Tag Archive for ரங்கநாதர்

மதுரை சுல்தான்கள்

மதுரை சுல்தான்கள் புத்தகத்தை நேற்று படித்து முடித்தேன். இந்தப் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு புத்தகம் தனக்கான வாசகர்களைத் தேடிக்கொள்ளும் என்று இலக்கியவாதிகள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதை வைத்து நானே பலமுறை பகடி செய்திருக்கிறேன். ஆனால் இந்தப் புத்தகம் உண்மையில் என்னைத் தேடிக்கொண்டது என்றே சொல்லவேண்டும். 2012ல் இந்தப் புத்தகம் வந்தபோது நான் அதை படிக்கவில்லை. பிறகும் படிக்கவேண்டும் என்றுகூட நினைக்கவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) இறந்தபோது, எங்கள் நண்பர்களுக்குள் சில மடல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் அவர் மதுரா விஜயம் என்ற நூலை மையமாக வைத்து எழுதிய திருவரங்கன் உலா பற்றிப் பேசிக்கொண்டோம். அப்போது ஒரு நண்பர், ‘பிரசன்னா, நீங்கள் பரிந்துரைத்த மதுரை சுல்தான்கள் புத்தகம் இப்போது இருப்பில் உள்ளதா’ என்று கேட்டார். உண்மையில் நான் இந்தப் புத்தத்தைப் படித்திருக்கவில்லை. அவருக்குப் பரிந்துரைத்த நினைவும் இல்லை. ஒருவேளை அவர் கேட்டு, நான் வழக்கம்போல் நல்ல புத்தகம் என்று சொன்னேனா என்றும் நினைவில்லை. 🙂 ஆனால் அவரிடம் அதையெல்லாம் சொல்லாமல், புத்தகம் இருப்பில் உள்ளது என்று பதில் அனுப்பிவிட்டேன். பின்பு அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நாளை அந்த நண்பர் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லவாவது தயாராக இருப்போம் என்றுதான் படிக்கத் தொடங்கினேன்.

இதற்கிடையில் எஸ் பி சொக்கலிங்கம் பற்றித் தெரிந்துகொண்டதும் இந்தப் புத்தக வாசிப்பனுபவத்துக்கு உறுதுணையாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது. 😛

மதுரை சுல்தான்கள் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், இந்திய சுல்தான்கள் யாரெல்லாம் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்தார்களோ அவர்களைப் பற்றியெல்லாம் இந்த நூல் பேசுகிறது. சுல்தான்கள் ஆட்சியின்போது இங்கே வந்த பயண யாத்ரிகர்கள் (இப்ன் பதூதா, மார்கோ போலோ போன்றவர்கள்) அன்றைய தமிழ்நாட்டைப் பற்றிச் சொல்லிச்சென்ற குறிப்புகள் எளிய தமிழில் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. 96 பக்கங்கள் மட்டுமே உள்ள சிறிய நூல்தான் இது. 2 மணி நேரத்தில் படித்துவிடலாம்.

வரலாற்றை ஆய்வு நோக்கில் சொல்வது ஒரு வகை. ஒரு பருந்துப் பார்வையில் எளிய தமிழில் சொல்வது ஒரு வகை. இந்நூல் இரண்டாம் வகையைச் சார்ந்தது. மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ மிக முக்கியமான புத்தகம். நான் இந்தப் புத்தகத்தை முதன்முதலில் (1996 வாக்கில்) வாசித்தபோது, இப்படியெல்லாம் பள்ளிகளில் வரலாற்று வகுப்புகளில் சொல்லிக் கொடுத்திருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து ஏங்கியிருக்கிறேன். அதே நடையில் அதேபோன்று மதுரை சுல்தான்கள் புத்தகமும் எழுதப்பட்டிருப்பது இனிய ஆச்சரியம். கில்ஜி வம்சம், பாண்டியர்கள், மாலிக் கபூர், குஸ்ரவ் கான், துக்ளக் வம்சம் பற்றியெல்லாம் மிகச் சிறப்பாக, மிக எளிமையாக, மிக சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’

அலாவுதீன் கில்ஜிக்கு மாலிக் கபூர் மீது ஈடுபாடு. முபாரக் கில்ஜிக்கு குஸ்ரவ்கான் மீது ஈடுபாடு. மாலிக் கபூர், குஸ்ரவ் கான் – இருவருமே முஸ்லிமாக மதம் மாறிய இந்துக்கள். மாலிக் கபூர் ஒரு திருநங்கை, இயற்பெயர் சந்த்ராம். வரலாற்றின் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை.

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், சுல்தான்கள் / துக்ளக் படையெடுப்பின்போது திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் சிலை அடையும் அலைக்கழிப்பின் விவரணைகள் அட்டகாசமாகப் பதிவாகியுள்ளது. துலுக்க நாச்சியார் (சுரதானி) பற்றிய சித்திரம் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. பின்பு உல்லா கான் (முகமது பின் துக்ளக்) படையெடுப்பின்போது ரங்கநாதர் சிலையைக் காப்பாற்ற ஒரு குழுவே உயிரைத் தியாகம் செய்யும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. முக்கியமான விஷயம், எவ்வித மிகை உணர்ச்சியும் இன்றி, நடந்தது நடந்தவாறு இந்நூலில் விவரிக்கப்பட்டிருப்பது சிறப்பு. அதேபோல் இன்னொரு ரசனையான விஷயம், கங்காதேவி மதுரா விஜயம் நூலில், மீனாட்சி அம்மன் சொன்னதாக கம்பணாவுக்கு எழுதியிருக்கும் கடிதம். 

மதுரை சுல்தான்கள் பற்றி குறைவாகவே சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் அவ்வளவுதான் கிடைத்தனவோ என்னவோ.

என் தேர்வில் மிக முக்கியமான புத்தகம். புத்தகம் எழுதிய எஸ்.பி. சொக்கலிங்கத்துக்கு பாராட்டுகள்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-608-7.html

புத்தகத்திலிருந்து ஒரு பக்கம்:

:ms4

 

Share