பாலுமகேந்திரா – நிசப்தத்தில் மிதந்துவந்த குரல்

நேற்றைய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் பாலுமகேந்திரா கலந்துகொண்டார். மிக மின்பு ஞாநி கலந்துகொண்ட மொட்டைமாடிக் கூட்டத்தில் அனல் பறந்தது. அன்று எல்லோருமே ஞாநி என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு, நேற்று நடந்த மொட்டைமாடிக் கூட்டத்தில்தான் மீண்டும் அது நடந்தது என நினைக்கிறேன். வந்திருந்த அனைவரும் அத்தனை பெரிய நிசப்தத்தில் மிதந்துவரும் பாலுமகேந்திராவின் குரலை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கேயிருந்தும் அனாவசிய சத்தங்கள் இல்லை. பாலுமேந்திராவின், அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும், ஹார்ஷ்நெஸ்ஸும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

எழுத்திலிருந்து திரைக்கு என்பதுதான் பாலுமகேந்திரா பேச எடுத்துக்கொண்ட தலைப்பு. அந்தத் தலைப்பிலிருந்து சிறிதும் விலகாமல் பேசினார். எழுத்து திரைக்கு மாறும்போது ஒரு கலைஞன் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான சவால்கள் குறித்து விளக்கினார். உருவமும் உள்ளடக்கமும்தான் ஒரு படைப்பின் சாராசம்ங்கள். அதைத் திரைக்கு மாற்றும்போது அதன் உள்ளடக்கம்தான் முக்கியமே ஒழிய, அதன் உருவம் இரண்டாம்பட்சம்தான் என்று சொன்னார். ஒரு படைப்பிலிருந்து எதனைத் திரைக்கு மாற்றவேண்டும் என்று அவர் கருதுவதாக நினைக்கிறாரோ அதுவே திரையில் மையப்படுத்தப்படுகிறது என்றார். இதன் அர்த்தமாக நான் புரிந்துகொண்டது, எழுத்தாளரின் கவனம் இரண்டாம் இடம் பெற்றுவிடுகிறது என்பதுதான். இதனை சில எழுத்தாளர்கள் முற்றிலுமாக மறுக்கக்கூடும். ஆனால் பாலுமகேந்திரா ஒரு திரைப்படம் எடுக்க முயலும்போது அதில் தனது பங்கை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுவிட்டே தொடங்குகிறார். ஓர் எழுத்தாளரின் படைப்பில் அவர் விட்டுவிட்ட பகுதிக்கு, அவருக்கான காரணங்கள் அவரளவில் தெளிவாகவே இருக்கின்றன.

இங்கேதான் எழுத்தாளர்கள் கடுமையாக முரண்படும் புள்ளியும் தொடங்குகிறது. பாலுமகேந்திராவின் கதை நேரக் கதைகளில், படைப்பாளியின் பெயர் என்பது எழுத்தாளர்தான் என்பதால், அதில் தங்கள் உரிமைதான் என்ன என்று அதனை எழுதிய எழுத்தாளர்கள் கேட்கக்கூடும். பாலுமகேந்திராவின் பதில் ஒன்றும் இல்லை என்பதுதான். நீங்கள் எழுதிய ஒரு கதையின் படைப்பாற்றலுக்கு என் படைப்போடு யாதொரு தொடர்பும் இல்லை என்கிறார். படைப்பாற்றலும் படைப்பும் இந்த இடத்தில் அடைந்த விலக்கம் என்ன அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். பாலுமகேந்திரா எழுத்தாளரின் படைப்பிலிருந்து எடுப்பது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே அன்றி அதன் படைப்பாற்றலை அல்ல. அவரளவில் இது தெளிவான பார்வையே. மட்டுமன்றி, ஒரு திரைமொழிக் கலைஞனுக்குத் தேவையானதும்கூட.

ஓர் எழுத்தாளர் ஒரு வரியில் எழுதிச் செல்லும் ஒரு காட்சிக்கு நான்கைந்து காட்சிகள் வைக்கவேண்டியிருக்கும் என்று சொல்லி, அதற்கு எடுத்துக்காட்டாக மாலனின் தப்புக்கணக்கு கதையை படமாக்கியவிதத்தை விளக்கினார். ஓர் எழுத்தாளர் ஆயிரம் பக்கங்கள் எழுதிச் செல்லும் ஒரு விஷயத்தை ஒரு திரைக்கலைஞன் ஒரு சட்டகத்தில் காண்பிக்கமுடியும் என்றார். உண்மைதான். ஆனால் அதேபோல் இதன் மறுபக்கமான, ஓர் எழுத்தாளன் உருவாக்கும் உன்னதத் தருணங்களை அதற்கு இணையான ஒரு தருணமாக எல்லா சமயங்களில் திரைக்கலைஞன் மாற்றிவிடமுடியாது என்பதும் உண்மையே. இதனால்தான் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க பாலுமகேந்திரா ஐம்பது கதைகளைப் படிக்கவேண்டியிருந்திருக்கிறது.

எழுத்திலிருந்து திரைக்கு படைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால்தான் திரைமொழியின் அடிப்படை பலமாகவும் தீவிரமாகவும் அமையும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா போன்றவர்கள் இலக்கியத்துக்கும் திரைக்கும் இடையேயான தூரத்தைக் குறைப்பதில் காட்டிவரும் அக்கறை மிகவும் முக்கியமானது. கதை நேரம் போன்ற வரவேற்கப்படவேண்டிய முயற்சிகளை எழுத்தாளர்கள் எந்த ஓர் ஊடகத்திலும் பதிவு செய்யவில்லை என்கிற பாலுமகேந்திராவின் வருத்தமும் கோபமும் இங்கே இருந்துதான் தொடங்குகிறது. தொடர்ந்து அலுத்துக்கொள்ளும் எழுத்தாளர்கள், அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு அரங்கேறும்போது ஏன் அதனைப் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்கிறார். அதோடு மட்டுமின்றி எழுத்தாளர்கள், திரைத்துறையைப் பற்றி வானளாவ பேசவும் செய்கிறார்கள் என்பது அவரது கோபம். தங்கள் நல்ல முயற்சிகளை அங்கீகரிக்காத எழுத்தாளர்கள் எவருக்கும் தங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்பது பாலுமகேந்திராவின் கோபம். எழுத்தாளர் சுஜாதா கதை நேரம் பற்றி எங்கேயோ குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். கற்றதும் பெற்றதும் பத்திகளிலா, எங்கே என்று தெரியவில்லை. ஒருவேளை இது பாலுமகேந்திராவுக்குத் தெரியாதா அல்லது அதெல்லாம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுத்தானே ஒழிய, அதை மட்டும் வைத்துக்கொண்டு எழுத்தாளர்கள் அங்கீகரித்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியாது என நினைக்கிறாரா என்று தெரியவில்லை. இரண்டாம் வகையாக பாலுமகேந்திரா எடுத்துக்கொண்டாலும் அதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

மொத்தத்தில் பாலுமகேந்திரா சிறப்பாகப் பேசினார். உரையாடல் தொடங்கியது. பின்னர் அவரது தப்புக் கணக்கு திரையிடப்பட்டது. மீண்டும் பாலுமகேந்திரா பேசினார்.

விமலாதித்த மாமல்லன் சார்பாகச் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பாலுமகேந்திரா அவரது பதிலைச் சொன்னார். கேள்வியின் சாரம், விமலாதித்த மாமல்லனின் கதையை பாலுமகேந்திரா மோசமாகப் படம் எடுத்தார் என்பதுதான் என நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா ஏற்கெனவே தான் சொன்ன பதில்களிலிருந்தே மேற்கோள் காட்டிப் பதிலளித்தார். ஓர் எழுத்தாளரின் கதை என்பது, அதன் படைப்பாற்றலைத் துறந்துவிட்டால், தினத்தந்தியில் வரும் ஒரு சிறிய செய்தித் துணுக்கைப் போன்றதுதான் என்றார்.

தப்புக் கணக்கு திரையாக்கலில் உள்ள சில குறைகளைப் பற்றி விமலாதித்த மாமல்லன் கேள்வி கேட்ட நேரத்தில் லேசான வெப்பம் பரவியது. மாமல்லன் சொன்ன காட்சிக் குற்றங்கள் எனக்கு ஏற்க இயலாதவை. ஆனால், தப்புக் கணக்கு திரைக்கதையில் ஒரு குழந்தையை அசாதாரணக் குழந்தையாகக் காட்ட அக்குழந்தை கேட்பதாகக் காட்டப்படும் கேள்விகளின் தொடர்வரிசை குறித்த மாமல்லின் குற்றச்சாட்டான செயற்கைத்தன்மையில் உண்மை உள்ளது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால், பள்ளி வெட்டவெளியில் செயல்பட்டால் இப்படி கேள்வி கேட்பார்களா, ஒரு குழந்தை வவுத்துலிங்கம் என்று தினமும் பார்க்கும் தன் தாத்தாவையே சொல்லுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. இதை ஒருவேளை மாமல்லன் படித்தால் அவருடைய தரப்பைச் சொல்லக்கூடும்.

மொத்தத்தில் ஒரு நல்ல மாலை.இதனை சாத்தியப்படுத்திய தோழர்கள் மருதன், பாலு சத்யாவுக்கு நன்றி சொல்லவேண்டும். நேற்று பாலுமகேந்திரா ஒருவித தத்துவ மூடில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்குள் தோன்றிய தத்துவ நெறி இது. இது இங்கே தேவையில்லைதான். ஆனால் பாலுமகேந்திராவின் அவரது படைப்பு போல, இது எனது படைப்பு. என்னவேண்டுமானாலும் எழுதலாமே! எனவே… தோழர்கள் என்பதே தோளர்கள் என்பதன் மரூஉ. பிற்காலத்தில் மரபு, பாரம்பரியம் இத்யாதி என்கிற தத்துவங்கள் தங்கள் மீது ஏறிக்கொள்ள வசதியாக முற்போக்குக் காலத்தில் தோள் வளர்ப்பவர்களே தோளர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்னும் கண்டடைதல்தான் அது. மீண்டும் தோளர்களுக்கு நன்றி.

Share

போயஸ்கார்டனில் முடியும் சாலைகள் – கடுங்கூர்நோக்கு

ஜெயலலிதாவின் நம்பிக்கைத் துரோகத்தைத் தொடர்ந்து கடும் கோபத்தோடு விஜய்காந்த், இடதுசாரிகள், ஓடினார்கள். அதைப் பார்த்து மகிழ்ச்சியில் உறைந்திருந்த திமுக கூட்டணி வகையறாக்கள், அவர்கள் ஓடிய இடம் போயஸ்கார்டன் என்பது தெரிந்ததும்…

தொடர்ந்து வாசிக்க…http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_3418.html

Share

நாதஸ்வரம் – மெகா தொடர்

தேர்தலில் ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது இந்த மெகா தொடர் பற்றி எழுதுவது ஒருவித சந்தோஷத்தைத் தருகிறது.

சன் டிவியில் வரும் ஒரு உருப்படியான நாடகங்களுள் ஒன்று நாதஸ்வரம். இந்த ஒரு வரி போதும் இந்தப் பதிவில் இதனைப் பாராட்ட. இந்தப் பதிவில் எழுதப் போவது நாதஸ்வரம் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கொடுமைகளையும் பற்றி.

திடீரென ஒரு நாள் அறிவிப்பார்கள், விளம்பர இடைவெளியில்லாமல் நாதஸ்வரம் என்று. வீட்டின் அத்தனை பெண்களும் டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள். இவர்கள் என்ன செய்வார்கள்? நாடகத்துக்கு இடையில் வரவேண்டிய விளம்பரங்களையெல்லாம் முன்னாடியே போட்டுவிடுவார்கள். இதிலென்ன விளம்பர இடைவெளியில்லாமல் வேண்டி கிடக்கிறது? இந்த எழவை விளம்பரத்தோடேயே போட்டுவிட்டுப் போய்விடலாமே!

இப்படிச் செய்து எரிச்சல் ஏற்படுத்திக்கொண்டிருந்த நாதஸ்வரம் நேற்று திடீரென்று உக்கிரம் கொண்டுவிட்டது. வசனமே இல்லாமல் இசையில் மட்டுமே நாடகம் என்றார்கள். அப்போதே எனக்குக் கொஞ்சம் ஜெர்க் அடித்தது. நாதஸ்வரத்தில் மிக முக்கியமான பங்களிப்பே பாஸ்கர் சக்தியுடனதுதான். அது இல்லாமல் ஒரு நாள் நாடகமா என நினைத்தேன். நேற்று வந்தது.

தன் உடலின் எல்லாப் பாகங்களையும் நடிக்க வைத்தே தீரவேண்டும் என்ற பதைபதைப்பில் நடித்துக்கொண்டிக்கும் பூவிலங்கு மோகன் இன்னும் அதிகமாக நடித்தார். அதிலும் மௌலி இசையின் பின்னணியில் கடவுள் முன் கோபம் கொள்ளும் காட்சி அசல் கொடுமை. ஒட்டுமொத்த குடும்பமும் மாறி மாறி ஒப்பாரி வைக்க, அவர்களை மிஞ்சி இசை ஒப்பாரி வைத்தது. இப்படியே போய்க்கொண்டிருந்தால், முழுக்க முழுக்க அழுது தீர்க்கும் நாடக வரிசையில் இந்த நாடகமும் போய்ச் சேர்ந்துவிடும்.

இசை மட்டுமே என்று சொல்லிவிட்டதால் பின்னணி இசையமைப்பாளர் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டார். நாதஸ்வரம் என்ற பெயர் வேறு நாடகத்துக்கு. கேட்கவேண்டுமா, ஊதித் தள்ளிவிட்டார். வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. வீணை தப்பித்தது என நினைக்கிறேன். ஏன் நாடகங்களில் வளவள என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது. இவர்கள் பேசாவிட்டால் அதைவிடக் கொடுமையாக இருக்கும்.

திருமுருகனும் மலர் என்ற வேடத்தில் வரும் பெண்ணுக்கும் காதல் காட்சியில் ஒரு பாடல் ஒன்று வந்தது. அவ்வளவு மொக்கையான பாடல், மொக்கையான காட்சி அமைப்புகள். சேரனுக்குப் போட்டியாக முகத்தை வைத்துக்கொண்டு படுத்தி எடுக்கும் திருமுருகனுக்குக் காதல் காட்சி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலின் டியூனை இசையமைப்பாளர் திடீரென்று பின்னணிக் காட்சிகளில் கோத்து விடும்போது பகீர் என்றிருக்கிறது. நேற்று முழுவதும் அந்தப் பாடலின் இசையைப் போட்டு போட்டு நடுங்க வைத்துவிட்டார். தேவையா இந்தக் கொடுமை எல்லாம்?

ஒரு மெகா தொடருக்கு ஏன் இத்தனை மெனக்கெட்டு எழுதவேண்டும்?

இது ஓர் உருப்படியான நாடகம். கொஞ்சமாவது யதார்த்தம் இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கும் நாடகம். (இதன் அர்த்தம் இந்த நாடகம் முழுக்க முழுக்க யதார்த்தமானது என்பதல்ல!) நடிகர்கள் தேர்வு உட்பட பலவற்றில் புதுமை. இதையெல்லாம் இந்த நாதஸ்வரம் டீம் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் எழுதி வைக்கிறேன்.

இனியும் இந்தக் கொடுமை தொடர்ந்தால் டாட்டா பைபை சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

Share

ஜெயலலிதா – திமிரென்னும் பீடத்தில்

ஆனால், கருணாநிதியோ வேறு எந்த அரசியல்வாதியோ இந்த ஒரு நிலையில் இருந்தால் இப்படி செய்வார்களா என்று யோசித்துப் பாருங்கள். இப்படி யோசிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் ஜெயலலிதா 160 இடங்களுக்கான அறிவிப்பையும் வெளியிட்டு, தனது முதல் கூட்டத்துக்கான நாளையும் இடத்தையும் வெளியிடுகிறார்.

தொடர்ந்து வாசிக்க: http://tnvotes2011.blogspot.com/2011/03/blog-post_7815.html

Share

ஓட்டம் – கவிதை

மனத்தின் கீழே
மெல்லிய கசப்புப் போர்வைகளை அடுக்கி
மேலே படுக்க வைத்திருந்தான்
இன்சொல் என்னும் கடவுளை

அவளது கவனம்
எப்போதும் அந்தப் போர்வையில்தான்

கடவுளை விரட்டிவிட்டு
போர்வைகளுக்குள் திக்கின்றி அலையும்
பூனைக்குட்டிகளை
காதைப் பிடித்துத் தூக்கி வருவதில்
அவள் மிடுக்கி

கடவுளிலும் கசப்பிலும்
தன்னைக் காணும்தோறும்
நிர்வாணம் கூசி ஓடுவான் அவன்
வேட்டை நாயின் மூச்சிரைப்போடு

திரும்பிப் பார்க்க அஞ்சி
நிற்காது ஓடுகிறான்
யுகம் யுகமாக
கையில் ஒரு கல்லுடனும்
ஒரு முயலின் கலவரத்தோடும்.

Share

பயணம் – மீட்பரின் புதிய சீடர் வருகை

தமிழ் பேப்பரில் பயணம் திரைப்படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான படம் என்றாலே அது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று நினைக்க வைப்பதில் முற்போக்காளர்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இப்படம் அதற்கு இன்னுமொரு உதாரணமாக அமையும்.

Share

ஆடுகளம் – கதையின்மை என்னும் பொய்

நன்றி: தமிழ் பேப்பர்

வெற்றிமாறனின் ஆடுகளம். அப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. கதையில்லை என்னும் புலம்பல்களுக்கு மத்தியில், எல்லாக் கதைகளுமே எடுக்கப்பட்டுவிட்டன என்னும் தப்பித்தல்களுக்கு மத்தியில் ‘ஆடுகளம்’ மிகச்சிறப்பான கதையைக் கொண்டிருக்கிறது. இப்படத்துக்குச் சரியான பெயர் ‘சண்டைக்கோழி’ என்பதாகவோ ‘ஆடுகளம்’ என்பதாகவோதான் இருக்கமுடியும். அந்த வகையில் ஆடுகளம் என்ற பெயரை இதுவரை யாரும் வைக்காததற்கு வெற்றிமாறன் ஒட்டுமொத்த திரைப்பட இயக்குநர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். 🙂

முதலிலேயே ‘சேவற்சண்டை’ மனிதர்களைக் கொல்லும் வரை செல்லும் என்று சொல்லி, படம் பார்ப்பவர்களைத் தயார் செய்துவிடுகிறார். மேலும் படம் முழுக்க அதுவே கதை என்பதையும் தெளிவாக உணர்த்திவிடுவதால், தேவையற்ற எதிர்பார்ப்புகள் குறைந்து, நேரடியான கதைக்களம் ஒன்றுக்குத் தயாராகிவிடுகிறோம். இடைவேளை வரை படத்தின் வேகம் சண்டைச்சேவல் வேகம்தான். ஒன்றிணைந்து கிடக்கும் துருவங்கள், மெல்ல மெல்ல எதிரெதிராக விலகிப் போவதையும், அதனுள்ளே மனிதனின் ஆதிகுணமான பொறாமையும் வன்மமும் குடிபுகுவதையும், பார்ப்பவர்கள் நம்பிக்கை கொள்ளும்வண்ணம் காட்டியிருப்பது முக்கியமானது.

இடைவேளை வரை நேரடியாகப் பங்குபெறும் சேவற்சண்டை, இடைவேளைக்குப் பிறகு, திரைக்கதையின் பின்புலமாகிப் போகிறது. ஓர் உன்னதத் திரைப்படத்துக்கு, சுவாரஸ்யத்தைவிட அனுபவம்தான் முக்கியம் என்றாலும், இடைவேளைக்குப் பிறகு வராத சேவற்சண்டையை நினைத்து ஏங்க வைத்துவிடுகிறார் வெற்றிமாறன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதனால் படம் இடைவேளை வரை படுவேகமாகவும், இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் மெல்லச் செல்வதாகவும் ஒரு தோற்றம் ஏற்பட்டுவிடுகிறது.

இப்போதிருக்கும் நடிகர்களில் மட்டுமல்லாது, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களுள் தனுஷும் ஒருவர் என்பதை இப்படம் நிரூபிக்கிறது. எந்த ஒரு இடத்திலும் இம்மி பிசகாத மதுரை சண்டியர் தோரணை. திறமைத் திமிர். சோகம் வரும்போது அடையும் முகக்கலக்கம். தனுஷ் கலக்குகிறார். பேட்டைக்காரராக வரும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் – வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு முதிர்ச்சி, நடிப்பில் யதார்த்தம். அவரே பின்னணிக் குரலும் என்றால், அதற்கும் ஒரு பாராட்டு. தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. சிறந்த புதுமுக நடிகர் என்று சொல்லி, வ.ஐ.ச.ஜெயபாலனைக் குறைக்காமல், சிறந்த குணச்சித்திர நடிகராக அவரும் தேர்ந்தெடுக்கப்படுவாரானால் மகிழ்ச்சியே.

ஹீரோயினுக்கு அதிக வேலை இல்லை. அழகாக வந்து போகிறார். ஒளிப்பதிவு அட்டகாசம். இசையில் பாட்டுகள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டன. இதுபோன்ற வித்தியாசமான படங்களுக்கு இசையமைக்க இளையராஜா உச்சத்தில் இல்லையே என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. ஜி வி பிரகாஷ் திணறுகிறார். இளையராஜா உச்சத்தில் இருந்தபோது இசையமைத்த படங்களில் பெரும்பாலானவை குப்பை. ஆதாரக் கதையோ திரைக்கதையோ இல்லாதவை. பாடல்களும் பின்னணி இசையும் மட்டும் ஒட்டாத உயரத்தில் நிற்கும். இன்று பல புதிய இயக்குநர்கள் பல புதிய கனவுகளோடு வருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள், இளையராஜாவின் பின்னணி இசையில் பெறவேண்டிய அடுத்தகட்ட நகர்வைப் பெறாமலேயே போயிவிடுகின்றன. இது மிகப்பெரிய துரதிஷ்டம். எப்படியோ பாலா மட்டும் தப்பித்துக்கொண்டு விடுகிறார்.

இப்படத்தின் ஒரே ஒரு சின்ன குறையாகச் சொல்லவேண்டியது – இதைக் குறை என்ற வார்த்தையால் குறுக்கமுடியாது என்றாலும் – இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள், முக்கியமாக நம்பிக்கைத் துரோகம் என்பது குருதிப்புனலை நினைவுபடுத்துகிறது. இது குருதிப்புனலின் அளவுக்கதிகமான தாக்கத்தால் இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பேட்டைக்காரரைப் பார்க்க தனுஷ் வரும் இடம்.

ஒரு படத்தின் முடிவு என்பதில் கட்டிப் போடப்பட்டிருக்கும் பொதுப்புத்தி இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதில் நிச்சயம் சிக்கல் இருக்கும். அதுவே இப்படத்தின் கமர்ஷியல் பலவீனமாகவும் அமையலாம். ஆனால், நல்ல படங்களைச் சிந்திக்கும்போதே, கமர்ஷியலாகவும் வெற்றி பெற நினைக்கும் புதிய இயக்குநர்களின் வரவும், அவர்களின் ஆக்கங்களின் தரமும் தமிழ்த்திரைப்படங்கள் மீது பெரும் நம்பிக்கைக் கொள்ள வைக்கின்றன. அந்தவகையில் வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குநராக உருவெடுக்கிறார்.

தமிழ்த்திரைப்படங்கள் தமிழ் வாழ்வைப் பேசாமல், எதையோ ஒன்றை, உலகத்தரம் என்னும் முலாமில் முக்கிப் பேசிவிட்டுத் தப்பிவிடுகின்றன. அக்குறையை நீக்க வந்திருக்கும் இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமானது.

Share

காவலன் – கொலையரங்கம்

நன்றி: தமிழ் பேப்பர்

சன் பிக்சர்ஸ் தயாரிக்காத, வினியோகிக்காத திரைப்படம் என்பதால், காவலன் திரைப்படத்தைத் திரையிட தியேட்டர்களே கிடைக்கவில்லை. பெரிய பாடுபட்டுத்தான் இப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். பல இடங்களில் அதிமுக பினாமிகள்தான் படத்தை ரிலீஸ் செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். வேறு வழியில்லாமல் இப்போது விஜய் அதிமுக ஆதரவாளராகவே தன்னைக் காண்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே அரசியலில் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த விஜய், இனிமேல் அந்த ஆட்டத்தைக் குறைத்துக்கொண்டு அதிமுகவின் நன்றி விசுவாசியாகக் கொஞ்சம் காலத்தையாவது ஓட்டவேண்டிய நிர்ப்பந்தம். இப்படிப்பட்ட முன்னாள் விசுவாசிகளெல்லாம் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று அவர் யோசித்துப் பார்த்துக்கொள்வது நல்லது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படத்தின்போது தான் அனுபவித்த தேன்நிலவுக் காலத்தின் இன்னொரு முகம் இப்போது விஜய்க்குப் புரிந்திருக்கும். இது மெல்ல ரஜினிக்கும், கமலுக்கும் நேர்வதைத் தவிர்க்கமுடியாது. அன்றுதான் சன் பிக்சர்ஸின் மாயவலையைப் புரிந்துகொள்வார்கள் அவர்கள். இது எத்தனை சீக்கிரம் நடக்கிறதோ அத்தனை சீக்கிரம் நடப்பது நல்லது.

திரைப்படம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சன் பிக்சர்ஸ் இந்தத் திரைப்படத்தை வெளியிட தியேட்டர்கள் தராததற்கு நன்றிதான் சொல்லவேண்டும் எனத் தோன்றிவிட்டது. (கலையரங்கம் தியேட்டர் ஒரு தனிக்கொடுமை!) சன் டிவியில் வரும் மெகா சீரியல்கள் இதைவிடக் கொஞ்சம் தரமானதாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

மலையாள கமர்ஷியல் இயக்குநர்கள் மலையாளத் திரைப்படங்களை சீரியல்கள் போலவே வைத்திருக்கப் படும்பாடு நாம் அறிந்ததே. அவர்களே தமிழில் படமெடுக்கும்போது, அதே பாணியில் எடுத்து நம்மைப் படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள பெரிய மனோபலம் வேண்டும். முதலில் ஒரு ப்ளாஷ்பேக்கில் ஆரம்பித்து, பின்னர் படத்தின் கிளைமாக்ஸுக்கு முன்னர் அதனை முடித்து, திடீரென ஒரு டிவிஸ்ட் கிளைமாக்ஸ் கொடுத்து, நம்மைப் படுத்தி எடுக்கும் அதே ஃபார்முலா கதை. குறைந்த பட்ஜெட், நிறைய செண்டிமெண்ட், யூகிக்கக்கூடிய காட்சிகள், வளவள வசனம், மினிமம் கேரண்டி.

கொஞ்ச நாளாக பெரிய ஹிட் இல்லாத விஜய், விக்ரமனும் இப்போதெல்லாம் படம் எடுப்பதில்லை என்னும் தைரியத்தில், மினிமம் கேரண்டியான செண்ட்டிமெண்ட் + காமெடியில் இறங்கிவிட்டார். சோகம் என்னவென்றால், லோ கிளாஸ் செண்டிமெண்ட், லோ கிளாஸ் காமெடி.

இந்த லோ கிளாஸ் காமெடி பழகிப்போய், சில இடங்களில் வடிவேலு நம்மைச் சிரிக்க வைத்துவிடுவதும் உண்மைதான். பின்னர் ஏன் சிரித்தோம் என்று வழக்கம்போல யோசிக்கதத் தொடங்கிவிடுகிறோம். ஆனால், சாமானிய மனிதர்களும், பெண்களும் விடாமல் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் என் மனைவி கண் கலங்கி தியேட்டரை விட்டு வெளியேறியதைக் குறிப்பிடவேண்டியது என் கொடுப்பினையா தலையெழுத்தா என்பது தெரியவில்லை.

அசின், ஐஸ்வர்யா ராய்க்குப் போட்டியாகப் பாட்டியாகிவிட்டார். பாடல்களில் ‘யாரது’ பாடல் மட்டும் காதில் ரீங்கரிக்கிறது. இரண்டு விஜய் வரும் பாடல் பார்க்க சுவாரஸ்யம். மற்றபடி பெரிய நடிகர் பட்டாளத்தின் இம்சை இலவச இணைப்பு. லாஜிக்கே கிடையாது என்பது பம்பர் பிரைஸ். நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் எண்ட்ரி கொடுத்து, இது மலையாள இயக்குநர் ஒருவரின் படம்தான் என்று ஊர்ஜிதப்படுத்திவிட்டுப் போகிறார்கள். இப்போதெல்லாம் படம் எடுக்காத பாஸில்தான் எவ்வளவு நல்லவர் என்று நம்மை நினைக்க வைத்துவிடுகிறார் சித்திக்.

ஏன் ஒருவர் பாடிகார்டாக இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏன் அவர் யூனிஃபார்ம் போட்டுத் தொலைக்கவேண்டும், ஏன் அவரை கல்யாணம் செய்துகொள்ளும் இரண்டாம் கதாநாயகியின் அப்பா மௌனமாக இருக்கவேண்டும், ஏன் போலிஸுக்குப் பதில் சாதாரண ஒருவர் பாடிகார்டாக போகவேண்டும் என இப்படிப் பல ஏன்கள்? அதில் இன்னொன்று, ஏன் ரோஜா என்பதும் அடங்கும். இத்தனை கொடுமைகளையும் ஒரே ஆளாகச் சுமக்கிறார் விஜய்.

சொல்லாமலே, காதல்கோட்டை, ‘ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ (காலமெல்லாம் காதல் வாழ்க) போல இன்னொரு ஃபோன் காதல். நினைத்தேன் வந்தாய், லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் போல விஜய். சுறா, எறா என்றெல்லாம் பார்த்துவிட்டு, இப்படி விஜய்யைப் பார்க்கவே கொஞ்சம் ஆச்சரியமாக (நிறைய பரிதாபமாகவும்!) இருந்தது உண்மைதான். அத்தனையையும் மெல்ல மெல்ல மறக்கடித்துவிடுகிறார். அதிலும் தனது காதலியைப் பார்க்கப் போகிறோம் என்ற காட்சிகளில் அவரது பரிதவிப்பு அருமை. பல கொடுமைகளுக்கு இடையில் கொஞ்சமாவது நம்மை சந்தோஷமாக வைத்திருந்தது விஜய்யும் வடிவேலுவும்தான்.

இத்தனை பெரிய செண்டிமெண்ட் மொக்கை என்று இந்தப் படத்தைக் குறிப்பிடும் வேளையில், இன்னொன்றையும் சொல்லவேண்டும். விஜய்க்கு தொடர் ஃப்ளாப்பாக இருந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், பெண்கள் கூட்டத்தால் இந்தப் படம் ஒரு வெற்றிப்படமாக அமையும். சன் பிக்சர்ஸ் தவிர வேறு யார் படம் தயாரித்தாலும் அப்படத்தைச் சுதந்தரமாகத் திரையிடக்கூட முடியாது என்ற நிலையில் இந்தப் படம் வெற்றி பெறவேண்டியது முக்கியத் தேவை.

Share