Tag Archive for ஈவெரா

தர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்

மிக மோசமான, அடிப்படையற்ற ஒரு படம். லாஜிக்கே இல்லாமல் இப்படிப் படம் எடுப்பது தமிழில் புதிதல்ல. ஆனால் இதில் ஒரு புதிய சாதனை செய்திருக்கிறார்கள். ஒரு படம் முழுக்க ஹிந்து மதத்தை, ஹிந்து மதத்தின் கடவுளர்களைக் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். தமிழில் இதுபோன்ற சாதனை இதுவரை வந்ததில்லை. கூடவே ஈவெராவையும் (இன்னும் 3 தலைவர்களையும்) கிறித்துவ மதத்தையும் தெரஸாவையும் புகழ்ந்திருக்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களையும்விட மோசமான உருவாக்கத்தில் வந்திருக்கும் இப்படத்தைப் பார்ப்பதே ஒரு தியாகம்தான். இந்தப் படத்தைப் பற்றி எழுத ஒரு அவசியமுல்லை. ஆனால் தமிழ்த் திரையுலகம் எந்த அளவுக்கு ஹிந்து மத வெறுப்பையும் அதன் ஒட்டாக கிறித்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என்பதையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பார்த்தேன், எழுதுகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் முத்துக்குமரன். இவருக்குப் படம் எடுக்கத் தெரியுமா என்பதையும் தாண்டி, இவர் ஒரு நல்ல படத்தையாவது பார்த்திருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதில் பெயர் மட்டும் முத்துக்குமரன். உண்மையில் இவர் ஹிந்து மதத்துக்குச் செய்யும் பெரிய சேவை ஒன்று இருக்குமானால், தன் பெயரை உடனே மாற்றிக்கொண்டு விடுவது. திரையுலகத்துக்குச் செய்யும் சேவை என்று ஒன்று இருக்குமானால், இனி படங்களையே எடுக்காமல் இருப்பது. இப்படத்தில் கதையே இல்லை என்பதோடு, திரைக்கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை, ஒன்றுமே இல்லை. ஆனால் பிரசாரம் மட்டும் பலமாக இருக்கிறது.

தமிழ்த் திரையுலகம் மிகப்பெரிய மாயவலையில் சிக்கி இருக்கிறது என்பதை எத்தனையோ முறை எத்தனையோ பேர் சொல்லி இருக்கிறார்கள். அதன் இன்னொரு நிரூபணம் இத்திரைப்படம்.

* படத்தின் முதல்  காட்சியே இரட்டை அர்த்த வசனத்தில் தொடங்குகிறது. பேசுபவர் யமன்.

* யமனின் மகனாக வரும் யோகி பாபு புதிய யமனாகிறார். இவர் வாயைத் திறந்தாலே யாரையாவது எதற்காகவாவது திட்டிக்கொண்டே இருக்கிறார்.

* நடனம் என்பதை சிவன் கொச்சைப்படுத்திப் பேசி, முருகன் பிள்ளையாருடன் குத்தாட்டம் போடுகிறார்.

* சிவன் போடா வெண்ண என்றெல்லாம் வசனம் பேசுகிறார்.

* நரகத்துக்கு அழைத்துச் செல்ல கருப்பான மனிதர்கள் அரக்கர்கள் வருகிறார்கள். அவர்கள் அரக்கர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆனால் சொர்க்கத்துக்குச் செல்ல வெண்ணிற தேவதைகள், கிறித்துவ பாணியில் இறக்கைகளுடன் வருகிறார்கள். அதாவது கெட்டவர்கள் என்றால் கருப்பாக ஹிந்து அடையாளங்களுடன் இருப்பார்கள். உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் நல்லவர்கள் எல்லாம் கிறித்துவ அடையாளங்களுடன் வெள்ளையாக இருப்பார்கள்.

* பாம்புக்குப் பால் ஊற்றினால் பாம்புக் குட்டிகள் செத்துப் போகும் என்று படத்தில் சொல்கிறார்கள். யார் சொன்னது? பாம்பே சொன்னது!

* யானையைப் பிச்சை எடுக்க வைத்தால் யானை பாகனைக் கொல்லும். ஆனால் யமன் அந்த யானையை மீண்டும் திருவண்ணாமலைக்கு அனுப்புகிறார். திருவண்ணாமலைக்குப் போய் அந்த யானை என்ன செய்யும்? இவ்வளவுதான் இயக்குநர் முத்துக்குமரனின் மூளை!

* யமன் கிறித்துவ தேவாலயத்துக்குள் போய் படுத்து உறங்குகிறார். ஏசுவை யமனே ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார். ஏசுவிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் சித்திரகுப்தனை!

* இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு யமலோகம் வருகிறார்கள். அவர்களை வளர்க்க யமன் அவர்களை யாரிடம் ஒப்படைக்கிறார்? தெரஸாவிடம்! தெரஸா புகழ் வேறு உண்டு. மறந்தும் ஹிந்து சன்னியாசிகள் அனாதைக் குழந்தைகளை வளர்ப்பதாகக் காண்பிக்கமாட்டார்கள். இப்படியான பொதுப்புத்தியை வளர்ப்பதே இயக்குநர் முத்துக்குமரன்களின் நோக்கம்..

* சமூகத்தில் நடக்கும் விஷயங்களையெல்லாம் பேப்பர் கட்டிங் எடுத்து வைத்துக்கொண்டு படமெடுத்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமரன். அதில் ஒன்று, ஸ்கூட்டரில் செல்லும் தம்பதிகளை ஒரு போலிஸ் காலால் உதைத்துத் தள்ள, அதில் இறந்து போகும் ஒரு பெண்ணைப் பற்றியது. அதில் அப்படி உதைத்துத் தள்ளும் போலிஸ் நெற்றி நிறைய பட்டை போட்டு சந்தனம் குங்குமம் வைத்துக்கொண்டு, ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்ட பக்தர்! ஐயப்ப பக்தர்களைக் கேவலப்படுத்தும் காட்சி அடுத்து அரங்கேறுகிறது.

* ஹிந்துக் கடவுள்கள் என்றால், ஹிந்துக்களின் இயற்கையோடு ஒட்டிய வழிபாடு முதற்கொண்டு கிண்டல் செய்து பகுத்தறிவு பேசுவது, கிறித்துவம் என்று வந்துவிட்டால் புகழ்வது. இதற்கு எதற்கு ஒரு படம்? பேசாமல் ‘எழுப்புதல் கூட்டம்’ ஒன்றில் பேசி வீடியோவாக்கி வெளியிட்டிருக்கலாம்.

* சித்திரகுப்தன் நெற்றியில் பட்டை போட்டிருக்கிறார். அவர் மனிதனாக வரும்போது நாமம் போட்டிருக்கிறார். தெளிவாக பிராமணர் என்று காண்பிக்கிறார்கள். ஏனென்று பார்த்தால் அடுத்த காட்சியிலேயே யமன் ஈவெராவைப் புகழ்கிறார். இந்த பிராமணர் அதை மறுக்கிறார். ஆம், மறுக்கிறார், மரியாதையுடன் மறுக்கிறார், திட்டவில்லை! யமனின் சந்தேகத்தைப் போக்க அதே சித்திரகுப்தன் ஈவெராவின் பெருமைகளை அவிழ்த்துவிடுகிறார். இப்படிப்பட்டவர்களை தன் தந்தையான முதலாம் யமன் ஏன் கொல்கிறார் என்று இந்தப் புதிய யமனே நொந்துகொள்கிறார்.

* அடுத்து அம்பேத்கரைப் பாராட்டுகிறார்கள். அடுத்து சுபாஷ் சந்திர போஸின் சிலையைப் பார்த்துப் புகழ்கிறார்கள். எத்தனை விவரம் பாருங்கள். சுபாஷ் சந்திர போஸைப் புகழும்போது ஒரு வசனம், இவர்தானே உண்மையான தேசத் தந்தை என்று. அதில் உண்மையான என்ற வசனம் ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

* அடுத்து காந்தி சிலையைப் பார்த்து ஜஸ்ட் ஒரு வார்த்தை பாராட்டிச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

* பாஸ்கி என்றொரு நடிகர், சோ-வாக நடிக்கிறார். பாஸ்கிக்கு மண்டைக்கு வெளியே மட்டுமில்லை, உள்ளேயும் ஒன்றும் கிடையாது என்று தெரிகிறது. இவர் இத்தனை நாள் சொல்லிக்கொண்டிருந்தவை எல்லாமே பொய்தானோ என்றும் தோன்றுகிறது. இத்தனைக்கும் இவர் திரைப்படங்களின் விமர்சகர் வேறு. ஒரு படத்தில் யாரை எப்படிக் காண்பிக்கிறார்கள், அதில் நாம் ஏன் நடிக்கிறோம் என்கிற அடிப்படை அறிவுகூட இவருக்கு இல்லை.

* மாமா வேலை பார்த்தே சோ அரசியல் பணி ஆற்றினார் என்றே படத்தில் காட்டுகிறார்கள். தன் வாழ்நாள் முழுக்க திராவிட வெறி அரசியலுக்கு எதிராகப் பேசியவருக்கான மரியாதை இவ்வளவுதான். இதை பாஸ்கியும் அப்படியே நடித்திருக்கிறார் என்பது நமக்குச் சொல்லும் செய்திகள் ஏராளம். இங்கே எல்லாவற்றையும் நிர்ணயிப்பது வாய்ப்பரசியல்தான். உண்மையோ தர்மமோ அல்ல.

* யமன் மாமா வேலை பார்க்கிறார் என்றெல்லாம் வசனம் வருகிறது.

* இதற்கிடையில் இயக்குநர் முத்துக்குமரனுக்கு அரசியல் பகடி செய்ய ஆசையும் வருகிறது. ‘ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலையாம், அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி  கேக்குதாம்’ என்ற வசனம் எனக்கு மட்டும் கேட்டது.

* எவ்வித அறிவும் இன்றி அரசியல் பகடியை எடுப்பது என்பது நம் தமிழ் இயக்குநர்களுக்கே வந்த கலை. மேம்போக்கான வசனம் ஒன்றை ஒற்றைத் தெறிப்பில் சொல்லிவிட்டு, அசப்பில் ஒரு அரசியல்வாதியைப் போன்ற ஒருவரைக் காட்டிவிட்டு, என்னவோ பகடித் திரைப்பட வரிசையில் பெரிய சாதனை செய்துவிட்டது போல இருப்பதே நம் இயக்குநர்களின் பணி. சத்யராஜின் ‘மகா நடிகன்’ தொடங்கி இன்று வரை இதுதான் இவர்களுக்குப் பழக்கம். மிக அரிதாக சில படங்கள் (அமைதிப்படை, புதுப்பேட்டை போன்றவை) வரும். இந்தப் படத்தில் நம் இயக்குநருக்கு எதுவுமே வரவில்லை என்பதால், இந்தப் பகடியும் வரவில்லை என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை.

* ஓ பி எஸ் வருகிறார். மோடியைப் பெயர் சொல்லாமல், அதுவும் ஒரு பொய்ச் செய்தியைச் சொல்லிக் கிண்டல் செய்கிறார்கள். செல்லூர் ராஜுவைக் கிண்டல் செய்கிறார்கள். தமிழக அதிமுக அமைச்சர்களைக் கிண்டல் செய்கிறார்கள். ஒன்றிலும் ஒரு விஷயஞானமும் இல்லை. ஆனால் மிக விவரமாக இயக்குநர் ஜெயலலிதாவும் கருணாநிதியும் சொர்க்கத்தில் இருப்பதாகச் சொல்லி வைக்கிறார்!

* அடுத்து ஆணவக் கொலைக்குள் போகிறார் இயக்குநர்.

* இறுதியில் ஈவெரா, காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் என நால்வரையும் யமன் மீண்டும் உயிர்ப்பித்து அனுப்பும்போது, என்னடா இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இத்தனை பெரிய தண்டனை என்கிற எண்ணம் நமக்கு எழுகிறது.

இத்தனையிலும் நாம் கவனிக்கவேண்டியது, இத்தனை ஹிந்துக் கடவுள்கள் கிண்டல் செய்யப்பட்டபோதும் ஒரே ஒரு கிறித்துவக் கடவுள் கொண்டாடப்பட்டிருப்பதையும், மறந்தும் இஸ்லாம் என்கிற ஒரு வார்த்தைகூடப் படத்தில் வரவில்லை என்பதையுமே. தமிழில் யமனைப் பற்றிய கேவலமான முதல் படம் இதுதான் என்றில்லை. யமனுக்கு யமன் தொடங்கி லக்கிமேன் வரை பல படங்கள். அவை அனைத்திலும் இயக்குநர்களின் முட்டாள்தனம் மட்டுமே வெளிப்பட்டது. யமன் குத்தாட்டத்தை ரசிப்பதாகக் காட்சிகள் வைப்பார்கள். யமனுக்கு மூளையே கிடையாது, முட்டாள் என்று காண்பிப்பார்கள். யமனை நாடகத்தின் ஒரு நகைச்சுவை நடிகரைப் போலக் காண்பிப்பார்கள். இந்தப் படம் அதே அடிப்படையில் ஹிந்து வெறுப்பையும் கிறித்துவ ஈவெரா பிரசாரத்தையும் இணைத்து அடுத்த தளத்துக்குச் சென்றிருக்கிறது. முட்டாள்கள் இயக்குநரோ பாஸ்கியோ யோகி பாபுவோ அல்ல.

நன்றி: ஒரே இந்தியா

Share

ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்

இந்த வருடத்தில் முதலில் வாசித்த கதை – ஒருத்திக்கே சொந்தம். ஜெயலலிதா எழுதியது. இதை நாவல் என்று சொல்வது நாவல் கோட்பாடுகளுக்கு எள்ளு இறைப்பதற்கு ஒப்பானது என்பதால் கதை என்கிறேன். அடுத்த பஸ் ஐந்து நிமிடத்தில் வருவதற்குள் நிறுத்தத்தில் காத்திருக்கும் சக பெண்ணுக்குக் கதையைச் சொல்லி முடிக்கும் வேகத்தில் ஜெயலலிதா இக்கதையைச் சொல்லி இருக்கிறார். 1960களில் உள்ள திரைக்கதைகளை நகலெடுத்து எழுதப்பட்ட கதை.
oruthi_3101048h
இதை 60களில் ஜெமினிகணேசனை ஹீரோவாக வைத்து படமாக எடுத்திருந்தால் இன்னுமொரு சூப்பர்ஹிட் உணர்ச்சிகர காவியம் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும். இதன் முடிவுக்காக சிலரால் புரட்சிகர சினிமா என்று போற்றப்பட்டிருக்கும் என்பதோடு, இரண்டு மனைவி கலாசாரத்தைப் புகுத்துகிறாரா என்று பலரால் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். இதை ஏன் ஜெயலலிதா இப்படி எழுதினார் என்பதை ஒட்டி ஜெயலலிதாவின் பின்னாளைய அரசியல் வாழ்க்கைக்கான அடிப்படைகளும் விவாதிக்கப்பட்டிருக்கும். நாவலாக வந்துவிட்டதால் இந்நாளைய தமிழர் மரபுக்கு இணங்க பெரும்பாலானோர் இதை வாசிக்கவே இல்லை. குடும்ப நாவல் இந்த மாதம் இதை வெளியிட்டதால் இதைப் படிக்க முடிந்தது. இது போக இன்னும் ஒரு நாவல் ஜெயலலிதா எழுதி இருக்கிறார் போல. அதையும் வாசிக்கவேண்டும். இந்த நாவலைப் படிக்கும்போது ஜெயலலிதாவை நினைத்து ஏனோ வருத்தமாக இருந்தது.
 
 
இன்று புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் தாமதமாகச் செல்லலாம் என்ற எண்ணத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலைக் கையில் எடுத்தது தவறாகப் போய்விட்டது!

Jpeg

Jpeg

 
துக்ளக் சோவை இன்னும் மறக்கமுடியவில்லை. இவரது நினைவுக்காக அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலை இரண்டு நாளுக்கு முன்னர் வாங்கினேன். விலை ரூ 120. பொக்கிஷம் என்ற க்ளிஷேவை இதற்குச் சொல்லலாம். பொக்கிஷம். கருணாநிதி மற்றும் எம்ஜியாரைத் துவைத்து எடுத்திருக்கிறார். 71ல் ஈவெரா ராமரை செருப்பால் அடித்தது போன்ற போஸ்டரை வெளியிட்டதற்காக தடைசெய்யப்பட்ட துக்ளக் இதழ் மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களும்; 1985ல் பி.எச். பாண்டியன் சட்டசபையில் ரகுமான் கானிடம் ‘தன்மையாகப்’ பேசியதை துக்ளக் இதழில் வெளியிட்டு (என நினைக்கிறேன்) உரிமைப் பிரச்சினைக்கு ஆளான பிரச்சினை மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களையும் முழுமையாக இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். அதுவும் கிட்டத்தட்ட துக்ளக் வடிவமைப்பில். பல இடங்களில் சோவைப் பற்றிய நினைவுகள் என்னைக் கலங்கடித்துவிட்டன. என்னவெல்லாம் செய்திருக்கிறார். 15.7.85 அன்று சோ துக்ளக்கில் எழுதியிருக்கும் தலையங்கத்தில்தான் எத்தனை தெளிவு, என்ன துணிவு. வாய்ப்பே இல்லை. அதன் கடைசி வரி, “என்ன நடந்தாலும் சரி, ஆனது ஆகட்டும், நானும் பார்க்கிறேன்.”
 
சோவின் கடைசி காலங்களில் அவரது வேகம் மிகவும் மட்டுப்பட்டுவிட்டது என்பதையும் ஜெயலலிதாவை அவர் தீவிரமாக ஆதரித்தார் என்பதையும் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ இதழைப் படிக்கும்போது புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயலலிதா மீது வைக்கப்பட்டும் பல குற்றச்சாட்டுகளுக்குத் தொடக்கப்புள்ளி எம்ஜியார் என்பதை இப்புத்தகம் பின்னணியில் உங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். நெடுஞ்செழியன், பி.எச். பாண்டியன் போன்றவர்களுக்கு எதிர்விதத்தில் நேர் செய்யும் விதமாக வருகிறார்கள் ‘வணிக ஒற்றுமை’ பத்திரிகை ஆசிரியர் பால்ராஜும், பாளை சண்முகமும்.
 
இந்நூலில் உள்ள ஒன்றரைப் பக்க நாளேடு ஓர் உச்சம். தலைவர்களின் தீபாவளி வாழ்த்து கற்பனை அதகளம். கடவுளைக் கற்பித்த்வன் முட்டாள், காட்டுமிராண்டி என்று ஈவெராவின் சிலைக்குக் கீழ் உள்ள வாசகங்களை ஒட்டிய பிரச்சினைக்கு பதில் கூறும் முகமாக எழுதப்பட்ட கட்டுரையில், சென்னை ஆர்ச் பிஷப் பூஜ்யர் ஸ்ரீ அருளப்பாவின் கருத்தைச் சரியாகச் சேர்த்திருப்பது அட்டகாசமான சோ-த்தனம். ஐ லவ் சோ. ஐ மிஸ் ஹிம். 🙁
Share

மெட்ராஸ் திரைப்படம் பற்றி நாலு வரி

* ஆடுகளம், மதயானைக் கூட்டம் வரிசையில் வைக்கத்தக்க ஒரு படம். 

* இடைவேளை வரை மிரட்டல். இடைவேளைக்குப் பிறகும் மோசம் என்றெல்லாம் இல்லை. நன்றாகவே உள்ளது. ஆனால் வழக்கம் போன்ற ஹீரோயிஸம் பாணிக்குப் போனதே பெரிய சறுக்கல். அதிலும் கடைசிக் காட்சியில் ஹீரோ கால்பந்து ஆடுவதைக் காட்டி அதைப் போல வில்லன்களைப் பந்தாடுகிறார் என்று காட்டியிருப்பது மிகப்பெரிய சறுக்கல். (சவுக்கு வெளியிட்டிருந்த கட்டுரையில், இப்படம் கருப்பர் நகரத்தின் காப்பி என்று எழுதும்போது, கருப்பர் நகரத்தில் வரும் ஹீரோ கால்பந்து ஆடுபவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எது காப்பி எது மூலம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவேளை காப்பி என்றால், காப்பி அடிப்பவர் ஏன் அப்படியே கால்பந்து ஆடுபவராக வைத்தார் என நினைத்துக்கொண்டேன். இந்தக் காட்சிக்காகத்தான் என்றால், சிரிப்பே வருகிறது. கபடி ஆடுபவராக வைத்திருக்கலாம். காப்பி அடிக்கவே கூடாது. அடித்தே தீரவேண்டும் என்றால், மூலத்தைவிட ஒரு படி மேலே போய்விடவேண்டும். அல்லது குறைந்தபட்சம் அதுவேறு இதுவேறு என்று சொல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

* தலித்துகளுக்கான படம் என்று பெரிய பிரசாரம் நடக்கிறது. இருக்கட்டும். நல்ல விஷயம்தான். தலித்துகளுக்கான படம் மிகத் தெளிவான அடையாளங்களுடன் வரவேண்டியது அவசியம். ஆனால் இப்படம் அப்படி அமையவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நாமாக இதை தலித் திரைப்படம் என்று எடுத்துக்கொள்கிறோம். அல்லது அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் தலித் என்பதால், இப்படத்தின் மூலம் தங்கள் ‘படைபலம்’ (படைபலம் பற்றி ரெண்டு மூணு பெத்துக்க சொல்லி வருகிறது. வீரத்தாய் திட்டத்தில் ராம கோபாலனும் இதையே சொன்னார். 🙂 இரண்டும் ஒன்றல்ல. ஆனாலும் என்னவோ ஒற்றுமை உள்ளது) உலகத்துக்குத் தெரியட்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள் போல.  இதில் தவறில்லை. ஆனால் அதற்காக இப்படம் தலித்துகளுக்கான கனவுப்படமெல்லாம் இல்லை. இன்னும் நாம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர் சொல்லாத முதல் மரியாதை, காதல், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் இருந்து ஒரு இம்மிகூட முன்னேறிவிடவில்லை. 

* இது தலித்துகளுக்கு உள்ளே நடக்கும் பிரச்சினையா அல்லது தலித்துகளுக்கும் நாயுடுகளுக்குமான பிரச்சினையா (அப்படி ஒன்று இருக்கிறதா) அல்லது ஒரே கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகள் மட்டும்தானா என்ற குழப்பமெல்லாம் எவ்வகையிலும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நாமம் வைத்துக்கொண்டு வருபவர்களை இணையப் புரட்சிக்காரர்கள் தலித்துகள் என்று எப்போதும் சொன்னதில்லை. அவர்களை மேல் சாதிக்காரர்கள் என்றே ஓட்டியிருக்கிறார்கள். ஆனால் அதே பொதுப்புத்திக்காரர்கள் இப்படத்தை எப்படி தலித்துகளின் படமாக ஏற்றுக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. நம் ஜனம் முன்னேற வேண்டும் என்ற வசனத்தை இருதரப்பும் பேசிக்கொள்கிறார்கள் என்பதால் குழப்பம் உச்சமடைகிறது.

* வட சென்னையை சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நிறையப் படங்கள் வட சென்னையைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தேவைக்கு மட்டும் வட சென்னையைக் காட்டிவிட்டுச் செல்லும் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒட்டுமொத்த படமே வடசென்னையில்தான் நடக்கிறது.

* இத்தனை மெனக்கெட்டவர்கள் வெண்பதுமை போல இருக்கும் கார்த்தியை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய குறை இது. இதற்கும் ஏதோ சாதித் தொடர்பே காரணம் என்றார்கள். யார் யார் என்ன என்ன ஜாதி என்றெல்லாம் தெரியாததால் என்னால் இதனுள் மேற்கொண்டு போகமுடியவில்லை. இக்குறையைத் தீர்ப்பது அன்பு மேரி காதல் காட்சிகள். அட்டகாசம்.

* இயக்குநர் ரஞ்சித்தைப் பொருத்தவரை அட்டகத்தி என்ற சுமாரான படத்திலிருந்து இது மிகப்பெரிய தாவல். அட்டகத்தியையே ஆனையாக்கும் என்றார்கள். இன்று இன்னும் அதிகமாக. தங்கள் அரசியலுக்கு தன்னைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை பூத்துவிட்டு ரஞ்சித் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராவது நல்லது. இது நல்ல படம்தானே அன்றி மிகச் சிறந்த தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கியமான படமல்ல. அப்படத்தை ரஞ்சித் எடுக்கக்கூடும். தன் கவனத்தை மின்மினி அரசியல் சமூகப் போராளிகளிடம் தொலைக்காமல் இருந்தால்.

* சந்தோஷ் நாராயண் பின்னணி இசை மிரட்டல். இவரும் இன்னும் சாதிக்கட்டும். 

* படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இரண்டை வெட்டியிருக்கலாம்.

* தொடர்ந்து மாறி மாறிக் காட்டப்படும் நம்பிக்கைத் துரோகக் காட்சிகள் அஞ்சானை மிஞ்சுகின்றன. இக்காட்சிகள் தமிழ்த் திரையுலகில் க்ளிஷேவாக மாறிவிட்டன. இனியும் இதைப் பிடித்துக்கொண்டு அலைவதில் லாபமில்லை என்பதோடு நஷ்டமுண்டு!

* எல்லோரும் படத்தில் வரும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், அம்பேத்கர் நூல் போன்றவற்றைச் சொல்லி அதன் குறியீடுகளை வியக்கிறார்கள். நாமும் நம் பங்குக்குக் கொளுத்தி வைப்போம். படத்தில் வராத படங்கள் இல்லை. ரஜினி படம், சாய் பாபா படம், கிறித்துவ கதாபாத்திரங்கள், ஹிந்து சாமியார்கள் என என்னவெல்லாமோ வருகின்றன. அம்பேத்கர் படம் வருகிறது. புத்தர் சிலை வருகிறது. சே குவேராவின் படம்கூட வருகிறது. வராத ஒரே ஒரு படம் ஈவெராவின் படம் மட்டுமே. ரஞ்சித்தை இதற்காக எத்தனை பாராட்டினாலும் தகும். வடசென்னையில் ஈவெரா படமில்லை என்று உரக்க நிரூபித்துவிட்டார். 😀 (எங்காவது யாராவது இப்படத்தில் ஈவெரா படம் வருவதை ஆதாரத்துடன் சொன்னால், அப்படியா கவனிக்கலைங்க என்று மட்டும் சொல்வேன் என உறுதி கூறுகிறேன்.)

* கடைசியாக – ஆடுகளம், மதயானைக் கூட்டம், மெட்ராஸ் எனக் கொண்டால் என் வரிசை இப்படி: மதயானைக் கூட்டம், ஆடுகளம், மெட்ராஸ்.

* தனுஷ் நடித்திருக்கவேண்டிய திரைப்படம். தனுஷ் நடிக்காததால் நமக்கு பெரிய இழப்பு இது. 🙁

* தியேட்டரில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். Do NOT miss. 

ஸாரி, நாலு வரி இல்லை, நாற்பது வரிகள் எழுதிவிட்டேன்.

Share

துரோகி மைனாரிட்டிகள் – ஈவெரா

துக்ளக்கில் 83 வாரங்களாக வெளிவரும் திராவிட மாயை ஒரு பார்வை பகுதியின் இந்த வார கட்டுரை இங்கே. ஈவெரா தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் பேசுவார் என்பதற்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

 
நன்றி: துக்ளக்

இதுபோல் அவர் ‘பறச்சிகளெல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்திராதா’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்! அந்தப் பேட்டியின் சுட்டி கிடைத்தால் இங்கே சேர்த்து வைக்கிறேன். இதுகுறித்து முரசொலி வெளியிட்ட கார்ட்டூனை (வெசாவின் கட்டுரையில்) இங்கே படிக்கலாம்.

Share