Archive for திரை
காற்று வெளியிடை
அதே கண்கள்
அதே கண்கள் – முகில் நண்பர். தூத்துக்குடிக்காரர். எனவே கிட்டத்தட்ட திருநெல்வேலிக்காரர். 🙂 ஸ்க்ரிட்ப் கன்சல்டண்ட்டாக இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார். தனிப்பட்ட வகைப் பழக்கத்தில் முகிலின் பலம் என்று நான் நினைப்பது – அவரது ஹ்யூமர். தன் பலத்தைத் திரைப்படத்தில் கொண்டு வருவது ஒரு கலை. கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அதே கண்கள் படத்தில் முகிலுக்கு இந்த இரண்டும் சரியாக வாய்த்திருக்கின்றன. இந்த அணிக்கு என் வாழ்த்துகள்.
அதே கண்கள் – த்ரில்லர் வகை திரைப்படம். ஆஹோ ஒஹோ என்று புகழ்த்தக்க ஒரு படமல்ல. அதே சமயம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்க ஒரு படமும் அல்ல. தன் எல்லைகளைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.
அதே சமயம் ஏன் இத்திரைப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கவில்லை என்று யோசித்தால் –
* நடிகர்கள் தேர்வு முதல் சொதப்பல். கலையரசனால் ஒரு அளவுக்கு மேல் படத்தைத் தூக்கிக்கொண்டு போகமுடியவில்லை. மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் சிறப்பாக நடித்தவர் இவர். ஆனால் முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்க இவரால் முடியவில்லை.
* படத்தில் ஏமாற்றும் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு அமெச்சூர் ரகம். நகைக்கடையில் அவர் அவமானப்படுத்தப்படும் ஒரு காட்சியில் மட்டும் அத்தனை யதார்த்தம். மிடுக்குடன் வரவேண்டிய மற்ற காட்சிகளில் எல்லாம் ரொம்ப சுமாராகவே நடித்திருந்தார். ஒரு பலமான நடிகை நடித்திருக்கவேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா போல.
* மிகவும் கணிக்கத்தக்க கதை மற்றும் திரைக்கதை. அதிலும் யார் கொலைகாரர் என்ற தெரிந்த பின்பும் நீளும் திரைக்கதை.
* பார்வையற்றவர்கள் தொடர்பாக வரும் கதைக்குள் வருவதற்கு, ஹீரோவுக்கு பார்வை இல்லாமல் இருப்பதும், மீண்டும் பார்வை வருவதும் என அலைபாயும் முதல் அரை மணி நேரக் காட்சிகள்.
* மிக மோசமான இசை, ஒளிப்பதிவு.
* மிக நீளமான ஒரே மாதிரியான காட்சிகள்.
இந்த அத்தனை அலுப்பையும் தன்னந்தனியாளாகப் போக்குகிறார் பால சரவணன். இவர் வந்ததும்தான் இறுக்கம் தளர்ந்தது. ஏன் அத்தனை நேரம் இறுக்கமாக இருந்தோம் என்பது பதிலற்ற கேள்வி! பால சரவணனின் மேனரிஸத்துக்கேற்ற வசனங்கள். இந்த வசனங்களில் முகிலின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கமுடிகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று படம் பார்க்கும்போது தோன்றியது. இங்கேயும் இத்திரைப்படம் பரவலாக பாஸிட்டிவ் பாராட்டுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. திரைத்துறையில் முகில் வெற்றி பெறவும் அழுத்தமான தடம் பதிக்கவும் வாழ்த்துகள்.
மகேஷிண்டெ ப்ரதிகாரம் – நமஸ்காரம் அலியன்ஸ்
இத்திரைப்படம் ஒரு சாதாரணமான திரைப்படம். மிக மோசமான திரைப்படம் அல்ல. ஆனால் நிச்சயம் கொண்டாடத்தக்க ஒரு படமும் அல்ல. இன்று மலையாளத் திரைப்படங்களைப் பற்றிய அதி தீவிரமான பிம்பம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் உண்மை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது மட்டுமே உண்மை அல்ல. எல்லா மலையாளத் திரைப்படங்களுமே கொண்டாடத்தக்கவை அல்ல. ஃபகத் ஃபாஸில் நடிக்க வந்தபிறகு கடந்த சில ஆண்டுகளில் வந்த படங்களில் அவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத் தகுந்ததுதான். மலையாளத்தின் மிக முக்கியமான நடிகராக இன்னும் பரிமளிக்கப் போகும் வாய்ப்பு அவருக்குப் பிரகாசமாகவே உள்ளது. ஆனால் அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களையுமே ஆஹா ஓஹோ என்று கொண்டாடும் ஒரு வட்டம் இங்கே உருவாகியுள்ளது. மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எதாவது சொன்னால் அதை உளறல் என்றும், மலையாள ரத்தம் இல்லை என்றும் மலையாள ஹ்ருதயம் இல்லை என்றும் மலையாள உயிர் இல்லை என்றும் அதனால் மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எதுவும் எழுதவேண்டாம் என்று அன்பாகச் சொல்கிறார்கள். அன்பதனை எதிர்கொள்வோம்.
டைமண்ட் நெக்லஸ் என்றொரு படம் வந்தது. அதுவும் ரொம்ப சாதாரண படமே. ஆனால் ஆஹோ ஓஹோ என்று ஊதிப் பெருக்கப்பட்டது. சாப்ப குரிஷு (ചാപ്പാ കുരിശ്) என்றொரு படம் வந்தது. இது தமிழிலும் ரீமேக் செய்யபப்பட்டது. இதுவும் சாதாரண படமே அன்றிக் கொண்டாடத்தக்க ஒரு படம் அல்ல. இதையும் மலையாளத்தின் புதிய அலை வகைப்படம் என்றார்கள். ஒருவகையில் மலையாளத் திரைப்படங்களின் புதிய அலைத் திரைப்படங்களில் இந்தத் திரைப்படங்கள் அடங்கும் என்பது சரிதான். ஆனால் இவை கொண்டாடத்தக்க திரைப்படங்கள் அல்ல. அதாவது அன்னயும் ரசூலும், கம்மாட்டிபாடம் வகையில் இதை வைக்கமுடியாது.
ப்ரேமம் பெற்ற வெற்றிக்குப் பிறகு எப்போதாவது போகிற போக்கில் மலையாளப் படங்கள் பார்க்கிறவர்கள்கூட மலையாளப் படங்கள் என்றாலே புல்லரிக்கத் தொடங்கிவிட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பர் உதயனானு தாரம் படம் மலையாளத் திரைப்படங்களில் மிக முக்கியமானது என்று சிரிப்பு மூட்டினார். சீனிவாசன் திரைக்கதை எழுதினாலே இப்படிப் புகழவேண்டும் என்பது அப்போதையே தமிழ்நாட்டு ட்ரெண்டாக இருந்தது. அத்திரைப்படத்தை நான் அவருக்கு முன்பாகவே பார்த்திருந்தேன். அதுவும் ஒரு சாதாரண கமர்ஷியல் திரைப்படமே. ஆனால் இந்த நண்பர் பார்த்து புரிந்துவிட்ட முதல் மலையாளத் திரைப்படமாக அது இருந்திருக்கவேண்டும் என்பதால் அதைக் கொண்டாடத் துவங்கிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன். நம் மொழியில் நாம் காணும் சப்பையான காட்சிகள் கூட பிறமொழிப் படங்களில் வந்து நமக்கே சொந்தமாகப் புரியும்போது அவை நல்ல காட்சிகளாகத் தோன்றிக் கண்ணைக் கட்டும். இந்தக் கண்கட்டலுடன் பார்த்தாலும் படம் நன்றாகவே தோன்றும். இன்னொரு வகை கண்கட்டல், மலையாளத் திரைப்படங்களைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்னும் வகையான கண்கட்டல். மூன்றாம் வகை கண்கட்டல், தான் மட்டுமே மலையாளத் திரைப்படங்களின் அத்தாரிட்டு என்பது போல் பேசுவது. இந்த் மூன்றும்தான் மகேஷிண்டெ ப்ரதிகாரம் திரைப்படத்தைக் கொண்டாடுகின்றன.
இத்தனைக்கும் திரைப்படங்கள் பற்றிய மிக ஆழமான அறிவும் நல்ல சினிமா பற்றிய அக்கறையும் கொண்டவர்கள் அந்த நண்பர்கள். ஆனாலும் மலையாளத்தில் மட்டும் அவர்களுக்கு ஒரு சறுக்கல் நிகழ்ந்துவிடுகிறது. எனக்கு ரஜினி படங்களில் ஏற்படுவதைப் போல என்றும் இதைச் சொல்லலாம். 😀
மகேஷிண்டெ ப்ரதிகாரத்தின் பிரச்சினைகள் என்ன? ஒரு திரைப்படத்துக்குத் தேவையான வலுவான கதை அதில் இல்லை. தேவையான காட்சிகளைவிட தேவையற்ற காட்சிகள் பல இருக்கின்றன. இத்தேவையற்ற காட்சிகள் யாவும் படத்தின் மைய இழைக்குப் பொருந்தாமல் தனித்தனியே அலைபாய்கின்றன. சிலரின் செயற்கைத்தனமான நடிப்பு ஒரு பக்கம். இவற்றுக்கிடையில் மிக மெல்லிய ஒரு கதையைக் கொண்டு எவ்வித உச்சத்தையும் பார்வையாளனுக்கு அளிக்காமல் சப்பென முடிகிறது இத்திரைப்படம்.
திரைப்படத்துக்கு வலுவான கதை என்பது அடிப்படைத் தேவை அல்ல. ஒரு நவீன சினிமா மிக மெல்லிய கதையைக் கூடத் தன் நவீன கதை கூறல் மூலம் முற்றிலும் வேறுபட்ட அனுபவமாகக் காட்டமுடியும். எத்தனையோ உலகத் திரைப்படங்களை இதற்கு உதாரணமாகக் காட்டமுடியும். எனவே வலுவான கதையை ஒரு திரைப்படத்தின் அடிப்படையாக வைக்கமுடியாது. ஆனால் அப்படி வலுவான கதையை அடிப்படையாகக் கொள்ளாத படங்கள், கதை சொல்லும் முறையில் மிக வலுவாக இருந்தாக வேண்டும். இத்திரைப்படம் அதில் மிகப்பெரிய தோல்வியை அடைகிறது. ஆரம்பக் காட்சிகளில் பிணத்தை போட்டோ எடுக்கும் காட்சியில் வரும் காதல் நம்மைக் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தாலும் அதற்குப் பின்னர் வரும் காட்சிகள் அத்தனையுமே க்ளிஷே தன்மையும் நாடகத் தன்மையும் கொண்டவை.
எளிமையான கதையுடன் எளிமையான கதை சொல்லும் முறையில் உருவாக்கப்படும் படங்கள் செறிவான ஒரு கவிதை போல தேவையற்ற காட்சிகளைக் கொண்டிராமல் இருக்கவேண்டும். இத்திரைப்படம் இதில் எந்த வகையிலும் அடங்கவில்லை. எளிமையான கதை, வழக்கான பாணி கதை சொல்லல், கூடவே தேவையற்ற காட்சிகள், அத்தோடு அசட்டுக் காமெடிகள்.
முதல் காட்சியிலேயே தன் தந்தையைத் தேடுகிறார் ஹீரோ. அது பின்னர் கதையின் திருப்புமுனையுடன் செயற்கையாக இணைத்து வைக்கப்படுகிறது. இருக்கட்டும். தந்தையைக் காணாதது பின்னர் இத்திருப்பத்துக்குத்தான் என்பது நமக்குப் பின்னர் புரிகிறது. ஆனால் அதற்குள் காட்சிகள் போலிஸ் ஸ்டேஷன் வரை விரிகின்றன. அதில் ஹீரோவுடன் கூடவே வரும் நடிகர் கர்நாடக போலிஸிடம் சொல்லலாம் என்பது போன்ற அசட்டுக் காமெடியைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நமக்கு ஒரு பதைபதைப்பை உருவாக்கி, பின்னர் ஹீரோவின் தந்தை வீட்டுக்கு எதிரில் உள்ள தோட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறார்கள். இங்கேயும் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார்கள். அதை நமக்குப் பிறகு காண்பிக்கிறார்கள். இதுவும் தேவையற்ற ஒரு சஸ்பென்ஸ். அதே காட்சியிலேயே அவர் கேமராவுடன் இருப்பதைக் காட்டி இருந்தால் ஒன்றும் குடி மூழ்கிப் போயிருந்திருக்காது என்பதோடு பின்னர் துருத்திக்கொண்டு தெரியும் செயற்கைத்தனமும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஹீரோவின் அப்பாவை பைத்தியம் ரேஞ்சுக்குப் பேசுகிறார்கள். இதுவும் தேவையற்றதே. என்றாலும் ஹீரோவின் அப்பாவுக்கு ஒரு போட்டோகிராஃபரின் கண் இருப்பதை சப்டிலாகக் காட்டுகிறார்கள். படத்தின் மிக சப்டிலான வெகு சொற்பக் காட்சிகளுள் இதுவும் ஒன்று.
ஹீரோவை வில்லன் அடித்துப் போடுகிறான். வில்லன் என்றால் தமிழ்ப்பட ரேஞ்சுக்குக் கற்பனை செய்துவிடவேண்டாம். எளிமையான திரைப்படம் என்பதாலும் எளிமையான ஹீரோ என்பதாலும் கதையே கிடையாது என்பதாலும் எளிமையான வில்லன். இதில் பிரச்சினை இல்லை. இதற்குப் பிறகு இதை வைத்து மூன்று செய்ற்கைத்தனமான காட்சிகள் நுழைக்கப்படுகின்றன. இந்த மூன்று காட்சிகளையும் நீக்கிவிட்டால் படம் குறும்படமாகிவிடும்.
முதல் காட்சி, தன்னை அத்தனை அடித்துப் போடும் ஹீரோ, வில்லனை பதிலுக்கு அடித்துப் போடும்வரை இனி செருப்பே போடுவதில்லை என்று சபதம் எடுக்கிறார். ஏன் செருப்பே போடுவதில்லை என்று முடிவெடுக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. எதாவது செய்யவேண்டும் என்ற வெறியில் இதைத்தான் செய்யமுடியும் என்ற நிலையில் இதைச் செய்கிறார் என்று புரிந்துகொள்ளவேண்டும். போய்த் தொலையட்டும்.
இரண்டாவது காட்சி, இப்படி அடிபட்டுக் கிடக்கும் மகனைப் பார்க்கும் தந்தை வில்லனிடம், அடிச்சாச்சுல்ல போதும் என்கிறார். நல்ல காட்சிதான். ஆனால் அடுத்து பக்கத்தில் இருக்கும் ஹீரோவின் நண்பர்களிடம் அவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்! அவ்வளவுதான். முதலில் இந்தத் தந்தையை பைத்தியம் ரேஞ்சுக்கு ஹீரோவின் நண்பர்கள் சொன்னது சரிதானோ என்று நான் சந்தேகப்பட்ட கணம் அது.
மூன்றாவது காட்சி, வில்லனை அடித்துப் போட கராத்தே பயில்கிறார்கள். இது என்ன காமெடிப்படமா அல்லது சீரியஸான படம் காமெடியாகிவிட்டதா என்று நாம் குழம்பும் நிமிடம் இது.
இன்னொரு காட்சி இன்னும் அசட்டுத்தனமான காமெடி. இதை எப்படிச் சொல்ல என்றுகூடத் தெரியவில்லை. வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபருக்கு போன் போட்டு, இங்கே இருக்கும் சொத்தை யார் பராமரிப்பது என்று கேட்கும் ஒரு பஞ்சாயத்து. இதற்கும் படத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. சும்மா ஒரு காட்சி. இப்படி இன்னொரு அசட்டுத்தனமான காமெடி ஒன்றும் உண்டு. ஹீரோ தன் காதலியைப் பார்க்க உதவும் ஹீரோவின் நண்பர் நெஞ்சு வலி என்று நடிக்கும் காட்சி. இப்படி அசட்டுக் காமெடிகள் உள்ள ஒரு படம் எப்படி ஒரு கொண்டாடத்தக்க படமானது என்று புரியவில்லை.
இந்த அசட்டுக் காமெடிகளை விட்டுவிட்டுப் பார்த்தால், படத்தின் முக்கியக் காட்சிகளான ஹீரோவின் முதல் காதல் காட்சிகள். இதுவும் அந்தரத்தில் விடப்படும் ஒன்றே. கதையில் ஒரு பாகத்தை நிரப்ப இவை உதவுகின்றன என்பதோடு இது எவ்வகையிலும் திரைப்படத்துக்கு உதவுவதில்லை. திரைப்படத்தில் ஹீரோவின் இரண்டாவது காதலும் வில்லனை அடித்துப் போட்டுவிட்டு செருப்பணியும் காட்சிகளுமே மையக் காட்சிகளுக்குத் தொடர்பானவை.
இரண்டாவதாக வரும் ஹீரோயினைப் படம் எடுக்கும் காட்சிகள் இன்னொரு இழுவை. அப்போதுதான் ஹீரோவின் தந்தைக்குள்ளே இருக்கும் புகைப்படக் கலைஞனை ஹீரோ கண்டுகொள்கிறான். அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலேயே பெண்ணை கலைத்தன்மையுடன் போட்டோ எடுக்கிறான். எப்படி? செய்ற்கையாகத்தான். ஒரு தோட்டத்தில் மேலிருந்து கீழே அசைந்து விழும் பூவை, இயற்கையின் அழகைப் பார்க்கும் ஹீரோ அதேபோல் ஒரு செட்டப் செய்து ஹீரோயின் அறியாமலேயே போட்டோ எடுத்து அது பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்து அவர்களுக்கிடையில் காதல் வந்து அந்த ஹீரோயின் அண்ணன்தான் வில்லன்! ஆண்டவா.
சொன்ன மாதிரியே வில்லனைப் புரட்டி எடுத்து காதலியைக் கைப் பிடிக்க படம் முடிவடைகிறது. உண்மையில், கொண்டாட இத்திரைப்படத்தில் என்னதான் இருக்கிறது என்பது எனக்கு இதுவரை விளங்கவில்லை. மலையாள ரத்தம் குடித்தால் புரியுமோ என்னமோ.
இப்படத்தில் நன்றாக உள்ளவற்றைப் பார்த்துவிடுவோம். ஃபஹத் ஃபாஸிலின் நடிப்பு அட்டகாசம். விழலுக்கு இறைத்த நீரைப் போல. ஆனால் இத்திரைப்படம் சூப்பர் ஹிட் என்று மலையாள அலியன்கள் சொல்கிறார்கள். கடவுளுக்கே வெளிச்சம். மலையாளத்தில் மூன்று கோடி வசூல் வந்தாலே தெறி ஹிட் என்றுதான் சொல்லிக்கொள்வார்கள்.
ஃப்ளக்ஸ் ப்ரிண்ட் செய்து தரும் கடையில் உதவிக்கு வரும் சௌபின் ஷாஹிர் ஒரு காட்சியில் கலக்கி இருக்கிறார். தன் மகளும் இவரும் காதலிக்கிறாரோ என்று சந்தேகப்படும் ப்ளக்ஸ் ஓனருக்கு இவர் பதில் சொல்லும் விதமும் அதில் தெரியும் முக பாவமும் அசல் நடிப்பு. ஒட்டுமொத்த படத்திலும் எனக்குப் பிடித்த ஒரே காட்சி இது மட்டுமே.
படத்தின் தொடக்கத்தில் வரும் இடுக்கி பாடலும், படம் முழுக்க நம் கண்களை வருடிவிடும் ஒளிப்பதிவும் கேரளத்தின் வனப்பும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை.
மிகக் குறைந்த செலவில் எளிமையான திரைப்படங்கள் மிக முக்கியமானவை. இது மலையாளத் திரைப்பட வரலாற்றின் முதுகெலும்பும் கூட. ஆனால் அதையே காரணமாக வைத்து ஒரு சுமாரான படத்தை, ஏகப்பட்ட தேவையற்ற காட்சிகள் கொண்ட ஒரு படத்தை, குறும்படமாக எடுத்திருக்கவேண்டிய ஒரு படத்தைக் கொண்டாடியே ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. இதைக் கொண்டாடுவதுதான் மலையாள ரத்தம் என்றால், தமிழ் ரத்தமே நல்லது!
அன்புள்ள பா. ரஞ்சித்
அன்புள்ள பா.ரஞ்சித்
அன்புடன் ஒரு கடிதம். 🙂
நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்க வாய்ப்பில்லை என்பது தெரியும். தெரிந்தும் செத்துப்போன தன் மனைவிக்கு பாசவலையில் கமல்ஹாசன் கடிதம் எழுதிக் கொன்றெடுத்தது போல என் பங்குக்கு நானும் எழுதிக்கொல்கிறேன்.
நீங்கள் மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அப்படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.
கபாலி, ரஜினியின் திரை வரலாற்றில் மிகச் சிறந்த படமாக அமைந்துவிட்டது. நீங்கள் இயக்கப்போகும் அடுத்த படமும் அப்படியே ஆகட்டும். ஆனால் கபாலி திரைப்படத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தின் திரை வரலாற்றில் என்ன இடம் நீங்கள் யோசிக்கவேண்டும். ரஜினி என்ற ஒரு உச்ச நடிகராக அப்படம் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தாலும், ஒரு முக்கியமான வளர்ந்து வரும் இளம் இயக்குநராக அப்படம் உங்களுக்கு பெருமை தரக்கூடிய, காலாகாலம் உங்கள் பெயரைச் சொல்லக்கூடிய ஒரு படமாக இருக்காது. சுருக்கமாக மெட்ராஸ் போன்ற ஒரு படமாக இருக்காது.
உண்மையில் உங்கள் கைக்கு வந்து அமர்ந்த மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. இடைவேளைக்குப் பிறகு ரஜினி வில்லனை வெல்லும் காட்சிகளில் திரைக்கதை என்பதோ புத்திசாலித்தனம் என்பதோ மருந்துக்கும் இல்லை. இங்கே நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உங்கள் திரை வரலாற்றிலும், கபாலி திரைப்படம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். இன்று கபாலி ரஜினியின் திரைப்படமாகவும் வசூலில் சாதனை செய்த படமாகவுமே அறியப்படுகிறது. இனியும் அப்படித்தான் அறியப்படும்.
அதிர்ஷ்டம் இரண்டாவது முறை கதவைத் தட்டாது என்பது இன்று பொய்யாகி இருக்கிறது. இந்த முறையாவது வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர்களைத் தவிரவும் நல்ல நடிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற எளிய உண்மையை நம்புங்கள். பாலு மகேந்திரா செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். ஒரே நடிகர்கள் தொடர்ச்சியாக நடிப்பது தரும் அலுப்பை ஓர் இயக்குநராக நீங்கள் கடந்தே ஆகவேண்டும்.
ரஜினி படம் என்பதால் எதைச் சொன்னாலும் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது உண்மைதான். ஆனால் ரசிகர்களுக்கான படம் என்பது முதல் இரண்டு நாள்களில் முடிந்துவிடும். நீங்கள் படம் செய்வது ரசிகர்களுக்காக மட்டுமே அல்ல. எனவே திரைக்கதையில் சின்ன சமரசம் கூட ரஜினிக்காகச் செய்யாதீர்கள்.
வசனத்தை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பாடலாகப் போடும் சந்தோஷ் நாராயணனிம் கொஞ்சம் மெனக்கெட்டு நல்ல பாடலாகக் கேட்டு வாங்குங்கள். ரஜினிக்கு ஓப்பனிங் சாங் வேண்டாம். அல்லது உலகம் ஒருவனுக்கே போல் வேண்டவே வேண்டாம். கபாலி திரைப்படத்தில் தனியே அதிகம் பாடல்கள் வராததுதான் நல்லதாகப் போனது. சந்தோஷ் நாராயண்தான் இசை என்றால் அப்படியே இப்படத்துக்கும் செய்துவிடுங்கள். ஒரு மாற்றத்துக்கு, இளையராஜாவை அல்லது ஏ.ஆர். ரஹ்மானை யோசிப்பது நல்லது என் எண்ணம்.
ஒன்று, தீவிரமான அரசியல் படமாகவே எடுங்கள். அல்லது அரசியலற்ற படமாகவே இயக்குங்கள். அரசியலற்ற ஒரு கேளிக்கைத் திரைப்படமாக எடுத்துவிட்டு அதை அரசியல் படமாக முன்வைக்கப் பார்க்காதீர்கள். நீங்கள் முன்வைக்காவிட்டாலும் உங்கள் ‘நண்பர்கள்’ அதை, கபாலிக்குச் செய்தது போல, அப்படி முன் வைப்பார்கள். அப்போது அதை ஆதரிக்காதீர்கள். அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.
உங்களுக்கு இருக்கும் தீவிரமான அரசியல் உணர்வு வரவேற்கத்தக்கது. ஆனால் அதையே மேடைதோறும் பேசுவது திரையுலகில் உங்களுக்கு நல்லவற்றைத் தராது என்றே நான் நிச்சயம் நம்புகிறேன். இன்று உங்களை ஏற்றிப் பேசும் உங்கள் நண்பர்கள், உங்களது தோல்விக் காலத்திலும் உங்களிடமிருந்து அரசியல் ஆதாயம் பெற மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்கள் தேடல் சினிமாவில் வெற்றி என்பதாக இருக்கும். அது இல்லாதபோது நீங்கள் அரசியல் என்ற வெளிக்குள் வேறு வழியின்றி நுழையவேண்டியிருக்கும். இருபது படங்கள் செய்வது வரை உங்கள் அரசியல் உங்களுக்குள்ளே இருக்கட்டும். உங்கள் தொடர்பு மொழி சினிமா. அதை உங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துங்கள். மணிரத்னத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளுங்கள். இது உங்கள் திரைவாழ்க்கைக்கு நல்லது. இல்லையென்றால் விளக்கம், விளக்கத்துக்கு விளக்கம் கொடுத்தே, சேரன், தங்கர்பச்சான், அமீர் வரிசையில் போய்ச்சேரவேண்டி இருக்கும்.
கடைசியாக ரகசியமாக ஒன்று. வழக்கம்போல் திரைப்படத்தின் பின்னணியில் ஈவெராவின் படத்தை எங்கேயும் வைக்காதீர்கள். கவின்மலர்களின் பேட்டியில் வழக்கம்போல் ஈவெராவின் பெண் விடுதலையை ரசிப்பவன் என்றும், கபாலியில் குமுதவல்லி போல இப்படத்தில் வரும் விகடவல்லி ஈவெராவின் பாதிப்பில் வந்ததுதான் என்று எதாவது சொல்லி நழுவிவிடுங்கள். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டது போல காட்டிவிடுவார்கள். நம் வேலை நமக்கு. அது வெற்றிகரமாகத் தொடரட்டும்.
ரஜினியை மீண்டும் இயக்கப் போகும் நீங்கள் தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சிறந்த இயக்குநராக வலம் வர வாழ்த்துகள்.
Joker
ரஜினியின் கழுகுப் பார்வை
யாருக்கு நேரம் சரியில்லை எனத் தெரியவில்லை. கடந்த ஞாயிறன்று நன்றாக உண்டுவிட்டு நன்றாக உறங்கிவிட்டு எழுந்து தொலைக்காட்சியை மேய்ந்தேன். தொலைக்காட்சியில் திரைப்படங்கள், செய்திகள், விவாதங்கள் என்ற பெயரில் வரும் காட்டுக்கத்தல் சண்டைகள், கிரிக்கெட்டைத் தவிர எதையும் பார்ப்பதில்லை. இப்போது தொலைக்காட்சியில் திரைப்படங்களும் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாத் திரைப்படங்களுமே பெரும்பாலும் ஏற்கெனவே பார்த்த திரைப்படங்கள்தான் என்பதால். அன்று என்னதான் இருக்கிறதென்று பார்ப்போமே என்று மேய்ந்தபோது கண்ணில் பட்டது ரஜினி நடித்த ‘கழுகு.’ அப்போதுதான் படம் தொடங்கி இருந்தது. கழுகு என்ற பெயரைப் பார்த்ததும் மனசுக்குள் இரண்டு அலைகளாக ‘பொன்னோவியம்’ பாடலும் ‘காதலென்னும் கோவில்’ பாடலும் ஓடியது. இப்படத்தில் வரும் திகிலூட்டும் இசை ஒன்றைப் பற்றி போகன் சங்கர் தற்சமயம்தான் எழுதியிருந்தார். எனவே கொஞ்சம் நேரம் பார்ப்போம் என்று பார்க்கத் தொடங்கினேன்.
இப்போதும்கூட உட்கார்ந்த பார்க்கமுடிகிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ரஜினியின் பழங்காலப் படங்கள் பலவற்றை ஒரு நிமிடம் கூடப் பார்க்கமுடியாது என்ற கொடும் ரகசியம் ரஜினி ரசிகர்களுக்கத்தான் தெரியும். அதையும் மீறி ரஜினிக்காக மட்டுமே பார்ப்போம். ஆனால் இப்படம் அத்தனை மோசமல்ல. முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் ஜாலியாகவே போனது. இளையராஜாவின் இசைதான் எல்லாவற்றையும் பின்னிக்குத் தள்ளி முன்னுக்கு வந்து நின்றது. நரபலி கொடுக்கப்படும் இசையும் வந்தது. அதற்குப் பின் படம் பாதாளத்தில் விழுந்தது. (கருத்தியில்ரீதியாக படம் விழுந்தது ஒரு பக்கம். படமும் செம மொக்கையாகிவிட்டது!)
நரபலியைக் கொடுப்பது ஒரு சாமியார். கார்ப்பரேட் சாமியார். அவர் காவி உடை உடுத்தித்தான் வலம் வருகிறார். அவருக்கு சிஷ்யப்பிள்ளை இன்னொரு காவி சாமியார். இவர்கள் திட்டம்போட்டு நரபலி கொடுக்கிறார்கள். இவர்கள் மடத்தில் யாருக்கும் தெரியாத அறையில் விஸ்கி பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நிர்வாணப் பெண் சிலை உள்ளது. அமுத பானம் (பெயர் சரியாக நினைவில்லை) என்ற பெயரில் எதோ ஒரு பானத்தைக் கொடுக்கிறார்கள். இதில் போதைப்பொருள் உள்ளது. இதைக் குடித்துவிட்டு அனைவரும் செக்ஸி நடனம் ஆடுகிறார்கள். சாமியார் சொற்பொழிவாற்றும்போதெல்லாம் பின்பக்கத்தில் சிவன் சிலை உள்ளது. ஒரு நல்ல சாமியார்கூட இல்லை. அத்தனை பேரும் கேடுகெட்டவர்கள். இப்படி ஒரு படம்! இன்றெல்லாம் இத்தனை எளிதாக இப்படியெல்லாம் எடுத்துவிடமுடியாது. பெரிய மாற்றம்தான். இதுவரை ஒரு பாதிரியார் இப்படியெல்லாம் செய்ததாக எதாவது படம் வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் பட்டியல் கொடுங்கள். மலையாளப் படப் பட்டியலுடன் வராதீர்கள். தமிழ்ப்படப் பட்டியல் வேண்டும்.
தமிழ்ப்படங்களில் ஹிந்து சாமியார்கள் எப்படியெல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் கண்ணில் ரத்தமே வரும். அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஈவெராவின் மண்ணல்லவா, ஈவெராவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் படங்களில் வேறெப்படியும் இருந்துவிடமுடியாது. ஆனால் மிகச் சரியாக இதை ஹிந்து சாமியார்களோடு நிறுத்திக்கொள்வார்கள். ஈவெராவின் வலு அப்படி.
இப்படத்தில் இன்னொரு கொடுமையும் உள்ளது. இந்த சாமியார் விவகாரத்தைவிடக் கொடுமையானது அது. நரபலி தர சாமியாருக்கு உதவுபவர்கள் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் இந்த நரபலியில் நம்பிக்கை உள்ளது போலக் காட்டப்பட்டுள்ளது. பழங்குடி நடனம் என்ற பெயரில் காபரே டான்ஸை சாமர்த்தியமாக ஆடவிட்டிருக்கிறார் இயக்குநர். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறாள் என்று ஒரு பழங்குடியினர் கூடக் கோபப்படவில்லை என்று மிகத் தெளிவாக இயக்கி இருக்கிறார். அதுமட்டுமல்ல, நரபலி தந்தவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் காப்பாற்ற ஒட்டுமொத்தப் பழங்குடிக் கூட்டமும் ரஜினியையும் அவரது நண்பர்களையும் பந்தாட தீப்பந்தத்துடன் புறப்பட்டு வருகிறது. ரஜினி அத்தனை பேரையும், யெஸ், கிட்டத்தட்ட அத்தனை பேரையும் தன் பஸ்ஸைக் கொண்டே நசுக்கித் தள்ளுகிறார். கெட்டவர்கள் போலிஸில் மாட்டிக்கொள்ள, சுபம்.
நரபலி சாமியாருக்கு உதவியாளராக சோ. சோவுமாய்யா என்று நொந்து போய் இருந்த நேரத்தில்தான் தெரிகிறது, சோ அங்கே வந்திருக்கும் ஒரு துப்பறியும் செய்தியாளர் என்று. சோவின் குட்டு வெளிப்பட, போலிச் சாமியாரிடம் மாட்டிக்கொள்கிறார். அவர்கள் சோவை மிரட்டி, சாமியாரைப் பற்றி ஒரு வருடம் தொடர்ச்சியாக அவரது பத்திரிகையில் புகழ்ச்சியாக எழுதச் சொல்கிறார்கள். சோ மறுக்கிறார். சவுக்கடி தரப்படுகிறது. வலி தாங்காமல் துடிக்கிறார். உடன் இருக்கும் இன்னொரு நல்ல பெண் பத்திரிகையாளர் (இவர்தான் சாமியாராக நடிக்கும்போது செக்ஸி டான்ஸெல்லாம் ஆடுகிறார்!) சொல்கிறார், “இப்ப அப்படி எழுதிட்டு, தப்பிச்சு போன பிறகு, உண்மையை எழுதிடலாம்” என்கிறார். அதற்கு சோ, “நம்பமாட்டானுங்க. காசு கொடுத்தப்ப காசை வாங்கிட்டு பாராட்டி எழுதினான், இப்ப காசு பெயரலை, மாத்தி எழுதறாம்பானுங்க. எனக்கு ஜனங்களை பத்தி நல்லா தெரியும்” என்கிறார். சும்மா பதிவுக்காக பதிந்து வைத்தேன்.
கழுகு படம் ஹிந்துக்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல. இதுதான் பிரச்சினையே. திட்டமிட்டு எடுக்காமலேயே, நினைவிலி கட்டமைப்பில்கூட இப்படித்தான் சாமியார்களைச் சித்திரிக்கவேண்டும் என்று அவர்களுக்கு புகட்டப்பட்டுள்ளது என்பதுதான் நாம் அறிந்துக்கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம். இப்படி ஹிந்துக்களை ஆன்மிகம் சார்ந்தும் சாதி சார்ந்தும் இழிவுபடுத்தி எடுக்கப்படும் படங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டிய அவசியம் உள்ளது. அது மிக முக்கியமான ஆவணமாக இருக்கும்.
இதற்கு என்ன அவசியம்? சில வருடங்கள் முன்பு வரை கூட திரைப்படங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எப்படி சித்திரிக்கப்பட்டனர் என்பது நமக்குத் தெரியும். இன்று அப்படி அத்தனை எளிதாக போகிற போக்கில் ஒரு இயக்குநர் மூன்றாம் பாலினத்தவரை இழிவுபடுத்திவிடமுடியாது. அவர்களுக்கான குரல் என்ற ஒன்று உருவாகி வலுப்பெற்றதே இதன் காரணம். இதுவேதான் ஹிந்து மதத்தினர் இழிவுபடுத்தப்படும்போதும் நிகழவேண்டும். மெட்ராஸ் போல, Fandry போல சாதியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ஒரு படத்துக்கு இது பொருந்தாது. அதற்கான காரணங்களோடு பின்னணியோடு ஒரு திரைப்படம் உருவாகி வருமானால், எச்சாதியைப் பற்றியும் எம்மதத்தைப் பற்றியும் வலுவான விமர்சனத்தோடு வரும் அந்தப் படம் முக்கியத்துவம் பெறவேண்டும். அது எல்லா மதங்களுக்கும் நிகழக்கூடிய சாத்தியத்தோடும் இருக்கவேண்டும். நோக்கம் படைப்புச் சுதந்திரத்தை அச்சுறுத்துவதோ குறுக்குவதோ அல்ல. மாறாக படைப்புச் சுதந்திரத்துக்கு இருக்கவேண்டிய ஒரு பொறுப்பைப் பற்றி அறிவுரைப்பது மட்டுமே. அதற்கு, இப்படி ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு புத்தகம் உதவலாம். உதவும்.
பின்குறிப்புகள்:
* இயக்குநர் எஸ் பி முத்துராமன். திரைக்கதை பஞ்சு அருணாச்சலம்.
* ஹீரோயின் ரதி செம அழகு. 🙂
காதலும் கடந்து போகும்
காதலும் கடந்து போகும் படம் பார்த்தேன். சிறு குறிப்பாவது எழுதி வைக்கவில்லையென்றால் பெரிய பாவம். நேற்று முழுவதும் இப்படத்தின் நினைவுதான். சில படங்கள் ஏனென்று தெரியாமல் மிகவும் நமக்குப் பிடித்துப்போய்விடும். அப்படி ஒரு படம் இது.
பாலுமகேந்திராவின் நவீனமான ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் ஓர் உணர்வு. கொஞ்சம் லாஜிக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு எவ்வித அழுத்தமும் இன்றி படத்தைப் பார்க்கமுடிந்தால் நிச்சயம் உங்களுக்குப் பிடித்துப் போகும். இப்படி எல்லாராலும் பார்க்கமுடியாது என்பதுதான் மைனஸ் பாயிண்ட்.
அநியாயத்துக்கு மெல்ல போகிறது படம். கதை என்று எதுவும் கிடையாது. மெல்ல மெல்ல உருவாகி வரும் நட்பு காதலாகி கடைசியில் எப்படி முடிகிறது என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. விஜய் சேதுபதியும் மடோனாவும் படத்தின் உயிர். இவர்கள் இருவர் மட்டும்தான் படம் முழுக்க. படத்தை எங்கேயோ கொண்டுபோய்விட்டார்கள். அட்டகாசமான தரமான நடிப்பு. மடோனாவை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று பார்த்தால், ப்ரேமம் படத்தில் வரும் நடிகை! இன்னும் பிடித்துப் போய்விட்டது. இவருக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். தொடர்ச்சியாக திறமையான அழகான நடிகைகளின் படங்களைப் பார்க்கிறேன். மடோனா, இறுதிச் சுற்று ரித்திகா சிங்.
விஜய் சேதுபதி சென்னை வட்டார வழக்கையே எல்லா படங்களிலும் தொடர்ந்து பேசி ஒரு எரிச்சலை வரவைத்து விட்டார். இந்தப் படத்திலும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல நம்மை இழுத்துக்கொண்டு விட்டார். இடைவேளைக்குப் பிறகு அவரது நடிப்பு இன்னொரு லெவல்.
பின்னணி இசை பிரமாதம். ஆனால் பாடல்கள் என்ற பெயரில் வசனத்தையே அதுவும் எல்லாப் படங்களில் ஒரே ராகத்தில் இழுத்து இழுத்துப் பேசுவதையே செய்துகொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயண். உன் பேர் ஊர் என்ன என்றால் வசனம். ஊஊஊன்ன்ன்ன்ன் பேஏஏஏர்ர்ர்ர்ர் ஊஊஊஊஊர்ர்ர்ர்ர் என்ன்ன்ன்ன்னா என்றால் பாடல் என்பது அநியாயம். அதுவும் ஒரே ராக இழுவையில்.
இதெல்லாம் போக இன்னொரு அட்டகாசமான நடிப்பு – விஜய் சேதுபதியுடனே வரும் ஒருவரின் நடிப்பு. (அவர் பெயர் மணிகண்டன் போல.) மிகச் சில காட்சிகள்தான். ஆனால் அப்படி ஒரு யதார்த்தம். அதுவும் க்ளைமாக்ஸில் விஜய் சேதுபதி கலக்குகிறார் என்றால் இந்த நடிகர் ஒரு பங்கு மேலே போய்விட்டார். இவரைப் போன்ற நடிகர்களைப் பார்த்து பிடித்து இயக்குநர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நான் இப்பதிவை எழுதுவதே இந்நடிகரைப் பாராட்டத்தான்.
எதிர்பாராமல் மறக்கமுடியாத ஒரு படம். நிறைய லாஜிக் பிரச்சினைகள், கேள்விகள் உண்டு. ஆனாலும் படம் ஒரு தென்றல் போல வருடிச் செல்கிறது. க்ளைமாக்ஸ் பதற்றத்தையும் பரிதாபத்தையும் கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட மூன்றாம் பிறையின் க்ளைமாக்ஸ் அளவுக்கு.
வாழ்த்துகள் நலன் குமாரசாமி. ஆனால் இப்பாதை உங்களுக்கு வேண்டாம். தமிழ்நாட்டில் இப்படி நாலு படம் எடுத்தால் உங்களால் வெற்றி இயக்குநராக வலம்வரமுடியாது. ஏனென்றால் வெல்லும் இயக்குநர்களுக்குத்தான் ஒரு மரியாதை. எனவே சூது கவ்வும் போலவோ மற்ற புது இயக்குநர்களின் ஜிகர்தண்டா, பிசாசு, மெட்ராஸ் போலவோ முயற்சி செய்யவும். நல்ல வெல்லக்கூடிய ஒரு படம். அதுவே பாதுகாப்பானது.
தாரை தப்பட்டை – முழுக்க தப்பு
தாரை தப்பட்டை திரைப்படம் பாலாவின் வழக்கமான கொடூரத் திரைப்படமாகத்தான் இருந்தது. இதுவரை வந்த கொடூரத் திரைப்படங்களில் அதை ஒட்டி கொஞ்சம் கதையும் கொஞ்சம் திரைக்கதையும் இருந்தன. இதில் கொடூரம் மட்டுமே உள்ளது.
மிக முக்கியமான குறையாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, படத்தின் பல காட்சிகள் எவ்வித உயிருமின்றி தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் பாணியில் இருந்தன. இது படத்தின் தரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது.
சிவாஜி கணேசன் என்ற ஒரு சிறந்த நடிகன் தன் மிகை நடிப்பை நம்பி காலமாற்றத்தைப் பொருட்படுத்தாமல் அதற்குள்ளேயே சிக்கி மடிந்து போனது போல பாலா தன் திரைப்படம் என்ற ஒரு பிம்பத்துக்குள் பலவாறாகக் சிக்கிக்கொண்டுவிட்டார். அவன் இவன் என்ற திரைப்படம் தமிழ்த் திரைப்படக் குப்பைகளில் ஒன்று. நல்ல படங்கள் இயக்கும் இயக்குநர்களின் தோல்விப் படங்கள்கூட ஒரு எல்லைக்கு மேலே பொருட்படுத்தத்தக்கக் கூடிய படமாக இருக்கவேண்டும். ஆனால் தமிழில் இப்படி நிகழ்வதில்லை. தமிழின் இரண்டு மிகச் சிறந்த திரைப்படங்களைத் தந்த பாலு மகேந்திரா சில குப்பைகளைக் கொடுத்திருக்கிறார். மகேந்திரனும் இப்படியே. ஆனால் இவற்றையெல்லாம்விட பாலாவின் அவன் இவன் படு மட்டமானது.
விளிம்பு நிலை/புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய படத்தை எடுப்பதாகத் தொடங்கிய பாலா, எப்படி பாரதிராஜா கிராமங்களைக் காட்டுவதாகத் தொடங்கி ஒரு கட்டத்தில் அவரே கிராமங்களை உருவாக்கிக் காண்பிக்க ஆரம்பித்தாரோ அப்படி பாலாவின் விளிம்பு நிலை மனிதர்கள் உருவாகி வர ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் யதார்த்த சமூகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ‘என் பிரா சைஸை நீயே பார்த்துக்கோ’ ஓர் உதாரணம்.
மணிரத்னம் மிகப்பெரிய பிரச்சினையை மையமாகக் கொண்டு காதல் படங்களை எடுப்பதைப் போல பாலாவும் தாரை தப்பட்டை என்று பெயர் வைத்துவிட்டு அதில் என்னென்னவோ காண்பிக்கிறார். ஏன் எதற்கு என்ற திரைக்கதை பற்றிய எவ்வித முதிர்ச்சியும் இப்படத்தில் இல்லை.
நடிகர்களை அதீதமாக மிகை நடிப்புச் செய்யச் சொல்லி பார்வையாளர்களை முதல் காட்சியிலிருந்தே கலவரப்படுத்துவது பாலாவின் பாணி. அவன் இவன் திரைப்படத்துக்கு அடுத்து வந்ததாலேயே பரதேசி பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலும், பரதேசி திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களிலேயே நான் அடைந்த குமட்டல் இன்றும் நினைவில் உள்ளது. அதேபோலவே இப்படத்திலும் முதல் காட்சியிலேயே ஜி.எம். குமார் அந்த கொடுமையைத் தொடங்கி வைக்கிறார். அவர் இசைக்கும் கருவி என்ன? படத்தின் பெயருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. தப்பட்டை என்றால் பறை என்று விக்கி சொல்கிறது. ஜி.எம்.குமாரோ தவிலை அதை அவர் சிவாஜி கணேசன் போல வாசிக்கிறார். சரக்கு கேட்கிறார். பின்பு ஒரு காட்சியில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடலும் பாடுகிறார். கம்பீரமான குரலில். இவர் யார்? சகலகலா வல்லவரா? இவர் ஏன் புகழ்பெறவில்லை? என்ன நடந்தது? ஏன் குடித்துக்கொண்டே இருக்கிறார்? ஒன்றும் விளங்கவில்லை. ஜி.எம். குமார் போன்ற எவ்வித முகபாவங்களும் இன்றி நடிப்பையே கொலையாக்கும் நடிகர்களை பாலா தள்ளி வைக்கவேண்டும். தன்னால் யாரையும் நடிக்க வைக்கமுடியும் என்பதே இயக்குநரின் தோல்வியின் முதல்படியாக இருக்கும்.
ஜி.எம்.குமாரின் ஒவ்வாத (வராத) நடிப்பைப் பிடித்துக்கொண்டு அடுத்து தொடர்கிறார் வரலட்சுமி. அப்படி ஒரு ஓவர் ஆக்டிங். இவரும் சரக்கு கேட்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் குமட்டலை உண்டு பண்ணுகிறது. இன்னொருவருடன் திருமணம் என்றதும் அப்படியே நடைப்பிணமாக மாறுகிறாராம். சகிக்கவில்லை. ஆ ஓ ஊ என்று கத்தினால் நடிப்பு என்ற, தங்கர் பச்சான் கதாபாத்திரங்களின் இலக்கியப் பிரதியை பாலா கைவிடுவது நல்லது.
சசிக்குமாரும் வரலட்சுமிக்கும் காதலாம். ஆனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டுமாம். இது என்ன ரொம்ப புதுமையானதா? பார்த்தால் புரியாதா? இடையிடையே செண்ட்மெண்ட் காட்சிகளை வைத்து அதற்கு இளையராஜா மிகப் பிரமாதமான பின்னணி இசையைப் போட்டு, ஆனால் அங்கே காட்சிகளோ கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
தேவையற்ற காட்சிகள்தான் ஒட்டுமொத்த படமும். பாலா 10,000 அடி படங்கள் எடுத்துவிட்டு தேவையற்றதை வெட்டிவிடுவார் என்று சொல்வார்கள். எனக்கென்னவோ அப்படி வெட்டிப்போட்டதை தவறாக வெளியிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது.
ஒரு திரைக்கதை என்றால் சுவாரஸ்யம் வேண்டாமா? அரிசியை ஊற வைத்து உளுந்தை ஊற வைத்து ஆட்டி எடுத்து ஒன்றாக்கி உப்பு போடும் தினசரி வேலையா என்ன திரைக்கதை? இந்தப் படம் அப்படித்தான் இருக்கிறது. அடுத்து என்ன என்று யோசிக்கவே வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது அப்படியே நடக்கும். நாம் அதை ஏற்கெனவே சிவாஜி கணேசன் காலத்திலேயே பார்த்திருப்போம்.
அந்தமான் போகிறார்கள். என்ன நடக்கும்? ஆட்டக்காரிகளை படுக்கக் கூப்பிடுவார்கள். அதேதான் நடந்தது. ஹீரோவுக்குப் பசி. ஹீரோயின் என்ன செய்வாள்? நடு ரோட்டில் ஆடி பிச்சையெடுத்து ஆடி உருக வைக்கும் பின்னணி இசையில் மாமாவுக்காக அம்மணமாகூட ஆடுவேன் என்று சொல்கிறாள். ஹீரோயினுக்கு உடல்நிலை சரியில்லை. ஹீரோ கண் விழித்துப் பார்த்துக்கொள்கிறான். இதெல்லாம் ஏன் அந்தமானில்? எப்படி அந்தமானில் இருந்து திரும்பி வந்தார்கள்? சட்டென்று ஒரு காட்சியில் தஞ்சைக்கு வந்துவிட்டார்கள். இதை முதல் காட்சியிலேயே காண்பித்திருக்கலாமே. (தஞ்சையின் படித்துறை அழகு.)
ஜி.எம். குமாரை சசிக்குமார் திட்டுகிறார். அடுத்த காட்சியில் ஆஸ்திரேலியாகாரர்கள் பாட அழைக்கிறார்கள். அவர் யாழ் போன்ற கருவியை மீட்டுகிறார். அடுத்த காட்சியில் உங்கப்பன் ஜெயிச்சிட்டான் என்று சொல்லி செத்துப்போகிறார். இதில் ஆஸ்திரேலியாகாரர் மொழி தெரியாமலேயே இவர் பாடிய வரிகளை சொல்கிறார். இசை இணைக்கிறதாம். இசை எப்படி மொழியை இணைத்தது? இப்படி படம் முழுக்க கொடுமைகள் வந்தால் எப்படி சகித்துக்கொள்வது? இதில் பணத்துக்கும் மயங்கமாட்டாராம். கோவக்காரராம். பாராட்டை பதில்-சன்மானமாக திரும்பக் கொடுப்பாராம். ஏனென்றால் கலைஞராம். மீம்களில் வருமே, ஐ டி க்ளையண்ட்டுகள் தங்களை சிங்கம் போல நினைத்துக்கொள்ள, மற்றவர்கள் பார்வையில் பூனை போலத் தென்படுவார்களே, அதைப் போல. ஜி.எம்.குமாரை மிகப்பெரிய சமரசமற்ற கோபக்கார திறமையான கலைஞனாகக் காட்ட பாலா எத்தனிக்கிறார். நமக்குத் தெரிவதெல்லாம் ஒரு குடிகாரனின் கோபமும் உளறலும் மட்டுமே. எல்லாரும் அவரை திறமைக்காரண்டா என்கிறார்கள். என்ன திறமை? அதை மறைத்து வைத்துவிட்டார்கள்.
ஒரு செட்டியாருக்கு குழந்தை வேண்டுமாம். ஒரு பிராமண ப்ரோக்கர் வேலை பார்க்கிறார். (ஆனால் கிறித்துவ டீன் மட்டும் போப்பே தப்பு செய்தாலும் தொப்பியைக் கழற்றிவிட்டு குட்டுபவர்!) என்னென்னவோ சொல்கிறார். வில்லனின் கொடூரத்தைக் காண்பிக்க ஆறு பெண்களுக்கு மொட்டை. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. என்ன எடுக்கிறோம், என்ன சொல்லப்போகிறோம் என்று எந்த இலக்குமின்றி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
பாலாவின் திரைப்படங்கள் திரையில் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரைக் காண்பிக்க முயல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் மேல் மரியாதையைக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அது செய்வதில்லை. பொதுப்புத்தியில் இருக்கும் இகழ்ச்சியை வெறுப்போடு இணைக்கிறது. ஆட்டக்காரிங்கன்னா அவுசாரிங்களா என்கிறார். இப்படத்தில் அவர்கள் அத்தனை பேரும் ஆபாசமாகவே ஆடுகிறார்கள். ஆபாசமாகவே பேசிக்கொள்கிறார்கள். மாமனாருடன் சேர்ந்து குடிக்கிறார். ஆனால் வசனம் மட்டும் மரியாதையைக் கேட்கிறது. ஆட்டம் ஆபாசமாக இருந்தாலும் அவர்களைத் தொட உரிமையில்லை என்பது நியாயம். ஆனால் அதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவாகச் சொல்ல பாலாவால் முடியவில்லை.
பாலாவின் நடிகர்களின் ஓவர் ஆக்டிங்கே அவரது ஒவ்வொரு படத்தை சீரழிக்கிறது. அது நடிகர்களின் பிரச்சினையல்ல, ஒவ்வொரு நடிகருக்குள்ளும் இருந்துகொண்டு நடிக்கும் பாலாவின் பிரச்சினை. இதைத் தீர்க்காத வரை நல்ல படத்தை பாலாவால் இனி கொடுக்கமுடியாது.
பாலாவின் நகைச்சுவைக் காட்சிகளின் கொடுமை இப்படத்திலும் தொடர்கிறது. லொடுக்கு பாண்டி, சரோஜாதேவி சோப்பு டப்பா என்ற கொடுமைகளின் வரிசையில் இப்படத்திலும் ஒரு காட்சி. புது ஆட்டக்காரியைத் தேடிச்செல்லும் காட்சி. நேரத்தை இழுக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நல்ல படம் என்று எதையுமே பேசமுடியாது என்பதை பாலா புரிந்துகொள்ளவேண்டும்.
கதையை சவசவ என்று இழுத்துவிட்டு கடைசியில் தன் பிராண்டான கொடூரத்துக்குத் தாவுகிறார். ஹீரோ மிருகம் போல தாக்கி எல்லோரையும் கொல்வதும், ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்துவிட்டு அவளைக் கொன்றுவிடுவதும் என கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத காட்சிகள். ஹீரோ மிருகம் போல மாறி அடிக்கும் காட்சிகளின் விஷுவல்கள்கூட பழைய பாலா படங்களைப் பார்ப்பதைப் போலவே உள்ளது.
இதில் சசிக்குமார் மிகையாக நடிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பாவம் அவர் உழைப்பு. பாலா ஹீரோக்களின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போவது இது முதல்முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல.
இளையராஜாவுக்கு செய்யப்பட்ட துரோகம் கொஞ்சம் நஞ்சமல்ல. அட்டகாசமான பாடல்களையெல்லாம் கூறுகெடுத்து கொத்துக்கறி போட்டுக் கெடுத்திருக்கிறார்கள். மிகச்சாதாரண இயக்குநர் கூட இதைவிட ஒழுங்காக எடுத்திருப்பார். பாருருவாயா பாடலைப் பார்த்தால் கதறத் தோன்றுகிறது. இதில் நல்ல பாடல் ஒன்று வரவில்லை. ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேவைப் பார்க்கமுடியவில்லை. ராஜாவின் பின்னணி இசை பலவித மாயங்களை நிகழ்த்துகிறது. காட்சிகள் ஈடுகொடுக்கமுடியாமல் திணறுகின்றன. உண்மையில் ராஜா காட்சிகளுக்குத்தான் இசையமைத்திருப்பார். ஆனாலும், அவன் தன் தரத்தில் இருந்து கீழே இறங்கவில்லை.
இந்தப் படத்தில் ஒரு பெண்கூட நல்லவராக ஏன் இல்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நினைப்பு இப்படத்தை ஒரு சிக்-மூவியாக என் மனத்தில் பதியச் செய்துவிட்டது. ஏன் பெண்கள் மேல் இத்தனை வெறுப்பு, வன்மம்? யோசிக்க யோசிக்க எரிச்சலே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆறு பெண்களுக்கு மொட்டை போடும் காட்சியும், செட்டியார் முன்னிலையில் வரிசையாகப் பெண்கள் வரும் காட்சியும். இவையெல்லாம் கலையல்ல. குரூரத்தின் கலை என்பது நீங்கள் எதைப் படமாக எடுக்கிறீர்கள், எந்தக் களத்தில் எடுக்கிறீர்கள் என்பதில் உள்ளது. வெற்றுக் குரூரம் கலையாகாது.
இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த ஒரே காட்சி, அண்ணனும் தங்கையும் ஆடும் தெரு டான்ஸ்தான். அது ஒன்று மட்டுமே யதார்த்தத்துக்கு அருகில் உள்ளது. வரலட்சுமியின் ஆட்டமும் யதார்த்தத்துக்கு அருகில் இருந்தாலும், மற்ற காட்சிகளில் அவர் செய்யும் மிகை நடிப்பு இதையும் சேர்த்துக் கெடுத்துவிட்டது.
ஒரே விதமான கதாபாத்திரங்களைப் படைப்பது, பார்வையாளர்களை திடுக்கிட வைப்பதற்காகவே கொடூரமாக எதையாவது செய்வது, தரமற்ற நகைச்சுவைக் காட்சிகளை வைப்பது, நடிகர்களை ஏனோ தானோவென்று ஓவர் ஆக்டிங் செய்யவைப்பது, திரைக்கதையெல்லாம் தேவையில்லை என்று தன் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பது – இவற்றையெல்லாம் கைவிடவில்லையென்றால் பாலாவின் திரைப்படங்கள் இனி தேறப்போவதில்லை.
பின்குறிப்பு: மகராசி இலவசமா அரிசி கொடுக்கிறதால என்ற ஒரு வரி வருகிறது. அதிமுகக்காரர்கள் இதைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. பாலா போன்ற இயக்குநர்கள் செய்யக்கூடாத ஒன்று இது.



