சீதக்காதி

சீதக்காதி திரைப்படம் பார்த்தேன். மிகவும் வேறுபட்ட முயற்சிகளுக்குரிய படத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்காமல் அதனளவில் நின்று பார்ப்பது நல்லது. ஆனால் சில வேற்று முயற்சித் திரைப்படங்களை நாம் இந்த நல்ல அளவுகோலுடன்கூட அணுகிவிடமுடியாது. சீதக்காதியை அணுகலாம். இதுதான் இதன் முதல் ஆறுதல்.

படத்தின் முதல் சில நிமிடங்கள் மட்டுமே வரும் விஜய் சேதுபதியால் எந்த ஒரு நாடகக் காட்சியிலும் சிறப்பாக நடிக்கமுடியவில்லை. அவர் ஔரங்கசீப்பாக நடித்தாலும் விஜய் சேதுபதியாகவே இருக்கிறார். அதிலும் அவர் தூய தமிழ் வசனத்தைப் பேசும்போதெல்லாம் சென்னைத் தமிழில் பேச முற்படும் அவர் முகம் மட்டுமே கண் முன்னால் வருகிறது. ஆனால் அவர் இறந்தபின்பு அவரது ஆன்மா புகுந்து நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் அசத்திவிடுகிறார்கள். படத்தின் மிகப்பெரிய பளஸ் இதுவே.

இது தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய ஒரு பகடியாகவும், அதைவிட, தமிழ்த் திரையுலகத்தையும் ரசிகர்களையும் பற்றிய கூடுதலான பகடியாகவும் அமைந்திருக்கிறது. பல நுணுக்கமான காட்சிகளில் இயக்குநர் தென்படுகிறார். இதுபோன்ற பகடித் திரைப்படத்தில் எதைப் பகடியாக்குகிறார்களோ அதில் சரணடையவேண்டி வரும். இதிலும் அப்படி வருகிறதுதான். ஆனால் அதை சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

இத்தகைய படங்களில், இறுதியில் என்ன செய்வது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்ள நேரும். இத்திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல. பகடியாகவும் ஒன்றைப் பயன்படுத்தி, அதை அறிவியல் ரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டிய சிக்கலும் இப்படத்துக்கு கூடுதலான பிரச்சினையாக இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஒரு வசனத்தில் படத்தை முடிப்பதெல்லாம் வேறு வழியின்றி, இருக்கும் வழிகளில் சிறந்த ஒன்றென இதை ஏற்றுக்கொண்டு செய்வது.

அய்யா நடிக்க வராவிட்டால் என்னாகும் என்பதை ஒரே மாதிரியான தொடர்ச்சியான நீளமான இரண்டு காட்சிகளில் காண நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. இதைத் தவிர்த்திருந்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட மலினமான பேய் நகைச்சுவைப் படம் அளவுக்குப் போய்விட்டது. அக்காட்சிகளில் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பால் கொஞ்சம் சிரிக்கமுடிகிறது என்பதும் உண்மைதான்.

இந்தக் கதையை இன்னும் எப்படி வேறு விதமாகக் கையாண்டிருக்கலாம் என்று யோசித்ததில் தோன்றியது, முதலில் வரும் அய்யாவாக வேறு ஒரு முக்கியமான நடிகரை (கமல்!) நடிக்கவைத்துவிட்டு, அதற்கு அடுத்து அவர் ஆன்மா புகும் ஒரு நடிகராக விஜய் சேதுபதியை மாற்றி இருந்தால் படத்துக்கு வேறொரு பார்வை கிட்டி இருக்கும். ஆனால் இப்படி நடிகர்களை மாற்றிக்கொண்டே செல்லும் திரைக்கதையை மாற்றவேண்டி இருக்கும்.

ஒட்டுமொத்தமாக படத்தின் மேக்கிங் தரம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். பல காட்சிகள் சாதாரண தொலைக்காட்சி நாடகங்களைப் போல இருந்தன.

அய்யா என்ற பெயரை ஈவெரா என்று யோசித்துப் பார்த்தேன். கொஞ்சம் திக்கென்று இருந்தது. பின்னர் சிரிப்பாகவும் வந்தது. (கமான் பாலாஜி தரணிதரன், நீங்க என்ன நினைச்சு இதைச் செஞ்சீங்க?)

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பெயர். சீதக்காதி. நல்ல யோசனை. இதைப் போன்ற படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நினைத்துப் பாவமாக இருந்தது. பாலாஜி தரணிதரனுக்கு அடுத்த படம் கிடைத்து அது ஒட்டுமொத்தமாக எல்லா வகையிலும் நல்லதாக அமையட்டும்.

பின்குறிப்பு: பிராயசித்தமாக பூர்ணம் விஸ்வநாதனின் ஊஞ்சல் நாடகத்தைப் பார்க்கவேண்டும். அதில் நடிக்கும்போது அய்யா செத்துப் போவது நல்ல விமர்சனம்தான்.

Share

இளையராஜா பேட்டி – 1979

இளையராஜா 1979ல் அப்துல் ஹமீதுக்கு அளித்த பேட்டி. மிக வேகமாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் இளைய இளையராஜாவைக் கேட்கவே சந்தோஷமாக இருந்தது. அப்போதே கடவுள் என்றெல்லாம் பதில் சொல்லி இருந்தாலும், இப்போதைய அளவுக்கு ஆன்மிக பதில்கள் இல்லை. மிகப் பெரிய கனவுகளுடன் பேசி இருக்கிறார். இவரது இசை ஒரே போல இருக்கிறது என்ற புகார் அப்போது இருந்திருக்கிறது. அதற்குத் தெளிவாகப் பதில் சொல்கிறார். கர்நாடக சங்கீதப் பயிற்சி இல்லாமல் சிறந்த இசையமைப்பாளராக முடியாது என்று சொல்லி, கூடவே கர்நாடக இசை விற்பன்னர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பதில்லை என்ற விமர்சனத்தையும் சொல்கிறார்.

இளையராஜா தான் இசையமைக்க வந்த காலம் தொட்டுத் தனக்கு முன்பிருந்த திரை இசைக் கலைஞர்களைக் கொண்டாடத் தவறவே இல்லை. இப்பேட்டியிலும் எம் எஸ் வியையும் எஸ்.வி. வெங்கட்ராமனையும் (காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு இசையமைத்தவர்) குறிப்பிட்டுச் சொல்கிறார். சி.ஆர். சுப்புராமன் இசையமைத்த எல்லாப் பாடல்களும் பிடிக்கும் என்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது இப்படி ஒரு வரிகூடச் சொல்லி இருக்கவில்லை. அப்போதைக்கு அது ஒரு விநோதமான செயலாக எனக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் ஒரு இதழில் வெளிவந்திருந்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ரீதியில் சொல்லி இருந்தார்: இந்த நேரத்தில் என்னைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நானும் பேசாமல் இருப்பது சரியானது என்ற பொருளில் சொல்லி இருந்தார். இது எனக்கு ஒரு சிறிய புரிதலைக் கொடுத்தது. இளையராஜா தனது முன்னோர்களைக் கொண்டாடியதையும் ரஹ்மான் வெளிப்படையாகப் பேசாததையும் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ள முயன்றேன். ஒன்று, தலைமுறை இடைவெளி. இன்னொன்று, ரஹ்மானுக்கு வாய்ப்பளித்தவர்கள் இளையராஜாவுக்கு எதிர்ப்புறம் நின்றவர்கள். ராஜாவுக்கு இந்தச் சிக்கல்கள் இருந்திருக்கவில்லை. இதையெல்லாம் மீறி, ரஹ்மான் ராஜாவைக் கொண்டாடியிருக்கவேண்டும் என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இதில் எப்போது பிரச்சினை வருகிறது என்றால், ஏன் ராஜா ரஹ்மானைக் கொண்டாடவில்லை என்று ராஜாவின் எதிர்ப்பாளர்கள் கேட்கும்போதுதான். இருவரும் ஒருவரை கொண்டாடிக்கொள்ளாமல் இருப்பது கூட ஒருவகையில் சரிதான். ஆனால் அது நடக்கவேண்டும் என்றால் அது ரஹ்மான் தரப்பிலிருந்துதான் தொடங்கி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

தனக்குப் பிடித்த சிறந்த இசைக்கருவி தம்புரா என்று ராஜா சொல்லி ஒரு பிரச்சினை அந்தக் காலத்தில் ஓடியிருக்கிறது. இன்று ராஜா மாணவிகள் மத்தியில் கல்லூரியில் பேசும்போது தனக்குப் பிடித்த இசைக்கருவி எது என்ற கேள்விக்குச் சொன்ன பதில், மனம்! எப்பேற்பட்ட நகர்வு.

நம் தமிழ் இயக்குநர்களின் பல திராபையான படங்களில் ராஜா இசையமைத்து உன்னதமான பாடல்களைத் தந்திருக்கிறார். ஆனாலும் இந்த இயக்குநர்களைக் கொண்டாடவே வேண்டும். ஒரே காரணம், இப்படியான பல பொக்கிஷங்களுக்கான சூழலைத் தங்கள் திரைப்படங்களில் உருவாக்கியதற்காகத்தான். இன்று வரும் இசையமைப்பாளர்களுக்கு இத்தனை விதங்களில் பாடல் அமைப்பதற்கான நாடகத்தனமான சந்தர்ப்பங்கள் வாய்க்கப் போவதே இல்லை. அந்த வகையில் அந்த இயக்குநர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

Share

பேரன்பு – துயரத்துள் வாழ்தல்

கத்தி மேல் நடக்க வேண்டிய ஒரு கதை. மிகக் கவனமாகவே கையாண்டிருக்கிறார் ராம். இயக்குநர் ராமின் திரைப்படங்களில் எப்படியோ தோற்றம் கொள்ளும் (அல்லது அப்படி எனக்குத் தோன்றும்) ஏதோ ஒன்றின் மீதான வெறுப்பு இத்திரைப்படத்தில் இல்லை. எனவேதான் படத்துக்கான பெயரைக் கூடப் பேரன்பு என்று வைத்துவிட்டார்.

ராம் திரைப்படங்களில் உள்ள பிரச்சினை யாரோ ஒருவரின் அதீத நடிப்பாக இருக்கும். தங்கமீன்கள் திரைப்படத்தில் அவரே அப்படியாக இருந்தார். அந்தத் தவறை எக்காரணம் கொண்டும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே மம்முட்டியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மூழ்கிக் கொல்லும் வதை வரும் போதிலும் ஒரு இம்மி அளவு கூடத் தன் நிலையில் இருந்து விலகிவிடாமல் ஒரு கதாபாத்திரம். அதை அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் மம்மூட்டி. தங்க மீன்கள் படத்தில் அதீத நடிப்பு செய்த அதே பெண் இந்தப் படத்தில் தன் நடிப்பின் மூலம் அசர வைத்திருக்கிறார். முகத்தையும் உடல்மொழியையும் முதலில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரியாக அவர் வைத்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அப்படி இருக்கும் மனிதர்களின் வேதனை என்ன என்பதை நினைக்க வைத்து பதட்டத்தையும் கொண்டு வருகிறார்.

இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களின் செக்ஸ் சார்ந்த சிந்தனைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பலமுறை நான் யோசித்திருக்கிறேன். இளவயதில் என் நண்பர்கள் பலர் செவிலியராக இருந்தவர்களே. அதில் சிலர் மனநலக் காப்பகத்தில் பணியாற்றியவர்கள். இது போன்ற மனிதர்களின் பல கதைகளைச் சொல்லி இருக்கிறச்ர்கள். அப்போதே எனக்கு சொல்லமுடியாத மனபாரம் அழுத்தி இருக்கிறது. இப்படி குடும்பத்தில் யாருக்கும் நேராத வரை எல்லாம் நமக்கு மிக எளிதான, வருத்தப் படும் சம்பவம் மட்டுமே. ஆனால் அதே துயரில் வாழ்வது வேறு. இதே பிரச்சினையை ஒரு படம் முழுக்க அலசியிருக்கிறார் ராம்.

அதிரவைக்கும் காட்சிகள் படத்தில் இரண்டு மூன்று உண்டு. அதில் உச்சகட்டத்தில் வரும் பதற்றம் தரும் காட்சியின் நீளம் கொஞ்சம் அதிகம். இசையற்ற அலை ஓசை இன்னும் காதில். மற்ற இரண்டு காட்சிகள் மிகச் சிறியவை. சில நொடிகள் கூட நீடிக்காதவை. இக்காட்சிகள் தரும் பதற்றமும் கொஞ்ச நஞ்சமல்ல. முதலாவது, தன் மகளுடன் ஒரே படுக்கையில் அன்புடன் உறங்கும் மம்முட்டி, மறுநாள் எழுந்து பார்க்கும் பொழுது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், சோர்ந்து போய் ஒருநொடி தலையில் கை வைத்துக் கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சியில் அந்தப் பெண் ஒரு பொம்மைக்கு வண்ணம் தீட்டுவது. இது போன்ற சில காட்சிகள் நம்மை வருத்தப்பட வைக்கத்தான் செய்கின்றன.

இந்தப் படத்தில் இரண்டு அஞ்சலிகள். முதல் அஞ்சலி நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அழகாக வருகிறார். அழகாக நடிக்கிறார். இரண்டாவது அஞ்சலி, அஞ்சலி அமீர், மலையாளி. மலையாளத்தில் பிக் பாஸ் வெளியானபோது அதில் இவரும் ஒரு போட்டியாளராக நடுவில் வந்து சேர்ந்து கொண்டார். திருநங்கை. இந்தப் படத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பது இவரே. மிக அழகாக இருக்கிறார்.

இப்படத்தின் பிரச்சினைகள் என்ன என்று பார்த்தால் படம் மிக மிக மெல்லவே நகருகிறது. இதுபோன்ற படங்களுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல என்றாலும் கூட, முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரைக்குமான எங்கேயும் நகராத திரைக்கதை ஒரு சலிப்பைக் கொண்டு வருகிறது. இப்படி வெளிப்படையாகச் சொல்வதன் மூலம் மிகச் சிக்கலான ஒரு விஷயத்தைக் கையாளும் படத்தை மலினப்படுத்தக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடனேயே சொல்கிறேன். அதேசமயம் அந்தச் சலிப்பு ஏற்படுவது உண்மைதான். தமிழ்நடிகை அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் குழப்பமாக இருக்கிறது. தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு நாவலின் அத்தியாயங்கள் போல நகர்ந்தாலும் ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டிய புதிர்த்தன்மையைப் படத்தில் அஞ்சலி பாத்திரத்தில் நுழைத்தது ஏதோ ஒரு வகையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் நல்லவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வசனத்தை வைப்பதற்காகவே அந்தக் காட்சியில் புதிர்த்தன்மை விளக்கப்படாமல், வேண்டுமென்று நுழைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஏற்கனவே மணமான ஒரு பெண் தன்னையே இழக்கத் துணிவது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இதற்கான காரணத்தை விளக்கி இருந்தால் கூட இந்தக் குழப்பம் வந்திருக்காது. அது ஒரு க்ளிஷே என்ற அளவில் மட்டும் போயிருக்கும்.

குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் அஞ்சலியைச் சுற்றி நிகழும் காட்சிகள் தேவையற்ற ஒரு திரில்லிங் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவர் ஏன் குழந்தையைக் கொலை செய்யும் அளவுக்குப் போக வேண்டும் என்பதெல்லாம் குழப்பத்தைத் தரும் தேவையற்ற காட்சிகள்.

திருநங்கையாக வரும் அஞ்சலி படத்துக்கு உள்ளே வரும் காட்சியிலேயே அவர்தான் பேரன்பைத் தரப் போகிறார் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற படங்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அவற்றை எப்படி வளர்ப்பது, முடிப்பது என்பதுதான். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பாவும் மகளும் ராசியாகும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இதைச் சமாளித்திருக்கவேண்டும்.

இந்தப் படத்தில் என்னளவில் நேர்ந்த பிரச்சினை, எந்தக் காட்சிடுடனும் முதலில் உணர்வுரீதியாக இணைந்து கொள்ள முடியாமல் போனதுதான். எடுத்த எடுப்பிலிருந்து பிரச்சினைக்குள் படம் நுழைந்ததால் வந்த பிரச்சினையாக இருக்கலாம். இதே போன்ற படத்தை, இந்த அளவுக்குத் தீவிரமாக, சிக்கலான ஒன்றைக் கையாளவில்லை இல்லை என்றாலும், மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தை ஒப்பு நோக்கலாம். அஞ்சலி திரைப்படம் சிரிப்பும் கும்மாளமுமாகத் தொடங்கி, அதற்கே பழகிப்போன நம்மை சட்டென உள்ளிழுத்துக்கொண்டு, அதற்குப் பிறகு குடும்பத்தில் நுழையும் ஒரு குழந்தையின் மூலம் அந்த பிரச்சினையைக் கையாளத் துவங்குகிறது. ஒரு வணிக சினிமாவுக்கான தேவை இதில் இருந்தாலும் கூட, சொல்லவேண்டிய பிரச்சினையின் தீவிரத்தைக் கொண்டு சேர்க்க அது ஓரளவுக்கு உதவியது என்றே நம்புகிறேன். இந்தப்படம் அது போன்ற மாயையில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்துக் கொள்ளுமா என்பது குறித்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க துணிந்ததற்காகவே இயக்குநர் ராம் பாராட்டப்பட வேண்டும். அதிலும் இதற்கு முன் அவரது படங்களில் இருந்த எந்தக் குழப்பங்களும் பிரச்சினைகளும் இந்தப் படத்தில் இல்லை. மிகத் தெளிவான கொதிக்கும் நீரோடை போல இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

பின்குறிப்பு: இசை யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசை தொடக்கக் காட்சிகளில் மிக சுமாராக இருந்தது. பின்னர் பரவாயில்லை.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்.

Share

குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை

பத்தாவது வருட ஹிந்து ஆன்மிக – சேவை அமைப்புகளின் கண்காட்சி இந்த வருடம் வேளச்சேரியில் இருக்கும் குரு நானக் கல்லூரியில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 400 அரங்கங்கள் இருக்கலாம். மிக பிரமாண்டமாக உள்ளது. நாம் முன்பின் கேள்விப்பட்டிராத பல அமைப்புகளை இந்தக் கண்காட்சியில் பார்க்கமுடிகிறது. அனைத்துச் சாதி அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்துத் தத்துவ அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்து மடங்களைச் சேர்ந்த அமைப்புகள் எனப் பல வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்பது வருடங்களுக்கு முன்பு, இரண்டாவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அப்போதே மிகச் சிறப்பாக உள்ளரங்க அமைப்புகள் இருந்தன. ஆனால் அளவில் சிறியதாக இருந்த நினைவு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சுற்றிப் பார்த்துவிடலாம். ஆனால் இன்று நான்கு மணி நேரமாவது தேவைப்படும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

எவ்வித வேறுபாடும் இன்று ஒரே குடைக்குள் அனைத்து அமைப்புகளின் அரங்குகளையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அரங்க அமைப்புகள் மற்றும் மனித உதவிகள் எல்லாமே தன்னார்வலர்களால் நடைபெறுகிறது என்பது சிறப்பம்சம். உண்மையில் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு உதவுகிறார்கள். அரங்கத்துக் காரர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாமே இலவசம். உணவு உறைவிடம் உட்பட. பாராட்டப்படவேண்டிய அம்சம் இது.

இந்த முறை கண்காட்சி நாட்டுப்பற்றை மையமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. நான்கைந்து டெம்போக்கள் நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட பாதகைகளுடன் வருவதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எதாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும் என்று யோசித்து இந்த முறை அந்தமான் சிறையின் அட்டைப்பட மாதிரியை சாவர்க்கருடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள். ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த இடத்தின் மாதிரியையும் அமைத்திருக்கிறார்கள். அதோடு ஒலி-ஒளி அமைப்பும் இருக்கிறது. இரண்டு மூன்று ஒலி ஒளி அமைப்புகள். தீரன் சின்னமலை, பகத் சிங் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்களை ஒலி-ஒளியாக வடித்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் ஒலி ஒளி அமைப்பு தரும் அனுபவம் அத்தனை நன்றாக இல்லை. அடுத்தமுறை மெருகேற்றுவார்கள் என நினைக்கிறேன்.

ஒளிவில்லை அரங்கங்கள் (விஷுவல் ஸ்லைட் ஸ்டால்) அமைத்து அங்கே பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைக் காண்பிக்கிறார்கள். பாரத மாதா ஆலயம், கோ ரக்‌ஷா பகுதி என்றெல்லாம் அமைத்திருக்கிறார்கள். பாரத மாதா கோவிலில் நிஜ யானை பார்க்கவே கம்பீரமாக இருக்கிறது.

அரங்கத்துக்குள் நுழையும் முன்பே பல கோவில்களின் மாதிரிகள் தென்படுகின்றன. பூஜை உண்டு. முக்கியமாகப் பிரசாதம் உண்டு. அரங்கத்துக்குள்ளேயும் பல ஸ்டால்களில் பிரசாதமாக சுண்டலெல்லாம் தருகிறார்கள்! ருத்ராட்சம் இலவசம், விபூதி குங்குமத்தோடு பெற்றுக்கொள்ளலாம். திடீர் திடீரென மணிச் சத்தத்துடன் பூஜையும் நடக்கிறது. ஊதுபத்தியை கொளுத்திவிட்டு உடனே அணைத்து வைக்குமாறு அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். விழுப்புரம் தங்கக் கோவில் அம்மா அரங்கத்தைக் கோவில் போலவே வைத்திருக்கிறார்கள். இப்படி இன்னும் சில கோவில்கள் உள்ளன.

அந்தமான் சிறை மற்றும் ஜாலியன் வாலா பாக் மாதிரியை வடிவமைத்தவர் விட்டல் என்று சொன்னார் எழுத்தாளர் ரமணன். இந்த ரமணன்தான், ஒளிவில்லைக் காட்சிக்கும் அந்தமான் சிறைக்கான ஒலிப்பதிவுக்கும் மற்றும் அங்கிருக்கும் பல தலைவர்களின் தட்டிகளுக்குமான குறிப்புகளை எழுதியவர். விட்டலும் ரமணனும் பாராட்டுக்குரியவர்கள்.

வலம் அரங்கு இருக்கும் வரிசைக்கு அடுத்த வரிசையில் உள்ள ஓர் அரங்கில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நேரத்தைச் சொல்லி, கூடவே குருஜி கோல்வல்கரின் ஞான கங்கையில் இருந்து ஒரு வரியைச் சொல்கிறார்கள். அந்த அரங்கைத் தேடிச் சென்று, ஞான கங்கையின் ஆடியோ கிடைக்குமா என்று கேட்டேன். ஞான கங்கையில் இருந்து சில வரிகளைத் தானே தேடி ஒலிப்பதிவு செய்து கொண்டு வந்ததாகச் சொன்னார் அந்த அரங்கின் உரிமையாளர். அந்த அரங்கில் சிவராஜ்ஜியம் நிச்சயம், சிவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் எதோ ஒரு வாசகம் கண்ணில் பட்டது! சரியான வரிகள் நினைவில்லை.

இன்று வேலை நாளாக இருந்தாலும் மாணவர்கள் நிறைய பேர் பள்ளி ஆசிரியர்களுடன் வந்திருந்தார்கள். ஒரு ஆசிரியர் நிறைய மாணவர்களை உட்கார வைத்து, ஒளிவில்லை அரங்கில் காண்பிக்கப்பட்ட பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்தக் கண்காட்சிக்குக் கூட்டிக்கொண்டு வருவதால் பெரிய அளவுக்கு நமக்கு அனுபவமோ அறிவோ ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால் நம் எதிர்கால சந்ததி ஹிந்துவாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் இந்தக் கண்காட்சிக்கு வரவேண்டியது அவசியம். ஹிந்து ஒற்றுமை என்பது நிச்சயம் தேவை என்ற எண்ணத்தை இந்தக் கண்காட்சி நிச்சயம் உருவாக்கும்.

இந்தக் கண்காட்சியின் ஒரே குறை, ஹிந்து அறிவியக்க ரீதியிலான வெளிப்பாடு மிக மிகக் குறைவாக உள்ளது. ஹிந்து அமைப்புகள் என்றாலே ஆன்மிக மற்றும் சேவை என்கிற இரண்டு எண்ணங்கள் மட்டுமே பொதுவாகத் தோன்றுவிடுகின்றன போலும். அறிவியக்க ரீதியாக ஹிந்து இயக்கங்கள் விழிப்புக் கொள்ளாதவரை ஹிந்து அமைப்புகள் கருத்தை உருவாக்கும் இடத்துக்குச் செல்வது மெல்லவே நிகழும். இனிவரும் காலங்களில் இதற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அமைப்புகளுக்கு வேறு ஒரு தளத்தில் முக்கியத்துவத்தை அதிகமாக்கும்.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்

Share

ததும்பும் குவளை (கவிதை)

ததும்பும் குவளை

கால் நீட்டி பின்சாய்ந்து
சோபாவில் அமர்ந்திருக்கிறேன்
முன்னிருக்கும் டீப்பாயிலுள்ள
குவளையில்
ததும்பிக்கிடக்கிறது நீர்
அலை வரும், மீன் உழலும்
அருகில் அமர்ந்து பார்த்திருக்கிறான் அவன்.
அம்மா தன் பங்குக்கும்
மனைவி ஆசையுடனும்
மகனும் மகளும் 
உறவினர்கள் நண்பர்கள்
தொடர்ந்து குவளையில் நீரூற்ற
நிறைந்தும் நிறையாமல்
ததும்பிக்கொண்டே இருக்கிறது குவளை.
நீங்களா என்று கேட்டேன்.
சூழ நின்றொலிக்கும்
சத்தங்கள் நின்று
சட்டென நிசப்தமாக
நானும்தான் என்றவன்
தன் முறைக்காகக் 
காத்திருப்பதாகவும் சொன்னான்.

Share

பேருரு (கவிதை)

பேருரு

பாட்டி பேரனுக்குக் கதை சொல்லத் துவங்கும்போது
சட்டெனத் துளிர்க்கும் ஒரு வனமும்
அதில் சில தும்பிகளும்
அவற்றின் பின்னே ஓடும் பால்ய நானும்
கையில் சோற்றுண்டையுடன் துரத்தும் அம்மாவும்
இப்போதெல்லாம் வருவதே இல்லை

எப்போது சொட்டுமெனக்
காத்திருக்கும் நீரின் துளியோ
காற்றில் ஆடக் காத்திருக்கும்
மரத்து இலையோ
உடல் விதிர்க்கச் செய்யும் வனப்போ
எல்லாமே நானறியாமல்
என்னைக் கடந்திருக்கத்தான் வேண்டும்

கொந்தளிப்பிலோ
மகிழ்ச்சியிலோ
சோகத்திலோ
சிரிப்பிலோ
பெரும் கடல் அலையிலோ
நிசப்ததிலோ
ஒரு கணமும் நிலைக்கமுடிவதில்லை

எங்கோ ஏனோ காரணமின்றி
ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்புகள்
அடிக்கடி நினைவுக்கு வர
மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்
சிற்றுருவாய் மிகச் சிற்றுருவாய்.

Share

இரண்டு கவிதைகள்

கனவுகளின் விளையாட்டு

கனவுகளின் சிக்கலான வரைபடம் ஒன்றை
நானே வரைந்து
உள்ளே சென்றேன்
வரைபடத்தின் புள்ளிகளில் சிக்கித்
தொலைந்து போகுமாறு
விதித்துக்கொண்டிருந்தேன்.
சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தது.
சிறிது நேரத்தில்
வெளியேறத் தெரியாமல்
விக்கித்து நின்றபோது
எதிரே தோன்றியவன் சொன்னான்,
இன்னொரு கனவிலிருந்து வந்தவன் என.
தன் கனவுக்குள் அழைத்துச் சென்றான்.
என் கனவுகளில் கொஞ்சம் எடுத்துக்கொண்டான்.
இரண்டு கனவுகளில்
எது யாருடையது என்ற குழப்பம் வந்த பொழுதில்
அவன் கனவுகளிலிருந்து வெளியேறியபோது
தூங்கிக் கொண்டிருந்த நான்
கண்விழிந்த்துச் சிரித்தான்.

2

இரவின் நீளத்தில்
எங்கெங்கோ செல்லும் நினைவுகளில்
ஒரு வாளேந்தி விரட்ட
முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்கிறான்.
கண்களில் கைகளில் உடலெங்கும் பயம் பரவ
ஒரு கணம் மின்னி மறைகிறது
துரோகங்களும்
வஞ்சகங்களும்
கேலிகளும்
அவமானங்களும்.
புரண்டு படுக்கும்
பிஞ்சுக் குழந்தையின்
உள்ளங்கை முகத்தில் பட
சிறு சூட்டில் அடங்கிப் போய்
வான் விட்டு மண் வீழ்கிறேன்
ஒரு மழைத் துளியென.

Share

மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு பதில்

மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கிறார், என்னுடைய வேலை எழுத்தாளர்களைக் கடத்தி வருவது என்று. பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்குமாம். இவர் எழுதும் இதே வெளியில்தான் நான் கடத்தி வருவதாக அவர் நினைத்துக்கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்களும் இதைப் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள். நான் பொய் எழுதுவதுமில்லை, பேசுவதுமில்லை. மேலும் ஒரு பதிப்பாளர் எழுத்தாளர் உறவின் சிக்கல்களை, அன்னியோன்னியத்தை வெளியில் சொல்வதுமில்லை. ஆனால் இதைப் படிக்கும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் தெரியும், கடத்தப்பட்டு வந்தார்களா இல்லையா என்பது.

உயிர்மையில் சாரு இருந்தபோது சாரு எழுதிய பதிவுகளே உதாரணம். தனியே எதற்கு இன்னொருவர் சொல்லவேண்டும்?

இன்னும் இன்றும் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அனைத்து முன்னாள் உயிர்மை எழுத்தாளர்களின் பதிவுகள் மட்டும் மனுஷ்யபுத்திரனுக்கு மறந்துவிடும் அல்லது கண்ணுக்குப் படாது. பழி மட்டும் இன்னொருவர் மேல்.

இலக்கிய அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை, திறமையும் இல்லை. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. மற்றபடி சாருவின் இலக்கியப் பங்களிப்புக்குப் பக்கத்தில்கூட நான் இல்லை. அதை மனுஷ்யபுத்திரன் வலிந்து சொல்லவேண்டியதுமில்லை. ஏனென்றால் நான் அதை க்ளெய்ம் செய்யவே இல்லை. ஒருவகையில் மனுஷ்யபுத்திரனே இந்த ஒப்பீட்டைத் தொடங்கி வைக்கிறார்!

சாதாரணமாக ஒரு பதிவு எழுதப்போய் அது இப்படியெல்லாம் போவது சுவாரஸ்யம்தான்.

இன்னும் என்னவெல்லாம் வருகிறது எனப் பார்க்கலாம்.

Share