Archive for அரசியல்

ஏன் திமுக ஒழிக்கப்படவேண்டும் – மாரிதாஸ்

கீழே உள்ளவை மாரிதாஸ் சொல்பவை. நான் சொல்பவையல்ல. நான் அப்பாவி. அனைத்துத் திட்டுகளும் அவருக்கே செல்லட்டும் என்று நியாயமாக ஒதுங்கிக்கொள்கிறேன். மாரிதாஸ் பொரிந்து தள்ளும் வீடியோவைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=-hH4qcsIO4E&feature=youtu.be

திமுக ஏன் அழிக்கப்படவேண்டும் என்பதற்கு மாரிதாஸ் சொல்லும் காரணங்கள்:

  • அரசு ஊழியர்களுக்கு அநியாயத்துக்கு சம்பள உயர்வு தருவதால்.
  • தாசில்தார்கள், வி ஏ ஓ உடன் இணைந்து அரசு மற்றும் கோவில் நிலங்களை அபகரித்ததற்காக.
  • திமுக ஒரு ரௌடி கட்சி. நில அபகரிப்பு செய்பவர்களுக்கு, நில மாஃபியாக்களுக்குப் பிடித்த கட்சி திமுக.
  • சபரிமலை விவகாரத்தில் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பை வரவேற்றது திமுக. ஹிந்துக்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம், ஹிந்துக்களை திமுக அசிங்கப்படுத்துகிறது. டாவின்சி கோட் படத்தைத் தடை செய்யும் திமுக, உண்மையான தீர்ப்பை ஆதரிக்கிறது!
  • ஹிந்து மதத்தின் திருமண மந்திரங்களை அசிங்கமானவை அருவருப்பானவை என்று சொன்னவர் ஸ்டாலின். ஆனால் இதே வார்த்தைகளை இஸ்லாமியர் மற்றும் கிறித்துவ சடங்குகளைக் குறித்து அவரால் சொல்லமுடியுமா?
  • மின் தடை. 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் மின் தடை இருந்தது திமுகவின் ஆட்சிக்காலத்தில்தான்!
  • திமுகவுக்குக் கொள்ளை அடிக்கத் தெரியுமே ஒழிய, நிர்வாகத் திறமை கிடையாது.
  • திமுக ஒரு குடும்பத்தின் கட்சியாகிவிட்டது.
  • சமச்சீர்க் கல்வியைப் புகுத்தியது. இதனால் கல்வியே நாசமாகிவிட்டது.
  • அரசுக் கல்லூரிகளில் துணைவேந்தர் துவங்கி அனைத்துப் பணிகளிலும் அரசியலை நுழைத்தது திமுகதான்.
  • கச்சத்தீவு, காவிரி வாரியம், ஈழத் தமிழர் படுகொலை விவகாரங்களில் தமிழர்களுக்குத் தீங்கிழைத்தது திமுக. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எம்பிக்கள் எதுவுமே பேசவில்லை. இதை எதிர்த்துப் பேசியவர்கள் ஃபார்வர்ட் ப்ளாக்கின் மூக்கையா தேவர் மற்றும் யூனியன் முஸ்லிம் லீக்கின் முஹம்மது ஷரீஃப் மட்டுமே. இவர்களது எதிர்ப்பை ஆதரித்த ஒரே தேசியத் தலைவர் வாஜ்பாய். கச்சத்தீவை இழந்ததற்கு காரணம், திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்.
  • பொறுப்பற்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது திமுக.
  • திமுக ஒரு கட்சியல்ல, கார்ப்பரேட் நிறுவனம். இவர்களது நோக்கம் கூட்டமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதும் அதைப் பிரிப்பதும்தான்.
  • திமுகவைப் போல யாராலும் வசனம் பேசி ஏமாற்றமுடியாது. பொய் பொய் பொய் மட்டுமே இவர்களது கொள்கை. திராவிடம் 2.0 என்பதே பொய்ப் பிரசாரம்.
  • பட்டியல் இனத்தவரின் ஜாதியை ஒழிக்கப் பயன்பட்டது அண்ணல் அம்பேத்கரின் சட்டமே ஒழிய, ஈவெரா அல்ல. திமுக ஜாதியை ஒழித்தோம் என்று சொன்னது பொய். அது பட்டியல் இனத்தவரை ஏமாற்றச் சொல்வதுதான்.
  • கடைசியாக: நான்கு முறை முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கரின் அண்ணன் மளிகைக்கடை வைத்திருக்கிறார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் உறவினர்கள் முதல் கொள்ளுப்பேரன் வரை பல கோடி சொத்து உள்ளது.
  • நேர்மையானவர்களுக்கு வாக்களிப்போம். திமுகவுக்கு வாக்களித்துவிட்டு தமிழ்நாடு சிங்கப்பூராகும் என்று கனவு காண்பதற்கு உரிமையே கிடையாது. டாட்.
Share

முகிலனைக் காணவில்லை

முகிலன் என்பவரைக் காணவில்லை என்ற விஷயத்தை அரசு இத்தனை மெத்தனமாகக் கையாள்கிறதா அல்லது நமக்கு எதுவும் விஷயங்கள் சொல்லப்படுவதில்லையா என்று தெரியவில்லை. ஸ்டெரிலைட் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடரபான விவகாரத்தில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இவரைக் காணவில்லை. பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் ஒரு பிரஸ் மீட் நடத்தி சில காவலர்களின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்றும் அதன்பிறகு எக்மோர் ரயில்வே நிலையத்தில் வண்டி ஏறியவரைக் காணவில்லை என்றும் டைம்ஸ் ஆஃப் இண்டியா தெரிவிக்கிறது.

முகிலன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்/ஆதரிப்பவர் என்பதெல்லாம் தேவையற்ற விஷயம். அவரை யார் கடத்தியது, அதன் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. உண்மையிலேயே அவர் ஸ்டெரிலைட் தரப்பால் அலல்து அரசுத் தரப்பால் அல்லது அதிகாரிகள் தரப்பால்தான் அபாயத்துக்குள்ளானாரா என்பதை அரசுதான் தெளிவுபடுத்தவேண்டும்.

ஒருவரைக் காணவில்லை என்னும் போக்கை, அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாம் ஆதரிக்கவோ கண்டும் காணாமல் போகவோ கூடாது. இதன் பின்னான உண்மையைத் தெரிந்துகொள்வது அவசியம். அதேசமயம் ஹிந்து அமைப்பினர் கொல்லப்பட்டாலும்கூட மிக அமைதியாகக் கடந்து செல்பவர்களையும் நாம் இந்நேரத்தில் நினைவுகொள்ளுதல் வேண்டும்.

Share

தேமுதிக கூட்டணி

பாஜக அதிமுக பாமக கூட்டணிக்கு வரவில்லை என்றால் அது இக்கூட்டணிக்குப் பெரிய பின்னடைவாகவே அமையும். அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக செல்லுமானால் அது இரட்டைப் பின்னடைவாகவே அமையும்.

அதேசமயம் தேமுதிகவின் தற்போதைய நிலை, விஜய்காந்த் உடல்நலமில்லாமல் இருப்பது – இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அதிகபட்சம் அதற்கு 3 இடங்களே தரமுடியும். போனால் போகிறதென்று 5 இடங்களைத் தரலாம்.

தேமுதிகவின் பலம் என்பது, அதன் எதிரணியை எத்தனை இடங்களில் தோற்கடிக்கமுடியும் என்பதிலேயே உள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் நின்று பத்து இடங்களில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. தனித்து 20,000 வாக்குகளைப் பெறும் என்றாலும்கூட, எதிரணிக்கு சேதாரம் பலமாக இருக்கும். இதை வைத்து திமுக 7 இடங்களை தேமுதிகவுக்குத் தரலாம். தந்தால் அது சரியான முடிவுதான். ஆனால் வரலாற்றில் சமீப காலங்களில் பொதுவாக கூட்டணிப் பேரங்களை முதலில் ஆரம்பித்து கடைசியில் அதைச் சரியாகக் கோட்டை விடும் கட்சிகளில் உலகளவில் முதன்மை பெறுவது திமுகவாகவே இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்காந்த் கட்சி தொடங்கும் முன்பிருந்தே என் யூகம், இவர் இன்னொரு வைகோவாக அமைவார் என்பதாகவே இருந்தது. இன்று வைகோ அதலபாதாளம் போய்விட்ட நிலையில், வைகோ அளவுக்கு விஜய்காந்த் மோசமாக முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மாறி மாறி ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தே தீரவேண்டிய நிலை இவருக்கும் ஏற்பட்டே தீரும். இதுவரை திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், எந்நேரத்திலும் எக்கட்சியுடனும் கூட்டணி வைக்கும் வாய்ப்புடனேயே தேமுதிக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.

2014ல் தமிழ்நாட்டில் அமைந்த பாஜக கூட்டணி மிக முக்கியமான ஒன்று. விஜய்காந்த் மற்றும் அன்புமணி என இருவருக்கும் முதல்வர் பதவி மேல் இருந்த (நியாயமான) ஆசை காரணமாக இக்கூட்டணி தொடராமல் போனது. இக்கூட்டணி தொடர்ந்திருந்தால், கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த நேரத்தில் நல்ல ஒரு மாற்றாக அமைந்திருக்கும். பாஜக இல்லாமல் இப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் அது மாநில அளவில் முக்கியமான மாற்றாகவே அமையும். ஆனால் தேசியக் கட்சி என்ற ஒன்றில்லாமல் இது அமையாது என்றே நினைக்கிறேன்.

Share

நினைக்கிறேன், என்று தோன்றுகிறது…

நினைக்கிறேன், என்றே தோன்றுகிறது பதிவு:

இணைய திமுக காரர்கள் இந்த முறையும் புள்ளிவிவரக் கணக்கோடும் வரலாற்றோடும் தீவிர உணர்வோடும் பேசி, மீண்டும் கோட்டை விடுவார்கள் என்றே தோன்றுகிறது. அப்புறம் அடுத்த ரெண்டு வருஷம், அவரை உள்ள விட்டது தப்பு, இவரை விட்டது தப்பு, துரோகிகள் அது இதுன்னு பிலாக்கணம் வைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் திரும்ப முதலில் இருந்து துவங்குவார்கள் என நினைக்கிறேன்.

ஸ்டாலின் இவர்களை நம்பி இருக்கிறாரா அல்லது இவர்கள் ஸ்டாலினை நம்பித்தான் இருக்கிறார்களா என்பதெல்லாம் கட்சியின் வெளியில் இருக்கும் யாருக்கும் புரியாத புதிர்.

பாவம் ஸ்டாலின். எல்லாம் சரியாக வரும்போது, பாஜக + பாமக + அதிமுக + தேமுதிக என்று கூட்டணி அமைவது பெரிய சவால்தான். (இப்போதும் என் பார்வையில் திமுகதான் முன்னணியில் இருக்கிறது என்றாலும், திமுகவுக்கு வெற்றி அத்தனை எளிதாக இருக்காது என்ற கட்டத்துக்கு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரேயே வந்துவிட்டது திமுகவுக்கு பெரிய பின்னடைவுதான்.) அதிலும் மதிமுக திமுகவோடு இருப்பது கூடுதல் சாபம்.

அதிமுக இல்லாத பாஜக அணி கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் 18.5% வாக்குகள் பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணி தொடராமல் போனதும் மக்கள் நலக் கூட்டணி வந்ததும் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த பெரிய விபத்து. [அதிலும் திமுகவே பலி! :))] இன்று, தேமுதிகவின் வாக்கு சரிந்திருக்கிறது, மதிமுக இல்லை என்பதைக் கணக்கில் கொண்டு, இது பாராளுமன்றத் தேர்தல் என்பதையும், கருணாநிதியும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால், கடந்த தேர்தலின் பாஜக கூட்டணி பெற்ற வாக்கில் பெரிய பின்னடைவு இருக்காது என்றே நினைக்கிறேன். பாமக பாஜக தேமுதிக அதிமுகவுன் கூட்டணி வைத்ததால், இனி தினகரனின் அமமுகவை (கட்சிப் பெயர் சரிதானா?!) மக்கள் உண்மையான அதிமுகவாகக் கருதமாட்டார்கள் என்ற தோற்றமே வருகிறது. இது எல்லாமே பாஜக கூட்டணிக்கு நல்லதைத் தரலாம்.

எப்படியோ, திமுகவுக்கு மிரட்டலைத் தரவாவது ஒரு கூட்டணி உருவானது நல்லது. இல்லையென்றால் லட்டு மாதிரி திமுக வென்று தொலைத்திருக்கும். எடப்பாடி, ஓபிஎஸ் – நிதர்சனத்தைப் புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் பாராட்டுக்குரியவர்கள்

இன்றைய நிலையில்:

பாஜக அதிமுக தேமுதிக பாமக, புதிய தமிழகம் கூட்டணி அமைந்தால்: 10 இடங்களில் வெல்லும்.
திமுக 20 இடங்களில் வெல்லும்.
மற்றவை இழுபறி

என்று தோன்றுகிறது. ஆனால் உச்சகட்ட பிரசாரத்தில் பாஜக கூட்டணி பெரிய அளவில் முந்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Share

ஹிந்துயிஸமும் ஹிந்து மதமும்

சசி தரூரின் ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்ற புத்தகம் கிழக்கு வெளியீடாக வந்திருக்கிறது. மொழிபெயர்ப்பு சத்யானந்தன். நேற்று சும்மா புரட்டலாம் என்று சில பக்கங்களை மேய்ந்தேன். எனக்கான குழி அங்கே காத்திருந்தது. ஓரிடத்தில் இந்துயிஸம் என்ற வார்த்தை கண்ணில் பட்டது. கிழக்கு மொழிபெயர்ப்புகள் ஓரளவுக்கு நேர்த்தியானவை. மொழிபெயர்ப்பில் இதுவரை இப்படி இந்துயிஸம் என்ற நேரடியான ஆங்கில வார்த்தை அப்படியே பயன்படுத்தப்பட்டுப் பார்த்ததில்லை. பார்த்தால் புத்தகம் முழுக்க இந்துயிஸம் என்ற வார்த்தையே உள்ளது. போதாக்குறைக்குச் சில இடங்களில் ஹிந்து மதம் என்ற வார்த்தைப் பயன்பாடும் உள்ளது. சசி தரூரே இப்படித்தான் பயன்படுத்தவேண்டும் என்று எதாவது குறிப்பை ஆங்கிலப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆங்கில மூலத்தைப் படித்தவர்கள் சொல்லவும்.

ஹிந்துயிஸத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன வேறுபாடு? ஏன் இந்துயிஸம் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள்? சத்தியமாகப் புரியவில்லை. கிறிஸ்டியானிஸம், இஸ்லாமிஸம் என்பதையெல்லாம் என்ன செய்திருப்பார்கள்? ஏற்கெனவே ஹிந்து மதம் வேறு, ஹிந்துத்துவம் வேறு ஒரு வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹிந்துத்துவர்கள் என்றறியப்படும் ஹிந்துக்களே கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சிறப்பு! ஹிந்து மதத்துக்கு ஹிந்துத்துவம் தேவையில்லை, ஹிந்துத்துவத்துக்குத்தான் ஹிந்து மதம் தேவையென்றெல்லாம் என்ன என்னவோ தத்து பித்தென்று எழுதுகிறார்கள். ஹிந்துத்துவத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக ஹிந்து மதத்தை நீக்க முடியும் ஒரு நாளில் (ஒருநாளும் அப்படி நடக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்) ஹிந்து மதத்தை சீக்கிரமே நசிக்கச் செய்துவிட முடியும் என்பது என் நம்பிக்கை.

இந்நிலையில் ஹிந்துயிஸ ஹிந்து மத வேறுபாட்டைப் புதியதாக நுழைத்திருக்கிறார்கள். இதில் என்ன இன்னொரு கொடுமை என்றால், இதுவரை வெளியான எத்தனையோ ஹிந்து மத எதிர்ப்புப் புத்தகங்களில்கூட இப்படி ஒன்றை நான் பார்த்ததில்லை.

ஹிந்துயிஸம், ஹிந்துமதம், சனாதன தர்மம் எல்லாம் ஒன்றுதான்.
சனாதன தர்மம் என்பதை ஒரு ஹிந்துப் பெருமை கொண்ட ஒருவர் சொல்வதற்கும் மற்றவர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ஹிண்டு ரிலிஜன் என்று இருந்தால்தான் ஹிந்து மதம் என்று மொழிபெயர்ப்போம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரே ஆங்கில வார்த்தைக்குப் பல தமிழ் வார்த்தைகளும் ஒரே தமிழ் வார்த்தைக்குப் பல ஆங்கில வார்த்தைகளும் இருப்பதெல்லாம் மொழிபெயர்ப்பில் அரிச்சுவடி. அதைவிடுத்து ஹிந்துயிஸம் என்பதை அப்படியே எழுதுவதெல்லாம் தெய்வ லெவல்.

இதில் இன்னொரு காமெடியும் உள்ளது. ஒரு அறிஞர் (பெயர் நினைவில்லை) இந்து மதம் வேறு, ஹிந்து மதம் வேறு என்றாராம். சம்ஸ்கிருதத் தாக்கத்தைச் சொன்னாரா அல்லது ஆய்வு பூர்வமாகவே சொன்னாரா என்றறிய நான் முயலவில்லை. ஆய்வு பூர்வமாகத்தான் சொல்லி இருந்தார் என்று அறிய நேர்ந்தால் எனக்கு எதாவது ஆகிவிடும் வாய்ப்புள்ளதால் அமைதியாக இருந்து தப்பித்துக்கொண்டேன்.

பின்குறிப்பு: நான் ஹிந்து, இந்து என்று மாற்றி மாற்றி வேண்டுமென்றே பயன்படுத்துகிறேன், வேன். இரண்டும் எல்லா வகையிலும் ஒன்றே.

Share

பூண்டு வெங்காயம் அக்ஷயப் பாத்ரா

கர்நாடகாவில் வெங்காயம் பூண்டு இல்லாமல் அக்‌ஷயப் பாத்ரா உணவு வழங்கும் திட்டம் குறித்து எதிர்ப்புகள் எழுந்தன. அக்‌ஷயப் பாத்ராவின் விதிகளுக்கு உட்பட்டே அது உணவு வழங்க இயலும். நிச்சயம் வெங்காயம் பூண்டு சேர்க்கவேண்டுமென்றால் அக்‌ஷயப் பாத்ராவைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது. இப்போது அக்‌ஷயப் பாத்ராவை நிர்ப்பந்திப்பது சரியானதல்ல. இது கிடக்க, வெங்காயம் பூண்டு சேர்க்காவிட்டால் எல்லாக் குழந்தைகளுக்கும் நியூட்ரிசன் கிடைக்காது என்பதெல்லாம் அபத்தம். வெங்காயம் பூண்டு இல்லாமலேயே நிச்சயம் எவ்விதக் குறையும் இல்லாமல் வாழமுடியும். வெங்காயம் பூண்டு இல்லாமல் உணவு என்பது பிராமணர்களுக்குரியது என்பதால், பிராமணர்களை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே, வெங்காயம் பூண்டு இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடல்நலமும் நாசமாகிவிடும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். வெங்காயம் பூண்டுடன் சமைப்பதைத் தவிர்க்க நினைக்கும் ஒரு அமைப்பை வலியுறுத்துவதுதான் தவறு.

(பின் குறிப்பு: வெங்காயம் பூண்டு இல்லாமல் என்னால் சாப்பிடவே முடியாது. பண்டிகை, விரத நாள்களில் தவிர்ப்பேன். மஹாளயபக்ஷத்தில் அந்தப் பதினைந்து நாளைக் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சில சமயம் ஏமாற்றிவிடுவேன்! வெங்காயம் பூண்டின் சுவை மிகப் பிடித்தமானதுதான், ஆனால் அது இல்லாததால் எந்த நியூட்ரிஸனும் கிடைக்காது என்பதெல்லாம் அபத்தம்.)

ஐஐடியில் சைவ அசைவ தனித்தனி கேண்டின்கள் என்றொரு கொந்தளிப்பு. அசைவப் பழக்கம் உள்ளவர்கள் என்றாவது சைவ உணவு அருந்தினால் அவர்கள் சைவ கேண்டீனுக்குள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது தெரிந்தால்தான் இதில் கருத்துச் சொல்லமுடியும். அனுமதிக்கப்படுவார்கள் என்றால் இதில் சாதிப்பாகுபாடு என்ற எதுவும் இல்லை. அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றால், இதில் பிரச்சினை உள்ளது. எத்தனையோ பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதி சைவர்கள் அசைவம் உண்பதும், எத்தனையோ பிராமணரல்லாதோர் சைவம் மட்டுமே உண்பதும் எல்லாம் இங்கே நடக்கக்கூடியதுதான். உணவுப் பழக்கம் மட்டுமே காரணம் என்றால், இப்பிரிவினையில் சாதிப்பாகுபாடு இல்லை என்றே சொல்லவேண்டும். அசைவ உணவு உண்பவர்களுடன் ஒரே இடத்தில் இருந்து நான் சைவ உணவைச் சாப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் அது ஒருவித ஒவ்வாமையைத் தரத்தான் செய்யும். இது உணவுப்பழக்கத்தினால் வரும் ஒவ்வாமையே அன்றி, சாதி ரீதியிலான ஒவ்வாமை அல்ல. ஆனால், கையில் கிடைப்பதையெல்லாம் வைத்து பிராமண லேபிள் ஒட்டித் தாக்க நினைத்தால், எதையும் இப்படி வளைத்துவிடலாம். வளைத்து விடுகிறார்கள்.

Share

பா.ரஞ்சித் – திருமாவளவன்

ரஞ்சித் முழுமையான அரசியல்வாதியாகவே மாறிக்கொண்டிருக்கிறார். நல்லது. திரைப்படங்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பது, வெளிப்படையாகத் தெரியாத வரை மட்டுமே வேகும் பருப்பு. அதற்குள் உள்நோக்கம் இருப்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும்போது, அந்நெருப்பு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படாது. நீர்த்துப் போகத் துவங்கும். அந்நிலையில் முழுமையாக அரசியலுக்குள் போகவேண்டி இருக்கும். படைப்பாளியின் சமூகத்துடனான உறவு என்பது ஒரே மட்டத்தில் கண்கூடாகப் என்பது மாறி, மேலிருந்து கீழே நோக்குவது என்றாகும். அப்போது உயிரைத் தொடும் திரைப்படங்களுக்குப் பதிலாக அறிவுரை சொல்லும், நியாயம் கேட்கும் படங்கள் என்றாகும். அவை முழுமையாக ஏற்கப்படாதபோது அரசியலே முழுப் புகலிடம். ஏனென்றால் அடிப்படையில் திரைப்படம் என்பது ஒரு வணிகம். அதை நீங்கள் எதற்குப் பயன்படுத்தினாலும் அதில் வணிகம் என்பது நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

தனித் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பட்டியல் சாதிக் கட்சிகள் போட்டியிடவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்க இது மிகவும் எளிதான ஒன்றாகத் தோன்றும். ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிகக் கஷ்டமானது. இங்கிருக்கும் பட்டியல் சாதிக் கட்சிகளுக்கு இது தெரியாததல்ல. இது தெரிந்தும் அவர்கள் தனியாகவே இயங்குகிறார்கள், இயங்க விரும்புகிறார்கள். காரணம், அரசியலில் அவர்கள் இருப்பு.

ரஞ்சித் சொன்னதை திருமாவளவன் மறுத்திருக்கிறார் என்று பார்த்தேன். திருமாவளவன் மறுத்திருப்பது சரியான ஒன்றே. இதற்குக் காரணம், தனது அரசியலுக்கு ரஞ்சித்தின் செய்கை போட்டியாக வந்துவிடும் என்று நினைப்பதாலும் இருக்கலாம். அல்லது தனது அனுபவத்தில் இது சரிப்பட்டு வராது என்று புரிந்துகொண்டதாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவரது முடிவு சரியானதே. ரஞ்சித், ஒரு வேகத்திலும் அரசியலுக்குள்ளே களத்தில் நின்று போட்டியிடுவது தரக்கூடிய சிக்கல் குறித்த அனுபவமின்மையாலும் பேசுகிறார்.

பட்டியல் சாதி மக்களின் ஒட்டுமொத்த வாக்கையே பட்டியல் சாதிக் கட்சிகளால் பெறமுடியாது என்னும் நிதர்சனத்தில் இருந்து துவங்கவேண்டும். அப்படியானால், பட்டியல்சாதிக் கட்சிகளைப் போலவே தத்தம் சாதிகளின்மீதுள்ள பிடிப்பால் தம் சாதிக் கட்சிக்கும் தம் சாதியினருக்கும் வாக்களிக்க விரும்பும் மக்களின் வாக்குகளைப் பெறுவது எப்படி? சாதி பார்த்து வாக்களிக்கக்கூடாது என்பவர்கள் பட்டியல் சாதிக்கு வாக்களிக்கலாம். ஆனாலும் மற்ற கட்சிகளைவிட்டுவிட்டு அவர்கள் பட்டியல் சாதிக்கட்சிகளின் பொது வாக்காளருக்குத்தான் வாக்களிப்பார் என்று சொல்லமுடியாது. தொடர்ச்சியாக மற்ற சாதியினர் மீதான விமர்சனங்களை வைத்துவிட்டு (ஒருவேளை அது மிக நியாயமானது என்றபோதும்) வாக்கரசியல் என்று வந்ததும் மற்றசாதியினர் அதை மறந்துவிட்டு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ரஞ்சித்தின் வேகத்தில் இதெல்லாம் அவருக்கு எளிதாக வெல்லப்படக்கூடிய ஒன்றாகத் தோன்றுகிறது. திருமாவளவனின் அரசியல் அனுபவத்தில் இதைமீறித் தனியே நின்று வெற்றி பெறுவது அத்தனை எளிதானதல்ல என்று தோன்றுகிறது.

கூடவே ரஞ்சித், அம்பேத்கரை ஆர் எஸ் எஸ் சொந்தம் கொண்டாடவே முடியாது என்று சொல்லி இருக்கிறார். நியாயமாக இப்படிச் சொல்லவேண்டும். இதை அரவிந்தன் நீலகண்டன் ஹிந்துத்துவ அம்பேத்கர் புத்தகத்திலேயே சொல்லிவிட்டார். சொந்தம் கொண்டாட ஒருவேளை முடியுமென்றால் ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்துவ அமைப்பால்தான் முடியும். நிச்சயம் மற்ற மதங்களால் முடியாது. ஹிந்து மதம் / அமைப்புகளுடனாவது அம்பேத்கர் தொடர்ச்சியான விவாதத்தில் இருந்தார். எனவே ஆர் எஸ் எஸ்ஸாவது உரிமை கொள்ளமுடியும் என்பதுதான் சரி. மற்ற மதத்தினரே அம்பேத்கரைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது ஹிந்து அமைப்புகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அது ரஞ்சித் போன்றவர்களைக் கலவரப்படுத்தும்போது, கோபப்படுத்தும்போது, அது மிகச்சரியானது என்பதையே காட்டுகிறது.

செய்தி: https://tamil.news18.com/news/tamil-nadu/politics-should-be-dealt-accordingly-thirumavalavan-replies-to-pa-ranjith-77289.html

ரஞ்சித் பேசிய வீடியோ: https://youtu.be/844Vu3F1Z7E?t=685

Share

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத்தொடர்ச்சி மலை பார்த்தேன். தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. சந்தேகமே இல்லாமல் மிக முக்கியமான திரைப்படம். கொஞ்சம் அவுட் டேட்டட் என்ற போதிலும் கூட, படம் எடுத்த விதம் கொஞ்சம் பழைய மாதிரி என்பதைப் போல இருந்தாலும் கூட, முக்கியமான திரைப்படமே. முதல் அரை மணி நேரத்துக்கும் மேலாக திரைப்படம் அந்த மலைவாழ் எளிய மனிதர்களின் வாழ்வைச் சித்தரிப்பதில் கழிகிறது. அது எடுக்கப்பட்ட விதம் மிக அற்புதமாக உள்ளது. படத்தில் முதல் தென்றல் வீசும் காட்சி என்று படத்தின் கதாநாயகி வரும் காட்சியைச் சொல்லலாம். அழகு. மண் சார்ந்த அழகு. கண்களிலேயே அவர் பேசுகிறார். இரண்டாவது தென்றல் வீசிய காட்சி இளையராஜாவின் ‘கேக்காத வாத்தியம்’ பாடல் வரும்போது. மெஸ்மரிசம் செய்யும் பாடல்.

மிக மெதுவாக வாழ்க்கையை மட்டுமே சொல்லிக் கொண்டு செல்லும்போது, அந்த ஏலக்காய் சிதறும் காட்சி மிகப் பெரிய பதற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுபோன்ற படத்தை ஆயிரம் பேர் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று இதைத் தயாரித்த விஜய் சேதுபதியைப் பாராட்ட வேண்டும். இயக்குநர் லெனின் பாரதி தீவிரமான கம்யூனிஸ்ட். ஆனால் இந்தப் படத்தில் எவ்விதச் சாய்வும் இன்றி மிக நியாயமாகவே படத்தை எடுத்திருக்கிறார். எந்த ஒரு முதலாளியையும் மோசமானவராக சித்தரிக்கவில்லை என்பது பெரும் ஆறுதல். அவர்களின் வாழ்க்கை மற்றும் சூழல் நியாயங்களைப் பொருத்து அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறார். அதைவிட நம்பிக்கை துரோகம் செய்பவராக ஒரு கம்யூனிஸ்ட் காட்டப்படுகிறார். அவர் இன்னொரு கம்யூனிஸ்ட்டால் கொல்லப்படுகிறார். மிக நல்லவரான கங்காஅணி, ஒரு இஸ்லாமியர். இந்தப் படத்தில் மத ரீதியான சீண்டல்கள் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலைவாழ் மனிதர்களின் மிக எளிய ஆன்மிகம் படம் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே இயக்குநரை இன்னுமொருமுறை பாராட்ட வேண்டும்.

இதுபோன்ற படங்களின் இன்றைய மதிப்பு என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இந்தப் படம் தமிழில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படமாகவும் மாறப்போவதில்லை. அதேபோல் இந்தப் படம் சமீபத்திய இடைநிலை மாற்றுத் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் ஓரளவு வசூலுடன் கூடிய நல்ல பெயரையும் பெறப்போவதில்லை. அதேபோல் இது ஒரு வணிக நோக்கப் படமாக இருக்கவே முடியாது. அப்படியானால் இதுபோன்ற திரைப்படங்களின் வாழ்வுதான் என்ன? பாராட்டுக்காக வா? யோசிக்க வேண்டிய விஷயம் இது. இதுபோன்ற திரைப்படங்களது இயக்குநர்களின் முதல் படமும் கடைசி படமும் ஒன்றாகவே அமைந்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழல் இங்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.

மலையாளத்தில் இதுபோன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. 2018ல் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பார்க்க உண்மையிலேயே கொஞ்சம் பாவமாகவும் பரிதாபமாகவும்தான் இருக்கிறது. இந்தக் காலகட்டங்களை நாம் என்றோ திரை உலகில் கடந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். இந்தப் படம் பேசும் அந்தச் சிறிய கால மாற்றமும் அதில் நிகழும் தொழிலாளர்களின் அவலமும் மிக முக்கியமானதுதான். பதிவு செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அது ஒரு திரைப்படமாக வரும்பொழுது அது ஒரு பதிவு என்ற அளவில் மட்டுமே சுருங்கி விடுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இதில் வணிகமும் உள்ளது. திரைப்படத்தில் உள்ள செலவு மற்றும் வரவு சார்ந்த கணக்குக்குள் இப்படங்கள் வர முடியாது எனும்போது, இதுபோன்ற திரைப்படங்களை விவரணைப் படங்களாகவே பதிவு செய்துவிடுவது இன்னொரு வகையில் புத்திசாலித்தனமானது என்று நினைக்கிறேன்.

இது அத்தனையையும் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை எடுத்த குழு யோசிக்காமல் இருந்திருக்காது. அதையும் மீறி எடுக்கிறார்கள் என்றால் திரைப்படத்தின் மீதான அவர்களது வெறியையும் காதலையும் குறிக்கோளையும் புரிந்துகொள்கிறேன் அவர்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்.

Share