சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 08)

பதிவுவகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

நேற்றுமுந்தினம் போலவே நேற்றும் கூட்டம் இருந்தது. விடுமுறைக்கான கடும் கூட்டம் இன்னும் வரவில்லை. சென்ற ஞாயிறன்று இருந்த கூட்டத்தைப்போல் இதுவரை கூட்டம் வரவில்லை. இன்னும் மீதமிருக்கும் மூன்று நாள்களில் ஏதேனும் ஒருநாளில் அந்த அதிகபட்ச கூட்டத்தை புத்தகக் கண்காட்சி காணும் என்று நினைக்கிறேன். அது பெரும்பாலும் வரும் ஞாயிறாக இருக்கலாம்.

நேற்று காலையில் மந்தமாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நான்கு மணிக்குப் பின்பு பரபரப்பாகியது. மக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். இந்த முறை சொதப்பியது, புத்தகக் கண்காட்சி அரங்கித்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் உணவு அரங்குகள். அங்கு மக்கள் தேங்கிவிடுகிறார்கள். அவர்கள் மற்ற பதிப்பகத்திற்குள் செல்லுவதில்லை. அல்லது அங்கேயே கண்ணில் படும் அரங்குக்குள் மட்டுமே சென்றுவிட்டு மற்ற அரங்குகளைப் பார்க்காமல் போயிவிடுகிறார்கள். இந்த உணவு அரங்குகளை அடுத்தமுறை கண்காட்சி அரங்குக்குள் வைக்காமல் தனியே வெளியே வைக்கவேண்டும். குறைந்தபட்சம், அங்கு நடக்கமுடியாமல் அவதிப்படும் வாசகர்களுக்காவது நன்மையை உண்டாக்கும். என்னென்ன உணவு விடுதிகள் இருக்கின்றன? வடை, பஜ்ஜி, போண்டா விற்கும் உணவகம், ஐஸ்கிரீம் விற்கும் உணவகம், காஃபி, தேநீர்க் கடை, பழங்கள் விற்கும் உணவு அரங்கு, பழச்சாறு கடை, முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு விற்கும் கடை – இத்தனையையும் மீறி ஒரு வாசகன் ஒரு புத்தகத்தைக் கண்டடையவேண்டும். மனதில் உறுதி வேண்டும்.

புனித வியாழன். தோழர் வ்ந்திருந்தார். உடனே சென்று கைகுலுக்கிப் பேசலாம் என்றால், தீவிரமாக கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவர் கை வலித்து ஓய்ந்ததும், மெல்ல அருகில் சென்று ‘ஸ்டாலினியப் படுகொலைகள்’ புத்தகம் எங்கே கிடைக்கும் என்றேன். ‘தமிழினில போட்டிருக்காங்க. பின் தொடரும் நிழலின் குரல்ன்ற பேர்ல வந்திருக்கு’ என்றார்.
நிறையப் பேர் பாராவைத் தேடினார்கள். மாயவலியில் அவர் இருப்பதைச் சொன்னேன்.

இன்று தினமலரில் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும் அரங்கு என்று இரண்டு அரங்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று, உயிர்மை பதிப்பக அரங்கு. மற்றொன்று, மணிமேகலைப் பிரசுரம். மனுஷ்யபுத்திரன் இதற்கெல்லாம் மனமுடைந்துவிடுபவர் அல்ல என்பது என் திண்ணம்.

நேற்று சில பதிப்பகங்களைப் பார்வையிட்டேன். புலம் என்கிற பெயரில் பதிப்பகத்தை ஆரம்பித்திருப்பவர் நண்பர் லோகநாதன். காலச்சுவடில் இருந்தவர். நல்ல உழைப்பாளி. புத்தகம் பதிப்பிக்கும் துறையில் பல நுணுக்கங்கள் அறிந்தவர். அட்டையில் ஒரு சில இடங்கள் மட்டும் மேடாக இருப்பது, சில இடங்கள் மின்னும் நிறத்தில் இருப்பது என்பன போன்ற சில நுணுக்கங்களில் (இவை ஏற்கெனவே வந்தவைதான் என்றாலும்) புத்தகம் வந்தால் அவற்றின் நோக்குத்தரம் எவ்வளவு உயர்வாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தியவர்.

நேற்று கண்ணில் பட்ட, கவனத்தை ஈர்த்த மேலும் சில புத்தகங்கள்.

அஞ்சுவண்ணம் தெரு, கூனன் தோப்பு – தோப்பில் முகமது மீரான் – அடையாளம்
மஹாகவியின் ஆறு காவியங்கள் – தொகுப்பு: எம்.ஏ. நுஃமான் – அடையாளம்
இலங்கையில் சமாதானம் பேசுதல் – அடையாளம்
புத்தம் அருள் அறம் – ஜி.அப்பாத்துரை – ஆழி

நண்பர் விஜய மகேந்திரன் வ்ந்திருந்தார். தோழமை பதிபக்கத்தின் வெளியீடாக வரவிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் எனது ஒரு சிறுகதையும் இடம்பெறுகிறது. அப்புத்தகத்தை வாங்க நாற்பது, ஐம்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னேன். கடும் அதிர்ச்சியுடன் சிரித்தார். தமிழினி மணி, ’புத்தகச் சந்தைக்கு இத்தனை பெரிய இக்கட்டு வருமென்று நினைக்கவில்லை’ என்றார்!

பின்குறிப்பு: இதை இப்போது புத்தகக் கண்காட்சியில் இருந்து உள்ளிடுகிறேன். ஓர் அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘முக்கிய அறிவிப்பு. வாசகர் ஒருவர் தங்கள் புத்தகங்களோடு சேர்த்து பில்புக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தங்கள் புத்தகங்களை வாசகர்கள் சரி பார்த்து, பில் புக் இருந்தால் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ தொடர்ந்து பில் போட்டுக்கொண்டே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்பதுதான் இதன் நீதி என்க.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 07)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

பொங்கலன்று கூட்டம் குவியும் என்கிற நம்பிக்கையும் மெல்ல கரைந்தது. கூட்டம் சுமாராகவே இருந்தது. பெரும்பாலான பதிப்பாளர்கள் கடந்தமுறை நடந்த விற்பனையில் பாதியாவது தாண்டுமா என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு பதிப்பக நண்பர் புத்தகக் கண்காட்சி வைத்த இடம் சரியில்லை என்று சொன்னார். என்று இங்கு வைக்கத் தொடங்கினார்களோ அப்போதிருந்தே விற்பனை இல்லை என்றும் இந்தமுறை கடுமையான விற்பனைச் சரிவு என்றும் அவர் சொன்னார். இன்னொரு பதிப்பகத் தோழர் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியே இது என்றார். எப்படி இருந்தாலும், கூட்டம் குறைவாக இருந்தது என்பதுதான் விஷயம். மாலை நான்கு மணிக்கு மேல் கொஞ்சம் கூட்டம் வரத் தொடங்கியது.

நேற்று நான் சில தமிழ் பதிப்பக அரங்குகளைச் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்களைப் பார்த்தேன். சில புத்தகங்களைக் குறித்து வைத்துக்கொண்டேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றின் பட்டியல்.

வாங்கியவை:

பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் – நா.வானமாமலை – அலைகள்
காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் – கருப்புப் பிரதிகள்
ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – உயிர்மை
ஊமைச் செந்நாய் – ஜெயமோகன் – உயிர்மை
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா – உயிர்மை
உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி
எனது இந்தியா – ஜிம் கார்பெட் – காலச்சுவடு
பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன் – காலச்சுவடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் – திருச்செந்தாழை – காலச்சுவடு

குறித்து வைத்துக்கொண்டவை:

உறவுகள் – எஸ். பொ. – மித்ர வெளியீடு
உலகை உலுக்கிய திரைப்படங்கள். – போதி வெளியீடு
மும்பை 26/11 – வினவு – பதிப்பகம் நினைவில்லை
மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு – சந்தியா
ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் – சந்தியா
உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம் – உயிர்மை
அங்கிள் சாமுக்கு மண்டோ கடிதங்கள் – பயணி வெளியீடு
சாதத் ஹஸன் மண்டோ படைப்புகள் – புலம் வெளியீடு
சிறுவர் சினிமா பாகம் 2 – விஸ்வாமித்ரா – வம்சி வெளியீடு
தவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு – உயிரெழுத்து

இன்று நேரமிருந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு மேலும் சில புத்தகங்களை உள்ளிடுகிறேன்.

புத்தகக் கண்காட்சி நிறைவடையும் தருவாயில் திடீரென்று ஒலிபெருக்கியில் ‘ஃபயர் சர்வீஸ் உடனே வரவும்’ என்று நான்கைந்து முறை பதட்டத்துடன் அறிவித்தார்கள். அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் பதட்டமடைந்து வெளிவாயிலுக்கு ஓட, சிறிய பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்பு காந்தி கண்ணதாசன் ஒலிபெருக்கியில் ‘சிறு சார்ட் சர்க்யூட் மட்டுமே என்றும் அதனால் பதட்டப்பட ஒன்றுமில்லை’ என்று அறிவித்தபின்பே கூட்டம் அமைதியானது. தேவையான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சிறிய சார்ட் சர்க்யூட்டுக்கு முதலில் இப்படி மைக்கில் அலறாமல் இருந்தால் இந்த சிறிய பதட்டத்தையும் தவிர்த்திருக்கமுடியும். இதை காந்தி கண்ணதாசனும் ஒலிபெருக்கியில் சொன்னார்.

இன்றைய புத்தகக் கண்காட்சியில் இப்போது இருக்கிறேன். அங்கிருந்தபடியே இப்பதிவை உள்ளிடுகிறேன். கூட்டம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பதிப்பாளர்களை இன்று எப்படி காப்பாற்றுகிறது என்று பார்க்கலாம்.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 06)

வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

ஒவ்வொரு நாளும் ஒரே செய்தியை மாற்றி மாற்றி எழுதும் டைரிக் குறிப்பு போல, இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செய்திகள் வருகின்றன என்பதை நானே உணர முடிகிறது. சென்ற வருடமும் இப்படித்தான் நிகழ்ந்தது. இதைத் தவிர்க்கமுடியாது. அதனால் என் டைரிக்குறிப்பைத் தொடந்து படிக்கவும்.

நேற்று முழுநாள். ஒரு முழுநாளுக்கான கூட்டம் சிறிதும் கிடையாது. அதிலும் முதல் மூன்று மணி நேரங்களில் கூட்டமே இல்லை என்று சொல்லலாம். ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வந்திருந்தார்கள். ப்ராடிஜி அரங்குக்கு வந்தவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஆளுக்கு 100 ரூபாய் வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். எல்லோருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்கும் பழரசம், உணவு வகைகளை வாங்கி உண்ணவே விருப்பம். குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட என்ன புத்தகங்கள் முக்கியம் என்பதுதான் என் எண்ணமும். ப்ராடிஜியின் அரங்கிற்கான எதிர் அரங்கு இஸ்கான் அரங்கு. அங்கு பள்ளி மாணவர்கள் சென்றவுடன், அங்கிருந்த காவியுடை மனிதர், எல்லாப் பிள்ளைகளையும் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ராடிஜி அரங்கில் இருந்த பத்ரி ‘இந்த ஹிந்துத்துவா…’ என்று என்னவோ சொல்ல ஆரம்பித்தார். நானும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா சொல்ல ஆரம்பித்ததால் அவர் என்ன சொல்ல வந்தார் என்று காதில் விழவில்லை. 🙂 கிழக்கு பதிப்ப்கத்தின் வரிசையில் விஜயபாரதம் அரங்கும், கிழக்கு பதிப்பகத்துக்கு அடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் அரங்கும், எதிரே நித்யானந்த திவ்ய பீடமும் (இன்னொரு பக்கம் பாரதி புத்தகாலயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை) ப்ராடிஜிக்கு எதிரே இஸ்கானும் அமைந்ததெல்லாம் இயற்கையாக அமைந்ததுதான். அதனை எல்லாம் அவன் செயல் என்றும் சொல்லலாம்.

தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார். அந்த நண்பர் வருடா வருடம் இன்னும் அதிகப் பணத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

தேசிகன் வந்திருந்தார். சத்யஜித் ரேயின் இரண்டு புத்தகங்களை வாங்கினார். நியூ ஹொரைசன் எல்லா விஷயங்களையும் யூ.எஸ். ஸ்டைலில் செய்வதால், வாங்கிய புத்தகம் பிடிக்கவில்லை என்றால் திரும்பக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்ளும் யூ.எஸ். ஸ்டைலையும் அறிவிக்க ஆலோசனை வழங்கினார். தமிழவன், கோணங்கி நிலையையெல்லாம் நினைத்துப் பார்த்தேன். திகிலாகத்தான் இருந்தது.

மீண்டும் தோழர். எத்தனை தடவை தோழரைப் பற்றி எழுதுவேன் என நினைக்கக்கூடாது. தோழர் செய்திக்கு மேல் செய்தியைத் தந்துகொண்டிருக்கிறார். புத்தக கண்காட்சியின் வளாகத்திற்கு வெளியே நடைபாதையிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து தலைகாணி சைஸில் இருக்கும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். எல்லாம் சேர்ந்து ஐநூறு ரூபாய்தான் என்றார். அதை பழைய புத்தகக் கடையில் விற்றது அதை வாங்கிய இன்னொரு தோழராக இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. இந்தத் தோழர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அன்னார் வாங்கிய புத்தகங்களுள் ஒன்று ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை.’

இன்ஃபோ மேப்ஸ் கடையில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை பத்ரி வாங்கினார். நானும் அதில் சில புத்தகங்களை வாங்க நினைத்திருக்கிறேன். காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க நூலகங்களில் அலைந்தது, சிறுவர் மலர் படிக்க அதிகாலையிலேயே தினமலர் நாளிதழ் வாங்கும் நண்பன் வீட்டுக்குச் சென்று காத்திருப்பது போன்ற விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பின்பு ராணி காமிக்ஸ். ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கும் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். இல்லையென்றால், வீட்டில் காமிக்ஸிற்கும் ஒட்டுமொத்த தடை விழுந்துவிடும். காமிக்ஸில் தொடங்கி, அம்புலிமாமா, பாலமித்ரா வழியாக, விஜயசேகரனின் வீர சாகஸங்கள் போன்ற புத்தகங்கள் வழியாக ஒருவர் சிறந்த புத்தகங்களை அடைய முடியும். சிறுவர்களுக்கான, மகிழ்ச்சியைத் தவிர வேறு எவ்வித நோக்கமுமற்ற இந்தப் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு நல்ல அடித்தளம் கொடுப்பவை.

’உன்னதம்’ மாத இதழாக வெளி வந்திருக்கிறது. கௌதம சித்தார்த்தன் எனக்கு ஓர் இதழைக் கொடுத்தார். படிக்கவேண்டும். இடையில் வராமல் இருந்த உன்னதம் இப்போது மாத இதழாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து வரும் என்று நம்புவோம். ‘பள்ளிகொண்டபுரம்’ புத்தகத்தை கிளாசிக் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதையும் வாங்கவேண்டும். நீண்டநாள் வாங்க நினைத்த புத்தகம் இது. சில புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பையும் வாங்க நினைத்திருக்கிறேன். திருச்செந்தாழையின் ஒரு சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.

இன்றாவது என்னைக் கவரும், என் ரசனைக்குட்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தரமுடியுமா என்று பார்க்கிறேன்.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05)

நான்கு நாள்கள் கடுமையான வேலை செய்து களைத்துப்போனால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வது போன்ற நாளாக அமைந்தது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாள். எங்கு பார்த்தாலும் வெட்ட வெளி. 🙂 ’கூட்டம் குறைவாக இருப்பதால் விற்பனை நன்றாக இருக்கிறது, ஏனென்றால் நின்று படித்து வாங்குகிறார்கள்’ என்று ஒரு பதிப்பாளர் சொன்னார் என்று ஞாநி என்னிடம் கூறினார். சிரித்தேன். 😛 பல பதிப்பாளர்கள் அரங்கில் இல்லாமல் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருட்ந்தார்கள். நான் கிழக்கு கடையில் இருந்தேன். காலச்சுவடு, எனி இண்டியன், தோழமை வெளியீடு, உயிர்மை அரங்குகளைப் பார்வையிட்டேன்.

இன்று முதல் வரும் எல்லா நாள்களும் முழு வேலை நாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது பபாஸி. பல பதிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். சில பதிப்பாளர்கள் முழுநாளும் சும்மா இருக்கணுமா என்றார்கள்.

சென்ற ஆண்டு விளம்பரங்களை ஒப்பிடும்போது, பபாஸியின் இந்த ஆண்டு விளம்பரங்கள் குறைவாகவே இருக்கின்றன. சென்ற ஆண்டில் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரத் தட்டி முளைத்திருந்தது. சன் டிவியில் விளம்பரங்கள் வந்தன. இப்போது அதெல்லாம் காணாமல் போய்விட்டது. Cost cutting வேலையாக இருக்கலாம். சன் பண்பலையில் விளம்பரங்களைக் கேட்டேன். அது போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல.

தமிழக அரசின் குடும்ப விழாவான சங்கமத்திற்கு ஊடகங்கள் அடிக்கும் மஸ்கா அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். அதில் ஒரு சிறு பங்காவது ஊடகங்கள் புத்தகக் கண்காட்சியில் உள்ள அரங்குகளுக்குக் கொடுத்திருக்கலாம். ஒரு பத்திரிகைகூட உருப்படியாக புத்தகக் கண்காட்சி பற்றிய கவரேஜ் வெளியிடவில்லை. இங்கிருக்கும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் கவரேஜ் என்பது விளம்பரம் என்றாகிவிட்டது. அரைப்பக்கம் விளம்பரம் கொடுத்தால் அரைப்பக்கம் எழுதுவார்கள். அப்படியானால் பத்திரிகைகள் பதிப்பாளர்களைப் பற்றி, அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் பற்றி, அங்கு வரும் வாசகர்களின் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி, அங்கு செய்யப்படவேண்டிய மேம்பாடுகள் பற்றி எப்போதுதான் எழுதுவார்கள்? அப்துல்கலாம் வந்து திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ. (அவர் பேசும்போது கவிதை மாதிரி ஒன்றை சொல்லி, அதை எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள் என்று ஆசிரியராகிவிடுவார். 60 வயது கிழமெல்லாம் குழந்தைகளாகி கருமமே கண்ணாக அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். அவர் வராததால் அந்த சிறந்த நகைச்சுவைக் காட்சியைக் காணமுடியாமல் போய்விட்டது!) கருணாநிதி திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ, ஒரு கட்டுரை. இவ்வளவுதான் பத்திரிகைகள் அறிந்த விஷயம். அதை மீறி ஒரு விவாதப்பூர்வமான ஒரு கட்டுரையையோ, புத்தகக் கண்காட்சியின் தேவை, சிறப்புகளைப் பற்றியோ எழுதுவதில்லை. கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ புத்தகக் கண்காட்சியைக் குத்தகைக்கு எடுத்தாலொழிய அரசின் கவனம் இப்பக்கம் திரும்பும் என்று தோன்றவில்லை.

கிழக்கு அரங்கில் மாயவலை புத்தகம் விற்பனைக்கு வெளிவந்தது. பாரா இப்புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அது கை நழுவிக் காலில் விழுந்துதான் அவருக்கு அடிபட்டது என்கிற செய்தியெல்லாம் இப்போது வெளியே கசியத் தொடங்கியிருக்கிறது.

இன்று முதல் வரும் ஆறு நாள்களும் ஆகும் விற்பனையைப் பொருத்தே ஓர் அரங்கின் ஒட்டுமொத்த விற்பனை வெற்றியா தோல்வியா என்பது தெரியும். ஆறு நாள்களில் நான்கு நாள்களாவது நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம். சென்னையில் வீட்டுக்குள் அடைந்துகொண்டிருக்கும் மக்களைப் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டு வருவது எப்படி? முதலில் எங்கிருந்தும் புத்தகக் கண்காட்சிக்கு வர பேருந்துகள் தேவை. புத்தகக் கண்காட்சி முடிந்து வீட்டுக்குச் செல்ல, பேருந்தை நம்பி ஒரு பதிப்பாளரோ வாசகரோ வந்தால் பெரும் கஷ்டம்தான். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். சங்கமம் குடும்ப விழாவிற்கு ஒரு கோடி தரும் முதல்வர், புத்தகக் கண்காட்சிக்கென சில பேருந்துகளை இயக்குவது பற்றி சிந்திக்கலாம். பபாஸியிலிருந்து இக்கோரிக்கை பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். இதிலென்ன பெரிய நஷ்டமோ, கஷ்டமோ அரசுக்கு இருந்துவிடமுடியும் என்பது புலப்படவில்லை. பெண்கள் வீட்டுக்குச் செல்ல படும் பாட்டை பார்க்க பாவமாக இருக்கிறது.

இயக்குநர் சுகா வந்திருந்தார். சுகுமாரனைத் தேடி கவிதையைக் கண்டடைந்தார். அந்தக் கொடுமையை அவரே எழுதுவார். கவிஞர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். உங்களால் மறுக்கமுடியாத வகையில், லட்டு என்று சொல்லி, எப்போது வேண்டுமானாலும் ‘வெடிகுண்டு’ ஒன்றைக் கையில் திணிப்பார்கள்.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 04)

வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் வந்ததா என்றுதான் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரையில், சென்ற வருட புத்தகக் கண்காட்சியின் முதல் ஞாயிறன்று வந்த கூட்டத்தைவிட இன்று குறைவு என்றுதான் நினைக்கிறேன். அதுவும் மாலை வரை கூட்டம் மிகவும் குறைவு. சென்ற ஞாயிறன்று உள்ளே நுழையும்போதே கொஞ்சம் பேர் அங்கே இருந்தார்கள். இந்த ஞாயிறன்று அப்படியெல்லாம் கூட்டம் இல்லை. ஆனால் பபாஸி ‘வெளியே கூட்டம் அதிகம் இருப்பதால் 10.45க்கெல்லாம் வாசகர்களை உள்ளே அனுமதித்துவிட்டோம்’ என்று சொல்லி பதிப்பாளர்களைக் கலகலப்பாக்கினார்கள்.

மொத்தம் ஐந்து நுழைவாயில்களில் ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் 500 டிக்கட்டுகள் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பதுதான் திட்டம். இத்திட்டம் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பது தெரியவில்லை. எப்போதும் முதல் மற்றும் கடைசி வரிசைகளில் மட்டுமே கூட்டம் இருக்கிறது. நடுவில் அமைந்திருக்கும் வரிசைகளில் கூட்டம் அதிகம் வருவதே இல்லை. பல பதிப்பாளர்களும் இதைச் சொல்வதைக் காணமுடிந்தது. புத்தகக் கண்காட்சியின் விற்பனை, எந்த வரிசையில் புத்தகக் கடை கிடைக்கிறது என்பதைப் பொருத்ததே என்பதை உடைக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பபாஸியும் பதிப்பாளர்களும் சேர்ந்து யோசிக்கவேண்டும். உடனடியான ஒரே தீர்வு, சரியாக சுழற்சி முறையில் டிக்கட்டுகள் வழங்கப்படுகிறதா என்பதை ஆராய்தல், அதை அவ்வப்போதே ஒலிபெருக்கியில் ‘இப்போது இந்த நுழைவாயிலில் டிக்கட்டுகள் வழங்குகிறோம்’ என அறிவித்தல் என்பவைதான்.

நேற்று ஞாயிறு என்பதால், ஒப்பீட்டளவில் விற்பனை எந்த ஒரு அரங்கிற்கும் அதிகம் இருக்கும் என்பதால், எந்த அரங்கையும் சுற்றிப் பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்க்கவேண்டும். எந்த எந்த பதிப்பகத்தில் என்ன என்ன புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன என்ற பட்டியலை, நேரமிருந்தால் உள்ளிடுகிறேன். இந்த முறை நான் புத்தகங்கள் அதிகம் வாங்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சென்ற முறை சாகித்ய அகாடமியில் அள்ளிய புத்தகங்கள் அப்படியே அலமாரியில் இருக்கின்றன. இவை போக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நிறைய புத்தகங்களை படிக்க நினைத்திருக்கிறேன். இவை எல்லாம் முடிந்தால்தான் அடுத்த புத்தகங்கள் வாங்குவதைப் பற்றி யோசிக்கமுடியும்.

சில எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்கமுடிந்தது. லக்கிலுக்கும் உண்மைத் தமிழனும் ஒன்றாக வந்து பீதியைக் கிளப்பினார்கள். கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த புத்தக விமர்சனத்தை, அப்புத்தகத்தின் பக்கங்களைவிட அதிகமாக எழுத முடிவு செய்திருப்பதாக உண்மைத் தமிழன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். இத்திட்டம் இப்படி ஒரு பயங்கரமான விளைவை ஏற்படுத்தும் என்று யோசிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன். 🙂

நாகராஜன் வந்திருந்தார். கேமராவில் அவ்வப்போது பேசிக்கொள்ளும் வகையிலான ஒரு மொபலை வைத்திருந்தார். அதைச் சுமந்துகொண்டுவரும் வேலைக்காரர் இன்று விடுமுறை என்பதால் அவரே சுமந்துகொண்டு வந்திருந்தார். தோழர் தலையை தடவி நான் அப்போதுதான் ஒரு தேனீர் குடித்திருந்தேன். நாகராஜன் வந்து உடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று சொல்லவும், தோழர் வாங்கிக்கொடுத்தார். தேநீர் குடித்த சூடு அடங்குவதற்குள்ளாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். தோழர்கள் எப்போதுமே இப்படித்தான், சூடாக எதையாவது கொடுத்து, உடனே அதை குளிர்வித்துவிடுவார்கள் என்ற அசரிரீ ஒலித்ததை நாகராஜனும் தோழரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் விற்கும் நண்பர், தன் அப்பாவும் கம்யூனிஸ்ட்டுதான் என்றார். வருத்தத்துடன் சொன்னாரா சந்தோஷமாகச் சொன்னாரா என்று தெரியவில்லை.

கிழக்கு பதிப்பகத்தின் தீவிர வாசகர்கள் பலரை நேற்று காணமுடிந்தது. கிழக்கு பதிப்பகத்தில் அவுட் ஆஃப் ஸ்டாக்காகியிருக்கும் புத்தகங்கள் உட்பட எல்லாப் புத்தகங்களும் தன்னிடம் உண்டு என்று சொன்னார். இன்னொருவர் மாதா மாதம் எங்களுக்கு என்ன என்ன புத்தகங்கள் வருகின்றன என்று ஏன் தெரிவிப்பதில்லை என்றார். அவரைப் பிடித்து 575758ல் போட்டுவிட்டேன். அடுத்த கிழக்கு மொட்டைமாடிக்கு அவர் வருவாரா என்று பார்கக்வேண்டும். உடல் ஊனமுற்ற ஒருவர், கிழக்கு என்ன என்ன செய்யவேண்டும் என ஏகப்பட்ட டிப்ஸ்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார். நிறைய பேர், ஏன் இன்னும் மார்கோ போலோ பற்றி புத்தகங்கள் வரவில்லை என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். வித்தியாசமான உலகம். யார் ரசனை எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே ஒரு பெரிய சவால். ஒரு கலை அது. ஒருவர் பாராவின் எழுத்துகளைப் பற்றி இப்படிச் சொன்னார். ‘அப்படியே தத்ரூபமா இருக்கும், எப்படி வந்தாங்க, எப்படி குண்டு வெச்சாங்க, எங்க ரூம் எடுத்தாங்க, எங்க எங்க போனாங்க, எல்லாம் இருக்கும்’ என்றார். இன்னொரு வாசகர் சோம.வள்ளியப்பனைவிட சிறந்த எழுத்தாளர் இல்லை என்று சொன்னார். சில வாசகர்கள் 2009ல் கிழக்கு வெளியிட்டிருக்கும் புது புத்தகங்களை மட்டும் கேட்டு, அவற்றை வாங்கிச் சென்றார்கள். மாயவலை புத்தகங்களை நிறையப் பேர் கேட்டார்கள். இப்படிப் பல விஷயங்கள். முழுக்க முழுக்க கிழக்கு அரங்கிலேயே இருந்ததால் இவற்றை எல்லாம் பார்க்கமுடிந்தது.

இன்றும் நாளையும் வேலை நாள்கள் என்பதால் மதியம் 2.00 மணிக்குத்தான் தொடங்கும். அவை போக மீதி எல்லாமே முழு நாள்கள். மீண்டும் பெட்ரோல் பிரச்சினையும் மழை மிரட்டலும் வராமல் இருந்து, எல்லா நுழைவாயில்களிலும் சரியான அளவில் கூட்டம் செலுத்தப்பட்டால், எல்லாப் பதிப்பாளர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கலாம்.

இவைபோக, ’கொடுத்த வைத்த’ அரங்குகளைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்த ஸ்டால் ஒரு பிரைம் ஸ்டால். ஒரு புத்தகம் கூட அங்கே கிடையாது. இரண்டு சுவர்களிலும் பெரிய பெரிய பேனர்கள். முதல் நாள் பேனர்களும் அங்கே இல்லை. சரி, மெல்ல வருவார்கள் என்று நினைத்தேன். மெல்ல மெல்ல கூட வரவில்லை. பிரைம் ஸ்டால்களெல்லாம் புத்தகங்களை அடுக்கும் வழி தெரியாமல், முழி பிதுங்கிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் புண்ணியம் தேடி இங்கே வந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். கிழக்கு அரங்கிலிருந்து வெளியே செல்வதற்கு, அந்த அரங்கைக் குறுக்குப் பாதையாகப் பயன்படுத்திக்கொண்டால், கொஞ்சம் நடை மிச்சமாகிறது. அந்தப் புண்ணியம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு.

பின்குறிப்பு: ’விபத்து காலம் முதல் விறுவிறுவென்று நடப்பதுவரை’ என்ற புத்தகம் 19ம்தேதி புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியிடப்படும். ஆசிரியர் யார் என்பது சஸ்பென்ஸ்.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 3)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி

இது சனிக்கிழமைதானா என்கிற அளவிலான குறைவான கூட்டத்தோடு தொடங்கியது நான்காம் நாள். சென்ற வருட சனிக்கிழமைகளில் கூட்டம் நன்றாக இருந்தது. இப்போது பெட்ரோல் பிரச்சினை என்பதால் நிறைய பேரைக் காணவில்லை. முதல் வரிசையிலும் கடைசி வரிசையிலும் மட்டும் சில தலைகள் தென்பட்டன. மற்ற வரிசைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

கிழக்கு பதிப்பகத்தில் நிறைய புதிய புத்தகங்கள் நேற்று வந்தன. ஞாநியின் ஓ பக்கங்களும், இந்தியப் பிரிவினையும் என் ரசனையின் அடிப்படையில் எனக்கு முக்கியமானவை. படித்துப் பார்க்கவேண்டும். இவைபோக பல புதிய புத்தகங்கள் வ்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகங்கள் வருவதற்கும் கூட்டம் வரத்தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. மாலை மூன்றரை வாக்கில் தொடங்கிய பரபரப்பு இரவு வரை நீடித்தது. கண்காட்சிக்கு வரும் வாசகர்களை ஐந்து நுழைவாயில் வழியாகவும் அனுப்புவதால், ஒரு வரிசையில் திடீரென்று கூட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. இரண்டு நுழைவாசல்களை வைத்துக்கொண்டு, ஒரு நாள் ஒரு பக்கம் வழியாக, மற்றொரு நாள் இன்னொரு பக்கம் வழியாக என்று வைத்திருந்த நடைமுறையைவிட இப்போதுள்ள நடைமுறையே சிறப்பானது. எல்லா வரிசைகளிலும் கூட்டம் பிரிந்து போக வாய்ப்புள்ளது. அதேபோல், முன்பு ஒரு வரிசையில் நுழைந்தால் அவர் எல்லா புத்தகக் கடையையும் கண்டிப்பாகப் பார்த்துவிட்டுத்தான் வெளியில் வரமுடியும். அவசரத்துக்குக் கூட வெளியில் ஓடமுடியாது! ஒரு வரிசையில் இருந்து இன்னொரு வரிசைக்கு குறுக்காகக் கூடச் செல்லமுடியாது. கடைசி ஸ்டாலில் இருக்கும் ஒருவர், முதல் வரிசையில் உள்ள முதல் ஸ்டாலுக்குச் செல்லவேண்டுமானால், ‘கோவிந்தா கோவிந்தா’ சொல்லிக்கொண்டே அபிரதக்‌ஷணம் செய்தால் மட்டுமே இது சாத்தியம். இவையெல்லாம் இப்போதில்லை. பெரிய நிம்மதி.

கேண்டீனில் என்ன என்ன வந்திருக்கிறது என்று பார்க்க இன்னும் நேரம் வாய்க்கவில்லை. ஆனால் புத்தகக் கண்காட்சிக்குள்ளேயே போண்டா, பழம், ஐஸ்கிரீம், குளிர்பானம் என பல கடைகள் முளைத்திருக்கின்றன. சென்ற வருடம், கண்காட்சியில் கிடைமட்டமாகக் கடைசி வரிசையை உருவாக்கியிருந்தார்கள். அவற்றிலெல்லாம் கூட்டமே இருக்காது. இந்தமுறை, இந்தக் கிடைமட்ட வரிசைக்கு எதிரே வரிசையாக உணவுக் கடைகள். எப்போதும் உணவுக்கடைகளில் கூட்டம் இருக்கிறது. அக்கூட்டம் அந்தக் கடைகளுக்கும் செல்கிறது போல. அந்தக் கிடைமட்ட வரிசையிலும் நல்ல கூட்டம். விகடனின் பிரைம் ஸ்டாலின் கூட்டத்தைவிட பெரும்கூட்டம் அந்தக் கிடைமட்ட வரிசையில் இருந்த கடையில் அதிகம் இருந்ததைப் பார்ககமுடிந்தது.

இன்னும் எல்லா புத்தகக் கடைகளுக்குள்ளும் நுழைந்து, என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க நேரமில்லை. திங்கள் கிழமை இதைச் செய்யவேண்டும். அவசர அப்டேட்டாக இவற்றைச் சொல்லலாம். அம்பேத்கரின் அனைத்து எழுத்துகளின் ஒட்டுமொத்த தொகுப்பு (37 பாகங்கள்) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது. மொத்தமாக 1500 ரூபாய் மட்டுமே. இதை வாங்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. நிச்சயம் வாங்கவேண்டிய விஷயம் இது.

எனி இந்தியன் நான்கு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஈழ இலக்கியம் ஒரு பார்வை’ வெளி வந்திருக்கிறது. திண்ணையில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகளின் மேம்பட்ட வடிவம் இவை. இதுபோக, ஜெயமோகனின் என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன எனத் தெரியவில்லை. உயிர்மையில் விளம்பரங்கள் வந்திருந்தன. இன்னும் உயிர்மை அரங்கிற்குள் செல்லவில்லை. சென்றால் தெரியும்.

காலச்சுவடு ஸ்டாலில் விளம்பரத்திற்கென்று ஒரு மானிட்டர் வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 100 கருத்தரங்கில் ஒளிபரப்பபட்ட அதே விளம்பரங்கள்தான். மிக நன்றாக இருக்கிறது. இதேபோல் NHM ஸ்டாலில் செய்யவேண்டும். சிறந்த, செலவுகுறைவான விளம்பர உத்தி இதை. இதைச் செய்யவேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே முயன்றோம். முடியாமல் போய்விட்டது. அடுத்தமுறை செய்யவேண்டும்.

கீழைக்காற்று அரங்கம் சென்றமுறை இருந்த இடத்திலேயே இந்தமுறையும் இருக்கிறது. கீழைக்காற்று, பாரதி புத்தகாலயம் போன்ற அரங்குகள், ஒரு தனிப்பட்ட டேஸ்ட்டில் அமைபவை. இதனால் பல புத்தகங்களை இந்த அரங்குகளில் வாங்கமுடியும் என்பதால் இவை முக்கியமான ஸ்டால்கள். நான் ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாதமி, பாரதி புத்தகாலயம் – இவற்றில்தான் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இந்த முறை என்ன என்ன புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு, என்ன என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என ஒரு பட்டியல் தயாரிக்கவேண்டும்.

அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘என் தேசம் – என் வாழ்க்கை’ அத்வானியின் புத்தகம் வெளியாகியிருக்கிறது. இவற்றில் இருந்து சில பக்கங்கள் துக்ளக் இதழில் வெளிவருகின்றன. புத்தகத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்று இன்னும் பார்க்கவில்லை. அல்லயன்ஸ் இன்னும் புராண காலத்தில் இருந்து மீளவில்லை என்றாலும், மகாபாரதம் பேசுகிறது புத்தகத்தை சிறப்பாகவே வடிவமைத்திருந்தார்கள். இந்தப் புத்தகத்தையும் அப்படி வடிவமைத்திருப்பார்களா எனப் பார்க்கவேண்டும்.

தமிழினியில் காவல்கோட்டம் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனந்தவிகடனில் இந்த வருடத்தின் சிறந்த நாவலாக இதை அறிவித்திருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த 10 நாள்களுக்குள் இவ்வளவு பெரிய நாவலைப் படித்து, அதை வருடத்தின் சிறந்த நாவலாக அறிவித்த அந்த ‘உலகின் வேகமான வாசகரை’த் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.

இலங்கைத் தமிழர் வரலாறு என்றொரு புத்தகம் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. வாங்கியிருக்கிறேன். சரணம் சொல்லிவிட்டுப் படித்துவிட்டு, யுத்தம் செய்யவேண்டியதுதான் பாக்கி.

நேற்று ’அடியாள்’ வந்திருந்தார். ஜோதி நரசிம்மன். நிஜமாகவே புன்னகைத்தார். ‘மிரட்டிட்டீங்களே என்னை’ என்றேன். இன்னும் அதிகமாக சிரித்தார். ஒரு தோழர் சற்று முன்பு (வேறு வழியின்றி) சொல்லிவிட்டுச் சென்றிருந்தார், ‘முரண்பட விஷயங்கள் இருப்பதுதான சுவாரஸ்யம்’ என்று.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 02)

ஒரு பதிப்பாளர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். என்ன காரணமென்றால், கருப்பும் வெள்ளையுமான உருவங்களற்ற கோடுகளில் உருவங்கள் நெளிய, காவல்துறை அதிகாரி சொல்கிறார், ‘புலி வாழ்க!’ என்னும் புத்தகத்தை வெளியிட்டதற்காகவும் அதை மறைத்துவைத்து சமையல் புத்தகங்களோடு விற்றதற்காகவும் என்று. பின்பு பதிப்பாளரின் பேட்டி. அதே கருப்பு வெள்ளை உருவங்கள் நெளிய கோடுகளில் பேசுகிறார். ‘நான் சமையல் புத்தகம் விக்கிறவங்க. புளிகளோட நன்மைகள்னு ஒரு டாக்டர் எழுதின புத்தகம் அது. சரி, புது கோணமா இருக்கேன்னு போட்டேன். பாவிப்பய அட்டை போட்ட டிசைனர் தமிழ்ல கோட் அடிச்சவன் போல இருக்கு. புளி வாழ்கன்னு போடறதுக்கு புலி வாழ்கன்னு போட்டான்…’ இன்னும் அவர் என்னவோ சொல்ல வருவதற்குள் தூக்கம் கலைந்து எழுந்தேன். என்ன ஒரு கொடுங்கனவு!

நிஜத்திற்கு வருவோம். நேற்று சென்னை புத்தகக் காட்சியின் இரண்டாம் நாள். பெட்ரோல், டீசல் இல்லை என்பதால் ஊரெங்கும் எல்லா இடங்களிலும் வண்டிகள் அப்படியே தேங்கி நிற்கின்றன. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளில் போலிஸ் பாதுகாப்புடன் பெட்ரொல் வழங்கப்பட்டது. ஆயில் அரசியலெல்லாம் இல்லை. லாரி ஸ்டிரைக்! பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள்? பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு! குளோபல் வார்மிங், உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வந்தால் மட்டுமே சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது. இன்று ஒருநாள் இந்நிலை நீடித்தால் புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.

கூட்டம் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கேண்டீனிலும் கூட்டமே இல்லை. சாப்பிட ஐட்டங்களும் இல்லை என்பதையும் சொல்லவேண்டும். 🙂 அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் நான் ஏன் அத்தனை பரபரப்பாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை! புகைப்படங்கள் எடுக்கக்கூட கை ஒழியவில்லை. அதனால் இன்று புகைப்படங்களுக்கு விடுமுறை. ஆனால் கேமரா கவிஞர் சேதுபதி அருணாசலம் (அவராகவே எல்லாரிடமும் இப்படி எழுதும்படிச் சொல்கிறார்) பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடுவார். அனுப்பினால் வலையேற்றி வைக்கிறேன். புகைப்படங்களின் காப்பிரைட் எனக்குத்தான். 🙂

அருண் வைத்தியநாதன் வந்திருந்தார். நிறைய நேரம் இருந்தார். பேச நேரமில்லை என்பதால் ஒரு ஹலோ, ஒரு எப்படி இருக்கீங்க. இயக்குநர் சுகா வந்தார். அதே ஒரு ஹலோ மட்டுமே. ஜெயஸ்ரீ சென்னை வந்திருப்பதாக கருடன் சொல்லியது. புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை போல. நிறைய சமையல் புத்தகங்கள் கடை பரப்பியிருப்பதை ஜெயஸ்ரீ மனதில் வைத்து, அப்பதிப்பாளர்கள் உய்யச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். இதற்கு முடியும் அல்லது முடியாது மட்டும் பதில் எழுதினால் உசிதம். நாற்பது பக்கங்களுக்கு :கொட்டாவி: எழுதக்கூடாது. ஜெயமோகனே கொஞ்சம் மிரண்டு போயிருப்பதாக அறிந்தேன்.

இனி கிழக்கு. ஒரு வழியாக நேற்று மாலையில் கிழக்கு ஸ்டால் முழு அந்தஸ்து பெற்றது. இன்றும் இன்னும் மேம்படும். ஸ்டால் வரைபடங்கள், குலுக்கல் ப்ரிண்ட் அவுட்டுகள், புதிய வண்ண கேட்டலாக் என முழுமை பெற்றதும்தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்தது. இங்கே புத்துணர்ச்சி என்பது உயிர் என்று பொருள்கொள்ளப்படவேண்டியது. இனி வரவேண்டியவை சில முக்கியமான புத்தகங்கள். அவை இன்று வரும். இந்தியப் பிரிவினை புத்தகத்தைப் பலர் கேட்டுவிட்டுச் சென்றார்கள். மாயவலைக்கு முன்பணம் அனுப்பியிருந்தவர் அன்பாக மிரட்டினார். எல்லாம் இன்று (நாளைக்குள்!) வந்துவிடும்.

பின்பு ஞாநியின் அறிந்தும் அறியாமலும் கிழக்கு ஸ்டாலில் கிடைக்கும். விற்பனை உரிமை NHM உடையது. அது பற்றியும் ஞாநி பற்றியும் மீதி சில வரிகள். ஞாநி மிக ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் ஐந்து நிமிடம் இருந்திருப்பேன். அவரும் நானும் பத்து வார்த்தைகள் பேசுவதற்குள் நான்கு பேர்கள் வந்து புத்தகம் தந்து கையெழுத்து வாங்கி, அவரைப் பாராட்டி, அரசியல் சலிப்பைச் சொல்லி, முக்கியமான விஷயம் – ஒருவர் தவிர அத்தனை பேரும் பெண்கள். அத்தனை பேர் வாங்கியிருந்ததும் ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகம். ஒரு பெண்ணின் குழந்தை ‘பை’ என்று சொல்லிய அழகில் அங்கிருந்த அனைவருமே அசந்துவிட்டோம். ஞாநி மிகவும் உற்சாகமாக இருந்தார். காதல் என்பது உடல்கவர்ச்சியா, மனக் கவர்ச்சியா, பொழுது போக்கா என்றெல்லாம் சில ஆப்ஷன்கள் கொடுத்து தேர்தல் வைத்திருந்தார். 49 O வைக் காணவில்லை. அதனால் ஓ போடமுடியவில்லை. 🙂

அவர் கையெழுத்துப் போடுவதைக் கண்ட மணி (தமிழினி டிசைனர்) கொதித்தெழாமல் அமைதியாக, ‘போன தடவை கையெழுத்து கேட்டா கடுமையா திட்டினீங்க, இப்ப மட்டும் எப்படி போடறீங்க’ என்றார். ஞாநி, ‘சொல்லியிருக்கேன். திட்டியிருக்கேன். ஆனா இப்ப நான் கையெழுத்து போடுறது என் புத்தகத்துக்கு மட்டும்தான். இதுலயும் நம்பிக்கையெல்லாம் இல்லை. வெறும் வியாபாரியாக மட்டும், அதுவும் மேக்ஸிமம் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான்’ என்றார். மணியை ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார். அதே கையெழுத்தை, ஜஸ்ட் 2 நொடிகளில் ஞாநி போட்டார். ஞாநி குமுதத்தில் எழுதுவதால் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் இருக்குமென நினைத்தேன். 2 கூட இருந்திருக்காது. அத்தனை ஒற்றுமை ‘கையெழுத்துங்கிறதை ஈஸியா ஃபோர்ஜரி பண்ணிடலாம், அதனால இதுல ஒண்ணும் இல்லை. இதை பலபேர்கிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்.

குமுதம் வெளியிட்டிருக்கும் ஓ பக்கங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அமீர் வெளியிட்டார் என நினைக்கிறேன். ஞாநியுடன் 100 சதவீதம் ஒத்துப் போகமுடியாத கருத்துகள் இருந்தாலும், அவர் கருத்தை அவர் சொல்கிறார் என்கிற அதே சுதந்திரத்துடன், மற்றவர் கருத்தினையும் அதே சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து அணுகுகிறார் என்கிற பொருள்பட அமீர் பேசினார் என்றறிகிறேன். அமீரின் கருத்துகளில் எனக்கு நிறைய உடன்படாதவை உண்டென்றாலும், இதில் நிச்சயம் உடன்படுகிறேன். ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஞாநியிடம், ஒட்டுமொத்த ஹிந்துத்துவாவாதிகள் மீதுள்ள ஒட்டுமொத்த கோபம், பிராமணர்களில் அடித்தட்டு ஏழைகள் பற்றி அவர் பேசாதது என்பது போன்ற கருத்துவேறுபாடுகள் எனக்கு உண்டென்றாலும், அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆகிறார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது. நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வரும்? :))))

பின்குறிப்பு: அவசியமற்ற பின்குறிப்பு என்றுதான் எழுதவேண்டும். ஆனால் நான் எழுதுவது மொத்தமுமே அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள். நம்மைப் நாமே புரிந்துகொள்வோமா அடிப்படையில், அவசியமற்ற-வை விட்டுவிட்டு, வெறும் பின்குறிப்பு என்றே போட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். நேற்று புத்தகக் கண்காட்சி முழுவதும் ஒரு பெரிய வதந்தி, விடுதலைப் புலிகள் புத்தகம் எழுதிய மருதன், கைலாய யாத்திரையும் கைநிறையப் புண்ணியமும் என்கிற புத்தகம் எழுதப்போகிறார் என்று. நாம்தான் கெட்டுப்போய்விட்டோம் என்றாலும், கண்ணெதிரே ஒரு தோழர் சீரழிவதை எப்படிப் பொறுத்துகொள்ளமுடியும் என்று, அவரைப் புத்தகக் கண்காட்சி முழுக்க தேடினேன். நான்காவது வரியில், மூன்றாவது வலது திருப்பத்தின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அங்கிருந்து வெளியே தெரியும் வானத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். தோழர்கள் சீனாவை இங்கேயிருந்தே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று தெரியும். கைலாய மலையையும் அப்படிப் பார்த்துப் புத்தகம் எழுதப்போகிறாரா என்றெல்லாம் தோன்றியது. அருகில் ஓர் உடன்பிறப்பும் நின்றிருந்தார். படபடப்புடன் அவரிடம் கேட்டேன்.

‘என்ன தோழர், கைலாய மலையும் கைநிறையப் புண்ணியமும்னு எழுதப்போறீங்களா? பயங்கர ஷாக்கிங்கா இருக்கு.’

உடன்பிறப்பு சொன்னார், ‘பாத்தியா தோழா. ஒரு ஹிந்துத்துவவாதியே அலர்றார் பார்’ என்றார். அவரை முறைத்தேன் அவர் தொடர்ந்தார்.

‘இப்ப என்ன விடுதலைப்புலிகள் புத்தகத்துக்கு பேலன்ஸிங்கா எழுதணும். அவ்ளோதானே? அடிமைப்பூனைகள்னு ஒரு புத்தகம் எழுதிடு’ என்றார் ரொம்ப சீரியஸாக. அவர் நிச்சயம் ஓர் உடன்பிறப்பாகத்தான் இருக்கமுடியும்.

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – நாள் 01

மழை வர வாய்ப்புண்டு என்று ரமணன் ஊடகங்களில் அறிவித்ததால் நிச்சயம் மழை வர வாய்ப்பில்லை என்று நினைத்த பதிப்பாளர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. சொட்டு மழைகூட இல்லை. சென்ற புத்தகக் கண்காட்சியன்று கொட்டிய மழை போலல்லாமல் நேற்று கொஞ்சம் மழை குறைவாகவே இருந்ததால், தரை நடக்க முடியாத அளவு மோசமான நிலையில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல். சென்ற முறை போலல்லாமல் கழிப்பிட வசதிகளைக் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் முன்னேற்றியிருக்கிறார்கள். சென்ற முறை தண்ணீர் லாரி வந்து தண்ணீரை பெரிய டேங்கர்களில் ஏற்றிவிட்டுச் செல்லும். இந்தமுறை அங்கேயே போர் போட்டுவிட்டதால், தண்ணீர் பிரச்சினை இல்லை.

இன்னும் உணவு அரங்கம் முற்றிலும் தயாராகவில்லை. எல்லா பதிப்பாளர்களும் அடுக்கி வைத்து விற்பனைக்குத் ஆயத்தமாகியிருக்கிறார்கள். தொடக்கவிழா ஆறு மணிக்குத் தொடங்கியது என்றாலும் பல வாசகர்கள் மதியம் முதலே உள்ளே வரத் தொடங்கியிருந்தார்கள். சில சில்லறை விற்பனைகளும் நிறைய பதிப்பகங்களில் நடந்தன. தொடக்க நாளன்று நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.

எதிர்பார்த்த மாதிரியே அப்துல்கலாம் வரவில்லை. ஆறு மணிக்கு மேடைக்கு அருகில் சற்று நேரம் நின்றிருந்தேன். நல்லி குப்புசாமி செட்டியாரும், பொறிகிழி பெறும் எழுத்தாளர்களும் மேடையில் இருந்தார்கள். யார் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை, விற்பனை அரங்கிற்குள்ளே சென்றுவிட்டேன். திறப்புவிழாவிற்கு கிழக்கு எடிடோரியல் குழு வந்திருந்தது. பாரா தலையில் குல்லோவாடு வினோதமாக வந்திருந்தார். வழக்கம்போல ‘மாவா என் பின்னால் வா’வோடு மல்லுக்காட்டிக்கொண்டிருந்தார். முகில் எதையோ தீவிரவாக யோசித்துக்கொண்டிருந்தார். உடன்பிறப்பும் தோழரும் என்னவோ சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு புகைப்படம் எடுத்துவைத்தேன்.

நிறைய வருடங்களுக்குப் பின்பு க்ரியா பதிப்பகம் ஒரு அரங்கு அமைத்திருக்கிறது. அசத்தலான அரங்குதான். புத்தகங்கள் வெகு குறைவு என்பதால் அழகு வருவது எளிமையானது என்பது ஒருபுறமிருக்க, கொஞ்சம் யோசனையோடு சில செயல்கள் செய்து வைத்திருந்தார்கள். அங்கேயே குடௌன் வைத்துக்கொண்டது. எல்லா பதிப்பாளர்கள் திணறும் விஷயம், புத்தகங்களின் ஸ்டாக் எங்கே வைத்துக்கொள்வது என்பது. க்ரியா பதிப்பகம் ஒரு சிறிய அறை போன்ற வடிவமைப்பை உருவாக்கி, அதனுள்ளே ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும், இது ஆச்சரியமான விஷயம்தான்.

கிழக்கு பதிப்பகத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்று மட்டும். ஒரு நண்பர் அடியாள் புத்தகம் வாங்கினார். அவரிடம் சென்று, ‘இந்தப் புத்தகத்தை எப்படி வாங்குகிறீர்கள், எங்கே இதைப் பற்றிப் படித்தீர்கள்’ என்றேன். ‘என் தொழிலே இதுதான்’ என்றதும் கொஞ்சம் பயந்தேன். அவர் தொடர்ந்து, ‘புத்தகம் படிக்கிறதுதான் என்னோட தொழில்’ என்று சொல்லி என் பயத்தைப் போக்கினார். ‘கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தகங்களை வெளியிடுகிறது’ என்றெல்லாம் பாராட்டிய அவர், ‘எம்.எஸ். புத்தகத்துல… குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, சொல்றேன்… அந்தம்மாவுக்கு நடந்தது 2வது கல்யாணம். அது பத்தி வரவே இல்லை. அது எவ்வளவு முக்கியமான விஷயம்? அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க?’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வாங்கினேன்றதைத் தவிர’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்!

சில எழுத்தாளர்களையும் இன்று காணமுடிந்தது. சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன். சென்ற முறை எனி இந்தியனுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களையும் படம் பிடித்தேன். இம்முறையும் புகைப்படம் எடுப்பது போரடிக்கிறது என்பதால், எழுத்தாளர்களைப் படம் பிடிக்கப்போவதில்லை. (சில விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு!) பொதுவான புகைப்படங்களை எடுக்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.

From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009

(எடிட்டோரியல் (அன்பான!) மிரட்டல் குழுவும், தொப்பியுடன் அதன் தலைவரும். இடது ஓரத்தில் இருப்பவர் NHMன் விற்பனை பொது மேலாளர். அவர் நீங்கலாக!)

From day1_cbf2009

க்ரியாவின் ஸ்டாக் ரூம்!

From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009

கல்யாண வீடு போல அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அரங்கின் முகப்பு

From day1_cbf2009

என் வாழ்க்கை என் தேசம் அல்லயன்ஸ்!

From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009
From day1_cbf2009

Share