ஞாநியைப் பற்றி எழுதுவதை இரு பிரிவினர் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஒன்று ஞாநி போலத் தீவிரமான இடதுசாரி கருத்துடையவர்கள். இன்னொன்று என்னைப் போன்ற இந்துத்துவக் கருத்து உடையவர்கள். இரு பிரிவினருக்கும் இவன் ஏன் ஞாநி பற்றி எழுத வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்கும்.
ஆனால் ஞாநி நிஜமாகவே அன்பானவர். பிடித்தவர்கள் மேல் ஒளிவு மறைவு இல்லாமல் அன்பைப் பொலிபவர். அதற்காகவாவது அவரைப் பற்றி எழுதத்தான் வேண்டும். அன்புக்கும் அரசியல் சார்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது எனக்கும் தெரியும்.
ஞாநிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், கிட்னி மாற்ற வேண்டிய கட்டாயம் வந்திருந்தது. வாரா வாரம் அவர் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் படிக்க உதவியாக இருக்கும் என்று கிண்டில் கருவி ஒன்றை பத்ரி வாங்கி கொடுக்கச் சொல்லி இருந்தார். அதைக் கொடுப்பதற்காக நானும் மருதனும் அவர் வீட்டுக்குச் சென்றோம்.
அதற்கு முன்பு எனக்கு ஞாநியுடன் நல்ல பழக்கம் உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சிகளில் அவர் என்னிடம் பேசுவதை எல்லாம் முன்பு எழுதி இருக்கிறேன். அதேபோல் அவரது பரீக்ஷாவில் நாடகம் நடிக்க என்னை அழைத்த கதையையும் எழுதி இருக்கிறேன். எனவே அவை மீண்டும் இங்கே வேண்டாம்.

நானும் மருதனும் அவர் வீட்டுக்குள் போனபோது, ஒரு கட்டிலில் பனியன் லுங்கியுடன் அமர்ந்திருந்தார். மிகவும் சோர்வாக இருந்தார். அதிக நேரம் பேச வேண்டாம் என்ற அறிவுறுத்தலுக்குப் பின்னர்தான் உள்ளே வந்திருந்தோம். நாங்களும் உடனே கிளம்பத் தயாராகத்தான் இருந்தோம். ஆனால் அவர் எங்களை விடவே இல்லை. நீண்ட நேரம் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டினார். எப்போதுமே ஞாநி அப்படித்தான் என்றாலும், அந்தச் சூழலில் அது மிகவும் வினோதமாகவே இருந்தது. மருதன் அவ்வப்போது மெல்ல மெல்லப் பேசினார். நான் நிறையப் பேசினேன்.
ஞாநியின் உடல் உபாதைகள் பற்றி எல்லாம் கேட்டேன். டிவி விவாதம் ஒன்றில் பேசப் போனபோது, அங்கே தரப்பட்ட டீ அவர் மேல் கொட்டிவிட்டது. கொதிக்க கொதிக்க இருந்த அந்த டீ கொட்டியதில், அவர் நெஞ்சுப் பகுதித் தோல் உரிந்துவிட்டது. அப்போது பட்ட கஷ்டத்தை எல்லாம் பகிர்ந்துகொண்டார்.
அவருக்குச் செய்யப்படும் டயாலிசிஸ் பற்றி விரிவாகச் சொன்னார். அந்த நான்கு மணி நேரம் என்ன செய்வது என்று தெரியவில்லை, பைத்தியம் பிடிக்கிறது, இந்த கிண்டில் உதவக்கூடும் என்றார்.
முன்பே என்எச்எம் ரீடர் என்ற இ-புத்தக ரீடர் ஒன்றை வடிவமைக்கும் நோக்கத்தில், அதை விளக்கி அவரிடம் பேசி இருக்கிறேன். புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வதில் அவருக்கு அத்தனை ஆர்வம். புத்தகம் பதிப்பிக்கச் செலவே இல்லை, ஆனால் விற்பனை ஆன்லைனில் நடக்கும் என்றால், எழுத்தாளனுக்கு அது எத்தனை பெரிய வரம் என்று சிலாகித்தார். ஆனால் இ-புத்தக உலகம் அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எழுத்தாளர்களையும் கைவிட்டு விட்டது.
அதேபோல் அவர் ஏதோ ஒரு வெகுஜன இதழில், சக்கர நாற்காலியில் ஆட்சி செய்யும் கருணாநிதி ஓய்வெடுக்கப் போகலாம் என்பது போல எழுதிவிட, அதைத் தொடர்ந்து திமுகவினர் அவரைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஸ்டாலின் அவருக்கு ஃபோன் செய்து பேசியதாகச் சொன்னார். திமுகவினர் அளவுக்கு ஸ்டாலின் கோபப்படவில்லை என்றாலும், அவரிடமும் வருத்தம் இருந்தது, ஆனால் நான் சொன்னதுதான் நியாயம் என்று அவரிடம் வெளிப்படையாகவே சொன்னேன் என்றார். கருணாநிதி இத்தனை வயதுக்குப் பிறகு இன்னும் கஷ்டப்படாமல் பதவியில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு அந்தப் பதவியைத் தரலாம் என்றுதான் ஞாநி எழுதியிருந்தார் என நினைக்கிறேன்.
பின்பு பேச்சு எங்கெல்லாமோ போனது. ஒரு கட்டத்தில், ‘எனக்குப் பணப் பிரச்சினை இப்போது இல்லை. டயாலிசிஸ் செய்யத் தேவையான பணம் தர குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ராஜ வைத்தியம் நடக்கிறது. ஆனால் ஒரு மகனாக நான் என் சித்திக்கோ என் அம்மாவுக்கு இப்படிச் செய்ய முடியவில்லை’ என்று சொன்னவர், விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டார். அதுவரை ஞாநியை அப்படிப் பார்த்ததில்லை என்பதால், எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
பின்பு மெல்லத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார் ஞாநி. புத்தகக் கண்காட்சி பற்றி, இனி புத்தகங்களின் எதிர்காலம் என்னாகும் என்பது பற்றி எல்லாம் நிறையப் பேசினார். சீக்கிரமே உடல்நிலை சரியாகி வந்து பல புதிய விஷயங்களைச் செய்யப் போவதாகவும், ஓ பக்கங்களைத் தொடரலாமா என்பது பற்றியும், தீம்தரிகிடவைக் கொண்டு வரலாமா என்பது பற்றியும் பேசினார்.
தீம்தரிகிட இதழ் வெளிவந்த போது நான் அதன் சந்தாதாரராக இருந்தேன். அப்போது ஞாநி மரத்தடி யாஹூ இணையக் குழுமத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அதை ஒருங்கிணைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதால், எனக்கு ஞாநியுடன் மெயில் பழக்கம் இருந்ததால், சந்தாதாரராக ஆகி இருந்தேன். ஆனால், நான்கைந்து இதழ்களில் அவர் இதழை நிறுத்திவிட்டார். அடுத்த முறை அவரைப் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது, என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்டேன். பணம் திரும்ப வரவில்லையா என்று கேட்டார். வரவில்லை என்றேன். எல்லாருக்கும் லெட்டர் போட்டு பணத்தைச் சரியாகக் கொடுத்தேனே, உங்களுக்கு எப்படி மிஸ் ஆனது எனத் தெரியவில்லை என்றார். பணம் பிரச்சினை இல்லை என்றேன். இல்லை, இல்லை, ஏதாவது புத்தகங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். வேண்டவே வேண்டாம் என்று சொன்னேன். பின்பு நண்பர்கள் பலர், தீம்தரிகிட இதழுக்குச் சந்தா செலுத்தியதாகவும் அந்த இதழ் நிறுத்தப்பட்டபோது அவரிடம் இருந்து அதற்கு ஈடான புத்தகம் திரும்ப வந்ததாகவும் சொன்னார்கள்.
ஞாநி பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ற அரசியலை ஆதரித்துப் பேசுபவர் என்றெல்லாம் பலர் புகார் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அப்படி இல்லை. யாரேனும் அவருக்கு எந்தச் சந்தர்ப்பத்திலேனும் பண உதவி செய்திருக்கக் கூடும். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவர் பணம் வாங்கிக் கொண்டிருந்தாலும், அவர் தங்கள் கருத்தைப் பேசுவதற்காக மற்றவர்கள் பணம் கொடுத்திருப்பார்களே ஒழிய, பணம் தந்தவர்களுக்காகக் கருத்தை மாற்றிப் பேசுபவர் அல்ல ஞாநி என்பதே என்றென்றைக்குமான நிலைப்பாடு. ஞாநி இறந்த பின்பு பல நண்பர்களிடம் இதை நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். மெல்ல மெல்லச் சிலர் அதை ஏற்றுக் கொண்டார்கள் என்றே நம்புகிறேன்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், இப்போது வேறு சிலர் மற்ற சிலரைப் பற்றிப் போகிற போக்கில் இப்படிச் சொல்வதைப் பார்க்கிறேன். ஒன்று பணம் கொடுக்காதீர்கள். அல்லது, பணம் கொடுத்தது அவர் கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால், ஓர் ஊக்கத்தொகையாகக் கொடுத்தேன் என்று சொல்லுங்கள். இவை அன்றி, ஒருவருக்குப் பணத்தைக் கொடுத்துக் கருத்தை மாற்றிப் பேசச் சொல்லி இருந்தால், அது வேறு அரசியல்.
ஞாநி ஆதரித்த கருத்துகள் எனக்குக் கொஞ்சம் கூட ஏற்பில்லாதவை. அன்றும், இன்றும், என்றும். அதேபோல், என்னுடைய கருத்துகள் ஞாநிக்கு எந்த வகையிலும் பொருட்படுத்தத் தகாதவையே. ஞாநி நிலையில் இருந்து பார்த்தால் எந்த வகையிலும் முக்கியத்துவம் பெற வேண்டியவன் அல்ல நான். ஆனாலும் ஞாநி எல்லோரையும் போல எனக்கும் சரிசமமான மரியாதை கொடுத்தார். ஏனென்றால், அதுதான் ஞாநி.
பின்குறிப்பு
ஞாநி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது பேஸ்புக்கில் ஒருவர் ஞாநி எத்தனை ஓட்டுகள் பெறுவார் என ஒரு போட்டியை நடத்தினார். சும்மா இல்லாமல் நானும் அதில் கலந்து கொண்டு, இருப்பதிலேயே குறைவான ஓட்டுகளை அவருக்குச் சொல்லி இருந்தேன். 7500 ஓட்டுகள் வாங்குவார் என சொன்னேன் என்று நினைக்கிறேன். என்ன கொடுமை என்றால் அதில் நான்தான் ஜெயித்தேன். ஞாநி இதையும் புன்னகையுடன் கடந்தார்.