Archive for அரசியல்

மணிப்பூர்ப் பிரச்சினை

மணிப்பூரில் நடந்திருப்பது அராஜகம். கொடுமை. மாநில மத்திய அரசுகள் இக்கொடுமைக்கான சரியான நியாயத்தையும் தீர்வையும் கொடூரங்களைச் செய்தவர்களுக்குச் சரியான தண்டனையையும் வழங்கவேண்டும்.

இக்கொடுமையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஹிந்து ஹிந்துத்துவ இஸ்லாமிய கிறித்துவ இன்னும் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.

இந்தியா முழுக்கப் பற்றி எரியும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதையே மத்திய அரசு முதன்மை நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

மணிப்பூர் பிரச்சினை உலகளாவிய பிரச்சினையாகிறது. ஆனால் இதே போன்ற கொடூரங்கள் சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நிகழ்ந்தபோது அது ஹிந்துத்துவவாதிகளுக்கு நிகழ்ந்த பிரச்சினையாக மட்டும் தேங்கிப் போனது. இன்று சங்கிகள் வாயில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு அன்று வாயில் என்ன இருந்தது என்பதே பதில்.

இந்த மணிப்பூர்ப் பிரச்சினையில் மட்டும் வாய் திறக்கும் போலி முற்போக்காளர்கள், இன்று மணிப்பூர்ப் பிரச்சினையை மதத்துக்காக, கட்சிக்காக அமைதியாகக் கடந்து போகிறவர்களைப் போலவே, மனிதர்களே அல்ல.

29-5-2021 அன்று ஒரு ஸூம் கலந்துரையாடலுக்காக நான் எழுதி வைத்துக்கொண்ட குறிப்புகள் – மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து. இது பேசுவதற்காக எழுதிய குறிப்புகள் என்பதால், கட்டுரை போல இல்லாமல், தொடர்பற்று இருக்கும். நேரமிருப்பவர்கள் வாசியுங்கள். ஏன் மணிப்பூர்க் கலவரம் முக்கியம், ஏன் மேற்கு வங்கக் கலவரம் முக்கியமல்ல என்பதுவிளங்கலாம். எல்லாக் கலவரங்களுமே அராஜகமானவையே. அமைதியான இந்தியாவுக்கு எதிரானவையே. ஒன்றைக் கண்டித்து இன்னொன்றைக் கடந்து செல்பவர்களுக்குப் பேச வாயே வரக் கூடாது.

உண்மையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டிய இந்தியா தன் பலத்தை இழந்து நிற்கும்படி நீங்களும் உங்களைப் போன்றவர்களும் செய்திருக்கிறீர்கள். யாராவது நியாயமாக இருக்க நினைத்தால் அவர்கள் மதச்சார்பானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரம் தொடர்பாக ஜக்மோகன் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி உள்ளது.

அரசியல் அதிகாரம் கைமாறும்போது ஆள்பவர்கள் நியாய உணர்வுடன் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு மேற்குவங்கம் ஒரு உதாரணம்.

அரசியல் அதிகாரம் மமதையாகவும் வெறியாகவும் மாறும்போது எப்படி நடக்கும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

மூலகாரணம் என்ன?

தொடர்ந்து பழக்கப்படுத்தப்படுவது. இதை சிஸ்டம் என்று சொல்லலாம். சிஸ்டத்தை மாற்றுவது மிகவும் கடினமானது. முப்பது ஆண்டுகாலம் தொடர்ந்து மார்க்ஸியத்தின் பிடியில் மேற்கு வங்கம் இருந்தபோதும் அங்கே இப்படி தொடர்ந்து அரசியல்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. வரலாறு காணாத படுகொலைகள். ஆனால் அவை எல்லாம் இங்கே ஊடகங்களில் மறைக்கப்பட்டன. மார்க்ஸியம் மங்கிப் போய் மம்தாவின் அரசியல் அங்கே மேல் எழுந்தபோதும் இதே கலவரங்கள் மார்க்ஸியர்களால் முன்வைக்கப்பட்டன. இன்று மம்தா அரசு பாஜகவுக்கு அதைச் செய்கிறது.

அதுமட்டுமல்ல. 1960லும் இதே போன்ற கலவரங்கள் நிகழ்ந்தன. இன்றைய கலவரத்துக்கான விதை முன்பு பல காலங்களில் விதைக்கப்பட்டிருக்கிறது.

1967ல் முதன்முதலாக கம்யூனிஸம் அங்கே ஆட்சியைப் பிடித்தது. அதுவரை இருந்த காங்கிரஸ் தன் பிடியை இழந்தது. அப்போதும் இதே போன்ற கலவரங்கள் அங்கே நிகழ்ந்தன. கிராமம் குறி வைத்துத் தாக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகளால் அன்று கொல்லப்பட்டார்கள்.

இதற்கு இன்னொரு காரணம், மார்க்ஸிய புரட்சியாளர்களின் வேர்கள் நக்ஸல்பாரி இயக்கத்தினரிடம் இருந்து வந்ததுதான்.

1972 மற்றும் 77ல் காங்கிரஸ் வந்தபோது இடதுசாரியினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

1977ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சி 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டது. ஜோதி பாசுவின் ஆட்சியின் போது கொல்லப்பட்ட நிலமற்ற 11 முஸ்லிம்களின் கதி இந்தியாவையே உலுக்கியது. பின்பு நந்திகிராமில் நடைபெற்ற காங்கிரஸ் மார்க்ஸிஸ்ட் மோதல், இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

இன்று நடந்திருக்கும் படுகொலைகளுக்கும் மேலே சொன்ன கொலைகளுக்கும் ஒரே வேர்தான். அதிகார மமதை. நக்சல் வேர்.

வாக்களிக்கப் போகும்போது கூட மக்கள் அங்கே துப்பாக்கிளால் மிரட்டப்படுவார்கள். பயந்து போய் வாக்களிக்காமல் இருக்கும் மக்கள் அநேகம். மார்க்ஸிய ஆட்சியிலும் பின்னர் மம்தாவின் ஆட்சியிலும் இது நடந்தது.

இன்று பாஜக அங்கே பெற்றிருக்கும் கவனமும், வென்றிருக்கும் இடங்களும் மம்தாவின் கட்சியினருக்கு பெரிய எரிச்சலை தந்திருக்கிறது.

ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்கு மட்டுமே என்று அவர்கள் இன்று நிரூபித்திருக்கிறார்கள்.

பாஜக ஆதரவாளர்களின் படுகொலை, பெண்கள் மானபங்கம் என்று, ஒரு இன அழிப்பின்போது என்னவெல்லாம் நடக்குமோ அதையெல்லாம், இன்று நாம் மேற்கு வங்கத்தில் பார்த்திருக்கிறோம்.

பாஜக ஆளும் மாநிலத்தில், யாரோ ஒருவர், பெயற்ற ஒருவர், மாட்டுக்கறி விவகாரத்தில் எதாவது சொன்னாலோ செய்தாலோ, அது இந்தியா முழுக்க செய்தியாக்கப்படும். தொடர்ந்து விவாதிக்கப்படும். ஆனால் மேற்கு வங்கமே பற்றி எரிந்தபோது, யாரும் இதைப் பற்றி விவாதிக்கவில்லை.

மக்கள் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களை தாங்களே வந்து பொது வெளியில் சொன்னதால்தான் இத்தனையாவது நமக்குத் தெரிந்தது. இல்லாவிட்டால்?

பொது ஊடகம் ஒன்று இல்லாதபோது இவர்கள் எப்படி செய்திகளை வடிகட்டி மக்களுக்கு அளித்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இவர்கள் சொன்னதுதான் செய்தி.

இதில் எத்தனை பேர் பயந்து போய் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்தார்கள் என்பதும் தெரியாது.

டிவிட்டரில் போய் தேடிப் பார்த்தால், நம்மை உறைய வைக்கும் அளவுக்குச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் இதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

கிராமப் பஞ்சாயத்தின் பாஜக தலைவர், உப தலைவர்களைக் குறி வைத்துத் தாக்கி இருக்கிறார்கள். அனுப்ராத்தா மோண்டல் என்னும் த்ரிணாமூல் காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்தான் அடித்தார் என்று சொல்லி, அடிபட்டவரின் படத்தையும் போட்டிருக்கிறார்கள்.

ஆர்ட்டிகிள் 355 என்ன சொல்கிறது? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது என்று சொல்கிறது.

கவர்னர் ஜக்தீப் தங்கர் ஒரு பேட்டியில் சொல்கிறார். மேற்கு வங்கத்தில் நடந்த தாக்குதல், இதற்கு முன் நடக்காத ஒன்று. ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். யாரை கொல்ல வேண்டும் என்று குறி வைத்து கொன்றிருக்கிறார்கள். வீட்டை சூறையாடி இருக்கிறார்கள். இதற்கு அரசு இயந்திரத்தின் உதவியும் இருந்திருக்கிறது. அவர்கள் கண்டும் காணாமலும் இருந்திருக்கிறார்கள். இப்படி மோசமான ஒரு நிலைமை வரும் என கனவிலும் நினைக்கவில்லை. நாங்கள் மதத்தைக் கூட மாற்றிக் கொள்கிறோம், எங்களை விட்டுவிடுங்கள் என்று மக்கள் கெஞ்சுகிறார்கள். சட்டத்தின் மாட்சியே குலைக்கப்பட்டிருக்கிறது.

ஏன் ஆளுங்கட்சியே இதைச் செய்யவேண்டும்? கவர்னர் சொல்கிறார்: ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களிக்கத் தயாரானவர்களுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக. ஜனநாயகத்துக்கு நேர்ந்த அசிங்கம் இது. மம்தா பானர்ஜி மக்களின் கதறலைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால் கவர்னரைக் குற்றம் சொல்கிறார் மம்தா. கவர்னர் சொன்ன ஒரே பதில், ‘என் கண்ணெதிரே என் மாநிலத்து மக்கள் இப்படி சாகும்போது என்னால் சும்மா இருக்கமுடியாது’. ஒரு கவர்னர் சொன்னது இது. யோசித்துப் பாருங்கள். ஜக்மோகன் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தின் அடிநாதமும் இதுதான்.

இந்த வன்முறையில் மம்தா பானர்ஜியின் பங்கு குறித்து தனிப்பட்ட ஆணையம் ஒன்று விசாரிக்கவேண்டும் என்று ஒரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மக்கள் தங்களுக்கு நேர்ந்த வன்முறை குறித்து தெரிவிக்க ஒரு இமெயில் ஐடி உருவாக்கி அதை பொதுவில் பகிர உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு ஆணையிட்டிருக்கிறது. (25-மே-2021)

உச்சந்தீமன்ற நீதிபதி என்.வி.ரமனாவுக்கு 2093 பெண் வழக்கறிஞர்கள் கையெழுத்து இட்டு ஒரு மனு அளித்திருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் குலைந்து போய்விட்டது என்று அறிவிக்குமாறு அந்த மனுவில் சொல்லி இருக்கிறார்கள். போலிஸ் கலவரக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு இந்த வன்முறைகளை நிகழ்த்தியது என்று அதில் சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த தொலைக்காட்சியாவது இதைப் பற்றிப் பேசியதா?

கவனர் ஜக்தீப் தங்கர் சொன்ன ஒரு வரி மிக முக்கியமானது: ‘உங்கள் ஒரு ஓட்டு உங்கள் மரணத்தை உறுதி செய்யுமானால், அங்கே ஜனநாயகம் செத்துவிட்டது என்றே அர்த்தம்!’ எத்தனை உண்மையான வரி? இந்த ஒரு வரி ஒட்டுமொத்த மேற்கு வங்கத்தின் பிரச்சினையையும் சொல்லிவிட்டது அல்லவா?

கமிஷ்னரிடம் கவர்னர் சட்டம் ஒழுங்கு பற்றி கேட்ட அறிக்கையை மம்தா அனுப்பவேண்டாம் என்று சொன்னதாக கமிஷ்னரே கவர்னரிடம் சொல்லி இருக்கிறார்.

இதனால்தான் கவர்னர் மம்தாவின் பதவி ஏற்பின்போதே இதைப் பற்றிக் கடுமையாகப் பேசினார். இது மரபுக்கு எதிரானது என்று ஆரம்பித்தார்கள். உண்மையில், கவர்னர் விரும்பினால் பேசலாம் என்று சொன்னதே மம்தாதான். அதைப் பயன்படுத்திக்கொண்ட கவர்னர் சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசி, மக்கள் நலனுக்காக, நாம் கட்சி அரசியலைத் தாண்டி சிந்திக்கவேண்டும் என்று சொன்னார். ஆனால், இதை திட்டமிட்டுச் செய்த அரசியல்வாதிகளுக்கு இது ஏன் புரியப் போகிறது.

இத்தனை நிகழும்போது, மத்திய அரசின் பங்கு என்ன?

பாஜக கட்சி மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை பெறுவோம் என்று சொல்லி போட்டி இட்டார்கள். ஆனால் 80க்கும் குறைவான இடங்களில் வென்றார்கள். தேர்தல் நடக்கும்போது மம்தாவின் த்ருணாமுள் தோற்றுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் விதைக்கப்பட்டது. ஆனால் அசுர வெற்றி பெறவும், வெற்றி மமதையும் தோற்றுவிடுவோமோ என்ற அச்சமும் இந்த வன்முறைக்கு வித்திட்டுவிட்டது. இது நாளையும் நடக்கலாம். எங்கும் நடக்கலாம்.

மத்திய அரசு, இந்தக் கலவரக் காரர்களை நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை தரவேண்டும், இன்றில்லாவிட்டாலும் நாளையாவது இதைச் செய்யவேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி என்பதை நிலைகொள்ள செய்யவேண்டும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, பதட்டம் மிகுந்த இடங்களில் துணை ராணுவப் படைகளைக் குவிக்கவேண்டும். தேவைப்பட்டால், கவர்னரே நேரடியாக தன் கட்டுப்பாட்டுக்குள் மாநிலத்தை எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.

கலவரங்கள் கட்டுப்படாதவரை யாரையும் முதல்வர் பதவி ஏற்க அழைக்கக்கூடாது.

ஐந்து மாநிலங்களில் ஒரே நாளில் முடிவுகள் வருவதால், துணை ராணுவப்படையைக் கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் இருந்தால், அதையும் யோசித்துச் செயல்படவேண்டும்.

இன்னொரு தேர்தலில், இன்னொரு ஓட்டு ஒரு மரணத்தைக் கொண்டு வருமானால், அது எந்த ஒரு மத்திய அரசுக்கும் அவமானமே.

தமிழ்நாட்டுக்கு இதில் கிடைக்கும் செய்தி என்ன? தமிழ்நாட்டில் இந்தியா முழுமைக்கும் நடக்கும் செய்திகள் பரப்பப்படுவதே இல்லை. எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. இதை உடைப்பதை பாஜக முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொலைக்காட்சியையும் இதைப்பற்றி விவாதிக்குமாறு நிர்ப்பந்திக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களது ஊடகங்களில் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் இது போன்ற வன்முறைகள் நிகழாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மோதியின் மத்திய அரசு கண்டறிந்தே ஆகவேண்டும்.

***

Share

அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்துக் குவிப்பு பற்றிய செய்திகள்

ஊடகங்களின் இருட்டடிப்பு இது. முதல் பக்கத்தில் செய்தியை வெளியிடக் கூட இவர்களால் முடியவில்லை. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பதில் உள்ள மோகம். பணமே அரசியலை நிர்ணயிக்கிறது.

கேஜ்ரிவால் செய்தியை முதல் பக்கத்தில் போட்டுவிட்டு, அண்ணாமலை சொன்னதை 2ம் பக்கத்தில் போட்டிருக்கிறது தமிழ்த்திசை. அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்னும் முக்கியச் செய்தியை தமிழ்த்திசை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

மற்ற செய்தித்தாள்களின் உட்பக்கங்களை நான் பார்க்கவில்லை.

தந்தியும் தினகரனும் ஒரே குரலில் முதல் பக்கத்தில் பேசுகின்றன.

தினமலர் ஒன்றே தைரியமாக, முதல் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறது.

தினமணியின் முதல் பக்கத்தை இணையத்தில் இருந்து ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்தேன். கொடுமை. இதற்கு எதற்கு தினமணி?

பத்திரிகைகள் எல்லாம் எப்படி வெட்கமே இல்லாமல் நேர்மை, உண்மை என்றெல்லாம் பேசுகின்றன? அசிங்கமாகவே இருக்காதா? செய்தியைச் சொல்லிவிட்டு, அதை எதிர்த்து பல கட்டுரைகளைக் கூட வெளியிடட்டும். அது அவர்களின் கொள்கைச் சாய்வு. அதில் தவறில்லை. ஆனால் செய்தியையே சொல்லாமல் சாய்ஸில் விடுவதெல்லாம் எவ்வளவு அசிங்கம்!

***

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார். டிவிட்டரிலும் இதுவே.

வானதி ஶ்ரீனிவாசன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது செயல்பாடுகளைப் பற்றிய பதிவுகள் மட்டுமே உள்ளன. டிவிட்டரில் விஷு ஆஷாம்ஷகள் என்று மலையாளத்திலும் வாழ்த்து வெளியிட்டிருக்கிறார் வானதி.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இல்லை.

சரஸ்வதி எம்.எல்.ஏ சட்டசபையில் இன்று என்ற செய்திகளையும், அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற முக்கியமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஹெச்.ராஜா பற்றிச் சொல்லவேண்டும். எஸ்.வி.சேகருக்கான விருதில் ராஜா கலந்துகொண்டது எனக்கு தனிப்பட்ட அளவில் பெரிய வருத்தம். ஆனால்,  ஹெச்.ராஜா ஒருவரே அண்ணாமலையின் சொத்துப்பட்டியல் பற்றிய குறிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தவும் செய்திருக்கிறார். ஹெச்.ராஜா மதிப்பிற்குரியவர்.

இந்நிலையில், மற்ற பத்திரிகைகள் பாஜகவின் செய்திகளை இருட்டடிப்பு செய்கிறது என்று சொல்ல பாஜகவினருக்குத் தகுதியே இல்லை என்பதுதான் உண்மை.

Share

அரசியல் யூ ட்யூபர்கள்

யூ ட்யூபர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மதன் பாஜகவையும் அண்ணாமலையையும் எக்ஸ்போஸ் செய்ய நினைத்து, அதற்கு மாறாக வேறொன்றைச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த கூட்டத்தையும் எக்ஸ்போஸ் செய்து, ஒரு தற்கொலை வெடிகுண்டைப் போல, அவரும் சேர்ந்து காலியாகி இருக்கிறார். அந்த வகையில் இது நல்ல விஷயம்.

யூ ட்யூபர்கள் அத்தனை பேரும் நிச்சயம் இந்த வீடியோவில் லஞ்சம் வாங்கப் போகவில்லை. ஒரு பிசினஸ் மீட் என்ற அளவில் மட்டுமே போயிருக்கிறார்கள். பணத்தையும் மதுவையும் அதற்காகத்தான் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நியாயத்துக்காக எதையுமே வாங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். இதுவரையும் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்காக வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பதை வெளிப்படையாக உணர வைத்திருக்கிறார்கள்.

முன்பொரு சமயம், இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து மது தரவேண்டிய சூழல் வந்தது. அவரைத் தனியே அழைத்து மதுவைத் தந்தபோது, அவர் பதற்றத்துடன் சொன்னார், இதெல்லாம் வேண்டவே வேண்டாம், உள்ள வைங்க என்று. அவரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் திமுக அனுதாபி. இப்போதும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் எனக்கு அவரை இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தியபோது, நான் அவரைச் சந்தித்திருப்பதைச் சொன்னேன். மது விஷயத்தைத் தவிர மற்றவற்றைச் சொன்னேன். இவ்ளோ ஞாபகம் வெச்சிருக்கீங்க, எனக்கு எதுவுமே நினைவில்லை என்றார். இன்றும் அவர் இதே நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்பது தெரியாது என்பதால் அவர் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். மதுவோ பணமோ எதுவும் வாங்காத உறுதிப்பாடு உள்ள பத்திரிகையாளர்களே முக்கியம். ஆனால் இவர்களால் பொருளாதார ரீதியாக ஜெயிக்க முடியுமா என்று தெரியவில்லை.

யூ ட்யூபர்கள் என்னும் பத்திரிகையாளர்களை அண்ணாமலை இடது கையில் டீல் செய்தது சரிதான். இவர்கள் அதற்குத்தான் லாயக்கு.

ராஜவேல் நாகராஜன், தான் ஒரு ஸ்டிரேடஜிஸ்ட்டாகத்தான் சென்றதாகச் சொல்கிறார். நம்பும்படியாகத்தான் இருக்கிறது. கட்சி அபிமானமே இல்லாமல் வெறும் ஸ்டிரேடஜிஸ்ட்டாக இருப்பது தொழில்முறை சார்ந்த ஒன்று. ஒரு கட்சியின் ஆதரவாளனாகவும் இருப்பேன், இன்னொரு கட்சிக்கு ஸ்டிரேடஜிஸ்ட்டாகவும் இருப்பேன் என்றால் அது சரிப்பட்டு வராது. இதையும் ராஜவேல் நாகராஜன் தெளிவாகவே சொல்கிறார். என்ன ஒன்றென்றால், நேற்று நாம் தமிழர், இன்று பாஜக என்றால், நாளை என்னவாகவும் இருக்கலாம் என்பதும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. அங்கேதான் எந்தக் கட்சிக்கு ஸ்டிரேஜிஸ்ட்டாகப் போகலாம் என்னும் திறப்பும் இருக்கிறது.

அரசியல் வீடியோ வெளியிடும் யூ ட்யூபர்கள் வெறும் காற்றில் கம்பு சுத்திக் கொண்டிருக்கவில்லை. பணத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வ்யூ இருந்தால் பணம் கிடைக்கும் என்று நம்பி இத்தொழிலை ஆரம்பிப்பவர்கள் பாவப்பட்ட ஜீவன்கள். வ்யூ இருந்தால், அரசியல் பணத்தில் செட்டில் ஆகிவிடலாம் என்று ஒரு சானலை ஆரம்பிப்பவர்களே புத்திசாலிகள்.

இந்த யூ ட்யூபர்கள் யாருக்காகவும் நான் சில்லரையை சிதறவிட்டதில்லை என்பதைப் பெருமையுடன் நினைத்துக் கொள்கிறேன். இவர்கள் கேள்வி கேட்ட விதம் பிடித்திருந்திருக்கிறது. இவர்கள் வெளியிட்ட வீடியோ சில பிடித்திருந்திருக்கிறது. அதைத் தாண்டி யாரையும் நான் கொண்டாடவில்லை. தெய்வம் காத்திருக்கிறது.

இந்த வீடியோக்களைப் பார்த்தால், நம்பிப் பேச வைத்து, ஒருவரை டிராப் செய்வது மிக எளிது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், பொதுவெளியில் வெறும் ஐயாயிரம் ரூபாயை வாங்கினால் கூட அது தவறு என்கிற பொதுப்புத்தி இங்கே விதைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மது பாட்டிலும் வெறும் பதினைந்தாயிரம் ரூபாயும், அதுவும் ஒரு தொழில்முறை கன்சல்டிங்கிற்காக வாங்கிய ஒன்று, இத்தனை பேரை காலி செய்துவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் நேர்மையான பொய்யர்கள். இவர்கள் அது கூட இல்லை.

Share

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?

• ஊழலற்ற நிர்வாகத்துக்காக
• உண்மையான வளர்ச்சிக்காக
• நல்ல சாலைகள் கிடைத்திட
• மழை வெள்ளத்தில் படகில் போகாமல் இருக்க
• எப்போது மின்சாரம் வரும் என்று தேவுடு காக்காமல் இருக்க உரிய இடத்தில் நமக்காகக் குரல் கொடுத்திட
• போலி மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட
• தாஜா அரசியலுக்கு முடிவுரை எழுத
• நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட
• மத்திய அரசின் முக்கியமான திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி தமிழனுக்கும் கிடைத்திட
• தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க
• தமிழ்நாட்டு அரசியலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க
• புதிய பாதை, புதிய இலக்கு, புதிய செயல்திட்டம் கொண்ட புதிய தலைமையின் கீழ் தமிழ்நாடு ஒளிர்ந்திட.

ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• மேலே உள்ள அனைத்துக்காகவும்.
• உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காக.
• இனி வரப் போகும் புதிய அரசியலுக்குக் கட்டியம் கூற.
• ஒரு ஜீவன் ஹிந்து என்பதற்காகவே அந்த ஜீவனின் தற்கொலையைப் பற்றி யாரும் வாய் திறக்காமல் அவலத்தைத் தடுப்பதற்காக.
• கோவில்கள் மட்டும் இடிக்கப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்தப்படுவதற்காக.

ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• பாஜகவின் ஓட்டு வங்கி பாஜகவுக்கு மட்டும் வரவேண்டும் என்பதற்காக.
• திமுகவுக்கு உறுதியான எதிர்ப்பு அதிமுகதான் என்று ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை நிலவிய சூழல் இப்போது இல்லை என்பதற்காக. அந்த இடத்தில் பாஜக வந்துவிட்டது என்பதற்காக.
• சில பிரச்சினைகளில் மட்டும் ஒப்புக்காகப் பேசும் அதிமுக பெரும்பான்மையான அரசியல் கருத்துகளில் திமுகவின் கருத்தையே கொண்டிருப்பதற்காக.
• இரண்டாம் இடத்துக்கு பாஜக வரவேண்டும் என்றால் அதிமுக அல்லது திமுகவை பாஜக தாண்டியாக வேண்டும் என்பதற்காக.

இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?

வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம். தனித்துக் களம் காணும் முதல் உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மை பெற்றுவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாஜக பெறும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது.

பாஜக ஒருவேளை 20% வாக்குகள் பெறுமானால் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கும். இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் நிலவிய களம் மாற்றியமைக்கப்படும். அதற்காக நிச்சயம் நாம் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்.

அண்ணாமலை போன்ற உறுதியான, திறமையான தலைவருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது ஒவ்வொரு இந்திய தேசியத் தமிழனின் கடமை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாளை அண்ணாமலை முதல்வராவார். அதற்கான விதை இன்று நாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கப் போகும் வாக்குகளே.

மொழி, மதம் போன்றவற்றால் பிரிக்கப் பார்க்கும் பிரிவினைவாதிகளின் கொட்டத்தை அடக்கி, என்றும் தமிழ்நாடு இந்தியாவின் உறுதியான ஒரு அங்கமே என்பதை உறுதிபடச் சொல்வதற்காக பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும். இப்படிப் பேசவேண்டிய இன்னொரு கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தன்னிலை மறந்து பிரிவினைக் கட்சிகளுக்கு வால் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் பாஜகவை ஆதரிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பாஜக தான் போட்டியிடும் இடங்களில் ஒட்டுமொத்த சராசரியாக 12% வாக்குகள் பெறும் என்று நினைக்கிறேன், பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நிஜமான வளர்ச்சிக்கும் உண்மையான மதச்சார்பின்மைக்கும் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

Share

ஹிஜாப்பும் காவித் துண்டும்

நீண்ட பதிவு, பொறுமையாகப் படிக்கவும். ஜெய் ஸ்ரீராம். 🙂

பள்ளிகளில் ஹிஜாப் – காவித் துண்டுப் பிரச்சினை இந்திய அளவில் பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. நேற்று உடுப்பியில் அரசு ப்ரி யுனிவர்சிட்டி கல்லூரியில், ஒரு மாணவி பர்கா அணிந்து பள்ளிக்கு வர, சுற்றி நின்ற ஹிந்து மாணவர்கள் காவித் துண்டுடன் ஜெய்ஸ்ரீராம் என்று கத்த, இந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டே பள்ளிக்குள் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமாகியது. கிடைத்தது வாய்ப்பென்று தமிழ் எழுத்தாள முற்போக்காளர்கள் இத்தனை நாள் திரைமறைவில் இருந்தது போதும் என்று உடனே தங்கள் கொந்தளிப்புகளை, ஹிந்துத்துவ அரசியல் தரும் அபாயங்களை எல்லாம் பட்டியலிடத் தொடங்கிவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி இவர்கள் ஒரு மூச்சு கூட விடவில்லை. ஆனால் கர்நாடகாவில் ஒரு பள்ளியில் பிரச்சினை என்றவுடன் கம்ப்யூட்டரில் தட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இவர்கள் போதாதென்று, அரைகுறை ஹிந்துக்களாக ஃபேஸ்புக்கில் வலம் வந்து சரியான நேரத்தில் தவறான கருத்தைச் சொல்லி உயிரெடுக்கும் அரை மண்டையர்கள் இன்னொரு புறம். இவர்கள் பல விதங்களில் பேசுகிறார்கள். முதல் விஷயம், வீடியோவைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணின் தைரியத்தைப் போற்றுகிறேன் என்பது. இதில் இருப்பது தைரியம் அல்ல, அசட்டுத் தைரியம். இன்னும் சொல்லப் போனால் தேவையற்ற பல அபாயங்களை இந்திய அளவில் உருவாக்கி இருக்கக் கூடிய அனாவசியமான தைரியம். உண்மையில், அந்த நேரத்தில் கும்பல்-மனப்பான்மைக்குள் போகாமல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று குரல் எழுப்பிவிட்டு அமைதியாக அந்தப் பெண்ணைப் போக விட்ட மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இரண்டாம் விதம், மாணவர்கள் காவிக்கொடி ஏற்றியது தொடர்பானது. வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது, ஒரு மாணவன் தன் கையில் இருக்கும் காவி கொடியைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் ஒரு கம்பத்தில் ஏற்றுகிறான். அந்தக் காட்சியைப் பார்த்ததும், அடுத்தடுத்து சில செய்திகள் உடனே பரபரப்பபட்டன. அங்கே பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடியைக் கழற்றிவிட்டு மாணவர்கள் காவிக் கொடி ஏற்றினார்கள் என. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவர்களைத் தேசத் துரோகிகள் என்றே அழைக்கவேண்டும் என்று முடிவெடுத்து, ஏகப்பட்ட வீடியோக்களைப் பார்த்தேன். ஒன்றிலும் தேசியக் கொடி கண்ணில் படவே இல்லை. எந்த மாணவன் கையிலும் தேசியக் கொடி இல்லை. ஆனால் இந்தியா டுடே உள்ளிட்ட தளங்கள் தெளிவாக இதே கருத்தைப் பரப்பின. டிவி9 கன்னடச் செய்திச் சேனலில் ஒருவர் பொறிபறக்கப் பேசினார், தேசியக் கொடியைக் கழற்றிய இந்த மாணவர்கள் தேசத் துரோகிகள் என. அதாவது, தேசியக் கொடி கழற்றப்பட்டதாக இவர் முடிவுக்கே வந்துவிட்டார். (ஒரு ஆறுதல், இவர் எந்தத் தரப்பையும் எடுக்காமல் இரண்டு தரப்பையும் திட்டினார்!) ஆனால் ஏஸியாநெட் ஸ்வர்ணா செய்திச் சானல் தெளிவாகச் சொன்னது, அங்கே தேசியக் கொடி இல்லவே இல்லை என. (இப்போதும் சொல்கிறேன், நாளையே மாணவர்கள் தேசியக் கொடியைக் கழற்றிவிட்டி காவிக் கொடியை ஏற்றிய வீடியோ வெளியானால், சந்தேகமே இன்று இந்த மாணவர்கள் தேசத் துரோகிகளே.)

அங்கே தேசியக் கொடி இல்லை என்பதுவே உண்மை என்று தெரிந்துகொண்ட நம் திடீர் உணர்ச்சிப் போராளி ஹிந்துக்கள் என்ன சொல்லி இருக்கவேண்டும்? வழக்கம்போல ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்துக்கு அடிமையாகிவிட்டோம் என்றுதானே? அவர்கள் இன்னொரு உளறலை ஆரம்பித்தார்கள். அதாவது அந்தக் கம்பம் தேசியக் கொடி ஏற்றிட வைக்கப்பட்டிருந்த கம்பமாம். அதில் காவிக் கொடி ஏற்றியது தவறாம். இவர்களை எல்லாம் என்ன சொல்ல? தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடியை ஏற்றி இருந்தால் மட்டுமே அது தவறு. வளாகத்தில் இருக்கும் ஒரு கம்பத்தில், தேசியக் கொடிக்கான கம்பமாக இருந்தாலுமே, அதில் காவிக்கொடி ஏற்றுவதில் தவறே இல்லை. அதுவும் இது போன்ற ஒரு கும்பல்-மனப்பான்மையிலும் கூட, மாணவர்கள் தங்கள் மூளையை அடகுவைக்காமல் நடந்துகொண்டிருக்கிறார்கள். காவிக் கொடி என்பது இந்திய ஆன்மாவின் கொடி. காவிக் கொடி இந்திய ஒருமைப்பாட்டுக்கான கொடி. இங்கே காவிக் கொடி ஏற்றப்பட்டது கூட, ஹிஜாப் அணிந்து வந்து பிரச்சினையை சில மாணவர்கள் துவக்கி அதன் எதிர்வினையாகத்தான் ஏற்றப்பட்டதே ஒழிய, ஹிந்து மாணவர்கள் போராட்டத்தைக் காவிக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கவில்லை. எவ்விதப் பிரச்சினையும் இல்லாத சமயத்தில் தேவையே இல்லாமல் மாணவர்கள் காவிக் கொடி ஏற்றி இருந்தால், அதுதான் அராஜகம், அநியாயம். ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை. ஒரு தூண்டல் இருந்திருக்கிறது, தொடர்ந்து மாணவர்கள் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.

அடுத்து பெண்ணிய கோஷ்டிகள். இத்தனை நாள் பெண்ணியம் பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம், செலக்டிவ் அம்னீஷியாவால் பீடிக்கப்பட்டு, ஹிஜாப் அணிவது பெண்ணின் உரிமை என்று ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படித் தலைகீழ் மாற்றம் கொள்ள இவர்கள் என்றுமே வெட்கப்பட்டதில்லை. ஹிஜாப்பும் சரி, பர்காவும் சரி, நிச்சயம் பெண்ணிய சுதந்திரத்துக்கு எதிரானதுதான். ஆனால் ஒரு முஸ்லிம் பெண் அதை விரும்பி அணிந்தால் அது அவளது சுதந்திரம். இதில் மாற்றமே இல்லை. நாம் போய் அந்த பர்காவை நீக்கு என்று சொல்லும் சுதந்திரம் யாருக்கும் இல்லை, அது பள்ளியாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில். பள்ளியில் இந்த சுதந்திரம் கிடையாது. பள்ளியில் பள்ளி சொல்லும் சீருடையில் வரவேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை. இதே பெண் முஸ்கான் 2021ல் பள்ளிச் சீருடையை அணிந்துகொண்டு வருவேன் என்று பள்ளியின் சட்டதிட்டங்களுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்தும் இட்டிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. இதே பெண், மற்ற பொதுவிடங்களில் ஹிஜாப் இல்லாமல் வந்திருக்கிறார் என்று புகைப்படங்களும் பகிரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பெண்ணும் பர்கா அணிந்து பள்ளிக்கு வந்த மாணவியும் ஒருவரேதானா என்று என்னால் உறுதி செய்ய முடியாததால் அதைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஒருவேளை இரண்டு பெண்களும் ஒருவரே என்றால், பள்ளிக்கு மட்டும் பர்கா அணிந்து ஏன் வரவேண்டும் என்கிற பதில் சொல்ல முடியாத கேள்வி எழவே செய்யும்.

பர்கா அணிவதும் ஹிஜாப் அணிவதும் முஸ்லிம் பெண்களின் உரிமை என்று பொதுவாகச் சொல்லி, வழக்கம் போல இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். ஒரு ஹிந்துக் கல்யாணம் நடக்கிறது, அங்கே ஒரு பெண் ஹிஜாப் அணிந்து வந்தால், அதைத் தடுத்தால், அது அராஜகம் என்று சொல்வதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், ஒரு பள்ளிக்கு ஒரு பெண் வரும்போது பள்ளி சொன்ன சீருடையில் வரவேண்டியது முக்கியம். பள்ளி சொன்ன சீருடையில் வராமல் இருப்பதும், உள்நோக்கத்துடன் பிரச்சினையை உருவாக்கும் பொருட்டு திடீரென்று சில மாணவர்கள் மட்டும் வேண்டுமென்றே வேறு ஒரு உடையில் வருவதும் தவறுதான்.

இப்படி யோசிப்போம். தமிழ்நாட்டில் ஒரு தனியார் ஹிந்துப் பள்ளியில் ஒரு பிராமணப் பையன் (அல்லது தனிப்பட்ட உடை அணியும் எதோ ஒரு சாதியைச் சேர்ந்த பையன்), பள்ளிச் சீருடையில் வரமாட்டேன், பஞ்ச கச்சை அணிந்து, பூணூல் வெளியே தெரிய, உத்தரியம் மட்டும் அணிந்து வருவேன் என்று சொன்னால், ஏற்பீர்களா? கொஞ்சமாவது மனசாட்சியுடன் யோசித்துப் பாருங்கள். இன்று ஃபேஸ்புக்கில் உளறித் திரியும் ஹிந்துக்கள்தான் முதலில் யோசிக்கவேண்டியவர்கள். இன்று பெண்ணின் உடை அவளது உரிமை என்று பேசும் எந்த முற்போக்கு எழுத்தாளர்களும் பிராமணச் சிறுவனின் உடைக்கு ஆதரவாக வாயைத் திறக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அப்படி உன் உடை முக்கியம் என்றால் மணியாட்டப் போ வாய் கூசாமல் சொல்வார்கள். தமிழ்நாட்டில் கூட இது நடந்திருக்கவேண்டாம், இந்தியாவில் எங்கு நடந்தாலும் இதையே இவர்கள் சொல்வார்கள். இதே விஷயம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு என்று வரவும், அவள் உடை அவள் உரிமை என்று பேசத் துணிந்துவிட்டார்கள். இதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் ஃபேஸ்புக் திடீர் ஹிந்துகள் உணர்ச்சிவசப்பட்டு உளறித் திரிகிறார்கள்.

ஒரு பிராமணப் பையன் இப்படி ஒரு உடையுடன் பள்ளிக்கு வந்தால் என் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ‘உன் உடை உன் உரிமை என்றால், அதற்கேற்ற பள்ளிக்குப் போ, உடன் படிக்கும் மாணவர்களின் சூழலைப் பாழாக்காதே. இதே பள்ளியில்தான் படிக்கவேண்டும் என்றால், அப்பள்ளி சொல்லும் சீருடையை ஏற்றுக்கொள்ளவேண்டியது உன் கடமை. பள்ளி முடிந்து பொது வாழ்க்கை வந்ததும், உன் இஷ்டம் போல் இரு. பள்ளியில் மதச் சின்னங்களை அணிந்து கொள்ள உனக்கு உரிமை உண்டு, ஆனால் சீருடைக்குப் பங்கம் வரக்கூடாது.’

ஒரு அரசுப் பள்ளியில் பெரும்பான்மை ஹிந்து மாணவன் மட்டும் சீருடையில் வரவேண்டும், ஆனால் சிறும்பான்மையினர் அவரவர்கள் மத உடையில் வரலாம் என்றால், அதை மாற்றுவதற்கு இந்தப் பிரச்சினை ஒரு தொடக்கமாக இருந்தால், அது நல்லதுதான். இதனால்தான் சில ஹிந்து இயக்கங்கள் தங்கள் நிறுவனங்களை சமயத்தின் அடிப்படையில் சிறுபான்மை என்றே அழைக்கவேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று வாய் கிழியப் பேசும் முற்போக்கு வாய்ச்சவடால்காரர்களின் இன்னொரு அசிங்கமான பக்கத்தையும் பார்ப்போம். பள்ளியில் அல்ல, பொதுவெளியில் பிராமணர்கள் பூணூலுடன் போவதை எல்லாம் எத்தனை அசிங்கமாக எழுதி இருக்கிறார்கள்? உன் உடலை செக்ஸியாகக் காட்டுகிறாயா என்று கேட்டு நக்கலாக எழுதிய முற்போக்காளர்களை எனக்குத் தெரியும். குடுமியைக் கிண்டலாக எழுதி, மணியாட்டிப் பிழைக்கிறான் என்று சொன்னவர்களை எனக்குத் தெரியும். இதைவிடக் கொடுமை, பூணூல் அறுக்கும் போராட்டமும், பன்றிக்குப் பூணூல் அணிவிக்கும் போராட்டமும் இதே மண்ணில் நடந்திருக்கிறது. அன்றெல்லாம் இதே முற்போக்காளர்கள் வாயே திறக்கவில்லை. திக, திமுக சம்பந்தட்ட எந்த ஒன்றையும் இவர்கள் மறந்தும் கண்டித்துவிடமாட்டார்கள். ஏன்? பிழைப்பரசியல். வாய்ப்பரசியல். இந்த பிழைப்பரசியல்காரர்கள் ஒன்று சொல்கிறார்கள் என்றாலே தெரிந்துகொள்ளுங்கள், அவர்கள் மற்ற மதத்துக்காரர்களின் உண்மையான உரிமைக்காகப் பேசவில்லை, ஹிந்துக்களுக்கு எதிரான ஒன்று என்பதால் மட்டுமே பேசுகிறார்கள் என்று.

உடுப்பிப் பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக ஹிந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்திருக்கிறார்கள். ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று சொல்லி இருந்தால் இந்தப் பிரச்சினை இங்கே முடிந்திருக்கும். அல்லது, காவித் துண்டு அணிந்து வரலாம் என்று சொல்லி இருந்தாலாவது, அநியாயத்துக்குள் ஒரு நியாயம் இருந்திருக்கும். இரண்டும் இல்லை. ஹிஜாப் அணிந்து வரலாம், ஆனால் காவித் துண்டு கண்ணை உறுத்துகிறது என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போதும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒரு வரியில் இருக்கிறது, யாராக இருந்தாலும், நாளை ஹிந்துக்களே எங்கள் மத உடையில் வருவோம் என்று சொன்னாலும், அதெல்லாம் முடியாது, ஒழுங்காகப் பள்ளிச் சீருடையில் வா என்று சொல்வதுதான் அந்தத் தீர்வு. இல்லை என்றால், இப்படிப் பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

இந்தப் பிரச்சினை நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. இன்று தீர்ப்பு வரலாமோ என்னமோ. எப்படியும் பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவித் துண்டு அணிவதற்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி இல்லாமல் தீர்ப்பு வேறு மாதிரி இருக்குமானால், கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் வரை இப்பிரச்சினையை எடுத்துச் செல்லவேண்டும். பெரும்பான்மை மாணவர்களுக்கு மட்டும் எதிராக இருக்கும் சட்டத்தை மாற்ற இந்த பாஜக அரசு முயலவேண்டும். இதற்குள், இந்திய எதிர்ப்பாளர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு, மாணவர்களுக்குக் கெட்ட பெயர் வராமல் இருப்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.

Share

தேஜஸ்வி சூர்யா – பெங்களூரு படுக்கை ஊழல்

பெங்களூருவில் நடந்த கொரானா நோயாளிகள் மற்றும் மருத்துவமனை தொடர்பான ஊழலை தேஜஸ்வி சூர்யா வெளிப்படுத்தும்போது சொன்ன பெயர்கள் அனைத்தும் இஸ்லாமியர்களின் பெயர்கள். இதை வைத்துக்கொண்டு அங்கே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் இதில் இருக்கும் மத அரசியலைப் பாரீர் என்று ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் அந்தப் பெயர்களை அவர் சொன்னார், அந்தப் பெயர்கள் யாருடையவை, அவை யார் தந்தவை என்பதையெல்லாம் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிந்திப்பார்கள். நடிகர் சித்தார்த் கிடைத்தது இன்னொரு வாய்ப்பு என்று மதச்சார்பின்மை ஒளிவட்டத்துடன் ஒரு பதிவும் போட்டு, அஜ்மல் கஸாப்பையும் விட பின் தங்கிவிட்டதாக ஒரு ட்வீட் செய்துவிட்டார். அதையும் சேர்த்துக்கொண்டு கன்னட ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் ஆரம்பித்துவிட்டன – தேஜஸ்வி சூர்யாவின் ஊழல் தோலுரிப்பில் மத அரசியல் என்று.

Youtube link for the interview of Tejasvi Surya https://www.youtube.com/watch?v=7cera26EkDM

இந்நேரம் பார்த்து தேஜஸ்வி சூர்யாவை பேட்டி எடுத்தது இந்தியா டுடே. வழக்கம்போல இந்தியா டுடேவின் நோக்கம் தேஜஸ்வி சூர்யாவிடம் இல்லாத மத அரசியலை, இஸ்லாமிய வெறுப்பை எப்படியாவது வெளியே கொண்டுவந்து அவரை அம்பலப்படுத்துவது. ஆனால் வழக்கம்போல நடந்தது வேறு. தேஜஸ்வி சூர்யா சொன்ன பதில்களில் வாயடைத்துப் போய்விட்டது இந்தியா டுடே. ஒரு கேள்வியையும் தேஜஸ்வி சூர்யா விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். ஏன் அந்த இஸ்லாமியர்ப் பெயர்கள் என்றதற்கு அவர் சொன்ன பதில்தான் இது ஹைலைட். அந்தப் பெயர்ப் பட்டியல் தேஜஸ்ட் சூர்யா தயாரித்ததே அல்ல! மருத்துவமனை தந்தது. அந்தப் பட்டியலை மருத்துவமனைக்குத் தந்தது ஒரு ஏஜென்ஸி. அந்த ஏஜென்ஸி இப்போது காவல்துறை வளையத்துக்குள். இதோடு நின்றிருந்தால் இது அரசியல் பதிலாக மட்டும் போயிருக்கும். அடுத்து என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது. நந்தன் நீல்கேனியின் உதவியுடன் இப்போதிருக்கும் வலைத்தளம் மற்றும் ஆப்பை எப்படி உயர்த்தலாம் என்று ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். நந்தன் நீல்கேனி அதற்கென 100 தொழில்நுட்ப உதவியாளர்களை நியமித்து, அந்த ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. இந்த பதில்களை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா டுடே அடுத்த கேள்வியை வெட்கமே இல்லாமல் கேட்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டுமா என்று. இவர்களுக்குத் தேவை பரபரப்பு மட்டுமே. அதற்கான நேர்மையான பதில் அல்ல!

Share

வேல் யாத்திரை தடை

கொரானா காலத்தைக் கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என்று தமிழக அரசு சொல்லி இருக்கிறது.

தமிழக அரசு பெரிய தவறு செய்துவிட்டதாகவே நினைக்கிறேன். அனுமதி தந்திருந்தால், இந்த வேல் யாத்திரை அதிகம் கவனிக்கப்படாமல் போயிருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஆனால், இப்போது தடை செய்ததன் மூலம், தமிழக பாஜகவுக்கு அதிக வெளிச்சத்தைத் தந்திருக்கிறது அதிமுக அரசு. சுணங்கிக் கிடந்த தமிழக பாஜக தன் வழியைச் சிறப்பாகத் தீர்மானிக்க நல்லதொரு வாய்ப்பை அதிமுக ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

வேல் யாத்திரை அனுமதிப்பு மறுப்புக்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணம், கொடுமை! முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டபோது, அதிமுக அலுவலகம் முன்பு அப்படி ஒரு கொண்டாட்டம். எவ்விதமான கொரானா பாதுகாப்பும் கடைப்பிடிக்கப்படவில்லை. இப்போது பாஜக வேல் யாத்திரை நடத்தினால் கொரானா பிரச்சினை வந்துவிடும் என்று நினைக்கிறது அரசு!

அதிமுக அரசு பாஜகவுக்கு சாதகமாகவே இருப்பதாகப் பலர் சொல்லி வரும் வேளையில், இந்த அறிவிப்பால் பாஜக அதிமுக உறவு மோசமடையலாம். மோசமடையவேண்டும் என்பதே என் ஆசை. கருணாநிதிக்குப் பின் திமுகவை வீழ்த்துவதைவிட, ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுகவை வீழ்த்துவதே எளிதானது. ஸ்டாலின் வலுப்பெற்றுவிட்ட நிலையில், அதிமுகவுடன் இன்னும் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. அதேசமயம் எக்காரணம் கொண்டும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே முடியாது. கூடாது. தனித்து நின்று தேர்தலைச் சந்திப்பதுதான் சரியான முடிவு. இந்த வேல் யாத்திரைக்கான தடை, பாஜக தனித்து நிற்பதை விரைவுபடுத்துவதோடு, அதிமுகவின் வீழ்ச்சியையும் வேகமாக்கும். ஏற்கெனவே அதிமுக எதிர்வரும் தேர்தலில் வெல்வது அத்தனை எளிதானதல்ல என்றிருக்கும் வேளையில், இந்த வேல் யாத்திரை தடை மூலம் பாஜகவும் அதிமுகவிடம் இருந்து விலகுமானால், குறைந்தது 5% ஓட்டாவது கிடைக்காமல் போகலாம். இந்த ஓட்டை, பாஜக அதிமுகவுடன் இல்லாத நிலையில், சிறுபான்மையினர் சரி செய்வார்கள் என்றும் யோசிக்க முடியாது. ஏனென்றால் சிறுபான்மையினர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் போக எந்தக் காரணமும் இல்லை! எனவே பாஜக மூலம் தனக்கு வரவிருந்த 5% ஓட்டையும் அதிமுக இழப்பதாகவே கருத்தில் கொள்ளவேண்டும்.

கொரானா காலத்தில் இந்த யாத்திரை தேவையா என்ற கேள்வி, எவ்வித அரசியல் காரணங்களும் இல்லாமல் முன்வைக்கப்படுமானால், எவ்வித அரசியல் செயல்பாட்டையும் களத்தில் செய்யாத ஒரு கட்சியால் முன்வைக்கப்படுமானால் மட்டும் அதைப் பொருட்படுத்தலாம். ஒரு தனிமனிதனாக இந்தக் கேள்வி நியாயமானதே என்றுதான் நினைக்கிறேன். ஆனால் பாஜகவுக்கு மட்டும் இந்தக் கேள்வியைக் கேட்போம் என்பது அபத்தம்.

இந்தத் தடையையும் மீறி வேல் யாத்திரையை பாஜக நடத்தி, தமிழ்நாட்டில் பாஜகவின் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைக்கட்டும். வேல் யாத்திரையின் போது முருகன் பாஜகவின் தலைவராக இருப்பது நல்ல பொருத்தம். இறைச்செயல் என்றே கொள்வோம். எப்போதோ பாஜக முருகனைக் கையில் எடுத்திருக்கவேண்டும். பத்து வருடங்களுக்கு நாங்கள் நண்பர்களுக்குள் பேசி இருக்கிறோம், தமிழக பாஜக முருகனைக் கையில் எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்யவேண்டும் என. திடீரென சீமான் தமிழ்க்கடவுள் என்று கையில் முருகனை எடுத்துக் கொண்டார். நல்லவேளை, சீமானால் பெரிய தாக்கம் ஒன்றையும் ஏற்படுத்த முடியவில்லை. இன்று இந்த வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த எம்பெருமான் முருகன் அருளட்டும்.

Share

மாலைமுரசு விவாதம் – பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோடு விடுவிப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டது தொடர்பாக மாலைமுரசு டிவியி நடந்த விவாதத்தைப் பார்த்தேன். நியூஸ் 18ல் இருந்த செந்தில் இப்போது இங்கே இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். செந்திலும் அரசியல் சார்பு அனைவரும் அறிந்ததே. அந்த விவாதத்தில் பாஜக சார்பாக இரண்டு பேர் பேசினார்கள். கனிமொழி பாஜக சார்பாக. இன்னொருவர் ஸ்ரீராம் பார்த்தசாரதி. செந்தில் கனிமொழியைப் பேசவே விடவில்லை. மீண்டும் மீண்டும் அரசியல் சார்பான கேள்விகளைக் கேட்டு அவரைப் பேசவிடாமல் தடுமாற வைத்தார். கனிமொழியும் அரசியல் சரியாக பேசவேண்டிய நிர்பந்தம் இருந்ததால் மிகவுமே தடுமாறினார். அவர் சொல்ல வந்த சில சரியான கருத்துகளையும் செந்தில் பேசவிடவில்லை. இரண்டாம் சுற்றில் இரண்டு நிமிடமாவது பேச விடுங்கள் என்று கனிமொழி கேட்டும் கூட, செந்திலால் அவரைப் பேசவிட முடியவில்லை. மீண்டும் மீண்டும் குறுக்கிட்டுப் பேசினார்.

ஆனால் ஸ்ரீராம் மிகச் சரியாகப் பேசினார். எந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது என்பதை மட்டும் சரியாக எடுத்துக்கொண்டு பேசினார். மற்றவர்கள் சட்ட ரீதியாகச் சொன்ன தவறை எல்லாம் குறிப்பிட்டுச் சொன்னார். செந்தில் இவரிடம் இடைமறித்து முதலில் பேச முயன்றார். ஆனால் ஸ்ரீராமின் பொட்டு தெறித்தாற் போன்ற பதிலில், நீங்கள் சொல்வது சரிதான் என்று விட்டுவிட்டார். ஆனால் இவருக்கும் நேரமே செந்தில் தரவில்லை.

செந்தில் ஒரு நெறியாளராக இருந்தாலும், ஹிந்து எதிர்ப்புக் குழுவின் ஒரு பேச்சாளர் போலவே பேசினார். பாபர் மசூதி தானாக இடிந்துகொண்டதோ என்பதை கிண்டலும் கேலியுமாகச் சொன்னார். கனிமொழியை கத்தி முனையில் மிரட்டுவது போல மிரட்டி தான் நினைப்பதைச் சொல்ல வைக்கப் பார்த்தார். அதே நேரம் வன்னி அரசுவோ தமிழ் மணியோ எதாவது தவறாகப் பேசினாலும் அதைக் கண்டுகொள்ளாமல் போனார். அதை ஸ்ரீராம் எடுத்துச் சொல்லும்போதுதான் ஒப்புக்கொண்டார். இதுவே பாஜக ஆதரவாளர்கள் தவறாகப் பேசினால் உடனே அதைப் பிடித்துக்கொண்டு மடக்கு மடக்கு என்று மடக்க மட்டும் செந்தில் யோசிப்பதே இல்லை. எங்கேயும் தெய்வம் இருந்தே தீரும் என்பதைப் போல ஸ்ரீராமின் பேச்சு மிகச் சரியாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ஸ்ரீராமால் ஐந்து நிமிடம் கூடப் பேச முடியவில்லை. கனிமொழி வரலாற்றைச் சொல்லப் போனால், அதெல்லாம் வேண்டாம், இந்த விஷயத்தை மட்டும் பேசுங்கள் என்று சொன்ன செந்தில், மற்றவர்கள் வரலாற்றை இஷ்டத்துக்குப் பேசும்போது அதை தன் சார்பாக எடுத்தும் கொடுத்தார். எல்லாம் போகட்டும், ஆனால் பாஜக தரப்பின் வாதங்களை வைக்கும்போது அதை எதிர்த்து செந்தில் சொன்ன விதம், அந்தக் கிண்டல், மிகவும் ஆபாசமாக இருந்தது. ஒரு நெறியாளராக இது ரொம்ப அசிங்கம். அதை ஸ்ரீராம் சரியாகச் சுட்டிக் காட்டினார். அப்போது செந்தில் அதை தான் சீரியஸாகச் சொன்னதாக பல்டி அடிக்கவும் தயங்கவில்லை.

தமிழ் தொலைகாட்சிகளின் விவாதங்களைப் போன்ற தண்டம் எதுவும் இல்லை. யாரையும் பேசவிடக்கூடாது என்பது மட்டுமே முதல் குறிக்கோள். அதிலும் அவர்கள் ஹிந்துத்துவத் தரப்பாக இருந்தால் அசிங்கப்படுத்த வேண்டும் என்ற முடிவோடுதான் விவாதங்கள் ஒருங்கிணைப்படுகின்றன. அதில் இப்போது மாலைமுரசு-வும் சேர்ந்துகொண்டிருக்கிறது போல.

Share