எக்ஸைல் புத்தக வெளியீடு – மரபுகள் கலைக்கப்படும் தருணம்

எக்ஸைல் நாவலுக்கு விமர்சனங்கள், விவாதங்கள் வந்து ஓய வேண்டிய நேரத்தில் புத்தக வெளியீட்டு விழா பற்றிய கட்டுரையா என்ற ஜெர்க் ஆகவேண்டாம். இதை எழுதி மாதங்கள் ஆகின்றன.

கிழக்கு ‘ஆழம்’ என்று ஒரு மாத இதழைக் கொண்டு வர இருக்கிறது. 

அதற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஓர் இதழைத் தொடங்குவதற்கு முன்பாகச் செய்யவேண்டிய ஆயத்த வேலைகளில் ஏற்பட்ட எதிர்பாராத தாமத்தினால் இதழ் கொஞ்சம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இந்த இதழ் எப்போதிலிருந்து வாசகர்கள் கைகளில் கிடைக்கும் என்பதைப் பற்றி பத்ரி தனியே எழுதுவார். இப்போதைக்கு ‘ஆழம்’ இதழில் வெளியான என் கட்டுரை இங்கே.

இக்கட்டுரை ‘ஆழம்’ இதழில் சில எடிட்டிங்குடன் வெளியானது.

என் கட்டுரையை வெளியிட்ட ‘ஆழம்’ பத்திரிகைக்கும், அதன் பதிப்பாளர்-ஆசிரியர் பத்ரிக்கும் பொறுப்பாசிரியர் மருதனுக்கும் என் நன்றி. 

மரபுகள் கலைக்கப்படும் தருணம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ நாவல், டிசம்பர் 6 அன்று காமராஜர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. சாருவின் நாவல்கள் எவ்விதக் கட்டமைப்புக்குள்ளும் சிக்காமல் வெளியேறத் துடிப்பவை. சாரு சிறப்புக் கவனம் எடுத்து இதனைச் செய்கிறாரா அல்லது அவரது இயல்பான நாவல் வடிவமே கட்டுக்குள் அடங்காமல் திமிறுவதுதானா என்ற விவாதம் எப்போதும் தமிழ் இலக்கிய உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியக் கூட்டங்களும் நாவல் வெளியீடுகளும், காதும் காதும் வைத்தமாதிரி ரகசியக் கூட்டங்கள் நடைபெறுவது போல் நடந்தால்தான் இலக்கியத்தன்மையைப் பெறும். ஓர் இலக்கியக்கூட்டத்துக்கு மூன்று இலக்கங்களில் பார்வையாளர்கள் வந்துவிட்டால் உண்மையில் அது தீவிர இலக்கியக்  கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை என்பதே தீவிர இலக்கிய ஆர்வலர்களின் துணிபு. சாரு இதனையும் உடைக்கவேண்டியவராகிறார்.

இலக்கிய கூட்டத்தின் ஒலிபெருக்கிகள் ‘வொய் திஸ் கொலவெறி கொலவெறிடி’ என்று அலறுவதைக் கேட்க ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும். அராபியப் பாடல் ஒலிக்க வாலி பேச ஓர் இலக்கியக் கூட்டத்தின் மரபுகள் அத்தனையும் காமராஜர் அரங்கத்தில் கலைத்துப் போடப்பட்டன. ஜோல்னாப் பை இல்லாமல் கோட் சூட் போட்டு மேடையேறினார் சாரு. இதற்கும் ஒரு விளக்கம் சொன்னார். அது நமக்குத் தேவையற்றதே. விஷயம், சாரு மேடை மரபுகளைக் கலைக்கிறார் என்பதே. 

சாருவே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ச்சியின் ஆற்றொழுக்கைக் குலைத்து குலைத்து, இது ஒரு மரபுகளற்ற மேடை என்பதை நிறுவுவதில் குறியாக இருந்தார். இப்படி மரபுகள் கலைக்கப்படும்போதெல்லாம் சாருவின் ரசிகர்கள் கைதட்டி விசிலடித்துக் கொண்டாடினார்கள். வொய் திஸ் கொலைவெறி பாடல் ஒலிபரப்பட்ட நோக்கம் அந்தக் கூட்டத்தின் ஒவ்வொரு இடைவெளியிலும் சீழ்க்கையின் வழியே பரவிய தருணம் அது.

இலக்கியக் கூட்டத்தின் இன்னொரு புதுமையாக, எக்ஸைல் நாவலின் முதல் பிரதி 50,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் மேடைக்கு வரவில்லை. மற்ற சில கொலைவெறித் தற்கொலைப் படை சாருவின் ரசிகர்களும் அவரவர்க்கு ஏற்ற சக்தியில் ஏலம் எடுத்திருந்தார்கள் என்னும் செய்தியும் சொல்லப்பட்டது. நெடுங்கால இலக்கிய மரம் விதையூன்றப்பட்ட நிமிடம் அது என உவப்பானார்கள் சாருவின் ரசிகர்கள்.

தான் ஏன் புத்தகத்தை வெளியிட வாலியை அழைத்தேன் என்பதற்கு சாரு வெளிப்படையாகச் சொன்ன காரணம், தன் இலக்கிய வாழ்வில் தன்னைப் புகழ்ந்த ஒரே வெகுஜன விஐபி வாலி மட்டும்தான் என்பதே. ஆனந்த விகடனில் வாலி எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ தொடரில் வாலி சாருவைப் பற்றிப் புகழ்ந்திருந்தார். வாலி இதுவரை தன் வாழ்நாளில் எதற்கும் சமரசமே செய்ததில்லை என்னும் வாலிக்கே தெரியாத ரகசியத்தைச் சொன்னார் சாரு. ஆனால் அதே ‘நினைவு நாடாக்கள்’ தொடரில், நியூ படத்தில் இடம்பெற்ற ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’ என்று எழுதிய வரியை, ஏ.ஆர்.ரஹ்மானின் நிர்ப்பந்ததுக்கு இணங்க ‘கைதொழும் தேவதை அம்மா’ என்று மாற்றி எழுதியதை எரிச்சலுடன் பதிவு செய்திருந்தார் வாலி. புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய வாலியும் மேடையில் பேசும்போது தனக்கு சமரசம் செய்து பழக்கமில்லை என்ற அர்த்தத்தில் ‘எந்த இசையமைப்பாளரின் கருணையும் எனக்குத் தேவையில்லை’ என்றார். 80 வயதில் முழங்குவது எளிது. சாருவின் வெளிப்படைத் தன்மையைப் பற்றிப் பேசிய வாலி, தான் இந்த விழாவுக்கு வந்ததே சாருவின் புகழ் உலகறியவேண்டும் என்பதற்காகவே என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்திரா பார்த்தசாரதி. இந்திரா பார்த்தசாரதியும் சமரசம் செய்ததில்லை என்றார் சாரு. தன் புத்தகத்தை வெளியிட வரும் விருந்தினர்கள் சமரசமற்றவர்கள் என்று சொல்வதில் சாரு எடுத்துக்கொண்ட கவனம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. 

ஏன் செக்ஸைப் பற்றி எழுதக்கூடாது என்பதே இபாவின் ஒட்டுமொத்தப் பேச்சின் ஒருவரி சாராம்சமாக இருந்தது. டெல்லியில் வாழ்ந்த காலங்களில் என்றெல்லாம் எங்கெங்கோ அலைபாய்ந்து மீண்டும் சாருவின் எக்ஸைல் நாவலில் செக்ஸ் இருந்தால் என்ன தவறு என்ற புள்ளிக்கு வந்து சேர்ந்தார் இபா. இது சாஃப்ட் போர்னோ அல்ல, ஹார்ட் போர்னோ என்றார். செக்ஸைக் குற்றவுணர்ச்சியோடு அணுகுபவர்கள் படிக்கக்கூடாத நாவல் என்றார். என்ன தோன்றியதோ இபாவுக்கு, திடீரென்று, இப்படியெல்லாம் சொல்வதால் நான் இப்படித்தான் என்று அர்த்தமல்ல என்றார். இதேபோன்று தற்காப்புக் கலையை இரண்டு இடங்களில் பயன்படுத்தினார். இவருக்கும் 80 வயது. 80 வயது மூத்த எழுத்தாளர்கூட மேடையில் தான் இப்படி அல்ல என்கிற டிஸ்கிளெய்மரோடு பேசவேண்டியிருக்கிறது. அதுவும் சாருவின் கூட்டத்தில். என்னவொரு முரண்நகை!

விழாவுக்கு வந்திருந்த மதனைப் பேச அழைத்தார் சாரு. மதன் தன்னை நாவலில் பாதித்த விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்திருக்கும் அம்சங்கள் பற்றியும் தெளிவாகப் பேசினார். உலக எழுத்துகளைப் படித்திருக்கும் தன்னால், சந்தேகமே இல்லாமல் இந்நாவல் ஓர் உலகத்தரமான நாவல் என்று சொல்லமுடியும் என்றார். இந்திரா பார்த்தசாரதியும் வாலியும் பேசியிருந்தாலும், மதனின் பேச்சே சாருவின் நாவலை மிகச் சரியாகத் தொட்டுப் பேசக்கூடியதாக அமைந்தது. 

சாரு தன் வலைத்தளத்தில், முகநூலில் தன் வாசகர் வட்டத்திலும் இந்நூலுக்கு தொடர்ந்து மார்க்கெட்டிங் செய்திருந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஓர் எழுத்தாளன் தன்னை ஏன் இப்படி மார்க்கெட்டிங் செய்துகொள்ளவேண்டும் என்ற இலக்கியக் கேள்வி ஒருபுறம். ஓர் எழுத்தாளன் தனது புத்தகங்களை விற்க தன்னால் இயன்றதை ஏன் செய்யக்கூடாது என்னும் உலக நிர்ப்பந்தம் மறுபுறம். எப்போதும் மரபுகளைக் கலைத்துப்போட விரும்பும் சாரு இலக்கிய மரபின் பக்கம் நிற்காததே யதார்த்தம். இல்லையென்றால், எந்தவொரு இலக்கியக் கூட்டத்திலும் விசிலடிக்கும் ரசிகர்களையோ, விழாவுக்கு வருவதற்கு முன்பாகவே கர்ம சிரத்தையாக எக்ஸைலின் ஒரு பிரதியை வாங்குவதைக் கடமையாகக்கொண்ட வாசகர்களையோ நாம் பார்க்கவே முடியாது. 

சாருவின் ரசிகர்கள் இந்நாவலை வாங்கலாமா வேண்டாமா அல்லது ஏன் வாங்கவேண்டும் என்னும் உளச்சிக்கல்களுக்குள் இறங்குவதே இல்லை. சாருவின் நாவல் என்பதே தாங்கள் வாங்கத்தான் என்ற தோரணையில் சாருவின் ரசிகர்கள் நாவலை வாங்குவதைப் பார்க்கமுடிந்தது. இது இலக்கியத்தின் போக்குக்கு உகந்ததா அல்லது இலக்கியத்திலிருந்து முற்றிலும் பிரித்தறியப்படவேண்டியதா என்பது தனிக்கேள்வி. இக்கேள்விகூட இலக்கியவாதிகளுக்கு உரியதே அன்றி, அவரது ரசிகர்கள் ஒருபோதும் இக்கேள்வியை எண்ணிப் பார்க்கப்போவதுகூட இல்லை. ரசிகர்களின் உடனடிக் கேள்விகளெல்லாம், திருவிழாவுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று சாரு அறிவிக்கப்போகிறார் என்பதில் மட்டுமே.

ஆனால் சாருவைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவேண்டியது கட்டாயமாகிறது. இதுவரை சாரு என்பவர் தன் வழியை தன் கர்வத்தால் நிர்ணயிப்பவராகவும், அவரது வாசகர்கள் அவரது வழியை ஏற்றுக்கொள்பவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். சாருவே தொடக்கப்புள்ளி. அவரது வாசகர்கள் தொடர்புள்ளிகளே. ஆனால் இப்போதைய சாருவிடத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். இணையம் சாருவைப் பாதித்திருக்கும் விதம் ஆய்வுக்கு உரியது. சாரு தன் ரசிகர்களின் கட்டாயங்களுக்கேற்ப இயங்குவது போன்ற தோற்றம் வலுவடைகிறது. வாசகர்கள் என்பவர்கள் ரசிகர்களாகும் ரசவாதத்தை சாரு ரசிக்கிறாரோ என்கிற எண்ணம் வலுப்படுகிறது. சாரு என்னும் ஓர் முன்னாள் இலக்கியவாதியின் இந்தத் தடம்பெயர்வு ரசிக்கத்தக்கதல்ல. நீண்டகால நோக்கில் இலக்கியம் என்னும் ஆதார விழுமியத்துக்கு இது கேட்டையே விளைவிக்கும். சாரு தன் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் கேள்விகளை டிசம்பர் 6ல் உருவாக்கி அமைதியானது காமராஜர் கலையரங்கம்.

எக்ஸைல் புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க Dial For Books 94459 01234 | 9445 97 97 97

Share

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்

 

 

விலை: 180

Dial for books: 94459 01234 | 9445 97 97 97

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் கிழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

 

கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. கம்யூனிஸ்ட்டுகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.

லெனின், ஸ்டாலின், மாஓ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்? புக்காரினுடம் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா? வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

வெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்பு பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

பொதுவாகவே கம்யூனிஸம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், கம்யூனிஸம் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே கம்யூனிஸத்துக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

கம்யூனிஸத்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி கம்யூனிஸ்ட்டுகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.

அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் கம்யூனிஸம் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலகத் தோழர்கள்.

லெனின் ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் போட்டி, ஸ்டாலினைப் பார்த்து லெனினே அதிர்ந்து போவது, ஏன் லெனின் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.

கம்யூனிஸ்ட்டுகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் கம்யூனிஸ்ட்டுகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் மாஓவின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். மாஓ புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக கம்யூனிஸ்ட்டுகள் ஸ்டாலினையும் மாஓவையும் தலைவர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் சிவப்பு மயம்.

இந்திய கம்யூனிஸ்ட்டு நேர்மையாளர்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடையும் அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. சே குவேராவைப் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! மாஓவின் அத்தியாயமோ கிளுகிளு. பௌத்த மடலாயங்களுக்கு, சீன கலாசாரத்துக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. கம்யூனிஸ்ட்டுகள் எதிலுமே குறைவைப்பதில்லை.

உலகளவில் கம்யூனிஸம் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. ஜெயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.

96களில்ஜெயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது அரவிந்தனின் நீலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் அரவிந்தன் நீலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.

பல இளைஞர்கள் கம்யூனிஸம் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸம் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். கம்யூனிஸத்தின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (கிழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)

கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, அரவிந்தன் நீலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. வினவு-ல் ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி கம்யூனிஸ்ட்டுகள் ‘பின் தொடரும் நிழலின் குரலை’ கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு கட்சி மேடைகளில் பேசும் விடலைகளுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச கம்யூனிஸ்ட்டுகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!

எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் தோழரென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.

வந்தே மாதரம்.:))))))

(இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்கில் கிடைக்கும். கிழக்கு அரங்கு F 7)

Share

மேல்விலாசம் – மலையாளத் திரைப்படம்

 

சுமாராக இருக்கும் என்று நினைத்துத்தான் இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். 9 நாள்களில் எடுக்கப்பட்ட படம் என்றும், 90 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் என்று கூகிள் சொல்லவும், இப்படி விளம்பரத்துக்காகவும், சாதனைக்காகவும் எடுக்கப்பட்ட படங்களின் லட்சணங்கள் எப்படி இருக்கும் என்ற ஓர் அனுபவம் தந்த எச்சரிக்கையே இப்படி ஒரு முன்முடிவு வந்ததற்குக் காரணம்.

அதிலும் சுரேஷ் கோபியும் பார்த்திபனும் நடிக்கிறார்கள் என்றதும் என் அச்சம் பலமடங்கு கூடிவிட்டது. போடா புல்லே என்று சொல்லாமல் சுரேஷ் கோபி நடித்த படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும் என்றாலும், அவர் போடா புல்லே சொல்லாத படங்கள் வெகு குறைவு என்பதே என் அச்சத்துக்குக் காரணம். பார்த்திபன் என்ற பெயரே போதும் பயந்து நடுங்க.

இத்தனையையும் மீறியே இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். என்ன அறுவையாக இருந்தாலும், வேற்று மொழி என்பதால் மலையாளப் படத்தைப் பார்த்துவிட முடிகிறது. எனவே இதனையும் பார்த்துவிடலாம் என்று பார்க்கத் தொடங்கினேன்.

ஆனால் தொடங்கிய பத்து நிமிடங்களில் இந்தப் படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. சுரேஷ் கோபியின் அலட்டாத நடிப்பும், (சுகர் வந்து முகம் இறுகிப் போன) பார்த்திபனின் இறுக்கமான நடிப்பும் படத்தைப் பிடிக்கச் செய்துவிட்டது. ஒரே அறைக்குள் நடக்கும் கதை. மேஜர் மார்ஷல் என்ற விசாரணையைப் பற்றிய படம். பார்த்திபன் தன்னைவிட மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்றுவிடுகிறார். இருவரைச் சுடுகிறார், ஆனால் ஒருவர்தான் மரணமடைகிறார். இன்னொருவர் தப்பித்துவிடுகிறார். தாந்தான் சுட்டதாக ஒப்புக்கொள்ளும் பார்த்திபன் மீதான விசாரணையில், டிஃபெண்ஸ் தரப்பில் ஆஜராகி, அவர் ஏன் சுட்டார் என்பதற்கான காரணங்களைக் கண்டடைகிறார் சுரேஷ் கோபி.

எதிர்பாராத ஒரு காரணம் சொல்லப்படும் தருணத்தில் அந்தப் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. ஏதேனும் செண்டிமெண்ட்டாக ஒரு காரணம் இருக்குமென்று நினைத்தேன். பாதி படம் கடக்கையில், வேகமாக பார்த்திபன் ஓடி, தனனிவிட உயர்ந்த ரேங்க்கில் இருக்கும் அதிகாரி தோற்கக் காரணம் ஆவதும், அதனால் எரிச்சலடையும் உயரதிகாரி பார்த்திபனை ரேக்குவதும், அந்தக் கோபத்தில்தான் பார்த்திபன் கொன்றிருப்பார் என்றும் நினைத்தேன். அல்லது இதனை ஒட்டிய காரணங்கள் பின்பு விரிவாகும் என்று நினைத்தேன். விரிவாகியது. அனைத்துக்கும் காரணம், பார்த்திபன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்பது.

தன்னைவிட நன்றாக ஓடும் பார்த்திபன், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவன் என்பதைவிட தன்னைவிடத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதே உயரதிகாரியை வெறுப்படைய வைக்கிறது. அவர் பார்த்திபனைத் தொடர்ந்து ஏசுகிறார். தோட்டி என்றும், பறையன் என்றும், பறையனிண்டே மோன் என்றும் ஏசுகிறார். இவரோடு சேர்ந்துகொண்டு இன்னொரு உயர்சாதி அதிகாரியும் பார்த்திபனை ஏசுகிறார். ஒரு கட்டத்தில் பார்த்திபனின் தாயைத் தகாத வார்த்தை கொண்டு ஏசுகிறார்கள். கோபமடையும் பார்த்திபன் துப்பாக்கியால் சுடுகிறார். ஓர் அதிகாரி இறந்துபோகிறார். இன்னொரு அதிகாரி தோள்பட்டையில் குண்டு பாய்ந்து, உயிர் பிழைத்துக்கொள்கிறார்.

இவை அனைத்தும் ஒரே அறையில் சுரேஷ் கோபி செய்யும் விசாரணைகளில் வெளிப்படுகின்றன. ஒரு காட்சிகூட நேரடிக் காட்சி கிடையாது. எல்லாமே விசாரணைகள் மட்டுமே. உயர்சாதி உயரதிகாரி மமதையோடு பேசுகிறார். தரவாடித்துவம் (பாரம்பரியம்) இல்லாதவனெல்லாம் ராணுவத்துக்கு வரப்போய்த்தான் ராணுவ மரியாதையே போய்விட்டது என்கிறார். தனது பாரம்பரியம் எங்கே, இவன் எங்கே என்று பார்த்திபனை தூஷிக்கிறார். இவரது தரவாடித்துவத்தைப் பல கேள்விகளில் சிதறடிக்கிறார் சுரேஷ் கோபி. இக்காட்சி பத்து நிமிடங்கள் வரலாம். திரையில் இப்படி ஒரு காட்சி வருவது அதிசயம் என்றே கொள்ளவேண்டும். ஜாதியைச் சொல்லாமல், மேம்போக்காகப் பேசும் படங்களே நமக்குப் பழக்கமானவை. இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இல்லாமல், உயர்சாதித் திமிர் மிக அழகாக அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபூர்வம்.

தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான பார்த்திபனே, உயர்சாதி அதிகாரிக்காக மரணமடையும் ஒரு ராணுவக்காரரின் மகளைத் தத்தெடுத்து வளர்ப்பது. ஆனால் தனக்காக உயிரிழந்த ராணுவக்காரருக்கு உயர்சாதி அதிகாரி எதுவுமே செய்வதில்லை. இதுதானா தரவாடித்துவம் என்று கேட்கிறார் சுரேஷ் கோபி. உயர்சாதி இதற்குச் சொல்லும் பதில் – அது அவன் கடமை.

இன்னொரு சுவாரஸ்யம், இப்படம் தமிழில் வந்துவிட்டது என்கிற கூகிள். உள்விலாசம் என்ற பெயரில். ஏற்கெனவே மேல்விலாசம் என்ற படம் தமிழில் உள்விலாசம் என்ற பெயரில் வரும் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் வந்ததாகத் தெரியவில்லை. வந்திருந்தால், இந்த பறையன், தோட்டி, உயர்சாதி வசனங்கள் தமிழில் என்னவாகின என்றறிய ஆவலாக உள்ளது. தமிழில் இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு கொடுங்கனவு போலத்தான் இருக்கும். ஆனாலும் யாரேனும் தமிழில் பார்த்தால் அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

உணர்ச்சிமயமான நாடகத்தனமான இறுதிக்கட்ட காட்சியோடு படம் முடிவடைகிறது. சுட்டது தவறுதான் என்று பார்த்திபனுக்கு மரண தண்டனையை மார்ஷல் விதிக்கிறது. நேர்மையான அதிகாரியான வழக்கை நடத்தும் அதிகாரி தனது தீர்ப்பை பார்த்திபனிடம் சொல்லிவிட்டு, உண்மையை நோக்கி வணக்கம் சொல்வதாகச் சொல்லி சல்யூட் அடிக்கிறார். இதற்கிடையில் உயர்சாதி அதிகாரிக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது. யதார்த்தம்.

படத்தின் குறைகள் என்ன என்று பார்த்தால், இப்படத்தைத் தமிழிலும் வெளிடவேண்டும் என்பதற்காக, சரியாக மலையாளம் பேசத் தெரியாத, தமிழ்போல் மலையாளம் பேசும் நடிகர்களான பார்த்திபனையும், தலைவாசல் விஜய்யையும் நடிக்க வைத்தது. மலையாளத்தைக் கடித்துக் குதறுகிறார்கள். மற்ற படங்களில் மற்ற மலையாள நடிகர்கள் பேசும் தமிழைக் காட்டிலும் இது பேதம் என்பது உண்மையே. ஆனாலும் இவர்கள் தமிழ் பேசுவது போன்றே உள்ளது. ஒரே அறை தரும் அலுப்பு. ஆனாலும் இந்த அலுப்பை இயன்றவரைப் போக்கும் அளவுக்கு வேகமான திரைக்கதை உண்டு என்றே சொல்லவேண்டும். படத்தின் ப்ளஸ், சுரேஷ் கோபியின் சுத்தமான வசனம் பேசும் முறை. படத்தின் பலமே அதுதான் என்று தெரிந்துகொண்டு தெளிவான மலையாளத்தில் அழகாகப் பேசுகிறார். பொதுவாகவே இவர் இப்படித்தான் பேசுவார் என்றாலும், இந்தப் படத்துக்கு இது அப்படியே பொருந்திப் போகிறது. பாடல்களோ, அசட்டு காமெடிகளோ எதுவுமே இல்லை. ஆகச்சிறந்த படம் என்றோ மாற்றுத் திரைப்படம் என்றோ கூற முடியாது. ஆனால் நல்ல படம். நிச்சயம் பார்க்கலாம். ராணுவத்துக்குள்ளே நடக்கும் தகிடுதத்ங்களைச் சொல்லும் படம் என்பதால் முக்கியமான படமும் கூட. 

Share

நான் பங்கேற்ற கிழக்கு பாட்காஸ்ட்கள்

எனக்கு ஒரு வலைத்தளம் இருப்பதே மறந்துவிட்டது! இந்தப் பதிவை எழுதி ஒரு மாதம் ஆகிறது. சில டெக்னிகல் பிரச்சினை காரணமாக வலையேற்ற இயலவில்லை. இப்போதும் ஒழுங்காக வலையேறுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் வலையேற்றி வைக்கிறேன்.

நானும் பத்ரியும் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் குறித்துப் பேசினோம். அந்த கிழக்கு பாட்காஸ்ட்டுகளைக் கீழே தந்துள்ளேன். அதனைப் பார்த்துவிட்டுத் தங்கள் பொன்னான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :> கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் காஷ்மீர் முதல் யுத்தம் என்ற புத்தகம். இதனை எழுதியிருப்பர் ஆண்ட்ரூ வொயிட்ஹெட். தமிழில் நண்பர் பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்பேப்பரில் சில பல கட்டுரைகளை திடீரென்று போட்டுத் தாக்கும் நண்பர் இவர். ஒரு படத்தைப் பார்த்தால் அந்தத் திரைக்கதையை எப்படியாவது மாற்றி எழுதிவிடுவது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று. இவரது வலைப்பதிவு: http://mahadevanbr.blogspot.com/ இதனைப் பொறுத்துக்கொள்ள முடிந்தால், நல்ல நண்பரே! இவரது மொழிபெயர்ப்பு மிக நன்றாக மெருகேறியிருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள மூல நூலோடு ஒப்பிட்டு இதனை நான் சொல்லவில்லை. நான் சொல்வது, நேரடியாக தமிழ் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது எவ்விதத் தடங்கலும் இல்லாமல் படிக்க முடிகிறது என்பதையே. இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த, கிழக்கு வெளியிட்ட ராஜன்பிள்ளையின் கதை புத்தகமும் எனக்குப் பிடித்த ஒன்று. வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபதிரின் கதையைப் படிப்பதைவிட, தோல்வியடைந்த ராஜன்பிள்ளையின் கதையைப் படிப்பதில் ஏதோ ஒரு நெருக்கத்தை என்னால் உணரமுடிந்தது. இலக்கியம் தந்த சோகமாக இருக்கலாம்! கேப்டன் கோபிநாத்தின் வானமே எல்லை புத்தகத்தை மொழிபெயர்த்ததும் இதே மகாதேவனே! கேப்டன் கோபிநாத் புத்தகம் பற்றி பிறிதொரு சமயத்தில் பேசுவோம். காஷ்மீர் முதல் யுத்தம் பாட்காஸ்ட்டைப் பாருங்கள். 

 

அடுத்த பாட்காஸ்ட் – அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம் புத்தகம் குறித்து. ஜெயமோகன் எழுதிய புத்தகம். நான் ஏற்கெனவே இப்புத்தகம் பற்றிய என் பார்வையைப் பதிந்திருக்கிறேன். இந்த பாட்காஸ்ட்டிலும் கிட்டத்தட்ட அதை ஒட்டியே பேசியிருக்கிறேன்.

 

 

அடுத்த பாட்காஸ்ட்கள் – இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு என்னும் நூலைப் பற்றியது. இந்த நூல் இரண்டு பாகங்கள் கொண்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் பி.ஆர். சாரதி. இவர் நம் பா.ராகவனின் தந்தை. இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளில் வந்த தமிழ் நூல்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். குஹா அடிப்படையில் ஒரு மார்க்ஸியர். எனவே ஹிந்துத்துவ வலதுசாரிகளின் அரசியல் மீது இவருக்குக் கோபமே இருக்கும். அதனை இப்புத்தகத்திலும் காணலாம். இதனை ஒட்டியேதான் நான் பேசியிருக்கிறேன். இதனால் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் எதுவும் குறைந்துவிடவில்லை. மற்றவற்றைப் பாட்காஸ்ட்களில் பார்க்கவும்.

 

 

 

 

இனி வரும் பாட்காஸ்ட்டுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் புகழ்பாடும் விதமாக இந்த பாட்காஸ்ட்கள் உள்ளன என்று குற்றம் சொல்லாதீர்கள். எங்கள் நோக்கமே அதுதான். எனவே திறந்த மனத்துடன் இதனை அணுகவும். வழக்கம்போல நன்றி.

Share

வாகை சூட வா

வாகை சூட வா பற்றிய எனது விமர்சனம் தமிழோவியத்தில் வெளியாகியுள்ளது. படிக்க இங்கே சொடுக்கவும்.

Share

காந்தி புத்தகங்கள்

 

எதிர்பாராத ஒரு தருணத்தில் வ.உ.சியைப் பற்றியும் ராஜாஜியைப் பற்றியும் இரு புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பொதுவாகவே, சென்னை புத்தகக் கண்காட்சியில் மட்டுமே புத்தகங்கள் வாங்குவேன். பாழாய்ப் போன வரலாற்று ஆர்வம், இந்தமுறை பெரிய அளவில் வேட்டு வைத்துவிட்டது.  ராஜாஜி வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், ராஜாஜியைவிட அதிகமாக காந்தியைப் பற்றிப் பேசப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு காந்தியைப் பற்றிய பதிவுகள் இருந்தன. வ.உ.சி வரலாற்றில், வ.உ.சியின் அந்திம காலத்தில்தான் காந்தியைப் பற்றிய பதிவுகள் வருகின்றன.

அப்போதுதான் ’அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்’ படித்தேன். இதில் ஹசாரேவைப் பற்றிய ஒவ்வொரு விவரிப்பிலும் காந்தியைப் பற்றிய விவாதமும் இருந்தது. ’இன்றைய காந்தி’ புத்தகம் – தமிழில் நிகழ்ந்த ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். ஓராண்டுக்கு முன்பு இதைப் படித்தேன். இலங்கை சென்றிருந்தபோது இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விவாதித்துக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாக மனத்தில் இருக்கிறது. இப்புத்தகம் தந்த அனுபவம் மறக்கமுடியாதது. ஒருவரது வாழ்க்கை வரலாற்றை, பிறப்பு தொடங்கி இறப்பு வரை படிப்பதற்குப் பதிலாக, இப்படிக் கேள்வி பதில் மூலம், அத்தலைவர் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள், அந்தத் தலைவர் எடுத்த முடிவுகள், அதன் விளைவுகள் எனப் படிப்பது எளிதானதாகவும், குழப்பமில்லாமலும் இருந்தது. பகவத் கீதையே கேள்வி பதில் வடிவில் அமைந்ததுதான். எனவே கேள்வி பதில் மூலம் படிப்பது ஒருவகையில் பழக்கமானதே என்ற முடிவை மூளை எடுத்துவிடுகிறதோ என்னவோ. அண்ணா ஹசாரேவின் புத்தகத்தைப் படித்ததும் தொடர்ந்து காந்தியைப் பற்றிப் படிக்க முடிவெடுத்தேன். ஏற்கெனவே, ஜெயஸ்ரீ வாங்கிக் கொடுத்து மூலையில் தூங்கிக் கிடந்த ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’யை எடுத்தேன்.

அப்போது நடந்த சில ஃபேஸ்புக் விவாதங்களுக்காக வேறு சில புத்தகங்களைப் படிக்கவேண்டியிருந்தது. ஜெயமோகனின் குழுமத்தில் நடக்கும் விவாதங்களில் காந்தி பற்றிய சில புத்தகங்களைச் சொன்னார்கள். முக்கியமானது, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘காந்தி வாழ்க்கை’ என்னும் புத்தகம். லூயி ஃபிஷர் எழுதி, திஜர தமிழில் மொழிபெயர்த்திருக்கும் புத்தகம். அதையும் வாங்கினேன். (நான் மேம்போக்காக வாசித்துப் பார்த்த வகையில் மொழிபெயர்ப்பு அட்டகாசம்.) ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ’தண்டியாத்திரை, புத்தகமும் வாங்கினேன். இது நேரடியான தமிழ் நூல். ’நவகாளி யாத்திரை’ (சாவி எழுதியது, நர்மதா வெளியீடு) புத்தகம் கிடைக்கவில்லை. அதையும் வாங்கவேண்டும். இது ஒரு சிறந்த வரலாற்றுப் புத்தகமாக இருக்கும் எனத் தோன்றவில்லை. காந்தியைப் பற்றிய சாவியின் பக்தி வெளிப்பாடாகத்தான் இருக்கும். இருந்தாலும், நேரடியாக நவகாளி சென்று, காந்தியுடன் 2 நாள்கள் தங்கியிருந்து எழுதிய புத்தகம் என்பதால், வாசிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். (நவகாளி யாத்திரை பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தில் மேய்ந்தபோது, மலர்மன்னன் எழுதிய அட்டகாசமான கட்டுரை கண்ணில்பட்டது.)

இப்படி புத்தகங்களைப் படித்தால் காந்தி பற்றிய ஒரு பெரிய தெளிவு கிடைக்கும் எனத் தோன்றுகிறது. காந்தியைப் படிக்க படிக்க அப்படியே அவர் என்னை ஹைஜாக் செய்வதும் புரிகிறது. கல்லூரியில் காந்தியன் ஸ்டடீஸ் என்ற சர்டிஃபிகேட் கோர்ஸ் படித்துத் தேர்ச்சி பெற்றேன். அப்போதே அந்தக் கல்லூரி ஆசிரியர் ஒழுங்காக காந்தியைப் பற்றிச் சொல்லித் தந்திருந்தால், இந்நேரம் காந்தியைப் பற்றிப் பல புத்தகங்களை வாசித்து முடித்திருந்திருக்கலாம். அப்போது தானே கிளம்பும் உத்வேகம் வராததால், காந்தியைப் பற்றி ஒழுங்காகப் படிக்காமல் விட்டது இப்போது வருத்தம் தருகிறது.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (கிழக்கு வெளியீடு) இரண்டு பாகங்கள். முதல் பாகத்தை பாதி படித்தேன். இரண்டாம் பாகத்தில் தேவையான சில பகுதிகளைப் படித்தேன். இந்தப் புத்தகத்தையும் முழுமையாகப் படிக்கவேண்டியுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஓர் எண்ணம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் புத்தகமும் தமிழில் ஒரு சாதனைதான். ராமசந்திர குஹா எழுதி தமிழில் ஆர்.பி.சாரதியால் (பா.ராகவனின் தந்தை) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்னும் 20 வருடங்களுக்காவது இப்புத்தகம் தமிழில் நிலைத்து நிற்கும். தொடர்ந்து பேசப்படும். இந்த அரிய சாதனையை செய்திருப்பது கிழக்கு பதிப்பகம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சி. இந்த முக்கியமான புத்தகத்தைப் பற்றி சில விமர்சனங்களும் வந்துள்ளன. குஹா ஒரு மார்க்சியர் என்பதால் அச்சார்புடன் புத்தகம் உள்ளது என்பது ஒரு குற்றச்சாட்டு. சார்பு இதுதான் எனத் தெரிந்துகொண்டு புத்தகத்தைப் படிப்பதில் ஒரு பிரச்சினையுமில்லை. நடுநிலை என்ற அறிவிப்போடு வரும் புத்தகத்தை வாசிக்கும்போதுதான் மனம் அலைபாயத் தொடங்கிவிடுகிறது! மேலும், சார்பை மீறி பல விஷயங்களைத் தெளிவாகவே குஹா குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு குற்றச்சாட்டு, வலதுசாரிகளின் பங்களிப்பை சரியாக குஹா பதிவு செய்யவில்லை என்பது. இப்புத்தகத்தை முழுமையாகப் படித்தால், இக்குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது தெரியும். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும், அதை வைத்து இப்புத்தகத்தைப் புறந்தள்ளமுடியாது. 10 ஆண்டுகாலம் உழைத்து, ஒரு பெரிய கண்ணோட்டத்தில், விரிவான பார்வையில் எழுதும்போது இதுபோல நிகழ்வது சகஜமே. தேவை என்றால், வலதுசாரிகள்தான் அவர்கள் கண்ணோட்டத்தில் வரலாற்றைப் பதிவு செய்யவேண்டும். அத்வானியின் தன்வரலாற்று நூலான ‘என் தேசம் என் வாழ்க்கை’ இந்த வகையில் ஒரு முக்கியமான புத்தகமே. அதை ஏற்கெனவே படித்துமுடித்துவிட்டேன். அது பற்றிப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் – தேவைப்படுமானால் எழுதுவேன்.

இப்போது நான் படிக்கவேண்டிய புத்தகங்கள்:

01. காந்தி வாழ்க்கை

02. இன்றைய காந்தி (மீண்டும் ஒருமுறை படிக்கவேண்டும்)

03. தென்னாப்பிரிக்காவில் காந்தி

04. தண்டி யாத்திரை

05. இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு

06. நவகாளி யாத்திரை

இத்தனை புத்தகங்களைப் படிப்பதற்காகத்தான் டிவிட்டரிலிருந்தும், ஃபேஸ்புக்கிலிருந்தும் வெளியேறினேன். நேரம் நிறையவே கிடைக்கிறது!

இன்னும் ஒரு புத்தகமும் வாங்கவேண்டியிருக்கிறது. ராஜாஜியைப் பற்றி ராஜ்மோகன் காந்தி எழுதி, கல்கி ராஜேந்திரனால் மொழிபெயர்க்கப்பட்டு வானதி வெளியீடாக வந்திருக்கும் புத்தகம், ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு. இதையும் வாங்கிப் படிக்கவேண்டும்.

புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

Share

பரமக்குடி சொல்லும் செய்திகள்

வாசிக்க: http://www.tamilpaper.net/?p=4086

Share

அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்

நான் எழுதிய ‘அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ புத்தகத்தின் விமர்சனம் தமிழோவியம் தளத்தில் வெளியாகியுள்ளது.

Share