Tag Archive for சாரு

மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு பதில்

மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கிறார், என்னுடைய வேலை எழுத்தாளர்களைக் கடத்தி வருவது என்று. பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்குமாம். இவர் எழுதும் இதே வெளியில்தான் நான் கடத்தி வருவதாக அவர் நினைத்துக்கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்களும் இதைப் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள். நான் பொய் எழுதுவதுமில்லை, பேசுவதுமில்லை. மேலும் ஒரு பதிப்பாளர் எழுத்தாளர் உறவின் சிக்கல்களை, அன்னியோன்னியத்தை வெளியில் சொல்வதுமில்லை. ஆனால் இதைப் படிக்கும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் தெரியும், கடத்தப்பட்டு வந்தார்களா இல்லையா என்பது.

உயிர்மையில் சாரு இருந்தபோது சாரு எழுதிய பதிவுகளே உதாரணம். தனியே எதற்கு இன்னொருவர் சொல்லவேண்டும்?

இன்னும் இன்றும் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அனைத்து முன்னாள் உயிர்மை எழுத்தாளர்களின் பதிவுகள் மட்டும் மனுஷ்யபுத்திரனுக்கு மறந்துவிடும் அல்லது கண்ணுக்குப் படாது. பழி மட்டும் இன்னொருவர் மேல்.

இலக்கிய அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை, திறமையும் இல்லை. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. மற்றபடி சாருவின் இலக்கியப் பங்களிப்புக்குப் பக்கத்தில்கூட நான் இல்லை. அதை மனுஷ்யபுத்திரன் வலிந்து சொல்லவேண்டியதுமில்லை. ஏனென்றால் நான் அதை க்ளெய்ம் செய்யவே இல்லை. ஒருவகையில் மனுஷ்யபுத்திரனே இந்த ஒப்பீட்டைத் தொடங்கி வைக்கிறார்!

சாதாரணமாக ஒரு பதிவு எழுதப்போய் அது இப்படியெல்லாம் போவது சுவாரஸ்யம்தான்.

இன்னும் என்னவெல்லாம் வருகிறது எனப் பார்க்கலாம்.

Share

Facebook Notes – 3

துக்ளக்கில் சாருவின் அறச்சீற்றம் – இலவச விளம்பரம் (07-ஜூலை-2011)

* இந்தியாவில் மதமாற்றம்தான் மதச்சார்பின்மை.

 * உண்மையைச் சொல்வதால் ஹிந்துத்துவவாதி முத்திரை.

 * மதமாற்றத் தடைச்சட்டம் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும்.

 * பூர்வீக மதமான ஹிந்து தர்மத்தை ஒழித்துவிடுவார்கள். (குறிப்பு: ஹிந்து தர்மம் என்பதைக் கவனிக்கவும்!)

 * காங்கிரஸ் அரசு இத்தாலியின் ப்ராக்ஸி.

 கூடவே தொட்டுக்கொள்ள ஊறுகாயாக அரபி இலக்கியம் உண்டு. வழக்கம் போல டெய்ல் பீஸில் கருணாநிதி அர்ச்சனை.

 இன்றே வாங்குவீர், இப்போதே படிப்பீர்.

 (இது இலவச விளம்பரம்தான். துக்ளக் எனக்கு பணமெல்லாம் தரவேண்டியதில்லை.)

இரண்டாம் குறிப்பு: தமிழ்ஹிந்துவெல்லாம் ஒரு தளமா? சாருவிடம் இருந்து படித்துக்கொள்ளுங்கள் ஐயா.

தெய்வம் நின்றாவது கொல்லவேண்டும் (04-ஜூலை-2011)

கௌரவம் திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் ஒரு கொலை செய்வார். சிவாஜியின் வாதத் திறமையால் வழக்கிலிருந்து தப்பித்துவிடுவார். அடுத்தமுறை கொலை செய்யாமலேயே அவர் மீது கொலைப்பழி விழுந்துவிடும். சிவாஜியின் வாதத் திறமையையும் மீறி அவருக்கு த்ண்டனை கிடைத்துவிடும்.

 அரசியல்வாதிகளின், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எதோ ஒன்றில் தப்பிக்கிறார்கள். எதோ ஒன்றில் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். படத்துக்கும் இவர்களுக்கும் ஒரே வித்தியாசம், இவர்கள் இரண்டிலுமே குற்றம் செய்திருப்பார்கள் என்பதுதான்.

 இன்றைய உதாரணம் சன் டிவியின் சக்ஸேனா. ஹோட்டல் சம்பந்தப்பட்ட தகராறு ஒன்றில் இவர் பெயர் அடிபட்டது. ஆனால் என்ன பிரச்சினை என்பது தெளிவாக வெளியில் வரவே இல்லை. எந்த பத்திரிகையும் கண்டுகொள்ளவும் இல்லை. இன்று இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கைதுக்கான புகார் பின்னணியில் உண்மை உள்ளதா என்பதெல்லாம் தெரியவில்லை. ஜெயலலிதா அரசு பழிவாங்கும் நோக்கோடு கைது செய்தது என்றெல்லாம் இனி கருத்துகள் வரலாம். (பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டாலும், கைதுக்கான சரியான காரணங்கள் இருந்தால் அதைச் செய்யவேண்டியதுதான். இது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்!) ஆனால் கருணாநிதி அரசு ஆட்சியில் இருந்தபோது சன் பிக்சர்ஸின் அதிகாரம் பற்றிப் பலர் புலம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கைது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். போக போக என்னவெல்லாம் நடக்கிறது என்பது தெரியவில்லை. பார்க்கலாம். நிறைய நோட்ஸ் எழுத முடிந்தால் மகிழ்ச்சியே!

தெய்வம் நின்றாவது கொல்லவேண்டும்.

சானல் 4 & ஜெயா டிவி (04-ஜூலை-2011)

சானல் 4ல் ஒளிபரப்பான போர்க்குற்றங்கள் வீடியோவின் ஒரு பகுதியை ஜெயா டிவி ஒளிபரப்பியதாக அறிந்தேன். நான் நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்பதால், நிகழ்ச்சி ஒளிபரப்பானது உண்மைதானா என்றறிய காத்துக் கொண்டிருந்தேன். ஜெயா டிவி செய்திருப்பது அதன் வாழ்நாள் சாதனை. தமிழக டிவிக்கள் எதாவது இதனைச் செய்யாமல் தமிழ்நாட்டு வெகுஜனங்களை அடையவே முடியாது. ஜெயா டிவிக்குப் பாராட்டு.

இதனை சன் டிவி செய்யவில்லை, கலைஞர் டிவி செய்யவில்லை என்பதைவிட்டுவிட்டு, எல்லா டிவிக்களும் இதை செய்யவேண்டும். அப்போதுதான் ஓரளவாவது இலங்கையில் என்னதான் நடந்தது என்பதன் ஒரு பகுதியாவது தமிழகத்துக்குத் தெரிய வரும்.

மெரினாவில் ‘மெழுகுவத்தி ஏந்தல்’ நிகழ்ச்சி முழுமையாக கவர் செய்யப்படதாதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. பிராபகரன் உயர்த்திப் பிடிக்கப்பட்டது பல ஊடகங்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கலாம். திருமாவேலன் விகடனில் ‘தனி நபர் முழக்கங்களை தவிர்த்துவிட்டு, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழத் தாயகம் மட்டுமே என்ற குரல் மட்டுமே உயர்ந்தது’ என்று எழுதியிருக்கிறார். 🙂 ஊடகங்கள் விடுதலைப்புலி ஆதரவு குரலை கண்டனம் செய்துவிட்டாவது, இந்த மெழுகுவத்தி கூட்டத்தை கவர் செய்திருக்கவேண்டும். வழக்கம்போல செய்யவில்லை.

ஊடகங்கள் இனிமேலாவது செயல்படுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

Share