நான் யார்?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம்
ஒரு நாள் கிரீடத்துடன்
மறுநாள் அலுமனியத் தட்டேந்தி
இன்னொரு நாள் இராமன்
வேறொரு நாளில் இராவணன்
சில சமயம் துகிலுரிகிறேன்
சில சமயம் சேலை கொடுக்கிறேன்
சிகண்டியாய் நடித்த போது சிலாகித்திருக்கிறார்கள்
வேடத்துடன் பொருந்திப் போனதாய்
மாலை, கைதட்டுடன்
தட்டி மறைவில்
அயற்சியில் அரிதாரம் கலைக்கும்போது
நான் என்கிறது
என் கம்புக்கூட்டு வீச்சம்.
 

Share

மரணம்

சூன்யத்தின் பார்வை சூன்யம் நிறைந்ததாக, கொடூரமானதாக இருக்கிறது. அதன் கண்கள் தாங்கமுடியாத வெம்மையை உமிழ்கின்றன. மனதை சுழற்றியடிக்கிறது ஊளையிடும் பெருங்காற்று.

காந்தி ஓ வென்று பெருங்குரலெடுத்து அழுகிறாள். பெத்த வயிறு என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெருப்பின் ஜ்வாலை காற்றில் நீந்துகிறது.

நெருப்பின் மீதான என் பார்வை விலகவே இல்லை. என் கண் எரிகிறது. சூடாகிறது. நெருப்புக்குச் சுடுமா? சுட்டாலும் அது நெருப்புக்கு இஷ்டமானதாய் இருக்கவேண்டும். எதையிட்டாலும் உள்வாங்கி எரியும் நெருப்புக்குப் பேதமில்லை. அதன் சிவந்த நாக்கின் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கணத்தில் இறந்து போன பாலா மாதிரியும் கூட. எனக்கு ஜில்லிடுகிறது. என்னையறியாது கண்கள் பனிக்கின்றன.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது.

என் நினைவுக்குத் தெரிந்து நேர்ந்த முதல் மரணம் பாட்டியினுடையது.

தரையில் விழாமல் பம்பரத்தைக் கையிலெடுத்து எல்லோருக்கும் என் பராக்கிரமத்தைக் காட்டிக்கொண்டிருந்தேன். தெருவில் நிறைய சுள்ளான்கள் என்னைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு நாளாய் வீட்டில் ஏகப்பட்ட ள்கள். பாட்டிக்கு இழுத்துக்கொண்டிருக்கிறது. இப்போ அப்போ என்று எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டி எமகாதகி. சாவதாயில்லை. எலும்பும் தோலுமாய் இருக்கும் பாட்டியைக் கண்டாலே பிடிக்காது எனக்கு. காய்ந்து போன மார்புகளை ரவிக்கையால் அடிக்கடி மூடிக்கொள்வாள். அவென் ஏம் பேராண்டி என்று என்னை இறுக்கக் கட்டிக்கொண்ட நாள்களும் உண்டு. இப்போது இழுத்துக்கொண்டு கிடக்கிறாள். எல்லோரின் கவனமும் பாட்டியின் சாவு மேலேயே இருந்ததால் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. இரண்டு நாளாய் யாரும் என்னைப் படிக்கச் சொல்லவில்லை. நான் பம்பரமும் கையுமாக அலைவதை என் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாலும் சும்மாயிருந்தாள். வந்தவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து, பாட்டியின் இல்லாத மேன்மைகளைத் தேடிப்பிடித்து சொல்வதற்குத்தான் அம்மாவிற்கு நேரமிருந்தது. பாட்டி இன்னும் இரண்டு நாள் இழுத்துக்கொண்டிருந்துவிட்டு பின் செத்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

என் நினைப்பில் இடியைப் போட்டுவிட்டு அன்று இரவே பாட்டி செத்தாள். ஒப்பாரிக்கு ள் சொல்லி அனுப்பினார்கள். நான்கைந்து பொம்பளைகள் வந்து ஒரு வட்டமாகக் கூடி அமர்ந்து மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். ஒருத்தி பாட்டியை இந்திராணி என்றாள். இன்னொருத்தி ஒரு படி மேலே போய் உலகத்துக்கே படியளந்த த்தா என்றும் சொன்னதாக நினைவிருக்கிறது. எவளோ என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவளும் ஒப்பாரி இடவந்த மற்ற பொம்பளைகள் போலவே ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. னால் அவளின் மார்புகள் பாட்டியினுடையதைப் போல் உலர்ந்தில்லாமல் செழுமையானதாக இருந்தன. அவளிடமிருந்து வேர்வையும் மண்ணெண்ணையும் கலந்த ஒரு வீச்சம் எழுந்தது. போயும் போயும் மண்ணெண்ணெயைக் குடிப்பார்களா என்ன? எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

பாட்டியின் மரணத்தில் அன்று மனதுக்குள் அமர்ந்து கொண்ட ஏதோவொரு வாடை இப்போது இங்கே என் வீட்டில் இருக்கிறது. பத்தி எரிகிறது. அந்த வாடையா? இல்லை. மண்ணெண்ணெய் நெடியும் இல்லை. பின் எந்த வாடை? எல்லா சாவு வீட்டிலும் இதே வாடை இருக்குமோ என்னவோ. பதினைந்து வயதில் முகர்ந்த வாடை இன்னும் உள்ளிருப்பதே இன்னொரு சாவில்தான் தெரிகிறது.

னால் அன்றைய எழவிற்கும் இன்றைய சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள். அன்றைய மரணம் எதிர்பார்த்தது. நான் அதிகம் நேசிக்காத உறவினுடையது.

நான் நேர்கொண்ட அடுத்த மரணம் அப்பாவினுடையது.

அப்பா எனனுள் மிக ழமாய் பதிந்தவரல்ல. எனக்குள் அவ்வப்போது தலைதூக்கும் வக்கிரம் அப்பாவிடமிருந்து வந்ததாய்த்தான் இருக்கவேண்டும்.

போர்வையை மூடிக்கொண்டு, அன்று படித்த மஞ்சள் பத்திரிகையின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அம்மாவின் எதிர்ப்பும் அப்பாவின் கெஞ்சலும் கேட்டு அயற்சியாய் உணர்ந்ததுண்டு. அம்மா பலமாய் எதிர்க்கிறாளா ஊடுகிறாளா என்று தெரியுமுன்னரே அப்பா இறந்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார்.

மீண்டும் ஒப்பாரிப் பெண்கள். அம்மாவின் அழுகை. மண்ணெண்ணெய் நெடி. சாவு வீடு எனக்கு மட்டும் இரசிக்க முடிந்ததாய்ப் போனது கண்டு எனக்கே என்னைக் குறித்த ச்சரியம்.

நான் இரசித்துக்கொண்டிருக்க தொடர்ந்து அப்பாவும் பாட்டிகளும் மட்டும் இறப்பதில்லை. மரணங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை சொல்லியும் சொல்லாமலும் செல்லும் விஷயங்கள் கனத்தவை. இன்று நேர்ந்து விட்ட பாலாவினது மாதிரி. பாலா. கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்துவிட்ட ஜனனம். கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்து விட்ட மரணம்.

காந்தியின் அன்றைய எதிர்ப்பார்ப்புகள் நியாயமானவை. நானும் பங்கெடுத்துக்கொண்டவை. முதலிரவில் சங்கமித்த நிமிடங்கள் முதல் பாலா பிறந்தது வரை அவள் அவளாய்த்தான் இருந்தாள். கருவுற்றதை என்னிடம் சொல்லி வெட்கித்த நிமிடங்கள் காவியம் என்பேன். பாலா பிறந்த பின் எல்லாம் மாறிப்போயின.

எதற்காய் அத்தனை பெரிய தண்டனை என்று நான் யோசிக்காத நாளேயில்லை. காந்தி அழாது உறங்கிய இரவே இல்லை.

பாலா பிறந்த போதே முதுகில் பெரிய கட்டி. பிறந்த தினமே பரேஷன் என்றார்கள். ரொம்ப ரிஸ்க் என்றார்கள். கடவுளை நம்புங்க என்றார்கள். கவலைப்படாதீங்க என்றார்கள்.

….என்றார்கள். ….என்றார்கள். … என்றார்கள். இத்யாதி.

காந்தி அப்போதுதான் முதன்முதலாய்ப் பெருங்குரலெடுத்து அழுததும். நான் வெளிக்காட்டாது எனக்குள்ளே ஓலமிட்டேன். ஒரே ஒரு குறையுடன் பாலா உயிர்பிழைத்தான். இரண்டு கால்களிலும் உணர்ச்சியில்லை. தவழ்தல் கூட சாத்தியமில்லை. கொஞ்சம் பெரியவனானதும் இன்னொரு பரேஷன் மூலம் நடக்க வைக்க முடிந்தாலும் முடியலாம் என்றார்கள்.

முதல் குழந்தை நடக்க முடியாது ஒரே இடத்திலேயே இருந்து அழுவது கண்டு கண்டு காந்தி அரண்டு போனாள். அவளுக்குள்ளேயே அழுது ஒடுங்கினாள். நான் உட்பட்ட எல்லாமே அவளுக்கு வெறுப்பாகிப் போனது. எப்போதும் பாலாவைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது மட்டும் அவளுக்குப் பிடித்தமானதாயிருந்தது. சிரிப்பு பேச்சு ஒன்றும் இல்லாத காந்தியைக் காணவே கவலையாயிருக்கும் எனக்கு.

பல மாதங்கள் கழித்த ஒரு இரவில் அவளைத் தொட்டபோது ஏதோ தெருவில் போகிறவன் தொட்டபடி கண்கள் காட்டினாள். நான் பயந்து பின்வாங்கினேன். தீர்மானமாய்ச் சொன்னாள் இனி நமக்கு வேண்டாமென்று. ஏன் என்று கேட்கும் தைரியம் எனக்கில்லை. ஏதோ பேச்சுக்குச் சொல்கிறாள் என்ற என் எண்ணம் தவறாய்ப் போனது. காந்தி நெருப்பானாள். நான் என்னை அடக்கக் கற்றுக்கொண்டேன்.

இனி நமக்கு வேண்டாம் என்ற காந்தி தன்னை மறந்த ஒரு இரவில் கட்டை உடைத்துக்கொண்டு விட்டாள். அல்லது நான் உடைத்தேன். அன்றைக்கு காந்தியின் வேகமும் க்ரோஷமும் என்னைக் கொஞ்சம் பயமுறுத்திவிட்டன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இருபத்தைந்து வயதுப் பெண்ணின் சாந்தம் இல்லை. இரண்டு வருடங்களின் தனித்த இரவுகளை ஒரே இரவில் தீர்க்க நினைக்கிறாளோ என்றும் தோன்றியது. மூச்சு வாங்கி மேலே சரிந்தபோது "இப்போ மட்டும் பாலா ஞாபகம் இல்லையா?"என்று கேட்கலாமா என்று நினைத்தேன். நான் கேட்காமல் விட்டதற்கு பாலா எனக்கும் மகன் என்பதும் இனியும் இரவுகள் வரும் என்பதும் காரணங்களாய் அமைந்துவிட்டன.

நேற்று எங்களுக்குள் நடந்த சம்பாஷணைகள் என் தலைக்குள் தெறிக்கின்றன. அவளால் என்னை மட்டுமே குற்றம் சாட்ட முடியவில்லை என்ற ஒரே காரணத்தினால்தான் நான் தப்பித்தேன்.

என் சந்தோஷத்தை அவளோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அவள் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதாயும் அதற்குத் தானும் காரணமாகிவிட்டதாயும் புலம்பித் தீர்த்தாள். பாலா உண்டானதைச் சொன்னபோது நடந்த நிகழ்வுகள் என் மனக்கண்ணில் வந்து மறைந்தன. மெல்ல நெருங்கி உச்சி முகர்ந்து கையால் வயிற்றைத் தடவி உதட்டைக் கௌவி இறுக்கிக் கட்டிப்பிடித்த நிமிடங்கள் நேற்றும் நிகழ்ந்திருக்க வேண்டியவை. னால் நேற்று ஒரு கை ஓசை. பாலாவைக் கருக்கொண்ட அன்று இருவருக்குள்ளிருந்த சந்தோஷம் நேற்று என்னிடம் மட்டும்தான் இருந்தது. நேற்று அவள் மனதுள் நான் குற்றவாளியாக்கப் பட்டிருந்தேன்.

காந்தியின் புலம்பலை மீறி என்னுள் ஒரு சந்தோஷம் பரவியது. இன்னொரு மகனோ மகளோ பிறந்து அது தவழ்வதை, நடப்பதை எல்லாம் ரசிக்க முடியும். காந்தியின் குற்ற உணர்ச்சியும் என் மீதான சாடல்களும் அதைக்காணும்போது மறையும். அப்போது காந்தியிடம் சொல்ல வேண்டும், பாலா இருக்கும்போதே இரண்டாவதாய்க் கருவுற்றது பெரிய பாவமொன்றும் இல்லை என்று.

ஜ்வாலை எண்ணெயில்லாமல் சிறுகத் தொடங்குகிறது. சொந்தக்கார கிழவியருத்தி எண்ணெயிடுகிறாள். கிட்டத் தட்ட எல்லோரும் வந்தாகிவிட்டது. நான் யாருடனும் பேசவில்லை. அமைதியாயிருக்கிறேன். எல்லோரும் காந்தியைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். கொண்டு போகலாம் என்று யாரோ சொல்கிறார்கள். நான் சரி என்கிறேன், எப்படிச் செத்தான் என்ற யோசனையில். முனகல் சத்தம் கேட்டதாய்க்கூட நினைவில்லை.

காந்தியின் வீறிடல் என்னைக் குலுக்குகிறது. என்னிடம் அவளுக்கான தேறுதல் வார்த்தைகளில்லை. என்னை நானே கூட தேற்றிக்கொள்ள முடியாது. என்னைத் தேற்றவும் யாருமில்லை.

பாலாவின் நேற்றைய சிரித்த முகம் மனதை விட்டு இன்னும் கண்ணை விட்டு மறையவில்லை. காந்தி பலமுறை சொல்லி அழுத வரிகளை மீண்டும் சொல்லி அழுகிறாள். "யாருமே என்னைப் புரிஞ்சிக்கலையா..? பாலா.. நான் உன்ன மறந்துருவேன்னு நினைச்சிட்டியா.. பெரிய தண்டனையா கொடுத்திட்டியே..”

எனக்குக் குறுகுறுக்கிறது.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது. பாலா மாதிரி.
 

Share

கவிதைக்காகக் காத்திருக்கிறேன்

நீல வானத்தில்
வெள்ளைத் திட்டுக்களாய்
கால் பாவும் மேகங்கள்
பூமியைப் படித்தபடி
நகர்ந்துகொண்டிருக்க
மிதப்பில் இருக்கின்றன மரங்கள்

காற்றின் குறும்புதாளாது
கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன
என் கையில்
வெள்ளைக் காகிதங்கள்

நான்
கவிதைக்காகக் காத்திருக்கிறேன்

தவத்தைக் கலைக்கிறது
ஓடை நீரில்
தொப்ளக் சத்தம்.

எவனோ குதித்துபோது
தெறித்த துளிகள் பட்டு
திறந்திருக்கும்
தொட்டாச்சிணுங்கிச் செடியின்
இலைகள் மூடிக்கொள்ளும்
அழகைவிட
நல்ல கவிதை
எழுதமுடியாதாகையால்
இன்னும்
வெள்ளையாகவே இருக்கின்றன
காகிதங்கள்

Share

ஹைகூ


கோயில் மணியோசை இரம்மியமானது
கோபுரப் பொந்துகளில்
கிளிகள் உறங்காதிருக்கும்போது.

சங்கிலிபூதத்தார் சாமி வந்து
உக்கிரமானான் பூசாரி
கலவரமடைந்தன கோழிகள்

கட்சிக் கொடிக்கம்பங்கள்கூட
கவர்ந்துவிடுகின்றன
நாய்கள் நனைக்கும்போது

மலைத்திருப்பத்தில்
ஏதோ ஒரு கணத்தில்
வால் பார்க்கிறது இரயில்

மேலிருந்து கீழிறங்கி
மீனைக் கொத்திக்கொண்டு
மீள்கிறது மீன்கொத்தி

போர்வைக்குள் சத்தம்
கொடியில் படபடக்கிறது
பொத்தல்களுடன் பாவாடை

சீரான இடைவெளியில்
துணிதுவைக்கும் சத்தம்
தூங்குகிறது குழந்தை

பயனில்லாத கிணற்றைச் சுற்றி
மக்கள் கூட்டம்
மிதக்கிறது பிணம்

 

Share

கேள்விகள்

ரவு முழுதும் செய்த வேலையின் அலுப்பு உடலெங்கும் பரவியிருந்தாலும் அந்தக் காலை நேரத்தின் குளிர்ந்த காற்று அக்கணத்தை இரம்மியமானதாக ஆக்கிகொண்டிருந்தது. வேகமான எதிர்காற்று மூக்கினுள்ளே சென்று ஒருவித சுகமான எரிச்சலை விட்டுச் சென்றது. காதுகளின் வழியே அது சீறிப்பாயும் வேகம் சத்தத்தில் தெரிந்தது. ஆலையின் ஒவ்வொரு புகைபோக்கியாய்க் கடந்து நகர எல்லைக்குள் நுழையும்போது சாலையின் இரு புறங்களிலும் கருப்புத்தோல் பெண்கள் கலையத்திலும் எவர்சில்வர் தூக்குச் சட்டியிலும் பதனீர் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு வித சினேகப் பார்வையும் நாம் மறையாத வரை அவர்களின் முகத்தில் தோன்றும் சிரிப்பும் ஒரு வித வியாபார அழைப்பு.

காற்றில் கலையும் தலைமுடியை கைகளால் கோதினேன். நிறைய மணற்துகள்கள் கையில் ஒட்டிக்கொண்டன. ஹெல்மேட் அணிந்துகொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் கடிகாரத்தைப் பார்த்தேன். அது ஆறு இருபது காட்டியது. பைக்கின் வேகத்தை கொஞ்சம் குறைத்தேன். பிரம்மச்சாரி வாழ்க்கையில் நான் போய் செய்யப்போவது எதுவுமில்லை. தூக்கம், சாப்பாடு, ஷி·ட் என்பன தரும் அலுப்பில் ஒரு வித சந்தோஷம் கண்டுகொள்ளப் பழகினால் வாழ்க்கை இனிமையாயிருப்பதாய்க் கற்பிதம் கொள்ள வசதியாய் இருக்கும். எனக்கு அது பழக்கப்பட்டுவிட்டது.

டவுண்ஷிப் தாண்டி ரவுண்டானா கடந்து பிள்ளையார் கோவில் பக்கத்து சந்தில் திரும்பி அக்ரஹாரத்தில் நுழைந்தபோது பெருமாள் கோவிலிருந்து புல்லாங்குழல் இசை காற்றில் மிதந்து வந்தது. பட்டருக்கு எப்போதும் ·பர்ஸ்ட் ஷி·ப்ட் என்று நினைத்துக்கொண்டேன்.

வண்டியை கோவிலுக்கு பக்கவாட்டிலுள்ள என் வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு டீக்கடைக்காரனுக்கு ஒரு புன்னகை புரிந்துவிட்டு வாசல்படியில் இருந்த தினந்ததியைக் கையிலெடுத்த போது பக்கத்துவீட்டு மாடியிலிருந்து ரேணுகா மாமி என்னவோ கேட்டாள்.

"என்ன மாமி.. காதுல சரியா விழல."

ஜன்னல் வழியாக வரப்போகும் குரலைத் தெளிவாய்க் கேட்க ஆயத்தமானேன்.

"மாமா உன்னப் பார்க்கணும்னார். அவசரமில்லை. எப்பமுடியுமோ அப்ப வா.."

"இப்பவே வரட்டா"என்றேன்.

ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் "சரி வா"என்றாள். தினத்தந்தியைக் கையிலெடுத்துக் கொண்டு சாவியை சுழற்றியபடி மாமிவீட்டு மாடிப்படியில் ஏறினேன். காலிங்பெல்லை அழுத்துமுன் மாமியின் குரல் உள்ளிருந்து, "வெறுமனே தெறந்துதான் இருக்கு.வா"என்றது. செருப்பை விட்டுவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றேன். மாமி வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். இன்னும் குளிக்கவில்லை போல. அப்படியானால் மாமா சமையல் கட்டில் தான் இருக்கவேண்டும்.

"என்ன மாமி.. இன்னைக்கும் ராவுஜிதான் சமையலா?"

"ஆமா.. உள்ளதான் இருக்கார் போ”

எந்தவித சங்கோஜமும் இல்லாமல் சமையற்கட்டு வரை செல்வது எனக்கே ஆச்சரியமான ஒன்று. ராவுஜி சிவப்பான தொந்தியை ஒரு துண்டால் இறுக்கிக் கொண்டு கடுகை வெடித்துக்கொண்டிருந்தார். துண்டு எப்போதுவேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற எண்ணத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் ராவுஜிக்கு அந்தக் கவலை இருந்ததாகவே தெரியவில்லை.

மாமி அங்கிருந்தே கத்தினாள்.

"அவனுய காபி ஆக்கி கொட்றி"

ராவுஜி காபி குடிக்கிறியா என்றார். சரி என்றேன். பிறகு காபி போடுவதில் மும்முரமாகிவிட்டார். அறை முழுதும் சாமான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இறைந்து கிடந்தன. மாமி வீட்டில் இருந்திருந்தால் இப்படி இருந்திருக்காது. குறைந்த பட்சம் ராஜி இருந்திருந்தாலாவது..

இந்த எண்ணம் எழுந்ததும் வயிற்றுக்குள் என்னவென்று தெரியாத ஒரு உருண்டை புரண்டு அடங்கியது. அதற்குள் ராவுஜி காபி ரெடி என்றார். காபியைக் கையில் எடுத்து குடித்துக்கொண்டே ராவுஜியைக் கேட்டேன்.

"என்ன விஷயம்?"

நான் காபியைப் பற்றி கமெண்ட் சொல்வேன் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? ஒரு நொடி சுதாரிப்புக்குப் பின் சொன்னார்..

"நேத்து பஜார்ல நம்ம இன்ஸ்பெக்டரைப் பாத்தேன்."

அவர் முகம் சீரியஸாகியது. குரல் தணிந்தது. மாமிக்கு கேட்ககூடாது என்று நினைத்திருக்கலாம். அதுவும் சரிதான். எனக்கும்கூட கொஞ்சம் படபடப்பு உண்டானதை அறிந்தேன். இனி ராவுஜியின் முகத்தைப் பார்க்கும் சக்தி இருக்காது என்று எனக்குத் தெர்¢யும். ராவுஜிக்கும் அப்படித்தான். இது பற்றி பேசும்போது அவர் என்னைப் பார்க்கமாட்டார். எந்த ஒரு அப்பாவிற்கும் அப்படித்தான். நான் காபியின் நுரைகள் எப்படி அடங்குகின்றன என்பதைப் பார்த்தவண்ணம் ராவுஜி சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் தாளித்த வாணலியில் புளிக்கரைசலை ஊற்றிக்கொண்டே,

"அவர வந்து பாக்கச் சொன்னாரு. நீயும் கூட வந்தீன்னா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். இன்னைக்கு காலேல போகலாம்னு இருக்கேன். வர்றியா?"

பதிலுக்காய் தொக்கி நிற்கும் கேள்விகள் கேட்பது ராவுஜியின் பழக்கமல்ல. நைட் ஷி·ப்ட் முடிந்து தூங்கிகொண்டிருந்தாலும் எழுப்பி பதினோரு மணிக்காட்சிக்கு வா என்பார். வர்றியா என்பது இப்போது தொற்றிக்கொண்டுள்ள புதுப்பழக்கம்.

எப்போதும் யோசனையிலிருக்கும் அவருக்கும் இந்த உலகத்திற்கும் ஒரு இடைவெளி விழுந்தது போன்ற உணர்வு எனக்கு மேலிட்டது. அதை அவரால் தவிர்க்க இயலாதென்பதும் உண்மை.

"இன்னைக்கு ஆ·ப்தானே ராவுஜி. கண்டிப்பா வர்றேன்."

"கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? எண்ணி வெச்சிருப்பியே"என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். நேரத்துடன் ஒட்டாத வெறுமை நிறைந்த சிரிப்பு எனக்கு எப்போதும் இஷ்டமாய் இருந்ததில்லை. அதை அவர் கண்டு கொண்டதுபோல நிறுத்திக்கொண்டார். நான் பதிலேதும் சொல்லாமல் சுருட்டிய தினத்தந்தியால் கையில் தட்டியபடியே வெளியில் வந்தேன். மாமி ராவுஜியிடம் "காபி கொட்றியா?"என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

வளைந்த மாடிப் படிகளின் கீழிருந்த சிறிய மணற்வெளியில் குட்டையாய் தென்னை நின்றுகொண்டிருந்தது. இதைக்காணும்போதெல்லாம் ராஜியின் நினைவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தென்னையின் கிளைகள் ஆடுவதற்கும் ராஜியின் சிரிப்புக்கும் எப்போதும் வித்தியாசம் தெரிந்த்தில்லை எனக்கு.

முதல்முறை கண்டபோதே வந்த ஈர்ப்பும் பழகப் பழக விரிந்த நட்பும் என் வழக்கமான வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தந்துகொண்டிருந்ததை எப்போதும் நினைப்பேன். என்றோ நிச்சயிக்கப் பட்டுவிட்ட அவளின் அவனை, கொஞ்சம் உரிமை எடுத்து நான் கிண்டல் செய்யும்போதெல்லாம் அவள் சந்தோஷமும் பொய்க்கோபமும் கலந்து அண்ணா என்று கூப்பிடும் அந்த ஒலி இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

வெளியில் வந்து கேட்டைப் பூட்டிவிட்டுத் திரும்பியபோது டீக்கடைக்காரன் சொன்னான்.

"தம்பி.. காபி கொண்டுவந்தேன். வூடு பூட்டியிருந்துச்சு"

"ராவுஜி வீட்டுக்குப் போயிட்டேன். கொஞ்ச நேரம்கழிச்சு கொண்டுவாங்க"என்று சொல்லிவிட்டு என் வீட்டு படிகளில் ஏறினேன். மேலேயிருந்து ராவுஜி குரல் கொடுத்தார்.

"பதினோரு மணிவாக்குல ஸ்கூலுக்கு வா"

பூட்டிய என் வீட்டுக் கதவைத் திறந்த படியே சரி என்று கத்தினேன்.

மேலே மின்விசிறி சுழல்வதை பார்த்துக்கொண்டே இருந்த ஞாபகம் இருக்கிறது. எப்போது உறங்கினேன் என்ற நினைவில்லை. ஒரு வித அரை குறை உறக்கம். எப்போதும் விழித்திருப்பது போன்ற எண்ணமும் நன்றாகத் தூங்கியது போன்ற எண்ணமும் ஒன்றாய் எழுந்து என்னை அலுப்பாக்கியது. கண்ணைத் திறந்து மணியைப் பார்க்கத் தோன்றாமல் அலாரம்தான் அடிக்கட்டுமே என்ற எண்ணத்திலேயே இருந்தேன். ராவுஜி காத்துக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் மேலோங்கவும் போர்வையையும் சோம்பேறித்தனத்தையும் உதறிவிட்டு குளிக்கச் சென்றேன். என்னவென்னவோ நினைவுகள் என்னைச் சுழற்றிக்கொண்டிருந்தன. அன்றும் இதே போன்ற ஒரு விடுமுறை நாள்தான். எப்போதும்போல விழிக்கவில்லை. ரேணுகா மாமியின் அலறலும் ராவுஜியின் கதறலும் கேட்டு அடித்துப்புரண்ட நினைவு இப்போதும் கலவரமேற்படுத்துகிறது. நான் போவதற்குள் ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டிருந்தது. என்னவென்னவோ பேசிக்கொண்டார்கள். எதையும் கிரகிக்கும் நிலையில் இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது. ராஜி தூக்கில் தொங்கிவிட்டாள். இப்போது உயிரில்லை. பிணமாய்த் தொங்கும் ராஜியை எல்லோரும் கஷ்டப்பட்டு கீழே இறக்கியபோது நான் வெளியில் எங்கேயோ வெறித்தவண்ணம் இருந்தேன்.

அதற்குப் பிறகு ராவுஜியை பார்க்கும் தைரியமோ அவரைத் தேற்றும் பக்குவமோ அழுது அழுது வீங்கிப்போன மாமியின் முகத்தைப் பார்க்கும் சக்தியோ எனக்கில்லை. இப்படியெல்லாம் நேரும் என்பதும் இவையெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதும் என்னால் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவையல்ல. அங்கேயே மரம் போல நின்றிருந்தேன். என்னென்னவோ சொன்னார்கள். போலீஸ் கேஸாகுமுன் பிணத்தை எடுக்கவேண்டும் என்று சொல்லி ஐந்து மணி நேரத்தில் காரியத்தை முடித்தார்கள். நேற்று பேசியவள் இன்றில்லை என்னும் உண்மை நெஞ்சைக் குடைந்தபோது கொஞ்சம் கலவரமடைந்துதான் போனேன். ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்ற கேள்வி என் மனதில் ஓடிய வண்ணம் இருந்தது.

ராவுஜியையும் மாமியையும் எல்லாரும் தேற்றிக்கொண்டிருந்த போது ஒரு காரில் இருந்து ராஜிக்கு பேசி வைக்கப்பட்டிருந்த பையனும் வேறு சிலரும் இறங்கினார்கள். ராஜியின் கட்டாயத்தின் பேரில் அந்தப் பையனை நான் ஒரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். கூட வருவது அவன் அப்பாவும் அவரின் நண்பர்களுமாய் இருக்கவேண்டும். அவன் அப்பா அவனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு எல்லா கூட்டத்தையும் மீறி வீட்டினுள்ளே சென்றார். அவனைப் பார்த்ததும் மாமி மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். ராவுஜி துண்டைஎடுத்து வாயை மூடிக்கொண்டு சரிந்திருந்த மார்புகள் குலுங்கக் குலுங்க அழுதார். பையனின் அப்பா கேட்டார்.

"என்னாச்சு?"

கன்னடத்திலும் தமிழிலும் மாறி மாறி பேசிக்கொண்டார்கள். ராவுஜி கேட்டகேள்விக்கு மட்டும் பதில் சொன்னார். பையனின் அப்பா ராவுஜியின் மன நிலையைக் கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.

"நீ என்ன பண்ணிருக்கனும்? நாங்க வர்ற வரைக்கும் வெச்சிருக்கணுமா வேண்டாமா?
அவனப் பாரு.. அழுது அழுது.. அவனுக்கு என்ன ஆறுதல் சொல்றது நானு? அவன் கடைசியா அவ மொகத்தைப் பார்த்திருந்தான்னா கூட ஒரு ஆறுதலா இருந்திருக்கும்.."

"இல்லடா. போலீஸ் கேஸாயிரும்னுதான்.. .. "

"சும்மா சொல்லாத.. திடீர்னு வந்து என் பொண்ணுக்கு ஒன் பையனக்கொடுன்னு சொன்னப்பவே யோசிச்சேன். சரி கூட படிச்சவனாச்சேன்னு நம்பித்தான் சரின்னேன். என்னடா தூத்துக்குடியில இல்லாத ஸ்கூலான்னதுக்கு அவ அத்தை வீட்டுல தங்கிப் படிக்கட்டும்ன. இப்பதான் புரியுது அவ பத்தாவது படிக்கும்போதே எவன் பின்னாடியோ சுத்திருக்கான்னு. "

ராவுஜி இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற ரீதியில் நின்றிருந்தார். பையன் பேசினான். அதிகமாய் ராஜியை நேசித்திருப்பான் போல. பேசும்போது கண்ணிலிருந்து நீர் வழிந்த வண்ணம் இருந்தது.

"அப்பா சும்மா இர்றி.."என்று அவன் அப்பாவை அதட்டிவிட்டு ராவுஜியை நோக்கி "மாமா. அவரு சொல்றத கேக்காதீங்க. எனக்குத் தெரியும் என் ராஜி பத்தி. அவ எம்மேல உசிரயே வெச்சிருந்தா. என்கிட்ட கூட சொல்லாம இப்படிச் செஞ்சிக்கிட்டான்னா வேற ஏதோ காரணம் இருக்கணும்.. சொல்லுங்க.. என்ன காரணம்? "

"தெரியலையேப்பா.."ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் ராவுஜி.

"பொய் சொல்றீங்க.. உங்களுக்குத் தெரியாம இருக்க சான்ஸே இல்லை. சரி விடுங்க. ஏதாவது லெட்டர் எழுதி வெச்சிருந்தாளா?"

ராவுஜி எதுவும் இல்லையென்று தலையசைத்தார். பையன் தனக்கு கடிதம் எழுதி வைக்காமல் ராஜி சாகமாட்டாள் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். மீண்டும் பையனின் அப்பா கத்தத் தொடங்கினார். ராவுஜி திட்டம்போட்டு தன்னையும் தன் பையனையும் ஏமாற்றிவிட்டதாகக் கத்தினார். தெருக்காரர்கள் சிலர் சமாதானம் பேசி அவரை அனுப்பி வைத்தார்கள். போகும்போது தனக்கும் ராவுஜி குடும்பத்திற்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனார்.

அலாரம் அடித்த போதுதான் ஷவரில் நெடு நேரமாய் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். வேகவேகமாய் தலைதுவட்டிக்கொண்டு கத்தும் அலாரத்தை நிறுத்திவிட்டு புறப்பட்டேன்.

ராவுஜி பயந்தபடி ஒன்றும் இருக்கவில்லை. இன்ஸ்பெக்டர் தன் பையனுக்கு ட்யூசன் சொல்லித்தரவேண்டுமென்று கேட்டார். எனக்கு எரிச்சலாய் இருந்தது. பஜாரில் பார்த்தபோதோ அல்லது ஒரு ·போன் போட்டோ கேட்டிருக்கலாம். ஆனால் ராவுஜி அப்படியெல்லாம் நினைத்ததாகத் தெரியவில்லை. தனது கடமை அது என்பது போல பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை ராஜி விஷயத்தில் இன்ஸ்பெக்டர் செய்த உதவிக்கு நன்றியுணர்ச்சியாய் இருந்திருக்கலாம். இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து ஏதாவது கேட்கவேண்டும் என்ற தொனியில், "எப்ப கல்யாணம்? என்னைலேர்ந்து லீவு", என்றார். உடனே மறந்துபோகும்படியான ஒரு பதிலைச் சொல்லிவிட்டு பரஸ்பரம் சிரித்துவிட்டு நானும் ராவுஜியும் கிளம்ப ஆயத்தமானபோது ராவுஜி இன்ஸ்பெக்டரிடம்,

"நீங்க வரச்சொன்னதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்"

"என்னவோ ஏதோன்னா.. ஓ.. நீங்க இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருக்கிறீங்களா? அது முடிஞ்சி போச்சு. ஆக்சிடென்டல் டெத்துன்னு சர்டி·பிகேட் வாங்கின பின்னாடிதான எரிச்சோம். இனிமே ஒரு பிரச்சனையும் வர வாய்ப்பில்ல. நீங்க மறக்கவேண்டியதுதான் பாக்கி"

"நா எப்பவோ மறந்துட்டேனே.. எப்ப அவ எங்கள வேண்டாம்னு நெனச்சிட்டாளோ அப்பவே அவள நாங்க மறந்தாச்சு.."

ரொம்ப அலட்சியமாய் பேசுவதாய் ராவுஜி நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் குரல் அவருடன் ஒத்துழைத்ததாகத் தெரியவில்லை.

"ஜஸ்ட் ஒரு க்யூரியாஸிட்டி.. உண்மையிலேயே அவ லெட்டர் எழுதும் எழுதி வைக்கலயா?"

எனக்குள்ளிருந்த அதே கேள்வியை இன்ஸ்பெக்டர் கேட்கவும் கொஞ்சம் உன்னிப்பானேன்.

"என்ன சார் நீங்க.. லெட்டர் இருந்திருந்தா உங்க கிட்ட கொடுத்திருக்க மாட்டேனா.. நீங்க எவ்வளவு ஹெல்ப் பண்றீங்க.."

ராவுஜி இதைத் தவிர எதுவும் சொல்லமாட்டாரென எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டருக்கும் அதே எண்ணமோ என்னவோ. "ஓ.. ஜஸ்ட் கேட்டேன்"என்றார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தோம். ராவுஜியை ஏதோ ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டு இருந்தது. இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் நடந்தோம். நானும் ராவுஜியும் எங்கு போனாலும் நடந்து போவதே பழக்கம். ராவுஜிக்கு நான் பைக் ஓட்டும்போது என் பின்னே அமர்ந்து வர பயமும் கூட. ரேஷ் ட்ரைவிங் என்பார்.

என் சிந்தனைகளைக் கலைக்கும் விதமாகவும் அவரை அவரே சாந்தப் படுத்திக்கொள்ளும் விதமாகவும் எங்களிடையே நிலவியிருந்த மௌனத்தை அவரே கலைத்தார்.

"அப்புறம் கல்யாண வேலைலாம் ஊர்ல அப்பாவும் அம்மாவும் பார்க்குறாங்களா?"

அந்தக் கேள்வி அவருக்குள்ள படபடப்பைக் காட்டுவதைத்தவிர வேறொன்றையும் சாதித்ததாகத் தெரியவில்லை.

"ம்"

"என்ன யோசனை பலமா இருக்கு?"

அவரை ஆழ ஊடுருவிப் பார்த்தேன். எனக்குள்ளிருந்த அந்தக் கேள்வியை கேட்டுவிடலாமா என்று நினைத்தேன். நீயுமா என்பது பதிலாய் இருக்கக்கூடும். இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டேன்.

"ராஜி ஏன் அப்படி செஞ்சிக்கிட்டா? உங்களுக்கு நெஜமாவேத் தெரியாதா? அவ உண்மையிலேயே லெட்டெர் எதுவும் எழுதி வைக்கலயா?"

என்றாவது ஒரு நாள் இதைக்கேட்பேன் என்று ராவுஜி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ. பெரிய அதிர்ச்சி ஒன்றும் அவர் முகத்தில் இல்லை.

"அப்படி ஒன்னு இருந்தா உன்கிட்ட கூடச் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறியா?"

இதற்குப் பிறகு அவரிடம் இதைப் பற்றிக் கேட்பது முறையல்ல என்று நினைத்துக்கொண்டேன். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்ற ரீதியிலான முகத்துக்கு நேரான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது, அமைதியாயிருப்பதைத் தவிர?

ராவுஜி ராஜியின் நினைவுகளை ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வந்தார். சில சமயங்களில் அவரையும் மீறி கண்ணீர் வந்தது. சீக்கிரம் ஸ்கூல் வந்துவிடாதா என்று இருந்தது எனக்கு.

"எப்படி வளர்த்தேன் தெரியுமா? ஆசை ஆசையா வளர்த்த பொண்ணு இப்படிப் போனா எப்படிடா வாழ்றது? என்ன விடு. மாமியை நினைச்சுப் பாரு. இப்பவும் ராத்திரியில பொலம்புறா.. அவ அழும்போது நெஞ்ச அடைக்கும் எனக்கு. நேத்து சொல்றா.. ராஜிய நெனச்சுப் பார்த்தாஅவ சிரிச்ச முகமே ஞாபகம் வரமாட்டேங்குதுங்க.. தொறந்த கண்ணும் வீங்குன முகமும் வெளிதள்ளின நாக்கும் ஞாபகம் வந்து பயமா இருக்குதுங்கன்றா. பெத்தவளுக்கு எப்படியிருக்கும்?"

எனக்கு பயமாய் இருந்தது. அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. நல்லவேளை. ஸ்கூல் வந்துவிட்டது.

"சரி ராவுஜி நான் கிளம்புறேன். ரொம்ப தூங்கிட்டேன்னா ராத்திரி ஒரு ஆறரைக்கு எழுப்பிவிட்டுருங்க. வரட்டா"என்றேன்.

சம்பந்தமில்லாத உரையாடல்களின் உதவி புரிந்தது.

அவர் பேச்சை மாற்றுவதைவிட அவரை விட்டு விலகிவிடுவது இப்போதைக்கு நல்லது. எனக்கும் கொஞ்சம் தனியாக இருக்கவேண்டும்.

ராவுஜி, "சரி போ. போய் தூங்கு. ஒரே ஒரு விஷயம். ஒங்கிட்ட இவ்வளவு நாள் சொல்லாதது தப்புதான். ஆனாலும் நீ புரிஞ்சுக்குவன்னு நெனைக்கிறேன்"என்ற பலமான பீடிககக்குப் பின், "ராஜி சாகுறதுக்கு முன்னாடி ஒரு லெட்டர் எழுதி வெச்சிருந்தா"என்றார்.

எனக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை. எப்படியோ இத்தனை நாள் என்னைக் குடைந்துகொண்டிருந்த என் கேள்விக்கு விடை கிடைத்தால் சரி என்ற எண்ணத்தால் உண்டான பரப்ரப்பை அடக்கிக்கொண்டு கேட்டேன்.

"நா மொதல்லயே நெனச்சேன். என்ன எழுதியிருந்தா?"

"அத நான் படிக்கவேயில்லை. படிக்காமயே கிழிச்சுப் போட்டுட்டேன். அவ எதாவது எழுதி அதைப் படிச்சுட்டு நம்ம பொண்ணா இப்படின்னு நினைக்கிறதை விட ஏன் செத்தான்னு எல்லாரையும் மாதிரி காரணம் தெரியாம இருந்தா போதும்னு நினைச்சிதான் அதைக் கிழிச்சிப் போட்டுட்டேன்"என்றார்.

நெஜமாவா என்று வாய் வரை வந்த கேள்வியை மனதிற்குள்ளேயே அழுத்தி வைத்தேன். உண்மையோ பொய்யோ அதை எற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இன்னும் அவரை கேள்வி கேட்பது சரியில்லை என்றும் பட்டது.

"நீங்க செஞ்சது சரிதான்"

"மாமிகிட்ட சொல்லிடாத. ப்ளீஸ்"

"சரி"என்றேன்.
 

Share

படிமங்கள்


படிமங்கள்

–ஹரன் பிரசன்னா

நின்று விட்ட மழைக்குப் பின்
கூரை நுனியில்
கீழே விழாது
தொங்கிக்கொண்டிருக்கும்
துளி
தெருவிளக்குக் கம்பத்தின்
மஞ்சள் பல்பைச் சுற்றி
சந்தோஷித்திருக்கும்
ஈசல்கள்
தாவணியை முக்காடாக்கி
வெடவெடத்துக்கொண்டு
செல்லும் சிறுமி
என
கவிதை படிமங்கள்.

பிரிந்து ஓடிய பூனைகள்
மறுமுறை
புணரும் நேரம்
மீண்டும்
தூறாதிருக்கட்டும்.
கிடக்கட்டும்
படிமங்கள்.

Share

இறகு


இறகு

–ஹரன் பிரசன்னா

விரையும் வாகனச் சத்தத்திற்குப்
பழகிவிட்டாலும்
என் பெரு ஊளையில்
படபடத்துப் பறக்கும்
செட்டியார் வீசும்
தானியத்திற்குக்
காத்திருக்கும் புறாக்கள்

காற்றில் தூளியாடும்
இறகு கண்டு
மலரும் அம்மாவிற்கு
காதுகுடைய
புறா இறகு
போதை

செட்டியார் செத்தாரா
புறாக்கள் இறந்தனவா
புதிருக்கு மத்தியில்
எந்தக் கவலையுமின்றி
கோழியிறகுக்குப்
பழகிவிட்டாள்
அம்மா

Share

பல்லி வதை


பல்லி வதை

–ஹரன் பிரசன்னா

மரத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் பல்லியை
சத்தமில்லாமல் நெருங்கி
கையிலிருக்கும் கல்லால்
ஓங்கி ஒரே அடியில் அடித்து
மரத்தோடு சேர்த்து வைத்துஅழுத்த
தலையின் வழி இரத்தம் பிதுங்க
வால் துடிக்க…

நாசமாப் போறவனுங்கவென்று
குண்டுப்பொம்பளையருத்தி
திட்டுவாள்
எப்போதும்
சிரித்துக்கொண்டே ஓடுவோம்.

பையனுக்குப் பல்லிதோசம்.
காரணம் தெரியவில்லை
பல்லியா குண்டுபொம்பளையாவென.

Share