Tag Archive for பாஜக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?

• ஊழலற்ற நிர்வாகத்துக்காக
• உண்மையான வளர்ச்சிக்காக
• நல்ல சாலைகள் கிடைத்திட
• மழை வெள்ளத்தில் படகில் போகாமல் இருக்க
• எப்போது மின்சாரம் வரும் என்று தேவுடு காக்காமல் இருக்க உரிய இடத்தில் நமக்காகக் குரல் கொடுத்திட
• போலி மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட
• தாஜா அரசியலுக்கு முடிவுரை எழுத
• நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட
• மத்திய அரசின் முக்கியமான திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி தமிழனுக்கும் கிடைத்திட
• தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க
• தமிழ்நாட்டு அரசியலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க
• புதிய பாதை, புதிய இலக்கு, புதிய செயல்திட்டம் கொண்ட புதிய தலைமையின் கீழ் தமிழ்நாடு ஒளிர்ந்திட.

ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• மேலே உள்ள அனைத்துக்காகவும்.
• உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காக.
• இனி வரப் போகும் புதிய அரசியலுக்குக் கட்டியம் கூற.
• ஒரு ஜீவன் ஹிந்து என்பதற்காகவே அந்த ஜீவனின் தற்கொலையைப் பற்றி யாரும் வாய் திறக்காமல் அவலத்தைத் தடுப்பதற்காக.
• கோவில்கள் மட்டும் இடிக்கப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்தப்படுவதற்காக.

ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• பாஜகவின் ஓட்டு வங்கி பாஜகவுக்கு மட்டும் வரவேண்டும் என்பதற்காக.
• திமுகவுக்கு உறுதியான எதிர்ப்பு அதிமுகதான் என்று ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை நிலவிய சூழல் இப்போது இல்லை என்பதற்காக. அந்த இடத்தில் பாஜக வந்துவிட்டது என்பதற்காக.
• சில பிரச்சினைகளில் மட்டும் ஒப்புக்காகப் பேசும் அதிமுக பெரும்பான்மையான அரசியல் கருத்துகளில் திமுகவின் கருத்தையே கொண்டிருப்பதற்காக.
• இரண்டாம் இடத்துக்கு பாஜக வரவேண்டும் என்றால் அதிமுக அல்லது திமுகவை பாஜக தாண்டியாக வேண்டும் என்பதற்காக.

இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?

வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம். தனித்துக் களம் காணும் முதல் உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மை பெற்றுவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாஜக பெறும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது.

பாஜக ஒருவேளை 20% வாக்குகள் பெறுமானால் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கும். இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் நிலவிய களம் மாற்றியமைக்கப்படும். அதற்காக நிச்சயம் நாம் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்.

அண்ணாமலை போன்ற உறுதியான, திறமையான தலைவருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது ஒவ்வொரு இந்திய தேசியத் தமிழனின் கடமை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாளை அண்ணாமலை முதல்வராவார். அதற்கான விதை இன்று நாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கப் போகும் வாக்குகளே.

மொழி, மதம் போன்றவற்றால் பிரிக்கப் பார்க்கும் பிரிவினைவாதிகளின் கொட்டத்தை அடக்கி, என்றும் தமிழ்நாடு இந்தியாவின் உறுதியான ஒரு அங்கமே என்பதை உறுதிபடச் சொல்வதற்காக பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும். இப்படிப் பேசவேண்டிய இன்னொரு கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தன்னிலை மறந்து பிரிவினைக் கட்சிகளுக்கு வால் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் பாஜகவை ஆதரிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பாஜக தான் போட்டியிடும் இடங்களில் ஒட்டுமொத்த சராசரியாக 12% வாக்குகள் பெறும் என்று நினைக்கிறேன், பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நிஜமான வளர்ச்சிக்கும் உண்மையான மதச்சார்பின்மைக்கும் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

Share

எம்.ஏ. சமூக அறிவியல் பாடமும் பொன்முடியும்

அமைச்சர் பொன்முடி கிளப்பி இருக்கும் பிரச்சினை குறித்து. சமூக அறிவியல் எம் ஏ பாடத்திட்டத்தில் முதலாம் ஆண்டு புத்தகத்தில் உள்ள சில வரிகள் நிஜமாகவே கொஞ்சம் தீவிரமாகவும் ஒரு சார்பாகவுமே இருக்கின்றன. கொஞ்சம் மட்டும்தான். தெளிவாக சில முஸ்லிம்கள் என்று சொல்லி இருக்கவேண்டும். அதைவிட முக்கியம், பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களே என்றும் அமைதியை விரும்புகிறவர்களே என்றும் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் பெரும்பாலான வெகுஜன முஸ்லிம்களின் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டு, அதை ஆதரிக்கும் தீவிர இஸ்லாமியர்களைப் பற்றித் தனியே பேசி இருக்கவேண்டும். வெகுஜன முஸ்லிம்களும் அடிப்படைவாத முஸ்லிம்களும் வேறு என்ற தெளிவான வேறுபாட்டுடன் பேசி இருக்கவேண்டும். இந்த அடிப்படை நியாயம் இல்லாததால் அதில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகளும் அடிபட்டுப் போகின்றன.

ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போது, அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல் என்றால், இங்கே இருக்கும் திக திமுக கம்யூனிஸ முற்போக்குக் கட்சிகள் அதை எப்படி அணுகுகின்றன என்பது எல்லாருக்குமே தெரிந்ததுதான். வாக்கு வங்கிக்காக அவர்கள் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதும் புதியதல்ல. தாஜா அரசியலுக்காகவே அவர்கள் அன்பு செலுத்துகிறார்கள். நாளையே இந்து வாக்கு வங்கி உருவானால் இவர்கள் எப்படி நடக்கப் போகிறார்கள் என்பதையும் இதே வெகுஜன இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் பார்க்கத்தான் போகிறார்கள்.

பாடத்தில் இருந்து ஒரு பத்தியை வாசித்துக் காட்டிய பொன்முடி, (அவரது முழு பேட்டியை நான் பார்க்கவில்லை) அதற்கு முந்தைய பத்தியில் இந்து முன்னணியின் பெயரும் இருப்பதை வாசித்தாரா என்று தெரியவில்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து இந்தப் பாடத்தை புகுத்தி இருக்கிறது என்றால், ஏன் இந்து முன்னணியின் பெயரையும் பாஜக புகுத்தவேண்டும்? பாஜவைச் சொல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு காரணமே இல்லை! அதுமட்டுமல்ல, சங்பரிவாரம் மசூதியை உடைத்தது என்றும் அதனால் கலவரங்கள் நிகழ்ந்தன என்றும் இப்பாடப் பகுதி சொல்கிறது. அடுத்து, அதில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறது. இதை முற்போக்களர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.

ஹிந்துக்களின் தாக்குதல் என்பது பதிலடி என்பது மிக முக்கியமான ஒன்றே. அதைப் பேசுவது ஏன் முக்கியமானதாகிறது என்றால், எந்த ஊடகமும், எந்த முற்போக்காளரும் இதைப் பற்றிப் பேசுவதில்லை என்பதால்தான். அதை இந்தப் பாடப் பகுதி தெளிவாகச் சொல்லி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

இந்தப் பாடத்திட்டத்தை எழுதியவர் பதவி ஓய்வு பெற்றுவிட்டார் என்று பொன்முடி சொல்கிறார். யார் அந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் எனத் தெரியவில்லை. துணைவேந்தர் யார் எனத் தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு என்ன ஆகும் என்றும் தெரியவில்லை.

பாடத்திட்டத்தில் ஈவெராவை பெரியார் என்றும் தமிழர் தந்தை என்றும் வைக்கம் வீரர் என்றும், அண்ணாத்துரையை ஆஹோ ஓஹோ என்றும் தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்றும், கருணாநிதியை கலைஞர் என்றும் புகுத்தினால்; ஆரியர்கள் பறக்கும் குதிரையில் காற்றில் அவர்களின் தலைமுடி பின்னால் பறக்க படையெடுத்து திராவிடர்களை வேட்டையாடினார்கள் என்ற ஒரு கற்பனைச் சித்திரம் மனதில் பதியும் அளவுக்குப் பாடங்களை எழுதினால்; கண்ணில் படும் கடவுளர் சித்திரங்களை எல்லாம் நீக்கி, கடவுள் வாழ்த்தை நீக்கி, ஹிந்துப் பெயர்களை நீக்கி, புகைப்படங்களில் வரும் ஹிந்து மதச் சின்னங்களை நீக்கி பாடங்களை எழுதினால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தால், அடுத்தவனுக்கு வாய்ப்பு வரும்போது விரல் சூப்பிக் கொண்டிருக்க மாட்டான். நியாயமாகப் பார்த்தால், திராவிட இயக்கங்கள் செய்த பாடத்திட்டத் திணிப்புப் புரட்டுகளுக்கு மத்தியில், இன்று பொன்முடி சொல்லும் பாடத் திட்டம், மிகச் சரியாகச் சொல்லப்படாத ஒன்றாகவே உள்ளதே அன்றி, முழுப் பொய்யாக இல்லை, புரட்டாக இல்லை.

நீங்கள் ஒரு கட்சியாக அரசாக என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதையே உங்களுக்கு மற்றவர்களுக்குச் செய்வார்கள்.

(பின்குறிப்பு: கிடைத்த நான்கு பக்கங்களை மட்டுமே படித்தேன். முழு புத்தகத்தையும் படிக்கவில்லை.)

Share

தேஜஸ்வி சூர்யா – பெங்களூரு படுக்கை ஊழல்

பெங்களூருவில் நடந்த கொரானா நோயாளிகள் மற்றும் மருத்துவமனை தொடர்பான ஊழலை தேஜஸ்வி சூர்யா வெளிப்படுத்தும்போது சொன்ன பெயர்கள் அனைத்தும் இஸ்லாமியர்களின் பெயர்கள். இதை வைத்துக்கொண்டு அங்கே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் இதில் இருக்கும் மத அரசியலைப் பாரீர் என்று ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் அந்தப் பெயர்களை அவர் சொன்னார், அந்தப் பெயர்கள் யாருடையவை, அவை யார் தந்தவை என்பதையெல்லாம் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிந்திப்பார்கள். நடிகர் சித்தார்த் கிடைத்தது இன்னொரு வாய்ப்பு என்று மதச்சார்பின்மை ஒளிவட்டத்துடன் ஒரு பதிவும் போட்டு, அஜ்மல் கஸாப்பையும் விட பின் தங்கிவிட்டதாக ஒரு ட்வீட் செய்துவிட்டார். அதையும் சேர்த்துக்கொண்டு கன்னட ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் ஆரம்பித்துவிட்டன – தேஜஸ்வி சூர்யாவின் ஊழல் தோலுரிப்பில் மத அரசியல் என்று.

Youtube link for the interview of Tejasvi Surya https://www.youtube.com/watch?v=7cera26EkDM

இந்நேரம் பார்த்து தேஜஸ்வி சூர்யாவை பேட்டி எடுத்தது இந்தியா டுடே. வழக்கம்போல இந்தியா டுடேவின் நோக்கம் தேஜஸ்வி சூர்யாவிடம் இல்லாத மத அரசியலை, இஸ்லாமிய வெறுப்பை எப்படியாவது வெளியே கொண்டுவந்து அவரை அம்பலப்படுத்துவது. ஆனால் வழக்கம்போல நடந்தது வேறு. தேஜஸ்வி சூர்யா சொன்ன பதில்களில் வாயடைத்துப் போய்விட்டது இந்தியா டுடே. ஒரு கேள்வியையும் தேஜஸ்வி சூர்யா விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். ஏன் அந்த இஸ்லாமியர்ப் பெயர்கள் என்றதற்கு அவர் சொன்ன பதில்தான் இது ஹைலைட். அந்தப் பெயர்ப் பட்டியல் தேஜஸ்ட் சூர்யா தயாரித்ததே அல்ல! மருத்துவமனை தந்தது. அந்தப் பட்டியலை மருத்துவமனைக்குத் தந்தது ஒரு ஏஜென்ஸி. அந்த ஏஜென்ஸி இப்போது காவல்துறை வளையத்துக்குள். இதோடு நின்றிருந்தால் இது அரசியல் பதிலாக மட்டும் போயிருக்கும். அடுத்து என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது. நந்தன் நீல்கேனியின் உதவியுடன் இப்போதிருக்கும் வலைத்தளம் மற்றும் ஆப்பை எப்படி உயர்த்தலாம் என்று ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். நந்தன் நீல்கேனி அதற்கென 100 தொழில்நுட்ப உதவியாளர்களை நியமித்து, அந்த ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. இந்த பதில்களை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா டுடே அடுத்த கேள்வியை வெட்கமே இல்லாமல் கேட்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டுமா என்று. இவர்களுக்குத் தேவை பரபரப்பு மட்டுமே. அதற்கான நேர்மையான பதில் அல்ல!

Share

சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்

ஏர் டெக்கான் மற்றும் கேப்டன் கோபிநாத் என்ற பெயர்கள், இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவை. இன்று ஏர் டெக்கான் மூடப்பட்டிருந்தாலும், கேப்டன் கோபிநாத் கொண்டுவந்த புதுமையான யோசனையும் அதனால் விளைந்த பயனும் இன்றியமையாதவை. எதையுமே பெரிதாக யோசி, வித்தியாசமாக யோசி என்பதைச் செயல்படுத்திக் காண்பிக்கும் தொழிலதிபர்களே நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்பவர்கள். இன்றைய ஜியோ புரட்சியை இதனுடன் ஒப்பிடலாம். நாளை ஜியோ நஷ்டத்தில் மூடப்பட்டாலும், 4ஜி தொழில்நுட்பத்தை மிகக் குறைந்த விலையில் சாமானியனுக்கும் கொண்டு சென்ற பெருமை ஜியோவையே சேரும். அப்படி ஒரு புரட்சியையே கேப்டன் கோபிநாத் செய்தார். ஜியோ செய்த புரட்சியையும் விட கடினமான புரட்சி என்று புரிந்துகொண்டால், கேப்டன் கோபிநாத்தின் சாதனை நமக்குப் புரியும். கேப்டன் கோபிநாத்தின் ஏர் டெக்கானும் நஷ்டத்தாலும் பிற சூழ்ச்சிகளாலும் மூடப்பட்டது. ஆனாலும் முன்னோடி கேப்டன் கோபிநாத்தின் சிந்தனைதான்.

எல்லா ஆர்வலர்களையும் போல கேப்டன் கோபிநாத்துக்கும் புத்தி ஒரு நிலையில் இருக்காது. விவசாயம், ஹெலிகாட்பர் சேவை, அரசியல் ஆர்வம், ஏர்டெக்கான் என்று அவர் என்னவெல்லாமோ செய்து பார்த்துக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை சந்தேகமே இல்லாமல் ஒரு திரைப்படத்துக்கு உரியதுதான். சோகம் என்னவென்றால், தமிழில் நாம் இன்னும் இதற்குப் பக்குவப்படவில்லை என்பதுதான். இத்தனைக்கும் ஒரு திறமையான இயக்குநரே படத்தை இயக்கி இருக்கிறார். அப்படி இருந்தும் இத்தனை சறுக்கல்.

படத்தின் ப்ளஸ்களை முதலில் வேகமாகப் பார்த்துவிடலாம். ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க முடிகிறது. மிகத் திறமையான நடிகர்களைத் தேடி தேடி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அச்யுத், பரேஷ் ராவல், பிரகாஷ் பெலவாடி என ஒவ்வொரு மொழியில் இருந்தும் சிறந்த நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொருவரும் படத்தைத் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு நடிக்கிறார்கள். தமிழ் நடிகர்களில் காளி வெங்கட், விவேக் பிரசன்னா, பூ ராமு என்ற திறமையான நடிகர்கள். திருஷ்டிப் பொட்டு என்றால், ஊர்வசி மற்றும் மோகன் பாபு. மோகன் பாபு தன்னை சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த நாள்களிலேயே நடிக்கத் தெரியாது. இப்போதும் அப்படியே. சூர்யா என்னதான் நடிக்க முயன்றாலும், எனக்கு ஒட்டாது. இவர்கள் எல்லாரையும் ஓரம் கட்டுகிறார் அபர்ணா. அவருக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். அப்படி ஒரு நடிப்பு. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்திலும் தரம். ஒவ்வொரு காட்சியும் தரமாக இருப்பதில் அத்தனை மெனக்கெட்டிருக்கிறார்கள். பின்னணியில் முள்ளும் மலரும் ஓடும் காட்சி, சூர்யா – அபர்ணாவின் காதல் காட்சிகள் எனப் பலவற்றைச் சொல்லலாம். சடங்குகளை முடித்துக்கொண்டு, பிரச்சினைக்குப் போகலாம்.

கேப்டன் கோபிநாத் பிறப்பால் ஒரு பிராமணர். ஆனால் இந்த சுயசரிதைத் திரைப்படத்தில் சூர்யா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஏன் இந்த மாற்றம்? பயோ பிக் என்று சொல்லப்படும் சுயசரிதைத் திரைப்படத்தில் ஏன் இப்படி மாற்றவேண்டும்? பயோ பிக் என்று சொல்லிப் படத்தை எடுத்துவிட்டு, படம் ஆரம்பிக்கும்போது, இதில் வரு காட்சிகள் எல்லாம் கற்பனையே என்று போட்டுவிட்டால் புத்திசாலித்தனமா? அப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஹீரோவாக்கிக் காட்டும் படத்தில் வில்லன் மட்டும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்! இதுதான் இவர்கள் ஒரு பயோ பிக்-கை யோசிக்கும் லட்சணம்.

படத்தின் முதல் காட்சியிலேயே பிராமணக் கதாபாத்திரம் ஒன்றைக் காண்பித்து, அந்தக் கதாபாத்திரம் சாதி வெறி பிடித்தது போலவும், எல்லாத் தரப்பு மக்களுடனும் ட்ரைனில் போகப் பிடிக்காமல் வெறுப்பைக் கக்குவது போலவும் காண்பிக்கிறார்கள். இது நடப்பது 1950ல் அல்ல, 2000ல். எங்கள் மாறன் எங்களைப் பறக்க வைப்பான் என்று ஒரு வசனத்தைச் சொல்வதற்காகவே இப்படி ஒரு காட்சியை நுழைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி இவர்களைப் பறக்க வைத்தது பிறப்பால் ஒரு பிராமணர்தான் என்கிற உண்மையைப் பற்றித் திரைப்படக் குழு கண்டுகொள்ளவே இல்லை. சூர்யாவையும் ஒரு பிராமணராகவே காட்டி, பிராமணர்களையே வில்லன்களாகவும் காட்டுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? அங்கேதான் இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகின் உள்முகம்.

சூர்யாவுக்குத் திருமணம் நடக்கிறது. எப்பேற்பட்ட திருமணம்? சுயமரியாதைத் திருமணம். கேப்டன் கோபிநாத்தின் திருமணம் முறைப்படி எவ்வித சிறு பிசிறுமில்லாமல் ஐயங்கார் முறை திருமணம்! தன் திருமணம் பற்றி கேப்டன் கோபிநாத்தே அவரது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் மணமகன் கருப்புச் சட்டை அணிந்து சுயமரியாதைத் திருமணம். சூர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண் எந்த ஜாதி? சுயஜாதியா அல்லது வேறு ஜாதியா? ஊர் மக்கள் அனைவரும் சூர்யா ஆரம்பிக்கும் ஒரு தொழிலுக்குப் பணத்தைக் கொட்டி அனுப்புகிறார்களே, அவர்கள் அனைவரும் என்ன ஜாதி? இவை அனைத்தையும் சாய்ஸில் விட்ட இயக்குநருக்கு, பிராமணர்களை உயர்வாகக் காட்டிவிடவே கூடாது என்பது மட்டும் தீர்மானமாக இருந்திருக்கிறது. அதே சமயம், அப்துல் கலாமைக் காட்டுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அப்துல் கலாமைப் பார்த்து இப்படி கோபிநாத் புலம்பினாரா என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்தப் படக்குழுவிடம் அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ சொல்லி இருக்கக்கூடும். கோபிநாத் அவரது சுயசரிதையில் இப்படிச் சொல்லியது போலத் தெரியவில்லை. அப்துல் கலாம் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். உண்மையை வெட்டி அல்லது மாற்றி, எப்படி இல்லாத ஒன்றைப் புகுத்துகிறார்கள் பாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதன் பின்னே இருக்கிறது, தமிழ்த் திரைப்பட உலகம் போகும் பாதை.

கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’புத்தகத்தில் இருந்து.
ஆங்கிலத்தில் வந்த Simply Fly – A Deccan Odyssey புத்தகத்தின் தமிழாக்கம்.

கேப்டன் கோபிநாத் ஒரு தொழிலை ஆரம்பித்துச் செய்ய பல வகைகளில் கஷ்டப்படுகிறார். அவருக்கு உதவுவது அரசியல்வாதிகள்தான். எஸ்.எம்.கிருஷ்ணா, சந்திரபாபு நாயுடு, வெங்கய்யா நாயுடு (பாஜக), ராஜிவ் பிரதாப் ரூடி (பாஜக) என அனைவரும் பல வகைகளில் உதவி இருக்கிறார்கள் – கட்சி பேதமின்றி. விமானத்தின் பாதுகாப்புக் குறைபாடு பற்றி பிரச்சினை வரும்போது மத்திய அரசே ஏர் டெக்கானுக்குத் துணை நிற்கிறது. ஆனால் திரைப்படம் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. என்னவோ அரசியல் அரங்கில் அனைவரும் மாறன்களை ஒழித்துக் கட்டிவிட்டு கோஸ்வாமிகளை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்கள் என்று காண்பிக்கிறார்கள். சூர்யாவை பிராமணராகவே காட்டி இருந்தால், இந்தக் காட்சிகளை எல்லாம் எடுக்க முடியாது. மீறி எடுத்தால், இந்தப் படம் வெறும் தொழில் போட்டிப் படமாகி இருக்கும். திரைப்படக் குழு இதனை விரும்பவில்லை. கேப்டன் கோபிநாத் எதிர்கொண்டது தொழில்போட்டியைத்தான். ஆனால் சூர்யாவுக்காக இத்திரைப்படம் ஜாதிப் போட்டிகள் நிறைந்த படமாக மாறிவிட்டது!

வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் என்பதே கேப்டன் கோபிநாத்தின் கனவு. எதோ ஒரு பேட்டியில் தற்செயலாக கோபிநாத் ‘வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல்’ என்று சொல்லப் போக, பத்திரிகை அதையே தலைப்புச் செய்தியாக்க, வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் என்பது ஒரு ஸ்லோகனாக மாறிப் போனது. தமிழில் இந்த உடுப்பி ஹோட்டலை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டுவிட்டார்கள். கோபினாத்தை மாறனாக்கியவர்கள் இதனைக் கூட முனியாண்டி விலாஸ் ஆக்கி இருக்கலாம். ஆனால் இதை மாற்றுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதை மாற்ற வேண்டும், எதை மாற்றத் தேவையில்லை என்று தெளிவாகவே செயல்பட்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு கனவுக்குப் பின்னாலும் ஒரு தனிப்பட்ட சோகம் அல்லது உந்துதல் இருக்கும் என்கிற திரைப்பட பாலபாடத்தை இவர்களும் பின்பற்றி இருக்கிறார்கள். கேப்டன் கோபிநாத்தைப் பொருத்தவரை அவரது அப்பா ஒரு தெய்வம். தனது புத்தகத்தையே முதலாக அவர் தனது அப்பாவுக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் இதில் சூர்யாவைப் புரிந்துகொள்ளாத அப்பாவாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். பின்னர் தன் மகனையே எண்ணிச் செத்தும் போகிறார். அவரைப் பார்க்க சூர்யாவால் முடியவில்லை. ஏன்? ஏனென்றால் அவரது கையில் பணமில்லை. எனவே விமானத்தில் பறக்க முடியவில்லை. இத்தனை பத்தாம்பசலித்தனமாக யோசித்திருக்க வேண்டாம். தொடர்ச்சியாக நீண்ட காட்சிகள் – அலுப்பைத் தருகின்றன. என்ன நடக்கப் போகிறது எனத் தெரியும் என்னும் திரைக்கதைக்கு இவையெல்லாம் தேவையா? அப்பாவைப் பார்க்க முடிந்திருந்தாலும் மாறன் விமானப் போக்குவரத்தை ஆரம்பித்திருப்பானே? அவனுடைய கனவே அதுதானே?

கேப்டன் கோபிநாத் தேர்தலில் நின்று தோற்றுப் போகிறார். பாஜக சார்பாகப் போட்டி இட்டார். வாஜ்பாயுடன் பிரசாரம் எல்லாம் செய்திருக்கிறார். 2019ல் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகப் போட்டி இடுகிறார். மீண்டும் தோற்கிறார். ஆனால் திரைப்படம் இந்தத் திக்கில் போகவே இல்லை. அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது, கோபிநாத்தின் காதலும் கல்யாணமும்தான். தேவைக்கு அதிகமாக அதில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முதல் விமானப் பயணம் தோல்வியில் முடியும்போது கூட, மனைவியின் பிரசவம் என்றெல்லாம் சவ்வாக இழுக்கிறார்கள். ஒரு பயோ பிக் திரைப்படத்தில் சொந்தப் பிரச்சினைகளை எந்த அளவில் எங்கே நிறுத்தவேண்டும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

படம் மிக மெதுவாகப் போகிறது. எப்படா விமானம் ஒழுங்கா ஓடும் என்று கொட்டாவி வரும் அளவுக்கு மெல்லப் போகிறது. மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள், காரணங்கள், நம்பிக்கைத் துரோகங்கள், பழிவாங்கல்கள், சூர்யாவின் ஒரே டெம்ப்ளேட் வசனங்கள் – இவையே இந்த தொய்வுக்குக் காரணம். எந்த ஒரு சாதாரண விஷயத்துக்கும் கூட சூர்யா தடதடவென ஓடுகிறார். அங்கே நாம் ஒரு தொழிலதிபரைப் பார்க்க முடிவதில்லை. சூர்யாவைத்தான் பார்க்க முடிகிறது.

ஒரு பயோ பிக் திரைப்படத்தை எடுக்கும்போது திரைப்படத்துக்கு ஏற்றவாறு மாற்றுவது முக்கியமானதுதான். அதற்காக யாரைப் பற்றிப் படம் எடுக்கிறோமோ அவரை முதல் காட்சியிலேயே கொலை செய்துவிட்டு ஆரம்பிக்கக் கூடாது. அப்படி ஒரு முயற்சியையே சூரரைப் போற்று செய்திருக்கிறது. சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்ததில் தொடங்கி இப்படியே யோசித்து, நன்றாக வந்திருக்கவேண்டிய ஒரு சுயசரிதைத் திரைப்படத்தை நேர்மையற்ற படமாக்கி இருக்கிறார்கள்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

வேல் யாத்திரை தடை

கொரானா காலத்தைக் கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என்று தமிழக அரசு சொல்லி இருக்கிறது.

தமிழக அரசு பெரிய தவறு செய்துவிட்டதாகவே நினைக்கிறேன். அனுமதி தந்திருந்தால், இந்த வேல் யாத்திரை அதிகம் கவனிக்கப்படாமல் போயிருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஆனால், இப்போது தடை செய்ததன் மூலம், தமிழக பாஜகவுக்கு அதிக வெளிச்சத்தைத் தந்திருக்கிறது அதிமுக அரசு. சுணங்கிக் கிடந்த தமிழக பாஜக தன் வழியைச் சிறப்பாகத் தீர்மானிக்க நல்லதொரு வாய்ப்பை அதிமுக ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

வேல் யாத்திரை அனுமதிப்பு மறுப்புக்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணம், கொடுமை! முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டபோது, அதிமுக அலுவலகம் முன்பு அப்படி ஒரு கொண்டாட்டம். எவ்விதமான கொரானா பாதுகாப்பும் கடைப்பிடிக்கப்படவில்லை. இப்போது பாஜக வேல் யாத்திரை நடத்தினால் கொரானா பிரச்சினை வந்துவிடும் என்று நினைக்கிறது அரசு!

அதிமுக அரசு பாஜகவுக்கு சாதகமாகவே இருப்பதாகப் பலர் சொல்லி வரும் வேளையில், இந்த அறிவிப்பால் பாஜக அதிமுக உறவு மோசமடையலாம். மோசமடையவேண்டும் என்பதே என் ஆசை. கருணாநிதிக்குப் பின் திமுகவை வீழ்த்துவதைவிட, ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுகவை வீழ்த்துவதே எளிதானது. ஸ்டாலின் வலுப்பெற்றுவிட்ட நிலையில், அதிமுகவுடன் இன்னும் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. அதேசமயம் எக்காரணம் கொண்டும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே முடியாது. கூடாது. தனித்து நின்று தேர்தலைச் சந்திப்பதுதான் சரியான முடிவு. இந்த வேல் யாத்திரைக்கான தடை, பாஜக தனித்து நிற்பதை விரைவுபடுத்துவதோடு, அதிமுகவின் வீழ்ச்சியையும் வேகமாக்கும். ஏற்கெனவே அதிமுக எதிர்வரும் தேர்தலில் வெல்வது அத்தனை எளிதானதல்ல என்றிருக்கும் வேளையில், இந்த வேல் யாத்திரை தடை மூலம் பாஜகவும் அதிமுகவிடம் இருந்து விலகுமானால், குறைந்தது 5% ஓட்டாவது கிடைக்காமல் போகலாம். இந்த ஓட்டை, பாஜக அதிமுகவுடன் இல்லாத நிலையில், சிறுபான்மையினர் சரி செய்வார்கள் என்றும் யோசிக்க முடியாது. ஏனென்றால் சிறுபான்மையினர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் போக எந்தக் காரணமும் இல்லை! எனவே பாஜக மூலம் தனக்கு வரவிருந்த 5% ஓட்டையும் அதிமுக இழப்பதாகவே கருத்தில் கொள்ளவேண்டும்.

கொரானா காலத்தில் இந்த யாத்திரை தேவையா என்ற கேள்வி, எவ்வித அரசியல் காரணங்களும் இல்லாமல் முன்வைக்கப்படுமானால், எவ்வித அரசியல் செயல்பாட்டையும் களத்தில் செய்யாத ஒரு கட்சியால் முன்வைக்கப்படுமானால் மட்டும் அதைப் பொருட்படுத்தலாம். ஒரு தனிமனிதனாக இந்தக் கேள்வி நியாயமானதே என்றுதான் நினைக்கிறேன். ஆனால் பாஜகவுக்கு மட்டும் இந்தக் கேள்வியைக் கேட்போம் என்பது அபத்தம்.

இந்தத் தடையையும் மீறி வேல் யாத்திரையை பாஜக நடத்தி, தமிழ்நாட்டில் பாஜகவின் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைக்கட்டும். வேல் யாத்திரையின் போது முருகன் பாஜகவின் தலைவராக இருப்பது நல்ல பொருத்தம். இறைச்செயல் என்றே கொள்வோம். எப்போதோ பாஜக முருகனைக் கையில் எடுத்திருக்கவேண்டும். பத்து வருடங்களுக்கு நாங்கள் நண்பர்களுக்குள் பேசி இருக்கிறோம், தமிழக பாஜக முருகனைக் கையில் எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்யவேண்டும் என. திடீரென சீமான் தமிழ்க்கடவுள் என்று கையில் முருகனை எடுத்துக் கொண்டார். நல்லவேளை, சீமானால் பெரிய தாக்கம் ஒன்றையும் ஏற்படுத்த முடியவில்லை. இன்று இந்த வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த எம்பெருமான் முருகன் அருளட்டும்.

Share

ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும்

கரு.நாகராஜன் ஜோதிமணியைப் பற்றிப் பேசிய விவகாரம் – நாகராஜன் பேசியது மிகத் தவறானது. கண்டிக்க வேண்டிய ஒன்று. பாஜகவினரும் இப்படிப் பேசுவது நிச்சயம் எனக்கு அவநம்பிக்கையைத் தருகிறது. ஆனால் இதை யாரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதில்தான் கூடுதல் அரசியல் இருக்கிறது.

பெண்களை என்று மதிக்காத திராவிட அரசியல் பாஜகவின் நாகராஜனைக் கண்டிக்கிறது. பெண்களைப் போற்றுகிறோம் என்கிற போர்வையில் அவர்களை எத்தனை மட்டம் தட்ட முடியுமோ அத்தனை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு நாகராஜனைக் கண்டிக்க என்ன தகுதி உள்ளது? நாகராஜன் ‘கேவலமான மகளிர்’ என்று சொன்னார். ஆனால் இவர்கள் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்? கருணாநிதி சிலேடையாகப் பேசுவதாகப் பேசிய பேச்சை எல்லாம், அவரது தமிழ்ப் புலமைக்கும் கழக ஆண்களின் ஆண்மைக்கும் சான்றாகச் சொல்லி விதந்தோதியவர்களே இவர்கள். இவர்களது வரலாறே பெண்களைப் பாலியல் ரீதியாக சுரண்டியதிலும் அவமானப்படுத்தியதிலும்தான் இருக்கிறது. ஆனால் பேச்சிலும் எழுத்திலும் மட்டும், அடேயப்பா!

ஜெயலலிதாவையும் மோடியையும் பற்றி மிகத் தரக்குறைவாகப் பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இன்று அவரது கட்சியைச் சேர்ந்தவரை நாகராஜன் விமர்சிக்கவும் அந்தக் கட்சியே மிக யோக்கியமானவர்கள் போலப் பேசுகிறார்கள். இத்தனைக்கும் நாகராஜன் பேசிய கேவலமான பேச்சைவிடப் பல மடங்கு கேவலமாகப் பேசி இருந்தார் இளங்கோவன்.

திருமாவளவன் – இவர் காயத்ரி ரகுராம் பற்றிப் பேசியது,  (“குடித்து விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்? ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில்”) நாகராஜன் பேசியதே பரவாயில்லையே என்று சொல்லும் அளவுக்குக் கீழ்த்தரமானது. திருமாவளவன் பேசியதைத் தொடர்ந்து அவரது கட்சியினர் மிக மோசமாக காயத்ரி ரகுராமைக் கீழ்த்தரமாக எழுதினார்கள். திருமணத்துக்கு முந்தைய உறவு பற்றி குஷ்பூ ஒரு கருத்துச் சொல்லப் போக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல்கட்சிகள் குஷ்பூவை அரசியல் ரீதியாக ஓட ஓட விரட்டின. அந்த சமயத்தில் குஷ்பூ திரைப்படங்களில் பிற நடிகர்களுடன் நெருக்கமாக நடித்த படங்களை எல்லாம் இணையத்தில் கொட்டி குஷ்பூவைக் கட்டம் கட்டினார்கள். இன்று இவர்கள் பாடம் எடுக்கிறார்கள்.

இந்த விவகாரம் பற்றித் தமிழ் தி ஹிந்து வலைத்தளத்தில் ஒரு செய்தி (https://www.hindutamil.in/news/tamilnadu/555149-jothimani-vs-karu-nagarajan-3.html) பார்த்தேன். நாகராஜன் திட்டியதைப் பற்றி மட்டும் போட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியை கல்லால் மக்கள் அடிப்பார்கள் என்று ஜோதிமணி பேசியதைப் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. இதுதான் ஊடகங்களின் லட்சணம்.

திமுகவின் வெற்றிகொண்டான் பேச்சை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. வெற்றிகொண்டான் உள்ளிட்டவர்களை நாம் விமர்சித்தால், இந்த ரசிகர்கள் உடனே வந்து நமக்குப் பாடம் எடுப்பார்கள். வெற்றிகொண்டான் பேச்சு கழகக்காரர்களை உற்சாகப்படுத்தவாம். திமுகவின் கட்சி மாநாடு நடந்தபோது நாடகம் என்கிற பெயரில் ஜெயலலிதாவை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து இரட்டை அர்த்த வசனத்துடன், சொல்லவே கூச்சம் ஏற்படும் வகையில் ஒரு நாடகம் போடப்பட்டது. கருணாநிதி, அவரது குடும்பம் உட்பட அனைத்து முன்னணித் தலைவர்களும் அதைப் பார்த்தார்கள். சில முன்னணி தலைவர்களே மேடையில் இரட்டை அர்த்தத்துடன் பேசினார்கள். பின்னர் அடுத்து அதே போல அதிமுக மாநாட்டில் அதே போன்ற இரட்டை அர்த்த வசனத்துடனும் கேவலமான சொற்பிரயோகங்களுடனும் கருணாநிதிக்குப் பதிலடி தரப்பட்டது. (http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_12.html and https://www.facebook.com/haranprasanna/posts/714427531911952).

இப்போது நாகராஜனுக்குப் பாடம் சொல்கிறார்கள்.

வெற்றிகொண்டான் என்றில்லை, தலைவர்கள் வரை இவர்களது செயல்பாடு இப்படித்தான். இதையேதான் பாஜகவும் பின்பற்ற நினைக்கிறதா என்பதைத்தான் இப்போது பாஜகவும் பாஜகவினரும் பாஜகவின் ஆதரவாளர்களும் யோசிக்கவேண்டும். இதுவே பழக்கமாகவும் பின்னர் வரலாறாகவும் மாறிவிட்டால் அதனால் ஏற்படும் அவமானத்தை எப்போதும் துடைக்கவே முடியாது.

பெண்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் ஒருவரைத் திட்டவும் தகுதி வேண்டும். அந்தத் தகுதி நீங்கள் நினைக்கும் போதெல்லாம் வராது. அது தொடர்ச்சியான ஒன்று. எந்தக் கட்சியினர் பேசினாலும், அவர்கள் தங்கள் கட்சிக்காரர்களே என்றாலும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் ஒரு அரசியல்வாதியைக் கண்டிக்காத வரை, மற்ற அரசியல்வாதிகளைக் கண்டிக்க யாருக்கும் தகுதி இல்லை. நாகராஜன் பேசியதைவிட தரக்குறைவாகப் பேசிய ஈவிகேஸ் இளங்கோவனையும் திருமாவளவனையும் கண்டித்துவிட்டுப் பின்னர் நாகராஜனுக்கு வாருங்கள். ஈவிகேஎஸ், திருமாவளவன், ராதாரவி, நாகாரஜன் உள்ளிட்ட அனைவரையும் கண்டிப்பவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.

-oOo-

துக்ளக்கில் வெளியான தொகுப்பு சேமிப்புக்காக இங்கே:

நாகரிகமான பேச்சு. இந்தப் பேச்சின்போது கருணாநிதியின் குடும்பமே மேடையில் இருந்தது. பெண்களை மதிக்க, பெண்களுக்காக போராட திமுகவை விட்டால் நாதியில்லை!!!

கடந்த 2003 திமுக மாநாட்டில் பேசிய சிலரின் பேச்சுக்கள் தான். அது கீழே…

சில சாம்பிள்கள்…

* பைத்தியக்காரி, ஆணவக்காரி, இடி அமீன், ஹிட்லர், குடும்ப வாழ்க்கை
தெரியாதவர் என்றெல்லாம் அர்ச்சனைகள் நிகழ்த்தப்பட்டன.

* திருச்சி செல்வேந்திரன் கதறுந்த ஊசி, வார் அறுந்த செருப்பு, கறை
படிந்த பாவாடை என ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். அவரே “தலைவரையும்
அவரது மகளையும் அவமானப்படுத்தி, ஜெயலலிதா தனது தொழில்புத்தியைக்
காட்டினார்” என்றும் குறிப்பிட்டார்.

* வெற்றி கொண்டான், ” இந்த அரசு ஊழியர்கள் இன்னும் இரண்டு வருடம்
பொறுத்திருக்கக் கூடாதா? நான் ஏற்கனவே சொன்னேன்… அம்மா அப்பா
உற்றார் உறவினர் இனத்தைச் சேர்ந்தவன் இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும்
கையை நீட்டலாம். பத்துப் பேரிடம் படுத்தவளிடம் போய் கைநீட்டலாமா “
என்றவர், ” அது கொழுப்பெடுத்த குதிரை. அதுக்காகத்தாண்டி மவளே..
பக்காவா ஒரு தலைவனைத் தயார் பண்ணி வெச்சிருக்கோம். அடுத்த
ஆட்சியில் கலைஞர் முதலமைச்சர்; ஸ்டாலின் போலீஸ் அமைச்சர்.
அப்பத்தான் அவ கொழுப்பை அடக்க முடியும்!” என்று குறிப்பிட்டார்.

* கருப்பசாமி பாண்டியன், “பாசிச வெறி பிடித்தவர். சாடிஸ்ட். மனநிலை
தவறியவர். முசோலினி என்றெல்லாம் ஜெயலலிதா மீது அர்ச்சனை
நடத்தினார். இறுதியாக, “அழகான ஆண்களைக் கண்டால், அவர்களை
வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டை போடுவது அந்தம்மாவின்
சுபாவம்” என்றபடி ஸ்டாலினைப் பார்த்தார்.

* பரிதி இளம்வழுதி, ” கி.மு., கி.பி. மாதிரி சட்டசபை வரலாறு பற்றிப்
பேசினால் கு.மு., கு.பி. என்று குறிப்பிடலாம். அதாவது குண்டம்மாவிற்கு
முன், குண்டம்மாவிற்குப் பின்!” என்று விளக்கம் அளித்தார்.

* திமுக மாநாட்டில் முதல்நாள் பேரணியின் முடிவில் இரவு 10 மணிக்கு
“ஆண்டியும் போண்டியும்” என்ற பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.
இந்நாடகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின்
புகழ்பாடும் வசனங்களோடு, காட்சிக்குக் காட்சி முதல்வர் ஜெயலலிதாவைச்
சாடும் வசனங்களும் இருந்தன. அவற்றுள் சில இரட்டை அர்த்தத்
தொனியுடனும் மலிவான இரசனையைக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தது.

உதாரணத்திற்குச் சில வசனங்கள்…

** “ஒவ்வொரு மந்திரியும் அந்தம்மா காலில் விழுந்து மேலே பார்க்கிறான்.
என்ன பார்க்கிறான் தெரியுமா? அம்மா தூக்குவாங்களா மாட்டாங்களான்னு!”

** மந்திரி பதவிக்கு ஆசைப்படும் ஆளும் கட்சி எம் எல் ஏவிடம், அவரது
மகன் (திமுக ஆதரவாளர்) கூறுவது: ” அம்மா அஜால் குஜாலா இருந்தாங்கன்னா
அன்னைக்கு மந்திரி ஆக்குவாங்க. அஜால் குஜால் இறங்கிடுச்சுன்னா மந்திரி
பதவியை விட்டு எடுத்துடுவாங்க”

** “ஜெகத்குரு சங்கராச்சியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?”

“யாரு? அந்த…… குச்சியிலே கோவணம் கட்டியவனா?”

** “நீங்க மந்திரி ஆகணும்னா சின்னம்மாவைப் பிடிங்க. அவங்க
என்ன சொன்னாலும் நடக்கும்… அவங்களைத் தள்ளிக்கிட்டு
வர்றேன். முடிஞ்ச வரைக்கும் செய்யுங்க. இல்லேன்னா ஆளை
வெச்சுச் செய்யுங்க..”

(சுசி என்ற பெயருடைய அந்தச் ‘சின்னம்மா’ வருகிறார்)

சுசியைப் பார்த்து எம் எல் ஏ கூறுவது: “இந்த மாதிரி ஒரு
ஸ்ட்ரக்சரை நான் பார்த்ததே இல்லை.”

சின்னம்மா (சுசி) கூறுவது:

“…கவலையே படாதீங்க. நான் இல்லேன்னா அந்த அம்மாவால எந்த
அவயங்களையும் அசைக்க முடியாது. நாந்தான் அவங்களுக்கு எல்லாமே”

** ஒருவர்; ” என்ன 2 நாள் முன்னாடி அங்கே அம்மா லிங்கத்துக்கெல்லாம்
பூஜை செய்யச் சொல்லி அறிக்கை விட்டுருக்காங்க?”

மற்றொருவர்: ” எங்க அம்மா எத்தனை லிங்கத்தைப் பார்த்திருப்பாங்க!”

** (போண்டி என்பவர் ஆண்டியிடம் கூறுவது)
“உங்க அம்மாவுக்கு ராத்திரியானால் உள்ளே வைக்கணும்”

ஆண்டி” உம்..

போண்டி: அதாவது அரசியல் தலைவர்களைப் பிடிச்சு உள்ளே
வைக்கணும்

** ஆண்டி : “லேடீஸ் ஹாஸ்டல்னு ஒரு படம் பார்த்தேன். ஒரு பொண்ணு
குள்ளிக்கிறதை இன்னொரு பொண்ணு எட்டிப் பார்க்குது… கும்பகோணம்
மகாமகத்துல பெரியம்மாவும் சின்னம்மாவும் கட்டிப்பிடிச்சுக் குளிச்ச
மாதிரி இருந்தது”

** (ஒரு எம் எல் ஏவிடம், மாரியம்மன் போல சாமியாடியவர் கூறியவை)

சாமியாடுபவர்: “எனக்கு வைக்குறேன், வைக்குறேன்னு சொன்னியே
வெச்சியாடா? “

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: வேல் வைக்கிறேன்னு சொன்னியேடா… புடுங்குறேன்
புடுங்குறேன்னு சொன்னியேடா.. புடுங்கினியாடா?

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: கோயிலைச்சுற்றி இருக்குற புல்லைப் புடுங்கினியாடா…..
.. ஊத்துறேன் ஊத்துறேன்னியே… ஊத்தினியாடா?

சாமியாடுபவர்: கூழ் ஊத்தினியாடா..

எம் எல் ஏவிடம் சாமியாடுபவர் கடைசியாகக் கூறுவது:

” எங்க அம்மா உங்களை 6 மாசம் வெச்சிருந்து அப்புறம்
கலைச்சிடுவாங்க”

( நன்றி: துக்ளக் 1.10.03 )

Share

யாருக்கு வாக்களிப்பது – 2019 நாடாளுமன்றத் தேர்தல்

* சந்தேகமே இன்றி பாஜக கூட்டணிக்கே. இதில் எந்த மாற்றமும் தயக்கமும் தேவையில்லை. ஹிந்து ஆதரவாளர்களுக்கு, பாஜக ஆதரவாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது. இதில் மோடி மீது விமர்சனம், பாஜக மீது அதிருப்தி என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிச்சயம் பாஜக கூட்டணிக்கே வாக்களியுங்கள். அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று யார் நின்றாலும் அவர்களுக்கே வாக்களிக்கவேண்டியது ஹிந்துக்களின் கடமை.

* ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதா என்று பேசுபவர்கள் போலிகள். இதே போலிகள், இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் மத ரீதியாகப் பேசும்போது, வாக்களிக்கும்போது, அதை நடுநிலை என்று சொன்னவர்கள் என்பதை மறக்காதீர்கள். தங்கள் வேட்பாளரையே ஜாதி, மதம் பார்த்து நிற்க வைப்பவர்கள், ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

* ஜாதிக் கட்சி இருக்கிறது, ஊழல் கட்சி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இது கூட்டணிதான். சமரசம்தான். ஒரு சமரசத்தின் வழியாகவே இலக்கை அடைய முடியும் என்பதே அரசியல். சமரசம் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதும் வேறு வேறு. இப்போதைக்கு சமரசம். அதேசமயம் ஊழலுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை. இதைச் சாத்தியப்படுத்தினால் போதும்.

* எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது. ஹிந்து வாக்கு வங்கியாக ஒருமுகப்பட இன்னும் அதிக காலம் தேவைப்படும். அதன் முதல் படி இது. ஹிந்து வெறுப்பாளர்கள் இதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள். எனவேதான் ஹிந்துக்களின் மீது என்றுமில்லாத கரிசனத்தைக் காட்டுகிறார்கள். ஒரே ஒரு தடவை அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களித்து ஹிந்து ஒற்றுமையைக் காண்பித்தால் போதும். எப்படி மற்ற மதங்களுக்கு தாஜா அரசியல் செய்கிறார்களோ அதை ஹிந்துக்களுக்கும் செய்வார்கள். தவற விடாதீர்கள் இந்த வாய்ப்பை.

* நம் எதிர்ப்பு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீதல்ல. அவர்களை மட்டும் தாஜா செய்யும் போலி மதச்சார்பின்மையின் மீதுதான். மூன்று மதங்களையும் ஒரே போல் ஆதரிக்கும், எதிர்க்கும் அரசியல் கட்சிகளிடம் நமக்குப் பிரச்சினையில்லை.

* சில ஹிந்துத்துவ ஆதரவாளர்கள், கொள்கை என்ற ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, யதார்த்தத்தைக் கைவிட்டு, பாஜகவுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதற்கு வெட்கப்படவேண்டும். மோடியையும் பாஜகவையும் ஆட்சியில் அமர்த்துவதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. அதேசமயம் ஆட்சியில் பாஜக இருக்கும்போது ஹிந்துத்துவர்கள் விமர்சனங்களைச் செய்யலாம். செய்யவேண்டும். பாஜக மீதான ஹிந்துத்துவர்களின் விமர்சனம் என்பது, மோடிக்கோ பாஜகவுக்கோ வாக்களிக்கக்கூடாது என்ற வகையில் இருக்கவே கூடாது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை ஒரே நொடியில் அர்த்தமற்றதாக்குவது இச்செயல்.

* ஒருவேளை நீங்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, எக்காரணம் கொண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது. எனவே எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.

* அதிமுகவும் திமுகவும் வேறுபடும் முக்கியமான புள்ளி, திமுக என்பது கொள்கை ரீதியாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. அக்கட்சியின் கூட்டணி (பாஜகவுடன் கூட்டணி வைத்த காலம் தவிர) எப்போதுமே ஹிந்துக்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறது. ஸ்டாலின் தனக்குத் தரப்பட்ட பொன்னான வாய்ப்பைப் புரிந்துகொள்ளாமல், கருணாநிதியைவிடக் கூடுதலாக ஹிந்துக்களை எதிர்க்கிறார். ஹிந்துக்கள் மீதான கொள்கை ரீதியான வெறுப்பைக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்குப் பாடம் புகட்ட நல்ல தருணம் இது.

* சுருக்கமாக, நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் அல்லது எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணிக்குக் வாக்களிக்காதீர்கள். 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வெல்ல வைத்தால் தமிழகத்தைப் பீடித்திருக்கும் பல முன்முடிவுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Share

தேமுதிக கூட்டணி

பாஜக அதிமுக பாமக கூட்டணிக்கு வரவில்லை என்றால் அது இக்கூட்டணிக்குப் பெரிய பின்னடைவாகவே அமையும். அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக செல்லுமானால் அது இரட்டைப் பின்னடைவாகவே அமையும்.

அதேசமயம் தேமுதிகவின் தற்போதைய நிலை, விஜய்காந்த் உடல்நலமில்லாமல் இருப்பது – இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அதிகபட்சம் அதற்கு 3 இடங்களே தரமுடியும். போனால் போகிறதென்று 5 இடங்களைத் தரலாம்.

தேமுதிகவின் பலம் என்பது, அதன் எதிரணியை எத்தனை இடங்களில் தோற்கடிக்கமுடியும் என்பதிலேயே உள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் நின்று பத்து இடங்களில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. தனித்து 20,000 வாக்குகளைப் பெறும் என்றாலும்கூட, எதிரணிக்கு சேதாரம் பலமாக இருக்கும். இதை வைத்து திமுக 7 இடங்களை தேமுதிகவுக்குத் தரலாம். தந்தால் அது சரியான முடிவுதான். ஆனால் வரலாற்றில் சமீப காலங்களில் பொதுவாக கூட்டணிப் பேரங்களை முதலில் ஆரம்பித்து கடைசியில் அதைச் சரியாகக் கோட்டை விடும் கட்சிகளில் உலகளவில் முதன்மை பெறுவது திமுகவாகவே இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்காந்த் கட்சி தொடங்கும் முன்பிருந்தே என் யூகம், இவர் இன்னொரு வைகோவாக அமைவார் என்பதாகவே இருந்தது. இன்று வைகோ அதலபாதாளம் போய்விட்ட நிலையில், வைகோ அளவுக்கு விஜய்காந்த் மோசமாக முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மாறி மாறி ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தே தீரவேண்டிய நிலை இவருக்கும் ஏற்பட்டே தீரும். இதுவரை திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், எந்நேரத்திலும் எக்கட்சியுடனும் கூட்டணி வைக்கும் வாய்ப்புடனேயே தேமுதிக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.

2014ல் தமிழ்நாட்டில் அமைந்த பாஜக கூட்டணி மிக முக்கியமான ஒன்று. விஜய்காந்த் மற்றும் அன்புமணி என இருவருக்கும் முதல்வர் பதவி மேல் இருந்த (நியாயமான) ஆசை காரணமாக இக்கூட்டணி தொடராமல் போனது. இக்கூட்டணி தொடர்ந்திருந்தால், கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த நேரத்தில் நல்ல ஒரு மாற்றாக அமைந்திருக்கும். பாஜக இல்லாமல் இப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் அது மாநில அளவில் முக்கியமான மாற்றாகவே அமையும். ஆனால் தேசியக் கட்சி என்ற ஒன்றில்லாமல் இது அமையாது என்றே நினைக்கிறேன்.

Share