Archive for ஹரன் பிரசன்னா

இளையராஜாவின் தேசபக்திப் பாடல்கள்

இளையராஜா தேசபக்திப் பாடல்களைப் போட்டதில்லை என்று ஃபேஸ்புக்கில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதையே நினைத்துக்கொண்டிருந்ததில் சிக்கிய பாடல்கள். இவை போக எனக்குத் தெரியாதவை, நான் மறந்தவை எத்தனையோ. இதற்குப் பின்னும் அது இந்தப் பாடல் போல இல்லை, அந்தப் பாடல் போல இல்லை என்றே சொல்லப் போகிறார்கள். பின்னால் பயன்படும் என்ற நோக்கில் அதை இங்கே சேமித்து வைக்கிறேன்.

என்னவோ தேடிப் போய் பல பாடல்களைக் கேட்டபோது உண்மையிலேயே அசந்து நின்றேன். இப்படிப்பட்ட ஒரு கலைஞனை போகிற போக்கில் அவமதித்துச் செல்வது வேறு எங்கேயும் நடக்காது என்றே நினைக்கிறேன்.

நான் பட்டியலிட்டிருக்கும் பாடல்களில் சில நேரடியாக தேசபக்திப் பாடல்கள் வகையில் வருபவை அல்ல. ஆனால் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் வரும் நல்லதோர் வீணை தேசபக்திப் பாடலென்றால் இவையும் அப்படியே.

சொர்க்கமே என்றாலும், உலகம் இப்போ எங்கோ போகுது (இரண்டுமே இளையராஜா இசை) – இவையும் ஒருவகையில் தேசபக்திப் பாடல்களே. அப்படியென்றால் கீழே உள்ளவையும்தான்.

காந்தி தேசமே காவல் இல்லையா – நான் சிவப்பு மனிதன்

 

மனதில் உறுதி வேண்டும் – சிந்துபைரவி

https://www.youtube.com/watch?v=vFfKyShYPxk

 

செந்தமிழ் நாடென்னும் போதினிலே – காமராஜர்

https://www.youtube.com/watch?v=n5m4d3Acg60

 

நண்பா நண்பா – தேசிய கீதம்

 

அண்ணல் காந்தி – தேசிய கீதம்

https://www.youtube.com/watch?v=cOi1ugy72Os

 

என் கனவினைக் கேள் நண்பா – தேசிய கீதம்

 

பாரத சமுதாயம் வாழ்கவே – பாரதி

 

 

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் – பாரதி

https://www.youtube.com/watch?v=adzljgaLKQM

 

வந்தே மாதம் ஜெய வந்தே மாதரம் – பாரதி

https://www.youtube.com/watch?v=uuUFLABpiI8

 

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட – பாரதி

 

தம்பி நீ நிமிர்ந்து பாரடா – என் உயிர்த்தோழன்

இந்த நாடு இருக்கிற – மக்கள் ஆட்சி

மனிதா மனிதா இனி உன் விழிகள் – கண் சிவந்தால் மண் சிவக்கும்

 

போராடடா ஒரு வாளேந்தடா – அலை ஓசை

கத்துக்கணும் கத்துக்கணும் ஒண்ணாயிருக்க – ஒண்ணா இருக்க கத்துக்கணும்

காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டால், நாட்டுப்பற்று என்பது நம் நாட்டில் என்ன இல்லை என்ற விரக்தியாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். அந்த வகையில் ’ஏங்கிடும் ஏழையின் கூக்குரல்தான் இங்கு தேசியகீதமடா’ பாடலும் ‘நஞ்சையுண்டு புஞ்சையுண்டு’ பாடலும் ‘உன்னால் முடியும் தம்பி தம்பி’ பாடலும் கூட தேசபக்திப் பாடல்தான்!

கடைசியாக: இப்படியெல்லாம் ஒருவர் என்ன பாட்டு போட்டிருக்கிறார், என்ன போடவில்லை என்று பார்ப்பதெல்லாம் சரியான செயலில்லை. ஒரு கருத்தியல்வாதிக்கு இது பொருந்தி வரலாம். நிச்சயம் கலைஞனுக்குப் பொருந்தி வராது. ஒரு கலைஞன் வெளிப்படையாக மறுத்தவற்றையே நாம் பொருட்படுத்தவேண்டும்.

எத்தனையோ ராஜா ரசிகர்கள் இதைவிட அதிகமான பாடல்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களெல்லாம் என்னை மன்னிக்க. 🙂

Share

யாகூப் மேமன் – தூக்குத் தண்டனை

உண்மையில் யாகூப் மேமன், கஸாப் என்று யார் தூக்கில் தொங்கினாலும் உள்ளே சின்ன பதற்றமும் வருத்தமும் வரத்தான் செய்கிறது.அதிலும் அவர்களது கடைசி நிமிடங்களை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களது உறவினர்கள் மனைவி மகன் மகள் என எல்லாரையும் நினைத்துப் பார்த்தால் ஏற்படும் சோகம் அளவில்லாததுதான்.

ஆனாலும் மிக அரிதான வழக்குகளில் தூக்கு என்னும் இந்திய நிலைப்பாட்டுக்கு என் ஆதரவு என்றும் உண்டு. அதிலும் இந்தியா போல தெருவுக்கு நூறு ‘முற்போக்காளர்கள்’ திரியும் நாட்டில், இந்த ஒரு சட்டம் இல்லாமல் போனால் இங்கே தீவிரவாதிகளெல்லாம் தியாகியாகிவிடுவார்கள்.

இந்திய மனசாட்சிக்காக (மனுசாட்சியாம்!) உச்சநீதி மன்றம் இவர்களைத் தூக்கிலிடுகிறது என்ற மொன்னை வாதத்தையெல்லாம் நான் நம்பவில்லை. கடைசி வரை இவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டது. மேலும் இந்திய மனசாட்சியை நிறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் செயல்பட எக்காரணமும் இல்லை. இப்படி பேசி பேசித்தான் எல்லாவற்றின் மேலும் இந்த முற்போக்காளர்கள் அவநம்பிக்கையையை விதைத்தவண்ணம் உள்ளார்கள். ஃபேஸ்புக்கில் மட்டும்தான் இது எடுபடுகிறது என்பது இப்போதைக்கான ஆறுதல். இத்தனைக்கும் யாகூப்மேமன் 23 வருடங்களுக்குப் பின்னர்தான் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். ஒருவகையில் இந்த அளவுக்கான காலம் கழிந்த தண்டனை ஒரு பின்னடைவுதான். இதைத்தான் நீதிமன்றங்கள் சரி செய்ய முயலவேண்டும்.

யார் தூக்கிலிடப்பட்டாலும் அதை ஏற்கவில்லை என்பவர்கள், எல் டி டி ஈ, மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ வரலாற்றில் கொன்று குவிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு, அவர்களை நிராகரித்துவிட்டு, பின்னர் கொள்கைகளைப் பேசவேண்டும்.

தூக்குத் தண்டனை தேவைதான், ஆனால் யாகூப் மேமன் நிரபராதி என்பவர்கள் நிச்சயம் ஜோக்கர்கள்தான். அவர்களை நாம் பார்த்து சிரித்துவிட்டு நகர்வதே சரியானது.

தூக்குத் தண்டனை தேவை, ஆனால் யாகூப் மேனனுக்கு தூக்கு அவசியமில்லை, இப்படிச் சொல்வதால் யாகூப் மேமன் நிரபராதி என்றோ அப்பாவி என்றோ அர்த்தமில்லை என்ற பி.ராமன் போன்ற கருத்து உடையவர்கள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒரே பதில், நான் உச்ச நீதிமன்றத்தை நம்புகிறேன் என்பது மட்டுமே.

இந்திய வெகுஜன முஸ்லிம்கள், இந்திய வெகுஜன கிறித்துவ ஹிந்துக்களைப் போன்றவர்கள்தான். அவர்கள் என்றுமே இந்திய மனசாட்சியுடன் உள்ளவர்களே. ஆனால் யாகூப் மேமன் போன்றவர்கள் தீவிரவாதிகள். இந்த இரண்டு பிரிவுகளையும் ஒன்றாக்கி பேசுபவர்களே – அவர்கள் எத்தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – கடும் கண்டனத்துக்குரியவர்கள். இவர்களைத்தான் முதலில் கண்டுகொள்ளவேண்டும்.

Share

பொறம்போக்கு – ஓர் இந்திய சலாம்

மாவோயிஸ்ட்டுகளின் தோல்வியுற்ற பிரசார நாடகமாக வெளிவந்திருக்கிறது பொறம்போக்கு என்னும் பொதுவுடைமை. தமிழ்ப்படங்களின் ஆதார விதிகளுக்கு உட்பட்டு மாவோயிஸ்ட்டுகளின் எந்த ஒரு கொள்கையையும் வெளிப்படையாகச் சொல்லாமல் மிக ரகசியமாக வைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்ற வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை என்றால் அந்த ரகசியத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றால் நம்மூர் மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தா. பாண்டியனின் முகமும் நல்லகண்ணுவின் முகமும்தான். வெகுஜனம் நிச்சயம் ’இந்த நல்லகண்ணுவா இப்படி ஆளுங்களைக் கொல்ல அனுப்பி வைக்காரு’ என்று யோசித்து மெர்சலாகப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி. 

விநோதமான தீர்ப்பு ஒன்றைச் சொல்கிறது நீதிமன்றம். தூக்கிலிடுபவர் அனுபவசாலியாக இருக்கவேண்டுமாம். யமலிங்கத்தைக் கூட்டிவருகிறார்கள். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில், அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக, தூக்கிலிடும் வேலையைச் செய்தவர். அதனால் கடும் மனப்பிறழ்வுக்கு ஆளானவர். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில் யாரைத் தூக்கில் போட்டார் என்பதை கற்பனையில் விட்டுவிட்டார்கள். அஃப்சல் குரு, கசாப்பை எல்லாம் தூக்கில் போட்டவரை அழைத்துக்கொண்டு வந்து இந்த மாவோயிஸ்ட் தீவிரவாதியையும் தூக்கில் போட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் யமலிங்கத்தை அழைத்து வருகிறார்கள். தமிழனை தமிழனே தூக்கில் போடவேண்டும் என்ற தமிழ்த்தேசியம் உள்குத்தாக உள்ளதோ என்னவோ.

மெலோ டிராமா போல யமலிங்கத்தின் உளவியல் சிக்கல்கள் எவ்வித சீரியஸ்நெஸ்ஸும் இல்லாமல் அலைபாய்கின்றன. தூக்கில் போடக்கூடாது என்பதற்காகவே அவரும் மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவுகிறார் என்பதெல்லாம் அம்புலிமாமாவில் வரவேண்டிய கதை. ஒரு தடவை அல்ல, கடைசி வரை உதவிக்கொண்டே இருக்கிறார். இதற்கு அவரையும் ஒரு மாவோயிஸ்ட்டாகவே காட்டியிருக்கலாம். காளியிடம் பேசும் யமலிங்கம் மாவோயிஸ்ட்டாக மாறுவதற்கு ஒரு அழகான பெண்ணே காரணம் என்று சுளுவில் திரைக்கதையை முடித்துவிட்டார்கள்.

தமிழ்த் திரைப்படங்களின் பெரிய சவால் திரைக்கதைகளில் நம்பகத்தன்மையைக் கொண்டுவருவது. இதுபோதும் என்ற நினைப்புடனேயே திரைக்கதை எழுதுவார்கள் போல. எவ்வித தர்க்கமும் இன்றி படம் முழுக்க காட்சிகள் நிரவிக் கிடக்கின்றன. படத்தின் மையம் என்ன என்பதிலேயே இயக்குநருக்குக் குழப்பம். ஒரே மாவோயிஸ்ட் படத்தில் இந்திய ராணுவத்தின் அராஜகம், தூக்கு தண்டனையை அறவே ஒழிக்கவேண்டிய அவசியம், சிறைக்குள்ளே நடக்கும் அராஜகங்கள், தமிழ்த்தேசியத்தின் புகழ்பாடுதல், சிறைக்கைதிகளின் மனிதாபிமானம் எனப் பலவற்றையும் போட்டுக் குதப்பி சிவப்பாகத் துப்பிவிட்டார். இதனால் இது என்ன மாதிரியான படம் என்பது யாருக்குமே புரியாமல் போய்விட்டது. என்னைப் பொருத்தவரை இது இயக்குநர் இந்த சமூகத்துக்குச் செய்திருக்கும் மிகப்பெரிய நல்ல விஷயம். ஏனென்றால் படத்தில் மக்களுக்குப் புரிந்தது ஒரே விஷயமாக மட்டுமே இருந்திருக்கமுடியும், அது ‘கம்யூனிஸ்ட்டுகள் தீவிரவாதிகள்’ என்பது மட்டுமே.

தூக்கு தண்டனை கூடாது ஆனால் ராணுவத்தில் யாரையும் கொத்து கொத்தாகக் கொல்லலாம், ஆயுதங்கள் வாங்கக் கூடாது ஆனால் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் ரகரகமாக ஆயுதங்களை வைத்துக்கொள்ளலாம் என்ற மாவோயிஸ்ட்டுகளின் சிந்தனையை படத்தில் தெளிவாகக் காண்பித்து அசரடிக்கிறார் இயக்குநர். தூக்கு தண்டனை உயிர்க்கொலைக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறாரா அல்லது தூக்கு தண்டனையையே எதிர்க்கிறாரா என்பதில் இயக்குநருக்கு அக்கறை இல்லை. தூக்கு பெற்ற ஒருவர் நிரபராதி என்பதால் அவரைத் தூக்கில் போடக்கூடாது என்று மட்டுமே படத்தில் காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் தூக்கு தண்டனையை அறவே எதிர்ப்பவர்கள், ஒருவர் தவறே செய்திருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனை தரப்படக்கூடாது என்றே வாதிடவேண்டும். இதைப் பற்றியெல்லாம் இயக்குநருக்கு எவ்வித அக்கறையும் இல்லை. மேலும் இந்தியாவில் இதுவரை 12 பேர் மட்டுமே தூக்கில் போடப்பட்டுள்ளதாக கூகிள் (மேம்போக்கான தேடல்தான், சரியாகத் தேடவேண்டும்) சொல்கிறது. அதிலும் சமீப காலங்களில் மிக அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கே இத்தனை கூப்பாடு. ஒருவேளை நிறுத்திவைக்கப்பட்டுள்ள தூக்குக்காக எடுக்கும் காவடியாக இருக்கலாம். தங்கள் கொள்கையோடு சம்பந்தப்பட்ட ஒருவருக்கு தூக்கு என்று வரும்போது மட்டுமே, ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையை எதிர்ப்பது நம் பகுத்தறிவுவாதிகள் வழக்கம். அதிலும் அவர்கள் நிரபராதிகள் என்ற பிலாக்கணத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். இதிலும் மாவோயிஸ்ட்டு தீவிரவாதி ரொம்ப நல்லவர். அறிவாளி. அழகானவர். கிட்டத்தட்ட பகத்சிங். ஆனால் கருணையற்ற இந்திய அரசாங்கம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துவிட்டது. 

சிறையில் இருக்கும் குற்றவாளிகள் எல்லாருமே நிரபராதிகள் என்று வெள்ளை அடித்துவிட்டார் இயக்குநர். சிறையில் ஒருவர்கூட கெட்டவர் இல்லை. இந்த அரசாங்கம் அநியாயத் தீர்ப்பினால் அவர்களை உள்ளே வைத்திருக்கிறது என்பதே இபப்டம் சொல்லும் செய்தி. அதிலும் மிகப் பெரிய தண்டனையைப் பெற்றவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட காந்திகள் அல்லது பகத்சிங்குகள். இப்படி ஒரு கருத்தைச் சொல்லிப் படமெடுக்கும் தைரியம் தமிழ் இயக்குநர்களுக்கு மட்டுமே வரும்.

இயக்குநர் அழுத்தமாகச் சொல்ல விரும்பாத, ஆனால் அதன் போக்கிலேயே வெளிப்பட்டுவிட்ட சில விஷயங்கள் உள்ளன. ஐ பி எஸ்ஸாக வரும் ஷாமின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக ஒரு நேர்மையான அதிகாரியை கண்முன் வைக்கிறது. கடைசி நொடி வரை இக்கதாபாத்திரம் தன் கடமையில் இருந்து இம்மியும் பிசகவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட கடமையை மிகத் தெளிவான திட்டமிடல் மூலம் செய்து காட்டுகிறார் இந்த ஐ பி எஸ். இந்திய நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் மாவோயிஸ்ட்டுகளைப் பார்த்து ‘உங்களைப் பார்த்தா பைத்தியக்காரத்தனமா தெரியுது’ (நினைவிலிருந்து சொல்கிறேன்) என்று அவர்களது இஸத்தையே கேள்விக்குள்ளாக்கி, மாவோயிஸ்ட்டு தலைவரை தூக்கில் தொங்கவிட்டு இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் அந்த ஐபிஎஸ்ஸுக்கு ஒரு இந்திய வணக்கம். 

மாவோயிஸ்ட்டுகளை நம்பினால் என்ன ஆகும் என்பதும் இப்படத்தில் மறைமுகமாகக் காட்டப்படுகிறது. தங்கள் வேலை முடிந்ததும் மாவோயிஸ்ட்டுகள் அடுத்த கொலை ப்ராஜெக்ட்டுக்குப் போக, எமலிங்கம் பைத்தியமாகத் தெருவில் திரிகிறார். இதுவும் சமூகத்துக்குத் தேவையான நல்ல செய்தியே. மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லாமல் கம்யூனிஸ்ட்டுகள் என்றே சொல்வதால், கம்யூனிஸ்ட்டுகளை நம்பினால் லூஸாத்தான் திரியணும் என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள். நல்ல விஷயம்.

படத்தின் லாஜிக் ஓட்டைகளுக்குள் செல்லவேண்டியதில்லை. படமே லாஜிக் ஓட்டை என்பது ஒருபுறமிருக்க, லாஜிக் ஓட்டைகளுக்கு மேல்தான் ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கதாபாத்திரமும் நிறுத்தப்பட்டுள்ளது. . இதில் காதல் பாடல்கள், காதல் ஏக்கம் வேறு. மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு காமம் ஆகாது என்ற கம்யூனிஸ விதி ஏதேனும் உண்டா எனத் தெரியவில்லை. மாவோவின் களியாட்டங்களெல்லாம் நடிப்பா? 🙂 இளம் மாவோயிஸ்ட் தலைவரும் இளம் பெண் தலைவரும் மனிதவெடிகுண்டாக இறக்கப்போகும் நாளுக்கு முதல்நாள் என்ன செய்வார்கள் என்ற தேவையற்ற கேள்வியைக் கொண்டு வரும் இயக்குநர், அதற்கான சரியான பதிலைச் சொல்லாமல் நட்டாற்றில் விட்டுவிட்டார். அவர்கள் இருவரும் உறவுகொண்டார்கள் என்று காட்டிவிட்டால் புனிதத்தன்மை போய்விடுமா என்ன? அல்லது அப்படி ஒரு காட்சியே இல்லாவிட்டால் சாதாரண தமிழன் விறுவிறுப்பு இல்லாமல் படம் பார்க்கமாட்டானா என்ன? என்ன எழவோ, ஆனாலும் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் நாடகத்தன்மையை மீறிய ஒரு சீரியஸ்தன்மை வெளிப்படவே செய்கிறது. அதுமட்டுமே இத்திரைப்படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமாவது பார்க்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

உண்மையில் இத்திரைப்படத்தை மிகச் சிறப்பான திரைப்படமாக எடுத்திருக்கலாம். தூக்கிலிடுபவனின் மனப்போராட்டத்தை மட்டுமே மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கலாம். அதற்கு நம்பிக்கை அளிக்க, இந்திய மக்கள் அதிகம் எதிர்கொண்ட, பழக்கப்பட்ட, யதார்த்தத்தில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளான அப்சல் குரு அல்லது கஸாப்பை மையப்படுத்தியே எடுத்திருக்கலாம். லால் சலாம் இயக்குநருக்கு இதை எடுப்பதிலும் மனத்தடை. வெகுஜன இஸ்லாமியர்களின் மனம் கோணிவிட்டால் என்ன செய்வது? அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் இஸ்லாமிய ஆதரவுக்கு பங்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? ஒரு படத்தை பிரசாரப் படமாக எடுக்க எத்தனை பேரை திருப்திப்படுத்தவேண்டியுள்ளது! எந்தக் கேள்வியும் கேட்காமல் படம் பார்க்கவேண்டுமென்றால் இந்தியாவைத் திட்டிப் படமெடுப்பதுதான் எளிதானது. இதைத்தான் இந்த ஊடகம் பழக்கி வைத்திருக்கிறது. என்ன கொடுமை என்றால், ஊடகம் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இல்லை என்றெல்லாம் இப்படத்தில் பேசிக் கொல்கிறார்கள்.

இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், மாவோயிஸ்ட்டு தலைவரைத் தூக்கில் இடுவதுதான். எத்தனை லால் சலாம் சிந்து பாடினாலும், இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கராவாதிகள் ஆலோசனை சொன்னாலும், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிகழுமென்றால் அந்த இயக்கத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை இந்தியா நிச்சயம் நிறைவேற்றியே தீரும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருப்பதற்குப் பாராட்டுகள். இயக்குநர் இதை விரும்பிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அதை இப்படித்தான் புரிந்துகொள்வார்கள் என்பதால் இயக்குநருக்கு மீண்டும் ஒரு இந்திய சலாம். தூக்குத் தண்டனை தரப்படும் மாவோயிஸ்ட்டு தலைவர் தூக்கில் தொங்கியதும் படம் பார்க்கும் யாருக்கும் எவ்வித மன வருத்தமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அந்தத் தலைவரின் கதாபாத்திரத்தை இயக்குநர் தெளிவாக நிலைநிறுத்தவில்லை. வெறும் செயற்கையான பிரசார நெடி தூக்கலான வசனங்கள் மூலமும், சாகசக் காட்சிகள் மூலமும் காட்டிவிட்டார். அப்படி பச்சாதாபம் வராத வகையில் படத்தை எடுத்திருப்பது இப்படத்தின் ஆதார செய்திக்கே எதிரானது. ஆனாலும் அதற்கும் மீண்டும் ஒரு இந்திய சலாம்.

சில அவசரத் தீர்ப்புகள்:

விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதம்.

ஆர்யா ஓகே, மோசமில்லை.

ஷாம், கார்த்திகா – நடிக்கவே வரவில்லை.

இசை – கொடுமை. ஒரே ஒரு ஹிந்திப் பாடல் மட்டும் கொஞ்சம் நன்றாக இருந்ததுபோல் காதில் விழுந்தது, ஆனால் நான்கு வரிகளே படத்தில் வந்தது.

Share

ஈவெ ராமசாமி நாயக்கரும் ஆழம் இதழின் நட்டநடு செண்டர் நிலையும்

ஆழம் இதழ் ஈவெரா சிறப்பு இதழாக வெளிவந்திருக்கிறது (என்று நினைக்கிறேன்!). பெரியார் அன்றும் இன்றும் என்று அட்டையில் உள்ளது. 

ஈவெராவுக்கு ஆதரவாக (அல்லது எதிர்க்காமல் விமர்சனப் பார்வையுடன், செல்லமாகக் குட்டி தட்டி கட்டித் தழுவி!) எழுதியிருப்பவர்கள்:
 
அ.குமரேசன் – 12 பக்கங்கள்
வழக்கறிஞர் அருள்மொழி – 12 பக்கங்கள்
மருதன் – 12 பக்கங்கள்
ராமசந்திர குஹா – 2 பக்கங்கள்
 
மொத்தம்: 38 பக்கங்கள்
 
ஈவெராவுக்கு எதிராக, அதிலும் மயிலாப்பூர் பூணூல் அறுப்பை முன்வைத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக எஸ் வி சேகர் சொன்னவை:
 
எஸ்.வி.சேகர் – 4 பக்கங்களில் உள்ளது.
 
மொத்தமே 4 பக்கங்கள்தான்!
 
ராமசந்திர குஹா எழுதியவற்றில் இருந்து 2 பக்கம் எடுத்து போட்டதுபோல, ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தில் இருந்து ஒரு 12 பக்கம் எடுத்துப் போட்டிருக்கலாம். சார்பு இருக்கவேண்டியதுதான். அது எதிர்க்கருத்து என்ற ஒன்றே இல்லை என்ற பாவனையில் இருக்கக்கூடாது.
 
–பிரசன்னா
Share

டியூஷன் 3

கடைசியில் கொஞ்சம் சோகமாக முடியப்போகும் இந்த நிகழ்வை எழுதாமல் விட்டுவிடலாம் என்றாலும் மனம் கேட்கவில்லை. எனவே இது ஒரு க்ளிஷேவாக முடியப்போகும் பதிவுதான். திரையில் நாம் பார்க்கும் ஒரு க்ளிஷே காட்சியை எத்தனை இயல்பாக புறந்தள்ளிவிட்டுப் போனாலும், அதே காட்சி நம் கண்முன் நிகழும்போது அதை எதிர்கொள்வதில் நமக்குப் பல சவால்கள் இருக்கவே செய்கின்றன.

ஒன்றரை வருடத்துக்கு முன்பு அந்த இரட்டையர்களை அவர்களது அம்மா என் மனைவியிடம் டியூஷனுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். இரட்டையர்களுக்கு 13 வயது. மூத்தவன் 9ம் வகுப்பு படிக்கவேண்டிய பையன், வீட்டிலிருந்தபடியே நேரடியாக பத்தாம் வகுப்பு படித்தான். இளையவன் 8ம் வகுப்பு. (இந்த ஒரு வருட வகுப்பு வித்தியாசம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.) மூத்த பையன் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டான். அவன் 8ம் வகுப்புப் படித்தபோது அவனுடன் படித்த மாணவர்கள் இவனை மிகவும் ஓட்டியதில் நொந்துபோய் பள்ளிக்கே செல்லமாட்டேன் என்று கூறிவிட்டான் என்று முதலில் சொன்னார்கள். கொஞ்சம் நானாக யூகித்ததில் பிரச்சினை கொஞ்சம் தீவிரம் என்றே எனக்குப் பட்டது. அவனை பாத்ரூமில் வைத்து உடன் படித்த சிறுவர்கள் செய்த கேலியால் மனம் நொந்திருப்பான் என்றே நினைக்கிறேன். அவனது அம்மா மெல்ல மெல்ல ஒவ்வொன்றாகச் சொல்ல சொல்ல, எனக்கு உருவான சித்திரம் இது. தன் மகனை எப்படி கேலி செய்யலாம் என்று கேள்வி கேட்கச் சென்ற அவனது அம்மா, பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்ப்பதற்கு முன்பாக, தன் மகனைக் கேலி செய்த பையனைப் பார்த்து திட்டியிருக்கிறார். கேலி செய்த பையனின் தந்தை, தன் மகன் செய்தது தவறே என்றாலும், எப்படி இன்னொரு பெண் நேரடியாக தன் பையனைத் திட்டலாம் என்று சண்டைக்கு வந்துவிட்டார். தான் செய்தது தவறுதான் என்று இந்த அம்மா ஒப்புக்கொண்டும் தலைமை ஆசிரியர் கடும் கோபமடைந்துவிட்டார் போல. ஒருவழியாக தலைமை ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினாலும், இந்தப் பையன் இனி அந்தப் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.

வேறு பள்ளியில் சேர்த்துப் பார்த்திருக்கிறார்கள். பள்ளியைப் பற்றிய ஒவ்வாமை மனதில் குடிபுகுந்துவிட்டால், பள்ளி என்றாலே பையன் பயந்துவிட்டான். வேறு வழியின்றி வீட்டில் வைத்தே சொல்லிக் கொடுத்தார்கள். அப்பா நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர். அம்மாவும் நன்கு படித்தவரே. நல்ல வசதி, எனவே இதை எளிதாக எதிர்கொண்டார்கள். இரட்டையர்களில் இளையவன் எப்போதும்போல் பள்ளிக்குச் செல்ல, மூத்தவன் வீட்டிலிருந்தே படித்தான்.

இந்த சமயத்தில்தான் என் மனைவியிடம் இந்தப் பையனை டியூஷன் சேர்த்தார்கள். ஹிந்திக்கு மட்டும் முதலில் வந்தான். பையன் கொஞ்சம் பயந்தவன் என்பதால், அவன் டியூஷன் படிக்கும்போது அந்தப் பையனின் அம்மாவும் வீட்டுக்கு வருவார்கள். காலை 11 மணிக்கு டியூஷன். பையன் படித்துக்கொண்டிருக்கும்போது, இந்த அம்மா என் ஒன்றரை வயது மகளைத் தூக்கிக்கொண்டு கொஞ்சப் போய்விடுவார். ஒரு மாதத்தில் அந்தப் பையன் டியூஷனில் கொஞ்சம் சகஜமாகவும், இனி அவன் மட்டும் வரட்டும் என்று என் மனைவி சொல்லிவிட்டாள். அந்தப் பையனும் அதற்குச் சம்மதிக்கவும், அந்த அம்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியாவது தன் பையன் ஒரு வீட்டில் படிக்கவாவது ஒப்புக்கொண்டானே என்று.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் படித்தான். ஹிந்தியோடு, சமூக அறிவியல், தமிழும் (தனியாக) சேர்த்துப் படித்தான். காலை மாலை இருவேளையும் டியூஷனுக்கு வருவான். கணிதமும் அறிவியலும் அவனது அப்பாவும் அம்மாவும் சொல்லித் தந்தார்கள். கடந்த வாரம் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினான்.

இந்தப் பையனின் சிறப்பு, இதுவரை நான் எந்தப் பையனிடத்தும் காணாதது. ஒரு மணி நேரம் படி என்றால், அதில் ஒரு நொடி கூட வீண் செய்யாமல், பராக்கு பார்க்காமல், ஏமாற்றாமல் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பான். எனக்கோ ஆச்சரியமாக இருக்கும். பதினைந்து வயதில் இப்படி ஒரு காந்தியா என்று. ஒரு தடவை கூட அவன் ஏமாற்றி நான் பார்த்ததில்லை. ஸ்வீப்பிங் வரியாக இதனை எழுதவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன். ஒரு நிமிடம் அவன் படிப்பது கேட்கவில்லை என்றால், நான் வீட்டுக்குள் இருந்தவாறே, ‘என்னப்பா தம்பி தண்ணி குடிக்கிறயா’ என்று கேட்பேன். வராண்டாவில் படித்துக்கொண்டிருக்கும் அந்தப் பையன் எழுந்து வந்து பணிவாக ‘ஆமாம் அங்கிள்’ என்பான். அப்படி ஒரு பையன். என் பையனை பத்து நிமிடம் படிக்கச் சொன்னால் ஐந்து நிமிடம் ஏமாற்றி இருப்பான், ஐந்து நிமிடம் எப்படி ஏமாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருப்பான். இதுதான் சிறுவர்களின் இயல்பு. ஆனால் இந்தப் பையன் ஓர் அதிசயம். ஒரு நாள் இரண்டு நாள் என்றில்லை, எல்லா நாளும் இப்படியே.

கடந்த வாரம் ஒவ்வொரு தேர்வு முடியவும் போன் செய்து என் மனைவியிடம் எப்படி தேர்வு எழுதினான் என்று சொல்லுவான். அவன் அம்மா கூடவே சென்று அவன் தேர்வு எழுதும் வரை உடன் இருந்து கூட்டிக்கொண்டு வருவார். இரட்டையர்கள் இருவருக்கும் கிரிக்கெட் என்றால் பைத்தியம். பிராக்டிஸ் செய்கிறார்கள்.

இன்று காலை வந்த செய்தி என்னை நிலைகுலைய வைத்தது. அவன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள், அங்கே நேற்று அந்த அம்மா மரணமடைந்துவிட்டார். 

இதைக் கேட்டதிலிருந்து எனக்கு எதுவுமே ஓடவில்லை. இந்த இரண்டு சிறுவர்களும் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே நினைப்பாக இருக்கிறது. இரட்டையர்களில் மூத்தவனுக்கு நேரெதிர் இளையவன். படு விவரம், படு சுட்டி. ஆனால் பணிவு மட்டும் அப்படியே அண்ணனைப் போல. இந்த இரண்டு சிறுவர்களை நினைக்கும்போதே பக்கென்று இருக்கிறது. அவர்களால் தாங்கமுடியாத துக்கம் இது. அந்த மூத்த பையன் பத்தாம் வகுப்பில் வாங்கப்போகும் மதிப்பெண்களைப் பார்க்காமல் போய்விட்டாரே என்றெண்ணும்போதே மிகவும் வருத்தம் மேலோங்குகிறது. அந்தப் பையனுக்காக அப்படி அலைந்தார் அந்த அம்மா. எப்படியும் இந்தப் பையன் நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவான், அதில் ஐயமில்லை. ஒரு பையன் பதினைந்து வயதில் தாயை இழப்பதென்பதெல்லாம் கொடுமை.

இரண்டு மகன்களை நினைத்து அலையும் அந்த அம்மாவின் ஆன்மா அமைதியடையட்டும். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

21.5.2015 அப்டேட்:  இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. இந்தப் பையன் 398 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். அவன் அம்மா சொல்லித் தந்த அறிவியலில் 98 மதிப்பெண்கள்.

டியூஷன் 1 | டியூஷன் 2

Share

WCC 2015

A world cup match for India without Sachin after 1987. 🙁 I miss #Sachin.

சச்சின் 16 வயதில் அப்துல் காதிர் பந்தை ஏறி அடித்தபோது எனக்கு 14 வயது. அன்றுமுதல் பெரும்பாலான சச்சின் ஆட்டங்களைப் பார்த்தேன். சச்சினுடனேயே வளர்ந்தேன். சச்சினின் முதல் நூறு ரன்களுக்காக சச்சினைவிட அதிகம் காத்திருந்தேன். சச்சின் அவுட் ஆனால் ஸ்கூல்/காலேஜ்/வேலைக்குப் போகலாம் என்று காத்திருப்பேன். நியூசிலாந்துக்கு எதிராக முதன் முதலில் முதல் ஆட்டக்காரராக களமிறங்கி பொளந்துகட்டியபோது சந்தேகமே இல்லாமல் ஒரு உலக வரலாறு எழுதப்படவிருக்கிறது என்று உணர்ந்தேன். கிரிக்கெட்டின் மையமே சச்சின்தான் என்பதில் எந்த ஐயமும் எனக்கு இருந்ததில்லை. 200 ரன்கள் எடுத்தபோது நாம் பார்த்தால் அவுட்டாகிவிடுவாரோ என்று பயந்து அலுவலகத்தில் நகம் கடித்துக் காத்திருந்தேன். உலகக் கோப்பையை சச்சின் தொடுவாரா என்றெல்லாம் கவலைப்பட்டதே இல்லை. ஏனென்றால் பெரும்பாலான உலகக் கோப்பை போட்டிகளில் சச்சினின் ஆட்டம் பிரமாதமாகவே இருக்கும். 

இன்று அந்த சச்சின் இல்லாமல் முதல் உலக்கோப்பை ஆட்டம் இந்தியாவுக்கு, 1987க்குப் பிறகு. என்னவோ அந்த ஆர்வமும் படபடப்பும் பயமும் வெறியும் வரமறுக்கிறது. அடுத்த தலைமுறைக்கும் இப்படித்தானா என்று தெரியவில்லை.

ஐ மிஸ் யூ சச்சின்.

Share

ஜனவரி 2015 புத்தக வாசிப்பு

இந்த வருடம் 50 புத்தகங்கள் படிக்க இலக்கு. முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

முதற்கனல் வாசித்து முடித்தேன். விஷ்ணுபுரத்தை இனி ஜெயமோகன் விஞ்ச முடியாது என்ற என் மனப்பதிவு பொய்யானது. முதற்கனலின் ஆழமும் செறிவும் வார்த்தையில் சொல்லமுடியாதவை. முதற்கனல் என்பதை அம்பையின் கனலாகக் கொள்ளலாம். ஆனால் அதை காமத்தின் கனலாகக் கொண்டே நான் இந்நாவலை வாசித்தேன். இப்படி ஓர் ஆழமான விவரிப்பு தமிழ்நாவல்களில் காமத்தைச் சார்ந்து நிகழ்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. அப்படி ஒரு விவரிப்பு. ஒவ்வொரு விவரிப்பும் ஒவ்வொரு வகை. அதேபோல் மகாபாரதத்தின் பல்வேறு நம்பிக்கைகளை ஜெயமோகன் விவரிக்கும் விதம் சொல்லில் அடக்கமுடியாதது. மிகப்பெரிய தோற்றம்கொண்டு மகாபாரதத்தின் நோக்கை ஒரு வரலாற்று நோக்கிலும் புனைவு நோக்கிலும் அவர் கண்டு அதை விவரிக்கும் விதம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. இந்த எண்ணம் எனக்குத் தோன்றும்பொதெல்லாம் ஒருவித பயத்தோடுதான் நாவலைப் படித்தேன். மனிதக் கற்பனைளுக்கு அப்பாற்பட்ட ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது எனக்கு உறுதிப்பட்டது. முதற்கனல் ஆழத்திலும் செறிவிலும் நிகரற்றது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஜெயமோகன் எழுத்தில் கொள்ளும் விரிவு ஆச்சரியமூட்டுகிறது. அம்பை பேருருவம் கொண்டு எழுகிறாள் என்றால் சிகண்டி அசரடிக்கிறான். சிகண்டிக்கும் அம்பைக்குமான பித்து நிலையை ஜெயமோகன் விவரிக்கும் இடமெல்லாம் நான் என் வசமே இல்லை. அம்பை பீஷ்மரை ஏற்றுக்கொள்ள முடிவெடுக்கும் அத்தியாயம் ஜெயமோகனின் எழுத்து புத்திசாலித்தனத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும். இப்படி பல பகுதிகள். 

முதற்கனல் தமிழ்நாவல்களின் உச்சங்களில் ஒன்று.

 

 

THE DRAMATIC DECADE : The Indira Gandhi YearsTHE DRAMATIC DECADE : The Indira Gandhi Years by Pranab Mukherje
My rating: 3 of 5 stars

A flash back of a part our history in a congress man view! Pranab Mukherje tried a lot to prove if not the emergency was imposed by Indra Gandhi, how India might have been affected badly in so many ways with so many statistics. He describes the bravery of Indra Gandhi with so many examples and how she bounced back after so many set backs she faced. He was like a shadow of her and he proudly admits in such a way that that was his great achievement. The formation of Bangladesh has been nicely brought out in this book, however, that is also in a congress man view.

Worth reading.

 

 

View all my reviews

இலங்கை பிளந்து கிடக்கும் தீவுஇலங்கை பிளந்து கிடக்கும் தீவு by சமந்த் சுப்ரமணியன்
My rating: 4 of 5 stars

சமீபத்தில் வாசித்த சிறந்த புத்தகம்.

இலங்கையில் நடந்த போரில் மக்களின் மனநிலை என்ன என்பதை பல்வேறு மக்களிடம் பேசி அதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் சமந்த் சுப்பிரமணியன். இப்புத்தகத்தில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களில் இருந்து, மலையகத் தமிழர்களின் குரல் உட்பட, புலி ஆதரவாளர்களின் குரலும் ஒலித்துள்ளது. சிங்கள அரசின் அட்டூழியங்களையும் புலிகளின் தீவிரவாத அட்டூழியங்களையும் எவ்வித சாய்வும் இன்றி பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

சிங்கள அரசு பயங்கரவாதத்தின் பல்வேறு மாதிரிகளை இப்புத்தகத்தில் படிக்கும்போது ஒரு திகில் திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

தமிழர்களுக்காகத் தொடங்கி தமிழர்களையே ஒழித்துக்கட்டத் தொடங்கிய புலிகளின் குரூரக் கொலைகள் இப்புத்தகத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களை போரின்போது கேடயமாகப் பயன்படுத்தியதை எல்லாம் இப்புத்தகத்தில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்ட அத்தியாயம் நம்மை உலுக்கி எடுக்கிறது.

நிச்சயம் வாசிக்கவேண்டிய புத்தகம். மிக நல்ல மொழிபெயர்ப்பில் தரத்துடன் வெளிவந்துள்ளது.

 

View all my reviews ஆர்யபட்டா [Āryapaṭṭā]ஆர்யபட்டா [Āryapaṭṭā] by சுஜாதா [Sujatha]
My rating: 2 of 5 stars

சுமாரான நாவல். ஒரு கன்னடத் திரைப்படத்துக்காக ரமேஷ் அரவிந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழ்த்திரைப்படமான அந்தநாளை ஒட்டி எழுதப்பட்ட கதை. சுஜாதா இடது கையால் அவசரம் அவசரமாக எழுதியது போலத் தோன்றியது. அந்த நாள் திரைப்படத்தை அப்படியே மீண்டும் எழுத ஏன் சுஜாதா தேவை என்று புரியவில்லை. இதையும் மீறி நாவலில் சுஜாதா வெளிப்பட்ட தருணங்களையெல்லாம் கன்னடத் திரைப்படத்தில் இல்லாமல் ஆக்கியிருந்தார்கள்!

View all my reviews

Share

இந்திரா பார்த்தசாரதியின் பக்குவம் சிறுகதை குறித்து

இந்திரா பார்த்தசாரதியின் சமீபத்திய கல்கி சிறுகதையில் (பக்குவம்) வாசிக்க ஒன்றுமில்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள்கூட இக்கதையைவிட மேம்பட்ட தரத்தில் இருக்கும். வெற்றுப் பேச்சு, மேம்போக்கான பார்வை, ஒற்றைப்படத்தன்மை, எதிலும் நுணுக்கமாக ஆழமாகச் செல்லாமல் ஒரு பிரச்சினையின் பல்வேறு முகங்களை ஆராயாமல் எழுதுவது போன்ற அவரது வழக்கமான நாவல்களும் சிறுகதைகளும் போல, அவற்றின் இன்னொரு வலுவற்ற நீட்சியே கல்கியில் வெளியாகியிருக்கும் அவரது சிறுகதை. படிக்காமல் இன்புறவும்.

கதையை வாசிக்க இங்கே செல்லவும்.

Share