Aravindan Neelakandan

முழு நேரமாகக் கட்சிக்காகக் குரல் கொடுத்த அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் காத்திருந்து ஏமாறுகிறார்கள் என்று ஜெயமோகன் எழுதியிருப்பது குறித்து.

இது முற்றிலும் அநியாயமான கருத்து. உள்நோக்கம் கொண்டது.

அரவிந்த நீலகண்டன் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் ஆதரவாக எழுத ஆரம்பித்தது திண்ணையின் தொடக்கக் காலத்திலேயே, அதாவது அப்போதெல்லாம் பாஜக இத்தனை வலுவாக ஆட்சிக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்காத நேரம், ஆர்எஸ்எஸ் பெயரைச் சொன்னாலே அடி விழும் ஒரு காலம், அந்தக் காலத்திலேயே, குறிப்பாக அதற்கும் முன்பாகவே ஆதரித்தார்.

அரவிந்தன் ஆர் எஸ் எஸ் & பாஜகவை ஆதரித்தது அவருடைய சித்தாந்தத்தின்படிதானே ஒழிய எதையும் எதிர்பார்த்து அல்ல.

இன்று பாஜக வலுவாக இந்தியா முழுக்கக் கால் பரப்பி இருக்கும் நிலையிலும் அவர் எந்த ஒரு சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. பெரிய சமரசம் அல்ல, சிறிய சமரசங்களை அதாவது கருத்து ரீதியாகச் சில சமரசங்களை அவர் செய்திருந்தாலே போதும், பல்வேறு விஷயங்கள் அவரைத் தேடி வந்திருக்கும். பல்வேறு எழுத்தாளர்கள் அவரைக் கொண்டாடி இருப்பார்கள். அந்தச் சமரசங்கள் தவறும் அல்ல. எல்லோரும் எல்லாக் கட்சியின் ஆதரவாளர்களும் எல்லா எழுத்தாளர்களும் எப்போதும் செய்வதுதான்.

நானே அவரிடம் அதைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால் அதை ஒருபோதும் செய்யாதவர் அரவிந்தன். இப்படியான ஒருவரை, ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அதனால் பாஜகவை ஆதரித்து அதனால் ஏமாந்தார் என்பதெல்லாம் அநியாயத்திலும் அநியாயம்.

இதை ஜெயமோகன் சொல்லி இருக்கக் கூடாது. பத்மஸ்ரீ அவருக்குத் தரக் கோரிக்கை வைக்கப்பட்ட போது நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்க்கிறேன். பத்மஸ்ரீ விருதுக்குத் தன் பெயர் பரிந்துரைக்கப்பட்டதே தனக்குத் தெரியாது என்று ஜெயமோகன் சொன்னார். அப்படி ஒரு வாய்ப்பு இருக்குமா என்பதை அவரவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன். என்னால் அதை நம்ப முடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.

அதேபோல் முன்பு ஒரு நண்பர் – இன்று அவர் நட்புப்பட்டியலில் இல்லை – அவர் தெளிவாகச் சொன்னார். என்னிடம் சொன்னார். நீங்கள்தான் அரவிந்த நீலகண்டனுக்கு பத்மஸ்ரீ பட்டம் வாங்கி தர மேலிடத்தில் பேச வேண்டும் என்று. எனக்கு மேலிடத்தில் யாரையும் தெரியாது என்பது தனிக்கதை.

ஆனால் எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. பத்மஸ்ரீக்கு பரிந்துரைக்கும் அறிவிப்பு வந்தது. நான் அரவிந்தனிடம் எத்தனையோ பேசினேன். பத்மஸ்ரீக்கு அப்ளை செய்வோம், கிடைக்க விட்டாலும் பரவாயில்லை என்று சொன்னேன். அரவிந்தன் ஒரேயடியாகவே மறுத்து விட்டார்.

என்னைக் கட்டுப்படுத்த உங்களால் முடியாது, யாருக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பத்மஸ்ரீ தர வேண்டும் என்று பரிந்துரை அனுப்பலாம், நீங்கள் ஏன் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, அப்படி நான் பரிந்துரை செய்தால் என் நட்பில் இருந்து விலகுவேன் என்று கடுமையாகக் கூறினார்.

ஏதேனும் எதிர்பார்ப்பவர் இப்படிச் செயல்பட மாட்டார் அல்லது தன் நண்பனை விட்டு அப்ளை செய்துவிட்டு அந்த பிரச்சினை பெரிதாகும் போது நான் அப்படிக் கேட்கவில்லை என்றாவது சொல்லாமல் இருப்பார். இந்த இரண்டையுமே அரவிந்தன் செய்யவில்லை.

மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் மட்டுமே அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

நிச்சயம் அரவிந்தன் ஏதோ ஒன்று எதிர்பார்த்திருந்தால் இத்தனை வெளிப்படையாக, கொள்கைக்காக எதிர்க்க மாட்டார்.

இப்போதும் இத்தனை சமரசமற்ற தன்மையும் எதிர்ப்பும் அரவிந்தனுக்குத் தேவை இல்லை என்பதே என் நிலைப்பாடு. ஆனால் வழக்கம் போல் அவர் அதைக் கேட்கப் போவதில்லை.

.

Share

Statement of Padaippalar Sangamam

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது!
‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

#
நாள்: 05.10.2025.
#

41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:
___________________

கடந்த 2025, செப். 27ஆம் தேதி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜயின் பிரசாரப் பயணம் கரூர் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. கரூரில் பலியானோருக்கு ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

இந்த நிகழ்வு விபத்தா, சதியா என்ற கோணத்தில் விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்திருக்கிறது. அவரும் தனது விசாரணையைத் தொடங்கிவிட்டார். தவிர கரூர் மாவட்ட காவல் துறையும் தேவையான புலன் விசாரணையை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகளும் விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில்தான், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் 2025 அக். 2ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை சிலர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, கரூர் கொடிய நிகழ்வுக்கு நடிகர் விஜய் தரப்பு மட்டுமே காரணம் என்று தெரிவித்திருக்கிறது. விஜய் ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை கண்டிக்கத் தக்கதே.

போதிய முன்னேற்பாடுகளைச் செய்யாதது, கூட்டத்தை நிர்வகிக்கத் தெரியாதது, நடிகர் என்ற பிராபல்யத்தை முறையாகப் பயன்படுத்தாதது, பொறுப்பின்மை ஆகியவை த.வெ.க. கட்சியின் தவறுகள். குறிப்பாக, நடிகர் விஜய் பொறுப்புள்ள அரசியல் தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் கண்டித்தாக வேண்டும்.

ஆனால், கரூர் துயர நிகழ்விற்கு விஜய் தரப்பு மட்டுமே காரணம் அல்ல என்பதை தமிழகத்தில் உள்ள பெரும்பாலோர் அறிந்தே உள்ளனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது, குறுகிய இடத்தில் அனுமதி அளித்து அரசியல் நோக்குடன் செயல்பட்டது ஆகியவை மாநில அரசின் தவறுகள்.

மேலும், கண்மூடித்தனமாகக் கூடி நெரிசலை ஏற்படுத்திய கட்டுப்பாடற்ற ரசிகர்கள் மற்றும் சினிமா மோகம் கொண்ட மக்களுக்கும் இதில் இணையான பொறுப்பு உண்டு.

இந்த மூன்று தரப்பினரும் நடந்த துயரத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து. இதனையே நாமும் வலியுறுத்துகிறோம்.

ஆனால், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளவர்கள், மாநில அரசின் தவறுகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள். தங்கள் கூட்டறிக்கையை திமுக ஆதரவு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் வெளியிட்டிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்குவதை ஏற்க முடியாது.

இலக்கியம், கலை மற்றும் எழுத்துலகில் ‘தாதா’ மனநிலையுடன் சிலர் செயல்படுவதையும், தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு உதவுவதற்காக கூட்டறிக்கை வெளியிடுவதையும், நடுநிலையான படைப்பாளர்களால் ஏற்க முடியாது.

இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருப்பவர்களில் பெரும்பாலோர், இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட இயலாது.

நாட்டுநலனோ, மக்கள் மீதான நேசமோ இன்றி கூட்டறிக்கை வெளியிட்ட இந்தக் குறுங்குழுவை அன்றே ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டித்தோம். இவர்களின் இயல்பிலேயே ஒருசார்புத் தன்மையும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளும் இருக்கின்றன. எனவேதான், தற்போது இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் தேவை என்னவென்று ஆராய வேண்டியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அக். 3ஆம் தேதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது நீதிமன்றம் இரு தரப்புக்கும் முக்கியமான கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உண்டு.

இந்தத் தருணத்தில், பொதுக்கருத்து உருவாக்கம் மூலமான நிர்பந்தத்தை நீதித்துறை, தனிநபர் விசாரணை ஆணையம், காவல்துறை ஆகியோர் மீது அளிப்பதற்காகவே, திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனரோ என்று சந்தேகிக்கிறோம். இது குற்றம் தொடர்பான விசாரணை நடைமுறையைப் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும், சமூகத்தின் மனசாட்சியாகவும் அரசுக்கு உண்மையை எடுத்துக் கூறும் துணிவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமே ஒழிய, அரசின் தவறுகளை நியாயப்படுத்துபவர்களாக இருந்துவிடக் கூடாது.

எனவே, ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிக்கும் மாநில அரசுக்கும் ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையை உரிய கண்டனத்துடன் நிராகரிக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்தக் குறுங்குழுவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்பதை ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் தெளிவுபடுத்துகிறோம்.

கரூர்த் துயரம் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடைபெற வேண்டும்; குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற விவகாரங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

-தமிழக நலனில் அக்கறையுடன்…

‘திராவிட மாயை’ சுப்பு, சென்னை
இசைக்கவி ரமணன், சென்னை
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சென்னை
பேராசிரியர் ப.கனகசபாபதி, கோவை
கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை
எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஈரோடு
கவிஞர் ரவி சுப்பிரமணியன், சென்னை
கவிஞர் பெ.சிதம்பரநாதன், கோவை
கவிஞர் லட்சுமி மணிவண்ணன், நாகர்கோவில்
பத்ரி சேஷாத்ரி, சென்னை
மோகன் ஜி ஷத்ரியன், சென்னை
பி.டி.டி.ராஜன், சென்னை
இயகோகா சுப்பிரமணியம், கோவை
அர்ஜுன் சம்பத், கோவை
பேராசிரியர் உமையொருபாகன், நாகர்கோவில்
வானவில் க.ரவி, சென்னை
எஸ்.கே.கார்வேந்தன், தாராபுரம்
பா.பிரபாகர், சென்னை
ம.வெங்கடேசன், சென்னை
என்.சி.மோகன்தாஸ், சென்னை
டாக்டர் சீனிவாசகண்ணன், நாகர்கோவில்
பத்மன், சென்னை
நம்பிநாராயணன், சென்னை
வ.மு.முரளி, திருப்பூர்
ஹேமா கோபாலன், சென்னை
மீனாட்சி ஸ்ரீதர், சென்னை
ஜவஹர் வெங்கடசாமி, சென்னை
பாஸ்கர் சுப்பிரமணியம், சென்னை
ஒமாம்புலியூர் ஜெயராமன், சென்னை
ஜெயகிருஷ்ணன் கோபால், சென்னை
முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன், சென்னை
ஆமருவி தேவநாதன், சென்னை
செங்கோட்டை ஸ்ரீராம், சென்னை
சந்திர.பிரவீண்குமார், சென்னை
ஹரன் பிரசன்னா, சென்னை
ஜடாயு, பெங்களூரு
பி.ஆர்.மகாதேவன், சென்னை
சத்தியப்பிரியன், சேலம்
எஸ்.ஜி.சூர்யா, சென்னை
கோதை ஜோதிலட்சுமி, சென்னை
பி.வெங்கடாசலபதி, திருநெல்வேலி
முனைவர் காயத்ரி சுரேஷ், சென்னை
அருட்செல்வப்பேரரசன், திருவொற்றியூர்
கவிஞர் சுரேஜமீ, சென்னை
கவிஞர் உமாபாரதி, சென்னை
கவிஞர் பாபு பிரித்திவிராஜ், நாகர்கோவில்
கவிஞர் சுதே.கண்ணன், நாகர்கோவில்
கவிஞர் அமுல்ராஜ், திருவண்ணாமலை
கவிஞர் மீரா வில்வம், மும்பை
கவிஞர் லட்சுமி சாஹம்பரி, பெங்களூரு
கவிஞர் திருமலைக்கண்ணன், ஸ்ரீரங்கம்
கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், திருப்பூர்
கவிஞர் சிவதாசன், திருப்பூர்
கோவிந்தராஜ், திருப்பூர்
விசாலி கிருஷ்ணன், சென்னை
கமலநாதன். சென்னை
கவிஞர் பால்முகில், சென்னை
கவிஞர் துரைசிங், கன்னியாகுமரி
கவிஞர் இயற்கை, செஞ்சி
கவிஞர் நந்தலாலா, சென்னை
கவிஞர் சுராகி, திருவொற்றியூர்
கவிஞர் மீ.விஸ்வநாதன், சென்னை
கவிஞர் விவேக்பாரதி, சென்னை
கவிஞர் எஸ்.சுவாதி, சென்னை
கவிஞர் தில்லைவேந்தன், சென்னை
கவிஞர் ஹரிஹரன், சென்னை
கவிஞர் முரளிகிருஷ்ணா, சென்னை
கவிஞர் விஜயகிருஷ்ணன், சென்னை
கலைச்செல்வி ஸ்ரீநிவாஸ், சென்னை
வழக்கறிஞர் எம்.விஜயா, சென்னை
ராதா எஸ்.தேவர், சென்னை
ராமசுப்பிரமணியன், சென்னை
ராகவேந்திரா, சென்னை
நடராஜ சாஸ்திரி, சென்னை
ஜனனி ரமேஷ், சென்னை
முனைவர் செ.ஜகந்நாத், மதுரை
சோ.விபின்ராஜ், கன்னியாகுமரி
ஜா.விநாயகமூர்த்தி, விழுப்புரம்
அசோக்ராஜ், கும்பகோணம்
சே.வெங்கடேசன், திருவண்ணாமலை
பத்மா சந்திரசேகர், சென்னை
பொன்.மூர்த்திகன், பறங்கிப்பேட்டை
நிழலி, பெரம்பலூர்
பாவலர் கா.நேசன், திருகளப்பூர்
ச.மோகன், பெரம்பலூர்
தேவரசிகன், கும்பகோணம்
ஜி.பி.இளங்கோவன், கும்பகோணம்
மா.செல்வகுமார், கல்லூர், கும்பகோணம்
கே.மணிமாறன், சென்னை
திருமை பா.ஸ்ரீதரன், சென்னை
பி.வீரராகவன், சென்னை
பேராசிரியர் ஜோஸபின்மேரி, பாளையங்கோட்டை
பேராசிரியர் பாலசுப்பிரமணியம், திருநெல்வேலி
வி.வி.பாலா, சென்னை
விதூஷ், சென்னை
கே.ஜி.ஜவர்லால், சென்னை
முனைவர் சடகோபன், சென்னை
முனைவர் தர்மசேனன், சென்னை
சக்திவேல் ராஜகுமார், சென்னை
ஜெயந்தி நாகராஜன், சென்னை
கே.கந்தசாமி, கோவை
புதுகை பாரதி, புதுக்கோட்டை
தசரத் ஷா, காஞ்சிபுரம்
அருண்பிரபு, சென்னை
ஆனந்த்பிரசாத், சென்னை
துக்ளக் சத்யா, சென்னை
ஆர்.ராமமூர்தி, சென்னை
குமரேசன், சென்னை
திவாகர், சென்னை
தேவப்பிரியா, சென்னை
ஆண்டனி, சென்னை
அரவிந்தா நாஞ்சில், சென்னை

மற்றும் பலர் (200க்கு மேற்பட்டோர்)

#
##

(இந்த அறிக்கையை ஆதரிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் தங்களை பின்னூட்டத்தில் இணைக்கலாம்).


ஒரே ஓர் அறிக்கை படைப்பாளர் சங்கமம் சார்பாக. கதறல் ஆரம்பம்.

இவர்களுக்குள்ளே இப்படி ஒரு நெட்வொர்க்கா என்று அங்கலாய்ப்பு.

முன்பு ஒரு முறை காலச்சுவடு இதழில் சுரேஷ்குமார இந்திரஜித் ஒரு பேட்டியில், ‘இப்போதெல்லாம் பாஜக ஆதரவுக் குரல்கள் எல்லாம் கேட்கின்றன’ என்ற ரீதியில் அங்கலாய்த்ததற்கு இணையான, கருத்துச் சுதந்திரப் பீராய்வு தொடக்கம்.

அத்தனை பேரும் பாஜக ஆதரவாளர்கள் என்று ஒரு கண்டுபிடிப்பு. இதே கண்டுபிடிப்பு, போலி முற்போக்காளர்கள் காய்த்து ஊற்றிய அறிக்கையில் ‘அத்தனை பேரும் அர்பன் நக்ஸல்கள்’ என்று கண்டுபிடிக்கத் தெரியவில்லை.

’இந்த அறிக்கைக்கு நன்றி, எத்தனை பேர் பாஜக ஆதரவாளர்கள் என்று கண்டுகொண்டோம்’ என்று உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கமெண்ட். அதே வெங்கயாத்தைத்தான் நாங்களும் காய்ச்சி ஊற்றிய அறிக்கையில் கண்டுகொண்டு இதனை வெளியிட்டிருக்கிறோம்.

இதில் சிகரம் வைத்த திராவிட மாடல் கமெண்ட் ஒன்று உண்டு. அத்தனை பேரையும் விட்டுவிட்டு, அர்ஜூன் சம்பத் எழுத்தாளரா என்ற கேள்வி. ஏன் அர்ஜூன் சம்பத்தை மட்டும் கேட்கவேண்டும்? நூல் நூல் என்று சொல்லிக்கொண்டே, உண்மையில் திராவிட மாடலுக்கு உறுத்துவது என்ன ஜாதி வெறி என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை என்பதற்கு இந்த கமெண்ட் இன்னும் ஓர் ஆதாரம்.

அந்த காய்ச்சி ஊற்றிய அறிக்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இருக்கலாமாம், ஆனால் நேர்மையான அறிக்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் வரக் கூடாதாம்! எரியட்டும் எரியட்டும்.

Share

Let us Ulaa

உலா போக நீயும் வரணும்

உலா ப்ரவுசரை இரண்டு வாரங்களுக்கு முன்பே நான் நிறுவி இருந்தாலும் அதைப் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. காரணம், க்ரோம் தரும் க்ளவுட் வசதி, அது தரும் கடவுச் சொல் பதிவு வசதி, ப்ரவுசிங் ஹிஸ்டரி எனப் பல.

உலாவில் ப்ரவுஸிங் ஹிஸ்டரியை பிசி மூலம் இறக்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மொபைலில் இல்லை. இன்று பொறுமையாக அமர்ந்து, அனைத்து ப்ரவுஸிங் ஹிஸ்டரியையும் க்ரோமில் இருந்து உலாவுக்கு லேப் டாப் மூலம் மாற்றினேன்.

அடுத்து பாஸ்வேர்ட். எத்தனையோ தளங்களுக்கான பாஸ்வேர்ட் எனக்குத் தெரியாது. அனைத்தும் க்ரோமில் பதியப்பட்டு இருக்கின்றன. அனைத்தையும் இரண்டடுக்குப் பாதுகாப்பு மூலம் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இவை அனைத்தையும் எப்படி உலாவில் கொண்டு வருவது?

க்ரோம் நல்லவன். அனைத்து பாஸ்வேர்டையும் இம்போர்ட் செய்யும் வசதி கொடுத்திருக்கிறான். அதை இறக்கி, உலாவில் ஏற்றினேன். இப்போது உலா ப்ரவுஸிங் ஹிஸ்டரி மற்றும் பாஸ்வேர்ட்களுடன் தயார்.

உலாவில்தான் இரண்டு வாரமாக மொபைலில் உலவுகிறேன் என்றாலும், இன்றுதான் லேப்டாப்பில் உலவினேன். முதல் அனுபவம் எப்படி? அட்டகாசம். அழகான வடிவமைப்பு. கண்ணை உறுத்தாத வடிவம். தொடர்ந்து உலாவைப் பயன்படுத்த உத்தேசம்.

இதன் பாதுகாப்பு பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் டெக்கி அல்ல. ஆனால், ஸோஹோவின் மீதும் ஸ்ரீதர் வேம்புவின் மீதும் நம்பிக்கை உள்ளதால், நிச்சயம் பாதுகாப்புப் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன். இப்படி நம்புபவர்கள் நீங்களும் உலாவுக்கு வாருங்கள்.

என்ன ஒரே ஒரு பிரச்சினை என்றால், என்னை அறியாமல் என் கண்ணும், மௌஸும் க்ரோமைத் தேடுகின்றன. 20 ஆண்டு கால நட்பு!

பின்குறிப்பு: நான் போட்ட அரட்டை போஸ்ட்டைப் பார்த்து அரட்டையில் என்னைத் தொடர்புகொண்ட 200க்கும் மேற்பட்ட நல்லுல்லங்களுக்கு நன்றி. என்ன, பலரை யாரென்றே எனக்குத் தெரியவில்லை. எனவே அரட்டையில் உங்கள் புகைப்படத்தையும், ஃபேஸ்புக்கில் எந்தப் பெயரில் உலவுகிறீர்களோ அந்தப் பெயரையும் வையுங்கள். அப்போதும் எனக்கு ஞாபகம் வராது என்பது என் சாபம். 🙂

Share

Hridayapoorvam Malayalam

ஹ்ருதயபூர்வம் (M) – ஃபீல் குட் மூவியாக எடுக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு சீனையும் ஃபீல் குட்டாக எடுப்பதாக நினைத்துக் கொண்டு சாவடித்து விட்டார்கள். இதில் மோகன்லால் ஃபீல் குட் முகத்தை படம் முழுக்க வைத்திருக்கிறார். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் ஒரே பாவத்தைப் படம் முழுக்க எப்படிப் பார்ப்பது? காட்சிகள் மெல்ல நகர்கின்றன. ஒரே போன்ற காட்சிகள், வளவள வசனம். போதாக்குறைக்கு மகளாக வரும் பெண்ணை மோகன்லால் காதலிக்க முயல்வது போன்ற காட்சிகள் எல்லாம் படு அபத்தம். செயற்கைத்தனம். எரிச்சல் தரும் ஒவ்வாமை. கதையே இல்லாமல் ஒரு வழியாகப் படத்தை முடித்து வைத்தார்கள். ஆங்காங்கே சில காமெடிக் காட்சிகள் லேசாகப் புன்னகைக்க வைக்கின்றன என்றாலும், இந்தக் கண்றாவி எப்படி 100 கோடி சம்பாதித்தது என்று தெரியவில்லை.

படத்தில் கொஞ்சமாவது ஃபீல் குட்டாக இருந்த காட்சிகள் என்றால், தொடக்கத்தில் மோகன்லால் கடையில் வரும் காட்சிகளும், ஒழிச்சோடிப் போன மோகன்லாலின் மணப் பெண் போனில் அட்டகாசமாக நடித்துப் பேசும் காட்சிகளும்தான்.

Share

Sumathi Valavu

Sumathi Valavu (M) – நான் அபுதாபி‌ போயிருந்தபோது (இன்னுமா இந்த ரீல் அந்து போகலை?) சையாரா திரைப்படத்திற்குப் போயிருந்தோம். அப்போதுதான் சுமதி வளவு என்ற மலையாளத் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்ததைக் கவனித்தேன். ஆஹா இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று வருத்தத்துடன் சையாரா பார்த்து விட்டு வந்தேன்.

அன்று மட்டும் சுமதியைப் பார்த்திருந்தால் அன்றே என்னை பேக் செய்து விமானத்தில் வீட்டுக்கு அனுப்பி இருப்பார் ஜெயக்குமார். ஏனென்றால் அந்தக் கொடுமையான சுமதி வளவு படத்தை இன்றுதான் பார்த்தேன்.

பேய்ப் படமாகவும் இல்லாமல் காதல் படமாகவும் இல்லாமல் மொத்தத்தில் ஒரு படமாகவே இல்லாமல் கொடூரமாக இருக்கிறது. திடீரென்று இயக்குநருக்கு யாரோ இது பேய்ப் படம் என்று நினைவூட்ட, அதைச் சில காட்சிகள் காண்பிக்கிறார். பின்னர் காதல் படம் என்று யாரோ சொல்ல அதைச் சில காட்சிகள் காண்பிக்க, இரண்டுமே எந்த ஆழமும் இல்லாமல், ஒரு காட்சி கூட நன்றாக இல்லாமல், என்னை கதற வைத்து விட்டார்.

யாரும் அந்தப் பக்கம் போகாதீர்கள்.

Share

Kanthara The Legend – Chapter 1

காந்தாரா தி லிஜென்ட் சாப்டர் 1‌ – முதல் பாதியைப் பார்த்துவிட்டு என்னவோ விளையாட்டாக எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காந்தாரா முதல் பாகத்திற்கு இது திருஷ்டிப் பொட்டு என்ற அளவில் கூட யோசித்தேன். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் மிரட்டி விட்டது.

இடைவேளைக்குப் பிறகான 15 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் புல்லரிப்பு. என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு எழுத்து, எத்தனை குலிகா!

கிளைமாக்ஸில் வர வேண்டியதை இப்போதே காட்டிவிட்டார்களே, இனி கிளைமாக்ஸில் என்ன செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, மிரள வைக்கும் ஒரு திருப்பம், அதைத் தொடர்ந்து அசர வைக்கும் ஓர் உச்சகட்டக் காட்சி.

உண்மையில் தொடக்கக் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை வேறொரு உலகத்தில் நம்மைச் சஞ்சரிக்க வைத்து விட்டார்கள். தேர் விரட்டல் காட்சிகள் பார்க்கும்போது கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் அதை எடுத்த விதம் அட்டகாசம்.

மிக மோசமான கன்னடப் படங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட பாகுபலியை நெருங்கும் ஒரு திரைப்படத்தை இரண்டு காந்தாராவிலும் நமக்கு கன்னடத் திரையுலகம் காட்டி இருக்கிறது. அதிலும் உள்ளடக்க ரீதியாகப் பார்த்தால் பாகுபலியைக் காட்டிலும் இந்தியத் தன்மை கொண்ட சிறப்பான திரைப்படம் காத்தாரா.

கடவுள் நம்பிக்கையும் புராண நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு இந்தப் படம் இடைவேளைக்குப் பிறகு பேரனுபவமாக இருக்கும். இசையும் ஒவ்வொருவரின் நடிப்பும் கேமராவும் ஒவ்வொன்றும் உச்சம்.

தனிப்பட்டுச் சொல்ல வேண்டியது இந்த குல்சன் தேவையா பற்றி. சாதாரண ஒரு நடிகராகத் தோன்றி அவர் காட்டிய மிரட்டல் வாய்ப்பே இல்லை.

ரிஷப் செட்டி நடிப்புக்கு இரண்டாம் முறை தேசிய விருது தரலாம், தவறே இல்லை.

தியேட்டரில் சென்று பாருங்கள். கன்னடம் புரிந்தவர்களுக்கு இது மறக்க முடியாத படமாக அமையும். மற்றவர்களுக்கும் அப்படியே. கிராஃபிக்ஸ் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பக்தி சார்ந்த திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கே பாடம் எடுத்திருக்கிறார்கள்.

Share

ACER 2024 Report

ACER 2024 அறிக்கை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து:

  • தமிழ்நாட்டு அரசு என்ன செய்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, அது என்ன என் ஜி ஓ அல்லது தனியார் அமைப்புகளை ஆதரித்தாலும் அமைதியாக இருந்துவிட்டு, தமிழ்நாட்டு அரசு மேல் இந்த நான்கு ஆண்டுகளிலும் ஒரு குற்றச்சாட்டுக் கூடச் சொல்லாமல் தந்திரமாக அமைதியாக இருந்துவிட்டு, இன்று ஏசர் கல்வி அறிக்கை மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொன்னால், அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும்…
  • ஏசர் அறிக்கை வடநாட்டை உயர்த்திப் பிடிக்கிறதா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நிச்சயம் அது தமிழ்நாட்டைத் தாழ்த்திச் சொல்லவில்லை. ஆதாரம்? எப்படி உங்களிடம் வடநாட்டை அது உயர்த்திச் சொல்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லையோ, அப்படியே என்னிடமும் ஆதாரம் இல்லை. உங்களிடம் இருக்கும் கட் ஃபீலிங் போல எனக்கும் ஒரு கட் ஃபீலிங்கும், கூடவே நேரடி அனுபவுமும் உள்ளன.
  • அரசுப் பள்ளிகளின் நிலை நாற்பதாண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. இதில் திமுக, அதிமுக என்கிற பேதமே தேவையில்லை. இரண்டு கட்சிகளும் மாணவர்களுக்கு பொருளாதார ரீதீயாக (உணவு தருவது, செருப்புத் தருவது, முட்டை, லேப்டாப் போன்ற மிக முக்கியமான முன்னெடுப்புகள்) உதவுவதில் இந்திய அளவில் முன்னோடியாகச் செயல்பட்டார்களே ஒழிய, இவற்றைவிட முக்கியமான கல்வி சார்ந்த முன்னெடுப்பில் தேங்கித்தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

//நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது எங்கள் வகுப்பாசிரியர் நார்மன் சார் செய்த முதல் வேலை, 9ம் வகுப்பில் முழுவாண்டுத் தேர்வில் அனைவரும் உண்மையாக வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பதை வாசித்ததுதான். அதுவரை முழுவாண்டுத் தேர்வு மதிப்பெண்களை நாங்கள் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. பள்ளியிலிருந்து ப்ரொமோடட் என்று ஒரு அஞ்சலட்டை வரும், அவ்வளவுதான். அன்று அவர் வாசித்த மதிப்பெண்கள் பலரைக் கலக்கமடையச் செய்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் 42 பேர் என்ற நினைவு. அரசு உதவி பெறும் பள்ளி. தமிழ் வழிக் கல்வி. ஐந்து பாடங்களிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 15 பேர் கூட இல்லை. மற்ற அனைவரும் குறைந்தது ஏதேனும் இரண்டு பாடங்களிலாவது 15 அல்லது 16தான். ஒரே ஒரு நல்ல விஷயம், தமிழை எழுத்துக் கூட்டி வாசித்துவிடுவார்கள். எழுதச் சொன்னால் முடிந்தது கதை. ஆங்கிலம் – சுத்தம். ஆங்கிலத்தின் மேலேயே தமிழில் எழுதிப் படித்து ஒப்பித்தவர்களே பலர்.//

அப்போதே இந்த லட்சணம்தான். இன்று நிலை முன்னேறிவிட்டது என்று நினைக்க எந்த முகாந்தரமும் இல்லை.

  • என் ஜி ஓ மூலமாக சர்வே எடுத்தார்கள், யாரென்றே தெரியாதவர்கள் சர்வே செய்தார்கள் என்பதெல்லாம் சால்ஜாப்பு. அப்படிப் பார்த்தால் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்துத் தயாரிப்பதே ஆசிரியர்கள்தான். அவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பல வேலைகளைச் செய்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
  • அடுத்த உருட்டு, சாம்பிள் குறைவானது என்பது. உண்மையில் சாம்பிள் கூடுதலாக இருந்திருந்தால், அறிக்கை இன்னும் மோசமாக நம்மைக் கழுவி ஊற்றி இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, 8ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவனைத் தமிழ் வாசிக்கச் சொன்னேன். அவனது தமிழ்ப் பாடப் புத்தகத்தில் வரும் ஒரு பாடம். அதுவும் அந்த வகுப்பு தொடங்கி 9 மாதங்களுக்குப் பிறகு. அவனால் ஒரு வரியைக் கூட ஒழுங்காக வாசிக்க முடியவில்லை. (வீடியோ.)

இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்லவேண்டும். மாணவர்களைத் தமிழ் படிக்க வைக்க நம்மால் முடியவில்லையே தவிர, தேர்வில் அவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும். ஆம். ஒரு தேர்வில் எப்படி மாணவர்களை மதிப்பெண் வாங்க வைக்க முடியும் என்பதில் நம் ஆசிரியர்கள் உச்சம் தொட்டு அதையும் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் நீட் போன்ற தேர்வுகள் அவசியமாகின்றன.

பல உதாரணங்கள் இதற்கு உண்டு. ஒன்பதாம் வகுப்பில் தமிழ் அ ஆ தெரியாமல் வரும் பையனைக் கூட, பத்தாம் வகுப்பு முழுத் தேர்வில் நம் ஆசிரியர்களால் 60 மதிப்பெண்கள் வாங்க வைக்க முடியும். இது நடந்திருக்கிறது. இதனால்தான், இனி ப்ளூ ப்ரிண்ட் கிடையாது என்று இந்த அரசு முடிவு செய்தபோது நான் அதை வரவேற்றேன்.

எனவே நம் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் தரம் இப்படித்தான் உள்ளது. இதனால் தனியார்ப் பள்ளியின் தரம் கொடிகட்டிப் பறக்கிறது என்று அர்த்தமல்ல. அவையும் இப்படியே. கொஞ்சம் மேலே இருக்கலாம், அவ்வளவுதான்.

  • ஆசிரியராக இருக்கும் எழுத்தாளர் சுகிர்தராணி மனம் நொந்து எழுதி, பெரிதும் பேசப்பட்ட பதிவைக் கீழே கொடுத்திருக்கிறேன். அவர் திராவிட எதிரி அல்ல. அவர் எழுதியது ஜூன் 2019ல். அவர் சொல்வதன் விரிவான அம்சமே ஏசர் 2024 அறிக்கை.
  • நீதிபதி சந்துரு எனக்கு எந்த வகையிலும் ஏற்பில்லாதவர். அவர் திராவிட எதிரி அல்ல. ஆதரவாளர். அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகள். (முழுமையான கட்டுரை லின்க்.)

//கல்விச் சீரழிவும் போலி மதிப்பெண்களும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11% கூடியுள்ளது: 2012 – 80.23%; 2013 – 84.44%; 2014 – 87.71%; 2015 – 90.06%; 2016 – 91.79%. கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறிய தகவலின்படி, இன்றைய மாணவர்களுக்கு அவர்களது விடைத்தாள்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின்படி தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காட்டை கணித்தோமானால் அது 52%-ஐத் தாண்டாது என்பதே உண்மை நிலவரம்.//

இது தமிழ்த் திசையில் வெளியானது. இதுவும் திராவிட அரசுக்கு எதிரான பத்திரிகை அல்ல. ஜால்ரா பத்திரிகைதான்.

நீதிபதி சந்துருவின் கட்டுரையைவிட ஏசர் 2024 அறிக்கை பொறுமையாகவே பேசுகிறது என நினைக்கிறேன்.

  • ஓர் அறிக்கையைத் திட்டுவது, அந்த அறிக்கையைத் தந்த நிறுவனத்தை மத்திய அரசின் ஜால்ரா என்பதெல்லாம் சரிதான். ஆனால் நம் தமிழ்நாட்டு நிலவரம் நமக்கே தெரியாதா? நீங்களே பத்துப் பள்ளிகளைத் தேர்ந்தெடுங்கள். தமிழ் ஆங்கிலம் கணிதம் மூன்றிலும் 5ம் வகுப்புத் தரத்திலான கேள்விகளைத் தேர்ந்தெடுங்கள். 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களிடம் விடைகளைக் கேளுங்கள். ஏசர் 2024 அறிக்கை தெய்வம் என்று உங்களுக்கே புரியும்.
  • கடன் வாங்கிக் கழித்தல் தெரியாத மாணவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இரண்டிலக்கப் பெருக்கல் தெரியாதவர்கள், எளிமையான சிறிய வார்த்தைகள் கொண்ட ஒரு தமிழ் வரியைத் திக்கி திக்கிக் கூட வாசிக்கத் தெரியாதவர்கள் 10ம் வகுப்பில் இருப்பார்கள். இதைக் கேலியாகச் சொல்லவில்லை, வருத்தத்துடன் சொல்கிறேன்.
  • முதலில் நம் நிலைமை என்ன என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். பின்னர்தான் நாம் உண்மையில் தமிழ்நாட்டை, தமிழை, தமிழ் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்.
  • அரசு என்ன செய்யலாம்? ஒரு மாதம் ஆசிரியர்களுக்கு நேரம் கொடுத்து, அவர்களால் ஆசிரியர் என்னும் புனிதப் பணியில் இனியும் வெற்றிகரமாகச் செயல்படமுடியாது என்றால், வேறு அரசுப் பணிகளுக்கு மாறிக் கொள்ள வாய்ப்புத் தரலாம். புதிய, இளைமையான, படிப்பறிவு கொண்ட ஆசிரியர்களை நியமிக்கலாம். ஆசிரியர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயப்படுத்தலாம். ஒரு மாதம் ஆசிரியர்களுக்குத் தரப்படும் விடுமுறையின்போது ஆன்லைனில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் ‘எப்படி வகுப்பெடுப்பது’ என்ற நுணுக்கங்களை, ஆசிரியர்கள் அல்லாத நிபுணத்துவம் பெற்றவர்களால் சொல்லித் தரச் சொல்லலாம். இது ஆசிரியர்களுக்குப் பள்ளிப் பாடத்தை எப்படி அணுகுவது எனப்தைச் சொல்லித் தரும்.
  • ஏசர் 2024 தமிழர்களை அவமானப்படுத்துகிறது, தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கிறது, அது ஒரு பொய் புரட்டு என்று நிரூபிப்பதற்குப் பதிலாக, உண்மையாகவே இது சரியான நேரத்தில் விடப்பட்ட எச்சரிக்கை என்பதாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டை எப்படி இந்திய அளவில் கல்வியில் முதல் மாநிலமாக்குவது என்று யோசிக்கலாம். அடுத்த பத்தாண்டுகளுக்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கலாம். அதுதான் நம் மாணவர்களுக்கு நல்லது. அப்படியில்லாமல், தமிழ்நாட்டு அரசுக்கு ஜால்ரா அடிக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ நீங்கள் காவடி எடுப்பீர்கள் என்றால், அது உங்கள் விருப்பம்.
Share

Ennepinna

எண்ணேப்பின்னா

இது எங்கள் வழக்கம். பலர் வீட்டில் இப்பழக்கம் இருக்கும். மீந்து போன பழைய சாதத்தை, நல்லெண்ணெய்யும் உப்பும் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து, அதை உருட்டி, அதில் குழி செய்து, குழம்பு சேர்த்து உண்டால், சொர்க்கம். (இதில், கன்னடத்தில் கரத எண்ணெ எனப்படும், வடை இதியாதி சுட்ட எண்ணெய்யைப் போட்டுப் பிசைந்தால் சுவை இன்னும் கூடும்.)

சுண்ட வைத்தப் பழங்குழம்பு என்றால், அதுவும் கொதிக்க கொதிக்க இருந்தால், சுவை அள்ளும். அதாவது அந்தக் குழம்பு நாக்கில் படும்போது நாக்கு பொள்ளிப் போகவேண்டும்.

எண்ணேப்பின்னா என்றால், எண்ணெய் உப்பு அன்னம் என்று பொருள். சிலர் வழக்கத்தில் எண்ணப்பிட்டன்னா என்றும் எண்ணப்புன்னா என்றும் சிலர் சொல்வதுண்டு.

என் அம்மா கையில் உருட்டித் தருவார். இப்போது நினைத்தாலும் அந்தச் சுவைக்கு நாக்கு ஏங்குகிறது.

அப்போதெல்லாம் பழைய சோறு நிறைய மீந்து போகும். ஏனென்றால் எப்போதும் சாதம் வீட்டில் இருக்கவேண்டும் என்பது ஒரு விதி. கஷ்ட ஜீவனம். பழைய குழம்பும் இதுவும் உண்டால் மதியம் மூன்று மணி வரை பசிக்காது. சுவையும் அள்ளும்.

இப்போதெல்லாம் மதியத்துக்கு உணவு என்றால் அது மதியமே காலியாகும் வகையில்தான் சமைக்கிறோம். எப்போதாவதுதான் இப்படிச் சாப்பிட முடிகிறது. டயட் கவலை வேறு. ஆம், இந்த உணவு என்னைப் போன்ற ஸ்லிம்மிக்களுக்கான உணவு.

Share