குதலைக் குறிப்புகள் – 8 (குழந்தைப் பேறின்மை என்னும் பெரும்பூதம்)

‘அவன் அரண்டு போய் உட்கார்ந்திருந்தான். அவனது நடுமண்டையில் யாரோ நச்சென்று கத்தியால் குத்தியதைப் போன்றிருந்தது. அனிச்சையாகத் தலையைத் தடவிக்கொண்டான். எனக்கு ஏன் இப்படி? இதற்கு வாய்ப்பே இல்லையே. என் குடும்பத்தில் யாருக்கும் இப்படி இல்லையே’ – கிழக்கு ஸ்டைலில் இப்படி ஆரம்பிக்கலாம். இரண்டு மூன்று வரிகளில் அத்தனையும் புலப்பட்டுவிடும். ஒவ்வொரு குடும்பத்திலும் துரத்திக்கொண்டிருக்கும் குழந்தைப் பேறின்மையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

பெரும்பாலான குடும்பங்களில் இந்தப் பேச்சை நாம் கேட்டிருப்போம். ‘ஒரு மாசம்தான் தள்ளிப் போச்சு. முதல் மாசமே உண்டாயிட்டா.’ இப்படி நிகழாத வீட்டில் நிச்சயம் ‘நம்ப குடும்பத்துல இப்படி இல்லியே. புள்ளைகளுக்கா பஞ்சம்’ என்று அடுக்குவதைக் கேட்டிருக்கலாம். ஒருவகையில் கல்யாணம் ஆன முதல் மாதத்தில் கருத்தரித்துவிடுவது வீரமாக இங்கே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. ’ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்த்தென்ன’ என்பதெல்லாம் இப்படி உருவாக்கப்பட்டதுதான். தமிழர்களின் பொதுப்புத்தியை உருவாக்கும் திரைப்படங்களில் இக்கருத்துருவாக்கம் இருப்பதை இன்றும் பார்க்கலாம். தனியறை கொடுத்து, பழம் கொடுத்து, பால் கொடுத்து, நறுமணம் கொடுத்து நடக்கும் ‘இரவு’களுக்குப் பின்னரும் கருத்தரிக்காது. ஆனால் ஓடும் ரயிலில் ஒரு வில்லன் ஒரு பெண்ணைக் கற்பழிப்பான். அவள் கருத்தரித்துவிடுவாள். இத்தனைக்கும் கடுமையாகக் கத்தி ஆர்பாட்டம் செய்திருப்பாள் ஹீரோயின். இப்படி ஒரு தொடுதலில் கருத்தரிப்பதை ஒரு பெருமையாகவும் வீரமாகவும் ஆக்கி வைத்திருக்கிறது நம் சமூகம். யதார்த்தத்தில் இதில் ஒரு எருமையும் கிடையாது என்பதே உண்மை.

இப்படி உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்தில் பந்தாடப்படுபவர்கள் யார்? உயிரோசையில் எழுதிய கட்டுரையில் வாஸந்தி கேட்கிறார், ‘உடலுறவு என்பது குழந்தைப் பேறு என்னும் புனிதத்தை முன்னிறுத்தி என்றால் குழந்தைப் பேறில்லாத கணவனும் மனைவியும் உறவு கொள்வது புனிதமற்ற செயலா?’ என. (நினைவிலிருந்து சொல்கிறேன்.) வாஸந்தி எழுதிய கட்டுரை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவானது. இதன் பின்னணியில் குழந்தைப் பேற்றின் புனிதத்தன்மை என்னும் ஒரு பிரதியையும் நாம் வாசிக்கலாம். நம் சமூகம் குழந்தைப் பேறுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த முக்கியத்துவம் தவறு என்பதல்ல. ஆனால் அந்த முக்கியத்துவத்துக்கு எதிராக எழும் மனோபாவம் உண்டாக்கும் பதற்றமும், முத்திரையும் அதிக விலையைக் கேட்டுவிடுகின்றன.

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் (குழந்தைகளைப் பற்றிப் பேசிவிட்டு இக்கு’ர’லைச் சொல்லாவிட்டால் எவன் மதிப்பான்?); அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அழாவிய கூழ் – இரண்டிலும் வள்ளுவேறு சும்மா இருக்காமல் அதிகம் தம்மடித்துவிட்டார். பிடித்துக்கொண்டார்கள் கலாசார உருவாக்கிகள். தம் மக்கள் என்பது சும்மாவா. ஒரு அறிஞர் தம் மக்கள் என்பது பெற்ற மக்களை மட்டும் அல்ல, வளர்த்த மக்களையும் சேர்த்தே என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். யாரும் காதுகொடுக்கவில்லை. தம் மக்கள், தம் மக்களேதான் என்று தம்மை அழுத்திவிட்டார்கள் நம்-தம் மக்கள்.

குழந்தைப் பேறுக்கும் ஆண்மைக்கும் (இதில் பெண்களின் நிலையும் கொடுமையானதே. ஆனால் நான் ஆண்களைப் பற்றி மட்டுமே பேசப்போகிறேன்!) நம் சமூகம் கொடுத்திருக்கும் மதிப்பு கொஞ்சம் அதீதமானது. ஆண்மையும் வீரமும் ஒன்றல்ல. இங்கே வீரம் எப்போதும் ஆண்மையுடன் சம்பந்தப்படுத்தியே பார்க்கப்பட்டுள்ளது. ஒருவகையில் இது உலகம் முழுக்கவும் இப்படித்தான் இருக்கிறது.

நான் பதினேழு வயதாகும்போது குழந்தைப் பேறு பற்றிய பல்வேறு குழப்பத்திலும் பயத்திலும் இருந்தேன். நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கொண்டிருக்கும்போது நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சீனியர் நண்பர் இன்னொரு நண்பரைப் பார்த்து ‘காச அமுக்காதல, சிவன் சொத்து குல நாசம் அப்புறம் புள்ள பொறக்காது’ என்றார். அதற்கு அந்த நண்பர் ‘திருடாட்டியும் குழந்தைப் பொறக்கும்னு எனக்கு நம்பிக்கையில்லை’ என்றார். என்னைப் போலவே இப்பயம் எல்லாருக்குமே இருக்கிறது என்பதை நினைத்துக்கொண்டேன். இப்பயம் எனக்கு வந்த வயது பதினேழு. குழந்தை பெறாவிட்டால் எழும் ஒருவித பயத்தை எனது பதினேழு வயதில் நான் மனத்துக்குள் வைத்திருந்தேன்!

இதில் கல்யாணம் ஆன ஒன்றிரண்டு மாதங்கள் காமத்தின் பிடியில் காலம் கழிந்துவிடும்போது எல்லாமே இன்பமயம்தான். இரண்டு மாதங்கள் கழியும் நிலையில் ஒவ்வொரு வீட்டிலிருந்து கேள்விகள் வரத்தொடங்கும், என்ன விசேஷமா என்று. இந்த ‘என்ன விசேஷமா, சும்மாதான் இருக்காளா’ என்கிற கேள்விகள் எழுப்பும் விநோதமான எண்ணங்களைச் சொல்லில் வடிக்கமுடியாது. இப்படியே இன்னும் நான்கைந்து மாதங்கள் சென்றால், ஒருவிதமான உளப்பிரச்சினையும் உள்ளூர அரிக்கத் தொடங்கும்.

நமக்குப் பின்பு கல்யாணம் ஆன யாரேனும் ஒருவருக்கு ஒரு மாதத்திலெல்லாம் கருத்தரிப்பு நிகழ்ந்துவிட்டால், இந்த மனம் அடையும் உணர்வைச் சொல்லமுடியாது. அது சந்தோஷமா, கையாலாகாதத்தனமா, கோபமா, பொறாமையா – எதுவென்றே சொல்லமுடியாது. அதுவும் ஒரே வீட்டில் இது நடந்துவிட்டால் வரும் நெருக்கடி இன்னும் அதிகமானது. நெருக்கடி நெருக்கி அடி என்ற பஜனையெல்லாம் சுத்தமாக எடுபடாது.

இதைத் தவிர்க்க ஒருவகையில் நாம்தான் தயாராக இருக்கவேண்டும். குழந்தை என்பது நிச்சயம் தேவையான ஒன்றே. குழந்தையின் மூலம் நாம் அடையும் சந்தோஷமும் பெருமையும் சந்தேகமேயில்லாமல் மேன்மையானதே. ஆனால், நாம் நம் மனதை கொஞ்சம் பக்குவப்படுத்தவும் பழகிக்கொள்ளவேண்டும். என் கல்யாணத்துக்கு முன்பே, நமக்குக் குழந்தை இல்லையென்றால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். (ஒரு குழந்தை பிறந்தாலும் இன்னொரு குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். இதில் நிகழ்ந்த பிரச்சினைகள் பெரிய கதை!) இதனை எல்லாருமே ஒரு முடிவாகக் கொள்ளலாம். என் நெருங்கிய சொந்தக்காரருக்கு குழந்தை இல்லை. எத்தனையோ பேசிப் பார்த்தும் அவரை ஒரு குழந்தையை தத்தெடுக்க சம்மதிக்க வைக்கவே முடியவில்லை. கேட்டால் விதவிதமான காரணங்கள் சொல்லுவார். ‘நம்மால ஒழுங்கா வளர்க்க முடியலைன்னா’ என்பார். உங்களுக்கே ஒரு குழந்தை பிறந்தால் எப்படி வளர்ப்பீர்க்ள் என்றால், அது நம்ம குழந்தைல என்பார். இன்னொரு சமயம் ‘நீங்கள்லாம் பின்னாடி அந்தக்க் குழந்தையை ஒதுக்கிட்டீங்கன்னா’ என்று பிரச்சினையை நம் பக்கம் திருப்புவார். கடைசியில் அவருக்கு கிட்டத்தட்ட 50 வயது ஆகியும்விட்டது. இப்போது குழந்தையைத் தத்து எடுத்தாலும் சரியாக வளர்க்கமுடியாது என்று பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.

இன்னும் சிலர் சொல்வார்கள், ‘எனக்குத் தெரிஞ்ச ஒருத்திக்கு 12 வருஷம் கழிச்சு குழந்தை பிறந்திருக்கு’ என்று. இதன் சதவீதம் எவ்வளவு என்று யோசிக்க மறுப்பார்கள். இன்னும் சிலர் குழந்தைக்காக லட்சம் லட்சமாகச் செலவழிப்பார்கள். ஆனால் ஒரு குழந்தையைத் தத்து எடுப்பதைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். இது வெறும் சாத்தான் வேதும் ஓதமல்ல. நான் இரண்டாவது குழந்தையைத் தத்து எடுக்கலாம் எனத்தான் நினைத்திருந்தேன். ஆனால் வீட்டில் இதற்கு சம்மதிக்க வைக்கவே முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் தோல்விதான். வீட்டில் என்றால், என் மனைவியல்ல. அவளுக்கு நான் சொல்லும் எதுவும் சம்மதமே. ஆனால் என் அம்மாவை என்னால் சரிக்கட்ட முடியவில்லை. அப்படி செஞ்சா நான் வீட்ல இருக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நேற்று பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் திடீரென்று சொன்னார், அவரது மகன் தத்துப் பையன் என்று. ஆச்சரியமாக இருந்தது. அவருக்குப் பிறந்த ஒரு பெண் உண்டு. இரண்டாவதாக ஒரு பையனைத் தத்தெடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு. இப்போது என் வீட்டில் நிகழந்தது போலவே அங்கேயும் பிரச்சினை. ஆனால் நண்பர் உறுதியாக இருந்துவிட்டார். குழந்தையைத் தூக்கிக்கொண்டு வரும்போது, மிகவும் ஆர்தடக்ஸான பாட்டி சொன்னதாம், ‘படியைத் தாண்டி ஆத்துக்கு வந்துடுச்சோன்னா இனிமே நம்ம கோந்தடா’ என்று. ஒரு சிறுகதையின் உன்னதமான உச்சகட்டத்தை வாசித்ததுபோலக் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘என் பொண்ணையும் இப்படி செஞ்சிருக்கலாம்’ என்று ஜெயகாந்தனின் அம்மா கதாபாத்திரம் சொல்வதுபோல, ‘என் அம்மாவும் இப்படி ஒத்துக்கிட்டு இருந்திருக்கலாம்’ என்று தோன்றாமல் இல்லை.

குழந்தையை இப்படித் தத்து எடுப்பது என்பது மோசமானதோ, ஒத்துவராததோ அல்ல. ஒரு குழந்தையின் கள்ளமற்ற சிரிப்பு உண்மையான மனத்தை எளிதில் கரைத்துவிடக்கூடியதுதான் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் இதனை எப்படி என் உறவினர்களுக்குப் புரியவைப்பது என்பதுதான் தெரியவில்லை. எனக்காவது முழங்காலில் பசி. என் நண்பன் ஒருவன் வீட்டில் மூன்று அண்ணன் தம்பிகள். அவர்களுக்கு சித்தி பையன்கள் மூன்று பேர். மொத்தம் ஆறு அண்ணன் தம்பிகள் எனச் சொல்லலாம். ஆறு பேருக்கும் பிள்ளையில்லை. ஆறு பேரும் இதுவரை ஒரு குழந்தையைத் தத்து எடுப்பது பற்றி யோசிக்கவில்லை. தத்து எடுப்பது மட்டுமல்ல, முன்னேறிய அறிவியல் உலகத்தில் இருக்கும் எந்த வித பயனையும் அவர்கள் விரும்பவில்லை. இயற்கையான கருத்தரிப்பு மூலம் பிறக்கும் பிள்ளை ஒன்றே நம் பிள்ளை என்கிற மனோபாவம் அவர்கள் குடும்பம் முழுதும் பரவிக் கிடக்கிறது. மிக நெருங்கிய நண்பர்களிடத்தில் சொல்லிப் பார்க்கலாம். மிக நெருங்கிய உறவினரிடத்தில் சொல்லிப் பார்க்கலாம். மற்றவர்களிடம் இதைச் சொல்லமுடியாது. எனக்குள்ளே பேசிக்கொள்ளவேண்டியதுதான் – இப்படி.

சில ப்ரிஸ்கிரிப்ஷன்கள்:

01. கல்யாணம் ஆன தம்பதிகள் யாரையேனும் பார்க்க நேர்ந்தால், அவர்களுக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதங்களுக்கு மேல் இருந்தால், ஏதாவது விசேஷமா, ப்ளானிங்கா என்று கேட்காமல் இருக்கவேண்டும்.

02. இதே விஷயத்தை நம் வீட்டில் இறைவன் படைத்து உலவவிட்டிருக்கும் கிழவிகளுக்கும் அத்தைகளுக்கும் சொல்லி வைக்கவேண்டும்.

03. நல்ல டாக்டரைப் பார்க்கலாமே என்றெல்லாம் சுற்றி வளைத்துப் பேசாமல் இருக்கவேண்டும். நிச்சயம் நல்ல டாக்டரைப் பார்க்கவேண்டும் என்று அவர்களுக்கே தெரிந்திருக்கும்.

04. நீங்க ஏன் தத்தெடுக்கக்கூடாது என்கிற அட்வைஸெல்லாம் தேவையில்லை. தத்து எடுத்து வளர்ப்பது என்பது கடையில் காய்கறி வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு வருவது போன்றதல்ல. நிறைய உள்ளங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.

05. குழந்தைப் பேறின்மை என்பது ஒரு பெரிய விஷயமல்ல என்கிற ஒரு பொதுவிவாதத்தைத் தொடர்ந்து நிகழ்த்தலாம். பெரிய பதற்றத்தை தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு இது இருக்க உதவும்.

06. ஸ்பெர்ம் டெஸ்ட் பண்ணியா, கஷ்டம்ல, எத்தனை கவுண்ட் இருக்கு என்றெல்லாம் படம் போடாமல் இருக்கவேண்டும்.

Share

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – முதலாளித்துவ பயங்கரவாதம்

பயங்கரவாதம் என்றதும் தோழர்கள்தான் பேசப்போகிறார்கள் என்று தெரிந்திருக்கும் என நான் எழுதினால் நான் தேவையில்லாமல் தோழர்களை கிண்டல் செய்வதாக கமெண்ட்டுவார்கள். எனவே மாற்றிச் சொல்கிறேன். தோழர்கள் வந்தாலே பயங்கரவாதம் பற்றிப் பேசுவார்கள் என்று நீங்கள் யூகித்தது சரிதான். (நல்ல எண்ணத்தில்தான்!) முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிப் படுபயங்கரமாகப் பேசப்போகிறார்கள். அனைத்துத் தோழர்களும், ‘நண்பர்’களும் நிச்சயம் வாருங்கள். :))

அறிவிப்பு:

21 ஜூலை 2009 (செவ்வாய்) அன்று கிழக்கு மொட்டைமாடியில் முதலாளித்துவ பயங்கரவாதம் என்னும் தலைப்பில் உரையாற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து இருவர் வருகை தருகிறார்கள்.

சுப. தங்கராசு
மாநிலப் பொதுச் செயலாளர்
பு.ஜ.தொ.மு.

பா. விஜயகுமார்
மாநிலப் பொருளாளர்
பு.ஜ.தொ.மு.

நேரம் : மாலை 6.15

நிறைய கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம். அனைவரும் வருக!

Share

குதலைக் குறிப்புகள் – 7

குதலையில் தெரு நாய்களைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி என்று முன்பே நினைத்திருக்கிறேன். ஆனால் நாய்களைப் பற்றி நினைத்தவுடனே எழுதிவிடமுடியாது என்பதை உணர்த்தினார் ஒரு நண்பர். காஞ்சிப் பெரியவர் நாய்களைப் பற்றி (நாயர் என்று மரியாதையாகத்தான் சொல்லவேண்டும். ஆனால் ஜாதிப்பிரச்சினையாகிவிடும் என்பதால் இப்போதைக்கு நாய்கள் என்றே இருக்கட்டும் என விட்டுவைக்கிறேன்) ‘அவை வேதஸ்வரூபம்’ என்று சொல்லியுள்ளார் என்று எடுத்துச்சொல்லி என் ஊனக் கண்ணைத் திறந்து வைத்தார் அந்நண்பர். இருந்தாலும் மீண்டும் ஊனக் கண் தோன்றாமலில்லை. போதாக்குறைக்கு என் இன்னொரு நண்பரும் இப்படி ஒரு மடல் அனுப்பி என்னை உசுப்பிவிட்டார்.

“தனித்து ஒரே ஒரு ஆளாகப் பார்க்கும்போது சோகம் ததும்பும், கருணை பொங்கும் இரக்கமே வடிவான உயிரினமாகத் தென்படும் வேதஸ்வரூபம், இரவில் ஒரு பத்துப்
பதினைந்து இதர வேதஸ்வரூபங்களைத் துணைக்கழைத்துக் கொண்டுவந்தவுடன், மெயின் கெம்ப் ஸ்வரூபமாக ஸ்வரூப மாற்றம் பெற்றுவிடுகிறது.

சென்ற வருடத்தில் ஒரே வாரத்தில் நான்கு குழந்தைகள் பகல் நேரத்திலேயே வேதஸ்வரூபங்களுக்கு பலியாகிவிட, ஊர் முழுவதும் வேதஸ்வரூபங்கள் வேட்டையாடப்பட்டன. இத்தனைக்கும் இந்த நான்கு குழந்தைகளில் இரண்டே இரண்டு
குழந்தைகள்தான் பாதுகாப்பற்ற சேரிக்குழந்தைகள். ஒரு குழந்தை நல்ல பாதுகாப்பான குடியிருப்புப் பகுதியில் வசித்த மத்திய வர்க்கத்துக் குடும்பத்துக் குழந்தை. தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது பத்து வேதஸ்வரூபங்கள் தூக்கிச்சென்றுவிட்டன. வே.ஸ்வ-க்கு பலியான இன்னொரு குழந்தை கட்டடத்தொழிலாளியின் குழந்தை. நான்கு தொழிலாளிகளின் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது வேட்டையாடப்பட்டவை.

இதற்கு நாம் வேதஸ்வரூபங்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. உண்மையில் குற்றமே சொல்லக்கூடாது. அந்தந்த பகுதி மக்கள் வேதஸ்வரூபங்களை அன்போடு நடத்தாமல், அதேசமயம் மோசமாகவும் நடத்தாமல் விட்டேத்தியாக எல்லாம் பிரம்மம் என்றிருந்து விட்டார்கள். சில இறைச்சிக்கடைக்காரார்கள் இறைச்சி மிச்சங்களை அருகிலிருந்த குப்பைக்குழியில் மலை போல் குவித்து வைக்க,அவற்றை ருசி பார்த்துவிட்ட வேதஸ்வரூபங்களுக்கு இரத்தவாடை பிடித்துப்போய் குழந்தைகளை வேட்டையாடியதாகவும் காரணம் சொன்னார்கள்.

ஆனந்தவிகடன், நக்கீரன் இதெல்லாம் வே.ஸ்வரூபங்களும் படிக்கின்றனவா என்று தெரியாது. அவர்களுக்கும் இரவு நேரத்தில் வீடு திரும்பும் சாஃப்ட்வேர் மக்களை மிகவும் பிடிக்கும். பைக்கில் வீடு திரும்பும் ஆட்களை பத்துப்பதினைந்து வேதஸ்வரூபங்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு கொலை வெறியோடு துரத்தும். எல்லாம் பிரம்மமே என்று வண்டியோட்டிகளும் எந்தப் பதற்றமும் அடையாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால் மட்டுமே தப்பிக்க முடியும். அதிலும் இரு சக்கர வாகனங்களுக்கு நடுவே விழுந்து வண்டியோட்டியை தலைகுப்புற விழச்செய்வது இந்த ஸ்வரூபங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அப்படி இவர்கள் வண்டியில் அடிபட்டு விட்டாலும், உடம்பைப் பந்து போலாக்கித் தப்பித்துப் போவதில் ஸ்வரூபங்கள் கில்லாடிகள்.

நான் வேலைக்குச் சேர்ந்து ஒருவருடமிருக்கும். இருட்டுக்குப் பழகுவது போல அப்போதுதான் எனக்கு அந்த ஊர் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக ஆரம்பித்திருந்தது. மேலும் இப்போது போலில்லாமல் அப்போது நிறைய நண்பர்கள் ஒன்றாக இருப்போம். கல்லூரியின் மிச்ச சொச்ச சந்தோஷமான நீட்சி நாட்கள் அவை. எனக்கு நிறைய வடஇந்திய நண்பர்களும் கிடைத்தார்கள். என் நண்பனின் நண்பன் ஒரு பிஹாரி. நண்பர்களுடனான பார்ட்டியில் அறிமுகமானவன். எனக்கும் நண்பனாகிப்போனான்.

அவன் புதிதாக வாங்கிய More smiles per hour டிவிஎஸ் விக்டரில் ஒரு நாள் பின்னிரவு அவனும், அவன் நண்பனும் வேலையிலிருந்து லேட்டாக வீடு திரும்பினார்கள். மெயின் ரோடிலிருந்து திரும்பியதும் பல வேதஸ்வரூபங்கள் அவனைத் துரத்தத் தொடங்கின. அவைகளிடமிருந்து தப்பித்த்டு வேகமாக ஓட்டிய அவன் ஒரு கல் தடுக்கி வண்டி தாறுமாறாக ஓடி நிலைதடுமாறி பைக்கிலிருந்து விழுந்து கழுத்தில் பலத்த அடிபட்டு ஸ்பாட்டிலேயே பிரம்மத்துடன் கலந்துவிட்டான். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த நண்பன் முகமெல்லாம் சிராய்க்கப்பட்டு, ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் குழியில் மயங்கிய நிலையில் அடுத்தநாள் கண்டெடுக்கப்பட்டான்.

பிஹாரிகளைப் பற்றிய ஒரு நட்பான உருவத்தை எனக்குள் உருவாக்கியவன் அந்த நண்பன். வார்த்தைக்கு வார்த்தை சாலா என அழைத்து செளத் இண்டியன் உணவு வகைகளைப் பற்றிய அபத்த சந்தேகங்களை எழுப்பிய அவன் எனக்கு சொல்லித்தந்த BSDK என்ற கெட்ட வார்த்தைய அநிச்சையாக இன்று காலை உச்சரித்தேன்.

சொல்ல மறந்துவிட்டேன். வேத ஸ்வரூபங்கள் பிரம்மத்துக்கு அனுப்பி வைத்த அவனுடைய பெற்றோருக்கு ஒரே பையன். அவர்கள் கதறிய கதறலைக் கேட்ட நண்பர்கள் நாங்கள் ஒருமாதம் வரை ஒரு வித சோகநிலையுடனே வழக்கமான உற்சாகங்கள் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தோம்.”

’இதைப் போல, நகைச்சுவை கலந்த சோகத்துடன், என் போல சிறப்பாக இல்லாவிட்டாலும் சுமாராகவாவது நீங்கள் வேதஸ்வரூபங்களைப் பற்றி எழுதவேண்டாமா’ என்று கேட்டதும், எனது ஞானக்கண் மறைந்து, ஊனக் கண் திறந்துகொண்ட நேரத்தில், இன்னொரு நண்பர் நமது பாரம்பரியம், கலாசாரம், பெருமை எல்லாவற்றையும் எடுத்துக்காட்டி, மகாபாரதமே நாயில் தொடங்கி நாயில் முடிகிறது என்கிற ரேஞ்சுக்கு மிரட்டவும், எனது ஞானக்கண்ணை மீண்டும் திறந்துவைத்துக்கொண்டேன். இனி இந்நாய்களைப் பற்றி வாயே திறப்பதில்லை என்றெல்லாம் சபதம் எடுத்திருந்தேன். இருந்தாலும், வசூல்ராஜா எம் பி பி எஸ்ஸில் யாருக்கும் கண்ணடித்துவிட்டு கண்மூடிக்கொள்ளும் ஒரு நோயாளி போல, என்னுள் இந்த வேதஸ்வரூபம் பற்றிய கண் சிமிட்டல் இல்லாமல் இல்லை.

வேதஸ்வரூபங்களைப் பற்றி இலேசாகவும் நினைத்துவிடமுடியாது என்பது எனக்குத் தெரியும். நான் TACல் வேலை பார்க்கும்போது, தூத்துக்குடியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அங்கு செல்லும் வழியில் ஒரு நாய் (வேதஸ்வரூபியை சிறிது நேரத்துக்கு நாய் என்று அழைக்கவேண்டியிருக்கிறது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் என்னை மன்னிக்கவேண்டும்!) என் வழியில் அடிக்கடி குறுக்கிட்டது. என்னைப் பார்த்து முன்னே வரும். சும்மா வந்தால் பரவாயில்லை. மிக மெல்லிய அடிக்குரலில் ஓர் உறுமல் கேட்டுக்கொண்டே இருக்கும். வாய் திறந்து, பற்கள் தெரிய, இரண்டு கடவாய்களிலும் நீர் வழிய கோபக் கண்களோடே எப்போதும் பார்க்கும். ஒவ்வொருமுறை செல்லும்போதும் பயந்து பயந்தே செல்வேன். இதிலிருந்து மீளும் வழியே தெரியவில்லை. எனக்கு மட்டுமில்லை, என்னுடன் இருந்த நண்பனுக்கும் இதே பிரச்சினை. அந்தவகையில் அந்த நாய் மீது எனக்கு மரியாதை இருந்தது. என்னை மட்டுமில்லாமல், எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் நாயைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா என்ன? கிட்டத்தட்ட ஆறுமாதங்களாக இப்படியே மிரட்டல். ஆனால் என்னையும் என் நண்பனையும் கடிக்கவில்லை. ஒருதடவை என் கால் வரையில் வந்து முகர்ந்துபார்த்துவிட்டு, வாடை பிடித்துவிட்டதோ என்னவோ, கடிக்காமல் விட்டுவிட்டது. பிஸ்கெட் எல்லாம் போட்டுப் பார்த்தேன். தின்றுவிட்டு கொஞ்சம் தெம்புடன் குலைத்தது.

பின்பொருநாள் வெளியில் சாப்பிட்டுவிட்டு ஒரு பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டு வெறும் பாட்டிலைத் தட்டிக்கொண்டே வந்தேன். அது ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில். இப்போது அக்வாஃபினா வரும் பாட்டிலை ஒத்தது. லேசாகத் தட்டினாலே நல்ல சத்தம் கேட்கும். தட்டிக்கொண்டே வந்து என் வீட்டுப்பக்கம் திரும்பினேன். திடீரென்று ஒரு புதருக்குள் இருந்து அந்த நாய் பயந்து அலறி ஓடியது. ஏன் ஓடியது என்று தேடித் தேடிப் பார்த்தேன். நான் தட்டிய பாட்டில் எழுப்பிய ஒலிக்குப் பயந்துதான் ஓடியிருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் தட்டினேன். அது மீண்டும் ஓடியது. தூரத்தில் இருந்தே குலைத்தது. அட, இத்தனை பயந்தாங்கொள்ளி நாய்க்கா நாம் இவ்வளவு பயந்தோம் என்றே எனக்கு வெட்கமாகிவிட்டது. பின்பு அந்த நாயை விரட்டி லேசாக சத்தம் போட்டால் போதும் என்றாகிவிட்டது.

ஒருவகையில் எல்லா தெரு தேவஸ்வரூபங்களும் இப்படித்தான் இருக்கின்றன. ஒரு மிரட்டு லேசாக மிரட்டினால் ஓடிவிடுகின்றன. ஆனால் ஒரு தெருவில் இரவில் நடந்துவரும்போது இருபது முப்பது ஸ்வரூபிகள் இருப்பதைப் பார்த்தால் உண்மையிலேயே பயம் வந்துவிடுகிறது. நாம் விரட்டக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்வரூபிகள். இந்த நாய்களை விரட்டினால் ஓடிவிடும் என்று பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ தெரிவதில்லை. ஒருவித பயத்தோடு நடக்கும்போது ஏழறிவு கொண்ட வேதஸ்வரூபங்கள் கண்டுகொண்டுவிடுகின்றன, ‘இவன் நமக்கு அடிமைடா’ என்று. துரத்தத் தொடங்கிவிடுகின்றன. இந்த வேதஸ்வரூபங்களுக்கு நடப்பவரை விட, பைக்கில் வருபவர்களைக் கண்டால் மிகவும் பிடித்துவிடுகிறது. ஒரே விரட்டுதான்.

நேற்று காலையில் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பையனை ஒரு வேதஸ்வரூபி கடித்துவிட்டார். தெருவே அல்லோகலப்பட்டது. அந்தப் பையனைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். கிட்டத்தட்ட மதியம்தான் அந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். தெருவே கூடி நிற்க, ஒரு வாளியில் நீரை வைத்து திருஷ்டி கழித்துக்கொண்டிருந்தார் அந்தப் பையனின் தாய். தூரத்தில் அவனைக் கடித்த ஸ்வரூபி, மேலே என் நண்பர் சொல்லியிருப்பது போல, அத்தனை சாதுவாக, பாவமான கண்களுடன், ‘என்னைப் பாத்தா கடிக்கிற மாதிரியா இருக்கு சொல்லுங்க’ என்று வாலாட்டிக்கொண்டு சாந்தஸ்வரூபியாக உட்கார்ந்திருந்தார்.

அந்தப் பையனைப் பார்த்தேன். நடு உச்சந்தலையில் ஒரு கடி. கழுத்தில் ஒரு கடி. கழுத்தைச் சுற்றிக் கட்டு. அது அப்படியே நீண்டு தலைவரையில் சென்றது. என் உடம்பில் ஓர் உதறல். என் ஞானக்கண் மறைந்து ஊனக்கண் ஒன்று திறந்துகொண்டது. ஓர் இலக்கியவாதி என்றால் அறச்சீற்றம் வேண்டாமா? சாரு – சிவரமான் சண்டையில்தான் கருத்துச் சொல்ல வக்கில்லை என்றாலும், இந்த ஸ்வரூபியின் அத்துமீறலைக் கண்டிக்கக்கூடவா தைரியம் கிடையாது?

அந்தப் பையனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ‘லீவு அன்னைக்கு ஏன் பையனை வெளியில் விட்ட’ என்று சிலர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கேட்பதும் சரிதான். ஞாயிறு லீவு என்று வேதஸ்வரூபிகளுக்கு யாராவது சொல்லித் தந்தார்களா? இப்படி சமூக அக்கறையில்லாமல் வேதஸ்வரூபிகளைப் புறக்கணித்திருப்பது சமூகக் குற்றமல்லவா?

இந்த வேதஸ்வரூபிகள் கூட்டமாகச் சேர்ந்து செய்யும் தொல்லையும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு மாதத்துக்கு முன்னால் இரண்டு வேதஸ்வரூபிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இரண்டு ஸ்வரூபிகளின் உடலெங்கும் இரத்தம் வழிந்து ஓட, கம்யூனிஸ்டுகள் போல கடும் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரு பெரிய கூட்டமே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தது என்பதனை அறிந்துகொண்டு சண்டை போட்டார்களோ என்னவோ தெரியாது, சண்டை என்றால் உங்கவீட்டுச் சண்டை எங்க வீட்டுச் சண்டை இல்லை. கடுமையான சண்டை. கல்லைக் கொண்டு எறிந்தாலும் வேதஸ்வரூபிகள் சண்டை போடுவதை நிறுத்துவதில்லை. ‘நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி’ என்ற பழமொழியெல்லாம் தெரிந்த மக்கள் ஓடிப்போய்விட்டார்கள். உண்மையில் இந்த வேதஸ்வரூபிகள் தங்கள் சண்டை வேகத்தில் நம்மைக் கடித்துவைத்தால் என்ன செய்வது என்று எனக்கும் திகிலாகத்தான் இருந்தது. அதான் கம்யூனிஸ்டுகள் போன்ற சண்டை என்றேனே, ஆழமான விவாதம்தான்.

எங்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் ஒரு வேதஸ்வரூபி திரிந்துகொண்டிருப்பார். ஓர் எலி ஓடும் சத்தம் கேட்டாலும் அரண்டு போய் எங்காவது ஒளிந்துகொள்வார். நான் கையைத் தூக்கினாலே அடங்கி ஒடுங்கி ஈனஸ்வரத்தில் கத்துவார். அப்படிப்பட்ட பயந்த சுபாவமுடைய அவரும் ஒருநாள் ஒரு குழந்தையைக் கடிக்க இருந்தார். மயிரிழையில் தப்பித்தது அக்குழந்தை. இப்படி பயந்த சுபாவமுடைய வேதஸ்வரூபிகளே இப்படி என்றால், மற்ற விரமிகு வேதஸ்வரூபிகளைப் பற்றி என்ன சொல்ல?

எங்கள் பகுதி கவுன்சிலர் ரொம்ப நல்லவர். வேதஸ்வரூபிகள் என்று பெரியவர் சொன்னது அவருக்கும் தெரியுமோ என்னவோ, எத்தனை முறை சொல்லியும் அவர் இந்த வேதஸ்வரூபிகளை இல்லாமலாக்க எதையுமே செய்யவில்லை. ‘ஒரு மாசத்துல பெருகிடுதுங்க சார்’ என்பார்.

தினமும் பத்திரிகையில் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக ஒரு பையனையாவது ஒரு நாய் கடித்துவிடுவதைப் படிக்கிறோம். ஆனால் இதுகுறித்த கடுமையான நடவடிக்கையை எந்த ஓர் அரசும் எடுப்பதில்லை. மேனகா காந்தி கண்மூடித்தனமாக எல்லா உயிர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்கிறார். இப்படிப்பட்ட நாய்களை என்ன செய்வது? இவற்றுக்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்பது ஒரு குரல். இந்த நாய்களை என்ன செய்வது என்பது பற்றி ஏதும் பேசில்லை. எல்லா நாய்களையும் பாதுகாத்துப் போஷிக்கவும் முடியாது. கொன்றுவிடவேண்டியதுதான். இந்த நாய்களால் ஏற்படும் தொல்லைகளையும், உயிரிழப்பையும் பார்க்கும்போது, இவற்றைக் கொல்வதில் தப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

இப்படி நாய்களைக் கொல்லலாம் என்று எழுதியதைக் கண்டு என் மீது ‘மனிதாபிமானற்றவன்’ என்கிற கண்டனங்கள் பாயக்கூடும். இருந்தாலும் என்ன செய்வது, வேறு வழியே இல்லை, இந்த வேதஸ்வரூபிகளைக் கொன்றுவிடவேண்டியதுதான்.

நான் முன்பு சொன்னதுபோல இன்றும் என் ஊனக்கண் திறந்துகொண்டுவிட்டதை உணர்கிறேன். இதை போஸ்ட் செய்துவிட்டு, பெரியவர் புகைப்படத்துக்கு நேராக சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிடவேண்டியதுதான். வேதஸ்வரூபிகளைக் கொல்லச் சொன்னதற்கு அவர் மன்னிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் கொன்றுவிடுவதைத் தவிர வேறு வழியிருக்குமா என எனக்கும் தெரியவில்லை. ஒருதடவைக் கொன்றுவிட்டு, பின்பு அவை பெருகாமல் பார்த்துக்கொண்டுவிட்டால் பிரச்சினை கட்டுக்குள் வந்துவிடும். மனுக் கொடுக்கப் போகலாம் என்றால், அந்தத் தெரு முழுவதும் இதே பிரச்சினைதான் என்கிறார் கௌன்சிலர்.

Share

குதலைக் குறிப்புகள் – 6

நீண்ட நாள்கள் ஆயிற்று எவ்வித சிந்தனையுமின்றி கைபோன போக்கில் ஒரு பதிவு எழுதி. இதனை கொஞ்சம் கூட அநாகரிகமே இல்லாமல் பதிவுலகில் மொக்கை என்று அழைக்கிறார்கள். ‘பிக்பாக்கெட் அடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அடிக்கிறது நானா இருக்கணும்’ என்ற அடிப்படையில் இன்றைய ‘குதலை மொக்கை’ மேலே செல்லப்போகிறது.

பள்ளிக்குச் செல்லுதல் பற்றி. சென்ற ஆண்டு என் மகன் ப்ரீகேஜியில் படித்தான். முதல்நாள் அவனைக் கொண்டு போய் சேர்த்தபோது, அவனுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. இரண்டரை வயதான குழந்தைகளின் கூட்டம் விஜயதசமி அன்று அப்பள்ளியில் நிரம்பிக் கிடந்தது. ஆப்பிள்களால் அலங்கரிங்கப்பட்ட ஒரு வகுப்பறையில், ஒரு பீடத்தில் சரஸ்வதி அமர்ந்திருக்க, ஓர் ஆசிரியை எல்லாக் குழந்தைகளையும் கைப்பிடித்து அரிசியில் ஓம் என (தமிழில்!) எழுதி அக்ஷ்ராப்யாசம் செய்துவைத்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஹிந்துச்சூழல் நிறைந்த பள்ளியில் என் மகன் படிக்கவேண்டும் என்பது என் ஆர்வமாக இருந்தது. ஹிந்துச்சூழல் மிகுந்த பள்ளிகளில் என் மகனைச் சேர்க்க நான் கொடுக்கவேண்டிய தொகை ஹிந்துமதத்தின் ஆகிருதியைவிடப் பெரியதாக இருந்தது. இதில் ப்ரீகேஜிக்கே இந்த விலை. ப்ரீகேஜி, எல் கேஜி, யூகேஜி என்கிற விஷயங்களே இல்லாமல், நேரடியாக ஒன்றாம் வகுப்பு படித்து, மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துகள் கற்றுக்கொண்டு, இன்று மேதைகளாகப் பலர் இருக்கிறார்கள்! அப்படியானால் ப்ரீகேஜிக்கே இந்தத் தொகை கொடுப்பது எதற்கு என்று புரியவில்லை. எனக்குக் கட்டுபடியாகக்கூடிய தொகையில், எனக்கேற்ற ஒரு பள்ளியைக் கண்டுபிடித்தேன்! இப்போதைக்கு இது போதும் என்று நினைத்துக்கொண்டு அங்கே சேர்த்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரேயரில் எல்லா மாணவர்களுக்கும் சந்தனம் வைத்துவிடுகிறார்கள். ஹிந்துமதமல்லாத மற்றக் குழந்தைகள் வைத்துக்கொள்வதில்லை. பள்ளியும் அதைக் கட்டாயப்படுத்தவில்லை. பாராட்டவேண்டிய விஷயம். எல்லாம் நன்றாகவே இருக்கிறது படிப்பைத் தவிர என நினைத்துக்கொண்டேன். மாணவர்களுக்குப் படிப்பு சொல்லித் தரும் விஷயத்தில் இப்பள்ளி போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.

இப்படி ப்ரீகேஜிக்கு போய்க்கொண்டிருந்த என் பையன் பள்ளியை ஒரு சீரியஸான விஷயமாக நினைக்கவில்லை. முதல் நாள் ராஜமரியாதையுடன் சென்று அக்ஷ்ராப்யாசம் செய்துவிட்டு கூடவே அழைத்துவந்துவிட்டோம். மறுநாள் பள்ளிக்குச் செல்ல அவனை ஆயத்தப்படுத்தியபோது மிக மகிழ்ச்சியாகக் கிளம்பினான். முதல்நாளைப் போலவே அன்றும் கூடவே அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள் என நினைத்துவிட்டான் போல. ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை. அவனது சுதந்தரத்தில் எத்தனை பெரிய குறுக்கீடு. எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அழுது தீர்த்துவிட்டான். பள்ளிக்குச் செல்வதே அழுகை என்றாகிவிட்டது. ‘மழை வர்ற மாதிரி இருக்குல்ல,’ ‘வயித்த வலிக்குது’ எல்லாம் இரண்டரை வயது வாயில் வரத்தொடங்கிவிட்டன. கிளம்பும் வரை லீவு என்று சொல்லிவிட்டு, அந்த நேரம் வந்ததும் அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் பள்ளிக்கு விட்டுவிட்டு வந்துவிடுவேன். ஒருவழியாகப் பள்ளி என்னும் தொல்லை தீர்ந்து, முழுத்தேர்வு கழிந்து விடுமுறை வந்தது.

மீண்டும் பள்ளிக்குச் செல்லும் காலமும் வந்தது. எல் கே ஜி. பெரியவனாகிவிட்டான். ஆனாலும் முதல்நாள் அதே அழுகை. இந்த அழுகை இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது. அங்கே விளையாட நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். பள்ளியைக் கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடுகிறான். தன்னை அழைத்துக்கொண்டு செல்ல சீக்கிரம் வந்துவிடாதே என்று தன் அம்மாவிடம் சண்டை போடுகிறான். ‘பசங்கள்லாம் ஒரே அழுகை’ என்று என்னிடம் தினமும் சொல்கிறன். ‘யாராது ஸ்கூலுக்குப் போக அழுவாங்களா’ என்கிறான்!

பள்ளியில் இவன் படிக்கிறானா, சண்டை போடப் போகிறானா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தினம் ஒரு பையனுடன் வழக்கு. நான் சும்மா இல்லாமல் ‘உங்க ஸ்கூல்ல எப்பவும் அ ஆதான் சொல்லித்த்ருவாங்களா’ என்று கேட்க, அதையே அவனும் அவன் டீச்சரிடம் கேட்டுவைத்திருக்கிறான். இப்படியாகக் கழிகிறது இவனது பள்ளிக்காலம்.

பள்ளிக்காலம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன். இன்று கிழக்கு பதிப்பகத்தின் அலுவலக விஷயமாகப் பள்ளிகளுக்குச் செல்லும்போதெல்லாம், மாணவர்களைக் காணும்போதெல்லாம் நான் எதையோ இழந்துவிட்டது போன்ற நினைவுக்கு வருகிறது. இந்த சோகம் இதனால் மட்டுமே எழுந்த சோகமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லுவேன். மாணவர்களைக் காணும்போதெல்லாம் ஏதோ அடிமைகளைக் காணுகிற சோகமும் உடன்சேர்ந்தே எழுவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மாணவர்கள் பள்ளியினாலும், பள்ளி ஆசிரியர்களாலும், பாடத்தினாலும் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்கு டியூசன் எடுத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். இப்போதும் அதே பாடம்தான் என நினைக்கிறேன். நம் பாடத்திட்டத்தின்படி பாடங்களைப் புரிந்துகொள்ள, ஒரு நல்ல புத்திசாலியான மாணவனால் மட்டுமே முடியும். சராசரி மாணவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பாடத்திட்டத்தின் கடுமை அத்தகையது. நான் எத்தனையோ முறைகளில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தும், அந்த மாணவரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உண்மையில் நான் அதை என் கல்லூரியில்தான் படித்தேன்! பாடத்திட்ட முன்னேற்றம் என்பதை கல்வியாளர்கள் கல்லூரியிலிருந்து பள்ளிக்கும், பள்ளி வகுப்புகளில் மேல் நிலையிலிருந்து உயர்நிலைக்கும் உயர்நிலையிலிருந்து இடைநிலைக்கும் மாற்றுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அபத்தமான கொள்கையினால் ஒரு கல்லூரி மாணவன் ஒரு காலத்தில் புரிந்துகொள்ள அவஸ்தைப் பட்டதை ஒரு மாணவன் பள்ளிகளிலேயே புரிந்துகொள்ளவேண்டிய அபத்தம் நேர்கிறது. பாடத்திட்டத்தை இந்த ஆசிரியர்கள் நடத்தும் முறையைப் போன்ற கேவலமான ஒன்றைக் காணவே முடியாது. எனக்கு பத்தாம் வகுப்பெடுத்த ரமணி டீச்சரும் சிரில் மேரி டீச்சரும் பாடத்தை அப்படியே மனப்பாடம் செய்து அடிக்குரலில் இருந்து குரலை எழுப்பி கத்திக்கத்திச் சொல்லிக்கொடுத்துக் கொன்றார்கள். இன்றும் தவளையையும் கரப்பான்பூச்சியையும் பார்த்தாலே குலை நடுங்குகிறது எனக்கு. ஒரே நிமிடத்தில் கரப்பான் பூச்சியைக் கொன்றுவிடமுடியும். ஆனால் இந்தக் கரப்பான்பூச்சியின் உடலமைப்பைப் படிக்க நானடித்த குட்டிக்கரணங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதி அதைப் பெயர்களாகச் சொல்வார்கள். பெரிப்ளானட்டா அமெரிக்கானா என்பதை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று தெரியாமல் குழம்பும்போது, இதே போன்ற ஆயிரம் பெயர்கள் நினைவுக்கு வந்து பயமுறுத்தும். படிக்காமலும் விடமுடியாது. மதிப்பெண் போய்விடும்.

நல்ல மதிப்பெண்கள் பெறுவது எளிமையான விஷயமல்ல. காலையில் 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவேண்டும். ஒருநாள் எழாவிட்டாலும் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுவாள். அண்ணா ஓட ஓட அடித்தாலும் அடிப்பார். டிவி பார்க்கக்கூடாது. ஏதேனும் ஒரு பரிட்சையில் 75 மதிப்பெண்கள் எடுத்துவிட்டால், ஏதோ ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டவனைப் பார்க்கும் பாவனையில் என் அக்கா ‘என்னது 80க்கு கீழயா?’ என்பார். இத்தனைக்கும் அவள் வாழ்நாளில் என் அக்கா 40ஐத் தாண்டியதே இல்லை. தன்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை தன் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்று ஒரு மாணவன் சிந்திக்காமல் பள்ளி வாழ்க்கையைக் கழிக்கவே முடியாது. என்ன காரணம்? எல்லாம் மதிப்பெண்ணை மையமாக வைத்துச் சுற்றும் கல்விமுறை. 35 மதிப்பெண் பெற்ற ஒரு பையன் பாஸ். 29 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு பையன் பெயில். 97 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு மாணவன் முதலாமவன். 96 பெற்றுவிட்டவன் இரண்டாமவன். இருவரும் எவ்வளவு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நாம் ஆழ்ந்து நோக்கத் தொடங்கினால் பெரிய பெரிய அதிர்ச்சிகள் நமக்குக் கிடைக்கலாம்.

மதிப்பெண்ணை மையமாகக்கொண்ட தேர்வுமுறையில் பள்ளி ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. இருக்கும் நேரத்தில் பாடமும் நடத்தி, கேள்வித்தாள் தயாரித்து, திருத்தி, மற்ற விஷயங்களிலும் மாணவர்களைப் பங்கெடுக்க வைத்து – எத்தனைதான் செய்வார் ஓர் ஆசிரியர்? இந்த லட்சணத்தில் அரசுப் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் ஓய்வுபெற்றால் அந்த இடத்தில் இன்னொரு ஆசிரியரை வேலைக்கு வைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என யாருக்கும் தெரியாது. இருக்கும் ஆசிரியரே இந்த வேலையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் என்ன செய்வார்? படிக்காத மாணவர்களை மாடு போல சாத்துவார்.

மாடு போல சாத்துவார் என்பது உணர்ச்சி மதிப்பீட்டில் சொல்வது அல்ல. உண்மையாகவே ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களை மாடு போலச் சாத்துவார்கள். அதுவும் மாடுகளை அடிக்க உதவும் அதே மணிப்பிரம்பு. அந்த மணிப்பிரம்பு வாங்கவும் மாணவர்களே காசு தரவேண்டும். தனது காசாலேயே தன்னை அடிக்கும் ஓர் அரசை ஒரு மாணவன் பள்ளியிலேயே கண்டுகொண்டுவிடுகிறான். இதில் மரத்துப்போகும் மாணவனுக்கு ஓர் அரசு இதனையே செய்யும்போது அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை போல. இப்படி கிட்டத்தட்ட பாடத்திட்டத்துக்கு, மதிப்பெண் தேர்வுமுறைக்கு, ஆசிரியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு மாணவனைப் பார்க்கும்போது, நான் இழந்த மாணவப்பருவம் தரும் சுகமான சோகத்தைவிட, தங்கள் சுதந்திரத்தை இழந்துகொண்டிருக்கும் ஒரு மாணவனின் சோகம் பெரியதாகத் தாக்குகிறது.

மாணவர்கள் செய்யும் துப்புரவு பற்றி வெங்கட் எழுதியிருக்கிறார். நான் இதைப் பற்றியும் எழுத நினைத்திருந்தேன். வெங்கட் சொல்வது மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க இது உதவும் என்பது. இது சரிதான். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இந்த உயர்ந்த நோக்கத்தில் இதைச் செய்வதில்லை. நோக்கம் உயர்வாக இருந்து, மாணவர்கள் தூய்மை செய்யவேண்டிய பழக்கத்தை ஏற்படுத்திய பள்ளிகளில் கூட, இது மாணவர்களின் கடமையாக மாறி, அதற்கான தண்டனைகளிலெல்லாம் முடிந்திருக்கிறது. நான் படித்த பள்ளி ஒன்றில் நாங்களே துப்புரவு செய்யவேண்டும். அங்கு பள்ளிக்கு வரும் பல மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்குச் செல்பவர்கள். அவர்களோடு கூட ஒத்தாசைக்குச் செல்லும் மாணவர்கள் இந்தத் துப்புரவு வேலைக்கு வராமல் அவதிப்படுவதும், அதற்காகவே அவர்கள் மாடுபோல் அடிக்கப்படுவதெல்லாம் கொடுமை. சுற்றுப்புற விழிப்புணர்வு என்பது ஒருவித அழுத்தமாக மாறுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இப்பள்ளியில் துப்புரவுக்கென்று பணியாளர்கள்கூட இருக்கமாட்டார்கள்! அப்படியே ஒன்றிரண்டு பணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு மாணவர்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள். நாம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது பாடம் படிக்கவே அன்றி இப்படி ஓர் அடிமைத்தனத்துக்கு வால்பிடிக்க அல்ல. என்னைத் துப்புரவு செய்யச் சொல்லி அடித்த வாத்திமார்களையெல்லாம் கல்லால் அடிக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். சுற்றுப்புறச் சூழலைத் துப்புரவாக வைத்துக்கொள்ளும் நல்ல நடிப்பில்தான் இத்தகைய கொடுமைகள் எல்லாம் தொடங்குகின்றன. இதுமட்டுமல்ல. எப்போதேனும் ஆண்டுவிழாவோ மற்ற விழாவோ வந்துவிட்டால் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் செத்தான் என்றே சொல்லவேண்டும். துப்புரவு என்பது சுற்றுப்புறச்சூழலைத் தூய்மையாக வைத்திருத்தல் என்கிற அழகான வரியில் அமிழ்ந்துவிடுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்குள்ளே இருக்கும் எல்லா பெஞ்சுகளையும் வெளியில் வைத்து, அவற்றைக் கழுவி, வகுப்பறையைப் பெருக்கிக் கழுவி, மாணவிகள் கோலமிட்டு – பள்ளிகள் ஒருவருடத்தில் ஒரு பாடத்துக்கு இத்தனை வகுப்புகள் என்று ஒதுக்குகின்றன. அப்படி ஒதுக்கும் பள்ளிகள் இப்படி பாழாகும் வகுப்புகளுக்கும் சேர்த்தே நேரம் ஒதுக்குகின்றனவனா? அந்த நேரங்களில் நடத்தப்படாமல் விடப்படும் பாடங்களுக்கு யார் பொறுப்பு? நான் படித்த பள்ளிகளில் – நான் அரசுப்பள்ளிகளில் மட்டுமே படித்தேன் – எந்தப் பள்ளியிலும் என் பாடத்தை ஒழுங்காக யாருமே முடித்ததே இல்லை. ஏன் இந்த நிலை? எந்தப் பள்ளிக்கும், எந்த ஆசிரியருக்கும், எந்த அரசுக்கும் பொறுப்பே இல்லை. மாணவர்களை இவர்கள் ஏதோ சின்னப்புள்ளைங்களாக மட்டுமே பார்க்கிறார்கள்.

என் தனிப்பட்ட அளவில் நான் சாதியின் கொடுமைகளைக் கண்டதும் இப்பள்ளிகளிலேயே. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். பிராமண – அபிராமண ஆசிரியர்களுக்கு இடையில் இருந்த பிரச்சினைகள் என்னையும் பாதித்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் காரணம் எனக்கு இப்போதுதான் புரியத் தொடங்குகிறது. என்னுடன் படித்த, நன்றாகவே படிக்காத ஒரு பிராமண மாணவனை ஒரு பிராமண ஆசிரியர், ‘ஐயர் குலத்த கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லிக்கொண்டே ஓட ஓட விரட்டி அடித்தார். பிராமணரல்லாத ஆசிரியர்களெல்லாம் அந்த பிராமண ஆசிரியரைக் கண்டு சிரித்தார்கள். என்னை ஓர் ஆசிரியர் அடித்துக்கொண்டிருக்கும்போது தூரத்தில் இருந்து இன்னோர் ஆசிரியர் ‘அய்யருங்க அது சாத்துங்க’ என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலகாரணம் ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய ஜாதிப் பிளவுகள்தான். ஆனாலும் மாணவர்களை இதில் பலிகடாவாக்குவது என்ன நியாயம். எனக்கு நேர்ந்த அவமானங்களைப் போலவே, எனக்கு ஆதரவாக சில அதிகார மீறல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. இரண்டுக்குமே நான் பொறுப்பாளி அல்ல என்பதே இங்கே பிரச்சினை. ஒரு பிராமண ஆசிரியர் வெளிப்படையாகவே கல்லூரியில் என்னைப் பற்றி இன்னொரு பிராமண ஆசிரியரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த செய்முறைத் தேர்வில் நான் நூறு சதம் வாங்கினேன். அவர் சொல்லியிருக்காவிட்டாலும் நான் நிச்சயம் நூறு சதம் வாங்கியிருப்பேன் என்றாலும், உடனிருந்த மாணவர்கள் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள். பள்ளிகளில் இலலாத ஒரு புரிந்துகொள்ளும் திறன் கல்லூரிப் பருவத்தில் வந்துவிட்டதால், என் நண்பர்களும் இதனை ஒரு சிரிப்பதற்குரிய நிகழ்வாகவே எடுத்துக்கொண்டார்கள். மேலும் திருநெல்வேலி பகுதிகளில் சாதிகளைச் சொல்லிப் பேசிக்கொள்வது வெகு இயல்பாகவே நடக்கும். இதனால் நண்பர்கள் இதனை சகஜமான ஒன்றாகவே எடுத்துக்கொண்டார்கள்.

ஓர் உலகத்தையே திறந்துகாட்டவேண்டிய பள்ளிகள், தங்கள் பொறுப்பின்மையாலும், அர்ப்பணிப்பு உணர்வின்மையாலும், குழப்பமான பாடத்திட்டங்களாலும், மதிப்பெண்ணை மையமாக வைத்த தேர்வு முறைகளாலும் சீரழிந்துகொண்டிருக்கின்றன. கிராமங்களில் பள்ளிகளின் வீழ்ச்சி இன்னும் மோசமானது. கிராமங்களில் படிக்கும் மாணவர்களால் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் மாணவர்களோடு போராடமுடியாமலேயே போய்விடக்கூடிய நிலை தொலைவில் இல்லை. இவற்றையெல்லாம் மாற்ற ஆசிரியர்களாலேயே முடியும். என் தாத்தா ஒரு ‘மாதிரி ஆசிரியர்.’ அவரைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வை இன்றைய ஆசிரியர்களிடம் காண்பது அரிது. கடந்த தலைமுறையின் ஆசிரியர்களைப் போன்ற பொறுப்புணர்வு மிக்க ஆசிரியர்கள் உருவாகாவிட்டால், இந்த மாணவர்களின் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த அடிமைகளின் உருவாக்கத்தையும், என்ன படிக்கிறோம் என்று புரியாமல் எழுத்தை மனனம் செய்யும் ஒரு தலைமுறையையும் ஒன்றுமே செய்யமுடியாது.

Share

Turtles Can Fly – ஈரானியத் திரைப்படம்

இந்தக் கட்டுரையை தமிழ்ஹிந்து.காமில் வாசிக்கலாம்.

Share

ஒலிக்காத குரல்கள் – கோபி கிருஷ்ணனின் ‘உள்ளே இருந்து சில குரல்கள்’

சொல்வனம் இணையத்தளத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

கட்டுரையை வாசிக்க: http://solvanam.com/?p=248

Share

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

கட்டுரையை வாசிக்க – தமிழ் ஹிந்து.காம் செல்லவும்.

Share

கவிதை

வெக்கை மிகுந்த
வியர்வை இரவொன்றில்தான் கண்டேன்
வீட்டுக்குள் வளர்ந்து கிடக்கும்
தனித்த மரமொன்றை.
கிளைகள் வீட்டு உத்தரத்தை உரசியிருக்க
வேர்கள் வீடெங்கும் பரவிக்கிடந்தன
கைக்கெட்டிய அரிவாளும் கோடாலியும்
உலோக ஒலியெழுப்பி
மரத்தின் கீழ் மண்டியிட்டன
தனியறைக்குள் உறங்கிக் கிடக்கும்
மெல்லிய சுவாசத்தை அடக்கி
அதிர்ந்தன மரத்தின் இலைகள்.
மரத்தின் கிளைகள் மேலும் நீண்டபோது
வெளியிருந்து ஒரு குருவி
சிறகடித்துப் பறந்து
உள்வந்து அமர்ந்தது.
மரத்தை சூழத் தொடங்கியது
குருவியின் இசை.

Share