உரிமையின் அரசியல்

உரிமையின் அரசியல்

ஒருவருக்கு எதற்கும் உரிமை இருக்கிறது. அடுத்தவரை துன்புறுத்தாவரை அவருக்கு இருக்கும் யாரும் உரிமையை மறுக்கவே முடியாது. வைரமுத்து ஆண்டாளைப் பற்றி மட்டும் ஏன் எழுதினார், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் பற்றி எழுத தைரியம் இல்லையே என்று கேட்டால், ஹிந்துக்களைப் பற்றி மட்டும் தேர்ந்து எழுத வைரமுத்துவுக்கு உரிமை இருக்கிறது என்கிறார்கள். யார் மறுத்தது? நிச்சயம் வைரமுத்துவுக்கு அந்த உரிமை இருக்கவே செய்கிறது.

பொதுவாக ஹிந்து மதத்தை மட்டும் தேர்ந்தெடுத்துச் சாத்துகிறவர்களை ஏன் கேள்வி கேட்கிறோம் என்பதற்கு என்னுடைய வரையறைகள் இவை. அதாவது இந்த வரையறைகளுக்குள் இருந்தால், ஒருவர் நிச்சயம் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசலாம். திட்டலாம். இந்த வரையறைக்குள் இல்லாமல் போகும்போது கேள்வி கேட்கிறோம்.

* ஹிந்து மதம் என்றில்லாமல் கிறித்துவ இஸ்லாம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மதங்களையும் அம்மதங்களின் போதாமைக்கும் அராஜகங்களுக்கும் விமர்சிப்பது, கேள்வி கேட்பது. இது ஒரு உச்சகட்ட நிலை. இந்நிலையை மிகச் சிலரிடம் மட்டுமே காணமுடியும். இப்படி இருப்பவர்கள் ஹிந்து மதத்தையும் நிச்சயம் கேள்வி கேட்கலாம்.

* இரண்டாவது வகை, எம்மதத்தின் பிரச்சினைகளுக்குள்ளும் புகாமல் இருப்பது. இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை.

* மூன்றாவது வகை, நான் ஹிந்து என்று அறிவித்துக்கொண்டு, எனக்கு ஹிந்து மதத்தின் மீதான விமர்சனங்களே முக்கியம் என்று சொல்வது. இவர்களை மற்ற ஹிந்து மத மற்றும் ஹிந்துத்துவ ஆதராவளர்கள் ஏற்பார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏற்கிறேன்.

* நான்காவது, ஹிந்து மதத்தின் சீர்திருத்தவாதியாக தன்னை நினைத்துக்கொண்டு கருத்துச் சொல்வது.

இப்படி இல்லாமல் ஹிந்து மதத்தை ஊறுகாய் போல மட்டும் தொட்டுக்கொண்டு பேசும்போது நிச்சயம் கேள்விகளை எழுப்பத்தான் செய்வார்கள். இந்த கேள்விகளை எழுப்பும்போது உரிமை பற்றிப் பேசி நழுவப் பார்ப்பது இன்னுமொரு எஸ்கேப்பிஸம்.

உண்மையில் யாரும் யாருடைய உரிமையையும் கேள்வி எழுப்புவதில்லை. ஒருவர் முட்டாளாக இருப்பதற்கு, சிறிய சிறிய அளவில் பொய் சொல்வதற்கு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதற்கு, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வாழ்வதற்கு, கம்யூனிஸ்ட்டுகளாக இருப்பதற்கு என்று ஏகப்பட்ட உரிமைகள் உள்ளன. இவை அனைத்தும் உரிமைகளே.

அப்படி இருந்தும் ஏன் கேள்வி கேட்கிறோம்? ஏனென்றால் உங்கள் கருத்தின் பின்னால் நீங்கள் உருவாக்க நினைக்கும் அரசியலை வெளிப்படுத்த. உங்களை எக்ஸ்போஸ் செய்ய. உங்களை உங்களுக்கே உணர்த்த. இந்த கேள்விகளுக்கு நியாயமான பதில் இல்லை என்றால், ஹிந்து மதத்தை விமர்சிப்பதும் கேள்வி கேட்பதும் எளிதானதாக இருக்கிறது, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் பற்றிப் பேச அச்சமாக இருக்கிறது என்ற உண்மையை மட்டுமாவது சொல்லிவிட்டு விமர்சியுங்கள்.

இல்லையென்றால், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் பற்றிப் பேசும்போதெல்லாம், கூடவே ஹிந்து மதத்தைப் பற்றியும் பேசி, ஊருக்கு ஏற்ப நீங்கள் எழுதவேண்டியது தவிர்க்கமுடியாததாகிவிடும். ஆனால் ஹிந்து மதத்தைப் பற்றி எழுதும்போது எக்கவலையும் இல்லாமல் எழுத முடியும் என்பதை உங்கள் ஆழ்மனம் உணர்ந்திருக்கும். இதை உணர்ந்திருந்தால் நீங்கள் ஹிப்போகிரைட் மட்டுமே, குறைந்த பட்சம் வெளிப்படையாக உங்களது இயலாமையை வெளியே சொல்லாதவரை.

எனவே மிகத் தெளிவாக உங்கள் தரப்பைச் சொல்லிவிடுவது நல்லது. அதைவிட்டுவிட்டு உரிமை பஜனையைக் கையில் எடுத்தால் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான், இரட்டை நாக்கு வெளியே தெரிகிறது, ஒன்றையும் மறைத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்.

Share

Comments Closed