2017 தமிழ்த் திரைப்படங்கள் – ஒரு வேகமான ரீவைண்டிங். (நான் பார்த்தவற்றுள் என்னை ரசித்தவை இவை. ஆய்வெல்லாம் இல்லை. உலகமகா திரைப்படத்தை நான் பார்க்காமல் விட்டிருந்தால், அது இங்கே இடம்பெற்றிருக்காது என்கிற ஏமாற்றத்தைத் தாங்கும் வல்லமை இருந்தால் மட்டும் மேற்கொண்டு பட்டியலைப் பார்க்கவும்.)2017 தமிழ்த் திரைப்படங்கள் – ஒரு வேகமான ரீவைண்டிங். (நான் பார்த்தவற்றுள் என்னை ரசித்தவை இவை. ஆய்வெல்லாம் இல்லை. உலகமகா திரைப்படத்தை நான் பார்க்காமல் விட்டிருந்தால், அது இங்கே இடம்பெற்றிருக்காது என்கிற ஏமாற்றத்தைத் தாங்கும் வல்லமை இருந்தால் மட்டும் மேற்கொண்டு பட்டியலைப் பார்க்கவும்.)
சிறந்த திரைப்படம்: எதுவுமில்லை
சிறந்த நடிகர்: யாருமில்லை
சிறந்த நடிகை: அதிதி பாலன் (அருவி)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சாம் எஸ் (விக்ரம்வேதா)
சிறந்த இசையமைப்பாளர்: யாருமில்லை
சிறந்த குத்துப்பாட்டு: டசக்கு டசக்கு (விக்ரம் வேதா)
சிறந்த பாடல்: நீதானே நீதானே (மெர்ஸல், இசை: ஏ.ஆர்.ரஹ்மான்), (அடுத்ததாக, விவேகம் படத்தின் காதலாடா பாடல், இசை அநிருத்)
நன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: மாநகரம், 8 தோட்டாக்கள், அருவி, தீரன், பா பாண்டி
சிறந்த வணிகத் திரைப்படம்: விக்ரம் வேதா
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: மீசைய முறுக்கு
எதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: விவேகம், மெர்சல், டோரா, ரிச்சி.
படு மோசமான படம்: இந்திரஜித்
சிறந்த காமெடி நடிகர்: சூரி
சிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி வர்மன் (காற்று வெளியிடை)
இந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தொண்டிமுதலும் திருக்ஷாக்க்ஷியும் (மலையாளம்), நியூட்டன் (ஹிந்தி), உளுதுவரு கண்டெந்தெ (கன்னடம் 2015).
Archive for ஹரன் பிரசன்னா
2017 தமிழ்த் திரைப்படங்கள் ஒரு ரீவைண்டிங்
சென்று வருக 2017
இந்த வருடம் படித்த புத்தகங்கள்
* தடைசெய்யப்பட்ட துக்ளக்
* முஸ்லிம் லீக் ஆர் எஸ் எஸ் சந்திப்பு
* ஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்
* நாயகிகள் நாயகர்கள் – சுரேஷ் பிரதீப்
* பிரேக்கப் குறுங்கதைகள் – அராத்து
* தற்கொலை குறுங்கதைகள் – அராத்து
* உடலென்னும் வெளி (இன்னும் வெளிவரவில்லை.)
* பால், பாலினம். (கோபி ஷங்கரின் நூல்)
* லக்ஷ்மி சரவணக்குமாரின் நாவல் (இன்னும் வெளிவரவில்லை)
* பூனைக்கதை (பா.ராகவனின் நாவல்)
* போகப் புத்தகம்
* இந்தியப் பயணம் (ஜெயமோகன்)
* ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்
* பான்கி மூனின் றுவாண்டா – அகரமுதல்வன்
* உப்புக் கண்க்கு – வித்யா சுப்பிரமணியன் (இன்னும் படித்துமுடிக்கவில்லை!)
* ஆதி சைவர்கள் வரலாறு
* நேதாஜி மர்ம மரணம்
* My father Baliah (Not yet finished)
* சினிமா பற்றிய ஒரு புத்தகம் (இன்னும் வெளிவரவில்லை)
* நரசிம்ம ராவ் – ஜெ.ராம்கி மொழ்பெயர்ப்பில்
* மீன்கள் – தெளிவத்தை ஜோசப்
* குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்
* ஜெஃப்னா பேக்கரி – வாசு முருகவேல் (இன்னும் முடிக்கவில்லை)
* போரின் மறுபக்கம் – பத்திநாதன்
* எம்டன் செல்வரத்தினம் – சென்னையர் கதைகள்
* கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்
* ரோக்ஸ் வாட்ச் – சரவணன் சந்திரன்
* சார்த்தா – எல். பைரப்பா
* அவன் காட்டை வென்றான்
* நான் ஏன் தலித்துமல்ல – தர்மராஜ்
* ஒருத்திக்கே சொந்தம் – ஜெயலலிதா
* திராவிட மாயை பாகம் 2 – சுப்பு
இன்னும் சில புத்தகங்களைப் பட்டியலிட விட்டுவிட்டேன். மறந்துவிட்டது.
உடனடியாகப் படிக்கவேண்டியவை:
* அஜ்வா – சரவணன் சந்திரன்
* பார்பி – சரவணன் சந்திரன்
* பச்சை நரம்பு – அன்னோஜன்
இதற்கிடையில் 12 வலம் இதழ்கள் கொண்டுவருவதில் என் பங்களிப்பும் உண்டு.
மீதி நேரங்களில் 100 திரைப்படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.
இவையெல்லாம் உணவைக் குறைத்ததால் கிடைத்த நேரத்தில் சாத்தியமாகி இருக்கிறது என நினைக்கிறேன்.
இதற்கிடையில் கிழக்கில் வேலையும் பார்த்திருக்கிறேன் என்று லேசாகத் தோன்றவும் செய்கிறது. 🙂
பிப்ரவரி மாதம் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆகஸ்ட்டில் மரணமடைந்தார். பேரிழப்பு. இந்த ஐந்து மாதங்களில் அதிகம் படம் பார்க்கவில்லை, புத்தகங்கள் படிக்கவில்லை. இந்த நேரத்திலும் கொஞ்சம் ஆக்டிவாக இருந்திருந்தால்… ஜாக்கிரதை.
5 கவிதைகள்
கனவின் அலைதல்
என்னை கௌவிக்கொண்டு
வழிதவறிச் சென்ற தட்டான்
மலைமுகட்டிலிருந்து
திரும்ப வரும்போது
என்னை மறந்துவிட்டிருந்தது
நான் தூங்கிவிட்டிருந்தேன்
அங்கே
என் கனவில்
கையில் தட்டானை ஏந்திக்கொண்டிருந்தேன்
கைகள் விரிக்கவும் மூடவும்
தட்டான் இறக்கையை அடித்துப் பறக்கவும்
கடந்துகொண்டே இருக்கிறது
நிமிடம் நாள் மலைகள் ஆறுகள்
யுகமுடிவில்
அங்கே தட்டான் இல்லை
நானில்லை
மலைமுகடில்லை
ஆனால் அலையும்
என் கனவு மட்டும் இருக்கிறது.
மீண்டு வரும் ஒரு சித்திரம்
கண்ணில் தெரியும் கதைகளில்
உருவாகி வரும் சித்திரத்தில்
நான் சேர்த்த சில வரிகள் இருக்கின்றன
நீங்கள் நீக்கிய சில வரிகள் இல்லை
அவன் கிழித்த கோடுகள் உள்ளன
அவள் வரைந்த ஓவியத்தின் ஒருபகுதி தெரிகிறது
போக வர கைகள் கிறுக்கிய கோடுகளோடு
உள்ளிருந்து
உயிர்ச்சொல்லென
மேலெழும்
வார்த்தைகளொடு
அழிக்கப்பட்ட தடங்களின் மௌனத்தோடு
கண்ணில் தெரிகிறது புதிய கதை
ரணங்களில் துளிர்க்கும் ஒரு சிறு செடி
கனன்றுகொண்டிருக்கும்
இன்னும்
அச்சொல்லை நீ சொல்லாதிருந்திருக்கலாம்
நான் மறந்திருக்கலாம்.
இரவுகளில் நம் நிர்வாணம்
பொத்தி வைத்துக் கொண்டிருக்கும்
அநேகக் கதைகளை
ஒவ்வொன்றாகப் பிரித்தால்
இன்னொரு உலகமென
நாமறிவோம்
நம் பாவனைகள்
அதை மறப்பதை ஒட்டியே என்றாலும்.
மீள மீள
நீர் தெறிக்க
வீசப்பட்டுக்கொண்டே இருக்கும்
கல்லும்
ரணமும்
இதற்கிடையில்
ரணத்தில் மெல்ல துளிர்க்கிறது
ஒரு சிறு செடி.
இடுகை
ஃபேஸ்புக்கின் முகமிலிகள்
அலுக்கத் துவங்கும்போது
யாரோ யாரையோ
வசைபாடத் துவங்கினார்கள்.
அவன் ஒரு பக்கம் சேர்ந்தான்.
சில வரிகள் உள்ளிட்டான்.
அவன் மூக்கு ரத்தத்தை மோப்பம் கொண்டது.
உள்பெட்டியின் வசைகளில் தனித்து நின்றது ஒரு கெட்ட வார்த்தை.
நான்கைந்து முறை சொல்லிப் பார்க்கவும்
இளவயதின் கிராமம் விரிந்தது.
ரத்தமும் சதையுமான மனிதர்களைத் தேடி
தெருவோர தேநீர்க் கடைக்கு ஓடினான்.
யாரும் யாரையும் திட்டவில்லை.
அவனுக்கு ஒரு தும்மல் வந்தது.
என்ன சமூகம் இது என்றான்.
கைபேசியில்
ஃபேஸ்புக்கைத் திறந்து
தாயளி என எழுதத் துவங்கினான்.
சிறுமியின் புன்னகை
அச் சிறுமியின் புன்னகையில்
உயிர்கள் தோற்று மண்டியிட்டன
பறவைகள் பறக்க மறந்து உறைந்தன
உலகக் கடவுளர்கள்
கை கட்டி
வாய்பொத்தி
மெய்குழைந்து
வரிசை கட்டிக் காத்திருந்தனர்,
அவள் உறங்கிவிட்டிருந்தாள்.
அந்தச் சிறுமி
தன் மென்கைக்குள்
உலகைச் சுருட்டி இருந்தாள்
எங்கேயும்
இரவுபகல்
பேதமின்றி
பூக்கள் பூத்தன
அணுகுண்டு வெடித்த வெளிகளில்
அவளையொத்த சிறுமிகள்
புன்னகையைத் தெளித்தவண்ணம் இருந்தனர்
சாத்தான் உலகச் சிறுமிகளை
ஒற்றை ஓவியமாக்கிப் பார்த்தான்,
அந்த ஓவியத்திலிருந்து
ஆயிரம் ஆயிரம் சிறுமிகள்
மொட்டென வெடித்துப் பரவி
கடவுளானபடியே இருந்தார்கள்.
சிறுமிகள் கால்பட்ட நிலத்தின்
கூழாங்கற்கள் சிலிர்த்தன.
கருமேகம் எப்போதும் அவர்கள்பின்
சென்றபடி இருக்க,
பூமியின் சமநிலை
புன்னகை பூத்த
சிறுமிகளால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
உலிதவரு கண்டந்த்தெ – Ulidavaru kandanthe
நேற்றைய தி ஹிந்துவில் வெளியாகி இருந்த நவின் பாலியின் பேட்டிக்குப் பின்னர்தான் அவர் நடித்து வெளிவரப்போகும் ரிச்சி திரைப்படம், உலிதவரு கண்டந்த்தெ (மற்றவர்களின் பார்வையில்) என்ற கன்னடப் படத்தின் ரீமேக் எனத் தெரிந்தது. உடனே இப்படத்தைப் பார்க்க ஆர்வம் கொண்டேன். டொரண்ட் சரணம். இந்த உலிதவரு கண்டந்த்தெ என்ற பெயர் மனதில் பதியவே மாட்டேன் என்கிறது. உச்சரிப்பும் இதுதான் சரியா எனத் தீர்மானமாகத் தெரியவில்லை. இப்படியெல்லாம் தமிழில் சோதிக்காமல் ரிச்சி என்று தெளிவாக வைத்துவிட்டார்கள்.
சில படங்களை ஏன் ஆர்வம் கொண்டு ரீமேக் செய்கிறார்கள் என்பது புரியாத புதிர். சிலர் சில படங்களை ஏன் தயாரிக்கிறார்கள் என்பதும் புதிரே. லூஸியா அற்புதமான திரைப்படம். சமீபத்தில் வந்த இந்தியத் திரைப்படங்களில் இது முக்கியமானது என்பது என் பார்வை. அதைத் தமிழில் எடுக்க சித்தார்த் நினைத்தது எனக்குத் தந்த ஆச்சரியம் இன்னும் தீரவில்லை. இப்படம் ஓடாது என்று நிச்சயம் சித்தார்த்துக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆனாலும் தமிழில் எடுத்தார். தமிழிலும் எனக்குப் பிடித்திருந்தது. சிலர் தமிழில் நன்றாக இல்லை என்றார்கள். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதேபோல், நடிகை சௌந்தர்யா த்வீபா என்ற படத்தைத் தயாரித்ததும் எனக்கு ஆச்சரியமான ஒன்றே. இப்படிச் சில ஆச்சரியங்களைத் திரைப் பிரபலங்கள் தந்தவண்ணம் உள்ளார்கள்.
தமிழில் (மலையாளத்திலும் வருகிறது எனத் தெரிகிறது) உலிதவரு கண்டந்த்தெ ரிச்சியாக வருவது இன்னொரு ஆச்சரியம். இந்தப் படம் லூஸியா போல் வணிக ரீதியாக நிச்சயம் வெற்றியடைய முடியாது என்று சொல்லமுடியாது. கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஓரளவு நல்ல வசூலைச் செய்துள்ளது எனத் தெரிகிறது. படம் நல்ல பாராட்டைப் பெற்றிருக்கிறது. இப்படியே தமிழில் எடுத்தால் இப்படம் பாராட்டப்படும் என்றாலும், வணிக வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஆனால் கொஞ்சம் தமிழுக்கு ஏற்றபடி மாற்றினால் நிச்சயம் விக்ரம் வேதா அளவுக்கு நல்ல பெயர் பெறுவதோடு நல்ல வசூலையும் செய்யலாம்.
ஆய்த எழுத்து, விருமாண்டி மாதிரியான உத்தி கொண்ட திரைப்படம். இந்த உத்தி இல்லாவிட்டால் இதெல்லாம் ஒரு கதையே அல்ல என்று இடதுகையில் தள்ளிவிட்டுப் போய்விடலாம். படம் பார்த்த முடிந்த பின்பும் இதில் கதையே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் படத்தை எடுத்த விதம் அசத்தலாக உள்ளது. பொதுவாக கன்னடப் படங்களில் (நான் மிகக் குறைந்த படங்களையே பார்த்துள்ளேன்) இது விஷுவலாக கொஞ்சம் மேன்மை காட்டுகிறது. (இதிலும் சில காட்சிகள் டெக்னிகலாக கொஞ்சம் பின் தங்கி உள்ளன என்பதும் உண்மையே.) இதையெல்லாம் தமிழில் பக்காவாகச் செய்தால் இன்னும் மெருகு கூடலாம்.
கன்னடத்தில் உடுப்பியைக் களமாகக் கொண்டு ஜன்மாஷ்டமி தினம் நடக்கும் மாறுவேடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை. நேற்றைய தி ஹிந்து பேட்டியில் திருநெல்வேலி வட்டார வழக்கைப் பேசத்தான் 50 நாள்கள் ஆகியது என்றும் படம் எடுக்க 30 நாள்தான் ஆனது என்றும் நவின் பாலி சொன்னதை வைத்துப் பார்த்தால், குலசேகரன் பட்டணத்தில் நடக்கும் தசராவை எடுத்துக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது. டீஸரை வைத்து இதை முடிவு செய்யமுடியவில்லை. படம் வந்தால்தான் தெரியும்.
உலிதவரு கண்டந்தெ படத்தில் நாயகன் ரக்ஷித் ஷெட்டி (இவரே இயக்குநரும் கூட என அறிந்தபோது ஆச்சரியம் இரண்டு மடங்காகிவிட்டது) அசரடித்துவிட்டார். உண்மையில் படம் பார்க்க ஆரம்பிக்கும் முன்பு, கன்னடத்தில் யார் நடித்திருந்தாலும் அதைவிடப் பல மடங்கு நிச்சயம் நவின் பாலி நன்றாக நடிப்பார் என நினைத்துக்கொண்டுதான் பார்க்கத் துவங்கினேன். ஆனால் படம் பார்த்தபின்பு, ரக்ஷித் ஷெட்டி அளவுக்கு நவின் பாலியால் நடிக்கமுடியாது என்று எண்ணம் வந்துவிட்டது. ரக்ஷித் ஷெட்டியின் நடையும் துள்ளலும் அலட்டலும் வசனம் பேசும் விதமும் அந்த பெல்ட்டை அணிந்துகொண்டிருக்கும் விதமும் – என்ன சொல்ல, அற்புதம். (இவரே கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு படத்தில் நடித்தவர். அந்தப் படத்திலும் அட்டகாசமாக நடித்திருந்தார். உண்மையில் அந்தப் படத்தில் அவர் அப்பாவுடன் சேர்கிறாரோ இல்லையோ, அவரது காதலியுடன் சேரவேண்டும் என்ற நினைப்பைக் கொண்டு வந்தது அவரது நடிப்பு!) நவின் பாலியும் நிச்சயம் கலக்குவார் என்பது உறுதி. ஆனால் திருநெல்வேலி வட்டார வழக்கு என்பதுதான் கொஞ்சம் நடுக்கத்தை வரவழைக்கிறது.
இந்தப் படத்தை ஏன் நவின் பாலி நடிக்க எடுத்தார் என்பது இன்னொரு ஆச்சரியம். ஏனென்றால் இப்படத்தில் மூன்று நடிகர்களுக்குச் சமமான வாய்ப்பு. தமிழில் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வேறு ஒரு தமிழ் நாயகன் என்றால் கூறு போட்டிருப்பார். இது நவின் பாலி என்பதால் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். கன்னடத்தில் நாயகியாக வரும் நடிகையைவிட தமிழில் வரப்போகும் ஸ்ரெத்தா அதிகம் நம்பிக்கை தருகிறார்.
உலிதவரு கண்டந்த்தெ மிக மெதுவாகவே நகர்கிறது. தமிழிலும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். எனவே படம் வந்தவுடனேயே பார்த்துவிடவேண்டும். நவின் பாலியின் முதல் தமிழ்ப்படம் என்று சொல்கிறார்கள். நேரம் படமும் தமிழ்ப்படம்தானே? இருமொழிப் படம் என்றுதான் நினைவு. இதுவும் இருமொழிப் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தால் மலையாளத்தில் நிச்சயம் ஒரு ப்ளாக் பஸ்டராக இருக்க வாய்ப்பு அதிகம். தமிழில்தான் என்ன நடக்கும் என்று சொல்லமுடியவில்லை. என் கணிப்பில் நல்ல பெயர் வாங்கி, அதிலுள்ள குறைகள் முன்னிறுத்தப்பட்டு படம் வசூலில் சுணங்கும் என்றே தோன்றுகிறது. அப்படி நடக்காமல் இருக்கட்டும்.
விழித்திரு
‘அவள் பெயர் தமிழரசி’ திரைப்படம் ஒட்டுமொத்தமாக மிக சுமாரானது என்றாலும் அதில் சில காட்சிகள் மாற்றுத் திரைப்படங்களின் வகைமையைச் சேர்ந்தவையாக இருந்தன. எழுத்தாளர்கள்களும் கலைஞர்களும் நடித்திருந்தார்கள். இயக்குநர் என்னவோ முயற்சி செய்யப் பார்த்திருக்கிறார் என்பது புலனாகும். ஆனால் படம் தோல்வி. ஒரு தடவை (எங்கே எப்போது என்று என்ன யோசித்தாலும் நினைவுக்கு வரவில்லை, எதோ ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்தான்) தியடோர் பாஸ்கரனிடம் இப்படத்தைப் பற்றி ஒரு வார்தை பேசியபோது, அவள் பெயர் தமிழரசி படத்தில் இயக்குநருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் என்றும் இல்லையென்றால் படம் சிறப்பாக வந்திருக்கும் என்றும் சொன்னார். இயக்குநர் பெயரையும் அடுத்த சில தினங்களில் மறந்துவிட்டேன்.
இப்போது மீரா கதிரவன் ‘விழித்திரு’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார். முதல் படம் தந்த தோல்வி, அவரை வெகுஜனத் திரைப்படத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது போல. 2014ல் எடுத்து முடிக்கப்பட்ட படம் இப்போதுதான் வெளியாகி இருக்கிறது.
நிகழ்கால தீவிர அரசியல் களத்தைத் திரைப் பின்னணியாகப் படம் எடுப்பது கொஞ்சம் சவாலானது. பிரச்சினைகள் நிறைந்தது. மணிரத்னம் தீவிரப் பிரச்சினைகளைப் பின்னணியாக வைத்துப் படம் எடுப்பார். ஆனால் படத்தின் பிரச்சினைகளைப் பற்றி ஆராயாமல் அதில் காதல் பிரச்சினைகளோ உணர்வு ரீதியான பிரச்சினைகளோ இருக்கும். ஒருவகையில் திரைப்பட இயக்குநர்களுக்கு இந்த சமூகமும் அரசியல் அதிகாரமும் தரும் சுதந்திரம் அதுதான். அதைமீறித் தங்கள் வாழ்க்கையையே பணையம் வைக்க இயக்குநர்களுக்கு தைரியம் வேண்டும். அப்படியே பணையம் வைத்தாலும் இந்த சமூகத்தில் சாதிக்கப்போவது என்ன, இந்த சமூகம் இதை எப்படிப் பார்க்கப் போகிறது என்பது கேள்விகள்.
விழித்திரு திரைப்படம், ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். மணிரத்னத்தின் பின்னணிக்கே அதைக் கழுவி ஊற்றுவார்கள் விமர்சகர்கள். இதில் இயக்குநர் இந்த ஆணவக் கொலை பற்றிய விஷயத்தை, மணிரத்னம் அளவுக்குக் கூடப் பின்னணியாகக் கொள்ளவில்லை. ஒரு காரணமாக மட்டுமே கையாண்டிருக்கிறார். இதைப் பற்றிய அலசல்களோ விவரிப்போ எதுவுமே இல்லை. ஒரு பரபரப்புத் திரைப்படத்துக்கான பின்னணி மட்டுமே என்ற அளவில் இதைப் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் இதை மிக சீரியஸான படம் என்று வகைப்படுத்த முடியாது.
அரசியல் கொலை என்ற பின்னணியை விட்டுவிட்டுப் பார்த்தாலும், படம் அட்டகாசமான த்ரில்லர் என்று சொல்லக்கூடிய வகையிலும் அடங்கவில்லை. ஒரே இரவில் நான்கு கதைகளைச் சொல்லும் வகைமைத் திரைப்படம். படம் எடுத்து முடிக்கப்பட்டு உடனே வெளியாகி இருந்தால் இதில் ஒரு சுவாரஸ்யம் இருந்திருக்கலாம். இது போன்ற வகைமைகளில் பல படங்கள் வந்துவிட்டன. ‘மாநகரம்’ சட்டென நினைவுக்கு வரும் உதாரணம்.
‘ஆய்த எழுத்து’ திரைப்படம் மூன்று புள்ளிகளை இணைக்கும் ஒரு படம். ஆனால் அதன் பின்னணி மிக முக்கியமானது, அழுத்தமானது. அதில் வரும் மூன்றாவது புள்ளி, மற்ற இரண்டு புள்ளிகளுடன் மிகப் பின்னால்தான் இணையும். அதுவே நம்மை அதிகம் பாதிக்காத புள்ளி. அதேசமயம் சித்தார்த் தொடர்பான காட்சிகள், அக்காட்சிகளுக்கே உரிய நியாயத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. அப்படி இருந்தும் எடுபடவில்லை. (தனிப்பட்ட அளவில் ‘ஆய்த எழுத்து’ எனக்கு மிகப் பிடித்த படம், மிக முக்கியமான படம்.) இது போன்ற திரைப்படங்களில் நான்கு வேறு வேறு சம்பவங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு குறுக்கீடு நல்ல சுவாரஸ்யத்தைத் தரலாம். இது யதார்த்தம் இல்லை என்பது சரிதான். ஆனாலும் இதுவே நம்மைக் கட்டிப் போடும் ஒன்று. அப்படி ஒன்று இப்படத்தில் இல்லை.
அதுபோக, நான்கு கதைகளுமே நம்பகத்தன்மை இன்றிச் செல்கின்றன. எனவே இவை அனைத்தும் முட்டி நிற்கும்போது நமக்கு எவ்விதப் பரபரப்பும் உண்டாவதில்லை. இது ஒரு பலவீனம். எப்படியே எல்லாவற்றையும் இழுத்துவந்து அதை ஒரு அரசியல் பின்னணியில் ஒட்டச் செய்வதாலோ, கதாபாத்திரத்தின் பெயர்களைத் தன் கொள்கைக்கேற்ப வைப்பதாலோ ஒரு படம் எதையும் மக்களுக்குச் சொல்லிவிடாது என்றே நினைக்கிறேன்.
டி.ராஜேந்திரரின் குத்துப்பாட்டு வைக்கப்படவேண்டிய அவலத்தை இயக்குநர் மீரா கதிரவன் வெளிப்படையாகச் சொன்னார். உண்மையில் இந்தக் குத்துப்பாட்டு படத்துக்கு மிகப்பெரிய தடையைத்தான் தருகிறது. இதை ஏன் விநியோகஸ்தர்கள் வேண்டும் என்கிறார்கள் என்பதே புரியவில்லை. அதிலும் டி.ராஜேந்திரர் ஆடுவது, நமக்குத் தரப்படும் இனிமாதான்.
2014ல் எடுக்கப்பட்டும் படம் இன்றுவரை ஃப்ரஷாக இருக்கிறது என்பது ஆச்சரியம். ஒரு தடவை பார்க்கலாம் என்ற ரீதியில் இருப்பது பொருளாதார ரீதியாகப் படத்துக்கு பலம் சேர்க்கலாம். இன்னும் சுதந்திரமான வாய்ப்பளிக்கப்பட்டால் மீரா கதிரவன் மிக நல்ல படங்களை எடுக்கலாம். அந்த வாய்ப்பு அவருக்கு அமையட்டும். அதற்கான அரசியல் சூழலும் மலரட்டும்.
கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்
டாய்லட் (ஹிந்தி)
சவசவ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காது வலிக்கிறது. டாய்லட் இல்லாத வீடும் வேண்டாம், புருஷனும் வேண்டாம் என்று கோர்ட்டுக்குப் போகிறாள் ஒரு பெண். அரசு அலறியடித்துக்கொண்டு டாய்லட் கட்டித் தருகிறது. டாய்லட் கட்டாததற்கு அரசு காரணமல்ல, மக்களே காரணம் என்று சில காட்சிகளும் அரசும் காரணம் என்று சில வசனங்களுமென எல்லாப் பக்கமும் கர்ச்சீஃப் போட்டு வைத்துவிட்டார்கள். தன் வீட்டில் டாய்லட் வரக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார் ஒரு பண்டிட். (பிராமணர்களை இழிவுபடுத்துகிறதுன்னு கிளம்பிடாதீங்கய்யா…) கடைசியில் தன் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்படி டாய்லட் போகிறார் என்பதே இறுதிக்காட்சி. 🙂
கழிப்பறை இல்லாத வீடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் தன் வீட்டில் கழிப்பறையே வரக்கூடாது என்று சொல்லும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் கப்ஸா. ஒரு ஊரே அறியாமையில் டாய்லட் இல்லாமல் இருக்கிறது என்பதெல்லாம் நம்பவே முடியாத சங்கதிகள்.
அனிதா நர்ரே என்பவரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்ட படம் என்று இறுதியில் காண்பிக்கிறார்கள். இந்த நர்ரே என்பது பிராமணர்களைக் குறிக்கும் ஜாதியா? திரைப்படத்தில் பிராமணர்களின் ஜாதியாகக் காட்டி இருக்கிறார்கள் என்பதால் கேட்கிறேன். திரைக்கதையில் இப்படிக் காட்டினால்தான் படத்துக்கு ஒரு தர்க்கம் வரும் என்பதால் காட்டி இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். இல்லையென்றால் ஏன் ஒருவர் தன் வீட்டுக்கு டாய்லெட் வேண்டாம் என்று சொல்லவேண்டும்?
படம் நல்ல வசூல் என்கிறது கூகிள். தமிழில் வந்தால் ஊத்தியிருக்கும்.
ஒரு பக்கப் புலம்பல்
இது ஒரு பதிப்பாளரின் (பதிப்பகத்தில் பொறுப்பில் இருப்பவரின்) புலம்பல் மட்டுமே. எனவே படிக்காமல் கடந்துவிடுங்கள்.
தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்துக்கு இன்று ஒரு பக்கம் விளம்பரம் வந்துள்ளது. இதை விளம்பரம் என்பதா என்றெல்லாம் கேட்காதீர்கள். உண்மையில் விளம்பரமே நோக்கம்.
ஒரு பதிப்பகத்துக்கு, தமிழ் தி ஹிந்து, தினமலர், தினமணி போன்ற ஒரு பத்திரிகையில் ஒரு புத்தகத்துக்கு முழுப்பக்க விளம்பரம் தரவேண்டும் என்பது நிச்சயம் கனவாகவே இருக்கும். இந்த விளம்பரத்துக்கான விலையை ஒரு பதிப்பகத்தால்கற்பனை கூடச் செய்து பார்க்கமுடியாது.
ஒரு பக்க விளம்பரம் என்றல்ல, அரைப்பக்க கால்பக்க விளம்பரச் செலவைக்கூட, முன்னணிப் பதிப்பகங்களால்கூடச் செய்யமுடியாது.
அதுவே ஒரு பத்திரிகை அதுவும் முன்னணிப் பத்திரிகை ஒரு பதிப்பகத்தின் கையில் இருந்தால் ‘நின்னு ஆடலாம்.’ ஆனால் நிலைமை எப்படி இருக்கிறதென்றால் பெரிய பதிப்பகங்கள் கைவசம் பத்திரிகை இல்லை. பத்திரிகை கைவசம் இருந்தாலோ பெரிய பதிப்பகமோ அல்லது புத்தகங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்ற திட்டமோ அதைச் செயல்படுத்தும் தொலைநோக்கோ இல்லை. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதைதான். என்றாவது இந்த இரண்டும் ஒன்றாகும்போது அப்பதிப்பகம் உச்சத்துக்குச் செல்லும்.
கிழக்கு பதிப்பகம் முன்னணி பத்திரிகைகள் அனைத்திலும் ஒரு புத்தகத்தை வாரத்துக்கு ஒன்றென நான்கு வாரங்களுக்கு விளம்பரம் கொடுத்தால் அப்புத்தகத்தின் விற்பனை நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும். ஆனால் லாபம் என்று எதுவும் இருக்காது என்பதுமட்டுமல்ல, பெரிய அளவில் நஷ்டம் இருக்கும். அதனால்தான் கிழக்கு போன்ற பெரிய பதிப்பகங்கள்கூட தினசரிகளில் விளம்பரம் கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.
எதாவது ஒரு பத்திரிகை புத்தகங்களின் தேவையைக் கணக்கில் கொண்டு புத்தக விளம்பரங்களை குறைந்த மிகக் குறைந்த விலையில் வெளியிட்டால்தான் இதுவெல்லாம் சாத்தியம். ஆனால் ஒரு பத்திரிகை நடத்த ஆகும் செலவோடு அவர்கள் ஒப்பிடும்போது அவர்களால் இது இயலாத ஒன்றாகவே இருக்கும்.
புத்தகங்கள் மக்களைச் சென்றடைய தினசரிகள் ஒரு வழி. இன்னொரு வழி, தொலைக்காட்சி ஊடகங்கள். தினசரிகளையாவது நினைத்துப் பார்த்து ஏங்கலாம். தொலைக்காட்சி ஊடகங்கள் – வாய்ப்பே இல்லை.
எனவே ஃபேஸ்புக் இடுகைகளைப் பார்த்து புத்தகங்களை வாங்கி மகிழுங்கள்.
கிழக்கு பதிப்பகத்தின் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க… வாங்க.
பின்குறிப்பு: சில ஆண்டுகள் முன்பு தினமலர் சில பதிப்பகங்களுக்கு இலவச விளம்பரம் தந்தது. நண்பர்கள் என்ற அடிப்படையில்தான் இவ்விளம்பரங்கள் செய்யப்பட்டன. இப்படிச் செய்வதற்கும் ஒரு மனம் வேண்டும். தினமலர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை இதற்காகப் பாராட்டவேண்டியது கடமை. இப்போதும் அவரைப் பார்த்துக் கோரிக்கை வைத்தால், அவருக்கு அந்தப் புத்தகமோ வெளியிடுபவர்களோ பிடித்திருந்தால், அவரது கொள்கைகளுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தால் இந்த உதவியைச் செய்வார் என்றே நினைக்கிறேன். அவரைச் சந்திக்க இயலும் என்கிறவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மற்ற பத்திரிகைகளும் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களுக்கு இது மாதிரி விளம்பரம் கொடுத்து உதவுங்கள்.


