மயானம்

மயானம்
–ஹரன் பிரசன்னா

எரியும் சிதையின் வெப்ப மிகுதியால்
புலம் பெயர்கின்றன
எறும்புகள்

எங்கோ அழுகிறது
ஒரு காகம்.
யாருடைய சாவுக்காய்?

மரங்கள் தனித்தில்லை.
நெருப்பில் முறுக்கேறும்
எலும்புகளை அடிக்க
உருட்டுக் கட்டையுடன்
எப்போதும் சிரித்திருக்கும்
வெட்டியான் துணைக்கு உண்டு.

வராட்டி மலிவு என்கிறான்
கொள்ளி வைத்தவன்

தூரத்தில் சலசலக்கும்
ஆற்றில் தலை முழுகத்
திரும்பிப் பார்க்காமல்
நடக்கிறேன்,
மண் குளிரும்போது
எறும்புகள் மீளும் என்ற நினைவுடன்.
 

Share

Comments Closed