Archive for திரை

Vanangaan

வணங்கான் – அரை மணி நேரம் பார்த்திருக்கிறேன். பெரிய இயக்குநர் ஒரு படத்தை சுமாராக எடுக்கலாம். ஆனால் இத்தனை கேவலமாக எடுக்கக் கூடாது. ‘அவன் இவன்’ திரைப்படத்தை விட மோசமான ஒரு திரைப்படத்தை இனி பாலாவால் எடுக்க முடியாது என்கிற எண்ணத்தைப் போட்டு உடைத்திருக்கிறார் பாலா. தனக்குத்தான் காமெடி வரவில்லையே, அப்புறம் எதற்கு அதைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாக் காட்சிகளும் ஏதோ அவரது பழைய திரைப்படத்தில் வந்த காட்சிகள் போலவே இருக்கின்றன. ஆங்காங்கே பிராமண பாஷை, ஆங்காங்கே கிறிஸ்துவக் கிண்டல், மீண்டும் கிறிஸ்துவப் புகழ்ச்சி, ஆங்காங்கே அரசியல் நையாண்டி, ஆங்காங்கே இந்து மதக் கிண்டல் என எல்லாவற்றையும் போகிற போக்கில் தொட்டுக்கொண்டு விட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்று யாரோ பாலாவை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் மகனும் மகளும் கடுப்பாகி, இது என்ன படம், ஒரு மண்ணும் புரியல, ஏன் இதைப் போட்டுக் கழுத்தறுக்க என்று கேட்டார்கள்.

இப்படித்தான் முன்பொரு சமயம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ என்ற கன்னடப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் 20 நிமிடம் பார்த்ததில் ஒன்றுமே புரியவில்லை. பிடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கப் போய் அந்தத் திரைப்படத்தைச் சாப்பிடும் போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம் என்ற வாக்கில் 7 ஞாயிற்றுக்கிழமைகளில் பார்த்து முடித்தேன். முடிவில் உண்மையில் அந்தப் படத்தின் வெறியனாகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ரக்ஷித் ஷெட்டி பிரமாதப்படுத்தி விட்டார். பின்பு அந்தப் படத்தை முழுமையாக மீண்டும் பார்த்தேன்.

அதேபோல் இந்தப் படத்தையும் இனி ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது பார்க்கப் போகிறேன் என என் பையனிடம் சொன்னேன். மறு விநாடி அவன் சொன்னான், ‘இந்த வீட்ல உன்கூட சேர்ந்து சாப்பிடறது இன்னைக்குத்தான் கடைசி’.

வணங்கான் திரைப்படத்தில் ஒரு பாதிரியார் நெற்றி நிறையக் குங்குமம் பூசிக்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி பக்கம் இந்த எழவெடுத்த மரபு ஏதேனும் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Update:

இன்று சாப்பிடும்போது வணங்கான் அடுத்த 30 நிமிடம் பார்த்தேன். முதல் 30 நிமிடமே பரவாயில்லையோ என்று நினைக்க வைக்கும் அடுத்த 30 நிமிடம்! கொடூரம். இயக்குநர் எடிட்டர் என அனைவரும் படத்தைப் பார்த்து மயங்கிய தருணம் ஒன்று இருக்கிறது. பிறவியிலேயே பேச முடியாத காது கேட்க முடியாத ஹீரோ கீழே விழுந்துவிட்ட குழந்தையை வேகமாக ஓடிச் சென்று தூக்கியபடி, அடிப்படலைல்ல ஒன்னும் ஆகலைல்லை என்று வாயசைப்பில் கேட்கும் அந்தக் காட்சி!

Share

Hissab Barabar

Hissab Barabar (H)

கணக்கை நேர் செய்துவிட்டேன் என்று அர்த்தம். இன்னொரு ஆம் ஆத்மி படம். ஆம் ஆத்மி என்றால் அரசியல் கட்சி அல்ல, சாதாரண மனிதனின் படம். சாதாரண மனிதன் எப்படி தன்னை கார்ப்பரேட் வங்கி சுரண்டுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை மக்கள் முன் தோலுரிக்கும் கதை. அஞ்சு பைசா திருடினா தப்பா? அஞ்சு அஞ்சு பைசாவா அம்பது தடவை அம்பது கோடி பேர் திருடினா? இதுதான் கதையின் ஒன்லைனர்! சீரியஸான கதையை நகைச்சுவையாகச் சொல்கிறேன் என்று சோதித்துவிட்டார்கள். மாதவன் தானாகச் சிரித்துக்கொள்கிறாரே ஒழிய நமக்குச் சிரிப்பே வருவதில்லை. உச்சக்கட்டக் காட்சியில் 1,500 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டும் காட்சி, நம்ம ஊர் மெகா சீரியல்களில் கூட இதைவிட நன்றாக இருக்கும். நேர விரயம் செய்யத் தயாராக இருப்பவர்கள் பார்க்கலாம்.

Share

Adisi Nodu Beelisi Nodu

நேற்று ஏதோ ஒரு ரீல்ஸில் ஒரு பாடல் காதில் விழ, கன்னட நடிகர் ராஜ்குமாரின் ஆடிசி நோடு பீலிசி நோடு ஹுருளி ஹோகது பாடல் பற்றிக்கொண்டது. அட்டகாசமான பாடல். இந்தப் படம் கஸ்தூரி நிவாஸா தமிழில் அவன்தான் மனிதன். இந்தப் பாடலுக்கு இணையான பாடல், மனிதன் நினைப்பதுண்டு அல்லது ஆட்டுவித்தால் யாரொருவர். ஆட்டுவித்தால் யாரொருவர் எம் எஸ் வி தந்த காலத்தால் அழியாத பாடல். வாழ்நாளில் மறக்க முடியாத பாடலும் கூட. அதே போலத்தான் ஜி.கே.வெங்கடேஷின் ஆடிசி நோடு பாடலும்.

ஆடிசி நோடு பாடலில் 2ம் நிமிடத்தில் இருந்து வரும் 30 செகண்டுக்கு ராஜ்குமாரின் நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன். பல முறை. இன்றைய நடிகர்களுக்கு இணையான தோற்றத்தை அன்றே வைத்திருக்கிறார். நிச்சயம் பாருங்கள்.

இந்தப் பாடலைக் கேட்ட நாளில் இருந்து, இந்தப் பாடல் தமிழில் ஏதோ ஒரு பாடல் போல இருக்கிறதே என்று ஒரு வருடமாக மண்டையைப் பிராண்டிக் கொண்டிருந்தேன். நேற்றிரவு விடை கிடைத்தது. அந்தப் பாடல், கேவி மகாதேவன் இசை அமைத்த மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே பாடல்!

Share

Max Kannada Movie

மேக்ஸ் (K) – சுதீப்பின் திரைப்படங்கள் என்றாலே காத தூரம் ஓடுபவன் நான். இந்தப் படத்தைப் பற்றிச் சில நண்பர்கள் பாசிட்டிவாகச் சொல்லவும் பார்த்தேன். கைதி போன்ற ஒரு படத்தை எடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை தலைவலி. பைத்தியக்காரத்தனமான திரைக்கதை. ஆயிரம் ரஜினி ஆயிரம் விஜய் சேர்ந்து காதில் பூச் சுற்றினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பூச்சூற்றல். கிறுக்குத்தனமான படம். இதில் இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்க்ஸ்லி போன்ற தமிழ் நடிகர்கள் கன்னடம் பேசும் கொடுமையை எல்லாம் வேறு பார்க்க வேண்டியிருக்கிறது. கைதி திரைப்படம் ஏன் கிளாசிக் என்பதை இந்தத் திரைப்படம் மீண்டும் உறுதி செய்கிறது. இனிமேல் செத்தாலும் சுதீப் நடித்த திரைப்படத்தின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன்.

Zee5ல் கிடைக்கிறது.

Share

Maryade Preshne Kannada Movie

மரியாத ப்ரஷ்னே (K) – நன்றாகத் தொடங்கி அழகாகச் சென்று திடீரென்று தடம் மாறி ஏன்டா பார்த்தோம் என்று கதற வைத்து விட்ட ஒரு திரைப்படம். ஆரம்பத்தில் வரும் காட்சிகளும் நட்பின் ஆழமும் எளிய குடும்பமும் அழகான காதலும் மிக அருமை. குறிப்பாக ஒவ்வொரு நடிகரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் இயல்புத்தன்மை நம்மையும் பற்றிக் கொள்கிறது. பின்பு படம் ஒரே காட்சியில் ஒட்டுமொத்தமாகத் தடம் மாறுகிறது. பிரபாகர் முன்ட்கர் இந்தப் படத்தில் வில்லனாக வருகிறார். அவர் மர்ஃபியில் கதாநாயகனாக நடித்து அசத்திய பிறகு இந்தப் படம் வந்திருக்கிறது. ஒரு வேளை இது முதலிலேயே தொடங்கப்பட்ட திரைப்படமாக இருந்திருக்கலாம். அழகுக்கும் திறமைக்கும் பிரபாகர் முன்ட்கர் கன்னடத் திரை உலகில் நிச்சயம் ஒரு வலம் வருவார் என நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தில் எதை முன்னிறுத்துகிறோம், எதைச் சொல்லப் போகிறோம் என்பது மிக முக்கியமானது. இந்தத் திரைப்படத்தில் அது சுத்தமாக இல்லை. லாஜிக் என்றால் என்ன என்று கேட்கும் இவ்வகைத் திரைப்படங்களை முழுமையாகப் பார்ப்பதே கொடுமைதான்.

Share

Lucky Bhaskar

லக்கி பாஸ்கர் (T) – நேற்றுதான் பார்த்தேன். ஊரை ஏமாற்றிய ஒருவன் கடைசி வரை ஜெயிக்கிறான் என்பதைக் காட்டுவது பெரிய நெருடல். ஆனால் உலகமும் அப்படித்தான் இருக்கிறது. அதேசமயம் ஒரு திரைப்படத்துக்கு அதாவது ஒரு கலைக்கு இது ஆதாரமாக அமையமுடியுமா என்ற கேள்வி மனத்தில் உழன்றபடி இருக்கிறது. மக்களை ஏமாற்றும் ஒரு கூட்டத்திடம் அதே பாணியில் பணம் பறிக்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்பதில் சிக்கலில்லை. ஆனால் இதை ஏற்கவே முடியவில்லை.

இதை விட்டுவிட்டுப் பார்த்தால், படம் அட்டகாசம். சமீபத்தில் வந்த திரைப்படங்களில் புத்திசாலித்தனமான படம் இதுவே. (ஜிகர்தண்டா இரு பாகங்களும் புத்திசாலித்தனமான படங்களே.) கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தும் அருமை. துல்கர் நடிப்பு அபாரம். பாஸ்கர் பணத்திமிர் கொள்ளும் காட்சிகளில் இருந்து அரை மணி நேரம் அதீத விறுவிறுப்பு. பல காட்சிகளில் காதில் பூச்சுற்றல் இருந்தாலும் இந்த விறுவிறுப்பே நம்மை அதைக் கடந்து போக வைக்கிறது.

படத்தின் பெரிய மைனஸ், மூன்று கார்களைக் கொண்டு போய் கோவாவில் விற்கும் நீண்ட காட்சி. பெரிய அறுவை. தெலுங்குப் பட வாடை அடித்தது இந்தக் காட்சியில்தான். மற்ற காட்சிகள் எல்லாம் ஹிந்தித் திரைப்படம் பார்ப்பது போலவே இருந்தது. குறிப்பாக வங்கிக் காட்சிகள்.

இதுவரை பார்க்காதவர்கள் பாருங்கள்.

நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தேன்.

Share

Kishkindha Kaandam(M)

கிஷ்கிந்தா காண்டம் (M) – அட்டகாசமான திரைப்படம். ஒற்றை வரியில் சொல்லக்கூடிய கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையில் மாயாஜாலம் காட்டி விட்டார்கள். படம் எடுத்த விதமும் காட்டின் சூழலும் என்ன நடந்தது என்பதை நாம் கணித்து விடவே கூடாது என்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் அசாத்தியமான திறமையும் அட்டகாசம். ஆசிஃப் அலியின் நடிப்பு பிரமாதமோ பிரமாதம். மற்றவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். மலையாளத்தில் மட்டும் பார்க்கவும். தமிழில் பார்த்தால் நிச்சயம் பல்லிளித்து விடும்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

Two movies

Adiyos Amigo (M) – பேசி பேசியே சாவடித்துவிட்டார்கள். சூரஜ் வெஞ்சரமூடுவின் ஒரே போன்ற முகபாவமும் நடிப்பும் எரிச்சலூட்டுகின்றன. ஆசிஃப் அலி உயிரைக் கொடுத்து நடித்தாலும் எவ்வளவு நேரம் ஒரே காட்சியை, நகராத திரைக்கதையை மீண்டும் மீண்டும் காண்பது? அலவலாதித்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கும் ஓர் அளவில்லையா! சாலையைச் சலிக்க சலிக்க காட்டுவதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை. எப்படி இதைச் சிலர் புகழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமே.

படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

லப்பர் பந்து – சமீபத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் அபாரமான திரைக்கதை கொண்ட சிறந்த கமர்சியல் படம் இதுவே. பெரிய இயக்குநர்களின் படங்களுக்குரிய கச்சிதம் இதில் இல்லை என்றாலும், அந்த இயக்குநர்களின் ஆரம்பப் படங்களில் இருக்கும் அந்த rawness இந்தப் படத்தில் இருப்பது பெரிய ப்ளஸ். பின்னால் இந்த rawnessஐ இந்த இயக்குநர் தவற விடாமல் இருக்க வேண்டும். படத்தில் மாமியார் மருமகள் உருகும் காட்சி கொஞ்சம் இழுவை. அதை மட்டும் விட்டு விட்டால் மற்ற அனைத்துக் காட்சிகளும் பக்காவான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான் கிரிக்கெட்டில் தனக்குப் போட்டி என்பது அவனுக்குத் தெரியாதா என்ற கேள்வியை மறக்க வைக்கிறது பரபரப்பான திரைக்கதை. 80களின் இசை பின்னணியில் வந்தால் அந்தப் படம் எந்த அளவுக்கு நம்மை கவர்ந்திழுக்கும் என்பதற்கு இந்தப் படம் இன்னும் ஒரு உதாரணம்.

Share