இங்கே எதற்காக – புத்தக விமர்சனம்

ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிடுவது எத்தனை கடினமானது என்பது எல்லாருக்குமே தெரியும். அதுவும் மாற்றுத் திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே வணிகத் திரைப்படங்கள் வெளிவருவதே அத்தனை கடினம் என்னும் நிலையில், மாற்றுத் திரைப்படங்கள் மட்டுமே எடுப்பேன் என்றொரு இயக்குநர் உறுதியாக இருந்தால் அவர் என்ன பாடுபடவேண்டியிருக்கும் என்பதை இயக்குநர் ஜெயபாரதியின் ‘இங்கே எதற்காக’ நூலைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

inge etharkaakaஇங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், ரூ 150

முன்பு தூர்தர்ஷனில் மதியம் மாநில மொழித் திரைப்படங்கள் வரிசையில் ஜெயபாரதியின் ‘உச்சிவெயில்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அப்போது எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கலாம். அப்போதே இதுபோன்ற ‘மெல்ல நகரும் இருட்டுக்குள் யாரோ ஒருவர் சத்தம் குறைவாகப் பேசும் படங்களை’ (படமெடுக்க பணம் கேட்டு ஜெயபாரதி செல்லும்போது இப்படித்தான் நடிகை ராதிகா சொல்கிறார்) விரும்பிப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. மொழி தெரியாமல் சப்-டைட்டில்களை மெல்ல கூட்டி வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு மலையாள, கன்னடப் படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் கருப்பு வெள்ளை படம். (இதுதான் தமிழின் கடைசி கருப்பு வெள்ளை படமாம்.) ஜெயபாரதி என்ற பெயரைக் கேட்கவும் ஜெயபாரதி என்ற நடிகை நடித்தது என்றுதான் அதைப் பார்க்கத் தொடங்கினேன்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் என் வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். நான் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக மங்கலாக சில காட்சிகள் நினைவிலுள்ளன. தலைவாசல் விஜய் (அப்போது அவர் வெறும் விஜய் மட்டுமே. தலைவாசல் வெளியாகியிருக்கவில்லை) ராணுவத்திலிருந்து திரும்ப வந்தவர் போன்ற நினைவு. அந்த ராணுவ உடையில் க்ளோஸப் காட்சியில் என்னவோ பேசுவார். யாரோ ஒரு முதியவர் காணாமல் போய்விடுவார். அவரை காரில் தேடுதேடென்று தேடுவார்கள்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது இந்தப் படத்தைப் பார்த்திருந்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருந்தேன். ‘இதுக்கெல்லாம் அவார்ட்னு கொடுத்து… நம்ம டிடிக்குன்னு படம் கிடைக்குதே’ என்பதுதான் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. இந்தப் படம் ஏன் முக்கியமான படம் என்றெல்லாம் அன்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இன்றும் நான் இது மிக முக்கியமான படம் என்றெல்லாம் நினைக்கவில்லை. மாற்றுத் திரைப்படங்களின் இலக்கணமாக ஜெயபாரதியின் திரைப்படங்களைச் சொல்லவும் இல்லை. நிச்சயம் ஜெயபாரதியின் படங்களில் அவற்றுக்கே உரிய குறைகள் உள்ளன. ஆனால் இந்த இயக்குநர் ஏன் எதற்காக இது போன்ற படங்களை எடுக்கிறார், எப்படி இத்தனை கஷ்டத்துக்குள்ளாகி ஒரு படத்தை எடுக்கத் தோன்றுகிறது என்று நிச்சயம் யோசிக்கிறேன். மாற்றுத் திரைப்படங்களின் உச்சம் இல்லை என்றாலும், ஜெயபாரதியின் திரைப்படங்கள் நிச்சயம் மாற்றுத் திரைப்படங்கள்தான். மகேந்திரனின் திரைப்படங்கள்கூட இந்த அளவு மாற்றுத் திரைப்படங்கள் அல்ல என்றுகூடச் சொல்லலாம். மகேந்திரன் மாற்றுத் திரைப்படங்களுக்கும் வணிகத் திரைப்படங்களுக்கும் இடையே ஒரு பாதையைக் கண்டுகொண்டார். கொஞ்சம் முயன்றால் ஜெயபாரதியும் அந்தப் பாதையைக் கண்டுகொண்டிருக்கலாம். ஏனென்றால் சில குறைந்தபட்ச சமசரங்களுக்கு மகேந்திரன் போலவே ஜெயபாரதியும் ஆயத்தமாகவே இருந்திருக்கவேண்டும். அதற்கான தடயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆனாலும் ஏனோ ஜெயபாரதி அதைச் செய்யவில்லை.

ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். எடிட்டிங், தொடர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிக்கோர்ப்பு என எல்லாவற்றிலும் ஏனோதானோவென்று இருந்தது. ஜெயபாரதியின் திரைப்படமும் அப்படித்தான் இருந்ததாக நினைவு. குடிசை திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ருத்ரையாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, உச்சிவெயில், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் – இவை எல்லாமே ஒரே ரகம். பணம் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.

எவ்வித ஈகோவுமின்றி யார் பணம் தந்தாலும் வாங்கிக்கொண்டு படம் தயாரித்திருக்கிறார் ஜெயபாரதி. ஆனால் பணம் தந்தவர் நேர்மையற்றவர் என்று தெரிந்தால் அத்தோடு விலகிவிடுகிறார். (என்று புத்தகத்தில் சொல்கிறார்.) அப்படித்தான் 24சி வேதபுரம் முதல்வீதி திரைப்படத்தை இவர் நிறுத்துகிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்காக இவர் எடுக்கும் படம் தேநீர், அந்த கம்யூனிஸ்ட் தயாரிப்பாளர் செம்மலர்ச்செல்வனின் லீலைகளில் நின்றுபோகிறது. பணம் வந்தால் கம்யூனிஸ்ட்டுகள் கள்குடித்த குரங்கைப் போல் ஆடுவார்கள் என்று தோழர் வி.பி. சிந்தன் சொன்னதை அனுபவத்தில் புரிந்துகொண்டு அப்படத்தைக் கைவிடுகிறார். பின்னர் அதுவரை எடுத்த படம் சண்முகம் என்பவரால் (பிற்பாடு இவர் தராசு ஷ்யாம் என்று புகழ்பெறுகிறார்) ஊமை ஜனங்கள் என்று பெயர்மாற்றப்பட்டு வேறு கதையில் இது நுழைக்கப்பட்டு வெளிவந்து படுதோல்வி அடைகிறது.

மேற்கொண்டு படம் எடுக்க பணம் இல்லாமல், நடிக்க வந்த நடிகை போட்டிருந்த நகைகளையெல்லாம் விற்று உடன் நடிக்க வந்த அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைக்கும் அனுபவமெல்லாம் இவருக்கு ஏற்படுகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று இவரைச் செலுத்துகிறது. எப்படியோ அடுத்த அடுத்த படங்களை எடுக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே சில சமயங்களில் பத்துவருடங்கள்கூட கடக்கின்றன. ஆனாலும் யாரேனும் ஒருவர் வந்து படம் எடுக்கவேண்டும் என்றால் படம் எடுக்கிறார்.

இதற்கிடையில் கே.பாலசந்தர் நடிக்கவும் அழைக்கிறார்.  படம் இயக்கிக்கொண்டிருப்பதால் இவரால் நடிக்கச் செல்லமுடியவில்லை. ருத்ரையா இயக்கத்தில் நடிக்கச் சென்று அவமானப்பட்டு திரும்புகிறார். இதற்கெல்லாம் பிற்பாடு ‘கிராமத்து அத்தியாயம் படத்தில் நன்றாக நடித்ததால், ’அந்த’ நடிகருக்கு இவர் போட்டியாகிவிடுவாரோ என்று அஞ்சியே இவர் தூக்கப்பட்டார்’ என்று இவருக்குச் சொல்லப்படுகிறது. அதை இவர் ஏற்கவில்லை. ஆனால் அந்த ஒரு படத்துக்குப் பிறகு ருத்ரையாவும் ஓரம்கட்டப்படுகிறார். இதுதான் சினிமா உலகம் என்று இவருக்கு இவர் நண்பர் சொல்கிறார். முற்போக்களரான ருத்ரையா தனது அடுத்த படம் வராததற்கு ஜெயபாரதியின் வயிற்றெரிச்சலே காரணம் என்று சொன்னதாகவும் இவர் கேள்விப்படுகிறார்.

இப்படி புத்தகம் முழுக்க பல சிதறல்கள். இதன்வழியே நாம் திரையுலகின் ஜொலிக்கும் வெள்ளித்திரைக்குப் பின்னே நடக்கும் அவலங்களை ஏமாற்றங்களை துரோகங்களை துல்லியமாகக் காணமுடியும். சில நண்பர்கள் இதுபோன்ற துரோகங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படியெல்லாமா செய்வார்கள், இவர் ஏமாற்றத்தில் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் ஜெயபாரதியின் புத்தகம் முகத்தில் அறைந்து உண்மையைச் சொல்கிறது. எடுத்தவுடனேயே தான் சொல்வதெல்லாம் உண்மை என்று இறைவன் மீது சத்தியம் செய்துவிட்டுத்தான் ஜெயபாரதி தொடங்குகிறார். ஜெயபாரதி பொய் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை.

* ஒரு நடிகையிடம் பேட்டி எடுக்கச் சென்று அவர் ஷூட்டிங்கில் ஓய்வில் இருக்கும்போது ‘நான் தினமணிக் கதிரில் இருந்து வருகிறேன்’ என்று சொல்லவும் அவர் பதிலுக்கு ‘ஸோ வாட்’ என்று கேட்க, இவருக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. அந்த நடிகை – ஜெயலலிதா.

* சிவாஜி கணேசன் நடித்த ‘இளைய தலைமுறைகள்’ பட ஷூட்டிங்கில் கஷ்டப்படும் மகனுக்கு தாய் பணம் கொடுத்தனுப்பும் காட்சி. கை நிறைய சில்லறைகளாக அந்தத் தாய் (பண்டரிபாய்) கொண்டு வந்து மகனாக நடிக்கும் சிவாஜியிடம் கொடுக்க, சிவாஜி சில்லறைகளையெல்லாம் தொட்டு நடிக்கமாட்டேன், பணமாகக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

* குடிசை திரைப்படத்துக்கு இசையமைக்க விரும்பி இளையராஜாவே முன்வருகிறார். ஆனால் ஏற்கெனவே காமேஷ் (கமலா காமேஷின் கணவர்) இசையமைக்க ஜெயபாரதி ஒப்புக்கொண்டுவிட்டதால் இது நிறைவேறாமல் போகிறது.

* குடிசை திரைப்படத்தை எடுப்பதற்குள் ஜெயபாரதி படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. மாயாஜாலக் காட்சி நடத்தி பணம் சேகரித்து ஷூட்டிங் நடத்துகிறார். ’சுராங்கனி’ புகழ் மனோகர் கச்சேரி நடத்தி பணம் திரட்டிக் கொடுக்கிறார். சிவகுமார் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லி 2,000 ரூ தருகிறார். மிருணாள் சென்னை வைத்து தமிழில் படம் எடுக்க விரும்பும் விநியோகஸ்தரை, அப்பணத்தை குடிசை திரைப்படத்துக்குத் தரும்படி மிருணாள் சென்னே சொல்கிறார்.

* ஜெயபாரதியின் முதல் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. பாடல்களைச் சேர்ப்பதால் கோபப்பட்ட கமல் அதிலிருந்து விலகுகிறார். பிற்காலத்தில் ரஜினியை நடிக்கவும் ஜெயபாரதி கேட்கிறார். ‘சலிப்படையும்போது உங்களிடம் வருகிறேன்’ என்று சொல்கிறார் ரஜினி.

*Crowd funding மூலம் பணம் சேர்த்தே திரைப்படம் எடுக்கிறார் ஜெயபாரதி. சிலர் தருகிறார்கள். பலர் தருவதில்லை. ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உச்சிவெயில் படத்துக்கு பத்தாயிரம் நன்கொடை தருகிறார்.

நான் சில விஷயங்களையே சொல்லியிருக்கிறேன். இப்படி புத்தகமெங்கும் அறிந்த மனிதர்களின் அறியாத முகங்களும் அறியாத முகங்களின் அசரடிக்கும் குணங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அம்பிகா நடித்தால் இயக்குகிறேன் என்று சொன்ன மனிதரையும், உச்சிவெயில் படத்தில் ஹீரோவான தனக்கு எத்தனை பாடல்கள் என்று கேட்ட குப்புசாமித் தாத்தாவையும் மறக்கமுடியாது நம்மால்.

கமலையும் ரஜினியையும் நடிக்க கேட்ட இவர் ஏன் இவர் மம்முட்டியையோ மோகன்லாலையோ கேட்கவில்லை என்ற கேள்வி இப்புத்தகம் முழுவதும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலும் ஸ்ரீவித்யா ‘நீங்கள் எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பேன்’ என்று சொன்னதைப் படித்தபோது இந்நினைவு அதிகமாகியது. அதைத்தான் வைரமுத்து ஜெயபாரதியிடம் ‘இங்கே எதற்காக?’ என்று கேட்டிருக்கிறார் போலும்.

உண்மையில் தமிழ்த் திரையுலகில் வரும் திரைப்படங்களைப் பார்த்தும் யாருக்காக இன்னும் இதுபோன்ற திரைப்படங்களை ஜெயபாரதி இயக்குகிறார் என்று எனக்கு இன்னும் பிடிபட்டபாடில்லை. நண்பா நண்பா, புத்ரன், குருக்ஷேத்திரமெல்லாம் வந்ததும்கூட யாருக்கும் தெரியாது. சி.சு.செல்லப்பா புத்தகக் கட்டுகளை தலையில் சுமந்துகொண்டு வீதி வீதியாக விற்றதாகச் சொல்வார்கள். படத்தை முடிக்க ஒவ்வொரு கல்லூரியாக பணம் கேட்டு ஜெயபாரதி ஏறி இறங்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது

குருக்ஷேத்திரம் படம் வெளிவருவது போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் பட்டபாட்டைவிட பெரியதாக இருக்கிறது. திடீரென வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்தால்தான் படத்தை விற்கமுடியும் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட (இவர் ஏற்கெனவே ஷூட்டிங்கின்போது கோபத்தில் தேவடியா பசங்களா என்று கத்தியவர்) வேறுவழியின்றி அதற்கும் ஒப்புக்கொள்கிறார். முதலில் இவர்தான் ஜெயபாரதி தெரியாத வடிவேலு, இவர் யாரென்று தெரிந்துகொள்ளவும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்கிறார். ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது ‘சந்திரசேகருக்கே தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கீங்க, எனக்கும் ஒரு படத்துல வாங்கிக் கொடுங்கண்ணே’ என்று கேட்கிறார். விவேக்கும் இவரை அழைத்து ‘மாற்றுத் திரைப்படம்’ வேண்டுமென்று கேட்டு ஒரு படம் நடிக்க முயல்கிறார். அந்த முயற்சி வெற்றியடையாமல் அது பிற்பாடு ஒய்.ஜி. மகேந்திரா நடித்து ‘புத்ரன்’ என்ற திரைப்படமாக வெளிவருகிறது. (இப்படி ஒரு படம் வந்ததே எனக்குத் தெரியாது!) விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுக்குள்ளேயும்தான் எத்தனை கனவுகள்!

நூல் முழுக்க தினுசு தினுசான தயாரிப்பாளர்கள். ஹோட்டல் தொழில் நடத்தும் ஒருவர். தன்னைவிட இயக்குநருக்குப் புகழா என்று மருகும் ஒருவர். அம்பிகா ஹீரோயின் என்றால் படம் தயாரிக்கத் தயாராக இருக்கும் ஒருவர். படம் தயாரிக்க இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் கிடைத்ததையெல்லாம் தின்று பெண்களுடன் ஆட்டம்போடும் ஒருவர். இதற்கிடையில்தான் நாம் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம். நினைக்கவே அயற்சியாகத்தான் உள்ளது.

திரைப்படம் பற்றி தெரிந்துகொள்ள இந்நூலை வாசிப்பது மிக முக்கியம். இது மாற்றுத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வணிகத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களும் இதேபோலவோ இதைவிட அவமானப்பட்டு நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டு அவமானப்படுத்தி நம்பிக்கைதுரோகம் செய்துதான் மேலே வரவேண்டியுள்ளது. அத்தகைய ஒரு நிலையைக் காலம் காலமாகவே நம் திரையுலக அமைப்பு கைக்கொண்டுள்ளது. இந்நிலை அத்தனை சீக்கிரத்தில் மாறாது. ஒரு புகழ்முகம் தனக்குப் பின்னே ஒளித்துக்கொண்டிருக்கும் பல்வேறு முகங்களை நாம் தரிசிக்க நேரும்போது ஏற்படும் மனவலியை எப்படிச் சொல்வது? அந்த மனவலியை இப்புத்தகம் எனக்குக் காட்டியது.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023800.html

Share

ஈழம் அமையும் – புத்தக விமர்சனம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஈழம் அமையும்’ புத்தகத்தை வாசித்தேன். சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகமாகவே இதை நினைக்கிறேன். இதிலுள்ள அரசியல் என் நிலைப்பாடுகளுக்கு எல்லா வகையிலும் எதிரானதுதான் என்றாலும், இது எழுதப்பட்டிருக்கும் விதம் இந்நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.

cover_104771
ஈழம் அமையும், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம்
அச்சுப் புத்தகம் ரூ 250, மின் புத்தகம் ரூ 100
அச்சுப்புத்தகத்தை வாங்க: NHM site | Flipkart | Amazon
மின்புத்தகத்தை வாங்க: DailyHunt (NewsHunt)

ஈழம் அமையும் என்ற தலைப்பிலேயே நாம் எத்தகைய நிலைப்பாட்டுள்ள நூலை வாசிக்கப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்டுவிடலாம். எனவே மிக எளிதான முன் தயாரிப்புகளுடன் இந்நூலை அணுகமுடிகிறது. ஆனால் ‘ஈழம் அமையும்’ என்று தலைப்பிருந்தாலும், இந்நூல் 99% பேசுவது எப்படி விடுதலைப்புலிகளும் அப்பாவி ஈழத்தமிழ் பொதுமக்களும் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பதையே. ஈழம் எப்படி அமையும் என்பதற்கு இந்நூல் அரசியல் ரீதியாகவோ செயல்பாட்டு ரீதியாகவோ எவ்வித தீர்வையும் சொல்லவில்லை. இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் தீர்வு, இந்நூலின் கனத்துடன் ஒப்பிடுகையில் இதை வாசிக்கும், இக்கொள்கையையொத்த மனமுடையவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும். ஆம், அரவிந்தர் அருளில் ஒருநாள் ஈழம் அமையும் என்கிறார்.

ஒரு தமிழ்நாட்டுத் தமிழனாக உண்மையில் தனி ஈழம் அமைகிறதா இல்லையா என்பதில் எனக்கு எவ்வித தீவிரக் கருத்தும் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் உடல்சார்ந்தோ சுதந்திரம் சார்ந்தோ நான் எந்தவொரு இன்னலையும் அனுபவிக்கவில்லை. மிகச் சாதாரண ஒரு சுயநலமியாகவும் நான் இருக்கலாம். ஆனால் அங்கே நடக்கும் இனப்படுகொலை நிச்சயம் மனத்தை உலுக்கியது என்பதில் மாற்றமில்லை. ஒருவகையில் இப்பார்வை இந்தியாவின் பார்வைதான். என் பார்வை இந்தியாவின் பார்வையாகத்தான் இருக்க முடியும். என் போலவே பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களும் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். மிகக் குறைவானவர்களே உணர்ச்சிபொங்க இந்த அரசியலை அணுகுகிறார்கள் என்பது என் எண்ணம்.

இதில் மிக முக்கியமான விஷயம், விடுதலைப் புலிகளையும் அப்பாவி ஈழத் தமிழர்களையும் பிரித்துக்கொள்வது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், எனவே அவர்கள் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களை சாக்காக வைத்து பொதுமக்களைக் கொல்வது என்பது ஏற்புடையதல்ல. இங்கேதான் பெரிய அரசியலை இருபக்கமும் நாம் பார்க்கலாம். ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்துக்கொள்ளாதவாறு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்களை ஈழத்தமிழர்களின் எதிரிகளாகச் சித்தரிப்பார்கள். இந்த சித்தரிப்பு ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்பதுதான் இன்றைய நிலை.

இப்புத்தகம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் விடுதலைப்புலிகளையும் ஈழப் பொதுமக்களையும் எவ்விதத்திலும் பிரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. எங்கெல்லாம் விடுதலைப்புலிகள் பற்றிய குறிப்புகள் வருகின்றனவோ அதை ஒட்டியே ஈழத்தமிழர்கள் பற்றிய குறிப்புகள் மிகக் கவனமாகச் சொல்லப்படுகின்றன. எவ்வித அரசியலும் இன்றிப் இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அவர்களறியாமலேயே இதில் விழுந்துவிடுவார்கள்.

இப்புத்தகம் முன்வைக்க வரும் மிகமுக்கியமான ஒரு விஷயம், விடுதலைப்புலிகளின் அழித்தொழிப்புக்கு, எனவே ஈழத்தமிழர்களின் ஒழிப்புக்கு மிக முக்கியக் காரணம் இந்தியாதான் என்பது. தொடக்கம் முதல் புத்தகத்தின் இறுதிவரை இந்திய வெறுப்பு இலங்கையின் சிங்கள பேரினவாத அரசின் மீதான வெறுப்புக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக ஆசிரியரின் கொள்கைக்கு வலுவூட்டும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளது. அத்தனை ஆதாரங்களின் அடிப்படையும் ஒன்றுதான். புவிசார்நலனுக்காக இப்போரை இந்தியா நடத்தியது என்பதுதான் அது. இந்தியாவுக்குப் போட்டியாக சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இப்போருக்கு ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக உதவின என்றும் சொல்லப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்த உலகங்களின் முக்கிய நாடுகளும் விடுதலைப்புலிகளை எனவே ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டினார்கள் என்கிறார் ஆசிரியர் அய்யநாதன்.

மறந்தும்கூட ஒரு வார்த்தைகூட விடுதலைப்புலிகளின் மீதான விமர்சனத்தை வைக்கவில்லை. விடுதலைப்புலிகள் சமாதானத்துக்குத் தயாராக இருந்தார்கள் என்பதை மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு ஆதாரங்களுடன் சொல்லும்போது, விடுதலைப்புலிகள் காந்திய இயக்கம்தானோ, நமக்குத்தான் உண்மை புரியாமல் போனதோ என்றும் குழப்பமே ஏற்பட்டுவிடுகிறது. அதிலும் விடுதலைப்புலிகள் சுனாமியின்போது எப்படி சிங்களவர்களுக்கும் உதவினார்கள் என்று மறுபடி மறுபடி சொல்லும்போது, இது ஒன்றைத்தவிர விடுதலைப்புலிகள் சிங்களவர்களுக்கு எப்போதும் உதவியதில்லையோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

இந்தியாவின் பிரதமர்களின் இந்திரா காந்தி மட்டுமே தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக உண்மையாக நடந்துகொண்டார் என்று சொல்லும் இந்நூல், இந்தியாவின் மற்ற எல்லா பிரதமர்களையும் ஒரே தட்டில் வைக்கிறது – வாஜ்பாய் உட்பட. இன்று ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில் பேசிய வைகோ இக்கருத்தை மறுத்து வாஜ்பாய்க்கே தெரியாமல் அதிகாரிகளின் லாபியால்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலை இந்திய அரசால் அச்சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார். இந்திரா காந்தியின் ஈழப்பாசத்துக்குக் காரணம் கூட, இலங்கை அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததுதான் என்றும் அய்யநாதன் இந்நூலில் சொல்கிறார்.

இந்நூலின் முக்கியத்துவம் என்பது – மிக வரிசையாக அத்தனை நிகழ்வுகளும் ஆதாரங்களுடன் அடுக்கப்பட்டுள்ளன. மிகத் தெளிவான எழுத்துநடை. ஆதாரங்களுக்கு இடையேயான புள்ளிகள் மிகத் தெளிவான தர்க்கத்தால் இணைக்கப்பட்டுள்ளன. தன் கொள்கை நிலைப்பாட்டில் இருந்துகொண்டு எப்படி ஒரு சிறந்த புத்தகத்தை எழுதவேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு கையேடு. அதே சமயம் இந்நூல் சறுக்கும் இடங்களைப் பார்க்கலாம்.

முதல் குறை என்பது, கூறியதைப் பலமுறை மீண்டும் மீண்டும் கூறுவது. ஒருகட்டத்தில் சலிப்பேற்பட்டுவிடுகிறது.

இன்னொருகுறை, அய்யநாதனின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிர்நிலைப்பாட்டுடையவர்களுக்கு இந்நூல் எப்படி உதவும் என்பது. இதை மிகக் குழப்பான ஒரு மொழியில், புத்தகம் படிக்காதவர்களுக்குப் புரியாத வகையில், ஜென்ராம் இன்று ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் குறிப்பிட்டார். இந்நூலை இக்கொள்கையை ஏற்காதவர்களும் கொண்டாடமுடியும் என்பதுதான் அவர் சொல்ல வந்தது. அதை என் உதாரணம் மூலமே விளக்குகிறேன்.

விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியவர்களே என்பதே என் நிலைப்பாடு. அதை இந்தியா செய்து முடித்தது என்றால் அதை நான் இந்தியாவின், காங்கிரஸின், அதற்கு உதவிய எதிர்க்கட்சிகளின், அண்டைநாடுகளின் சாதனையாகவே பார்ப்பேன். இந்நூலே அதற்கான தரவாக அமையும். இதைத்தான் ஜென்ராம் சொல்லவந்தார் என்று நினைக்கிறேன். அப்படித்தான் இந்நூல் உள்ளது. விடுதலைப்புலிகள் ஒழிக்கப்படும்போது பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பதற்கான உறுதியை இந்திய அரசு பெறவில்லை, அப்படிக் கேட்டுப் பெறும் வகையில் இந்திய அரசு இல்லை அல்லது அதை முக்கியமாக இந்திய அரசு நினைக்கவில்லை, அல்லது ஈழத்தமிழ்ப்பொதுமக்கள் ஒழிந்தாலும் பரவாயில்லை புலிகள் ஒழியட்டும் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம் என்பதில் எது ஒன்று உண்மையென்றாலும் அது இந்தியாவின் பக்கம் நிகழ்ந்த பெரிய சறுக்கல்தான். அதுவும் மீண்டும் சரிசெய்யப்பட இயலாத ஒரு தோல்வி. ஒருவகையில் யோசித்துப் பார்த்தால் இத்தகைய ஒரு பயங்கரவாத ஒழிப்பில் இப்படி நடப்பதுதான் உலகம் முழுக்க நடந்த வரலாறுகளில் இருந்து நாம் தெரிந்துகொள்வது. இப்படிச் சொல்லி எவ்வகையிலும் நான் இதை நியாயப்படுத்தவில்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இப்படித்தான் நடக்கிறது. இந்திய அமைதிப்படையின் மீதான குற்றச்சாட்டுகளிலும் நாம் இதைப் பார்க்கலாம். இதைவிட மிக முக்கியமான எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டுமென்றால் – விடுதலைப்புலிகளின் செயல்பாட்டிலேயே நாம் பார்க்கலாம். அவர்கள் எத்தனை பேரை எதற்காகக் கொன்றார்கள் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். சிறுவர்களை, தமிழ் முஸ்லிம்களை, சக இயக்கத்தவர்களைக் கொன்றார்கள். அதற்கான நியாயங்கள் மெல்ல அத்தரப்பிலிருந்து உருவாகிவரும். இதுவே மிகப்பெரிய பரப்பில் ராணுவத்தரப்பிலும் நடந்துவிடுவது கொடுமைதான்.

இந்நூலின் இன்னொரு சறுக்கல் – இறுதி அத்தியாயங்களில் அய்யநாதன் சொல்லும் ஆதாரமற்ற வம்புகள் பற்றிது. ராஜிவ் காந்தி கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றும், அவரைக் கொல்வதற்கான காரணம் எதுவும் விடுதலைப்புலிகளுக்கு இல்லை என்றும், சர்வதேச சதியில் ராஜிவை ஒழிக்க விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் ஜெயின் கமிஷனை சுட்டிக்காட்டி அய்யநாதன் சொல்கிறார். (புத்தகத்திலிருந்து: ராஜிவ் காந்தியை படுகொலை செய்யச் சர்வதேச அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது; அத்திட்டம் தீட்டியவர்களே ராஜிவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்என்கிற உண்மைகள் எல்லாம் மத்திய அரசு அமைத்த நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் விசாரணை ஆணையத்தில் வெளிவந்தது.) ஆயிரத்தோராவது முறை இந்த வம்பை நாம் படிக்கிறோம். விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்ற ஒருதரப்பிலிருந்து வேறுபட்ட இன்னொரு புலிஆதரவு தரப்பு இது. புலிகள்தான் கொன்றார்கள், ஆனால் சதி அவர்கள் செய்யவில்லை என்பது. அய்யநாதன் ஒருபடி மேலேபோய், புலிகள் கொன்றிருக்க வாய்ப்பில்லையோ என்ற சந்தேகத்துடன் நிச்சயமாக சதியை அவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்கிறார். கருமைக்கும் வெண்மைக்குமிடையேதான் எத்தனை நிறங்கள். சிபிஐ ஏன் சதிக்கான காரணத்தைக் கண்டறியவில்லை என்பதைப் பெரிய விஷயமாக முன்வைக்கிறார் அய்யநாதன்.

இந்திராகாந்தி கொலையில் உள்ள மர்மங்கள், அதில் சோனியாவின் பங்கு என்ன (தாக்கர் ஆணையத்தை முன்வைத்து சொல்கிறார் ஆசிரியர்), நரசிம்மராவ் சந்திராசாமி பங்கு என்ன, லக்குபாய் பதக்கிடம் சந்திராசாமி சொன்னது என்ன, சுப்ரமணியம் சுவாமி திருச்சி வேலுச்சாமியின் கேள்விகளுக்கு எப்படி உளறினார், எப்படி நடுங்கினார் என்றெல்லாம் திண்ணைப் பேச்சுகளில் அலைபாய்கிறது இப்புத்தகம். சுப்ரமணியம் சுவாமிக்கு கொலையில் பங்கிருக்கிறது என்றால் அதே சுப்ரமணியம் சுவாமி சோனியாவுக்குப் பங்கிருப்பதாகச் சொல்கிறாரே, சோனியாவும் மௌனமாக இருக்கிறாரே என்ற கேள்விக்கு ‘அது புரியாத ஒரு புதிர்’ என்று ஓரிடத்தில் நழுவும் அய்யநாதன், இன்னொரு இடத்தில் இப்படிச் சொல்கிறார்: இந்திரா காந்தி படுகொலையில் சோனியாவின் பங்கு பற்றிய உண்மைகளை இந்திய மக்கள் அறியாதிருக்கலாம், ஆனால், இந்திரா காந்தியைச் சதி செய்து வீழ்த்திய அந்த சக்திகளுக்கு தெரியாமல் இருக்குமா? அதனால்தான், சந்திராசாமி, சுப்ரமணியம் சுவாமி ஆகியோரின் முகத்திரைகள் விசாரணை ஆணையங்களில் கிழித்தெறியப்பட்ட பின்னரும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் சோனியா காந்திக்கு இல்லாமல் போனது. இல்லையென்றால், சோனியாவை இன்றுவரை சுப்ரமணியம் சுவாமி மிரட்டிக்கொண்டிருக்கிறாரே, என்ன காரணம்? அதன் பின்னணி என்ன?” இவ்வாறாக ஒரு பட்டியலை இட்டுவிட்டு, சோனியா தன் கணவர் ராஜிவின் கொலைக்காக விடுதலைப்புலிகளை ஒழிக்கவில்லை, தன் மீதான பழியை மறைக்கவே விடுதலைப்புலிகளை ஒழிக்கும் இலங்கையின் போருக்கு உதவியுள்ளார் என்று முடிக்கிறார் அய்யநாதன்.

இதைவிட இன்னொரு வம்பு என்னவென்றால், சிவராசன் எப்போதோ புலிகள் இயக்கத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் இவர்களையெல்லாம் வழிநடத்துவதெல்லாம் சந்திராசாமியும் சுப்ரமணியம் சுவாமியும்தான் என்று பெங்களூர் ரங்கநாத் (ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர், சிவராசன், சுபா உள்ளிட்டவர்களுக்கு பெங்களூருவில் தங்குவதற்கு வீட்டை ஏற்பாடு செய்தவர்) சொன்னதையும் இந்நூலில் காணலாம்! ராஜிவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமியைப் பற்றி திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளதையும், ரகோத்தமன் அவரது ‘ராஜிவ்கொலை – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் மரகதம் சந்திரசேகர் பற்றியும் மறைக்கப்பட்ட வீடியோ பற்றியெல்லாம் கூறும் அய்யநாதன், திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைப் பற்றியும்  வைகோ ஏன் சாட்சியாக சேர்க்கப்பட்டார், ஏன் ரகோத்தமனால் விசாரிக்கப்படவில்லை, சிவராசனுக்கு உதவியது சீனிவாசய்யா என்ற நபர் வைகோவின் சகோதர் ரவிச்சந்திரனாக இருக்கலாம் என்றெல்லாம் ரகோத்தமன் சொல்லியிருப்பதை எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை ஒழிக்க ராஜபக்ஷே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கருணாநிதியும் உதவினார் என்று பல இடங்களில் பதிவு செய்கிறார். அதாவது கருணாநிதி மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதம் முன்னரே திட்டமிடப்பட்டது என்றும் அதை தில்லி வட்டாரங்கள் அறிந்திருந்தன என்றும் சொல்கிறார். 2ஜி வழக்கின் கோப்புகளைக் காட்டி கருணாநிதியை எம்.கே.நாராயணன் மிரட்டினார் என்றும் சொல்கிறார்.

இந்நூலின் மிக மோசமான அத்தியாயம், கேரளா மாஃபியா என்று எழுதப்பட்டிருக்கும் அத்தியாயமே. உண்மையில் இந்திய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயலாற்றிய பலரில் முக்கியமான மலையாளிகளைப் பொறுக்கியெடுத்து (எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், டி.கே.ஏ.நாயர், சதீஷ் நம்பியார், விஜய் நம்பியார், நிருபமா மேனன் ராவ்) கேரள மாஃபியாவே விடுதலைப்புலிகளின் எனவே ஈழத்தமிழர்களின் இனஒழிப்புக்கு காரணம் என்கிறார். ஏன் ‘கேரளா மாஃபியா’ ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள் என்பதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து அய்யநாதன் சொல்கிறார் பாருங்கள்! இந்நூலை ஒட்டுமொத்தமாகத் தகர்க்கும் அத்தியாயம் அது. ஹனி டிராப்பிங் என்பதை வைத்து ஒரு மலையாளியை விடுதலைப்புலிகள் மாட்டிவிட்துதான் ‘கேரள மாஃபியா’வின் ஒட்டுமொத்த வெறுப்புக்கு காரணமாம்! முக்கியமான புத்தகம் கிசுகிசு கட்டுரைக்கு இணையாக இறங்கிவிடும் இடம் இது. உண்மையில் அங்கே கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லாமல் வேறு யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செயல்பட்டிருப்பார்கள். 2-10-15 அன்று நடந்த ‘ஈழம் அமையும்’ புத்தக வெளியீட்டில் ‘கேரள மாஃபியா’வை மறுத்த ஒரே ஜீவன் ஜென்ராம் மட்டுமே. மிக மோசமான வன்மத்தை வெளிப்படுத்தும் இப்புத்தகத்தின் ஒரு மிகப்பெரிய கறை என்றே சொல்லவேண்டும். மிகத்தெளிவாக இந்திய வெறுப்பு, விடுதலைப்புலி ஆதரவு என்ற மடையை தமிழ்த்தேசியத்தின்பால் திருப்பும் உத்தி இது என்றுதான் தோன்றுகிறது.

புத்தகத்தின் முதல் பகுதி மிக நேர்த்தியான (கூறியது கூறல் ரொம்பவே அதிகம் என்றாலும்) ஆய்வுநூல் போன்று தோற்றம் கொள்ள, பிற்பகுதி வெற்று வம்புகளில் உழன்றுவிட்டது. இதைத்தான் ஜென்ராம் (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) நாசூக்காக பத்திரிகையாளர் அய்யநாதன் என்றும் அரசியல்வாதி அய்யநாதன் என்றும் பிரித்துக்கூறினார். கூறிவிட்டு, ஆனாலும் பத்திரிகையாளர் அய்யநாதனே முழுக்க வெளிப்பட்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டார். சபை நாகரிகம் கருதி இருக்கலாம் என எடுத்துக்கொண்டேன்.

இந்நூலின் கடைசி அத்தியாயமே மிக முக்கியமானது. பலருக்கு அதிர்ச்சிகரமானது. அதில் நாம் புரிந்துகொள்ள பல விஷயங்கள் உள்ளன. அரவிந்தரின் அருளால் ஈழம் அமையும் என்கிறார் அய்யநாதன். இதை வைகோ (ஈழம் அமையும் புத்தக வெளியீட்டில்) மிக நாசூக்காகக் குறிப்பிட்டு, ஆங்கிலத்தில் ஹிந்தியில் மொழிபெயர்க்கும்போது கொஞ்சம் பார்த்து செய்ங்க என்று கேட்டுக்கொண்டார். அரவிந்தரின் அருளில் ஈழம் அமையும் என்றால் அத்தனை பிரச்சினை எல்லாருக்கும். விடுதலை பத்திரிகையில் இந்நூலைக் கைகழுவியே விட்டார்கள். ஈவெரா வகுத்துக்கொடுத்த பாதையில் எதையும் ஒற்றைவரியில்தான் இவர்களால் புரிந்துகொள்ளமுடியும் போல. நூல் முழுக்க மாங்குமாங்கென ஒருவர் தொகுத்து ஒரு தரப்பை முன்வைத்திருக்கிறார். கடைசியில் அவரது நம்பிக்கையின்பாற்பட்ட ஒன்றைச் சொல்கிறார். உடனே நூலை நிகாகரிக்கிறார்கள். ‘அரவிந்தரின் அருளில் அமையும் என்றால் அது இஸ்லாமிய கிறித்துவ நாடாக இருக்க வாய்ப்பில்லை, ஹிந்து நாடாக இருந்துவிடுமோ’ என்று பயந்து இந்நூலை நிராகரிக்கிறார்களோ என்னவோ யார் கண்டது.

Share

மெஹர் Vs பாயம்மா

பிரபஞ்சனின் புனைவுகள் என்றாலே படிக்க எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான். ஆரம்பகாலங்களில் அவர் எழுதிய சில கதைகளைப் படித்ததனால் வந்த நடுக்கமாகவே அது இருக்கவேண்டும். அவரது கட்டுரைகளைப் படிப்பேன். இன்று அவரது சிறுகதையான பாயம்மாவைப் படித்தேன். விஜய் டிவி சித்திரத்தில் தாமிரா இயக்கத்தில் வெளியான மெஹர் என்னும் சித்திரத்தைப் பார்த்தபின்னர், அவரது இந்தச் சிறுகதையைப் படிக்க ஆர்வம் கொண்டு, இன்று படித்தேன். இந்த பாயம்மா கதை நற்றிணை பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘யாசுமின் அக்கா’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.

மெஹர் ஒரு நல்ல முயற்சி. தமிழில் இதுவரை முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நேர்மையான ஒரு திரைமுயற்சி கூட வந்ததில்லை. மலையாளத்தில் பல படங்கள் இப்படி வந்துள்ளன. ஆனால் தமிழில் ஒரு படம் கூட இல்லை. எதாவது ஒரு கதாபாத்திரத்தின் பெயரை முஸ்லிம் பெயராக வைத்துவிட்டால் அது முஸ்லிம்களின் படமல்ல. அப்படி இருந்த ஒரு நிலையில் இந்த மெஹர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும். அந்த அளவில் தாமிரா பாராட்டப்படவேண்டியவர். ஒரு திரைப்படத்தின் முக்கியப் பங்கு இப்படி யதார்த்தங்களை தன்னளவில் தொடர்ந்து பதிந்துகொண்டே இருக்கவேண்டும்.

இங்கே வரும் மெகா தொடர்களும் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கவை அல்ல. முன்பு சுஹாசினி இயக்கிய சில குறுந்தொடர்களும், பாலுமகேந்திரா இயக்கிய குறுந்தொடர்களும் மட்டுமே பொருட்படுத்தத்தக்கவை. இதுபோன்ற ஒரு சித்திரம் முயற்சி முன்பு தூர்தர்ஷனிலும் நடந்தது. நீங்காத நினைவுகள் என்றொரு நாடகம் ஒளிபரப்பப்பட்டது. ஜெயபாரதி நடித்தது என்று நினைக்கிறேன். இன்னொரு நாடகம் ஜெய்சங்கர் நடித்தது. ஆனால் அவையெல்லாம் நல்ல முயற்சியாகக் கைகூடவில்லை.

இந்நிலையில் தாமிராவின் மெஹர் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம், அதன் தரம். இஸ்லாமியர்களின் வாழ்க்கைப் பதிவு. இந்த இரண்டுமே இச்சித்திரத்தை முக்கியத்துவம் பெற வைக்கின்றன. சல்மாவின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. அதைவிட சல்மாவின் மகனாக வருபவரது நடிப்பு அட்டகாசம். பவா செல்லத்துரைக்குக் குரல் கொடுத்தவரின் குரல் பொருந்திவரவில்லை என்பது ஒரு குறை. இன்னொரு குறை என்று சொன்னால், சரியாக கையாளப்படாத நெல்லை வட்டார வழக்கு. மாப்பிள்ளையின் அண்ணன், கடன் தர மறுத்து இரண்டாம் தாரத்துக்கு வாழ்க்கைப்படச் சொல்லும் இன்னொருவர் என இருவரும் மிக இயல்பு. பின்னணி இசை மிக அழகாக இருந்தது. கதைக்கு ஏற்றபடி எவ்வித உறுத்தலும் இன்றி கூடவே முழுக்கப் பயணித்தது.

சிறுகதை என்று பார்த்தால் பாயம்மா மிகத் தட்டையான கதை. நுணுக்கங்களெல்லாம் எதுவுமே இல்லை. தவறு செய்யத் தயாராக இருக்கும் ஒரு பையன், அவனுக்குள் எவ்விதப் போராட்டங்களும் இல்லை. கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்பதால் திருடுகிறான். பாயம்மாவே போலிஸிடம் சொல்கிறாள். வழக்கு வேண்டாம் என்று முதலாளி சொல்கிறார். முதலாளியே மனம் இறங்கி கல்யாணத்துக்குப் பணம் தருகிறார். ஆனால் பாயம்மா மறுத்துவிடுகிறாள். அவ்வளவுதான். இக்கதையைப் படிக்க நான் நினைத்த காரணமே, பிரபஞ்சன் இஸ்லாமியர்களின் பேச்சு வழக்கை எப்படி எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளத்தான். என்னை ஏமாற்றவில்லை பிரபஞ்சன், பேச்சு வழக்கைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்!

ஒரு குறிப்பிட்ட இனத்தினரின் சாதியினரின் கதையை எழுதுவதில் உள்ள சவால் இது. ஆனால் பிரபஞ்சன் கதையை மட்டுமே கவனத்தில்கொண்டு, இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லா, யாரசூல், நிக்காஹ் போட்டு நிரப்பிவிட்டார். அதில் மோனே மோளே என்றும் ஒரு வரியில் ’என்னண்டயே சதாய்க்கிறியே’ என்றும் வருகின்றன. இங்கேதான் தாமிராவின் திறமை மின்னுகிறது.

ஒரு எழுத்துப் பிரதியை எப்படி திரைமொழியாக்குவது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. மிக அழகாக நிர்ப்பந்தங்களை உருவாக்குகிறார் தாமிரா. தன்மொழியில் தேவைப்படும்போதெல்லாம் சொல்லத் தொடங்கி பார்ப்பவர்களுக்கு ‘அவன் திருடினாலும் தப்பே இல்லை’ என்ற எண்ணத்தைக் கொண்டுவருகிறார். இந்த எண்ணமே பாயம்மா எடுக்கப்போகும் முடிவுக்கு ஓர் அழுத்தத்தைத் தருவது. இவையெல்லாம் சிறுகதையில் இல்லை. பாயம்மா ஒரு சிறிய கதை, அவ்வளவுதான். ஆனால் மெஹர் பல நுணுக்கங்களைத் தொட்டுப் போகும் படைப்பு. பாயம்மா சிறுகதை பாயம்மாவை ஒரு படி மேலேற்றுகிறது. ஆனால் மெஹர் பாயம்மாவுக்கும் அவருக்கு இணையாக அவரது மகனுக்கும் ஓர் இடத்தை வழங்குகிறது. மெஹரின் முடிவு கொஞ்சம் பிரசாரத்தனத்தோடு முடிகிறது. பாயம்மாவின் முடிவோ ஒரு லட்சியத்தோடு முடிகிறது. இரண்டுக்கும் அடிநாதம் ஒன்றுதான். அந்த அடிநாதம் மெஹரில் மட்டுமே மிக அழகாக பல இடங்களில் தொட்டுச் செல்லப்பட்டிருக்கிறது.

தாமிராவின் இந்த மெஹர் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஒரு சிறிய கதையின் பொறியே போதும், ஒரு சிறந்த திரைமொழியை உருவாக்க முடியும் என்று காட்டுவதற்கு. அதுமட்டுமல்ல, அந்தப் பொறி எவ்விதத்திலும் புதுமையாக இல்லாமல் இருந்தாலும் (பாயம்மாவின் கதையில் எவ்விதப் புதுமையும் இல்லை) திரை உருவாக்கத்தில் கதையைப் பின்னுக்குத் தள்ளி காட்சி அனுபவத்தைப் பல மடங்கு உயர்த்த முடியும் என்பதற்கும் மெஹர் இன்னுமொரு எடுத்துக்காட்டு.

பின்குறிப்புகள்:

01. ரெட்டைச்சுழி எடுத்ததற்காக தாமிராவை மன்னித்துவிடலாம்.
02. பாயம்மா கதையில் மோதிரத்தைத் திருடிக்கொண்டு ஓடும் பரசுராமன் கதாபாத்திரம் ஏன் மெஹரில் பரந்தாமன் ஆனது என்று புரியவே இல்லை. 🙂
03. மெஹர் சித்திரத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் பிரபஞ்சன் எழுதியதுதான் என்றால் – ஒருவேளை இப்படி இருந்தால் – பிரபஞ்சன் பாயம்மாவிலிருந்து மெஹருக்கு முன்னேறியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 😛

Share

வெண்முகில் நகரம்

ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு நாவல்களின் ஒட்டுமொத்த சித்திரம் எவ்வகையிலும் எதனுடனும் நிகரற்றது. என்னால் இதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. இதை ஒரு மனிதன் எழுதினான் என்பதே காலத்தில் மிகப்பெரிய ஆச்சரியமாக நிச்சயம் நிலைகொள்ளும். எழுதிச் செல்லும் இறையின் கைகளே கருவியைத் தேர்ந்தெடுக்கின்றன என்று தத்துவத்தின் வழியே ஜெயமோகன் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுவார்.

இதை எத்தனை பேர் உணர்ந்துகொண்டு படிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரும் படிக்கவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்நாவலைப் படித்துமுடித்த இந்நேரத்தில் இந்நாவல் தந்த நிறைவும் ஆச்சரியமும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. உள்ளமெல்லாம் வெண்முகில் நகரத்தில் பாத்திரங்கள் நிறைத்திருக்கின்றன.

சாத்யகியும் பூர்சிவரஸ்ஸும் கொண்ட எழுச்சி மிக்க சித்திரம் நான் கொஞ்சம் எதிர்பார்க்காதது. அதுவும் இறுதியில் அவர்களை சந்திக்க வைத்ததெல்லாம் நான் கொஞ்சம் கூட யோசிக்காதது. களத்தில் இரண்டு பேரும் முட்டிக்கொண்டு சாத்யகியால் கொல்லப்படப்போகும் பூர்சிவரஸ், முன்னர் ஒருமுறை சாத்யகியைக் கட்டித் தழுவியிருக்கிறான் என்பதே, சந்தேகமே அன்றி அசையச்செய்யும் உருவாக்கமே. இவையேதான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்றாலும், யாரென்றே தெரியாமல் போயிருக்கவேண்டிய இருவர் வரலாற்றின் சித்திரத்தில் இப்படி நிற்கும் காட்சி தரும் நிறைவை, ஒரு வகை அதிர்ச்சியை என்னால் சொல்ல முடியவில்லை.

திருதராஷ்டிரன் முன்னர் பாண்டவ கௌரவர்கள் கிருஷ்ணன் முன்னிலையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி, உணர்ச்சிமயத்தின் உச்சம்.

முதற்கனல் தொடங்கி மழைப்பாடல் பிரயாகை எனப் பல்வேறு நாவல்களில் வரும் காட்சிகள் இந்நாவலில் சிறிய நீட்சியென பேசப்படுவதும், அன்றைய நிகழ்வுகள் இன்றைய புராணமாக எப்படி மையத்தைத் தாண்டிய அல்லது மையத்தை முற்றிலுமே இழந்துவிட்ட காவியமாக நிலைபெறுகிறது என்றெல்லாம் தொடர்ச்சியாகப் பார்ப்பதும் மிகவும் அற்புதமாகவே இருக்கிறது. ஏதோ நாம் காலத்தில் மகாபாரதத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது போல.

என்னளவில் பிரயாகையில் கொஞ்சம் நலிந்திருந்த நகைச்சுவை சார்ந்த பகுதிகள் இந்நாவலில் – மிக்குறைந்த அளவே வந்தாலும் – மிகக் கச்சிதமாக உள்ளன. அதிலும் த்ரௌபதி ‘ஆறாவது இளவரசனைப் பார்க்கிறேன் எனக்குத்தான்’ என்று சொல்லும் இடத்தில் – ஜெயமோகன் எழுதுவது போல – வெடித்துச் சிரித்துவிட்டேன்.

கிருஷ்ணரும் பலராமரும் வருவதற்காக ஏற்பாடு செய்யும் நூற்றுவனின் அத்தியாயம் முழுக்க நல்ல நகைச்சுவை. இதுவும் ஒரு காவியத்தின் முக்கியமான சுவையே என்று ஜெயமோகன் முன்பிருந்தே சொல்லி வருவதை நினைத்துக்கொண்டேன்.

பல வகைகளில் அடுத்து வரப்போகும் களங்களுக்கான காட்சிகளை மிக ஆழமாகத் திறந்து வைத்திருக்கிறது வெண்முகில் நகரம். பால்ஹிக நாட்டையும், சிபி நாட்டையும் விவிரித்த விதமெல்லாம் அட்டகாசம். படைப்பூக்கத்தில் உச்சத்தில் இப்படி ஒருவரால் தொடர்ந்து நிற்கமுடியும் என்பதே அசரடிக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் ஜெயமோகனை இளையராஜாவோடு ஒப்பிட்டுக்கொள்கிறேன். ஏனென்றே தெரியவில்லை. ஆனால் இப்படி அடிக்கடி ஆகிவிடுகிறது.

ஜெயமோகன் இதை எழுதும் காலத்தில் நான் அதை வாசிக்க நேர்ந்த அந்த இறைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. வேறென்ன என்று சொல்லத் தெரியவில்லை.

Share

எங் கதெ

எங் கதெ என்னும் கதையைப் படித்தேன். ஆம், இது முதலில் நாவலல்ல. சிறிய கதை. சிலாகிக்க ஒன்றுமே இல்லாத மிகச் சாதாரணமான கதை. பலமுறை பல விதங்களில் சலிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் முறை மீறிய உறவின் இன்னொரு புலம்பல். சரியான வார்த்தை, புலம்பல் என்பதுதான். கதையின் நாயகன் முதலில் இருந்து கடைசி வரை புலம்பிக்கொண்டே இருக்கிறான். ஒரே புலம்பலை எத்தனை முறை கேட்பது? கதை நெடுகிலும் முறை மீறிய உறவை வித விதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லும் மாந்தர்கள் வந்து போகிறார்கள். “காப்பி குடிக்கலாம், கடையை வாங்கலாமா” ரக உதாரணங்கள். சகிக்கவில்லை. ஆண் பெண் உறவின் சிக்கலின் எந்த ஒரு அம்சத்தையும் நுணுக்கமாக சித்திரிக்க முடியாததாலேயே, மிகத் தெளிவாக நாயகன் தன்மொழியில் சொல்லிச் செல்கிறார் எழுத்தாளர் இமையம். கதை முழுக்க பெண்களைத் திட்டித் தீர்க்கும் ஆண் வன்மம். அதற்கு ஒரு சமன்குரல்கூட கிடையாது. கள்ள உறவு, வெறி, கழிவிரக்கம், கொலை செய்ய முயற்சி, பின்பு திடீர் ஞானோதயம். இத்தகைய புத்தம் புதிய கருத்துடன் இக்கதையைப் படிப்பேன் என நினைத்தும் பார்க்கவில்லை! நாவலின் மொழி பல இடங்களில் வைரமுத்துவை நினைவூட்டுகிறது. தேவையே இன்றி வரும் திடீர் கவிதைத்தனமான வரிகளுக்காகவே நாயகனை கவிதை வாசிப்பவன் என்று ஆக்கிவைத்துவிட்டார் புத்திசாலி எழுத்தாளர். நான் ரசித்த ஒரே பகுதி, நாயகனின் தங்கைகள் அவன் மேல் காட்டும் அன்பை விவரிக்கும் வரிகளை மட்டுமே. மற்றபடி இந்நாவலில் ஒன்றுமே இல்லை.

Share

இளையராஜாவின் தேசபக்திப் பாடல்கள்

இளையராஜா தேசபக்திப் பாடல்களைப் போட்டதில்லை என்று ஃபேஸ்புக்கில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதையே நினைத்துக்கொண்டிருந்ததில் சிக்கிய பாடல்கள். இவை போக எனக்குத் தெரியாதவை, நான் மறந்தவை எத்தனையோ. இதற்குப் பின்னும் அது இந்தப் பாடல் போல இல்லை, அந்தப் பாடல் போல இல்லை என்றே சொல்லப் போகிறார்கள். பின்னால் பயன்படும் என்ற நோக்கில் அதை இங்கே சேமித்து வைக்கிறேன்.

என்னவோ தேடிப் போய் பல பாடல்களைக் கேட்டபோது உண்மையிலேயே அசந்து நின்றேன். இப்படிப்பட்ட ஒரு கலைஞனை போகிற போக்கில் அவமதித்துச் செல்வது வேறு எங்கேயும் நடக்காது என்றே நினைக்கிறேன்.

நான் பட்டியலிட்டிருக்கும் பாடல்களில் சில நேரடியாக தேசபக்திப் பாடல்கள் வகையில் வருபவை அல்ல. ஆனால் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் வரும் நல்லதோர் வீணை தேசபக்திப் பாடலென்றால் இவையும் அப்படியே.

சொர்க்கமே என்றாலும், உலகம் இப்போ எங்கோ போகுது (இரண்டுமே இளையராஜா இசை) – இவையும் ஒருவகையில் தேசபக்திப் பாடல்களே. அப்படியென்றால் கீழே உள்ளவையும்தான்.

காந்தி தேசமே காவல் இல்லையா – நான் சிவப்பு மனிதன்

 

மனதில் உறுதி வேண்டும் – சிந்துபைரவி

https://www.youtube.com/watch?v=vFfKyShYPxk

 

செந்தமிழ் நாடென்னும் போதினிலே – காமராஜர்

https://www.youtube.com/watch?v=n5m4d3Acg60

 

நண்பா நண்பா – தேசிய கீதம்

 

அண்ணல் காந்தி – தேசிய கீதம்

https://www.youtube.com/watch?v=cOi1ugy72Os

 

என் கனவினைக் கேள் நண்பா – தேசிய கீதம்

 

பாரத சமுதாயம் வாழ்கவே – பாரதி

 

 

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் – பாரதி

https://www.youtube.com/watch?v=adzljgaLKQM

 

வந்தே மாதம் ஜெய வந்தே மாதரம் – பாரதி

https://www.youtube.com/watch?v=uuUFLABpiI8

 

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட – பாரதி

 

தம்பி நீ நிமிர்ந்து பாரடா – என் உயிர்த்தோழன்

இந்த நாடு இருக்கிற – மக்கள் ஆட்சி

மனிதா மனிதா இனி உன் விழிகள் – கண் சிவந்தால் மண் சிவக்கும்

 

போராடடா ஒரு வாளேந்தடா – அலை ஓசை

கத்துக்கணும் கத்துக்கணும் ஒண்ணாயிருக்க – ஒண்ணா இருக்க கத்துக்கணும்

காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டால், நாட்டுப்பற்று என்பது நம் நாட்டில் என்ன இல்லை என்ற விரக்தியாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். அந்த வகையில் ’ஏங்கிடும் ஏழையின் கூக்குரல்தான் இங்கு தேசியகீதமடா’ பாடலும் ‘நஞ்சையுண்டு புஞ்சையுண்டு’ பாடலும் ‘உன்னால் முடியும் தம்பி தம்பி’ பாடலும் கூட தேசபக்திப் பாடல்தான்!

கடைசியாக: இப்படியெல்லாம் ஒருவர் என்ன பாட்டு போட்டிருக்கிறார், என்ன போடவில்லை என்று பார்ப்பதெல்லாம் சரியான செயலில்லை. ஒரு கருத்தியல்வாதிக்கு இது பொருந்தி வரலாம். நிச்சயம் கலைஞனுக்குப் பொருந்தி வராது. ஒரு கலைஞன் வெளிப்படையாக மறுத்தவற்றையே நாம் பொருட்படுத்தவேண்டும்.

எத்தனையோ ராஜா ரசிகர்கள் இதைவிட அதிகமான பாடல்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களெல்லாம் என்னை மன்னிக்க. 🙂

Share

யாகூப் மேமன் – தூக்குத் தண்டனை

உண்மையில் யாகூப் மேமன், கஸாப் என்று யார் தூக்கில் தொங்கினாலும் உள்ளே சின்ன பதற்றமும் வருத்தமும் வரத்தான் செய்கிறது.அதிலும் அவர்களது கடைசி நிமிடங்களை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களது உறவினர்கள் மனைவி மகன் மகள் என எல்லாரையும் நினைத்துப் பார்த்தால் ஏற்படும் சோகம் அளவில்லாததுதான்.

ஆனாலும் மிக அரிதான வழக்குகளில் தூக்கு என்னும் இந்திய நிலைப்பாட்டுக்கு என் ஆதரவு என்றும் உண்டு. அதிலும் இந்தியா போல தெருவுக்கு நூறு ‘முற்போக்காளர்கள்’ திரியும் நாட்டில், இந்த ஒரு சட்டம் இல்லாமல் போனால் இங்கே தீவிரவாதிகளெல்லாம் தியாகியாகிவிடுவார்கள்.

இந்திய மனசாட்சிக்காக (மனுசாட்சியாம்!) உச்சநீதி மன்றம் இவர்களைத் தூக்கிலிடுகிறது என்ற மொன்னை வாதத்தையெல்லாம் நான் நம்பவில்லை. கடைசி வரை இவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டது. மேலும் இந்திய மனசாட்சியை நிறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் செயல்பட எக்காரணமும் இல்லை. இப்படி பேசி பேசித்தான் எல்லாவற்றின் மேலும் இந்த முற்போக்காளர்கள் அவநம்பிக்கையையை விதைத்தவண்ணம் உள்ளார்கள். ஃபேஸ்புக்கில் மட்டும்தான் இது எடுபடுகிறது என்பது இப்போதைக்கான ஆறுதல். இத்தனைக்கும் யாகூப்மேமன் 23 வருடங்களுக்குப் பின்னர்தான் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். ஒருவகையில் இந்த அளவுக்கான காலம் கழிந்த தண்டனை ஒரு பின்னடைவுதான். இதைத்தான் நீதிமன்றங்கள் சரி செய்ய முயலவேண்டும்.

யார் தூக்கிலிடப்பட்டாலும் அதை ஏற்கவில்லை என்பவர்கள், எல் டி டி ஈ, மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ வரலாற்றில் கொன்று குவிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு, அவர்களை நிராகரித்துவிட்டு, பின்னர் கொள்கைகளைப் பேசவேண்டும்.

தூக்குத் தண்டனை தேவைதான், ஆனால் யாகூப் மேமன் நிரபராதி என்பவர்கள் நிச்சயம் ஜோக்கர்கள்தான். அவர்களை நாம் பார்த்து சிரித்துவிட்டு நகர்வதே சரியானது.

தூக்குத் தண்டனை தேவை, ஆனால் யாகூப் மேனனுக்கு தூக்கு அவசியமில்லை, இப்படிச் சொல்வதால் யாகூப் மேமன் நிரபராதி என்றோ அப்பாவி என்றோ அர்த்தமில்லை என்ற பி.ராமன் போன்ற கருத்து உடையவர்கள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒரே பதில், நான் உச்ச நீதிமன்றத்தை நம்புகிறேன் என்பது மட்டுமே.

இந்திய வெகுஜன முஸ்லிம்கள், இந்திய வெகுஜன கிறித்துவ ஹிந்துக்களைப் போன்றவர்கள்தான். அவர்கள் என்றுமே இந்திய மனசாட்சியுடன் உள்ளவர்களே. ஆனால் யாகூப் மேமன் போன்றவர்கள் தீவிரவாதிகள். இந்த இரண்டு பிரிவுகளையும் ஒன்றாக்கி பேசுபவர்களே – அவர்கள் எத்தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – கடும் கண்டனத்துக்குரியவர்கள். இவர்களைத்தான் முதலில் கண்டுகொள்ளவேண்டும்.

Share

பொறம்போக்கு – ஓர் இந்திய சலாம்

மாவோயிஸ்ட்டுகளின் தோல்வியுற்ற பிரசார நாடகமாக வெளிவந்திருக்கிறது பொறம்போக்கு என்னும் பொதுவுடைமை. தமிழ்ப்படங்களின் ஆதார விதிகளுக்கு உட்பட்டு மாவோயிஸ்ட்டுகளின் எந்த ஒரு கொள்கையையும் வெளிப்படையாகச் சொல்லாமல் மிக ரகசியமாக வைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்ற வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை என்றால் அந்த ரகசியத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றால் நம்மூர் மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தா. பாண்டியனின் முகமும் நல்லகண்ணுவின் முகமும்தான். வெகுஜனம் நிச்சயம் ’இந்த நல்லகண்ணுவா இப்படி ஆளுங்களைக் கொல்ல அனுப்பி வைக்காரு’ என்று யோசித்து மெர்சலாகப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி. 

விநோதமான தீர்ப்பு ஒன்றைச் சொல்கிறது நீதிமன்றம். தூக்கிலிடுபவர் அனுபவசாலியாக இருக்கவேண்டுமாம். யமலிங்கத்தைக் கூட்டிவருகிறார்கள். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில், அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக, தூக்கிலிடும் வேலையைச் செய்தவர். அதனால் கடும் மனப்பிறழ்வுக்கு ஆளானவர். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில் யாரைத் தூக்கில் போட்டார் என்பதை கற்பனையில் விட்டுவிட்டார்கள். அஃப்சல் குரு, கசாப்பை எல்லாம் தூக்கில் போட்டவரை அழைத்துக்கொண்டு வந்து இந்த மாவோயிஸ்ட் தீவிரவாதியையும் தூக்கில் போட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் யமலிங்கத்தை அழைத்து வருகிறார்கள். தமிழனை தமிழனே தூக்கில் போடவேண்டும் என்ற தமிழ்த்தேசியம் உள்குத்தாக உள்ளதோ என்னவோ.

மெலோ டிராமா போல யமலிங்கத்தின் உளவியல் சிக்கல்கள் எவ்வித சீரியஸ்நெஸ்ஸும் இல்லாமல் அலைபாய்கின்றன. தூக்கில் போடக்கூடாது என்பதற்காகவே அவரும் மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவுகிறார் என்பதெல்லாம் அம்புலிமாமாவில் வரவேண்டிய கதை. ஒரு தடவை அல்ல, கடைசி வரை உதவிக்கொண்டே இருக்கிறார். இதற்கு அவரையும் ஒரு மாவோயிஸ்ட்டாகவே காட்டியிருக்கலாம். காளியிடம் பேசும் யமலிங்கம் மாவோயிஸ்ட்டாக மாறுவதற்கு ஒரு அழகான பெண்ணே காரணம் என்று சுளுவில் திரைக்கதையை முடித்துவிட்டார்கள்.

தமிழ்த் திரைப்படங்களின் பெரிய சவால் திரைக்கதைகளில் நம்பகத்தன்மையைக் கொண்டுவருவது. இதுபோதும் என்ற நினைப்புடனேயே திரைக்கதை எழுதுவார்கள் போல. எவ்வித தர்க்கமும் இன்றி படம் முழுக்க காட்சிகள் நிரவிக் கிடக்கின்றன. படத்தின் மையம் என்ன என்பதிலேயே இயக்குநருக்குக் குழப்பம். ஒரே மாவோயிஸ்ட் படத்தில் இந்திய ராணுவத்தின் அராஜகம், தூக்கு தண்டனையை அறவே ஒழிக்கவேண்டிய அவசியம், சிறைக்குள்ளே நடக்கும் அராஜகங்கள், தமிழ்த்தேசியத்தின் புகழ்பாடுதல், சிறைக்கைதிகளின் மனிதாபிமானம் எனப் பலவற்றையும் போட்டுக் குதப்பி சிவப்பாகத் துப்பிவிட்டார். இதனால் இது என்ன மாதிரியான படம் என்பது யாருக்குமே புரியாமல் போய்விட்டது. என்னைப் பொருத்தவரை இது இயக்குநர் இந்த சமூகத்துக்குச் செய்திருக்கும் மிகப்பெரிய நல்ல விஷயம். ஏனென்றால் படத்தில் மக்களுக்குப் புரிந்தது ஒரே விஷயமாக மட்டுமே இருந்திருக்கமுடியும், அது ‘கம்யூனிஸ்ட்டுகள் தீவிரவாதிகள்’ என்பது மட்டுமே.

தூக்கு தண்டனை கூடாது ஆனால் ராணுவத்தில் யாரையும் கொத்து கொத்தாகக் கொல்லலாம், ஆயுதங்கள் வாங்கக் கூடாது ஆனால் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் ரகரகமாக ஆயுதங்களை வைத்துக்கொள்ளலாம் என்ற மாவோயிஸ்ட்டுகளின் சிந்தனையை படத்தில் தெளிவாகக் காண்பித்து அசரடிக்கிறார் இயக்குநர். தூக்கு தண்டனை உயிர்க்கொலைக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறாரா அல்லது தூக்கு தண்டனையையே எதிர்க்கிறாரா என்பதில் இயக்குநருக்கு அக்கறை இல்லை. தூக்கு பெற்ற ஒருவர் நிரபராதி என்பதால் அவரைத் தூக்கில் போடக்கூடாது என்று மட்டுமே படத்தில் காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் தூக்கு தண்டனையை அறவே எதிர்ப்பவர்கள், ஒருவர் தவறே செய்திருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனை தரப்படக்கூடாது என்றே வாதிடவேண்டும். இதைப் பற்றியெல்லாம் இயக்குநருக்கு எவ்வித அக்கறையும் இல்லை. மேலும் இந்தியாவில் இதுவரை 12 பேர் மட்டுமே தூக்கில் போடப்பட்டுள்ளதாக கூகிள் (மேம்போக்கான தேடல்தான், சரியாகத் தேடவேண்டும்) சொல்கிறது. அதிலும் சமீப காலங்களில் மிக அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கே இத்தனை கூப்பாடு. ஒருவேளை நிறுத்திவைக்கப்பட்டுள்ள தூக்குக்காக எடுக்கும் காவடியாக இருக்கலாம். தங்கள் கொள்கையோடு சம்பந்தப்பட்ட ஒருவருக்கு தூக்கு என்று வரும்போது மட்டுமே, ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையை எதிர்ப்பது நம் பகுத்தறிவுவாதிகள் வழக்கம். அதிலும் அவர்கள் நிரபராதிகள் என்ற பிலாக்கணத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். இதிலும் மாவோயிஸ்ட்டு தீவிரவாதி ரொம்ப நல்லவர். அறிவாளி. அழகானவர். கிட்டத்தட்ட பகத்சிங். ஆனால் கருணையற்ற இந்திய அரசாங்கம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துவிட்டது. 

சிறையில் இருக்கும் குற்றவாளிகள் எல்லாருமே நிரபராதிகள் என்று வெள்ளை அடித்துவிட்டார் இயக்குநர். சிறையில் ஒருவர்கூட கெட்டவர் இல்லை. இந்த அரசாங்கம் அநியாயத் தீர்ப்பினால் அவர்களை உள்ளே வைத்திருக்கிறது என்பதே இபப்டம் சொல்லும் செய்தி. அதிலும் மிகப் பெரிய தண்டனையைப் பெற்றவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட காந்திகள் அல்லது பகத்சிங்குகள். இப்படி ஒரு கருத்தைச் சொல்லிப் படமெடுக்கும் தைரியம் தமிழ் இயக்குநர்களுக்கு மட்டுமே வரும்.

இயக்குநர் அழுத்தமாகச் சொல்ல விரும்பாத, ஆனால் அதன் போக்கிலேயே வெளிப்பட்டுவிட்ட சில விஷயங்கள் உள்ளன. ஐ பி எஸ்ஸாக வரும் ஷாமின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக ஒரு நேர்மையான அதிகாரியை கண்முன் வைக்கிறது. கடைசி நொடி வரை இக்கதாபாத்திரம் தன் கடமையில் இருந்து இம்மியும் பிசகவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட கடமையை மிகத் தெளிவான திட்டமிடல் மூலம் செய்து காட்டுகிறார் இந்த ஐ பி எஸ். இந்திய நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் மாவோயிஸ்ட்டுகளைப் பார்த்து ‘உங்களைப் பார்த்தா பைத்தியக்காரத்தனமா தெரியுது’ (நினைவிலிருந்து சொல்கிறேன்) என்று அவர்களது இஸத்தையே கேள்விக்குள்ளாக்கி, மாவோயிஸ்ட்டு தலைவரை தூக்கில் தொங்கவிட்டு இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் அந்த ஐபிஎஸ்ஸுக்கு ஒரு இந்திய வணக்கம். 

மாவோயிஸ்ட்டுகளை நம்பினால் என்ன ஆகும் என்பதும் இப்படத்தில் மறைமுகமாகக் காட்டப்படுகிறது. தங்கள் வேலை முடிந்ததும் மாவோயிஸ்ட்டுகள் அடுத்த கொலை ப்ராஜெக்ட்டுக்குப் போக, எமலிங்கம் பைத்தியமாகத் தெருவில் திரிகிறார். இதுவும் சமூகத்துக்குத் தேவையான நல்ல செய்தியே. மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லாமல் கம்யூனிஸ்ட்டுகள் என்றே சொல்வதால், கம்யூனிஸ்ட்டுகளை நம்பினால் லூஸாத்தான் திரியணும் என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள். நல்ல விஷயம்.

படத்தின் லாஜிக் ஓட்டைகளுக்குள் செல்லவேண்டியதில்லை. படமே லாஜிக் ஓட்டை என்பது ஒருபுறமிருக்க, லாஜிக் ஓட்டைகளுக்கு மேல்தான் ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கதாபாத்திரமும் நிறுத்தப்பட்டுள்ளது. . இதில் காதல் பாடல்கள், காதல் ஏக்கம் வேறு. மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு காமம் ஆகாது என்ற கம்யூனிஸ விதி ஏதேனும் உண்டா எனத் தெரியவில்லை. மாவோவின் களியாட்டங்களெல்லாம் நடிப்பா? 🙂 இளம் மாவோயிஸ்ட் தலைவரும் இளம் பெண் தலைவரும் மனிதவெடிகுண்டாக இறக்கப்போகும் நாளுக்கு முதல்நாள் என்ன செய்வார்கள் என்ற தேவையற்ற கேள்வியைக் கொண்டு வரும் இயக்குநர், அதற்கான சரியான பதிலைச் சொல்லாமல் நட்டாற்றில் விட்டுவிட்டார். அவர்கள் இருவரும் உறவுகொண்டார்கள் என்று காட்டிவிட்டால் புனிதத்தன்மை போய்விடுமா என்ன? அல்லது அப்படி ஒரு காட்சியே இல்லாவிட்டால் சாதாரண தமிழன் விறுவிறுப்பு இல்லாமல் படம் பார்க்கமாட்டானா என்ன? என்ன எழவோ, ஆனாலும் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் நாடகத்தன்மையை மீறிய ஒரு சீரியஸ்தன்மை வெளிப்படவே செய்கிறது. அதுமட்டுமே இத்திரைப்படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமாவது பார்க்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

உண்மையில் இத்திரைப்படத்தை மிகச் சிறப்பான திரைப்படமாக எடுத்திருக்கலாம். தூக்கிலிடுபவனின் மனப்போராட்டத்தை மட்டுமே மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கலாம். அதற்கு நம்பிக்கை அளிக்க, இந்திய மக்கள் அதிகம் எதிர்கொண்ட, பழக்கப்பட்ட, யதார்த்தத்தில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளான அப்சல் குரு அல்லது கஸாப்பை மையப்படுத்தியே எடுத்திருக்கலாம். லால் சலாம் இயக்குநருக்கு இதை எடுப்பதிலும் மனத்தடை. வெகுஜன இஸ்லாமியர்களின் மனம் கோணிவிட்டால் என்ன செய்வது? அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் இஸ்லாமிய ஆதரவுக்கு பங்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? ஒரு படத்தை பிரசாரப் படமாக எடுக்க எத்தனை பேரை திருப்திப்படுத்தவேண்டியுள்ளது! எந்தக் கேள்வியும் கேட்காமல் படம் பார்க்கவேண்டுமென்றால் இந்தியாவைத் திட்டிப் படமெடுப்பதுதான் எளிதானது. இதைத்தான் இந்த ஊடகம் பழக்கி வைத்திருக்கிறது. என்ன கொடுமை என்றால், ஊடகம் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இல்லை என்றெல்லாம் இப்படத்தில் பேசிக் கொல்கிறார்கள்.

இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், மாவோயிஸ்ட்டு தலைவரைத் தூக்கில் இடுவதுதான். எத்தனை லால் சலாம் சிந்து பாடினாலும், இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கராவாதிகள் ஆலோசனை சொன்னாலும், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிகழுமென்றால் அந்த இயக்கத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை இந்தியா நிச்சயம் நிறைவேற்றியே தீரும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருப்பதற்குப் பாராட்டுகள். இயக்குநர் இதை விரும்பிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அதை இப்படித்தான் புரிந்துகொள்வார்கள் என்பதால் இயக்குநருக்கு மீண்டும் ஒரு இந்திய சலாம். தூக்குத் தண்டனை தரப்படும் மாவோயிஸ்ட்டு தலைவர் தூக்கில் தொங்கியதும் படம் பார்க்கும் யாருக்கும் எவ்வித மன வருத்தமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அந்தத் தலைவரின் கதாபாத்திரத்தை இயக்குநர் தெளிவாக நிலைநிறுத்தவில்லை. வெறும் செயற்கையான பிரசார நெடி தூக்கலான வசனங்கள் மூலமும், சாகசக் காட்சிகள் மூலமும் காட்டிவிட்டார். அப்படி பச்சாதாபம் வராத வகையில் படத்தை எடுத்திருப்பது இப்படத்தின் ஆதார செய்திக்கே எதிரானது. ஆனாலும் அதற்கும் மீண்டும் ஒரு இந்திய சலாம்.

சில அவசரத் தீர்ப்புகள்:

விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதம்.

ஆர்யா ஓகே, மோசமில்லை.

ஷாம், கார்த்திகா – நடிக்கவே வரவில்லை.

இசை – கொடுமை. ஒரே ஒரு ஹிந்திப் பாடல் மட்டும் கொஞ்சம் நன்றாக இருந்ததுபோல் காதில் விழுந்தது, ஆனால் நான்கு வரிகளே படத்தில் வந்தது.

Share