மடங்கள்

எனக்கு மடம் என்பது சின்ன வயதில் எப்படி அறிமுகமானது என்றால், வருடத்துக்கு மூன்று நாள்கள் அங்கே சாப்பிடப் போவோம் என்ற அளவில்தான். அதுவும் எனக்கு எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்களே. பின்னால் அதற்குள்ளே இருந்த பிரிவுகள் எல்லாம் தெரியவந்தபோது வெட்கமாகிப் போனது. போன எல்லா மடங்களிலும் ராகவேந்திரரையே மனதுக்குள் நினைத்து, பொத்தாம் பொதுவாக ‘பூஜ்யாய ராகவேந்திராய’ சொல்லிக் கும்பிட்டிருக்கிறேன். தெரிந்ததும் அந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே. எங்கள் மடமான வ்யாஸராய மடம் என்பது கூட, கல்யாணக் காரியங்களுக்கு மட்டுமே யாரோ சொல்லி, அந்தப் பெயர் என் செவிக்கு எட்டும் முன்னரே மறைந்துபோன ஓர் ஒலியாகவே இருந்தது.

ராகவேந்திரரின்ஆராதனையின் மூன்று நாள்களில், அம்மா எங்களை வம்படியாக அழைத்துக்கொண்டு மடத்துக்குப் போவாள். ஆராதனை என்பது ஸ்ரீ ராகவேந்திர் ஜீவ சமாதி அடைந்த நாள் என்பது கூட எனக்கு அப்போது தெரியாது. மதுரையில் பேச்சியம்மன் படித்துறையில் இருக்கும் மடத்துக்குத்தான் அதிகம் போவோம். அதற்கு முன்னரும் பின்னரும் திருநெல்வேலி ஜங்க்‌ஷனில் இருக்கும் மடத்துக்குப் போயிருந்தாலும் அது மதுரையின் மடம் அளவுக்குப் பெரியதல்ல.

மதுரை மடத்தில் சாப்பாடு போட நேரமாகும். பரிமாற ஆள் இருக்காது. கூட்டம் அம்மும். அதுவும் ரஜினியின் ஸ்ரீ ராகவேந்திரர் படத்துக்குப் பிறகு கேட்கவே வேண்டாம். சாப்பாடு பரிமாறி அதைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவி வெயிலும் கல்லும் புழுதியும் சகதியும் இருக்கும் இடத்தில் கை கழுவி விட்டு, அங்கிருந்து அழகரடியில் இருக்கும் வீட்டுக்கு நடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆட்டோ, ரிக்‌ஷா எதுவும் வைக்க மாட்டார்கள். அவ்வளவு வறுமை. பேச்சியம்மன் படித்துறையில் என் அம்மாவுக்கு தூரத்து உறவினர் வேதவியாஸ ராவ் என்று ஒருவர் இருந்தார். வெயிலில் ஏன் அலைகிறீர்கள், எங்கள் வீட்டில் தங்கி, காப்பி சாப்பிட்டுவிட்டு, வெயிலாறப் போகலாம் என்று சொல்வார்கள். அம்மா சந்தோஷமாக அங்கே தங்குவார். ஆனால் எனக்கு என்னவோ போல இருக்கும். (அந்த மாமாவும் அத்தையும் தங்கமானவர்கள். நான் சொல்வது அந்த வயதில் என் மன ஓட்டத்தை.)

ஒவ்வொரு சமயம் பக்கத்தில் இருக்கும் தேவி தியேட்டரில் மதியம் படம் பார்க்கலாம் என்று சொல்வார்கள். அன்று சந்தோஷமாக மடத்துக்குப் போவேன். அன்றைக்குப் பார்க்க இலை போட நேரமாகிவிடும். எரிச்சலாக வரும்.

பரிமாறுபவர்கள் அத்தனை பேரும் தன்னார்வத்தின் பேரில் உதவுபவர்கள். அதில் ஒருவர் மதியம் ஒரு மணிக்குப் பரிமாறிவிட்டு, நடுரோட்டிலேயே பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவார். அம்மா என்னை அழைத்துக் காண்பிப்பார், பாத்தியா எவ்ளோ பக்தின்னு என்று சொல்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

மடத்துக்கு இப்படிச் சாப்பிடப் போகணுமா என்று அடிக்கடி அம்மாவுடன் சண்டை போடுவோம். அவனவன் குருகளு பிரசாதம் கிடைக்காதான்னு ஃபாரின்ல இருந்து வர்றான், பக்கத்துல இருந்துட்டு போறதுக்கு என்ன கொள்ளை என்பதே என் அம்மாவின் பதிலாக இருக்கும். சாப்பாடு போடலைன்னா நீ மட்டும் போவியா என்று எதாவது சொல்லி மடக்குவோம்.

மதுரை மடத்தில் சாப்பாடு போட எப்போதும் தாமதாகிவிடும். செய்வார்கள், செய்வார்கள், பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். அங்கிருக்கும் மண்டபத்தில் யாரையாவது பாட அழைத்திருப்பார்கள். வீரமணி ராதா அடிக்கடி வருவார்கள். அவர்கள் பாடுவார்கள், பாடுவார்கள், பாடிக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அப்போது 11 முதல் 15 வயது வரை இருக்கலாம். சரியாகப் பன்னிரண்டு மணிக்கெல்லாம் வயிறு பசியில் கூவத் தொடங்கிவிடும். மத்தியானம் நல்ல சாப்பாடு என்று பெரும்பாலும் காலையில் எதாவது மோர் சாதம் இருக்கும். அதுவும் இல்லையென்றால், சாமி கும்பிடப் போகும்போது சாப்பிடக் கூடாது என்று சொல்லி, வெறும் வயிறாக இருக்கும். அந்தப் பசியில் 2 மணி வரை சாப்பாட்டுக்காகக் காத்திருக்கும்போது எரிச்சலாக வரும்.

திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள மடத்தில், பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பரிமாறுவார்கள். மடத்தில் இடம் கம்மி. பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும்போதும் அம்மா விடவில்லை. அரை நாள் லீவு போட்டுக்கிட்டு வா, இல்லைன்னா நான் தனியா வீட்டுக்குப் போகணும் என்றெல்லாம் சொல்லி, என்னை வர வைத்துவிடுவார். நானும் சாப்பிட்டுவிட்டு அம்மாவை பஸ் ஏற்றிவிட்டு, எதாவது படம் பார்க்கப் போய்விடுவேன். அப்படிப் பார்த்த ஒரு படம் மலைச்சாரல் என நினைவு. கதாநாயகியின் போஸ்டரைப் பார்த்து அந்தப் படத்துக்குப் போய் பல்பு வாங்கினேன் என நினைக்கிறேன்.

மடம் என்பது அதன் தேவையுடன் எங்களுக்குப் பின்னர் அறிமுகம் ஆனது. அது வருடத்துக்கு மூன்று நாள் சாப்பிடும் இடம் மட்டுமல்ல, அதனால் நமக்கு நிறைய சமயக் கடமைகள் நிறைவேறும் என்று புரியத் தொடங்கியது எப்போதென்றால், என் தாத்தாவின் மரணத்தின் போது. பத்து நாள் காரியங்களை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீ பாத ராஜர் மடத்தில் செய்யும்போதுதான் உணர்ந்தோம். அப்போதுதான் எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டதும். பின்னர் சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அப்பாவுக்கும் எங்கள் மாமாவுக்கு அதே மடத்தில் வைத்தே காரியங்கள் நடந்தன.

பின்பு சென்னைக்கு வந்து செட்டில் ஆனோம். அம்மாவுக்குத் தெரியாத ஊர். ஆனாலும் விடவில்லை. ஆராதனை சமயத்தில் எப்படியாவது என்னை மடத்தில் விட்டுவிடு என்றார். நான் காலையிலேயே தி.நகரில் இருக்கும் அலுவலகத்துக்குப் போய்விடுவேன். என் மனைவி என் அம்மாவுக்கு ஒரு ஆட்டோ அமர்த்தித் தருவாள். அலுவலகத்துக்கு அம்மா வந்துவிட, அங்கிருந்து அருகில் இருந்த தி.நகர் மடத்துக்குக் கொண்டு போய்விடுவேன். நீண்ட வரிசை இருக்கும். அம்மா வரிசையில் நின்றிருப்பாள். ஏம்மா இப்படி கஷ்டப்படற, சாப்பாட்டுக்கா பஞ்சம் என்று கேட்பேன். நீ போடா என்று சொல்லிவிடுவாள். வரிசையில் அம்மா நின்றிருந்த சித்திரம் கண்களில் நீருடன் இப்போதும் எட்டிப் பார்க்கிறது. எப்படிச் சாப்பாட்டுக்காக அம்மா வரிசையில் நிற்கிறாள் என்கிற கேள்வி என்னை வாட்டி எடுத்தது. ஆனால் அதை அம்மா ஒரு சுக்காகக் கூட மதிக்கவில்லை.

திருநெல்வேலியில் பாட்டபத்து-வில் வைக்கதஷ்டமி நடக்கும். அன்று ஊர்ச்சாப்பாடு போடுவார்கள். அதற்கும் அம்மா எங்களை அழைத்துக்கொண்டு போய்விடுவாள். ஆனால் மடத்தில் ஆராதனைக்கு வந்தே ஆகவேண்டும் என்னும் அளவுக்கு வற்புறுத்தமாட்டாள். ஒரு தடவை போய்விட்டு, பின்னர் வரமுடியாது என்று மறுத்துவிட்டேன். அம்மாவையும் அலையவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் மடத்துக்கு ஆராதனைக்குப் போவதை மட்டும் எங்களால் தடுக்கமுடியவில்லை.

அம்மா போய் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ராகவேந்திரரின் ஆராதனை துவக்க நாளைக்கு இரண்டு நாள் முன்னர் அம்மாவின் திதி வரும். நான் அம்மாவுக்குத் திதி செய்யப் போகும்போது மடமே பரபரப்பாக இருக்கும். ஏனென்றால், அம்மாவின் திதிக்கு முதல்நாள் பெரும்பாலும் வரலக்ஷ்மி பூஜை இருக்கும். (சில சமயம் மாறும்.) திதி அன்றேவோ அல்லது மறுநாளோ ரிக் வேத உபகர்மா இருக்கும். அதற்கு மறுநாள் ராகவேந்திரரின் பூர்வ ஆராதனை ஆரம்பித்துவிடும். எனவே முழு பரபரப்பில் இருக்கும் மடம். திதி அன்று எப்போதும் சூழ்ந்திருக்கும் அம்மாவின் நினைவுகளைத் தாண்டி, மடத்தில் சாப்பிட அம்மா எடுத்துக்கொண்ட சிரத்தை என்னை மூழ்கடிக்கும்.

இந்த முறை ஞாயிற்றுக் கிழமை ராகவேந்திரரின் உத்தர ஆராதனை வந்தது. என் பையனையும் மகளையும் அழைத்துக்கொண்டு போக முடிவு. என்னைப் போல் அவர்கள் முரண்டெல்லாம் பிடிக்கவில்லை. உடனே சரி என்று சொல்லிவிட்டார்கள். அடிக்கடி போய் பழகிவிட்டதால் அவர்களுக்கு அது வித்தியாசமானதாகத் தெரியவில்லை போல. அதுமட்டுமல்ல, மடங்கள் இப்போதெல்லாம் அலாரம் வைத்தது போல் சரியாகப் பன்னிரண்டரைக்குள் இலை போட்டுவிடுகின்றன. உதவி செய்யவும் ஆள்கள் பலர் இருக்கிறார்கள். மேலும், மகனும் மகளும் மதியம் 1 மணி வரை பசியுடன் இருக்கப் பழகிக் கொண்டு விட்டார்கள். எனவே அவர்களுக்கு இது ஒரு கஷ்டமான விஷயமாகவே தெரியவில்லை. நான் செய்த அழிச்சாட்டியங்கள் எல்லாம் ஒரு பக்கம் என் மனதில் ஓட, என்னையறியாமல் என் வீட்டில் நான் சொன்னேன், ‘குருகளு பிரசாதம். கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்.’ அம்மாவுக்குப் புரையேறி இருக்கும்.

Share

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

இப்போதுதான் ராக்கெட்ரி திரைப்படம் பார்க்க முடிந்தது. Ready to fire புத்தகத்தை முன்பே படித்துவிட்டிருந்ததால், படமாகப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ என்கிற தயக்கம் இருந்தது. புத்தகம் முழுக்க பாதி நம்பி நாராயணன் மீது போடப்பட்ட வழக்கு பற்றியது என்றால், மீதி இஸ்ரோவின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றியது. எனவே ஒரு திரைப்படமாக இதை இந்தியாவில் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்தான். ஏற்கெனவே பல பயோபிக்சர்கள் தந்த கொடூரமான அனுபவமும் மனதில் ஓடியவண்ணம் இருந்தது.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், மாதவன் டீசண்டான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இத்தனை டெக்னிகல் சவால்கள் உள்ள ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்ததே ஆச்சரியம்தான். இந்தியாவின் பெருமைக்குரிய விஞ்ஞானி சாதனையாளரா தேசத் துரோகியா என்னும் ஒற்றை வரி சுவாரஸ்யமானதுதான். ஆனால் மாதவன் அதை மட்டும் படமாகச் செய்யவில்லை. எப்படி நம்பி நாராயணன் தன் புத்தகத்தை ஒரு விரிவான களமாகக் கொண்டாரோ அதே போல மாதவனும் தன் திரைக்களத்தை விரிவாக அமைத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் நம்பி நாராயணன் வழக்கு பற்றிய விஷயங்கள் மிகக் குறைவாகவே வருகின்றன.

நம்பி நாராயணன் உலகம் முழுக்கச் சுற்றி இந்தியாவின் இஸ்ரோவுக்கு வளர்ச்சியைக் கொண்டு வரப் பாடுபடும் காட்சிகள் அனைத்தும் மிக நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. நாம் காண்பது ஆங்கிலத் திரைப்படமோ என்னும் மயக்கம் வருமளவுக்குக் காட்சிகளின் தரம் உள்ளது. இதெல்லாம் எத்தனை பேருக்குப் புரியும், வணிக ரீதியாகப் படம் எப்படிப் போகும் என்றெல்லாம் மாதவன் அலட்டிக்கொண்டது போலவே தெரியவில்லை.

உலகத் திரைப்படங்களுக்கு உரிய ஒரு பொதுமொழி, பொறுமை. இந்தப் படமும் அதே பாதையில் மிகப் பொறுமையாக ஒவ்வொன்றையும் விவரிக்கிறது. ஃப்ரான்ஸ், ரஷ்யா தொடர்பான காட்சிகளின் விரிவும், வசனங்களின் ஆழமும் பிரமிப்பைத் தருகின்றன. இயக்கத்துக்காக மட்டுமின்றி வசனத்துக்காகவும் மாதவன் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். வளவள வசனங்கள் இன்றி, சுருக்கமாக, தீர்க்கமாக வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

மாதவன், சிம்ரன் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு விஷயமே அல்ல என்னுமளவுக்கு, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மேல்நாட்டு நடிகர்களில் இருந்து உள்ளூர் நடிகர்கள் வரை இதைச் சாத்திருக்கிறார்கள். இயக்குநர் மாதவனாக இந்தப் படத்தை அவர் தூக்கி நிறுத்தியது, இந்த நடிகர்களின் நடிப்பின் மூலமாகவே நிகழ்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

புத்தகத்துக்கும் திரைமொழிக்கும் உள்ள வேறுபாடுகள் தெரிந்தவையே. ஆனாலும் மாதவன் இன்னும் சில விஷயங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் சில விஷயங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கலாம். புத்தகத்தில் மிக ஆழமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் இங்கே விரைவான தொனியில் சொல்லப்படுகின்றன. குறிப்பாக உன்னி விஷயம். (புத்தகத்தில் பாலகிருஷ்ண பிள்ளை.) பாலகிருஷ்ணன் நம்பி நாராயணனை அறைந்ததாக எனக்கு நினைவில்லை. அந்தப் புனைவுச் சுதந்திரத்தை மாதவன் எடுத்துக்கொள்ளலாம்தான். ஆனால் ரத்தமும் சதையுமாக நம்பி நாராயணன் நம்முன் இருக்கும்போது ஏனோ நெருடுகிறது. உன்னி தொடர்பான காட்சிகள் புத்தகத்தில் நெடுக சொல்லப்படும்போது, அவர் மகன் இறந்து போயும் அவனிடம் மறைக்கப்பட்ட செய்தி ஒரு தாக்கத்தைக் கொண்டு வந்தது. திரைப்படத்தில் அதைச் சில நிமிடங்களில் சொல்லவேண்டிய கட்டாயம். எனவே அதன் தாக்கமும் குறைவாகவே உள்ளது. அதுவே உன்னி கைதுசெய்யப்பட்ட நம்பியைக் காணும் காட்சி வலுவாக வந்திருக்கிறது. காரணம், இரு காட்சிகளுக்கும் இடைப்பட்ட காலம்தான்.

இந்த உன்னி காட்சியையும், தொடக்க சில நிமிடங்களையும் விட்டுவிட்டால், படம் முழுக்க அறிவியல் திரைப்படம்தான் என்றே சொல்லிவிடலாம். வழக்கு ரீதியான விஷயங்கள் எல்லாம் ஒரு சீரியலைப் போல ஒரே டேக்கில் சொல்லி முடிக்கப்பட்டு விடுகின்றன. ஒரு நீதிமன்றக் காட்சி வந்தது போலக் கூட நினைவில்லை.

தமிழ்நாட்டில் இஸ்ரோவுக்கு இடம் கேட்கும்போது குடித்துவிட்டு வந்த திமுக மந்திரியைப் பற்றிய காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. படத்துக்கு அது தேவையில்லை என்று மாதவன் நினைத்திருந்தால், அதுவும் சரிதான். ஆனால் அதை வைத்திருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. 🙂

மாதவன் தவறவிட்ட அற்புதமான ஒரு விஷயம், உனக்குத் தெரிந்த முஸ்லிம் ஒருவன் பெயரைச் சொல் என்று போலிஸ் நம்பி நாராயணனை வற்புறுத்தும்போது அவர் சொல்லும் பெயர் ‘அப்துல் கலாம்’. இந்தக் காட்சி சினிமா ரீதியாகவே நன்றாக இருந்திருக்கும். மாதவன் இதையும் வைக்கவில்லை. ஒருவேளை ஒரு திரைப்படமாகப் பார்க்கும்போது நம்பி நாராயணனின் குத்தலான விளையாட்டைச் சிலர் புரிந்துகொள்ளாமல் போகக் கூடும் என்று மாதவன் நினைத்திருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

ஒரு சினிமாவுக்கே உரியவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதால், ஆங்காங்கே தெரியும் சில நாடகத்தனமான காட்சிகளையும் தாண்டி, இத்திரைப்படம் மிக முக்கியமானது. பயோ பிக்சரில் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறோம் என்று பெருமைப்படலாம்.

முதல் திரைப்படத்திலேயே இத்தனை பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கும் மாதவனை வாழ்த்துவோம். ஹே ராம் போன்ற ஒன் முவீ வொண்டராகத் தேங்கிவிடாமல் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களைத் தர மாதவனுக்கு வாழ்த்துகள்.

Share

தாய் (கவிதை)

தாய்

ஆற்று நீரின் மணல் காலில் பட்டதுமே
ஆங்காங்கே முளைத்துக்கொண்டன
நினைவுக் குடைகள்
நீரில் முங்கியதும்
மேலே பரவிய
காற்றுக் குமிழிகள்
உடையும்போதெல்லாம்
அம்மா அம்மா என்றே பரவின
நெளிந்து போன
டிஃபன் பாக்ஸில்
கெட்டியாக பிசைந்து கொடுத்த
மோர் சாத மாவடு வாசத்துடன் காற்றோடு வந்தவள்
‘முங்கும்போது மூக்க பிடிச்சிக்கில’ என்றாள்.
குளிப்பாட்டினாள்
நீரூட்டினாள்
தாமிரபரணியே தாயாக எழுந்து நின்றாள்
நீரோடு கலக்காத கண்ணீர்த் துளிகள்
ஒருவேளை இருந்திருந்தால்
தனித்தனியே தீவுக்கூட்டங்கள்
முளைத்திருக்கக்கூடும்.
கடைசிச் சொட்டு நீர் சொட்டும் வரை
கரையில் காற்று வாங்கி
சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்து நின்றிருந்தபோது
‘நல்லா துவட்டுல’ என்று யாரோ ஒரு அம்மை
தன் மகனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாள்

Share

Govt schools of TN

இனியும் ஆங்கிலம் அன்னிய மொழி என்று உருட்டிக்கொண்டிருக்காமல், ஆங்கிலம் கண்ணாடி, தமிழ் கண்பார்வை என்றெல்லாம் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்காமல், ஆங்கிலமும் தமிழ் அளவுக்கு (பிராந்திய மொழி அளவுக்கு) முக்கியம் என்பதை உரக்கச் சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கை தமிழ்நாட்டுக்குள்ளே சாதாரண அளவுக்கு முடியப் போகிறது என்றால் தமிழ் மட்டும் போதும். ஆனால் நீங்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கும் என்றால், குறைந்தபட்ச ஆங்கில அறிவு மிகவும் அவசியம். தமிழ் ரத்தத்தில் கலந்தது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதன் எல்லை, ஆங்கிலம் வேண்டாம் என்பதற்குப் போகக் கூடாது. ஒருவர் மிகச் சாதாரணமாகப் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்காவது ஆங்கில அறிவு அடிப்படைத் தேவை. அதுவும் இன்றைய உலகில் இது அத்தியாவசியம்.

தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இருக்கும் நான்கு தலைமுறைகளைக் கடந்த 40 ஆண்டுகளாக உருவாக்கி விட்டிருக்கிறோம். நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது எங்கள் வகுப்பாசிரியர் நார்மன் சார் செய்த முதல் வேலை, 9ம் வகுப்பில் முழுவாண்டுத் தேர்வில் அனைவரும் உண்மையாக வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பதை வாசித்ததுதான். அதுவரை முழுவாண்டுத் தேர்வு மதிப்பெண்களை நாங்கள் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. பள்ளியிலிருந்து ப்ரொமோடட் என்று ஒரு அஞ்சலட்டை வரும், அவ்வளவுதான். அன்று அவர் வாசித்த மதிப்பெண்கள் பலரைக் கலக்கமடையச் செய்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் 42 பேர் என்ற நினைவு. அரசு உதவி பெறும் பள்ளி. தமிழ் வழிக் கல்வி. ஐந்து பாடங்களிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 15 பேர் கூட இல்லை. மற்ற அனைவரும் குறைந்தது ஏதேனும் இரண்டு பாடங்களிலாவது 15 அல்லது 16தான். ஒரே ஒரு நல்ல விஷயம், தமிழை எழுத்துக் கூட்டி வாசித்துவிடுவார்கள். எழுதச் சொன்னால் முடிந்தது கதை. ஆங்கிலம் – சுத்தம். ஆங்கிலத்தின் மேலேயே தமிழில் எழுதிப் படித்து ஒப்பித்தவர்களே பலர்.

இன்றைய நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது. இதுவே 60 வருடங்களுக்கு முன்பு என்று பார்த்தால், ஆங்கிலத்திலும் தமிழிலும் மாணவர்கள் ஓரளவுக்கு அடிப்படை அறிவு பெற்றவர்களாகவே இருந்தார்கள். அன்றைக்கு ஆங்கிலத்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் இப்போது தரப்படுவதில்லை. அன்றைக்குத் தமிழுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் இன்று சுத்தமாகத் தரப்படுவதில்லை. ஆங்கிலம் அன்னிய மொழி என்றெல்லாம் சொல்லி, தமிழையும் கற்றுத் தராமல் விட்டிருக்கிறோம்.

அரசுப் பள்ளி ஒன்றுக்கோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றுக்கோ இன்று செல்லுங்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களை அழைத்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விடுமுறை விண்ணப்பம் எழுதிக் காட்டச் சொல்லுங்கள். ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து அதைத் தமிழில் வாசிக்கச் சொல்லுங்கள். பின்பு அதையே நீங்கள் சொல்ல சொல்ல அவர்களை எழுதச் சொல்லுங்கள். சாதாரண மூன்றிலக்கக் கூட்டல் கணக்கு, கடன் வாங்கிக் கழித்தல் கணக்கு, சாதா வகுத்தல், மூன்றிலக்கப் பெருக்கலைச் செய்யச் சொல்லுங்கள். ஆங்கிலத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். உங்களால் நம்பவே முடியாத அளவுக்கான பேரதிர்ச்சி காத்திருக்கும். உடனே மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நிலைமை கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஏமாந்துவிடவேண்டாம். அதிலும் இப்படித்தான். அரசுப் பள்ளிகளில் பத்துப் பிழைகள் இருந்தால் இங்கே ஒன்பது பிழைகள் இருக்கும், அவ்வளவுதான் வித்தியாசம்.

இன்றும் அரசுப் பள்ளிகள் பள்ளிகள் திறந்ததும் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா? அனைத்து மாணவர்களுக்கும் அ, ஆ, இ, ஈ மற்றும் க, ங, ச சொல்லித் தருவது. 8 வகுப்பு வரை இதைச் செய்கிறார்கள். 40 வருடங்களுக்கு முன்பு நாம் இத்தனை மோசமாக இல்லை. அதேசமயம் மிக நன்றாகத் தமிழைப் படித்தோம் என்றும் சொல்வதற்கில்லை.

இதன் காரணங்கள் என்ன? ஆசிரியர்களின் தரம் முதல் பிரச்சினை. அடுத்து, ஆங்கிலம் குறித்த தேவையற்ற கற்பிதங்கள். ஆங்கில தெரியாவிட்டால் குடி மூழ்கி விடாது என்பது உண்மைதான். அது யாருக்கு? தமிழைத் தாண்டி தனக்கு எதுவும் தேவையில்லை என்ற நிலை உடையவர்களுக்கு. அப்படி இல்லாமல், இந்திய அளவில் அல்லது உலகளவில் நீங்கள் செல்ல நேரும்போது ஒவ்வொரு நொடியும் அவமானத்தில் கூனிக் குறுகி நின்றிருக்கும் நிலை வரத்தான் செய்யும். உடனே சொல்வார்கள், ஃப்ரான்ஸில் பலருக்கு ஆங்கிலம் தெரியாது என்று. அது தமிழர்களுக்கோ அல்லது மற்ற இந்திய மாநிலக்காரர்களுக்கோ பொருந்தாது.

ஆங்கிலத்தைக் குறைந்த அளவுக்காவது கற்றுக்கொள்ளுங்கள். யாராவது எளிய ஆங்கிலத்தில் பேசினால் அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்காவது ஆற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள். நன்றாக ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் மட்டுமே, ஆங்கிலம் தேவையே இல்லை என்று சொல்லத் தகுதி உடையவர்கள். மற்றவர்கள் அதுவரை அமைதியாக ஆங்கிலம் கற்றுக்கொள்வதே நல்லது. தமிழையும் ஆங்கிலத்தையும் அடிப்படைத் தேவைக்கு அவசியமான அளவுக்குக் கூடக் கற்காத மூன்று தலைமுறைக்காரர்கள் சொல்லும் அரசியல் நியாயங்களைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாதீர்கள். அது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.

ஆங்கிலம் தெரியாவிட்டால் செத்துப் போய்விட மாட்டோம் என்பது உண்மைதான். தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாவிட்டாலும் செத்துப் போய்விட மாட்டோம் என்பது கூட உண்மைதான்.

முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலம் பேசும்போது நிற்பதைப் பாருங்கள். நான் சொல்வது புரியும். அவருக்கும் நிச்சயம் புரியும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழின் தரத்தைக் கூட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து அவர் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்பதே என் விருப்பம்.

Facebook post link.

Share

வலிமை – ஹைடெக்

வலிமை – மிரட்டலாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து உச்ச நடிகர்களும் நகைச்சுவைக் காட்சிகள், காதல், குடும்பத்தைக் கொல்லும் வில்லன், பழிவாங்கல் என்று போய்க்கொண்டிருக்க, இது எதுவுமே இல்லாமல் ஒரு படத்தை நடிக்க முன்வந்திருக்கும் தைரியத்துக்காக அஜித்தை நிச்சயம் பாராட்டவேண்டும். ஒரு நவீன தொழில்நுட்பத் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார்கள். வித்தியாசமாக யோசித்து, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்து, லாபமும் பார்ப்பதெல்லாம் பெரிய சாதனை. வலிமை டீமுக்கு வாழ்த்துகள்.

மைனஸ் பாய்ண்ட் என்று சொல்லவேண்டுமானால், பேசி பேசியே அனைத்துப் பெரிய பிரச்சினைகளையும் அஜித் விடுவிப்பது, நீளமான அந்த பைக் ரேஸ், வில்லனை ஏமாற்றுவதை ஒரே போல் இரண்டு முறை செய்வது, என்னதான் லாஜிக் வேண்டாம் என்றாலும் அரசு வசம் இருக்கும் போதை மருந்தை அஜித் எடுப்பது இவையெல்லாம்தான். செண்ட்டிமெண்ட் அதிகம் என்று அனைவரும் சொன்னார்கள், நான் பார்த்தது எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் போல, அதில் அத்தனை செண்டிமெண்ட் இல்லை.

மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது, உச்சக்காட்சியில் கதாநாயகன் கொலைகாரர்களை மன்னித்து ஒரு வழக்கு கூட இல்லாமல் விடுவிப்பது – இது அராஜகம். என்னதான் கதாநாயகனுக்குக் காவடி எடுக்கவேண்டும் என்றாலும் இத்தனை தூரம் தரம் தாழவேண்டியதில்லை.

வில்லனை அஜித் காவல்துறை பஸ்ஸில் கொண்டு போகும் சேஸிங் காட்சி, மிக நீளமாக இருந்தாலும், அட்டகாசமாக இருந்தது. அஜித் நன்றாக இருக்கிறார், கெத்தாக இருக்கிறார், முக்கியமாக மிக நன்றாக நடிக்கிறார்.

செய்ன் அறுப்பு என்பது எனக்கு மிகவும் பதற்றம் தரும் ஒன்று. சில நிஜ வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். அதை நினைத்தாலே பதற்றம் வந்துவிடும். இந்தப் பதற்றத்தை அப்படியே திரையில் கொண்டு வந்த தமிழ்ப்படம் மெட்ரோ. உச்சக்காட்சிகள் மட்டுமே சொதப்பல். வலிமை திரைப்படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள், அஜித் வராதபோதும், பரபரப்பாக இருந்ததற்கு இந்த செய்ன் அறுப்புக் காட்சிகளும் அதை ஒட்டிய கொலைகளுமே காரணம். இன்னும் ‘மெட்ரோ’ படத்தை இப்படம் தொடவில்லை என்றாலும், வலிமையும் முக்கியமான பதிவுதான்.

இனி அரசியல். இவ்வளவு பார்க்கவேண்டுமா என்பவர்கள் இங்கேயே ஜூட் விட்டுவிடவும். என் நோக்கமே இதைப் பதிவு செய்யத்தான்!

பொதுவாகவே அஜித் ஹிந்துக்களுக்கு எதிராக வேண்டுமென்றே எதையும் திணிப்பதில்லை என்று இங்கே இருக்கும் அஜித் ரசிக ஹிந்துத்துவர்கள் சொல்வது வழக்கம். நானும் அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றுதான் நம்புகிறேன். இப்போதும்!

அதே சமயம் இந்தப் படத்தில் வந்திருக்கும் சில காட்சிகளைப் பற்றி ஒரு குறிப்பாவது எழுதி வைத்துக்கொள்வது நல்லது என்றும் தோன்றியது. இந்த இயக்குநரின் அடுத்த படத்துக்கு நமக்கு உதவலாம்! (இயக்குநர் மட்டுமே இதற்குப் பொறுப்பு என்று நழுவிவிடவும் முடியாது!) இதே இயக்குநரின் மிக முக்கியமான படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இப்படிப் பிரச்சினைகள் இருந்தன. மத ரீதியிலானது அல்ல, இவர்கள் இப்படித்தான் என்னும் மோசமான முத்திரை குத்தல் தொடர்பானது.

வலிமை படத்தில், குடிகாரனாக வரும் ஒருவன் பெரும் பட்டை போட்டுக்கொண்டு வருகிறான்.

ஐயப்ப மாலை போட்டிருக்கும் அண்ணன் ஐயப்ப மாலையைப் பாலில் கழற்றிப் போட்டுவிட்டுக் குடிக்கிறான்! அப்படிக் குடித்தால் பாவமில்லை என்று ஒரு நியாயமும் கற்பிக்கிறான். இதைப் பார்த்துவிட்டு இன்னும் எத்தனை பேர் ஆரம்பிக்கப் போகிறார்களோ..

வில்லன் கதாபாத்திரம், அதாவது செய்ன் அறுப்பு + போதை மாஃபியா + கொடூரக் கொலைகாரனை மட்டும் ஜி என்று அழைக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

மற்றபடி வலிமை வலிமைதான்!

Share

தி காஷ்மீர் ஃபைல்ஸ் – ஆஸாதியின் நிறம்

நான் அப்போது பதினோரம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்று வகுப்புக்கு வந்த ஆசிரியர், யாரெல்லாம் சைக்கிளில் போகிறீர்கள் என்று கேட்டார். பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுந்து நின்றோம். யார் எந்தப் பகுதி என்று கேட்டபோது, நாங்கள் டவுன் என்றும், பொதுவாக சிந்துபூந்துறை வழியாகச் செல்வோம் என்று சொல்லவும், எங்களை உட்காரச் சொல்லிவிட்டார். மேலப்பாளையம் வழியாக யாராவது போவீர்களா என்று கேட்டபோது, அப்படி யாரும் இல்லை என்று சொல்லவும், அப்ப பிரச்சினை இல்லை என்றவர், எதுக்கும் இன்றொரு நாள் விபூதி குங்குமத்தை அழிச்சிட்டுப் போங்க, நம்ம ஊர்ல பிரச்சினை இல்லைதான், எதுக்கும் கவனமா இருக்கட்டும் என்று தன்னுடன் வந்த இன்னொரு ஆசிரியருடன் பேசிக்கொண்டு போனார்.

இது நடந்தபோது, ஏன் இவர்கள் இப்படிக் கேட்கிறார்கள் என்று கூட எங்களுக்குப் புரியவில்லை. அப்போது அது ஒரு விஷயமாகக் கூடத் தெரியவில்லை. நாங்கள் எப்போதும் போல் சைக்கிளை ஜாலியாக ஓட்டிக்கொண்டு போனோம். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஊர் எப்போதும் போலத்தான் இருந்தது. பின்னர் புரிந்துகொண்டோம், அயோத்தியில் மசூதி உடைக்கப்பட்டதன் எதிரொலியாகவே ஆசிரியர் எல்லாரையும் எச்சரித்திருக்கிறார் என்று. முதல்நாள் உடைக்கப்பட்ட மசூதி விவரம் மறுநாள் திருநெல்வேலியில் எங்களுக்குத் தெரிந்துவிட்டிருந்தது. காஷ்மீரில் பண்டிட்டுகள் விரட்டப்பட்டார்கள் என்று தெரிந்தபோது எனக்கு வயது 22க்கு மேல். அப்போதும் அதை ஒரு அலட்சியத்துடன் அணுகியதை இப்போது வெட்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். அதன்பிறகு நான்கைந்து வருடங்கள் கழித்தே, அது விரட்டப்பட்டது மட்டுமல்ல, இனஒழிப்பு என்ற அதிர்ச்சியான உண்மை புரிந்தது. இன்று இந்த வலியை மிகத் தீவிரமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.

மசூதி உடைப்பு ஒட்டி எழுந்த கலவரங்களை நாடெங்கும் கொண்டு சேர்க்க முடிந்திருக்கிறது, ஆனால் காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இத்திரைப்படம் வந்தபின்னர் ஃபேஸ்புக்கில் பலர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். இப்படி ஒரு அவலம் நடந்தது பற்றி எப்படித் தெரியாமல் போனது என்று. ஹிந்து இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தவிர, சாதாரண மக்களுக்கு இந்தப் பெரிய கொடுமை தெரியவே இல்லை. இதே கேள்வியை இப்படத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியும் கேட்டிருக்கிறார்.

விவேக் அக்னிஹோத்ரியின் திரைப்படங்களின் ஆதாரமாக இரண்டைச் சொல்லலாம். ஒன்று, மூளைச் சலைவையால் குழப்பப்பட்ட இளைஞர்கள். இன்னொன்று, இதைச் செய்யும், அராஜகத்துக்குத் துணைபோகும், பொய்ச் செய்திகளைப் பரப்பும், உண்மைச் செய்திகளை மறைக்கும் ஊடகத் துறையினர். அர்பன் நக்ஸல்ஸ் என்னும் பதத்தை இவர் பரப்பியதே இதனால்தான். புத்தா இன் டிராஃபிக் ஜாம், தாஷ்க்ண்ட் ஃபைல்ஸ் மற்றும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் மூன்றிலும் இந்த இரண்டு அடிப்படைகளைக் காணலாம். இந்த அடிப்படைகளை உடைத்து, தான் சொல்ல வந்த உண்மையை ஒரு திரைப்படத்துக்கு ஏற்றவாறும் சொல்லிவிடுவது இயக்குநரின் அபாரத் திறமைதான்.

இதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் ஷிக்காரா என்றொரு திரைப்படத்தைப் பற்றியும் பேசவேண்டும். Our moon has blood clots என்றொரு புத்தகம், ராகுல் பண்டிதா எழுதியது. இந்தப் புத்தகத்தையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன். காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதைப் பற்றி விவரிக்கும் ஒரு புத்தகம் இது. ஹிந்துக்களுக்கு ஆதரவான தொனியில் அமைந்த புத்தகம் அல்ல இது என்பதை, ஆசிரியர் வேண்டுமென்றே ஆர் எஸ் எஸ் பற்றி ஒரு பக்கம் எழுதித் திணித்த குறிப்புகளில் இருந்து புரிந்துகொண்டாலும், இப்புத்தகத்தில் உள்ள தரவுகள் முக்கியமானவையே. அதுவும், ஹிந்துத்துவ சித்தாந்தத்தை எதிர்க்கும் ஒருவர் எழுதி இருப்பதால், இந்தத் தரவுகளை நம்புவதில் பெரிய சிக்கல் இருக்கமுடியாது. ஷிக்காரா படத்தைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது, இந்தப் புத்தகத்தைத் தொட்டுக்கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் என. ஆனால் யாருக்கும் எதற்கும் கொஞ்சம் கூடக் கோபமே வந்துவிடக் கூடாது என்ற ரீதியில், இத்தனை பெரிய இன ஒழிப்பை முலாம் பூசி ஒப்பேற்றி இருந்தார்கள். ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் குமுறலை, ஒரு குடும்பம் தன் வீட்டை இழந்த ஒரு நாஸ்டால்ஜியாவாக மாற்றி இருந்தார்கள். அந்த இழப்பின் பின்னால் இருந்த அநியாயங்களை மங்கலாக மட்டுமே காட்டி இருந்தார்கள். அந்தப் புத்தகத்தில் இருந்த தரவுகளைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு பெரிய அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு திரைப்படம் இத்தனை திராபையாகவா இருக்கும்? இந்த நேரத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் வந்திருப்பது எத்தனை முக்கியமானது என்று யோசித்துப் பாருங்கள்.

எத்தனையோ கொடூரமான திரைப்படங்களைப் பார்க்கிறோம். சைக்கோபாத் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, இரண்டு நாள்களில் மறந்துவிடுகிறோம். ஆனால், நாம் எதிர்பாராமல் பார்க்கும் ஒரு நிஜமான விபத்து வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாமல் ஆகிவிடுகிறது. உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளி இது. உண்மையில் நடந்த ஒரு வாழ்க்கையைத் திரைப்படம் ஆக்கும்போது அது நமக்குத் தரும் பதற்றத்தின் பின்னணியில் உள்ளது, ‘அது வெறும் புனைவல்ல, ரத்தமும் சதையும் சேர்ந்த உண்மை’ என்பதுதான்.

இப்படம் நம்மைப் பதற வைக்கிறது. முதல் பதினைந்து நிமிடங்கள் மிக முக்கியமானவை. கடைசி ஐந்து நிமிடங்கள் தரும் பதற்றத்தைப் பார்க்க திடமான மனம் வேண்டும். இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் ராதிமா மேனோனாக நடிக்கும் நடிகையும், அனுபம் கெர்ரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டென ரத்தம் தோய கண்கள் மூடாமல் மரிக்கும் அச்சிறுவனின் களங்கமற்ற முகம் என்றென்றும் மறக்க முடியாதது.

ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முன்னால் அது தொடர்பான அத்தனை தகவல்களையும் திரட்டி எடுப்பது விவேக் அனிஹோத்ரியின் பாணி. கூடவே அத்திரைப்படம் சொல்ல வரும் கருத்துக்கு எதிரான அனைத்துக் கருத்துக்களையும் அத்திரைப்படத்திலேயே வைத்து, அதற்கும் சேர்த்து பதில் சொல்வார். எந்த அளவுக்கு என்றால், இதுதான் உண்மையோ என்று உருவாக்கப்படும் பொதுப்புத்திக்கு ஆதாரமாக இவர் சொல்லும் வாதங்களையே வைக்கலாம் என்னும் அளவுக்கு. ஆனால் உண்மைப் பின்னணி நமக்குத் தெரியும் என்பதால், இந்தப் பத்திரிகையாளர்கள் எந்த அளவுக்குக் கீழிறங்கிப் புனிதப் பிம்பங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பது நமக்கு அதற்கு இணையாகப் புரிகிறது.

குழம்பிக் கிடக்கும் கிருஷ்ணன் தீவிரவாதியிடம் பேசும் காட்சி மிக முக்கியமானது. தனது பார்வையாக அந்தத் தீவிரவாதி முன்வைக்கும் பார்வையும், பாகிஸ்தானின் குரலும், இந்திய வெறுப்பாளர்களான ஊடகத்தினரின் பார்வையும் ஒரே போல இருப்பதைப் பார்க்கலாம். இது தற்செயல அல்ல. திட்டமிட்ட ஒன்றிணைப்பு. காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் விருப்பப்பட்டதைத் தந்துவிட்டால் என்ன என்று ஜனநாயகக் காவலர்கள் போல கம்யூனிஸ்ட்டுகள் பேசுவது சும்மா இல்லை. இந்தக் குரலுக்கான ஆதாரம் பாகிஸ்தானின் நியாயத்தில் இருந்து வருகிறது. கம்யூனிஸம் இந்தியாவுக்குத் தேவையா இல்லையா என்று இந்தியா முழுக்க வாக்கெடுப்பு நடத்தி தேவையில்லாத மாநிலங்களில் தடை செய்ய ஒப்புக்கொள்வார்களா இவர்கள்? இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர் என்ற பின்பு ஏன் வாக்கெடுப்பு? தேவையே இல்லை. நேரு வேறு வழியின்றி இதை ஒரு நல்ல முடிவு என்று சொல்லி இருந்தாலும் கூட, இனி தேவையே இல்லை.

ராதிகா மேனோன் பல பத்திரிகையாளர்களின் கலவை. அப்பட்டமான தோலுரிப்பு. தீவிரவாதி யாசின் மாலிக் மற்றும் கராத்தே பிட்டாவின் ஒன்றிணைப்பு. யாசின் மாலிக் பிபிசிக்கு அளித்த நேர்காணல் ஒன்றின் வீடியோவைப் பார்த்தேன். அதில் அவர் கொன்ற விமானப் படைக்காரர்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது வெளிப்படும் இளக்காரமான புன்னகையில் இப்படத்தின் அடிப்படை நியாயம் அமைந்திருக்கிறது. அரவிந்தன் நீலகண்டன் சொல்லி, கராத்தே பிட்டாவின் வீடியோவைப் (https://www.youtube.com/watch?v=c5Kw5bvvMfw) பார்த்தேன். அதில் அவன் சொல்கிறான், மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் அண்ணனையும் கொல்வேன், அம்மாவையும் கொல்வேன் என்று. எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இல்லை. இதே வசனம் இத்திரைப்படத்திலும் வருகிறது. இந்த வசனம் மட்டுமல்ல, பற்பல வசனங்கள் நிஜத்தில் யாராலோ எப்போதோ சொல்லப்பட்டவைதான்.

நிஜமான ஆஸாதி (சுதந்திரம்) மதம், மொழி, இனம், நிறம், ஜாதி பார்க்காது. மதவாத அடிப்படையிலான ஆஸாதி உண்மையான ஆஸாதிக்குக் களங்கம் கற்பிப்பதைத் தவிர, நாட்டைத் துண்டாடுவதைத் தவிர எதையும் சாதிக்காது. இத்திரைப்படம் அதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறது.

ஒரு திரைப்படம் என்ற அளவிலும் இத்திரைப்படம் தரமாகவே உள்ளது. மெல்ல நகரும் திரைப்படம்தான். யோசித்து யோசித்து வசனங்கள் வரும் திரைப்படம்தான். ஆனாலும் ஏன் இந்தியர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைப் பார்த்து வரவேற்றார்கள்? இது வெற்றுப் புனைவல்ல, உள்ளத்தை உலுக்கும் உண்மை என்பதால்தான். தரமும் உண்மையும் கூடி வந்தால் எந்த மொழியிலும் இதைச் சாதிக்க முடியும். தமிழிலும் இத்தகைய திரைப்படங்கள் எல்லாச் சார்பிலிருந்தும் வெளிவரவேண்டும். அதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ என்கிற ஏக்கம் வராமலில்லை.

370ம் பிரிவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான நியாயத்தையும், ஏன் நாட்டை நேசிப்பவர்கள் இந்தியாவை ஆளவேண்டும் என்பதையும்கூட இப்படம் சந்தேகத்துக்கு இடமின்றி வலியுறுத்தி இருக்கிறது. நிச்சயம் தியேட்டருக்குச் சென்று பாருங்கள் – மன தைரியத்துடன்.

Share

மேப்படியான் – நில அரசியல்

தமிழ் சமூக ஊடகங்களில் இந்த மலையாளப் படம் ஹிந்துக்களுக்கு ஆதரவான ஒரு மனநிலையில் கொண்டாடப்பட, இது ஒரு அரசியல் திரைப்படம் என்று நினைத்துக் கொஞ்சம் கவனமின்றி இருந்துவிட்டேன். இன்றுதான் பார்த்தேன்.

ஒரு படமாக இப்படம் எந்த வகையிலும் எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லவில்லை. எல்லாருமே தங்கள் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்க்கும் சந்தர்ப்பவாதிகளாகக் காட்டப்படுகிறார்களே ஒழிய, வேண்டுமென்றே கெட்டவர்களாகச் சித்திரிக்கப்படவில்லை, ஒரே ஒருவரைத் தவிர. அந்தக் கதாபாத்திரம் ஒரு அரசியல்வாதி. அந்த அரசியல்வாதி ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோக்கரும் கூட. அவர் கிறித்துவர். படத்தில் ஏகப்பட்ட கிறித்துவக் கதாபாத்திரங்கள். மிக நல்லவர்களாகப் பலர் காட்டப்படுகிறார்கள். ஹாஜியார் கதாபாத்திரமும் கூட அதனளவில் வியாபாரத்துக்காக, தன் லாபத்துக்காக எதிராளிகளின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமே.

இரண்டு குடும்பங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்கள் வாக்கை கைவிடாத குடும்பங்களாகக் காட்டப்படுகின்றன. ஒன்று, கதாநாயகன் முகுந்தன் உன்னியின் குடும்பம். இன்னொன்று, வீட்டை விற்கும் கிறித்துவக் குடும்பம். தான் கொடுத்த வாக்குக்காக, ஒரு கிறித்துவப் பெண்ணின் வாழ்க்கைக்காகத் தன் எல்லா உடைமைகளையும் இழந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் ஹிந்துக் குடும்பத்துக்கு இணையாக, சாகும் தறுவாயிலும் தான் கொடுத்த வாக்குக்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து வீட்டை கிரையம் செய்து கொடுக்கும் கிறித்துவக் குடும்பம் என்று எல்லாமே சமநிலையில்தான் உள்ளது.

முகுந்தன் மிக அழகாக இருக்கிறார். எல்லை தாண்டாமல் நடிக்கிறார். மிக மெல்ல நகரும் படத்தில் மெல்ல மெல்ல ஒரு படபடப்பைக் கூட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிலும் சார்பதிவாளர் அலுவலகக் காட்சி உச்சம். ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுழலும் கதை தரும் அலுப்பைத் தாண்டிவிட்டால் ஓரளவுக்கு சுவாரஸ்யமான திரைப்படமே. நில அரசியலின் அத்தனை சாத்தியங்களும் காட்டப்படுகின்றன.

பின்னெப்படி இத்திரைப்படம் ஹிந்து ஆதரவுப் படமாகியது? படத்தில் வரும் சேவா பாரதி ஆம்புலன்ஸ் ஒரு சின்ன குறியீடே ஒழிய, அது பெரிய காரணமல்ல.

நிஜ உலகில் நடிகர் முகுந்தன் உன்னி உடல் எடை குறைப்பை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 95 கிலோவில் இருந்து 75 கிலோவாக உடலைக் குறைக்கிறார். (அந்தப் புகைப்படத்தைத் தேடிப் பாருங்கள். பெரிய சாதனைதான்!) அந்த மகிழ்ச்சியை டிவிட்டரில் பகிர்கிறார். அதில் தன்னுடன் ஒரு ஹனுமானின் படத்தையும் சேர்த்துப் பகிர்கிறார். அங்கே சந்தோஷ் கீழாற்றூர் என்றொரு நடிகர் கமெண்ட் போடுகிறார். “இந்த ஹனுமான் நாட்டை கொரானாவில் இருந்து காப்பாற்றுவாரா” என்று கேட்கிறார். இதற்கு முகுந்தன் உன்னி பதில் சொல்கிறார், “நாம் ஒன்றாக நடித்திருக்கிறோம், எனவே பணிவுடன் சொல்கிறேன், நான் நம்பும் கடவுளை வேண்டிக்கொண்டு இங்கே ஒரு பதிவு போடுகிறேன். இப்படியெல்லாம் பதில் சொல்லி உங்கள் மரியாதையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். இப்போதெல்லாம் ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்?” என்று.

முகுந்தன் உன்னி குஜராத்தில் சின்ன வயதில் இருக்கும்போது பட்டம் பறக்கவிடும் விழாவில் மோடியுடன் பட்டம் விட்டதாகச் சொன்ன செய்தியையும் மேலே நடந்த டிவிட்டர் விஷயத்தையும் முகுந்தன் உன்னி பிரதரமரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னதையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

பின்னர் மாத்ருபூமி செய்திகள் பேட்டியில் நெறியாளர் கேட்கிறார், “நீங்கள் வலதுசாரி என்று தெரிகிறது.” உடனே மறிக்கிறார் முகுந்தன் உன்னி.

முகு: எப்படித் தெரியும்? எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

நெறி: உங்கள் சமூக ஊடகங்கள் இடுகைகளில் இருந்து.

முகு: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு என்றா?

நெறி: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு மட்டுமே என்று சொல்லவேண்டியதில்லை.

முகு: அப்படியானால் அது என்ன? நீங்கள் சொல்வதை வைத்து நான் பிஜேபி என்றுதான் புரிந்துகொண்டேன். தெளிவாகச் சொல்லுங்கள். நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னதாலா என்னை வலதுசாரி என்கிறீர்கள்? எனக்கு இப்போதைக்கு அரசியல் ஆர்வம் எதுவும் இல்லை. நான் வளர்ந்த சூழலில் ஐயப்பன், கிருஷ்ணன், ஹனுமான் என்றுதான் வளர்ந்தேன். ஜிம்மில் கூட எதிரே ஹனுமான் படமே இருந்தது. ஏன் அந்த நடிகர் ஹனுமானால் கொரோனா போகும் என்று கேட்டார் எனத் தெரியவில்லை.

என்றெல்லாம் விளக்குகிறார்.

இது போதாதா? அவர் சங்கியாக்கப்படுகிறார். அதனால் அவர் நடிக்கும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் பார்க்கப்படுகிறது போல!

நம் தமிழ்த் திரையுலகில் ஹிந்துக்களுக்கும் பாஜக அரசுக்கும் எதிராகச் செய்யப்படும் பிரசாரத்தில் நூறில் ஒரு பங்கு கூட, மேப்படியான் படத்தில் கிறித்துவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ எதிராக இல்லை. ஆனாலும் கொண்டாடுகிறார்கள். அத்தனை காய்ந்து போய் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

முகுந்தன் உன்னி இன்னும் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.

திரௌபதி, ருத்ர தாண்டவம் இயக்குநர் மோகன் ஜி இப்படத்தைப் பார்க்கவேண்டும். மேப்படியான் ஒரு பிராசரப் படம்தான் என்று வைத்துக்கொண்டாலும் அதன் நேர்த்தி எந்த அளவுக்கு யாராலும் புறந்தள்ள முடியாமல் இருக்கிறது என்று நாம் எல்லாரும் புரிந்துகொள்ள இன்னுமொரு வாய்ப்பாக இருக்கும். படத்தின் செலவு வெறும் 3 கோடி மட்டுமே என்று விக்கி சொல்கிறது. மேப்படியான் இயக்குநர் விஷ்ணு மோகனின் அடுத்த திரைப்படம் ‘பப்பா’ என்று தெரிகிறது. அதன் மோஷன் பிக்சர் டிரைலரில் முகுந்தன் உன்னி கழுத்தில் சிலுவையுடன் வருகிறார். இப்படம் முகுந்தன் உன்னியின் இதே திசையில் இருக்குமா அல்லது இதை சமன் செய்யும் எதிர்த்திசையில் இருக்குமா என்று அறிந்துகொள்ள இப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

Share

ஜே.எஸ்.ராகவன் – அஞ்சலி

ஜே எஸ் ராகவன் மறைவு – பேரதிர்ச்சி. நேற்று வரை நகைச்சுவைப் பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தார். இன்று அவர் நம்மிடையே இல்லை. 80 வயதில் இத்தனை ஆர்வமும் கடைசி வரை ஃபேஸ்புக்கில் எழுதியதும் ஆச்சரியம். நேற்று மதியம் ஒரு மணிக்கு அவர் போட்ட போஸ்ட்:

//’ஏம்மா, இன்னிக்கு கறிகாயெல்லாம் ஏக விலை சொல்றே?’

‘தெரியாதா சாமி, காலிலே ரஷ்யாவுக்கும் யூக்ரேனுக் கும் சண்டை ஆரமபிச்சுடுத்தாமே.’//

ஜே.எஸ்.ராகவன் எழுதி, வரும் 27ம் தேதி மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையில் வரப்போகும் தமாஷா வரிகள் பத்தியையும் தன் ஃபேஸ்புக்கில் அவரே வெளியிட்டிருக்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக் கூட்டத்தில் ஜே.எஸ்.ராகவன் பங்கேற்றுப் பேசினார். கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் மென் நகைச்சுவையாகப் பேசிய ஒரே எழுத்தாளர் அவரே. அபாரமான தன்னம்பிக்கையுடன் பேசினார். 

புத்தகக் கண்காட்சிக்கு வரும்போதெல்லாம் அவரும் அவரது மனைவியும் கிழக்கு ஸ்டாலுக்கு வருவார்கள். ஜே எஸ் ராகவன் ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசுவார். நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவே மாட்டார். நமக்கு வேலை இருக்கும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார். மிகவும் ஜெண்ட்டிலாக நடந்து கொள்வார். நிறைய புத்தகங்கள் வாங்குவார். 

80 வயதிலும் ஜே எஸ் ராகவனின் மெச்சத்தகுந்த ஒரு பண்பு, போனில் பேசும்போது எதைப் பேசவேண்டுமோ அதைத் தெளிவாக, சுருக்கமாகப் பேசுவது. வயதானவர்கள் சிலர் தாங்கள் நீண்ட நேரம் பேசி, சொன்னதையோ சொல்கிறோம் என்பது தெரியாமலேயே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். வயதின் பிரச்சினை. ஆனால் ஜே எஸ் ராகவன் ஷார்ட் அண்ட் ஷார்ப்.

நீண்ட நாள்கள் தொடர்பில் இல்லாமல் இருந்த ஜே எஸ் ராகவன், சில தினங்கள் முன்பு அழைத்து, தனக்கு கிழக்கு வெளியிட்ட ‘சேரர் சோழர் பாண்டியர்’ வேண்டும் என்று கேட்டார். புத்தகம் வெளிவந்த பின்பு அனுப்புவதாகச் சொன்னேன். சில நாள் கழித்து மீண்டும் அழைத்து நினைவூட்டினார். புத்தகம் வந்ததும் அனுப்பி வைத்தேன். மிகவும் சந்தோஷமானார்.

மீண்டும் அழைத்து கிழக்கு வெளியிட்டிருக்கும் இன்னொரு புத்தகம் வேண்டும் என்றார். கிழக்கு வெளியிட்ட புதுப்புத்தகங்களின் பட்டியலையும் கேட்டார். இரண்டையும் அனுப்பினேன்.

தான் ஃபேஸ்புக்கில் எழுதுவதாகவும் எனது போஸ்ட்டுகள் அவரது கண்ணில் படுவதில்லை என்றும் சொன்னார். என்னையே ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். ஏற்றுக்கொண்டார்.

புத்தகக் கண்காட்சிக்கு வரமுடியாததால் மிகவும் வருத்தப்பட்டார். சென்ற ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட பின்பு, தன் உடலில் இருந்த அனைத்து சக்தியும் போய்விட்டதாக உணர்வதாகச் சொன்னார். வயது 80 என்றும் சொன்னார். அவரும் அவரது மனைவியும் வீட்டில் இருப்பதாகச் சொன்னார். வீட்டுக்குள் நடமாட முடிகிறதா சார் என்று கேட்டேன். அது வரை ஓகே என்றார். ஆனால் புத்தகக் கண்காட்சிக்குத்தான் வரமுடியவில்லை என்று மீண்டும் மீண்டும் வருத்தப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தகக் கண்காட்சிக்கு ஜே எஸ் ராகவன் வந்தபோது, அவரைப் பார்த்த அழகியசிங்கர், ‘உங்களால் முடியாவிட்டால் வரவேண்டாம். என்ன புத்தகம் வேண்டும் என்று சொன்னால் நானே வாங்கி அனுப்புகிறேன்’ என்று சொன்னதாக இரண்டு முறை என்னிடம் குறிப்பிட்டார் ஜே எஸ் ராகவன்.

இன்று காலை ஜே எஸ் ராகவன் இல்லை என்கிற செய்தி நிஜமாகவே அதிர்ச்சியாக இருக்கிறது. போய்வாருங்கள் ஜெண்டில் மேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி.

Share