கிழக்கு மொட்டைமாடி புத்தகத் திருவிழா

கிழக்கு மொட்டைமாடி புத்தக வெளியீட்டுத் திருவிழா

22.12.2008 முதல் 27.12.2008 வரை தினமும் புதிய புத்தகங்கள் வெளியீடு

இடம்: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 18.

நேரம்: தினமும் மாலை 6.00 மணிக்கு.

பட்டியல் கீழே உள்ளது. மேல வருவனாங்குது. அதனால் கீழே சென்று பார்க்கவும்!

தேதி கிழமை புத்தகம் ஆசிரியர் பேச்சாளர்
22.12.08 திங்கள் கேண்டீட் வோல்ட்டேர்; தமிழில் பத்ரி சேஷாத்ரி மாலன்
சூஃபி வழி நாகூர் ரூமி பா. ராகவன்
23.12.08 செவ்வாய் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் யுவ கிருஷ்ணா சோம வள்ளியப்பன்
மால்கம் எக்ஸ் மருதன் பா. ராமசந்திரன்
24.12.08 புதன் ஆயில் ரேகை பா. ராகவன் நாராயணன்
ஒபாமா பராக் முத்துக்குமார் எஸ். சந்திரமௌலி
25.12.08 வியாழன் நெ.40 ரெட்டைத் தெரு இரா. முருகன் ஜே.எஸ். ராகவன்
விண்வெளி ராமதுரை பத்ரி சேஷாத்ரி
26.12.08 வெள்ளி இருளர்கள் ஓர் அறிமுகம் குணசேகரன் ப்ரவாஹன்
செங்கிஸ்கான் முகில் இகாரஸ் பிரகாஷ்
27.12.08 சனி வாங்க பழகலாம் சோம வள்ளியப்பன் எஸ்.எல்.வி. மூர்த்தி
ஜார்ஜ் வாஷிங்டன் பாலு சத்யா ஆர். வெங்கடேஷ்
Share

இருளர்கள் ஓர் அதிசயம்

நன்றி: இட்லிவடை

இருளர்கள் ஓர் அறிமுகம், க. குணசேகரன், 75 ரூபாய், கிழக்கு பதிப்பகம்.

இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தை முதலில் பார்த்தபோதே அதன் மீதான ஓர் ஈர்ப்பு தோன்றியது. புத்தகத்தின் மிக நல்ல அட்டையும், இருளர்கள் என்னும் பழங்குடிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வமும் இவற்றிற்குக் காரணம்.

முதல் அத்தியாத்தைப் படித்தபோது, நூலாசிரியரின் ரசனையை எண்ணி வியந்தேன். அவர் விவரிக்கும் சம்பவங்கள் காட்டு வாழ்க்கை மீதான போதையைத் தந்தன. வாழ்க்கையில் இது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும் சில சமயங்களில் மனம் கொள்ளும் ஒருவித ஆசையை இப்புத்தகத்தின் முதல் அத்தியாத்தில் மீண்டும் கண்டேன். என் சுவாசக்காற்றே திரைப்ப்டடத்தில் வரும் ‘திறக்காத காட்டுக்குள்ளே’ பாடலும் காடு நாவலும், ஜெயமோகனின் சில கட்டுரைகளில் இத்தகைய ஒருவித கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே கிறக்கத்தை இந்நூலின் முதல் கட்டுரையில் என்னால் காணமுடிந்தது. இரண்டாம் அத்தியாயம் அப்படியே மேலெழுந்து, ரசனையை முற்றிலும் உதறி, சிறந்த ஆய்வுப் புத்தகமாக மாறியது. உண்மையில் ஓர் அதிசயத் தருணமாக முதலிரண்டு கட்டுரைகளுக்குள் இருந்த வேற்றுமையை உணர்ந்தேன். கிட்டத்தட்ட இதை ஒத்த உத்தியொன்றை மு.க. புத்தகத்திலும், நான் வித்யா புத்தகத்திலும் பார்த்திருக்கிறேன். என்னளவில் அவை தோல்வியான முயற்சிகள். ஆனால் இப்புத்தகம் மிக இயல்பாக இந்த மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.

முதல் அத்தியாயத்தில் கோபால் ராவ் என்பவர் இருளரைப் பற்றிச் சொல்கிறார். இரண்டாவது கட்டுரையில் குணசேகரன் தன் பார்வையைத் தொடர்கிறார். அங்கே தொடரும் தகவல் மழை இப்புத்தகம் முழுக்க எல்லாக் கட்டுரைகளிலும் கொட்டி வழிகிறது. இவ்வளவு தகவல் மழைகளை எப்படி ஆசிரியர் திரட்டினார் என்பதே பெரும் ஆச்சரியம். தகவல் மழைகள் என்றால், வெறும் அடுக்குதல் அல்ல. ஆராய்ச்சியுடன் கூடிய தகவல்கள். ஆராய்ச்சிக்கான தகவல்களும் அதற்கான நிரூபணங்களும் சங்க காலத்திலிருக்கும் பாடல்களிலிருந்து, இருளர்களின் வாழ்வில் சமீப, கடந்த காலங்களில் சந்தித்த அரசியல், சமூகப் பிரச்சினைகள் வரை நீண்டு விரிகின்றன.

பழங்குடிகளாக வாழ்ந்த மக்கள் கடற்கோள்களாலும் இயற்கைச் சீற்றங்களாலும் பல்வேறு இனக்குழுக்களாக இடம்பெயர்கிறார்கள். அங்கிருந்து கிளைக்கிறது இருளர் என்னும் இனக்குழு. அது பின்னர் சாதியாக நிலைபெறுகிறது. இருளர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு நாடோடியின் வாழ்க்கையையாகவே வாழ்கிறார்கள். காடுகளில் தேன் எடுப்பது, பாம்பு பிடிப்பது, மூலிகைகள் சேகரிப்பது என அவர்களது வாழ்க்கை தொடர்கிறது.

சங்ககால மக்கள் தங்கள் குலச்சின்னங்களாக மரத்தையும் பறவையையும் வரித்துக்கொள்வதை ஆசிரியர் விளக்கியிருப்பது சுவையானது. கீரனார், மருதனார் என எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கி, அதற்கான காரணமாக ஆசிரியர் முன்வைப்பது, அக்கால மக்களின் மனதைத் துல்லியமாகப் படம் பிடிக்கிறது. ‘அவர்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை அளிப்பது போலிருந்தது.’ இருளர்களின் பெயருக்கான காரணங்கள் பல. இருளான பகுதிகளில் வாழ்பவர்கள், இருளைப் போன்ற கருமையானவர்கள், இருள மரத்தின் சந்ததிகளாகத் தங்களைக் கருதுபவர்கள் எனப் பல காரணங்கள். அவர்கள் பேசும் மொழி இருள என்னும் மொழியைப் பேசியிருக்கிறார்கள். இருள என்னும் மொழி தமிழ் மொழியின் ஒரு கிளை. இருளர்கள் ஐவகை நிலங்களில் வாழ்ந்த தமிழர்கள். தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் வழங்கும் நிலங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருவித தனி மொழி புழக்கத்தில் உள்ளது. இன்று இருளர்கள் கன்னடம் பேசினாலும், மலையாளம் பேசினாலும், துளு பேசினாலும், அவர்கள் தமிழர்களே.

இருளர்கள் எந்நிலையிலும் தங்கள் மரபைக் கைவிடாத தீவிர இந்துக்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் வழிபாடு குலதெய்வ வழிபாடு சார்ந்தது. கன்னித் தெய்வத்தை அவர்கள் நம்புகிறார்கள். எல்லாத் திருவிழாக்களிலும், சடங்குகளிலும் கன்னித் தெய்வமே முதலிடம் பெறுகிறது. எல்லா இருளர்களின் வாழ்விலும் கன்னித் தெய்வமும், அவர்களின் மரபான திருவிழாவும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

இருளர்கள் கொண்டாடும் திருவிழா பல்வேறு படிகளைக் கொண்டது. அத்தனையையும் மிக விரிவாக, பொறுமையாக, படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியிருக்கிறார் குணசேகரன். ஆய்வு செய்து, அவர்கள் அத்திருவிழாவின் ஒவ்வொரு நிலையிலும் பாடும் பாடல்களைத் தொகுத்திருக்கிறார். இன்று மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வழிபடும் இடங்களை வைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் ஆசிரியர். தாங்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் கோயிலையும், கடவுளையும் அழைத்துக்கொண்டவர்கள் இருளர்கள்.

வழிபாட்டில் முதல் இறைவணக்கம் பாடும் பண்பாட்டைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் குணசேகரன். பாணர்களின் (பாணரின் மனைவி பெயர் பாணிச்சி என்கிறார் ஆசிரியர். இப்படி போகிற போக்கில் அவர் சொல்லிச் செல்லும் விஷயங்களின் பட்டியலிடவே முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளவும் முடியாது. அத்தனை அதிகம்) பாடல்களையும், பழங்குடிகளின் பாடல்களையும் தொடர்ந்து இன்றுவரை காப்பாற்றிக்கொண்டு வந்தவகள் இருளர்களே. இதனால் இருளர்களின் வாழ்க்கையில் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. (கம்பியில் கட்டிய சலங்கையால் இசையை எழுப்பி, ஒருவரின் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு ஆடுவதை ஆசிரியர் விவரிக்கும்போது, பின்னொலியில் இளையராஜாவின் முள்ளும் மலரும் ஹம்மிங்கான ‘எலலே’ (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்) ஒலிக்கிறது.)

இருளர்கள் திருமணத்திற்காக மேற்கொள்ளும் பெண் பார்க்கும் படலம் மிகவும் சுவையானது. (இதன் நம்பகத்தன்மை குறித்துத் தெரியாது. ஆசிரியர் சொல்வதை அப்படியே நம்புகிறேன். அவ்வளவே.) பெண் பார்க்க வரும் இருளர் அதைப் பற்றிப் பேசுவதில்லையாம். வரும்போது கையில் இரண்டு கம்பிகளைக் கொண்டு வருகிறார்கள். மற்ற எல்லா விஷயங்களையும் நீட்டி முழக்கிப் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். இப்படியே இரண்டாவது முறையும் செய்கிறார்கள். அப்போது பெண் வீட்டார்கள் ‘சென்றமுறையும் இப்படிச் செய்தீர்கள், என்ன விஷயம்’ என்று கேட்க திருமண விஷயம் தொடங்குகிறது. துளை உள்ள பானை ஒன்றை சீதனமாகத் தருகிறார்கள். இதுவே இருள ஆணுக்குப் பின்னர் எலி பிடிக்கப் பயன்படுகிறது. எலி என்பதைச் சிறந்த உணவாகச் சொல்கிறார்கள் இருளர்கள்.

இருளர்களின் இன்றைய முக்கிய வேலை பாம்பு பிடிப்பது. பாம்பு பிடிப்பதன் முகமாகவே இன்றைய இருளர்கள் அறியப்படுகிறார்கள். பாம்பின் வகையை அதன் மணத்தை வைத்தே கண்டறியும் திறமை பெற்றவர்கள் என்கிறார் ஆசிரியர். (எந்தப் பாம்பு என்ன மணம் என்கிற விவரணையும் உண்டு!) எந்தப் புற்றில் பாம்பிருந்தாலும் Y வடிவ முனை கொண்ட கழியை வைத்துப் பிடிக்கிறார்கள். கையாலும் பிடிக்கிறார்கள். காடுகள் குறைந்து வீடுகள் அதிகரிக்கும் சூழலில் இருளரின் தேவையைப் புரிந்துகொள்ளமுடியும். எந்த விதப் பாம்புக் கடிக்கும் மூலிகை மருந்து உண்டு என்கிறார்கள். மூலிகைகளின் பட்டியலையும், பாம்புக்கடிக்கான மருத்துவத்தின் பட்டியலையும் மிக விரிவாகக் கொடுத்து அசர வைக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு தாவரத்தின் தாவரவியல் பெயரையும் கொடுப்பது இன்னும் பாராட்டப்படவேண்டியது.

இருளர்களின் உரிமைப் போராட்டங்கள் பற்றியும் குணசேகரன் எழுதியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருளர்கள் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டதையும் அதற்கான போராட்டத்தையும் ஓர் இருளரே விவரிக்கிறார். இன்றைய இருளர் வாழ்வின் முக்கியப் பிரச்சினையான சான்றிதழ் வாங்குவதைப் பற்றிச் சொல்லும் ஆசிரியர், இதன் காரணமாகவே பெரும்பாலான இருளர்கள் பாம்பு, அணில் பிடிக்கும் இருளர்களாகவே தங்கிவிடுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

மிக எளிமையான தமிழ், ஆழமான பார்வை, தொடர்ச்சியான தகவல்கள் என அசர வைக்கும் ஆசிரியரின் முதல் நூல் இது என்னும்போது அந்த ஆச்சரியம் இன்னும் பன்மடங்கு அதிகரித்தது. இத்தனை முயற்சியும் உழைப்பும் காண்பித்த ஆசிரியர் இன்னும் சில விஷயங்களில் கவனம் கொண்டிருக்கலாம்.

ஒரே விஷயத்தைப் பலமுறை மீண்டும் மீண்டும் சொல்வதன்மூலம் ஏற்படும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். ஐவகை நிலங்கள் பற்றியும், இருளர்களின் மொழி பற்றியும் இது போன்ற இன்னும் நிறைய தகவல்களும் நிறைய முறை வருகின்றன. ஆரிய படையெடுப்பு என்கிற ஒரு கருத்தாக்கம் இன்று பல ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை ஒரு விவாதித்திற்குரிய விஷயமாகக்கூட ஆசிரியர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆரியப்படையெடுத்து நிகழ்ந்தது என்கிற முடிவின் அடிப்படையில் இருளர்களை தஸ்யூக்களாகவே அணுகிறார். அதேபோல், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருளர்களின் பெருமையைச் சொல்வதாக எண்ணிக்கொண்டு, இன்றைய மக்களின் நாகரிகத்தைப் பற்றிய கிண்டல்கள், ஒருவகையில் ஆசிரியரின் சமூக அக்கறையைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ள முடிந்தாலும், செயற்கைத்தனமாக ஒலிக்கிறது. இந்த செயற்கைத்தனமான எழுத்துகள், இந்நூலில் ஆசிரியர் எட்டியுள்ள உயரத்திற்குச் சற்றும் பொருந்தாதவை. சில இடங்களில் இந்த சமூக அக்கறை எல்லை மீறி ஒருவித அலுப்பைத் தருகிறது. ஆய்வுகள் ஊகங்களின் அடிப்படையிலும் நடக்கின்றன என்றாலும், இந்த ஊகம் ஓரோர் இடங்களில் அதிகமாகவிடுகிறது. ஓர் உதாரணம், இருளர்கள் தலைப்பாகை கட்டுவதைப் பற்றியது. இதை இன்றைய உலகின் மக்கள் அணியும் தலைக்கவசங்களோடு ஒப்பிடுவது கொஞ்சம் அதிகபட்ச கற்பனை, ஊகம். இருளர்களின் திருமணம் பற்றிய சிறந்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர், இருளர்களின் மறுமணம் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கலாம். (நிறைய தகவல்களை விடாமல் படித்ததில், இதை நான் பார்க்கத் தவறியிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். நன்றி.) நிறைய நூல்களையும், குறிப்புகளையும் படித்து நூலாய்வு செய்திருக்கும் ஆசிரியரின் கள ஆய்வு குறித்த விவரங்கள் இல்லை. கள ஆய்வும் செய்திருந்தால் இந்நூலில் இருளர்களின் இன்னொரு பரிமாணமும் கைக்கூடியிருக்கலாம்.

‘சோளகர் தொட்டி’ நாவலில் இருளர்கள் வாழ்வின் இன்னொரு பக்கத்தை உணரமுடியும். காட்டில் வாழ்வதால் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் நம்மைப் பதறவைப்பவை. சரியான கல்வி அறிவும், பொருளாதார சமூக முன்னேற்றமும் மட்டுமே இவர்களை முன்னேற்ற முடியும். இன்றைய இருளர்கள் தங்கள் சந்ததிகளாவது படித்து முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் உள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது முக்கியமானது. இது நிகழ அவர்களின் இஷ்டமான கன்னித் தெய்வம் அருளட்டும்.

தமிழக அரசின் சிறந்த புத்தகத்திற்கான விருதைப் பெறும் தகுதியுடைய இப்புத்தகத்தைப் போன்ற இன்னும் பல புத்தகங்களை, ஆய்வு நூல்களை குணசேகரன் எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/767/Irullargal%20:%20Orr%20Arimugam

Share

ஞாநி – கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – பொழுதுபோக்கின் உச்சகட்டம்


எவ்வித சம்பிரதாயமும் இல்லாமல் தொடங்கிய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தை, ஞாநி கலந்துரையாடலாக்கினார். மும்பை தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி அவர் ஏற்கெனவே எழுதி, அதை அனைவரும் படித்திருப்பார்கள் என்று கருதியதால், கூட்டடத்தை ஒரு கலந்துரையாடலாக்கலாம் எனச் சொன்னார். கலந்துரையாடல் தொடங்கியது. பல்வேறு கருத்துகளைச் சொன்ன ஞாநியின் சில கருத்துகள் பற்றி மட்டும் இங்கே. (மொத்த ஒலித்துண்டு பத்ரியின் பதிவில் வெளிவரும்.) மீண்டும் ஒருமுறை ஒலித்துண்டைக் கேட்டுவிட்டு எழுத நினைத்தேன். ஆனால் இப்போது நினைவில் இருந்து எழுதுகிறேன். வேறுபாடுகள் இருந்தால், அது என் தவறாக இருக்கலாம். சிறிய வேறுபாடுகள் இருக்கலாமே அன்றி, பெரும் கருத்து மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

ஞாநியின் முக்கியமான குற்றச்சாட்டுகள்.

01. ’இன்று இந்தியாவில் நிலவும் இஸ்லாம் இந்துப் பிரச்சினைக்கு பாப்ரி மசூதி இடிப்பே காரணம். அதற்கு முன்பு எங்கும் இந்தியாவில், ஜம்மு காஷ்மீரைத் தவிர, மதக் கலவரங்கள் நிகழ்ந்ததே இல்லை.’

இது ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் இல்லையா என்று கேட்டேன். மீண்டும் அவர் சொன்னதை சரி என்று உறுதி செய்தார். அதற்கான தரவுகளைப் பார்த்துவிட்டே இதைச் சொல்வதாகச் சொன்னார். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதற்கான தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. அதைப் பார்த்தால்தான் தெரியும். அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார், ஜடாயு, திருமலை உள்ளிட்ட தீவிர ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் இதற்கான தரவுகளைத் தரவேண்டும். இல்லையென்றால் ஞாநி சொன்னதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் எல்லா பிரச்சினைகளுக்கும் பாப்ரி மசூதி இடிப்பு மட்டுமே காரணம் என்பது ஒரு எஸ்கேப்பிஸம் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை வைத்து இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை ஞாநி ஆதரிக்கவில்லை என்பதும் உண்மை. அதுவே பிரச்சினையின் வேர் என்கிறார். 47 ஆண்டுகளாக இந்தியாவின் எப்பகுதியிலும் இல்லாத மதத்தீவிரவாதம், அதற்குப் பின் தலைதூக்கியது பாப்ரி மசூதி இடிப்பினால் மட்டுமே என்பது ஞாநியின் கருத்து. அதற்கு முன்பு இந்தியாவில் அல், உல் எனத் தொடங்கும் எந்த இயக்கமும் இல்லை என்றார். கூடவே, அப்படி ஒருவேளை பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் கலவரங்கள் நடந்திருக்குமானால், அது தேர்தல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ். தூண்டிவிட்ட கலவரமாக இருந்திருக்கும் என்றார்.

02. ’பாகிஸ்தானில் இருந்து இந்தியா தீவிராவாதிகளைக் கோருவதற்கு நூற்றுக்கு நூற்றம்பைது சதவீதம் உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கும் தீவிரவாதிகளான அத்வானி, தொக்காடியா, மோடி ஆகியோரை இந்தியா விடுவிக்கவேண்டும்.’

இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள் அல்ல. அவர்களையும் இந்திய அரசியல்வாதிகளையும் ஒப்பிடுவது, கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அதில் உண்மை இல்லை. வீரப்பன் காட்டில் செய்த அக்கிரமங்களைவிட ஜெயலலிதா செய்தது அதிகம் என்ற திண்ணைப் பேச்சுக்கும் ஞாநியின் பேச்சுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. மோடியோ, அத்வானியோ, தொக்காடியாவோ ஓடி ஒளிந்துகொள்ளவில்லை. சட்டம் அவர்களை எந்நேரத்திலும் எதிர்கொள்ளமுடியும். இந்திய அரசு அவர்களைப் பாதுகாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் சரியான விதத்தில் மாட்டினால், இந்திய காங்கிரஸ் அரசு இவர்களை விட்டுவைக்கப்போவதும் இல்லை. இப்படி இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கமுடியக்கூடிய அனைத்துவகை சாத்தியங்கள் உள்ள நிலையில், இவர்களை இஸ்லாமிய அடிப்படை பயங்கராவதிகளுடன் ஞாநி ஒப்பிடுவது குழந்தைத்தனமானது. அத்வானி, தொக்காடியா விஷயங்களில் ஞாநி முன்வைப்பது பாப்ரி மசூதி இடிப்பை. கூட்டத்தில் ஒருவர் இந்த விஷயத்தில் நரசிம்மராவின் பங்கைப் பற்றிக் கேட்டபோது, அவர் செத்துப்போயிட்டாரே நான் என்ன பண்ணட்டும் என்றார் ஞாநி. ஞாநி சொதப்பிய பதில்களுள் இதுவும் ஒன்று. மனு தர்மம் குறித்த பேச்சை பேசும் ஞாநிக்கு நரசிம்மராவுக்கு முன்பே மனு இற்ந்துவிட்டார் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் ஏன் இன்று மனுதர்மம் பற்றி பேசுகிறோம். அவர் சொல்வதுபோலவே பிரச்சினையின் வேரைப் பற்றிப் பேச விரும்பினால், இறந்தவரையும் பற்றிப் பேசவேண்டும்.

03. ’மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஊடகங்களின் பங்கு வர்க்க பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. தாஜ் ஹோட்டலில் இறந்தவர்கள் பணக்காரர்கள் (வெளிநாட்டுக்காரர்கள்) என்பதால்தான் ஊடகங்கள் இதை இப்படி காண்பித்தன. ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஊடகங்கள் வாய் திறக்காதது அருவருப்பானது.’

ஞாநி சொல்வதில் எனக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், ஊடகங்களுக்கு மேல்தட்டு, கீழ்த்தட்டு குறித்த வித்தியாசமான பார்வைகள் அடிப்படையிலேயே உண்டு என்பதை நான் ஏற்கிறேன். ஊடகங்களின் பார்வையில் அடித்தட்டு மக்கள் என்பவர்கள் என்றாவது ஒருநாள் கவரேஜுக்குப் பயன்படும் நிகழ்ச்சிகளாக மட்டுமே தெரிகிறார்கள். ஆனால் தாஜ் ஹோட்டல் விஷயத்தில் அப்படி மட்டுமே என்று சொல்லிவிடமுடியாது. ரயில்வே ஸ்டேஷன் விஷயம் என்பது அங்கே உடனே முடிந்துவிட்ட சம்பவம். ஆனால் தாஜ் ஹோட்டலில் இரண்டு நாள்கள் முழுக்க முழுக்க தீவிரவாதிகளின் பிடியில் மக்கள். இதனால் இயல்பாகவே அங்கு ஊடகங்கள் ஓடியது எதிர்பார்க்கக்கூடியதே. இதுவே மறுதலையாக, தாஜ் ஹோட்டலில் மக்கள் கொல்லப்பட்டு, ரயில்வே ஸ்டேஷனில் பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்டிருந்தால், ஊடகங்கள் அங்கு குவிந்திருக்கும். (அதியமான் இதைச் சொன்னார்.) ஏனென்றால் ஊடகங்களின் பெரிய எதிர்பார்ப்பு ஒரு பரபரப்பு. ஆனால் இதை ஞாநி அடியோடு மறுக்கிறார். அவருக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட் வெளிக்குதிக்கும் தருணம் இதுவாக இருக்கலாம்.

04. கஷ்டப்படும் பிராமணர்கள் பற்றி, ஏழை பிராமணர்கள் பற்றி ஒரு வரியாவது எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டேன். பதிலுக்கு என்னிடம் எந்த பிராமணர்கள் பற்றி என்றார். 1978ல் பிராமண சங்கம் தொடங்கப்பட்ட போது, அதை ஆதரித்து எழுதியதாகச் சொன்னார். ஆனால் அப்போதும் அது எந்த பிராமணர்களுக்கு உதவப்போகிறது என்று கேள்வி எழுப்பியதாகவும் சொன்னார். ஏழை பிராமணர்களுக்கா அல்லது செல்வாக்குள்ள பிராமணர்களுக்கா என்பது அவர் கேள்வி. நான் ’இது எல்லா ஜாதியிலும் உள்ள பிரச்சினை’ என்றேன்.

பொதுவாகவே இன்று பொருளாதார ரீதியாக வர்க்கப் போராட்டத்தைப் பற்றிப் பேசும் யாரும், பொருளாதார ரீதியாகப் பிந்தங்கிப் போயிருக்கும் பிராமணர்களைப் பற்றிப் பேசுவதில்லை. (நான் இங்கு பிராமணர்கள் என்று எழுதுவது ஒரு குறியீட்டுக்காக மட்டுமே. அது, முற்படுத்தப்பட்ட எல்லா ஜாதிகளுக்கும், அதிலிருக்கும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருந்தும்.) தீட்டு ஒட்டிண்டும் பாருங்கோ. எத்தீண்டாமையும் தவறு. ஆனால் முற்போக்கை ஒட்டிவிடும் பிராமணத் தீண்டாமை பெரும் துன்பம் தரக்கூடியது. உங்கள் முகமூடிகள் உடைந்து விழுந்துவிட்டால் என்னாவது. பிச்சை எடுக்கும் நிலையிலிருக்கும் பிராமணர்களைப் பற்றி எழுதிவிட்டால் அத்தீட்டு ஒட்டிவிடும். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத, முற்படுத்தப்பட்ட சாதியிலிருக்கும் ஏழைகளைப் பற்றி எழுதிவிட்டால், இருக்கவே இருக்கிறது பிராமணியத் தீட்டு. 31 வருடங்களில் ஒரு தடவை ஞாநி எழுதியதை நினைவு வைத்துச் சொன்னாரா அல்லது அதுதான் முதல் தடவையாக எழுதியதா என்று தெரியவில்லை. ஞாநி போன்றவர்களுக்கு பிராமணர்கள் என்றதும் நினைவுக்கு வருவது சோ, என்.ராம், குருமூர்த்தி, இல.கணேசன் வகையறாக்கள்தான். அடித்தட்டு மக்கள் நினைவுக்கு வருவதில்லை.

05. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்டிருக்கும் தீவிரவாதிக்க்கு ராம்ஜெத்மலானி வாதாட முன் வந்ததற்கு ஞாநி பூச்செண்டு கொடுத்திருக்கிறார். மாலேகான் குண்டுவெடிப்பில் இதே போன்றதொரு பூச்செண்டு கொடுக்கப்படுமா என்றேன். நிச்சயம் என்றார். அதுமட்டுமன்றி, தான் தீவிரவாதிகளாக முன்வைக்கும் தொக்காடியா, மோடி உள்ளிட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் நிற்கும்போது அவர்களுக்காகவும் சட்ட வக்காலத்து தரவேண்டும் என்றும் சொல்லுவேன் என்றார்.

06. குமுதத்தைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, மீண்டும் அதில் சேருவது சரியா, இதையே ஓர் அரசியல்வாதி செய்திருந்தால் நீங்கள் சும்மா விட்டிருப்பீர்களா, இப்போது உங்களை நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள் என்றேன்.

நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்தார். ஓரளவு நியாயமான கோபமும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களும் இருந்தன. ஆனால் இன்னும் விடையிறுக்கப்படாத கேள்வி ஒன்றிருக்கிறது. குமுதம் படைப்பாளிகளின் உரிமத்தின் மீது கைவைக்கிறது. ஞாநி எதிரிக்கிறார். விமர்சிக்கிறார். ஆவியில் எழுதுகிறார். ஆவியில் பிரச்சினை வருகிறது. விலகுகிறார். குமுதம் எழுத அழைக்கிறது. இவர் நிபந்தனைகள் சொல்கிறார். குமுதம் ஏற்கிறது. இது முன்/பின்கதைச் சுருக்கம். நிபந்தனைகளில்தான் பிரச்சினை. தன் படைப்புகளின் மீதான் உரிமத்தை குமுதம் கட்டுப்படுத்தாது என்ற நிபந்தனை அது. உண்மையில் எல்லா படைப்பாளிக்காகவுமான கேள்வியாக அதை ஏன் ஞாநி எழுப்பவில்லை. பா.செயப்பிரகாசம் ஞாநியின் படைப்பாளிகளின் உரிமம் தொடர்பாக ஆதரவைத் தந்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் குமுதத்தில் எழுதிவிட்டார். கொஞ்சம் பார்த்தால், ஞாநி எழுதுவதற்கு நான்கு வருடங்களும், செயப்பிரகாசம் எழுதுவதற்கு நான்கு மாதங்களும் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன. பிரேக்கிங் பாயிண்ட். தன் நிபந்தனை தன்னளவில் மட்டும் ஏற்கப்பட்டால் போதுமென்றால், ஞாநி குமுதத்தை எதிர்த்து இத்தனை தீவிரமாகச் செயல்பட்டது தேவையற்றதாகிறது.

07. வடபழனியில் இருந்து வந்திருந்த கோபு என்பவர் கடுமையான கேள்விகளைக் கேட்டார். கடும் கோபம் அவர் முகத்தில் இருந்தது. மோடியைத் தீவிரவாதி என்று சொல்லும் ஞாநி, கம்யூனிஸ்ட் கொலைகாரர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்றார். கம்யூனிஸ்ட் பிராடு என்றார். பதிலுக்கு ஞாநியும் ‘நீங்க இங்கேருந்து என்ன பிடுங்குறீங்க’ என்று என்னவோ கேட்டார். கோபு தான் ஹிந்துத்வா இல்லை என்றும், தான் சுதந்திரா கட்சியின் ஆதரவளானகவே இருக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுக்கொண்டார். அவர் ஞாநியை கம்யூனிஸ்ட் என்றதற்கு, ஞாநி தான் எவ்வாறெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளை விமர்சித்திருக்கிறேன் என்று சொன்னார். அதன் பின்பும் கோபுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த வண்ணமே இருந்தது. முக்கியமாக, மண்டல் கமிஷன் பற்றி ஞாநி பேசியபோது, கோபு ‘மண்டல் கமிஷனுக்கும் மனுதர்மத்திற்கும் என்ன வித்தியாசங்கள்’ என்றார். மீண்டும் பிரச்சினையின் வேருக்குப் போய்விட்ட ஞாநி, மனு செய்த பிரச்சினையின் தீர்வு மண்டல் கமிஷன் என்றார். இன்றைய தீர்வு, நாளைய வர்ணமாக எப்படி மாறாமல் இருக்கும் என்ற கோபுவின் கேள்விக்கு, ஞாநி இன்றையத் தீர்வைப் பற்றித்தான் சொன்னார்.

08. நாடெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல்கள் நடக்க, சென்னை மட்டும் அமைதியாக இருப்பதன் காரணம் தமிழ்நாட்டில் பெரியார் இருந்ததுதான் என்று ஒருவர் திடீரென புல்லரிக்க வைக்க, ஞாநி ஒரு டிப்ளமேடிக்கான பதிலைச் சொன்னார். இன்று பேசும்போது, சென்னையில் குண்டு வெடிக்காததற்கு பெரியாரே காரணம் என்று சொன்னால், அதைக் கேட்பவர்கள் சந்தோஷப்படக்கூடும்; ஆனால் நாளையே குண்டு வெடித்தால் பெரியார் தவறு என்றாகிவிடுமா என்றார். பெரியாருக்கும் இந்த தீவிரவாதச் செயல்களுக்கும் தொடர்பில்லை என்றார். சென்னை அமைதியாக இருப்பதற்குக் காரணம், எல்லா பயங்கரவாத ஆதரவும் சென்னையிலிருந்து செல்வதால் இருக்கலாம் என்றேன். நான் நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பலர் சிரித்தார்கள். இதிலிருக்கக்கூடிய அரசியல் அவர்களுக்குப் புரிந்தால் நல்லது.

இரண்டு மூன்று இடங்களில் சொதப்பினாலும், மொத்தத்தில் ஞாநி எல்லாக் கேள்விகளையும் நிதானமாகவும் அவரது கருத்தியலுக்கு வலுச்சேர்க்குமாறும் எதிர்கொண்டார். மும்பை குண்டுவெடிப்பில் இறந்த காவல்காரர்கள், முக்கியமாக துக்காராம் பற்றி மிக உயர்வாகப் பேசியவர், இவர்களை நினைவில் வைத்து மும்பையெங்கும் போஸ்டர்கள் ஒட்டி அஞ்சலி செலுத்தியவர்கள், சிவசேனை உள்ளிட்ட கட்சிகளே என்று அரசியல்வாதிகளுக்கு பூச்செண்டு கொடுத்தார். ஞாநியிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மதத்தோடு தொடர்புடையதல்ல என்றும், அது பொதுவான பயங்கராவதம் என்றும், இந்து முற்படுத்தப்பட்ட சாதிகளில் இருக்கும் அடிமட்ட ஏழைகளைப் பற்றி எழுதுவது முற்போக்குக்குத் தீட்டு என்றும் கருதாமல், இதிலிருக்கும் உண்மையை அவர் பார்க்கமுன்வரவேண்டும் என்பதே. பிரச்சினையின் வேர்கள் நமக்குத் தெரிந்துவிட்டதாலேயே நாம் அவ்விஷயத்தை அப்படியே விட்டுவிடமுடியாது. ஒரிஸாவில் கிறித்துவர்கள் மீதான கலவரங்கள் என்பது இந்து சாமியாரின் கொலைக்கு எதிரானது என்று வேரைக் கண்டுவிட்டு, அதை அப்படியே விட்டுவிடச் சொன்னால் விட்டுவிடுவீர்களா என்ன?

முக்கியமான பிகு: கருணாநிதியைக் கடுமையாக ஏசி ஞாநி ஒன்றுமே பேசாதாததால், லக்குலுக் மனம் வெறுத்துப்போனதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா எனத் தெரியவில்லை.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.writerpara.net/archives/319

http://prathipalipaan.blogspot.com/2008/12/blog-post_16.html

http://www.writermugil.com/?p=202

Share

மழை – அறிவியல் புனைகதை

சுரேஷன் நாயர் ஒரு ரூபாய் நாணயத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்துக்கள் கட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. ஒரு சிறிய டம்பளரில் நீர் இருந்தது. அந்த நீர் அதிர்ந்துகொண்டே இருந்தது. ஒல்லியான ஆசாமி ஒருத்தன் சம்மணமிட்டு, விறைப்பாக உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடி இருந்தன. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் வசத்தில் அவன் இல்லை என்பது தெரிகிறது. சுரேஷன் நாயர் அடுத்த கேள்வியைக் கேட்டார். ஒரு ரூபாய் நாணயத்தின் மீது ஒரு விரலை வைத்திருந்த ஒல்லி ஆசாமியின் விரல் நாணயத்தோடு அங்குமிங்கும் நகர ஆரம்பித்தது.

S
U
C
C
E
S
S

சுரேஷன் நாயர் ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார். இந்தியா முழுவதும் அறியப்படும், எதிர்பார்க்கப்படும் அந்த விஞ்ஞானியின் முகத்தில் நிம்மதி பிறந்தது.

நாடெங்கும் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அலறிக்கொண்டிருந்தன. புயல் சின்னம் உருவாகி இருந்தது. இன்னும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்கிற செய்தியெல்லாம் ஒளி(லி)பரப்பாமல் ஊடகங்கள் இன்னொரு முக்கியச் செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தன. புயலை திட்டமிட்டு நகர்த்தும் முயற்சியின் முதல் சோதனை அன்று நிகழவிருக்கிறது. இதுவரை உள்கட்டங்களில் மட்டும் சோதனையில் இருந்த, ‘புயலை விருப்பப்பட்ட இடத்துக்கு மாற்றும் சோதனை’ இன்று முதன்முறையாக சோதிக்கப்பட இருக்கிறது.

சுரேஷன் நாயர் தலைமையில் நூற்று நாற்பது பேர் கொண்ட குழு வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் புயல் சின்னத்தை நகர்த்தி, கடலுக்கு நடுவில் அதை வலுவிழக்கச் செய்யவேண்டும். 920 மில்லிபார் உள்ள குறைவழுத்த காற்று மண்டலம். அதைவிடக் குறைந்த காற்றழுத்த தாழ்வை, விரும்பும் இடத்தில் உருவாக்கி, அதை நோக்கி குறைந்த காற்றழுத்தத்தை நகர வைப்பதுதான் அடிப்படை நோக்கம். குறைந்த காற்றழுத்தத்தைவிட மிகக்குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதில் வெற்றி அடைந்த சுரேஷன் நாயர் இத்திட்டம் நிச்சயம் வெல்லும் என்று நம்பினார். அறிவியல் பொய்த்தாலும் ஆவி சொன்னது பொய்க்காது என்று நினைத்துக்கொண்டார்.

மிகக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்கவேண்டிய இடத்தைத் தேர்வு செய்து, அதற்கான வேலையை ஆரம்பித்தார். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது அவருக்கு. ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார்.

சிறிய குன்றின் உச்சியில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தார். மேலே செல்லும் படிகளில் உட்கார்ந்திருந்த தலைப்பாக்கட்டு பண்டாரம் காவிப் பல் தெரியச் சிரித்துக்கொண்டார். கைகளில் பற்ற வைத்திருந்த பீடியை ஒரு இழுப்பு இழுத்துக்கொண்டு தூரத்தில் நிற்கும் தூணில் உள்ள சிலையிடம் பேசினார்.

‘மழைய நிறுத்திடுவானுவளா மக்கா? கேக்கேன், நிறுத்திடுவானுவளாங்கேன்? கேட்டா அறிவியலும்பானுவோ. இன்னைக்கு நானும் பாக்கேன். மழ வல்லேன்னே இனிமே தலைப்பாக்கட்டு கிடையாதுங்கேன். என்னவே சிரிக்கீரு? பாரும், மழ வரும். புயல் வரும். ஒரு மசுரையும் ஒரு மசுராண்டியாலும் புடுங்கமுடியாதுங்கேன். தலப்பாக்கட்டா அறிவியலான்னு நானும் பாக்கேன்.’

கேமராக்கள் பளிச்சிட ஒளி வெள்ளத்தில் சுரேஷன் நாயர் பற்கள் தெரிய பேட்டி கொடுத்தார். மிகப் பெரிய வெற்றி. கரையைக் கடக்கும் புயல் கடலையே கடந்தது. கடலிலேயே மழை பெய்து, காற்றடித்து புயல் ஓய்ந்துவிட்டது.

‘இது ஒரு மிகப்பெரிய சாதனை. இச்சாதனையை இதுவரை எந்த நாடும் செய்ததில்லை. இச்சாதனையில் இந்தியா ஒரு முன்னோடியாக விளங்கும். ஒரு காற்றழுத்தத்தைவிடக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் இதைச் சாதித்தோம். மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு நீர் ஓடுவதைப் போல, காற்று நாங்கள் சொன்ன திசைக்கு ஓடியது.’

சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டார். வெண்மை நிற மேகங்கள் மெல்ல மெல்ல தங்கள் நிலையிலிருந்து விலகி, சுரேஷன் நாயர் வட்டமிட்டிருந்த இடத்திற்குச் சென்றன.

‘இது ஒரு தொடக்கம்தான். இதை வைத்தே புயலையும் நாம் உருவாக்கமுடியும். தேவையான அளவு மழையையும் நாம் பெறமுடியும். இது அதற்கடுத்த பெரிய வெற்றியாக இருக்கும். செயற்கை மழைக்கு அவதிப்படவேண்டியதில்லை. ஒரு சின்ன காற்றழுத்தத் தாழ்வுநிலை. கொஞ்சம் நீராவி. மழை ரெடி.’

கேள்விகள் நாலா பக்கமும் இருந்து பாய்ந்துவந்தன.

’எல்லாம் பகவதி செயல்’ என்றார்.

‘மழையை நிறுத்தவே முடியாது என்று பலர் சொன்னார்கள். நானும் மரபிலும் இயற்கையிலும் நம்பிக்கை உள்ளவந்தான். ஆனால் அறிவியலின் சாத்தியங்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவை. நீங்கள் கடவுளையும் அறிவியலையும் பிரிக்கவேண்டியதில்லை. எனக்கு அறிவியலும் பகவதியும் ஒன்றுதான்.’

‘மிகக்குறைந்த காற்றழுத்தத்தை எப்படி உருவாக்கினோம் என்பது ரகசியம். அணுக்கரு பிளவின் அடிப்படையிலான உயர் சோதனை அது. அதை மட்டுமே இப்போது சொல்லமுடியும். செலவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். தடுக்கமுடியாத புயல் தரும் அழிவையும் சேதத்தையும் விடக் குறைவுதான்.’

சுரேஷன் நாயர் ஓர் இந்திய முகமாக மாறத் தொடங்கியிருந்தார்.

கோவிலின் படிகளில் சோர்ந்து படுத்திருந்தார் தலப்பாக்கட்டு பண்டாரம். அவர் கண்களில் பெரும் மருட்சியும் பயமும் தெரிந்தன. தான் இப்படி தோற்போம் என்று அவர் நினைக்கவே இல்லை. இயற்கையையும் கடவுளையும் விஞ்சும் அறிவியலைப் பற்றித் தனக்குத் தெரியவில்லையே என்கிற கவலையும் கொஞ்சம் இருந்தது.

எதிரில் தூணில் இருந்த சிலை தன்னைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்ட பண்டாரம் நெக்குருகி ‘முருகா’ என்றார். இனியும் தான் தலைப்பாக்கட்டு கட்டக்கூடாது என்று எண்ணி, தலையில் கட்டியிருந்த துணியை எடுத்து தூர வீசினார். காற்றில் அவரின் தலைமயிர் பரவிப் பறந்தது. அப்படியே ஓர் ஓரத்தில் ஒண்டிப் படுத்துக்கொண்டார். சொல்லொணாத துயரத்தில் அதன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. ‘இனி வெள்ளமே இல்லை’ என்பதை நினைக்கவே அவருக்குக் கஷ்டமாக இருந்தது. தன் சிறுவயதில் திடீர் மழையில் தனக்குக் கிடைத்த சந்தோஷத்தையும், அந்நீரில் மிதந்த காகிதக் கப்பலையும் நினைத்துக்கொண்டார். ஆறு பொங்கிப் பிரவகித்து ஊருக்குள் வர, அனைவரும் முழங்கால் வரைக்கும் ஆடைகளைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு, தூரத்தில் எங்கும் பரவிக்கிடக்கும் வெள்ளத்தைப் பார்த்த சந்தோஷத்தை நினைத்துக்கொண்டார். இது எல்லாம் இனிமேல் கிடையாதா என்று நினைத்தபோது அவரது சோகம் எல்லை மீறியது.

எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்த பண்டாரத்தின் மீது நீர்த்துளிகள் பட்டன. எழுந்து உட்கார்ந்து வானத்தைப் பார்த்தார். ஒன்றிரண்டு நீர்த்துளிகள் வானத்திலிருந்து பொத்துக்கொண்டு வருவது தெரிந்தது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. வலுத்த மழை மேலும் மேலும் வலுக்க, இதுவரை தான் காணாத ஒரு பேய் மழையைக் காணப் போகிறோம் என்பது பண்டாரத்திற்குப் புரிந்துபோனது.

சுரேஷன் நாயரின் குழு தீவிரவமாக ஆராய்ந்தது. எங்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமில்லை. இது புயலில்லை என்றார் சுரேஷன் நாயர். ஆனால் மழை கொட்டிக்கொண்டே இருந்தது. காற்று சுழன்றடித்தது. தீவிரமான மழை. விடாமல் இரண்டு நாள்கள் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. முக்கியச் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. எல்லா ஆறுகளிலும் வெள்ளம். நிறைய வீடுகளில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சுரேஷன் நாயர் எல்லாருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவினார். இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்கிற அறிக்கை மட்டும் வானிலைச் செய்தியாகச் சொல்லச் சொல்லிவிட்டுப் போனார்.

வீடுகளில் வெள்ளம் புகுந்த மக்கள் கோவிலின் படிகளில் ஏறி, மேலே உள்ள கோவிலில் தஞ்சம் பெற ஓடினார்கள். பண்டாரம் உறக்கச் சொன்னார், ‘மழய நிறுத்திட்டோம்னு சொன்னவன் அறிவாளி, மழ வரும்னு முன்னக்கூடியே இங்க வந்து நிக்கவன் பயித்தியக்காரனா, சொல்லுங்கல.’

தூரத்தில் கிடந்த துணியை எடுத்து மீண்டும் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார் பண்டாரம்.

Share

கரம் ஹவா – கற்பிதங்களும் யதார்த்தமும்

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவிலேயே தங்கும் ஒரு இஸ்லாமியக் குடும்பம் நேர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய திரைப்படம். 1973ல் இயக்கப்பட்ட இத்திரைப்படம் இந்திய மாற்றுத் திரைப்படங்களின் முன்னோடிகளுள் ஒன்று. சிறந்த இசை, சிறந்த நடிப்பு இவற்றோடு மிக முக்கியமான பிரச்சினையை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து பொருட்படுத்தத்தக்க வகையில் எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமும் இதுதான் எனத் தெரிகிறது.

சலீம் மிர்ஸா என்னும் காலணி உற்பத்தியாளரின் வாழ்க்கையை மையமாக வைத்து நகர்கிறது. கதை. பிரிவினைக்குப் பின் சலீம் மிர்ஸாவின் உறவினர்கள் பெரும்பாலானோர் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட, சலீம் மிர்ஸா இந்தியாவிலேயே தங்குகிறார். எந்த முஸ்லிமும் எப்போதுவேண்டுமானாலும் பாகிஸ்தான் சென்றுவிடலாம் என்கிற எண்ணம் நிலவுவதால், யாரும் சலீம் மிர்ஸாவிற்கு கடன் தர மறுக்கிறார்கள். வங்கியில் கடன் வாங்கும் பல முஸ்லிம்கள் கடனை அடைக்காமல் பாகிஸ்தான் சென்றுவிடுவதால் வங்கிகளும் சலீம் மிர்ஸாவிற்குக் கடன் தர மறுக்கின்றன.

சலீம் மிர்ஸாவின் தம்பி பாகிஸ்தானுக்குச் சென்றுவிடுவது ஊரில் தெரிந்துவிடுவதால், சலீம் மிர்ஸா தங்கியிருக்கும் அவரது தம்பியின் வீட்டிற்கும் பிரச்சினை வருகிறது. வேறு வழியின்றி வாடகை வீட்டிற்கு இடம்பெயர்கிறார்கள்.

சலீம் மிர்ஸாவின் மகளின் காதலன் குடும்பமும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்கிறது. அவன் வந்து அவளை மணம் முடிப்பது இயலாமல் போகும் நிலையில், அவள் தன் அத்தை மகனையே காதலிக்கிறாள். அவனும் பாகிஸ்தான் சென்றுவிடுகிறான். அவனுக்கு அங்கேயே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஏற்கெனவே அவனோடு உடலுறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், அவனை மறக்கமுடியாமல், தற்கொலை செய்துகொள்கிறாள் அமினா.

சலீம் மிர்ஸாவின் மூத்த மகன் இனியும் இந்தியாவில் இருந்தால் வேலைக்காகாது என்று பாகிஸ்தான் செல்கிறான். தனது தம்பியையும் அங்கு வருமாறு வற்புறுத்துகிறான்.

சலீம் மிர்ஸாவின் இரண்டாவது மகன் நன்கு படித்தும் வேலை கிடைக்காமல் அலைகிறான். அவனும் அவனையொத்த நண்பர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் சாய்கிறார்கள்.

சலீம் மிர்ஸா தன் தம்பியிடமிருந்து வீட்டை வாங்க, தன் வீட்டின் நகலை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார். அது பிரச்சினையாகி அவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்க்கிறார் என்று கைது செய்யப்படுகிறார். அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுதலை செய்தாலும் மக்கள் அவரை பாகிஸ்தான் உளவாளியாகப் பார்க்கிறார்கள். (இந்த ஒரு காட்சி மட்டுமே கொஞ்சம் நாடகத்தன்மையுடன் அமைக்கப்பட்டுவிட்டது. அவர் நடந்து வரும்போது, தெருவில் நிற்பவர்கள் எல்லாம் அவரைப் பார்த்து ‘பாகிஸ்தான் உளவாளி பாகிஸ்தான் உளவாளி’ என்று சொல்கிறார்கள்!)

சலீம் மிர்ஸா வரும் குதிரைவண்டி தெரியாமல் ஹிந்துக்கள் குடியிருப்பில் இருக்கும் ஹிந்துகள் மீது மோதிவிட, பிரச்சினை வெடித்து மதக்கலவரம் ஆகிறது. சலீம் மிர்ஸாவின் காலணி உற்பத்திக்கூடம் தீ வைக்கப்படுகிறது.

மனம் வெறுக்கும் சலீம் மிர்ஸா தன் மனைவி மகனோடு பாகிஸ்தான் செல்ல முடிவெடுக்கிறார். வீட்டைக் காலி செய்துகொண்டு வரும் வழியில் பெரும் ஊர்வலம் போகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து செல்லும் ஊர்வலம் அது. அனைவருக்கும் வேலை கேட்டு நடக்கும் ஊர்வலம். மகன் அந்த ஊர்வலத்தில் பங்குகொள்ள அனுமதி கேட்டு தந்தையைப் பார்க்கிறான். தன் மகனின் உலகம் இந்த ஊர்வலத்தில், இந்தப் போராட்டத்தில் இங்கேதான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் சலீம் மிர்ஸா, அவனைத் தடுப்பதில்லை. அதுமட்டுமன்றி, தனது உலகமும் இங்கேதான் இருக்கிறது என்று புரிந்துகொண்டு, பாகிஸ்தான் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு அப்போராட்டத்தில் இணைகிறார்.

1973ல் எடுக்கப்பட்ட திரைப்படம் மிக யதார்த்தமாகவும் சிறப்பாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. சலீம் மிர்ஸாவாக வரும் நடிகர் Balraj Sahni இன் நடிப்பு மிக உணர்வுபூர்வமானது. தனது மனதின் சலனங்களை முகத்திலேயே காண்பித்துவிடுகிறார். Ismat Chughtai இன் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை இது. மூலக் கதையில் பிரிவினைக்குப் பின் கைவிடப்படும் ஸ்டேஷன் மாஸ்டர், திரைக்கதையில் காலணி தயாரிப்பவராக மாற்றப்பட்டிருக்கிறார். முதலில் இத்திரைப்படத்தை இயக்க ஒத்துக்கொள்ளும் ஒரு தயாரிப்பாளர், இப்படம் வெளிவருவதில் சிக்கல்கள் வரலாம் என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார். என் எஃப் டி சி (அப்போது எஃ எஃ சி) உதவியுடன் இத்திரைப்படம் எடுக்கப்படுகிறது. இத்திரைப்படம் எடுக்க சில பிரச்சினைகள் வந்தபோது, சில இடங்களில் இத்திரைப்படம் எடுக்கப்படுவதுபோல செட் அப் செய்துவிட்டு, யாருக்கும் தெரியாத இடங்களில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தங்கும் ஒரு முஸ்லிம் குடும்பம் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன. தான் காதலிக்கும் காதலன் காஸிமை பிரியவேண்டி நேர்கிறது அமினாவிற்கு. (சலீம் மிர்ஸாவின் மகள்.) அவன் அவளைத் தேடி பாகிஸ்தானிலிருந்து ஓடி வருகிறான். ஆனால் போலிஸால் சிறைப்பிடிக்கப்பட்டு இந்திய எல்லைக்குக் கடத்தப்படுகிறான். அவன் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்ததும், மாடிப்படிகளில் எதிரெதிரே அவனும் அவளும் சந்தித்துக்கொள்ளும் காட்சியை ஒரு கவிதை எனலாம். இக்காதல் நிறைவேறாது என்பதைப் புரிந்துகொள்ளும் அமினா, தன்னையே சுற்றி வரும் தன் அத்தை மகனின் காதலை ஏற்கிறாள். பதேபூர் சிக்ரி, தாஜ்மகால் என சுற்றுகிறார்கள். முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். உடலுறவு ஏற்படுகிறது. அவனும் பாகிஸ்தான் செல்கிறான். இக்காதலும் தோல்வி அடைவதைத் தாங்கமுடியாத அமினா தற்கொலை செய்துகொள்கிறாள். அமினாவின் இரண்டாவது காதல் தொடங்கும் இடமும் கவிதை என்றே சொல்லவேண்டும். பதேபூர் சிக்ரியில் அவர்களுக்கு இடையில் உருவாகும் காதல் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஒலிக்கும் பாடல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அமினா தன் பழைய காதலின் கடிதத்தைக் கிழிக்கவும் அப்பாடல் நிற்கவும் என, மிக நேர்த்தியான காட்சிகளை இயக்கியிருக்கிறார் இயக்குநர். (M. S. Sathyu.) அமினா இரண்டாவது காதல் கொண்டதும், தன் பழைய காதலினின் கடிதங்களைக் கிழிப்பதற்கு முன்பு அதைப் படிக்கிறாள். அப்போது அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகள் அசாதாரணமானவை. தன்னை விட்டுவிட்டு, பாகிஸ்தானில் ஒரு அமைச்சரின் மகளைத் திருமணம் செய்துகொண்டுவிட்ட காதலனின் மறக்கமுடியாத முகமும், அவனது ஆசை மொழிகளும், அவன் மீதான வன்மமும் என பல உணர்வுகளை ஒருங்கே வெளிப்படுத்துகிறது அமினாவின் முகம்.

படத்தின் தொடக்கக் காட்சிகள் மிக முக்கியமானவை. தன் உறவினர் ஒருவரை பாகிஸ்தானுக்கு வழியனுப்பிவிட்டு வருகிறார் சலீம் மிர்ஸா. வண்டியில் திரும்பிச் செல்லும்போது வண்டி ஓட்டுபவன் சொல்கிறான், ‘இந்நாட்டில் நாய் கூட வாழாது’ என்று. அவனுக்குள் பாகிஸ்தான் பற்றிய கனவு முட்டிக் கிடக்கிறது. இப்படத்தில் பாகிஸ்தான் ஒரு கனவு தேசமாகவே காட்டப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்குச் செல்லும் யாரும் அங்கே தோல்வியடைவதில்லை. அங்கிருந்து பாகிஸ்தானின் வளங்களைப் பட்டியலிட்டு கடிதம் அனுப்புகிறார்கள். அங்கே செல்லும் அரசியல்வாதியும் செல்லுபடியாகிறார். இதைக் காணும் கேட்கும் இந்தியாவில் தங்கிவிட்ட முஸ்லிம்களுக்குள் பாகிஸ்தான் என்னும் கனவு தேசம் பற்றிய கற்பிதங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. இதனை மிக அழகாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர். இவற்றை வைத்தே அத்தலைமுறையின் இந்தியாவில் தங்கும் முஸ்லிம்களின் மனநிலையைப் படம் பிடிக்கிறார். அடுத்த தலைமுறையைக் கொண்டு அவர் உருவாக்கிய கனவு தேசம் பற்றிய கற்பிதங்களை உடைக்கிறார். சலீம் மிர்ஸாவின் மகன் இந்தியாவே தன் தேசம் என்பதைக் கண்டடைகிறான். எங்கேயும் எப்போதும் எதற்கும் சவால்களும் பிரச்சினைகளும் உண்டு என்றும் அதை எதிர்ப்பதும் வெல்வதுமே வாழ்க்கை என்பதை உணருகிறான். அதற்கான விடை நாடுவிட்டுப் போவதில் இல்லை என்பதில் முடிவாக இருக்கிறான். இதே எண்ணம் சலீம் மிர்ஸாவிற்குள் ஆரம்பித்தில் இருந்தே இருந்தாலும், கனவு தேசம் பற்றிய கற்பிதங்கள் அவரை சலனப்பட வைக்கின்றன. அவர் மயங்குகிறார். பாகிஸ்தான் என்பது எல்லா முஸ்லிம்களுக்கான தேசம் என்றும் அது எப்போதும் எல்லா முஸ்லிம்களையும் அரவணைக்கக் காத்திருக்கிறது என்பதுமான அபத்தமான கற்பனைகளை தன் மகனைக் கொண்டு கடக்கிறார் சலீம் மிர்ஸா.

இன்னொரு முக்கியமான திரைமாந்தர் காஸிம்மின் அப்பா. அவர் முஸ்லிம் லீக்கின் பிரதிநிதி. முகமது அலி ஜின்னா உள்ளிட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்திய முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரே தலைவர் தான் மட்டுமே என்கிற எண்ணம் அவருக்குத் தீவிரமாக இருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைமைக்காகப் போராடும் ஒரே தலைவர் தாந்தான் என்று பிரகடனப்படுத்திக்கொள்கிறார். இந்தியாவில் இருக்கும் அத்தனை முஸ்லிமும் பாகிஸ்தானுக்குப் போய்விட்டாலும், இங்கே ஒரேயொரு முஸ்லிமின் மூச்சு மட்டும் கடைசி வரை இருக்கும், அது தனது மூச்சுதான் என்கிறார். ஏனென்றால் இந்தியாவே தனது நாடு என்று முழங்குகிறார். அடுத்த நாளே பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறார். அங்கிருந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியா வரும் ஹிந்து, முஸ்லிம்களின் நிலபுலன்கள், தொழிற்சாலைகளைப் பயன்படுத்தி பணக்காரராகிவிடலாம் என்று பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறார். இவரது சந்தர்ப்பவாதமே காஸிம்மின் அமினாவுடனான காதலையும் உடைக்கிறது.

இன்னொரு முக்கியமான பாத்திரம் சலீம் மிர்ஸாவின் தாய். ஏன் தனது பிறந்த வீட்டை தான் காலி செய்யவேண்டும் என்று புரியாமல் தவிக்கிறாள். வீட்டைக் காலி செய்ய மறுத்து அவள் யாருக்கும் தெரியாமல் ஓரிடத்தில் ஒளிந்துகொள்கிறாள். அவளை வம்படியாகத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. தான் சாகுமபோது தான் வாழ்ந்த வீட்டிலேயே சாக ஆசைப்படுகிறாள். அவளது மரணம் அவள் நினைத்த மாதிரியே அவள் வாழ்ந்த, திருமணம் ஆகிவந்த அவளது பழைய வீட்டிலேயே நேர்கிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையையோ, இந்து முஸ்லிம் பிரச்சினையையோ அவளால் கடைசிவரை புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

கடைசியில் சலீம் மிர்ஸா போராட்டத்தில் அமைதியாகக் கலந்துகொண்டு செல்கிறார். இத்தனை நாள் அவருக்கிருந்த பிரச்சினைகளின் இன்னொரு காரணம், அவர் இந்திய நீரோட்டத்தில் கலக்காமல் இருந்ததே என்கிற ஒரு எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்படும் வண்ணம், அவர் மெல்ல அமைதியாக போராட்டத்தில் கலந்துகொண்டு நடந்து செல்கிறார். இத்தனை நாள் அவருக்கிருந்த பாகிஸ்தான் செல்வது பற்றிய மனமயக்கங்கள் தீர்கின்றன. எங்கும் எல்லா இடத்தில் போராட்டம் நிச்சயம் என்பதை அவருக்குப் புரிய வைக்கிறான் அவரது மகன். மகனுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த ஒரு நாட்டையும் தாய் நாடாக நினைக்கமுடிவதில்லை. அவனது நண்பர்கள் அவனிடம் சொல்கிறார்கள், ‘உனக்கு இந்தியாவில வேலை கிடைக்கலைன்னா பாகிஸ்தான்ல வேலை தேடலாம். நாங்க எங்கே போவோம்’ என்று. அவன் வேலை கேட்டுச் செல்லும் இடங்களிலெல்லாம் அவன் பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறான். அத்தனையையும் மீறி, அவன் தன் வாழ்க்கையை இந்தியாவிலேயே கண்டடைகிறான்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னான இந்திய முஸ்லிம்களின் மனநிலையையும், பாகிஸ்தான் பற்றிய கற்பிதங்களையும், அதை உடைக்கும் அடுத்த தலைமுறையினரையும் பற்றிய முக்கியமான திரைப்படம்.

Share

உயிர்ப்புத்தகம் – ஆன்மாவின் அந்தரங்கக் குரல்

உயிர்ப் புத்தகம், ஸி.வி. பாலகிருஷ்ணன், தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 224 பக்கங்கள், 120 ரூபாய்.

சி.வி. பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய ‘ஆயிஸிண்டே புஸ்தகம்’ என்னும் நாவலின் தமிழாக்கம் இந்நாவல். மலையாளத்தின் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாக இந்நாவல் கருதப்படுவதாக இந்நூலில் உள்ள குறிப்பு சொல்கிறது. நாவலை வாசித்தபோது, இக்குறிப்பு சொல்வது நிச்சயம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்பது புரிந்தது.

இந்நாவலில் சித்திரிக்கப்படும் தோமோ, அவரது தந்தை, தோமோவின் மகன், மகள், மனைவி என ஒவ்வொருவரின் ஆன்மாவின் குரலும் காமத்தை முன்வைத்து ஒலிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த பிரதியையும்கூட காமத்தின் மீதான ஆன்ம விசாரணை என்று வகைப்படுத்திவிடமுடியும். எங்கும் பின் தொடரும் நிழல் போல, ஒவ்வொருவரின் ஆன்மாவையும் காமம் விடாது பின் தொடர்கிறது. சில சமயம் காதல் என்னும் பூச்சோடு. பல சமயங்களில் எவ்வித பூச்சுமில்லாமல் காமம் என்கிற வேகத்தோடு.

தோமோவின் தந்தை தன் பேத்தியின் மீது தானே எதிர்பார்க்காத தருணமொன்றில் காமம் கொள்கிறார். அதற்கான தண்டனையாகத் தூக்கிட்டுச் சாகிறார். தோமோவின் மனைவி இறந்த பின்பு தோமோ திருமணம் செய்யாமல் குடித்துவிட்டுச் சீரழிகிறான். மகள் ஆனி, பாதிரியார் ஒருவருடன் ஓடிப்போகிறாள். மகன் யோஹன்னான் பள்ளியில் உடன் படிக்கும் ஒரு நண்பனுடன் நெருக்கமாகிறான். ஓரினச்சேர்க்கைக்கு அது இட்டுச் செல்லும் சாத்தியக்கூறுகள் ஒருவித பூடகத் தன்மையுடன் சொல்லப்படுகின்றன. பின்பு அவனுக்கு ராஹேல் என்னும் பெண்ணுடன் உடலுறவு ஏற்படுகிறது. அது காதலாக மாறும் முன்பு, ராஹேல் கன்னியாஸ்த்ரி மடத்திற்குச் செல்கிறாள். ஸாரா என்னும் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாத சகரியா கணவனாகிறான். அவளை விடாது காதலிக்கும் யாக்கோப் குடித்துவிட்டு சாகிறான். எவ்விதப் பிடிப்பும் இன்றி அலையும் யோஹன்னான் அவளுடன் உறவு கொள்ளத் தொடங்குகிறான். இந்நிலையில் யோஹன்னின் தந்தை தோமோவிற்கு, மனைவி இறந்து பல வருடங்களுக்குப்பின்பு திருமணம் செய்யும் எண்ணம் வருகிறது. கணவன் இல்லாத ஸாராவைத் திருமணம் செய்ய நினைக்கிறான். தன் மகனுக்கும் ஸாராவிற்கும் இருக்கும் தொடர்பு தெரிந்திருந்தும்கூட, ஸாராவின் அழகு அவனைக் கட்டிப் போடுகிறது. அவள் திருமணத்திற்குச் சம்மதிக்க மறுப்பதால், அவளைக் கொலை செய்கிறான். யோஹன்னான் தனித்து விடப்படுகிறான். இறந்துபோன அவனது தாத்தா, தாய், ஸாரா என எல்லோரையும் ஆன்மாவாகக் காண்கிறான்.

கதையின் நடை ஒருவித மாந்திரிக யதார்தத் தன்மையோடு விவரிக்கப்படுகிறது. இத்தன்மையை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தாமல், தேவையான இடங்களில், ஆன்மாவின் குரலாக வெளிப்படுத்துவதில் ஆசிரியர் கவனமாயிருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஒவ்வொரு முக்கியமான நிகழ்வின்போதும், அதையொத்த விவிலியக் குறிப்புகள் வருகின்றன. பெரும்பான்மையான குறிப்புகள் நடைமுறை வாழ்விற்கும் விவிலியத்திற்குமான முரணாகவே முன்வைக்கப்படுகிறன.

பாதிரியார் ஒருவர் காதல் கொண்டு ஒரு பெண்ணோடு ஓடிப்போவது ஒரு முக்கிய விஷயம். அதை பெரிய பாதிரியார் கடைசியில் ஏற்கிறார். பிரம்மச்சரியம் என்கிற விஷயம் குறித்து நான் பலமுறை நினைத்திருக்கிறேன். கடுமையான பிரம்மச்சரியம் என்பது சாத்தியம்தானா என்பது புரியவில்லை. பாதிரியின் காதல் அவரது கட்டுக்களை உடைக்கிறது. அவர் இயல்பான வாழ்க்கையைத் தேடி ஓடுகிறார். பாதிரியாவதற்கான பயிற்சியில் கடுமையான பிரம்மச்சரிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட நிர்ப்பந்திக்கப்படுவது பற்றிய குறிப்புகளும் உள்ளன. பாதிரியார்கள் இருவருக்கிடையேயான காமம் பற்றிய உரையாடல் முக்கியமானது. ‘கன்னியான தன் மகளைக் கல்யாணம் பன்னிக்கொடுக்கிறவனும் நன்மை அடைகிறான், கொடுக்காதவனும் அதே நன்மையை அடைகிறான்.’

தோமோவின் மகனான யோஹான்னனே மிக முக்கிய பாத்திரம். முக்கியமான விஷயம் அவன் வயது. கடைசியில் ஸாராவுடன் உறவுகொள்ளும்போது அவன் வயது 17. ஸாராவின் வயது 36. அதேபோல் மேரி – நைநான் உறவு. அவர்கள் உறவு கொள்கிறார்கள். ஆனால் நைநான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். ஸாராவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான பிரிஜித்தாம்மாவும் தன்னைவிட ஒரு சிறிய பையனிடம் உறவு கொள்ள முயல்கிறாள். கட்டுக்கடங்காத காமத்தின் பிரதிகளாக இவர்கள் அனைவரும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஸாராவிற்கும் யோஹான்னானுக்கும் இடையேயான முறை தவறிய உறவை அறியும் பெரிய பாதிரியார் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறார். அவரால் யோஹன்னனையோ ஸாராவையோ கட்டுப்படுத்தமுடியவில்லை. அதற்கான வார்த்தைகளோ வழிகளோ அவரிடம் இல்லை. அவருக்கு எளியதும் பணிவதும் பிரார்த்தனை மட்டுமே. அவர் பிரார்த்தனையின் வழியாக அடையும் மன அமைதியை, யோஹான்னனும் ஸாராவும் காமத்தின் மூலம் கண்டடைகிறார்கள். அதுபோன்ற காமமே ஒரு பாதிரியாரை ஒரு பெண்ணோடு ஓடச் செய்கிறது.

இதில் வரும் எல்லா முக்கியக் கதாபாத்திரங்களில் ஏதேனும் ஒரு தடவையேனும் தங்கள் உயிரின் ரகசியக் குரலை எதிர்கொள்கிறார்கள். ஒருவித அமானுஷ்யத் தன்மையோடோ அல்லது அது தங்களுக்கான குரல்தான் என்கிற தெளிவோடோ அதை எதிர்கொள்கிறார்கள். யோஹான்னான் அக்குரலை எதிர்கொள்கிறான். தோமோ அக்குரலைக் கண்டு ஓடுகிறான். ஸாரா அக்குரலைப் புறக்கணித்து தனக்கான பாதையைத் தேர்கிறாள். ஆனி அக்குரலோடு உடன்படுகிறாள். உயிரின் குரல் யாரையும் விடுவதில்லை.

இந்நாவலை வை. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார். சிக்கலான மொழியுடைய நாவலை மிக நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். இடையிடையே விவிலியத்திலிருந்து வரும் குறிப்புகளை அப்படியே தமிழில் தந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். சில சமயங்களில் எந்த இடத்தில் குறிப்பு வருகிறது, எந்த இடத்தில் நாவலின் பிரதி வருகிறது என்பதைப் பிரிக்கமுடியவில்லை. சில மலையாள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். (ரூபவதி, பரிகாரப் பிரதக்ஷணம், வரிஷித்தார், ஸாரா என்ற பெயரை ஸாரே என்று சொல்லியிருப்பது, ஆகர்ஷித்தன, குசலப்ரச்னம் இப்படிப் பல.) இவற்றைத் தமிழில் எழுதியிருக்கலாம். அதேபோல் திடீரென ஆங்கில வார்த்தைகள் வருகின்றன. (லீவு நாள், ரெடி ஆயின போன்றவை.) மூலத்திலேயே இப்படி இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். அதேபோல் குற்ற சம்மதம் என்னும் வார்த்தைக்கு பாவ மன்னிப்பு என்றும் கடவுளே என்று அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல்லுக்கு ஆண்டவரே என்னும் மாற்றியிருந்தால், நாவலின் கிறித்துவத்தன்மை கூடியிருக்கும். பொருட்படுத்தத்தகாத இந்த மிகச் சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படிக்க எவ்விதத் தடங்கலுமில்லாத, அழகான மொழிபெயர்ப்பு இது.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/648/Uyir%20Puththagam

.

Share

மூன்று பேர் – அறிவியல் புனைகதை

இந்தக் கதையை (கதையா, கட்டுரையா, கட்டுரைத் தன்மை அற்ற வெறும் அறிவியலா என்பது பற்றி போகப்போக நிறைய சொல்லியிருக்கிறேன், பொறுமை) மிகவும் சம்பிரதாயமாக ஆரம்பிக்கிறேன் என்பது எனக்கே புரிகிறது. சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் எதுவுமே அபத்தம் என்பது என் கருத்து. என்றாலும் இப்போது அப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல நாவல்களின் தொடக்கமும், சிறுகதைகளின் தொடக்கமும் இப்படி அபத்தங்களுடன் ஆரம்பித்திருப்பதை நினைத்துக்கொள்கிறேன். இன்றைய அறிவியல் உலகத்தில் – அறிவியல் வந்துவிட்டது, இனி யாரும் இதில் அறிவியல் எங்கே இருக்கிறது என்று கேட்கக்கூடாது எனச் சொல்லிவைக்கிறேன். ஆனால் இது அறிவியல் புதினமா அறிவியல் நிகழ்வா எனத் தொடங்கக்கூடும். இவர்கள் எதில்தான் தலையிடாமல் இருந்தார்கள்? ஒரு அறிவியல் கட்டுரை எழுதும் ஒருவனுக்கு இந்நாட்டில் நிகழும் அநீதியைப் பற்றிச் சொல்ல எனக்கே வெட்கமாக இருக்கிறது. இத்தனைக்கும், இது அறிவியல் யுகம்! சரி, நான் இதை ஒரு நிகழ்வாகச் சொல்கிறேன் எனவும் நீங்கள் அதை புனைவாகப் பார்க்கத் தொடங்குகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். முன்பு, வெகு முன்பு ஊமைப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தில், ஒருவர் திரையின் முன்னே தோன்றி கதையை விவரிப்பாராம். (என்னிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆதாரத்தைப் போட்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், அநீதி செய்யும் ஜூனியர்களுக்கு நான் இளப்பமா என்ன?) நம் மரபு பழைய எந்த ஒன்றையும் நிராகரிக்கக்கூடாது என்கிற கருத்தாக்கம் அடர்வு பெறுகிற சூழலில் நான் அதை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது – அபத்தங்கள் இருக்கமுடியாது (-ஐ ஆரம்பித்து –ஐ முடித்துவிட்டேன். நான் சில கட்டுரைகளில் இதைத் தவிர்த்திருக்கிறேன். கட்டுரை எடிட்டர் கடுமையாகக் கோபப்படுவார். இந்த அறிவியல் கட்டுரையில் (பிராக்கெட்டுக்குள் பிராக்கெட், 🙂 ஸ்மைலியும் உண்டு, ஏனென்றால் அறிவியல் உலகமல்லவா!) அறிவியல் புனைகதையில், அறிவியலில், அறிவியல் கட்டுரையில் (சே, ஏதோ ஒரு எழவில், Hereafter ‘அறிவியல் கட்டுரை/கதை’ will be referred as ‘எழவு’) எடிட்டருக்குக் கோபப்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பிராக்கெட் முடிக்கப்படாத, – முடிக்கப்படாத கோபங்கள் இருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது பிராக்கெட்டை ஏற்கெனவே முடித்துவிட்டேன், முதல் பிராக்கெட்டை முடித்துவிடுகிறேன்) என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் நாம் அந்த அபத்த மரபை மட்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துக்கொண்டே இருந்தோம்.

என் பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். என்னால் ஒரு விஷயத்தை ஒரு விஷயமாக மட்டும் சொல்லமுடியாது. அது முதல் பிரச்சினை. (இரண்டாவது பிரச்சினை என்ன என்பதை, முதல் பிரச்சினை தீர்ந்த பின்னர் சொல்கிறேன்.) இதன் மூல காரணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். அக்காலங்களில் திண்ணைப் பேச்சு என்று ஒன்று உண்டு என்று சொல்வார்கள். அதுவே பின்னர் மின்னஞ்சல் பேச்சாகப் பரிமாணம் பெற்றது. அந்த திண்ணைப் பேச்சின் எச்சமே என்னுள் தேங்கிக் கிடக்கிறது. நான் அதிகம் பேசுவதால் எனக்கு வயதாகிவிட்டது என்றும், அறிவியல் பற்றிப் பேசுவதால் விஞ்ஞானி என்றும் நீங்கள் யூகித்திருக்கலாம். நாந்தான் சொன்னேனே, அறிவியல் உலகில் ஏன் அபத்தங்கள் இருக்கக்கூடாது என்று.

அக்காலங்களில் பாட்டிக் கதை என்று சொல்வார்கள். நானும் என் பணிக்காலத்தில் நடந்த ஒரு கதையையே உங்களிடம் சொல்லப்போகிறேன். இதுவரை சொன்னது ஒரு முன் தயாரிப்பு. உடலுறவில் முத்தம், தடவுதல் போன்ற முன் தயாரிப்பைப் போன்றதே இதுவும். பாட்டிக் கதையில் எடுத்த எடுப்பில் ஒருவர் கதைக்குள் செல்வதில்லை. ‘ஒரு ஊர்ல ஒரு’ என்கிற பிரயோகம் பன்னெடுங்கலாமாக இருந்தது என்று வாசித்திருக்கிறேன். அது வெறும் ‘ஒரு ஊர்ல ஒரு’ இல்லை. ஒரு முன் தயாரிப்பு. நான் மரபை மீட்டெடுக்கிறேன். இந்த ‘எழவிலும்’ நீங்கள் அதை மீட்டெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நம் பழங்காலத்துத் திரைப்படங்கள் ஆரம்பிக்கும்போது ஒருவித மங்கல இசை வருமே, அது போன்ற ஒரு மங்கல இசையை நினைத்துக்கொள்ளுங்கள். நான் அந்த மூன்று பேரையும் அறிமுகப்படுத்தப் போகிறேன்.

ஒருவன் பெயர் வினோத். இன்னொருவன் பெயர் ஜீவன். மூன்றாமவன் பெயர் கண்ணையன். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. 🙂 முன்பு வெளிவந்த தமிழ் தினசரிகளில் இப்படி வந்ததை நீங்கள் இந்நேரம் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும்.) இந்த மூவரால்தான் பிரச்சினை.

விஷயம் சின்ன விஷயம்தான் என்றார் மேத்யூ. அவர்தான் தலைமை விஞ்ஞானி. நிரலியில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பார் என்றார். ஒன்றும் புரியவில்லையா? முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென பிரச்சினைக்குள் செல்லும் வழக்கம் செத்துவிட்ட இன்றைய யுகத்தில், அதையும் ஒரு மரபெனக் கருதி புதுப்பிக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.

நான் நிரலியை முழுக்கப் பரிசோதித்தேன். துல்லியமாக இருந்தது. பிரச்சினைகளே இல்லை. மேத்யூவிடம் சொன்னேன். ‘தாயோளி’ என்றார். அவர்தான் எனக்கு இதுபோன்ற பழம் தெறிகளைக் கற்றுக்கொடுத்தது. அவர் சொல்லச் சொல்லத்தான் பழம் வார்த்தைகளையும், பழம் பழக்க வழக்கங்களையும் பற்றி தேடத் துவங்கினேன். இதனாலேயே என் கட்டுரைகள் பெருமளவில் கவனிக்கப்பட்டன. மரபு ரீதியான விஷயங்கள் இன்றைய நிலையில் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், நான் அவற்றை மீண்டும் எழுதத் தொடங்கியபோது, அவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமாகவே அதை வாசித்தவர்கள் கண்டடைந்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் மரபை மீட்டுவதன்மூலம் நான் அவர்களை மிக எளிதில் அணுகலாம் என்பதைக் கண்டுபிடித்தேன். இப்படித்தான் மேத்யூவைப் பின்னுக்குத் தள்ளி, எடிட்டரின் திட்டோடு, அதிக ராயல்டியையும் பெறத் தொடங்கினேன்.

மீண்டும் மூன்று பேர் பிரச்சினை. ‘நல்லா பாத்தியா’ என்றார் மேத்யூ. தவறுகள் இருந்தால் அதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார் மேத்யூ என்பது எனக்குத் தெரியும். நான் நிரலிகளைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம், அதில் தவறுகள் இல்லையென. இருந்தாலும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். என் மூளை எல்லாவற்றையும் உபயோகித்தேன். ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. அந்த மூன்று பேரும் அப்படித்தான் இருந்தார்கள். எப்படி? முன்பு கொசு என்கிற ஒரு உயிரினம் இருந்தது என்பது நினைவிருக்கலாம். அதை விரட்ட ஒரு கொசுவர்த்தி என்கிற ஒரு விஷயமும் இருந்தது. அதற்கு சுருள் சுருளான ஒரு வடிவமும் இருந்தது. அதைப் போன்ற ஒரு சுருள் வடிவத்தைப் பின்னோக்கிய நினைவுக்கு ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அதி பழைய படங்களில். அதைக் கிண்டல் செய்து, அதற்குப் பின்னர் வந்த படங்களில் அந்த கொசுவர்த்திச் சுருளைச் சுற்றிக் காண்பிப்பார்கள். (எப்படி நான் ஆரம்பித்த இடத்திற்கு வரப்போகிறேன் என்பது எனக்கே குழப்புகிறது!) அப்படி நீங்கள் ஒரு கொசுவர்த்தியையும் அது உங்கள் கண்முன் சுற்றுவதாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். ஆம், உங்களைக் கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப்போகிறேன்.

மிக வெற்றிகரமான விழாவாக அதை அறிவித்தார் மேத்யூ. மனிதனை ரோபோவாக மாற்றிக் காண்பித்ததில் உள்ள தடைகளையெல்லாம் எளிதாகக் கடந்ததற்காக அவருக்கு பாரத் ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. (பாரத் ரத்னாவின் பெயரை இந்திய ரத்னா என்று மாற்றி, மரபை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக மீண்டும் அதை பாரத் ரத்னா என்று மாற்றினார்கள். இதுவரை இது தெரியாதவர்கள் அவர்களது பொது அறிவைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளலாம். உபரித் தகவல், திண்ணைப் பேச்சு இப்படித்தான் பொதுஅறிவில் ஆரம்பிக்கும்!) அன்றிரவு நடந்த பார்ட்டியில் சில சந்தேகங்களை நான் கிளப்பினேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. இந்த சந்தேகங்களுக்காக நிறைய முறை பாராட்டியிருக்கிறார் மேத்யூ. அதைவிட அதற்காகத் திட்டியுமிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

நான் கேட்ட சந்தேகம் மிக எளியது. இந்த ரோபோவாக மாறிய மனிதர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் அது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றார் மேத்யூ. ஏனென்றால் நிரலியில் அவை ஒன்றுக்கொன்று எதிரியாக உணரும் நிரலி சேர்க்கப்படவில்லை என்றார். எங்கும் அன்பு, எங்கும் சகோதரத்துவம், எங்கும் அமைதி என்று (தொப்பை குலுங்க, பிரெஞ்சு தாடி விரிய கண்ணாடியின் வழியே காணும் கண்களுடன் சிரித்தார் மேத்யூ என்று எழுதியிருப்பார் சுஜாதா என்னும் ஓர் எழுத்தாளர். அவரே தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. 2000மாவது வருடங்களில் நிறைய எழுதி தள்ளியிருக்கிறார். அறிவியல் கதைகளின் முன்னோடி. அவர் செய்த அபத்தங்கள் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன். இப்போது உங்களுக்கு இன்னொன்று புரிந்திருக்கும், அபத்தத்தில் தொடரும் எதுவும் அபத்தத்திலேயே முடியவேண்டியதில்லை என.) அலுங்காமல் குலுங்கால் சிரித்தார் மேத்யூ. ஏனென்றால் அவருக்குத் தொப்பை இல்லை, பிரெஞ்சு தாடி இல்லை. (இலக்கிய வகை காவியம் ஆகவேண்டுமென்றால் அறுசுவை இருக்கவேண்டும் என்கிற தியரி நீண்ட நாளாக இருந்தது. அதை அடியொட்டி இப்போது உங்களுக்கு நகைச்சுவையை வழங்கிவிட்டதாக நம்புகிறேன். மீதி ஐந்து சுவைகளை இக்கட்டுரைக்கு எதிர்க்கட்டுரை எழுதப்போகும் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ தருவார். பொறுத்திருங்கள்.)

திடீரென மேத்யூ சொன்னார், ‘நாம் மோத வைத்துப் பார்த்தால்தான் என்ன?’ என்று. மீண்டும் முன்பொரு காலத்தில் என்று சொல்வதற்கு வருந்துகிறேன். என் ‘எழவு’ எதிரியான அநீதியாளர் ஜூனியர் மேத்யூ நான் எத்தனை முறை மரபு என்றும், முன்பொரு காலத்தில் என்றும் எழுதியிருக்கிறேன் என புள்ளி விவரங்களோடு வரக்கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. (இந்த வரி வரவில்லை என்றால் என் கட்டுரையில் சுரத்தே இல்லை என்று அர்த்தம் என்று எடிட்டர் அடிக்கடிச் சொல்லுவார்.)

சோதனை தொடங்கியது. முதலில் ஒரு நிரலியைச் சேர்த்தோம். மூன்று பேரில் ஒருவனைப் பணக்காரனாகவும், இன்னொருவனை ஏழையாகவும் படைத்தோம். மூன்றாமவனை பிச்சைக்காரனாக்கினோம். மூவருக்கும் அவர்களின் கதாபாத்திரத்திற்கான வரையறையை அளித்தோம். அவர்களின் கீழ்க்கோப எல்லையை குறைத்தோம். மூவரையும் இரவு ஒரே அறையில் அடைத்தோம். இன்னும் சிறிது நேரத்தில் ‘ரணகளம் ரத்தபூமியாக’ மாறும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அறைக்குள்ளிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. உள்ளே பார்த்தபோது மூவரும் அருகருகே உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உறக்க நேரத்திற்கு முன்பாகச் சண்டை வந்திருக்கவேண்டும் என்பது எங்கள் நிரலியின் வரையறை. மேத்யூ மெல்ல நெற்றியைச் சுருக்கினார். சுருக்கங்கள் வழியே மெல்ல வியர்வை வழிந்து, பிரெஞ்சு தாடி இல்லாத அவரது ஒற்றை நாடியின் வழியே வழிந்து நெஞ்சில் சொட்டியது. மேத்யூ யோசித்தார், யோசித்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்.

மீண்டும் நிரலிகளையெல்லாம் என்னென்னவோ மாற்றினார். துப்பாக்கி, வெடிகுண்டு என எல்லாம் கொடுத்து ஒருவரை ஒருவர் பார்த்தாலே சுடவும், குண்டு எறியவும் நிரலி எழுதினார். ம்ஹூம். ஒன்றும் உதவவில்லை. மூவரும் இயல்பாகப் பேசிக்கொண்டார்கள். தூக்க நேரத்தில் சரியாக உறங்கத் தொடங்கினார்கள். சண்டை மட்டும் இல்லை.

மூன்று மனிதர்களும் இயல்பிலேயே ஆண்கள்தானா எனச் சோதித்தார். ஒருவேளை யாரேனும் ஒருவர் ஆணாக மாறிய பெண்ணாக இருந்தால், அதற்கான கூடுதல் நிரலியைச் சேர்க்க நினைத்திருப்பார் போல. ஆனால் இந்த நிரலி தேவையற்றது என்று ஏற்கெனவே நிராகரிப்பட்ட ஒன்றுதான். இருந்தாலும் யோசித்தார். இந்த நேரத்தில் ஒரு பழமொழி சொல்வதில், மரபை மீட்டெடுப்பதில் மகிழ்ச்சி எனக்கு. 🙂 பசிச்சவன் பழங்கணக்கப் பார்த்தானாம்.

மூவருமே பிறப்பிலேயே ஆண்கள்தான் என்பதும் ஊர்ஜிதம் ஆயிற்று. அதற்கு மேலும் நெற்றியைச் சுருக்க வழியில்லை என்பதை மேத்யூ உணர்ந்துகொண்டு, வேறொரு மேனரிசமாக கன்னத்தில் கைவைத்துக்கொண்டார். இதை சரி பார்க்காமல் அவர் வாங்கிய பாரத் ரத்னாவைத் திரும்பக் கொடுத்துவிடலாமா என்று யோசித்திருப்பார் என நினைக்கிறேன்.

இங்கே கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாருங்கள். இப்போது மேத்யூ நான் கண்டுபிடித்த பதிலை ஒட்டி பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டு மரணமடைந்துவிட்டார். அதில் அவர் எதிர்கொண்ட தகவல்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கவேண்டும் என்பது மட்டும் புரிகிறது. ‘இதை கவனிக்காம நாம நிரலி எழுதினதே தப்பு’ என்று அவர் புலம்பியிருக்கவேண்டும். இன்றைக்கு மேத்யூ இல்லாத நிலையில், ஒன்றுமே தெரியாமல் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ என்னை எதிர்த்துக்கொண்டிருக்கிற வேளையில், இக்கட்டுரை என்னை பாரத் ரத்னாவாக்கும் என்பது மட்டும் இப்போதே தெரிகிறது.

மேத்யூ நெற்றியைச் சுருக்காமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நான் பழம் இலக்கியங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு சில கல்வெட்டுக்களைப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயம் எனக்குள் பிடிபட, கிட்டத்தட்ட மூன்று பேரையும் நோக்கி ஓடினேன். மேத்யூ நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் மூவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு அவர்களின் நிரலியை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த விஷயம் அதில் இல்லை. அந்த மூவரின் பூர்வத் தகவல்களைச் சேகரித்தேன். நான் நினைத்தது சரியாக இருந்தது.

மேத்யூவிடம் சொன்னேன். ‘உங்கள் பாரத் ரத்னாவிற்குப் பிரச்சினை இல்லை.’

‘அப்படியா?’

‘ஆம், ‘சண்டை போடு’ என்கிற பழைய நிரலியுடன், ஒரே ஒரு நிரலியை மட்டும் சேர்க்கிறேன், என்னாகிறது பாருங்கள்’ என்றேன். மூவரின் நிரல்களிலும் ஒரேஒரு நிரலியை மட்டும் சேர்த்தேன். அவர்கள் அந்த வரையறையை ஏற்றுக்கொள்ளச் செய்தேன். ஒரு அறைக்குள் அடைத்தோம். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது, அடிதடி சத்தம். சரியான சண்டை. நாங்கள் நிரலியில் சேர்க்காத கெட்ட வார்த்தைகளெல்லாம் வருகிறதோ என்கிற சந்தேகம்கூட எனக்கு வந்தது.

மேத்யூ ஆச்சரியம் பொங்க, ‘என்ன செய்தாய்’ என்றார்.

‘நீங்கள் ஜாதியை மறந்துவிட்டீர்கள். அவர்கள் மூவரும் ஒரே ஜாதி. அதை மாற்றினேன். ஒவ்வொருவருக்கு ஒரு ஜாதி என்று வைத்தேன். பிரச்சினை தீர்ந்தது’ என்றேன்.

இதை மரபின் மீட்சியாகப் பார்க்கவேண்டுமா, அல்லது தொடர்ச்சியாகப் பார்க்கவேண்டுமா எனத் தெரியாமல் மீண்டும் நெற்றியைச் சுருக்கிய மேத்யூவின் முகம் என் கண்முன்னே இன்னும் இருக்கிறது.

ஜூனியர் மேத்யூவிற்கு இதை சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஜாதியைச் சேர்ந்த மூன்று பேரை உன் நிரலியால் சண்டையிட வை, நான் என் சொத்தையெல்லாம் உனக்கு எழுதி வைக்கிறேன். சவாலுக்குத் தயாரா சின்ன பையா?

— சீவன், 24-11-2108

(பின்குறிப்பு: ஏய் எடிட்டர், இக்கட்டுரையில் ஏதேனும் கைவைத்தால், சில புதிய தெறிகளை உனக்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன். கவனம்.)

நன்றி: பண்புடன் குழுமம்

Share

பூனையின் உயிர்த்தெழுதல்

எத்தனை முறை பூனைகளைப் பற்றி எழுதி வைத்தாலும், மீண்டும் மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதும் சமயங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. இதைப் படிக்கப்போகும் முன்னர், இதற்கு முன்பு நான் எழுதிய இந்தப் பதிவைப் (http://nizhalkal.blogspot.com/2008/05/blog-post_15.html) படிக்காதவர்கள் ஒருதடவை படித்துவிடுங்கள். நான் எழுதப்போவது முன்பு எழுதிய அப்பதிவின் தொடர்ச்சியே.

ஸ்லாப்பில் இருந்த பூனைகள் கீழே நடமாடத் தொடங்கியிருந்தன. நானும் என் மகனும் சென்று பாலூற்றுவோம். இரண்டும் வந்து குடித்துவிட்டுப் போகும். ஒருநாள் கரிய பூனையைக் காணவில்லை. எங்குத் தேடியும் அது கிடைத்தபாடில்லை. வெளிறிய சாம்பல் நிறத்தில், கண்களை முழித்துக்கொண்டு திரியும் பூனை மட்டுமே பால் குடித்தது.

முதலில் பயந்து பயந்து பால் குடித்த பூனை கிட்டத்தட்ட ஒரு மாதத்திலெல்லாம் பழகத் தொடங்கியது. நான் பால் கொண்டு வரும்போதே கொஞ்சம் பயமும் கொஞ்சம் பாசமும் நிறைய பசியுமாக அலைமோதிக்கொண்டு ஓடிவரும். வீட்டிற்குள் வரவேவராத பூனை, காலையில் பாலூற்றும் நேரம் மட்டும் பசி தாங்காமல் வீட்டுக்குள் தாவவும், வெளியே தாவவுமாக இருக்கும். என் மனைவிக்கு பூனை என்றாலே அலர்ஜி, பயம். அதை விரட்ட எல்லா வேலைகளையும் செய்வாள்.

ஒருநாள் நான் பூனையைத் தூக்கி மெல்லத் தடவிக்கொடுத்தேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது. நான் பாலூற்றினாலும், அதை உடனே குடிக்காமல், என் மீது வந்து உரசும் பூனை. நான் தடவிக்கொடுத்த பின்னரே பால் குடிக்கும். என்னைத் தவிர யாரையும் தொடவிடவில்லை. என் பையன் தொட வந்தால்கூட ஓடிவிடும். நான் கையில் வைத்துகொண்டு, என் பையனைத் தடவிவிடச் சொல்லுவேன்.

ஒரு துணியின் நுனியை தரையில் ஆட்டவும் ஓடிவந்து கௌவி விளையாடத் தொடங்கியது பூனை. ஒரு தெருப்பூனை வீட்டுப்பூனையாகத் தொடங்கியது.

ஒருநாள் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்தேன். சத்தமே இல்லை. இடையில் இதுபோல பூனை வராமல் இருப்பதும், மூன்று நாள்கள் கழித்துவருவதும் நடப்பதுதான் என்பதால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையிலும் பூனையின் சத்தத்தைக் காணவில்லை. காலையில் பிளாட்டை கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வந்த பெண் ஒருவித அலறலோடு சொன்னாள், ‘பூனை செத்துக் கிடக்குது.’

என் பையனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வருத்தத்தோடு ஓடினேன். எவ்வித சலனமுமின்றி செத்துக் கிடந்தது பூனை. அதைச் சுற்றி எறும்புக்கூட்டம். முதல் நாள் இரவே இறந்திருக்கவேண்டும். நாய் கடித்த தடம் கழுத்தில் தெரிந்தது. வீட்டுக்குள் வரவும் என் பையன் ‘என்னாச்சுப்பா’ என்றான். பூனை மயக்கம் போட்டுவிட்டது என்றேன். பதிலுக்கு ‘செத்துப்போச்சா’ என்றான். என் மனைவி உடனே ‘சாகலை. நாளைக்கு வரும்’ என்று சொல்லி வைத்தாள்.

மறுநாள் வேலை முடிந்து வரவும் என் பையன் ‘அப்பா பூன வந்திடுச்சு. அம்மா சொன்ன மாதிரியே’ என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்தேன். என் மனைவியும் சொன்னாள், ‘பூனை வந்திட்டு, ஆனா வேறொரு பூனை’ என்றாள். என் அம்மா கொஞ்சம் எச்சரிக்கை உணவர்வுடன் ‘ஒரு பூனை போயாச்சு. இன்னொன்னுக்குப் பாலூத்தாத’ என்றாள். வெளியிலிருந்து மெல்ல மியாவ் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.

பின்கதவைத் திறந்துகொண்டுபோய் பார்த்தேன். இறந்த பூனை போலவே, அதே நிறத்தில், அதே கண்களுடன் ஒரு பூனை. ரொம்ப குட்டி. பிறந்து பதினைந்து அல்லது இருபது நாள்கள் இருக்கலாம். ஒரு தடவை கையில் எடுத்துத் தடவிக்கொடுத்தேன். உடனே ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய பூனை பழகுவதற்கு ஒரு மாதம் ஆனது. இந்தப் பூனைக்கு ஒருநாள்கூடத் தேவைப்படவில்லை. உடனே வீட்டுக்குள் நுழையவும், பால்குடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. என் மனைவி இப்பூனையைத் திட்டித் தீர்த்தாள். பழைய பூனையாவது வெளியில் இருந்து பால் குடித்தது, இது உள்ளேயே வந்துவிட்டது என்பது அவள் புலம்பல். நானும் எத்தனையோ முறை பூனையை வெளியில் கொண்டுபோய் விட்டேன். அது எப்படியோ வீட்டுக்குள் வந்தது. ஒருதடவை முக்கிய அறையின் ஜன்னல் வழியாக. அடுத்தமுறை படுக்கை அறையின் ஜன்னல் வழியாக. ஒரு தடவை வீட்டு வாசல் வழியாக. இப்படி அதற்கான வழிகளை அது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தது. பழைய பூனை கொஞ்சம் அமைதி. ஆனால் இது படுசுட்டி. ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லை.

லோக்சபா தொலைக்காட்சியில் பார்ட்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அன்று பூனையின் விஷமம் ரொம்ப அதிகமாகிவிட்டது. எங்கே கொண்டுபோய் விட்டாலும் எப்படியோ வீட்டிற்குள் வந்துவிடும். பக்கத்து வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் விட்டேன். கிட்டத்தட்ட பத்து அடி உயரமுள்ள சுவர். அரை மணி நேரத்தில் எப்படியோ வீட்டுக்குள் வந்துவிட்டது. வெளிக்கதவை மூடினால், கதவின் முன்னாலேயே அமர்ந்து மியாவ் மியாவ் எனக்கத்திக்கொண்டே இருந்தது. பூனை எங்களை விடவே இல்லை.

வீட்டிற்கு வெள்ளையடித்தோம். வீடெங்கும் பொருள்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்க, பூனை அந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அங்கும் இங்கும் தாவி, அதையும் இதையும் உருட்டி, களேபரம் செய்யத் தொடங்கியது. அதைப் பிடிக்கலாம் என்று போனால், சிதறிக்கிடக்கும் ஏதேனும் ஒரு பொருளுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டுவிடும். என் பையன் இதை மிகவும் ரசித்தான். நான் அப்பூனையை ஒருவழியாகப் பிடித்து, வாசலுக்கு அப்புறமுள்ள ஒரு பாழில் விட்டேன். எப்படியோ வழிகண்டுபித்து வந்த பூனை, இந்தமுறை வேறொருவர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.

நான் போய்ப் பார்க்கும்போது, கையில் மிகப்பெரிய தடியுடன், ஆஜானுபாகுவான அவரது உயரமெல்லாம் குறுகிப்போய், மனதில் பீதியுடன், கையெல்லாம் நடுங்க அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார், ‘வீட்டுக்குள்ள பூனை வந்திட்டும்மா, என்ன பண்றதுன்னு தெரியலை.’ அவரது வீட்டின் பிரிட்ஜின் கீழே ஒளிந்துகொண்டிருந்த பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தேன். ‘அத எங்கயாவது கொண்டுபோய் விட்டுடுங்க’ என்றார். கொஞ்சம் தெளிந்திருந்தார். கீழ்வீட்டுக்காரம்மாளும் அதையே சொன்னார். ‘பிளாட்டுக்கெல்லாம் சரிபட்டு வராதுங்க.’ ‘எல்லாரும் திட்டுறாங்க, கொண்டுபோய் விட்டுடு’ என்று என் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.

பூனையை பையில் வைத்துக் கொண்டுபோனேன். தெருக்கள் கடந்து, முக்கியச்சாலைக்கு சென்று, அங்கிருக்கும் கால்வாயில் விட்டுவிடலாம் என்று பையைத் திறக்க எத்தனித்தபோது, அங்கே ஒரு நாய் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பூனையை விட்டிருந்தால் நாய் குதறியிருக்கும். அந்த நினைப்பே உடலைப் பதறவைக்க, பூனையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் தோட்டத்திற்குச் சென்றேன். வேலிக்கம்பிக்குள் பூனையைச் செருகி அப்பக்கமாகத் தள்ள, மரண பயத்தில் பூனை கத்தியது. மனம் நிறைய வருத்தத்துடன், பூனையை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். வேலிக்கு அப்பாலிருந்து என்னைப் பார்த்து மியாவ் மியாவ் எனக் கத்தியது. நான் நடக்க ஆரம்பிக்க, ஓடிவந்து வேலிக்கு இப்பக்கம் வந்தது. சாலையில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்க பயந்துபோய் என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல், அங்கேயே அப்படியே வாலைச் சுருட்டி உட்கார்ந்துகொண்டிருந்தது. என் கண்ணில் இருந்து மறையாமல் இருக்கப்போகும் இன்னொரு காட்சி இது.

வீட்டுக்கு வந்தால் என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். ‘எதுக்கு கொண்டுபோய்விட்டீங்க, நாமளே வளர்த்திருக்கலாம், அது எங்கபோகும், என்ன செய்யும்’ என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒவ்வொருநாளும் தோட்டத்தின் வழியாகச் செல்லும்போதெல்லாம் வேலிக்குள் தன்னிச்சையாகப் பார்ப்பேன். என் வீட்டைக் கண்டடைந்தது போல, வேறொரு வீட்டை அப்பூனை கண்டடைந்துகொண்டிருக்கலாம் என ஏமாற்றிக்கொள்வேன். நாய் விரட்டியிருக்கலாம், வேகமாக விரையும் வாகனங்கள் விரட்டியிருக்கலாம் என்னும் நினைப்பைத் அறுத்துக்கொள்வேன்.

பூனையைக் கொண்டுபோய்விட்டது என் பையனுக்குத் தெரியாது. அவன் இப்போதும் ‘பூன பின்னாடி இருக்கும். அப்புறம் வரும்’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.


நன்றி: பண்புடன் குழுமம்

Share