Archive for அரசியல்

Pareeksha Gnani

ஞாநியைப் பற்றி எழுதுவதை இரு பிரிவினர் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஒன்று ஞாநி போலத் தீவிரமான இடதுசாரி கருத்துடையவர்கள். இன்னொன்று என்னைப் போன்ற இந்துத்துவக் கருத்து உடையவர்கள். இரு பிரிவினருக்கும் இவன் ஏன் ஞாநி பற்றி எழுத வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்கும்.

ஆனால் ஞாநி நிஜமாகவே அன்பானவர். பிடித்தவர்கள் மேல் ஒளிவு மறைவு இல்லாமல் அன்பைப் பொலிபவர். அதற்காகவாவது அவரைப் பற்றி எழுதத்தான் வேண்டும். அன்புக்கும் அரசியல் சார்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது எனக்கும் தெரியும்.

ஞாநிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், கிட்னி மாற்ற வேண்டிய கட்டாயம் வந்திருந்தது. வாரா வாரம் அவர் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் படிக்க உதவியாக இருக்கும் என்று கிண்டில் கருவி ஒன்றை பத்ரி வாங்கி கொடுக்கச் சொல்லி இருந்தார். அதைக் கொடுப்பதற்காக நானும் மருதனும் அவர் வீட்டுக்குச் சென்றோம்.

அதற்கு முன்பு எனக்கு ஞாநியுடன் நல்ல பழக்கம் உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சிகளில் அவர் என்னிடம் பேசுவதை எல்லாம் முன்பு எழுதி இருக்கிறேன். அதேபோல் அவரது பரீக்ஷாவில் நாடகம் நடிக்க என்னை அழைத்த கதையையும் எழுதி இருக்கிறேன். எனவே அவை மீண்டும் இங்கே வேண்டாம்.

நானும் மருதனும் அவர் வீட்டுக்குள் போனபோது, ஒரு கட்டிலில் பனியன் லுங்கியுடன் அமர்ந்திருந்தார். மிகவும் சோர்வாக இருந்தார். அதிக நேரம் பேச வேண்டாம் என்ற அறிவுறுத்தலுக்குப் பின்னர்தான் உள்ளே வந்திருந்தோம். நாங்களும் உடனே கிளம்பத் தயாராகத்தான் இருந்தோம். ஆனால் அவர் எங்களை விடவே இல்லை. நீண்ட நேரம் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டினார். எப்போதுமே ஞாநி அப்படித்தான் என்றாலும், அந்தச் சூழலில் அது மிகவும் வினோதமாகவே இருந்தது. மருதன் அவ்வப்போது மெல்ல மெல்லப் பேசினார். நான் நிறையப் பேசினேன்.

ஞாநியின் உடல் உபாதைகள் பற்றி எல்லாம் கேட்டேன். டிவி விவாதம் ஒன்றில் பேசப் போனபோது, அங்கே தரப்பட்ட டீ அவர் மேல் கொட்டிவிட்டது. கொதிக்க கொதிக்க இருந்த அந்த டீ கொட்டியதில், அவர் நெஞ்சுப் பகுதித் தோல் உரிந்துவிட்டது. அப்போது பட்ட கஷ்டத்தை எல்லாம் பகிர்ந்துகொண்டார்.

அவருக்குச் செய்யப்படும் டயாலிசிஸ் பற்றி விரிவாகச் சொன்னார். அந்த நான்கு மணி நேரம் என்ன செய்வது என்று தெரியவில்லை, பைத்தியம் பிடிக்கிறது, இந்த கிண்டில் உதவக்கூடும் என்றார்.

முன்பே என்எச்எம் ரீடர் என்ற இ-புத்தக ரீடர் ஒன்றை வடிவமைக்கும் நோக்கத்தில், அதை விளக்கி அவரிடம் பேசி இருக்கிறேன். புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வதில் அவருக்கு அத்தனை ஆர்வம். புத்தகம் பதிப்பிக்கச் செலவே இல்லை, ஆனால் விற்பனை ஆன்லைனில் நடக்கும் என்றால், எழுத்தாளனுக்கு அது எத்தனை பெரிய வரம் என்று சிலாகித்தார். ஆனால் இ-புத்தக உலகம் அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எழுத்தாளர்களையும் கைவிட்டு விட்டது.

அதேபோல் அவர் ஏதோ ஒரு வெகுஜன இதழில், சக்கர நாற்காலியில் ஆட்சி செய்யும் கருணாநிதி ஓய்வெடுக்கப் போகலாம் என்பது போல எழுதிவிட, அதைத் தொடர்ந்து திமுகவினர் அவரைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஸ்டாலின் அவருக்கு ஃபோன் செய்து பேசியதாகச் சொன்னார். திமுகவினர் அளவுக்கு ஸ்டாலின் கோபப்படவில்லை என்றாலும், அவரிடமும் வருத்தம் இருந்தது, ஆனால் நான் சொன்னதுதான் நியாயம் என்று அவரிடம் வெளிப்படையாகவே சொன்னேன் என்றார். கருணாநிதி இத்தனை வயதுக்குப் பிறகு இன்னும் கஷ்டப்படாமல் பதவியில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு அந்தப் பதவியைத் தரலாம் என்றுதான் ஞாநி எழுதியிருந்தார் என நினைக்கிறேன்.

பின்பு பேச்சு எங்கெல்லாமோ போனது. ஒரு கட்டத்தில், ‘எனக்குப் பணப் பிரச்சினை இப்போது இல்லை. டயாலிசிஸ் செய்யத் தேவையான பணம் தர குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ராஜ வைத்தியம் நடக்கிறது. ஆனால் ஒரு மகனாக நான் என் சித்திக்கோ என் அம்மாவுக்கு இப்படிச் செய்ய முடியவில்லை’ என்று சொன்னவர், விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டார். அதுவரை ஞாநியை அப்படிப் பார்த்ததில்லை என்பதால், எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

பின்பு மெல்லத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார் ஞாநி. புத்தகக் கண்காட்சி பற்றி, இனி புத்தகங்களின் எதிர்காலம் என்னாகும் என்பது பற்றி எல்லாம் நிறையப் பேசினார். சீக்கிரமே உடல்நிலை சரியாகி வந்து பல புதிய விஷயங்களைச் செய்யப் போவதாகவும், ஓ பக்கங்களைத் தொடரலாமா என்பது பற்றியும், தீம்தரிகிடவைக் கொண்டு வரலாமா என்பது பற்றியும் பேசினார்.

தீம்தரிகிட இதழ் வெளிவந்த போது நான் அதன் சந்தாதாரராக இருந்தேன். அப்போது ஞாநி மரத்தடி யாஹூ இணையக் குழுமத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அதை ஒருங்கிணைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதால், எனக்கு ஞாநியுடன் மெயில் பழக்கம் இருந்ததால், சந்தாதாரராக ஆகி இருந்தேன். ஆனால், நான்கைந்து இதழ்களில் அவர் இதழை நிறுத்திவிட்டார். அடுத்த முறை அவரைப் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது, என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்டேன். பணம் திரும்ப வரவில்லையா என்று கேட்டார். வரவில்லை என்றேன். எல்லாருக்கும் லெட்டர் போட்டு பணத்தைச் சரியாகக் கொடுத்தேனே, உங்களுக்கு எப்படி மிஸ் ஆனது எனத் தெரியவில்லை என்றார். பணம் பிரச்சினை இல்லை என்றேன். இல்லை, இல்லை, ஏதாவது புத்தகங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். வேண்டவே வேண்டாம் என்று சொன்னேன். பின்பு நண்பர்கள் பலர், தீம்தரிகிட இதழுக்குச் சந்தா செலுத்தியதாகவும் அந்த இதழ் நிறுத்தப்பட்டபோது அவரிடம் இருந்து அதற்கு ஈடான புத்தகம் திரும்ப வந்ததாகவும் சொன்னார்கள்.

ஞாநி பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ற அரசியலை ஆதரித்துப் பேசுபவர் என்றெல்லாம் பலர் புகார் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அப்படி இல்லை. யாரேனும் அவருக்கு எந்தச் சந்தர்ப்பத்திலேனும் பண உதவி செய்திருக்கக் கூடும். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவர் பணம் வாங்கிக் கொண்டிருந்தாலும், அவர் தங்கள் கருத்தைப் பேசுவதற்காக மற்றவர்கள் பணம் கொடுத்திருப்பார்களே ஒழிய, பணம் தந்தவர்களுக்காகக் கருத்தை மாற்றிப் பேசுபவர் அல்ல ஞாநி என்பதே என்றென்றைக்குமான நிலைப்பாடு. ஞாநி இறந்த பின்பு பல நண்பர்களிடம் இதை நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். மெல்ல மெல்லச் சிலர் அதை ஏற்றுக் கொண்டார்கள் என்றே நம்புகிறேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இப்போது வேறு சிலர் மற்ற சிலரைப் பற்றிப் போகிற போக்கில் இப்படிச் சொல்வதைப் பார்க்கிறேன். ஒன்று பணம் கொடுக்காதீர்கள். அல்லது, பணம் கொடுத்தது அவர் கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால், ஓர் ஊக்கத்தொகையாகக் கொடுத்தேன் என்று சொல்லுங்கள். இவை அன்றி, ஒருவருக்குப் பணத்தைக் கொடுத்துக் கருத்தை மாற்றிப் பேசச் சொல்லி இருந்தால், அது வேறு அரசியல்.

ஞாநி ஆதரித்த கருத்துகள் எனக்குக் கொஞ்சம் கூட ஏற்பில்லாதவை. அன்றும், இன்றும், என்றும். அதேபோல், என்னுடைய கருத்துகள் ஞாநிக்கு எந்த வகையிலும் பொருட்படுத்தத் தகாதவையே. ஞாநி நிலையில் இருந்து பார்த்தால் எந்த வகையிலும் முக்கியத்துவம் பெற வேண்டியவன் அல்ல நான். ஆனாலும் ஞாநி எல்லோரையும் போல எனக்கும் சரிசமமான மரியாதை கொடுத்தார். ஏனென்றால், அதுதான் ஞாநி.

பின்குறிப்பு

ஞாநி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது பேஸ்புக்கில் ஒருவர் ஞாநி எத்தனை ஓட்டுகள் பெறுவார் என ஒரு போட்டியை நடத்தினார். சும்மா இல்லாமல் நானும் அதில் கலந்து கொண்டு, இருப்பதிலேயே குறைவான ஓட்டுகளை அவருக்குச் சொல்லி இருந்தேன். 7500 ஓட்டுகள் வாங்குவார் என சொன்னேன் என்று நினைக்கிறேன். என்ன கொடுமை என்றால் அதில் நான்தான் ஜெயித்தேன். ஞாநி இதையும் புன்னகையுடன் கடந்தார்.

Share

Madurai Lord Murugan Conference

முருக பக்தர்கள் மாநாடு ஆன்மிகமா மதவாத அரசியலா?

கூட்டம் வருமா? மதுரை குலுங்குமா?

ராமரைக் கைவிட்டுவிட்டு முருகனுக்குத் தாவியது ஏன்?

மதச்சார்பின்மைக்கு பங்கமா?

பதில் அளிக்கிறார் நம்பி நாராயணன்.

Share

Keeladi Discussion with Krishnan

தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா?

தமிழ்நாட்டின் தொன்மம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா?

மத்திய அரசின் உள்நோக்கம் என்ன?

கீழடி அரசியல் குறித்த விரிவான விவாதம் – எஸ்.கிருஷ்ணனுடன்.

Share

Three rules of central literary awards

மூன்று விதிகள்

ஒரு விருதைத் தீர்மானிக்கும் நடுவர் குழுவில் இடதுசாரி ஆதரவாளர்களோ திராவிட இயக்க ஆதர்வாளர்களோ இருந்தால், அந்த விருது பாஜக தலைமையிலான அரசு தரும் விருதாகவே இருந்தாலும் கூட, அவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது கொள்கைக்கு எதிரான புத்தகங்களையோ எழுத்தாளர்களையோ கௌரவிக்கவே மாட்டார்கள். இது விதி 1.

அதே பாஜக அரசில் இடதுசாரி எதிர்ப்பாளர்களோ திராவிட எதிர்ப்பாளர்களோ நடுவர்களாக அமரும்போது, அவர்கள் தங்களை நடுநிலையானவர்கள் என்று 100% நம்பிக்கொண்டு அவர்களும் இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் திராவிட ஆதரவு எழுத்தாளர்களுக்குமே பரிசுகளைத் தருவார்கள். இது விதி 2.

விதி 3: இதுவே தலைவிதி.

Share

Politics in Tamil literary awards

விருதுகள் தகுதியானவர்களுக்குத் தரப்படுவதில்லை, அதில் லாபி இருக்கிறது என்று இடதுசாரிகளும் திராவிட ஆதர்வாளர்களும் கூடுதலாக எழுத்தாளர்களுமாக இருப்பவர்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே விருதுகள் எதிர்-இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் எதிர்-திராவிட எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படுவதில்லை என்பதில் உள்ள லாபியைப் பற்றி, அறமின்மையைப் பற்றி, அரசியலைப் பற்றி ஒருபோதும் இவர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். சந்தோஷமும் படுவார்கள்.

ஜோடி குரூஸ் போன்ற ஒருவருக்கு ஒருவேளை எப்போதாவது விருது  கிடைத்துவிட்டால் அவர் அந்தக் காலத்தில் மோடி ஆதரவாளர் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டு, அவருக்கு எப்படி விருது தரலாம் என்று பொங்கவும் செய்வார்கள். விருதுக்கு முதலில் ஆதரவு தந்தவர்களோ பயந்து போய் ‘அவர் இப்படி ஒரு அரசியலுக்கு ஆதரவாளராக இருப்பார் என்பது எங்களுக்குத் தெரியாது’ என்று பம்மு பம்மென்று பம்மவுவும் செய்வார்கள்.

‘நீங்க மட்டும் மோடியையும் பாஜகவையும் சப்போர்ட் செய்யலன்னா நல்லா இருக்கும்’ என்று என் காது படவும் என் காதுக்குப் பின்னாலும் பேசியிருக்கிறார்கள். அதில் இருப்பது அக்கறை என்றாலும் இதைச் சொல்பவர்களே இடதுசாரி மற்றும் திராவிட ஆதரவாளர்களுக்குச் சிங்கி அடிப்பதை மறந்து விடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நெஞ்சம் முழுக்க, ‘நான் ஒரு நடுநிலையாளர். ஏனென்றால் நான் எழுத்தாளர்’ என்கிற சுய-ஏமாற்று மண்டிக் கிடக்கிறது.

இரட்டை நாக்குகள் இப்படித்தான் உருவாகி இதுவே நியாயம் நேர்மை என்று நிலை செய்யப்படுகின்றன. அதைத் தாண்டி இந்த லாபிச் சண்டை எல்லாம் சொல்ல வருவது, ‘நானும் திராவிட இயக்க ஆதரவாளர்தானே… நானும் இடதுசாரி ஜால்ராதானே… எனக்கு ஏன் தரப்படுவதில்லை?’ என்பதைத்தான். ‘என்னை விட சிறப்பாக எழுதும் எதிர்க் கருத்துக் காரனுக்கு ஏன் தரப்படுவதில்லை?’ என்பதை அல்ல.

நான் விருதுகள் குறித்து இன்று எழுதியவை, அது கிடைக்கவில்லையே என்று எழுதப்பட்ட பதிவுகளைப் படித்து மட்டுமே.

விருதுகள் பெற்றவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு விருதைப் பெற்றுத் தந்திருக்கும் புத்தகங்களைப் படிக்காமல் கருத்துச் சொல்வது தவறு. ஒருநாளும் நான் அதைச் செய்ய மாட்டேன். மேலும் அவர்கள் எழுதிய எந்த ஒரு நூலையும் நான் இதுவரை வாசித்ததில்லை என்னும்போது நான் கருத்துச் சொல்ல அல்ல, நினைக்கக் கூடக் கூடாது!

என் ஆதங்கமெல்லாம் விருதுக்குப் பின்னால் இருக்கும் அல்லது விருது வழங்கிய பிறகு நடக்கும் சடங்குகளைப் பற்றி மட்டுமே.

விருது பெற்ற புத்தகங்கள் நன்றாக இருக்குமானால், அதை ஏற்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது நன்றாக இல்லை என்றால் அதைப் பொதுவில் சொல்லவும் எனக்குத் தயக்கமில்லை. முன்பே சொல்லியும் இருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். அதாவது மீ டூ ஸேம் நடுநிலை! :>

இந்த விளக்கம் எதற்கென்றால் என் இடுகைகளில் சிலர் ‘விருது பெற்றவர்கள் மீது எனக்கு வருத்தம்’ என்ற பொருளில் கமெண்ட் போட்டதால்தான்.

Share

Ramadass Anubumani clash

ராமதாஸ் அன்புமணி மோதல்.

யார் கைக்குச் செல்லும் பாமக?

விவாதம்.

Share

Ramadass and Anbumani

அவரது குடும்பப் பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதாம்! இதில் இரு கேள்விகள் எழுகின்றன. மற்ற குடும்பத்துப் பெண்கள் வந்தால் பரவாயில்லை என்ற தொனி வருகிறதே, அதற்கு என்ன பொருள்? அதே குடும்பத்து ஆண்களுக்கு வர உரிமை இருக்கிறது என்றால், அந்தக் குடும்பத்துப் பெண்களுக்கு அதே உரிமை இல்லையா? இதையெல்லாம் பெண்ணியவாதிகள் ஜஸ்ட் லைக் தட் கடந்து போய் விடுவார்கள்.

அப்புறம் ராமதாஸ் சத்தியம் செய்தது என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள், வாரிசு அரசியல் வராது என்றுதானே? எப்போது குடும்பத்துப் பெண்கள் வர மாட்டார்கள் என்று சொன்னார்? இது என்ன புதுக் கதை?

அப்படியே ஒருவேளை குடும்பத்துப் பெண்கள் வர மாட்டார்கள் என்றுதான் சத்தியம் செய்து இருந்தாலும் சௌமியாவுக்குத் தேர்தலில் நிற்க இடம் தந்தது ஏன்? அப்போதே சத்தியத்தை மீறி விட்டாரே… ஒரே சத்தியத்தை ஒருமுறை மீறிய பிறகு எத்தனை முறை மீறினால் என்ன?

ஒருவேளை மருமகள் வேறொரு குடும்பம் என்று லாஜிக்காக நினைக்கிறாரா?

இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது. அரசியலுக்கு வர மாட்டோம் என்று குடும்பத்துப் பெண்கள்தானே சத்தியம் செய்ய வேண்டும்? இவர் சத்தியம் செய்தால் அதை ஏன் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்? உதாரணமாக, ‘என் அக்கா நாளை முதல் உருளைக்கிழங்கு சாப்பிட மாட்டார்’ என்று நான் சத்தியம் செய்தால் என் அக்கா என்னைச் சும்மா விடுவாரா?

🙂

Share

TN Bjp’s worst decision

தமிழ்நாட்டு பாஜகவில் ஒரு விசித்திரமான நோய் உண்டு. தொடர்ந்து பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் ஆதரிப்பவர்களைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாது. அதுவே அதுவரை பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் திட்டிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று பாஜகவை புகழ்ந்து பேச ஆரம்பித்தால் அவர்களை உடனே அரவணைத்துக் கொள்ளும். இது காலம் காலமாக இருக்கும் நோய்.

இந்திய அளவில் இன்னொரு நோய் உண்டு. பாஜகவின் நம்பிக்கை மிகுந்த தலைவராக இருக்கும்போது அவரைப் புறக்கணிப்பார்கள். அதுவே அவர் வெளியேறி தனிக் கட்சி கண்டு வெற்றி பெற்றால் மீண்டும் அவரைத் தலைவராகக் கூட்டிக் கொண்டு வருவார்கள். எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். கல்யாண் சிங் எடியூரப்பா போன்றவர்கள் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மூன்றாவது ஒரு வியாதியும் உண்டு. மற்ற கட்சியில் தலைவராக இருந்தவர்களையே தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராகவும் வர வைப்பார்கள். அவர்களும் தலைவராக இருந்து விட்டு மீண்டும் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவைத் திட்டுவார்கள். திருநாவுக்கரசு நினைவுக்கு வருகிறார்.

இது போன்ற பல வினோதங்களைத் தொடர்ந்து செய்வதால்தான் தமிழ்நாட்டு பாஜகவால் சட்டென ஓர் உயரத்திற்குச் செல்ல முடியாமல் இருக்கிறது. இப்போது நடந்து கொண்டிருப்பது இது எல்லாவற்றையும் தாண்டிய அதலபாதாளமான வீழ்ச்சி. மீட்புக்கு இடமில்லை. இதனால் அண்ணாமலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

Share