Archive for புத்தகப் பார்வை

காந்தி புத்தகங்கள்

 

எதிர்பாராத ஒரு தருணத்தில் வ.உ.சியைப் பற்றியும் ராஜாஜியைப் பற்றியும் இரு புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பொதுவாகவே, சென்னை புத்தகக் கண்காட்சியில் மட்டுமே புத்தகங்கள் வாங்குவேன். பாழாய்ப் போன வரலாற்று ஆர்வம், இந்தமுறை பெரிய அளவில் வேட்டு வைத்துவிட்டது.  ராஜாஜி வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், ராஜாஜியைவிட அதிகமாக காந்தியைப் பற்றிப் பேசப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு காந்தியைப் பற்றிய பதிவுகள் இருந்தன. வ.உ.சி வரலாற்றில், வ.உ.சியின் அந்திம காலத்தில்தான் காந்தியைப் பற்றிய பதிவுகள் வருகின்றன.

அப்போதுதான் ’அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்’ படித்தேன். இதில் ஹசாரேவைப் பற்றிய ஒவ்வொரு விவரிப்பிலும் காந்தியைப் பற்றிய விவாதமும் இருந்தது. ’இன்றைய காந்தி’ புத்தகம் – தமிழில் நிகழ்ந்த ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். ஓராண்டுக்கு முன்பு இதைப் படித்தேன். இலங்கை சென்றிருந்தபோது இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விவாதித்துக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாக மனத்தில் இருக்கிறது. இப்புத்தகம் தந்த அனுபவம் மறக்கமுடியாதது. ஒருவரது வாழ்க்கை வரலாற்றை, பிறப்பு தொடங்கி இறப்பு வரை படிப்பதற்குப் பதிலாக, இப்படிக் கேள்வி பதில் மூலம், அத்தலைவர் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள், அந்தத் தலைவர் எடுத்த முடிவுகள், அதன் விளைவுகள் எனப் படிப்பது எளிதானதாகவும், குழப்பமில்லாமலும் இருந்தது. பகவத் கீதையே கேள்வி பதில் வடிவில் அமைந்ததுதான். எனவே கேள்வி பதில் மூலம் படிப்பது ஒருவகையில் பழக்கமானதே என்ற முடிவை மூளை எடுத்துவிடுகிறதோ என்னவோ. அண்ணா ஹசாரேவின் புத்தகத்தைப் படித்ததும் தொடர்ந்து காந்தியைப் பற்றிப் படிக்க முடிவெடுத்தேன். ஏற்கெனவே, ஜெயஸ்ரீ வாங்கிக் கொடுத்து மூலையில் தூங்கிக் கிடந்த ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’யை எடுத்தேன்.

அப்போது நடந்த சில ஃபேஸ்புக் விவாதங்களுக்காக வேறு சில புத்தகங்களைப் படிக்கவேண்டியிருந்தது. ஜெயமோகனின் குழுமத்தில் நடக்கும் விவாதங்களில் காந்தி பற்றிய சில புத்தகங்களைச் சொன்னார்கள். முக்கியமானது, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘காந்தி வாழ்க்கை’ என்னும் புத்தகம். லூயி ஃபிஷர் எழுதி, திஜர தமிழில் மொழிபெயர்த்திருக்கும் புத்தகம். அதையும் வாங்கினேன். (நான் மேம்போக்காக வாசித்துப் பார்த்த வகையில் மொழிபெயர்ப்பு அட்டகாசம்.) ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ’தண்டியாத்திரை, புத்தகமும் வாங்கினேன். இது நேரடியான தமிழ் நூல். ’நவகாளி யாத்திரை’ (சாவி எழுதியது, நர்மதா வெளியீடு) புத்தகம் கிடைக்கவில்லை. அதையும் வாங்கவேண்டும். இது ஒரு சிறந்த வரலாற்றுப் புத்தகமாக இருக்கும் எனத் தோன்றவில்லை. காந்தியைப் பற்றிய சாவியின் பக்தி வெளிப்பாடாகத்தான் இருக்கும். இருந்தாலும், நேரடியாக நவகாளி சென்று, காந்தியுடன் 2 நாள்கள் தங்கியிருந்து எழுதிய புத்தகம் என்பதால், வாசிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். (நவகாளி யாத்திரை பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தில் மேய்ந்தபோது, மலர்மன்னன் எழுதிய அட்டகாசமான கட்டுரை கண்ணில்பட்டது.)

இப்படி புத்தகங்களைப் படித்தால் காந்தி பற்றிய ஒரு பெரிய தெளிவு கிடைக்கும் எனத் தோன்றுகிறது. காந்தியைப் படிக்க படிக்க அப்படியே அவர் என்னை ஹைஜாக் செய்வதும் புரிகிறது. கல்லூரியில் காந்தியன் ஸ்டடீஸ் என்ற சர்டிஃபிகேட் கோர்ஸ் படித்துத் தேர்ச்சி பெற்றேன். அப்போதே அந்தக் கல்லூரி ஆசிரியர் ஒழுங்காக காந்தியைப் பற்றிச் சொல்லித் தந்திருந்தால், இந்நேரம் காந்தியைப் பற்றிப் பல புத்தகங்களை வாசித்து முடித்திருந்திருக்கலாம். அப்போது தானே கிளம்பும் உத்வேகம் வராததால், காந்தியைப் பற்றி ஒழுங்காகப் படிக்காமல் விட்டது இப்போது வருத்தம் தருகிறது.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (கிழக்கு வெளியீடு) இரண்டு பாகங்கள். முதல் பாகத்தை பாதி படித்தேன். இரண்டாம் பாகத்தில் தேவையான சில பகுதிகளைப் படித்தேன். இந்தப் புத்தகத்தையும் முழுமையாகப் படிக்கவேண்டியுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஓர் எண்ணம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் புத்தகமும் தமிழில் ஒரு சாதனைதான். ராமசந்திர குஹா எழுதி தமிழில் ஆர்.பி.சாரதியால் (பா.ராகவனின் தந்தை) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்னும் 20 வருடங்களுக்காவது இப்புத்தகம் தமிழில் நிலைத்து நிற்கும். தொடர்ந்து பேசப்படும். இந்த அரிய சாதனையை செய்திருப்பது கிழக்கு பதிப்பகம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சி. இந்த முக்கியமான புத்தகத்தைப் பற்றி சில விமர்சனங்களும் வந்துள்ளன. குஹா ஒரு மார்க்சியர் என்பதால் அச்சார்புடன் புத்தகம் உள்ளது என்பது ஒரு குற்றச்சாட்டு. சார்பு இதுதான் எனத் தெரிந்துகொண்டு புத்தகத்தைப் படிப்பதில் ஒரு பிரச்சினையுமில்லை. நடுநிலை என்ற அறிவிப்போடு வரும் புத்தகத்தை வாசிக்கும்போதுதான் மனம் அலைபாயத் தொடங்கிவிடுகிறது! மேலும், சார்பை மீறி பல விஷயங்களைத் தெளிவாகவே குஹா குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு குற்றச்சாட்டு, வலதுசாரிகளின் பங்களிப்பை சரியாக குஹா பதிவு செய்யவில்லை என்பது. இப்புத்தகத்தை முழுமையாகப் படித்தால், இக்குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது தெரியும். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும், அதை வைத்து இப்புத்தகத்தைப் புறந்தள்ளமுடியாது. 10 ஆண்டுகாலம் உழைத்து, ஒரு பெரிய கண்ணோட்டத்தில், விரிவான பார்வையில் எழுதும்போது இதுபோல நிகழ்வது சகஜமே. தேவை என்றால், வலதுசாரிகள்தான் அவர்கள் கண்ணோட்டத்தில் வரலாற்றைப் பதிவு செய்யவேண்டும். அத்வானியின் தன்வரலாற்று நூலான ‘என் தேசம் என் வாழ்க்கை’ இந்த வகையில் ஒரு முக்கியமான புத்தகமே. அதை ஏற்கெனவே படித்துமுடித்துவிட்டேன். அது பற்றிப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் – தேவைப்படுமானால் எழுதுவேன்.

இப்போது நான் படிக்கவேண்டிய புத்தகங்கள்:

01. காந்தி வாழ்க்கை

02. இன்றைய காந்தி (மீண்டும் ஒருமுறை படிக்கவேண்டும்)

03. தென்னாப்பிரிக்காவில் காந்தி

04. தண்டி யாத்திரை

05. இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு

06. நவகாளி யாத்திரை

இத்தனை புத்தகங்களைப் படிப்பதற்காகத்தான் டிவிட்டரிலிருந்தும், ஃபேஸ்புக்கிலிருந்தும் வெளியேறினேன். நேரம் நிறையவே கிடைக்கிறது!

இன்னும் ஒரு புத்தகமும் வாங்கவேண்டியிருக்கிறது. ராஜாஜியைப் பற்றி ராஜ்மோகன் காந்தி எழுதி, கல்கி ராஜேந்திரனால் மொழிபெயர்க்கப்பட்டு வானதி வெளியீடாக வந்திருக்கும் புத்தகம், ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு. இதையும் வாங்கிப் படிக்கவேண்டும்.

புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

Share

அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்

நான் எழுதிய ‘அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ புத்தகத்தின் விமர்சனம் தமிழோவியம் தளத்தில் வெளியாகியுள்ளது.

Share

தலித்துகளும் பிராமணர்களும்

 

 

தலித்துகளும் பிராமணர்களும் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ’அந்தணர் வரலாறு’ எழுதிய கே.சி. லட்சுமி நாராயணன் எழுதியது. இவர் எழுதிய ’அந்தணர் வரலாறு’ தந்த பயம் காரணமாக, இவரது எழுத்துகள் மீது கொஞ்சம் விலகல் இருந்தது. இந்தப் புத்தகம் அந்த விலகலைத் துடைத்துப் போட்டிருக்கிறது.

’தலித்துகளும் பிராமணர்களும்’ புத்தகத்தை ஒவ்வொரு தலித்தும் ஒவ்வொரு தலித் தலைவர்களும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்று நூலாசிரியர் விரும்புவதாகத் தெரிகிறது. தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையே நிலவும் மனத்தடை காரணமாக இவர் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

எனக்கென்னவோ உண்மையில் ஒவ்வொரு (தங்களை அப்படி உணரும்) பிராமணரும் படிக்கவேண்டிய நூல் என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதரும் இன்னொரு (தங்களை பிராமணராகவே உணரும்) பிராமணருக்கு இந்த நூலை வாங்கித் தருவது அவசியம். வாங்கித் தரும்போது மறக்காமல் சொல்லவேண்டியது, ’இந்த நூலைப் படிக்கவேண்டியதன் அவசியம் உங்கள் பிராமணப் பெருமைகளைப் புதுப்பித்துக்கொள்ள அல்ல, மாறாக பல முக்கியமான பிராமணர்கள் எப்படி தலித்துகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதன்வழி நீங்களும் வாழவேண்டும் என்பதே.’

கே.சி. லட்ச்மி நாராயணன் பல விஷயங்களில் கவனம் செலுத்தி இந்நூலை எழுதியிருக்கிறார். உண்மையில் தலித்துகள் தங்கள் மீது ஆதிக்கத்தை நிகழ்த்தும் உண்மையான ஆதிக்க சாதிகள் எவை என்பதை உணரவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. தேவையான நூல்தான். அதே சமயத்தில், இந்நூல் பிராமணர்கள் தலித்துகளுக்கு ஆற்றிய பங்குக்கு முக்கியமான ஆவணமாகவும் திகழும். அரிஜன அய்யங்கார், கக்கனின் குருநாதர், வைத்தியநாத ஐயர், அம்பேத்கரின் ஆசிரியர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் அபாரம். தலித்துகள் புரிந்துகொள்ளவேண்டும், தலித் தலைவர்கள் உணரவேண்டும் என்னும் ‘சாதி’ நூலுக்கான க்ளிஷேவைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் பிராமண வெறுப்பாளர்கள் எளிதில் எரிசலடையும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுவதையும் தவிர்த்திருந்திருக்கலாம். மற்றபடி மிக மிக முக்கியமான ஆவண நூல் இது.

’அரிஜன அய்யங்கார்’ என்னும் தன் வரலாற்று நூலை அடிப்படையாக வைத்து ஆலந்தூர் மள்ளன் எழுதிய (உணர்வு-பிரசார!) சிறுகதை இங்கே.

நூல் விவரம்:

 

தலித்துகளும் பிராமணர்களும், ஆசிரியர்: கே.சி.லட்சுமி நாராயணன், Rs. 120,  வெளியீடு: LKM Publications, Old No 15/4, New No 33/4, Ramanathan Street, T Nagar, Chennai – 600017, +(91)-(44)-24361141, 24340599, +(91)-9940682929

இந்நூல் பற்றிய தினமலர் புத்தக அறிமுகம் இங்கே.

தற்போது படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்: ஊரும் சேரியும் – சித்தலிங்கய்யா, கவர்மெண்ட் பிராமணன் – அர்விந்த் மாளகத்தி. இவை பற்றிய சிறிய குறிப்புகள் பின்னர். 

 

Share

வாஸவேச்வரம் – காமம் விளையும் நிலம்

 

வாஸவேச்வரம் நாவலை வாங்கி வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம்தான் திடீரென்று அதனைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். பெண்கள் எழுதிய நாவல்கள் இதுவரை எத்தனை படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றிரண்டுதான் நினைவுக்கு வருகின்றன. சுமதியின் கல்மண்டபம், ஹெப்சிகாவின் புத்தம் வீடு. இன்னும் சில படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெண்கள் எழுதிய நாவலைப் படிக்கிறோம் என்னும்போதே அந்நாவல் பெண்ணியக் கருத்துகளை மிக வெளிப்படையாய்ப் பேசுமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பேசினால் என்ன தவறு? தவறொன்றுமில்லை. எனக்கு அச்சம். அவ்வளவுதான். இது தவறான அச்சமாகவே இருக்கலாம். ஒருவேளை இதற்கான நியாயமும் இருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருப்பதென்னவோ உண்மைதான். வாஸவேச்வரத்தில் இந்தப் பிரச்சினைகள் எழவில்லை. இந்நாவலை பெண்ணியப் பிரதியாகவே வாசிக்கமுடியும். ஆனால் அது ஒருவகையில் நாவலை குறுக்கிவிடும். எப்படி ஆண் எழுதிய நாவல் ஒன்றை வெளிப்படையாக வாசிக்கிறோமோ அப்படியே இந்நாவலையும் வாசிப்பதுதான் இந்நாவலுக்குச் செய்யும் மரியாதை.

கிருத்திகா தான் கண்ட 3 கிராமங்களைக் கொண்டு ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியிருக்கிறார். வாஸவேச்வரம் என்ற அக்கிராமத்திலுள்ள பிராமணக் குடும்பங்களுக்கு இடையேயான கதையே நாவல். நான் சிறிய வயதில் ஒரு சில அக்ரஹராகத்தில் இருந்தபோது அக்ரஹாரத்தில் நிலவும் பேச்சுக்களுக்களின் அடிநாதமாக பாலுறவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் அது மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இருக்கும். இந்நாவலில் அப்படிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் ஒழுக்க மீறல்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான காரணத்தை புராணங்களில் இருந்து அம்மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். புராணக் கதைகளில் பாலுறவுக் காட்சிகள் சொல்லப்படும்போதெல்லாம் கிராமத்தில் இரவு வெப்பம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபெல்லாம் புராணக் கதைகள் தரும் எழுச்சியில் காணாமல் போகிறது.

40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதுதான் நாவல் எனக்குத் தந்த பிம்பம். ஆனால் நாவலின் முன்னுரையில் பெருந்தேவியோ நாவல் நடந்த காலகட்டம் 1930கள் எனச் சொல்லியிருக்கிறார். எனக்கு நாவலின் காலகட்டம் குழப்பமாகவே உள்ளது. 1930கள் எனக்கொண்டால், சுந்தரப் போராட்டம் பற்றியோ காந்தியைப் பற்றியோ வெள்ளையர்களைப் பாராட்டியோ எதிர்த்தோ நாவலில் எந்த கதாபாத்திரமும் எப்படிப் பேசாமல் இருந்திருப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது.  பெண்கள் தங்களுக்குள் நல்ல படிப்பு படித்து நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணியதாகவெல்லாம் நாவலில் வருகிறது. 30களில் எத்தனை பெண்கள், அதுவும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டு சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பிராமணப் பெண்கள் இப்படி நினைத்திருபபார்கள்? கம்யூனிஸ்ட்டுகள் கூடி கூடிப் பேசுகிறார்கள். அவர்களும் சுதந்திரம் பற்றியோ வெள்ளையர்கள் பற்றியோ வாயே திறப்பதில்லை. 1960கள் என்று கொண்டால் மட்டுமே கிருத்திகா எழுதியிருப்பது பொருந்திவருகிறது.

கதை நடந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்குள்ளேயே எட்டிப் பார்த்த கம்யூனிசமும் முற்போக்கும் அதற்கு வரும் எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முற்போக்கு மிக எளிதாகத் தோற்கடிக்கப்பட்டும்விடுகிறது. அதிலும் பிறன்மனைப் பெண்ணொருத்திக்காக தனது எல்லாக் கொள்கைகளையும் விட்டுவிடுபவனாகவே முற்போக்காளன் பிச்சாண்டி வருகிறான். அவனது முற்போக்குத்தனத்தைக்கூட வாஸவேச்வரத்தின் மரபு கட்டிப் போட்டுவிடுகிறது. மிக எளிதான சதியில் அவனது கூட்டாளிகளே அவனுக்கு எதிராகப் போகவும் அவன் தன் வழி பார்த்துக்கொண்டு போக முடிவெடுக்கிறான்.

புராணக் கதைகளை கதாகாலக்ஷேபமாகச் சொல்லும் ஐயருக்கும் தொடுப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஏதோ ஒரு வகையில் மோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னால் எதுவும் முடியாது என்று நினைக்கும் ஆணிலிருந்து தனக்கு சமம் யாரும் இல்லை என்று நினைக்கும் ஆண்வரை மனதில் எப்போதும் காமத்தையே சுமந்து திரிகிறார்கள். பெண்களும் அப்படியே. 

ஒரு கொலை நிகழ்ந்துவிடவும் நாவல் தேவையற்ற விவரிப்புகளில் அலைபாய்கிறது. அதுவரை அந்நாவல் கொண்டிருந்த இறுக்கமும் நோக்கமும் சிதைந்துவிடுகிறது. விச்சுவின் கணவன் தற்கொலை செய்துகொள்வதும், பிச்சாண்டி தியாகியாவதும் நாடகத்தன்மை வாய்ந்த காட்சிகளாகிவிடுகின்றன. இறுதியில் வரும் பாட்டாவைப் பற்றிய விவரணைகளும் இப்படியே. இவற்றையெல்லாம் வாசகர்களின் கவனத்துக்கே விட்டிருக்கலாம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்ற எண்ணத்தோடு வாசிக்கும்போது இதனைப் பெரிய பிழையாகக் கொள்ளமுடியாது என்பதும் உண்மையே.

நாவல் முழுக்கப் பயன்படுத்திருக்கும் பிராமணப் பேச்சு வழக்கு கச்சிதம். இத்தனை கச்சிதமாக பிராமண வழக்கு கையாளப் பட்டிருக்கும் நாவல்கள் குறைவாகவே இருக்கமுடியும். சில இடங்களில் வாஸவேச்வரத்துக்கென்றே பிரத்யேக பிராமண வழக்கும் உண்டோ என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு மொழியை அபாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கிருத்திகா. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் படிக்க வித்தியாசமான சூழலைக் கொடுக்கும் நாவல் பிற்பாடு நம்மோடு சேர்ந்துவிடுகிறது. ஏற்கெனவே பழக்கப்பட்ட மொழியைப் போல நாமும் விரைவாகப் படித்துக்கொண்டு போகமுடிகிறது. 

மிக நேரடியான நாவல். முக்கியமான நாவலும் கூட.

வாஸவேச்வரம், நாவல், கிருத்திகா, காலச்சுவடு வெளியீடு, விலை: 140 ரூ, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-074-0.html

Share

நான் நாகேஷ் – சிறிய குறிப்பு

நான் நாகேஷ் படித்தேன். சுவாரஸ்யமான புத்தகம்தான். கல்கியில் தொடராக வந்ததன் தொகுப்பு. பலப்பல சுவாரய்ஸ்மான சம்பவங்கள். நாகேஷ் உண்மையில் பெரிய குறும்புக்காரராகவே வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால் ‘நான் நாகேஷ்’ என்ற பெயரை இப்புத்தகம் நிறைவு செய்கிறதா என்று பார்த்தால் பெரிய ஏமாற்றுமே எஞ்சுகிறது. புத்தகம் வெறும் துணுக்குத் தோரணமாக மாறிவிட்டது. நாகேஷின் வாழ்க்கையில் நடந்த சிறிய சிறிய சம்பவங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அவரது வாழ்க்கையில் நடந்த பெரிய விஷயங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை நாகேஷ் அதனை விரும்பியிருக்காமல் இருக்கக்கூடும். இதனால் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்குக் கிடைத்திருக்கவேண்டிய முழுமை கிடைக்காமல் போய்விட்டது. நாகேஷ் பல படங்களில் நடித்தவர். பல அனுபவங்கள் பெற்றவர். இப்படியான ஒருவரின் எண்ண ஓட்டம் அறுந்து அறுந்து ஓடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று கால வரிசைப்படிப் பேசியிருக்கவேண்டும், அல்லது மனிதர்களை முன் வைத்துப் பேசியிருக்கவேண்டும். வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் போல. இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டதில், யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்காமல் போய்விட்டது இப்புத்தகம். கமல் கமல்தான், ரஜினி ரஜினிதான் என்றெல்லாம் துணுக்குகளாகப் படிக்கும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. இவை எல்லாமே கல்கியில் வந்ததுதானா அல்லது புத்தகமாக்கப்படும்போது ஏதேனும் எழுதி சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

இதை மீறி நாகேஷ் விவரித்திருக்கும் பல சமபவங்கள் சுவாரயஸ்மாக உள்ளன. ஜெயகாந்தனுடன் பிச்சை எடுத்தது, திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்தது, அப்படத்தின் வெற்றி விழாவுக்கு இவர் அழைக்கப்படாமல் போனது, கடன் வாங்க துண்டோடு நடந்து போனது, (கிருஷ்ணன்) பஞ்சுவிடம் சட்டை பொத்தான் எங்கே என்று தேடியது என பல சுவாரயஸ்மான துணுக்குகள். எல்லாவற்றிலும் நாகேஷ் ஏதோ ஒன்றை துடுக்குத்தனமாகச் செய்திருக்கிறார்.

 நாகேஷின் திரைப்பட வாழ்வை அழித்தது எம்ஜியார்தான் என்றொரு பேச்சு உண்டு. அதைப் பற்றியெல்லாம் இப்புத்தகத்தில் மூச்சே இல்லை. கன்னடம் பேசும் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து ஒரு கிறித்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது பற்றியான சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் இல்லவே இல்லை. ஒரே ஒரு வரி வருகிறது, நான் காதலித்த ரெஜினாவைத் திருமணம் செய்துகொண்டேன் என்று. இவையெல்லாம் எதற்கு என்று நாகேஷ் நினைத்திருக்கக்கூடும். நாகேஷ் இன்று இல்லாத நிலையில் அவையெல்லாம் இருந்திருந்தால் ஒரு நல்ல கலைஞனின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் சித்திரத்தின் அருமை நமக்குப் புரிந்திருக்கும். அது கை கூடாமல் போனது துரதிர்ஷ்டமே.

 புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-562-2.html

Dial For Books: 94459 01234   |   9445 97 97 97

Share

வேதபுரத்து வியாபாரிகள் – வியாபாரக் கூவல்

வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை மீண்டும் வாசித்தேன். முதன்முதலில் வாசித்தபோது இத்தனை மொக்கையாக இருந்ததாக நினைவில்லை. தமிழக நடப்பு அரசியலை விமர்சிக்கிறேன் என்று அதன் அங்கதத்தின் சகல சுதந்திரங்களையும் பயன்படுத்தியதின் விளைவு, சோ எழுதிய முகமது பின் துக்ளக்கிற்கு இணையான வெற்று எழுத்தாக தேங்கிவிட்டது நாவல்.
 
ஒரு நாவல் தரவேண்டிய அனுபவத்தை எல்லாம் மறந்துவிட்டு, திராவிட அரசியல் என்பதே வெறும் கோமாளிக் கூத்துதான் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நாவலை நிச்சயம் கொண்டாடுவார்கள். திராவிட நடைமுறை அரசியலைப் பற்றிய எனது எண்ணமும் இதுதான். ஆனால் திராவிட அரசியலை அதன் கோட்பாடு சார்ந்து (அப்படி ஒன்று இருப்பதாக நம்புகிறவர்கள் அவர்கள் :>) அணுகுபவர்கள், குறிப்பாக 60, 70களில் தங்கள் இளம் வயதைக் கழித்தவர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை திராவிட அரசியல் என்பது ஒரு விடுதலைக்கீற்று; பார்ப்பனியத்தின் நெருக்கடிக்கான பதிலடி. இதைத் தொடரும் ஒரு தலைமுறைக்கான இன்றைய இளைஞர்களும் இதனை இப்படியே பார்ப்பார்கள்.
 
எல்லா தத்துவமும் நீர்த்துப் போகும்போது, உணர்ச்சிகளின் பீடத்தில் நிறுவப்பட்டிருந்த (அப்படி நான் நினைக்கும்!) திராவிடம் மிக நீர்த்துப் போனதொரு தருணத்தில் இந்த நாவலை வாசிக்கும்போது வெறும் கேளிக்கையாகவும், அந்த கேளிக்கையே பெரியதொரு நடைமுறை உண்மையாகவும் தோற்றமளிக்கும் முரணைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
 
முக்கியமான விஷயம் – நான் நாவலை இன்னும் படித்துமுடிக்கவில்லை. ஒண்ணத்துக்கும் உதவாத ஒரு திரைப்படத்துக்கு 4 பதிவுகள் போடும் திருநாட்டில் ஒரு நாவலுக்கு ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் (யாரையும் மறைமுகமாகக் குறிப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை!) உந்தித்தள்ளவே இந்த முதல்பதிவு! (இன்னும் 3 பதிவுகள் வரலாம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.)
 

(1994ல்) தொடர்கதையாக வெளிவந்த காரணத்தினாலாயே நாவலின் கட்டுமானத்தை இழந்து தவிக்கும் படைப்புகளின் பெருவரிசையில் இதனையும் சேர்க்கலாம். அப்போது எழுதப்பட்ட படைப்பில் இருந்து சிலவரிகள். இது எப்படி 2009ல் பலித்திருக்கிறது பாருங்கள்! இந்திரா பார்த்தசாரதிதான் எல்லாவற்றுக்கும் காரணம். கருணாநிதி பாவம். (கருணாநிதியை தொட்டுக்கலைன்னா உங்களுக்கெல்லாம் நேரமே போகாதே!)
 
“எங்கள் நாட்டைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் நூல் நிலையத்தில் உள்ளன. வரலாறு? புராணம், என்ன வேண்டும் உங்களுக்கு? எங்கள் தலைவரைப் பற்றியும் வந்திருக்கக்கூடிய நூல்கள் அளவிட முடியாது. வரலாறு? புராணம்…”
 
“தலைவரைப் பற்றியுமா புராணம்?”
 
“புராணமில்லாமல் எப்படித் தலைவராக இருக்க முடியும்?”
 
“உதாரணம்?”
 
நஞ்சுண்டன் சிறிது நேரம் பேசாமலிருந்தான். பிறகு கேட்டான்: “இன்று உங்களால் குளிக்க முடிந்ததே எப்படி?”
 
“குழாயில் தண்ணீர் வந்தது, குளித்தேன்.”
 
“எப்படி வந்தது?”
 
“புரியவில்லை.”
 
“பக்கத்து நாட்டுப் பகைவர்கள், எங்கள் ஆற்றைத் திருடிக் கொண்டு போய் மலையருகே ஒளித்து வைத்து விட்டார்கள். போர் தொடுக்க வேண்டுமென்று கொதித்தெழுந்தது எங்கள் மறவர் கூட்டம். ஆனால் எங்கள் தலைவர், நிதானத்தை இழக்காமல், 8,640 விநாடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். எங்கள் மக்கள் கூட்டம் கண்ணீர் விட்டு அரற்றியது. அவர்கள் கண்களினின்றும் பெருக்கெடுத்தோடிய நீரே இன்று இந்நாட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றான் நஞ்சுண்டன்.

 
அப்புறம் வேறென்ன? நாவலை வாங்க என்று ஒரு லிங்க்கை இன்னும் நீட்டவில்லையே என்று நினைக்கிறீர்களா? புத்தகம் அவுட் ஆப் ஸ்டாக். 🙂 ஸ்டாக் வந்த்தும் சொல்கிறேன். இ புக்காக வாங்க விரும்புகிறவர்களும் ஒன்றிரண்டு வாரங்கள் காத்திருக்கவும். NHM eBook Reader is on the way!

Share

ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் – ஒரு சிறிய அறிமுகம்

எந்த ஒரு கோட்பாட்டுக்கும் ‘இதுதான் அந்தக் கோட்பாடு’ என்று தெளிவாகச் சொல்லும் புத்தகம் வேண்டும் என்றபடிதான் பேச்சுத் தொடங்கியது. உலகத்தில் இரண்டு வகையான ஹிந்துத்துவவாதிகள் உண்டு. உண்மையில் பசிக்கான ஹிந்துத்துவவாதிகள். இவர்கள் கோட்பாட்டுவாதிகள். இன்னொன்று பஞ்சத்துக்கு ஹிந்துத்துவவாதிகள். அதாவது கோட்பாட்டுவாந்திகள். நான் இரண்டாவது வகை. அதாவது ஹிந்துத்துவவாதி என்றாக்கப்பட்டவன்.

ஹிந்துத்துவவாதி என்பதும், பிராமணர் என்பதும் ஒருவகைத் தண்டனை என்று அறியப்படுகிற நிலையில், ஆமாம் இப்போ அதுக்கென்ன என்றது மட்டுமே என்னை ஹிந்துத்துவவாதி ஆக்கியது என்று சுருங்கச் சொல்லலாம். மற்றபடி ஹிந்துத்துவ சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு இருந்தது/இருப்பது உண்மைதான். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று வேண்டுமானால் எங்களைச் சொல்லலாம். உண்மையான ஹிந்துத்துவவாதிகளிடம் திட்டு வாங்கவேண்டுமானால், நீங்கள் ஹிந்துத்துவ ஆதரவாளராக இருந்தால்தான் முடியும். அப்போதுதான் அதன் வலி புரியும்! இந்த ஆதரவாளர் அவ்வப்போது சில உண்மைகளை அல்லது உண்மை என்று நம்புவற்றைப் பேசிவிடுவார். அது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை உண்மை என்று நம்பிவிட்டார் பாவம். ஆனால் கோட்பாட்டுவாதிகளுக்கு இந்தப் பிரச்சினை வராது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இப்படித்தான் ‘ஹிந்துத்துவம் என்றால் என்ன’ என்ற ஒரு புத்தகம் வேண்டும் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.

எனக்குத் தெரிந்த ஹிந்துத்துவவாதி அரவிந்தன் நீலகண்டன் எழுதினால் சரியாக இருக்கும் என்று சொன்னேன். அவர் எழுதினால் யாருக்கும் புரியாது என்பது பெரிய ப்ளஸ் பாய்ண்ட். இனிமேல் ’இந்தக் கோட்பாட்டை இப்படி வரையறுக்கவேண்டும்’ என்னும் புத்தகச் சிந்தனைகளுக்கு ஒட்டுமொத்த முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்தானே!

மற்ற கோட்பாடுகளை வரையறுப்பது போல ஹிந்துத்துவத்தை வரையறுக்க முடியாது என்று சொல்லிப் பார்த்தேன். அப்படியானால் ’இதெல்லாம் ஹிந்துத்துவம், இதெல்லாம் ஹிந்துத்துவம் இல்லை’ என்று சொல்லிப் புத்தகம் வரலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. விதி வலிது.

ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸுக்கு ஆள்பிடிக்கும் கூட்டம் கிழக்கு மொட்டை மாடியில்தான் இருக்கிறது என்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்புத்தகம் என்ன செய்துவிடும் என்றும் என்னை தைரியப்படுத்திக்கொண்டேன். இந்தச் சூழ்நிலையில் பெரிய அதிர்ச்சியாக அரவிந்தன் நீலகண்டன் தெளிவாகப் புரியும்படி எழுதிவிட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சிறிது காலம் தேவைப்பட்டது. பாராவின் எடிட்டிங் அதனை இன்னும் சிறப்பாக்கியது. ஒரு வழியாகப் புத்தகம் வந்தது.

ஹிந்துத்துவம் என்னும் கோட்பாட்டை இந்தப் புத்தகம் எப்படி வரையறுக்கிறது? உண்மையில் ஹிந்துத்துவத்தை சரியாக வரையறுப்பது கடினம் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஹிந்துத்துவத்தை அரசியல் சுதந்திரம் என்றுதான் நான் வரையறுக்க விரும்புவேன். சுதந்திரத்தை எப்படி வரையறுப்பது? ஹிந்துத்துவம் பன்மைக்கு முக்கியத்துவம் தருவது. பன்மையை எப்படி வரையறுப்பது? எனவே நிகழ்ச்சிகள் சார்ந்து வரையறுப்பது என்னும் வரையறையை ஏற்படுத்திக்கொண்டார் அரவிந்தன் நீலகண்டன். நல்ல தேர்வுதான். இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சி சார்ந்தும் மெல்ல மெல்ல ஹிந்துத்துவத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். பாரா இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னது, ப்ரில்லியண்ட் க்ளெவர் புத்தகம்.(இந்தப் பதிலில் எனக்கு ஏற்பில்லை என்பது ஒருபுறம். ஆனால் மிகச்சிறந்த பதில் அது!) எனக்கு இந்தக் கோட்பாட்டின்பால் சாய்வு இருப்பதால், இதனை நல்ல புத்தகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. எதிர்த்தரப்புக்காரர்கள் காயத் துவைத்துப் போட்டால், நல்ல விவாதங்கள் வரலாம். வரவேண்டும்.

ஒரு மனிதனை நல்லவனா கெட்டவனா என்று எப்படிச் சொல்வது? அப்படி வேறு வழியில்லாமல் ஒரு பதில் சொல்லவேண்டுமென்றால், அவனுள் இருக்கும் பல நுண்மைகளை மறுத்துவிட்டுத்தான் சொல்லவேண்டியிருக்கும். எந்த ஒரு கோட்பாட்டையும், எந்த ஒரு மனிதனையும், எந்த ஒரு நிகழ்வையும் வரையறுக்கும்போது இந்த அபாயத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். எனவே, ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் புத்தகம், பன்மைகளை அதனதன் தளத்தில் இருந்து வரையறுக்கத் தொடங்கியது. இதில் ஏற்பட்ட பிரச்சினை (வாசகர்களுக்கு) அல்லது பிளஸ் பாயிண்ட் (எழுத்தாளருக்கு) என்ன என்றால், இப்புத்தகத்தைப் படிக்கும் யாரும் ஏதோ ஒரு கட்டத்தில் தானும் ஹிந்துத்துவவாதிதானோ என்று எண்ணிக்கொண்டு விடலாம் என்பதுதான். இப்புத்தகத்தைப் படிக்கும் எதிர்த்தரப்புவாதிகள் கோட்பாட்டை விமர்சிக்காமல், நிகழ்வுகள் சார்ந்து கோட்பாட்டை விமர்சிப்பதும் எளிதாகிவிடும் என்பது இன்னொரு பலவீனம். ஆனால் ஹிந்துத்துவத்தை இப்படி அல்லாமல் வரையறுக்கமுடியாது என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்த்தரப்புவாதிகள் அரவிந்தனிடம் பல கேள்விகளை முன்வைக்கலாம். அவர் அதனையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.

இன்னொரு முறை உண்டு. விரிவான முறை. ஹிந்துத்துவத்தின் ஒட்டுமொத்த வரலாற்றை, அதன் காலத்தை வைத்து முன்னிறுத்திப் பேசுவது. காலம் தோறும் எப்படி ஹிந்துத்துவம் மாறி வந்திருக்கிறது என்பதைப் பேசுவது. இதிலும் நிகழ்வுகள், செயல்பாடுகள் சார்ந்துதான் ஹிந்துத்துவத்தைப் பேசவேண்டியிருக்கும் என்றாலும், ஒரு விரிவான விவரிப்பு சாத்தியமாகும். அதனையும் அரவிந்தன் நீலகண்டன் செய்யவேண்டும். புரியும்படியாகத்தான். இதில் எழுத்தாளருக்கு உள்ள பிரச்சினை, அவர் ஏதோ ஓர் அமைப்பின் உறுப்பினராக இருந்தால், இந்தக் கோட்பாட்டை அந்த அமைப்பின் மீது வைத்துப் பரிசீலிப்பதில் ஏற்படும். ஆனால் அரவிந்தன் இதனை எளிதாக எதிர்கொள்பவர் என்பது எனக்குத் தெரிந்ததுதான். அரவிந்தன் போன்ற நிஜமான அறிவுஜீவிகள் இல்லாமல் இதைப் போன்ற ஒரு பணியைச் செய்வது நிச்சயம் கடினமே.

இதேபோன்று, கம்யூனிஸம் உள்ளிட்ட கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் புத்தகங்கள் வரவேண்டும் என்ற கருத்து வலுப்பட்டிருக்கிறது. கிழக்கு இதைப் போன்ற புத்தகங்களை நிச்சயம் கொண்டு வரும். ஏற்கெனவே கிழக்கு என்பது ஒரு தளம், அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று பத்ரி வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

கிழக்கு மொட்டை மாடியில் ஆர் எஸ் எஸுக்கு இடம் பிடிக்கும் கூட்டத்துக்குப் பக்கத்திலேயே கம்யூனிஸ்டுகளும் ஓர் இடம் பிடித்துக்கொள்ளலாம். தோழர்களே, வாருங்கள்.

வெளியீடு: மினிமேக்ஸ் | விலை: ரூ 25/- | ஆன்லைனில் வாங்க |

Share

ஒரே ஒரு துரோகம் (சிறிய குறிப்பு!)

TACல் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கே வேலை செய்பவர்களுக்கென ஒரு தனி நூலகம் வைத்திருந்தார்கள். அதில் சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்கள் அதிகம் இருக்கும். +2 முடிக்கும்வரை எங்கள் வீட்டுக் கெடுபிடியின் காரணமாக சுதந்திரமாக நிறையப் புத்தகங்கள் வாசிக்க முடிந்ததில்லை. வீட்டுக்குத் தெரியாமலும், கொஞ்சம் தெரிந்தும் வாசித்தவற்றில், பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்களே அதிகம். கல்லூரியில் சேர்ந்ததும் எனக்கான தளைகள் அத்தனையும் அறுந்துவிட்டது போன்ற உணர்வு. வீட்டிலும் தண்ணீர் தெளித்துவிட்டார்கள். தொடர்ச்சியாகத் திரைப்படங்கள், தொடர்ச்சியாகப் புத்தகங்கள், இது போக கிரிக்கெட். இவைதான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த காலம் அது. டாக்-கில் வேலை கிடைத்ததும், அங்கே லைப்ரரி இருந்ததும் பெரிய வரம் போல ஆகிவிட்டது. ஒவ்வொரு எழுத்தாளராகக் குறித்துவைத்துப் படித்தேன். வரிசையாக சுஜாதா புத்தகங்கள். பல புத்தகங்கள் பிடித்திருந்தன. முக்கியமாக மனசில் நின்றது ஒரே ஒரு துரோகம்.

இப்போது கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை மீள்பதிப்பு செய்திருக்கிறது. ஐபோன் வந்தவுடன், அதில் பிடிஎஃப் பைலைப் படிக்கமுடிகிறதா என்று சோதித்தேன். நன்றாகவே வேலை செய்தது. முதலில் அதில் படிக்க எடுத்தது ஒரே ஒரு துரோகம். ஒருவகையில் ஐபோனில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படித்து அதைப் பற்றி எழுதும் முதல் பதிவு இது. :)) (தமிழக அளவில், இந்திய அளவில்? உலக அளவில் இல்லை என்பதை மட்டும் பெருந்தன்மையுடனும் நேர்மையுடனும் ஒப்புக்கொள்கிறேன். இதனை மறுத்து வரும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. :>)

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு படித்தபோது அடைந்த அதே அனுபவங்களை மீண்டும் அடைவது போன்ற ஒரு பிரமை. அந்த நினைவுகள் என் ஆழ்மனத்தில் உறைந்து கிடந்திருக்கின்றன என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில் மனத்தில் அப்படியே பதிந்துபோன பெண் சார்ந்த விஷயங்கள் ஒரே ஒரு துரோகத்தின் வழியாக மீண்டு வருவதைப் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நானே என் சலனப் படத்தைப் பார்ப்பது போல.

சுஜாதாவைப் பற்றிய விமர்சனமாகச் சொல்பவர்கள் சொல்வது – கொஞ்சம் கதை, கொஞ்சம் செக்ஸ், கொஞ்சம் பெண், கொஞ்சம் டெக்னிகல் சமாசாரங்கள் என்பார்கள். இந்தக் கதையும் அப்படியே. கொஞ்சம் கதை கொஞ்சம் செக்ஸ்தான். இதனால்தான் அவர் இளைஞர்களின் எழுத்தாளராக மாறிப் போனாரோ என்னவோ. ஆனால் அதைச் சொல்லும் நடையிலும், அந்த எழுத்தின் சில வரிகளில் சுஜாதா தொட்டுவிடும் அகமன ஆழங்களும் வேறு யாருக்கும் எளிதில் கைகூடாதவை. குறிப்பாக, இந்த நாவலில் ராஜியின் தன்பார்வையில் வரும் பகுதிகளைப் படிக்கும் எந்த ஒரு பெண்ணும் சுஜாதாவின் ரசிகையாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.

ராஜி என்ற பெண்ணின் பார்வையில் விவரிக்கப்படும் அத்தியாங்களில் சுஜாதாவின் வீச்சு அபாரமானதாக இருக்கிறது. இளமையைத் தொலைத்த பிறகு முதிர் இளமையில் திருமணம் நடக்கும் ஒரு பெண்ணின் மனப்பதிவாக அவர் எழுதியிருக்கும் வரிகள் அசலானவை. திருமணம் என்ற ஒன்று நிச்சயமானதும் ஒரு பக்கம் அவள் மனத்தளவில் இளமையான பெண்ணாவதும், மறுபக்கம் அவரது முதிர்மனம் அதனை எச்சரிப்பதும் என சுஜாதாவின் ஆட்டம் அசரடிக்கிறது. முதலிரவு அறையில் சிறுவர்கள் ஓடி விளையாடுவதேகூட கூச்சமாக உள்ளது என்னும் வரி யதார்த்தத்தை சுஜாதா எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு தங்க சொம்பை விழுங்கிவிட்டாற் போல என்னும் வரியில் நான் அசந்தே போய்விட்டேன். ஒட்டுமொத்த கதையில் ராஜியின் பெருமையை, ஏக்கத்தை, தவிப்பை இந்த ஒரு வரி விளக்கிவிடுகிறது.

அம்பலத்தில் சுஜாதா அரட்டையின்போது இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் சொல்லியிருந்தேன். அடுத்த கற்றதும் பெற்றதும் பகுதியில், தான் மறந்த புத்தகங்களை எல்லாம் என் வாசகர்கள் நினைவு வைத்துச் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அவர் யாரைச் சொன்னார் என்று தெரியாது, ஆனால் என்னைத்தான் சொன்னார் என்று நினைத்துக்கொண்டேன்.

இப்போது அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது அந்த நினைவு உறுதிப்பட்டிருக்கிறது. சம்பத்தின் நினைவுகளாக விரியும் பத்திகளில், ரஜினி வில்லனாக நடிக்கும்போது அவருக்குக் கிடைத்துவிடும் சுதந்திரம்போல, சுஜாதாவுக்கு ஒருவித சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. சம்பத் தொடர்ந்து ராஜியையும் சுந்தரியையும் மையமாக வைத்து பெண்களை ஒரு போகப் பொருள் என்னும் அளவுக்குச் சித்திரிக்கும் பகுதிகள் ஓர் உதாரணம். பதின்ம வயது ஆண்களுக்கு இளைஞர் ஒருவர் எழுதியது போலத்தான் இருக்கும். இதையேதான் சுஜாதா விமர்சனமாகவும் எதிர்கொள்ள நேர்ந்தது. பெண்களைப் பற்றி அவர் மிகவும் மலிவாக சித்திரிக்கிறார் என. சம்பத்தின் எண்ணங்களை சுஜாதாவின் எண்ணமாக எடுத்துக்கொண்டால், சுஜாதாவை பிற்போக்காளராக்க இந்த நாவலிலும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. தேவைப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுஜாதாவின் நாவல்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே தொடர் கதைகள். இதனால் வாரா வாரம் ஏற்படும் நிர்ப்பந்தம் காரணமாக, சூழல் காரணமாக அந்த நாவலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கமுடியாதவை. உண்மையில் இவை நாவலின் தோல்விகளே. இதனைப் பெரும்பாலான சுஜாதா கதைகளின் உச்சக்கட்ட காட்சிகளில் காணமுடியும். பெரும்பாலும் ஒரு நாடகத்தன்மையுடன் முடியும். இந்த நாவலை முதலில் படித்தபோது இந்த நாவலை எப்படி முடிக்கப்போகிறார் என்பதுதான் என் கவனமாக இருந்தது. இப்போது மீண்டும் வாசிக்கும்போது, முடிவு முதலிலேயே தெரியும் என்பதால், அவசரம் எதிர்பார்ப்பு இன்றிப் படிக்க முடிந்தது. இதிலும் அந்த நாடகத்தன்மை சிறிய அளவில் எட்டிப் பார்ப்பதை இப்போதும் உணரமுடிந்தது. ஆனாலும் கடைசி அத்தியாயம் சிறப்பானதுதான்.

ஈ ரீடரில் படித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் ஃபாண்ட் இருந்திருக்குமானால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். ஆனால், இதுவே படிக்கும்படியாகத்தான் இருக்கிறது. என்ன ஒரு குறை என்றால், தட்டுப் பிழைகளைக் குறித்து வைக்க இயலவில்லை. இன்னொரு மொபைலில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து பிழைகளைக் குறித்து வைத்தேன். கையடக்க ஈபுக் ரீடரில் என்று விஷ்ணுபுரத்தை எளிதாகப் படிக்கமுடிகிறதோ அன்றுதான் ஈ ரீடர் அச்சுப் புத்தகங்களை வென்றுவிட்டதாக அர்த்தம் என்று ஒரு விதியை உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் விஷ்ணுபுரம் எழுதிய ஜெயமோகன்தான் எவ்வளவு நன்றிக்குரியவர்!

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-452-6.html

Share