Archive for ஹரன் பிரசன்னா

கவிதை

முதலில் அணிந்திருந்தது
மிக மெல்லிய கண்ணாடி
உருவத்தின் பேதங்களை
நான் கண்டதே இல்லை
ஆனாலும் அணிந்திருந்தேன்
அது இல்லாத நாள்களில்
கண்ணில் பட்டவரெல்லாம்
கொஞ்சம் புன்னகையுடன்
அதையே கேட்டவாறிருப்பார்கள்
பின்னர் கொஞ்சம் தடித்தது
சில வேறுபாடுகள்
கண்ணில் அது இல்லாத நேரத்தில்
நிம்மதியாகவும் பாதுகாப்பற்றும்
ஒரே நேரத்தில் தோன்ற
தலைதெறிக்க மனசுக்குள்ளே ஓடி
மெல்ல அதை அணிவேன்
கண்முன்னே மனிதர்கள்
சிரித்தவண்ணம் கடந்தவாறிருப்பார்கள்
பின்னர் இன்னும் தடித்தது
மனிதர்களின் சிரிப்புக்குள்ளே இருக்கும்
மனத்தை மிகத் துல்லியமாகக் காட்டியது
அஞ்சி அதை வீசி எறிந்தேன்
சில நாள்கள் கண்ணாடி இல்லாமல்.
நகரும் பிம்பங்களுக்குள்ளே
இருந்த வண்ண வேறுபாடுகள்
கண்ணாடி இல்லாமலே துலக்கம் பெற்றன.
மனக்குகை எரிந்து
கருஞ்சாம்பல் எஞ்சுமோ என்றஞ்சி
இமைகளை மூடினேன்
என்றாலும்
நின்றபாடில்லை உருவங்களின் நடனம்.

Share

பதாகை வலைத்தளத்தில் வெளிவந்த கவிதைகள்

பாதை 

 

மிக நீண்ட தூரம் அழைத்துச் சென்று
நரகம் விட்டொழிந்தோம் என்றார்கள்
வழியெங்கும்
கூடவே நதியோட
இருபுறமும் மரங்கள்
எங்கள் பயணம்

எல்லாம் இன்றோடொழிந்தது
இனி கவலையில்லை
அன்றாடச் சுகதுக்கங்களில் உழலவேண்டாம்
எல்லாம் இன்பமயம்
எங்கும் எல்லாரும் சமம்
இனி சொர்க்கம்தான்
போகலாம் என்றார்கள்
நான் ஆவலுடன் இருந்தேன்
இப்படி அல்ல என்றார்கள்
என் அடையாளங்களை துறக்கச் சொன்னார்கள்
என் ஆடைகளைக் களையச் சொன்னார்கள்
சொர்க்கத்தில் எதுவுமே தேவையில்லை

என் நினைவுகளை அழித்துவிட்டு
அடுத்த எட்டு நான் வைக்கலாம்
எல்லாவற்றையும் துறப்பதே
ஒரு நரகம்தானே என்றேன்
கேள்விகள் பதில்கள் எல்லாம்
சொர்க்கத்தில் சொல்லப்பட்டாகிவிட்டது
சொர்க்கத்தில் எல்லாமே புதியது
ஒருவகையில் எதுவுமே புதியதல்லவாம்

குழப்பமாக இருந்தது
அங்கு இனி குழப்பமுமில்லை என்றார்கள்

என் நினைவுகளை அழிக்க முற்பட்டேன்
அழிக்க அழிக்க
அவை என்னை
அமிழ்த்த அமிழ்த்த

சுயம் அழித்து
சொர்க்கத்தில்
என்ன இருந்துவிடமுடியும் எனக்கென்றேன்
நீண்ட பதில் சொன்னார்கள்
எல்லாவற்றுக்கும்
பதில் இருந்தது
நினைவுகளை அழித்து
புதியன அடைதல்
சொர்க்கத்தின் பாதை

அமைதியாக
வந்தவழி திரும்பினேன்
ஏனென்றார்கள்
நரகமே சொர்க்கம் என்றேன்
ஆழ்கடலின் மௌனத்தில்
அவர்கள் ஆழ்ந்திருக்க
நதியின் அமைதியில்
நான் திரும்பினேன்

 

அப்படியே ஆகுக

காற்றில் இலை பரப்பி 
குலை தள்ளி
வேரில் செழித்திருந்த 
வாழை மரமொன்றை
வெட்டித் தள்ளினேன்
இலை கிழித்து 
குலை சிதைத்து
தோல் உரித்து 
வெண்தண்டு கடித்துக் குதறி 
வேர் வெட்டி
வெற்றியுடன் மீண்டபோது
நானறியாது 
அனைத்தையும் பார்த்திருந்த 
புதுக்கன்று 
மெல்ல தலைதூக்கி 
உலகுக்கு வந்தது,
ஆம், அப்படிதான் ஆகும்

 

ஆதிகுரல்

அவர்கள் போர் என்று சொல்லிக்கொண்டார்கள்
ஒட்டுமொத்த உலகமும் வெருண்டிருந்தது
கருப்பு நிறத்துக்காரர்கள் தங்கள் கடவுளை துணைக்கழைத்திருந்தார்கள்
வெண்ணிறத் தோலுடையோர் ஒளிபொருந்திய ஆண்டவனை நம்பியிருந்தார்கள்
நெருப்பு நிலத்துக்காரர்கள் அருவம் கொண்டு மீண்டெழுந்தார்கள்
எஞ்சியவர்கள் என்னவோ பேசிக்கொண்டார்கள்
யாரும் யாரையும் கேட்கவில்லை
எல்லோருக்குமே வெற்றி என்றார்கள்
பின் ஒரு திடீர் நொடியில்
எல்லாருமே தோல்வியை உணர்ந்தார்கள்
பூமியின் நிறம் சிவப்பாக மாறி இருந்தது
தோல்வியில்
புனித நதியில் குதித்தார்கள்
கைகளையும் காலையும் மரத்தில் அறைந்து ஆண்டவனை அடைந்தார்கள்
மண் புதைந்தார்கள்
கடைசி மனிதனின்
கடைசிக் குரலின்போது
மெல்லிய உதட்டிலிருந்து
ஆதிகுரல் ஒன்று மெல்ல எழுந்துவந்து
உலகை நிறைத்தது
அக்குரல்
ஓம் என்ற வடிவத்தை ஒத்ததாய் இருந்தது
ஆண்டவனின் குரலகாக ஒலித்தது
அருவத்தின் குரலாக மீண்டது
அக்குரல்
ஆதிகுரல்
ஒரு குழந்தையின் முதல் அழுகையாக இருந்தது

 

செக்மேட்

அவனை இறைவன் என்றனர்
அவன் சொர்க்கம் ஒன்றை உருவாக்கினான
இவனை மனிதன் என்றனர்
இவன் நரகத்தை அமைத்தான்
அவன் நல்லது செய்தான்
இவன் தீயன பழக்கினான்
தெளிந்தது அவன் செய்ய
குழப்பத்தை இவன் செய்தான்
காதல் செய்தான்
காமம் செய்தான்
சிரிப்பு
அழுகை
மகிழ்ச்சி
சோகம்
சாந்தம்
கோபம்
அன்பு
வெறுப்பு
கரு
கொலை
சலித்துப் போன கடவுள்
மனம் மயங்கிய ஒரு தருணத்தில் சாத்தானாக
நான் என்னைக் கடவுள் என்றேன்.

பாம்பு புகுந்த வீடு

தன் வீட்டிலிருந்து
என் வீட்டுக்கு
ஜன்னல் வழியே
பாம்பு புகுந்துவிட்டதென
கூவிக்கொண்டே வந்தார்
பக்கத்து வீட்டுக்காரர்
அலறல் கேட்டு
வீட்டிலிருந்து வெளியே ஓடினேன்
அவரைப் பார்க்க அச்சமாக இருந்தது
அவர் கால்கள் சூம்பிக் கிடந்தன
என் நினைவில் அவர் அப்படி இருந்திருக்கவில்லை
என்ன அரவமென வீட்டிலிருந்து
மனைவி ஓடி வெளியே வந்தாள்
என்னைக் கண்டு மிரண்டு நின்றபோது
அவளைக் கண்டு நான் பயந்து நின்றேன்
அவள் கழுத்து நீண்டு கிடந்தது
இதுவரை இப்படி அவளைக் கண்டதில்ல
மீண்டும் வீட்டுக்குள் அவள் ஓடி
மகனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்
மகன் எல்லாரையும் பார்த்து வீறிட்டு அழுதான்
மகனின் கண்ணில்
நேற்றுவரையிருந்த புருவங்களில்லை
பலர் வந்தார்கள்
ஒருவரை ஒருவர் அஞ்சினோம்
வீடெங்கும் சல்லடையிட்டுத் தேடினார்கள்
பாம்பைக் காணாமல்
அவரவர் வீடு சென்றார்கள்
நாங்கள் எங்கள் வீட்டுக்குச் சென்றோம்
ஆளுக்கொரு பாம்புடன்.

பெரியப்பாவின் வருகை

பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்

 

அஞ்சலி

ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
வழித்தடம் அழுத்தமாகப் பதித்த காலங்களில்
அவரை நான் சபித்திருந்தேன்
கருத்துக் கலவரங்களில் அவர் எப்போதும் வாளேந்தி வருவார்
நான் நேர்மை மட்டும் தாங்கித் தோற்றிருக்கிறேன்
நியாயங்களில் அவருக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததில்லை
தன் நோக்கொன்றே சரியானது என்று உறுதியாக நம்பினார்
ரத்தம் கண்டு நான் மிரண்ட சமயங்களில்
புத்தனின் புன்னகையுடன் அவர் மேலேறிப் போனார்
எங்கோ உயர்ந்த புள்ளியில்
சூரியனுக்கு அருகில்
வெற்றிச் செருக்கில் என்னைத் திரும்பிப் பார்த்தபடி
சட்டென ஒருநாள்
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
அவருக்கும் எனக்குமான நினைவுகளில் உழன்றபடி
சுண்டிப் போன ரத்த விரல்களில்
அவர் விட்டுச் சென்ற அநீதிகளின் மேல் அமர்ந்து
இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்
மிகக் கவனமான
ஒரு அஞ்சலி

Share

கவிதை

கையிலிருந்து நழுவிக்கொண்டிருக்கும்
காலம்
காதல்
காமம்
உயிர்
பாதச் சத்தமற்ற ஒரு பூனையின் நடையைப் போல
நுழைந்தது தெரியாத ஒளியைப் போல
முகிழ்ந்தது அறியா மலர் போல
கையிடுக்கிலிருந்து
நெருக்க நெருக்க
வழிந்துகொண்டிருக்கும் நீர் போல
கனன்றுகொண்டே
கரியாகிக் கொண்டிருக்கும்
கங்கு

Share

two poems

முதலில் அணிந்திருந்தது
மிக மெல்லிய மூக்குக் கண்ணாடி
உருவத்தின் பேதங்களை
நான் கண்டதே இல்லை
ஆனாலும் அணிந்திருந்தேன்
அது இல்லாத நாள்களில்
கண்ணில் பட்டவரெல்லாம்
கொஞ்சம் புன்னகையுடன்
அதையே கேட்டவாறிருப்பார்கள்
பின்னர் கொஞ்சம் தடித்தது
சில வேறுபாடுகள்
கண்ணில் அது இல்லாத நேரத்தில்
நிம்மதியாகவும் பாதுகாப்பற்றும்
ஒரே நேரத்தில் தோன்ற
தலைதெறிக்க மனசுக்குள்ளே ஓடி
மெல்ல அதை அணிவேன்
கண்முன்னே மனிதர்கள்
சிரித்தவண்ணம் கடந்தவாறிருப்பார்கள்
பின்னர் இன்னும் தடித்தது
மனிதர்களின் சிரிப்புக்குள்ளே இருக்கும்
மனத்தை மிகத் துல்லியமாகக் காட்டியது
அஞ்சி அதை வீசி எறிந்தேன்
சில நாள்கள் கண்ணாடி இல்லாமல்.
நகரும் பிம்பங்களுக்குள்ளே
இருந்த வண்ண வேறுபாடுகள்
கண்ணாடி இல்லாமலே துலக்கம் பெற்றன.
மனக்குகை எரிந்து
கருஞ்சாம்பல் எஞ்சுமோ என்றஞ்சி
இமைகளை மூடினேன்
என்றாலும்
நின்றபாடில்லை உருவங்களின் நடனம்.

(25-1-2015)

கையிலிருந்து நழுவிக்கொண்டிருக்கும்
காலம்
காதல்
காமம்
உயிர்
பாதச் சத்தமற்ற ஒரு பூனையின் நடையைப் போல
நுழைந்தது தெரியாத ஒளியைப் போல
முகிழ்ந்தது அறியா மலர் போல
கையிடுக்கிலிருந்து
நெருக்க நெருக்க
வழிந்துகொண்டிருக்கும் நீர் போல
கனன்றுகொண்டே
கரியாகிக் கொண்டிருக்கும்
கங்கு

(26-1-2015)

Share

மாதொருபாகன்

மாதொருபாகன் நாவல் பற்றியும் அதைத் தொடர்ந்த பிரச்சினை பற்றியும் நான் எழுதியுள்ள விமர்சனம் மதிப்புரை.காமில் வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.

சேமிப்புக்காக இங்கே:

மாதொருபாகன்

பெருமாள் முருகன் தான் இனி எதுவும் எழுதப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இது ஒரு தற்காலிக அறிவிப்பாகவே இருக்கவேண்டும். அவர் மீண்டும் எழுதவருவார் என்றே நினைக்கிறேன். பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு அவர் மீண்டும் எழுதவரவேண்டும் என்றே விரும்புகிறேன். பெருமாள் முருகன், ஐ’ம் வெயிட்டிங்.

மாதொருபாகன், பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், ரூ 175

மாதொருபாகனை முன்வைத்து நடக்கும் பிரச்சினைகள் மிகவும் மோசமான முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றன. எங்கோ வெளியான திரைப்படம் ஒன்றுக்கு சென்னை ஸ்தம்பித்தபோது நாம் அதிர்ந்தோம். இன்று திருச்செங்கோடு ஸ்தம்பித்திருக்கிறது. அது அமெரிக்கா, இது திருச்செங்கோடு என்பார்கள். உண்மைதான். ஆனால் என்னளவில் உணர்வளவில் இந்த இரண்டும் ஒன்றே. இது இப்படியே வளர்ந்து நாளை அங்கே செல்லக்கூடும். திருச்செங்கோட்டு மக்களை அந்த நாவல் வசைபாடவில்லை. அது ஒரு புனைவு மட்டுமே. புனைவுக்கும் ஒரு எல்லை உண்டு என்பது சரி. அப்படி அந்த எல்லை மீறப்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல.

புத்தகத்தை எரித்ததும், நீதிமன்றத்துக்குச் சென்றதும் சரியான வழியே. (புத்தகத்தை எரிப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் உகந்தது அல்ல. ஆனால் அது அமைதியான போராட்ட வடிவம் என்றே நினைக்கிறேன்.) ஒரு குழு அல்லது பல குழுக்கள் சேர்ந்து பஞ்சாயத்து செய்வதும், அவர்களுக்காக ஓர் எழுத்தாளர் பின்வாங்குவதும் என்ன விதமான நியாயம்? சில குழுக்கள் சேர்ந்து விஸ்வரூபத்தை மிரட்டியதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? சென்சார் கிடைத்த படத்தை வெளியிட சில குழுக்கள் ஆதரவு தேவை என்பதற்கும், அரசு தடை செய்யாத ஒரு புத்தகத்தை விற்க சில குழுக்களின் ஆதரவு தேவை என்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஜார்ஜ் புஷ் உயிரோடு இருக்கும்போதே, அவரைக் கொலை செய்ததுபோல் திரைப்படம் எடுத்தார்கள். மோடி உயிரோடு இருக்கும்போது இப்படி ஒரு படம் எடுத்தால் என்ன ஆகும் என்று யோசிக்கிறேன். நாம் இத்தனை பின் தங்கி இருக்கத் தேவை இல்லை என்ற ஆதங்கமே எழுகிறது.

பெருமாள் முருகன் நடக்காத ஒன்றை எழுதியிருந்தால், நீதிமன்றத்துக்குச் சென்று அதற்குத் தடை வாங்குவதே சரியான வழி. அதை விட்டுவிட்டு பெருமாள் முருகனை தங்களோடு வீதிக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இப்பிரச்சினை இத்தனை வலுவானதாக மாறியதற்கு ஊடகங்களே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இதே குழுக்கள் இதே ஊடகங்களால் எத்தனை இன்னல்களை அடைந்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் இன்று இவர்கள் இதே ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு அதையே செய்கிறார்கள். பொதுவாக பிராமணர்களின் உயர்சாதி ஆதிக்கத்தை சாடும் இடைசாதிக் குழுக்கள், இன்னொரு வழியில் அதே சாதி ஆதிக்கத்தை அடைய முயலும் வெறிக்கும் இதற்கும் வித்தியாசமில்லை.

இந்தக் குழுக்கள் செய்வது நல்லதற்கல்ல. இது மோசமான முன்னுதாரணமாக அமையும். இன்று பெருமாள் முருகன் என்பதால் இதனைச் செய்து வெற்றி என்று காண்பித்துக்கொள்ள முடிந்தது. நாளையே வேறு ஒரு பதிப்பகத்தில் வேறு ஓர் எழுத்தாளர் எழுதினால் இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. தொடர்ந்து பலர் எழுதினால் என்ன செய்துவிடமுடியும்? ஆரியப் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்ததாகத்தான் இன்றுவரை பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி கருத்தால் எதிர்கொள்கிறோமோ அப்படியே இதை எதிர்கொள்ளவேண்டும்.

சிலர் மிகச் சாதாரணமாகக் கேட்கிறார்கள். பெருமாள் முருகனின் மனைவியோ அம்மாவோ இப்படி செய்தார்களா என்று. இவர்களுக்கு இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாது. இலக்கியத்தை எப்படி வாசிக்கவேண்டும் என்றும் தெரியாது. புனைவு என்றால் மருந்துக்கும் பழக்கமில்லை. ஆனால் பிரச்சினையில் தங்கள் வாயைத் திறக்க முதலில் வந்து நிற்பார்கள். இந்நாவலில் தன் மனைவி குழந்தைக்காக இன்னொருவனுடன் போனதை அறிந்த கணவன், மனம் துடித்து மனைவியை வெறுத்து ‘தேவடியா முண்ட ஏமாத்திட்டியேடி’ என்கிறான். இதை எந்தக் குழுவும், இந்த சிலரும் கணக்கில் கொண்டதாகவே தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் இந்த நாவலை வாசிக்கவில்லை. ஒரு நாவலை இவர்களால் வாசிக்கவே முடியாது. வாசித்தாலும் எழுத்துகளையும் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் மட்டுமே இவர்கள் வாசித்திருப்பார்கள். மனிதர்களை அல்ல.

பெருமாள் முருகன் இந்நாவலுக்கு சரியான ஆதாரத்தை அளிக்கவில்லை என்பது முக்கியமானதுதான். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைப் பற்றிய வரலாற்றை எவ்வித ஆதாரமுமில்லாமல் உருவாக்குவது அந்தக்கால பிரிட்டிஷ் ஆசிரியர்களின் வழிமுறை. இந்தியாவை அவர்கள் கண்டுணர்ந்த விதம் அது. அதை பெருமாள் முருகன் செய்வது ஆச்சரியமே.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் கொண்டாடத்தக்க நாவல் அல்ல. புறக்கணித்தக்க நாவலும் அல்ல. மிக அழகான விவரணைகள் உள்ள நாவல். கிராமம் பற்றியும், குடிக்க இடம்தேடி அலைந்து புதிய புதிய இடங்களைக் கண்டடையும் விவரிப்புகள் அருமை. மண் சார்ந்த எழுத்துகள் மனத்தை அள்ளும். இந்நாவலும் அப்படியே.

குழந்தை இல்லாவிட்டால் ஒரு சமூகம் எப்படி ஒருவரை பேசும் என்பதைப் பற்றிய அனைத்துச் சித்திரிப்புகளும் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. அதிலும் கிராமத்துப் பகுதிகளில் இவற்றை நாம் இன்றும் கேட்கலாம். இந்நாவல் நடப்பதோ கிட்டத்தட்ட 1940களில். அப்போது இன்னும் இது தீவிரமாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இதை ஒட்டியேதான் நாவலின் மிகப்பெரிய பலவீனமும் அமைந்துள்ளது. காளிக்கும் பொன்னாளுக்கும் பிள்ளையில்லை. ஆனால் அவர்கள் உறவில் எந்தக் குறையும் இல்லை. அவர்களது காமம் மிக விரிவாகவே இந்நாவலில் விளக்கப்பட்டுள்ளது. பிள்ளை இல்லாததற்குக் காரணம் காளியா பொன்னாளா என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இன்றும்கூட ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால், பெண்ணுக்குத்தான் குறை இருக்கும் என்று நினைக்கும் சமூகம் நமது சமூகம். அன்று இந்நிலை இன்னும் ஆழமாகவே இருந்திருக்கும். இதனால் இயல்பாகவே காளியின் அம்மா காளியை இரண்டாவது திருமணத்துக்கு வற்புறுத்துகிறாள். பொன்னாளின் அம்மாவுக்கும் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. இதுவரை நாவலில் எல்லாம் சரி. மிக யதார்த்தமாகவே உள்ளது.

ஆனால் திடீரென்று காளியின் அம்மாவும் பொன்னாளின் அம்மாவும் பேசி, பொன்னாளை திருவிழாவின் கடைசி நாளில் இன்னொருவனுடன் கூடி சாமி குழந்தை பெறச் சொல்லி அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார்கள். இது என்ன தர்க்கம்? இவர்கள் இருவரும் காளிக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவெடுத்ததன் காரணமே, பொன்னாளுக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு தோன்றியிருக்கவேண்டும் என்பதுதானே. பின்னர் எப்படி பொன்னாளை இன்னொருவனுடன் கூட அனுப்பிகிறார்கள்? காளிக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் சக்தி இல்லை என்று இவர்களுக்கு மட்டும் தெரியுமா? ஆனால் அப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் நாவலில் சொல்லப்படவில்லை. காம விவரிப்பில் காளிக்கோ பொன்னாளுக்கோ அப்படி தோன்றுவதும் இல்லை. அப்படியே ஒருவேளை காளிக்கு சக்தி இல்லை என்றால், ஏன் அவனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய நினைத்தார்கள்? நாவல் படு மோசமாகத் தோற்கும் இடம் இது.

இன்றளவும் ஒரு பெண் உடல் என்பது ஆணின் சொத்து. அதனால்தான் ஓர் ஆண் ஒரு பெண்ணை இப்படி பாதுகாக்கிறான். தனது குழந்தை என்பது பற்றிய உத்திரவாதம் ஓர் ஆணுக்கு மிகத் தேவையான ஒன்று. அது அவனது வம்சத்தின் ஆணிவேர். இது இன்றளவும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது. இன்றளவும் பொதுப்புத்தியில் ’என் குழந்தை’ என்னும் சொல் தரும் மமதையை விவரிக்கமுடியாது. இது இத்தனை காலூன்றியதற்குப் பின்னால் உள்ள மனப்பதிவு ஒருவேளை ஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது இன்றளவும் அப்படியே நீடித்திருப்பதற்குப் பெண்களும் காரணம் என்பதே என் எண்ணம். தன் கணவனுக்குத் தவிர யாருக்கும் தன்னை தந்ததில்லை என்பதே இன்றைய பெரும்பாலான பெண்களின் உச்ச மகிழ்ச்சி, பெருமை. ஆனால் பொன்னாள் அதை மிக எளிதாகத் தாண்டுவதும், அதையே பொன்னாளின் மாமியாரும் அம்மாவும் சொல்வதும் கடும் அதிர்ச்சி அளித்தது. ஒருவேளை என் கலாசாராம் சார்ந்த ‘பிற்போக்கு’ வாசிப்பின் ஒரு அம்சமாக இது இருந்திருக்கலாம். உண்மையில் பொன்னாள் யாரோ ஒருவனைத் தேடி அலைந்து அவனைப் பார்த்து புன்னகைத்து ஒதுங்கும்போது என்ன இவ என்றுதான் தோன்றியது என்பதை மறைக்க விரும்பவில்லை. ஒருவேளை இந்த அதிர்ச்சி முடிவை நோக்கியே ஒட்டுமொத்த நாவலும் செலுத்தப்பட்டதோ என்றும் தோன்றியது.

க்ளைமாக்ஸை முடிவு செய்துகொண்ட, திரைப்படத்தின் திரைக்கதை நகர்த்துவதுபோல், இப்படித்தான் உச்சகட்டம் இருக்கவேண்டும் என்று பெருமாள் முருகன் முடிவெடுத்துவிட்டு நாவலை எழுதிருக்கிறார் போல. ஆனால் அதற்கான வலுவான தர்க்கங்களை அவர் முன்வைக்கவில்லை.

புள்ளியியல் விவரப் பிழைகள் இருந்தால் அதை நீக்கிவிட்டு அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அடுத்த பதிப்பைக் கொண்டுவந்துவிடலாம். ஆனால் ஒரு நாவலின் உணர்வாதாரமே தர்க்கப் பிழையால் தடுமாறுமானால் அதை திருத்திவிடமுடியாது. வருத்தம் மட்டும் பட்டுக்கொள்ளலாம்.

நாவலில் எல்லா சாதியனரைப் பற்றிய கிண்டலான குறிப்புகள் வருகின்றன. ராஜாஜியைப் பற்றிய ஒற்றை வரிக் கிண்டலும் வருகின்றது. தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பற்றிய அந்தக் கால உயர் / இடைநிலை சாதியினரின் மனச்சித்திரிப்பு அப்படியே இடம்பெற்றுள்ளது. மேல்நிலையாக்கம் பெற்ற கோவில்களைவிட சிறுதெய்வ வழிபாட்டை விதந்தோதும் மனநிலையும் இந்நாவலில் உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவர் வெளிப்படையாக கெட்டவார்த்தை பேசுவதைப் போல, இந்நாவலில் காளியின் சித்தப்பா பேசுகிறார். அதிலும் இரண்டு இடங்கள் இவர் பேசும் ’கெட்ட’ வசனங்கள் புன்னகைக்க வைக்கின்றன.

சாதாரணமாக கடந்துபோயிருக்கவேண்டிய நாவலை வரலாற்றில் இடம்பெற வைத்ததுதான் இந்த சில குழுக்கள் செய்திருக்கும் சாதனை.

– ஹரன் பிரசன்னா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-372-2.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Share

சாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு

இந்த 2015 புத்தகக் கண்காட்சியில் எனது சிறுகதைத் தொகுப்பான “சாதேவி” புத்தகமும் வெளியாகிறது.  இதனை வெளியிடும் மயிலை முத்துகள் பதிப்பகத்துக்கும், இதற்கு பலவழிகளில் உதவிய Jayashree Govindarajan,Suthanthira VijiManikandan Vellaipandianஆகியோருக்கு எவ்விதம் நன்றி சொன்னாலும் போதாது.

100-00-0002-377-9_b-01


 

பப்ளிஷர் சார் முத்து கணேஷ் அவர்களுக்கு நன்றி. 

புத்தகத்தை ஆன்லைனில் வாங்கhttps://www.nhm.in/shop/100-00-0002-377-9.htmlஇங்கே செல்லவும். 34 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 360 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தின் விலை ரூ 300.

உடனே வாங்குவீர்!

 

 

 

 

Share

2014 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

2013ல் நான் வழங்கிய விருதுகளை, தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒவ்வொரு தமிழன் வரை அனைவரும் ஏற்றுக்கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர் என்பது நீங்கள் அறிந்ததே. அந்த வரிசையில் 2014 – திரைப்பட விருதுகள் இங்கே. 

உண்மையில் எல்லா விருதையும் லிங்காவுக்கும் கோச்சடையானுக்கும் கொடுப்பதே நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால் அநியாயமாக கீழே உள்ள பட்டியலை இட்டுள்ளேன். பார்த்து வளர்ச்சி பெறுக. 

 

சிறந்த திரைப்படம்: ஜிகர்தண்டா

சிறந்த நடிகர்: ரஜினிகாந்த் (லிங்கா) (Cool friends!)

சிறந்த நடிகை: யாருமில்லை

சிறந்த புதுமுகம்: துல்கர் சல்மான் (வாயைமூடிப் பேசவும்)

சிறந்த இயக்குநர்: கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)

சிறந்த கதை: ரஞ்சித் (மெட்ராஸ்)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: லிங்கா

சிறந்த வில்லன்: William Orendorff (லிங்கா)

சிறந்த நகைச்சுவை நடிகர்: சூரி (பல படங்கள்)

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): அனிருத் (வேலையில்லா பட்டதாரி, கத்தி)

சிறந்த ஒளிப்பதிவு: ரத்னவேலு (லிங்கா)

சிறந்த துணை நடிகர்: கலையரசன் (மெட்ராஸ்)

சிறந்த துணை நடிகை: ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயண் (மெட்ராஸ்)

சிறந்த பாடகர்: ஏ.ஆர். ரஹ்மான் (இந்தியனே, கோச்சடையான்)

சிறந்த பாடகி: சின்மயி (இதயம் நழுவி நழுவி, கோச்சடையான்)

சிறந்த பாடல்: இதயம் நழுவி நழுவி (கோச்சடையான்)

சிறந்த குத்துப்பாட்டு: மஸ்காரா போட்டு (சலீம்)

சிறந்த பாடலாசிரியர்: கானா பாலா (மெட்ராஸ்)

சிறந்த வசனம்: கே.எஸ். ரவிக்குமார் (கோச்சடையான்)

சிறந்த புதிய முயற்சி: கோச்சடையான்

சிறந்த ஓவர் ஆக்டிங்: துளசி (பண்ணையாரும் பத்மினியும்)

சிறந்த அண்டர் ஆக்டிங்: விஜய் ஆண்டனி (சலீம்)

சிறந்த காணாமல் போன நடிகர்: சிம்பு

நன்றாக வந்திருக்கவேண்டியவை: சதுரங்க வேட்டை, ஆடாம ஜெயிச்சோமடா.

பார்க்க முடியாதவை: மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று காளைகளும், பண்ணையாரும் பத்மினியும், மஞ்சப்பை, சைவம், அஞ்சான்.

Share

Fire for books

"ஹலோ ஃபயர் பார் புக்ஸா?”

“இல்லைங்க, டயல் ஃபார் புக்ஸ்.”

“ஓ, ஸாரிங்க. தப்பா கூப்பிட்டுட்டேன்.”

“சொல்லுங்க சார், என்ன புத்தகம் வேணும்.”

“இல்லை, அவசரமா ஒரு புத்தகத்தை எரிக்கணும். அதுக்கு ஒரு புத்தகம் வேணும்.”

“சார், நாங்க புத்தகத்தை விப்போம். அவ்ளோதான். எரிக்கணும்னா…”

“எரிக்கணும்னா எரிக்கணும். அவ்ளோதான். சரி, சட்டுன்னு ஒரு புத்தகம் சொல்லுங்க.”

“நீங்கதான் என்ன புத்தகம்னு கேக்கணும். எங்ககிட்ட 20,000க்கும் மேல புத்தகம் இருக்கு. சட்டுன்னு சொல்லுங்கன்னா என்ன சொல்றது?”

“இருபதினாயிரத்தையும் எரிக்க முடியாது. வசதியில்லை. ஒண்ணு மட்டும் சொல்லுங்க.”

“சார், என்ன புத்தகம் வேணும்னு சொல்லுங்க. நிறைய கஸ்டமர்ஸ் லைன்ல இருக்காங்க.”

“அவ்ளோ பேர் எரிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?”

“ஹலோ. உங்களுக்கு வேணும்ன்ற புத்தகத்தை சொல்லுங்க.”

“சரி, இப்ப பரபரப்பா நிறைய எழுதுற ஆள் பேர் யாராவது சொல்லுங்க.”

“ஜெயமோகன். அவர் புத்தகம் வேணுமா?”

“ஆமா, அவரையே எரிப்போம்.”

“சார், என்ன சொல்றீங்க.”

“அவர் புத்தகத்தைத்தான் சொன்னேன். எதாவது புத்தகம் 10 காப்பி அனுப்புங்க.”

“சார், நாங்க விக்கிறது மட்டும்தான் செய்யறோம். எரிக்கிறதெல்லாம் சரியா வராது.”

“அதான் அதை நான் பாத்துக்கறேன். நீங்க பத்து காப்பி அனுப்புங்க.”

“வண்ணக்கடல்னு ஒரு புத்தகம். ஒரு காப்பி 1500 ரூ. பத்து காப்பி 15,0000 ரூபாய். தபால் செலவு கிடையாது. சர் சார்ஜ் உண்டு…”

“என்னது பதினஞ்சாயிரமா? ஏன் இருபது ரூபா முப்பது ரூபாய்க்கெல்லாம் எழுதுறதில்லையா அவரு?”

“இருக்கு சார். உலோகம்னு இருக்கு. 50 ரூபாய்தான். அதுல பத்து காப்பி?”

“உலோகம்ன்றீங்க. எரிக்க முடியுமா?”

“சார், நாங்க எரிக்க அனுப்பலை. நான் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

“நானும் திரும்ப திரும்ப சொன்னேனே.”

“சார் இது சரிப்பட்டு வராது.”

“என்ன சரிப்பட்டு வராது? சொல்லாம வாங்கி எரிச்சா நல்லவன். சொல்லிட்டு செஞ்சா கெட்டவனா?”

“நீங்க என்னமோ செய்ங்க, சொல்லாதீங்கன்னு சொல்றேன்.”

“சரி விடுங்க. பத்து காப்பி, புத்தகம் பேர் என்ன சொன்னீங்க? இரும்பா? செம்பா? அதை அனுப்புங்க.”

“உலோகம் சார்…”

“ஏன் இரும்பு உலோகம் இல்லையா?”

“அனுப்பறேன் சார். போஸ்ட்மேன் கிட்ட பணம் கொடுத்துட்டு புத்தகம் வாங்கிக்கோங்க.”

“ஓ போஸ்ட்மேன் வேற வருவாரா? உடனே போய்டுவார்ல? இல்லை அவர் முன்னாடியே எரிக்கலாமா?”

“சார், உங்க ஆர்டரை எடுத்துக்கறோம். உங்கள் வீடு தேடி புத்தகம் வரும்.”

“போஸ்ட்மேன் எத்தனை மணிக்கு வருவார்னு சரியா சொல்லுங்க.”

“அது சொல்லமுடியாது சார். எப்ப வேணா வருவார்.”

“என்னங்க பொறுப்பே இல்லாம சொல்றீங்க. போட்டோகிராபர் எல்லாம் அரேஞ்ச் பண்ணனும், நிறைய வேலை இருக்கு. சரியா எப்ப வருவார்னு சொல்லுங்க.”

“அதை சொல்லமுடியாது சார். அது உங்க வேலை. உங்க ஆர்டருக்கு நன்றி. புத்தகம் வீடு தேடி வரும்.”

“வரலைன்னா நான் அங்க தேடி வருவேன். சரி, அந்த புத்தகம் எழுதுனவர் பேர் என்ன்? நடிகர் மோகனா?”

“சார், ஜெயமோகன்.”

“கூட வேற யார் புத்தகம் இருந்தாலும் அனுப்புங்க.”

“நீங்கதான் சொல்லணும் யார் புத்தகம் வேணும்னு.”

“நின்னு எரியணும். யார் இதா இருந்தா என்ன?”

“ஜெயமோகன் புத்தகத்தை ஏற்கெனவே எரிச்சிருக்காங்க. நின்னு எரிஞ்சதாத்தான் பேச்சு.”

“என்னது ஏற்கெனவே எரிச்சுருக்காங்களா? நல்லவேளை சொன்னீங்க. அப்ப அவர் வேண்டாம். வேற சொல்லுங்க. நேரமாச்சு. நீங்க புத்தகம் எழுதிருந்தா அதைக்கூட அனுப்பலாம்.”

“சார்… சார்…”

“ஏன் திடீர்னு ரகசியமா பேசறீங்க?”

“இல்லை, நானும் ஒரு புத்தகம் எழுதிருக்கேன். பத்து நூறு காப்பி விக்காம அப்படியே இருக்கு.”

“மொதல்லயே சொல்லிருக்கலாம்ல. சரி விலை என்ன? 20 ரூபாய்ல இருக்கா?”

“புத்தக விலை 90 ரூபாய் சார். பத்து காப்பி வாங்கினா நான் 10% டிஸ்கவுண்ட் தர்றேன். யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.”

“நான் ஏன் சொல்லப்போறேன்?”

“உங்க அட்ரஸ் சொல்லுங்க, இப்பவே அனுப்பறேன்.”

“உங்க புத்தகம் என்னத்த பத்தினது?”

“கவிதை சார்…”

“கவிதையா? அப்ப வேண்டாம். எரிக்கது கஷ்டம்.”

“என்ன சார் சொல்றீங்க. 20% டிஸ்கவுண்ட்கூட தர்றேன் சார்.”

“அடுத்த தடவை பார்க்கலாம். வேற யாராவது இருந்தா சொல்லுங்க.”

“இப்படி சட்டுன்னு கேட்டா?… பா.ராகவன்னு ஒருத்தர்… இல்லை, மருதன்… வேணாம் சொக்கன். ஹ்ம்ம்ம் இருங்க, அரவிந்தன் நீலகண்டன்னு ஒருத்தர்… இல்லை முகில்… இருங்க சார்… மகாதேவன்னு ஒருத்தர்… நிறைய இருக்கா சட்டுன்னு குழப்புது சார், சாரி.”

“அப்பம் ஒண்ணு செய்ங்க. ஒரு லிஸ்ட் எடுத்து எனக்கு அனுப்புங்க. ஒவ்வொண்ணா எரிக்கேன். அப்பம் இப்பம் போனை வைக்கேன்.”

“சார்.. ஹலோ… சார்… சார்… போனை வெச்சிட்டீங்களா?”

Share