Pradhosha and Makudesuvaran

பிரதோஷம் என்பதற்கு மகுடேசுவரன் அளித்த விளக்கம் தொடர்பான பரிமாற்றங்களைப் பார்க்கிறேன்.

மகுடேசுவரன் முக்கியமான தமிழ் அறிஞர். 2000ம்களில் சுஜாதாவுடனான மின்னம்பலம் அரட்டையின்போதே அவர் பல ஆங்கில வார்த்தைகளுக்குத் தமிழ் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பார். பல எனக்குச் சிரிப்பாக இருக்கும். ஆனாலும் அவர் எந்தக் கிண்டலையும் பொருட்படுத்தாமல் அவர் மனதுக்குப் பட்டதைச் சொல்லிக்கொண்டே இருப்பார். இது மிக முக்கியமான உந்துசக்தி. தேவையான ஒன்று. இது இல்லாவிட்டால் யாராலும் சாதிக்க முடியாது.

ஸ்டம்புக்கு முக்குச்சி, ஃபேஸ்புக்கிற்கு முகப் புத்தகம் போன்றவை எனக்கு ஒவ்வாதவை. அதேசமயம், இது போன்ற தனித் தமிழ் தீவிர ஆர்வலர்கள் இல்லாவிட்டால் தமிழ் மொத்தமாக அழிந்துவிடும் அபாயம் உண்டு என்பதாலும், இவர்கள் தோற்றுவிக்கும் பல வார்த்தைகளில் சில ஊன்றி நின்றாலும் (பேருந்து, தொடர்வண்டி போன்றவை) அவை தமிழுக்குச் செழுமை சேர்ப்பவை என்பதாலும், இவர்கள் மீது எனக்கு எப்போதும் (கிண்டலைத் தாண்டிய) மரியாதை உண்டு. பல முறை இதைச் சொல்லி இருக்கிறேன். மகுடேசுவரன் மீதும் அப்படியே.

ஆனால் பிரதோஷம் என்கிற வார்த்தை குறித்து மகுடேசுவரன் சொல்லி இருப்பது தவறான விளக்கம். அதைச் சரியாக மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது, அதில் ஓர் ஏளனத் தொனி கலந்துவிட்டது உண்மைதான் என்றாலும், அந்தத் தொனியைக் கண்டிக்கவேண்டியது மகுடேசுவரனின் தனிப்பட்ட உரிமைதான் என்றாலும், அதைத்தாண்டி, விளக்கத்தை ஏற்றுக்கொள்வது அவசியம்.

பற்பல வார்த்தைகளுக்குத் தமிழில் அருவி போலக் கொட்டிக்கொண்டிருக்கும் போது ஒன்றிரண்டு தவறுவது இயல்பு. அதை ஏற்றுக் கொள்வதே சிறப்பு.

எனக்கு வருத்தம் தந்தது அல்லது ஆச்சரியம் தந்தது அல்லது எரிச்சல் தந்தது, மகுடேசுவரனின் சிறிய சறுக்கல அல்ல, அதற்கான ஆதாரமாக தினமலர் யூடியூவை அவர் காட்டியதுதான். மகுடேசுவரன் தனது திறமையும் உயரமும் என்ன என்பதை அவரே இன்னும் உணரவில்லை என்று நினைக்க வைத்துவிட்டது.

பாலகுமாரன் ஒரு கதையில் எழுதிய நினைவு. தமிழ் தெரியாத ஒரு பத்திரிகையாளர் திருமனம் என்று எழுத, அது திருமனம் அல்ல, திருமணம் என்று பலர் சுட்டிக்காட்ட, பத்திரிகையாளர் அதற்கு விளக்கமாக, “திருமணம் என்பது சரியாக இருக்க முடியாது. இரு மனங்கள் இணைவது என்பதால் திருமனம் என்பதே சரியாக இருக்கமுடியும்” என்றாராம்.

சிறிய தவறை அப்போதே ஒப்புக்கொண்டு அதைத் தாண்டிப் பல தூரம் பறப்பதே அறிஞர்களுக்கு அழகு.

Share

Ear bud missing

காசிக்குப் போனால் என்னெல்லாம் நடந்தால் நல்லது என்று கதை ஒன்று சுற்றும். ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்வார்கள். அதில் ஒன்று, காசியில் நீயாக எதையும் தொலைக்கக் கூடாது, ஆனால் அதுவாக தொலைந்து போனால் நல்லது.

நானும் கண்டுகொள்ளாத மாதிரி விலை குறைந்த எதையாவது தொலைத்து விட வேண்டும் என்று நினைத்தேன். என் துரதிர்ஷ்டம், ஒன்றுகூட தொலையவில்லை. செந்தூர டப்பா தொலைந்து விட்டது என்று நினைத்தேன். ஏர்போர்ட்டில் பார்த்தால் பைக்குள் பத்திரமாக அது ஒளிந்து கொண்டிருக்கிறது. இப்படியாக எதையுமே இயல்பாகத் தொலைக்காத‌ பாவியாகிவிட்டேன். இந்தப் பாவத்தைத் தொலைக்க மீண்டும் காசிக்குப் போக வேண்டும், அதுவும் ஜெயக்குமார் செலவில். ப்ச்.

நேற்று அலுவலகத்தில் என்னுடைய இயர் பட்ஸ் டப்பியைத் திறந்து பார்த்தால், அதில் ஒன்றுதான் இருக்கிறது. இன்னொன்றைக் காணவில்லை. இத்தனைக்கும் அதை காசியில் ஒரு முறை கூட பயன்படுத்திய நினைவில்லை. கடவுளே வந்து நான் அறியாத போது ஒன்றை எடுத்துக் கொண்டு இந்தப் பாவியைப் புனிதனாக்கி விட்டார் என நினைக்கிறேன். இனி ஒற்றைக் காதுடன் வலம் வர வேண்டியதுதான்.

பின்குறிப்பு: நான் யாரையும் சந்தேகப்படவில்லை

Share

Book shops in Tirunelveli in 2000

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது வீட்டில் பொதுப் புத்தகங்கள் படிக்க அனுமதியில்லை. சிறுவர்களுக்கான நாவல்கள், சிறுவர் மலர், அம்புலிமாமா, கோகுலம், ரத்னபாலா, பாலமித்ரா, பூந்தளிர் படிக்கலாம். அதற்கு மேல் சுஜாதாவோ ஜெயகாந்தனோ படிக்க அனுமதி தரமாட்டார்கள்.

மதுரையில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, 12க்கு திருநெல்வேலி வந்தபோது மெல்லப் படிக்க ஆரம்பித்தேன். ஏனோ யாரும் அதிகம் கண்டிக்கவில்லை. ஜெயகுமார் ஶ்ரீனிவாசன் அப்போது எங்கள் வீட்டில் சில மாதங்கள் தங்கி இருந்தார். அப்போது பாலகுமாரனை நிறையப் படிக்க ஆரம்பித்தேன். வாராவாரம் நாவல் டைம் போன்றவற்றில் தொடர்ந்து எழுதினார். வியாழக் கிழமை ஆனால் பாலகுமாரன் என்றானது. ஒரு மணி நேரத்தில் படித்துவிடலாம். அன்று முழுக்க அந்த நாவலின் யோசனையாகவே இருக்கும்.

+2 தேர்வு வரவும் மீண்டும் பள்ளிப் புத்தகங்கள். அந்த விடுமுறையில் நிறையப் புத்தகங்கள். 1996 வாக்கில் பிரகாஷ் ராஜகோபால் விஷ்ணுபுரம் தந்தார். அவரால் வாசிக்க முடியவில்லை என்று அப்போது சொன்ன நினைவு. நான் முழுக்க பைத்தியம் பிடித்தது போல வாசித்து முடித்தேன்.

கல்லூரியில் முழுக்க ஒரே பாலகுமாரன் புராணம்தான். கல்லூரியில் இருந்த நூலகத்தின் உதவியாளர்களில் ஒருவர், ‘பாலகுமாரனுக்கு ரெண்டு பொண்டாட்டி, அது தெரியுமா ஒனக்கு’ என்றார். அவராவது வெளிப்படையாகச் செய்கிறார், எத்தனையோ பேர் எத்தனையோ வைத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்.

1996ல் வேலைக்கும் சேர்ந்திருந்தேன். டேக் கம்பெனியின் TERC நூலகத்தில் ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், தி.ஜா புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. அத்தனையையும் படித்து முடித்தேன். பின்னர் கி.ரா. அங்கே இருக்கும் தொழிற்சங்க நண்பர்களிடம், நிறைய இலக்கியப் புத்தகங்களை எழுதித் தந்து, வாங்கி வைக்கச் சொன்னேன்.

தொடர்ந்து ஜெயமோகனின் ரப்பர் நாவலை விலைக்கு வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். விலைக்கு நாவலை வாங்கி வாசிப்பதில் ஒரு கிக் இருந்தது. தோரணையாக உணர்ந்தேன். வீ ஆர் எலைட் மொமென்ட். புத்தகங்கள் வாங்கும் கிறுக்கு பிடித்துக்கொண்டது. பாலகுமாரன் அந்நியப்படவும் தொடங்கினார்.

+2 வகுப்புத் தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்களுக்காக இரண்டு பை நிறையப் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்திருந்தேன். இப்போது வீட்டில் வைக்க இடமில்லை என்னும் அளவுக்குப் புத்தகங்கள் சேர ஆரம்பித்தன.

சம்பளம் கைக்குக் கிடைத்ததும் புத்தகம் வாங்குவேன். அப்போதுதான் பின் தொடரும் நிழலின் குரல் என்றொரு புத்தகம் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். சிற்றிதழ்கள் வாசிக்கும் பழக்கத்தில் இவையெல்லாம் எனக்குத் தெரிய வந்தன!

அந்தப் புத்தகத்தை வாங்க திருநெல்வேலியில் அத்தனை அலைந்தேன். அப்போதெல்லாம் இவை போன்ற இலக்கியப் புத்தகங்கள் கொஞ்சமாவது கிடைத்த இடம், அருள்நந்தி சிவம் புத்தகக் கடை. ஜங்ஷனில் கண்ணம்மா தெருவில் இருந்தது. அடிக்கடி அங்கே போவேன். பின் தொடரும் நிழலின் குரல் என்றதும், என்னை வினோதமாகப் பார்த்தார்கள். எழுதி வெச்சிட்டுப் போங்க என்றார்கள். ஜெயமோகன் பெயரை அவர்கள் கேள்விப்பட்டிருக்கவே இல்லை. சுஜாதா புக் தம்பிக்கு காமிம்மா என்றார் கடைக்காரர். “நல்லா எழுதுவாரு தம்பி!” அடிக்கடி அந்தக் கடையில் பி தொ நி கு என்று ஒரு நோட்டில் எழுதி வைப்பேன். அந்த நோட்டை என்னைத் தவிர யாரும் வாசிக்கவில்லை என நினைக்கிறேன்.

மதிதா பள்ளிக்கு அருகில் போடப்பட்டிருந்த நிரந்தரப் புத்தகக் கண்காட்சி என்ற பெயரிலான என் சி பி எச் கடையில் கேட்டேன். ஜெயமோகன் அப்படி ஒரு புத்தகம் எழுதியதே இல்லை என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்தார்கள். வேறு புத்தகங்கள் காண்பித்தார்கள். சாகித்ய அகாடெமியின் புத்தகங்கள் விலை குறைவாக இருந்தன. சந்தோஷமாக வாங்க ஆரம்பித்தேன். என்னை அசர வைத்த புத்தகம், இரண்டாம் இடம்.

இப்படியே ஆறு மாதம் அலைந்தேன். ஒவ்வொரு முறையும் வேறு எதாவது புத்தகம்தான் வாங்குவேன். பின் தொடரும் நிழலின் குரல் மட்டும் கிடைக்கவே இல்லை. அந்தச் சமயத்தில் மதிதா பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடந்தது. நான் பார்த்த முதல் புத்தகக் கண்காட்சி அதுதான். மலைப்பாக இருந்தது. இத்தனைக்கும் அது ஒரு சிறிய அளவிலான கண்காட்சி மட்டுமே. ஒவ்வொரு கடையில் கேடலாக் வாங்கிக் குறித்து வைத்துக்கொண்டு, நான்கைந்து முறை போய் புத்தகங்கள் வாங்கினேன். அங்கேயும் பி தொ நி கு கிடைக்கவில்லை.

சகுந்தலா இண்டர்நேஷனல் பக்கத்தில் உள்ள ஒரு தெருவில் ஒரு புத்தகக் கடை இருக்கிறது என்றார்கள். அங்கே போனால் அது பள்ளிகளுக்கான புத்தகங்கள் சப்ளை செய்யும் கடை. போனதற்கு, பெயருக்காக ஒரு புத்தகம் வாங்கினேன்.

டவுனில் சியாமளா புக் செண்டர், ஈகிள், பாளையம்கோட்டையில் ஈகிள், ஜங்ஷனில் இன்னொரு புத்தகக் கடை என்று நான் போகாத இடமே இல்லை. யாருக்கும் பி தொ நி கு என்றால் என்னவென்றே தெரியவில்லை.

மீண்டும் என் சி பி எச் நிரந்தரப் புத்தகக் கண்காட்சிக் கடை. அங்கே இருந்தவர் என் மேல் வருத்தப்பட்டு, அருகில் இருந்த எஸ் டி டி பூத்தில் இருந்து யாருக்கோ பேசினார். அடுத்த மாதம் எப்படியோ பி தொ நி கு பிரதி கையில் கிடைத்தது.

டவுணில் மங்கையர்க்கரசி பள்ளிக்கு அருகில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு எதிரே ஒரு ஜெராக்ஸ் கடை போன்ற ஓர் இடத்தில் ஒருவர் சில புத்தகங்களையும் விற்றார். அங்கே பழைய, விற்காத இலக்கியப் புத்தகங்கள் தூசி அப்பிக் கிடந்தன. இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தேர்ந்தெடுத்த ஆதவன் சிறுகதைகளா அல்லது பொதுவான சிறுகதைகளா என்று நினைவில்லை, அங்கேதான் வாங்கினேன்.

திருநெல்வேலியில் நல்ல இலக்கியப் புத்தகக் கடைகள் என்றுமே இருந்ததில்லை. எப்படித்தான் இத்தனை பேர் அத்தனை இலக்கியம் படித்து அத்தனை அத்தனை இலக்கியம் எழுதினார்களோ! ஒருவேளை நிறையப் படிக்காமல் நிறைய எழுதினார்களோ என்னவோ. ஒருவேளை, நிறைய நன்றாக எழுதவேண்டும் என்றால் நிறையப் படிக்கக் கூடாதோ என்னவோ! திருநெல்வேலிக்கே இந்த நிலை என்றால், கோவில்பட்டி சாத்தூர் எல்லாம் நினைத்துப் பாருங்கள்.

தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு எதிரே ஒரு பெட்டிக் கடையில்தான் சிற்றிதழ்கள் வாங்குவேன். என்ன என்ன பெயரில் எல்லாமோ புத்தகங்கள் இருக்கும். அனைத்தையும் வாங்குவேன். பாதிப் புத்தகங்களில் அவர்களது திருகு மொழியே புரியாது. ஆனாலும் அதில் ஒரு போதை இருந்தது. நாம் அதையெல்லாம் படித்தால் ஒரு பெருமை என்ற ஜம்பம் வந்தது. ஆனால் அந்தக் கடையிலும் இலக்கியப் புத்தகங்கள் கிடைக்காது.

சென்னையில் இருக்கும் நண்பர்களிடம் சொன்னால் அவர்களுக்கு முடிந்தபோது வாங்கி அனுப்புவார்கள். இல்லையென்றால், நாம் எதிர்பார்க்கும் அந்தப் புத்தகங்கள் கைக்குக் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

தூத்துக்குடியில் வேலை பார்த்த வரை, இரண்டே வேலைகள்தான். ஒன்று சினிமா பார்ப்பது, இன்னொன்று புத்தகம் படிப்பது. புத்தகங்கள் வீட்டில் சேர ஆரம்பித்தன. வைக்க இடமே இல்லை என்றானது. புத்தகங்கள் வைக்க ஓர் அலமாரி செய்ய ஆசைப்பட்டு, ஓர் ஆசாரியை அழைத்துச் செய்தேன். மர அலமாரிக்குக் கண்ணாடிக் கதவுகள் போட்டு அட்டகாசமாகச் செய்து கொடுத்தார்.

வர்த்தமானன் பதிப்பகம் மலிவு விலையில் புத்தகங்கள் விற்க ஆரம்பித்தார்கள். கல்கியின் அத்தனை நாவல்களையும், கம்ப ராமாயணம் முழுத் தொகுதியும் வாங்கி அந்த அலமாரியில் அடுக்கி வைத்தேன். பார்க்க வண்ணமயமாக அழகாக இருந்தது. அலை ஓசை, பொன்னியின் செல்வன் எல்லாம் படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டு நாள்களில் படித்து முடித்தேன்.

நெல்லையில் நான் போய்ப் பார்க்காத புத்தகக் கடைகள் இருக்க வாய்ப்பில்லை. புத்தகத்துக்கென்று பிரத்யேகமான கடைகள் பெரிய லாபத்தைத் தருவதில்லை. எனவே வேறு பல பொருள்களையும் சேர்த்து வைத்து விற்கிறார்கள். அவை விற்க ஆரம்பிப்பதால், அந்தக் கடை பல்பொருள் அங்காடி ஆகி விடும். புத்தகங்களை மீண்டும் அங்கே தேட வேண்டி இருக்கும். இதுதான் எங்கேயும் எப்போதும் நடக்கும்.

துபாயிலும் தமிழ்ப் புத்தகங்களைத் தேடி வெட்டியாக அலைந்திருக்கிறேன். இலக்கிய இதழ்கள் எப்போதாவது கையில் மாட்டும். மஞ்சரியின் பழைய இதழை அங்கே வாங்கி வாசித்திருக்கிறேன். பொக்கிஷமாக அங்கே கிடைத்தது இனிய உதயம் நாவலிதழ். அதில் மொழிபெயர்ப்பு நாவல்கள் அல்லது குறுநாவல்கள் வந்துகொண்டே இருக்கும். மலையாளக் குறுநாவல்களை மொழிபெயர்த்து சுரா என்று ஒருவர் எழுதுவார். முகுந்தனின் குறுநாவல்களை அவர் மொழிபெயர்த்திருந்தார் என நினைவு. முகுந்தன் எழுதிய, கம்யூனிஸம் தொடர்பான ஒரு குறுநாவலை வாசித்த நினைவு இன்னும் இருக்கிறது. இந்த இனிய உதயம் இதழை வெளியிட்டது நக்கீரன் போல. பெரிய ஆச்சரியம்தான்.

திருமணமான புதிதில் 2004ல் சென்னைக்கு வந்தபோது, புதிய புத்தக உலகம் கடையை திநகரில் பார்த்து, அதிசயத்து உறைந்து நின்றேன். அதுவரை நான் அப்படி ஒரு தமிழ்ப் புத்தகக் கடையைப் பார்த்ததில்லை. முழுக்க ஏஸி. உள்ளே நுழைந்ததும் மோர். புதிய புத்தகங்களின் சுவரொட்டிகள். அசந்து போய்விட்டேன். ஆனால் வாடிக்கையாளர் சேவை மோசமாக இருந்தது. பிரச்சினையில்லை. புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. நிறைய வாங்கினேன். இன்றளவும் கடை அனுபவமாக நல்ல அனுபவத்தைத் தந்தது இந்தக் கடை மட்டுமே.

ஆன்லைன் வரவும் கடைகள் பக்கமே போனதில்லை என்றாகிவிட்டது!

Share

Oruvar vaazhum aalayam shooting in Cheranmahadevi

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்

1987. சேரன்மகாதேவியில் தீ பற்றிக் கொண்டது. தீ என்றால் அடங்கும் தீ அல்ல இது. சினிமா தீ.

நடுத்தெருவுக்கு அம்பிகா வந்துருக்காளாம் என்ற செய்தியை முழுதாகக் கேட்பதற்குள், அம்பிகா என்றால் யார் என்றே தெரியாத டிரசர் பாண்டிக் குளுவான்களெல்லாம் மூச்சிரைக்க நடுத்தெருவுக்கு ஓடினோம். ஊர்ல பெரிய நாட்டாமை நாமதான், நமக்கே தெரியாம அம்பிகா வந்துருக்காளா என்று ஆசையாகப் பார்த்தால், வழக்கமாக வாசல் தெளித்துக் கோலம் போடும், இன்றோ நாளையோ பாட்டிகள்தான் கண்ணில் பட்டார்கள்.

நடுத்தெருவுல இல்லையாம், காந்தி பார்க் பக்கத்துலயாம். ஓடு காந்தி பார்க்கிற்கு. அங்கே எப்போதும் சுற்றித் திரியும், சேர்மாதேவிக்கே உரிய மொத்தமான நான்கைந்து காக்காய்கள் கூட அன்று அங்கே இல்லை.

அப்போது எங்களுடன் சுற்றித் திரிந்த வில்லேஜ் விஞ்ஞானி ஒருத்தன் சொன்னான், ‘எப்பவும் பரபரப்பா இருக்க நம்ம ஊரு இப்படி ஆள் அரவமே இல்லாம கெடக்குன்னா, எங்கயோ நிச்சயமா ஷூட்டிங் நடக்குல.’ ஊரைச் சல்லடை போட்டுத் தேட முடிவு செய்தோம். ஆனால் எங்கே ஷூட்டிங் நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தினம் தினம் ஏதாவது செய்தி மட்டும் வரும். அங்கிட்டு ஷூட்டிங்காம், இங்கிட்டு ஷூட்டிங்காம், பிரபு வந்துருக்கான், சிவகுமார் வந்துருக்கான், அம்பிகா வந்துருக்கா, நானே என் கண்ணால பாத்தேன் என்று யாராவது சொல்வார்கள். ஆனால் எங்கள் கண்ணில் எதுவும் படவே இல்லை.

கல்லுப்பட்டியில் படித்துக்கொண்டிருந்த நான், லீவிற்கு சேர்மாதேவி வந்திருந்தபோது நடந்தது இது. சரி, நமக்கு ஷூட்டிங் பார்க்க கொடுப்பினை இல்லை என்ற முடிவுக்கு வந்த போது, அவசர அவசரமாக வீட்டுக்குள் வந்த அம்மா சொன்னாள், ‘போலிஸ் லயன்ல ஷூட்டிங் நடக்காம்!’  அடுத்த நொடி நான் பஞ்சாய்ப் பறந்தேன். என்னுடன் பல நண்பர்களும் வந்தார்கள்.

போலிஸ் லயன் என்றுதான் நினைக்கிறேன். கீழ முதல் தெருவுக்குக் கடைக்கோடியில் இருக்கும் ஓர் இடம் என்ற நினைவு. கூட்டமானால் கூட்டம். சிலர் அங்கு காவலுக்கு நின்று கொண்டு, யாரையும் மேற்கொண்டு வராமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் காமாட்சி கோவில் பக்கமாய்ச் சுற்றி வந்து பின்பக்கமாக உள்ளே நுழைந்து ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்து விட்டோம்.

அங்கே பார்த்தால், கூட்டத்தில் என் பாட்டி! அப்போதே என் பாட்டிக்கு 70 வயதிருக்கும். நான் வருவதற்குள் வந்துவிட்டிருக்கிறார். அதுவும் சிமிண்ட் நடைபாதையில் பல பாட்டிகளுடன் அமர்ந்திருக்கிறார். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.

பிரபுவும் அம்பிகாவும் வெளியே வருவார்கள், பார்த்துவிடலாம் என்று காத்திருந்தோம். நேரம் ஆனதுதான் மிச்சம். அவர்கள் யாரும் வெளியே வரவே இல்லை. கேமராமேன், டைரக்டர், லைட் பாய் என்று யார் யாரெல்லாமோ அங்கும் இங்கும் பரபரப்பாக நடக்கிறார்களே தவிர, ஒரு நடிகரும் வெளியே வரவில்லை.

நாங்கள் சோர்ந்து போன நேரத்தில், கூட்டத்தில் ஒரே கூச்சல், ஆரவாரம். பிரபு வெளியே வந்தார். ஏல, பிரபுல என்று சொல்லவும், அனைவரும் ஆச்சரியமாக பிரபுவைப் பார்த்தோம். கல்யாணக் கோலத்தில் இருந்தார். ஒருத்தன் கேட்டான், தனியாவால வந்துருப்பான், இல்ல கூட சிவாஜி வந்துருப்பானா என்று. வில்லேஜ் விஞ்ஞானி அந்தக் கேள்வியை ரசிக்கவில்லை.

பிரபு அனைவரையும் பார்த்துக் கையசைக்கவும், ஒரே கைதட்டல். பிரபு ஸ்டைலாக அங்கும் இங்கும் நடந்தபடி, இரண்டு கைகளால் தனக்குள்ளே குத்திக் கொண்டபடி, சிரித்தபடி இருந்தார். அதைப் பார்த்த என் பாட்டி சத்தமாக, ‘நீ நடக்கறது உன் அப்பா நடக்கற மாதிரி இருக்குப்பா’ என்றார். பிரபு ஆஹான் ஆஹான் என்று கட்டைக்குரலில் பதில் சொல்லிச் சிரித்தார். வீட்டுக்குள்ள அமுக்குளி மாதிரி இருக்கிற பாட்டி தெருவுல என்னா போடு போடுது என்று சந்தோஷமாக இருந்தது.

ஒரு வழியாக மாலை 3 மணி வாக்கில் ஷூட்டிங் ஆரம்பித்தது.

ஆனால் அம்பிகா வரவில்லை. பிரபுவுடன் வேறொரு பெண் வந்தார். தூரத்தில் இருந்து எங்களுக்கு அது அம்பிகா இல்லை என்று எங்கள் யாருக்கும் உறுதியாகச் சொல்லவும் தெரியவில்லை. எங்கள் பரிதவிப்பைப் பார்த்த ஒருவர் சொன்னார், இது அம்பிகா இல்லடே, ராது, அறிமுகமாம். வில்லேஜ் விஞ்ஞானி கேட்டான், அறிமுகமா புதுமுகமா என்று. ரெண்டும் ஒன்னுதாம்ல என்றார் அவர். அதற்கும் அவன் என்னவோ சொல்ல, ஷூட்டிங் வேகத்தில் அவனை யாரும் பொருட்படுத்தவில்லை.

காட்சியின் படி, ஒரு மாட்டுவண்டியில் ராதுவும் பிரபுவும் வந்திறங்க வேண்டும். அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடந்து வரவேண்டும். ஒரு பெண் ஆரத்தி எடுப்பார்.

ராதுவும் பிரபுவும் மாட்டு வண்டியில் இருந்து இறங்குவதை மட்டும் பத்து முறை எடுத்திருப்பார்கள். இருவரும் நடந்து வரும் காட்சியை 30 முறை எடுத்தார்கள். என்ன எழவுடா இது, நடந்து வீட்டுக்குள்ள வர்றதுக்கு எதுக்கு இத்தனை எடுக்கிறார்கள் என்று எரிச்சலாக வந்தது. இதில் ஒருவர் விடாமல் கோழியை தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருக்க, இன்னொருவர் புகை போட்டுக் கொண்டிருந்தார்.

அவுட்டோரில் அன்று மொத்தமாக நடந்த ஷூட்டிங்கே அவ்வளவுதான். இதற்கே மாலை ஆகிவிட்டது. கூட்டம் கலைந்தது.

ஒருவழியாக ஷூட்டிங் பார்த்துவிட்டேன் என்ற சந்தோஷம் எனக்கு. படம் ஒருவர் வாழும் ஆலயம். அதைத் தொடர்ந்து ஒன்றிரண்டு நாள்களில் ராமர் கோவிலில் ஷூட்டிங்காம், சிவகுமார், அம்பிகா வந்திருக்கிறார்களாம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் போகவில்லை.

அந்தப் படம் 1988ல் வெளியானது. ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் முதல் பாடலாக மலையோரம் மயிலே போட்டார்கள். பாடல் அள்ளிக்கொண்டது. அதில் வரும் நதியெல்லாம் சேர்மாதேவியா என்றெல்லாம் யோசித்துக் கொண்டேதான் பார்த்தேன். படம் வெளியாகி சில நாள்கள் கழித்துத்தான் படம் பார்த்தேன். படம் முழுக்க, எப்படா சேர்மாதேவி வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தக் காட்சியும் வந்தது.

இந்தக் காட்சியை நான் ஷூட்டிங்கின் போதே பார்த்திருக்கிறேன் என்று மதுரை நண்பர்களிடம் சொல்லிப் பீற்றிக்கொண்டதில் நான்கைந்து நாள் கெத்தாக இருந்தேன்.

படத்தில் வரும் இடமெல்லாம் சேர்மாதேவிதான் என்று நானே கற்பனை செய்துகொண்டேன். அடுத்த தடவை சேர்மாதேவி போனபோது, அதில் பல இடங்கள் அம்பாசமுத்திரம் பக்கம் என்று சொல்லவும் புஸ்ஸென்றாகிவிட்டது. சேர்மாதேவியில் தற்கொலை முடிவெடுக்கும் ராது எந்த ரயிலின் முன் பாய்கிறார் என்றபோது, அது கல்லிடைக்குறிச்சி என்றார்கள். நடந்தேவா அவ்வளவு தூரம் போனார்? தலை சுற்றிப் போனது. கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் படத்தில் கடல் வந்ததும் நினைவுக்கு வந்தது. அடக் கண்றாவியே என்று தோன்றிவிட்டது.

அடுத்த இரண்டு மாதத்துக்கு எந்தப் படம் பார்த்தாலும், இதை எப்படி எடுத்துருப்பாங்க என்றே யோசிக்கத் தோன்றியது. படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியாமல் போனது. இனி ஷூட்டிங்கே பார்க்கக் கூடாது என்று தோன்றிவிட்டது.

இப்போதும் ஒருவர் வாழும் ஆலயத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, படச் சட்டத்துக்குள் வராத, ஜஸ்ட் சில அடிகள் தள்ளி சிமிண்ட் தரையில் அமர்ந்திருக்கும் பாட்டியை மனம் தேடும். பாட்டி பிரபுவை சிவாஜி மாதிரியே நடக்கறப்பா என்றது காதில் ஒலிக்கும்.

பின்குறிப்பு: அந்தப் படத்தில் வந்த ராதுதான், நிழல்கள் படத்தில் நடித்தவர் என்பது, எனக்குப் படம் பார்க்கும்போதுதான் தெரிந்தது. முதல் படம் நிழல்கள் சரியாகப் போகவில்லை என்பதால் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் போல. அறிமுகமா புதுமுகமா என்று கேட்ட வில்லேஜ் விஞ்ஞானி நினைவுக்கு வந்தான்.

Share

Pareeksha Gnani

ஞாநியைப் பற்றி எழுதுவதை இரு பிரிவினர் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஒன்று ஞாநி போலத் தீவிரமான இடதுசாரி கருத்துடையவர்கள். இன்னொன்று என்னைப் போன்ற இந்துத்துவக் கருத்து உடையவர்கள். இரு பிரிவினருக்கும் இவன் ஏன் ஞாநி பற்றி எழுத வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்கும்.

ஆனால் ஞாநி நிஜமாகவே அன்பானவர். பிடித்தவர்கள் மேல் ஒளிவு மறைவு இல்லாமல் அன்பைப் பொலிபவர். அதற்காகவாவது அவரைப் பற்றி எழுதத்தான் வேண்டும். அன்புக்கும் அரசியல் சார்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது எனக்கும் தெரியும்.

ஞாநிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், கிட்னி மாற்ற வேண்டிய கட்டாயம் வந்திருந்தது. வாரா வாரம் அவர் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் படிக்க உதவியாக இருக்கும் என்று கிண்டில் கருவி ஒன்றை பத்ரி வாங்கி கொடுக்கச் சொல்லி இருந்தார். அதைக் கொடுப்பதற்காக நானும் மருதனும் அவர் வீட்டுக்குச் சென்றோம்.

அதற்கு முன்பு எனக்கு ஞாநியுடன் நல்ல பழக்கம் உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சிகளில் அவர் என்னிடம் பேசுவதை எல்லாம் முன்பு எழுதி இருக்கிறேன். அதேபோல் அவரது பரீக்ஷாவில் நாடகம் நடிக்க என்னை அழைத்த கதையையும் எழுதி இருக்கிறேன். எனவே அவை மீண்டும் இங்கே வேண்டாம்.

நானும் மருதனும் அவர் வீட்டுக்குள் போனபோது, ஒரு கட்டிலில் பனியன் லுங்கியுடன் அமர்ந்திருந்தார். மிகவும் சோர்வாக இருந்தார். அதிக நேரம் பேச வேண்டாம் என்ற அறிவுறுத்தலுக்குப் பின்னர்தான் உள்ளே வந்திருந்தோம். நாங்களும் உடனே கிளம்பத் தயாராகத்தான் இருந்தோம். ஆனால் அவர் எங்களை விடவே இல்லை. நீண்ட நேரம் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டினார். எப்போதுமே ஞாநி அப்படித்தான் என்றாலும், அந்தச் சூழலில் அது மிகவும் வினோதமாகவே இருந்தது. மருதன் அவ்வப்போது மெல்ல மெல்லப் பேசினார். நான் நிறையப் பேசினேன்.

ஞாநியின் உடல் உபாதைகள் பற்றி எல்லாம் கேட்டேன். டிவி விவாதம் ஒன்றில் பேசப் போனபோது, அங்கே தரப்பட்ட டீ அவர் மேல் கொட்டிவிட்டது. கொதிக்க கொதிக்க இருந்த அந்த டீ கொட்டியதில், அவர் நெஞ்சுப் பகுதித் தோல் உரிந்துவிட்டது. அப்போது பட்ட கஷ்டத்தை எல்லாம் பகிர்ந்துகொண்டார்.

அவருக்குச் செய்யப்படும் டயாலிசிஸ் பற்றி விரிவாகச் சொன்னார். அந்த நான்கு மணி நேரம் என்ன செய்வது என்று தெரியவில்லை, பைத்தியம் பிடிக்கிறது, இந்த கிண்டில் உதவக்கூடும் என்றார்.

முன்பே என்எச்எம் ரீடர் என்ற இ-புத்தக ரீடர் ஒன்றை வடிவமைக்கும் நோக்கத்தில், அதை விளக்கி அவரிடம் பேசி இருக்கிறேன். புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வதில் அவருக்கு அத்தனை ஆர்வம். புத்தகம் பதிப்பிக்கச் செலவே இல்லை, ஆனால் விற்பனை ஆன்லைனில் நடக்கும் என்றால், எழுத்தாளனுக்கு அது எத்தனை பெரிய வரம் என்று சிலாகித்தார். ஆனால் இ-புத்தக உலகம் அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எழுத்தாளர்களையும் கைவிட்டு விட்டது.

அதேபோல் அவர் ஏதோ ஒரு வெகுஜன இதழில், சக்கர நாற்காலியில் ஆட்சி செய்யும் கருணாநிதி ஓய்வெடுக்கப் போகலாம் என்பது போல எழுதிவிட, அதைத் தொடர்ந்து திமுகவினர் அவரைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஸ்டாலின் அவருக்கு ஃபோன் செய்து பேசியதாகச் சொன்னார். திமுகவினர் அளவுக்கு ஸ்டாலின் கோபப்படவில்லை என்றாலும், அவரிடமும் வருத்தம் இருந்தது, ஆனால் நான் சொன்னதுதான் நியாயம் என்று அவரிடம் வெளிப்படையாகவே சொன்னேன் என்றார். கருணாநிதி இத்தனை வயதுக்குப் பிறகு இன்னும் கஷ்டப்படாமல் பதவியில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு அந்தப் பதவியைத் தரலாம் என்றுதான் ஞாநி எழுதியிருந்தார் என நினைக்கிறேன்.

பின்பு பேச்சு எங்கெல்லாமோ போனது. ஒரு கட்டத்தில், ‘எனக்குப் பணப் பிரச்சினை இப்போது இல்லை. டயாலிசிஸ் செய்யத் தேவையான பணம் தர குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ராஜ வைத்தியம் நடக்கிறது. ஆனால் ஒரு மகனாக நான் என் சித்திக்கோ என் அம்மாவுக்கு இப்படிச் செய்ய முடியவில்லை’ என்று சொன்னவர், விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டார். அதுவரை ஞாநியை அப்படிப் பார்த்ததில்லை என்பதால், எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

பின்பு மெல்லத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார் ஞாநி. புத்தகக் கண்காட்சி பற்றி, இனி புத்தகங்களின் எதிர்காலம் என்னாகும் என்பது பற்றி எல்லாம் நிறையப் பேசினார். சீக்கிரமே உடல்நிலை சரியாகி வந்து பல புதிய விஷயங்களைச் செய்யப் போவதாகவும், ஓ பக்கங்களைத் தொடரலாமா என்பது பற்றியும், தீம்தரிகிடவைக் கொண்டு வரலாமா என்பது பற்றியும் பேசினார்.

தீம்தரிகிட இதழ் வெளிவந்த போது நான் அதன் சந்தாதாரராக இருந்தேன். அப்போது ஞாநி மரத்தடி யாஹூ இணையக் குழுமத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அதை ஒருங்கிணைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதால், எனக்கு ஞாநியுடன் மெயில் பழக்கம் இருந்ததால், சந்தாதாரராக ஆகி இருந்தேன். ஆனால், நான்கைந்து இதழ்களில் அவர் இதழை நிறுத்திவிட்டார். அடுத்த முறை அவரைப் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது, என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்டேன். பணம் திரும்ப வரவில்லையா என்று கேட்டார். வரவில்லை என்றேன். எல்லாருக்கும் லெட்டர் போட்டு பணத்தைச் சரியாகக் கொடுத்தேனே, உங்களுக்கு எப்படி மிஸ் ஆனது எனத் தெரியவில்லை என்றார். பணம் பிரச்சினை இல்லை என்றேன். இல்லை, இல்லை, ஏதாவது புத்தகங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். வேண்டவே வேண்டாம் என்று சொன்னேன். பின்பு நண்பர்கள் பலர், தீம்தரிகிட இதழுக்குச் சந்தா செலுத்தியதாகவும் அந்த இதழ் நிறுத்தப்பட்டபோது அவரிடம் இருந்து அதற்கு ஈடான புத்தகம் திரும்ப வந்ததாகவும் சொன்னார்கள்.

ஞாநி பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ற அரசியலை ஆதரித்துப் பேசுபவர் என்றெல்லாம் பலர் புகார் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அப்படி இல்லை. யாரேனும் அவருக்கு எந்தச் சந்தர்ப்பத்திலேனும் பண உதவி செய்திருக்கக் கூடும். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவர் பணம் வாங்கிக் கொண்டிருந்தாலும், அவர் தங்கள் கருத்தைப் பேசுவதற்காக மற்றவர்கள் பணம் கொடுத்திருப்பார்களே ஒழிய, பணம் தந்தவர்களுக்காகக் கருத்தை மாற்றிப் பேசுபவர் அல்ல ஞாநி என்பதே என்றென்றைக்குமான நிலைப்பாடு. ஞாநி இறந்த பின்பு பல நண்பர்களிடம் இதை நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். மெல்ல மெல்லச் சிலர் அதை ஏற்றுக் கொண்டார்கள் என்றே நம்புகிறேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இப்போது வேறு சிலர் மற்ற சிலரைப் பற்றிப் போகிற போக்கில் இப்படிச் சொல்வதைப் பார்க்கிறேன். ஒன்று பணம் கொடுக்காதீர்கள். அல்லது, பணம் கொடுத்தது அவர் கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால், ஓர் ஊக்கத்தொகையாகக் கொடுத்தேன் என்று சொல்லுங்கள். இவை அன்றி, ஒருவருக்குப் பணத்தைக் கொடுத்துக் கருத்தை மாற்றிப் பேசச் சொல்லி இருந்தால், அது வேறு அரசியல்.

ஞாநி ஆதரித்த கருத்துகள் எனக்குக் கொஞ்சம் கூட ஏற்பில்லாதவை. அன்றும், இன்றும், என்றும். அதேபோல், என்னுடைய கருத்துகள் ஞாநிக்கு எந்த வகையிலும் பொருட்படுத்தத் தகாதவையே. ஞாநி நிலையில் இருந்து பார்த்தால் எந்த வகையிலும் முக்கியத்துவம் பெற வேண்டியவன் அல்ல நான். ஆனாலும் ஞாநி எல்லோரையும் போல எனக்கும் சரிசமமான மரியாதை கொடுத்தார். ஏனென்றால், அதுதான் ஞாநி.

பின்குறிப்பு

ஞாநி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது பேஸ்புக்கில் ஒருவர் ஞாநி எத்தனை ஓட்டுகள் பெறுவார் என ஒரு போட்டியை நடத்தினார். சும்மா இல்லாமல் நானும் அதில் கலந்து கொண்டு, இருப்பதிலேயே குறைவான ஓட்டுகளை அவருக்குச் சொல்லி இருந்தேன். 7500 ஓட்டுகள் வாங்குவார் என சொன்னேன் என்று நினைக்கிறேன். என்ன கொடுமை என்றால் அதில் நான்தான் ஜெயித்தேன். ஞாநி இதையும் புன்னகையுடன் கடந்தார்.

Share

Amma and the scorpions

அம்மாவுக்குக் கடக ராசி. அதாவது நண்டு. ஆனால் அம்மாவுக்கு நண்டு, தேள் போன்ற எந்த ஜீவராசிகளையும் பிடிக்காது. யாருக்குத்தான் பிடிக்கும்? ஆனால், தேள்களுக்கு அம்மா என்றால் பிடிக்கும் என்பதுதான் பிரச்சினை. எப்படித்தான் தேடி வந்து சரியாக அம்மாவைத் தேள்கள் கொட்டுமோ தெரியாது.

 1985 வாக்கில் சேர்மாதேவியில் தேள்களைத் தினம் தினம் பார்க்கலாம். நம்முடன் வீட்டில் வசிக்கும் ஒரு சக உயிரிநண்பன் மாதிரி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். அந்தக் காலத்து வீடுகளில் விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும். தெருவில் இருந்து வீட்டுக்குள் வரும் போது காலைத் துடைத்துக் கொண்டு வர சாக்குதான் போடப்பட்டிருக்கும். சிறுவயதில் எங்கோ படித்த நினைவு. சாக்குகளில் தண்ணீர் தெளித்து ஓரமாகப் போட்டு விட்டால் பத்து நாட்களில் அங்கே தேள் குட்டிகள் பிறந்திருக்கும் என்று.  தேள் குட்டிகளால் குஞ்சுகளா என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டுமாம்!

அம்மாவுக்கு ஒரு வழக்கம் உண்டு. வீட்டுக்குப் பின்புறத்தில் இருக்கும் மரங்களில் இருந்து விழும் சுள்ளிகளைப் பொறுக்கி அதில்தான் வெந்நீர் போடுவாள். வெந்நீருக்கு விறகைப் பயன்படுத்தினால் கட்டுப்படியாகாது என்பது அவளது எண்ணம். வெட்டியாகப் போகும் சுள்ளிகளை வீணாக்கக்கூடாது! பொறுக்கிய சுள்ளிகளை ஓரிடத்தில் அழகாக அடுக்கி வைப்பாள். அங்கே சென்று பாதுகாப்பாக வாழத் தொடங்கும் தேள்கள்.

திருநெல்வேலி, சேர்மாதேவி, கல்லுப்பட்டி, சந்தாஸ்பத்திரி என எல்லா இடங்களிலும் இப்படி அம்மா சேமித்து வைத்தது உண்டு. காலை அம்மா வெந்நீர் போட சுள்ளி  எடுக்கும்போது சரியாகத் தேள் அவள் கையில் கொட்டும். அம்மா டாக்டருக்கு ஓடுவாள். ஒரு முறை அவள் விரலில் கொட்டிய தேளின் கொடுக்கு இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். ஒரு தடவை தேள் அம்மாவின் கை விரலில் கொட்டியதில் விரல் வீங்கி கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு அந்த விரலை அசைக்க முடியாமல் இருந்தது.

வீடுகளில் பூனைகள் வளர்த்துக் கொண்டிருக்கும் போது இந்தத் தேள்களின் பிரச்சினை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனாலும் தேள்களுக்குப் பூனைகளும் பயப்படத்தான் செய்யும். பூனை உடல் விதிர்த்து ரோமங்கள் தூக்க ஏதேனும் இடத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கினால் அங்கே தேள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோம்.

ஒரு முறை சேர்மாதேவி வீட்டில் மாடியில் இருந்து என்னவோ சத்தம் கேட்க அனைவரும் மேலே போய் பார்த்தோம். அங்கே மாடியில் ஒரு பொந்திலிருந்து இன்னொரு சிறிய பொந்துக்கு வரிசையாக தேள்கள் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்து 10 தேள்களாவது இருக்கும். ஒரு பெரிய தேள். மற்றவை எல்லாம் சிறிய தேள்கள். ஆச்சரியத்துடன் பார்த்தோம். அவை எங்களைப் போடுவதற்கு முன்பே மாமா அவற்றைப் போட்டுத் தள்ளி விட்டார்.

நான் கடைசியாக நட்டுவாக்காலியை பார்த்தது திருநெல்வேலியில் சந்தாஸ்பத்திரி வீட்டில் இருந்தபோதுதான். நல்ல மழை நாளில் மரத்தின் பச்சையங்கள் கீழே சிதறி இருக்க வானம் கிளர்ந்திருந்த சமயத்தில் அங்கே கிடந்த நாகலிங்கப்பூவை எடுக்கப் போனேன். அப்போது ஏதோ ஓர் அசைவு கண்ணில் பட, பார்த்தால் அழகாக கருமையாக ஒரு நட்டுவாக்காலி. அது தேள் என்றே நினைத்தேன். ஆனால் நட்டுவாக்காலி.

பகலில் தேள் கண்ணில் பட்டுவிடுகிறது. இரவில்? இரவில் தேள்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அம்மா ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். தூங்கப் போகும் போது சங்கர கோமதி அம்மனை நினைத்துக் கொள், எந்த விஷ ஜந்துகளும் கெட்ட கனவுகளும் உன்னை அண்டாது என்பார். தன்னை எத்தனையோ முறை தேள் கொட்டி இருந்தாலும் உறக்கத்தில் இருக்கும்போது மட்டும் தேள் கொட்டியதில்லை, காரணம் கோமதி அம்மன்தான் என்பார். இன்று வரை இரவு கோமதி அம்மனை நினைத்துக் கொண்டுதான் படுத்துக் கொள்கிறேன்.

இப்போதெல்லாம் தேள்களைப் பார்க்கவே முடியவில்லை. கல்யாண்ஜி மோடில் இருந்தால் தாவிக் குதிக்கும் தேரைகளைப் பார்த்து விட முடிகிறது, தேள்களைத்தான் பார்க்க முடியவில்லை என்று எழுதலாம். ஆனால் அதை எல்லாம் கல்யாண்ஜி போன்றவர்கள் எழுதினால்தான் சரியாக வரும்.

பின்குறிப்பு: அம்மா சொன்னது, “என் மாமியார், அதான் உன் பாட்டிக்கு விருச்சிக ராசி.” நான் கேட்டது, “எப்படி ராசி மாறிப் போச்சு?”

Share

1008 kozhukkattai and 108 thengai

1008 கொழுக்கட்டைகளும் 108 தேங்காய்களும்

கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு முன்பு, ‘பாம்பேவில் உனக்கு வேலை’ என்று என்னைப் பார்த்துச் சொன்னதும் எனக்குக் கொஞ்சம் கெதக் என்றுதான் இருந்தது. எப்படி பாம்பே போய் ஹிந்தி பேசி சமாளிக்கப் போகிறோம் என்கிற குழப்பம். மனதுக்குள் க, க, க, க என்று நான்கு வகையாகச் சொல்லிப் பார்த்துக் கொண்டாலும், நான்கும் ஒரே போல்தான் ஒலிக்கிறதோ என்ற சந்தேகமும் வந்தது.

ஆனால் சுதா அண்ணா இருக்கிறார். பார்த்துக் கொள்வார். அவர்தான் கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என்று சொன்னது. காலேஜ் படிக்கும்போதிருந்தே பாம்பேவுக்கு வந்துவிட வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். காலேஜ் முடித்த மறுநாளே அவருக்கு ஃபோன் செய்து, ஃபோனிலேயே ஒரே நொடியில் வேலை கிடைத்து, உடனே என்னை பாம்பேவுக்கு டிக்கெட் புக் செய்யச் சொல்லவும், நானும் என் நண்பன் ராமசுப்பிரமணியனும் நெல்லை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் டிக்கெட் புக் செய்தோம்.

முதல்முதலாக வி டி என்ற ஸ்டேஷனை அப்போதுதான் கேள்விப்படுகிறேன். அப்போதுதான் சத்ரபதி சிவாஜி என்று பெயரையும் மாற்றி இருந்தார்கள். ஆரம்பித்திலேயே இத்தனை குழப்பமா என்று தோன்றியது. சுதா அண்ணா என்னிடம், விடி இல்லை, சி எஸ், அந்த ஸ்டேஷனுக்கு வந்து இறங்கு, பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

டிக்கெட் புக் செய்து விட்டு, ஜங்ஷனில் இருக்கும் ப்ளூ ஸ்டார் ஹோட்டலில் கொத்து பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, என் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள். பாம்பே போக வேண்டுமா? அங்கே சமாளிக்க முடியுமா? தாமிரபரணி என்னாகும்? டிரைனில் அத்தனை தூரம் எப்படிப் போவது? ஆனால் வெளியே எதைப் பற்றியும் கவலைப்படாதவன் போல சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தேன்.

வீட்டுக்கு வர, என் முகத்தை விட அம்மாவின் முகம் வாடிக் கிடந்தது. பையன் தன்னை விட்டு பாம்பே போகப் போகிறானே என்னும் கவலை.

மறுநாள் மதியம் டிவி பார்த்துக் கொண்டே, ஒரு நிலையில் இல்லாமல் அரைத் தூக்கத்தில் படுத்திருந்தபோது, கதவு தட்டப்பட்டது. தட்டியது சேது. இன்னொரு நண்பன். ‘உடனே உன்னுடைய சர்ட்டிஃபிகேட் ஜெராக்ஸ் எல்லாம் காலேஜ் சார் வாங்கிக் கொண்டு வரச் சொன்னார்’ என்றான். ‘எல்லாம் அவங்க கிட்டயே இருக்குமே’ என்று சொல்ல, அவன் என்னைத்  திட்டி, ஜெராக்ஸ் எடுக்க அழைத்துச் சென்றான்.

காலேஜ் உதவியில், தூத்துக்குடியில் உள்ள டேக் கம்பெனியில் இருந்து இன்டர்வியூ வந்தது. இன்டர்வியூவில் கலந்துகொண்ட உடனே தெரிந்து விட்டது, எனக்கு நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்று. ஏனென்றால், கல்லூரியில் இரண்டாவது மதிப்பெண் நான். இன்டர்வியூவில் நன்றாக செய்தவர்களில் நிச்சயம் முதல் இடத்தில் இருப்பேன் என்கிற நம்பிக்கை. அதேபோல்தான் நடந்தது. எனக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துவிட்டது. ஆனால் எனக்கு அத்தனை செய்த சேதுவுக்கு வேலை கிடைக்கவில்லை. இன்று அவன் வேறு ஒரு கம்பெனியில், அதே கெமிஸ்ட்டாக இன்றும் மிகச் சிறப்பான பதவியில் இருக்கிறான் என்பது தனிக்கதை.

என் அம்மா மிகவும் சந்தோஷப்பட்டார். இனி என் பையன் பாம்பே போக வேண்டியது இல்லை. சுதா அண்ணாவை அழைத்துச் சொன்னேன். தூத்துக்குடி டேக் என்றால் அங்கேயே இருப்பதுதான் நல்லது என்று அவரும் சொல்லிவிட, பாம்பே முடிவுக்கு வந்தது.

டேக்-கில் வேலைக்குச் சேர்ந்து, முதல் மாதச் சம்பளம் வாங்கியதும் அம்மா மெல்ல சொன்னார், ‘பாம்பே போகாம தூத்துக்குடியில் உனக்கு வேலை கிடைத்தால், பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது என வேண்டியிருக்கிறேன்.’ அது என்ன பிரமாதம், செய்து விடலாம், இவ்வளவு நல்ல வேலைக்கு 108 தேங்காய் ஒரு பிரச்சினையா என்றோம். அது மட்டுமல்ல, 1008 கொழுக்கட்டையும் செய்து படைப்பதாக வேண்டி இருக்கிறேன் என்றார்.

1008 என்ற எண்ணைக் கேட்டதுமே கொஞ்சம் திக்கென்று இருந்தது. ஆனால் அம்மா அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. ‘அதெல்லாம் ரெண்டு மணி நேரத்தில் முடிச்சிரலாம்’ என்று சொல்லிவிட்டாள்.

ஒரு நல்ல நாள் பார்த்து, பாட்டபத்து அக்ரஹாரத்தில் இருந்த மாமிகளை எல்லாம் வீட்டுக்கு வரச் சொல்லி, கொழுக்கட்டை வைபவத்தை ஆரம்பித்தாள். அனைவரும் கொழுக்கட்டை செய்து கொடுக்க, முதல் ஈடு வேகவைத்து எடுத்த போது அதில் 30 லிருந்து 40 கொழுக்கட்டைகள் கூட வரவில்லை. அம்மாவுக்கு தலை சுற்றத் தொடங்கியது. இதே போல் இன்னும் 40 முறை செய்ய வேண்டும். அப்போதுதான் 1008 கொழுக்கட்டைகள் வரும். இதற்கே அரை மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு ஈடுக்குப் பத்து நிமிடம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, எட்டு மணி நேரம் ஆகுமே! இதில் அனைவரையும் கண்டிப்பாக வீட்டில் சாப்பிட வேண்டும் என்று வேறு சொல்லி இருந்தாள். யார் சமைப்பது? எப்படிப் பரிமாறுவது? எழுதப்பட்ட குழப்பங்கள்!

அப்போதுதான் ஒரு மாமி சொன்னாள். ‘இதில் யோசிக்க ஒன்றும் இல்லை. நான் சொல்வது போல் செய்யுங்கள்.’ அந்த மாமி என்ன சொன்னார்?

நேற்று ரீல்ஸில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் இட்லி மாவைக் கொதிக்கும் தண்ணீரில் ஊற்றுங்கள் என்று என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார் ஒர் பெண். எரிச்சலில் அதற்கு மேல் பார்க்கவில்லை. ஆனால் அந்த வீடியோவைப் பார்த்ததுதான், இப்போது நான் எழுதுவதற்கு அடிப்படை.

அந்த மாமி கொழுக்கட்டையைச் செய்து, இப்படி இட்லி போல வேக வைத்து எடுத்தால் நீண்ட நேரம் ஆகும், அதற்குப் பதிலாக இரண்டு ஸ்டவ் வைத்து, பெரிய இட்லி கொப்பரை இரண்டு வைத்து, நீரை நிறைய கொதிக்க வைத்து, கொழுக்கட்டையை அந்த நீரில் பொறித்து எடுத்து விடலாம் என்றார்.

தண்ணீரில் பொறித்து எடுப்பதா? யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்த மாமி விடாப்பிடியாகச் சொன்னார். மாவையும் வணக்கி, விட்டோம் உள்ளே வைக்கும் பூரணத்தையும் வணக்கிவிட்டோம், இனி நீரில் பொறித்தால் போதுமானது என்பது அவரது வாதம். சரி செய்து பார்ப்போம் என்று கேஸ் ஸ்டவ், சிலிண்டரை எல்லாம் கீழே வைத்து – சிலிண்டரின் மட்டத்தைவிட அடுப்பின் மட்டம் கீழே இருக்கக் கூடாது என்னும் அறிவியல் எல்லாம் அங்கே எடுபடவில்லை – தண்ணீரைக் கொதிக்க வைத்து, கொழுக்கட்டையைத் தண்ணீரில் பொறித்து எடுக்க ஆரம்பித்தார்கள்.

சுவை எப்படி இருக்கும்? பிள்ளையாருக்குப் படைக்காமல் சாப்பிட்டும் பார்க்க முடியாது. பிள்ளையாரின் தலைவிதி. அத்தனையையும் செய்து, இரண்டு முறை 1008 எண்ணி, ஒருவழியாகப் பிள்ளையாருக்குப் படையல் செய்து, வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது. கொழுக்கட்டை மோசமில்லை, நன்றாகவே இருந்தது. அன்று அக்ரஹாரத்தில் அனைத்து வீடுகளிலும் இந்தக் கொழுக்கட்டைதான்!

அம்மா எளிதாகச் சொன்னார், ‘வேண்டிக்கிறது நாமதான். ஆனா அதை செய்யறது என்னவோ பகவான்தான். இல்லைன்னா 1008 கொழுக்கட்டை இன்னைக்கு படைச்சிருக்க முடியுமா?’ இதெல்லாம் வக்கணையா இப்ப பேசு, ஆனா இனிமே 1008 எல்லாம் வேண்டி வைக்காதே என்று அம்மாவிடம் சொன்னோம். 108ன்னுதான் வேண்டிக்க நினைச்சேன், எப்படியோ 1008ந்னு வாய்ல அந்த நேரத்துல வந்துருச்சு என்றார். ‘அதுவும் பகவான்தான்!’ கொர்ர்.. பிள்ளையாரை சீட் பண்ணிட்டு இந்த டயலாக் எல்லாம் தேவையா என்று ஓட்ட ஆரம்பித்தோம்.

அடுத்து 108 தேங்காய் உடைப்பது. ஒரு வருடம் கழித்துத்தான் இதைச் செய்தோம். 108 தேங்காய் உடைப்பது அத்தனை பெரிய கஷ்டமில்லை என்று நினைத்தோம். 108 தேங்காய் வாங்கினால், அதை சைக்கிளில் கொண்டு வர முடியாது என்று உறைத்தது. மார்க்கெட்டில் இருந்து ஆட்டோ. நானும் என் நண்பனும் பைக்கில் வர, கோவிலுக்கு ஆட்டோ வந்து தேங்காய் மூட்டையை இறக்கிவிட்டுச் என்றது.

இருவரும் டிப் டாப்பாக டிரெஸ் செய்துகொண்டு, பாட்டபத்து பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நின்று கொண்டு, பிள்ளையாரை வேண்டிக் கொண்டு, பின்னர் நான் ஒரு தேங்காயை உடைத்தேன். ஜாலியாக இருந்தது. பத்து தேங்காய் உடைப்பதற்குள் வேர்க்கத் தொடங்கியது. இருபது தேங்காயில் கை வலிக்க ஆரம்பித்தது. 25வது தேங்காய், முதல் தேங்காயைப் போல அத்தனை சிதறவில்லை. டேய், நீயும் உடை என்று சொல்லவும், கூட வந்தவனும் உடைத்தான். ஆனது முதல் தேங்காய் சீறிப் பாய்ந்தது. அவன் 20வது தேங்காயிலேயே சோர்ந்துவிட்டான். இந்த வேலைக்கு இவ்ளோ டிப்டாப்பா டிரெஸ் பண்ணிட்டு வந்திருக்க வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே உடைத்தோம்.

பாட்டபத்து ஊரே எங்களைப் பார்த்தது. போவோர் வருவோரை எல்லாம், நீங்க ரெண்டு உடைச்சிப் பாருங்களேன், ஜாலியா இருக்கும் என்று கேட்க ஆரம்பித்து, நாங்களே சிரிக்க ஆரம்பித்து விட்டோம். ஒரு தேங்காய் உடைத்தால் ஓடி வந்து பொறுக்கும் சிறுவர்களில் ஒருவர் கூட 108 தேங்காய் உடைக்கும்போது வந்து பொறுக்கவில்லை. ‘எப்படியும் அவனுவளே தருவானுவ!’

கோவில் குருக்கள், எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன், நீங்க உடைங்கோ என்று சொல்லிவிட்டார். வேர்க்க விறுவிறுக்க 108 தேங்காயை உடைத்து முடித்தேன். அன்று பாட்டபத்து வீட்டில் அனைவர் வீட்டிலும் தேங்காய் சாதம்தான் இருந்திருக்கும்.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அம்மாவிடம் சொன்னது, கொழுக்கட்டைன்னா 108, தேங்காய்ன்னா ஒன்னு போதும் என்றேன்.

இன்னொரு வேண்டுதல் இருக்கு என்றார் அம்மா. ஏய் தாய்க்கிழவி! வெளியே சொல்லவில்லை. அம்மா சொன்னார், ‘இனிமே வேண்டுதல்னா பெருமாளுக்கு 101 ரூபாய்ன்னுதான் வேண்டிக்கப் போறேன். இப்பவும் அப்படித்தான் வேண்டிக்கிட்டேன். பயப்படாத.’

பின்குறிப்பு: ஒருமுறை சோளிங்கர் மலையில் ஒரு பெண் ஒவ்வொரு படிக்கும் குங்குமமும் மஞ்சளும் வைத்தபடி மலையேறினார். 1300+ படிகள்.

Share

The arrival of Ashokamitran

அசோகமித்திரன் வந்திருந்தார்

சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில் எழுதியதை நேற்றிரவு பொழுது போகாத நேரத்தில் படித்தேன். அதைத் தொடர்ந்து, இதுவரை எழுதாத ஒன்றைப் பதிவு செய்யலாம் என்று இதை எழுதுகிறேன்.

எனி இந்தியன் பதிப்பகம் சார்பாகக் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருந்த நேரம். அலுவலகம் திநகர் பிஎம்ஜி காம்ப்ளக்ஸில் இருந்தது. நான் கம்ப்யூட்டரில் வேலையாக இருந்தேன்.

அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், பழுப்பு நிறத் தோல் பையோடு வயது உலர்ந்த மனிதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அசோகமித்திரன் என்று பிடிபட எனக்கு ஒரு சில நொடிகள் ஆயின. சட்டென்று எழுந்து, வாங்க சார் என்றேன். அங்கே இருந்து நாற்காலியில் மெல்ல அமர்ந்துகொண்டு, நீங்கதான் பதிப்பகத்தைப் பாத்துக்கறீங்களா என்று தனக்குள் கேட்டபடி, தன் தோல் பையைத் திறந்து, எனி இந்தியன் பதிப்பித்த புத்தகங்களை வெளியே எடுத்தார்.

எனி இந்தியன் பதிப்பித்திருந்த புத்தகங்களை அவர் பார்வைக்கு அனுப்பி இருந்தோம்.

அந்தப் புத்தகங்களை மேஜை மேலே அடுக்கியவர், “இத்தனை புத்தகம் படிக்கறது கஷ்டம். பணம் போட்டுக் கஷ்டப்பட்டு பதிப்பிச்சிருக்கீங்க. வீணாகக் கூடாதுன்னு நேர்ல கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றார். எனக்குப் பாவமாகப் போய்விட்டது. இந்தப் புத்தகங்களைக் கொடுப்பதற்காக இந்த வெயிலில் இவ்வளவு தூரம் வரவேண்டுமா என்று கேட்டேன். வீடு பக்கத்தில்தான், நடந்தே வந்துவிட்டேன் என்றார். இன்னும் கஷ்டமாகிப் போனது.

நாங்கள் அனுப்பிய புத்தகங்களில் தனக்குத் தேவையான ஒன்றிரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டதாகச் சொல்லி, புத்தகங்களுக்கு நன்றியும் சொன்னார்.

“புத்தகத்துல தப்பே இல்லையே.. நெஜமா தமிழ் தெரிஞ்சவங்கதான் போட்டுருக்கணும்னு நினைச்சிக்கிட்டேன்” என்றார்.

“இந்தக் காலத்துல புத்தகமெல்லாம் இன்னும் விக்குதா?” என்று கேட்டார்.

டீ குடிக்கிறீங்களா சார் என்று கேட்டபோது, தண்ணீர் மட்டும் போதும் என்று சொல்லி, குடித்துவிட்டு, வேலை நேரத்தில் உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனார்.

அசோகமித்திரனை வியந்து படித்தவனை அசோகமித்திரனே நேரில் வந்து பார்த்தது (என்னைப் பார்க்க அவர் வரவில்லைதான்) பெரிய ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

இன்னொரு முறை அசோகமித்திரனைப் பார்த்தது, கோபால் ராஜாராமின் வீட்டுத் திருமணம் ஒன்றில்.

அதன் பின்னர் புத்தகக் கண்காட்சிகளில் நான்கைந்து முறை பார்த்துப் பேசி இருக்கிறேன்.

எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கவே கூடாது என்று சுஜாதா சொன்னதை மறுத்து சாரு நிவேதிதா எழுதி இருப்பது, இவற்றை எல்லாம் நினைவூட்டியது.

உண்மையில் சுஜாதா ‘வாசகர்களும் எழுத்தாளர்களும் சந்திக்கக் கூடாது’ என்று எப்போது சொன்னார்? அதுவும் என் (எங்கள்!) சந்திப்பின் போதுதான். அதைப் பற்றி சுஜாதாவுக்கான அஞ்சலியில் 2008ல் எழுதி இருக்கிறேன்.

//தேசிகன் மூலம் நண்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். ஆறு மணிக்கு சரியாக உட்லேண்ஸ் டிரைவ்இன் வந்த அவர் மிக இயல்பாக எல்லாருடனும் பேசினார். இப்படி சிலர் சேர்ந்து அவரை வறுத்தெடுக்கிறோமே என்று எல்லாருக்குமே தோன்றினாலும், விடாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். கமல், ரஜினி, சிறுகதை, தொடர்கதை, பிரபந்தம் என ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டோம். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னார். கவிதைகள் பற்றிப் பேச்சு வந்தபோது என்னைப் பார்த்து ‘நீங்ககூட கவிதை நல்லா எழுதுறீங்களே’ என்றார். இரண்டு முறை சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு அபுல்கலாம் ஆசாத்தின் கஜல் புத்தகத்தையும் ஹரிகிருஷ்ணனின் அனுமன் வார்ப்பும் வனப்பும் புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். இனிமையாக முடிந்த அந்த சந்திப்புக்குப் பின்னர், இரண்டு நாள்கள் கழித்து வந்த ஆனந்தவிகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில், இந்த சத்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இதன் மூலம் அவருக்குக் கிடைத்த செய்தியாக ‘வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான இடைவெளி அவசியம்’ என்பதைச் சொல்லியிருந்தார். சந்திப்பில் பங்குகொண்ட அனைவருக்குமே கொஞ்சம் திக்கென்றிருந்தது. சுஜாதாவுடன் சந்த்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பலர் இடையே வந்து அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்குவதும் அவரது ஃபோன் நம்பர் கேட்பதும் அவரது வீட்டுக்கு வரலாமா என்று கேட்பதுமாக இருந்தார்கள். அவருடைய பாப்புலாரிட்டியின் காரணமாக அவர் எப்போதும் வாசகனுடன் ஒரு இடைவெளியை வைத்திருக்க விரும்பினார். அதுமட்டுமின்றி என் கணிப்பில் அவர் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். தனிமையைக் கொண்டாடுவாரோ என்று கூட நினைத்திருக்கிறேன். தேசிகனிடம் ஏன் கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா இப்படி எழுதினார் என்று கேட்டபோது, கற்றதும் பெற்றதும் பகுதியைப் படித்துவிட்டு பலர் அவருக்கு ·போன் செய்து, நாங்களும் டிரீட் தருவோம், எங்களுடனும் பேசவாருங்கள் என்று அழைத்தார்களாம், அதைத் தவிர்க்கவே சுஜாதா அப்படி எழுதினார் என்று விளக்கம் கூறினார்.//

இப்போது சாருவின் விஷயத்துக்கு வருவோம். எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கலாமா? கூடவே கூடாது. எழுத்தாளர்களுக்காக அல்ல. வாசகர்களுக்காக.

Share