Tag Archive for மலையாளம்

Hridayapoorvam Malayalam

ஹ்ருதயபூர்வம் (M) – ஃபீல் குட் மூவியாக எடுக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு சீனையும் ஃபீல் குட்டாக எடுப்பதாக நினைத்துக் கொண்டு சாவடித்து விட்டார்கள். இதில் மோகன்லால் ஃபீல் குட் முகத்தை படம் முழுக்க வைத்திருக்கிறார். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் ஒரே பாவத்தைப் படம் முழுக்க எப்படிப் பார்ப்பது? காட்சிகள் மெல்ல நகர்கின்றன. ஒரே போன்ற காட்சிகள், வளவள வசனம். போதாக்குறைக்கு மகளாக வரும் பெண்ணை மோகன்லால் காதலிக்க முயல்வது போன்ற காட்சிகள் எல்லாம் படு அபத்தம். செயற்கைத்தனம். எரிச்சல் தரும் ஒவ்வாமை. கதையே இல்லாமல் ஒரு வழியாகப் படத்தை முடித்து வைத்தார்கள். ஆங்காங்கே சில காமெடிக் காட்சிகள் லேசாகப் புன்னகைக்க வைக்கின்றன என்றாலும், இந்தக் கண்றாவி எப்படி 100 கோடி சம்பாதித்தது என்று தெரியவில்லை.

படத்தில் கொஞ்சமாவது ஃபீல் குட்டாக இருந்த காட்சிகள் என்றால், தொடக்கத்தில் மோகன்லால் கடையில் வரும் காட்சிகளும், ஒழிச்சோடிப் போன மோகன்லாலின் மணப் பெண் போனில் அட்டகாசமாக நடித்துப் பேசும் காட்சிகளும்தான்.

Share

Sumathi Valavu

Sumathi Valavu (M) – நான் அபுதாபி‌ போயிருந்தபோது (இன்னுமா இந்த ரீல் அந்து போகலை?) சையாரா திரைப்படத்திற்குப் போயிருந்தோம். அப்போதுதான் சுமதி வளவு என்ற மலையாளத் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்ததைக் கவனித்தேன். ஆஹா இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று வருத்தத்துடன் சையாரா பார்த்து விட்டு வந்தேன்.

அன்று மட்டும் சுமதியைப் பார்த்திருந்தால் அன்றே என்னை பேக் செய்து விமானத்தில் வீட்டுக்கு அனுப்பி இருப்பார் ஜெயக்குமார். ஏனென்றால் அந்தக் கொடுமையான சுமதி வளவு படத்தை இன்றுதான் பார்த்தேன்.

பேய்ப் படமாகவும் இல்லாமல் காதல் படமாகவும் இல்லாமல் மொத்தத்தில் ஒரு படமாகவே இல்லாமல் கொடூரமாக இருக்கிறது. திடீரென்று இயக்குநருக்கு யாரோ இது பேய்ப் படம் என்று நினைவூட்ட, அதைச் சில காட்சிகள் காண்பிக்கிறார். பின்னர் காதல் படம் என்று யாரோ சொல்ல அதைச் சில காட்சிகள் காண்பிக்க, இரண்டுமே எந்த ஆழமும் இல்லாமல், ஒரு காட்சி கூட நன்றாக இல்லாமல், என்னை கதற வைத்து விட்டார்.

யாரும் அந்தப் பக்கம் போகாதீர்கள்.

Share

Mura Malayalam Movie

Mura (M)

பார்த்து பார்த்துப் புளித்துப் போன ஒரு கதை. துரோகம். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு மேக்கிங் பார்த்திருந்தால் கொஞ்சம் புதியதாகத் தோன்றியிருக்குமோ என்னவோ. ஆனால் இப்போது இந்தப் படத்தின் மேக்கிங் ஆயிரம் மலையாளத் திரைப்படங்களில் பார்த்துவிட்டு அலுத்துப் போன ஒன்றாகிவிட்டது. அதாவது, பேசிக்கொண்டே யதார்த்தத்துக்கு அருகில் இருப்பது. (தமிழில் இன்னும் இதில் 10% கூடச் சாத்தியப்படவில்லை என்பது தனிக்கதை.) முதல் முப்பது நிமிடங்கள் கதைக்குள் வராமல் என்னவோ பேசி பேசிச் சுற்றி அடிக்கிறார்கள். பின்புலத்தைக் கட்டமைக்கிறார்கள். முப்பதாவது நிமிடத்தில் இருந்து படம் கொஞ்சம் விறுவிறுப்பாகிறது. பின்னர் துரோகம், துரத்தல், கொலை என நீள்கிறது.

ஆனாலும் படத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. எதனால்? அந்த நான்கு நண்பர்களின் வெள்ளந்தியான முகம் மற்றும் நடிப்பால். வெள்ளந்தி என்பதால் நல்லவர்கள் என நின்னைத்துவிட வேண்டாம். கொட்டேஷன் எடுத்துக் கொலையும் கொள்ளையும் செய்பவர்கள்.

Spoilers ahead.

பொதுவாகப் பல மலையாளப் படங்களில் தமிழகர்களைத் துரோகிகளாக்குவார்கள். (நாம் தமிழ்த் திரைப்படங்களில் மலையாளிகளுக்குச் செய்வதைவிட இது குறைவே!) ஆனால் இந்தப் படத்தில்? இன்னும் கூட நம்பமுடியவில்லை. அந்த அளவுக்கு இரண்டு தமிழ்த் திருடர்களை உயரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். இந்த ஆறு திருடர்களுக்கு இடையேயான இளம் நட்புக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். சுமாரான படமே என்றாலும், ஏனோ எனக்குப் பிடித்திருந்தது.

Share

Some Malayalam and Kannada Movies

பெருமானி (M) – சுமார். ஹீரோ ஹீரோயின் யதார்த்த காதல் மற்றும் வினய் ஃபோர்ட் வரும் காட்சிகள் அருமை. மற்ற காட்சிகள், நம்ம ஊர் ந முத்துசாமி வகையறா போன்ற அபத்த நாடகம். கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் சிரிப்பு. ஆனால் முதல் ஒரு மணி நேரம் பெரிய அறுவை.

தீரன் (M) – குப்பை.

Shodha (K) – கன்னட வெப் சீரிஸ். அய்யன மனே சீரியலை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அத்தனை ஸ்லோ. இது கொஞ்சம் ஓகே. ஏனென்றால் ஒரு எபிசோட் 18 நிமிடங்கள்தான். இயக்குநர் பவன்குமார் இதில் ஹீரோ. என்ன கொடுமை என்றால், புதிய பறவை படத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்!

Pariwar (M) – பொறுமையைச் சோதிக்கும் படம். ஆதே சமயம், பல‌ காட்சிகள் அருமை. பல இடங்களில் நாராணீன்டெ மூனாண்மக்கள் படம் நினைவுக்கு வருகிறது. நடிகர்களின் நடிப்பை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

Share

Lokah Chapter 1 Chandra Review

லோகா சாப்டர் 1‌ சந்திரா (M) – மலையாளிகளுக்கு என்று எப்படித்தான் கதை கிடைக்கிறதோ‌, அசத்தி விட்டார்கள் என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாருங்கள், இது படு குப்பை.

இடைவேளை வரை அத்தனை மோசமில்லை. குறிப்பாக நஸ்லேனும் அவர் நண்பர்களும் அடிக்கும் லூட்டியும், கல்யாணி யாரென்று தெரிந்த பிறகு நஸ்லேன் பேசும் வசனங்களும் தியேட்டரையே குலுங்க வைக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து, தொடர்ந்து வாய் விட்டுச் சிரித்தேன். ஆனால் டொவினோ கால்‌ வைத்ததும் படம் குப்பை ஆகிவிட்டது.

ஒட்டுமொத்தமாகவே மிகவும் சுமார்தான். மின்னல் முரளியில் இருந்த ஆத்மார்த்தமும் மக்கள் நன்மைக்காகப் போராடுவதும் இதில் வலுவாக வெளிப்படவில்லை.

இந்தப் படத்தில் காண்பிக்கும் பல குறியீடுகளை வைத்துக்கொண்டு அப்படி இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், யக்‌ஷி கதைகளின் தொன்மம் அது இது என்றெல்லாம் கதை சொல்வார்கள். அது எல்லாமே உண்மையாக இருந்தாலும் ஒரு படமாக இது குப்பை என்பதில் மாற்றம் இல்லை. அதுவும் தமிழர்கள் தியேட்டரில் பார்த்தால் வரும்போது சொட்டு ரத்தம் இல்லாமல்தான் வெளியே வருவார்கள். அதிலும் கடைசி ஒரு மணி நேரம் எழுந்து ஓடி விடலாமா என்றாகிவிட்டது.

வில்லனுக்கு எதிராக நாயகி பிரமாண்டமாக நிற்க வேண்டும் அல்லவா? அது எதுவும் இதில் வரவே இல்லை.

அழகான கல்யாணியை ஏன் இப்படிக் காண்பித்து வெறுப்பை உண்டாக்கினார்கள் என்று தெரியவில்லை. பார்த்தால் நஸ்லேனுக்காகப் பார்க்கவும். மற்ற எதற்காகவும் பார்க்கவே தேவையில்லை.

இதில் இது சாப்டர் 1 மட்டும்தானாம்! இன்னும்‌ எத்தனை‌ சாப்டர்களோ! செத்தோம்.

வில்லனாக வருபவர் கௌடா என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் பேசுகிறார். அவரது அம்மாவும் பார்க்க பிராமணப் பெண் போல் இருக்கிறார். ஆனால் பிராமணர் என்று எங்கேயும் வெளிப்படையாகக் காட்டப்படவில்லை. ஏன் இந்தக் குழப்பம் என்று தெரியவில்லை.

Share

Nari Vettah

நரி வேட்ட (M) – தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று கூவும் நடிகர்கள் மலையாளத்துப் பக்கமோ தெலுங்குப் பக்கமோ சென்று விட்டால் வாலைச்‌ சுருட்டிக்கொண்டு நடிப்பது கூட பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களின் உயிருக்கு உயிரான தமிழர்களுக்கு எதிராக நடிக்கவும் தயங்குவதில்லை. ஏற்கெனவே சோமசுந்தரம் சட்டாம்பி என்னும் மலையாளத் திரைப்படத்தில், தமிழர்களைக் கழுத்தறுப்பவர்களாகக் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த முறை சேரன்.

தமிழர்கள் மலையாளக் கதாபாத்திரம் ஏற்று வில்லனாக நடிப்பதில் பிரச்சினை இல்லை. இந்தப் படத்தில் சேரன் தமிழராகவே நடித்திருக்கிறார். நாம் மலையாளிகளை நல்ல விதமாகக் காண்பிப்பதில்லை. எனவே மலையாளிகள் தமிழர்களை நல்லவிதமாக காண்பிக்கிறார்களா என்று கேட்க நமக்குத் தகுதி இல்லை. ஆனால் சேரன் போன்றவர்கள் எப்படி இது போன்ற படத்தில் நடிக்கிறார்கள் என்பது பெரிய ஆச்சரியம். பணம் பத்தும் செய்யும்.

இதை விட கொடுமை என்னவென்றால், இந்தத் திரைப்படம் 2003 வாக்கில் வயநாடு முத்தங்காவில் நடைபெற்ற ஆதிவாசிகள் மீதான போலீஸ் மற்றும் அரச வன்முறையை மையமாகக் கொண்டது. 5 ஆதிவாசிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் பங்கேற்று ஆணைகள் பிறப்பித்த அதிகாரிகளின் பெயர்களைத் தேடினால் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் சங்கர் ரெட்டி. அவர் மலையாளியா தெலுங்கரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தெலுங்கராக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அவர் மகள் ஆந்திராவில் இருப்பதாக ஏதோ ஒரு செய்திக் குறிப்பு சொல்கிறது. தமிழராக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

இன்னொருவர் மலையாளி.

அப்படி இருக்க, இந்தப் படத்தில் அத்தனை கொடூரங்களையும் செய்ய வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் வருவது ஒரு தமிழர் என்று வரும்படி திரைக்கதை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. சேரன் அந்தக் கொடூரமான கதாபாத்திரத்தை இன்னும் கொடூரமாக, நடிக்கவே தெரியாமல் சொதப்பி இருக்கிறார் என்பது தனிப்பட்ட விஷயம். அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தது தமிழர்தான் என்று உறுதி செய்து கொண்டு சேரன் நடித்திருப்பாரா? கடவுளுக்கே வெளிச்சம்.

இந்தப் படத்தில் ஆதிவாசியாக வரும் நடிகர் அசத்திவிட்டார். அவரும் அடிப்படையில் தமிழர்தான் போல. ஆனால் அவர் மீது பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவரது கதாபாத்திரமே மலையாளக் கதாபாத்திரமாகத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட ஆதிவாசி.

இன்னொரு கொடுமை இந்தப் படத்தில் அரங்கேறி இருக்கிறது. ஒன்றல்ல இரண்டு. இந்தப் படத்தில் ஆதிவாசிகளால் கொல்லப்பட்டதாக போலீசால் சித்தரிக்கப்பட்ட ஒரு போலீசின் பெயர் பஷீர். முஸ்லிம். அவர் தொழுவதை எல்லாம் காண்பிக்கிறார்கள். நல்லது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் கே.வி.வினோத். ஒரு தாழ்த்தப்பட்ட காவல் அதிகாரியும் ஆதிவாசிகளுமே இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்டார்கள் என்று அன்று கேரளாவில் பேசியிருக்கிறார்கள் .

அதை ஏன் படத்தில் முஸ்லிமாக மாற்றினார்கள் என்று தெரியவில்லை.

Spoilers alert.

இன்னொரு கொடுமை என்னவென்றால், அரசு தரப்பின்படி இந்த வினோத் என்னும் போலீசும் கேரள வனத்துறை அதிகாரியும் போராட்டக்காரர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் போலிஸைச் சேர்ந்தவரே சக போலீசைக் கொன்று விட்டு அந்தப் பழியை ஆதிவாசிகள் மீது போடுவதாகக் காண்பிக்கிறார்கள். (கொன்றது மத்திய போலிஸா அல்லது வேறு டீமா என்று இன்னொரு முறை பார்த்தால்தான் புரியும்.) படத்தில் காண்பிப்பதற்கு எந்த ஆதாரமும் எங்கேயும் எனக்குக் கிடைக்கவில்லை.

(பல நண்பர்கள், திரைப்படத்தில் வருவது மத்திய போலிஸ்தான் என்று சுட்டிக் காட்டினார்கள்.)

ஒரு படத்தை எடுக்கும்போது ஆதிவாசிகளுக்கு ஆதரவாக எடுப்பது இயக்குநரின் உரிமை. அதில் தவறில்லை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கும் போது கொஞ்சமாவது நியாயம் இருக்க வேண்டும். தலித் கதாபாத்திரத்தை முஸ்லிமாக மாற்றுவது, சக படையினரே போலீசை கொல்வது என்று, எந்த ஆதாரமும் இன்றி அராஜகமாக எடுப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இல்லை.

திரைப்படமாகப் பார்த்தால், ஆதிவாசிகள் வரும் காட்சிகள் அனைத்தும் ஓரளவு பார்க்கும்படியாக இருக்கின்றன. அவர்கள் பேசும் மலையாளமும் நிலமும் அழகு. நாய் மறக்க முடியாதது. அதுவும் கடைசி கிராஃபிக்ஸில் நாய் நெருப்போடு ஓடி வருவது நெகிழ்ச்சி.

ஆனால் கதைக்குள் வருவதற்கு முன்பாக டொவினோவின் காதல் காட்சிகளை முக்கால் மணி நேரம் காண்பிக்கிறார்கள். கடும் எரிச்சலைக் கிளப்பும் காதல். அதே போல் இறுதிக் காட்சிகள் எல்லாம் மிகவும் தட்டையாக இருக்கின்றன.

பொறுமை இருந்தால், ஆதிவாசிகளுக்காக ஒரு முறை பார்த்து வைக்கலாம்.

Share

Janaki V Vs Kerala State Review

Jaanaki V Vs Kerala State (M) – கிறித்துவரான சுரேஷ் கோபியின் கதாபாத்திரம், ‘கன்னியாஸ்திரிகளுக்கத் தொல்லை கொடுக்கும் பாதிரியாருக்கு எதிரான வழக்கை நடத்தாமல் விடமாட்டேன், நேர்மையே முக்கியம்’ என்பதாக அறிமுகம் ஆகிறது. இதுதான் கதை என்று நினைத்தால் கதை வேறு ஒரு பக்கம் நகர்கிறது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனக்கு நீதி வேண்டும் என்று போராடுகிறாள். அவளது தந்தை இறந்ததற்கு ஒரு வகையில்  ஹீரோவின் பிரபலம் காரணமாக இருக்க, பிரச்சினை பெரிதாகிறது‌. அந்தப் பெண்ணுக்கு எதிராக ஹீரோ சகட்டுமேனிக்கு வாதாட, அந்தப் பெண் கற்பழிக்கப்படவே இல்லை என்று நீதி வழங்கப்படுகிறது.

முன்பு ‘மன்னிக்க வேண்டுகிறேன், என்று ஒரு திரைப்படம் வந்தது. டப்பிங் திரைப்படம். டாக்டர் ராஜசேகரின் திரைப்படம்‌. மேக்கிங் வகையில் மொக்கையாக இருந்தாலும், கதையாக எனக்கு அந்தத் திரைப்படம் அந்த வயதில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவளைக் கொலை செய்வதற்காகத் தான் இறந்ததாக உலகை நம்ப வைத்து விடும் ஹீரோ, அவளை கொல்லச் செல்லும் போது அவள் நிரபராதி என்பதைப் புரிந்து கொள்கிறான். தான் இறந்தது போல ஊரை நம்ப வைப்பதற்காக அவன் ஆடிய நாடகம் அவனுக்கே எதிராகிறது. தன்னை நல்லவன் என்று நம்ப வைக்க மீண்டும் போராட ஆரம்பிப்பான். குன்ஸாக இதுதான் திரைக்கதை.

அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் போல இந்தத் திரைப்படம் நகரும் என்று நினைத்தேன். அதே மாதிரிதான் ஆனது.

ஆனால் பெரிய மைனஸ் பாயிண்ட் என்னவென்றால், சுரேஷ்கோபி தான் முன்பு வாதாடியதற்கு எதிராக வாதாடுவதற்குப் பதிலாக தனது தங்கை வாதாடுவார் என்று சொல்லிவிடுகிறார்.  படத்தின் தலைப்பான ஜானகி வெர்ஸஸ் கேரளா ஸ்டேட் என்பதற்குள் அப்போதுதான் வருகிறார்கள்.

எத்தனையோ மலையாளிகள் திரைப்படத்தில் இருக்க, படத்தின் கருவுக்கான பழியை ஒரு ஹிந்திக்காரன் மேல் போட்டு விடுகிறார்கள். அவன் இந்திக்காரன்தானா என்பதிலும் ஒரு சந்தேகம் இருக்க, எத்தனையோ தேடிப் பார்த்தேன். யாரும் எங்கேயும் அதைப்பற்றி எழுதவே இல்லை. அவன் திடீரென்று பெண் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு நம்ம ஊர் குலசேகரப்பட்டினம் திருவிழா போல கேரளக் கிராமம் ஒன்றில்  ஆடுகிறான். அங்கே சென்று ஹீரோ பந்தாடி அவனைத் தூக்கிக்கொண்டு வர, படம் முடிவடைந்து விடும் என்று நினைத்தால், படத்தின் ஆதாரக் கேள்வி அப்போதுதான் ஆரம்பமாகிறது.

பலாத்காரம் மூலம் உருவான குழந்தையை தான் ஏன் சுமக்க வேண்டும் என்பதுதான் கதாநாயகியின் கேள்வி. அதற்காகத்தான் அந்தப் பெண் அரசை எதிர்த்துப் போராடுகிறார்.

ஜானகி எதிர் கேரள மாநிலம் என இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்கள் உண்டாகி இருக்கின்றன. ஜானகி என்பது சீதையைக் குறிக்கும் சொல் என்பதால் இந்தப் படம் ஹிந்து மதத்தினைப் புண்படுத்தக் கூடும் என்று சென்ஸாரில் பெயரை மாற்றச் சொல்லி விடுகிறார்கள். அதற்கு எதிராக தயாரிப்பாளர்கள் கேரள ஹை கோர்ட் செல்ல, நீதிபதி படத்தைப் பார்த்துவிட்டு, அப்படி ஒன்றும் இல்லை ஜானகி என்பது சாதாரணப் பெயர்தான் என்று தீர்ப்பு சொல்லி, இருந்தாலும் ஜானகி வி அதாவது அவரது தந்தை பெயர் வித்யாதரன் எதிர் கேரள மாநிலம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

இப்படி மூன்று கதைகளை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட படம் ரொம்ப சுமார். மிக மோசமான நடிப்பு, சுரேஷ் கோபி உட்பட. ஹீரோயினாக வரும் பெண் மட்டுமே மிக நன்றாக நடிக்கிறார். நீதிமன்றக் காட்சிகள் பிடிப்பவர்களுக்கு இந்தப் படம் சுமாராகவாவது தோன்றலாம். மற்றபடி இந்தப் படத்தில் பார்க்க ஒன்றுமே இல்லை.

பார்க்க ஒன்றுமே இல்லாத படத்திற்கு எத்தனை பெரிய விமர்சனம் என்று நீங்கள் நினைக்கலாம். என் வாழ்க்கை உங்களுக்காகத் தியாகம் செய்யப் பட்டது என்பதை நான் ஏன் மீண்டும் சொல்ல வேண்டும்? இனி தியாகம்.

மலையாளப் படங்களுக்கே உரிய கிறித்துவத்தன்மை போலப் படம் முழுக்க கிறிஸ்தவ மயம். ஹீரோ உட்பட பல கதாபாத்திரங்கள் கிறித்துவர்கள். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் வருகிறது. அட்டகாசமாக அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு மரணத்திற்குத் தான் நேரடியாகக் காரணம் இல்லை என்ற போதும், தானும் அதற்கு ஒரு காரணம் என்று நினைக்கும் அந்தக் கதாபாத்திரம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பிரச்சினைக்குரிய ஹிந்திக்காரன் மதம் இந்து மதமாக இருக்கிறது.

Share

Ronth Malayalam Movie

ரோந்த் (M) – எப்படியாவது ஒரு நல்ல படம் கொடுத்துத் திகைக்க வைப்பதில் மலையாளிகளை அடித்துக் கொள்ள முடியாது. அப்படி ஒரு நல்ல திரைப்படம் ரோந்த்.

கதை எல்லாம் எதுவும் இல்லை. அல்லது கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது. காவல் நிலையத்தில் நடப்பதை அப்படியே காண்பிக்க முயன்ற ஆக்‌ஷன் ஹீரோ பிஜு திரைக்கதையைப் போல, ஒரு ரோந்தின் போது நடப்பதை அப்படியே காண்பிக்கும் வகையிலான திரைக்கதை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமும் இருக்கிறது. இது சீரியஸான திரைப்படம். திலீஷ் போத்தன் அசரடிக்கிறார். அவரது உடல்மொழி பிரமிப்பூட்டுகிறது. திலீஷ் போத்தனின் கதாபாத்திரத்தை நுணுக்கமாக எழுதி இருக்கிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு பிரமாதமாக நடித்திருக்கிறார்.

திரைப்படம் நெடுக வரும், குழந்தைகளின் மீதான வன்முறை குறித்த காட்சிகள் பதற வைக்கின்றன. படத்தில் இதுவே பிராதனம்.

கடைசி அரை மணி நேரம் பரபரப்பாகச் செல்கிறது திரைக்கதை. முடிவைப் பற்றிப் பலர் நெகடிவாகக் கருத்துச் சொல்லி இருந்தார்கள். ஒருவகையில் அது சரிதான். அதே சமயம், காவல்துறையின் இன்னொரு முகத்தைக் காண்பிக்கும் அந்த முடிவு சரியாக உள்ளதாகவும் தோன்றுகிறது.

நிச்சயம் பார்க்கவேண்டும். தீலீஷுக்காக.

Share