Tag Archive for மலையாளம்

Haal Malayalam Movie

Haal (M) – ஹால் என்ற மலையாள வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. சூஃபி மலையாள வார்த்தையாக இருக்குமோ என்னமோ. அது ஒரு நிலை என்பதாக இருக்கலாம். நாம் இதைத் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஏனென்றால் படம் மண்ணு மாதிரி இருக்கிறது.

ஒரே ஒரு நல்ல சீனை ரீல்ஸில் பார்த்துவிட்டு அடடா இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று முழுமையாகப் பார்த்துத் தொலைத்தேன்‌ விக்கிபீடியாவில் லவ் ஜிகாத் என்றெல்லாம் போட்டிருக்க சம்பவம் பண்ணி இருக்காங்க மல்லூஸ் என்று நினைத்துப் பார்த்தால்… அந்தப் பெண் கிறித்துவப் பெண், பையன் முஸ்லிம் பையன் என்றதுமே ஒரு தமிழ்நாட்டுப் பார்வையாளனாக எனக்கு முற்றிலுமாக ஆர்வம் வடிந்துவிட்டது. ஒருவேளை கேரளாவில் கிறிஸ்தவப் பரவல் அதிகமாக இருப்பதால் கிறித்துவக் குடும்பங்கள் பதற்றத்துடன் பார்த்திருக்குமோ என்னவோ.

முஸ்லிம்‌ பையனும் கிறித்துவப் பெண்ணும் காதலிக்க, இதில் முஸ்லிம் குடும்பம் அவளை மதம் மாற்றம் செய்ய வேண்டும் எனச் சொல்ல, அந்தப் பெண்ணும் ஒரு கட்டத்தில் ஒத்துக்கொள்ள, மதமாற்றம் செய்யப்படும் நேரத்தில் அந்தப் பெண் என்னால் மதம் மாற முடியாது, கிறித்துவப் பெண்ணாகவே இருப்பேன் என்று சொல்லிவிட, இது பெரிய பிரச்சனையாகி, லவ் ஜிகாத், ஐ எஸ் என்றெல்லாம் போக, கடைசி அரை மணி நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் காமெடிப் படம் போல என்னத்தையோ மாற்றிப் படத்தைக் கொன்று என்னையும் கொன்று விட்டார்கள்.

சேன் நிகமுக்காகப் பார்த்தது தவறாகிப் போனது.

Share

Some movies

வாழ II (M)

முதல் பாகத்தைப் போல அத்தனை யதார்த்தமாக இல்லை என்றாலும், இந்தத் திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது வியப்பே இல்லை. முதல் அரை மணி நேரம் என்னடா கொடுமை என்று பாடாய்ப்படுத்தி விட்டார்கள். ஆனால் அடுத்த ஒரு மணி நேரம் படம் பட்டாசு. குறிப்பாக, பள்ளியில் யார் யார் மொபைல் பயன்படுத்துகிறார்கள் என்ற காட்சியில் தொடங்கிப் பின்னர் போலீஸ் வருவது, அடிதடி அனைத்தும் சிறப்பு. அதிலேயே கமிங் ஆஃப் ஏஜ் காதலையும் சொன்னதெல்லாம் அருமை. அதே போல் சுன்னத் போர்ஷன் க்யூட் நகைச்சுவைக் கவிதை. அதன் பிறகு நண்பர்கள் ஒவ்வொரு இடத்திற்குச் சிதறிப் போய்விட, படம் கொஞ்சம் மெலோ டிராமா ஆகிறது. அதன் பின்னர் நெஞ்சை நக்கும் திரைப்படமாகிறது. 4 நண்பர்களும் அப்பாக்களும் யதார்த்தமாக நடிக்கிறார்கள். நேரம் இருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். தமிழில் இதுபோன்ற அனுபவம் கிடைக்காது என்பதற்காகவே நிச்சயம் பார்க்க வேண்டும்.

பிகு: சில நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு நடிகர் பழைய ரவீந்திரன் மாதிரி இருக்கிறாரே என்று பார்த்தால்.. ஆம் பழைய நடிகர் ரவீந்திரனேதான்.

காதல் ரீசெட் ரிபீட்

தமிழ்நாட்டு போலிஸுக்கும் ஸ்காட்லாந்து போலிஸுக்கும் இருக்கும் வாய்க்கால் தகராறு நாம் அறிந்ததே. ஸ்காட்லாந்து போலிஸைவிட தமிழ்நாடு போலிஸ் பெட்டர் என்ற கருத்தை அடித்து நொறுக்கவே ஏ எல் விஜய் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர்தான் காதல் ரீசெட் ரிபீட். ஸ்காட்லாந்து போலிஸ்காரர்கள் வெறும் கிறுக்கர்கள் என்று நிரூபித்திருக்கிறார். படமும் கிறுக்குத்தனமாகவே இருக்கிறது.

என்னடா மிலிட்டிரி நீ இந்தப் பக்கம் என்பது போல் முக்கியமான கேரக்டரில் அர்ஜூன் அசோகன். ஐயோ பாவம்.

ஜோக் சொல்லிட்டல்ல, நாளைக்கு சிரிக்கிறேன் என்பது போலக் காட்சிகள். இதை திடீரென்று நகைச்சுவைப் படமாக மாற்றிவிடலாம் என்று யாரோ இயக்குநரை நம்ப வைத்திருக்கிறார்கள். உலகத்திலேயே யாரும் யோசிக்காத புதுமையான கதை என்று இயக்குநரே நினைத்துக்கொண்டிருக்கிறார் போல! கொடுமைடா சாமி.

எம். பாஸ்கர் கொடூரம். பேசியே கொல்கிறார்.

இசை பற்றிய படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்டால் பிச்சிக்கும் என்று நினைத்தால், படத்தையே பிய்த்து எறிந்துவிட்டார் ஹாரிஸ். சந்தத்தில் பாடாத கவிதை பாடலை அடியொட்டி ஒரு காப்பி பாடல் வேறு. இளையராஜா பாடலைக் கேட்டால் தாலாட்டு மாதிரி தூக்கம் வரும் என்றெல்லாம் என்ன என்னவோ படத்தில் வருகிறது.

கதாநாயகி தமன்னாவின் நகல் – அவரை விட அழகாக இருக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல்.

மைக் (M)

படத்தின் ஆரம்பக் காட்சிகள் மிகவும் கச்சிதமாக நல்ல மேக்கிங்குடன் இருந்தன. நாவலில் மட்டுமே பரிச்சயப்பட்ட, ஆனால் திரைப்படத்தில் இப்படி ஒரு கதையா என்று ஆச்சரியப்பட வைக்க வைக்கும் ஒரு கதை. ஒரு பெண் தன்னை ஆணாக உணர்ந்து பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள நினைக்கும் கதை. பிரச்சினை என்ன என்றால் அந்த கதைக்குரிய பாயிஷ் கேரக்டரை மிகவும் அழகான ஒரு ஹீரோயினிடம் கொடுத்தது தான். அனஸ்வரா ராஜன். அவரை பாயிஷ் கதாபாத்திரமாக நினைக்கவே முடியவில்லை. ஆனால் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது என்பதால் பார்க்க முடிகிறது. ஃபிளாஷ்பேக் காட்சிகளின் ஆழமற்ற தன்மை காரணமாகப் படம் சொதப்பிவிட்டது. இறுதிக்காட்சியில் ஒரே நொடியில் பாயிஷ் கேரக்டர் பெண்தன்மைக்கு மாறுவது, ஒரே காட்சியில் மாறினாலும் கூட நம்பும்படியாக இருக்கிறது. அப்படித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அத்தனை நேரம் என்னடா திரைக்கதை என்று யோசித்த நாம் அந்த ஒரு நொடியில் திரைக்கதையுடன் ஒன்றித்தான் போகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஹீரோவுக்காக நிச்சயம் பார்க்க வேண்டும். 2022ல் வந்த படம் இது.

The Rise of Ashoka (K)

கன்னடத் திரைப்படம். கதையாக சற்று குழப்பம் நிறைந்த கதை. கோவிலில் செலுத்தும் முடி காணிக்கைக்குப் பின்னால் இத்தனை பெரிய பண லாபி இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதுவே படத்தின் ஆதாரத்தைக் கொஞ்சம் சிதைக்கிறது. நாவிதர் குடும்பத்தில் இருந்து எப்படியாவது படித்து மேலே வர நினைக்கும் ஒருவன், மீண்டும் அந்த தொழிலுக்குள்ளேயே சென்று தன் சமூக மக்களுக்காகப் போராடுவதை கமர்சியல் பாணியில் எடுத்திருக்கிறார்கள். மோசமான மேக்கிங் இன்னொரு பலவீனம். இந்தப் படத்தை இயக்கும் போது இயக்குநர் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட, வேறொரு இயக்குநர் இயக்கித் திரைப்படத்தை முடித்திருக்கிறார். மறைந்து போன இயக்குநரின் அஞ்சலிக்காக இதைப் பார்க்கலாம். ஆனால் தமிழர்களை இத்தனை கேவலமாக காட்டி இருக்கத் தேவையில்லை. படுமோசம்.

Share

Athiradi Malayalam Movie

அதிரடி (M) – இளமைச் சரவெடி என்று பெயர் வைத்திருக்க வேண்டும். தொடக்கக் காட்சியிலேயே மிரள வைக்கிறார்கள். அடுத்த நொடி படம் வேறு மூடில் பயணிக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை கல்லூரிதான். முழுக்க முழுக்க இளைஞர்களின் கல்லூரி விளையாட்டு. கதை ஒன்றுமே இல்லை. திரைக்கதையிலும் நடிகர்களின் நடிப்பிலும் எடிட்டிங்கிலும் பின்னணி இசையிலும் பரத்தி விட்டார்கள். இடையில் ஒரு பத்து நிமிடமும் கடைசிச் சண்டையில் ஒரு ஐந்து நிமிடமும் கொஞ்சம் தொய்வாகப் போனாலும் ஒட்டுமொத்தமாக மறக்க முடியாத அனுபவமாக அமைந்து விட்டது. தீவிரமான மலையாளத் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் செட் ஆகாது. மாறாக நம்ம ஊர் டிராகன் போன்ற திரைப்படங்கள் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

பல காட்சிகள் அருமை. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை ஒட்டி அந்த ப்ரொபசர் பேசப் போகும்போது நல்ல உத்தி என்று நினைக்கும் போதே அடுத்த நொடி அதைவிட அட்டகாசமான உத்தியைப் பயன்படுத்தியது பக்கா சரவெடி தான். வினீத் அவராகவே வருகிறார். எத்தனை காட்சிகளில் அவரை மட்டம் தட்டி வசனம் எழுதி இருக்கிறார்கள்! அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை.

பாசில் ஜோசப் கலக்கி இருக்கிறார்.

25 வயது மனநிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என நினைப்பவர்களுக்கு மட்டுமான படம்.

Share

Bha Bha Ba

Bha Bha Ba (M) – நேரம் கெட்ட நேரம் என்றால் இப்படிப்பட்ட படங்களை எல்லாம் பார்க்கத் தோன்றும். திலீப்பும் மோகன்லாலும் நடித்திருக்கிறார்களே என்று இந்தக் கொடுமையைப் பார்த்தேன். இதுவரை பார்த்த அனைத்துக் கொடுமையான மலையாள, தமிழ்த் திரைப்படங்களுக்கு சிகரம் இத் திரைப்படம். பைத்தியக்காரத்தனமான திரைப்படம். பார்த்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும். இப்படிப்பட்ட ஒரு மோசமான கதையை நம்பி, அதைவிட மோசமான திரைக்கதையை எழுதி, அதைவிட மோசமாக இயக்க முடியும் என்று நிரூபித்த இயக்குநர்களை எத்தனை பாராட்டிலும் தகும். விளக்கமாத்துக்குப் பட்டு குஞ்சம் என்பது போல் இந்த கன்றாவிக்கு இரண்டு இயக்குநர்கள் வேறு. பயம் பக்தி பகுமானம்தான் ப ப பவாம்.பார்வையற்றவருக்குக் கண்ணாயிரம் என்று பெயர் வைத்ததைப் போல.

Share

Valadhu Vasathe Kallan

வலதுவசத்தெ கள்ளன் (M) – ஜீத்து ஜோசப்பின் வழக்கம்போன்ற திரில்லர்‌ முதல் இரண்டு மணி நேரம் யார் என்ன எதற்கு எப்படி என்பதை நிஜமாகவே யோசிக்க வைக்க விடாமல் மிரட்டி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல பையன் வரவும் அவனாக இருக்குமோ என்று யோசிக்க வைத்தது தேவையற்ற க்ரிஞ்சாகிவிட்டது. கடைசி அரை மணி நேரம் (கதைக்குத் தேவையான ஆனால் நமக்கு) தேவையற்ற கதை. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கலக்கிவிட்டார். இவருக்காகவும், திரைக்கதைக்காகவும், அதைவிட முக்கியமாக வலதுவசத்தெ கள்ளன் என்ற பெயர் வைத்ததற்காகவும் சுமாரான இப்படத்தை ஒருமுறை பார்த்து வைக்கலாம்.

Share

Eko – Truly a Master Piece

Eko (M) – என்ன சொல்ல! எப்படியாவது வார்த்தைகளில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு த்ரில்லர் வகைப் படத்தை இத்தனை விரிவாக இத்தனை ஆழமாக எடுக்க முடியுமா? த்ரில்லரும் இலக்கிய வகைமையும் ஒன்று சேர முடியுமா? த்ரில்லை திரைப்படத்தை ஓர் இலக்கிய நாவல் போல எழுத முடியுமா? நாவலில்கூட கை கூட முடியாத சில நுட்பங்களைத் திரையில் கொண்டு வந்துவிட முடியுமா? இசை, நடிப்பு, ஒளிப்பதிவு, நிலம் என அனைத்தும் ஒரு படத்தில் ஒன்றுகொன்று உச்சமாக இயைந்து ஒத்துழைக்க முடியுமா? ஓர் இந்திய நிலத்தில் இன்னொரு நிலத்தின் ஆத்மாவையும் காதலையும் அச்சு அசலாகக் கொண்டு வந்துவிட முடியுமா? ஒவ்வொரு நொடியும் புல்லரிக்க வைக்கும் காட்சியும் வசனமும் திரைக்கதையும் என படம் தொடங்கிய நொடி முதல் இறுதி வரை கொண்டு செல்ல முடியுமா? மெல்ல நகரும் படம் ஆனால் இப்படி விறுவிறுப்பாக இருக்க முடியுமா? ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரையில் இப்படிச் செதுக்க முடியுமா? தேவையற்ற காட்சி ஒன்று கூட இல்லாத ஒரு படம் இருக்க முடியுமா? அத்தனையையும் செய்து காட்டி இருக்கிறது எக்கோ என்னும் மலையாளத் திரைப்படம்.

இது திரையில் ஒரு ஆழமான நாவல். த்ரில்லர் வகையின் ஆழமான இலக்கியப் பிரதி.

இறுதிக் காட்சியில் வரும் புல்லரிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இது ஒரு திரையரங்க அனுபவமாக முகிழ்ந்திருக்கவேண்டும். தவற விட்டுவிட்டேன்.

நாம் எப்போது தமிழில் இப்படி ஒரு படம் எடுப்போம் என என்னால் யூகிக்கக் கூட முடியவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் திறமைச்சாலிகளுக்குக் குறைவில்லை. தேவையற்ற அரசியல் தூண்டிலில் சிக்கிக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

மலையாளிகளோ நிலம் சார்ந்த கதை, கதை சார்ந்த திரைக்கதை என இடதுகையால் திரைப்படம் இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் செலவு 5 கோடிதானாம். நம்ப முடிகிறதா?

எந்த வித நட்சத்திர மதிப்பும் இல்லாத பையன் அப்படி நடிக்கிறான். விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு வாய்ப்புக் கிடைத்தால் மலையாளப் பையன்கள் அசரடித்துவிடுகிறார்கள். சந்தீப் பிரதிப்புக்கு 25 வயது இருக்குமா? சில படங்களில் சாதாரண கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அப்படிச் சாதாரணமாக வந்து பின்னர் இந்தப் பையன் எடுக்கும் விஸ்வரூபம் நம்மை வாய் பிளக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குநர் தின்ஜித் அய்யநாதன். இவரது கிஷ்கிந்தா காண்டமெல்லாம் இந்தப் படத்தின் முன்னால் ஒன்றுமே இல்லை என்றால் இந்தப் படம் எப்படி என்று புரிந்துகொள்ளுங்கள்.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை என அனைத்திலும் இந்தப் படம் தேசிய விருது பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

டோண்ட் மிஸ் வகையறா.

Truly a master piece.

Share

Dies Irea

Dies Irea (M) – சமீப காலங்களில் பேய்ப் படங்கள் எடுப்பதில் இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதுவது ராகுல் சதாசிவனைத்தான். பேய்ப் படங்களில் நான் பார்த்த அவரது முதல் திரைப்படம் பூத காலம். வித்தியாசமான சைகலாஜிகல் ஹாரர். கடைசியில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. அந்தப் படத்தில் பேயை காட்ட வேண்டுமா அல்லது பயம் மட்டும் போதுமா என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது. 

பேய் இருக்கா இல்லையா என்பதைப் பற்றிப் பலருக்குப் பல சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் பேய் பற்றிய பயம் உலகம் முழுக்க நிஜம். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் அந்தப் படத்தில் அவர் காட்சிப்படுத்தியிருந்தார். அப்படி அத்தனை அழகாக யோசித்தவர் கடைசியில் பேயைக் காட்டினார் என்பதில் அந்தப் படம் எனக்குக் கொஞ்சம் விலகலைத்் தந்து விட்டது. மற்றபடி அது நல்ல திரைப்பட அனுபவமே.

பின்னர் வந்தது பிரமயுகம். அந்தப் படத்தில் மம்முட்டியின் நடிப்பு மிரட்டல். கதையும் ஓரளவு வித்தியாசமான கதை. ஆனால் மிக மெல்ல நகரும் காட்சி அமைப்பும் சில தேவையற்ற காட்சிகளும் எனக்குக் கொஞ்சம் விலகலைத் தந்தன. ஆனால் சந்தேகமே இல்லாமல் அதுவும் முக்கியமான படமே. குறிப்பாக மம்முட்டியின் மிகச் சிறந்த படங்களில் அந்தப் படத்துக்கு என்றைக்கும் ஓர் இடம் உண்டு. 

இதனால் அந்த இயக்குநர் இப்போது எடுத்து வெளியாகி இருக்கும் டியஸ் இரியே (Dies Irea – கோப நாள்) என்ற படத்தைப் பார்க்க முதல் நாளே போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். இன்னொரு காரணம் பிரணவ் மோகன்லால்.

பேய்ப் பயம் பற்றிய அனுபவம்தான் முதன்மை என்றால் இந்தப் படத்திலும் ராகுல் சதாசிவன் நம்மை ஏமாற்றவில்லை. ஆனால் தனது கடைசி இரண்டு படங்களில் அவர் கையாண்ட அந்த சைக்காலஜிக்கல் மாயாஜாலத்தைக் கைவிட்டு விட்டு முற்றிலுமான பேய்ப் படத்துக்குள் வந்து விட்டார். இது ஒரு சமரசம். 

இடைவேளை வரை நம்மை என்னென்னவோ யோசிக்க வைத்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை எழுதி, இடைவேளையில் அசர வைத்திருக்கிறார். ஒரு திரைப்படமாக ஃப்ரேம் பை ஃப்ரேம் மிரட்டி இருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தக் கதையாக யோசித்தால் புதுமையாக ஒன்றுமில்லை. அப்படி இருந்தும் கூட இந்த அளவு முதல் கட்சியிலிருந்து கடைசி நொடிவரை நம்மைக் கட்டி போட்டது பெரிய விஷயம்.

Spoiler alert.

படத்தில் பல காட்சிகளில் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். ஆனால் கதையாகச்‌ சில குழப்பம் படத்தில் இருக்கிறது. தம்பிக்கு ஏன் அப்படி நேர்ந்தது என்பதிலிருந்து, அந்த அப்பா கேரக்டர் யார் என்ன ஆனது, உதவி செய்பவனைக் கொல்ல நினைப்பது ஏன் என்பதெல்லாம் குழப்பங்கள். இதையெல்லாம் படமாக எடுத்து வெட்டித் தள்ளி விட்டாரா இல்லை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரா என்பது புரியவில்லை.

தமிழில்,‌ கன்னடத்தில்,  ஹிந்தியில் பேய்ப் படங்கள் என்னும் போர்வையில் கண்ட கண்ட கருமத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது இத்தனை அழகாக இத்தனை அழகியலுடன் இத்தனை மெல்ல நகர்ந்தாலும் இத்தனை விறுவிறுப்பாக ஒரு படம் எடுக்கும் இயக்குநரைப் பார்த்து நிச்சயம் நான் ஆச்சரியப்படுகிறேன்.

 அனுபவத்திற்காக என்றால் நிச்சயம் பார்க்கலாம். பிரமயுகம், பூத காலத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் கீழேதான்.

மேலதிக எண்ணங்கள்

Full of spoilers

திரைப்படம் என்னதான் நவீன காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் அடிப்படை, கெட்டவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கெட்டவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் பார்த்தால் இந்த படத்தின் ஹீரோதான் கொல்லப்பட வேண்டும். பேய் அவனை விரட்டி விரட்டிக் கொல்ல வரும்போது அவன் பிழைக்க வேண்டுமே என்ற எண்ணம் நமக்கு வராமல் இருப்பதற்குக் காரணம், அவன் செய்த சேட்டைகள். செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரு காரில் உட்கார்ந்து கொண்டு மொபைலைப் பார்த்தபடி ஐ அம் சாரி என்று சொல்லிவிட்டால் செய்ததெல்லாம் அப்படியே காற்றோடு மறைந்து போய்விடாது.

எத்தனையோ வருடங்கள் கழித்துச் சந்தித்த அப்பாவிப் பெண்ணை, அவள் சம்மதத்தோடு தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்திவிட்டு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள் என்றதும், திருமணமா வாட் இஸ் திஸ் என்று சொல்லி அவளை மொத்தமாக அப்படியே விட்டு விட்டால் அது என்ன நியாயம்?

திருமணம் செய்து கொள் என்று அந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால், அந்தப் பெண்ணை மிகவும் நல்லவளாகக் காட்டி இருப்பதைப் பின்புலமாக வைத்துக் கொண்டால், தன்னைக் கழற்றி விட்டவனைக் கூட பேயான பின்பும் தலையை வருடிக் கொடுப்பதைப் பார்த்தால், அந்தப் பெண், இவன் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பித்தான் அவனுடன் இருந்திருக்கிறாள் என்பது புலனாகிறது.

நியாயப்படி பார்த்தால் மூடுபனிக்கார பாடிதான் ஹீரோ. நமக்கு ஹீரோவாக அறிவிக்கப்பட்டிருப்பவன்தான் வில்லன். இந்த வில்லன் அந்த நல்ல பாடியையும் சேர்த்து எரித்து விட்டிருக்கிறான். என்ன கொடுமை இதெல்லாம்.

படம் தந்த அனுபவம் வேறு. ஆனால் படம் சொல்வது இதைத்தான்.

நானே சிந்தித்தேன். : )

Share

Mirage

Mirage (M) – சின்ன வயதில் அதிர்ஷ்டப் பரிசுச்சீட்டு கிழிக்கும் வழக்கம் உண்டு. 25 பைசா கொடுத்து சீட்டுக்கிழித்தால் அதில் 50 பைசா அல்லது ஒரு ரூபாய் கிடைக்கும். அதிகபட்சம் பத்து ரூபாய். பல சமயம் பரிசு விழாது‌ அப்போது புதிதாக ஒரு பரிசுச்சீட்டு வந்தது. அதாவது 25 பைசாவுக்குக் கிழித்தால் ஏதேனும் ஒரு பரிசு நிச்சயம். அது ஐந்து பைசாவும் இருக்கலாம், பத்து பைசாவாகவும் இருக்கலாம்.

இந்தப் படம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். சில திரைப்படங்கள் பார்க்கும்போது நாம் சிலவற்றை யூகித்துக் கொண்டே இருப்போம். ஒரு துப்பறியும் படம் என்றால், இவன் கொலைகாரனா அவன் கொலைகாரனா என்று யோசிப்போம். படத்தில் வரும் அத்தனை பேரையும் சந்தேகப்படுவோம். கடைசியில் யாரோ ஒருவன் கொலைகாரன் ஆவான். நான் சொன்னேன் பார்த்தியா என்று சந்தோஷப்பட்டுக் கொள்வோம். இந்தப் படம் அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல. நீங்கள் என்ன யூகித்தாலும் அது அத்தனையும் இந்தப் படத்தில் நடக்கும். இப்படி ஒரு திரைக்கதையை யோசித்ததற்காகவே ஜீது ஜோசப்பைப் பாராட்ட வேண்டும்.

முதல் காட்சியில் இருந்து பலவற்றை நான் யூகித்தேன்.வ்அத்தனையும் நடந்தது. குறிப்பாக க்ளைமாக்ஸை முதல் காட்சியிலேயே யூகித்தேன் என்பது முக்கியமான விஷயம்.

படம் கொஞ்சம் இழுவை என்றாலும் எனக்குப் பிடித்திருந்தது. முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை போரடிக்காமல் போகிறது என்பது பெரிய ப்ளஸ்பாய்ண்ட். பின்னணி இசை அபாரம். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்.

ட்விஸ்ட்டுக்கே ட்விஸ்ட் கொடுக்கும் ஜீதுதான் இப்படம்.

Share