Archive for கவிதை

கவிதை

நம்பாதே

நம்பாதே என்றது அந்தக் குரல்
எப்போதும் என்னுடனே
என் நிழலென வரும் குரல்
நிஜத்தை மீறிய
நிஜமென ஆகும் ஒரு குரல்.
அப்படியே நின்றேன்.

உள்ளமெங்கும் புன்னகை ஒளிர
உதட்டில் ஒரு ஒளியை ஏந்தி
கைகள் இரண்டையும் விரித்தபடி
தழுவ வந்தார்கள்.

எழுதி எழுந்தி ஓய்ந்த கைகளுடன்
உலகம் முழுக்க அமைதியைப் பரப்பியவர்கள்
ஒரு பேனாவுடன் சில காகிதங்களுடன்
என் கை பிடித்து அழைத்துப் போக
அமைதியாகக் காத்திருந்தார்கள்.

உடல் தழுவி
இறுக்கிப் பிணைந்து
பாம்புகளென புரண்டவர்கள்
என் நலனுக்கென
தன்னைக் கொடுத்தவர்கள்
என்னைக் கடைத்தேற்ற
கண்களில் தாபத்தோடு பார்த்திருந்தார்கள்.

கையில் அட்சதையுடன்
கண்களில் நடுக்கம் தெரிய
உடலைத் தேங்கிப் பிடித்தபடி
ஓய்ந்து போய் நின்றிருந்தவர்கள்
எனக்காகவே நின்றிருந்தார்கள்

என்னை அழைத்துப் போவதாகச் சொன்னார்கள்
என்னை சரி செய்வதாகச் சொன்னார்கள்
எனக்கு வழிகாட்டுவதாகச் சொன்னார்கள்
என்னை ஆசிர்வதிப்பதாகச் சொன்னார்கள்
நானின்றிப் பிறிதொன்றில்லை என்றார்கள்.
பிறிதொன்றில்லாமல் நானில்லை என்றார்கள்.
எழுத்தும் தத்துவமும்
அன்பும் காமமும்
கண்களில் ஈரமும்
கைகளில் உறுதியும்
எல்லாம் எனக்காகவே என்றார்கள்.

கருவண்டின் வசீகரமென
புதைகுழியின் ஈர்ப்பென
எரிவிளக்கின் ஒளியென
சிலந்தி வலையின் விரிவென
நெடுஞ்சாலையின் இருளென
விலக்கமுடியாமல் விக்கித்து நின்றேன்.

உள்ளே இருந்து சொன்னது
அந்தக் குரல்,
நம்பாதே.

அக்குரலையும் சேர்த்தே
நம்பவில்லை என்றேன்.

எதைப் பிடித்துக்கொள்வது?
எதைப் பிடித்துக்கொள்வது?

அனைவரும் பார்த்திருந்தார்கள்.
காற்றில் பக்கங்கள் கிழிந்தன.
பேனாக்கள் உலர்ந்தன.
இன்னமும் நின்றுகொண்டிருக்கிறேன்.
அடுத்த அடிக்காகக்
காத்திருக்கிறது நிலம்.

Share

ஒரு கவிதை

அம்மாவுக்கான கவிதை

அம்மா இறந்த பின்பு
கனவில்
அடிக்கடி வருகிறாள்.
எடுத்த எடுப்பில்
எலே சாப்ட்டியா என்கிறாள்.
அவளுக்காக காத்திருக்கும்
ஒரு கவிதைக்கான
அலங்கார வார்த்தைகள்‌
அந்த நொடியே
இல்லாமலாகின்றன.

Share

ததும்பும் குவளை (கவிதை)

ததும்பும் குவளை

கால் நீட்டி பின்சாய்ந்து
சோபாவில் அமர்ந்திருக்கிறேன்
முன்னிருக்கும் டீப்பாயிலுள்ள
குவளையில்
ததும்பிக்கிடக்கிறது நீர்
அலை வரும், மீன் உழலும்
அருகில் அமர்ந்து பார்த்திருக்கிறான் அவன்.
அம்மா தன் பங்குக்கும்
மனைவி ஆசையுடனும்
மகனும் மகளும் 
உறவினர்கள் நண்பர்கள்
தொடர்ந்து குவளையில் நீரூற்ற
நிறைந்தும் நிறையாமல்
ததும்பிக்கொண்டே இருக்கிறது குவளை.
நீங்களா என்று கேட்டேன்.
சூழ நின்றொலிக்கும்
சத்தங்கள் நின்று
சட்டென நிசப்தமாக
நானும்தான் என்றவன்
தன் முறைக்காகக் 
காத்திருப்பதாகவும் சொன்னான்.

Share

பேருரு (கவிதை)

பேருரு

பாட்டி பேரனுக்குக் கதை சொல்லத் துவங்கும்போது
சட்டெனத் துளிர்க்கும் ஒரு வனமும்
அதில் சில தும்பிகளும்
அவற்றின் பின்னே ஓடும் பால்ய நானும்
கையில் சோற்றுண்டையுடன் துரத்தும் அம்மாவும்
இப்போதெல்லாம் வருவதே இல்லை

எப்போது சொட்டுமெனக்
காத்திருக்கும் நீரின் துளியோ
காற்றில் ஆடக் காத்திருக்கும்
மரத்து இலையோ
உடல் விதிர்க்கச் செய்யும் வனப்போ
எல்லாமே நானறியாமல்
என்னைக் கடந்திருக்கத்தான் வேண்டும்

கொந்தளிப்பிலோ
மகிழ்ச்சியிலோ
சோகத்திலோ
சிரிப்பிலோ
பெரும் கடல் அலையிலோ
நிசப்ததிலோ
ஒரு கணமும் நிலைக்கமுடிவதில்லை

எங்கோ ஏனோ காரணமின்றி
ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்புகள்
அடிக்கடி நினைவுக்கு வர
மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்
சிற்றுருவாய் மிகச் சிற்றுருவாய்.

Share

இரண்டு கவிதைகள்

கனவுகளின் விளையாட்டு

கனவுகளின் சிக்கலான வரைபடம் ஒன்றை
நானே வரைந்து
உள்ளே சென்றேன்
வரைபடத்தின் புள்ளிகளில் சிக்கித்
தொலைந்து போகுமாறு
விதித்துக்கொண்டிருந்தேன்.
சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தது.
சிறிது நேரத்தில்
வெளியேறத் தெரியாமல்
விக்கித்து நின்றபோது
எதிரே தோன்றியவன் சொன்னான்,
இன்னொரு கனவிலிருந்து வந்தவன் என.
தன் கனவுக்குள் அழைத்துச் சென்றான்.
என் கனவுகளில் கொஞ்சம் எடுத்துக்கொண்டான்.
இரண்டு கனவுகளில்
எது யாருடையது என்ற குழப்பம் வந்த பொழுதில்
அவன் கனவுகளிலிருந்து வெளியேறியபோது
தூங்கிக் கொண்டிருந்த நான்
கண்விழிந்த்துச் சிரித்தான்.

2

இரவின் நீளத்தில்
எங்கெங்கோ செல்லும் நினைவுகளில்
ஒரு வாளேந்தி விரட்ட
முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்கிறான்.
கண்களில் கைகளில் உடலெங்கும் பயம் பரவ
ஒரு கணம் மின்னி மறைகிறது
துரோகங்களும்
வஞ்சகங்களும்
கேலிகளும்
அவமானங்களும்.
புரண்டு படுக்கும்
பிஞ்சுக் குழந்தையின்
உள்ளங்கை முகத்தில் பட
சிறு சூட்டில் அடங்கிப் போய்
வான் விட்டு மண் வீழ்கிறேன்
ஒரு மழைத் துளியென.

Share

கவிதை

இரவின் நீளத்தில்
எங்கெங்கோ செல்லும் நினைவுகளில்
ஒரு வாளேந்தி விரட்ட
முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்கிறான்.
கண்களில் கைகளில் உடலெங்கும் பயம் பரவ
ஒரு கணம் மின்னி மறைகிறது
துரோகங்களும்
வஞ்சகங்களும்
கேலிகளும்
அவமானங்களும்.
புரண்டு படுக்கும்
பிஞ்சுக் குழந்தையின்
உள்ளங்கை முகத்தில் பட
சிறு சூட்டில் அடங்கிப் போய்
வான் விட்டு மண் வீழ்கிறேன்
ஒரு மழைத் துளியென.

Share

கவிதை

தூக்கம் வராத கண்களின் வழியே
மலைகள் பெருகின
தாவரங்கள் செழித்தன
என்றோ எங்கோ பார்த்த முகமொன்றின்
துல்லிய நினைவில்
அப்பெண் சிரித்தாள்
நம்பிக்கைக்கும் துரோகத்துக்குமான
ஒத்திசைவுப் புள்ளியில் நின்றபடி
எல்லாவற்றையும் கலைத்துப்போடும்
அவனும் நகைத்து நின்றான்
ஒரு செல் உயிரினம் ஒன்று
குரங்காகி மனிதனாகியது
யுகங்கள் கடந்தோடின
ஏதோ ஒரு மழைக்காலம் பொய்த்தது
கடும் வெய்யிலில்
கருகி நின்றன வாழை மரங்கள்
உயிர்த்தெழும் ஒரு விதையொன்றில்
மெல்லக் கண்மூட
உலகம் இருண்டது.

Share

5 கவிதைகள்

கனவின் அலைதல்

என்னை கௌவிக்கொண்டு
வழிதவறிச் சென்ற தட்டான்
மலைமுகட்டிலிருந்து
திரும்ப வரும்போது
என்னை மறந்துவிட்டிருந்தது
நான் தூங்கிவிட்டிருந்தேன்
அங்கே
என் கனவில்
கையில் தட்டானை ஏந்திக்கொண்டிருந்தேன்
கைகள் விரிக்கவும் மூடவும்
தட்டான் இறக்கையை அடித்துப் பறக்கவும்
கடந்துகொண்டே இருக்கிறது
நிமிடம் நாள் மலைகள் ஆறுகள்
யுகமுடிவில்
அங்கே தட்டான் இல்லை
நானில்லை
மலைமுகடில்லை
ஆனால் அலையும்
என் கனவு மட்டும் இருக்கிறது.

மீண்டு வரும் ஒரு சித்திரம்

கண்ணில் தெரியும் கதைகளில்
உருவாகி வரும் சித்திரத்தில்
நான் சேர்த்த சில வரிகள் இருக்கின்றன
நீங்கள் நீக்கிய சில வரிகள் இல்லை
அவன் கிழித்த கோடுகள் உள்ளன
அவள் வரைந்த ஓவியத்தின் ஒருபகுதி தெரிகிறது
போக வர கைகள் கிறுக்கிய கோடுகளோடு
உள்ளிருந்து
உயிர்ச்சொல்லென
மேலெழும்
வார்த்தைகளொடு
அழிக்கப்பட்ட தடங்களின் மௌனத்தோடு
கண்ணில் தெரிகிறது புதிய கதை

ரணங்களில் துளிர்க்கும் ஒரு சிறு செடி

கனன்றுகொண்டிருக்கும்
இன்னும்
அச்சொல்லை நீ சொல்லாதிருந்திருக்கலாம்
நான் மறந்திருக்கலாம்.
இரவுகளில் நம் நிர்வாணம்
பொத்தி வைத்துக் கொண்டிருக்கும்
அநேகக் கதைகளை
ஒவ்வொன்றாகப் பிரித்தால்
இன்னொரு உலகமென
நாமறிவோம்
நம் பாவனைகள்
அதை மறப்பதை ஒட்டியே என்றாலும்.
மீள மீள
நீர் தெறிக்க
வீசப்பட்டுக்கொண்டே இருக்கும்
கல்லும்
ரணமும்
இதற்கிடையில்
ரணத்தில் மெல்ல துளிர்க்கிறது
ஒரு சிறு செடி.

இடுகை

ஃபேஸ்புக்கின் முகமிலிகள்
அலுக்கத் துவங்கும்போது
யாரோ யாரையோ
வசைபாடத் துவங்கினார்கள்.
அவன் ஒரு பக்கம் சேர்ந்தான்.
சில வரிகள் உள்ளிட்டான்.
அவன் மூக்கு ரத்தத்தை மோப்பம் கொண்டது.
உள்பெட்டியின் வசைகளில் தனித்து நின்றது ஒரு கெட்ட வார்த்தை.
நான்கைந்து முறை சொல்லிப் பார்க்கவும்
இளவயதின் கிராமம் விரிந்தது.
ரத்தமும் சதையுமான மனிதர்களைத் தேடி
தெருவோர தேநீர்க் கடைக்கு ஓடினான்.
யாரும் யாரையும் திட்டவில்லை.
அவனுக்கு ஒரு தும்மல் வந்தது.
என்ன சமூகம் இது என்றான்.
கைபேசியில்
ஃபேஸ்புக்கைத் திறந்து
தாயளி என எழுதத் துவங்கினான்.

சிறுமியின் புன்னகை

அச் சிறுமியின் புன்னகையில்
உயிர்கள் தோற்று மண்டியிட்டன
பறவைகள் பறக்க மறந்து உறைந்தன
உலகக் கடவுளர்கள்
கை கட்டி
வாய்பொத்தி
மெய்குழைந்து
வரிசை கட்டிக் காத்திருந்தனர்,
அவள் உறங்கிவிட்டிருந்தாள்.
அந்தச் சிறுமி
தன் மென்கைக்குள்
உலகைச் சுருட்டி இருந்தாள்
எங்கேயும்
இரவுபகல்
பேதமின்றி
பூக்கள் பூத்தன
அணுகுண்டு வெடித்த வெளிகளில்
அவளையொத்த சிறுமிகள்
புன்னகையைத் தெளித்தவண்ணம் இருந்தனர்
சாத்தான் உலகச் சிறுமிகளை
ஒற்றை ஓவியமாக்கிப் பார்த்தான்,
அந்த ஓவியத்திலிருந்து
ஆயிரம் ஆயிரம் சிறுமிகள்
மொட்டென வெடித்துப் பரவி
கடவுளானபடியே இருந்தார்கள்.
சிறுமிகள் கால்பட்ட நிலத்தின்
கூழாங்கற்கள் சிலிர்த்தன.
கருமேகம் எப்போதும் அவர்கள்பின்
சென்றபடி இருக்க,
பூமியின் சமநிலை
புன்னகை பூத்த
சிறுமிகளால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

Share