பேருரு (கவிதை)

பேருரு

பாட்டி பேரனுக்குக் கதை சொல்லத் துவங்கும்போது
சட்டெனத் துளிர்க்கும் ஒரு வனமும்
அதில் சில தும்பிகளும்
அவற்றின் பின்னே ஓடும் பால்ய நானும்
கையில் சோற்றுண்டையுடன் துரத்தும் அம்மாவும்
இப்போதெல்லாம் வருவதே இல்லை

எப்போது சொட்டுமெனக்
காத்திருக்கும் நீரின் துளியோ
காற்றில் ஆடக் காத்திருக்கும்
மரத்து இலையோ
உடல் விதிர்க்கச் செய்யும் வனப்போ
எல்லாமே நானறியாமல்
என்னைக் கடந்திருக்கத்தான் வேண்டும்

கொந்தளிப்பிலோ
மகிழ்ச்சியிலோ
சோகத்திலோ
சிரிப்பிலோ
பெரும் கடல் அலையிலோ
நிசப்ததிலோ
ஒரு கணமும் நிலைக்கமுடிவதில்லை

எங்கோ ஏனோ காரணமின்றி
ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்புகள்
அடிக்கடி நினைவுக்கு வர
மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்
சிற்றுருவாய் மிகச் சிற்றுருவாய்.

Share

Comments Closed