Tag Archive for கன்னடம்

Yad Vashem Novel

யாத் வஷேம் – யாத் வஷேம் என்றால் நினைவிடம் என்று பொருள். வதைமுகாம்களில் ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக ஜெருசலத்தில் இஸ்ரேல் நிறுவி இருக்கும் நினைவிடம் இது. இதைப் பின்னணியாக வைத்து ஒரு நாவல் எழுத நினைத்ததே பெரிய விஷயம். நேமிசந்த்ரா வாழ்த்துக்குரியவர். கன்னட நாவல், தமிழில் கே.நல்லதம்பி சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். கன்னடம் எனக்குப் படிக்கத் தெரியாது என்பதாலும், கன்னட ஆடியோ புத்தகம் கிடைக்கவில்லை என்பதாலும் சில இடங்களை ஒப்பிட முடியவில்லை என்றாலும், சிறப்பான மொழிபெயர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 350 பக்க நாவலை ஒரே நாளில் முடித்தேன். அந்த அளவுக்கு வேகம். எதிர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

நாவலின் முதல் நூறு பக்கங்கள் மிக மிக அருமை. மானுட தரிசனம் என்று சொல்வார்களே, அப்படி ஒரு தரிசனம். இந்தியாவில் தஞ்சமாகும் யூதச் சிறுமியைத் தன் குடும்பப் பெண்ணாக்கிக் கொள்ளும் இந்திய ஹிந்து வொக்கலிகா குடும்பம் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது. இந்த நாவலின் அற்புதமான பக்கங்கள் இவை. அதிலும் கன்னடத்தில் எப்படி எழுதி இருப்பார்கள் என்கிற யூகத்துடன் வாசித்த எனக்கு மகத்தான அனுபவமாகவே அமைந்தது.

தன் குடும்பத்தைத் தேடி யூதப் பெண் தன் முதிய வயதில் தன் கணவனுடன் மேற்கொள்ளும் பயணமும், யூத வதைமுகாம்களைப் பார்ப்பதும், யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அது வரை நினைத்து வருந்தும் பெண், ஒட்டுமொத்த உலகின் அடக்குமுறைகளுக்கு எதிராக நினைக்கத் தொடங்குவதும் அடுத்து வருகின்றன.

இறுதியில் தன் அக்காவைச் சந்திக்கும் கதாநாயகியின் குடும்பம் எதிர்கொண்ட அராஜகங்கள் விவரிக்கப்படுகின்றன. எல்லா யூதக் குடும்பத்திற்கான ஒட்டுமொத்த சித்திரமும் அதுவே.

அடுத்த ஐம்பது பக்கம் – என் பார்வையில் திருஷ்டிப் பொட்டு என்றே சொல்லவேண்டும்.

அதுவரை நாவல் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்காகப் பரிதவிப்புடன் நாவல் பேசுகிறது. இந்தியா அந்த யூதப் பெண்ணை எப்படி அரவணைத்தது என்று சிலாகிக்கிறது. இந்தியா பல்வேறு மோழி மத இன வேறுபாடுகளுடன் இருந்தாலும், அதன் அரவணைப்பில் எந்தக் குறையும் இல்லை என்று கொண்டாடுகிறது. தன் அக்காவைக் கண்டதும் அதுவரை இருந்த நினைவுகள் தர்க்கமாக மாற, மத ரீதியான ஒட்டுமொத்த கொடுமைகளுக்காக அந்தக் கதாபாத்திரம் பேச ஆரம்பிக்கிறது., எழுத்தாளர் நேமிசந்த்ராவின் ஒட்டுமொத்த மத விடுதலையை ஒட்டிய தர்க்கம் இது என்று கொண்டாலும், என்னளவில் அது நம்ம ஊர் செக்யூலர் ஜல்லியாகவே தெரிந்தது.

எந்த ஒரு மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை என்பது வரை சரி, ஆனால் யூத மண்ணில் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு நின்ற மனிதர்களை அதுவரை கடுமையாகப் பேசிய நாவல், அதிலிருந்து அவர்கள் பக்க நியாயத்தையோ அல்லது இரக்கத்தையோ பேச ஆரம்பிப்பது ஏற்கும்படியாகவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் ஹிட்லர் வரக் கூடும் என்கிற தியரியை, ரத்தமும் சதையுமாக வேதனையை உணர்ந்தவர்களிடம் பேசுவதெல்லாம் அபத்தம். யதார்த்த கொடூரங்களில் இருந்து தான் மேலெழுந்துவிட்டதான பாவனை என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை என்றே எனக்குப் பட்டது. இந்தப் பாவனை கதாநாயகியுடையதாகவும் இருக்கலாம், நேமிசந்த்ராவினுடையதாகவும் இருக்கலாம்.

போக போக தர்க்கங்கள் எல்லை மீறிப் போகின்றன. இது நாவலா தர்க்கமா என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு. அதிலும் கடைசி இரு அத்தியாயங்களில் தன் வீட்டுக்கு வரும் முஸ்லிம் பெண்ணுக்கு அடைக்கலம் தருவதெல்லாம் தவறில்லை, ஆனால் சுத்த முற்போக்கு அபத்த நாடகம்.

இந்த நாவலை எப்படி எழுதினேன் என்று நேமிசந்த்ரா கடைசி இருபது பக்கங்களில் எழுதி இருக்கிறார். நான் நாவலை வாசிக்கும்போது என்னவெல்லாம் நினைத்தேனோ அதற்கு ஏற்றாற்போன்ற காரணங்களை அதில் பார்க்க முடிந்தது. நாவலின் கடைசி அத்தியாத்தைத் திருத்தி எழுதியதாகச் சொல்லி இருக்கிறார். இன்றைய செக்யூலர் அரசியல் சரி நிலைக்கு ஏற்ப நாவலை மாற்றி எழுதியது போல் எனக்குத் தோன்றியது. நாவலின் முதல் இருநூறு பக்கங்களில் நாவலில் இருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வழக்கமான ஒரு நீதியைச் சொல்லும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது துரதிர்ஷ்டம்.

முக்கியமான நாவல். நிச்சயம் வாசிக்கவேண்டிய நாவல். யூதர்களின் வாழ்க்கையும் இந்தியர்களின் வாழ்க்கையும் ஒப்பிடப்பட்டு இத்தனை விரிவாக எந்த நாவலிலும் இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன்.

Share

Two movies

Little hearts (M) – சுமாரான படம். ஷேன் நிகம்-க்காகப் பார்த்தேன். சிறிய புன்னகை ஆங்காங்கே வருகிறது என்றாலும் மொத்தத்தில் அறுவை.

கோடி (K) – பார்க்கலாம். மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படம். கொஞ்சம் இழுவையால் நீர்த்துவிட்டது. என்னைப் போல் தனஞ்செய் பிடிக்கும் என்பவர்கள் பார்க்கலாம்.

இரண்டும் ப்ரைமில் கிடைக்கிறது.

Share

Some movies

உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.

ப்ரைமில் கிடைக்கிறது.

அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்த‌விதம்‌ அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க‌ விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.

Share

aa dhinagalu – Kannada movie

ஆ தினகளு (K) – 2006ல் வந்த கன்னடப் படம். இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி டிவிட்டரில் சீனு என்கிற நண்பர் பரிந்துரைத்திருந்தார் என்பதால் பார்த்தேன்.

சில படங்களைவிட அவற்றின் நிஜப் பின்னணி சுவாரஸ்யமாக இருக்கும். ஹிந்தியில் வெளியான ருஸ்டம் போல. ஆ தினகளு படமும் அப்படியே.

கேங் வார் திரைப்படம். பெங்களூரில் இரண்டு ரௌடிகளுக்கு இடையேயான, அவர்களுக்கும் போலிஸுக்கும் இடையேயான சண்டையும் கொலைகளுமே படம். அக்னி ஸ்ரீதர் கன்னடத்தில் எழுதிய தாதாகிரிய தினகளு என்கிற புத்தகத்தின் அடிப்படையிலான திரைப்படம்.

அக்னி ஸ்ரீதர் ஒரு ரௌடியாக இருந்தவர். இரண்டு கேங்கில் ஒரு கேங் தலைவரைக் கொல்கிறார். அதுவும் திட்டம் போட்டு, அவரை தன் இடத்துக்கு வரவழைத்து, தன் மேல் நம்பிக்கை வர வைத்து, சரியான நேரத்தில் போட்டுத் தள்ளுகிறார். இதற்கிடையில் எதிரி கேங் இவரைத் தீர்த்துக் கட்ட நினைக்க, அவர்களிடம் தெளிவாகச் சொல்கிறார், நான் கொல்லப் போவதே உன் எதிரியைத்தான் என்று. எதிரி கேங் தலைவர் அக்னி ஸ்ரீதருக்கு உதவி செய்யத் தயாராகிறார். கொலை நடந்து முடிகிறது. அதுவும் மிக எளிதாக. அக்னி ஸ்ரீதரும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஜெயிலுக்குப் போகிறார்கள்.

தண்டனை முடிந்து வெளியே வரும் அக்னி ஸ்ரீதர் தன் வாழ்க்கையில் நடந்தவற்றைப் புத்தகமாக எழுதுகிறார். எழுத்தாளராகிறார். ஆங்கிலத்தில் My days in the underworld – Rise in the Bangalore mafia என்று மொழிபெயர்ப்பாகிறது. பின்னர் ஆ தினகளு திரைப்படமாகிறது. கிரிஷ் கர்நாட் கதையில் உதவுகிறார். சிறிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார்.

ஆ தினகளு படம் 2006ல் வந்தது என்றாலும் இன்றும் முழுமையாகப் பார்க்கமுடிகிறது. ஆரம்பக் காட்சிகளைக் கொஞ்சம் சகித்துக் கொள்ளவேண்டும். நடிக்கவே வராத ஹீரோ, காதல், பெரிய பிஸினஸ்மேன் என்றெல்லாம் பதினைந்து நிமிடங்கள் அலைபாயும் கதை பின்னர் அக்னி ஸ்ரீதரின் கதைக்குள் வரவும் சூடுபிடிக்கிறது. படத்துக்காகப் பல இடங்களில் உண்மை நிகழ்வுகளில் இருந்து கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள்.

இந்நாளில் நாம் மறந்துபோய்விட்ட நடிகர்கள், மொத்தமாக ஓய்வுபெற்றுவிட்ட நடிகர்கள், மரணமடைந்துவிட்ட நடிகர்களைப் படத்தில் இளமையாகப் பார்க்கும்போது ஏனோ ஆச்சரியமாக இருக்கிறது.

இரண்டு ரௌடி கேங்குகளும் வரும் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக இருக்கின்றன. புத்தகத்தில் இல்லாத, நெஞ்சை வருடும் க்ளிஷே காட்சிகளும் உண்டு. ஆனாலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

படம் பார்த்து முடித்ததும் அக்னி ஸ்ரீதர் பற்றித் தேடி தெரிந்து கொண்டு, அவரது யூ டியூப் சேனலில் ஆ தினகளு என்று கிடைக்கும் சில வீடியோக்களைப் பார்த்து, (இந்த வீடியோக்கள் படத்தில் இல்லாத பல விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன), பின்னர் அவரது ஆங்கிலப் புத்தகத்தைத் தரவிறக்கி, இத்திரைப்படம் தொடர்பான பக்கங்களை மட்டும் மேலோட்டமாகப் படித்ததில் ஒரு முழுமையான அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்துக்காக இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம். அந்தக் கால பெங்களூருவில் எப்படி ரௌடிகளின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது என்றும் புரிந்துகொள்ளலாம்.

இப்படத்துக்கு இசை இளையராஜா. இரண்டு சிறிய பாடல்கள் – கிறங்கடிக்கின்றன. அதிலும் ஆ தினகளு பாடல் (எங்கோ ‘தவிக்கிறேன் தவிக்கிறேன்’ பாடலை நினைவூட்டுகிறது எனக்கு!) மறக்கவே முடியாத ஒன்று. பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும். இன்னொரு பாடல் ‘சிஹி காலி’ ராஜா கன்னடத்தில் பாடியது.

ஆ தினகளு படம் ஸீ5ல் சுமாரான தரத்தில், சப்டைட்டில் இல்லாமல் கிடைக்கிறது.

Share

சில திரைப்படங்கள்

ஒரு தெக்கன் தல்லு கேசு (M) – மிடில. மகேஷிண்ட பிரதிகாரம் போல இன்னொரு ஈகோ மோதல் திரைப்படம். அந்தப் படமே எனக்கு ஒட்டவில்லை. இது இன்னும் மோசம். அதிலாவது ஃபகத் இருந்தார். இதில் பிஜு மேனன். ஈகோவில் ஒருத்தனை வெட்டும் அளவுக்கு ஒன்றும் நடந்திருக்கவில்லை. நம்பு என்றால் நம்பவேண்டும் என்பதுதான் மலையாள ஈகோ மோதல் திரைப்படங்களின் பாணி போல. பதிலுக்கு நகைச்சுவையகப் பழி வாங்குவாராம். அடேய்களா!

பிஜு மேனன் என்னதான் நன்றாக நடித்தாலும் என்னவோ ஒட்டாது எப்போதும். பல்லைக் கடித்துக்கொண்டு எப்படியோ பார்த்து முடித்தேன்.

2018 (M) – கேரளாவில் 2018ல் வரலாறு காணாத மழை, வெள்ளம். இதனால் 450க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகிறார்கள். இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமே 2018.

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு இல்லாத மழை கேரளாவைப் புரட்டிப் போடுகிறது. கேரள மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கெல்லாம் ஆளாகிறார்கள். அவர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நமக்கு 2015 வெள்ளம் தந்த அனுபவங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னை சிறுகதைப் போட்டியில் வந்திருந்த இருந்த கதைகளில் பெரும்பாலானவை 2015 வெள்ளத்தை ஒட்டியவையே. எந்த அளவுக்கு சென்னை வெள்ளம் சென்னை மக்களை புரட்டிப் போட்டது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதேதான் 2018 திரைப்படமும். கேரளாவைப் பொறுத்தவரை பார்த்தவர்கள் நிச்சயம் கதறி இருப்பார்கள். படத்தின் கலெக்ஷனும் அதை உறுதி செய்கிறது.

இதுபோன்ற திரைப்படங்களுக்கு உரிய அதே கதைதான். ஒவ்வொரு குடும்பமாகக் காண்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எப்படி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மக்களும் தானே ஹீரோவாகி எப்படி அனைவரையும் மீட்கிறார்கள் என்பதைப் பரபரப்பாகக் காட்டுகிறார்கள். சென்னையில் நடந்தது போலவே அங்கேயும் கர்ப்பிணிப் பெண் ராணுவத்தால் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட காட்சியும் உண்டு. ஒரே ஒரு இளம் ஜோடி மட்டும் வெள்ளத்தில் ஒட்டுமொத்தமாகப் பிரிய நேர்கிறது, டைட்டானிக் போல.

கேரளாவில் குண்டு வைக்கப் போகும் தமிழன் ஒருவன் மனம் திருந்தும் தனி டிராக்கும் உண்டு. இப்படிப் பல டிராக்குகள் தனித்தனியே அலைவதுதான் படத்தின் பெரிய பலவீனம்.

இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சம், வெள்ளம் வெள்ளம் என்று பயமுறுத்தாமல் படத்தின் போக்கிலேயே வெள்ளத்தின் அளவைக் கூட்டிக் கொண்டே போனதுதான். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், பல நல்ல நடிகர்கள் சின்ன சின்ன காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.

டைட்டானிக் போலவே அந்த ஜோடியின் உண்மையான அன்பை இன்னும் ஆழமாகக் கொண்டு போயிருந்தால் படம் அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்கும். இப்போது இது கேரளாவுக்கான ஒரு படமாகவே இருக்கிறது.

ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

புருஷ பிரேதம் (M) – யாரோ ஒருவர் எப்போதோ இது மிக நல்ல படம் என்று சொல்லிவிட, இத்தனை நாள்களாக இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இன்றுதான் அந்த சனி எனக்குப் பிடித்தது.

சமீபத்தில் பார்த்த மலையாளப் படங்களில் மிக மோசமானது இதுவே. இந்தப் படத்தை யார் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என இப்போது நினைவுக்கு வரவில்லை. இரண்டரை மணி நேரத் திரைப்படத்தை 5 மணி நேரம் பார்த்தது போன்ற உணர்வு. கொஞ்சம் கூட கதையோ சுவாரஸ்யமோ இல்லை. ஆனால் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசிக் கொள்வதாகவும் மிகுந்த மாடர்னாகப் படம் எடுத்ததாக நினைத்துக் கொண்டு சாவடித்து விட்டார்கள். யதார்த்தத்துடன் ஒரு போலீஸ் சந்திக்கும் அத்தனை கஷ்டங்களையும் காண்பிப்பதாக மனதில் உருவகித்துக் கொண்டு உருவான வினோத வஸ்துவிடம் நான் மாட்டிக்கொண்டு விட்டேன்.

ஸப்த ஸாகரதாச்சே யெல்லோ – ஸைட் பி (K) – காவியம் போன்ற ஒரு படத்துக்கு இப்படி ஒரு இரண்டாம் பாகமா என்று பலர் புலம்பியிருந்தாலும், எனக்குப் பிடித்திருந்தது. தனக்குக் கிடைக்காத காதலி இன்னொருவனை மணந்துகொண்டு குழந்தையுடன் வாழ்ந்தாலும், அவள் கனவுகண்ட சின்ன சின்ன விஷயங்கள் கூட நிறைவேற வேண்டும் என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்யும் ஹீரோ கதாபாத்திரம். அதே சமயம் அதைப் பரிபூரணமாகச் செய்யவும் முடியாமல் அவனைக் கொல்லும் வரை செல்லும் சைக்கோத்தனம். இந்த இரண்டுக்கும் இடையே ரக்‌ஷித் செட்டி – க்ளிஷேவாகத் தெரிந்தாலும் சொல்கிறேன் – வாழ்ந்திருக்கிறார்.

காதலியை மையமாக வைத்து முன்னகர வேண்டிய திரைப்படத்தில் அழகிய விபத்து ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது. பாலியல் தொழிலாளியாக வரும் நடிகை நடிப்பில் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். இதனால் ஹீரோவும் கதாநாயகியும் ஒன்றாகச் சேர வேண்டும் என்னும் பரபரப்பே நமக்குள் எழாமல் போகிறது. அப்படி ஒரு பரபரப்பை இந்தப் படம் கோரவில்லை என்பதால் பெரிய இழப்பில்லை.

ஒற்றைக் காது கேட்காமல் வரும் வில்லன் நடிகர் முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகத்திலும் தன் முக அசைவுகளாலேயே அனாயசமாக நடிக்கிறார்.

முதல் பாகத்தை உணர்வுரீதியாக ரசித்தவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். முதலிரண்டு பாகங்களும் சேர்ந்த ஒற்றை நாவல் என்ற புரிதலுடன் பார்த்தால் மறக்க முடியாத அனுபவமாக மாறும்.

பிரைமில் கிடைக்கிறது.

18+ படம்.

ஒரு கட்டுரையாளர் சொன்னார் என்பதற்காக, நல்ல தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்காமல் விட்டுவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி மேலிட, எறும்பு திரைப்படத்தை 45 நிமிடங்கள் பார்த்தேன். அதுவே பல்லைக் கடித்துக் கொண்டுதான் பார்த்தேன். அதற்கு மேல் பொறுமை இல்லை. இந்தத் திரைப்படத்தை மலையாள நல்ல திரைப்படங்களுடன் ஒப்பிடுவது எல்லாம் கலைக்கும் மலையாளத் திரைப்படங்களுக்கும் செய்யும் துரோகம். இன்னும் மனதில் நிறைய கொட்டிக்கொண்டு வருகிறது. ஆனால் இதுபோன்ற திரைப்பட முயற்சிகளை, முயற்சிகள் என்ற அளவிலாவது நோகடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அமைதியாகிறேன்.

அதே சமயம் எல்லா மலையாளத் திரைப்படங்களும் நல்ல திரைப்படங்கள் அல்ல. அவற்றிலும் பல போலிகள் உண்டு. அப்படிப்பட்ட திரைப்படங்களை இங்கே பலர் ஏற்றிப் பிடிக்கிறார்கள் என்று கட்டுரையாளர் சொல்வது உண்மைதான். அது தனி.

கைவா (K) – பொழுது போகாத நேரமொன்றில் இந்தக் கன்னடப் படத்தைப் பார்த்தேன். ஏன் பார்த்தேன்? 1980களின் பெங்களூரைக் கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னதற்காக. யார் சொன்னது? படத்தை எடுத்தவர்களே! இங்கேதான் நான் ஏமாந்துவிட்டேன். அந்தக் கால பெங்களூரில் 0.1% கூட காட்டவில்லை.

படத்தின் மேக்கிங் நன்றாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட தமிழ்ப் படங்களைப் போன்ற கலர் டோனைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் கதை? அரதப்பழசான கதை. இரண்டு கேங்குகளுக்கு இடையே உள்ள பகைமையில் அப்பாவிப் பெண், அதிலும் வாய் பேச முடியாத பெண் சீரழிக்கப்பட, அவர்களைக் கொடூரமாகப் பழி வாங்குகிறான் ஹீரோ. இதில் ஹீரோ ஹிந்து, ஹீரோயின் முஸ்லிம். ஆனால் இதெல்லாம் சினிமாவில் ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லாம் அப்படி அப்படியே நடக்கிறது.

1983ல் ராஜ்குமார் நடித்த பக்த பிரகலாதா ரிலீஸாகிறது. அதில் புனித் ராஜ்குமார் பிரகலாதன். ராஜ்குமார் ஹிரண்யகசிபு. பெங்களூரில் கபாலி தியேட்டரிலும் அப்படம் ரிலீசாகிறது. அப்படத்தின் உச்சகட்ட காட்சியில் ராஜ்குமார் தன் கதையுடன் வெகுண்டெழுந்து, ‘இங்கே இருக்கிறானா உன் ஹரி?’ என்று கோபம் கொண்டு ஒவ்வொரு தூணாக உடைக்க, கடைசி தூணை உடைக்கும்போது, அருகே இருந்த கங்காராம் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து தியேட்டர் மேல் விழுந்ததில் 123 பேர் மரணமடைகிறார்கள்.

படம் திரையிடப்பட்டதும், கட்டடம் தியேட்டர் மேல் இடிந்து விழுந்து படம் பார்த்தவர்கள் இறந்ததும் உண்மை. ராஜ்குமார் அடித்தபோது இடிந்தது என்பது ஒரு மித். இதைத் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய சோகத்தை படத்தில் ஊறுகாய் போலத் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு விஷயத்தைத் தவிர படத்தில் எதுவுமில்லை.

மஞ்ஞுமெள் பாய்ஸ் (M) – ஒரு முறை பார்க்கலாம். இதுமாதிரியான சர்வைவல் வகைத் திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைப்பதில் எப்போதுமே சவால் இருக்கும். பரதனின் மாலூட்டியில் இருந்து இதைப் பார்க்கலாம். கதைக்குள் வருவதற்குள் பாடாய்ப் படுத்திவிடுவார்கள். அப்படிக் கதைக்குள் வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாது. Trapped (H), Helen (M) எல்லாம் இப்படித்தான்.

இந்தப் படத்தில் நண்பர்கள் அனைவரும் கொடைக்கானலுக்குச் செல்லும் வரை படம் படு இயல்பு. நண்பர்களின் ஆரவாரத்தைத் திரையில் அப்படியே கொண்டு வந்துவிட்டார்கள். கொடைக்கானலை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. ஒரு நண்பன் குழிக்குள் விழும் காட்சி பதைபதைப்பு. அதன்பின்பு படம் அப்படியே நிற்கிறது. மேக்கிங், நடிப்பு எல்லாம் நன்றாக இருந்தும் அதற்கு மேல் ஒன்றும் இல்லை. நண்பனை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்று இன்ச் இன்ச்சாகக் காட்டுகிறார்கள். கயிறு இழுக்கும் போட்டி வரும்போதே, இது பின்னால் உதவும் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சி புல்லரிப்பாகத்தான் இருந்தது.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது – கண்மணி அன்போடு என்ற பாடல் வரும் இடம். தொடக்கத்தில் அத்தனை பெரிய திரையில் அந்த இசையைக் கேட்டதும் மனம் திருநெல்வேலியையும் ரத்னா தியேட்டரையும் பதினைந்து வயது நண்பர்களையும் தேடத் தொடங்கியது. ஏங்க ஏங்க அழுகை வந்தது என்கிற வரி வரும் காட்சியில் நிஜமாகவே கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது. இப்படியான ஒன்றிரண்டு காட்சிகளைத் தாண்டி, பெரிதாக படத்தில் ஒன்றும் இல்லை.

***

2004ல் கல்யாணம் முடிந்து தேனிலவுக்குக் கொடைக்கானல் போனோம். குணா குகையைத் தூரத்தில் இருந்து பார்த்தோம். உள்ளே இறங்கிப் போய்ப் பார்க்கலாம் என்று மனைவி சொன்னாள். மஞ்ஞுமெள் பாய்ஸ் படத்தில் இப்போது காண்பிக்கப்படுவது போல கேட் இருந்த நினைவில்லை. இறங்கிக் கொஞ்சம் தூரம் நடந்து போய்ப் பார்க்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். அதிலிருந்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மனைவி சொல்லிக்கொண்டே இருந்தாள், குணா குகையைப் பார்த்திருக்கலாமே என்று. மஞ்சும்மெள் பாய்ஸ் பார்த்தவுடன், ‘எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சிருக்கோம் பாத்தியா?’ என்று சொல்ல நினைத்தேன். ‘குழிலயே விழுந்திருக்கலாம்’ என ஒரு பதில் சொல்லும் வாய்ப்பை அவளுக்குத் தரக் கூடாது என்பதற்காகவே அதைச் சொல்லவில்லை.

கேப்டன் மில்லர் – ஏன் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம் என்று நொந்து கொள்கிறேன். ஏன் இந்தத் திரைப்படத்தை எடுக்கிறோம் என்று யாருக்கும் தெளிவில்லை. இது சுதந்திரப் போராட்டத் திரைப்படமா அல்லது தலித்துகள் கோவிலுக்குள் செல்லும் உரிமையை மீட்கும் திரைப்படமா அல்லது காந்திய – தீவிரவாதப் போக்கினரிடையே உள்ள வேற்றுமைகளைச் சொல்லும் படமா என்று எதிலும் ஒரு தெளிவில்லை.

இன்றைய கால மனநிலையை அன்றைய கால சுதந்திரப் போராட்டக் களத்துக்குள் வைத்து எதையோ ஒட்டிச் செயற்கையாக ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, எடுத்த விதம் எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம். அந்தக் கால பீரியடைத் திரையில் கொண்டு வரத் தெரியாமல் ஒதுக்குப்புறமாகவே பெரும்பாலான காட்சிகளை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். கோவிலில் கூடவா செயற்கைத்தனம்? வசனங்களிலும் அப்படியே. மூடிட்டு இரு என்று கடந்த பத்து வருடங்களாக நாம் பேசுவதெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே திரைப்படத்தில் வசனமாக வருகிறது.

நடிப்பு – ஐயையோ. அத்தனை பேரும் ஓவர் ஆக்டிங். தனுசு இந்தக் கால ஹீரோ போல் ஸ்லோமோஷனில் நடந்து வந்து சுட்டுக் கொல்கிறார்‌. ஆங்கிலேயர்கள் வசம் இருக்கும் ஒட்டுமொத்தத் துப்பாக்கிகளை விடவும், கையெறிக் குண்டுகளை விடவும் புதைகுண்டுகளை விடவும் தனுஷிடம் கூடுதலாக இருக்கிறது. எப்படி வந்தது, யார் கொடுத்தார்கள் எதுவும் தெரியாது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதப் பாதை என்பது இத்தனை கேவலமாக இல்லை. அது கூடுதல் அர்ப்பணிப்புடன், கடவுள் நம்பிக்கையுடன், ஒட்டுமொத்த இந்திய மக்களையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்தது. இவர்கள் எடுக்க நினைத்தது நக்சலைப் பற்றிய திரைப்படம். எடுத்தது சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் ஒரு திரைப்படம்.

இந்தக் கொடுமையை எப்படித்தான் தியேட்டரில் பார்த்தார்களோ.

நேரு (M) – தொடர்ச்சியாக வளவளவென்று மலையாளம் பேசும் ஒரு திரைப்படம். மலையாள வசனங்கள் இத்தனை பேசப்பட்டாலும் பிடிக்கும் என்பவர்களுக்கான படம்.

எப்படியாவது த்ருஷ்யம் போல ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் அதே போன்ற ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்னொரு திரைப்படம். அதே ஜித்து ஜோசப். அதே மோகன்லால்.

மையம் கொஞ்சம் நம்பும்படியாக இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ். நோ மீன்ஸ் நோ என்பது போல இதைப் புரிந்து கொண்டால்தான் இந்தப் படத்துடன் ஒன்ற முடியும்‌. ஏனோ என்னால் முடியவில்லை.

When rape is inevitable என்றொரு பழமொழி உண்டு. யதார்த்தத்தில் அது கொடூரமானது. விக்டிம்களுக்குத்தான் அது புரியும். இந்தப் படம் அங்கே சறுக்குகிறது.

எம்.கே.மணியின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்து தொந்தரவு செய்தது, அக்கதைக்கும் இப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட.

Share

காந்தாரா

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்க்காத திரைப்படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் பேரதிர்ச்சியாக இருக்கும். குறிப்பாகத் தமிழில் மிக அதிகம். ஆம், நிறைய முக்கியமான திரைப்படங்களைப் பார்க்கவில்லை. என்னவோ ஒரு சலிப்பு, வேலைப்பளுவும் சின்ன காரணம்.

நேற்றுதான் காந்தாரா பார்த்தேன். 🙂

ஹே ராம் திரைப்படத்துக்கு அடுத்து நான் மிகவும் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்த படம் இதுவே. ஒவ்வொரு ஃப்ரேமிலும் உழைப்பு, பிரம்மாண்டம், எமோஷன் என அசத்திவிட்டார்கள். கதை என்று பார்த்தால், பெரிய புதுமை எல்லாம் இல்லை. ஆனால் அதை கிராம தெய்வ வழிபாட்டுடன் இணைத்ததுதான் பெரிய விஷயம்.

படம் ஓடுமா ஓடாதா, யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், நாம் நம்பும் கதைக்கு 100% உயிரைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் திரைப்படத்தின் ஆதார விதி. இயக்குநர், நடிகர் என அனைவரும் இந்தப் புள்ளியில் ஒருங்கிணைய வேண்டும். இந்தப் படத்தில் அது நிகழ்ந்திருக்கிறது.

பஞ்சுர்ளி தெய்வ கடாக்‌ஷம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் பன்றியை வேட்டையாடுகிறான் என்ற இருமைப் புள்ளி மிக அருமை. இதிலேயே எல்லாம் சரியாக அமைந்துவிட்டது.

ரிஷப் ஷெட்டிக்குள் குலிகா தெய்வம் வரவும், வெறி கொண்டது போல் அவர் நடித்த நடிப்பு அசரடித்துவிட்டது. படம் அங்கேயே முடிந்துவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு பூத கோலா (தெய்வ ஆட்டம்) ஆட்டத்தைப் பொறுமையாகக் காண்பிக்கிறார்கள். அதில் அனைவரின் கைகளையும் இணைத்து ஒன்றாக்கி, ஓ ஓ என்ற சத்தத்தை மட்டும் தரும் காட்சி – புல்லரிக்க வைக்கிறது.

கடலோரக் கிராமக் கன்னட வட்டார வழக்கு வெறி கொள்ள வைத்துவிட்டது. பல வசனங்களை நிறுத்தி நிதானமாகக் கேட்டேன்.

ரிஷப் ஷெட்டி, ராஜ் ஷெட்டி, ரக்‌ஷித் செட்டி மூன்று பேரும் கன்னடத் திரையுலகத்தை எங்கோ கொண்டு போகப் போகிறார்கள். இதில் ரக்‌ஷித்தும் ரிஷப்பும் கடலோரக் கிராமக் கதைகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் போல. சப்த சாஹரக்காச்சே எல்லோ – சைட் ஏ படத்தில் கடலையைக் கதாநாயகி கேட்கும் காட்சியும், உலிதவரு கண்டந்தெ (மறக்க முடியாத திரைப்படம்) படத்தில் வரும் கடலலைகளின் சத்தமும் இன்னும் கண்ணில் நிற்கிறது.

Share

திரைப்படங்கள்

ன்னா தான் கேஸு கொடு (M)

படம் மிகவும் சீரியஸான படமாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கினேன். ஆரம்பக் காட்சிகளிலேயே ஒருவிதமான ப்ளாக் காமெடி போன்று முயன்றிருந்தார்கள். நமக்கு இது ஒத்துவராதே என்று தோன்றியது. சரி, முழு படத்தையும் பார்ப்போம் என்று பார்த்தேன்.

சில நம்ப முடியாத காட்சிகளைக் கடந்துவிட்டால், சில எரிச்சலான காமெடிகளைக் கடந்துவிட்டால், சந்தேகமே இல்லாமல் இத்திரைப்படம் அற்புதமான அனுபவம்.  

குஞ்சாக்கோ போபனுக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமையும். உடல்மொழியும் மேக்கப்பும் நடிப்பும் அற்புதம். ஆனால், நீதிபதியாக வரும் குன்ஹி கிருஷ்ணன் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்து பின்னர் திருந்திய ஒரு சாமானியன், அசுர பலம் பொருந்திய அரசை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடுகிறான். நீதிமன்றக் காட்சிகள்தான் படம் முழுக்க. ஆனால் படம் தொய்வில்லாமல் போகிறது. காரணம், நடிகர்களின் இயல்பான நடிப்பு. அரசு வக்கீல்களும், குற்றம் சுமத்தப்பட்டவனின் வக்கீலும், நாம் பார்ப்பது நிஜ நீதிமன்றக் காட்சிகளையோ என்னும் எண்ணத்தை வரவழைக்கிறார்கள்.

ஒரு நீதிபதி ஏன் ஒரு குற்றவாளிக்கு இத்தனை இடம் தரவேண்டும், எப்படி நினைத்தபோதெல்லாம் ஒரு திருடனால் அமைச்சர் முதல் முதல்வர் வரை சந்திக்க முடிகிறது என்பதையெல்லாம் மறந்துவிட்டால், இத்திரைப்படம் நம்மை அள்ளிக்கொள்ளும்.

சாலையில் இருக்கும் ஒரு பள்ளத்துக்கு எப்படி அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும் என்பதைத் தாண்டி,  வழக்கு தொடுக்க முடிந்து அதில் அமைச்சருக்குத் தண்டனையும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ரீதியில் இப்படத்தை அணுகவேண்டும்.

நடிகர்களின் நடிப்பாலும் வித்தியாசமான மேக்கிங்காலும் நம்பவேமுடியாத திரைப்படத்தைக் கூட பேரனுபவமாக மாற்ற முடியும் என்பதை இந்த மலையாளத் திரைப்படம் ஆயிரமாவது முறையாக நிரூபிக்கிறது.

மாளிகப்புரம் (M)

உன்னி முகுந்தனின் அழகான முகத்துக்காகப் பார்க்கலாம். மோடி, மோகன் பகவத்துக்கெல்லாம் நன்றி போட்டு ஆரம்பிக்கும் தைரியம் கேரளா வரை வந்துவிட்டது.

முன்பு இதே போல் நந்தனம் என்றொரு மலையாளப் படம் கேரள பக்தர்களைக் கட்டிப் போட்டது. எனக்கும் அந்தப் படம் ஓரளவு பிடித்திருந்தது. குருவாயூரப்பன் மனிதனாக வரும் படம். தமிழில் தனுஷ் நடித்து வெளிவந்து மோசமான தோல்வியைத் தழுவியது. சீடன் என நினைக்கிறேன்.

மாளிகப்புரம் மிகவும் எளிமையான கதையாகிவிட்டது பலவீனம். முதல் அரை மணி நேரம் படுத்தல். அந்தச் சின்ன பெண்ணும் பையனும் வாவ்.

சின்ன பெண்ணை முறைத்துப் பார்க்கும் வில்லன் காட்சிகளைப் பார்க்கவே முடியவில்லை. வில்லன் தமிழன். இதற்கு முன்பு நான் பார்த்த கூமன் படத்திலும் வில்லன் தமிழன். நாம் பிறருக்குச் செய்வதையே பிறர் நமக்குச் செய்வார்கள்.

கூமன் (M)

ஜித்து ஜோசப்பின் மலையாளத் திரைப்படம். அட்டகாசமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, இடைவேளை வரை புருவத்தை உயர்த்த வைக்கிறது. அதற்குப்பின் எங்கெல்லாமோ அலைபாய்கிறது. ஏன்டா இந்தக் கொடுமையைப் பார்த்தோம் என்ற எரிச்சலில் அப்படியே நிறுத்தி விடலாமா என்னும் அளவுக்கு கோபத்தை வரவழைக்கிறது‌. வேஸ்ட் ஆப் டைம். திருடன் மணியனாக வரும் ஜாஃபர் இடுக்கியின் நடிப்பு பிரமாதம்.

21 Hours (K)

எனக்கு ஏனோ தனஞ்செய் பிடிக்கும். ஆனால் இந்தக் கன்னடப் படம் எல்லா வகையிலும் திராபை. இப்போதும் தனஞ்செய்யைப் பிடித்தே இருக்கிறது. ஆனால் இப்படி இன்னும் நான்கு படங்கள் பார்த்தால் பிடிக்காமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது.

Share

மலையாளக் கன்னடத் தமிழ்த் திராவிடனின் குறிப்புகள்

மலையாளக் கன்னடத் தமிழ்த் திராவிடனின் குறிப்புகள்.

2001ல் துபாயில் முதன்முதலாகக் கால் வைத்தபோது அது கேரளா என்று தெரியாது. திருநெல்வேலியில் இருந்து வந்திருப்பதால் அவனுக்கு மலையாளம் கொஞ்சமாச்சும் தெரிந்திருக்கும் என்பதெல்லாம் அநியாயக் கற்பனை. பி.வி.ஜான் என்னை புனலூரில் இண்டர்வ்யூ செய்தபோது, புனலூரின் லேசான தூறலும் குளுகுளு காலநிலையும் என்னை பொறாமை கொள்ள வைத்தாலும், மலையாளம் அவசியம் என்று நினைக்க வைக்கவில்லை. தமிழே எல்லா இடங்களிலும் போதுமானதாக இருந்தது. ஆனால் துபாயில் மலையாளம்தான் தாய்மொழி!

மலையாளம் பேசக் கற்றுக்கொள் என்று உடன்பிறவா சேச்சியும் சந்தோஷ் என்னும் நண்பனும் சொல்லப் போக, திக்கித் திணறி நான் சொன்ன பதில், ‘அரி கழிச்சு.’ என்ன சாப்பிட்ட என்று கேட்ட கேள்விக்கு, ரைஸ் என்று சொல்வதாக நினைத்து நான் சொன்ன பதில் இது. அரை மணி நேரம் சிரித்துவிட்டு, ‘சோறு கழிச்சு’ என்று சொல்லித் தந்தார்கள்.

அடுத்த மூன்று மாதத்தில் முழுக்க முழுக்க மலையாளம்தான் பேச்சு. நான் துபாயில் வேலைக்குச் சேர்ந்த அன்று லீவில் போன பி.வி.ஜான், மூன்று மாதம் கழித்து வந்தபோது நான் பேசிய மலையாளத்தைப் பார்த்து மிரண்டு போனார். ‘திருநெல்வேலின்றதால மலையாளம் முன்னாடியே தெரிஞ்சிருக்கும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

தொடர்ந்து நண்பர்களிடம் மலையாளத்தில் மட்டுமே பேசுவது, வாராவாரம் மலையாள (நல்ல!) திரைப்படங்கள் பார்ப்பது, தொலைக்காட்சியில் தொடர்கள் பார்ப்பது என மலையாளம் பச்சக்கென சீக்கிரமே தொற்றிக்கொண்டது.

ஒன்றுமே தெரியாத மொழியைக் கற்றுக்கொள்வதுதான் ஒரு வகையில் சுலபம். மலையாளத்தில் நிறைய ஆதித்தமிழ் மற்றும் தற்காலத் தமிழ் வார்த்தைகள் கலந்திருப்பதால் வரும் குழப்பம் பெருங்குழப்பம்.

தந்தார்கள், கொடுத்தார்கள் என்பதை நாம் வரைமுறை இல்லாமல் பயன்படுத்துகிறோம். நம்மைப் பொருத்தவரை இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். அவந்தான் தந்தான் என்றும் அவந்தான் கொடுத்தான் என்று எழுதுவதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மலையாளத்தில் தெளிவாகத் திருத்தினார்கள், எனிக்கு அவன் தந்து, ஞான் அவனுக்கு கொடுத்து. எனக்குத் தந்தார்கள், நான் பிறருக்குக் கொடுத்தேன். ஆனால் இதை அப்படியே பின்பற்றுவது அத்தனை சுலபமாக இருந்திருக்கவில்லை. பின்னர் பிடித்துக்கொண்டேன்.

எதோ ஒரு திரைப்படத்தில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு நடிகர் (அசோகன் என நினைக்கிறேன்) ‘அவன் முங்கி’ என்று சொல்லிவிட்டு இவரும் நீரில் முங்கிவிடுவார். தியேட்டர் சிரித்தது. அவன் முங்கினதுக்கு ஏன் சிரிக்கணும் என்று யோசித்தபோது, பின்னர்தான் புரிந்தது, முங்கி என்பதற்கு இன்னொரு அர்த்தம், ஆள் தலைமறைவாகிவிட்டான் என. நாம் பயன்படுத்தும் முங்கி என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு நேரடிப் பொருள் இப்போது இல்லையென்றாலும், யோசித்துப் பார்த்தால் முங்கி என்ற வார்த்தையின் பொருள் அதுவாக இருப்பதிலும் ஒரு நியாய இருக்கவே செய்கிறது.

அதேபோல் இன்னொரு வார்த்தை சம்மந்தி. இன்றளவும் அதைச் சட்னி என்று என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. தமிழில் சம்பந்திக்குப் பேச்சுவழக்கில் சம்மந்தி என்றிருக்க, இந்த சம்மந்தி புத்திக்குள் புகுவேனா என்று அடம் பிடிக்கிறது.

தமிழில் இல்லாத வார்த்தைகள் வேற்று மொழிகளில் இருக்கும்போது அதைப் பிடித்துக்கொள்வது எளிதாக இருக்கிறது. தமிழில் இருந்து, அதுவும் வேறு பொருளில் இருந்துவிட்டால் குழப்பிவிட்டுவிடுகிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் சுதர்ஸன் மூலம் கன்னட மெகா சீரியலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய பணி வந்தபோது, ரொம்ப யோசித்தேன். மலையாளத்திலிருந்து தமிழுக்கு என்றால் சந்தோஷமாக ஒப்புக்கொண்டிருப்பேன். நான் வீட்டில் பேசும் கன்னடம் வேறு, நிஜக் கன்னடம் வேறு என்பது என் அப்போதைய மனப்பதிவு. சரி என்று ஒப்புக்கொண்டு வேலையை ஆரம்பித்தேன்.

முதல் பத்து எபிசோட்களைப் பார்த்தேன். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருந்தது. அப்போது ஒரு முடிவெடுத்தேன். உட்டாலக்கடியாக நாமாக குன்ஸாகப் புரிந்துகொண்டு எழுதக்கூடாது என்பதை அடிப்படை விதியாக வைத்துக்கொண்டேன். ஒரு வார்த்தை புரியாவிட்டால் கூட அடுத்த வார்த்தைக்குப் போகமாட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டு, அந்த வார்த்தையைத் தேடிக் கண்டுபிடித்து, அர்த்தம் தெரிந்துகொண்டுதான் அடுத்த வசனத்தையே கேட்பேன்.

இணையம் பெரிய அளவில் கைக்கொடுத்தது. கூகிள் டிரான்ஸ்லேட் ஒரு வரப்பிரசாதம். கன்னடம் எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் எனக்கு அர்த்தம் வேண்டும். அதை ஆங்கிலத்தில் எழுதிக் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். நாம் ஒரே எழுத்தில் க, க2, க3, க4 என எல்லாவற்றையும் எழுதிப் பேசி விடுகிறோம். எனவே ஆங்கிலத்தில் சரியான கன்னட உச்சரிப்பை எழுதுவதில் பெரிய சிக்கல் இருந்தது. அப்போது கூகிள் டிரான்ஸ்லேட் கைக்கொடுத்தது. வசனத்தைப் பேசினால் அதுவே டைப் செய்து அதன் உத்தேசமான மொழிபெயர்ப்பைத் தந்தது. பின்னர் ஒவ்வொரு வார்த்தையாகவும் தெரிந்துகொள்வேன்.

இதில் இருந்த அடுத்த சவால், பேச்சு வழக்கு வார்த்தைகளின் பயன்பாடு. கம்பி நீட்டிட்டான் என்றால் நொடிக்குள் புரிந்து சிரித்துவிடுகிறோம். ஆனால் தமிழ் தெரியாத ஒருவர் இதற்கு அர்த்தத்தை கூகிள் டிரான்ஸ்லேட்டில் தேடினால், கம்பியை நீட்டிவிட்டான் என்றே பொருள் சொல்லும். இதைத் தவிர்க்க உதவியது, கூகிள் தேடல். விதவிதமாக, ரகரகமாக கன்னடப் பேச்சு வழக்கை இணையம் முழுக்க கங்கிலீஷில் கொட்டி வைத்திருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதைப் பார்த்து வார்த்தை வளத்தைப் பெருக்கிக்கொள்வேன்.

வீட்டில் பேசும் கன்னடமும் நிஜக் கன்னடமும் ஒன்றில்லை என்றாலும், முக்கியமான ப்ளஸ் பாய்ண்ட் ஒன்று இருந்தது எனக்கு. அது இப்போதும் ஆச்சரியமான ஒன்றே. கன்னட வார்த்தைகளின் வேர் பெருமளவு சிதையாமல் அப்படியே இருப்பதால், கன்னடத்தின் வொக்காபுலரி எனக்கு மிக எளிதாகக் கிடைத்துவிட்டிருந்தது. மலையாளத்தில் நான் இதைப் பேசிப் பேசித்தான் கற்றேன்.

கூடவே, பல வார்த்தைகளை எப்படி வீட்டில் தவறாகப் பேசுகிறோம் என்பதும் புரிந்தது.

எங்கள் குடும்பத்தில் கணவனை மனைவி பாவா என்று அழைப்பது வழக்கம். உண்மையில் இது தெலுங்கர்களின் வழக்கம் (என்று நினைக்கிறேன்.) எங்களுக்கு முந்தைய இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் இவ்வழக்கம் கிடையாது. றி என்று அழைப்பதே முறை. தமிழில் ஏங்க என்று சொல்வதற்கு இணையானது. அக்காவின் கணவனை பாவா என்று அழைப்பதும், அத்தைப் பையனை பாவா என்று அழைப்பதும்தான் முறை. சொந்தத்துக்குள்ளேயே திருமணம் என்ற ரீதியில், இதை கணவனுக்கும் பாவா என்று நீட்டிவிட்டார்கள். எனவே முதலில் இதைப் புரிந்துகொள்ளவேண்டி இருந்தது. இல்லையென்றால், அக்காவின் கணவனை இவள் கணவன் என்று நினைத்து, இல்லாத கதையை நாமே புரிந்துகொள்ளும் சிக்கல் இருந்தது.

அடுத்த வார்த்தை அவ்வா! அய்யகோ. இது தந்த கொடுமை ஒன்றிரண்டு அல்ல. நாங்கள் அவ்வா என்ற வார்த்தையைப் பாட்டிக்குப் பயன்படுத்துகிறோம். உண்மையில் அவ்வா என்றால் அம்மா என்றே பொருள். சில வீட்டில் அப்பாவை அண்ணா என்றழைப்பார்கள். அப்படி அல்ல, நிஜமாகவே அவ்வா என்றால், அன்பாக அம்மா என்று பொதுவாக அழைப்பதாகவே அர்த்தம். அஜ்ஜி என்றால்தான் பாட்டி. அஜ்ஜி என்றால் பாட்டி என்று முன்பே தெரியும். ஆனால் அவ்வா என்றால் அம்மா என்று தெரிந்துகொள்வதற்குள் தலை சுற்றிவிட்டிருந்தது.

அடுத்த வார்த்தை முந்தெ. தமிழில் முன்னால் என்றால், மிக முன்னால் அதாவது கடந்தகாலம் என்றே பொருள். நாங்கள் கன்னடத்தில் இந்த வார்த்தையையே பயன்படுத்திப் பேசப் பழகிக்கொண்டு விட்டோம். ஆனால் கன்னடத்தில் முந்தே என்றால் எதிர்காலம். முந்தின நில்தானா என்றால், அடுத்த நிறுத்தம். இப்போது எழுதும்போது கூட இது எனக்குக் குழப்பத்தைத் தருகிறது. அந்த அளவுக்கு முந்தெ என்பது எங்களுக்குள் முன்னால் என்ற பொருளில் ஊறிவிட்டிருக்கிறது.

இன்னொரு வார்த்தை தாழ்மை! தமிழில் தாழ்மை என்றால் பணிவு என்று பொருள். ஆனால் கன்னடத்தில் பொறுமை! தாழ்மை என்றொரு தமிழ்வார்த்தை இல்லாமல் இருந்திருந்தால் கூட, பொறுமை என்ற பொருள் தரும் கன்னட வார்த்தையை எளிதாக நினைவு வைத்திருந்திருக்க முடியும். ஆனால் இப்போதே ஒவ்வொரு தடவையும் கன்னடத்தில், ‘தாழ்மெ தாழ்மெ’ என்று வரும்போது, மனதுக்குள் ‘பணிவு பணிவு’ என்றும், அறிவில் ‘பொறுமை பொறுமை’ என்றுமே வருகிறது.

இன்னொரு வார்த்தை அக்கி. இதில் என்ன பிரச்சினை? அரிசிதானே. கன்னடத்தில் அ, ஹ அடிக்கடி மாறிக்கொள்ளும். பேச்சு வழக்கில். அப்ப, ஹப்ப (பண்டிகை) இப்படி. அப்படியானால் அக்கி என்றால் அரிசி, ஆனால் ஹக்கி என்றால் பறவை. இதில்லாமல், நாம் ஆத்தா (அம்மன்) என்று சொல்லும் சொல்லுக்கு இணையாகவும் அக்கி உத்தர கன்னடத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதைப் புரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இன்னொரு வார்த்தை, கை கொட்டு பிட்டா. அதாவது கை விட்டுவிட்டான் என்று பொருள். நேரடிப் பொருளாக, கை கொடுத்தான் என்றே புரிந்துகொள்ளத் தோன்றும். சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், பொருளே மாறிவிடும். கொஞ்சம் யோசித்தால், நம்மைக் குழப்பும் இப்படியான நிறைய வார்த்தைகள் சிக்கும்.

இன்னொரு வார்த்தை, பிரச்சினை. தமிழில் பிரச்சினை தெரியும். கன்னடத்தில் ப்ரெச்னே என்றால் கேள்வி! இதில் இன்னுமொரு உட்குழப்பமும் உண்டு. கன்னடத்தில் சம்சய என்றால் பிரச்சினை என்று பொருள். ஆனால் தமிழில் சம்சயம் என்றால் சந்தேகம் என்றொரு பொருளும் உண்டு!

இன்னொரு வார்த்தை, அனுமானம். தமிழில் அனுமானம் என்பதற்கு எப்படியோ ‘யூகம்’ என்ற பொருள் வந்துவிட்டது. கன்னடத்தில் அனுமானா என்றால் சந்தேகம். முன்பு தமிழிலும் அனுமானம் என்கிற வார்த்தை சந்தேகம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பல நூல்களில் பார்த்தேன்!

இன்னும் இன்னும் நிறைய கன்னட வார்த்தைகள் தெரிந்துகொள்ள, யூ ட்யூப்பில் சகட்டுமேனிக்கு கலந்துரையாடல்களைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. தேடித் தேடிக் கன்னடக் கெட்ட வார்த்தைகளையும் தெரிந்துகொண்டேன். அதனால்தான், நிகழ்காலக் கன்னடப் படம் ஒன்றைப் பார்த்தால் இப்போதெல்லாம் 99% வார்த்தைகள் புரிகின்றன. மலையாளம் போலவே.

கன்னட சீரியலில் திடீரென உத்தர கன்னடம் கேரக்டர் ஒன்று வந்தது. அதாவது நம் திருநெல்வேலி, மதுரைக்கு இருப்பது போன்ற ஒரு வட்டார வழக்கு. அசரடிக்கும் வழக்கு. சட்டெனப் புரியாது. நிறைய வார்த்தைகள் புதியதாகப் புழங்கும். இதற்காகவே, யூ ட்யூப்பில் தொடர்ந்து உத்தர கன்னட வார்த்தைகள் புழங்கும் கலந்துரையாடல்களைப் பார்த்தேன். உத்தர கன்னட வார்த்தைகளைப் பேசும் படங்களைப் பார்த்தேன். ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட எல்லா வார்த்தைகளும் புரிய ஆரம்பித்துவிட்டன.

எப்போது பிரச்சினை வருகிறது? செய்தி கேட்கும்போது அல்லது அரசர் காலத் திரைப்படங்கள் பார்க்கும்போது. இதையும் தொடர்ச்சியாக ஒரு மாதம் பார்த்தால், 90% வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு விடுவேன். தேவை வரவில்லை என்பதால் செய்யவில்லை.

கன்னடப் புத்தகங்களை ஒலியாகக் கேட்டுப் பார்த்தால், 50%தான் புரிகிறது. எனவே அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.

சீரியல்களில் உள்ள (நமக்கு!) ப்ளஸ் பாய்ண்ட் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள்ளேதான் சுற்றிச் சுற்றி வருவார்கள். தமிழ் உட்பட. ஒரு குறிப்பிட்ட ஜானரில் மட்டும் 5% வார்த்தைகள் புதியதாக வரலாம். மற்றபடி எல்லாம் அதே வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும். எனவே கொஞ்சம் முயற்சி எடுத்துவிட்டால், பின்னர் அது எப்போதோ வங்கியில் போட்டுவைத்த வைப்பு நிதியைப் போல வட்டியைத் தந்துகொண்டே இருக்கும். ‘நீதானா எந்தன் பொன்வசந்தம்’ சீரியலை எழுதும்போது நான் எடுத்த முடிவு, அதாவது கன்னட சீரியலான ‘ஜொத ஜொதயலி’-யில் வரும் எந்த ஒரு கன்னட வார்த்தையும் புரிந்துகொள்ளாமல் போகக்கூடாது என்ற அந்த முடிவு, இன்று வரை உதவுகிறது.

எப்படித் தேடியும் அர்த்தம் கிடைக்காத வார்த்தைகளுக்கு, பெங்களூருவில் இருக்கும் கன்னட நண்பர்களிடம் கேட்டு எனக்குச் சொல்லித் தந்த, டாக்டர் பிரகாஷ், உமா பிரகாஷ், ராகவேந்திரன் போன்ற நண்பர்களை அன்போடு நினைத்துக்கொள்கிறேன்.

இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டும். தொலைக்காட்சி மெகா தொடர்களின் கலந்துரையாடலின்போது, தெலுங்கில் இருந்து தமிழுக்குக் கதை எழுதும் நண்பர் கேட்டார், ‘கன்னடம் தெரிஞ்சா கன்னடத்துல இருந்து தமிழ்ல எழுதறீங்க? இதென்ன புதுப்பழக்கம்? எனக்கெல்லாம் தெலுங்குல ஒரு வார்த்தை கூடத் தெரியாது!’ 🙂 சரியாக ஒரு வருடம் முன்பு, ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது, ‘வங்காள மொழியில் இருந்து தமிழுக்குச் செய்யுங்கள்’ என. நடுக்கம் பரவ, ‘ஒரு வார்த்தை கூடத் தெரியாதே சார்’ என்றேன். ‘க்ரியேட்டிவிட்டி முக்கியம். யூ கேன் மேனேஜ்’ என்றார்கள். 25 எபிசோட்கள் பார்த்தேன். டிவியை ம்யூட்டில் வைத்துப் பார்ப்பதும், சத்தத்தோடு பார்ப்பதும் ஒன்றுதான் என்ற அளவுக்கே எனக்குப் புரிந்தது. ஆனால் கதையைப் புரிந்துகொள்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ‘தெலுங்கு எனக்கு தெரியாது’ என்று சொன்ன நண்பரை நினைத்துக்கொண்டேன். நல்லவேளை, வங்கமொழி தப்பித்தது, அந்த ப்ராஜெக்ட் க்ளிக் ஆகவில்லை.

அதற்கு மறுநாளே இன்னொரு அழைப்பு, ‘தெலுங்கில் இருந்து தமிழுக்கு’ என்றார்கள். ‘வங்க மொழியையே தெறிக்க விட்டாச்சு, தெலுங்குலு என்னலு இருக்குலு’ என்று 25 எபிசோட்கள் பார்த்தேன். ஆச்சரியமான ஆச்சரியம், 70% புரிந்தது. இந்த சீரியல் கிடைத்தால், இன்னும் 3 மாதத்தில் தெலுங்கை 90% புரிந்துகொள்ள முயற்சி எடுக்கவேண்டும், இனி என் தாய்மொழி தெலுங்கு என்று நினைத்துக்கொண்டபோது, தெலுங்கு செய்த புண்ணியம், அந்த ப்ராஜெக்ட்டும் டிராப் ஆனது.

கொரியன் திரைப்படத்தைத் தமிழில் எழுதும் வாய்ப்பு வந்தால் உடனே எனக்குச் சொல்லுங்கள், ஏனென்றால், கொரிய மொழி என்று தவறில்லாமல் தமிழில் கூட எனக்கு எழுத வராது.

Share