Archive for புத்தகப் பார்வை

ஈழம் அமையும் – புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஈழம் அமையும்’ புத்தகத்தை வாசித்தேன். சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகமாகவே இதை நினைக்கிறேன். இதிலுள்ள அரசியல் என் நிலைப்பாடுகளுக்கு எல்லா வகையிலும் எதிரானதுதான் என்றாலும், இது எழுதப்பட்டிருக்கும் விதம் இந்நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.

cover_104771
ஈழம் அமையும், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம்
அச்சுப் புத்தகம் ரூ 250, மின் புத்தகம் ரூ 100
அச்சுப்புத்தகத்தை வாங்க: NHM site | Flipkart | Amazon
மின்புத்தகத்தை வாங்க: DailyHunt (NewsHunt)

ஈழம் அமையும் என்ற தலைப்பிலேயே நாம் எத்தகைய நிலைப்பாட்டுள்ள நூலை வாசிக்கப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்டுவிடலாம். எனவே மிக எளிதான முன் தயாரிப்புகளுடன் இந்நூலை அணுகமுடிகிறது. ஆனால் ‘ஈழம் அமையும்’ என்று தலைப்பிருந்தாலும், இந்நூல் 99% பேசுவது எப்படி விடுதலைப்புலிகளும் அப்பாவி ஈழத்தமிழ் பொதுமக்களும் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பதையே. ஈழம் எப்படி அமையும் என்பதற்கு இந்நூல் அரசியல் ரீதியாகவோ செயல்பாட்டு ரீதியாகவோ எவ்வித தீர்வையும் சொல்லவில்லை. இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் தீர்வு, இந்நூலின் கனத்துடன் ஒப்பிடுகையில் இதை வாசிக்கும், இக்கொள்கையையொத்த மனமுடையவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும். ஆம், அரவிந்தர் அருளில் ஒருநாள் ஈழம் அமையும் என்கிறார்.

ஒரு தமிழ்நாட்டுத் தமிழனாக உண்மையில் தனி ஈழம் அமைகிறதா இல்லையா என்பதில் எனக்கு எவ்வித தீவிரக் கருத்தும் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் உடல்சார்ந்தோ சுதந்திரம் சார்ந்தோ நான் எந்தவொரு இன்னலையும் அனுபவிக்கவில்லை. மிகச் சாதாரண ஒரு சுயநலமியாகவும் நான் இருக்கலாம். ஆனால் அங்கே நடக்கும் இனப்படுகொலை நிச்சயம் மனத்தை உலுக்கியது என்பதில் மாற்றமில்லை. ஒருவகையில் இப்பார்வை இந்தியாவின் பார்வைதான். என் பார்வை இந்தியாவின் பார்வையாகத்தான் இருக்க முடியும். என் போலவே பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களும் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். மிகக் குறைவானவர்களே உணர்ச்சிபொங்க இந்த அரசியலை அணுகுகிறார்கள் என்பது என் எண்ணம்.

இதில் மிக முக்கியமான விஷயம், விடுதலைப் புலிகளையும் அப்பாவி ஈழத் தமிழர்களையும் பிரித்துக்கொள்வது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், எனவே அவர்கள் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களை சாக்காக வைத்து பொதுமக்களைக் கொல்வது என்பது ஏற்புடையதல்ல. இங்கேதான் பெரிய அரசியலை இருபக்கமும் நாம் பார்க்கலாம். ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்துக்கொள்ளாதவாறு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்களை ஈழத்தமிழர்களின் எதிரிகளாகச் சித்தரிப்பார்கள். இந்த சித்தரிப்பு ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்பதுதான் இன்றைய நிலை.

இப்புத்தகம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் விடுதலைப்புலிகளையும் ஈழப் பொதுமக்களையும் எவ்விதத்திலும் பிரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. எங்கெல்லாம் விடுதலைப்புலிகள் பற்றிய குறிப்புகள் வருகின்றனவோ அதை ஒட்டியே ஈழத்தமிழர்கள் பற்றிய குறிப்புகள் மிகக் கவனமாகச் சொல்லப்படுகின்றன. எவ்வித அரசியலும் இன்றிப் இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அவர்களறியாமலேயே இதில் விழுந்துவிடுவார்கள்.

இப்புத்தகம் முன்வைக்க வரும் மிகமுக்கியமான ஒரு விஷயம், விடுதலைப்புலிகளின் அழித்தொழிப்புக்கு, எனவே ஈழத்தமிழர்களின் ஒழிப்புக்கு மிக முக்கியக் காரணம் இந்தியாதான் என்பது. தொடக்கம் முதல் புத்தகத்தின் இறுதிவரை இந்திய வெறுப்பு இலங்கையின் சிங்கள பேரினவாத அரசின் மீதான வெறுப்புக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக ஆசிரியரின் கொள்கைக்கு வலுவூட்டும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளது. அத்தனை ஆதாரங்களின் அடிப்படையும் ஒன்றுதான். புவிசார்நலனுக்காக இப்போரை இந்தியா நடத்தியது என்பதுதான் அது. இந்தியாவுக்குப் போட்டியாக சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இப்போருக்கு ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக உதவின என்றும் சொல்லப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்த உலகங்களின் முக்கிய நாடுகளும் விடுதலைப்புலிகளை எனவே ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டினார்கள் என்கிறார் ஆசிரியர் அய்யநாதன்.

மறந்தும்கூட ஒரு வார்த்தைகூட விடுதலைப்புலிகளின் மீதான விமர்சனத்தை வைக்கவில்லை. விடுதலைப்புலிகள் சமாதானத்துக்குத் தயாராக இருந்தார்கள் என்பதை மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு ஆதாரங்களுடன் சொல்லும்போது, விடுதலைப்புலிகள் காந்திய இயக்கம்தானோ, நமக்குத்தான் உண்மை புரியாமல் போனதோ என்றும் குழப்பமே ஏற்பட்டுவிடுகிறது. அதிலும் விடுதலைப்புலிகள் சுனாமியின்போது எப்படி சிங்களவர்களுக்கும் உதவினார்கள் என்று மறுபடி மறுபடி சொல்லும்போது, இது ஒன்றைத்தவிர விடுதலைப்புலிகள் சிங்களவர்களுக்கு எப்போதும் உதவியதில்லையோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

இந்தியாவின் பிரதமர்களின் இந்திரா காந்தி மட்டுமே தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக உண்மையாக நடந்துகொண்டார் என்று சொல்லும் இந்நூல், இந்தியாவின் மற்ற எல்லா பிரதமர்களையும் ஒரே தட்டில் வைக்கிறது – வாஜ்பாய் உட்பட. இன்று ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில் பேசிய வைகோ இக்கருத்தை மறுத்து வாஜ்பாய்க்கே தெரியாமல் அதிகாரிகளின் லாபியால்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலை இந்திய அரசால் அச்சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார். இந்திரா காந்தியின் ஈழப்பாசத்துக்குக் காரணம் கூட, இலங்கை அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததுதான் என்றும் அய்யநாதன் இந்நூலில் சொல்கிறார்.

இந்நூலின் முக்கியத்துவம் என்பது – மிக வரிசையாக அத்தனை நிகழ்வுகளும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளன. மிகத் தெளிவான எழுத்துநடை. ஆதாரங்களுக்கு இடையேயான புள்ளிகள் மிகத் தெளிவான தர்க்கத்தால் இணைக்கப்பட்டுள்ளன. தன் கொள்கை நிலைப்பாட்டில் இருந்துகொண்டு எப்படி ஒரு சிறந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு கையேடு. அதே சமயம் இந்நூல் சறுக்கும் இடங்களைப் பார்க்கலாம்.

முதல் குறை என்பது, கூறியதைப் பலமுறை மீண்டும் மீண்டும் கூறுவது. ஒருகட்டத்தில் சலிப்பேற்பட்டுவிடுகிறது.

இன்னொருகுறை, அய்யநாதனின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிர்நிலைப்பாட்டுடையவர்களுக்கு இந்நூல் எப்படி உதவும் என்பது. இதை மிகக் குழப்பான ஒரு மொழியில், புத்தகம் படிக்காதவர்களுக்குப் புரியாத வகையில், ஜென்ராம் இன்று ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் குறிப்பிட்டார். இந்நூலை இக்கொள்கையை ஏற்காதவர்களும் கொண்டாடமுடியும் என்பதுதான் அவர் சொல்ல வந்தது. அதை என் உதாரணம் மூலமே விளக்குகிறேன்.

விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியவர்களே என்பதே என் நிலைப்பாடு. அதை இந்தியா செய்து முடித்தது என்றால் அதை நான் இந்தியாவின், காங்கிரஸின், அதற்கு உதவிய எதிர்க்கட்சிகளின், அண்டைநாடுகளின் சாதனையாகவே பார்ப்பேன். இந்நூலே அதற்கான தரவாக அமையும். இதைத்தான் ஜென்ராம் சொல்லவந்தார் என்று நினைக்கிறேன். அப்படித்தான் இந்நூல் உள்ளது. விடுதலைப்புலிகள் ஒழிக்கப்படும்போது பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பதற்கான உறுதியை இந்திய அரசு பெறவில்லை, அப்படிக் கேட்டுப் பெறும் வகையில் இந்திய அரசு இல்லை அல்லது அதை முக்கியமாக இந்திய அரசு நினைக்கவில்லை, அல்லது ஈழத்தமிழ்ப்பொதுமக்கள் ஒழிந்தாலும் பரவாயில்லை புலிகள் ஒழியட்டும் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம் என்பதில் எது ஒன்று உண்மையென்றாலும் அது இந்தியாவின் பக்கம் நிகழ்ந்த பெரிய சறுக்கல்தான். அதுவும் மீண்டும் சரிசெய்யப்பட இயலாத ஒரு தோல்வி. ஒருவகையில் யோசித்துப் பார்த்தால் இத்தகைய ஒரு பயங்கரவாத ஒழிப்பில் இப்படி நடப்பதுதான் உலகம் முழுக்க நடந்த வரலாறுகளில் இருந்து நாம் தெரிந்துகொள்வது. இப்படிச் சொல்லி எவ்வகையிலும் நான் இதை நியாயப்படுத்தவில்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இப்படித்தான் நடக்கிறது. இந்திய அமைதிப்படையின் மீதான குற்றச்சாட்டுகளிலும் நாம் இதைப் பார்க்கலாம். இதைவிட மிக முக்கியமான எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டுமென்றால் – விடுதலைப்புலிகளின் செயல்பாட்டிலேயே நாம் பார்க்கலாம். அவர்கள் எத்தனை பேரை எதற்காகக் கொன்றார்கள் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். சிறுவர்களை, தமிழ் முஸ்லிம்களை, சக இயக்கத்தவர்களைக் கொன்றார்கள். அதற்கான நியாயங்கள் மெல்ல அத்தரப்பிலிருந்து உருவாகிவரும். இதுவே மிகப்பெரிய பரப்பில் ராணுவத்தரப்பிலும் நடந்துவிடுவது கொடுமைதான்.

இந்நூலின் இன்னொரு சறுக்கல் – இறுதி அத்தியாயங்களில் அய்யநாதன் சொல்லும் ஆதாரமற்ற வம்புகள் பற்றிது. ராஜிவ் காந்தி கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றும், அவரைக் கொல்வதற்கான காரணம் எதுவும் விடுதலைப்புலிகளுக்கு இல்லை என்றும், சர்வதேச சதியில் ராஜிவை ஒழிக்க விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் ஜெயின் கமிஷனை சுட்டிக்காட்டி அய்யநாதன் சொல்கிறார். (புத்தகத்திலிருந்து: ராஜிவ் காந்தியை படுகொலை செய்யச் சர்வதேச அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது; அத்திட்டம் தீட்டியவர்களே ராஜிவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்என்கிற உண்மைகள் எல்லாம் மத்திய அரசு அமைத்த நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் விசாரணை ஆணையத்தில் வெளிவந்தது.) ஆயிரத்தோராவது முறை இந்த வம்பை நாம் படிக்கிறோம். விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்ற ஒருதரப்பிலிருந்து வேறுபட்ட இன்னொரு புலிஆதரவு தரப்பு இது. புலிகள்தான் கொன்றார்கள், ஆனால் சதி அவர்கள் செய்யவில்லை என்பது. அய்யநாதன் ஒருபடி மேலேபோய், புலிகள் கொன்றிருக்க வாய்ப்பில்லையோ என்ற சந்தேகத்துடன் நிச்சயமாக சதியை அவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்கிறார். கருமைக்கும் வெண்மைக்குமிடையேதான் எத்தனை நிறங்கள். சிபிஐ ஏன் சதிக்கான காரணத்தைக் கண்டறியவில்லை என்பதைப் பெரிய விஷயமாக முன்வைக்கிறார் அய்யநாதன்.

இந்திராகாந்தி கொலையில் உள்ள மர்மங்கள், அதில் சோனியாவின் பங்கு என்ன (தாக்கர் ஆணையத்தை முன்வைத்து சொல்கிறார் ஆசிரியர்), நரசிம்மராவ் சந்திராசாமி பங்கு என்ன, லக்குபாய் பதக்கிடம் சந்திராசாமி சொன்னது என்ன, சுப்ரமணியம் சுவாமி திருச்சி வேலுச்சாமியின் கேள்விகளுக்கு எப்படி உளறினார், எப்படி நடுங்கினார் என்றெல்லாம் திண்ணைப் பேச்சுகளில் அலைபாய்கிறது இப்புத்தகம். சுப்ரமணியம் சுவாமிக்கு கொலையில் பங்கிருக்கிறது என்றால் அதே சுப்ரமணியம் சுவாமி சோனியாவுக்குப் பங்கிருப்பதாகச் சொல்கிறாரே, சோனியாவும் மௌனமாக இருக்கிறாரே என்ற கேள்விக்கு ‘அது புரியாத ஒரு புதிர்’ என்று ஓரிடத்தில் நழுவும் அய்யநாதன், இன்னொரு இடத்தில் இப்படிச் சொல்கிறார்: இந்திரா காந்தி படுகொலையில் சோனியாவின் பங்கு பற்றிய உண்மைகளை இந்திய மக்கள் அறியாதிருக்கலாம், ஆனால், இந்திரா காந்தியைச் சதி செய்து வீழ்த்திய அந்த சக்திகளுக்கு தெரியாமல் இருக்குமா? அதனால்தான், சந்திராசாமி, சுப்ரமணியம் சுவாமி ஆகியோரின் முகத்திரைகள் விசாரணை ஆணையங்களில் கிழித்தெறியப்பட்ட பின்னரும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் சோனியா காந்திக்கு இல்லாமல் போனது. இல்லையென்றால், சோனியாவை இன்றுவரை சுப்ரமணியம் சுவாமி மிரட்டிக்கொண்டிருக்கிறாரே, என்ன காரணம்? அதன் பின்னணி என்ன?” இவ்வாறாக ஒரு பட்டியலை இட்டுவிட்டு, சோனியா தன் கணவர் ராஜிவின் கொலைக்காக விடுதலைப்புலிகளை ஒழிக்கவில்லை, தன் மீதான பழியை மறைக்கவே விடுதலைப்புலிகளை ஒழிக்கும் இலங்கையின் போருக்கு உதவியுள்ளார் என்று முடிக்கிறார் அய்யநாதன்.

இதைவிட இன்னொரு வம்பு என்னவென்றால், சிவராசன் எப்போதோ புலிகள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் இவர்களையெல்லாம் வழிநடத்துவதெல்லாம் சந்திராசாமியும் சுப்ரமணியம் சுவாமியும்தான் என்று பெங்களூர் ரங்கநாத் (ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர், சிவராசன், சுபா உள்ளிட்டவர்களுக்கு பெங்களூருவில் தங்குவதற்கு வீட்டை ஏற்பாடு செய்தவர்) சொன்னதையும் இந்நூலில் காணலாம்! ராஜிவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமியைப் பற்றி திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளதையும், ரகோத்தமன் அவரது ‘ராஜிவ்கொலை – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் மரகதம் சந்திரசேகர் பற்றியும் மறைக்கப்பட்ட வீடியோ பற்றியெல்லாம் கூறும் அய்யநாதன், திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைப் பற்றியும்  வைகோ ஏன் சாட்சியாக சேர்க்கப்பட்டார், ஏன் ரகோத்தமனால் விசாரிக்கப்படவில்லை, சிவராசனுக்கு உதவியது சீனிவாசய்யா என்ற நபர் வைகோவின் சகோதர் ரவிச்சந்திரனாக இருக்கலாம் என்றெல்லாம் ரகோத்தமன் சொல்லியிருப்பதை எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை ஒழிக்க ராஜபக்ஷே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கருணாநிதியும் உதவினார் என்று பல இடங்களில் பதிவு செய்கிறார். அதாவது கருணாநிதி மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதம் முன்னரே திட்டமிடப்பட்டது என்றும் அதை தில்லி வட்டாரங்கள் அறிந்திருந்தன என்றும் சொல்கிறார். 2ஜி வழக்கின் கோப்புகளைக் காட்டி கருணாநிதியை எம்.கே.நாராயணன் மிரட்டினார் என்றும் சொல்கிறார்.

இந்நூலின் மிக மோசமான அத்தியாயம், கேரளா மாஃபியா என்று எழுதப்பட்டிருக்கும் அத்தியாயமே. உண்மையில் இந்திய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயலாற்றிய பலரில் முக்கியமான மலையாளிகளைப் பொறுக்கியெடுத்து (எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், டி.கே.ஏ.நாயர், சதீஷ் நம்பியார், விஜய் நம்பியார், நிருபமா மேனன் ராவ்) கேரள மாஃபியாவே விடுதலைப்புலிகளின் எனவே ஈழத்தமிழர்களின் இனஒழிப்புக்கு காரணம் என்கிறார். ஏன் ‘கேரளா மாஃபியா’ ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள் என்பதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து அய்யநாதன் சொல்கிறார் பாருங்கள்! இந்நூலை ஒட்டுமொத்தமாகத் தகர்க்கும் அத்தியாயம் அது. ஹனி டிராப்பிங் என்பதை வைத்து ஒரு மலையாளியை விடுதலைப்புலிகள் மாட்டிவிட்துதான் ‘கேரள மாஃபியா’வின் ஒட்டுமொத்த வெறுப்புக்கு காரணமாம்! முக்கியமான புத்தகம் கிசுகிசு கட்டுரைக்கு இணையாக இறங்கிவிடும் இடம் இது. உண்மையில் அங்கே கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லாமல் வேறு யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செயல்பட்டிருப்பார்கள். 2-10-15 அன்று நடந்த ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் ‘கேரள மாஃபியா’வை மறுத்த ஒரே ஜீவன் ஜென்ராம் மட்டுமே. மிக மோசமான வன்மத்தை வெளிப்படுத்தும் இப்புத்தகத்தின் ஒரு மிகப்பெரிய கறை என்றே சொல்லவேண்டும். மிகத்தெளிவாக இந்திய வெறுப்பு, விடுதலைப்புலி ஆதரவு என்ற மடையை தமிழ்த்தேசியத்தின்பால் திருப்பும் உத்தி இது என்றுதான் தோன்றுகிறது.

புத்தகத்தின் முதல் பகுதி மிக நேர்த்தியான (கூறியது கூறல் ரொம்பவே அதிகம் என்றாலும்) ஆய்வுநூல் போன்று தோற்றம் கொள்ள, பிற்பகுதி வெற்று வம்புகளில் உழன்றுவிட்டது. இதைத்தான் ஜென்ராம் (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) நாசூக்காக பத்திரிகையாளர் அய்யநாதன் என்றும் அரசியல்வாதி அய்யநாதன் என்றும் பிரித்துக்கூறினார். கூறிவிட்டு, ஆனாலும் பத்திரிகையாளர் அய்யநாதனே முழுக்க வெளிப்பட்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டார். சபை நாகரிகம் கருதி இருக்கலாம் என எடுத்துக்கொண்டேன்.

இந்நூலின் கடைசி அத்தியாயமே மிக முக்கியமானது. பலருக்கு அதிர்ச்சிகரமானது. அதில் நாம் புரிந்துகொள்ள பல விஷயங்கள் உள்ளன. அரவிந்தரின் அருளால் ஈழம் அமையும் என்கிறார் அய்யநாதன். இதை வைகோ (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) மிக நாசூக்காகக் குறிப்பிட்டு, ஆங்கிலத்தில் ஹிந்தியில் மொழிபெயர்க்கும்போது கொஞ்சம் பார்த்து செய்ங்க என்று கேட்டுக்கொண்டார். அரவிந்தரின் அருளில் ஈழம் அமையும் என்றால் அத்தனை பிரச்சினை எல்லாருக்கும். விடுதலை பத்திரிகையில் இந்நூலைக் கைகழுவியே விட்டார்கள். ஈவெரா வகுத்துக்கொடுத்த பாதையில் எதையும் ஒற்றைவரியில்தான் இவர்களால் புரிந்துகொள்ளமுடியும் போல. நூல் முழுக்க மாங்குமாங்கென ஒருவர் தொகுத்து ஒரு தரப்பை முன்வைத்திருக்கிறார். கடைசியில் அவரது நம்பிக்கையின்பாற்பட்ட ஒன்றைச் சொல்கிறார். உடனே நூலை நிகாகரிக்கிறார்கள். ‘அரவிந்தரின் அருளில் அமையும் என்றால் அது இஸ்லாமிய கிறித்துவ நாடாக இருக்க வாய்ப்பில்லை, ஹிந்து நாடாக இருந்துவிடுமோ’ என்று பயந்து இந்நூலை நிராகரிக்கிறார்களோ என்னவோ யார் கண்டது.

Share

வெண்முகில் நகரம்

ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு நாவல்களின் ஒட்டுமொத்த சித்திரம் எவ்வகையிலும் எதனுடனும் நிகரற்றது. என்னால் இதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. இதை ஒரு மனிதன் எழுதினான் என்பதே காலத்தில் மிகப்பெரிய ஆச்சரியமாக நிச்சயம் நிலைகொள்ளும். எழுதிச் செல்லும் இறையின் கைகளே கருவியைத் தேர்ந்தெடுக்கின்றன என்று தத்துவத்தின் வழியே ஜெயமோகன் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுவார்.

இதை எத்தனை பேர் உணர்ந்துகொண்டு படிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரும் படிக்கவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்நாவலைப் படித்துமுடித்த இந்நேரத்தில் இந்நாவல் தந்த நிறைவும் ஆச்சரியமும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. உள்ளமெல்லாம் வெண்முகில் நகரத்தில் பாத்திரங்கள் நிறைத்திருக்கின்றன.

சாத்யகியும் பூர்சிவரஸ்ஸும் கொண்ட எழுச்சி மிக்க சித்திரம் நான் கொஞ்சம் எதிர்பார்க்காதது. அதுவும் இறுதியில் அவர்களை சந்திக்க வைத்ததெல்லாம் நான் கொஞ்சம் கூட யோசிக்காதது. களத்தில் இரண்டு பேரும் முட்டிக்கொண்டு சாத்யகியால் கொல்லப்படப்போகும் பூர்சிவரஸ், முன்னர் ஒருமுறை சாத்யகியைக் கட்டித் தழுவியிருக்கிறான் என்பதே, சந்தேகமே அன்றி அசையச்செய்யும் உருவாக்கமே. இவையேதான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்றாலும், யாரென்றே தெரியாமல் போயிருக்கவேண்டிய இருவர் வரலாற்றின் சித்திரத்தில் இப்படி நிற்கும் காட்சி தரும் நிறைவை, ஒரு வகை அதிர்ச்சியை என்னால் சொல்ல முடியவில்லை.

திருதராஷ்டிரன் முன்னர் பாண்டவ கௌரவர்கள் கிருஷ்ணன் முன்னிலையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி, உணர்ச்சிமயத்தின் உச்சம்.

முதற்கனல் தொடங்கி மழைப்பாடல் பிரயாகை எனப் பல்வேறு நாவல்களில் வரும் காட்சிகள் இந்நாவலில் சிறிய நீட்சியென பேசப்படுவதும், அன்றைய நிகழ்வுகள் இன்றைய புராணமாக எப்படி மையத்தைத் தாண்டிய அல்லது மையத்தை முற்றிலுமே இழந்துவிட்ட காவியமாக நிலைபெறுகிறது என்றெல்லாம் தொடர்ச்சியாகப் பார்ப்பதும் மிகவும் அற்புதமாகவே இருக்கிறது. ஏதோ நாம் காலத்தில் மகாபாரதத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது போல.

என்னளவில் பிரயாகையில் கொஞ்சம் நலிந்திருந்த நகைச்சுவை சார்ந்த பகுதிகள் இந்நாவலில் – மிக்குறைந்த அளவே வந்தாலும் – மிகக் கச்சிதமாக உள்ளன. அதிலும் த்ரௌபதி ‘ஆறாவது இளவரசனைப் பார்க்கிறேன் எனக்குத்தான்’ என்று சொல்லும் இடத்தில் – ஜெயமோகன் எழுதுவது போல – வெடித்துச் சிரித்துவிட்டேன்.

கிருஷ்ணரும் பலராமரும் வருவதற்காக ஏற்பாடு செய்யும் நூற்றுவனின் அத்தியாயம் முழுக்க நல்ல நகைச்சுவை. இதுவும் ஒரு காவியத்தின் முக்கியமான சுவையே என்று ஜெயமோகன் முன்பிருந்தே சொல்லி வருவதை நினைத்துக்கொண்டேன்.

பல வகைகளில் அடுத்து வரப்போகும் களங்களுக்கான காட்சிகளை மிக ஆழமாகத் திறந்து வைத்திருக்கிறது வெண்முகில் நகரம். பால்ஹிக நாட்டையும், சிபி நாட்டையும் விவிரித்த விதமெல்லாம் அட்டகாசம். படைப்பூக்கத்தில் உச்சத்தில் இப்படி ஒருவரால் தொடர்ந்து நிற்கமுடியும் என்பதே அசரடிக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் ஜெயமோகனை இளையராஜாவோடு ஒப்பிட்டுக்கொள்கிறேன். ஏனென்றே தெரியவில்லை. ஆனால் இப்படி அடிக்கடி ஆகிவிடுகிறது.

ஜெயமோகன் இதை எழுதும் காலத்தில் நான் அதை வாசிக்க நேர்ந்த அந்த இறைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. வேறென்ன என்று சொல்லத் தெரியவில்லை.

Share

எங் கதெ

எங் கதெ என்னும் கதையைப் படித்தேன். ஆம், இது முதலில் நாவலல்ல. சிறிய கதை. சிலாகிக்க ஒன்றுமே இல்லாத மிகச் சாதாரணமான கதை. பலமுறை பல விதங்களில் சலிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் முறை மீறிய உறவின் இன்னொரு புலம்பல். சரியான வார்த்தை, புலம்பல் என்பதுதான். கதையின் நாயகன் முதலில் இருந்து கடைசி வரை புலம்பிக்கொண்டே இருக்கிறான். ஒரே புலம்பலை எத்தனை முறை கேட்பது? கதை நெடுகிலும் முறை மீறிய உறவை வித விதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லும் மாந்தர்கள் வந்து போகிறார்கள். “காப்பி குடிக்கலாம், கடையை வாங்கலாமா” ரக உதாரணங்கள். சகிக்கவில்லை. ஆண் பெண் உறவின் சிக்கலின் எந்த ஒரு அம்சத்தையும் நுணுக்கமாக சித்திரிக்க முடியாததாலேயே, மிகத் தெளிவாக நாயகன் தன்மொழியில் சொல்லிச் செல்கிறார் எழுத்தாளர் இமையம். கதை முழுக்க பெண்களைத் திட்டித் தீர்க்கும் ஆண் வன்மம். அதற்கு ஒரு சமன்குரல்கூட கிடையாது. கள்ள உறவு, வெறி, கழிவிரக்கம், கொலை செய்ய முயற்சி, பின்பு திடீர் ஞானோதயம். இத்தகைய புத்தம் புதிய கருத்துடன் இக்கதையைப் படிப்பேன் என நினைத்தும் பார்க்கவில்லை! நாவலின் மொழி பல இடங்களில் வைரமுத்துவை நினைவூட்டுகிறது. தேவையே இன்றி வரும் திடீர் கவிதைத்தனமான வரிகளுக்காகவே நாயகனை கவிதை வாசிப்பவன் என்று ஆக்கிவைத்துவிட்டார் புத்திசாலி எழுத்தாளர். நான் ரசித்த ஒரே பகுதி, நாயகனின் தங்கைகள் அவன் மேல் காட்டும் அன்பை விவரிக்கும் வரிகளை மட்டுமே. மற்றபடி இந்நாவலில் ஒன்றுமே இல்லை.

Share

ஜனவரி 2015 புத்தக வாசிப்பு

இந்த வருடம் 50 புத்தகங்கள் படிக்க இலக்கு. முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

முதற்கனல் வாசித்து முடித்தேன். விஷ்ணுபுரத்தை இனி ஜெயமோகன் விஞ்ச முடியாது என்ற என் மனப்பதிவு பொய்யானது. முதற்கனலின் ஆழமும் செறிவும் வார்த்தையில் சொல்லமுடியாதவை. முதற்கனல் என்பதை அம்பையின் கனலாகக் கொள்ளலாம். ஆனால் அதை காமத்தின் கனலாகக் கொண்டே நான் இந்நாவலை வாசித்தேன். இப்படி ஓர் ஆழமான விவரிப்பு தமிழ்நாவல்களில் காமத்தைச் சார்ந்து நிகழ்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. அப்படி ஒரு விவரிப்பு. ஒவ்வொரு விவரிப்பும் ஒவ்வொரு வகை. அதேபோல் மகாபாரதத்தின் பல்வேறு நம்பிக்கைகளை ஜெயமோகன் விவரிக்கும் விதம் சொல்லில் அடக்கமுடியாதது. மிகப்பெரிய தோற்றம்கொண்டு மகாபாரதத்தின் நோக்கை ஒரு வரலாற்று நோக்கிலும் புனைவு நோக்கிலும் அவர் கண்டு அதை விவரிக்கும் விதம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. இந்த எண்ணம் எனக்குத் தோன்றும்பொதெல்லாம் ஒருவித பயத்தோடுதான் நாவலைப் படித்தேன். மனிதக் கற்பனைளுக்கு அப்பாற்பட்ட ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது எனக்கு உறுதிப்பட்டது. முதற்கனல் ஆழத்திலும் செறிவிலும் நிகரற்றது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஜெயமோகன் எழுத்தில் கொள்ளும் விரிவு ஆச்சரியமூட்டுகிறது. அம்பை பேருருவம் கொண்டு எழுகிறாள் என்றால் சிகண்டி அசரடிக்கிறான். சிகண்டிக்கும் அம்பைக்குமான பித்து நிலையை ஜெயமோகன் விவரிக்கும் இடமெல்லாம் நான் என் வசமே இல்லை. அம்பை பீஷ்மரை ஏற்றுக்கொள்ள முடிவெடுக்கும் அத்தியாயம் ஜெயமோகனின் எழுத்து புத்திசாலித்தனத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும். இப்படி பல பகுதிகள். 

முதற்கனல் தமிழ்நாவல்களின் உச்சங்களில் ஒன்று.

 

 

THE DRAMATIC DECADE : The Indira Gandhi YearsTHE DRAMATIC DECADE : The Indira Gandhi Years by Pranab Mukherje
My rating: 3 of 5 stars

A flash back of a part our history in a congress man view! Pranab Mukherje tried a lot to prove if not the emergency was imposed by Indra Gandhi, how India might have been affected badly in so many ways with so many statistics. He describes the bravery of Indra Gandhi with so many examples and how she bounced back after so many set backs she faced. He was like a shadow of her and he proudly admits in such a way that that was his great achievement. The formation of Bangladesh has been nicely brought out in this book, however, that is also in a congress man view.

Worth reading.

 

 

View all my reviews

இலங்கை பிளந்து கிடக்கும் தீவுஇலங்கை பிளந்து கிடக்கும் தீவு by சமந்த் சுப்ரமணியன்
My rating: 4 of 5 stars

சமீபத்தில் வாசித்த சிறந்த புத்தகம்.

இலங்கையில் நடந்த போரில் மக்களின் மனநிலை என்ன என்பதை பல்வேறு மக்களிடம் பேசி அதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் சமந்த் சுப்பிரமணியன். இப்புத்தகத்தில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களில் இருந்து, மலையகத் தமிழர்களின் குரல் உட்பட, புலி ஆதரவாளர்களின் குரலும் ஒலித்துள்ளது. சிங்கள அரசின் அட்டூழியங்களையும் புலிகளின் தீவிரவாத அட்டூழியங்களையும் எவ்வித சாய்வும் இன்றி பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

சிங்கள அரசு பயங்கரவாதத்தின் பல்வேறு மாதிரிகளை இப்புத்தகத்தில் படிக்கும்போது ஒரு திகில் திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

தமிழர்களுக்காகத் தொடங்கி தமிழர்களையே ஒழித்துக்கட்டத் தொடங்கிய புலிகளின் குரூரக் கொலைகள் இப்புத்தகத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களை போரின்போது கேடயமாகப் பயன்படுத்தியதை எல்லாம் இப்புத்தகத்தில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்ட அத்தியாயம் நம்மை உலுக்கி எடுக்கிறது.

நிச்சயம் வாசிக்கவேண்டிய புத்தகம். மிக நல்ல மொழிபெயர்ப்பில் தரத்துடன் வெளிவந்துள்ளது.

 

View all my reviews ஆர்யபட்டா [Āryapaṭṭā]ஆர்யபட்டா [Āryapaṭṭā] by சுஜாதா [Sujatha]
My rating: 2 of 5 stars

சுமாரான நாவல். ஒரு கன்னடத் திரைப்படத்துக்காக ரமேஷ் அரவிந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழ்த்திரைப்படமான அந்தநாளை ஒட்டி எழுதப்பட்ட கதை. சுஜாதா இடது கையால் அவசரம் அவசரமாக எழுதியது போலத் தோன்றியது. அந்த நாள் திரைப்படத்தை அப்படியே மீண்டும் எழுத ஏன் சுஜாதா தேவை என்று புரியவில்லை. இதையும் மீறி நாவலில் சுஜாதா வெளிப்பட்ட தருணங்களையெல்லாம் கன்னடத் திரைப்படத்தில் இல்லாமல் ஆக்கியிருந்தார்கள்!

View all my reviews

Share

மாதொருபாகன்

மாதொருபாகன் நாவல் பற்றியும் அதைத் தொடர்ந்த பிரச்சினை பற்றியும் நான் எழுதியுள்ள விமர்சனம் மதிப்புரை.காமில் வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.

சேமிப்புக்காக இங்கே:

மாதொருபாகன்

பெருமாள் முருகன் தான் இனி எதுவும் எழுதப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இது ஒரு தற்காலிக அறிவிப்பாகவே இருக்கவேண்டும். அவர் மீண்டும் எழுதவருவார் என்றே நினைக்கிறேன். பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு அவர் மீண்டும் எழுதவரவேண்டும் என்றே விரும்புகிறேன். பெருமாள் முருகன், ஐ’ம் வெயிட்டிங்.

மாதொருபாகன், பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், ரூ 175

மாதொருபாகனை முன்வைத்து நடக்கும் பிரச்சினைகள் மிகவும் மோசமான முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றன. எங்கோ வெளியான திரைப்படம் ஒன்றுக்கு சென்னை ஸ்தம்பித்தபோது நாம் அதிர்ந்தோம். இன்று திருச்செங்கோடு ஸ்தம்பித்திருக்கிறது. அது அமெரிக்கா, இது திருச்செங்கோடு என்பார்கள். உண்மைதான். ஆனால் என்னளவில் உணர்வளவில் இந்த இரண்டும் ஒன்றே. இது இப்படியே வளர்ந்து நாளை அங்கே செல்லக்கூடும். திருச்செங்கோட்டு மக்களை அந்த நாவல் வசைபாடவில்லை. அது ஒரு புனைவு மட்டுமே. புனைவுக்கும் ஒரு எல்லை உண்டு என்பது சரி. அப்படி அந்த எல்லை மீறப்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல.

புத்தகத்தை எரித்ததும், நீதிமன்றத்துக்குச் சென்றதும் சரியான வழியே. (புத்தகத்தை எரிப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் உகந்தது அல்ல. ஆனால் அது அமைதியான போராட்ட வடிவம் என்றே நினைக்கிறேன்.) ஒரு குழு அல்லது பல குழுக்கள் சேர்ந்து பஞ்சாயத்து செய்வதும், அவர்களுக்காக ஓர் எழுத்தாளர் பின்வாங்குவதும் என்ன விதமான நியாயம்? சில குழுக்கள் சேர்ந்து விஸ்வரூபத்தை மிரட்டியதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? சென்சார் கிடைத்த படத்தை வெளியிட சில குழுக்கள் ஆதரவு தேவை என்பதற்கும், அரசு தடை செய்யாத ஒரு புத்தகத்தை விற்க சில குழுக்களின் ஆதரவு தேவை என்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஜார்ஜ் புஷ் உயிரோடு இருக்கும்போதே, அவரைக் கொலை செய்ததுபோல் திரைப்படம் எடுத்தார்கள். மோடி உயிரோடு இருக்கும்போது இப்படி ஒரு படம் எடுத்தால் என்ன ஆகும் என்று யோசிக்கிறேன். நாம் இத்தனை பின் தங்கி இருக்கத் தேவை இல்லை என்ற ஆதங்கமே எழுகிறது.

பெருமாள் முருகன் நடக்காத ஒன்றை எழுதியிருந்தால், நீதிமன்றத்துக்குச் சென்று அதற்குத் தடை வாங்குவதே சரியான வழி. அதை விட்டுவிட்டு பெருமாள் முருகனை தங்களோடு வீதிக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இப்பிரச்சினை இத்தனை வலுவானதாக மாறியதற்கு ஊடகங்களே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இதே குழுக்கள் இதே ஊடகங்களால் எத்தனை இன்னல்களை அடைந்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் இன்று இவர்கள் இதே ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு அதையே செய்கிறார்கள். பொதுவாக பிராமணர்களின் உயர்சாதி ஆதிக்கத்தை சாடும் இடைசாதிக் குழுக்கள், இன்னொரு வழியில் அதே சாதி ஆதிக்கத்தை அடைய முயலும் வெறிக்கும் இதற்கும் வித்தியாசமில்லை.

இந்தக் குழுக்கள் செய்வது நல்லதற்கல்ல. இது மோசமான முன்னுதாரணமாக அமையும். இன்று பெருமாள் முருகன் என்பதால் இதனைச் செய்து வெற்றி என்று காண்பித்துக்கொள்ள முடிந்தது. நாளையே வேறு ஒரு பதிப்பகத்தில் வேறு ஓர் எழுத்தாளர் எழுதினால் இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. தொடர்ந்து பலர் எழுதினால் என்ன செய்துவிடமுடியும்? ஆரியப் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்ததாகத்தான் இன்றுவரை பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி கருத்தால் எதிர்கொள்கிறோமோ அப்படியே இதை எதிர்கொள்ளவேண்டும்.

சிலர் மிகச் சாதாரணமாகக் கேட்கிறார்கள். பெருமாள் முருகனின் மனைவியோ அம்மாவோ இப்படி செய்தார்களா என்று. இவர்களுக்கு இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாது. இலக்கியத்தை எப்படி வாசிக்கவேண்டும் என்றும் தெரியாது. புனைவு என்றால் மருந்துக்கும் பழக்கமில்லை. ஆனால் பிரச்சினையில் தங்கள் வாயைத் திறக்க முதலில் வந்து நிற்பார்கள். இந்நாவலில் தன் மனைவி குழந்தைக்காக இன்னொருவனுடன் போனதை அறிந்த கணவன், மனம் துடித்து மனைவியை வெறுத்து ‘தேவடியா முண்ட ஏமாத்திட்டியேடி’ என்கிறான். இதை எந்தக் குழுவும், இந்த சிலரும் கணக்கில் கொண்டதாகவே தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் இந்த நாவலை வாசிக்கவில்லை. ஒரு நாவலை இவர்களால் வாசிக்கவே முடியாது. வாசித்தாலும் எழுத்துகளையும் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் மட்டுமே இவர்கள் வாசித்திருப்பார்கள். மனிதர்களை அல்ல.

பெருமாள் முருகன் இந்நாவலுக்கு சரியான ஆதாரத்தை அளிக்கவில்லை என்பது முக்கியமானதுதான். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைப் பற்றிய வரலாற்றை எவ்வித ஆதாரமுமில்லாமல் உருவாக்குவது அந்தக்கால பிரிட்டிஷ் ஆசிரியர்களின் வழிமுறை. இந்தியாவை அவர்கள் கண்டுணர்ந்த விதம் அது. அதை பெருமாள் முருகன் செய்வது ஆச்சரியமே.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் கொண்டாடத்தக்க நாவல் அல்ல. புறக்கணித்தக்க நாவலும் அல்ல. மிக அழகான விவரணைகள் உள்ள நாவல். கிராமம் பற்றியும், குடிக்க இடம்தேடி அலைந்து புதிய புதிய இடங்களைக் கண்டடையும் விவரிப்புகள் அருமை. மண் சார்ந்த எழுத்துகள் மனத்தை அள்ளும். இந்நாவலும் அப்படியே.

குழந்தை இல்லாவிட்டால் ஒரு சமூகம் எப்படி ஒருவரை பேசும் என்பதைப் பற்றிய அனைத்துச் சித்திரிப்புகளும் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. அதிலும் கிராமத்துப் பகுதிகளில் இவற்றை நாம் இன்றும் கேட்கலாம். இந்நாவல் நடப்பதோ கிட்டத்தட்ட 1940களில். அப்போது இன்னும் இது தீவிரமாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இதை ஒட்டியேதான் நாவலின் மிகப்பெரிய பலவீனமும் அமைந்துள்ளது. காளிக்கும் பொன்னாளுக்கும் பிள்ளையில்லை. ஆனால் அவர்கள் உறவில் எந்தக் குறையும் இல்லை. அவர்களது காமம் மிக விரிவாகவே இந்நாவலில் விளக்கப்பட்டுள்ளது. பிள்ளை இல்லாததற்குக் காரணம் காளியா பொன்னாளா என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இன்றும்கூட ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால், பெண்ணுக்குத்தான் குறை இருக்கும் என்று நினைக்கும் சமூகம் நமது சமூகம். அன்று இந்நிலை இன்னும் ஆழமாகவே இருந்திருக்கும். இதனால் இயல்பாகவே காளியின் அம்மா காளியை இரண்டாவது திருமணத்துக்கு வற்புறுத்துகிறாள். பொன்னாளின் அம்மாவுக்கும் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. இதுவரை நாவலில் எல்லாம் சரி. மிக யதார்த்தமாகவே உள்ளது.

ஆனால் திடீரென்று காளியின் அம்மாவும் பொன்னாளின் அம்மாவும் பேசி, பொன்னாளை திருவிழாவின் கடைசி நாளில் இன்னொருவனுடன் கூடி சாமி குழந்தை பெறச் சொல்லி அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார்கள். இது என்ன தர்க்கம்? இவர்கள் இருவரும் காளிக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவெடுத்ததன் காரணமே, பொன்னாளுக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு தோன்றியிருக்கவேண்டும் என்பதுதானே. பின்னர் எப்படி பொன்னாளை இன்னொருவனுடன் கூட அனுப்பிகிறார்கள்? காளிக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் சக்தி இல்லை என்று இவர்களுக்கு மட்டும் தெரியுமா? ஆனால் அப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் நாவலில் சொல்லப்படவில்லை. காம விவரிப்பில் காளிக்கோ பொன்னாளுக்கோ அப்படி தோன்றுவதும் இல்லை. அப்படியே ஒருவேளை காளிக்கு சக்தி இல்லை என்றால், ஏன் அவனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய நினைத்தார்கள்? நாவல் படு மோசமாகத் தோற்கும் இடம் இது.

இன்றளவும் ஒரு பெண் உடல் என்பது ஆணின் சொத்து. அதனால்தான் ஓர் ஆண் ஒரு பெண்ணை இப்படி பாதுகாக்கிறான். தனது குழந்தை என்பது பற்றிய உத்திரவாதம் ஓர் ஆணுக்கு மிகத் தேவையான ஒன்று. அது அவனது வம்சத்தின் ஆணிவேர். இது இன்றளவும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது. இன்றளவும் பொதுப்புத்தியில் ’என் குழந்தை’ என்னும் சொல் தரும் மமதையை விவரிக்கமுடியாது. இது இத்தனை காலூன்றியதற்குப் பின்னால் உள்ள மனப்பதிவு ஒருவேளை ஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது இன்றளவும் அப்படியே நீடித்திருப்பதற்குப் பெண்களும் காரணம் என்பதே என் எண்ணம். தன் கணவனுக்குத் தவிர யாருக்கும் தன்னை தந்ததில்லை என்பதே இன்றைய பெரும்பாலான பெண்களின் உச்ச மகிழ்ச்சி, பெருமை. ஆனால் பொன்னாள் அதை மிக எளிதாகத் தாண்டுவதும், அதையே பொன்னாளின் மாமியாரும் அம்மாவும் சொல்வதும் கடும் அதிர்ச்சி அளித்தது. ஒருவேளை என் கலாசாராம் சார்ந்த ‘பிற்போக்கு’ வாசிப்பின் ஒரு அம்சமாக இது இருந்திருக்கலாம். உண்மையில் பொன்னாள் யாரோ ஒருவனைத் தேடி அலைந்து அவனைப் பார்த்து புன்னகைத்து ஒதுங்கும்போது என்ன இவ என்றுதான் தோன்றியது என்பதை மறைக்க விரும்பவில்லை. ஒருவேளை இந்த அதிர்ச்சி முடிவை நோக்கியே ஒட்டுமொத்த நாவலும் செலுத்தப்பட்டதோ என்றும் தோன்றியது.

க்ளைமாக்ஸை முடிவு செய்துகொண்ட, திரைப்படத்தின் திரைக்கதை நகர்த்துவதுபோல், இப்படித்தான் உச்சகட்டம் இருக்கவேண்டும் என்று பெருமாள் முருகன் முடிவெடுத்துவிட்டு நாவலை எழுதிருக்கிறார் போல. ஆனால் அதற்கான வலுவான தர்க்கங்களை அவர் முன்வைக்கவில்லை.

புள்ளியியல் விவரப் பிழைகள் இருந்தால் அதை நீக்கிவிட்டு அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அடுத்த பதிப்பைக் கொண்டுவந்துவிடலாம். ஆனால் ஒரு நாவலின் உணர்வாதாரமே தர்க்கப் பிழையால் தடுமாறுமானால் அதை திருத்திவிடமுடியாது. வருத்தம் மட்டும் பட்டுக்கொள்ளலாம்.

நாவலில் எல்லா சாதியனரைப் பற்றிய கிண்டலான குறிப்புகள் வருகின்றன. ராஜாஜியைப் பற்றிய ஒற்றை வரிக் கிண்டலும் வருகின்றது. தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பற்றிய அந்தக் கால உயர் / இடைநிலை சாதியினரின் மனச்சித்திரிப்பு அப்படியே இடம்பெற்றுள்ளது. மேல்நிலையாக்கம் பெற்ற கோவில்களைவிட சிறுதெய்வ வழிபாட்டை விதந்தோதும் மனநிலையும் இந்நாவலில் உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவர் வெளிப்படையாக கெட்டவார்த்தை பேசுவதைப் போல, இந்நாவலில் காளியின் சித்தப்பா பேசுகிறார். அதிலும் இரண்டு இடங்கள் இவர் பேசும் ’கெட்ட’ வசனங்கள் புன்னகைக்க வைக்கின்றன.

சாதாரணமாக கடந்துபோயிருக்கவேண்டிய நாவலை வரலாற்றில் இடம்பெற வைத்ததுதான் இந்த சில குழுக்கள் செய்திருக்கும் சாதனை.

– ஹரன் பிரசன்னா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-372-2.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Share

மாதிரிக்கு ஒரு புத்தகக் கண்காட்சி – எஸ்.ஆர்.வி பள்ளி, திருச்சி

திருச்சியில் உள்ள எஸ் ஆர் வி பள்ளியில் சென்ற மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதில் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் முதன்முறையாக நாங்கள் பங்கேற்றோம். இது அப்பள்ளி நடத்தும் 9வது வருடப் புத்தகக் கண்காட்சி. பொதுவாக கிழக்கு சார்பில் கிழக்கு புத்தகங்களை மட்டுமே அங்கே விற்பனைக்கு வைப்போம். மற்ற பதிப்பகங்கள் அவர்களது புத்தகங்களை காட்சிக்கு வைப்பார்கள். இந்தமுறை அப்படி அல்லாமல் டயல் ஃபார் புக்ஸ் சார்பில் அனைத்துப் பதிப்பகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனைக்குக் காட்சிப் படுத்தியிருந்தோம். 

IMG-20141127-WA0000

புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த பள்ளி நிர்வாகம் தந்த ஒத்துழைப்பு அபாரமானது. அப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றித் தனியே சொல்லவேண்டும்.

புத்தக வாசிப்பை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று பலரும் யோசிக்கிறோம். ஒரு கையறு நிலையில்தான் நாம் உறைந்துவிடுகிறோம். எங்கே சென்றாலும் அவ்வாசல் மூடப்பட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இன்றைய நிலையில் புத்தக வாசிப்பை மேம்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளெல்லாம் தடைப்படுகின்றன. எங்கோ தவறு செய்கிறோம், அது எது என்று கண்டறியவோ, அப்படியே கண்டறிந்தாலும் அதை சரி செய்யவோ இயலாத நிலை ஒன்றை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

எல்லோருக்குமே தெரியும், மாணவர்களிடம் இருந்து புத்தக வாசிப்பைத் தொடங்கவேண்டும் என்பது. பதில் நம்மிடையே இருக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்த வழிகள் தெரியவில்லை. ஏனென்றால் அதைச் செய்யும் பொறுமையும் பக்குவமும் இல்லை. அதைச் செய்யவேண்டிய ஆசிரியர்களே புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றித் தெரியாதவர்களாக இருப்பது பெரிய சோகம். அதையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றித் தெரிந்து அதை முன்னெடுக்க நினைத்தால், அடுத்த தடை பெற்றோர்கள் வழியே வருகிறது. பக்கத்துவீட்டு மாணவனோ சொந்தக்காரப் பையனோ அதிகம் மதிப்பெண் பெற்றால், அதைவிட அதிக மதிப்பெண்ணைத் தன் மகன் பெறவேண்டும் என்ற அழுத்தத்தை பெற்றோர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படி பாடப் புத்தகத்தைப் படிக்காமல் வேறு புத்தகங்களைப் படிப்பதால் என்ன பயன் என்று அவர்கள் மிகத் தெளிவாகவே கேள்வி எழுப்புகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இக்குரலை நீங்கள் தொடர்ந்து கேட்கமுடியும். இதைமீறி ஆசிரியர்களால் என்ன செய்துவிடமுடியும்? இப்படி பல இடங்களில் மோதிய பந்து கடைசியில் தஞ்சமடையும் இடம், புத்தக வாசிப்பைப் பிறகு பார்த்துக்கொள்ளாம் என்னும் இடமே.

IMG_20141128_121119

எஸ் ஆர் வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் தன் தொடர் முயற்சியின் காரணமாக, மாதிரி ஒன்றை நமக்கு உருவாக்கிக் காண்பித்துள்ளார். அதை அப்படியே பின்பற்றினாலே, மேலே சொன்ன அத்தனை தடைகளையும் நாம் உடைத்து, மாணவர்களை புத்தக வாசிப்பாளர்களாக மாற்றும் பெரிய சாதனையை சுலபமாகச் செய்யமுடியும். ஒரு பள்ளி தொடர்ந்து 20 ஆண்டுகளில் அதன் மாணவர்களில் பாதி பேரையாவது புத்தக வாசிப்பாளர்களாக மாற்றுமானால், அப்பள்ளி மிகப்பெரிய சமூக சாதனை செய்திருக்கிறது என்றே அர்த்தம். படிக்க சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையில் இது அசுர சாதனை. ஒவ்வொரு பள்ளியும் இதில் பத்தில் ஒரு பங்கைச் செய்தாலே போதும், அடுத்த பத்து ஆண்டுகளில் வரும் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் பெரிய அளவில் ஊக்கம் பெறும். அடுத்த இருபது ஆண்டுகளில் அது ஒரு இயக்கமாகும். அத்தலைமுறை பெற்றோர்களாகும்போது, ஆசிரியர்களும் அவர்களும் இணைந்தே இதைப் பெரிய அளவில் – அவர்கள் அறியாமலேயே – முன்னெடுத்துச் செல்வார்கள். இத்தகைய பெரிய சாதனையை அமைதியாகச் செய்திருக்கிறது எஸ் ஆர் வி பள்ளி.

இந்தக் கண்காட்சிக்கு முன்னர் நான் துளசிதாசன் அவர்களை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். கண்காட்சியின் வெற்றி பற்றி ஐயம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இது சாத்தியமாகுமா என்ற சிறிய சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால் துளசிதான் மிக நம்பிக்கையுடன் பேசினார். துளசிதானின் மிகப்பெரிய பலம் அவரது அபாரமான புத்தக வாசிப்பு. வீட்டில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருப்பதாகச் சொன்னார். துளசிதாசன் வயதொத்தவர்கள் இளமையில் ஒரு வேகத்தில் புத்தகம் வாசிக்கத் துவங்கி, ஒரு நிலையில் தேங்கிவிட்டிருப்பார்கள். ஆனால் இவர் இன்றுவரை தொடர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். எனவே எப்புத்தகங்களை மாணவர்களுக்கு பள்ளி வயதில் படிக்கத் தரவேண்டும், எவற்றைப் படிக்கத் தரக்கூடாது என்பதில் தீர்மானமான கருத்துகள் கொண்டிருக்கிறார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது அவர்களே தேடிப் படிக்கவேண்டிய நூல்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார். இவையே ஒரு நல்ல புத்தக கண்காட்சி இயக்கத்தை உருவாக்க அவருக்கு மூலதனமாக இருந்திருக்கவேண்டும். ஆம், அவர் உருவாக்கி இருப்பது நிச்சயம் ஒரு இயக்கம்தான்.

பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களையும் பெற்றோர்களையும் வரவைக்க மிக எளிமையான வழியைப் பின்பற்றுகிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர் ஆசிரியர் தினம், புத்தகக் கண்காட்சியை ஒட்டி வைக்கப்படுகிறது. இதனால் எல்லாப் பெற்றோரும் நிச்சயம் பள்ளிக்கு வந்தே தீரவேண்டும். இதுவரை நாங்கள் எத்தனையோ பள்ளிகளில் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறோம். அங்கே பெற்றோர்கள் வரவு குறைவாகவே இருக்கும். ஏனென்றால் பெற்றோர்களுக்குப் பல வேலைகள். அதற்கிடையில் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க அவர்களுக்கு நேரமில்லை. அதை, இந்தப் பெற்றோர் ஆசிரியர் தினத்தின் மூலம் எஸ் ஆர் வி பள்ளி எளிதாகத் தாண்டிவிட்டது.

புத்தகக் கண்காட்சியின் முன்பிருந்தே, அதைப் பற்றி தொடர்ந்து மாணவர்களிடம் பேசுவது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு அதைப் பற்றிய செய்திகளை அனுப்புவது, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்புவது என எல்லா வழிகளிலும் புத்தகக் கண்காட்சி பற்றிய ஆர்வம் மாணவர்களிடையேயும் பெற்றவர்களிடையேயும் வளர்க்கப்படுகிறது. பள்ளியில் நடைபெறும் தினசரி வழிபாட்டின்போதும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் சேரும்போது ஒவ்வொரு வருடமும் அவருக்கு ஓர் உண்டியில் தரப்படுகிறது. அம்மாணவர் அந்த உண்டியலை அவர் வீட்டில் ஒரு நூலகம் உருவாக்கப் பயன்படுத்தவேண்டும். வீட்டுக்கு ஒரு நூலகம் என்ற பெயரில் இதை எஸ் ஆர் வி பள்ளி பிரபலப்படுத்தியுள்ளது. புத்தகக் கண்காட்சி வரை சேமிக்கப்படும் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து மாணவர்கள் புத்தகம் வாங்குகிறார்கள். பல மாணவர்கள் தங்கள் உண்டியிலில் இருந்த சில்லறையை எண்ணிக்கொண்டு வந்து எங்களிடம் தந்து புத்தகம் வாங்கியபோது, தனிப்பட்ட முறையில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாணவர்கள் வரிசையில் நின்று புத்தகம் வாங்குகிறார்கள். நான்கு நாள்கள் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வகுப்பின் மாணவர்களை ஆசிரியர்கள் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கிறார்கள். மாணவர்கள் தங்களிடையே, “நான் சச்சின் வாங்கிட்டேன், நீ எங்க வாங்கிருக்க?”, “நான் பஞ்ச தந்திரக் கதை வாங்கிருக்கேன்” என்று பேசிக்கொண்டே புத்தகம் வாங்குவதைப் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

IMG_20141129_113517

மாணவர்கள் தாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை மறுநாள் வகுப்பாசிரியரிடம் தரவேண்டும். எந்த மாணவர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறாரோ அவருக்குப் பாராட்டு உண்டு. அதேபோல் பெற்றோர்கள் வாங்கியிருக்கும் புத்தகங்களை வீட்டில் அடுக்கி, அதைப் புகைப்படம் எடுத்து, வீட்டுக்கு ஒரு நூலகம் என்று பெயரிட்டு வகுப்பாசிரியர்களிடம் தரச்சொல்லியும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். 

வாங்கிய புத்தகங்களை மாணவர்கள் படிப்பது பற்றியும் அதைத் தொடர்ந்து உரையாடுவது பற்றியும் ஆசிரியர்கள் கவனம் கொள்கிறார்கள். அடிக்கடி ஏதேனும் ஒரு முக்கியஸ்தர் அப்பள்ளிக்கு வந்து விரிவுரை ஆற்றுவது வழக்கமாகவே உள்ளது. இப்படி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்த எஸ் ஆர் வி பள்ளியும், அதன் முதல்வர் துளசிதாசனும் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகள் அசரடிக்கின்றன.

மயிலாப்பூரில் மயிலாப்பூர் திருவிழாவில் தெருவில் நாங்கள் புத்தகக் கண்காட்சி நடத்தியிருக்கிறோம். எதிர்பாராத பலர் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். கோவில் அர்ச்சகர் ஒருவர் ஒவ்வொரு நாளும் வரும் காணிக்கையை எடுத்துக்கொண்டு வந்து அவருக்குத் தேவையான புத்தகத்தை வாங்கிச் செல்வார். அவர் தரும் காணிக்கையில் விபூதி ஒட்டியிருக்கும். ரூபாய் தாள்கள் கசங்கி குங்குமத்தோடு வரும். அன்று நான் அடைந்த அதே மகிழ்ச்சியை எஸ் ஆர் வி பள்ளியில் மாணவர்கள் புத்தகம் வாங்கும்போதும் அடைந்தேன். 

IMG_20141127_125442

இன்றைய நிலையில் இப்படி செயல்படும் முதல்வர்களையும், அதை அனுமதித்து சிறப்பாக முன்னெடுக்கும் பள்ளி நிர்வாகத்தையும் பார்ப்பது அரிது. உண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் இதை ஒவ்வொரு வருடமும் செய்யமுடியும். பள்ளி முதல்வர்கள் திடத்துடன் இருந்தால், இதை வழக்கமாக்கிவிடலாம். இதனால் மாணவர்கள் பெறப்போகும் அனுகூலங்கள் சொல்லி மாளாது. அத்தோடு ஒரு சமூக மாற்றத்துக்கான வித்து ஊன்றப்படும். ஆனால் இப்படிச் செய்யும் ஆசிரியர்களும் பள்ளிகளும் மிகக்குறைவே என்ற உண்மை முகத்தில் அறைகிறது. இதைப் படிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு, இதைப் போன்ற புத்தகக் கண்காட்சி நடத்துவதைப் பற்றி ஆலோசனை அளிக்கலாம். எங்கே இருந்தாவது ஒரு மாற்றத்தை நாம் தொடங்கியாகவேண்டும். புத்தக வாசிப்பு அதிகமாகாமல் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் தீவிரமாகச் செய்துவிடமுடியாது என்று நான் நம்புகிறேன். நாம் செய்யப்போகும் எந்த ஒரு செயலுக்கும் நம் புத்தக வாசிப்பு நமக்குப் பின்புலமாக இருந்து பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் என் மனமார்ந்த நன்றியை எஸ் ஆர் வி பள்ளிக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

Share

மாதொரு பாகன் எரிப்பு – கண்டனம்

மாதொரு பாகனுக்கு தடை, புத்தக எரிப்பு எல்லாம் எரிச்சல் தரக்கூடியது. ஜனநாயகத்தன்மை அற்றது. ஆனால் இதை மைலேஜாக எடுத்துக்கொண்டு பலர் தங்களுக்கு புனிதர் இமேஜ் தேடிக்கொள்கிறார்கள். யாரோ 50 பேர் செய்த கலாட்டா ஒட்டுமொத்த ஹிந்துத்துவ இமேஜ் என்றாக்கப்படுகிறது. இதுதான் ஹிந்துத்துவம் என்ற கொள்கை இன்று இவர்களை வைத்திருக்கும் இடம். எங்கே ஹிந்துத்துவம் இன்னும் போய்ச் சேராத ஹிந்துக்களைக் கண்டடைந்துவிடுமோ என்னும் பதற்றம். மோடிக்கும் இப்படி பதறினார்கள். மோடி பிரதமரானார். ஹிந்துத்துவவாதிகள் அமைதியாக இருந்தால் எதிர்ப்பாளர்களே ஹிந்துத்துவத்தை வளர்த்துத் தருவார்கள் இவர்கள். அதில்லாமல் இப்படி புத்தக எரிப்பு, கோட்சே சிலை என்னும் பைத்தியக்காரத்தனத்தைச் செய்துகொண்டிருந்தால் அந்நியப்பட்டுப் போவார்கள். உண்மையில் ஹிந்துத்துவவாதிகளில் அட்ரஸ் இல்லாதவர்களே இதைச் சொல்கிறார்கள். இதை மீடியா பரப்பி ஒருவித மாயையை உருவாக்குகிறது. இதை ஹிந்துத்துவர்கள் உணர்ந்துகொண்டு செயல்படவேண்டும்.

ஔரங்கசீப் பற்றிய கண்காட்சி தடை செய்யப்பட்டபோது அமைதி காத்தவர்களே இன்று மாதொருபாகனுக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஜனநாயகம் வேண்டுபவர்கள் இரண்டையும் எதிர்ப்பவர்களாக இருக்கவேண்டும். மாதொரு பாகனை நான் ஆதரிக்கிறேன்.

Share

அபிலாஷின் வர்க்க விசுவாசம் தொடர்பாக

அபிலாஷ் எழுதியதை முதலில் இங்கே வாசித்துவிடுங்கள். 

https://www.facebook.com/abilash.chandran.98/posts/10203521830711028

//கிழக்கு பதிப்பகம் வெளிப்படையாக தன்னை வியாபார நிறுவனமாய் அறிவித்துக் கொள்கிறது. அவர்களின் தரப்பு சுவாரஸ்யமானது. அவர்களுக்கு ஒரே முனை தான் – வருவாய். பேஸ்புக்கில் அப்பதிப்பகத்தின் ஹரன் பிரசன்னா விலை குறித்து ஒரு கருத்து சொல்கிறார். ஒரு நூலின் விலை பதிப்பகத்தின் தனிப்பட்ட முடிவு அல்லது நிலைப்பாடு சார்ந்தது என்கிறார். இதையும் கவனிக்க வேண்டும். பதிப்பு இன்று ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்ததாக மாறி இருக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு பதிப்பு தரமும் விலையும் உள்ளது. விலையை குறைத்தால் பதிப்பகத்தால் அந்த வர்க்கத்தினருக்கு விசுவாசமாக இருக்க முடியாது. ஒரு பொருளை நாம் அதன் உள்ளடகத்திற்காக மட்டும் அல்ல, விலைக்காகவும் தான் வாங்குகிறோம். அதாவது அதிக விலைக்காகவே அதிக விலை கொடுத்து வாங்குகிறோம்.//

அபிலாஷ் சந்திரனின் வார்த்தை விளையாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும். இவற்றிலெல்லாம் ஆர்வமே இல்லாமல் போனாலும் சொல்லி ஆகவேண்டியுள்ளது.

மிக முக்கியமான விஷயம், ஹரன் பிரசன்னாவின் பதிப்பகத்தின் நிலைப்பாடு என்று சொல்கிறார் அபிலாஷ். இது என் நிலைப்பாடு மட்டுமே. கிழக்கு பதிப்பகத்தின் நிலைப்பாடு அல்ல. ஒருவேளை கிழக்கு பதிப்பகத்தின் நிலைப்பாடு நான் சொல்வதற்கு எதிரானதாகக்கூட இருக்கலாம் அல்லது நான் சொல்வதாகவேகூட இருக்கலாம். எனவே என் கருத்தை என் நிலைப்பாடு என்று மட்டும் வாசிக்கவும். இல்லை, இது கிழக்கு பதிப்பகத்தின் கருத்துதான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல!

அபிலாஷ் அவரது வசதிக்கும் வாய்ப்புக்கும் வாழ்க்கைக்கும் ஏற்றதாய் பதிப்பகத்தின் புத்தகப் பதிப்பித்தலை இரண்டாகப் பிரித்துக்கொள்கிறார். அதாவது அதிகம் விலை வைத்துப் புத்தகம் பதிப்பிடுபவர்கள் இரண்டு பேர், ஒருவர் இலக்கியப் புத்தகப் பதிப்பாளர். இன்னொரு இலக்கியமன்றி வணிகப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர். இலக்கியப் பதிப்பாளரின் வாசகர்கள் 500 பேர் மட்டுமே, எனவே அவர்கள் லாபத்துக்காக வேறு வழியின்றி புத்தக விலையை அதிகம் வைக்கிறார்கள். ஆனால் வணிகப் பதிப்பகங்களுக்கு விற்பனை கொட்டோ கொட்டென்று கொட்டியும் அதிக லாப நோக்கில் விலை அதிகமாக வைக்கிறார்கள், ஏனென்றால் விலை குறைவாக வைத்து குறைவான லாபத்தை அதிக அளவில் பெற்றுச் செயல்படும் வாய்ப்பு இருந்தும், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் விசுவாசம் காரணமாக அப்படிச் செய்கிறார்கள், எனவே மற்ற வர்க்க எதிரிகள்.

இப்படி யோசிக்க ஒன்றுமே தெரியாமல் இருக்கவேண்டும் அல்லது குயுக்தி தெரிந்திருக்கவேண்டும்! அபிலாஷ் சந்திரனின் நிலைப்பாடுகளுக்குக் காரணம், அவர் இயங்கும் வெளியைப் பகைத்துக்கொள்ள முடியாது என்பதோடு, வணிகப் பதிப்பகங்களை வர்க்க விசுவாசப் பதிப்பகம் என்று சொல்வதன் மூலம் அவர்களைத் தனிமைப்படுத்தி விமர்சிக்க நினைப்பது. தன் விசுவாசத்தை மீண்டுமொருமுறையாகத் தெரியவைப்பது.

கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். இலக்கியப் புத்தகங்களின் வாசகர்கள் 500 பேர் என்பதால், அதிக விலைக்குப் புத்தகம் பதிப்பிக்கும் பதிப்பாளர்கள் 500 புத்தகங்களோடு (அல்லது இரண்டு மடங்காக வைத்து ஆயிரம் புத்தகங்களோடு) அக்குறிப்பிட்ட இலக்கியப் புத்தகத்தை அச்சிடுவதை நிறுத்தி விடுகிறார்களா? அல்லது 500க்கும் மேல் புத்தகம் பதிப்பிக்கும்போது, அவர்களது வாசகர்கள் பரப்பு முடிந்துவிட்டது என்பதைக் கருத்தில்கொண்டு, இனி குறைவாக விலை வைப்போம் என்று விலையைக் குறைக்கிறார்களா? முதலில் இந்த ஐநூறு என்பதே வாய்க்கு வந்த ஒரு எண். எனவே இந்தச் செயல்களை எந்த ஒரு இலக்கியப் பதிப்பகமும் செய்யமுடியாது.

அடுத்தது, இலக்கியப் பதிப்பகங்கள் என்பவை வெளியிடும் 100% புத்தகங்களும் தூய இலக்கியப் புத்தகங்கள் அல்ல. அவை ஒவ்வொன்றுக்குள்ளேயே இலக்கிய மதிப்பு கடுமையாக மாறுபடும். பிரமிள் புத்தகத்தைப் பதிப்பிக்கும் ஒரு பதிப்பகம் சுஜாதாவின் புத்தகங்களை பதிப்பிக்கலாம். ஆனால் எந்த ஒரு பதிப்பகமும் வர்க்க விசுவாசத்தை மனத்தில் வைத்து பிரமிளுக்கு ஒரு ரேட்டும் சுஜாதாவுக்கு ஒரு ரேட்டும் வைப்பதில்லை. அப்படியானால் யார் வர்க்க விசுவாசப் பதிப்பகம்? இலக்கியப் பதிப்பகங்கள் என்றுதானே அபிலாஷ் சொல்லவேண்டும்? ஆனால் அவர் இலக்கியப் புத்தகப் பதிப்பகங்களுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிடுகிறார். அதில் அவரும் ஒளிந்துகொள்ள வசதியாக.

இன்னொரு விஷயம், வணிகப் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களில் பல (அல்லது சில) தீவிர இலக்கியப் புத்தகங்கள். (இதற்கு உதாரணம் தேவை என்றால் அள்ளித் தர ஆயத்தமாக இருக்கின்றேன்.) இப்புத்தகங்களுக்கும் வணிகப் புத்தகங்களுக்கும் ஒரே நோக்கிலேயே வணிகப் பதிப்பகங்கள் விலை வைக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் இலக்கியப் புத்தகங்களுக்கு லாபம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்றும் வணிகப் பதிப்பகங்கள் பதிப்பிக்கின்றன என்பதே உண்மை. இலக்கியப் பதிப்பகங்களின் கடுமையான பண நெருக்கடி வணிகப் பதிப்பகங்களுக்கும் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஏற்படுகின்றன.

உண்மையில் வணிகப் பதிப்பகங்களோ இலக்கியப் பதிப்பகங்களோ ஒரு புத்தகத்துக்கு விலையை நிர்ணயிப்பது அதன் செலவுகளின் அடிப்படையில்தான். அதிகம் அச்சிட்டு அதிகம் விற்பனையாகும் புத்தகங்களுக்கு விலையைக் குறைவாக வைப்பார்கள். இலக்கியப் புத்தகம் மிக அதிகம் விற்றால் அவற்றின் விலை குறைவாக வரும். இல்லையென்றால் விலை கூட வரும். இதுவே இலக்கியமற்ற புத்தகங்களுக்கும் பொருந்தும். இந்த இரண்டே விலை வைப்பதற்கான அடிப்படை. இவற்றைத் தவிர வேறு பொதுவான அடிப்படைகள் எங்கேயும் இல்லை. வர்க்க விசுவாசமெல்லாம் தண்ணீருக்குள் முங்கி உயிர் போய்க்கொண்டிருப்பவனுக்கு எவ்வளவு இருக்குமோ அவ்வளவுதான் ஒரு பதிப்பகத்துக்கு இருக்கமுடியும். அபிலாஷின் சிந்தனையெல்லாம் மிகப் பெரிய வர்க்கத் திட்டத்தோடு சில வணிகப் பதிப்பகங்கள் களம் இறங்கி இருப்பதாகவும், ஒரு கம்யூனிஸ ஹீரோ அத்திட்டத்தை உடைப்பதாகவும் இருக்கின்றன. அந்த கம்யூனிஸ ஹீரோ அவரேதான்!

இது போக இன்னொன்று உண்டு. ஒரு இலக்கியப் பதிப்பகத்தில் வேலை பார்ப்பவர்கள் சொற்ப அளவிலும், ஒரு வணிகப் பதிப்பகத்தில் வேலை பார்ப்பர்கள் கொஞ்சம் அதிகமாகவும் இருப்பார்கள். இதையும் மனத்தில் வைத்துத்தான் வணிகப் பதிப்பகங்கள் விலை வைக்கவேண்டும். ஆனால் அப்படி வைப்பதில்லை என்பதே உண்மை. யார் வேண்டுமானாலும் எந்த ஒரு இலக்கிய / வணிகப் பதிப்பகங்களின் புத்தகங்களின் விலையைப் பட்டியலிட்டுப் பார்க்கலாம். அதையும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும். இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். எனவேதான் எந்த ஒரு இலக்கியப் பதிப்பகத்தின் மீதும் எனக்குப் புகார்கள் இல்லை. ஏனென்றால் புத்தகம் பதிப்பிக்கும் தொழிலே இன்று இருட்டில் கம்பு சுற்றும் வேலையாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஒரே ஒரு வெளிச்சக்கீற்று கண்ணில் படும் என்ற நம்பிக்கையில்தான் பதிப்பகங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அபிலாஷ் போன்றவர்களுக்கு இதில் வர்க்க விசுவாசத்தையும், இந்துத்துவத்தின் செயல்பாட்டையும் இணைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பதிப்பகங்கள் வெகுசில புத்தகங்களுக்கு லாபம் குறைவாக இருந்தால் போதும் என்று செயல்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அந்தப் புத்தகங்களின் விற்பனையும் அப்படியே பிய்த்துக்கொண்டு பறப்பதில்லை என்பதுதான் சோகம். 

நம் புத்தக வாசிப்புச் சூழல் மோசமாக உள்ளதை உணர்த்து அதை மேம்படுத்த நாம் செய்யவேண்டியது, பதிப்பகங்களை வர்க்க விசுவாசிகளாகவும் வர்க்க எதிரிகளாகவும் தம் வசதி வாழ்க்கை வாய்ப்புக்காக வண்ணம் பூசும் வேலையல்ல. குறைந்த பட்ச நேர்மை அதைச் செய்யாமலாவது இருப்பது.

பின்குறிப்பு:

யுவ புரஸ்கார் அபிலாஷின் கால்கள் நாவலை வாங்க இங்கே செல்லவும். https://www.nhm.in/shop/100-00-0000-202-2.html

Share