Archive for திரை

Kishkindha Kaandam(M)

கிஷ்கிந்தா காண்டம் (M) – அட்டகாசமான திரைப்படம். ஒற்றை வரியில் சொல்லக்கூடிய கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையில் மாயாஜாலம் காட்டி விட்டார்கள். படம் எடுத்த விதமும் காட்டின் சூழலும் என்ன நடந்தது என்பதை நாம் கணித்து விடவே கூடாது என்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் அசாத்தியமான திறமையும் அட்டகாசம். ஆசிஃப் அலியின் நடிப்பு பிரமாதமோ பிரமாதம். மற்றவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். மலையாளத்தில் மட்டும் பார்க்கவும். தமிழில் பார்த்தால் நிச்சயம் பல்லிளித்து விடும்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

Two movies

Adiyos Amigo (M) – பேசி பேசியே சாவடித்துவிட்டார்கள். சூரஜ் வெஞ்சரமூடுவின் ஒரே போன்ற முகபாவமும் நடிப்பும் எரிச்சலூட்டுகின்றன. ஆசிஃப் அலி உயிரைக் கொடுத்து நடித்தாலும் எவ்வளவு நேரம் ஒரே காட்சியை, நகராத திரைக்கதையை மீண்டும் மீண்டும் காண்பது? அலவலாதித்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கும் ஓர் அளவில்லையா! சாலையைச் சலிக்க சலிக்க காட்டுவதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை. எப்படி இதைச் சிலர் புகழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமே.

படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

லப்பர் பந்து – சமீபத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் அபாரமான திரைக்கதை கொண்ட சிறந்த கமர்சியல் படம் இதுவே. பெரிய இயக்குநர்களின் படங்களுக்குரிய கச்சிதம் இதில் இல்லை என்றாலும், அந்த இயக்குநர்களின் ஆரம்பப் படங்களில் இருக்கும் அந்த rawness இந்தப் படத்தில் இருப்பது பெரிய ப்ளஸ். பின்னால் இந்த rawnessஐ இந்த இயக்குநர் தவற விடாமல் இருக்க வேண்டும். படத்தில் மாமியார் மருமகள் உருகும் காட்சி கொஞ்சம் இழுவை. அதை மட்டும் விட்டு விட்டால் மற்ற அனைத்துக் காட்சிகளும் பக்காவான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான் கிரிக்கெட்டில் தனக்குப் போட்டி என்பது அவனுக்குத் தெரியாதா என்ற கேள்வியை மறக்க வைக்கிறது பரபரப்பான திரைக்கதை. 80களின் இசை பின்னணியில் வந்தால் அந்தப் படம் எந்த அளவுக்கு நம்மை கவர்ந்திழுக்கும் என்பதற்கு இந்தப் படம் இன்னும் ஒரு உதாரணம்.

Share

Chattambi (M)

மகாநதி திரைப்படத்தில் கமலை ஆசை காட்டி மோசம் செய்வது ஒரு மலையாளி. அதில் நடித்ததும் ஒரு மலையாளி. கொச்சின் ஹனீஃபா.

சட்டம்பி என்றொரு மலையாளத் திரைப்படம். 2022ல் வெளியான படத்தை நேற்றுதான் பார்த்தேன். சுமாரான படம்.  நாம் எப்படி மலையாளிகளைக் காண்பிக்கிறோமோ அதே போல் தமிழர்களை பாண்டி என்று அழைக்கும் இன்னுமொரு திரைப்படம். இதில் ஹீரோ மட்டும் ஒரு தமிழனை நம்புகிறான். ஆனால் ஹீரோவின் எதிரி ஹீரோவிடம் தமிழனை நம்புவதற்குப் பதிலாக (கெட்டவார்த்தை) என்று சொல்கிறான். அதையும் மீறி ஹீரோ தமிழனை நம்புகிறான். கடைசிக் காட்சியில் அந்தத் தமிழன் ஹீரோவைப் பணத்துக்காக நயவஞ்சமாக, ஹீரோவின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்கிறான். அந்தத் தமிழன் பாத்திரத்தில் நடித்திருப்பது தமிழ் நடிகர் சோம சுந்தரம். மிக நல்ல நடிகர். நடிப்புக்கு மொழி அவசியமே இல்லை என்று அவர் எப்போதும் உரக்கச் சொல்வார் என்று நம்புகிறேன், ஜி என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலா வருது என்று சொல்லி நடித்ததும் நடிப்பு மட்டுமே என்று சொல்வார் என்று நம்புவதைப் போல.

Share

ஜமா

ஜமா – இத்தனை தீவிரமான படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பல குறைகள் இருக்கின்றன. முதலில் நிறைகளைப் பார்த்துவிடலாம்.

இயக்குநருக்கு ஒரு தீவிரமான திரைப்படம் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது. தன் கதையின் மீதும் காட்சிமொழியின் மீது நம்பிக்கை இருக்கிறது. பெரிய அளவில் முத்திரை பதிப்பதற்கான அழுத்தமான தடயங்கள் தெரிகின்றன. சாதிக்க வாழ்த்துகள்.

இந்தக் கதை அவதாரம் திரைப்படத்தை நினைவூட்டுவதாகச் சிலர் எழுதி இருந்தார்கள். என்னளவில், இல்லை என்றே சொல்வேன். பெண் வேடம் கட்டும் ஒற்றை இழையைத் தவிர, இரண்டுக்கும் தொடர்பே இல்லை. இன்னும் சொல்லப் போனால், எடுத்துக்கொண்ட களம் என்ற வகையில், அவதாரத்தைவிட இத்திரைப்படம் எள்ளளவு கூட அங்கும் இங்கும் அலைபாயவில்லை. அவதாரம் படத்தில் இருந்தது போன்ற, கொலை, கற்பழிப்புக் காட்சிகள் இதில் இல்லை.

இளையராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் அபாரம். ஆனால் கூத்துக்கு ஏற்ற பாடல் ஒன்று கூட இல்லை. அவதாரம் போன்ற ஃபீல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி இயக்குநர் யோசித்துவிட்டாரோ என்னவோ. கடைசியில் கதாநாயகன் தலையில் அம்மனைச் சுமந்து வரும் காட்சியில் ஒரு பாடல் வைத்திருக்கலாம்.

நம் மண்ணின் மரபான பக்தியை இத்திரைப்படம் வெகு சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. இன்றைய இயக்குநர்கள் பக்தியைக் காட்டினால் அது ஹிந்து மதத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகிவிடும் என்ற போலி முற்போக்குத்துவத்தில் மயங்கிக் கிடக்க, இத்திரைப்படம் அவ்வகைக்குள் சிக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.

இன்னொரு முக்கியமான ஆச்சரியம், பல காட்சிகள் படு யதார்த்தம். நம் கிராமத்தில் நேரில் நடப்பது போன்ற ஓர் உணர்வு. இத்தனைக்கும் நடிப்பவர்கள் அத்தனை பேரும் முகம் தெரியாத நடிகர்கள். அசத்திவிட்டார்கள். உறுத்திக்கொண்டு தெரியும் சென்னை வட்டார வழக்கு போல் அல்லாது, இயல்பான, தேவையான அளவுக்கான வட்டார வழக்கு கூடுதல் பலம்.

ஆனாலும் ஏன் ஒரு திரைப்படமாக இது முழு அனுபவத்தைத் தரவில்லை? அற்புதமான பல நீண்ட காட்சிகளுக்கு இணையான அமெச்சூர் காட்சிகளும் இருப்பது. ஒரே இடத்தில் கதை சுற்றி சுற்றி வருவது போதாது என்று, ஒரே ரீதியிலான வசனங்கள். அதுவும் குறிப்பாக முதல் முக்கால் மணி நேரம் ரொம்பவே இவை அதிகம்.

இது கதை காதல் கதையா, ஜமா உரிமைக் கதையா என்கிற தேவையற்ற குழப்பம் இன்னொரு மைனஸ். ஜமாதான் கதை என்றான பிறகு, கதை கொள்ளும் வேகம் முன்பகுதியில் இல்லை.

ஹீரோவாக வரும் நடிகர் ( இயக்குநரே நடித்திருக்கிறார்) உயிரைக் கொடுத்து நடிக்கிறார் என்றாலும், பல காட்சிகளில் ஏனோ ஒட்டவில்லை. குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்று ஆகிவிட்டது. இது மிகப்பெரிய சறுக்கல்.

சேத்தன் மிக அருமையாக நடித்திருக்கிறார். ஆனாலும் நாசரோ பிரகாஷ்ராஜோ நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல் ஹீரோவின் அப்பா கேரக்டருக்கும் இன்னொரு நல்ல நடிகரை தேர்ந்திருக்கவேண்டும். இந்த மூன்று விஷயத்தில் நடந்ததுதான் படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு போகாமல் கைவிட்டு விட்டது.

துணை நடிகர்களின் இயல்பான நடிப்பு இத்திரைப்படத்துக்கு பெரிய பலம். அவர்களே இப்படத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இத்திரைப்படத்தை அவசியம் பாருங்கள்.

இயக்குநருக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

பிரைமில் கிடைக்கிறது.

Share

கல்கி 2898 AD

கல்கி 2898 AD – மகத்தான படைப்பாக வர வாய்ப்பிருந்தும் அதை இழந்துவிட்ட ஒரு படம். கடைசி 1 மணி நேரம் படம் பிரம்மாண்டம். ஆனால் முதல் இரண்டே கால் மணி நேரம் பேசியே கொன்றுவிட்டார்கள். அதிலும் பிரபாஸ் அறிமுகக் காட்சியை இத்தனை நீளமாக எந்த அறிவார்ந்த இயக்குநரும் யோசித்திருக்க மாட்டார்.

கிட்டத்தட்ட இன்னொரு குருக்ஷேத்திரப் போரை யோசித்ததெல்லாம் நல்ல கற்பனைதான். அமிதாப் கலக்கல். பிரபாஸ் சொதப்பல். மற்ற யாருக்கும் பெரிய வேடமில்லை. முக்கிய ஹீரோவான கிராபிக்ஸ் அட்டகாசம். பல ஆங்கிலத் திரைப்படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும் இந்தியா இதைச் செய்யும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

முதல் பாகத்தை முடித்த இடம் புல்லரிப்பு. இரண்டாம் பாகத்தில் கர்ணன்தான் கதாநாயகன், நல்லவன் என்று எதையாவது சொல்லி நம்மைச் சாகடிக்காமல் இருக்கவேண்டும். குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லுங்கள். மார்வெல் திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

Share

குருவாயூர் அம்பல நடையில்

குருவாயூர் அம்பல நடையில் (M) – இருபது வருடங்களுக்கு முன்பு வந்த நந்தனம் மலையாளிகளால் கொண்டாடப்பட்டது. பிரிதிவிராஜ், நவ்யா நாயரின் முதல் படம். அதைத் தேவையே இல்லாமல் நாஸ்டால்ஜியாவுக்காகத் தொட்டுக்கொண்டு ஒரு காமெடிப் படம். ஒரேடியாக வாய் விட்டுச் சிரிக்கும்படியாகவும் இல்லை. வெறுப்பாகவும் இல்லை. லாஜிக் மறந்துவிட்டுப் பார்த்தால் கொஞ்சம் பிடிக்கலாம். முன்கணிக்கக்கூடிய எளிய திரைக்கதை. ஆனாலும் கடைசி இருபது நிமிடங்கள் சுவாரஸ்யம்தான். யோகிபாபு அறை வாங்கும் காட்சி நல்ல சிரிப்பு.

தமிழ்நாட்டு வசூலுக்காக இதிலும் தமிழ்ப்பாட்டு உண்டு. அழகிய லைலா பாடல்‌ என்பதால் ஒன்றும் ஒட்டவில்லை.‌ ஏன் இளையராஜாவின் பாடல்கள் இதற்குத் தேவை என்று முன்பே மஞ்ஞும்மெல் பாய்ஸுக்குத் தெரிந்திருக்கிறது.

ஒருமுறை பார்க்கலாம். ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

கிருஷ்ண சந்திரன் பேட்டி

கிருஷ்ண சந்திரனின் (மலையாளப்) பேட்டியைப் பார்த்தேன். மனதை மயக்கும் பல தமிழ்ப் பாடல்களை (அள்ளி வெச்ச மல்லிகையே, ஏதோ மோகம்) 80களில் ராஜாவின் இசையில் பாடியவர். பேட்டியில் அருவி போலக் கொட்டுகிறார். மனதில் எவ்விதக் களங்கமும் இல்லாதவர்கள் மட்டுமே இப்படிக் கடகடவெனக் கொட்ட முடியும் என்று தோன்றியது.

யேசுதாஸ் உங்களது வளர்ச்சியைத் தடுத்தாராமே என்று கேட்கப்பட்ட கேள்விக்குச் சொல்கிறார், “இதைக் கேட்கும்போது ஒரு பக்கம் சிரிப்பும் இன்னொரு பக்கம் கோபமும் வருகிறது. காலையில் 7 மணிக்கு யேசுதாஸ் படி இறங்கினால், இரவாகி வீட்டுக்கு வரும் முன்பு ஒரு நாளில் 14 பாடல்கள் வரை பாடுவார். நான் பிஸியாக இருந்தபோது 4 பாடல்கள் வரை ஒரு நாளில் பாடி இருக்கிறேன். அதுவே எத்தனை அழுத்தமான வேலை என்று எனக்குத் தெரியும். அப்படி இருக்க இன்னொருவருக்கு எதிராக சதி செய்ய யேசுதாஸுக்கு எங்கே நேரம்? யேசுதாஸை நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும் அவர் எத்தனை நல்ல நேர்மையான மனிதர் என்று” என அடுக்கிக்கொண்டே போகிறார். கிருஷ்ண சந்திரன் பாட வரும் முன்பே யேசுதாஸ் மலையாளிகளின் கான கந்தர்வனாகிவிட்டார். கிருஷ்ண சந்திரன் சினிமாவில் பாடுவதற்கு முன்பே யேசுதாஸுக்கு நேரடிப் பழக்கம். யேசுதாஸின் கச்சேரிகளில் தம்புரா கூட ஒரு முறை வாசித்திருக்கிறாராம்.

திரையுலகம் எப்படி காஸிப்புகளில் மூழ்கித் திளைக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். என்ன பிரச்சினை என்றால், அத்தனையுமே காஸிப் என்று ஒதுக்கிவிடவும் முடியாது என்பதுதான்.

80களின் பிற்பகுதியில் மனோ பிரபலமாகப் பாடத் தொடங்கிய பின்பு, குமுதம் இதழில் காஸிப்பாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அத்தனை வாய்ப்பும் மனோவுக்குப் போவதால் எஸ்பிபி மனோ மேல் கடுப்பில் இருக்கிறார் என்று. எஸ்பிபி மறைந்தபோது மோட்ச தீபம் ஏற்றினார் மனோ.

Share

Shakhahaari – Kannada Movie

Shakhahaari (K) – சைவம் என்று பொருள். நல்ல பெயர். ஆஹா ஓஹோ‌ படமல்ல. ஆனால் பார்க்கலாம். கன்னடத்தில் மேக்கிங் நன்றாக இருக்கும் படங்கள் குறைவு. இப்படம் நல்ல மேக்கிங். கதை சுமார்தான். ஆனால் ரங்காயன ரகுவுக்காகவும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவுக்காகவும் நிச்சயம் பார்க்கவேண்டும். இருவருமே தேர்ந்த நடிகர்கள். அதிலும் ரங்காயன ரகு அருமை. கடைசி 15 நிமிடங்கள் இருவர் நடிப்பும் சூப்பர். இயக்குநருக்கு முதல்‌படம். நம்பிக்கை தருகிறார்.

Share