Tag Archive for கொங்குதேர் வாழ்க்கை

கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்

பதிமூன்று கதைகள் அடங்கிய தொகுப்பு. ஒரே மூச்சில் படிக்கத்தக்க புத்தகமே. என்றாலும் நாளொன்றுக்கு இரண்டு மூன்று கதைகள் என நான்கு நாள்களில் படித்தேன்.
 
நாஞ்சில் நாடனின் பிரத்யேகமான மொழியே அனைத்துக் கதைகளின் அச்சாணி. இன்னொருவர் ஒரு சிறுகதையில் இத்தகைய தமிழை, தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் (யாண்டு, ஈங்கு, யாவர் உள்ளிட்ட வெகு பல வார்த்தைகள்) கதைகளில் ஒரு அந்நியத் தன்மை தோன்றிவிடும். நாஞ்சில் நாடன் கதைகளில் அப்படித் தோன்றவில்லை. கூடவே ஒரு இசைத்துவம் தெரிகிறது. கதைகளை வாய்விட்டு வாசிக்கலாம் என்ற அளவுக்கான இசைத்துவம் அது. கூடவே ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் அவ்வார்த்தைகளின் இணை வார்த்தைகளையும் அதன் பொருளையும் வரலாற்றையும்கூடத் தொட்டுச் செல்கிறார் நாஞ்சில்நாடன்.
 
எல்லாக் கதைகளுமே நுணுக்கமானவை. பொதுவாகவே நாஞ்சில் நாடனின் கதைகளின் தலைப்பும் கதையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பவை. கதையின் தலைப்பு கதைக்கான பெரிய வெளியை வைத்திருக்கும். இக்கதைகளின் தொகுப்பிலும் அப்படியே. நுணுக்கம் பிடிபடும் தருணத்தில் சட்டென விரிவு கொள்ளும் கதைகள் அபாரமானவை. பெரும்பாலான கதைகள் அப்படியே. இந்த நுணுக்கம் உடையாவிட்டால் நமக்கு இவை வெற்று விவரணைகாளகவே எஞ்சும். வேறொரு சந்தர்ப்பத்தில் வாசித்தால் மனவிரிவுக்குள் இக்கதைகள் சிக்க நேரலாம்.
 
இத்தொகுப்பில் வயதானவர்கள் குறித்த சித்திரம் ஒன்று உள்ளது. இரண்டு மூன்று கதைகளில் அது பயின்று வருகிறது. ஒரு கதை கல்யாணம் ஆகாத பெண்ணைப் பற்றியது. இன்னொன்று, திருமணம் தடைபடும் ஆணைப் பற்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்னும் சிறுகதையே இக்கதைகளின் உச்சம். அதேபோல் பரிசில் வாழ்க்கையும் இன்னொரு அட்டகாசமான சிறுகதை. கதைகளில் ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவையும் கோபமும் ஏளனமும் நாஞ்சில் நாடனின் முத்திரைகள். பாம்பு போன்ற உருவகக் கதைகள் எனக்கு எப்போதுமே பிடிக்காதவை. பெருந்தவம் சிறுகதையில் வருவம் ஏழிலைக் கிழங்கு பற்றிய விவரணைகள் அபாரமானவை. இக்கதையின் இறுதி வரியே முக்கியமானது. ஒரு சிறிய விஷயத்தைக் கூட விலாவாரியாக விவரிக்கும் பண்பை இத்தொகுப்பில் உள்ள கதைகளில் காணலாம். சங்ககாலம் தொடங்கி இன்றுவரை உள்ள அத்தனை சாத்தியங்களையும் தொட்டுப் பார்க்கிறார் நாஞ்சில் நாடன். ஒன்றிரண்டு கதைகள் அனுபவம் என்ற அளவுக்கே நம்மைச் சேர்கின்றன.
 
சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களைச் சொல்லும் கதைகள் அடங்கிய தொகுப்பு. மொத்தத்தில் அருமையான தொகுப்பு. நிச்சயம் படிக்கவும். கிண்டிலில் 9 ரூபாய்க்குக் கிடைத்தது. இப்போது விலை 50 ரூ.
 
https://www.amazon.in/Konguther-Vazhkai-Tamil-Naanjil-Nadan-ebook/dp/B06Y45RMMY/ref=sr_1_fkmr0_1?ie=UTF8&qid=1509710941&sr=8-1-fkmr0&keywords=konguther+vaazkkai
 
#கிண்டிலுக்குவாங்கஇயக்கம் 🙂
Share