ஈவெ ராமசாமி நாயக்கரும் ஆழம் இதழின் நட்டநடு செண்டர் நிலையும்

ஆழம் இதழ் ஈவெரா சிறப்பு இதழாக வெளிவந்திருக்கிறது (என்று நினைக்கிறேன்!). பெரியார் அன்றும் இன்றும் என்று அட்டையில் உள்ளது. 

ஈவெராவுக்கு ஆதரவாக (அல்லது எதிர்க்காமல் விமர்சனப் பார்வையுடன், செல்லமாகக் குட்டி தட்டி கட்டித் தழுவி!) எழுதியிருப்பவர்கள்:
 
அ.குமரேசன் – 12 பக்கங்கள்
வழக்கறிஞர் அருள்மொழி – 12 பக்கங்கள்
மருதன் – 12 பக்கங்கள்
ராமசந்திர குஹா – 2 பக்கங்கள்
 
மொத்தம்: 38 பக்கங்கள்
 
ஈவெராவுக்கு எதிராக, அதிலும் மயிலாப்பூர் பூணூல் அறுப்பை முன்வைத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக எஸ் வி சேகர் சொன்னவை:
 
எஸ்.வி.சேகர் – 4 பக்கங்களில் உள்ளது.
 
மொத்தமே 4 பக்கங்கள்தான்!
 
ராமசந்திர குஹா எழுதியவற்றில் இருந்து 2 பக்கம் எடுத்து போட்டதுபோல, ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தில் இருந்து ஒரு 12 பக்கம் எடுத்துப் போட்டிருக்கலாம். சார்பு இருக்கவேண்டியதுதான். அது எதிர்க்கருத்து என்ற ஒன்றே இல்லை என்ற பாவனையில் இருக்கக்கூடாது.
 
–பிரசன்னா
Share

டியூஷன் 3

கடைசியில் கொஞ்சம் சோகமாக முடியப்போகும் இந்த நிகழ்வை எழுதாமல் விட்டுவிடலாம் என்றாலும் மனம் கேட்கவில்லை. எனவே இது ஒரு க்ளிஷேவாக முடியப்போகும் பதிவுதான். திரையில் நாம் பார்க்கும் ஒரு க்ளிஷே காட்சியை எத்தனை இயல்பாக புறந்தள்ளிவிட்டுப் போனாலும், அதே காட்சி நம் கண்முன் நிகழும்போது அதை எதிர்கொள்வதில் நமக்குப் பல சவால்கள் இருக்கவே செய்கின்றன.

ஒன்றரை வருடத்துக்கு முன்பு அந்த இரட்டையர்களை அவர்களது அம்மா என் மனைவியிடம் டியூஷனுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். இரட்டையர்களுக்கு 13 வயது. மூத்தவன் 9ம் வகுப்பு படிக்கவேண்டிய பையன், வீட்டிலிருந்தபடியே நேரடியாக பத்தாம் வகுப்பு படித்தான். இளையவன் 8ம் வகுப்பு. (இந்த ஒரு வருட வகுப்பு வித்தியாசம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.) மூத்த பையன் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டான். அவன் 8ம் வகுப்புப் படித்தபோது அவனுடன் படித்த மாணவர்கள் இவனை மிகவும் ஓட்டியதில் நொந்துபோய் பள்ளிக்கே செல்லமாட்டேன் என்று கூறிவிட்டான் என்று முதலில் சொன்னார்கள். கொஞ்சம் நானாக யூகித்ததில் பிரச்சினை கொஞ்சம் தீவிரம் என்றே எனக்குப் பட்டது. அவனை பாத்ரூமில் வைத்து உடன் படித்த சிறுவர்கள் செய்த கேலியால் மனம் நொந்திருப்பான் என்றே நினைக்கிறேன். அவனது அம்மா மெல்ல மெல்ல ஒவ்வொன்றாகச் சொல்ல சொல்ல, எனக்கு உருவான சித்திரம் இது. தன் மகனை எப்படி கேலி செய்யலாம் என்று கேள்வி கேட்கச் சென்ற அவனது அம்மா, பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்ப்பதற்கு முன்பாக, தன் மகனைக் கேலி செய்த பையனைப் பார்த்து திட்டியிருக்கிறார். கேலி செய்த பையனின் தந்தை, தன் மகன் செய்தது தவறே என்றாலும், எப்படி இன்னொரு பெண் நேரடியாக தன் பையனைத் திட்டலாம் என்று சண்டைக்கு வந்துவிட்டார். தான் செய்தது தவறுதான் என்று இந்த அம்மா ஒப்புக்கொண்டும் தலைமை ஆசிரியர் கடும் கோபமடைந்துவிட்டார் போல. ஒருவழியாக தலைமை ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினாலும், இந்தப் பையன் இனி அந்தப் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.

வேறு பள்ளியில் சேர்த்துப் பார்த்திருக்கிறார்கள். பள்ளியைப் பற்றிய ஒவ்வாமை மனதில் குடிபுகுந்துவிட்டால், பள்ளி என்றாலே பையன் பயந்துவிட்டான். வேறு வழியின்றி வீட்டில் வைத்தே சொல்லிக் கொடுத்தார்கள். அப்பா நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர். அம்மாவும் நன்கு படித்தவரே. நல்ல வசதி, எனவே இதை எளிதாக எதிர்கொண்டார்கள். இரட்டையர்களில் இளையவன் எப்போதும்போல் பள்ளிக்குச் செல்ல, மூத்தவன் வீட்டிலிருந்தே படித்தான்.

இந்த சமயத்தில்தான் என் மனைவியிடம் இந்தப் பையனை டியூஷன் சேர்த்தார்கள். ஹிந்திக்கு மட்டும் முதலில் வந்தான். பையன் கொஞ்சம் பயந்தவன் என்பதால், அவன் டியூஷன் படிக்கும்போது அந்தப் பையனின் அம்மாவும் வீட்டுக்கு வருவார்கள். காலை 11 மணிக்கு டியூஷன். பையன் படித்துக்கொண்டிருக்கும்போது, இந்த அம்மா என் ஒன்றரை வயது மகளைத் தூக்கிக்கொண்டு கொஞ்சப் போய்விடுவார். ஒரு மாதத்தில் அந்தப் பையன் டியூஷனில் கொஞ்சம் சகஜமாகவும், இனி அவன் மட்டும் வரட்டும் என்று என் மனைவி சொல்லிவிட்டாள். அந்தப் பையனும் அதற்குச் சம்மதிக்கவும், அந்த அம்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியாவது தன் பையன் ஒரு வீட்டில் படிக்கவாவது ஒப்புக்கொண்டானே என்று.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் படித்தான். ஹிந்தியோடு, சமூக அறிவியல், தமிழும் (தனியாக) சேர்த்துப் படித்தான். காலை மாலை இருவேளையும் டியூஷனுக்கு வருவான். கணிதமும் அறிவியலும் அவனது அப்பாவும் அம்மாவும் சொல்லித் தந்தார்கள். கடந்த வாரம் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினான்.

இந்தப் பையனின் சிறப்பு, இதுவரை நான் எந்தப் பையனிடத்தும் காணாதது. ஒரு மணி நேரம் படி என்றால், அதில் ஒரு நொடி கூட வீண் செய்யாமல், பராக்கு பார்க்காமல், ஏமாற்றாமல் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பான். எனக்கோ ஆச்சரியமாக இருக்கும். பதினைந்து வயதில் இப்படி ஒரு காந்தியா என்று. ஒரு தடவை கூட அவன் ஏமாற்றி நான் பார்த்ததில்லை. ஸ்வீப்பிங் வரியாக இதனை எழுதவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன். ஒரு நிமிடம் அவன் படிப்பது கேட்கவில்லை என்றால், நான் வீட்டுக்குள் இருந்தவாறே, ‘என்னப்பா தம்பி தண்ணி குடிக்கிறயா’ என்று கேட்பேன். வராண்டாவில் படித்துக்கொண்டிருக்கும் அந்தப் பையன் எழுந்து வந்து பணிவாக ‘ஆமாம் அங்கிள்’ என்பான். அப்படி ஒரு பையன். என் பையனை பத்து நிமிடம் படிக்கச் சொன்னால் ஐந்து நிமிடம் ஏமாற்றி இருப்பான், ஐந்து நிமிடம் எப்படி ஏமாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருப்பான். இதுதான் சிறுவர்களின் இயல்பு. ஆனால் இந்தப் பையன் ஓர் அதிசயம். ஒரு நாள் இரண்டு நாள் என்றில்லை, எல்லா நாளும் இப்படியே.

கடந்த வாரம் ஒவ்வொரு தேர்வு முடியவும் போன் செய்து என் மனைவியிடம் எப்படி தேர்வு எழுதினான் என்று சொல்லுவான். அவன் அம்மா கூடவே சென்று அவன் தேர்வு எழுதும் வரை உடன் இருந்து கூட்டிக்கொண்டு வருவார். இரட்டையர்கள் இருவருக்கும் கிரிக்கெட் என்றால் பைத்தியம். பிராக்டிஸ் செய்கிறார்கள்.

இன்று காலை வந்த செய்தி என்னை நிலைகுலைய வைத்தது. அவன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள், அங்கே நேற்று அந்த அம்மா மரணமடைந்துவிட்டார். 

இதைக் கேட்டதிலிருந்து எனக்கு எதுவுமே ஓடவில்லை. இந்த இரண்டு சிறுவர்களும் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே நினைப்பாக இருக்கிறது. இரட்டையர்களில் மூத்தவனுக்கு நேரெதிர் இளையவன். படு விவரம், படு சுட்டி. ஆனால் பணிவு மட்டும் அப்படியே அண்ணனைப் போல. இந்த இரண்டு சிறுவர்களை நினைக்கும்போதே பக்கென்று இருக்கிறது. அவர்களால் தாங்கமுடியாத துக்கம் இது. அந்த மூத்த பையன் பத்தாம் வகுப்பில் வாங்கப்போகும் மதிப்பெண்களைப் பார்க்காமல் போய்விட்டாரே என்றெண்ணும்போதே மிகவும் வருத்தம் மேலோங்குகிறது. அந்தப் பையனுக்காக அப்படி அலைந்தார் அந்த அம்மா. எப்படியும் இந்தப் பையன் நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவான், அதில் ஐயமில்லை. ஒரு பையன் பதினைந்து வயதில் தாயை இழப்பதென்பதெல்லாம் கொடுமை.

இரண்டு மகன்களை நினைத்து அலையும் அந்த அம்மாவின் ஆன்மா அமைதியடையட்டும். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

21.5.2015 அப்டேட்:  இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. இந்தப் பையன் 398 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். அவன் அம்மா சொல்லித் தந்த அறிவியலில் 98 மதிப்பெண்கள்.

டியூஷன் 1 | டியூஷன் 2

Share

WCC 2015

A world cup match for India without Sachin after 1987. 🙁 I miss #Sachin.

சச்சின் 16 வயதில் அப்துல் காதிர் பந்தை ஏறி அடித்தபோது எனக்கு 14 வயது. அன்றுமுதல் பெரும்பாலான சச்சின் ஆட்டங்களைப் பார்த்தேன். சச்சினுடனேயே வளர்ந்தேன். சச்சினின் முதல் நூறு ரன்களுக்காக சச்சினைவிட அதிகம் காத்திருந்தேன். சச்சின் அவுட் ஆனால் ஸ்கூல்/காலேஜ்/வேலைக்குப் போகலாம் என்று காத்திருப்பேன். நியூசிலாந்துக்கு எதிராக முதன் முதலில் முதல் ஆட்டக்காரராக களமிறங்கி பொளந்துகட்டியபோது சந்தேகமே இல்லாமல் ஒரு உலக வரலாறு எழுதப்படவிருக்கிறது என்று உணர்ந்தேன். கிரிக்கெட்டின் மையமே சச்சின்தான் என்பதில் எந்த ஐயமும் எனக்கு இருந்ததில்லை. 200 ரன்கள் எடுத்தபோது நாம் பார்த்தால் அவுட்டாகிவிடுவாரோ என்று பயந்து அலுவலகத்தில் நகம் கடித்துக் காத்திருந்தேன். உலகக் கோப்பையை சச்சின் தொடுவாரா என்றெல்லாம் கவலைப்பட்டதே இல்லை. ஏனென்றால் பெரும்பாலான உலகக் கோப்பை போட்டிகளில் சச்சினின் ஆட்டம் பிரமாதமாகவே இருக்கும். 

இன்று அந்த சச்சின் இல்லாமல் முதல் உலக்கோப்பை ஆட்டம் இந்தியாவுக்கு, 1987க்குப் பிறகு. என்னவோ அந்த ஆர்வமும் படபடப்பும் பயமும் வெறியும் வரமறுக்கிறது. அடுத்த தலைமுறைக்கும் இப்படித்தானா என்று தெரியவில்லை.

ஐ மிஸ் யூ சச்சின்.

Share

ஜனவரி 2015 புத்தக வாசிப்பு

இந்த வருடம் 50 புத்தகங்கள் படிக்க இலக்கு. முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

முதற்கனல் வாசித்து முடித்தேன். விஷ்ணுபுரத்தை இனி ஜெயமோகன் விஞ்ச முடியாது என்ற என் மனப்பதிவு பொய்யானது. முதற்கனலின் ஆழமும் செறிவும் வார்த்தையில் சொல்லமுடியாதவை. முதற்கனல் என்பதை அம்பையின் கனலாகக் கொள்ளலாம். ஆனால் அதை காமத்தின் கனலாகக் கொண்டே நான் இந்நாவலை வாசித்தேன். இப்படி ஓர் ஆழமான விவரிப்பு தமிழ்நாவல்களில் காமத்தைச் சார்ந்து நிகழ்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. அப்படி ஒரு விவரிப்பு. ஒவ்வொரு விவரிப்பும் ஒவ்வொரு வகை. அதேபோல் மகாபாரதத்தின் பல்வேறு நம்பிக்கைகளை ஜெயமோகன் விவரிக்கும் விதம் சொல்லில் அடக்கமுடியாதது. மிகப்பெரிய தோற்றம்கொண்டு மகாபாரதத்தின் நோக்கை ஒரு வரலாற்று நோக்கிலும் புனைவு நோக்கிலும் அவர் கண்டு அதை விவரிக்கும் விதம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. இந்த எண்ணம் எனக்குத் தோன்றும்பொதெல்லாம் ஒருவித பயத்தோடுதான் நாவலைப் படித்தேன். மனிதக் கற்பனைளுக்கு அப்பாற்பட்ட ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது எனக்கு உறுதிப்பட்டது. முதற்கனல் ஆழத்திலும் செறிவிலும் நிகரற்றது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஜெயமோகன் எழுத்தில் கொள்ளும் விரிவு ஆச்சரியமூட்டுகிறது. அம்பை பேருருவம் கொண்டு எழுகிறாள் என்றால் சிகண்டி அசரடிக்கிறான். சிகண்டிக்கும் அம்பைக்குமான பித்து நிலையை ஜெயமோகன் விவரிக்கும் இடமெல்லாம் நான் என் வசமே இல்லை. அம்பை பீஷ்மரை ஏற்றுக்கொள்ள முடிவெடுக்கும் அத்தியாயம் ஜெயமோகனின் எழுத்து புத்திசாலித்தனத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும். இப்படி பல பகுதிகள். 

முதற்கனல் தமிழ்நாவல்களின் உச்சங்களில் ஒன்று.

 

 

THE DRAMATIC DECADE : The Indira Gandhi YearsTHE DRAMATIC DECADE : The Indira Gandhi Years by Pranab Mukherje
My rating: 3 of 5 stars

A flash back of a part our history in a congress man view! Pranab Mukherje tried a lot to prove if not the emergency was imposed by Indra Gandhi, how India might have been affected badly in so many ways with so many statistics. He describes the bravery of Indra Gandhi with so many examples and how she bounced back after so many set backs she faced. He was like a shadow of her and he proudly admits in such a way that that was his great achievement. The formation of Bangladesh has been nicely brought out in this book, however, that is also in a congress man view.

Worth reading.

 

 

View all my reviews

இலங்கை பிளந்து கிடக்கும் தீவுஇலங்கை பிளந்து கிடக்கும் தீவு by சமந்த் சுப்ரமணியன்
My rating: 4 of 5 stars

சமீபத்தில் வாசித்த சிறந்த புத்தகம்.

இலங்கையில் நடந்த போரில் மக்களின் மனநிலை என்ன என்பதை பல்வேறு மக்களிடம் பேசி அதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் சமந்த் சுப்பிரமணியன். இப்புத்தகத்தில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களில் இருந்து, மலையகத் தமிழர்களின் குரல் உட்பட, புலி ஆதரவாளர்களின் குரலும் ஒலித்துள்ளது. சிங்கள அரசின் அட்டூழியங்களையும் புலிகளின் தீவிரவாத அட்டூழியங்களையும் எவ்வித சாய்வும் இன்றி பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

சிங்கள அரசு பயங்கரவாதத்தின் பல்வேறு மாதிரிகளை இப்புத்தகத்தில் படிக்கும்போது ஒரு திகில் திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

தமிழர்களுக்காகத் தொடங்கி தமிழர்களையே ஒழித்துக்கட்டத் தொடங்கிய புலிகளின் குரூரக் கொலைகள் இப்புத்தகத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களை போரின்போது கேடயமாகப் பயன்படுத்தியதை எல்லாம் இப்புத்தகத்தில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்ட அத்தியாயம் நம்மை உலுக்கி எடுக்கிறது.

நிச்சயம் வாசிக்கவேண்டிய புத்தகம். மிக நல்ல மொழிபெயர்ப்பில் தரத்துடன் வெளிவந்துள்ளது.

 

View all my reviews ஆர்யபட்டா [Āryapaṭṭā]ஆர்யபட்டா [Āryapaṭṭā] by சுஜாதா [Sujatha]
My rating: 2 of 5 stars

சுமாரான நாவல். ஒரு கன்னடத் திரைப்படத்துக்காக ரமேஷ் அரவிந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழ்த்திரைப்படமான அந்தநாளை ஒட்டி எழுதப்பட்ட கதை. சுஜாதா இடது கையால் அவசரம் அவசரமாக எழுதியது போலத் தோன்றியது. அந்த நாள் திரைப்படத்தை அப்படியே மீண்டும் எழுத ஏன் சுஜாதா தேவை என்று புரியவில்லை. இதையும் மீறி நாவலில் சுஜாதா வெளிப்பட்ட தருணங்களையெல்லாம் கன்னடத் திரைப்படத்தில் இல்லாமல் ஆக்கியிருந்தார்கள்!

View all my reviews

Share

இந்திரா பார்த்தசாரதியின் பக்குவம் சிறுகதை குறித்து

இந்திரா பார்த்தசாரதியின் சமீபத்திய கல்கி சிறுகதையில் (பக்குவம்) வாசிக்க ஒன்றுமில்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள்கூட இக்கதையைவிட மேம்பட்ட தரத்தில் இருக்கும். வெற்றுப் பேச்சு, மேம்போக்கான பார்வை, ஒற்றைப்படத்தன்மை, எதிலும் நுணுக்கமாக ஆழமாகச் செல்லாமல் ஒரு பிரச்சினையின் பல்வேறு முகங்களை ஆராயாமல் எழுதுவது போன்ற அவரது வழக்கமான நாவல்களும் சிறுகதைகளும் போல, அவற்றின் இன்னொரு வலுவற்ற நீட்சியே கல்கியில் வெளியாகியிருக்கும் அவரது சிறுகதை. படிக்காமல் இன்புறவும்.

கதையை வாசிக்க இங்கே செல்லவும்.

Share

கவிதை

முதலில் அணிந்திருந்தது
மிக மெல்லிய கண்ணாடி
உருவத்தின் பேதங்களை
நான் கண்டதே இல்லை
ஆனாலும் அணிந்திருந்தேன்
அது இல்லாத நாள்களில்
கண்ணில் பட்டவரெல்லாம்
கொஞ்சம் புன்னகையுடன்
அதையே கேட்டவாறிருப்பார்கள்
பின்னர் கொஞ்சம் தடித்தது
சில வேறுபாடுகள்
கண்ணில் அது இல்லாத நேரத்தில்
நிம்மதியாகவும் பாதுகாப்பற்றும்
ஒரே நேரத்தில் தோன்ற
தலைதெறிக்க மனசுக்குள்ளே ஓடி
மெல்ல அதை அணிவேன்
கண்முன்னே மனிதர்கள்
சிரித்தவண்ணம் கடந்தவாறிருப்பார்கள்
பின்னர் இன்னும் தடித்தது
மனிதர்களின் சிரிப்புக்குள்ளே இருக்கும்
மனத்தை மிகத் துல்லியமாகக் காட்டியது
அஞ்சி அதை வீசி எறிந்தேன்
சில நாள்கள் கண்ணாடி இல்லாமல்.
நகரும் பிம்பங்களுக்குள்ளே
இருந்த வண்ண வேறுபாடுகள்
கண்ணாடி இல்லாமலே துலக்கம் பெற்றன.
மனக்குகை எரிந்து
கருஞ்சாம்பல் எஞ்சுமோ என்றஞ்சி
இமைகளை மூடினேன்
என்றாலும்
நின்றபாடில்லை உருவங்களின் நடனம்.

Share

பதாகை வலைத்தளத்தில் வெளிவந்த கவிதைகள்

பாதை 

 

மிக நீண்ட தூரம் அழைத்துச் சென்று
நரகம் விட்டொழிந்தோம் என்றார்கள்
வழியெங்கும்
கூடவே நதியோட
இருபுறமும் மரங்கள்
எங்கள் பயணம்

எல்லாம் இன்றோடொழிந்தது
இனி கவலையில்லை
அன்றாடச் சுகதுக்கங்களில் உழலவேண்டாம்
எல்லாம் இன்பமயம்
எங்கும் எல்லாரும் சமம்
இனி சொர்க்கம்தான்
போகலாம் என்றார்கள்
நான் ஆவலுடன் இருந்தேன்
இப்படி அல்ல என்றார்கள்
என் அடையாளங்களை துறக்கச் சொன்னார்கள்
என் ஆடைகளைக் களையச் சொன்னார்கள்
சொர்க்கத்தில் எதுவுமே தேவையில்லை

என் நினைவுகளை அழித்துவிட்டு
அடுத்த எட்டு நான் வைக்கலாம்
எல்லாவற்றையும் துறப்பதே
ஒரு நரகம்தானே என்றேன்
கேள்விகள் பதில்கள் எல்லாம்
சொர்க்கத்தில் சொல்லப்பட்டாகிவிட்டது
சொர்க்கத்தில் எல்லாமே புதியது
ஒருவகையில் எதுவுமே புதியதல்லவாம்

குழப்பமாக இருந்தது
அங்கு இனி குழப்பமுமில்லை என்றார்கள்

என் நினைவுகளை அழிக்க முற்பட்டேன்
அழிக்க அழிக்க
அவை என்னை
அமிழ்த்த அமிழ்த்த

சுயம் அழித்து
சொர்க்கத்தில்
என்ன இருந்துவிடமுடியும் எனக்கென்றேன்
நீண்ட பதில் சொன்னார்கள்
எல்லாவற்றுக்கும்
பதில் இருந்தது
நினைவுகளை அழித்து
புதியன அடைதல்
சொர்க்கத்தின் பாதை

அமைதியாக
வந்தவழி திரும்பினேன்
ஏனென்றார்கள்
நரகமே சொர்க்கம் என்றேன்
ஆழ்கடலின் மௌனத்தில்
அவர்கள் ஆழ்ந்திருக்க
நதியின் அமைதியில்
நான் திரும்பினேன்

 

அப்படியே ஆகுக

காற்றில் இலை பரப்பி 
குலை தள்ளி
வேரில் செழித்திருந்த 
வாழை மரமொன்றை
வெட்டித் தள்ளினேன்
இலை கிழித்து 
குலை சிதைத்து
தோல் உரித்து 
வெண்தண்டு கடித்துக் குதறி 
வேர் வெட்டி
வெற்றியுடன் மீண்டபோது
நானறியாது 
அனைத்தையும் பார்த்திருந்த 
புதுக்கன்று 
மெல்ல தலைதூக்கி 
உலகுக்கு வந்தது,
ஆம், அப்படிதான் ஆகும்

 

ஆதிகுரல்

அவர்கள் போர் என்று சொல்லிக்கொண்டார்கள்
ஒட்டுமொத்த உலகமும் வெருண்டிருந்தது
கருப்பு நிறத்துக்காரர்கள் தங்கள் கடவுளை துணைக்கழைத்திருந்தார்கள்
வெண்ணிறத் தோலுடையோர் ஒளிபொருந்திய ஆண்டவனை நம்பியிருந்தார்கள்
நெருப்பு நிலத்துக்காரர்கள் அருவம் கொண்டு மீண்டெழுந்தார்கள்
எஞ்சியவர்கள் என்னவோ பேசிக்கொண்டார்கள்
யாரும் யாரையும் கேட்கவில்லை
எல்லோருக்குமே வெற்றி என்றார்கள்
பின் ஒரு திடீர் நொடியில்
எல்லாருமே தோல்வியை உணர்ந்தார்கள்
பூமியின் நிறம் சிவப்பாக மாறி இருந்தது
தோல்வியில்
புனித நதியில் குதித்தார்கள்
கைகளையும் காலையும் மரத்தில் அறைந்து ஆண்டவனை அடைந்தார்கள்
மண் புதைந்தார்கள்
கடைசி மனிதனின்
கடைசிக் குரலின்போது
மெல்லிய உதட்டிலிருந்து
ஆதிகுரல் ஒன்று மெல்ல எழுந்துவந்து
உலகை நிறைத்தது
அக்குரல்
ஓம் என்ற வடிவத்தை ஒத்ததாய் இருந்தது
ஆண்டவனின் குரலகாக ஒலித்தது
அருவத்தின் குரலாக மீண்டது
அக்குரல்
ஆதிகுரல்
ஒரு குழந்தையின் முதல் அழுகையாக இருந்தது

 

செக்மேட்

அவனை இறைவன் என்றனர்
அவன் சொர்க்கம் ஒன்றை உருவாக்கினான
இவனை மனிதன் என்றனர்
இவன் நரகத்தை அமைத்தான்
அவன் நல்லது செய்தான்
இவன் தீயன பழக்கினான்
தெளிந்தது அவன் செய்ய
குழப்பத்தை இவன் செய்தான்
காதல் செய்தான்
காமம் செய்தான்
சிரிப்பு
அழுகை
மகிழ்ச்சி
சோகம்
சாந்தம்
கோபம்
அன்பு
வெறுப்பு
கரு
கொலை
சலித்துப் போன கடவுள்
மனம் மயங்கிய ஒரு தருணத்தில் சாத்தானாக
நான் என்னைக் கடவுள் என்றேன்.

பாம்பு புகுந்த வீடு

தன் வீட்டிலிருந்து
என் வீட்டுக்கு
ஜன்னல் வழியே
பாம்பு புகுந்துவிட்டதென
கூவிக்கொண்டே வந்தார்
பக்கத்து வீட்டுக்காரர்
அலறல் கேட்டு
வீட்டிலிருந்து வெளியே ஓடினேன்
அவரைப் பார்க்க அச்சமாக இருந்தது
அவர் கால்கள் சூம்பிக் கிடந்தன
என் நினைவில் அவர் அப்படி இருந்திருக்கவில்லை
என்ன அரவமென வீட்டிலிருந்து
மனைவி ஓடி வெளியே வந்தாள்
என்னைக் கண்டு மிரண்டு நின்றபோது
அவளைக் கண்டு நான் பயந்து நின்றேன்
அவள் கழுத்து நீண்டு கிடந்தது
இதுவரை இப்படி அவளைக் கண்டதில்ல
மீண்டும் வீட்டுக்குள் அவள் ஓடி
மகனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்
மகன் எல்லாரையும் பார்த்து வீறிட்டு அழுதான்
மகனின் கண்ணில்
நேற்றுவரையிருந்த புருவங்களில்லை
பலர் வந்தார்கள்
ஒருவரை ஒருவர் அஞ்சினோம்
வீடெங்கும் சல்லடையிட்டுத் தேடினார்கள்
பாம்பைக் காணாமல்
அவரவர் வீடு சென்றார்கள்
நாங்கள் எங்கள் வீட்டுக்குச் சென்றோம்
ஆளுக்கொரு பாம்புடன்.

பெரியப்பாவின் வருகை

பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்

 

அஞ்சலி

ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
வழித்தடம் அழுத்தமாகப் பதித்த காலங்களில்
அவரை நான் சபித்திருந்தேன்
கருத்துக் கலவரங்களில் அவர் எப்போதும் வாளேந்தி வருவார்
நான் நேர்மை மட்டும் தாங்கித் தோற்றிருக்கிறேன்
நியாயங்களில் அவருக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததில்லை
தன் நோக்கொன்றே சரியானது என்று உறுதியாக நம்பினார்
ரத்தம் கண்டு நான் மிரண்ட சமயங்களில்
புத்தனின் புன்னகையுடன் அவர் மேலேறிப் போனார்
எங்கோ உயர்ந்த புள்ளியில்
சூரியனுக்கு அருகில்
வெற்றிச் செருக்கில் என்னைத் திரும்பிப் பார்த்தபடி
சட்டென ஒருநாள்
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
அவருக்கும் எனக்குமான நினைவுகளில் உழன்றபடி
சுண்டிப் போன ரத்த விரல்களில்
அவர் விட்டுச் சென்ற அநீதிகளின் மேல் அமர்ந்து
இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்
மிகக் கவனமான
ஒரு அஞ்சலி

Share

கவிதை

கையிலிருந்து நழுவிக்கொண்டிருக்கும்
காலம்
காதல்
காமம்
உயிர்
பாதச் சத்தமற்ற ஒரு பூனையின் நடையைப் போல
நுழைந்தது தெரியாத ஒளியைப் போல
முகிழ்ந்தது அறியா மலர் போல
கையிடுக்கிலிருந்து
நெருக்க நெருக்க
வழிந்துகொண்டிருக்கும் நீர் போல
கனன்றுகொண்டே
கரியாகிக் கொண்டிருக்கும்
கங்கு

Share