Tag Archive for திரைப்படம்

சிபிஐ 4

CBI (டைரிக்குறிப்பு) 5 (M) – சவட்டித் தள்ளி விட்டார்கள். மூன்று மணி நேரப் படத்தை ஓட்டி ஓட்டிப் பார்த்தாலும் ஆறு மணி நேரம் ஓடுகிறது. பேசுகிறார்கள் பேசுகிறார்கள், வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பயங்கரமான திருப்பம் என்று அவர்களாக நினைத்துக் கொண்டு நம்மைப் போட்டு தள்ளி விடுகிறார்கள். 72 வயதில் மம்மூட்டி அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் கை கால்கள் ஒத்துழைக்கவில்லை. வில்லன் ஓடும்போது வீட்டுக்குள் நின்று தலையை மட்டும் சாய்த்து சாய்த்து மாடியையே பார்க்கிறார், பாவமாக இருக்கிறது.

பல வருடங்கள் கழித்து ஜெகதீஷ் ஸ்ரீ குமாரை திரையில் பார்த்தபோது மனம் கனத்தது. ஜெகதி ஸ்ரீ குமார் முகம் காட்டியது மட்டுமே இந்தப் படத்தின் ஒரே சாதனை.

Share

Some movies

உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.

ப்ரைமில் கிடைக்கிறது.

அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்த‌விதம்‌ அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க‌ விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.

Share

கல்கி 2898 AD

கல்கி 2898 AD – மகத்தான படைப்பாக வர வாய்ப்பிருந்தும் அதை இழந்துவிட்ட ஒரு படம். கடைசி 1 மணி நேரம் படம் பிரம்மாண்டம். ஆனால் முதல் இரண்டே கால் மணி நேரம் பேசியே கொன்றுவிட்டார்கள். அதிலும் பிரபாஸ் அறிமுகக் காட்சியை இத்தனை நீளமாக எந்த அறிவார்ந்த இயக்குநரும் யோசித்திருக்க மாட்டார்.

கிட்டத்தட்ட இன்னொரு குருக்ஷேத்திரப் போரை யோசித்ததெல்லாம் நல்ல கற்பனைதான். அமிதாப் கலக்கல். பிரபாஸ் சொதப்பல். மற்ற யாருக்கும் பெரிய வேடமில்லை. முக்கிய ஹீரோவான கிராபிக்ஸ் அட்டகாசம். பல ஆங்கிலத் திரைப்படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும் இந்தியா இதைச் செய்யும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

முதல் பாகத்தை முடித்த இடம் புல்லரிப்பு. இரண்டாம் பாகத்தில் கர்ணன்தான் கதாநாயகன், நல்லவன் என்று எதையாவது சொல்லி நம்மைச் சாகடிக்காமல் இருக்கவேண்டும். குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லுங்கள். மார்வெல் திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

Share

குருவாயூர் அம்பல நடையில்

குருவாயூர் அம்பல நடையில் (M) – இருபது வருடங்களுக்கு முன்பு வந்த நந்தனம் மலையாளிகளால் கொண்டாடப்பட்டது. பிரிதிவிராஜ், நவ்யா நாயரின் முதல் படம். அதைத் தேவையே இல்லாமல் நாஸ்டால்ஜியாவுக்காகத் தொட்டுக்கொண்டு ஒரு காமெடிப் படம். ஒரேடியாக வாய் விட்டுச் சிரிக்கும்படியாகவும் இல்லை. வெறுப்பாகவும் இல்லை. லாஜிக் மறந்துவிட்டுப் பார்த்தால் கொஞ்சம் பிடிக்கலாம். முன்கணிக்கக்கூடிய எளிய திரைக்கதை. ஆனாலும் கடைசி இருபது நிமிடங்கள் சுவாரஸ்யம்தான். யோகிபாபு அறை வாங்கும் காட்சி நல்ல சிரிப்பு.

தமிழ்நாட்டு வசூலுக்காக இதிலும் தமிழ்ப்பாட்டு உண்டு. அழகிய லைலா பாடல்‌ என்பதால் ஒன்றும் ஒட்டவில்லை.‌ ஏன் இளையராஜாவின் பாடல்கள் இதற்குத் தேவை என்று முன்பே மஞ்ஞும்மெல் பாய்ஸுக்குத் தெரிந்திருக்கிறது.

ஒருமுறை பார்க்கலாம். ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

பைரி

பைரி – சில சிறிய சிறிய குறைகள் இருந்தாலும் இத்திரைப்படம் தமிழ்த் திரையுலகின் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று. அசல் திரைப்படம். மிரட்டல். டோண்ட் மிஸ் வகையறா.

மதயானைக் கூட்டத்துக்குப் பிறகு நான் பார்க்கும் அசல் திரைப்படம் இதுவே. கொஞ்சம் கூட ரொமாண்டிசைஸ் செய்யப்படாத ஒரு படம். பந்தயப் புறாவைப் பற்றி இப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை. இனி வரப் போவதுமில்லை. முதல் நொடி முதல் இறுதி நொடி வரை பந்தயம் மற்றும் அதைச் சுற்றிய வன்முறையை மட்டுமே திரைக்கதையாகக் கொண்ட ஒரு படமெல்லாம் தமிழில் அபூர்வம். திகட்ட திகட்ட திரைக்கதையும் வசனமும் எழுதி இருக்கிறார்கள்.

இதைவிட இன்னொரு அபூர்வம், தமிழில் கிராமத்து அம்மாக்களை இத்திரைப்படத்தின் அம்மாவைப் போல் யாரும் இதுவரை சித்திரித்ததில்லை. அம்மா மகன் உறவை இத்தனை குரூரத்துடனும் இத்தனை பாசத்துடனும் இத்தனை அசலாகவும் இத்தனை உயிர்ப்புடனும் எவரும் படமாக்கியதில்லை. அம்மாவாக நடிக்கும் நடிகை கலக்கிவிட்டார். அதேபோல் வில்லுப்பாட்டைப் படத்தோடு இணைத்த விதம் அட்டகாசம்.

நாகர்கோவில் வட்டார வழக்கில் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை. புறா கிராஃபிக்ஸ் மிக மோசம். அனைத்து நடிகர்களும் ஒரே போல் நடிப்பது இன்னொரு குறை என்றாலும், ஒரு கட்டத்தில் நமக்கு இது பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்பது அதிசயம்தான். இந்தத் திரைப்படத்தில் ஒரு நடிகரைக் கூட எனக்குத் தெரியாது. இதற்கு முன்பு எந்தத் திரைப்படத்திலும் அதிகம் பார்த்ததாக நினைவில்லை. அப்படியானால் இயக்குநர் எந்த அளவு உழைத்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.

ரத்தமும் சதையுமான தமிழ்ப்படம் இது. ஹிந்துத்துவ மற்றும் ஹிந்துத்துவ-வெறுப்பு நண்பர்கள் குறியீடுகளில் சிக்காமல் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். ஏனென்றால் ஹிந்து ஆதரவு மற்றும் கிறித்துவ ஆதரவு, இவற்றுக்கிணையாக இரண்டு பக்கங்களுக்கான எதிர்ப்பையும் நாம் யோசித்துப் பிரித்தெடுக்க, படம் நெடுக அத்தனை சட்டகங்களிலும் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் க்ளாடி.

மலையாளத்தில் பல புதிய புதிய இயக்குநர்கள் என்ன என்ன ஜாலமெல்லாமோ செய்துகொண்டிருக்க, தமிழில் இயக்குநர்கள் புரட்சிக்குள் சிக்கிப் பாழாகப் போய், பெரிய வெற்றிடம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஜான் க்ளாடி போன்ற இயக்குநர்களால் முடியும். தடம் மாறாமல், திரைப்படம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தால் போதும்.

இத்திரைப்படத்தில் பிரான்ஸிஸ் கிருபாவைப் பார்க்கும்போது பக்கென்று இருந்தது. 2021ல் கிருபா மறைந்துவிட்டார். அப்படியானால் எப்போது எடுக்கப்பட்ட படம் இப்போது வந்திருக்கிறது பாருங்கள்!

இரண்டாம் பாகம் வருகிறது என்று இறுதியில் காட்டுகிறார்கள். அது வரும்போது வரட்டும். முதல் பாகத்தைக் கட்டாயம் பாருங்கள்.

பைரி ப்ரைமில் கிடைக்கிறது.

Share

Thalaimai seyalagam web series

தலைமைச் செயலகம் (வெப் சீரிஸ்)

முதலில் பாஸிடிவ்வான விஷயம். தமிழக அரசியலின் குடும்ப அரசியலை நன்றாக எடுத்திருக்கிறார்கள். மிகப் பெரிய பலம் இது. முழு எபிசோடையும் பார்க்க வைப்பது இது மட்டுமே.

இனி மற்றவை.

ஸ்பாய்லர்ஸ் உண்டு.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. மாவோயிஸ்ட் பெண் அதிகாரத்தைக் கைப்பற்றும் கதையைச் சுற்றி வளைத்துச் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் இந்த மாவோயிஸ்ட் புரட்சி ஜல்லியை விட்டுவிட்டு, தமிழக அரசியலில் மட்டும் கவனம் குவித்து எடுத்திருந்தால் பிரமாதமான அரசியல் சீரிஸாக வந்திருக்கும்.

தமிழக அரசியலில் குடும்ப அரசியல் என்றால் யாரை நினைப்போம் என்று எல்லாருக்கும் தெரியும். அந்தச் சாயல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பல மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஊழலில் தண்டனை பெறப் போகும் முதல்வர் என்று சொல்லி, ஜெயலலிதாவின் சாயலைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனாலும் குடும்ப அரசியல் பற்றிய காட்சிகளைப் பார்க்கும்போது நாம் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

1998ல் அமைக்கப்படும் ஆட்சி மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க ஒரு கமிட்டி அமைக்கிறது. அந்த கமிட்டியில் மூன்று முதல்வர்கள் மட்டும் வன்முறைக்கு எதிராகக் களம் இறங்குகிறார்கள். அதில் ஒருவர் தமிழக முதல்வர். இதை சட்னின்னா இட்லி கூட நம்பாது மொமெண்ட். அந்த மத்திய ஆட்சி 99ல் கலைகிறது. அந்த ஆட்சி, ‘நியாயத்துக்காக’ப் போராடும் மாவோயிஸ்ட்டுகளை, கிராமத்து மக்கள் கையில் துப்பாக்கிகளைக் கொடுப்பதன் மூலம் கொல்கிறதாம். ஏன் வாஜ்பாயி இப்படிச் செய்யாமல் விட்டார் என்கிற எண்ணம்தான் வருகிறது.

பேராசைப்படும், அரசியல் குயுக்தி செய்யும் பிராமண வக்கீல்கள். நமாஸ் செய்தபடி நியாயத்துக்காகப் போராடும் போலிஸ். கூடவே வரும் நல்ல கிறித்துவ போலிஸ். எல்லாம் பக்கா. எங்கேயும் ‘போராளி’ இயக்குநர் தவறவே இல்லை. தவறி இருந்தால் செம சீனாகிரும்னு அவருக்குத் தெரியும்.

அரசியலில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் ஆளுமைகளை ஒருங்கே பயன்படுத்தியது சிறப்பு. ‘ஊழல் செய்த ஒரு முதலமைச்சராகவும் இருக்கவேண்டும், அவர் மேல் மக்களுக்குக் கரிசனமும் வரவேண்டும்’ என்று யோசிக்காமல், உள்ளது உள்ளபடி காட்டி இருக்கலாம். இப்படியான நல்ல ஆனால் கெட்ட முதல்வர் என்பதுதான் இயக்குநரின் கையைக் கட்டிப் போட்டுவிட்டது.

அடுத்த முதல்வர் யாரென்று சொன்னதோடு படம் முடிந்துவிட்டது. அப்படியே முடித்திருந்தால் உண்மையில் இது மைல் கல் சீரிஸாகி இருந்திருக்கும். ஆனால் போராளி இயக்குநர் விழித்துக்கொண்டு விட்டார்.

ஒரே ஃப்ரேமில் கதையை மாற்றி, போராளியை முதல்வராக்கி, அதிகாரத்தைக் கைப்பற்றி.. மொத்தமும் பாழ்.

மேக்கிங்கில் பல காட்சிகள் தரம். பல காட்சிகள் குழந்தைத்தனம். பல காட்சிகள் டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது சின்ன குழந்தைக்குக்கூட தெரியும் வகையிலான திரைக்கதை. முதலிரண்டு எபிசோடுகள் பொறுமைக்கான சோதனை. திரைப்படமல்ல என்பதற்காகவே பத்து நொடி காட்சியை முப்பது நொடிக்கு இழுக்கவேண்டியதில்லை. எபிசோட் ஆரம்பிக்கும்போது எதாவது திடுக்கென இருக்கவேண்டும் என்பதறாக எதையாவது காண்பிக்கும் அவலம். செத்துப் போன போலிஸ், அவன் மனைவி எனக் கொடுமைகளின் வரிசை.

அரசியல் சீரிஸாக உச்சம் தொட்டிருக்கவேண்டிய ஒரு வாய்ப்பை, தேவையற்ற மாவோயிஸ்ட் திணிப்பால் கோட்டை விட்டிருக்கிறார் வசந்தபாலன். ஒன்று மாவோயிஸ்ட் படம் எடுக்கவேண்டும், இல்லையென்றால் தமிழக அரசியல் படம் எடுக்கவேண்டும். இரண்டையும் ஒன்றாகச் செய்தது சறுக்கல்.

ஸீ 5ல் கிடைக்கிறது. பொறுமை இருப்பவர்கள் பார்க்கலாம்.

Share

Rebel Tamil Movie

Rebel (T) – தமிழ்ப் படத்துக்கு ஆங்கிலப் பெயர் வைப்பது ஃபேஷனாகிவிட்டது. ஆங்கிலப் பெயர் வைத்தால் 10% கூடுதல் வரி என்று சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசுக்கு நல்ல லாபமும், தமிழ்க்குடி காத்தான் என்கிற பாராட்டும் கிடைக்கும்.

எப்படி நான் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறேனோ அப்படித்தான் படமும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. கல்லூரிக்குள் நடக்கும் அரசியலை, அதுவும் கலைக்கல்லூரிக்குள் நடக்கும் அரசியல் என்னும் ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிக் காட்டுகிறார்கள். ஒட்டவே இல்லை. மூணாற்றில் தமிழர்கள் பட்ட கஷ்டங்களைக் காண்பிக்க நினைக்கும் படத்தில் நம் மனதில் நிற்பது கேரள கம்யூனிஸ காங்கிரஸ் அரசியல் சண்டைகள்தான்!

கம்யூனிஸ்ட்டுகளை முதலில் நல்லவர்களாகக் காண்பித்து, பின்பு அவர்களையும், பாவாடையைக் கழற்றிவிடும் கெட்டவர்களாக்கி, அதற்கொரு முட்டுக் கொடுக்கும் விதமாக, ‘நீ பாத்து வளந்த கம்யூனிஸம் வேற இந்த கம்யூனிஸம் வேற’ என்று என்னவோ சொல்லி… அடேய்களா… ரெண்டு கம்யூனிஸத்துக்கும் என்ன வித்தியாசம்னு எனக்குத் தெரியும். அது கறுப்பா பயங்கரமா இது. இது பயங்கரமா கறுப்பா இருக்கும். ஆட்சி அதிகாரம் கிடைத்தால் கம்யூனிஸம் என்ன செய்யும் என்பது வரலாற்றில் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது இயக்குநருக்குத் தெரியாது போல.

காங்கிரஸ் சார்பாக வரும் இளைஞர் பட்டையைக் கிளப்புகிறார். நன்றாக நடிக்கும் அத்தனை பேரும் மலையாளிகள்! இந்த மலையாளிகள் நடிக்கும் காட்சிகள் அநியாய மண்மணத்தோடு பளபளப்பாக இருக்கின்றன. இயக்குநருக்கு கேரளத் திரையுலகில் நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு.

படத்தில் வசனம் எழுதியவர் என்னவோ எழுத, காட்சியாக வேறு என்னவோ வருகிறது. வேட்டி கட்டியவனைப் பார்த்ததும் தமிழ் உணர்வு பொங்கி வருது என்று ஒரு பக்கம் வசனகர்த்தா பிலாக்கணம் வைக்க, அங்கே தமிழ்த் தடியர்கள் பேண்ட் சட்டையில் வர, மலையாளக் ‘குடி வெறியர்’களோ அழகாக, பாந்தமாக வேட்டியில் இருக்கிறார்கள். இன்னொரு காட்சியில் வசனகர்த்தா உணர்ச்சிவசப்பட்டு திமுகவின் கொடியை, கறுப்பும் சிவப்புமே நம் நிறம் என்று புல்லரிப்புடன் பேச, கொடியில் கறுப்பு வெள்ளை சிவப்பு என்று அதிமுக கொடி போலக் காண்பிக்கிறார்கள். அதிமுகவுக்கும் புரட்சிக்கும் என்னய்யா சம்பந்தம்?

பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில் வரும் அதே எரிச்சல் இதிலும். ஆம், கேரள மாணவர்களுள் ஒருவன் கூட நல்லவனில்லை. தமிழ் மாணவர்களுள் ஒருத்தன் கூட கெட்டவனில்லை. இங்கேயே ஒரு படம் பிரசாரப் படமாக மாறித் தோற்றுப் போய்விடுகிறது.

படம் முழுக்க சிவப்பு, புரட்சி, ஈவெரா, சேகுவேரா என்று குறியீடுகள். 80களின் ரஜினி மற்றும் இளையராஜாவைச் சரியாகப் பின்னணியில் வைத்தவர்கள், என்னதான் கம்யூனிஸம் மூணாற்றில் வலுவாக இருந்தது என்றாலும், திமுக அதிமுக தலைவர்களை ஒரே ஓர் இடத்திலாவது வைத்திருக்கலாம்.

80கள் என்பதால் இளையாராஜாவின் தமிழ்ப் பாடல்கள் பின்னணியில். அத்தனையும் மனதை வருடுகின்றன. அதுவும் ஒரு காட்சியில், ‘பூங்காற்றினோடும்’ என்னும் மலையாளப் பாடல் மனதை வருட, அப்படியே படத்தை நிறுத்திவிட்டுப் பாட்டைப் போட்டுக் கேட்டால் என்று மனம் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது. இன்று காலை அந்தப் பாட்டை பலமுறை கேட்டபின்பே இதனை எழுதுகிறேன்.

மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், செயற்கைத்தனமான புரட்சி என்று எரிச்சலை ஏற்படுத்தும், மனதோடு ஒட்டாத இன்னுமொரு தமிழ்ப்படம். மலையாளிகளும் கேமராவும் அருமை.

Share

அயலான்

அயலான் – பல குறைகள் இருந்தாலும் தமிழில் வந்திருக்கும் ஒரு பொருட்படுத்தத் தக்க படமே. நல்ல கிராஃபிக்ஸ். குழந்தைகளுக்கான படம் என்ற தெளிவு. இந்த இரண்டும் படத்தை சுவாரஸ்யமானதாக்குகின்றன.

,ஹீரோ பெயர் தமிழ் & வில்லனுக்குப் பெயர் ஆரியன், ஆதார் கார்டைக் கிண்டலடிக்கும் ஐடெண்டிடி கார்ட் போன்ற குறியீடுகளைச் சமன் செய்யும் சில வசனங்களும் உண்டு, ‘இந்த ஊர்ல ஒரு திட்டத்தை செயல்பட விடமாட்டாங்களே… போராட்டம்னு ஆரம்பிச்சிருவாங்களே.’

மின்னல் முரளி, எந்திரன் போன்ற திரைப்படங்களின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. விவசாயம், கிராமம் என்றெல்லாம் எரிச்சலைக் கிளப்பி கொட்டாவி வரும் நேரத்தில் அயலான் வருகிறான். பின்னரே படம் சுதாரித்துக் கொள்கிறது. முதல் அரை மணி நேரக் கிராமத்துக் காட்சிகளை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு, ,நேரடியாக அயலான் காட்சியில் ஆரம்பித்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சி மிக அருமை. அயலானின் கிராஃபிக்ஸ் நிஜ பிராணி என்று நம்ப வைக்கும் வகையில் இருப்பதும் அருமை. யோகி பாபு பெரிய ப்ளஸ். பின்னணி இசை கொடூரம். படத்தின் மிகப் பெரிய மைனஸ் இது. இன்னொரு மைனஸ் சித்தார்த்தின் குரல். அதேசமயம் விஜய் சேதுபதியைப் போடாததற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். ஆங்கிலப் படங்களில் இருக்கும் லாஜிக் தீவிரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்தது, திரைக்கதை ரீதியாக மைனஸ். ஆனால் தமிழில் அறிவியல் புனைகதைப் படங்களே இல்லை என்ற நிலையில், இந்த அளவுக்கு ஒரு படம் வந்திருப்பதே சிறப்புதான்.

சிவகார்த்திகேயன் குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இஷா கோபிகர் பெயரைப் பார்த்ததும் பழைய நினைவுகள். எவ்வளவு பெரிய திறமைசாலி. கூகிள் தேடிப் பார்த்தேன். பிஜேபியில் இருக்கிறாராம்.

இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் ‘இன்று நேற்று நாளை’ நல்ல சுவாரஸ்யமான அறிவியல் புனைகதைத் திரைப்படம். அயலான் இன்னும் சிறப்பு. தேவையற்ற அரசியல் வசனத் தெறிப்புகளில் சிக்கிச் சிதறிப் போகாமல் பெரிய இயக்குநராக இவர் வர வாழ்த்துகள்.

Share