Tag Archive for குறுங்கதை

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி

சரியாக எங்கள் தெருவைத் தாண்டிப் போகும்போது எங்களுடன் நிற்கும் சூர்யா அண்ணனைத் திரும்பிப் பார்த்து வெட்கமாகப் புன்னகைத்தபடி போனாள் சாந்தி. எங்கள் எல்லாருக்குள்ளும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சூர்யா அண்ணன் மயங்கியே விழுந்துவிட்டான். எப்பல ஸ்வீட் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவனுடன் கூடப் படித்துக்கொண்டிருந்தவன் சொன்னான், ‘சீக்கிரம் ரூம் போடுல.’ சூர்யா அண்ணன் அமைதியே உருவாகச் சொன்னான், சீரியஸாகச் சொன்னான், இது தெய்வீகக் காதல்-ல என்று. மற்றவர்கள் கமுக்கமாகச் சிரிப்பதாக வெளிப்படையாகவே சிரித்தோம். அது தனக்குப் பிடிபடவில்லை என்ற ரீதியில் கமுக்கமாக இருந்தான் சூர்யா அண்ணன்.

தினம் அவள் எந்த எந்தத் தெருவில் எல்லாம் போகிறாளோ அங்கெல்லாம் போய் நின்றான் சூர்யா அண்ணன். அந்தப் பெண் யாரும் எதிர்பார்க்காத பொழுதொன்றில் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனாள். சூர்யா அண்ணன் கிறுகிறுத்துப் போய் நின்றான். எதோ ஒரு தெருவில் இருவரும் தெரியாமல் ஒருவரை ஒருவர் லேசாக உரசிக்கொண்ட போது இருவரும் மாறி மாறி ஸாரி சொல்லிக்கொண்டார்கள்.

‘எவ்ளோ நாள் பாத்துக்கிட்டே இருப்ப, பேசுல’ என்றான் இன்னொரு அண்ணன். உங்களுக்குப் புரியாது, இது தெய்வீகக் காதல் என்றான் சூர்யா அண்ணன். ‘அவ அமைதி என்னைய கொல்லுதுல.. இதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும். எல்லாம் வாய தொறந்து பேசினாத்தானா?’ என்றான். ‘எத்தன நாளைக்கி..’ என்று தொடங்கிய இன்னொரு அண்ணனை அனைவரும் சேர்த்து வாயைப் பொத்தினோம்.

சூர்யா அண்ணன் தன் நண்பர்களிடம் ஒரு உதவி கேட்டான். தன்னிடம் பைக் இல்லாததால் பைக் இருக்கும் ஒருவன் வந்து காலை ஒன்பது மணிக்கு அவனை பிக் அப் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்ய முடிந்தால் அவளை பாளை பஸ் ஸ்டாண்டில் இன்னொரு தடவை பார்க்கலாம். உடனே ஒருத்தன் தான் டிரைவர் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டான்.

அவன் ஒன்பது மணிக்கு வரும் முன்னரே இன்னொருத்தன் எட்டு மணிக்கு சூர்யா அண்ணன் வீட்டில் வந்து ஹாரன் அடித்தான். ‘ஒம்பது மணிக்கு அவன் வாரேன்னான்.. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.. நீ எதுக்குல இப்பமே வந்த?’ என்ற சூர்யா அண்ணனிடம் அவன் சொன்னான், ‘நீ வால சொல்லுதேன்’ என்று இழுத்துக்கொண்டு போனான்.

பழைய பேட்டையின் ஒரு திருப்பத்தில் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்ஸில் ஃபுட் போர்டில் தொங்கியபடி, துப்பாட்டாவை தலையில் முண்டாசு போல கட்டி, கூலிங் க்ளாஸ் போட்டு, பாட்டம் பேண்ட்டை பாதி காலுக்குச் சுருட்டி, விசில் அடித்தபடி, முன்னே போகும் சைக்கிளில் இருக்கும் ஒரு பையனை, பஸ்ஸில் இருந்தவாறே சாந்தி தட்ட, அந்தப் பையன் தட்டுத் தடுமாறி முன்னே போய் விழுந்தான். உடனே அவள் விசில் அடித்துக் குதித்தாள். புதிய சாந்தியைப் பார்த்து சூர்யா அண்ணன் எச்சில் விழுங்கிக் கொண்டிருக்கும்போது, அவனைக் கூட்டிக்கொண்டு போன அண்ணன் சொன்னான், ‘சரியா ஒம்பது மணிக்கு பாளை பஸ் ஸ்டாண்டுக்கு வேற மாதிரி வருவா. போகணுமா?’

Share

பாம்பான பூனையின் தத்துவ விசாரம்

அந்தப் பூனை குறுக்கே போனது. குறுக்கே போனதும் அந்த மனிதன் செத்துப் போவான் என்று பூனை நினைத்தது. ஆனால் பூனை செத்துப் போய்விட்டது. எப்படி இது சாத்தியம் என்று நினைப்பதற்குள் பூனை செத்துப் போய்விட்டதால் எப்படி இது சாத்தியமானது என்று அதனால் யோசிக்கவே முடியவில்லை.

பூனையின் ஆத்மா யமலோகம் போனது. அங்கே சித்திர குப்தன் பூனைக்கு மறுபிறப்பு உண்டு என்று சொல்லி பாம்பாக அதை மீண்டும் பூமிக்கு அனுப்பி வைத்தான். பாம்பாக மாறிய பூனை குஷியாகிவிட்டது. எப்படியாவது அந்த மனிதனை போட்டே தீரவேண்டும் என்று வன்மம் கொண்டது.

பாம்புகளோடு பாம்புகளாக இந்தப் பாம்பு கடும் கோபத்தோடும் சீற்றத்தோடும் திரிந்தது. மனிதர்கள் ஏனோ அதற்கு வித்தியாசமாகப் பட்டார்கள். ஆனாலும் பாம்பு சீற்றத்துடன் இருந்தது. முந்தைய ஜென்மத்து மனிதனை மட்டும் அது மறக்கவில்லை. இந்தப் பூனைக்கு இது எப்படி இன்னும் நினைவிருக்கிறது என்று சித்திர குப்தன் தலையைச் சொறிந்தாலும், யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லாமல் மறைத்துவிட்டான்.

தன்னைவிட இன்னொரு பாம்பு அதிகம் சீறுவதைப் பார்த்தது பாம்பு. உடனே அதை நண்பனாக்கிக் கொண்டது. இப்படியே எல்லாப் பாம்புகளும் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒரே போடாகப் போட்டுவிட்டு.. இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே எதோ ஒரு மனிதக் கை அந்த இன்னொரு பாம்பை அப்படியே தூக்கியது. மறு நொடியில் அந்த இன்னொரு பாம்பு கொதிக்கும் எண்ணெய்ச் செட்டியில் பொறிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இதைப் பார்த்ததும் நம் பாம்பு பயந்து போய்விட்டது. என்னடா இது கொடுமை என்று கடுப்பாகி நுனி வாலில் நான்கு நாள்கள் அசையாமல் நின்று தற்கொலை செய்துகொண்டது. மீண்டும் யமலோகம் போனது.

யமன் அந்தப் பாம்பின் அடுத்த பிறவி என்ன என்று சித்திர குப்தனிடம் பேசியபோது, “மறு பிறப்பில் என்னை ஏன் எங்கோ கொண்டு போய் போட்டீர்கள்?” என்றது பாம்பு. யமன் ஆச்சரியப்பட்டார். எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது, இல்லையென்றால் இதெல்லாம் எப்படி பாம்புக்கு நினைவிருக்கும் என்று யோசித்தார். தவறுக்குப் பிராயசித்தம் செய்வது போல் அன்பாகப் பேசினார்.

தன் இஷ்டப்படி தான் பிறக்கவேண்டும் என்று பாம்பு எகிறியது. யமன் பாம்புக்கு ஒரு சலுகை தந்தார். இதுவரை நிகழ்ந்த அத்தனை மனிதப் பிறப்பு, மற்ற எல்லா ஜீவராசிகளின் பிறப்பையும் அந்தப் பாம்பின் ஆத்மா ஒரு நொடிக்குள் வாழ்ந்து கொள்ளலாம் என்று சொன்னார். ஒரே நொடியில் அத்தனை காலத்தையும் அது வாழ்ந்து பார்த்து, அதற்குப் பிடித்தமான பிறப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யமன் உறுதி அளித்தார்.

ஒரு நொடி நிகழ்ந்தது. பாம்பு ஆணாக, பெண்ணாக, நாயாக, பூனையாக, செடியாக, கொடியாக, தாசியாக, வேசியாக, நல்லவனாக, கெட்டவனாக, புழுவாக, பூச்சியாக வாழ்ந்து பார்த்தது. தான் குறுக்கே போன மனிதனாகவும் வாழ்ந்து பார்த்தது. அப்போது மீண்டும் பூனையாகி மீண்டும் செத்துப் போனது. ஒரு நொடி முடிந்து போனது.

யமன் சொன்னார், “நன்றாக யோசித்துச் சொல் பாம்பே. இது எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு. பேரதிர்ஷ்டம்.”

பாம்பு சொன்னது, “நான் அதே இடத்தில் மீண்டும் பாம்பாகவே பிறந்துகொள்கிறேன்.”

Share

தோழரின் திருமணம்

கூடவேதான் வளர்ந்தான். ஒன்றாகத்தான் படித்தோம். பெங்களூருவுக்கு வேலைக்குப் போய் திரும்பி வந்தவன் சம்பந்தமே இல்லாமல் தோழர் என்று அழைக்க ஆரம்பித்தான். ஏல போல வால எல்லாம் காணாமல் போனது. என்னவோ விட்டுப் போனது போல் ஒரு எண்ணம் வந்துவிட்டது. பின்னர் எனக்குத் திருமணம். அவனுக்குப் பெண் பார்த்தார்கள், பார்த்தார்கள், ஜாதகம் பொருந்தவே இல்லை. அவனது அப்பா பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு நாமம் தரித்துக்கொண்டு ஸ்லோகங்கள் சொல்லியபடி தெருவில் நடந்து போகும்போது இவன் வீட்டு மாடியில் லுங்கி கட்டிக்கொண்டு கம்யூனிஸப் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பான். நெற்றியில் வைப்பதை முதலில் கைவிட்டவன், பின்னர் சாமி கும்பிடுவதையும் விட்டுவிட்டான். அவன் வீட்டில் யாரும் இதை ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது.

அவன் பொதுவாகவே தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். கடவுள் இல்லை என்றோ பெண்ணடிமை அது இது என்றோ எதுவும் யாரிடமும் சொல்லமாட்டான். தன் கருத்துகளைத் தன்னளவில் வைத்துக்கொள்வான். இது ஒரு நிம்மதி. நாமாகப் பேசினால் விடமாட்டான். பிராமணீயம், பார்ப்பனீயம், சாதிய அடுக்குகள், வர்ணப் பாகுபாடுகள், வர்க்க வேறுபாடுகள் என்று என்னவெல்லாமோ சொல்வான். மற்றவர்கள் சொல்வதைக் கேட்கவே மாட்டான் என்பதால், அவன் சொல்வதில் மட்டுமே அவனுக்கு கவனம் இருக்கும். இனியும் இவனிடம் பேசுவது வெட்டி என்று உணர்ந்துகொண்ட நான் அவனிடம் இந்த டாபிக் பற்றியெல்லாம் வாயே திறக்கமாட்டேன்.

வாழ்க்கை ஓட்டத்தில் எப்போதாவது ஒரு முறை ஹாய் சொல்வது என்று எங்கள் நட்பு சுருங்கிப் போனது. அவனுக்குப் பெண் மட்டும் கிடைக்கவே இல்லை. அதனால் மார்க்ஸ் லெனினைவிட அதிகமாக கம்யூனிஸப் புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டான். இனி அவனே எழுதினால்தான் உண்டு என்ற நிலை கூட வந்தது. ஆனால் கல்யாணம் மட்டும் ஆகவில்லை. வீட்டில் விடாமல் பெண் பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் ஜாதகம் பார்க்கவேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அப்போது அவனுக்கு வயது 40 ஆகி இருந்தது.

ஒருநாள் திடீரென்று வீட்டுக்கு வந்தான். பத்து நாள்ல கல்யாணம்ல என்றான். ஆச்சரியமாக இருந்தது. தோழர் என்ன சொல்றீங்க என்றேன். முறைத்தான். கல்யாணம் பெங்களூருவில். வந்து சேரச் சொல்லிப் போய்விட்டான். பேச நேரமில்லை என்று சொல்லிவிட்டுப் போனான். பத்திரிகையை இமெயிலில் அனுப்பினான். என்ன இருந்தாலும் சின்ன வயது நட்பு என்று ஒரு நாள் முன்னரே பெங்களூருவுக்குக் குடும்பத்துடன் போனோம். கோட் சூட்டில் கையில் பூச்செண்டுடன் நின்றிருந்தான். ஆளே மாறிப் போய் இருந்தான். அவனைத் தொட்டுக்கொண்டு பெண் புன்னகையுடன் நின்றிருந்தாள். வாய் நிறையச் சிரிப்பு.

அவன் என்னை அருகில் அழைத்து என் காதில் சொன்னான், “பெண் ஏன் அடிமையானாள் கிஃப்ட் கொடுத்தேன்.” அவன் எப்பவோ வாங்கி வைத்த புத்தகம் அது. பெண் கிடைக்கத்தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. எரிச்சலுடன் புன்னகைத்தேன். என்னை இழுத்துப் பிடித்து அவளிடம் அறிமுகம் செய்து வைத்தான். என் பெயரைக் கேட்டதும் அந்தப் பெண் கூவும் குரலில் அவனிடமும் என்னிடமுமாகச் சொன்னாள். “பெருமாளே.. ஸொல்லிண்டே இருப்பேளே, இவரா? நன்னாருக்கேளில்லியோ? ஸாப்ட்டேளா?” நிஜமாகவே புன்னகைத்தேன்.

Share

வெட்டுக் கிளிகள்

‘தம்பி, திடீர்னு வெட்டுக் கிளிகளா வருதுன்னா அது சும்மா இல்லை’ என்றார் அந்தப் பெரியவர். டீக்கடையில் ஏதோ சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன. அதையும் மீறி அவர் என்னிடம் பேசினார். ஏன் என்னைத் தேடி வந்து பேசுகிறார் என்பது புரியவில்லை. கையில் ஒரு மஞ்சள் பை வைத்திருந்தார். நடுத்தர வயது. நெற்றியில் சுருக்கங்கள் தெரிந்தன. காப்பி கலரில் ஒரு வேட்டி அணிந்திருந்தார். வெளுத்துப் போய் சுருக்கங்களுடன் இருந்த வேட்டி முழுங்காலுக்கு மேல் சுருண்டு கிடந்தது. நான் ஆர்வம் இல்லாமல் அவரைப் பார்த்தேன்.

‘திடீர்னு வெட்டுக் கிளிங்க இருந்திருந்தாப்ல எங்கேர்ந்து வரும்?’ என்றவர் சொன்னார், ‘எல்லாம் நம்மவங்க ஆத்மா தம்பி. ஆத்மா. உங்களுக்கு நம்பிக்கை உண்டா இல்லையான்னு தெரியல. ஆனா எனக்கு சந்தேகமே இல்ல, ஆத்மா’ என்றவர், டீக்காரரிடம் தனக்கு ஒரு டீ சொல்லிக்கொண்டார். ‘எல்லா ஆத்மாவும் வெட்டுக் கிளிங்களா வந்திருக்கு தம்பி. அதுவே புலியாவோ சிங்கமாவோ வந்திருந்தா? யோசிக்கவே திக்குன்னு இருக்குல்ல? அதுதான் தம்பி, பாவத்துலயும் கொஞ்சம் புண்ணியம் பண்ணிருக்கோம்ன்றேன். இப்பல்லாம் யாரு தாத்தா பாட்டிய நினைக்கிறா, அம்மா அப்பாவை நினைக்கிறா? ஒரு தவசம் இல்லை, பிண்டம் இல்ல. எதுக்கு ஓடறோம்னு தெரியாம ஓடறோம். அதான் தம்பி எல்லா ஆத்மாவும் ஒண்ணா கிளம்பி வந்திருக்குங்க. ஒரு பக்கம் கோவம், ஒரு பக்கம் சோகம் அதுங்களுக்கு’ என்றவர் என்னையே பார்த்தார். என்னைத் தேடி வந்து ஏன் பேய்க்கதை சொல்கிறார் என்ற ஆச்சரியத்தில் இருந்து நான் விடுபடவில்லை. தன் மஞ்சள் பையைத் திறந்து அதிலிருந்து மண்ணாலான வெட்டுக் கிளியை எடுத்தார். என் கண் முன் நீட்டியவாறே, ‘இதை எடுத்துட்டுப் போய் வீட்ல தண்ணில கரைங்க தம்பி. உங்க வீட்ல இருக்கிற ஆத்மா அமைதியாகட்டும். பணமெல்லாம் நீங்க ஒரு பைசா தரவேண்டியதில்லை’ என்றார். நான் சிரித்துக்கொண்டே வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலகிப் போனேன்.

*

வாட்ஸப்பில் வந்த செய்தியைப் படித்துவிட்டு அத்தை என்னிடம் கேட்டாள், ‘எங்கடா கிடைக்கும் இந்த களிமண் வெட்டுக்கிளி?’

Share

கையெழுத்து – குறுங்கதை

கையெழுத்து

அந்த அண்ணனின் பெயரை முத்து என்று வைத்துக்கொள்ளலாம். உண்மையான பெயர் என்ன என்பது இப்போது எனக்கு நினைவில்லை. இது நடந்து 30 வருடங்கள் ஆகப் போகிறது. அப்போது எனக்கு 15 வயது இருக்கலாம். நாங்கள் மதுரையில் அழகரடியில் இருந்தோம். திடீரென முத்து அண்ணன் ஒருநாள் என்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்றான். என்னை மதித்துத் தனியே பேசவேண்டும் என்று யாரும் அதுவரை சொன்னதில்லை. எங்கள் காம்பவுண்ட்டில் என் வயதில் இருக்கும் வயசுப் பெண்கள் அதிகம் என்பதால், இப்படி அழைக்கிறானே, எவளையாவது பிடிச்சிருக்குன்னு சொல்வானோ என்று திகிலாக இருந்தது. அவன் பக்கம் போகாமலேயே தவிர்த்தேன்.

முத்து அண்ணனுக்கு மாரி அக்கா என்றொரு அக்கா இருந்தாள். அந்த வட்டாரத்திலேயே ஆங்கிலம் நன்றாகப் பேசுபவள் அவள்தான். ஹவ் டூ யூ டூ என்று கேட்கவேண்டும் என்று என் நண்பர்களுக்குச் சொல்லித் தருவாள். அவர்கள் மறக்காமல் ஹவ் ஆர் யூ டூ என்றே கேட்பார்கள். மாரி அக்கா‌ அழகாகச் சிரிப்பாள். என் மேல் பாசமாக இருப்பாள். ஏனென்றால் நான் ஒருவன் மட்டுமே ஹவ் டூ யூ டூ என்று சரியாகச் சொல்வேன். அந்த மாரி அக்கா ஒருநாள் என்னிடம், என் தம்பி ஒன்கிட்ட பேசணும்னு சொன்னானாமே என்று கேட்டாள்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. எங்கள் வீடு இருந்த காம்பவுண்டின் இன்னொரு மாடி வீட்டில் நானும் முத்து அண்ணனும் சந்தித்தோம். பக்காவாக ஒரு டெஸ்க் போட்டு, அதன் அருகே உட்கார்ந்திருந்த அண்ணன் பக்கத்தில் ஒரு பேப்பரும் பேனாவும் இருந்தது. காப்பி குடிக்கிறியாடா என்று கேட்டான். ஓடிப் போய் டீ போட்டு எடுத்து வந்தான். டீ கண்றாவியாக இருந்தது. வாயில் வைக்க முடியவில்லை. ஆனால் ஏன் எனக்கு டீ? மெல்லச் சொன்னான். ஒரு லெட்டர் எழுதணும்டா. எழுத்து மேஜையை என் பக்கம்‌ திருப்பினான்.

நான் அந்த வட்டாரத்திலேயே நன்றாகப் படிப்பவன் என்று அறியப்பட்டவன். நானும் அதை நம்பினேன். லெட்டர் எழுதுவது கஷ்டமா? எனவே உடனே எழுத ஒப்புக்கொண்டேன். கொஞ்சம் பெருமை வேறு எனக்குள். லவ் லெட்டர்டா என்றான். ஒருவன் லவ் லெட்டர் எழுதுவதை முதன்முதலில் அப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறேன். அதுவரை சினிமாவில் பார்த்ததோடு சரி. லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது. ஒனக்கு என்ன தோணுதோ எழுதிக் குடு, ஸ்கூல்ல கட்டுரைப் போட்டில ஃபர்ஸ்ட்டாம்ல என்றான். எனக்கு இதெல்லாம் வராது என்று அரை மனதாகச் சொன்னேன். சரி, நீ சொல்லு, நான் எழுதிக்கிறேன் என்று அடுத்த குண்டைப் போட்டான். அவன் முகம் வேர்வையில் குளித்திருந்தது. நல்ல கருப்பு. அவன் தலையில் முடிகள் குத்திட்டு நின்றன. நான் சொல்றதா? யூ மீன் மீ? உன் காதலை நான் சொல்றதா? ஐயோ என்றேன். அவன் விடவே இல்லை. கடைசியாக அவனே எழுதுவதாகவும் தவறுகளைத் திருத்தினால் போதும் என்றும் சொன்னான். அவன் எழுதிய லவ் லெட்டரைப் படித்திருந்தால் நிச்சயம் அந்தப் பெண் தூக்கு போட்டுச் செத்திருப்பாள். ஏனென்றால் தவறு இல்லாத ஒரு வார்த்தை கூட அதில் இல்லை.

நான் மெல்ல சொன்னேன். ரொம்ப தப்பு இருக்குண்ணே. ‘அதுக்குத்தாண்டா உன்ன வரச்சொன்னேன். அப்ப சரி, நீயே எழுது, நான் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டான். அவன் காதலிக்கு அவன் கையெழுத்தில் கடிதம் போகவேண்டும் என்கிற அவனது கனவு கலைந்தது. என்னவெல்லாமோ சொன்னான். அத்தனையும் மதுரைத் தமிழில் இருந்தது. அதை எப்படி அப்படியே எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு தமிழே வராதோ என்ற எண்ணமெல்லாம் வந்தது. எப்படியோ ஒரு வழியாக எழுதிக் கொடுத்தேன். உடம்பெல்லாம் பதற்றமாக இருந்தது. ஒரு ஓரத்தில் பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல கெத்தாகவும் இருந்தது. இந்த விஷயம் மட்டும் வீட்டுக்குத் தெரிந்தால் டெட் பாடி ஆகிவிடுவேன் என்பதில் இரண்டாம் கருத்தே கிடையாது. அவனிடம் தயங்கி தயங்கி ‘யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’ என்று சொல்ல எத்தனித்தபோது அவன் சொன்னான், ‘தம்பி, வீட்ல மட்டும் சொல்லிராத, பொலி போட்ருவாங்க.’

மறுநாள் காம்பவுண்டே அல்லோலப் பட்டது. யாரோ யாருக்கோ லவ் லெட்டர் கொடுத்து விட்டார்களாம். அரண்டுவிட்டேன். அதுவரை இருந்த பெருமிதமெல்லாம் போய் எனக்குள் பயம் மட்டுமே இருந்தது. அந்தத் தெருப் பையன் ஒருத்தன் லெட்டர் கொடுத்துவிட்டான். அதுவும் எங்கள் காம்பவுண்ட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு. யார்? முத்து அண்ணா? எனக்கு சூனியம் வைத்தே விட்டானா? கைகால் உதறல் நிற்கவே இல்லை. காம்பவுண்ட்டில் இருக்கும் அனைத்து ஆண்களும் அந்தப் பையன் வீட்டுக்குப் போனார்கள். அவனது அக்கா கடுப்பில் கையில் இருந்த அப்பளக் குழவியை வீசி எறிந்தாள். வந்தவர்கள் மீது அல்ல, லவ் லெட்டர் கொடுத்த தன் தம்பி மீது. அவன் விலகிக் கொள்ள, ஏற்கெனவே ஓட்டையாக இருந்த டிவியில் அப்பளக் குழவி பட்டு அந்த டிவியின் டிஸ்ப்ளே மொத்தமாக நொறுங்கிப் போனது. அவன் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்த இரண்டே வரிகள், ‘அழகா இருக்க, பிடிச்சிருக்கா?’

கடிதம் கொடுத்தது முத்து அண்ணன் இல்லை. வேறொருத்தன். எனக்கு உயிர் வந்தது. இரண்டே வரிக்கு இத்தனை ஆர்ப்பட்டம். நான் எழுதியது பத்து பக்கமாவது இருக்கும். அவன் எப்படி தலை வாரிக் கொள்வான், என்ன சாப்பிடுவான், எப்படித் தூங்குவான், எந்தக் கடையில் சாப்பிடுவான், அவளுக்கு அவனே டீ போட்டுத் தருவான் தொடங்கி ஒவ்வொரு நிமிடத்தையும் அந்த லெட்டரில் என்னை எழுத வைத்திருந்தான் முத்து அண்ணன்.

நான் பயந்து செத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முத்து அண்ணனை ஆளைக் காணவில்லை. மெல்ல விசாரித்ததில் அவனது அக்கா மாரி அக்கா யாருடனோ ஓடிப் போய் கல்யாணம் செய்துகொண்டுவிட்டாள் என்று தெரிந்தது. அதாவது நான் முத்து அண்ணனுக்கு காதல் கடிதம் எழுதிக் கொடுத்த தினத்தன்று மாரி அக்கா ஓடிப் போயிருக்கிறாள். இரண்டு நாள் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். பின்னர் விஷயம் வெளியே வந்துவிட்டது.

அப்புறம் முத்து அண்ணன் என்னவானான் என்பது பற்றி கொஞ்ச நாள் தகவலே இல்லை. பின்னர் மாரி அக்கா அதே தெருவில் குடி வந்தாள். வழக்கம்போல ஹவ் டூ யூ டூ என்றாள். நான் அவளிடம் முத்து அண்ணனைப் பற்றிக் கேட்கவே இல்லை. சில வாரங்கள் கழித்து முத்து அண்ணன் எதுவுமே நடக்காதது போல மாரி அக்கா வீட்டுக்கு வந்தான். என் கண்ணில் அவன் பட்டபோது என்னைத் தெரிந்ததாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை. எந்த அளவுக்கு என்றால், எனக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததா இல்லையா என்னும் சந்தேகம் வரும் அளவுக்கு. கேவலமான‌ டீயுடன் கேவலமான வரிகளைப் பத்துப் பக்கம் மாங்கு மாங்கென்று இந்தக் கருப்பனுக்காக எழுதி இருக்கிறேன். அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தானா? அவள் என்ன சொன்னாள்? என் தலை வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால் முத்து அண்ணன் கண்டுகொள்ளவே இல்லை, நாங்கள் மதுரையை விட்டுக் காலி செய்யும் வரை.

இதெல்லாம் நடந்து இருபது வருடங்கள் கழித்து அழகரடியைச் சுற்றிப் பார்க்கப் போனேன். நாஸ்டால்ஜியா. கூடவே ஒரு பழைய தோஸ்த்தும் என்னுடன் வந்தான். ஒரு தெருவில் பெட்டிக் கடை வைத்திருந்தான் முத்து அண்ணன். அவனுக்கு என்னை அடையாளமே தெரியவில்லை. அவனிடம் அது இது என என்னவெல்லாமோ வாங்கினேன். எவ்ளோ ஆச்சுண்ணே என்றேன். ஒரு பேப்பரில் எழுதி ஒரு தொகை சொன்னான். அந்தத் தாளை வாங்கிப் பார்த்தேன். வேண்டுமென்றேதான் வாங்கிப் பார்த்தேன். நீண்ட நேரம் கூட்டிப் பார்த்தேன். கணக்கு தப்பா இருக்கே என்று அவனிடம் சொன்னேன். இது நாப்பது, இது இருபத்து ஏழு என்று ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டிச் சொன்னான். உங்க கையெழுத்தே புரியலைண்ணே என்றேன். நான் சொல்றேன், நீங்களே எழுதிக் கூட்டிப் பாருங்க என்றான் முத்து அண்ணன். சிரித்துக் கொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டு, சற்று தள்ளி வந்து, கூட வந்த நண்பனிடம் சொன்னேன், “கையெழுத்து அப்படியே இன்னும் கிறுக்கலாவே இருக்கு பாரு. அதுக்குத்தான் அவன் ஆளுக்கு லவ் லெட்டர் எழுத என்ன கூப்ட்ருக்கான் போல.’ அவன் ஆச்சரியமாகக் கேட்டான், ‘ஒன்னயுமாடா எழுதச் சொன்னான்?’

#குறுங்கதை

Share

தேவ விளையாட்டு

சிலரது அனுபவங்களைப் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது பொறாமையாக இருக்கும். என்னுடைய பதின்ம வயதில் ஒரு மாமா காயத்ரி மந்திரத்தின் பெருமையைச் சொன்னார். ஒரு தந்தை இறக்கும் தருவாயில் தன் மகனிடம் சொல்கிறார் காயத்ரி மந்திரத்தைத் தவறாது சொல்லவேண்டும் என்று. மகனும் அப்படியே செய்கிறான். மகன் பெரிய விமானி ஆகிறான். ஒருமுறை விமானம் ஓட்டும்போது காலநிலை மோசமாகி விமானம் கட்டுப்பாட்டை இழக்கிறது. விமானி தன் வாழ்க்கை முடிந்தது என்று அப்படியே அமர்ந்துவிட்டார். பின்னால் இருந்து யாரோ தட்டிக் கூப்பிடுகிறார்கள். அப்பா! காயத்ரி மந்திரம் சொல்டா என்கிறார். விமானி சொல்கிறார். எப்படியோ விமானம் தப்பிக்கிறது. விமானி உயிர் பிழைக்கிறார். பின்னால் திரும்பிப் பார்க்கிறார், அங்கே யாரும் இல்லை. இதைச் சொல்லும்போது அந்த மாமா உணர்ச்சி பெருக கண்ணில் நீர் வழியச் சொன்னார். அவரது கையில் முளைத்திருந்த மயிர்கள் எல்லாம் புல்லரித்துப் போய் நின்றன.

நான் இதை நம்புகிறேன் நம்பவில்லை என்பதல்ல விஷயம். ஆனால் நான் நிச்சயம் அந்த மாமாவை நம்புகிறேன், பொய் சொல்ல அவருக்குத் தேவையே இல்லை என. என்ன பிரச்சினை என்றால், என் வாழ்க்கையில் இப்படி ஒரு தடவை கூட நடந்ததில்லை. இதைப் பொறாமை என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள்.

‘கனவில் மல்லிகைப் பூ வைத்து பச்சைப் புடைவை கட்டி ஒரு குழந்தை வந்தது, எப்டி இருந்தான்ற, வா வான்னு கூப்பிடறேன், போய்க்கிட்டே இருக்கா, என்னடான்னு பார்த்தா, மறுநாள் அம்பாளை சப்பரத்துல தூக்கிட்டு வர்றாங்க, அதே மல்லிகைப் பூ, அதே பச்சைப் புடைவை’ என்று யாராவது சொல்லும்போது வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். ‘எனக்குத் தெரியாதா அது எங்க வீட்டுப் பூனை’ன்னு ஒரு நண்பர் சொன்னார். எந்தப் பூனையைப் பார்த்தாலும் முப்பது வருடங்கள் முன்பு நான் வளர்த்த பூனைகள் போலத்தான் எனக்குத் தெரியும்.

இப்படிப் பேசுகிறவர்கள் எல்லாரிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. அனைவரும் இதை ஒரு புதிர் போலப் பேசுவார்கள். ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விஷயத்தை விவரிப்பார்கள். ஒருவர் சொன்னார், கண்ணாடியில் கண்ட அவரது உருவம் அவரைப் பார்த்துச் சிரித்ததாம். எதோ ஒரு தேவ விளையாட்டு என்றார். எனக்கு பக்கென்று இருந்தது. இன்னொருவர் சொன்னார், ‘எல்லாமே எழுதி வெச்சிருக்குங்க. நமக்கு படிக்க தெரியலை, அவ்வளவுதான்’ என்று. எங்கே எழுதி வெச்சிருக்கு, என்ன படிக்கத் தெரியலை என்று நான் ஏன் கேட்கப் போகிறேன். சரிங்க என்று சொல்லிவிட்டேன். இன்னொருவர் சொன்னார், அவரது கனவில் வந்த ஒரு பெண்ணை மறுநாள் நேரில் கண்டதாக. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே மனிதரை ஐந்து நிமிட இடைவெளியில் பார்த்தாலும் கூட எனக்கு சட்டென அடையாளம் பிடிபடுவதில்லை. இதில் கனவில் வந்த பெண்ணை மறுநாள் பார்ப்பதெல்லாம் என் வாழ்நாளில் நடக்காது என்று நினைத்துக்கொண்டேன்.

அப்போது நிஜமாகவே ஒரு குரல் கேட்டது. தேவ விளையாட்டுக் கணம் நிகழ்ந்தே விட்டது. மாடியை நோக்கிப் பார்த்தேன். அந்தப் பெண் புன்னகைத்தாள். என்றோ கனவில் கண்ட மறக்கவே முடியாத அந்த முகம். அதே முகம். மெல்ல அவள் முகம் மாறியது. ‘அடிக்கிற வெயில்ல என்ன திருதிருன்னு ரோட்ல நின்னு முழிக்கிறீங்க, வீட்டுக்குள்ள வாங்க. உங்களோட..’ என்றாள்.

Share

அமுதனின் கதை!

இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

*

அவன் பெயர் வசதிக்காக அமுதன் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெண்ணின் பெயர் அமுதா! அமுதன் என்னுடன் கல்லூரியில் படித்தான். நான் மற்ற நண்பர்கள் வீட்டுக்குப் போகும்போது அமுதனும் வருவான். அங்கே அமுதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் இந்த அமுதனுக்கு தூரத்துக்கு உறவு. இது அமுதனுக்குத் தெரிய வந்ததும் அவனுக்கு அமுதா மேல் காதல் வந்துவிட்டது. அமுதாவின் வீட்டுக்காரர்கள் அமுதன் தங்கள் தூரத்துச் சொந்தம் என்பதால் ஓவராக அவனுக்காக உருகினார்கள். தினமும் காஃபிதான் வடைதான். இவனும் அடிக்கடி வருவான் போவான். அந்தப் பெண்ணுக்கும் இவனை உள்ளூரப் பிடித்திருந்தது. ஆனால் இருவரும் பரஸ்பரம் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. இப்படியே காதலை பொத்தி பொத்தி வளர்த்தார்கள். என்னிடம் மட்டும் அமுதன் அமுதாவைப் பற்றி அப்படி இப்படி என்றெல்லாம் பேசி பெரிய அறுவையைப் போடுவான். தலையெழுத்தே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். நாங்களெல்லாம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம் பார்க்கும் வேகத்தில் இருக்க, இவன் அறுபதுகளின் காதலை எங்கள் காதில் ஓதி கடுப்பைக் கிளப்பிக்கொண்டிருந்தான். அமுதா அப்படி சிரித்தாள், அமுதா அப்படி பார்த்தாள், அமுதா வேண்டுமென்றே பார்க்காமல் போனாள், அமுதா அப்படிச் செய்தால் அதன் அர்த்தம் அவங்க அம்மாப்பாவுக்குக் கூடத் தெரியாது, தனக்குத்தான் தெரியும் இத்யாதி இத்யாதி. ஒருநாள் அமுதா என்ற பெயரை ஒரு பேப்பரில் ரத்தத்தில் எழுதிக்கொண்டு வந்து பெருமையாகக் காண்பித்தான். அடதாயளி என்பதே என் அதிகபட்ச ரீயாக்‌ஷனாக இருக்கவும் நொந்து போனான். அந்த பேப்பரை நாலாக எட்டாக மடித்து ஒரு முத்தம் கொடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டு, ‘வாழ்க்கை முழுக்க இது என் கூட இருக்கும் மக்கா’ என்றான். வாக்தேவி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டாள். அந்த பேப்பர் மட்டுமே நிலைத்தது. அமுதாவின் வீட்டில், ‘சொந்தமெல்லாம் சரிதான், ஆனா கல்யாணமெல்லாம் வேண்டாம்’ என்று முடிவெடுக்க, அதே மனநிலையில் அமுதனின் வீடும் இருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் அமுதாவுக்கு வேறொரு தடியனுடன் கல்யாணம் ஆனது. கல்யாணத்துக்கு போய் பந்தி பரிமாறி மொய் வைத்துச் சிறப்பித்து போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்தான் அமுதன். நாங்களும் போயிருந்தோம்!

அன்றிரவு முழுக்க அமுதன் அரற்றிக்கொண்டே இருந்தான். கூட இருந்த பையனெல்லாம் சும்மா இல்லாமல், எல இப்ப என்னல ஆயிருக்கும் என்றெல்லாம் கேட்டு வைக்க அமுதன் அழுவதா சிரிப்பதா எரிந்து விழுவதா என்று தெரியாமல் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தான். இன்னொருத்தன் சொன்னான், ‘அதுக்குத்தான் அன்னைக்கே டெக் போடும்போது கூப்பிட்டேன். அதுமட்டும்தாம்ல நெஜம்’ என்று சொல்லி வைத்தான்.

அமுதன் அழகாக இருப்பான். நன்றாகப் படிப்பான். அவனை ஏன் அமுதாவின் குடும்பம் விட்டுக்கொடுத்தது என்பதே எங்களுக்கு விளங்கவில்லை. அமுதன் இன்னும் படித்து வெளிநாடு போய் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆனபோது அவனுக்கு அழகான பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு அமுதா என்றெல்லாம் பெயர் வைக்காமல் தந்திரமாகத் தன் மனைவியிடம் இருந்து தப்பித்துக்கொண்டான். இடையிடையே என்னுடன் பேசுவான். வாட்சப் புண்ணியத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி.

இதற்கிடையில் அமுதாவின் சொந்தக்காரர்கள் மூலம் அந்தப் பெண்ணின் மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என்றறிந்தேன்.

இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா பாட்டு. அதுதான் அமுதன் அமுதாவின் ஃபேவரைட் பாட்டு. இந்தப் பாட்டு காதில் விழவும் அமுதனின் ஞாபகம் வர, கூடவே அமுதாவின் மகள் பெரியவளான செய்தியும் வர, உடனே அமுதனை அழைத்தேன்.

“எல, அமுதாவோட பொண்ணு வயசுக்கு வந்துட்டாம்ல” என்றேன்.

“எவல அவ?” என்றான்.

Share