Archive for கவிதை

5 கவிதைகள்

கனவின் அலைதல்

என்னை கௌவிக்கொண்டு
வழிதவறிச் சென்ற தட்டான்
மலைமுகட்டிலிருந்து
திரும்ப வரும்போது
என்னை மறந்துவிட்டிருந்தது
நான் தூங்கிவிட்டிருந்தேன்
அங்கே
என் கனவில்
கையில் தட்டானை ஏந்திக்கொண்டிருந்தேன்
கைகள் விரிக்கவும் மூடவும்
தட்டான் இறக்கையை அடித்துப் பறக்கவும்
கடந்துகொண்டே இருக்கிறது
நிமிடம் நாள் மலைகள் ஆறுகள்
யுகமுடிவில்
அங்கே தட்டான் இல்லை
நானில்லை
மலைமுகடில்லை
ஆனால் அலையும்
என் கனவு மட்டும் இருக்கிறது.

மீண்டு வரும் ஒரு சித்திரம்

கண்ணில் தெரியும் கதைகளில்
உருவாகி வரும் சித்திரத்தில்
நான் சேர்த்த சில வரிகள் இருக்கின்றன
நீங்கள் நீக்கிய சில வரிகள் இல்லை
அவன் கிழித்த கோடுகள் உள்ளன
அவள் வரைந்த ஓவியத்தின் ஒருபகுதி தெரிகிறது
போக வர கைகள் கிறுக்கிய கோடுகளோடு
உள்ளிருந்து
உயிர்ச்சொல்லென
மேலெழும்
வார்த்தைகளொடு
அழிக்கப்பட்ட தடங்களின் மௌனத்தோடு
கண்ணில் தெரிகிறது புதிய கதை

ரணங்களில் துளிர்க்கும் ஒரு சிறு செடி

கனன்றுகொண்டிருக்கும்
இன்னும்
அச்சொல்லை நீ சொல்லாதிருந்திருக்கலாம்
நான் மறந்திருக்கலாம்.
இரவுகளில் நம் நிர்வாணம்
பொத்தி வைத்துக் கொண்டிருக்கும்
அநேகக் கதைகளை
ஒவ்வொன்றாகப் பிரித்தால்
இன்னொரு உலகமென
நாமறிவோம்
நம் பாவனைகள்
அதை மறப்பதை ஒட்டியே என்றாலும்.
மீள மீள
நீர் தெறிக்க
வீசப்பட்டுக்கொண்டே இருக்கும்
கல்லும்
ரணமும்
இதற்கிடையில்
ரணத்தில் மெல்ல துளிர்க்கிறது
ஒரு சிறு செடி.

இடுகை

ஃபேஸ்புக்கின் முகமிலிகள்
அலுக்கத் துவங்கும்போது
யாரோ யாரையோ
வசைபாடத் துவங்கினார்கள்.
அவன் ஒரு பக்கம் சேர்ந்தான்.
சில வரிகள் உள்ளிட்டான்.
அவன் மூக்கு ரத்தத்தை மோப்பம் கொண்டது.
உள்பெட்டியின் வசைகளில் தனித்து நின்றது ஒரு கெட்ட வார்த்தை.
நான்கைந்து முறை சொல்லிப் பார்க்கவும்
இளவயதின் கிராமம் விரிந்தது.
ரத்தமும் சதையுமான மனிதர்களைத் தேடி
தெருவோர தேநீர்க் கடைக்கு ஓடினான்.
யாரும் யாரையும் திட்டவில்லை.
அவனுக்கு ஒரு தும்மல் வந்தது.
என்ன சமூகம் இது என்றான்.
கைபேசியில்
ஃபேஸ்புக்கைத் திறந்து
தாயளி என எழுதத் துவங்கினான்.

சிறுமியின் புன்னகை

அச் சிறுமியின் புன்னகையில்
உயிர்கள் தோற்று மண்டியிட்டன
பறவைகள் பறக்க மறந்து உறைந்தன
உலகக் கடவுளர்கள்
கை கட்டி
வாய்பொத்தி
மெய்குழைந்து
வரிசை கட்டிக் காத்திருந்தனர்,
அவள் உறங்கிவிட்டிருந்தாள்.
அந்தச் சிறுமி
தன் மென்கைக்குள்
உலகைச் சுருட்டி இருந்தாள்
எங்கேயும்
இரவுபகல்
பேதமின்றி
பூக்கள் பூத்தன
அணுகுண்டு வெடித்த வெளிகளில்
அவளையொத்த சிறுமிகள்
புன்னகையைத் தெளித்தவண்ணம் இருந்தனர்
சாத்தான் உலகச் சிறுமிகளை
ஒற்றை ஓவியமாக்கிப் பார்த்தான்,
அந்த ஓவியத்திலிருந்து
ஆயிரம் ஆயிரம் சிறுமிகள்
மொட்டென வெடித்துப் பரவி
கடவுளானபடியே இருந்தார்கள்.
சிறுமிகள் கால்பட்ட நிலத்தின்
கூழாங்கற்கள் சிலிர்த்தன.
கருமேகம் எப்போதும் அவர்கள்பின்
சென்றபடி இருக்க,
பூமியின் சமநிலை
புன்னகை பூத்த
சிறுமிகளால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

Share

ஒரு கவிதை

அநாதியின் நெருப்பு

ஆதிமலரின்
ஆதிக்கும் ஆதி மலரின்
வாசம் கமழத் தொடங்கி இருந்தபோது
அநாதியின் நெஞ்சுத்தீ
வேகெடுக்கத் தொடங்கி இருந்தது
முதலுக்கும் முதலான சங்கு ஒன்றின் இசையில்
பெயரில்லா மூப்பனின் நடனத்தில்
சங்குகள் முழங்கத் தொடங்க
இசை பேரோசை ஆகியது
பிரபஞ்சமெங்கும் பேரோசை
யாராலும் நிறுத்த இயலாத
எவரையும் உள்ளிழுத்துப் பெருகும்
பெரும் நெருப்பு
அநாதியின் மூச்சுக்காற்று
இப்போதும் சுற்றிச் சுழல்கிறது
மாயத்தின் புதிர்கள் அவிழும்போது
எப்போதும்போல் புலர்கிறது ஒரு காலை
ஒரு பெண்ணென ஒரு ஆணென.

Share

மோகனரங்கன் கவிதைகள் குறித்து பெருமாள் முருகன் – ஆத்மாநாம் விருது

மோகன ரங்கனின் கவிதையை ஒட்டி பெருமாள் முருகன் ஆற்றிய உரையைக் கேட்டேன். (https://www.youtube.com/watch?v=UwkLYoE1P3U) மிக தட்டையான எவ்வித ஆழமும் அற்ற ஓர் உரை. பழங்காலக் கவிதைகளுக்குப் பொருள் சொல்லுவதோடு அதன் அழகு முடிந்துவிடுகிறது என்ற சொன்ன பெருமாள் முருகன், நவீன கவிதைகளுக்கு இப்பொருள்கூறல் முறை தேவை என்கிறார். சொல்லிவிட்டு, இப்படிப் பொருள் சொல்லுவதால் அக்கவிதை சீரழிகிறது என்பதைத் தான் ஏற்கவில்லை என்கிறார். ஆனால் உண்மையில் இவர் பொருள் சொல்லி மோகன ரங்கனின் மூன்று கவிதைகள் சீரழிக்கப்பட்டன. மிக எளிதான கவிதைகள், படித்தவுடன் நம் மனத்தில் விரியவேண்டிய காட்சிகளை, அக மனக் கேள்விகளை ஒருவர் ரசிப்பதற்காக எழுதப்படும் கவிதைகளை வார்த்தைகளைக் கொண்டு, சங்க காலக் கவிதைகளை விளக்குவது போல விளக்கினால் என்ன ஆகும் என்பதற்கு பெருமாள் முருகனின் பேச்சு ஓர் உதாரணம்.
 
எந்த ஒரு மேலதிக விவரத்தையோ விளக்கத்தையோ அகமனம் செல்லக்கூடிய புதிய வழிகளையோ மனம் யோசிக்காத தர்க்கங்களையோ இவர் பேச்சு உருவாக்கவே இல்லை. நமக்கு என்ன புரிந்ததோ அதையே இவரும் சொல்கிறார். நமக்கு என்ன புரியவில்லையோ அதை ‘இதைப் பற்றி யோசிக்கவேண்டும்’ என்ற ரீதியில் சொல்லிவிடுகிறார். இவரால் கவிதைகளில் எந்த ஒரு பாய்ச்சலையும் நிகழ்த்தமுடியவில்லை. சங்ககாலக் கவிதைகள் குறித்து பெருமாள் முருகனுக்கு இருக்கும் அறிவு ஒரு பலம் என்றால் இன்னொரு வகையில் பெரிய தடை. அந்தத் தடையை அவரால் தாண்டவே முடியாது.
 
முதல் கவிதைக்குப் பத்து நிமிடம் பேசிவிட்டு, அது எழுத்துப் பிழை என்று முடித்தது ஒரு கொடுமை. இதைச் சொல்லவா இந்த மேடை? அதையும் இத்தனை விளக்கிச் சொல்லி அந்தப் பிழையைச் சொல்ல அவசியம் என்ன? அதில், பிரம்மராஜனும் முன்னுரையில் இதே கவிதையைக் குறிப்பிட்டுள்ளார் என்றும் சொல்கிறார். இதில் ஒரு சந்தோஷ போல! மீண்டும் இதே கவிதையை வார்த்தை வார்த்தையாகப் பீராய்கிறார். இத்தனைக்கும் படித்தவுடன் சட்டென விளங்கும் எளிய கவிதை அது. மயிலே உன் அழகை உனக்கு விவரிக்கிறேன் என்று சொல்லி ஒவ்வொரு இறகாகப் பிய்த்து மயிலிடமே காண்பிப்பது எத்தனை கொடூரம்! அதிலும் பெயரழிந்த என்ற வார்த்தைக்கு இவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டபோது, பத்தாம் வகுப்பு பள்ளி பென்ச்சில் உறக்க உச்சத்தில் தமிழாசிரியரைக் கொடூரமாகப் பார்த்துக்கொண்டிருந்த நினைவு வந்தது. தமிழ்க் கவிதைகளைக் கொன்றொழிக்க தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களுமே போதும்.
 
பெய்தோய்ந்த என்ற வார்த்தையைப் பிடித்துக்கொண்டு என்னவெல்லாமோ சொல்லி இதைப் பற்றி இன்னும் யோசிக்கலாம் என்கிறார். ஒட்டுமொத்த எல்லாக் கவிதைகளையுமே இன்னும் யோசிக்கலாம் என்பதுதான் உண்மையான திறனாய்வு. பெருமாள் முருகன் நாவல் கூட எழுதிக்கொள்ளட்டும், நவீன கவிதைகளை வார்த்தைகளாகப் பிரித்துப் பொருள் சொல்லும் கொடுமை மட்டும் வேண்டாம்.
 
கவிஞன் ஒவ்வொரு வார்த்தையை ஓர் அடியில் நிறுத்துவதும் அடுத்த அடியில் தொடங்குவதும் ஒரு அவசியம் கருதியே என்கிறார். இது என்ன புதிய விஷயமா? உண்மையில் எல்லா சமயங்களிலும் இது உண்மை அல்ல! அதே சமயம் இது யாருக்கும் தெரியாததும் அல்ல.
 
சங்க காலக் கவிதைகளைப் பற்றிக் கடைசி சில நிமிடங்களில் பெருமாள் முருகன் பேசுவதுதான் நன்றாக இருந்தது. அவர் அதைப் பற்றி ‘பேச ஒன்றும் இல்லை, காரணம், புரியாத வார்த்தைகள் புரிந்தால் போதும், நேரடியானவை’ என்கிறார். ஆனால் அதுதான் உண்மையில் இவருக்கு நன்றாக வருகிறது. அதையே இவர் தொடர்ந்து செய்யலாம்.
 
பெருமாள் முருகனின் காணொளியைக் காணப் பரிந்துரைத்த நண்பர் அடுத்த ஒரு வாரத்துக்கு என் கண்ணில் படாமல் இருப்பது நல்லது என்று அவருடைய கட்டம் சொல்கிறது. எல்லாவற்றையும் என் வீட்டுக்கு வந்து கொடுத்துத் திட்ட வைக்கும் ஷ்ருதி டிவி வாழ்க.
 
பிகு: மலையாளம் கவிஞர் அனிதா தம்பியின் பேச்சை அரைமணி நேரம் கேட்டேன். (https://www.youtube.com/watch?v=ozkRIY78zmQ) நல்ல விரிவான ஆழமான உரை. முழுமையாகக் கேட்கவேண்டும். ஆத்மா நாமின் தாய்மொழி கன்னடம், இருந்தும் தமிழில் கவிதை எழுதினார் என்ற, வழக்கம்போன்ற ஜல்லியை இவரும் செய்தார். தமிழர்களே இதைச் செய்யும்போது இவரைப் பற்றிச் சொன்ன இருக்கிறது. ஆத்மாநாம் தமிழரா கன்னடரா என்று தெரிந்துகொண்டால்தான் இதைப் பற்றிச் சொல்லமுடியும். ரஜினி கன்னடர், தமிழில் நடித்துப் புகழ் பெற்றார் என்பதற்கும், நாகேஷ் தாய்மொழி கன்னடம், தமிழில் நடித்துப் புகழ்பெற்றார் என்பதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமானது.
Share

சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி – படிக்கவேண்டிய கட்டுரை

தமிழின் சாதனைக் கட்டுரைகளுள் ஒன்று இந்தக் கட்டுரை. இதை எழுதிய கல்யாண ராமனுக்கு (யார் இவர்!) ஒரு சல்யூட். தமிழில் இது போன்ற ஆய்வாளர்கள் அருகிவிட்டார்கள். இந்நிலையில் இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு பதிப்பாளரும் படித்து இதைப் புரிந்துகொள்ளவேண்டியது அத்தனை அவசியம்.
 
இதை காலச்சுவடு உள்நோக்கத்தோடு செய்ததா என்பது தெரியாது. உள்நோக்கத்தோடு செய்தாலும் அதை நான் வரவேற்கிறேன். இன்னும் அதிக உள்நோக்கங்களோடு கட்டுரைகள் எல்லா இடங்களில் இருந்தும் வரட்டும். 🙂 உள்நோக்கம் என்ற ஒன்றே ஒரு வலிமையான கட்டுரையைக் கொண்டுவருகிறது என்று உறுதியாக நம்புகிறேன். இஸம் சார்ந்த உள்நோக்கம் என்ற ஒரு வஸ்து இல்லையென்றால், இன்றைய ஃபேஸ்புக் சமூகத்தில் என்னதான் மிஞ்சும்? வாழ்க உள்நோக்கம். வளர்க உள்நோக்கக் கட்டுரைகள்.
 
ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிடறேன். ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி.’ இது என்ன எழவு தலைப்பு? இலக்கியக் கட்டுரைன்னா இப்படி என்னத்தையாவது வைக்கணுமா? நல்லவேளை, கட்டுரை தலைப்பைப் போல இல்லை. கொஞ்சம் சூனியத்தினூடேவெடிக்கும்பெருவெளிபிரபஞ்சபிரக்ஞைகளைக் குறைங்க சாமிகளா.
 
//எழுபதுகளின் சிற்றிதழ்களில் பிரசுரமான மூலவடிவங்களைப் பிரம்மராஜனின் பதிப்பில் காண்பதற்கில்லை என்பது மட்டுமன்று; ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பிலிருந்தும் சில இடங்களில் வேறுபட்டுப் பிரம்மராஜன் கவிதைகளைப் பதிப்பித்துள்ளார். எழுத்துப்பிழை, எழுத்து மாற்றம், சொல் மாற்றம், சொல் விடுபடல், பொருள் மாற்றம், வரி மாற்றம், முழுவரியையும் கவனக்குறைவாக விட்டுவிடுதல், முந்தைய வரிகளைப் பிந்திய வரிகளுடன் சேர்த்துக் குழப்பி மீண்டும் இடம்பெறச் செய்தல், சில வரிகளைத் தவறுதலாக விட்டுவிடுதல், சிலவற்றை முழுதாக நீக்கிவிடுதல், தலைப்புத் திருத்தம், தலைப்பு மாற்றம், புதுத் தலைப்பிடல், ஒரு சொல்லின் மூலவடிவத்தைத் திருத்தி அதன் மாற்றுவடிவத்தைப் பயன்படுத்துதல் (சாலை – ரோடு; வெற்றுடம்புடன் – நிர்வாணமாய்; அச்சம் – பயம்) எனப் பிழைகள் மலிந்ததாகப் பிரம்மராஜனின் பதிப்பு உள்ளது. மூலப்பிரதியிலிருந்து வேறுபட்டுப் பதிப்பிக்கும்போதுகூடச் சிலவேளைகளில் கவனக்குறைவால் நேர்ந்துவிடும் பிழைகளைச் சகித்துக்கொள்ளலாம்; தம் 1989ஆம் ஆண்டுப் பதிப்பிலிருந்து (தன்யா & பிரம்மா வெளியீடு) தாமே வேறுபட்டுப் பிரம்மராஜன் பதிப்பிப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?//
 
http://www.kalachuvadu.com/current/issue-200/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
Share

பென்சில் சீவல்களுடன் ஒரு ஆட்டம் – கவிதை

பென்சில் சீவல்களுடன் ஒரு ஆட்டம்

பென்சிலை சீவிக்கொண்டிருக்கிறாள் மகள்
சீவி விழும் மரச் சீவல்களைச் சேகரித்து
தன் டப்பாவில் வைத்துக்கொள்கிறாள்
மீண்டும் சீவத்தொடங்குகிறாள்
கை வலிக்க
அதைக் கீழே வைத்துவிட்டு
அப்படியே படுத்துக்கொள்கிறாள்
கனவெங்கும் மரத்தின் சீவல் சுருள்கள்
வீட்டின் அறைமுழுக்க சுருள்கள்
அலையின் நுரையைப் போல்
அள்ளிப் பூசிக்கொள்கிறாள்
நதியின் நீரென முங்கி எழுகிறாள்
வாய் நிறைய காற்றடக்கி
ஊதித் தள்ளுகிறாள்
விடிந்ததும் நேராக ஓடிவந்து
புது பென்சில் வேணும்ப்பா என்கிறாள்
தினம் ஒரு பென்சிலா, உருப்படும் என்று சொல்லும் என்னை…
எப்படிச் சொல்ல
புரியாமலா
வினோதமாகவா
விரோதமாகவா
எரிச்சலுடனா..
எப்படியோ பார்க்கிறாள்
அறையெங்கும் அவளைத் தேடிக்கொண்டிருக்கின்றன
இரவில் கும்மாளமிட்ட மரச் சுருள்கள்

Share

கவிதை

வேர்வையில் நனைந்து
கண்கூசும் வெயிலில்
சிக்னலுக்குக் காத்திருக்கும்போது
படபடத்து மின்னி மறையும் பட்டாம்பூச்சி
நூறு நூறு கண்களில்
விதைத்துச் செல்கிறது
ஒரு மரத்தை.

Share

கிரீடம் (கவிதை)

நத்தையைப் பார்த்துச் சிரிக்கிறாள் மகள்
எதோ நினைத்துக்கொண்டவளாய்
மழலை மாறாத சொற்களில்
வேப்பமரம் துள்ஸி என்கிறாள்
மிகப்பெரிய பளுவொன்றை சுமந்துகொண்டு
வாசற்படி ஏறும்போது
சிறு பஞ்சுப் பொதியென வயிற்றில் முட்டி
யூகேஜி வந்துட்டா நான் பெரியவதானப்பா என்கிறாள்
இரவின் வானமும் அதன் நட்சத்திரங்களும்
மரங்களின் வாசமும்
குயில்களும் கிளிகளும் அணில்களும்
துளசிச் செடியும் அதில் குடியிருக்கும் வீட்டுத் தெய்வமும்
என் வீட்டுக்குள் காத்திருக்கின்றன
இவள் பேசட்டும் என்று.
நான் அணிந்திருக்கும்
வைரம் பதித்த தங்கக் கிரீடம்
லேசாக உறுத்தத்தான் செய்கிறது
கொஞ்சம் கூச்சமும் கூட.
உறுத்தினாலும் கூச்சம் தந்தாலும்
அது கிரீடம்.

Share

மூன்று கவிதைகள்

மலைப்பயணம்

மலையிலிருந்த இறங்கிய
குதிரையாகிய நான்
இளைப்பாறிக்கொண்டேன்
சிவந்திருந்த கண்கள்
தன்தோற்றம் கொண்டன
மூச்சு சீராகி
உதறலெடுத்த கால்கள் நின்றன
கைகளின் நடுக்கம் மறைந்தது
குதிரை விடைபெறும் தருணம்
புதிய கல்லொன்று வருமென்று
எதிர்பார்த்துக் காத்திருந்து
ஏமாந்து கழியும் பொழுதில்
மலையுச்சி நோக்கிக்கொண்டே
கல்லொன்றைத் தேடுகிறேன்
குதிரையாகும் நான்

(10-அக்டோபர்-2015)

சடக் சடக் ஒலியில்
கால் மாற்றி
கை விரையும் வேகத்தில்
புதிய புடைவையின்
வண்ண நெளிவுகளில்
உருவாகி வருகிறான்
இன்னுமொரு இறைவன்
உடுக்கையொலியும்
தாளலயமும்
தப்பாத ஆட்டத்தில்
கண்மயங்கிச் சரியும்
அந்திக்குப்பின்னே
காத்திருக்கிறது
இன்னுமொரு சூரியன்

(10-அக்டோபர்-2015)

இருளிரவு

நாளை காலை முதல்
எத்தீச் சொல்லும் காதில் விழப்போவதில்லை
பாலில் நீர் சேர்த்த புகார் வரப்போவதில்லை
இறைவனைப் பற்றிய ஐயங்களில்லை
நெருப்புப் பந்தம் சுற்றிலும் பூச்சிகள் இல்லை
குழந்தைகள் அழப்போவதில்லை
எங்கும் இனியன, எல்லாம் இனியது
சுற்றி வரும் சொற்கள் விலகி
வெற்றுக் கவிதைகள் இல்லை
சுற்றம் இனியது சூழல் இனியது
என்றேதான் கவிகிறது
இவ்விரவும்.

(10-அக்டோபர்-2015)

Share