Archive for அரசியல்

Third Language policy in Tamilnadu

மூன்றாம் மொழிக் கொள்கையில் திமுக செய்து வருவது உச்சகட்ட உணர்ச்சி நாடகமே அன்றி வேறில்லை.

தினம் தினம் இப்படி உணர்ச்சியைத் தூண்டும் வகையில் ஒரு வரிக் கருத்தைச் சொல்லிச் செய்யும் அரசியல் திமுகவினருக்கு எளிதாக இருக்கிறது. அனைத்தையும் ஆதாரத்துடன் மறுத்துப் பேசும் அண்ணாமலையின் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் இந்த ஒற்றை வரி உணர்ச்சித் தெறிப்பு அரசியலில் அவர்கள் தஞ்சம் கொள்கிறார்கள்.

பி எம் ஸ்ரீ திட்டத்தில் தரப்படும் பணம் உரிமைப் பணம் அல்ல. நீங்கள் அந்தத் திட்டத்தில் சேராதவரை அந்தப் பணத்தைக் கேட்க எந்த மாநிலத்துக்கும் எந்த ஓர் உரிமையும் இல்லை. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர மாட்டோம் என்பது மாநிலத்தின் உரிமை. அதில் சேராவிட்டால் பணம் கிடையாது என்பது விதி.

பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அதிகபட்சம் 300 பள்ளிகள் வரலாம். இதை அனுமதித்து, மத்திய அரசுப் பங்குத் தொகையையும் பெற்றுக்கொண்டு, இங்கே ஹிந்தி அல்லாத மற்ற இந்திய மொழிகளைக் கற்றுத் தரும் வேலையை ஓர் சாதுர்யமான மாநில அரசு செய்திருக்கும். ஆனாம் நம் மாநில அரசுக்கு அந்தச் சாதுர்யம் இல்லை. காரணம், அவர்களுக்குத் தேவை எப்போதுமே பிரசார அளவிலான அரசியல் மட்டுமே.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த முடியாமல், கல்வித் தரத்தைக் கூட்ட முடியாமல், மற்ற பள்ளிகளின் தரத்தில் கை வைப்பதையே இவர்கள் வழக்கமாகக் கொண்டார்கள். சமச்சீர்க் கல்வித் திட்டம் வந்ததே அனைவருக்கும் ஒரே கல்வி என்பதற்காகத்தான். ஆனால் இன்று அமைச்சர்களின் மகன்(ள்)கள் மூன்று மொழி கற்கிறார்கள், ஆனால் ஏழை அரசுப் பள்ளி மாணவரால் அப்படிக் கற்க முடியவில்லை என்னும் ஆதாரமான கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டார்கள்.

தமிழுக்கு இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என்றால் அதிலும் மலைப்பே மிஞ்சும். தமிழை உணர்வு ரீதியாகத் தூண்டிவிடுவதைத் தவிர இவர்கள் எதுவுமே செய்ததில்லை. 2010 வரை, அதாவது திராவிடக் கட்சிகளின் ஆட்சி அமைந்து 43 வருடங்கள் வரை தமிழைப் படிக்காமல் ஒருவர் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு வரை படித்துவிடலாம் என்கிற நிலைமைதான் இருந்தது.

சரி, தமிழையாவது உருப்படியாக வளர்த்தார்களா என்றால் அதுவும் இல்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலரை அழைத்து அவர்களை தமிழில் எழுதச் சொல்லிப் பாருங்கள். உங்களுக்குப் பேரதிர்ச்சியே மிஞ்சும். கேட்டால் தமிழ் எங்கள் உணர்வுமொழி, அறிவல்ல என்று வாய்ச்சவடால் பேசுவார்கள். அறிவுள்ளவர்கள் இதைச் சொல்ல வெட்கப்படவேண்டும்.

தமிழை உணர்வுரீதியாக அணுகுபவர்கள், அந்த மொழிக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்றுதான் யோசிப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழை எப்படி எடுத்துப் போவது என்று திட்டம் தீட்டுவார்கள். ஆனால் இவர்கள் அரசுப் பள்ளியின் தரத்தைக் கூட்டாமல், ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தாமல், அவர்களைத் தங்கள் வாக்கு அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி, ‘டீச்சர்ஸ் ஓட்டு எங்களுக்குத்தான்’ என்று வெற்றுப் பெருமை பேசி, இன்று தமிழை ஒழுங்காக எழுதத் தெரியாத, படிக்கத் தெரியாத பல கோடி பேர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கேட்டால் தமிழ் எங்கள் உணர்வாம். இதைச் சொல்ல நாணமற்றவர்களின் கூட்டத்துடன் என்ன பேசுவது!

The DMK’s stance on the third language policy is nothing more than an emotional ploy.

The DMK finds it easy to make simplistic statements daily. They can’t handle Annamalai’s evidence-backed politics, so they resort to emotionally charged, one-liner politics.

Subsidies from the PM Shri scheme aren’t a state’s entitlement. States don’t have the right to demand those funds unless they participate in the scheme. While it’s a state’s prerogative not to join the PMSREE scheme, a savvy state government would have signed the MOU, ensuring students could learn any Indian language besides Hindi. Unfortunately, our state government lacks such tact, opting instead for propaganda politics.

The Uniform Education Scheme aims for universal education. However, while ministers’ children learn three languages, poor government school students are deprived of such opportunities.

The DMK’s contributions to the Tamil language are negligible. Until 2010, 43 years after Dravidian parties emerged as ruling parties, students could complete their 12th grade in Tamil Nadu without studying Tamil.

Had they properly developed Tamil, it might be different. But ask a few Class XII students from government schools to write in Tamil, and you’ll be shocked by their inability. Dravidian parties consider Tamil an emotional language, not a scholarly one—a sentiment that should be met with embarrassment.

Those who approach Tamil with genuine emotion would think about its preservation and progress. They’d strategize on how to pass Tamil down to the next generation. Instead, by not enhancing the quality of government schools or teachers, focusing solely on vote politics, and boasting about ‘teacher votes,’ they’ve created millions who can’t read or write Tamil properly. And yet, they claim Tamil stirs their emotions—this is disgraceful.

Share

2024 Parliament election – vote for BJP

இன்றோடு பிரசாரம் முடிகிறது. நம் கண்ணெதிரே இருக்கும் போட்டியாளர்களில் அண்ணாமலையின் நிழலைத் தொடக்கூட யாரும் இல்லை என்பது ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் நிச்சயம் தெரியும். படித்தவர், அறிவாளி, நேர்மையானவர், கண்டிப்பானவர், நிர்வாக ரீதியாகத் திறமையானவர் என்று பல திறமைகள் ஒருங்கே பெற்ற ஒருவர் அரசியலுக்கு வருவது அபூர்வம். அப்படி ஒருவர் வந்தாலும் அவர் மக்களின் ஆதரவைப் பெறுவது இன்னும் அபூர்வம். அவர் வெற்றி பெறாவிட்டால் அது நம் தவறு.

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனையோ தொகுதிகள் நாளைய முதல்வருக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் எந்த ஒரு தொகுதியும் நாளைய பிரதமர் ஒருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றதே இல்லை. கோயமுத்தூருக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கோயமுத்தூர் அண்ணாமலையை நிச்சயம் வெற்றி பெற வைத்து, நாளைய பிரதமர் ஒருவருக்கு முதல் எபி பதவியைக் கொடுத்த பெருமையைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பாஜகவுக்கு வாக்களிப்பது ஒவ்வொரு தேசியவாதியின் கடமை. அற்பக் காரணங்களுக்காக வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் தேசியத்துக்காக வெட்டியாகப் பேசும் தவறைச் செய்யாமல், பாஜகவுக்கு வாக்களிப்போம். ஊழலற்ற அரசைத் தரும் ஒரே அரசு பாஜகவின் அரசாகவே இருக்கமுடியும் என்பதை நினைவில் வைத்து வாக்களியுங்கள்.

Share

போர் தொழில்

போர் தொழில் – நேற்றுதான் பார்த்தேன். சரத்குமாருக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அது மட்டுமல்ல. அந்தப் படத்தின் அனைத்து காஸ்டிங்குகளுமே தவறானவை. இல்லையென்றால் படம் இன்னும் நன்றாகப் பேசப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். நல்லவேளை இவற்றை எல்லாம் எழுதவில்லை.

இன்று சகோதரர் சரத்குமார் பாஜகவில் இணைந்திருக்கிறார். நல்ல நடிகர். நேற்று கூட போர் தொழில் பார்த்தேன். மிகச் சிறப்பாக நடித்திருந்தார். எனவே see more…

Share

தமிழக வெற்றி கழகம் தோற்றம்

விஜய் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ‘தமிழக வெற்றி கழகம்’. தமிழ்நாடு என்று வைக்கவில்லை. தமிழகம் தமிழ்நாடு என்றொரு அரசியல் சிறிது காலம் சுற்றிக் கொண்டிருந்தது. இனி அது இருக்காது. இவரது அரசியல் கட்சியினால் கிடைத்த முதல் பயன் இது. ஒரே ஒரு பயனும் இதுவாக இல்லாமல் இருக்க வேண்டும்.

திடீரென்று தனது லெட்டர் பேடில் ஜோசப் விஜய் என்று வெளிப்படுத்திக் கொண்டது போல, அரசியலில் இவரது பெயர் விஜய் என்றிருக்குமா ஜோசப் விஜய் என்றிருக்குமா என்று பார்க்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டை ஹிந்து அல்லாத வேற்று மதக்காரர்கள் ஆண்டதில்லை என்றே நினைக்கிறேன். (வேற்று மதக்காரர்களைவிட தீவிர வேற்று மத அபிமானிகள் ஆண்டிருக்கிறார்கள் என்பது தனி.) இவர் வெளிப்படையாக கிறித்துவர் என்று அறிவித்துக்கொண்டு வந்தால் ஆதரவும் எதிர்ப்பும் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்.

ஒரு கிறித்துவர் என்றும், தீவிர முற்போக்காளர் என்றும் தன்னை விஜய் அரசியலில் முன்னிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் இவர் திமுகவுக்கே முதல் போட்டியாளராக இருப்பார். விஜய்யின் திரைப்படங்கள் வெளி வருவதில், விழா நடத்துவதில் இருந்த சிக்கல்களை எல்லாம் வைத்துப் பார்த்தால் நாம் இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

விஜய் வாங்கப் போகும் ஓட்டு சதவீதம் அதிகபட்சம் 4% என்று வைத்துக்கொண்டால், இவர் திமுகவிலிருந்து 2% ஓட்டுகளையும், நாம் தமிழர் கட்சியில் இருந்து 1% ஓட்டுகளையும் பிரிக்கலாம். புதிதாக 1% ஓட்டுகளை வாங்கலாம். அதில் அண்ணாமலைக்குப் போகவேண்டிய 0.5% ஓட்டுகளும் குறையலாம். இது என் கணிப்பு. அல்லது யூகம். சரியாகச் சொன்னால், ஆசை. 2026ல் இந்த நிலை இன்னும் மோசமாகலாம் அல்லது விஜய் முன்னேறலாம்.

ஆனால் விஜய் முன்னேற வாய்ப்புக் குறைவு. ஏன்? இன்று அரசியலில் அண்ணாமலை நிர்ணயம் செய்து வைத்திருக்கும் பென்ச் மார்க். ஒரு கேள்வி கேட்டால், அதற்கு ஆதாரபூர்வமாக, அர்த்தபூர்வமாக பதில் சொல்கிறார் அண்ணாமலை. இனி புதிதாக வரும் அரசியல்வாதிகளிடமும் மக்கள் இதை எதிர்பார்ப்பார்கள். அப்படி பதில் சொல்ல முடியாமல் போகும்போது, எதாவது உளறும்போது, மீம்களும் ட்ரோல்களும் கடுமையாக இருக்கும். அதிலும் திமுகவுக்கு எதிர்த்தரப்பாக விஜய் நின்றால், இந்த மீம்களும் ட்ரோல்களும் இன்னும் தீவிரமாக இருக்கும்.

திமுகவா விஜய்யா என்று வந்தால் அடுத்த பத்து வருடங்களுக்காவது பத்திரிகைகள் திமுகவுக்குத்தான் ஜால்ரா அடிக்கும். விஜய்க்கு இது இன்னொரு பிரச்சினை. பத்திரிகை உலகம் அண்ணாமலை எதிர்ப்புக்கு திமுகவுக்கு ஜால்ரா தட்டி, கூடவே விஜய்யை அண்ணாமலைக்கு எதிராகப் பாராட்டியும் திமுகவுக்கு ஆதரவாகத் திட்டியும் காலத்தை ஓட்டவேண்டும். நல்ல பொழுதுபோக்கு நிச்சயம்.

மாறாக விஜய் ஹிந்து ஆதரவு ஓட்டுகளைக் குறி வைத்து, பாஜக ரக அரசியலைச் செய்தால் என்னாகும்? மிக எளிதாக விஜய்யை முத்திரை குத்தி ஓரம் கட்டிவிடுவார்கள். பாஜகவுக்கே ஹிந்து ஓட்டுகள் கிடைக்காத நிலையில் அதற்கு விஜய் குறி வைக்க காரணமே இல்லை. எனவே விஜய் அந்தப் பாதையில் செல்லவே மாட்டார்.

விஜய் இன்று அவரது திரையுலகப் புகழின் உச்சியில் இருக்கிறார். ஒரு படத்துக்கு சர்வ சாதாரணமாக 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நிலையில், அடுத்த பத்து வருடங்களுக்கு இதில் பெரிய மாற்றம் இருக்கப் போவதில்லை என்னும் நிலையில், விஜய் இப்போதைக்கு நேரடி அரசியலுக்கு வரவே மாட்டார் என்பதே என்னுடைய தீர்மானமாக இருந்தது. ஆனால் கட்சியின் பெயரை அறிவித்து நேரடியாகவே வந்துவிட்டார். இனி திரைப்படமும் நடிக்கப் போவதில்லை என்று கிட்டத்தட்ட அறிவித்திருக்கிறார். கட்சி ஆரம்பித்தபிறகு திரைப்படங்களில் நடித்தால் எடுபடாது என்கிற எண்ணத்தை ரஜினியும் கமலும் உடைத்துக் காட்டிவிட்டார்கள். எனவே ஒருவேளை விஜய் கட்சி அறிவித்த பின்பும், அரசியலுக்கு வந்த பின்பும், திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு, இரண்டு வருடங்கள் கழித்து தேர்தல் அரசியலில் இறங்குவது நல்லதல்ல. வைகோ திமுகவைப் பிரிந்தபோது ஏற்பட்ட சலசலப்பில் ஒரு சதவீதம் கூட வாக்காக மாறவில்லை. காரணம், இரண்டு வருடங்கள் கழித்துத் தேர்தல் வந்ததுதான். விஜய்க்கு இப்போது அந்தச் சலசலப்பு கூட இல்லை.

எதிர்பார்க்காத திடீர் மாற்றம் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் நிகழ்ந்தால் ஒழிய, எதுவும் விஜய்க்குச் சாதகமாக நடக்க வாய்ப்புக் குறைவே. அப்படியே திடீர் மாற்றம் ஒன்று நிகழ்ந்தாலும், அங்கே அண்ணாமலையின் இருப்பையும் விஜய் சமாளித்தாகவேண்டும்.

விஜய்க்கு வாழ்த்துகள்.

Share

மணிப்பூர்ப் பிரச்சினை

மணிப்பூரில் நடந்திருப்பது அராஜகம். கொடுமை. மாநில மத்திய அரசுகள் இக்கொடுமைக்கான சரியான நியாயத்தையும் தீர்வையும் கொடூரங்களைச் செய்தவர்களுக்குச் சரியான தண்டனையையும் வழங்கவேண்டும்.

இக்கொடுமையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஹிந்து ஹிந்துத்துவ இஸ்லாமிய கிறித்துவ இன்னும் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.

இந்தியா முழுக்கப் பற்றி எரியும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதையே மத்திய அரசு முதன்மை நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

மணிப்பூர் பிரச்சினை உலகளாவிய பிரச்சினையாகிறது. ஆனால் இதே போன்ற கொடூரங்கள் சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நிகழ்ந்தபோது அது ஹிந்துத்துவவாதிகளுக்கு நிகழ்ந்த பிரச்சினையாக மட்டும் தேங்கிப் போனது. இன்று சங்கிகள் வாயில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு அன்று வாயில் என்ன இருந்தது என்பதே பதில்.

இந்த மணிப்பூர்ப் பிரச்சினையில் மட்டும் வாய் திறக்கும் போலி முற்போக்காளர்கள், இன்று மணிப்பூர்ப் பிரச்சினையை மதத்துக்காக, கட்சிக்காக அமைதியாகக் கடந்து போகிறவர்களைப் போலவே, மனிதர்களே அல்ல.

29-5-2021 அன்று ஒரு ஸூம் கலந்துரையாடலுக்காக நான் எழுதி வைத்துக்கொண்ட குறிப்புகள் – மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து. இது பேசுவதற்காக எழுதிய குறிப்புகள் என்பதால், கட்டுரை போல இல்லாமல், தொடர்பற்று இருக்கும். நேரமிருப்பவர்கள் வாசியுங்கள். ஏன் மணிப்பூர்க் கலவரம் முக்கியம், ஏன் மேற்கு வங்கக் கலவரம் முக்கியமல்ல என்பதுவிளங்கலாம். எல்லாக் கலவரங்களுமே அராஜகமானவையே. அமைதியான இந்தியாவுக்கு எதிரானவையே. ஒன்றைக் கண்டித்து இன்னொன்றைக் கடந்து செல்பவர்களுக்குப் பேச வாயே வரக் கூடாது.

உண்மையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டிய இந்தியா தன் பலத்தை இழந்து நிற்கும்படி நீங்களும் உங்களைப் போன்றவர்களும் செய்திருக்கிறீர்கள். யாராவது நியாயமாக இருக்க நினைத்தால் அவர்கள் மதச்சார்பானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரம் தொடர்பாக ஜக்மோகன் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி உள்ளது.

அரசியல் அதிகாரம் கைமாறும்போது ஆள்பவர்கள் நியாய உணர்வுடன் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு மேற்குவங்கம் ஒரு உதாரணம்.

அரசியல் அதிகாரம் மமதையாகவும் வெறியாகவும் மாறும்போது எப்படி நடக்கும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

மூலகாரணம் என்ன?

தொடர்ந்து பழக்கப்படுத்தப்படுவது. இதை சிஸ்டம் என்று சொல்லலாம். சிஸ்டத்தை மாற்றுவது மிகவும் கடினமானது. முப்பது ஆண்டுகாலம் தொடர்ந்து மார்க்ஸியத்தின் பிடியில் மேற்கு வங்கம் இருந்தபோதும் அங்கே இப்படி தொடர்ந்து அரசியல்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. வரலாறு காணாத படுகொலைகள். ஆனால் அவை எல்லாம் இங்கே ஊடகங்களில் மறைக்கப்பட்டன. மார்க்ஸியம் மங்கிப் போய் மம்தாவின் அரசியல் அங்கே மேல் எழுந்தபோதும் இதே கலவரங்கள் மார்க்ஸியர்களால் முன்வைக்கப்பட்டன. இன்று மம்தா அரசு பாஜகவுக்கு அதைச் செய்கிறது.

அதுமட்டுமல்ல. 1960லும் இதே போன்ற கலவரங்கள் நிகழ்ந்தன. இன்றைய கலவரத்துக்கான விதை முன்பு பல காலங்களில் விதைக்கப்பட்டிருக்கிறது.

1967ல் முதன்முதலாக கம்யூனிஸம் அங்கே ஆட்சியைப் பிடித்தது. அதுவரை இருந்த காங்கிரஸ் தன் பிடியை இழந்தது. அப்போதும் இதே போன்ற கலவரங்கள் அங்கே நிகழ்ந்தன. கிராமம் குறி வைத்துத் தாக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகளால் அன்று கொல்லப்பட்டார்கள்.

இதற்கு இன்னொரு காரணம், மார்க்ஸிய புரட்சியாளர்களின் வேர்கள் நக்ஸல்பாரி இயக்கத்தினரிடம் இருந்து வந்ததுதான்.

1972 மற்றும் 77ல் காங்கிரஸ் வந்தபோது இடதுசாரியினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

1977ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சி 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டது. ஜோதி பாசுவின் ஆட்சியின் போது கொல்லப்பட்ட நிலமற்ற 11 முஸ்லிம்களின் கதி இந்தியாவையே உலுக்கியது. பின்பு நந்திகிராமில் நடைபெற்ற காங்கிரஸ் மார்க்ஸிஸ்ட் மோதல், இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

இன்று நடந்திருக்கும் படுகொலைகளுக்கும் மேலே சொன்ன கொலைகளுக்கும் ஒரே வேர்தான். அதிகார மமதை. நக்சல் வேர்.

வாக்களிக்கப் போகும்போது கூட மக்கள் அங்கே துப்பாக்கிளால் மிரட்டப்படுவார்கள். பயந்து போய் வாக்களிக்காமல் இருக்கும் மக்கள் அநேகம். மார்க்ஸிய ஆட்சியிலும் பின்னர் மம்தாவின் ஆட்சியிலும் இது நடந்தது.

இன்று பாஜக அங்கே பெற்றிருக்கும் கவனமும், வென்றிருக்கும் இடங்களும் மம்தாவின் கட்சியினருக்கு பெரிய எரிச்சலை தந்திருக்கிறது.

ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்கு மட்டுமே என்று அவர்கள் இன்று நிரூபித்திருக்கிறார்கள்.

பாஜக ஆதரவாளர்களின் படுகொலை, பெண்கள் மானபங்கம் என்று, ஒரு இன அழிப்பின்போது என்னவெல்லாம் நடக்குமோ அதையெல்லாம், இன்று நாம் மேற்கு வங்கத்தில் பார்த்திருக்கிறோம்.

பாஜக ஆளும் மாநிலத்தில், யாரோ ஒருவர், பெயற்ற ஒருவர், மாட்டுக்கறி விவகாரத்தில் எதாவது சொன்னாலோ செய்தாலோ, அது இந்தியா முழுக்க செய்தியாக்கப்படும். தொடர்ந்து விவாதிக்கப்படும். ஆனால் மேற்கு வங்கமே பற்றி எரிந்தபோது, யாரும் இதைப் பற்றி விவாதிக்கவில்லை.

மக்கள் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களை தாங்களே வந்து பொது வெளியில் சொன்னதால்தான் இத்தனையாவது நமக்குத் தெரிந்தது. இல்லாவிட்டால்?

பொது ஊடகம் ஒன்று இல்லாதபோது இவர்கள் எப்படி செய்திகளை வடிகட்டி மக்களுக்கு அளித்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இவர்கள் சொன்னதுதான் செய்தி.

இதில் எத்தனை பேர் பயந்து போய் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்தார்கள் என்பதும் தெரியாது.

டிவிட்டரில் போய் தேடிப் பார்த்தால், நம்மை உறைய வைக்கும் அளவுக்குச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் இதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

கிராமப் பஞ்சாயத்தின் பாஜக தலைவர், உப தலைவர்களைக் குறி வைத்துத் தாக்கி இருக்கிறார்கள். அனுப்ராத்தா மோண்டல் என்னும் த்ரிணாமூல் காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்தான் அடித்தார் என்று சொல்லி, அடிபட்டவரின் படத்தையும் போட்டிருக்கிறார்கள்.

ஆர்ட்டிகிள் 355 என்ன சொல்கிறது? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது என்று சொல்கிறது.

கவர்னர் ஜக்தீப் தங்கர் ஒரு பேட்டியில் சொல்கிறார். மேற்கு வங்கத்தில் நடந்த தாக்குதல், இதற்கு முன் நடக்காத ஒன்று. ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். யாரை கொல்ல வேண்டும் என்று குறி வைத்து கொன்றிருக்கிறார்கள். வீட்டை சூறையாடி இருக்கிறார்கள். இதற்கு அரசு இயந்திரத்தின் உதவியும் இருந்திருக்கிறது. அவர்கள் கண்டும் காணாமலும் இருந்திருக்கிறார்கள். இப்படி மோசமான ஒரு நிலைமை வரும் என கனவிலும் நினைக்கவில்லை. நாங்கள் மதத்தைக் கூட மாற்றிக் கொள்கிறோம், எங்களை விட்டுவிடுங்கள் என்று மக்கள் கெஞ்சுகிறார்கள். சட்டத்தின் மாட்சியே குலைக்கப்பட்டிருக்கிறது.

ஏன் ஆளுங்கட்சியே இதைச் செய்யவேண்டும்? கவர்னர் சொல்கிறார்: ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களிக்கத் தயாரானவர்களுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக. ஜனநாயகத்துக்கு நேர்ந்த அசிங்கம் இது. மம்தா பானர்ஜி மக்களின் கதறலைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால் கவர்னரைக் குற்றம் சொல்கிறார் மம்தா. கவர்னர் சொன்ன ஒரே பதில், ‘என் கண்ணெதிரே என் மாநிலத்து மக்கள் இப்படி சாகும்போது என்னால் சும்மா இருக்கமுடியாது’. ஒரு கவர்னர் சொன்னது இது. யோசித்துப் பாருங்கள். ஜக்மோகன் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தின் அடிநாதமும் இதுதான்.

இந்த வன்முறையில் மம்தா பானர்ஜியின் பங்கு குறித்து தனிப்பட்ட ஆணையம் ஒன்று விசாரிக்கவேண்டும் என்று ஒரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மக்கள் தங்களுக்கு நேர்ந்த வன்முறை குறித்து தெரிவிக்க ஒரு இமெயில் ஐடி உருவாக்கி அதை பொதுவில் பகிர உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு ஆணையிட்டிருக்கிறது. (25-மே-2021)

உச்சந்தீமன்ற நீதிபதி என்.வி.ரமனாவுக்கு 2093 பெண் வழக்கறிஞர்கள் கையெழுத்து இட்டு ஒரு மனு அளித்திருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் குலைந்து போய்விட்டது என்று அறிவிக்குமாறு அந்த மனுவில் சொல்லி இருக்கிறார்கள். போலிஸ் கலவரக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு இந்த வன்முறைகளை நிகழ்த்தியது என்று அதில் சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த தொலைக்காட்சியாவது இதைப் பற்றிப் பேசியதா?

கவனர் ஜக்தீப் தங்கர் சொன்ன ஒரு வரி மிக முக்கியமானது: ‘உங்கள் ஒரு ஓட்டு உங்கள் மரணத்தை உறுதி செய்யுமானால், அங்கே ஜனநாயகம் செத்துவிட்டது என்றே அர்த்தம்!’ எத்தனை உண்மையான வரி? இந்த ஒரு வரி ஒட்டுமொத்த மேற்கு வங்கத்தின் பிரச்சினையையும் சொல்லிவிட்டது அல்லவா?

கமிஷ்னரிடம் கவர்னர் சட்டம் ஒழுங்கு பற்றி கேட்ட அறிக்கையை மம்தா அனுப்பவேண்டாம் என்று சொன்னதாக கமிஷ்னரே கவர்னரிடம் சொல்லி இருக்கிறார்.

இதனால்தான் கவர்னர் மம்தாவின் பதவி ஏற்பின்போதே இதைப் பற்றிக் கடுமையாகப் பேசினார். இது மரபுக்கு எதிரானது என்று ஆரம்பித்தார்கள். உண்மையில், கவர்னர் விரும்பினால் பேசலாம் என்று சொன்னதே மம்தாதான். அதைப் பயன்படுத்திக்கொண்ட கவர்னர் சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசி, மக்கள் நலனுக்காக, நாம் கட்சி அரசியலைத் தாண்டி சிந்திக்கவேண்டும் என்று சொன்னார். ஆனால், இதை திட்டமிட்டுச் செய்த அரசியல்வாதிகளுக்கு இது ஏன் புரியப் போகிறது.

இத்தனை நிகழும்போது, மத்திய அரசின் பங்கு என்ன?

பாஜக கட்சி மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை பெறுவோம் என்று சொல்லி போட்டி இட்டார்கள். ஆனால் 80க்கும் குறைவான இடங்களில் வென்றார்கள். தேர்தல் நடக்கும்போது மம்தாவின் த்ருணாமுள் தோற்றுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் விதைக்கப்பட்டது. ஆனால் அசுர வெற்றி பெறவும், வெற்றி மமதையும் தோற்றுவிடுவோமோ என்ற அச்சமும் இந்த வன்முறைக்கு வித்திட்டுவிட்டது. இது நாளையும் நடக்கலாம். எங்கும் நடக்கலாம்.

மத்திய அரசு, இந்தக் கலவரக் காரர்களை நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை தரவேண்டும், இன்றில்லாவிட்டாலும் நாளையாவது இதைச் செய்யவேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி என்பதை நிலைகொள்ள செய்யவேண்டும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, பதட்டம் மிகுந்த இடங்களில் துணை ராணுவப் படைகளைக் குவிக்கவேண்டும். தேவைப்பட்டால், கவர்னரே நேரடியாக தன் கட்டுப்பாட்டுக்குள் மாநிலத்தை எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.

கலவரங்கள் கட்டுப்படாதவரை யாரையும் முதல்வர் பதவி ஏற்க அழைக்கக்கூடாது.

ஐந்து மாநிலங்களில் ஒரே நாளில் முடிவுகள் வருவதால், துணை ராணுவப்படையைக் கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் இருந்தால், அதையும் யோசித்துச் செயல்படவேண்டும்.

இன்னொரு தேர்தலில், இன்னொரு ஓட்டு ஒரு மரணத்தைக் கொண்டு வருமானால், அது எந்த ஒரு மத்திய அரசுக்கும் அவமானமே.

தமிழ்நாட்டுக்கு இதில் கிடைக்கும் செய்தி என்ன? தமிழ்நாட்டில் இந்தியா முழுமைக்கும் நடக்கும் செய்திகள் பரப்பப்படுவதே இல்லை. எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. இதை உடைப்பதை பாஜக முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொலைக்காட்சியையும் இதைப்பற்றி விவாதிக்குமாறு நிர்ப்பந்திக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களது ஊடகங்களில் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் இது போன்ற வன்முறைகள் நிகழாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மோதியின் மத்திய அரசு கண்டறிந்தே ஆகவேண்டும்.

***

Share

அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்துக் குவிப்பு பற்றிய செய்திகள்

ஊடகங்களின் இருட்டடிப்பு இது. முதல் பக்கத்தில் செய்தியை வெளியிடக் கூட இவர்களால் முடியவில்லை. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பதில் உள்ள மோகம். பணமே அரசியலை நிர்ணயிக்கிறது.

கேஜ்ரிவால் செய்தியை முதல் பக்கத்தில் போட்டுவிட்டு, அண்ணாமலை சொன்னதை 2ம் பக்கத்தில் போட்டிருக்கிறது தமிழ்த்திசை. அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்னும் முக்கியச் செய்தியை தமிழ்த்திசை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

மற்ற செய்தித்தாள்களின் உட்பக்கங்களை நான் பார்க்கவில்லை.

தந்தியும் தினகரனும் ஒரே குரலில் முதல் பக்கத்தில் பேசுகின்றன.

தினமலர் ஒன்றே தைரியமாக, முதல் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறது.

தினமணியின் முதல் பக்கத்தை இணையத்தில் இருந்து ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்தேன். கொடுமை. இதற்கு எதற்கு தினமணி?

பத்திரிகைகள் எல்லாம் எப்படி வெட்கமே இல்லாமல் நேர்மை, உண்மை என்றெல்லாம் பேசுகின்றன? அசிங்கமாகவே இருக்காதா? செய்தியைச் சொல்லிவிட்டு, அதை எதிர்த்து பல கட்டுரைகளைக் கூட வெளியிடட்டும். அது அவர்களின் கொள்கைச் சாய்வு. அதில் தவறில்லை. ஆனால் செய்தியையே சொல்லாமல் சாய்ஸில் விடுவதெல்லாம் எவ்வளவு அசிங்கம்!

***

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார். டிவிட்டரிலும் இதுவே.

வானதி ஶ்ரீனிவாசன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது செயல்பாடுகளைப் பற்றிய பதிவுகள் மட்டுமே உள்ளன. டிவிட்டரில் விஷு ஆஷாம்ஷகள் என்று மலையாளத்திலும் வாழ்த்து வெளியிட்டிருக்கிறார் வானதி.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இல்லை.

சரஸ்வதி எம்.எல்.ஏ சட்டசபையில் இன்று என்ற செய்திகளையும், அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற முக்கியமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஹெச்.ராஜா பற்றிச் சொல்லவேண்டும். எஸ்.வி.சேகருக்கான விருதில் ராஜா கலந்துகொண்டது எனக்கு தனிப்பட்ட அளவில் பெரிய வருத்தம். ஆனால்,  ஹெச்.ராஜா ஒருவரே அண்ணாமலையின் சொத்துப்பட்டியல் பற்றிய குறிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தவும் செய்திருக்கிறார். ஹெச்.ராஜா மதிப்பிற்குரியவர்.

இந்நிலையில், மற்ற பத்திரிகைகள் பாஜகவின் செய்திகளை இருட்டடிப்பு செய்கிறது என்று சொல்ல பாஜகவினருக்குத் தகுதியே இல்லை என்பதுதான் உண்மை.

Share

அரசியல் யூ ட்யூபர்கள்

யூ ட்யூபர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மதன் பாஜகவையும் அண்ணாமலையையும் எக்ஸ்போஸ் செய்ய நினைத்து, அதற்கு மாறாக வேறொன்றைச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த கூட்டத்தையும் எக்ஸ்போஸ் செய்து, ஒரு தற்கொலை வெடிகுண்டைப் போல, அவரும் சேர்ந்து காலியாகி இருக்கிறார். அந்த வகையில் இது நல்ல விஷயம்.

யூ ட்யூபர்கள் அத்தனை பேரும் நிச்சயம் இந்த வீடியோவில் லஞ்சம் வாங்கப் போகவில்லை. ஒரு பிசினஸ் மீட் என்ற அளவில் மட்டுமே போயிருக்கிறார்கள். பணத்தையும் மதுவையும் அதற்காகத்தான் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நியாயத்துக்காக எதையுமே வாங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். இதுவரையும் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்காக வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பதை வெளிப்படையாக உணர வைத்திருக்கிறார்கள்.

முன்பொரு சமயம், இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து மது தரவேண்டிய சூழல் வந்தது. அவரைத் தனியே அழைத்து மதுவைத் தந்தபோது, அவர் பதற்றத்துடன் சொன்னார், இதெல்லாம் வேண்டவே வேண்டாம், உள்ள வைங்க என்று. அவரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் திமுக அனுதாபி. இப்போதும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் எனக்கு அவரை இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தியபோது, நான் அவரைச் சந்தித்திருப்பதைச் சொன்னேன். மது விஷயத்தைத் தவிர மற்றவற்றைச் சொன்னேன். இவ்ளோ ஞாபகம் வெச்சிருக்கீங்க, எனக்கு எதுவுமே நினைவில்லை என்றார். இன்றும் அவர் இதே நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்பது தெரியாது என்பதால் அவர் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். மதுவோ பணமோ எதுவும் வாங்காத உறுதிப்பாடு உள்ள பத்திரிகையாளர்களே முக்கியம். ஆனால் இவர்களால் பொருளாதார ரீதியாக ஜெயிக்க முடியுமா என்று தெரியவில்லை.

யூ ட்யூபர்கள் என்னும் பத்திரிகையாளர்களை அண்ணாமலை இடது கையில் டீல் செய்தது சரிதான். இவர்கள் அதற்குத்தான் லாயக்கு.

ராஜவேல் நாகராஜன், தான் ஒரு ஸ்டிரேடஜிஸ்ட்டாகத்தான் சென்றதாகச் சொல்கிறார். நம்பும்படியாகத்தான் இருக்கிறது. கட்சி அபிமானமே இல்லாமல் வெறும் ஸ்டிரேடஜிஸ்ட்டாக இருப்பது தொழில்முறை சார்ந்த ஒன்று. ஒரு கட்சியின் ஆதரவாளனாகவும் இருப்பேன், இன்னொரு கட்சிக்கு ஸ்டிரேடஜிஸ்ட்டாகவும் இருப்பேன் என்றால் அது சரிப்பட்டு வராது. இதையும் ராஜவேல் நாகராஜன் தெளிவாகவே சொல்கிறார். என்ன ஒன்றென்றால், நேற்று நாம் தமிழர், இன்று பாஜக என்றால், நாளை என்னவாகவும் இருக்கலாம் என்பதும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. அங்கேதான் எந்தக் கட்சிக்கு ஸ்டிரேஜிஸ்ட்டாகப் போகலாம் என்னும் திறப்பும் இருக்கிறது.

அரசியல் வீடியோ வெளியிடும் யூ ட்யூபர்கள் வெறும் காற்றில் கம்பு சுத்திக் கொண்டிருக்கவில்லை. பணத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வ்யூ இருந்தால் பணம் கிடைக்கும் என்று நம்பி இத்தொழிலை ஆரம்பிப்பவர்கள் பாவப்பட்ட ஜீவன்கள். வ்யூ இருந்தால், அரசியல் பணத்தில் செட்டில் ஆகிவிடலாம் என்று ஒரு சானலை ஆரம்பிப்பவர்களே புத்திசாலிகள்.

இந்த யூ ட்யூபர்கள் யாருக்காகவும் நான் சில்லரையை சிதறவிட்டதில்லை என்பதைப் பெருமையுடன் நினைத்துக் கொள்கிறேன். இவர்கள் கேள்வி கேட்ட விதம் பிடித்திருந்திருக்கிறது. இவர்கள் வெளியிட்ட வீடியோ சில பிடித்திருந்திருக்கிறது. அதைத் தாண்டி யாரையும் நான் கொண்டாடவில்லை. தெய்வம் காத்திருக்கிறது.

இந்த வீடியோக்களைப் பார்த்தால், நம்பிப் பேச வைத்து, ஒருவரை டிராப் செய்வது மிக எளிது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், பொதுவெளியில் வெறும் ஐயாயிரம் ரூபாயை வாங்கினால் கூட அது தவறு என்கிற பொதுப்புத்தி இங்கே விதைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மது பாட்டிலும் வெறும் பதினைந்தாயிரம் ரூபாயும், அதுவும் ஒரு தொழில்முறை கன்சல்டிங்கிற்காக வாங்கிய ஒன்று, இத்தனை பேரை காலி செய்துவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் நேர்மையான பொய்யர்கள். இவர்கள் அது கூட இல்லை.

Share

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?

• ஊழலற்ற நிர்வாகத்துக்காக
• உண்மையான வளர்ச்சிக்காக
• நல்ல சாலைகள் கிடைத்திட
• மழை வெள்ளத்தில் படகில் போகாமல் இருக்க
• எப்போது மின்சாரம் வரும் என்று தேவுடு காக்காமல் இருக்க உரிய இடத்தில் நமக்காகக் குரல் கொடுத்திட
• போலி மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட
• தாஜா அரசியலுக்கு முடிவுரை எழுத
• நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட
• மத்திய அரசின் முக்கியமான திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி தமிழனுக்கும் கிடைத்திட
• தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க
• தமிழ்நாட்டு அரசியலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க
• புதிய பாதை, புதிய இலக்கு, புதிய செயல்திட்டம் கொண்ட புதிய தலைமையின் கீழ் தமிழ்நாடு ஒளிர்ந்திட.

ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• மேலே உள்ள அனைத்துக்காகவும்.
• உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காக.
• இனி வரப் போகும் புதிய அரசியலுக்குக் கட்டியம் கூற.
• ஒரு ஜீவன் ஹிந்து என்பதற்காகவே அந்த ஜீவனின் தற்கொலையைப் பற்றி யாரும் வாய் திறக்காமல் அவலத்தைத் தடுப்பதற்காக.
• கோவில்கள் மட்டும் இடிக்கப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்தப்படுவதற்காக.

ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• பாஜகவின் ஓட்டு வங்கி பாஜகவுக்கு மட்டும் வரவேண்டும் என்பதற்காக.
• திமுகவுக்கு உறுதியான எதிர்ப்பு அதிமுகதான் என்று ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை நிலவிய சூழல் இப்போது இல்லை என்பதற்காக. அந்த இடத்தில் பாஜக வந்துவிட்டது என்பதற்காக.
• சில பிரச்சினைகளில் மட்டும் ஒப்புக்காகப் பேசும் அதிமுக பெரும்பான்மையான அரசியல் கருத்துகளில் திமுகவின் கருத்தையே கொண்டிருப்பதற்காக.
• இரண்டாம் இடத்துக்கு பாஜக வரவேண்டும் என்றால் அதிமுக அல்லது திமுகவை பாஜக தாண்டியாக வேண்டும் என்பதற்காக.

இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?

வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம். தனித்துக் களம் காணும் முதல் உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மை பெற்றுவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாஜக பெறும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது.

பாஜக ஒருவேளை 20% வாக்குகள் பெறுமானால் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கும். இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் நிலவிய களம் மாற்றியமைக்கப்படும். அதற்காக நிச்சயம் நாம் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்.

அண்ணாமலை போன்ற உறுதியான, திறமையான தலைவருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது ஒவ்வொரு இந்திய தேசியத் தமிழனின் கடமை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாளை அண்ணாமலை முதல்வராவார். அதற்கான விதை இன்று நாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கப் போகும் வாக்குகளே.

மொழி, மதம் போன்றவற்றால் பிரிக்கப் பார்க்கும் பிரிவினைவாதிகளின் கொட்டத்தை அடக்கி, என்றும் தமிழ்நாடு இந்தியாவின் உறுதியான ஒரு அங்கமே என்பதை உறுதிபடச் சொல்வதற்காக பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும். இப்படிப் பேசவேண்டிய இன்னொரு கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தன்னிலை மறந்து பிரிவினைக் கட்சிகளுக்கு வால் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் பாஜகவை ஆதரிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பாஜக தான் போட்டியிடும் இடங்களில் ஒட்டுமொத்த சராசரியாக 12% வாக்குகள் பெறும் என்று நினைக்கிறேன், பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நிஜமான வளர்ச்சிக்கும் உண்மையான மதச்சார்பின்மைக்கும் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

Share