Archive for ஹரன் பிரசன்னா

காவிக் கொடியும் அம்பேத்கரும்

பாரதியாருக்கு இந்தியக் கொடியின் நிறங்களைப் பொருத்தியபோது தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்துவிட்டதாம். பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் அட்டையில் ஒரு பிரச்சினை! பாரதியாரின் குங்குமப் பொட்டை அழித்து படம் வரைந்தவர்கள்தான் வெட்கப்படவேண்டுமே ஒழிய, காவியை பாரதிக்குத் தந்தவர்கள் அல்ல. பாரதி சந்தேகமே இல்லாமல் காவிக்காரர்தான். காவி என்பது பாரதத்தின் நிறம். பாரதப் பண்பாட்டின் நிறம். வீரத்தின் நிறம். அர்ப்பணிப்பின் நிறம். சேவையின் நிறம். காவிக்கொடியே இந்தியாவின் கொடியாக இருக்கவேண்டும் என்ற ஹிந்து மகா சபையின் கோரிக்கையை அம்பேத்கர் ஆதரிப்பதாக உறுதி கூறினார் என்பது வரலாறு. பாரதியின் தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்தது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் சரியாகவே நிகழ்ந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இப்படித் தற்செயலாக நிகழ்வது நல்ல அறிகுறி. 🙂

படம்: அம்பேத்கரை எஸ்.கே. போலே தலைமையில் சந்தித்து காவிக்கொடிக்கு ஆதரவு கேட்ட ஹிந்து மகா சபையினர்.

கட்டுரை: அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை, ஸ்வராஜ்யா இதழில். https://swarajyamag.com/politics/guha-is-wrong-rss-never-had-any-shade-of-doubt-in-hoisting-the-tricolour

Share

சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம்

சாவர்க்கரின் My Transportation for life புத்தகம், எஸ்.ஜி. சூர்யாவால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக விரைவில் வர இருக்கிறது. இப்புத்தகம் வெளியாகும்போது இந்நூலைப் பற்றிய விரிவான என் கருத்தைப் பதிகிறேன்.


இந்த நூல் சாவர்க்கரை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவியது. உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் தவறவே விடக்கூடாத நூல் இது. இந்திய விடுதலைக்காகப் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்த தலைவர்கள் பட்ட கஷ்டங்களையும் செய்த தியாகங்களையும் பற்றிய ஒரு பிம்பத்தை சாவர்க்கரின் மூலம் இந்நூலில் பெறலாம். சாவக்கரின் அப்பழுக்கற்ற தேச பக்தியையும் தொலைநோக்குப் பார்வையையும் இப்புத்தகத்தில் காணலாம். முஸ்லிம்களுக்கான தாஜா அரசியலுக்கு எதிராக ஹிந்துத்துவ அரசியலை சிறையிலேயே முன்னெடுக்கும் சாவர்க்கர், தொடர்ச்சியாக ஹிந்துக் கைதிகளுக்காகச் சிறையில் போராடுகிறார். இவை முழுக்க மிக விரிவாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் என்றால் சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் சலுகைகள் ஹிந்து என்றால் மறுக்கப்படுவதை அடியோடு தீவிரமாக எதிர்க்கும் சாவர்க்கர், இந்த முஸ்லிம்களில் இந்திய முஸ்லிம்கள் மற்றும் பதான் முஸ்லிம்களுக்கு இடையேயான வேறுபாட்டையும் பதிவு செய்கிறார். தான் போராடுவது நியாயத்துக்காக மட்டுமே அன்றி, எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் அல்ல என்று உறுதியாகப் பேசுகிறார். அநியாயம் மற்றும் அக்கிரமங்களுக்கு அடிபணிந்து ஹிந்துக்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்று சொல்லும் சாவர்க்கர், புரட்சியுடன் கூடிய போராட்டமே நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறார். சிறையில் அஹிம்சை எடுபடாமல், இவர் செய்யும் புரட்சிகளே நன்மையைக் கொண்டு வருகின்றன. காந்திஜியின் அஹிம்சை பற்றிய சாவர்க்கரின் கிண்டல்களையும் எதிர்ப்பையும் இந்நூலில் காணலாம்.


தீவிரமான தேசப்பற்று, எப்போதும் எதிலும் தன்னலத்தை முன்னிறுத்தாத தலைமைத்துவம், விடாமுயற்சி, தொடர் போராட்டம் என எல்லா வகைகளிலும் சாவர்க்கர் சந்தேகமே இன்றி வீர சாவர்க்கர்தான்.

இந்நூலை நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.

Share

என் டி ஆர்: மகா நாயகடு

ஏற்கெனவே ‘கதா நாயகடு’ பற்றி எழுதி இருந்தேன். இது அதன் இரண்டாம் பாகம், ‘மகா நாயகடு.’ கதா நாயகடு, என்.டி.ஆர் கட்சி ஆரம்பிப்பதோடு நிறைவடைகிறது. இது அவர் அரசியலில் வெல்வதைக் காட்டுகிறது. முதல் பாகத்தில் பாலகிருஷ்ணா என்.டி.ஆரின் இள வயது சேஷ்டைகளை நடிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் வயதான என்.டி.ஆராக அட்டகாசமாக நடித்திருக்கிறார். என்.டி.ஆர் பேசும்போது அவர் செய்யும் உடல்மொழியை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். என்.டி.ஆர் தமிழில் நடித்த திரைப்படங்களிலும் இந்த உடல்மொழியை நாம் பார்த்திருக்கிறோம்.

தெரிந்த கதையை மிக நன்றாகவே திரையாக்கம் செய்திருக்கிறார்கள். பாஸ்கர் ராவ் உதவியோடு கட்சியைத் தொடங்கி, வென்று, முதலமைச்சர் ஆகும் என்.டி.ஆர்., அதே பாஸ்கர் ராவால் கவிழ்க்கப்படுகிறார். இந்திராவின் பின்னணி உதவியுடன் இது நடைபெறுகிறது. சந்திரபாபு நாயுடுவின் உதவியுடன் அதை முறியடித்துக் காட்டுகிறார் என்.டி.ஆர். இவருக்குப் பின்னணியில் ஆந்திராவின் மக்கள் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு இதே பாணியில் என்.டி.ஆரிடமிருந்து ஆட்சியை இதே சந்திர பாபு நாயுடு பறிப்பது வரலாற்றில் பின்னர் நிகழ்கிறது. இது இப்படத்தில் வரவில்லை. ஏனென்றால் என்.டி.ஆர் பாஸ்கர் ராவையும் காங்கிரஸையும் முறியடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதுடன் படம் நிறைவடைகிறது.

இந்திரா ஜனாதிபதியிடம், ‘என்.டி.ஆர் டெல்லி வந்தால் நீங்கள் அவரைப் பார்க்கலாம்’ என்று உள்ளர்த்தத்தோடு சொல்கிறார். ரயிலில் ஏறி டெல்லி வரும் எம்.எல்.ஏக்களை சில குண்டர்கள் தாக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் டெல்லிக்கு வந்துவிடக்கூடாது என்பதே இந்திராவின் எண்ணம். எம்.எல்.ஏக்கள் தாக்கப்படும்போது, உதவிக்கு திடீரென ஒரு கூட்டம் வருகிறது. காக்கி டவுசருடன் வந்து அவர்களைக் காப்பாற்றிவிட்டு பாரத் மாதா கி ஜே சொல்லிவிட்டுப் போகிறார்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள். அதற்கு முந்தைய காட்சியில், என்.டி.ஆர் காக்கி உடை அணிந்து இந்தியக் கொடியை வணங்குகிறார். அவரது கம்பீரமான வணக்கத்தை சிலாகிக்கும் கட்சிக்காரரிடம் சந்திரபாபு நாயுடு சொல்கிறார், ‘எனக்குப் பார்க்க ஒரு கொடியே இன்னொரு கொடியை வணங்குவது போல இருக்கிறது’ என்று. அந்தக் காட்சியில் வான்வெளியில் இந்தியக் கொடி பறக்க காவிக்கொடி போன்ற என்.டி.ஆர் வணங்குகிறார்.

ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகச் சித்தரிக்கப்படும் படங்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். இப்படத்தில் வரலாற்றில் நிகழ்ந்ததை எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் என்.டி.ஆர் அப்பழுக்கற்றவர் என்றோ, தூய ஹிந்துத்துவ அரசியலைக் கைகொண்டார் என்றோ நான் சொல்லவில்லை. படத்திலும் அப்படிக் காட்டப்படவில்லை. தொடர்ந்து அனைத்து முற்போக்கு ஸூடோ செக்யூலர் கட்சித் தலைவர்களும் அவர்களது கொடிகளும் காட்டுப்படுகின்றன. இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் உதவியைப் பதிவு செய்தது மகிழ்ச்சி அளித்தது என்பதை மட்டுமே இங்கே சொல்கிறேன்.

ஜனாதிபதி முன்பு என்.டி.ஆர் பெரும்பான்மையை நிரூபித்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கொடுக்கும் அனைத்து தடங்கலையும், சந்திர பாபு நாயுடு எதிர்கொள்ளும் விதம், இன்றும் நம் அரசியலில் நடந்துகொண்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் அமர்வது, எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்று தமிழ்நாட்டின் அரசியலுக்கு ஏகப்பட்ட ‘முதல்’களை வழங்கியது ஆந்திராதான் போல.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காக எப்படியாவது கலவரத்தை உருவாக்க நினைக்கும் பாஸ்கர  ராவ் தரப்பு செய்யும் தூண்டல்கள் அட்டகாசம். என்.டி.ஆரை மோசமாகத் திட்டுவது, அவர் முன்பே வளையல்களை உடைப்பது, இதனால் என்.டி.ஆர் கட்சிக்காரர்கள் கோபம் கொண்டு சட்டசபையில் அமளிதுமளி ஏற்படுவது என நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகிறது. இந்தக் காட்சிகளெல்லாம் படு சுவாரஸ்யம். தெலுங்கர்கள் இப்படத்தைக் கொண்டாடி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து இதே போன்று ஒரு படத்தை உருவாக்கலாம். திரைப்பட நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர் அரசியலிலும் இருந்தார் என்பதும், அப்போது அவர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் என்பதும் கூடுதல் சுவையுள்ள பரபரப்புக் காட்சிகள். எம்.ஜி.ஆரின் அரசியல் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணியை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கும் எம்ஜியாரின் ஆட்சி கலைக்கப்பட்டு அடுத்து நடக்கும் சட்டசபைத் தேர்தலில் வெல்வது அட்டகாசமான திரைத் தருணத்தைக் கொண்டுவரும். நடிக்க மோகன்லால் என்ற தலைசிறந்த நடிகரை ஏற்கெனவே ‘இருவர்’ படத்தில் மணிரத்னம் அடையாளம் காட்டிவிட்டார்.

Share

Sui Dhaga

சூய் தாகா (ஹிந்தி) – 1970களில் வந்து அனைவரையும் கதற வைத்து, புல்லரிக்க வைத்து நனைந்த கைக்குட்டையும் சிரிப்புமாக வெளியே அனுப்பி இருக்கவேண்டிய படம், கொஞ்சம் தவறி, வருண், அனுஷ்கா ஷர்மாவுடன் 2019ல் வெளியாக, நான் சிக்கிக்கொண்டேன் – வழக்கம்போல. என்ன ஆனாலும் அனுஷ்கா ஷர்மாவின் மீது விரல் நகம் கூடப் பட்டுவிடக்கூடாது என்று கோஹ்லி சொன்னாரோ என்னவோ, வருண் அத்தனை மரியாதையாக தம்பி போல தள்ளி நின்று மனைவியுடன் பேசுகிறார், நடிக்கிறார், சிரிக்கிறார். நல்ல வசனங்கள். அனுஷ்கா ஷர்மாவின் வாழ்நாள் படமாக இருக்கலாம். அத்தனை அழகு, பாந்தம், கண்களிலேயே நடிக்கிறார், அட்டகாசமான முகபாவங்கள். மேக் இன் இண்டியாவை பிரசாரப்படுத்தும் பிரசாரப்படம் போல. வருண் அழகான அம்மாஞ்சி போல இருக்கிறார், நன்றாகவே நடிக்கிறார். படம் மொத்தமும் அநியாய க்ளிஷே. ஆனாலும் பார்க்கலாம்.

நான் சொல்ல வந்தது வேறு விஷயம்.

நான் அமேஸான் ப்ரைமில் தமிழ் சப்-டைட்டிலுடன் பார்த்தேன். இந்தப் படத்துக்கு ‘மொழிபெயர்ப்பு’ செய்தவரைக் கண்டுபிடித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். 2100களில் தமிழ் தேயும்போது அதை மேலே எடுத்துச் செல்ல இவர் தேவைப்படுவார். தமிழ் ஆய்வாளர் போல.

ராம் ராம் என்பதை வணக்கம் என்று சொல்லத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சீதாராம் என்று சாதாரணமாக வீட்டில் சொல்வதற்குக் கூட, எல்லாம் வல்ல சீதா தேவி வாழ்க, எல்லாம் வல்ல ராமர் வாழ்க என்றெல்லாம் ‘வார்த்தைக்கு வார்த்தை’ இறங்கி அடித்துவிட்டார். பில்குல் என்ற வார்த்தைக்கு சமய சந்தர்ப்பமில்லாமல் முற்றிலும் என்கிறார். அப்பாவும் மகனும் பேசும்போது என்ன ஆச்சு என்பதைக்கூட என்ன கெடுதி உங்களுக்கு வந்துவிட்டது என்றெல்லாம் எழுதி தமிழை ஒரு படி மேலே உயர்த்திவிட்டார். இன்னும் இதுபோன்ற சேவைகள் பல இந்தப் படத்தில் இருக்கின்றன. தூய தமிழில் கலக்கி எடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். பஸ்ஸில் போனேன் என்பதை பஸ் எடுத்தேன் என்றெல்லாம் அட்டகாசம் செய்திருக்கிறார்.

இனி தமிழில் சப்டைட்டில் கிடைக்கும் படங்களை மட்டுமே பார்த்து இதில் ஒரு டாக்டரேட் செய்யலாம் என்றிருக்கிறேன். ராமா ராமா. (ராம் ராம் என்பதின் மொழிபெயர்ப்பு என்றறிக.)

Share

என் டி ஆர்: கதாநாயகடு

என் டி ஆர்: கதாநாயகடு – என் டி ராமாவின் மகன் பாலகிருஷ்ணா என்டிஆரைப் போலவே நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பிற்கால என் டி ஆரின் உடல்மொழியை ஓரளவுக்கு தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார் என்றாலும் ஆரம்பகால என் டி ஆராக இவர் நடிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. இவர் என்டிஆரைப் போலவே இருக்கிறார். ஆனால் நிஜ ஆரம்ப கால என் டி ஆர் அழகாக இருந்தார்! இவரை பார்க்க எரிச்சல்தான் வருகிறது.

பாலகிருஷ்ணா மீசையை எடுத்த பிறகு ஓரளவு என்டிஆரின் கெட்டப்பை நெருங்கினாலும், கிருஷ்ணன் போன்ற மேக்கப்பில் கொஞ்சம் ஒப்பேற்றினாலும், பெரும்பாலான காட்சிகளில் எவ்வித முகபாவனையும் இல்லாமல் அப்படியே சும்மா இருப்பது கடுப்பாகிறது. ஸ்ரீதேவியுடன் என் டி ஆர் ஆடுவது போன்ற காட்சிகளையெல்லாம் பாலகிருஷ்ணா சிறப்பாகவே செய்திருக்கிறார்.  பிற்கால என் டி ஆர் போல பாலகிருஷ்ணா நடனமாடும் காட்சிகள் அப்படியே அச்சு அசலாக இருக்கக் காரணம், இருவருக்குமே ஆட வராது என்பதாக இருக்கலாம். இதுபோன்று தன்னை இளமையாகக் காட்டும் காதல் சில்மிஷக் கொடூரங்களை அந்தக் கால சிவாஜிகணேசனும் செய்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாகேஸ்வரராவும் ராஜ்குமாரும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்துவிட்டார்களோ? நாகேஸ்வரராவும் ராதிகாவும் ஆடும் ஒரு பாடல் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்கிறது என்றாலும், சிவாஜி என் டி ஆர் அளவுக்குப் போயிருப்பாரா என்பது தெரியவில்லை. 

இதுபோன்ற பயோ பிக்சர்ஸ் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எதை எந்த நோக்கத்தில் எடுக்கிறோம் என்பது முக்கியமானது. பாலகிருஷ்ணா, என் டி ஆரின் புகழையும், அவரது மகனான தனது புகழையும் இந்தப் படத்தின் மூலம் தனக்குப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கிறார் என்பது தெரியாமல் நான்தான் சிக்கிவிட்டேன் போல.

கடைசி 20 நிமிடங்கள், அதாவது அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது போன்ற காட்சிகள், கொஞ்சம் பரவாயில்லை ரகம். எமர்ஜென்ஸியின்போது தனது படத்தின் சுருளை எடுக்க அந்த பஞ்சகச்ச வேட்டியை மடக்கிக்கொண்டு வரும் ஒரு காட்சி, பாலகிருஷ்ணா என் டி ஆரை நெருங்கிய காட்சிகளில் ஒன்று. என் டி ஆர் நடித்த பழைய படங்களில் இருந்து காட்சிகளை எவ்வித உயிர்ப்பும் இன்றி உருவாக்கி இருக்கிறார்கள். பழைய ஒரிஜினலைப் பார்த்துவிடமாட்டோமா என்றிருந்தது! படம் முழுக்க ஒரு அமெச்சூர்த்தனம் இருந்தது. நாடகம் போன்ற, நாடகத்தனமான காட்சிகள். இவற்றையெல்லாம் மீறி இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்ததை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். நடிகையர் திலகம் படம் போலவே இந்தப் படத்திலும் மிகக் கொடூரமான பின்னணி இசை.

அரசியலுக்கு என் டி ஆர் வந்தது, ஆந்திர அரசியலில் மிக முக்கியமான திருப்பம். அதிலும் சந்திரபாபு நாயுடு அவரிடமிருந்து ஆட்சியைப் பறித்ததும், சிவபார்வதியுடனான என் டி ஆர் உறவும், இந்தச் சூழலில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் என் டி ஆர் பெரிய வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் என் டி ஆர் மரணமடைகிறார். இந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் வேறு ஒரு படமாகத்தான் வர வேண்டும். ஏனென்றால், தெலுகு தேசம் என்ற அறிவிப்புடன் இப்படம் நிறைவடைகிறது. அரசியல் நிகழ்வுகளின் படம் இந்தப் படத்தைவிட  நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இத்திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. எம்ஜியார் பெயரில்லை, சிவாஜி கணேசன் பெயரில்லை, முத்துவேலர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் பெயர்! எமர்ஜென்ஸியில் அவர் பட்ட கஷ்டத்தைச் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. எந்த அளவுக்குப் பரப்புரை செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.  

இந்தத் திரைப்படத்தில் மிகவும் நன்றாக உருவாகி வந்தது, நாகேஸ்வரராவ் என் டி ஆர் இடையிலான உண்மையான ஆத்மார்த்தமான நட்பு மட்டுமே. நம் சிவாஜி கணேசன், எம்ஜியார் (தனித்தனியாக) பற்றிய படங்களையும் நாம் இப்படி இல்லாமல் நன்றாக உருவாக்க முடியும். நடிகராக அவர்களது வெற்றிகளில் அதீத கவனம் குவியாமல் திரைக்கதையில் பார்த்துக்கொள்வது நல்லது. அவர்கள் மனம் எதிர்கொண்ட அழுத்தத்தை மையமாக வைத்து, அதீத புகழ்ச்சிகளைக் கைவிட்டு, சரியான நடிகர்களைக் கொண்டு (இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சி மட்டுமே வந்தாலும் சந்திரபாபு நாயுடுவாக வரும் ராணா, நாகேஸ்வர ராவாக நடிக்கும் அவரது பேரன் சுமந்த் இவையெல்லாம் இதற்கு உதாரணம்) முன்னும் பின்னுமாகக் கதை பின்னிணால் சரியாக வரலாம் எனத் தோன்றுகிறது. இருவர் திரைப்படம் முழுமையான ஒரு படமில்லை என்றாலும், அதனளவில் அது எத்தனை அருமையான முதிர்ச்சியான முயற்சி என்று தெரிகிறது.

பின்குறிப்பு: இப்படத்தில் ஒரு புதுமை, வித்யா பாலன் என் டி ஆரின் மனைவியாக வருகிறார். இழுத்துப் போர்த்திக்கொண்டு, சில காட்சிகளில் முகம்கூடத் தெரியவில்லை!

Share

Gully Boy

Gully Boy. Highly predictable story. But an excellent experience to watch. No wonder why it had a great box office collection. Ranveer Singh, the lady acted as his mother, Alia Bhatt, the actor who appeared as Sher – everybody performed very well. What a change over in Ranveer Singh, simply amazing. Music is awesome. I was remembering AR Rahman for his Petta Rap song and No problem song. All songs in this movie have a close resemblance of those songs what I mentioned above. Santhosh Narayan took this Gana of Chennai to a different level I must agree. Tamil version of Gully Boy if planned, Santhosh Narayan would deliver some great songs I believe. But finding the perfect matching actors might be a difficult one.

Even though the movie revolves around a slum and a Muslim family, not even a single unnecessary attack on India. Tamil film might use this same plot to criticise Indian government I am sure. 🙂

Share

Avengers: End game

அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்

மிக ‘எளிமையான கதை’. ஒரே நொடியில் உலகின் மக்கள்தொகையில் பாதியை அழித்துவிட்ட தானோசை அழித்து, ஆறு இன்ஃபினிட்டி கற்களையும் மீளக் கண்டடைந்து, அழிந்தவர்களையும் அழிந்த சூப்பர் பவர்களையும் மீண்டும் உலகுக்குக் கொண்டு வர ஆயத்தமாகிறார்கள் ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், ப்ளாக் விடோ, ஆண்ட் மேன், வார்மெஷின், கேப்டன் மார்வெல் போன்ற பல மிச்சமிருக்கும் சூப்பர் பவர்ஸ் எல்லாரும் சேர்ந்து, காலச் சக்கரத்தில் க்வாண்டம் தியரி மூலம் பயணிக்கிறார்கள். ஐயர்ன் மேனை ஐயர்ன்மேனே பார்க்கிறார். கேப்டன் அமெரிக்காவும் கேப்டன் அமெரிக்காவும் மோதுகிறார்கள். நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் மோதல். காலவிளையாட்டு அதன் உச்சத்தில். நிகழ்கால ப்ளாக் விடோ கடந்த காலத்தில் இறந்து போகிறார். நிகழ்கால நெபுலாவின் நினைவைக் கடந்தகால தானோஸ் படித்து, தன் இறுதிக்காலத்தைப் பார்த்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வருகிறார். அதற்குள் ஆறு இனிஃபினிட்டி கற்களையும் வைத்து ஹல்க் கடந்தகாலத்தில் இறந்த மனிதர்களை உயிர்ப்பிக்கிறார். மீண்டும் பெரும் சண்டை. அனைத்து சூப்பர் பவர்களும் திரும்ப வர, தானோஸ் கையில் கற்கள் கிடைக்காமல் இருக்க ஐயர்ன் மேன் தன் உயிரைத் தியாகம் செய்கிறார். கேப்டன் அமெரிக்கா மீண்டும் கற்களை வைக்கப் போய் வயதாகித் திரும்புகிறார். நிகழ்கால 5 நொடிகள் க்வாண்டம் தியரியிலான காலச் சக்கரத்தில் பல வருடங்கள்! அந்த வருடங்களில் அங்கேயே தன் துணையுடன் வாழ்கிறார். வயதான எதிர்கால நிகழ்காலத்தில் தன் கவசத்தை சாம்-இடம் ஒப்படைக்கிறார். இதையெல்லாம் மண்டையை முட்டி மோதி, என் பக்கத்தில் இருந்த என் பையனிடமும் பெண்ணிடமும் வெட்கத்தை விட்டுக் கேட்டுப் புரிந்துகொண்டவை. இந்தப் படம் வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே இப்படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போகவேண்டும் என்று உத்தரவாதம் வாங்கி இருந்தான் அபிராம். இப்படம் புரியவேண்டும் என்றால், இதற்கு முந்தைய பாகங்களைப் பார்க்கவேண்டும் என்று சொன்னதை நான் பீலா என்றே நினைத்தேன். ஆனால் அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது. அப்படி இல்லை என்றால், என்னைப் போல் பக்கத்திலிருக்கும் பையன்களிடம் வெட்கப்படாமல் கேட்கத்தான் வேண்டியிருக்கும்.

கற்பனைக்கெட்டாத கதைப்பரப்பு. காலத்தை வைத்துக்கொண்டு வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள். இனிஃபினிட்டி வார் போல சண்டைகள் அதிகம் இல்லை. 3 மணி நேரத்தில் 20 நிமிடங்கள் சண்டை வந்தாலே அதிகபட்சம். ஆனால் அந்த இருபது நிமிடத்தையும் அசரடிக்கிறார்கள்.

தமிழில் இதுபோன்ற தொடர்ந்து கைத்தட்டு பெறும் படங்களைப் பார்க்கவே முடியாது. ரஜினி விஜய் அஜித் என யார் படங்களிலும் இது சாத்தியமில்லை. ஒவ்வொரு அவெஞ்சர் வரும்போதும், ஒவ்வொருமுறை அவர்களுக்கு சக்தி வரும்போது கைத்தட்டு காதைப் பிளக்கிறது. அதிலும் அந்த 20 நிமிடச் சண்டையில் இப்படித் தொடர்ச்சியாகக் கைத்தட்டை தமிழ்நாட்டில் எந்தப் படத்திலும் நீங்கள் பார்த்திருக்கமுடியாது.

கால விளையாட்டின் போதான காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்கள். பழைய மார்வெல்ஸ் படங்கள் பார்த்திருந்தால் மிக நன்றாகப் புரியும். இல்லையென்றால் திருவிழாவில் ஆட்டைத் தொலைத்தவன் போலத்தான் விழிக்கவேண்டி இருக்கும். ஐயர்ன்மேனும் அவரது அப்பாவும் சந்திக்கும் இடங்கள், தோரும் அவரது அம்மாவும் சந்திக்கும் இடங்கள் எல்லாம் அட்டகாசம். இன்று நேற்று நாளை என்ற நம்மூர்ப் படத்தில் பார்த்த கற்பனையை அதன் உச்சத்துக்குச் சென்று கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள், கற்பனை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும். இசை, கிராஃபிக்ஸ், கேமரா என ஒவ்வொன்றும் அற்புதம்.

மொத்தத்தில் ஒரு மிரட்டல்.

திருஷ்டிப் பொட்டு, தமிழில் வசனங்களும் விஜய் சேதுபதியின் கொடூரமான பின்னணிக் குரலும். தாங்கமுடியவில்லை. ஐயர்ன் மேன் இவராலேயே பாதி செத்தார், மீதி கதையிலும் செத்தார். நல்லவேளை செத்தார், இல்லையென்றால் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியைப் போட்டு நம்மை நடுங்க வைத்திருப்பார்கள்.

Share

பெருவலி நாவல்

கடந்த ஆண்டு ருசிர் குப்தாவின் Mistress of Throne புத்தகத்தைப் படித்தேன். பேஹம் சாஹிப் என்றறியப்பட்ட முகலாய இளவரசி ஷாஜஹானின் மகள் ஜஹானராவைப் பற்றிய நாவல். இந்த நாவல் மேம்போக்காக எழுதப்பட்டதல்ல. மூல ஆவணங்களைப் படித்துத் தரவுகளுடனும் தரவுகள் இல்லாத இடத்தில் புனைவைக் கொண்டு இணைத்து எழுதப்பட்ட ஒன்று. ஜஹானரா, மும்தாஜ், ஷாஜஹான், தாரா ஷுக்கோ, ஔரங்கசீப், ஜனானா பெண்கள் மற்றும் அந்தக் காலத்திய அரசியல் நடவடிக்கைகளை மிக விரிவாக விளக்கும் நாவல்.

இதே பின்னணியில் எழுதப்பட்ட நாவல் சுகுமாரனின் பெருவலி. காலச்சுவடு வெளியீடு. இதற்கு முன்பு ஜஹானரா குறித்து வெளியான புத்தகங்களின் பாதிப்பு எந்த வகையிலும் வந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்து உழைத்து எழுதி இருக்கிறார் சுகுமாரன். ருசிர் குப்தாவின் ஆங்கில நாவலில் இருந்து இந்நாவல் வேறுபடுவது, இந்நாவலின் அசர வைக்கும் தமிழ் நடையின் மூலமாக. ஒரு தீவிரமான இலக்கியப் புனைவை வாசிக்கும் இன்பத்தைக் கொண்டு வருகிறது சுகுமாரனின் பெருவலி.

யார் எழுதினாலும் ஷாஜஹானின் கடைசி காலக் கட்டம் குறித்த விவரணைகள் பெரும் பதற்றத்தைக் கொண்டு வந்துவிடும் போல. காமத்திலும் ரத்தத்திலும் தோய்ந்து கிடந்த ஒரு பேரசசன், தான் செய்தவற்றின் இன்னொரு உருவாக வந்து நிற்கும் தன் மகன் ஔரங்கசீப்பிடம் மண்டியிடுகிறான். அதே துரோகங்கள், அதே ரத்தம், அதே படுகொலைகள் மீள அரங்கேறுகின்றன. அதற்குள் தாஜ்மஹாலின் மூலம் உலகில் நிலையாப் புகழைப் பெற்று விடுகிறான் ஷாஜஹான்.

முகலாய இளவரசிகளுக்குத் திருமணம் கிடையாது என்பது விதி. ஒருவேளை அவர்களுக்குத் திருமணமானால் அவர்களது கணவன் மூலம், அரசர்களின் ஆண் வாரிசுக்குப் போட்டி உருவாகலாம் என்பதே எண்ணம். இதனால் ஜனானாவில் இருக்கும் இளவரசிகள் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்குள்ளே அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் தனி அரசைச் செலுத்துகின்றன. ஆளாளுக்குக் கையாளாக நபும்சகர்கள் இருக்கிறார்கள். தங்கள் இளவரசிகளின் கற்பைக் காக்கவே இந்த ஏற்பாடு. ஆனால் இரவுகளில் நிகழும் ரகசியச் சந்திப்புகளில் யாரும் யாருக்கும் எந்தவித உத்தரவாத்தையும் அளிக்கமுடிவதில்லை. ஜஹானராவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஔரங்கசீப்பால் வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் ஷாஜஹானுக்குத் துணையாக, அவரது மிக அன்பான மகள் ஜஹானராவும் அங்கேயே தங்கிவிடுகிறாள். அப்போது அவள் பாரசீக மொழியில் எழுதி, யார் கண்ணுக்கும் படாமல் மறைத்துவைக்கப்பட்ட குறிப்புகள் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகின்றன. The Life of Mogul Empress Jahanara Begum, the daugher of Shajahan by Andrea Butenshon என்ற இந்த நூல் 1938ல் வெளியாகிறது. இது இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. (நான் இன்னும் இதைப் படிக்கவில்லை.)

இந்த நூலை மையமாக வைத்தும் பிற நூல்களைப் படித்தும் தனக்கென ஒரு புனைவை உருவாக்கி இருக்கிறார் சுகுமாரன். ஜஹானராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பூடகமான மொழியை மிகக் கச்சிதமாக உருவாக்குகிறார். கனவிலும் அரை நினைவிலும் நடக்கும் நிகழ்வுகளுகாக அவை அட்டகாசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இடைவெளிகளை நிரப்ப கனவுகளையும் அவற்றுக்கான சூஃபிக்களின் விளக்கங்களையும் பயன்படுத்துகிறார் ஜஹானரா. ருசிர்குப்தா மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் இதனை சர்ரியலிஸப் பாணியைப் பயன்படுத்திக் கடக்கிறார்.

ஷாஜஹானுக்கும் அவரது மகளான ஜஹானராவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சிக்கல்களை மிகக் குறைவான வார்த்தைகளில் மட்டும் சொல்லிக் கடக்கிறது பெருவலி. ருசிர் குப்தாவின் நாவலும் இதே பகுதிகளை மிக இறுக்கமாகப் பேசுகிறது. மிகத் தெளிவாக இவற்றுக்கு நிரூபணம் இல்லை என்கிறார் ருசிர் குப்தா. ஆனால் சுகுமாரன் பூடமாகச் சொல்லும் ஜஹானாராவின் காதலை மிக வெளிப்படையாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஜஹானாராவுக்கும் அவர் சந்திக்கும் மருத்துவர் கேப்ரியல் (இது உண்மையான பெயரல்ல) என்பவருக்கும் இடையே உறவு இருந்ததாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்றும், ராஜபுத்திர அரசர் சத்ரசால்-க்கும் இடையேதான் உறவு இருந்திருக்கும் என்று எடுத்துக்கொண்டு செல்கிறார் சுகுமாரன். முதலில் ராக்கி அணியத்தக்க உறவு என்று ஜஹானாரா சொன்னாலும் பிற்பாடு சத்ரசால் மீதான தனது காதலைப் பதிவு செய்திருக்கிறாள் என்ற உண்மையிலிருந்து இதனை நோக்கிப் போகிறார் சுகுமாரன்.

ஔரங்கசீப்பின் இளமைப் பருவத்தையும் மற்ற விவரங்களையும் மிக விரிவாகப் பதிவு செய்கிறது ருசிர் குப்தாவின் நாவல். சுகுமாரனின் நாவல் இவற்றை மிகச் சுருக்கமாக, தேவையான அளவுக்கு மட்டுமே சொல்கிறது. தாரா ஷூக்கோவின் ஹிந்து மதத்தின் மீதான ஆதரவும், ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடுவதும் கூட மிகச் சில குறிப்புகளாக மட்டுமே பெருவலி நாவலில் வெளிப்படுகின்றன. நாவலின் முதல்பாகம் பானிபட் எனப்படும் நபும்சகனின் பார்வையில் விரிவதாலும், இரண்டாம் பாகம் ஜஹானராவின் பார்வையில் விரிவதாலும் இப்படிச் சொல்லவேண்டி வந்திருக்கலாம்.

சுகுமாரனின் நாவல் மிகச் செறிவானது. சுகுமாரனின் தமிழ் நடை நம்மை உள்ளிழுத்துக் கொள்வது. மிக நல்ல முக்கியமான நாவல். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நாவல்.

ருசிர் குப்தாவின் நாவல் எளிமையான ஆங்கிலத்தில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒன்று. அதனைத் தமிழில் கொண்டு வரவேண்டியது அவசியம். ஆனால் எவ்வளவு விற்கும் என்பது தெரியாது. J

இந்த இரண்டு நாவல்களிலும் நாம் தவறவிடக்கூடாதது, பிற்சேர்க்கைப் பகுதியை. பெருவலி நாவலில் சுகுமாரனின் குறிப்பு உள்ளது. இது நாவல் குறித்த பல சந்தேகங்களை நீக்கும். மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் ருசிர் குப்தாவின் பேட்டி உள்ளது. மிக முக்கியமான பேட்டி.

சுகுமாரனின் தன் குறிப்பில், இந்நாவலை எழுதுவதற்குக் காரணம், வரலாற்றைப் பதிவு செய்வது மட்டுமல்ல, அதன் இக்காலத்து அரசியலைத் தொடர்புப்படுத்திப் பார்க்கத்தான் என்று சொல்கிறார். உண்மையில் மீண்டும் மீண்டும் இந்த அரசியல் நிகழ்வுகள் அதேபோன்ற அரசியல் நிகழ்வுகளாகவும் அல்லது வேறு வகையிலான நிகழ்வுகளாகவும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்னும் இதே கதைகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தி இன்றைய நிலையில் பொருத்தி மிகச் சிறப்பான திரைப்படங்களை எடுத்துவிடமுடியும். என்றைக்கும் செல்லுபடியாகும் கதைகளாகவே அவை இருக்கின்றன என்பது உண்மையானதுதான்.

பெருவலி நாவலைத் தவறவிட்டுவிடாதீர்கள். நிச்சயம் வாசியுங்கள்.

Share