ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்

ஓரிதழ்ப்பூ (நாவல்), அய்யனார் விஸ்வநாத், கிழக்கு வெளியீடு.

அய்யனார் விஸ்வநாத் ப்ளாக்கர் காலத்தில் இருந்து நண்பர். மிக மேலோட்டமாக வெளியான வலைப்பதிவுகளில் தீவிர முகம் காட்டியவர் அய்யனார் விஸ்வநாத். உண்மையில் அவரது தீவிரமான எழுத்து, குறிப்பாக திரைப்படங்கள் பற்றிய அவரது பதிவுகள், மிகக் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பற்றியும் ஒரு ப்ரெஞ்ச் திரைப்படம் பற்றியும் (பெயர் மறந்துவிட்டது, தேடினால் கிடைக்கும், நேரமில்லை, மன்னிக்கவும்) அவர் எழுதிய இரண்டு பதிவுகள் எனக்கு மிக விருப்பமானவை.

அவரது நாவல் ஓரிதழ்ப்பூ கிழக்கு மூலம் வெளிவருவதில் எனக்கு மகிழ்ச்சி. இந்நாவலைத் தொடர்ச்சியாக வலைப்பதிவில் எழுதினார் அய்யனார். பெருங்காமத்தின் தீரா விளையாட்டு என்று இந்த நாவலைச் சொல்லலாம். ஒருவகையில் பித்து நிலை என்று கூடச் சொல்லலாம். இந்த பித்து நிலை காமத்தோடும் ஆன்மிகத்தோடும் சுழலும் ஒரு பித்து மனிதனின் தேடல் என்று கூட நீட்டிக்கொள்ளலாம். எழுத்தாளரின் தேடல் அல்ல, நாவலில் உள்ள ஒரு கதாபாத்திரத்தின் தேடல்.

ஓரிதழ்ப்பூ என்பது திருவண்ணாமலையின் மலைதான் என்று நினைக்கலாம். ஆனால் நிஜமாகவே தேடப்படும் ஓரிதழ்ப்பூ ஒவ்வொருவரின் வாழ்க்கையின் காமத்தின் தொடக்கப்புள்ளியும் இறுதிப்புள்ளியும் என்கிறது நாவல். இதை விரித்துச் சொன்னால் ச்சை என்று போய்விடும். ஆனால் நாவலில் வாசிக்கும்போது அகத்திய முனியானவனும் அல்லாதவனுமாகிய ஒருத்தனின் தேடலிலும் மானுடல் கொண்டவனின் தேடலிலும் நமக்குக் கிடைப்பது வேறொரு சித்திரம். ஒற்றச் சித்திரம். ஓரிதழ்ப்பூ என்னும் சித்திரம்.

இந்த நாவலில் பெண்கள் தொடர்பான தீவிரமான சித்திரம் வெகு அழகாக உருவாகி வந்துள்ளது. நான்கு விதமான பெண் பாத்திரங்களும் தீவிரத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. எல்லாத் தீவிரங்களுக்குள்ளும் சென்று வர ஏதுவாக அமைகின்றன, ஒருவித பித்து நிலையிலான மாயத்தோற்றம் காட்டும் நினைவுகளும் மொழியும். இந்த மாய விவரிப்புகளே ஒவ்வொரு சமயம் இந்த நாவலில் ஒரு பலவீனமாகவும் உள்ளது.

அய்யனார் விஸ்வநாத்தின் கட்டுரைகளின் முழுமையான தீவிரம் இந்நாவலில் கைகூடி வரவில்லை என்பதையும் சொல்லவேண்டி உள்ளது. அத்தியாயங்களைத் தொடர்ச்சியான மனநிலையில் எழுதாமல், தோன்றியபோது எழுதியதால் வந்த சிக்கலாக இருக்கலாம் என்பது என் யூகம். இன்னும் தீவிரமான நாவலை அய்யனார் நிச்சயம் எழுதுவார் என்கிற நம்பிக்கையைத் தருகிறது ஓரிதழ்ப்பூ.

– ஹரன் பிரசன்னா

கிண்டிலில் இந்நாவலைப் படிக்க: https://www.amazon.in/dp/B078Y1TBG8/ref=sr_1_1…

ஆன்லைனில் அச்சுப் புத்தகத்தை வாங்க:http://www.nhm.in/shop/9789386737311.html

Share

Comments Closed