பூண்டு வெங்காயம் அக்ஷயப் பாத்ரா

கர்நாடகாவில் வெங்காயம் பூண்டு இல்லாமல் அக்‌ஷயப் பாத்ரா உணவு வழங்கும் திட்டம் குறித்து எதிர்ப்புகள் எழுந்தன. அக்‌ஷயப் பாத்ராவின் விதிகளுக்கு உட்பட்டே அது உணவு வழங்க இயலும். நிச்சயம் வெங்காயம் பூண்டு சேர்க்கவேண்டுமென்றால் அக்‌ஷயப் பாத்ராவைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது. இப்போது அக்‌ஷயப் பாத்ராவை நிர்ப்பந்திப்பது சரியானதல்ல. இது கிடக்க, வெங்காயம் பூண்டு சேர்க்காவிட்டால் எல்லாக் குழந்தைகளுக்கும் நியூட்ரிசன் கிடைக்காது என்பதெல்லாம் அபத்தம். வெங்காயம் பூண்டு இல்லாமலேயே நிச்சயம் எவ்விதக் குறையும் இல்லாமல் வாழமுடியும். வெங்காயம் பூண்டு இல்லாமல் உணவு என்பது பிராமணர்களுக்குரியது என்பதால், பிராமணர்களை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே, வெங்காயம் பூண்டு இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடல்நலமும் நாசமாகிவிடும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். வெங்காயம் பூண்டுடன் சமைப்பதைத் தவிர்க்க நினைக்கும் ஒரு அமைப்பை வலியுறுத்துவதுதான் தவறு.

(பின் குறிப்பு: வெங்காயம் பூண்டு இல்லாமல் என்னால் சாப்பிடவே முடியாது. பண்டிகை, விரத நாள்களில் தவிர்ப்பேன். மஹாளயபக்ஷத்தில் அந்தப் பதினைந்து நாளைக் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சில சமயம் ஏமாற்றிவிடுவேன்! வெங்காயம் பூண்டின் சுவை மிகப் பிடித்தமானதுதான், ஆனால் அது இல்லாததால் எந்த நியூட்ரிஸனும் கிடைக்காது என்பதெல்லாம் அபத்தம்.)

ஐஐடியில் சைவ அசைவ தனித்தனி கேண்டின்கள் என்றொரு கொந்தளிப்பு. அசைவப் பழக்கம் உள்ளவர்கள் என்றாவது சைவ உணவு அருந்தினால் அவர்கள் சைவ கேண்டீனுக்குள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது தெரிந்தால்தான் இதில் கருத்துச் சொல்லமுடியும். அனுமதிக்கப்படுவார்கள் என்றால் இதில் சாதிப்பாகுபாடு என்ற எதுவும் இல்லை. அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றால், இதில் பிரச்சினை உள்ளது. எத்தனையோ பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதி சைவர்கள் அசைவம் உண்பதும், எத்தனையோ பிராமணரல்லாதோர் சைவம் மட்டுமே உண்பதும் எல்லாம் இங்கே நடக்கக்கூடியதுதான். உணவுப் பழக்கம் மட்டுமே காரணம் என்றால், இப்பிரிவினையில் சாதிப்பாகுபாடு இல்லை என்றே சொல்லவேண்டும். அசைவ உணவு உண்பவர்களுடன் ஒரே இடத்தில் இருந்து நான் சைவ உணவைச் சாப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் அது ஒருவித ஒவ்வாமையைத் தரத்தான் செய்யும். இது உணவுப்பழக்கத்தினால் வரும் ஒவ்வாமையே அன்றி, சாதி ரீதியிலான ஒவ்வாமை அல்ல. ஆனால், கையில் கிடைப்பதையெல்லாம் வைத்து பிராமண லேபிள் ஒட்டித் தாக்க நினைத்தால், எதையும் இப்படி வளைத்துவிடலாம். வளைத்து விடுகிறார்கள்.

Share

பா.ரஞ்சித் – திருமாவளவன்

ரஞ்சித் முழுமையான அரசியல்வாதியாகவே மாறிக்கொண்டிருக்கிறார். நல்லது. திரைப்படங்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பது, வெளிப்படையாகத் தெரியாத வரை மட்டுமே வேகும் பருப்பு. அதற்குள் உள்நோக்கம் இருப்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும்போது, அந்நெருப்பு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படாது. நீர்த்துப் போகத் துவங்கும். அந்நிலையில் முழுமையாக அரசியலுக்குள் போகவேண்டி இருக்கும். படைப்பாளியின் சமூகத்துடனான உறவு என்பது ஒரே மட்டத்தில் கண்கூடாகப் என்பது மாறி, மேலிருந்து கீழே நோக்குவது என்றாகும். அப்போது உயிரைத் தொடும் திரைப்படங்களுக்குப் பதிலாக அறிவுரை சொல்லும், நியாயம் கேட்கும் படங்கள் என்றாகும். அவை முழுமையாக ஏற்கப்படாதபோது அரசியலே முழுப் புகலிடம். ஏனென்றால் அடிப்படையில் திரைப்படம் என்பது ஒரு வணிகம். அதை நீங்கள் எதற்குப் பயன்படுத்தினாலும் அதில் வணிகம் என்பது நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

தனித் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பட்டியல் சாதிக் கட்சிகள் போட்டியிடவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்க இது மிகவும் எளிதான ஒன்றாகத் தோன்றும். ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிகக் கஷ்டமானது. இங்கிருக்கும் பட்டியல் சாதிக் கட்சிகளுக்கு இது தெரியாததல்ல. இது தெரிந்தும் அவர்கள் தனியாகவே இயங்குகிறார்கள், இயங்க விரும்புகிறார்கள். காரணம், அரசியலில் அவர்கள் இருப்பு.

ரஞ்சித் சொன்னதை திருமாவளவன் மறுத்திருக்கிறார் என்று பார்த்தேன். திருமாவளவன் மறுத்திருப்பது சரியான ஒன்றே. இதற்குக் காரணம், தனது அரசியலுக்கு ரஞ்சித்தின் செய்கை போட்டியாக வந்துவிடும் என்று நினைப்பதாலும் இருக்கலாம். அல்லது தனது அனுபவத்தில் இது சரிப்பட்டு வராது என்று புரிந்துகொண்டதாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவரது முடிவு சரியானதே. ரஞ்சித், ஒரு வேகத்திலும் அரசியலுக்குள்ளே களத்தில் நின்று போட்டியிடுவது தரக்கூடிய சிக்கல் குறித்த அனுபவமின்மையாலும் பேசுகிறார்.

பட்டியல் சாதி மக்களின் ஒட்டுமொத்த வாக்கையே பட்டியல் சாதிக் கட்சிகளால் பெறமுடியாது என்னும் நிதர்சனத்தில் இருந்து துவங்கவேண்டும். அப்படியானால், பட்டியல்சாதிக் கட்சிகளைப் போலவே தத்தம் சாதிகளின்மீதுள்ள பிடிப்பால் தம் சாதிக் கட்சிக்கும் தம் சாதியினருக்கும் வாக்களிக்க விரும்பும் மக்களின் வாக்குகளைப் பெறுவது எப்படி? சாதி பார்த்து வாக்களிக்கக்கூடாது என்பவர்கள் பட்டியல் சாதிக்கு வாக்களிக்கலாம். ஆனாலும் மற்ற கட்சிகளைவிட்டுவிட்டு அவர்கள் பட்டியல் சாதிக்கட்சிகளின் பொது வாக்காளருக்குத்தான் வாக்களிப்பார் என்று சொல்லமுடியாது. தொடர்ச்சியாக மற்ற சாதியினர் மீதான விமர்சனங்களை வைத்துவிட்டு (ஒருவேளை அது மிக நியாயமானது என்றபோதும்) வாக்கரசியல் என்று வந்ததும் மற்றசாதியினர் அதை மறந்துவிட்டு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ரஞ்சித்தின் வேகத்தில் இதெல்லாம் அவருக்கு எளிதாக வெல்லப்படக்கூடிய ஒன்றாகத் தோன்றுகிறது. திருமாவளவனின் அரசியல் அனுபவத்தில் இதைமீறித் தனியே நின்று வெற்றி பெறுவது அத்தனை எளிதானதல்ல என்று தோன்றுகிறது.

கூடவே ரஞ்சித், அம்பேத்கரை ஆர் எஸ் எஸ் சொந்தம் கொண்டாடவே முடியாது என்று சொல்லி இருக்கிறார். நியாயமாக இப்படிச் சொல்லவேண்டும். இதை அரவிந்தன் நீலகண்டன் ஹிந்துத்துவ அம்பேத்கர் புத்தகத்திலேயே சொல்லிவிட்டார். சொந்தம் கொண்டாட ஒருவேளை முடியுமென்றால் ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்துவ அமைப்பால்தான் முடியும். நிச்சயம் மற்ற மதங்களால் முடியாது. ஹிந்து மதம் / அமைப்புகளுடனாவது அம்பேத்கர் தொடர்ச்சியான விவாதத்தில் இருந்தார். எனவே ஆர் எஸ் எஸ்ஸாவது உரிமை கொள்ளமுடியும் என்பதுதான் சரி. மற்ற மதத்தினரே அம்பேத்கரைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது ஹிந்து அமைப்புகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அது ரஞ்சித் போன்றவர்களைக் கலவரப்படுத்தும்போது, கோபப்படுத்தும்போது, அது மிகச்சரியானது என்பதையே காட்டுகிறது.

செய்தி: https://tamil.news18.com/news/tamil-nadu/politics-should-be-dealt-accordingly-thirumavalavan-replies-to-pa-ranjith-77289.html

ரஞ்சித் பேசிய வீடியோ: https://youtu.be/844Vu3F1Z7E?t=685

Share

நிமித்தம் – எஸ்.ரா.வின் நாவல்

நிமித்தம் நாவல்

எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசிக்கும் எஸ்ராவின் நாவல் இது. அரைகுறையாகக் காது கேட்கும் ஒருவனது வாழ்க்கை. மிக நீண்ட வாழ்க்கை. அவனுக்கு மட்டுமல்ல, வாசிக்கும் நமக்குமே அந்த அலுப்பைக் கடத்திவிடக்கூடிய ஒரு நாவல்.

தேவராஜுக்கு முதல் அத்தியாயத்திலேயே கல்யாணம் என்று வருகிறது. கடைசி அத்தியாயத்தில் கல்யாணம் நடக்கிறது. இடைப்பட்ட நானூற்றுச் சொச்சம் பக்கங்களில் அவனது திருமணம், கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக எப்படியெல்லாம் தள்ளிப்போகிறது, அவன் எத்தனை பெண்களை சந்தித்தான், அவனது வாழ்க்கையில் அவனுக்கு நேர்ந்த தோல்விகள் என விரிகிறது

தேவராஜுக்கு அன்பு செலுத்த யாரும் இல்லை. அப்பா முதல் அம்மாவிலிருந்து உறவினர்கள் எல்லோரும் அவனை அன்புக்கு லாயக்கற்றவர்களாகவே பார்க்கிறார்கள். இடையில் யாரேனும் அவனுக்கு அன்பைத் தந்தால் அவர்களுடனும் ஒரு முறிவு ஏற்பட்டு வருகிறது. கடைசி வரை அவனுடன் நட்பாக அன்பாக இருப்பது அவனது நண்பன் ராமசுப்பு மட்டுமே. இப்படி அன்புக்காகவும் ஒரு பெண் துணைக்கும் ஏங்கி தெரியும் தேவராஜுவின் கதை இது.

ஆனால் நான் இந்த நாவலை எஸ்ரா என்னும் சுவாரஸ்யமான கதைசொல்லியின் ஒரு கதைத் தொகுப்பாகவே பார்க்கிறேன். தொடக்கம் முதல் இறுதிப் பக்கம் வரை புதிது புதிதாக கதாபாத்திரங்கள் வந்தவண்ணமுள்ளன. அவர்கள் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பெங்கும் விரியும் இக்கதைகள் அதன் வழியே ஒரு சித்திரத்தைக் கொண்டு வருகின்றன. இந்தக் கதைகள், தொன்மக் கதைகளிலிருந்து பேய்க் கதைகள் என நீண்டு, உண்மைக் கதைகளின் சாயல் கொண்ட கதைகள் என்பது வரை செல்கின்றன. ஒருவகையில் இந்த நாவலில் இக்கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆனால் இக்கதைகளின் சுவாரசியம், நாவலின் மையக் கதையைவிடப் பெரியதாக உள்ளது.

நாவலின் இடையிடையே தெறிக்கும் அரசியல் குறிப்புகளும் வேண்டுமென்றே நுழைக்கப்பட்டதாக உள்ளது. அந்த அரசியல் குறிப்புகளின் வழி நமக்கு வெளியாகும் கதாபாத்திரம் ஒன்றிரண்டுதான். அந்தக் காலகட்டத்தின் வழியே நாவல் நம்மை இழுத்துக் கொள்ள இந்த உத்தியைக் கடைப்பிடித்திருக்கிறார் போலும்.

எப்படியாவது தேவராஜுக்குக் கல்யாணம் ஆகி விடாதா அல்லது நாமே ஒரு பெண் பார்த்துக் கட்டி வைத்துவிட்டு விட மாட்டோமா என்று நாமே சொல்லும் அளவுக்கு அவனுக்குப் பெண் துணை தொடர்பான தோல்விகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவன் வாழ்க்கை அங்கும் இங்கும் என ஊர் ஊராக அலைபாய்கிறது. ஒருவகையில் அவனுக்கு எதிலும் நிறைவு என்பது ஏற்படுவதில்லை. இறுதிவரை.
எஸ்ராவின் நாவல்களில் பொதுவாக எனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை என்பது, இப்படியான அல்லது எப்படியாவது ஒரு தொடர்பு கொண்டு வரும் கதைகளின் நுழைப்புதான். ஆனால் இந்த நாவலில் அப்படி வரும் காட்சியமைப்புகள் நாவலின் ஆதாரத்தை விட வெகு சுவாரஸ்யமாக உள்ளன. எனவே இந்த நாவலைப் படிப்பது மிக ரசனையாக உள்ளது.

நாவலில் வரும் பல உபகதைகள் மிகவும் ரசித்த தக்கவையாக உள்ளன. இறுதிக்காட்சிகளில், வாழ்வாங்கு வாழ்ந்த அந்த பண்ணையார் நாயுடுவின் வீழ்ச்சி… ஒரு கதை போல அறிமுகமான நபர், தலைமுறைகள் கழிந்து வீதிகளில் வரும்போது திக்கென்றுதான் உள்ளது.

ஒரு கட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார், ஒரு சாதாரணன் வாழ்ந்ததற்கான தடயங்கள் எந்த வகையிலும் இருப்பதில்லை என்று. இது குறித்து நான் பலமுறை யோசித்திருக்கிறேன். அந்த யோசனைக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒன்றுமில்லாதது தரும் எல்லாமுமான சிந்தனை எப்போதும் ஒரு பயத்தை அளிக்கக் கூடியது. இந்த நாவலின் சில கதைகள் அந்தப் பயத்தைச் தொட்டுச்சென்றன.

Share

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத்தொடர்ச்சி மலை பார்த்தேன். தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. சந்தேகமே இல்லாமல் மிக முக்கியமான திரைப்படம். கொஞ்சம் அவுட் டேட்டட் என்ற போதிலும் கூட, படம் எடுத்த விதம் கொஞ்சம் பழைய மாதிரி என்பதைப் போல இருந்தாலும் கூட, முக்கியமான திரைப்படமே. முதல் அரை மணி நேரத்துக்கும் மேலாக திரைப்படம் அந்த மலைவாழ் எளிய மனிதர்களின் வாழ்வைச் சித்தரிப்பதில் கழிகிறது. அது எடுக்கப்பட்ட விதம் மிக அற்புதமாக உள்ளது. படத்தில் முதல் தென்றல் வீசும் காட்சி என்று படத்தின் கதாநாயகி வரும் காட்சியைச் சொல்லலாம். அழகு. மண் சார்ந்த அழகு. கண்களிலேயே அவர் பேசுகிறார். இரண்டாவது தென்றல் வீசிய காட்சி இளையராஜாவின் ‘கேக்காத வாத்தியம்’ பாடல் வரும்போது. மெஸ்மரிசம் செய்யும் பாடல்.

மிக மெதுவாக வாழ்க்கையை மட்டுமே சொல்லிக் கொண்டு செல்லும்போது, அந்த ஏலக்காய் சிதறும் காட்சி மிகப் பெரிய பதற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுபோன்ற படத்தை ஆயிரம் பேர் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று இதைத் தயாரித்த விஜய் சேதுபதியைப் பாராட்ட வேண்டும். இயக்குநர் லெனின் பாரதி தீவிரமான கம்யூனிஸ்ட். ஆனால் இந்தப் படத்தில் எவ்விதச் சாய்வும் இன்றி மிக நியாயமாகவே படத்தை எடுத்திருக்கிறார். எந்த ஒரு முதலாளியையும் மோசமானவராக சித்தரிக்கவில்லை என்பது பெரும் ஆறுதல். அவர்களின் வாழ்க்கை மற்றும் சூழல் நியாயங்களைப் பொருத்து அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறார். அதைவிட நம்பிக்கை துரோகம் செய்பவராக ஒரு கம்யூனிஸ்ட் காட்டப்படுகிறார். அவர் இன்னொரு கம்யூனிஸ்ட்டால் கொல்லப்படுகிறார். மிக நல்லவரான கங்காஅணி, ஒரு இஸ்லாமியர். இந்தப் படத்தில் மத ரீதியான சீண்டல்கள் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலைவாழ் மனிதர்களின் மிக எளிய ஆன்மிகம் படம் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே இயக்குநரை இன்னுமொருமுறை பாராட்ட வேண்டும்.

இதுபோன்ற படங்களின் இன்றைய மதிப்பு என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இந்தப் படம் தமிழில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படமாகவும் மாறப்போவதில்லை. அதேபோல் இந்தப் படம் சமீபத்திய இடைநிலை மாற்றுத் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் ஓரளவு வசூலுடன் கூடிய நல்ல பெயரையும் பெறப்போவதில்லை. அதேபோல் இது ஒரு வணிக நோக்கப் படமாக இருக்கவே முடியாது. அப்படியானால் இதுபோன்ற திரைப்படங்களின் வாழ்வுதான் என்ன? பாராட்டுக்காக வா? யோசிக்க வேண்டிய விஷயம் இது. இதுபோன்ற திரைப்படங்களது இயக்குநர்களின் முதல் படமும் கடைசி படமும் ஒன்றாகவே அமைந்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழல் இங்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.

மலையாளத்தில் இதுபோன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. 2018ல் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பார்க்க உண்மையிலேயே கொஞ்சம் பாவமாகவும் பரிதாபமாகவும்தான் இருக்கிறது. இந்தக் காலகட்டங்களை நாம் என்றோ திரை உலகில் கடந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். இந்தப் படம் பேசும் அந்தச் சிறிய கால மாற்றமும் அதில் நிகழும் தொழிலாளர்களின் அவலமும் மிக முக்கியமானதுதான். பதிவு செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அது ஒரு திரைப்படமாக வரும்பொழுது அது ஒரு பதிவு என்ற அளவில் மட்டுமே சுருங்கி விடுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இதில் வணிகமும் உள்ளது. திரைப்படத்தில் உள்ள செலவு மற்றும் வரவு சார்ந்த கணக்குக்குள் இப்படங்கள் வர முடியாது எனும்போது, இதுபோன்ற திரைப்படங்களை விவரணைப் படங்களாகவே பதிவு செய்துவிடுவது இன்னொரு வகையில் புத்திசாலித்தனமானது என்று நினைக்கிறேன்.

இது அத்தனையையும் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை எடுத்த குழு யோசிக்காமல் இருந்திருக்காது. அதையும் மீறி எடுக்கிறார்கள் என்றால் திரைப்படத்தின் மீதான அவர்களது வெறியையும் காதலையும் குறிக்கோளையும் புரிந்துகொள்கிறேன் அவர்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்.

Share

விஜய் சேதுபதி

அந்திமழை நவம்பர் 2018 இதழ் – கிட்டத்தட்ட சினிமா சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிச் சிலர் சிலாகித்திருக்கிறார்கள். அத்தனை பேருமே அவருக்குப் பிடித்தவர்கள், அவரைப் பிடித்தவர்கள். எனவே விமர்சன பூர்வமாக ஒன்றும் இல்லை. விஜய் சேதுபதியின் வளர்ச்சி, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றுதான். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கைத்தட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு நடிகராகவும் கைத்தட்டு பெற்று, கமர்ஷியல் வேல்யூவும் பெறமுடியும் என்று பல காலங்களுக்குப் பிறகு நிரூபித்தவர். (முதலில் சிவாஜி கணேசன் இதைச் செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். பின்னர் கமல்.) அதிலும் பல கதாநாயகர்கள் செய்யத் தயங்கும் திரைப்படத்தையெல்லாம் இவர் செய்தார். மலையாளத்தில் மிகப் பல காலமாக, தொடர்ச்சியாக இது நிகழ்ந்து வருகிறது. தமிழில்தான் வறட்சி.

தொடக்க காலத்தில் விஜய் சேதுபதி சில தேவையற்ற படங்களை நடிக்கிறார் என்று நான் சொன்னபோது, ஞாநி போன்றவர்கள், மிக ஆக்ரோஷமாக பதில் சொன்னார்கள். வேடத்தில் சிறியது பெரியது என்றில்லை என்ற தத்துவத்துக்குள் போனார்கள். ஆனால் நான் சொன்னதைத்தான் விஜய் சேதுபதி புரிந்துகொண்டார் என்றே நம்புகிறேன். இனியும் ரம்மி போன்ற படங்களுக்கு விஜய் சேதுபதி தேவையில்லை. அப்போதே தேவையில்லைதான். விஜய் சேதுபதி ஒருவழியாகத் தனக்கான இடம் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். இங்கேதான் அவருக்கான பிரச்சினையும் இருக்கிறது.

தீவிர அரசியல் பார்வையுடன் விஜய் சேதுபதி பேசுகிறார். இது பிற்காலத்தில் ஒரு நடிகருக்குரிய தேவைக்கு எதிராக அமையலாம். இது பற்றி அவருக்குக் கவலை இல்லை என்பதே அவரது கருத்துகளும் உடல்மொழியும் உணர்த்துகின்றன. ஒருவகையில் இந்த வெளிபப்டைத்தன்மையும் நமக்கு நல்லதுதான். விஜய் சேதுபதி கைக்கோர்க்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கும் ஒரு நிறம் இருப்பதைப் பார்க்கலாம். அது அவர்களை ஒன்றிணைக்கிறது என்பது வெளிப்படை. இதற்கு முன்பு திராவிட இயக்கம் திரையில் கோலோச்சிய காலத்தில் இப்படி சில நடிகர்கள் இருந்தார்கள். இடையில் கொஞ்சம் தளர்ந்தது. இப்போது விஜய் சேதுபதி மூலமாக அது முற்போக்கு அரசியலாக மாறியிருக்கிறது. இதன் இன்னொரு கோணம் இனி வரும் நாள்களில் வெளிப்படலாம்.

அந்திமழை இதழில் பேசிய அத்தனை பேரும் விஜய் சேதுபதியின் உடல் நலம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது, அவர் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது. நான் சொல்ல நினைப்பது, அவர் தன் உடலில் அக்கறை எடுத்துக்கொள்ள வேணுடும் என்பது. இல்லையென்றால் விரிவடையும் உடலே அவருக்குப் பெரிய எதிரியாக அமையும். அதேபோல் வெரைட்டியாக நடிக்க அவருக்கு வரவில்லை. வந்து மிகச் சில ஆண்டுகளே ஆன நிலையில், இதை ஒரு புகாராகச் சொல்ல அவசியமில்லை. போகப் போக இவையெல்லாம் சரியாகிவிடும். ஆனாலும் இன்றைய நிலையில் இவர் ஒரே மாதிரியாகவே எல்லாப் படங்களிலும் நடிக்கிறார் என்பது சரியான கருத்துதான்.

விஜய் சேதுபதியைக் கொண்டாடுபவர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் கொண்டாடவில்லை. ஞாநி போன்றவர்களை இப்போது புரிந்துகொள்கிறேன். அதேபோல் விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள்கூட எதிர்காலத்தில் அவரது நடிப்புக்காக இல்லாமல் விமர்சிக்கத் துவங்கலாம். ஒரு புள்ளி, அதன் எதிர்ப்புள்ளியை உருவாக்கியே தீரும். இது சரியா தவறா என்பதைவிட, இதுதான் நிகழும். யதார்த்தம்.

Share

சர்கார் (தமிழ்)

சர்க்கார் –

முதலில் சில பாஸிடிவ்வான சிலவற்றைச் சொல்ல ஆசைதான். ஆனால் எத்தனை யோசித்தாலும் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. விஜய் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். இன்னொன்றைச் சொல்லவேண்டுமென்றால் பழ.கருப்பையா, ராதாரவி தேர்வு. மிக முக்கியமான இன்னொன்று, ராதாரவி சொல்லும் வசனங்கள். இவை நிச்சயம் ஜெயமோகனின் பங்களிப்பாகவே இருக்கவேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. இதற்கு மேல் தேத்தமுடியாது.

மற்றபடி

வலுவே இல்லாத கதை. அதனால் எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் அலைபாயும் திரைக்கதை.

அரசியல் ஒரு கதையென்றால், கூடவே நடிகர் விஜய்யின் முதல்வர் கனவு இன்னொரு கதை. இதனால் தமிழ்நாட்டில் நடந்த எல்லாவற்றையும் எங்கேயாவது எப்படியாவது தூவ வேண்டிய நிர்ப்பந்தம். கந்துவட்டி, ஜல்லிக்கட்டு, நீயுட்ரினோ என வாயில் வந்ததையெல்லாம் யார் யாரோ சொல்கிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு முன்பு பதவி ஏற்பு ரத்து, ஒரு ஓட்டு கள்ள ஓட்டானதால் அதற்கு மறு ஓட்டு உரிமை தரப்படுவதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மறுதேர்தல் என்றெல்லாம் நம்பவே முடியாத கதை. முதல்வனும் நம்பமுடியாத கதைதான். ஆனால் அதில் தெளிவான ஓட்டமும் திரைக்கதையும் இருந்தன. முதல்வன் போல ஒரு படம் எடுப்பது அத்தனை எளிதில்லை என்று நிரூபிக்கிறது சர்கார். கூடவே விஜய்யின் அரசியல் ஆசையும் சேர்ந்துகொண்டதால் தெலுங்குப் படம் போல போகிறது.

இதற்கிடையில் விஜய்யின் கமர்ஷியல் ஹீரோ பிம்பத்தையும் கட்டிக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. குப்பத்துக்குப் போய் பேசி மீனவன் என்கிறார். உடனே நம்பி ஓடி வருகிறார்கள். (அதிலும் அந்த தக்காளி விளக்கம் ஐயையோ.) ஆளும் கட்சி கூட்டத்துக்குப் போயே பேசுகிறார். நாம் திடீரெனக் கனவு காண்போமல்லவா, ஜெயலலிதா நாளைக்கே ஜெயிலுக்கு போனால், கருணாநிதி கைதானால் என்று, அதை அத்தனையும் விஜய் செய்கிறார். ஆளும்கட்சியின் முதல்வர் மரணம் அடைந்தாலும் 15 நாளில் தேர்தல் நடக்கிறது. படத்தின் போக்குக்கு இது முக்கியம் இல்லைதான். ஆனால் இப்படிப் பல நெருடல்கள்.

ஒரு ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டால் பேலட் ஓட்டு பதிவு செய்யப்படவேண்டும் என்பது விதி. தேர்தலின் முடிவில் குழப்பம் இருந்தால் தேவைப்பட்டால் மட்டுமே அந்த பேலட் ஓட்டு கணக்கில் கொள்ளப்படும். விஜய் பேலட் ஓட்டும் போடுவதில்லை என்பதால் என்றாரம்பித்து என்ன என்னவோ செய்து… முடியல. அதிலும் அந்த கொடுமையான க்ளைமாக்ஸ், கற்பனை வறட்சி. ஓட்டுப் பதிவு தொடங்கி பாதி நேரம் பதிவு கழிந்தும்… ரொம்ப ஓவருங்க இதெல்லாம். தாங்கமுடியலை.

பல முக்கியமான காட்சிகளில் விஜய் என்னவோ போல் பேசி வெறுப்பேற்றுகிறார். அதிலும் ஆளும்கட்சி அலுவலகத்துக்குள்ளே போகும் காட்சி (ஆமாம், இப்படி ஒரு காட்சி!) கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும்போதே விஜய் அடிதடியில் இறங்கி அக்காட்சியை காலி செய்கிறார். சாதாரணமாகப் பேசுவதே இல்லை. மீண்டும் தேர்தல் என்பதைக் கூட அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பொங்க மட்டுமே பேசுகிறார் விஜய். இப்படியே போனால் பிற்கால சிவாஜியாகிவிடுவார் என்று நினைக்கிறேன்.

படத்தில் எனக்குப் பிடித்த ஒரே காட்சி, வரலட்சுமி பழ.கருப்பையாவுக்கு மருந்து கொடுக்கும் காட்சிதான். அதற்குப் பின்னர் தெலுங்குப் படமாகிவிட்டது.

வலுவற்ற கதை, வலுவற்ற திரைக்கதை, திக்கின்றி அலையும் காட்சிகள். சீரியஸான காட்சியில் சொதப்பும் விஜய். இதுதான் சர்க்கார்.

Share

Halasyan

ஹாலாஸ்யனின் கட்டுரைகள்

பொதுவாகவே அறிவியல்/சூழலியல் தமிழ்க் கட்டுரைகளை (ஆங்கிலக் கட்டுரைகளையும்!) நான் அதிகம் வாசிப்பதில்லை. முதலும் கடைசியுமான காரணம், இவை என் தலைக்கு மேலே பயணிப்பவை. டிஸ்கவரி சானல்களில் வரும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பதுண்டு. அவை அசரடிக்கும் வகையில் படம்பிடிக்கப் படுபவை. ஒரு மணி நேர ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கவனமும் உழைப்பும் ஆச்சரியமானவை. ஆனால் அவற்றில் எதோ ஒருவகையில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். ஹாலாஸ்யனின் கட்டுரைகளில் அந்த அந்நியத்தன்மை இருப்பதில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள். தமிழர்களின் சராசரி அறிவியல் அறிவை, விருப்பத்தை அறிந்துகொண்ட ஒருவர் எழுதும் கட்டுரைகள்.

தமிழில் பெரும்பாலான அறிவியல் கட்டுரை முயற்சிகள், ஒன்று, குறைவான அறிவியலுடன் பெரும்பாலும் கிண்டல் பேச்சுக்கள் மூலம் அறிவியலை விளக்கப் பயன்படும் கட்டுரைகளாக அமையும். அல்லது, தீவிரமான அறிவியல் கட்டுரைகளாக, அறிவியல் பற்றி ஏற்கெனவே அறிந்திருப்பவர்களுக்கான கட்டுரைகளாக அமையும். என்.ராமதுரை போன்ற சிலர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு கட்டுரைகள் முயன்றிருக்கிறார்கள். ஹாலாஸ்யன் இதில் அடுத்த படி.

விளக்க சில நகைச்சுவைத் தொடர்களை, உரையாடல்களைப் பயன்படுத்தினாலும் அவற்றிலேயே உறைந்துவிடுவதில்லை ஹாலாஸ்யன். அறிவியல் 90% இருக்கவேண்டும் என்பதில் பிறழ்வதில்லை.

மிகச் சரியான தமிழ் வார்த்தைகளைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறார். உருவாக்குகிறார். ஏன் அந்தத் தமிழ் அறிவியல் வார்த்தைகளை உருவாக்குகிறோம் என்பதில் அவருக்கு சரியான புரிதல் இருப்பதால், அவை பெரும்பாலும் சரியான வார்த்தைகளாகவே அமைகின்றன. ஒன்றிரண்டு கட்டுரைகள் எழுதிவிட்டு ஓய்ந்து போய்விடுவதில்லை என்பது முக்கியமாகச் சொல்லவேண்டியது. தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதுகிறார்.

உலக அறிவியல் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ச்சியாகத் தமிழில் அறிமுகப்படுத்தும் ஆர்வமும் உழைப்பும் இருக்கிறது. சமீபத்தில் எழுத வந்த இளைஞர்களில் (குழந்தை என்றே சொல்லவேண்டும்!) தனிப்பாதை ஒன்றைக் கைக்கொண்டிருக்கிறார் ஹாலாஸ்யன். தொடர்ச்சியாக இதே திக்கில் இவர் எழுதுவாரானால் இவரது ஒட்டுமொத்த தொகுப்பு தமிழுக்கான கொடையாக இருக்கும்.

ஹாலாஸ்யனின் புத்தகங்கள்:

சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, கிழக்கு பதிப்பகம்.
நுண்ணுயிர்கள் ஓர் அறிமுகம், யாவரும்.
எக்காலம், பார்வதி படைப்பகம்.

ஹாலாஸ்யனின் சில கட்டுரைகள்:

http://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal
http://www.valamonline.in/search/label/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
https://solvanam.com/author/halasyan/

ஹாலாஸ்யனின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/yes.eye.we.yea

 

 

 

Share

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.

* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.

* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரைக்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.

* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.

* குறைகள் என்று பார்த்தால் –

* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு!

* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.

* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.

* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…

* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல! மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.

* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.

* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.

* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.

பின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.

பின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.

பின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.

Share