை. பெரிய கும்பிடு போட்டு உள்ளே அனுப்பி வைத்தார்கள். மே ஐ கம் இன் சார் என்று அவர் உள்ளே செல்லவும், மிகக் கறாரான கண்டிப்பான தலைமை ஆசிரியர் எழுந்து நின்றதை நான் பார்த்து அதிசயித்து நின்றேன். ஐந்து நிமிடம் மிக எளிமையான அழகான ஆங்கிலத்தில் என் தாத்தா தலைமை ஆசிரியரிடம் பேசினார். சுருக்கம் இதுதான்: என் பேரன் பெயர் ஹரிஹர பிரசன்னாதான். அரிகர பிரசன்னா அல்ல. இதை உடனே மாற்றியாகவேண்டும். எக்காரணம் கொண்டும் அதை அரிகர பிரசன்னா என்று எழுதக்கூடாது. இது அத்தனை சிறிய விஷயம் அல்ல. இதுவே அவர் சொன்னதன் சுருக்கம்.
தலைமை ஆசிரியர் கையோடு தமிழ் ஆசிரியரை அழைத்து இனி நிச்சயம் என் பெயரை ஹரிஹரபிரசன்னா என்றுதான் எழுதவேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழாசிரியர் நல்லவர். இதையெல்லாம் அவர் மனத்தில் வைத்துக்கொள்ளவில்லை. எப்போதும் போல் என்மீது அன்பாகவே இருந்தார். என் திருமணம் முடிந்ததும் அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுவிட்டு வந்தேன்.
இப்படி பெயர் விஷயத்தில் சின்ன வயதிலேயே எனக்கு கருத்துத் தீவிரம் இருந்தது. யாராவது தன் பெயரை விச்வநாதன் என்று எழுதினால் அதை விஸ்வநாதன் என்று எழுதுவதும் தவறே. இப்படியான தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கும் கருத்துத் தீவிரம்.
இன்று மீண்டும் அந்த இதழ் வந்தது. அதில் என் பெயரை A. ஹரிகரபிரசன்னா என்று எழுதி அனுப்பி இருக்கிறார்கள். மீண்டும் அவருக்கு எஸ்.எம்.எஸ். ‘இந்த முறை புதிய தவறுடன் என் பெயர் அச்சாகி வந்துள்ளது. என் சரியான பெயர் V. ஹரிஹர பிரசன்னா.’ அவரது மன்னிப்பு பதிலாக மீண்டும். இந்த விளையாட்டு இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.
Joker
பென்சில் சீவல்களுடன் ஒரு ஆட்டம் – கவிதை
பென்சில் சீவல்களுடன் ஒரு ஆட்டம்
பென்சிலை சீவிக்கொண்டிருக்கிறாள் மகள்
சீவி விழும் மரச் சீவல்களைச் சேகரித்து
தன் டப்பாவில் வைத்துக்கொள்கிறாள்
மீண்டும் சீவத்தொடங்குகிறாள்
கை வலிக்க
அதைக் கீழே வைத்துவிட்டு
அப்படியே படுத்துக்கொள்கிறாள்
கனவெங்கும் மரத்தின் சீவல் சுருள்கள்
வீட்டின் அறைமுழுக்க சுருள்கள்
அலையின் நுரையைப் போல்
அள்ளிப் பூசிக்கொள்கிறாள்
நதியின் நீரென முங்கி எழுகிறாள்
வாய் நிறைய காற்றடக்கி
ஊதித் தள்ளுகிறாள்
விடிந்ததும் நேராக ஓடிவந்து
புது பென்சில் வேணும்ப்பா என்கிறாள்
தினம் ஒரு பென்சிலா, உருப்படும் என்று சொல்லும் என்னை…
எப்படிச் சொல்ல
புரியாமலா
வினோதமாகவா
விரோதமாகவா
எரிச்சலுடனா..
எப்படியோ பார்க்கிறாள்
அறையெங்கும் அவளைத் தேடிக்கொண்டிருக்கின்றன
இரவில் கும்மாளமிட்ட மரச் சுருள்கள்
கவிதை
வேர்வையில் நனைந்து
கண்கூசும் வெயிலில்
சிக்னலுக்குக் காத்திருக்கும்போது
படபடத்து மின்னி மறையும் பட்டாம்பூச்சி
நூறு நூறு கண்களில்
விதைத்துச் செல்கிறது
ஒரு மரத்தை.
கிரீடம் (கவிதை)
நத்தையைப் பார்த்துச் சிரிக்கிறாள் மகள்
எதோ நினைத்துக்கொண்டவளாய்
மழலை மாறாத சொற்களில்
வேப்பமரம் துள்ஸி என்கிறாள்
மிகப்பெரிய பளுவொன்றை சுமந்துகொண்டு
வாசற்படி ஏறும்போது
சிறு பஞ்சுப் பொதியென வயிற்றில் முட்டி
யூகேஜி வந்துட்டா நான் பெரியவதானப்பா என்கிறாள்
இரவின் வானமும் அதன் நட்சத்திரங்களும்
மரங்களின் வாசமும்
குயில்களும் கிளிகளும் அணில்களும்
துளசிச் செடியும் அதில் குடியிருக்கும் வீட்டுத் தெய்வமும்
என் வீட்டுக்குள் காத்திருக்கின்றன
இவள் பேசட்டும் என்று.
நான் அணிந்திருக்கும்
வைரம் பதித்த தங்கக் கிரீடம்
லேசாக உறுத்தத்தான் செய்கிறது
கொஞ்சம் கூச்சமும் கூட.
உறுத்தினாலும் கூச்சம் தந்தாலும்
அது கிரீடம்.


