Tag Archive for ஹிந்தி

Some movies

உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.

ப்ரைமில் கிடைக்கிறது.

அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்த‌விதம்‌ அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க‌ விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.

Share

பஸ்தர் – ஹிந்தித் திரைப்படம்

பஸ்தர் – தி நக்ஸல் ஸ்டோரி (H) – மாவோயிஸ்ட்டுகளுக்கான எதிர்பிரசாரத் திரைப்படம். கேரளா ஸ்டோரி எடுத்த குழுவிடமிருந்து வந்திருக்கும் படம். ஒரு திரைப்படமாக கேரளா ஸ்டோரியில் இருந்த போதாமைகளும் பின்னடைவுகளும் இந்தப் படத்தில் துருத்திக் கொண்டு வெளிப்படையாக வெளியே தெரிகின்றன.

என்னதான் பிரசாரப் படம் என்றாலும் அடிப்படையில் இது ஒரு சினிமா. அந்த சினிமாவின் மொழியைத் தீவிரமாகவும் லாகமாகவும் கை கொள்ளாத எந்த ஒரு திரைப்படமும் எரிச்சலையே ஏற்படுத்தும். இந்தப் படம் முழுமையாக எரிச்சலை மட்டுமே தருகிறது. நாடகத்தனமான கதை. செயற்கையான நடிப்பு. அதீதத் திணிப்பு.

மிகப் பெரிய நாட்டின் முக்கியமான பிரச்சினையைக் கிறுக்குத்தனமாக கையாண்டிருக்கிறார்கள். பஸ்தர் என்ற ஊரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நிச்சயம் மாவோயிஸ்டுகள் என்ற வார்த்தை நினைவுக்கு வராமல் இருக்காது.

பஸ்தரையும் சரி, பஸ்தரில் இருக்கும் பிரச்சினைகளையும் சரி, மாவோயிஸ்ட்டுகளையும் சரி, மிக மேம்போக்காகப் பேசுகிறது இத்திரைப்படம்.

Share

Laapataa Ladies – Hindi Movie

Laapataa ladies {H} – நம்ப முடியாத கதை. ஆனால் சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் பலரும் பாராட்ட மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன். அந்த அளவுக்குக் கவரவில்லை என்றாலும் சந்தேகமே இல்லாமல் நல்ல ஃபீல் குட் மூவி.

குடும்ப பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டுத் தன் கனவை நோக்கிச் செல்ல நினைக்கும் ஒரு பெண். தன் கணவனே தனக்கு எல்லாம், குடும்பமே எல்லாம் என்ற கனவுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இன்னொரு பெண். இதற்கிடையில், கணவனை வெறுத்து ஒதுக்கி, தன் காலில் தனியாக நின்று கடை நடத்தும் ஒரு பெண். எந்த உறுத்தலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் பெண்ணுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, கூடவே அந்தப் பெண் படிக்க நினைக்கும் கனவையும் வலியுறுத்தி, அனைவருக்கும் நல்லபடியாக முடித்து விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் இன்னும் பல காட்சிகளும் செயற்கைத்தனமாக இருந்தன. ஆனாலும் படம் எடுத்த விதத்திலும் நடித்த விதத்திலும் அதை ஈடு செய்திருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் கடை நடத்தும் அந்த பெண்ணின் நடிப்பு மிக மிக அருமை

படத்தின் பிரச்சினையாக நான் பார்த்தது, படம் முதலில் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. நாம் அதனுடன் பயணிக்கிறோம். திடீரென்று படம் இன்னொரு பெண்ணின் பார்வைக்குத் தடம் மாறுகிறது. இந்தத் தடுமாற்றத்தை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

Share

Sirdar Udham – Hindi Movie

சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் இவ்விஷயத்தில் கறாராக இருப்பார்கள். காரணம் பெரிய பட்ஜெட்.

கலை விஷயத்தில் கவனமாகவும் பிரமாண்டமாகவும் தயாரிக்கப்படும் படங்கள் காட்சி ரீதியாகப் பார்வையாளனுக்குக் கடத்தும் பல விஷயங்கள் முக்கியமானவை. சர்தார் உதம் இந்த விஷயத்தில் ஹாலிவுட் திரைப்படத்துக்கு இணையாக வந்திருக்கிறது. சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள்.

படத்தைப் பொறுத்தவரை, திரைக்கதை ரிவர்ஸ் பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவையே உலுக்கிய ஜாலியன்வாலா பாக் படுகொலைக்காக ஒரு சீக்கிய இளைஞன் 20 வருடங்கள் காத்திருந்து பழிவாங்குகிறான் என்பது எப்போதுமே நம்மை வியக்கச் செய்யும் ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வுக்குள்ளேயே ஒரு கதை இருக்கிறது. ஆனால் இதைத் திரைப்படமாக எடுப்பது சுலபமல்ல. பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில், முதலில் ஜாலியன்வாலா பாக் நிகழ்வைக் காட்டிவிட்டு, இறுதிக்காட்சியாக மைக்கேல் ஓ டயரை (ஜாலியன்வாலா பாக் கொலைக்கு உத்தரவிட்டவர்) கொல்வதைக் காட்டுவதுதான் சிறப்பாக இருக்கும்.

ஆனால் இப்படத்தில் முதல் காட்சியிலேயே மைக்கேல் டயரை உதம் சிங் கொல்வதைக் காட்டிவிட்டார்கள். பின்னர் படம் துப்பறிவு வகைத் திரைப்படம் போல நகர்கிறது. உதம் சிங்கை பிரிட்டிஷ் போலிஸ் எப்படி விசாரிக்கிறது, ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதெல்லாம் அணுஅணுவாகக் காட்டப்படுகிறது. இதற்கிடையில் உதம் சிங்கின் வாழ்க்கை நான்-லீனியராக விரிகிறது. இறுதிக்காட்சியாக ஜாலியன்வாலா பாக் படுகொலை வருகிறது. இதுவே படத்தின் மையம் என்பதால் மிக நீண்ட காட்சியாக இதை எடுத்திருக்கிறார்கள். கண்முன்னே நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்பதால் பதைபதைப்புடன் இதை நாம் பார்க்கிறோம்.

முடிவு இதுதான் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும் என்ற வகைத் திரைப்படம்தான் இது. இருந்தாலும், வழக்கு விசாரணை, சித்திரவதையை இத்தனை தூரம் காண்பித்து, அதையும் விறுவிறுப்பாக எடுத்திருப்பது ஆச்சரியம்தான். மைக்ரோ விஷயங்களில் அதீத கவனம் எடுத்திருப்பதும், வழக்கு விசாரணைகளில் வரும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மைக்கு அருகில் இருப்பதும் இப்படத்தை முக்கியமானதாக்குகின்றன.  உதம் சிங் தன் கையில், ராம் முஹம்மத் சிங் ஆசாத் இன்று பச்சை குத்தி இருப்பதும், நீதிமன்ற விசாரணையின்போது உதம் சிங்கின் தரப்பு பத்திரிகையில் வரக்கூடாது என்று நீதிபதி சொல்வதும், அப்போது உதம் சிங், ‘பிரிட்டிஷ் இம்பீரியலிஸம்’ ஒழிக என்று கத்தியதும் படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

உதம் சிங்காக நடித்திருக்கும் விக்கி கௌஷல் பிரமாதமாக நடித்திருக்கிறார். இயக்கம் ஷூஜித் சர்க்கார். தமிழர்களுக்கு அறிமுகமானவர்தான். இவரது திரைப்படமான ‘மெட்ராஸ் கஃபே’ ஈழத் தமிழர்களை மட்டம் தட்டிய வகையில் இருந்ததற்காகப் பெரிய பிரச்சினை அப்போது உருவானது. இந்திய அளவில் முக்கியமான திரைப்படமான பின்க் (தமிழில் நேர்கொண்ட பார்வை) இவரது இயக்கத்தில் உருவானதுதான். இவர் இயக்கிய இன்னொரு திரைப்படம் ‘அக்டோபர்’ நம் பாலுமகேந்திராவின் இயக்கத்தைப் போன்ற ஒரு திரைப்படம். விக்கி டோனர் (தமிழில் தாராள பிரபு) இவர் இயக்கியதுதான்.

நம் நாட்டு விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களின் படத்தைப் பார்க்க வேண்டியது, அதுவும் இத்தனை தரமான படத்தைப் பார்க்க வேண்டியது நம் கடமை.

Share

Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியல் காலகட்டம்.

இந்த மூன்று காலகட்டங்களிலும் சாவர்க்கரின் பங்களிப்பை ஒரு திரைப்படத்துக்குள் கொண்டு வருவது பெரிய சவால். சாவர்க்கரைப் பற்றி மட்டும் திரைப்படம் எடுத்துவிடமுடியாது என்பது இதில் இன்னொரு பிரச்சினை. சாவர்க்கரால் நிகழ்ந்தவை, சாவர்க்கரால் தூண்டப்பட்டவர்கள் செய்த புரட்சிகள் என எல்லாவற்றையும் காண்பித்தாக வேண்டும். இப்படிக் கம்பி மேல் நடக்கும் வித்தையில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம்.

படத்தை சாபேகர் சகோதரர்களின் வீரச் செயல்களில் ஆரம்பித்தது நல்ல திரைக்கதை. சாபேகர் சகோதரர்களின் தியாகத்தையும் சாவர்க்கர் சகோதரர்களின் தியாகத்தையும் நான் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அரசின் ஒடுக்குமுறைகளில் சிக்குவது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை. அதிலும் சாபேகர் சகோதரர்கள் மூவரும் ஒரே வாரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டதெல்லாம் எப்பேற்பட்ட பலிதானம்!

ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அவசரமாகக் கதையைச் சொல்ல நினைக்காமல், ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக நிதானமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர். ஒரு திரைப்படமாக இது உயர்ந்து நிற்பது இந்த உத்தியால்தான். 2001ல் ஹிந்தியில் வந்த சாவர்க்கர் திரைப்படத்தைச் சில மணித்துளிகள் பார்த்தேன். வெறும் வசனங்களால் ஆன படம் அது. ஆனால் இத்திரைப்படம் காட்சிகளாலும், தீவிரமான ஆழமான சுருக்கமான வசனங்களாலும் ஆனது.

சாவர்க்கரின் குடும்பத்தின் தியாகத்தை எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் வைத்தது சிறப்பு. கணேஷ் சாவர்க்கர் தன் தம்பி விநாயக் (வீர) சாவர்க்கரிடம், என்னை ஒரு முறை தழுவிக்கொண்டு விடை கொடுக்க மாட்டாயா என்று கேட்கும் தொடக்க காட்சியில் உணர்ச்சிவசப்பட்டேன். அண்ணன் தம்பிகளின் இந்த உணர்ச்சிப் போராட்டத்தை, சொற்பமான காட்சிகளில் கடைசி வரை சிறப்பாகக் காண்பிக்கிறார் இயக்குநர்.

இண்டியா ஹவுஸ் என்ற பெயர் தரும் கிளர்ச்சியை, இந்திய சுதந்திரத்தின் ஆயுதப் போராட்டத்தை அறிந்தவர்கள் உணர்வார்கள். சாவர்க்கர் இண்டியா ஹவுஸில் ஷ்யாமாஜியுடன் சந்திக்கும் காட்சியெல்லாம் அபாரம். அங்கே ஆயுதமேந்திப் போராட மண்டையம் ஆச்சார்யா, மதன்லால் திங்ரா என்ற பெரும்படையே இருக்க, அனைவரும் ஒன்று கூடி அங்கேயே பெரும் போராட்டத்துக்கான விதையை விதைக்கிறார்கள். ஆங்கில அரசின் மண்ணிலேயே முதல் அரசியல் கொலை நிகழ்கிறது. தொடர்ந்து வெடிகுண்டு தயாரிக்கும் கையேட்டைக் கைப்பற்றுகிறார் சாவர்க்கர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் குதிராம் போஸ் குண்டு வீசுகிறார். வரலாற்றின் நெடுக நடந்த இந்த நிகழ்வுகளை எப்படித் திரைக்கதையாக்கினார்கள் என்பது ஆச்சரியம்தான். தொடக்க காட்சி முதல் சார்வக்கர் அந்தமான் செல்லும் இடைவேளை வர துளிகூட தொய்வில்லை. இத்தனை ஆவேசமான திரைக்கதையை நான் எதிர்பார்க்கவில்லை.

இந்திய சுதந்திர ஆயுதப் போராட்டத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு இத்திரைப்படம் வெறும் நேம் டிராப்பிங் அனுபவமாக உறையக் கூடும். ஒவ்வொருவரும் தூக்கிலிடப்படும் காட்சி இரண்டு நொடிகளே வருகின்றன. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பெரும் வரலாறு உள்ளது. தூக்கில் தொங்கவிடப்படுபவர்களின் வயது சராசரியாக இருபது. மீசை வளரும் முன்னே ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சாகிறார்கள். இக்காட்சிகள் இந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் மேடை நாடகப் பாணியில் இருந்தாலும் நம்மை அசைத்துப் பார்க்கிறது.

அந்தமானில் சாவர்க்கர் படும் வேதனைகள் இடைவேளைக்குப் பிறகான ஒரு மணி நேரத்தில் காட்டப்படுகின்றன. அங்கே சாவர்க்கர் அடையும் மனரீதியான நெருக்கடிகள் சிறப்பாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அதிலும் ரெஜினால்ட் கிரடாக்கும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் காட்சி அபாரம். ஆனாலும், அந்த நெருக்கடியிலும் சாவர்க்கர் அங்கே இருந்தபடியே சிறைக்குள் ஆற்றிய பெரும் சாதனைகள் சரியாகக் காட்டப்படவில்லை. சிறிய சிறிய காட்சிகளாக அவை நகர்ந்து போகின்றன. இதை இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம். அதேபோல் அந்தமானில் நடந்த கர்வாப்ஸியின் அவசியத்தையும் இன்னும் சிறப்பாகப் படமாக்கி இருக்கலாம். ஆனால் சாவர்க்கர் அந்தமானில் பட்ட கஷ்டங்களை மட்டும் காட்டவேண்டும் என்று அணுகி இருக்கிறார். ஒருநோக்கில் அதிலும் தவறில்லை என்றே சொல்லவேண்டும்.

படத்தின் அடுத்த நகர்வு, காந்திஜி கொலை காலகட்டம். இப்போது சாவர்க்கரின் வீடு, ஆயுதம் ஏந்திப் போராடும் வீரர்களின் உறைவிடம் போல ஆகிறது. கோட்ஸே உட்பட. காந்தி கொல்லப்படுகிறார். சாவர்க்கர் கைதாகிறார். இவையெல்லாம் டாக்குமென்ட்ரி போலச் செல்கிறது. மேடை நாடகப் பாணி என்றாலும், இதையும் சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இயக்குநராகவும் நடிகராகவும் ரந்தீப் ஹூடா செய்திருப்பது மாபெரும் சாதனை. சாவர்க்கரைப் பற்றிய சிறப்பான திரைப்படம் இது. ரந்தீப் ஹூடா சாவர்க்கராகவே மாறி இருக்கிறார். சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை இப்படி ஒரு திரைக்கதையாக மாற்றியதற்காக இவரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதே போல் சாவர்க்கரின் 1857 புத்தகம் எப்படி ஆயுதப் போராட்டக்காரர்களின் கீதையாக மாறியது என்பதைக் காட்சிரீதியாக அட்டகாசமாகப் படமாக்கி இருப்பதையும் பாராட்டவேண்டும்.

இந்தத் திரைப்படத்தின் போதாமைகள் என்ன? இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய சில செய்திகள் அவசர அவசரமாகக் கடந்து போவது. சில நிகழ்வுகள் முன்னும் பின்னும் இருப்பது. சாவர்க்கர் போன்ற ஒரு தலைவரின் படத்தில் இதைத் தவிர்க்க முடியாது.

இப்படத்தின் பெரிய சறுக்கல் எது? காந்தியும் நேருவும் கோகலேவும் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம். காந்தியை ஒரு கோமாளி போலவும், ஹிந்துக்களை வஞ்சித்தவர் போலவும் காண்பிக்கிறார்கள். இது அரசியல்ரீதியாகவும் நிஜத்திலும் தவறு. இண்டியா ஹவுஸிலும், பின்னர் சாவர்க்கரின் வீட்டிலும், காந்தியும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் வசனங்களில் சாவர்க்கர் பேசுவது, காந்தியின் மீது வன்மத்தைக் கொட்டுவது போல் இருப்பது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. எனக்குத் தெரிந்து நிஜத்தில் சாவர்க்கர் தன்னுடைய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்தில் மகாத்மா காந்திஜி என அவரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். திரைப்படத்தில் கோகலே கோமாளி போல் சிரிப்பது அனாவசியம். நேருவும் அப்படியே. காந்தியைத் தவிர மற்றவர்களைப் பற்றிய காட்சிகள் எல்லாம் ஓரிரு நொடிகளே வருகின்றன என்றாலும் தவிர்த்திருக்கலாம்.

இந்தியாவுக்கான சுதந்திரம் பற்றி காந்தியின் அஹிம்சைப் போராட்டப் போராளிகள் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்கு ஆயுதப் போராளிகள் சொல்லப்படவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை. இந்த இரண்டு வழிகளும் சேர்ந்தே நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன என்பதுவும் உண்மை. இந்தியா போன்ற ஒரு நாட்டில் காந்தியைப் போன்ற ஒருவரே மக்கள் தலைவராக இருக்கமுடியும் என்பதும் உண்மை. ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் பெயர்கள் கூட நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டதெல்லாம் அரசியல். அந்தப் பெருங்குறையை இத்திரைப்படம் ஓரளவுக்குக் குறைக்கிறது.

Share

மே அடல் ஹூம்

மே அடல் ஹூம் (H) – அடல் பிஹாரி வாஜ்பாயியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். முதல் காட்சியில் வாஜ்பாயி போன்ற உடல்மொழியில் பேசும் பங்கஜ் த்ரிபாதி சட்டென்று மனதில் ஒட்டிக்கொள்கிறார். ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தங்கள் தோள்களில் சுமப்பவர்கள் இருவர், ஒரு வாஜ்பாயி, இன்னொருவர் பங்கஜ் த்ரிபாதி.

பயோ பிக் படங்கள் எடுப்பதில் சிக்கல்கள் அதிகம். அதிலும் வாஜ்பாயி போன்ற நீண்ட நெடும் அரசியல் வாழ்க்கை கொண்டவர்களின் வரலாற்றை எடுப்பது எளிதல்ல. அட்டன்பரோவின் காந்தி அந்த வகையில் ஒரு மைல்கல். காந்தியின் நீண்ட நெடும் போராட்ட வாழ்க்கையை மூன்று மணி நேரத்துக்குள் எடுப்பது, அதிலும் நேர்த்தியாக எடுப்பது, அதிலும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் எடுப்பது என்று எல்லா வகையில் அந்தப் படம் ஒரு சாதனை. அப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேண்டும் என்றால் அதற்கான உழைப்பும் பணமும் தேவை. மே அடல் ஹூம் படம் அந்த அளவுக்கு வரவில்லை. ஆனால் படம் பார்த்து முடிந்ததும் படத்தைக் குறித்தே மீண்டும் மீண்டும் சிந்தித்துக்கொண்டிருக்கும் ஓர் உணர்வுநிலையை ஏற்படுத்திவிடுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மே அடல் ஹூம் படத்தைப் பார்த்து வாஜ்பாயியையோ அவரது கால அரசியலையோ இந்திய அரசியலையோ புரிந்துகொள்ள நினைத்தால் பைத்தியம்தான் பிடிக்கும். இது அரசியலைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கான படமல்ல. இந்த அரசியல் ஏற்கெனவே பற்றித் தெரிந்தவர்களுக்கான படம். ஒரு வகையில் ஆவணப் படம் போன்றது. அந்த எண்ணத்துடன் இப்படத்தை அணுகுவது நல்லது.

வாஜ்பாயியின் தனிப்பட்ட ஆரம்ப கால வாழ்க்கையிலும், அந்தப் பெண்ணைப் பின்னர் வாஜ்பாயி பார்க்கும் காட்சிகளையும் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கிறார்கள். இது பெரிய மைனஸ் பாய்ண்ட். இரண்டரை மணி நேர பயோ-பிக்கில் முதல் அரை மணி நேரம் எத்தனை முக்கியமானது? இருவர் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. தமிழின் முக்கியமான முயற்சி. ஆனால் இந்தப் படத்தில் முதல் அரை மணி நேரக் காட்சி சலிப்பை உண்டாக்குகிறது.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஜன சங்கத்தை ஆரம்பிக்கும் காட்சியில் இருந்து படம் வேகமெடுக்கிறது. அதிலும் முக்கியமாக குருஜி கோல்வல்கரிடம் அவர், ‘உங்களிடம் அமைப்பு இருக்கிறது. என்னிடம் கனவு இருக்கிறது’ என்று சொல்லும் காட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்காரர்களுக்கு நிச்சயம் புல்லரிப்பை ஏற்படுத்தும். இப்படிப் பல காட்சிகள் ஆங்காங்கே நன்றாக இருக்கின்றன.

இந்தியாவையே அரசியல் ரீதியாக உலுக்கிய தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் நிமிடங்களில் கடந்து போகின்றன. வேறு வழியில்லை.

அத்வானிக்கும் வாஜ்பாயிக்குமான நட்பு நன்றாக வந்திருக்கிறது. ஆனால் அத்வானியாக நடிக்கும் நடிகரின் தேர்வு இன்னும் மெச்சூர்டாக இருந்திருக்கலாம்.

நேருவை மொத்தமாக இரண்டு நிமிடங்கள்தான் காட்டுகிறார்கள் என்றாலும் சிகரத்தில் வைத்துவிட்டார்கள். அதிலும் நேருவின் புகைப்படம் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தே தீரவேண்டும் என்று வாஜ்பாயி சொல்லும் காட்சி முக்கியமானது.

இந்திரா காந்தியை அவரது எண்ணம் போலவே காட்டுகிறார்கள். எமர்ஜென்ஸி முடிந்து, ஜனதா வெற்றி பெற்று, சரண்சிங் உள்ளடி வேலை செய்து, ஜனதா கட்சி ஆட்சியை இழந்த பின்பு நடக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உதயமாகும் காட்சியும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாஜ்பாயி மனம் இறுகிக் கிடக்க, அவரே எதிர்பார்க்காமல் அவரை பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கும் காட்சியும் முக்கியமான புல்லரிப்புக் காட்சிகள்.

பொக்ரான் அணுஆயுதச் சோதனை அத்வானிக்கே தெரியாமல் நடந்தது என்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவறு. எல்.கே.அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் தெரியும். படத்தில் அந்தக் காட்சியின் சுவாரஸ்யத்துக்காக அப்படி வைத்திருக்கிறார்கள் போல. ஆனால் அத்வானி இந்தியாவின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். உள்துறை அமைச்சர். அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கவே முடியாது.

கார்கில் போர் வெற்றியுடன் திரைப்படம் முடிகிறது. அடுத்த தேர்தலில் வாஜ்பாயி பிரதமராகும் தருணத்துடன் முடித்திருக்கலாம்.

மிஸா கைதில் தமிழகத்தைச் சேர்ந்த யாரையும் காண்பிக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாக ஜெயலலிதாவின் பெயர் மட்டும் வருகிறது. வாஜ்பாயி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கில் தோற்கக் காரணமாக இருந்தவர். படம் முடிந்து பலரது புகைப்படங்களைக் காண்பிக்கும்போது வாஜ்பாயியும் ஜெயலலிதாவும் இருந்த புகைப்படத்தைக் காண்பித்தார்கள். கருணாநிதியும் வாஜ்பாயியும் கூட்டணியில் இருந்தவர்கள். திரைப்படத்தில் கருணாநிதியின் படம் கண்ணில்பட்டதாக நினைவில்லை.

மிக முக்கியமான விஷயம், மோடியின் புகழ் பாடப்படவில்லை. கவனமாகத் தவித்திருக்கிறார்கள். மோடி என்ற பெயர் கூட இல்லை. வாஜ்பாயியின் கனவு அனைத்தையும் மோடி நிறைவேற்றி இருக்கிறார் என்று பார்வையாளர்களே உணரும் வண்ணம் உள்ளது திரைப்படம்.

வாஜ்பாயி ஒரு கவிஞர் என்பதை நிலைநிறுத்தும் காட்சிகள் தொடக்கம் முதல் இறுதி வரை வந்த வண்ணம் உள்ளன. படத்தின் வேகத்தைக் குறைக்கும் விஷயம் இது. இதையும் வாஜ்பாயியின் இளமைக்கால வாழ்க்கையையும் சுருக்கி இருக்கலாம்.

படத்தின் மேக்கிங், நடிகர்கள் தேர்வு என எல்லாமே சராசரித் தரம்தான். பின்னணி இசை மோசம். ஆனால் பங்கஜ் த்ரிபாதி மட்டும் விதிவிலக்கு. அதிலும் அவரது உடல்மொழி அபாரம். வாஜ்பாயியின் ஆவி புகுந்துகொண்டது போல் நடிக்கிறார். படம் சலிப்பேற்படுத்தும் போதெல்லாம் நம்மைக் கட்டி இழுத்துத் திரைப்படத்துக்குள் கொண்டு வருபவர் பங்கஜ் த்ரிபாதி. இந்த வருடத்தின் சிறந்த நடிகராக தேசிய விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம்.

இது அனைவருக்குமான திரைப்படமா என்றால் இல்லை. இந்திய அரசியல் வரலாறு கொஞ்சமாவது தெரிந்தவர்களுக்கான திரைப்படமா என்றால் ஆம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினருக்கான திரைப்படமா என்றால், நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். முக்கியமாகச் சில காட்சிகள் தரும் புல்லரிப்புக்காக.

zee5ல் கிடைக்கிறது.

Share

Merry Christmas (H)

Merry Christmas (H) – அந்தாதூன் நினைவுக்கு வர, ஶ்ரீராம் ராகவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக இதைப் பார்த்தேன். ஜனவரியிலேயே வந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு கூகிளில் தேடினால் இந்தப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. விஜய் சேதுபதி நடித்திருந்தும் இப்படி ஒரு படம் வந்தது கூட எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. படத்தின் தொடக்கத்தில் ஹீரோவும் ஹீரோயினும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இருவரும் தங்கள் கதையைச் சொல்லி முடிக்கும்போது இருவருக்கும் இடையே ஓர் உறவு மலரும் என்று எதிர்பார்க்கிறோம். அங்கே ஒரு திருப்பம். பின்னர் அது த்ரில்லர் படமாகிறது. எப்படி ஒரு பெண் முன்பின் தெரியாத ஒருவனிடம் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்பதற்கு விடையும் கிடைக்கிறது.

படம் எடுத்த விதம் அருமை. நீட்டான திரைப்படம் என்றுதான் சொல்லவேண்டும். விஜய் சேதுபதி ஹிந்தியில் பேசினாலும் தமிழ் போலவே ஒலித்தது. படத்திலும் அவர் தமிழ்க்காரர் என்பதால் அது இயல்பாகவும் தோன்றியது. அலட்டலே இல்லாமல் நடித்தார். கத்ரினா கய்ஃபும் பிரமாதமாக நடித்தார். கடைசி பத்து நிமிடம் இசை மட்டுமே என்று என்னவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார்கள். மெல்ல செல்லும் திரைப்படம் மெல்ல முடிந்துவிடுகிறது. பிரெஞ்சு நாவலைத் திரைப்படமாக்கி இருப்பதாலோ என்னவோ, வெளிநாட்டுத் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைத்தது.

அந்த வீடு, படத்தின் கலர் டோன், நடிகர்களின் நடிப்பு – இவற்றுக்காகப் பார்க்கலாம். தமிழில் இந்த அனுபவம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

Share

சில திரைப்படங்கள்

ஒரு தெக்கன் தல்லு கேசு (M) – மிடில. மகேஷிண்ட பிரதிகாரம் போல இன்னொரு ஈகோ மோதல் திரைப்படம். அந்தப் படமே எனக்கு ஒட்டவில்லை. இது இன்னும் மோசம். அதிலாவது ஃபகத் இருந்தார். இதில் பிஜு மேனன். ஈகோவில் ஒருத்தனை வெட்டும் அளவுக்கு ஒன்றும் நடந்திருக்கவில்லை. நம்பு என்றால் நம்பவேண்டும் என்பதுதான் மலையாள ஈகோ மோதல் திரைப்படங்களின் பாணி போல. பதிலுக்கு நகைச்சுவையகப் பழி வாங்குவாராம். அடேய்களா!

பிஜு மேனன் என்னதான் நன்றாக நடித்தாலும் என்னவோ ஒட்டாது எப்போதும். பல்லைக் கடித்துக்கொண்டு எப்படியோ பார்த்து முடித்தேன்.

2018 (M) – கேரளாவில் 2018ல் வரலாறு காணாத மழை, வெள்ளம். இதனால் 450க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகிறார்கள். இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமே 2018.

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு இல்லாத மழை கேரளாவைப் புரட்டிப் போடுகிறது. கேரள மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கெல்லாம் ஆளாகிறார்கள். அவர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நமக்கு 2015 வெள்ளம் தந்த அனுபவங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னை சிறுகதைப் போட்டியில் வந்திருந்த இருந்த கதைகளில் பெரும்பாலானவை 2015 வெள்ளத்தை ஒட்டியவையே. எந்த அளவுக்கு சென்னை வெள்ளம் சென்னை மக்களை புரட்டிப் போட்டது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதேதான் 2018 திரைப்படமும். கேரளாவைப் பொறுத்தவரை பார்த்தவர்கள் நிச்சயம் கதறி இருப்பார்கள். படத்தின் கலெக்ஷனும் அதை உறுதி செய்கிறது.

இதுபோன்ற திரைப்படங்களுக்கு உரிய அதே கதைதான். ஒவ்வொரு குடும்பமாகக் காண்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எப்படி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மக்களும் தானே ஹீரோவாகி எப்படி அனைவரையும் மீட்கிறார்கள் என்பதைப் பரபரப்பாகக் காட்டுகிறார்கள். சென்னையில் நடந்தது போலவே அங்கேயும் கர்ப்பிணிப் பெண் ராணுவத்தால் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட காட்சியும் உண்டு. ஒரே ஒரு இளம் ஜோடி மட்டும் வெள்ளத்தில் ஒட்டுமொத்தமாகப் பிரிய நேர்கிறது, டைட்டானிக் போல.

கேரளாவில் குண்டு வைக்கப் போகும் தமிழன் ஒருவன் மனம் திருந்தும் தனி டிராக்கும் உண்டு. இப்படிப் பல டிராக்குகள் தனித்தனியே அலைவதுதான் படத்தின் பெரிய பலவீனம்.

இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சம், வெள்ளம் வெள்ளம் என்று பயமுறுத்தாமல் படத்தின் போக்கிலேயே வெள்ளத்தின் அளவைக் கூட்டிக் கொண்டே போனதுதான். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், பல நல்ல நடிகர்கள் சின்ன சின்ன காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.

டைட்டானிக் போலவே அந்த ஜோடியின் உண்மையான அன்பை இன்னும் ஆழமாகக் கொண்டு போயிருந்தால் படம் அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்கும். இப்போது இது கேரளாவுக்கான ஒரு படமாகவே இருக்கிறது.

ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

புருஷ பிரேதம் (M) – யாரோ ஒருவர் எப்போதோ இது மிக நல்ல படம் என்று சொல்லிவிட, இத்தனை நாள்களாக இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இன்றுதான் அந்த சனி எனக்குப் பிடித்தது.

சமீபத்தில் பார்த்த மலையாளப் படங்களில் மிக மோசமானது இதுவே. இந்தப் படத்தை யார் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என இப்போது நினைவுக்கு வரவில்லை. இரண்டரை மணி நேரத் திரைப்படத்தை 5 மணி நேரம் பார்த்தது போன்ற உணர்வு. கொஞ்சம் கூட கதையோ சுவாரஸ்யமோ இல்லை. ஆனால் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசிக் கொள்வதாகவும் மிகுந்த மாடர்னாகப் படம் எடுத்ததாக நினைத்துக் கொண்டு சாவடித்து விட்டார்கள். யதார்த்தத்துடன் ஒரு போலீஸ் சந்திக்கும் அத்தனை கஷ்டங்களையும் காண்பிப்பதாக மனதில் உருவகித்துக் கொண்டு உருவான வினோத வஸ்துவிடம் நான் மாட்டிக்கொண்டு விட்டேன்.

ஸப்த ஸாகரதாச்சே யெல்லோ – ஸைட் பி (K) – காவியம் போன்ற ஒரு படத்துக்கு இப்படி ஒரு இரண்டாம் பாகமா என்று பலர் புலம்பியிருந்தாலும், எனக்குப் பிடித்திருந்தது. தனக்குக் கிடைக்காத காதலி இன்னொருவனை மணந்துகொண்டு குழந்தையுடன் வாழ்ந்தாலும், அவள் கனவுகண்ட சின்ன சின்ன விஷயங்கள் கூட நிறைவேற வேண்டும் என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்யும் ஹீரோ கதாபாத்திரம். அதே சமயம் அதைப் பரிபூரணமாகச் செய்யவும் முடியாமல் அவனைக் கொல்லும் வரை செல்லும் சைக்கோத்தனம். இந்த இரண்டுக்கும் இடையே ரக்‌ஷித் செட்டி – க்ளிஷேவாகத் தெரிந்தாலும் சொல்கிறேன் – வாழ்ந்திருக்கிறார்.

காதலியை மையமாக வைத்து முன்னகர வேண்டிய திரைப்படத்தில் அழகிய விபத்து ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது. பாலியல் தொழிலாளியாக வரும் நடிகை நடிப்பில் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். இதனால் ஹீரோவும் கதாநாயகியும் ஒன்றாகச் சேர வேண்டும் என்னும் பரபரப்பே நமக்குள் எழாமல் போகிறது. அப்படி ஒரு பரபரப்பை இந்தப் படம் கோரவில்லை என்பதால் பெரிய இழப்பில்லை.

ஒற்றைக் காது கேட்காமல் வரும் வில்லன் நடிகர் முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகத்திலும் தன் முக அசைவுகளாலேயே அனாயசமாக நடிக்கிறார்.

முதல் பாகத்தை உணர்வுரீதியாக ரசித்தவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். முதலிரண்டு பாகங்களும் சேர்ந்த ஒற்றை நாவல் என்ற புரிதலுடன் பார்த்தால் மறக்க முடியாத அனுபவமாக மாறும்.

பிரைமில் கிடைக்கிறது.

18+ படம்.

ஒரு கட்டுரையாளர் சொன்னார் என்பதற்காக, நல்ல தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்காமல் விட்டுவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி மேலிட, எறும்பு திரைப்படத்தை 45 நிமிடங்கள் பார்த்தேன். அதுவே பல்லைக் கடித்துக் கொண்டுதான் பார்த்தேன். அதற்கு மேல் பொறுமை இல்லை. இந்தத் திரைப்படத்தை மலையாள நல்ல திரைப்படங்களுடன் ஒப்பிடுவது எல்லாம் கலைக்கும் மலையாளத் திரைப்படங்களுக்கும் செய்யும் துரோகம். இன்னும் மனதில் நிறைய கொட்டிக்கொண்டு வருகிறது. ஆனால் இதுபோன்ற திரைப்பட முயற்சிகளை, முயற்சிகள் என்ற அளவிலாவது நோகடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அமைதியாகிறேன்.

அதே சமயம் எல்லா மலையாளத் திரைப்படங்களும் நல்ல திரைப்படங்கள் அல்ல. அவற்றிலும் பல போலிகள் உண்டு. அப்படிப்பட்ட திரைப்படங்களை இங்கே பலர் ஏற்றிப் பிடிக்கிறார்கள் என்று கட்டுரையாளர் சொல்வது உண்மைதான். அது தனி.

கைவா (K) – பொழுது போகாத நேரமொன்றில் இந்தக் கன்னடப் படத்தைப் பார்த்தேன். ஏன் பார்த்தேன்? 1980களின் பெங்களூரைக் கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னதற்காக. யார் சொன்னது? படத்தை எடுத்தவர்களே! இங்கேதான் நான் ஏமாந்துவிட்டேன். அந்தக் கால பெங்களூரில் 0.1% கூட காட்டவில்லை.

படத்தின் மேக்கிங் நன்றாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட தமிழ்ப் படங்களைப் போன்ற கலர் டோனைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் கதை? அரதப்பழசான கதை. இரண்டு கேங்குகளுக்கு இடையே உள்ள பகைமையில் அப்பாவிப் பெண், அதிலும் வாய் பேச முடியாத பெண் சீரழிக்கப்பட, அவர்களைக் கொடூரமாகப் பழி வாங்குகிறான் ஹீரோ. இதில் ஹீரோ ஹிந்து, ஹீரோயின் முஸ்லிம். ஆனால் இதெல்லாம் சினிமாவில் ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லாம் அப்படி அப்படியே நடக்கிறது.

1983ல் ராஜ்குமார் நடித்த பக்த பிரகலாதா ரிலீஸாகிறது. அதில் புனித் ராஜ்குமார் பிரகலாதன். ராஜ்குமார் ஹிரண்யகசிபு. பெங்களூரில் கபாலி தியேட்டரிலும் அப்படம் ரிலீசாகிறது. அப்படத்தின் உச்சகட்ட காட்சியில் ராஜ்குமார் தன் கதையுடன் வெகுண்டெழுந்து, ‘இங்கே இருக்கிறானா உன் ஹரி?’ என்று கோபம் கொண்டு ஒவ்வொரு தூணாக உடைக்க, கடைசி தூணை உடைக்கும்போது, அருகே இருந்த கங்காராம் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து தியேட்டர் மேல் விழுந்ததில் 123 பேர் மரணமடைகிறார்கள்.

படம் திரையிடப்பட்டதும், கட்டடம் தியேட்டர் மேல் இடிந்து விழுந்து படம் பார்த்தவர்கள் இறந்ததும் உண்மை. ராஜ்குமார் அடித்தபோது இடிந்தது என்பது ஒரு மித். இதைத் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய சோகத்தை படத்தில் ஊறுகாய் போலத் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு விஷயத்தைத் தவிர படத்தில் எதுவுமில்லை.

மஞ்ஞுமெள் பாய்ஸ் (M) – ஒரு முறை பார்க்கலாம். இதுமாதிரியான சர்வைவல் வகைத் திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைப்பதில் எப்போதுமே சவால் இருக்கும். பரதனின் மாலூட்டியில் இருந்து இதைப் பார்க்கலாம். கதைக்குள் வருவதற்குள் பாடாய்ப் படுத்திவிடுவார்கள். அப்படிக் கதைக்குள் வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாது. Trapped (H), Helen (M) எல்லாம் இப்படித்தான்.

இந்தப் படத்தில் நண்பர்கள் அனைவரும் கொடைக்கானலுக்குச் செல்லும் வரை படம் படு இயல்பு. நண்பர்களின் ஆரவாரத்தைத் திரையில் அப்படியே கொண்டு வந்துவிட்டார்கள். கொடைக்கானலை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. ஒரு நண்பன் குழிக்குள் விழும் காட்சி பதைபதைப்பு. அதன்பின்பு படம் அப்படியே நிற்கிறது. மேக்கிங், நடிப்பு எல்லாம் நன்றாக இருந்தும் அதற்கு மேல் ஒன்றும் இல்லை. நண்பனை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்று இன்ச் இன்ச்சாகக் காட்டுகிறார்கள். கயிறு இழுக்கும் போட்டி வரும்போதே, இது பின்னால் உதவும் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சி புல்லரிப்பாகத்தான் இருந்தது.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது – கண்மணி அன்போடு என்ற பாடல் வரும் இடம். தொடக்கத்தில் அத்தனை பெரிய திரையில் அந்த இசையைக் கேட்டதும் மனம் திருநெல்வேலியையும் ரத்னா தியேட்டரையும் பதினைந்து வயது நண்பர்களையும் தேடத் தொடங்கியது. ஏங்க ஏங்க அழுகை வந்தது என்கிற வரி வரும் காட்சியில் நிஜமாகவே கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது. இப்படியான ஒன்றிரண்டு காட்சிகளைத் தாண்டி, பெரிதாக படத்தில் ஒன்றும் இல்லை.

***

2004ல் கல்யாணம் முடிந்து தேனிலவுக்குக் கொடைக்கானல் போனோம். குணா குகையைத் தூரத்தில் இருந்து பார்த்தோம். உள்ளே இறங்கிப் போய்ப் பார்க்கலாம் என்று மனைவி சொன்னாள். மஞ்ஞுமெள் பாய்ஸ் படத்தில் இப்போது காண்பிக்கப்படுவது போல கேட் இருந்த நினைவில்லை. இறங்கிக் கொஞ்சம் தூரம் நடந்து போய்ப் பார்க்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். அதிலிருந்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மனைவி சொல்லிக்கொண்டே இருந்தாள், குணா குகையைப் பார்த்திருக்கலாமே என்று. மஞ்சும்மெள் பாய்ஸ் பார்த்தவுடன், ‘எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சிருக்கோம் பாத்தியா?’ என்று சொல்ல நினைத்தேன். ‘குழிலயே விழுந்திருக்கலாம்’ என ஒரு பதில் சொல்லும் வாய்ப்பை அவளுக்குத் தரக் கூடாது என்பதற்காகவே அதைச் சொல்லவில்லை.

கேப்டன் மில்லர் – ஏன் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம் என்று நொந்து கொள்கிறேன். ஏன் இந்தத் திரைப்படத்தை எடுக்கிறோம் என்று யாருக்கும் தெளிவில்லை. இது சுதந்திரப் போராட்டத் திரைப்படமா அல்லது தலித்துகள் கோவிலுக்குள் செல்லும் உரிமையை மீட்கும் திரைப்படமா அல்லது காந்திய – தீவிரவாதப் போக்கினரிடையே உள்ள வேற்றுமைகளைச் சொல்லும் படமா என்று எதிலும் ஒரு தெளிவில்லை.

இன்றைய கால மனநிலையை அன்றைய கால சுதந்திரப் போராட்டக் களத்துக்குள் வைத்து எதையோ ஒட்டிச் செயற்கையாக ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, எடுத்த விதம் எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம். அந்தக் கால பீரியடைத் திரையில் கொண்டு வரத் தெரியாமல் ஒதுக்குப்புறமாகவே பெரும்பாலான காட்சிகளை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். கோவிலில் கூடவா செயற்கைத்தனம்? வசனங்களிலும் அப்படியே. மூடிட்டு இரு என்று கடந்த பத்து வருடங்களாக நாம் பேசுவதெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே திரைப்படத்தில் வசனமாக வருகிறது.

நடிப்பு – ஐயையோ. அத்தனை பேரும் ஓவர் ஆக்டிங். தனுசு இந்தக் கால ஹீரோ போல் ஸ்லோமோஷனில் நடந்து வந்து சுட்டுக் கொல்கிறார்‌. ஆங்கிலேயர்கள் வசம் இருக்கும் ஒட்டுமொத்தத் துப்பாக்கிகளை விடவும், கையெறிக் குண்டுகளை விடவும் புதைகுண்டுகளை விடவும் தனுஷிடம் கூடுதலாக இருக்கிறது. எப்படி வந்தது, யார் கொடுத்தார்கள் எதுவும் தெரியாது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதப் பாதை என்பது இத்தனை கேவலமாக இல்லை. அது கூடுதல் அர்ப்பணிப்புடன், கடவுள் நம்பிக்கையுடன், ஒட்டுமொத்த இந்திய மக்களையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்தது. இவர்கள் எடுக்க நினைத்தது நக்சலைப் பற்றிய திரைப்படம். எடுத்தது சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் ஒரு திரைப்படம்.

இந்தக் கொடுமையை எப்படித்தான் தியேட்டரில் பார்த்தார்களோ.

நேரு (M) – தொடர்ச்சியாக வளவளவென்று மலையாளம் பேசும் ஒரு திரைப்படம். மலையாள வசனங்கள் இத்தனை பேசப்பட்டாலும் பிடிக்கும் என்பவர்களுக்கான படம்.

எப்படியாவது த்ருஷ்யம் போல ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் அதே போன்ற ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்னொரு திரைப்படம். அதே ஜித்து ஜோசப். அதே மோகன்லால்.

மையம் கொஞ்சம் நம்பும்படியாக இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ். நோ மீன்ஸ் நோ என்பது போல இதைப் புரிந்து கொண்டால்தான் இந்தப் படத்துடன் ஒன்ற முடியும்‌. ஏனோ என்னால் முடியவில்லை.

When rape is inevitable என்றொரு பழமொழி உண்டு. யதார்த்தத்தில் அது கொடூரமானது. விக்டிம்களுக்குத்தான் அது புரியும். இந்தப் படம் அங்கே சறுக்குகிறது.

எம்.கே.மணியின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்து தொந்தரவு செய்தது, அக்கதைக்கும் இப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட.

Share