Archive for ஹரன் பிரசன்னா

Vanangaan

வணங்கான் – அரை மணி நேரம் பார்த்திருக்கிறேன். பெரிய இயக்குநர் ஒரு படத்தை சுமாராக எடுக்கலாம். ஆனால் இத்தனை கேவலமாக எடுக்கக் கூடாது. ‘அவன் இவன்’ திரைப்படத்தை விட மோசமான ஒரு திரைப்படத்தை இனி பாலாவால் எடுக்க முடியாது என்கிற எண்ணத்தைப் போட்டு உடைத்திருக்கிறார் பாலா. தனக்குத்தான் காமெடி வரவில்லையே, அப்புறம் எதற்கு அதைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாக் காட்சிகளும் ஏதோ அவரது பழைய திரைப்படத்தில் வந்த காட்சிகள் போலவே இருக்கின்றன. ஆங்காங்கே பிராமண பாஷை, ஆங்காங்கே கிறிஸ்துவக் கிண்டல், மீண்டும் கிறிஸ்துவப் புகழ்ச்சி, ஆங்காங்கே அரசியல் நையாண்டி, ஆங்காங்கே இந்து மதக் கிண்டல் என எல்லாவற்றையும் போகிற போக்கில் தொட்டுக்கொண்டு விட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்று யாரோ பாலாவை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் மகனும் மகளும் கடுப்பாகி, இது என்ன படம், ஒரு மண்ணும் புரியல, ஏன் இதைப் போட்டுக் கழுத்தறுக்க என்று கேட்டார்கள்.

இப்படித்தான் முன்பொரு சமயம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ என்ற கன்னடப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் 20 நிமிடம் பார்த்ததில் ஒன்றுமே புரியவில்லை. பிடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கப் போய் அந்தத் திரைப்படத்தைச் சாப்பிடும் போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம் என்ற வாக்கில் 7 ஞாயிற்றுக்கிழமைகளில் பார்த்து முடித்தேன். முடிவில் உண்மையில் அந்தப் படத்தின் வெறியனாகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ரக்ஷித் ஷெட்டி பிரமாதப்படுத்தி விட்டார். பின்பு அந்தப் படத்தை முழுமையாக மீண்டும் பார்த்தேன்.

அதேபோல் இந்தப் படத்தையும் இனி ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது பார்க்கப் போகிறேன் என என் பையனிடம் சொன்னேன். மறு விநாடி அவன் சொன்னான், ‘இந்த வீட்ல உன்கூட சேர்ந்து சாப்பிடறது இன்னைக்குத்தான் கடைசி’.

வணங்கான் திரைப்படத்தில் ஒரு பாதிரியார் நெற்றி நிறையக் குங்குமம் பூசிக்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி பக்கம் இந்த எழவெடுத்த மரபு ஏதேனும் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Update:

இன்று சாப்பிடும்போது வணங்கான் அடுத்த 30 நிமிடம் பார்த்தேன். முதல் 30 நிமிடமே பரவாயில்லையோ என்று நினைக்க வைக்கும் அடுத்த 30 நிமிடம்! கொடூரம். இயக்குநர் எடிட்டர் என அனைவரும் படத்தைப் பார்த்து மயங்கிய தருணம் ஒன்று இருக்கிறது. பிறவியிலேயே பேச முடியாத காது கேட்க முடியாத ஹீரோ கீழே விழுந்துவிட்ட குழந்தையை வேகமாக ஓடிச் சென்று தூக்கியபடி, அடிப்படலைல்ல ஒன்னும் ஆகலைல்லை என்று வாயசைப்பில் கேட்கும் அந்தக் காட்சி!

Share

Hissab Barabar

Hissab Barabar (H)

கணக்கை நேர் செய்துவிட்டேன் என்று அர்த்தம். இன்னொரு ஆம் ஆத்மி படம். ஆம் ஆத்மி என்றால் அரசியல் கட்சி அல்ல, சாதாரண மனிதனின் படம். சாதாரண மனிதன் எப்படி தன்னை கார்ப்பரேட் வங்கி சுரண்டுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை மக்கள் முன் தோலுரிக்கும் கதை. அஞ்சு பைசா திருடினா தப்பா? அஞ்சு அஞ்சு பைசாவா அம்பது தடவை அம்பது கோடி பேர் திருடினா? இதுதான் கதையின் ஒன்லைனர்! சீரியஸான கதையை நகைச்சுவையாகச் சொல்கிறேன் என்று சோதித்துவிட்டார்கள். மாதவன் தானாகச் சிரித்துக்கொள்கிறாரே ஒழிய நமக்குச் சிரிப்பே வருவதில்லை. உச்சக்கட்டக் காட்சியில் 1,500 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டும் காட்சி, நம்ம ஊர் மெகா சீரியல்களில் கூட இதைவிட நன்றாக இருக்கும். நேர விரயம் செய்யத் தயாராக இருப்பவர்கள் பார்க்கலாம்.

Share

Adisi Nodu Beelisi Nodu

நேற்று ஏதோ ஒரு ரீல்ஸில் ஒரு பாடல் காதில் விழ, கன்னட நடிகர் ராஜ்குமாரின் ஆடிசி நோடு பீலிசி நோடு ஹுருளி ஹோகது பாடல் பற்றிக்கொண்டது. அட்டகாசமான பாடல். இந்தப் படம் கஸ்தூரி நிவாஸா தமிழில் அவன்தான் மனிதன். இந்தப் பாடலுக்கு இணையான பாடல், மனிதன் நினைப்பதுண்டு அல்லது ஆட்டுவித்தால் யாரொருவர். ஆட்டுவித்தால் யாரொருவர் எம் எஸ் வி தந்த காலத்தால் அழியாத பாடல். வாழ்நாளில் மறக்க முடியாத பாடலும் கூட. அதே போலத்தான் ஜி.கே.வெங்கடேஷின் ஆடிசி நோடு பாடலும்.

ஆடிசி நோடு பாடலில் 2ம் நிமிடத்தில் இருந்து வரும் 30 செகண்டுக்கு ராஜ்குமாரின் நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன். பல முறை. இன்றைய நடிகர்களுக்கு இணையான தோற்றத்தை அன்றே வைத்திருக்கிறார். நிச்சயம் பாருங்கள்.

இந்தப் பாடலைக் கேட்ட நாளில் இருந்து, இந்தப் பாடல் தமிழில் ஏதோ ஒரு பாடல் போல இருக்கிறதே என்று ஒரு வருடமாக மண்டையைப் பிராண்டிக் கொண்டிருந்தேன். நேற்றிரவு விடை கிடைத்தது. அந்தப் பாடல், கேவி மகாதேவன் இசை அமைத்த மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே பாடல்!

Share

Max Kannada Movie

மேக்ஸ் (K) – சுதீப்பின் திரைப்படங்கள் என்றாலே காத தூரம் ஓடுபவன் நான். இந்தப் படத்தைப் பற்றிச் சில நண்பர்கள் பாசிட்டிவாகச் சொல்லவும் பார்த்தேன். கைதி போன்ற ஒரு படத்தை எடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை தலைவலி. பைத்தியக்காரத்தனமான திரைக்கதை. ஆயிரம் ரஜினி ஆயிரம் விஜய் சேர்ந்து காதில் பூச் சுற்றினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பூச்சூற்றல். கிறுக்குத்தனமான படம். இதில் இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்க்ஸ்லி போன்ற தமிழ் நடிகர்கள் கன்னடம் பேசும் கொடுமையை எல்லாம் வேறு பார்க்க வேண்டியிருக்கிறது. கைதி திரைப்படம் ஏன் கிளாசிக் என்பதை இந்தத் திரைப்படம் மீண்டும் உறுதி செய்கிறது. இனிமேல் செத்தாலும் சுதீப் நடித்த திரைப்படத்தின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன்.

Zee5ல் கிடைக்கிறது.

Share

Maryade Preshne Kannada Movie

மரியாத ப்ரஷ்னே (K) – நன்றாகத் தொடங்கி அழகாகச் சென்று திடீரென்று தடம் மாறி ஏன்டா பார்த்தோம் என்று கதற வைத்து விட்ட ஒரு திரைப்படம். ஆரம்பத்தில் வரும் காட்சிகளும் நட்பின் ஆழமும் எளிய குடும்பமும் அழகான காதலும் மிக அருமை. குறிப்பாக ஒவ்வொரு நடிகரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் இயல்புத்தன்மை நம்மையும் பற்றிக் கொள்கிறது. பின்பு படம் ஒரே காட்சியில் ஒட்டுமொத்தமாகத் தடம் மாறுகிறது. பிரபாகர் முன்ட்கர் இந்தப் படத்தில் வில்லனாக வருகிறார். அவர் மர்ஃபியில் கதாநாயகனாக நடித்து அசத்திய பிறகு இந்தப் படம் வந்திருக்கிறது. ஒரு வேளை இது முதலிலேயே தொடங்கப்பட்ட திரைப்படமாக இருந்திருக்கலாம். அழகுக்கும் திறமைக்கும் பிரபாகர் முன்ட்கர் கன்னடத் திரை உலகில் நிச்சயம் ஒரு வலம் வருவார் என நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தில் எதை முன்னிறுத்துகிறோம், எதைச் சொல்லப் போகிறோம் என்பது மிக முக்கியமானது. இந்தத் திரைப்படத்தில் அது சுத்தமாக இல்லை. லாஜிக் என்றால் என்ன என்று கேட்கும் இவ்வகைத் திரைப்படங்களை முழுமையாகப் பார்ப்பதே கொடுமைதான்.

Share

Lucky Bhaskar

லக்கி பாஸ்கர் (T) – நேற்றுதான் பார்த்தேன். ஊரை ஏமாற்றிய ஒருவன் கடைசி வரை ஜெயிக்கிறான் என்பதைக் காட்டுவது பெரிய நெருடல். ஆனால் உலகமும் அப்படித்தான் இருக்கிறது. அதேசமயம் ஒரு திரைப்படத்துக்கு அதாவது ஒரு கலைக்கு இது ஆதாரமாக அமையமுடியுமா என்ற கேள்வி மனத்தில் உழன்றபடி இருக்கிறது. மக்களை ஏமாற்றும் ஒரு கூட்டத்திடம் அதே பாணியில் பணம் பறிக்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்பதில் சிக்கலில்லை. ஆனால் இதை ஏற்கவே முடியவில்லை.

இதை விட்டுவிட்டுப் பார்த்தால், படம் அட்டகாசம். சமீபத்தில் வந்த திரைப்படங்களில் புத்திசாலித்தனமான படம் இதுவே. (ஜிகர்தண்டா இரு பாகங்களும் புத்திசாலித்தனமான படங்களே.) கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தும் அருமை. துல்கர் நடிப்பு அபாரம். பாஸ்கர் பணத்திமிர் கொள்ளும் காட்சிகளில் இருந்து அரை மணி நேரம் அதீத விறுவிறுப்பு. பல காட்சிகளில் காதில் பூச்சுற்றல் இருந்தாலும் இந்த விறுவிறுப்பே நம்மை அதைக் கடந்து போக வைக்கிறது.

படத்தின் பெரிய மைனஸ், மூன்று கார்களைக் கொண்டு போய் கோவாவில் விற்கும் நீண்ட காட்சி. பெரிய அறுவை. தெலுங்குப் பட வாடை அடித்தது இந்தக் காட்சியில்தான். மற்ற காட்சிகள் எல்லாம் ஹிந்தித் திரைப்படம் பார்ப்பது போலவே இருந்தது. குறிப்பாக வங்கிக் காட்சிகள்.

இதுவரை பார்க்காதவர்கள் பாருங்கள்.

நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தேன்.

Share

Madurai Saravanan is no more

மதுரை சரவணன் – அஞ்சலி

புத்தகக் கண்காட்சிகளில் பங்கெடுத்தவர்களுக்குத் தெரியும் மதுரை சரவணன் என்பவரை. நல்ல கனத்த உடல். நடக்க முடியாமல் நடப்பார். ஆனால் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் வேலை செய்வார். எப்படி இவரால் இந்த உடலை வைத்துக்கொண்டு வேலை செய்ய முடிகிறது என்று ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது.

சிறந்த வாசகர். ஆழமான நினைவாற்றல். ஹிந்துத்துவ ஆதரவாளர். என்றாலும் அனைத்து அரசியல் நூல்களையும் வாசிப்பார். பழைய நூல்கள் மற்றும் பத்திரிகைகளைத் தன் வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். எந்தப் பழைய நூலும் இவரிடம் கிடைக்கும். ஒரு நூலின் பெயரைச் சொன்னால் அதன் ஆசிரியர் பெயர், அதன் பதிப்பகம் என்று எல்லாவற்றையும் சொல்வார். அதை யார் மறு பதிப்பு போட்டிருக்கிறார்கள் என்றும் சொல்வார்.

புத்தகக் கண்காட்சியில் எந்த வாசகராவது எந்த பதிப்பகத்திலாவது ஏதாவது ஒரு புத்தகத்தைத் தேடுவது இவர் கண்ணில் பட்டுவிட்டால் போதும், உடனே அங்கே ஆஜராகி அந்தப் புத்தகம் தொடர்பான அத்தனை தகவல்களையும் கொட்டிவிடுவார்.

பல முன்னணி பதிப்பகங்கள் இவரிடம் பழைய நூல்களைப் பெற்றே புதிய பதிப்புகளைக் கொண்டு வந்தன. கிழக்கு பதிப்பகம் சுஜாதாவின் நூல்களை வெளியிட்ட போது பல நூல்களை இவர் கொடுத்தார். அதற்குப் பதிலாக கிழக்கு வெளியிட்ட பல அரசியல் நூல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து நூல்களாவது எங்களிடம் இருந்து வாங்கிக் கொள்வார். ஒரே மாதத்தில் அவற்றைப் படித்தும் முடித்துவிடுவார்.

புத்தகக் கண்காட்சியில் பங்கெடுக்க வேறு ஊர்களுக்குப் பயணமாகும்போது, வயதான, கண்பார்வைக் குறைபாடு உள்ள தன் அம்மாவையும் அழைத்து வருவார். இங்கே சங்க அமைப்பு ஆதரவு பெற்ற இடங்களில் தங்க வைப்பார். இவர் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வார். அம்மாவின் உடல்நிலை ஏற்றுக்கொள்ளாது என்ற நிலைவந்தபோது, அம்மாவை மதுரையிலேயே தெரிந்தவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு இவர் மட்டும் வருவார்.

இவருக்கு சில பெரிய வேட்டிகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அன்புடன் பெற்றுக்கொண்டார். தடம் வெளியிட்ட அனைத்துப் புத்தகங்களையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். வலம் இதழை வாசித்துவிட்டு அடிக்கடி ஃபோனில் பேசுவார்.

பேச ஆரம்பித்தால் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் பேசுவார். சரவணன், வேலையா இருக்கேன் என்று சொன்னால், சரி அப்புறம் கூப்பிடறேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிடுவார்.

சுவாசம் பதிப்பகம் ஆரம்பித்தவுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது இவரை இவரது வீட்டிலேயே சென்று சந்தித்தேன். குறுகலான சந்தில் ஒரு வீடு. அதுவும் மூன்றாவது மாடிக்கு மேலே உள்ள தட்டோட்டியில் ஒரு சின்ன இடம். அங்கே சுற்றிலும் புத்தகங்கள். பக்கத்தில் ஒரு சின்ன சந்து போன்ற வீட்டில் பழைய புத்தகங்களும் பத்திரிகைகளும். மழை வந்தால் தாங்காதே என்று கேட்டேன். கோணி போட்டு மூடி வைப்பேன் என்றார். எப்படி தினம் தினம் நாலு மாடி ஏர்றீங்க என்று கேட்டபோது, இந்த வாடகையே எனக்கு தர முடியலை என்றார்.

மதுரையில் நான் அவரைப் பார்த்தபோது அவருக்கு உடல்நிலையில் பல பிரச்சினைகள் இருந்தன. அந்த வருடப் புத்தகக் கண்காட்சிக்கு அவர் வந்திருக்கவில்லை. அதற்குப் பிறகும் வரவே இல்லை. அவரது வீட்டுக்கு நாங்கள் வந்திருப்பது கூட தெரியாமல் அவரது அம்மா துவைத்துக்கொண்டிருந்தார்.

மதுரை சரவணனை 2017 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒரு பேட்டி எடுத்து அதை அப்போது யூ டியூபில் வெளியிட்டேன். இன்று தேடிப் பார்த்தால் அந்தப் பேட்டி நீக்கப்பட்டது என்று காண்பிக்கிறது.

மதுரை சரவணன் பல பதிப்பகங்களுக்கு உதவி செய்திருக்கிறார். பதிப்பகங்களும் இவருக்கு உதவி இருக்கின்றன. இன்றுதான் அறிந்தேன், மதுரை சரவணன் இரண்டு நாள்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார் என. நல்ல வாசகர் ஒருவரை நாம் இழந்திருக்கிறோம். சரவணன் ஆன்மா சத்கதி அடையட்டும். ஓம் ஷாந்தி.

Share

12th fail

12th Fail (H) – ஒரு நல்ல திரைப்படமும் நல்ல புத்தகமும் ஒரு வகையில் ஒன்றுதான். எப்போது அது நமக்கு நிகழ வேண்டும் என்றிருக்கிறதோ அப்போதே நிகழும். இந்தத் திரைப்படத்தைப் பல பல சமயங்களில் பலர் பார்க்கச் சொல்லியும் ஏதோ ஓர் உந்துதல் இன்றிப் பார்க்காமலேயே இருந்தேன். இன்று பார்த்தேன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு மனதைக் கொள்ளை கொள்ளும் மிக அருமையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. இது திரைப்படம் அல்ல, ஓர் அனுபவம். ஒவ்வொரு நடிகரும் எத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அதுவும் இறுதிக் கட்டக் காட்சியில் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது.

ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்படும் திரைப்படம், இருப்பதிலேயே சவாலானது. ஆனால்‌ இதில் கலக்கிவிட்டார்கள்.

ஒரே ஒரு வருத்தம்தான். இந்த ஐபிஎஸ் அதிகாரி அரசுக்கும் சமூகத்திற்கும் மண்டியிடாமல் கடைசிவரை இதே நேர்மையுடன் இருக்க வேண்டுமே என்பதுதான். ஓர் உட்டோப்பியன் உலகமாக இருந்திருக்கும் சாத்தியக்கூறு வந்திருந்தாலும் கூட, இந்தத் திரைப்படத்தில் இது உண்மைக் கதை என்று சொல்லாமல் இருந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அந்த அளவுக்கு இந்தக் கதாபாத்திரம் நேர்மையைத் தூக்கிப் பிடிக்கிறது. இயல்பான வாழ்க்கையில் அது அத்தனை எளிதானதல்ல. இந்தத் திரைக் கதாபாத்திரம் நிஜத்தில் தோற்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது உண்மைக் கதை என்பதை காட்டாமல் இயக்குநர் தவிர்த்திருக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் ஒன்றி விட்டேன்.

பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்து விடுங்கள். இந்தியத் திரை உலகம் பெருமை கொள்ளும் ஓர் அனுபவம் இந்த திரைப்படம்.

ஒவ்வொரு திரைப்படம் சில சமயம் மெதுவாகப் போகும். ஆனால் அப்படி மெதுவாகப் போகும் காட்சிகள் கூட ஒரு பரபரப்பை உருவாக்கினால் அதுவே அந்தத் திரைப்படத்தின் வெற்றி. இந்தத் திரைப்படம் அந்த வகையைச் சார்ந்தது. இறுதிக் காட்சியில் மெல்ல மெல்ல நகரும் விதமும், அந்த இசையும், அந்தப் பாடலும், கண்கலங்க நிற்கும் ஹீரோவும், ஃபோனில் பேசும் அம்மாவும், கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விடும் நண்பர்களும் என உணர்ச்சிமயமான தருணம். மறக்க முடியாத தருணம்.

தமிழ்த் திரைப்படங்களுக்கும் இத்திரைப்படத்தில் ஒரு செய்தி உள்ளது. இந்தப் படமும் ஒரு வகையில் ஒதுக்கப்பட்டவர்களின் நசுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் திரைப்படம்தான். ஆனால் இந்தத் திரைப்படத்தில் எந்த ஒரு சமூகத்தின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ வெளிப்படவில்லை. ஒட்டுமொத்தமான சமூகத்தின் மீதான கோபமும், அந்தச் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்கிற சரியான நோக்கமும் மிகக் கச்சிதமாக வெளிப்படும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்குரிய உண்மையான மனிதர் சம்பல் பள்ளத்தாக்கிலிருந்து வந்த ஒரு பிராமணர் என்று சொல்லப்பட்டாலும், திரைப்படத்தில் அவர் எந்த ஜாதி என்பதைக் காட்டவில்லை. மாறாக, மிகுந்த பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்து ஆங்கிலம் தெரியாமல் போராடும் ஒரு மனிதன், இந்தச் சமூகத்தில் எந்த அளவு கஷ்டப்படுகிறான் என்பதை விரிவாகக் காட்டி இருக்கிறார்கள். அப்படிக் காட்டும்போது அந்த மனிதருடன் சேர்ந்து, வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடும் மற்ற மனிதர்களின் கதைகளைச் சொல்லும் பொழுது, எந்த ஒரு குரோதத்தையும் வெளிப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார்கள். வீம்புக்காக யோசிக்காமல் அன்புக்காக யோசிக்கும் இயக்குநரால் மட்டுமே இப்படி ஒரு திரை அனுபவத்தை வழங்க முடியும்.

Share