Archive for திரை

Devaaaa

தேவாஆஆஆ

நேற்று ஒரு வேலையாக கேப் ஏறி அமர்ந்ததுமே என்னவோ கலவரமாக இருந்தது. காரணம்‌ உள்ளே ஒலித்தது தேவாவின் ஒரு பாடல். தேவா எனக்கு அத்தனை பிடித்தமான இசையமைப்பாளர் அல்ல. அவரது 20 – 30 பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும் பல பாடல்கள் ஏனோ எரிச்சலைத்தான் வரவழைத்திருக்கின்றன. நேற்று கேப்-இல் ஒலிபரப்பானது தேவாவின் ஹிட் பாடல்கள் அல்ல. படம் வந்தபோது அவ்வப்போது அங்கங்கே கேட்டு தேவாவே மறந்து விட்ட பாடல்கள். தொடர்ந்து அதே போன்ற பாடல்கள் வரிசையாக வந்தன. இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் தவிர யார் இசை அமைத்த பாடல்களாக இருந்தாலும் தொடர்ந்து ஐந்தாறு பாடல்கள் கேட்டாலே எனக்கு பிபி ஏறத் தொடங்கும். நேற்று நடந்தது வன்கொடுமை. என்னென்ன பாடல்கள் என்று கூட எனக்கு இப்போது சொல்ல வரவில்லை. ஆனால் அந்தப் பாடல்களை எல்லாம் நான் கல்லூரிக்கு சைக்கிளில் போகும் போதோ அல்லது ஏதோ ஒரு டீக்கடையிலோ நிச்சயம் கட்டியிருக்கிறேன். டிரைவரிடம் பாடலை மாற்றச் சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. சரி போய்த் தொலையட்டும் என்று அமைதியாக விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 50 நிமிடப் பயணம். 11 பாடல்கள். காது புண்ணாகிப் போனது.

அவர் என்னை இறக்கி விடவும் அங்கே இருந்த ஒரு டீக்கடையின் முன்பாக இருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து, அந்த மிதமான மழைச்சாரலின் நடுவே, எனது மொபைலில் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வரும் ராம நாமம் ஒரு வேதமே பாடலைக் கேட்டேன். கிட்டத்தட்ட கண்ணீர் வந்துவிட்டது. அதிலும் அந்த யேசுதாஸின் குரலும் இளையராஜாவின் இசையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அது ஒர் அனுபவம். அடுத்ததாக அழைக்கிறான் மாதவன் கேட்டேன். டீக்கடை மறந்து, டீக்கடையின் முன்னால் நின்று 5 இளைஞர்களும் 5 யுவதிகளும் சிறிய கேக்கை வாங்கி என்னவோ பேசி அர்த்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த காட்சிகள் மறைந்து, எனக்குள்ளே ஒரு பிருந்தாவனம் தோன்றி மறைந்தது. மனம் கொஞ்சம் இலகுவானது.

ஒரு வேலையை முடித்துவிட்டு மீண்டும் கேப் பிடித்தேன் மீண்டும் தேவா. இப்படி ஒரு நிலைமை எனக்கு இதுவரை
வந்ததில்லை‌ இந்த முறை தேவாவின் ஹிட் பாடல்கள். அதனால் கொஞ்சம் தாங்கிக் கொள்ள முடிந்தது. மீண்டும் 50 நிமிடம். மீண்டும் பதினொரு பாடல்கள்.

நேற்று எனக்கும் தேவாவுக்கும் இப்படி ஒரு ஏழாம் பொருத்தம் அமைந்திருக்க வேண்டாம்.

Share

Idli Kadai

இட்லிக்கடை – படமாய்யா எடுத்து வெச்சிருக்கீங்க. அடப் பக்கிகளா. முதல் 10 நிமிஷம் நல்லா இருக்கேன்னு நெனச்சேன், அது ஒரு குத்தமாய்யா. வெச்சு செஞ்சிட்டீங்களே.

1960ல‌ இந்தப் படத்தை எடுத்திருந்தா கூட பழைய படமாத்தான் இருந்திருக்கும். ராயன் எடுத்த தனுசுக்கு ஏன் இப்படிப் புத்தி போனது என்று தெரியவில்லை. கதை திரைக்கதை என ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இரண்டே நிமிடத்தில் ஒரு பாடலில் முடிக்க வேண்டிய கதையை 3 மணி நேரம் கண்றாவியாக இழுத்து இழுத்துச்‌ சாவடித்து விட்டார்.

ஃபீல் குட் மூவி என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால் பேய்ப் படம் போல இருக்கிறது. ராஜ்கிரனும் அவர் மனைவியும் செத்தும் கடைசிக் காட்சி வரை பேயாக வந்து பாடாய்ப்படுத்துகிறார்கள்.

கொடுமை ஒன்றாய் இரண்டா. சமுத்திரகனி வடிவில் இன்னொரு கொடுமை. தாங்கிக்கொள்ள முடியாத நித்யா மேனன் வேறு.

நமத்துப் போன‌ நாலு‌ இட்லியும் அவிஞ்சி போன அந்த ரெண்டு கரண்டி சாம்பாரையும் தின்றதற்காக ஊரே உயிரைக் கொடுத்து இவன் பின்னால் நிற்குமாம். கேட்பவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுமாம்.

இது எல்லாமே கூட மன்னித்து விடலாம். ஆனால் கருப்பசாமி காலில் சலங்கை கட்டி பவ்யமாகப் போவது இட்லி சுடுவதற்காகத்தான்னு காமிச்சீங்களே, அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்.

படம் முழுக்க ஹிந்துக் குறியீடுகள் வருவதைப் பார்த்துச் சந்தோஷப்படுவதா, இல்லை இந்தக் கொடுமையைப் பார்த்தால் பாதி பேர் இன்னும் மதம் மாறி போய் விடுவானே என்று வருத்தப்படுவதா… டெலிகேட் பொசிஷன்.

ஆனாலும் ஒரு சந்தோஷம். இன்பக்குட்டியண்ணாஜியையே தனுஷ் காண்டாக்கிப் பார்த்ததுதான்.

பிகு: இடது கையால் மாவை தள்ளும் இட்லிக்கா இவ்ளோ மவுசு? உவ்வேக்.

Share

Dies Irea

Dies Irea (M) – சமீப காலங்களில் பேய்ப் படங்கள் எடுப்பதில் இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதுவது ராகுல் சதாசிவனைத்தான். பேய்ப் படங்களில் நான் பார்த்த அவரது முதல் திரைப்படம் பூத காலம். வித்தியாசமான சைகலாஜிகல் ஹாரர். கடைசியில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. அந்தப் படத்தில் பேயை காட்ட வேண்டுமா அல்லது பயம் மட்டும் போதுமா என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது. 

பேய் இருக்கா இல்லையா என்பதைப் பற்றிப் பலருக்குப் பல சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் பேய் பற்றிய பயம் உலகம் முழுக்க நிஜம். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் அந்தப் படத்தில் அவர் காட்சிப்படுத்தியிருந்தார். அப்படி அத்தனை அழகாக யோசித்தவர் கடைசியில் பேயைக் காட்டினார் என்பதில் அந்தப் படம் எனக்குக் கொஞ்சம் விலகலைத்் தந்து விட்டது. மற்றபடி அது நல்ல திரைப்பட அனுபவமே.

பின்னர் வந்தது பிரமயுகம். அந்தப் படத்தில் மம்முட்டியின் நடிப்பு மிரட்டல். கதையும் ஓரளவு வித்தியாசமான கதை. ஆனால் மிக மெல்ல நகரும் காட்சி அமைப்பும் சில தேவையற்ற காட்சிகளும் எனக்குக் கொஞ்சம் விலகலைத் தந்தன. ஆனால் சந்தேகமே இல்லாமல் அதுவும் முக்கியமான படமே. குறிப்பாக மம்முட்டியின் மிகச் சிறந்த படங்களில் அந்தப் படத்துக்கு என்றைக்கும் ஓர் இடம் உண்டு. 

இதனால் அந்த இயக்குநர் இப்போது எடுத்து வெளியாகி இருக்கும் டியஸ் இரியே (Dies Irea – கோப நாள்) என்ற படத்தைப் பார்க்க முதல் நாளே போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். இன்னொரு காரணம் பிரணவ் மோகன்லால்.

பேய்ப் பயம் பற்றிய அனுபவம்தான் முதன்மை என்றால் இந்தப் படத்திலும் ராகுல் சதாசிவன் நம்மை ஏமாற்றவில்லை. ஆனால் தனது கடைசி இரண்டு படங்களில் அவர் கையாண்ட அந்த சைக்காலஜிக்கல் மாயாஜாலத்தைக் கைவிட்டு விட்டு முற்றிலுமான பேய்ப் படத்துக்குள் வந்து விட்டார். இது ஒரு சமரசம். 

இடைவேளை வரை நம்மை என்னென்னவோ யோசிக்க வைத்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை எழுதி, இடைவேளையில் அசர வைத்திருக்கிறார். ஒரு திரைப்படமாக ஃப்ரேம் பை ஃப்ரேம் மிரட்டி இருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தக் கதையாக யோசித்தால் புதுமையாக ஒன்றுமில்லை. அப்படி இருந்தும் கூட இந்த அளவு முதல் கட்சியிலிருந்து கடைசி நொடிவரை நம்மைக் கட்டி போட்டது பெரிய விஷயம்.

Spoiler alert.

படத்தில் பல காட்சிகளில் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். ஆனால் கதையாகச்‌ சில குழப்பம் படத்தில் இருக்கிறது. தம்பிக்கு ஏன் அப்படி நேர்ந்தது என்பதிலிருந்து, அந்த அப்பா கேரக்டர் யார் என்ன ஆனது, உதவி செய்பவனைக் கொல்ல நினைப்பது ஏன் என்பதெல்லாம் குழப்பங்கள். இதையெல்லாம் படமாக எடுத்து வெட்டித் தள்ளி விட்டாரா இல்லை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரா என்பது புரியவில்லை.

தமிழில்,‌ கன்னடத்தில்,  ஹிந்தியில் பேய்ப் படங்கள் என்னும் போர்வையில் கண்ட கண்ட கருமத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது இத்தனை அழகாக இத்தனை அழகியலுடன் இத்தனை மெல்ல நகர்ந்தாலும் இத்தனை விறுவிறுப்பாக ஒரு படம் எடுக்கும் இயக்குநரைப் பார்த்து நிச்சயம் நான் ஆச்சரியப்படுகிறேன்.

 அனுபவத்திற்காக என்றால் நிச்சயம் பார்க்கலாம். பிரமயுகம், பூத காலத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் கீழேதான்.

மேலதிக எண்ணங்கள்

Full of spoilers

திரைப்படம் என்னதான் நவீன காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் அடிப்படை, கெட்டவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கெட்டவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் பார்த்தால் இந்த படத்தின் ஹீரோதான் கொல்லப்பட வேண்டும். பேய் அவனை விரட்டி விரட்டிக் கொல்ல வரும்போது அவன் பிழைக்க வேண்டுமே என்ற எண்ணம் நமக்கு வராமல் இருப்பதற்குக் காரணம், அவன் செய்த சேட்டைகள். செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரு காரில் உட்கார்ந்து கொண்டு மொபைலைப் பார்த்தபடி ஐ அம் சாரி என்று சொல்லிவிட்டால் செய்ததெல்லாம் அப்படியே காற்றோடு மறைந்து போய்விடாது.

எத்தனையோ வருடங்கள் கழித்துச் சந்தித்த அப்பாவிப் பெண்ணை, அவள் சம்மதத்தோடு தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்திவிட்டு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள் என்றதும், திருமணமா வாட் இஸ் திஸ் என்று சொல்லி அவளை மொத்தமாக அப்படியே விட்டு விட்டால் அது என்ன நியாயம்?

திருமணம் செய்து கொள் என்று அந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால், அந்தப் பெண்ணை மிகவும் நல்லவளாகக் காட்டி இருப்பதைப் பின்புலமாக வைத்துக் கொண்டால், தன்னைக் கழற்றி விட்டவனைக் கூட பேயான பின்பும் தலையை வருடிக் கொடுப்பதைப் பார்த்தால், அந்தப் பெண், இவன் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பித்தான் அவனுடன் இருந்திருக்கிறாள் என்பது புலனாகிறது.

நியாயப்படி பார்த்தால் மூடுபனிக்கார பாடிதான் ஹீரோ. நமக்கு ஹீரோவாக அறிவிக்கப்பட்டிருப்பவன்தான் வில்லன். இந்த வில்லன் அந்த நல்ல பாடியையும் சேர்த்து எரித்து விட்டிருக்கிறான். என்ன கொடுமை இதெல்லாம்.

படம் தந்த அனுபவம் வேறு. ஆனால் படம் சொல்வது இதைத்தான்.

நானே சிந்தித்தேன். : )

Share

Mirage

Mirage (M) – சின்ன வயதில் அதிர்ஷ்டப் பரிசுச்சீட்டு கிழிக்கும் வழக்கம் உண்டு. 25 பைசா கொடுத்து சீட்டுக்கிழித்தால் அதில் 50 பைசா அல்லது ஒரு ரூபாய் கிடைக்கும். அதிகபட்சம் பத்து ரூபாய். பல சமயம் பரிசு விழாது‌ அப்போது புதிதாக ஒரு பரிசுச்சீட்டு வந்தது. அதாவது 25 பைசாவுக்குக் கிழித்தால் ஏதேனும் ஒரு பரிசு நிச்சயம். அது ஐந்து பைசாவும் இருக்கலாம், பத்து பைசாவாகவும் இருக்கலாம்.

இந்தப் படம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். சில திரைப்படங்கள் பார்க்கும்போது நாம் சிலவற்றை யூகித்துக் கொண்டே இருப்போம். ஒரு துப்பறியும் படம் என்றால், இவன் கொலைகாரனா அவன் கொலைகாரனா என்று யோசிப்போம். படத்தில் வரும் அத்தனை பேரையும் சந்தேகப்படுவோம். கடைசியில் யாரோ ஒருவன் கொலைகாரன் ஆவான். நான் சொன்னேன் பார்த்தியா என்று சந்தோஷப்பட்டுக் கொள்வோம். இந்தப் படம் அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல. நீங்கள் என்ன யூகித்தாலும் அது அத்தனையும் இந்தப் படத்தில் நடக்கும். இப்படி ஒரு திரைக்கதையை யோசித்ததற்காகவே ஜீது ஜோசப்பைப் பாராட்ட வேண்டும்.

முதல் காட்சியில் இருந்து பலவற்றை நான் யூகித்தேன்.வ்அத்தனையும் நடந்தது. குறிப்பாக க்ளைமாக்ஸை முதல் காட்சியிலேயே யூகித்தேன் என்பது முக்கியமான விஷயம்.

படம் கொஞ்சம் இழுவை என்றாலும் எனக்குப் பிடித்திருந்தது. முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை போரடிக்காமல் போகிறது என்பது பெரிய ப்ளஸ்பாய்ண்ட். பின்னணி இசை அபாரம். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்.

ட்விஸ்ட்டுக்கே ட்விஸ்ட் கொடுக்கும் ஜீதுதான் இப்படம்.

Share

Aravindan Neelakandan

முழு நேரமாகக் கட்சிக்காகக் குரல் கொடுத்த அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் காத்திருந்து ஏமாறுகிறார்கள் என்று ஜெயமோகன் எழுதியிருப்பது குறித்து.

இது முற்றிலும் அநியாயமான கருத்து. உள்நோக்கம் கொண்டது.

அரவிந்த நீலகண்டன் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் ஆதரவாக எழுத ஆரம்பித்தது திண்ணையின் தொடக்கக் காலத்திலேயே, அதாவது அப்போதெல்லாம் பாஜக இத்தனை வலுவாக ஆட்சிக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்காத நேரம், ஆர்எஸ்எஸ் பெயரைச் சொன்னாலே அடி விழும் ஒரு காலம், அந்தக் காலத்திலேயே, குறிப்பாக அதற்கும் முன்பாகவே ஆதரித்தார்.

அரவிந்தன் ஆர் எஸ் எஸ் & பாஜகவை ஆதரித்தது அவருடைய சித்தாந்தத்தின்படிதானே ஒழிய எதையும் எதிர்பார்த்து அல்ல.

இன்று பாஜக வலுவாக இந்தியா முழுக்கக் கால் பரப்பி இருக்கும் நிலையிலும் அவர் எந்த ஒரு சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. பெரிய சமரசம் அல்ல, சிறிய சமரசங்களை அதாவது கருத்து ரீதியாகச் சில சமரசங்களை அவர் செய்திருந்தாலே போதும், பல்வேறு விஷயங்கள் அவரைத் தேடி வந்திருக்கும். பல்வேறு எழுத்தாளர்கள் அவரைக் கொண்டாடி இருப்பார்கள். அந்தச் சமரசங்கள் தவறும் அல்ல. எல்லோரும் எல்லாக் கட்சியின் ஆதரவாளர்களும் எல்லா எழுத்தாளர்களும் எப்போதும் செய்வதுதான்.

நானே அவரிடம் அதைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால் அதை ஒருபோதும் செய்யாதவர் அரவிந்தன். இப்படியான ஒருவரை, ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அதனால் பாஜகவை ஆதரித்து அதனால் ஏமாந்தார் என்பதெல்லாம் அநியாயத்திலும் அநியாயம்.

இதை ஜெயமோகன் சொல்லி இருக்கக் கூடாது. பத்மஸ்ரீ அவருக்குத் தரக் கோரிக்கை வைக்கப்பட்ட போது நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்க்கிறேன். பத்மஸ்ரீ விருதுக்குத் தன் பெயர் பரிந்துரைக்கப்பட்டதே தனக்குத் தெரியாது என்று ஜெயமோகன் சொன்னார். அப்படி ஒரு வாய்ப்பு இருக்குமா என்பதை அவரவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன். என்னால் அதை நம்ப முடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.

அதேபோல் முன்பு ஒரு நண்பர் – இன்று அவர் நட்புப்பட்டியலில் இல்லை – அவர் தெளிவாகச் சொன்னார். என்னிடம் சொன்னார். நீங்கள்தான் அரவிந்த நீலகண்டனுக்கு பத்மஸ்ரீ பட்டம் வாங்கி தர மேலிடத்தில் பேச வேண்டும் என்று. எனக்கு மேலிடத்தில் யாரையும் தெரியாது என்பது தனிக்கதை.

ஆனால் எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. பத்மஸ்ரீக்கு பரிந்துரைக்கும் அறிவிப்பு வந்தது. நான் அரவிந்தனிடம் எத்தனையோ பேசினேன். பத்மஸ்ரீக்கு அப்ளை செய்வோம், கிடைக்க விட்டாலும் பரவாயில்லை என்று சொன்னேன். அரவிந்தன் ஒரேயடியாகவே மறுத்து விட்டார்.

என்னைக் கட்டுப்படுத்த உங்களால் முடியாது, யாருக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பத்மஸ்ரீ தர வேண்டும் என்று பரிந்துரை அனுப்பலாம், நீங்கள் ஏன் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, அப்படி நான் பரிந்துரை செய்தால் என் நட்பில் இருந்து விலகுவேன் என்று கடுமையாகக் கூறினார்.

ஏதேனும் எதிர்பார்ப்பவர் இப்படிச் செயல்பட மாட்டார் அல்லது தன் நண்பனை விட்டு அப்ளை செய்துவிட்டு அந்த பிரச்சினை பெரிதாகும் போது நான் அப்படிக் கேட்கவில்லை என்றாவது சொல்லாமல் இருப்பார். இந்த இரண்டையுமே அரவிந்தன் செய்யவில்லை.

மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் மட்டுமே அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

நிச்சயம் அரவிந்தன் ஏதோ ஒன்று எதிர்பார்த்திருந்தால் இத்தனை வெளிப்படையாக, கொள்கைக்காக எதிர்க்க மாட்டார்.

இப்போதும் இத்தனை சமரசமற்ற தன்மையும் எதிர்ப்பும் அரவிந்தனுக்குத் தேவை இல்லை என்பதே என் நிலைப்பாடு. ஆனால் வழக்கம் போல் அவர் அதைக் கேட்கப் போவதில்லை.

.

Share

Hridayapoorvam Malayalam

ஹ்ருதயபூர்வம் (M) – ஃபீல் குட் மூவியாக எடுக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு சீனையும் ஃபீல் குட்டாக எடுப்பதாக நினைத்துக் கொண்டு சாவடித்து விட்டார்கள். இதில் மோகன்லால் ஃபீல் குட் முகத்தை படம் முழுக்க வைத்திருக்கிறார். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் ஒரே பாவத்தைப் படம் முழுக்க எப்படிப் பார்ப்பது? காட்சிகள் மெல்ல நகர்கின்றன. ஒரே போன்ற காட்சிகள், வளவள வசனம். போதாக்குறைக்கு மகளாக வரும் பெண்ணை மோகன்லால் காதலிக்க முயல்வது போன்ற காட்சிகள் எல்லாம் படு அபத்தம். செயற்கைத்தனம். எரிச்சல் தரும் ஒவ்வாமை. கதையே இல்லாமல் ஒரு வழியாகப் படத்தை முடித்து வைத்தார்கள். ஆங்காங்கே சில காமெடிக் காட்சிகள் லேசாகப் புன்னகைக்க வைக்கின்றன என்றாலும், இந்தக் கண்றாவி எப்படி 100 கோடி சம்பாதித்தது என்று தெரியவில்லை.

படத்தில் கொஞ்சமாவது ஃபீல் குட்டாக இருந்த காட்சிகள் என்றால், தொடக்கத்தில் மோகன்லால் கடையில் வரும் காட்சிகளும், ஒழிச்சோடிப் போன மோகன்லாலின் மணப் பெண் போனில் அட்டகாசமாக நடித்துப் பேசும் காட்சிகளும்தான்.

Share

Sumathi Valavu

Sumathi Valavu (M) – நான் அபுதாபி‌ போயிருந்தபோது (இன்னுமா இந்த ரீல் அந்து போகலை?) சையாரா திரைப்படத்திற்குப் போயிருந்தோம். அப்போதுதான் சுமதி வளவு என்ற மலையாளத் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்ததைக் கவனித்தேன். ஆஹா இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று வருத்தத்துடன் சையாரா பார்த்து விட்டு வந்தேன்.

அன்று மட்டும் சுமதியைப் பார்த்திருந்தால் அன்றே என்னை பேக் செய்து விமானத்தில் வீட்டுக்கு அனுப்பி இருப்பார் ஜெயக்குமார். ஏனென்றால் அந்தக் கொடுமையான சுமதி வளவு படத்தை இன்றுதான் பார்த்தேன்.

பேய்ப் படமாகவும் இல்லாமல் காதல் படமாகவும் இல்லாமல் மொத்தத்தில் ஒரு படமாகவே இல்லாமல் கொடூரமாக இருக்கிறது. திடீரென்று இயக்குநருக்கு யாரோ இது பேய்ப் படம் என்று நினைவூட்ட, அதைச் சில காட்சிகள் காண்பிக்கிறார். பின்னர் காதல் படம் என்று யாரோ சொல்ல அதைச் சில காட்சிகள் காண்பிக்க, இரண்டுமே எந்த ஆழமும் இல்லாமல், ஒரு காட்சி கூட நன்றாக இல்லாமல், என்னை கதற வைத்து விட்டார்.

யாரும் அந்தப் பக்கம் போகாதீர்கள்.

Share

Kanthara The Legend – Chapter 1

காந்தாரா தி லிஜென்ட் சாப்டர் 1‌ – முதல் பாதியைப் பார்த்துவிட்டு என்னவோ விளையாட்டாக எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காந்தாரா முதல் பாகத்திற்கு இது திருஷ்டிப் பொட்டு என்ற அளவில் கூட யோசித்தேன். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் மிரட்டி விட்டது.

இடைவேளைக்குப் பிறகான 15 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் புல்லரிப்பு. என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு எழுத்து, எத்தனை குலிகா!

கிளைமாக்ஸில் வர வேண்டியதை இப்போதே காட்டிவிட்டார்களே, இனி கிளைமாக்ஸில் என்ன செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, மிரள வைக்கும் ஒரு திருப்பம், அதைத் தொடர்ந்து அசர வைக்கும் ஓர் உச்சகட்டக் காட்சி.

உண்மையில் தொடக்கக் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை வேறொரு உலகத்தில் நம்மைச் சஞ்சரிக்க வைத்து விட்டார்கள். தேர் விரட்டல் காட்சிகள் பார்க்கும்போது கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் அதை எடுத்த விதம் அட்டகாசம்.

மிக மோசமான கன்னடப் படங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட பாகுபலியை நெருங்கும் ஒரு திரைப்படத்தை இரண்டு காந்தாராவிலும் நமக்கு கன்னடத் திரையுலகம் காட்டி இருக்கிறது. அதிலும் உள்ளடக்க ரீதியாகப் பார்த்தால் பாகுபலியைக் காட்டிலும் இந்தியத் தன்மை கொண்ட சிறப்பான திரைப்படம் காத்தாரா.

கடவுள் நம்பிக்கையும் புராண நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு இந்தப் படம் இடைவேளைக்குப் பிறகு பேரனுபவமாக இருக்கும். இசையும் ஒவ்வொருவரின் நடிப்பும் கேமராவும் ஒவ்வொன்றும் உச்சம்.

தனிப்பட்டுச் சொல்ல வேண்டியது இந்த குல்சன் தேவையா பற்றி. சாதாரண ஒரு நடிகராகத் தோன்றி அவர் காட்டிய மிரட்டல் வாய்ப்பே இல்லை.

ரிஷப் செட்டி நடிப்புக்கு இரண்டாம் முறை தேசிய விருது தரலாம், தவறே இல்லை.

தியேட்டரில் சென்று பாருங்கள். கன்னடம் புரிந்தவர்களுக்கு இது மறக்க முடியாத படமாக அமையும். மற்றவர்களுக்கும் அப்படியே. கிராஃபிக்ஸ் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பக்தி சார்ந்த திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கே பாடம் எடுத்திருக்கிறார்கள்.

Share