சரவெடி
கமலின் தொடர் – இரண்டாவது வாரம்
கமற்றொடரின் இரண்டாவாது வாரம், கமல் தொடராக வந்திருக்கிறது. எந்த எடிட்டரோ உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். மொழியில் ருத்ர தாண்டவம். அதுவும் புரியவும் செய்கிறது என்பது இன்னும் முக்கியம்.கமற்றொடரின் இரண்டாவாது வாரம், கமல் தொடராக வந்திருக்கிறது. எந்த எடிட்டரோ உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். மொழியில் ருத்ர தாண்டவம். அதுவும் புரியவும் செய்கிறது என்பது இன்னும் முக்கியம்.
மிக நீண்ட கட்டுரை. ஆனந்த விகடனில் இத்தனை நீண்ட கட்டுரைகள் வருவது மகிழ்ச்சி.
ரஜினிக்கு பதில் சொல்வதாக ஆரம்பிக்கிறார் கமல். சாரு ஹாஸன் தன் பேட்டியிலேயே கமல் மற்றும் ரஜினியின் நட்பைப் பற்றிச் சொல்லி இருந்தார். மகிழ்வான விஷயம் அது. அதை கமலும் சொல்லி இருக்கிறார். ஆனால் கமல் ரஜினியின் கேள்விக்குச் சொல்லி இருக்கும் பதில், வழக்கான ஜல்லி.
இந்த வழக்கமான ஜல்லிகளோடு பல ஜல்லிகள் உள்ளன. முக்கியமாக “இந்து மதம் இந்த நாட்டைக் கெடுக்கும் அளவுக்கு மற்ற மதங்கள் கெடுப்பதில்லை.” கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் இப்படி பேசத் தோன்றாது..
அடுத்து அண்ணாயிசம் பற்றி. அண்ணாயிசத்தைக் கிண்டல் செய்தவர்களில் சோவும் ஒருவர் என்கிறார் கமல். சொல்லிவிட்டு அண்ணாயிசத்தில் இருந்து ஒரு பாராவைத் தருகிறார். எம் எல் ஏ தன் பொறுப்புகளில் இருந்து வழுவும்போது அவரைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் வசதியைப் பற்றிய அண்ணாத்துரையின் ஜல்லி. அந்த ஜல்லியை விதந்தோதுகிறார் கமல். கொடுமை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்திய அளவில் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளும் இந்த சட்டத்தின் மூலம் என்னவெல்லாம் ஆட்டம் ஆடி இருப்பார்கள் என்று யோசித்தாலே போதும், இந்த ஜல்லியின் இன்னொரு முகத்தைப் புரிந்துகொள்ள. ஆனால் கமல் மிக விவரமாக (பேசுவதாக எண்ணிக்கொண்டு) அண்ணாயிசத்தை அடிப்படையாக வைத்து அதிமுகவினர் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார். ஆம், இப்படியாப்பட்ட பனைமரத்தில் அப்படியாப்பட்ட பசுவைக் கட்டிவிட்டார். சோ பற்றி ஒரு வரியில் சொல்லிவிட்டு, சோ சொன்னது தவறு என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் கமல். இந்த விஷயத்தில் சோ தவறாகப் போக வாய்ப்பே இல்லை.
பாஜகவின் கையாள் என்பதற்கு கமல் மறுப்பைச் சொல்லி இருக்கிறார். நாத்திகம் பேசுவதால் பத்து பைசா லாபம் உண்டா என்று கேட்கிறார் கமல். உலகில் அனைவருக்கும் தெரியும், இதில்தான் லாபம் என்று. கமலுக்கு மட்டும் தெரியவில்லை போலும். ஹிந்து மத எதிர்ப்பு, நாத்திகம், கம்யூனிஸ ஆதரவு, ஈவெரா ஆதரவு – இவை எல்லாம் ஒன்றாகப் போட்டுச் சமைத்த சாப்பாட்டுக்குத்தான் இன்று கிராக்கி. கமல் வசதியான பாதையிலேயே போய்க்கொண்டு இருக்கிறார். இந்த வசதிதான் இந்து மதத்தைப் போல் மற்ற மதங்கள் இந்தியாவைக் கெடுப்பதில்லை என்று சொல்ல வைக்கிறது. ஆனால் வெளியே மட்டும் இதனால் லாபமில்லை என்று சொல்லிக்கொள்கிறார் கமல். இந்தப் பயணம் எத்தனை தூரம் போகிறதென்று பார்ப்போம்.
சாரு ஹாஸன்: கமல் ஹாசனின் அனுகூலச் சத்ரு
சாருஹாசனின் ‘கேள்விக்கு என்ன பதில்’ பேட்டியைப் பார்த்தேன். அனுகூலச் சத்ரு என்று கமல் ரசிகைகள் அலறியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 🙂
சாருஹாஸன் ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்ததும் முதல் சில இடுகைகளைப் பார்த்து, இவர் கொஞ்சம் நல்லா எழுதுறாரே என்று மதி மயங்கி அவரைப் பின்தொடர்ந்தேன். பெரிய தவறுதான், ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு என்பதால் அப்போது வயது இரண்டு எனக்குக் குறைவு என்பதால் நேர்ந்துவிட்ட பிழை என யூகிக்கிறேன். போகப் போகத்தான் புரிந்தது, கமல் எழுதும் பத்து வார்த்தைகளில் பத்து புரியாது என்றால், சாருஹாசன் எழுதும் பத்து வார்த்தைகளில் பதினொன்று புரியாதென்பது. அப்படியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு அவரைப் பின்தொடர்வதை நிறுத்தினேன். பின்னர் ஒரு வார இதழில் (குங்குமமா குமுதமா?!) சாரு ஹாஸன் தொடர் எழுதினார். கொஞ்சம் மிரண்டு போய் சில வாரங்கள் படித்தேன். எடிட்டர்களின் கைவண்ணத்தில் அப்பத்திகள் மிக அழகாகவே வெளிவந்தன. ஹாசன்களின்தமிழ்த்தனம் அதில் இல்லை. சட்டெனப் புரிந்தது.
இந்தப் பின்னணியில் சாரு ஹாஸன் பேட்டி அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பார்த்தேன், மிக எளிமையாக தன் மனதுக்குப் பட்டதை மிக நேரடியாகப் பேசினார். சில அதிர்ச்சி தந்தார். மோடியைப் பற்றி அவர் சொன்னவை, நான் கொஞ்சமும் எதிர்பாராதவை. திராவிடக் கட்சிகளுக்கு அவர் தந்த அறை, மோடியைப் பற்றி அவர் சொன்னதுக்கும் மேலே! பிராமணர் என்பதால் கமல் முதல்வராக முடியாது என்றதும், கமலும் ரஜினியும் சேர்ந்தாலே 10% வாக்குதான் கிடைக்கும் என்றதும் இன்னொரு அதிர்ச்சி. ரஜினி தனியாக வந்தால் முதல்வர் ஆகிவிடுவார், கமலுடன் சேர்ந்தால் 10% வாக்கு மட்டுமே மொத்தமாகக் கிடைக்கும் என்று அவர் சொல்வதாக எனக்குத் தோதாகப் புரிந்துகொண்டேன். 🙂 விஜய்காந்த் அதிமுகவில் சேர்ந்து அதிமுகவைக் கைப்பற்றவேண்டும் என்றதெல்லாம் அரசியல் திரைப்பட வகை.
ரஜினி எதிர் கமல் என்ற கேள்விக்கு, ரஜினியை வணங்குகிறார்கள் மக்கள் என்றார். மிகத் தெளிவாக இரண்டு மூன்று முறை சொன்னார். இதற்கு யாரும் எதிர்பார்க்காத அர்த்தம் ஒன்றை பாண்டே உருவாக்கி, “கமல் அரசியலுக்கு வரணும்னு மக்கள் நினைக்கிறாங்கன்னு நீங்க சொல்றதா புரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார். இந்த அர்த்தம் எப்படி பாண்டேவுக்கு வந்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
கமலா ரஜினியா என்ற கேள்விக்கு கமலின் அண்ணனால் கூட உறுதியாக கமல் என்று சொல்லமுடியவில்லை. இத்தனைக்கும் ஒரே கொள்கை, ஒரே நோக்கம். அப்படியானால் கமலுக்குக் கிடைக்கப்போகும் ஓட்டுகளை எண்ணிக்கொள்ளலாம். 🙂
ரஜினிக்கான ஆதரவு என்பது, ‘திரைப்படம் பார்க்கும் முப்பது சதவீதப் பெண்கள் கமலை விரும்புவதால் அதில் எரிச்சல் படும் 70% ஆண்கள் தந்த ஆதரவு’ என்பது கொஞ்சம் புதிய கருத்துதான் என்றாலும், என்னமோ ரஜினியை நேரடியாக யாருக்கும் பிடிக்காது என்பதாகவும், கமலை விரும்பும் பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்ற எண்ணத்தைத் தருவதாகவும் இருந்தது. இதெல்லாம் கமல் இளைஞனாக மேலே எழுந்த காலத்தில் கொஞ்சூண்டுகொஞ்சம் உண்மையாக இருந்திருக்கலாம். கமல் பெரிய நடிகர் என்ற பெயர் பெற்ற காலத்தில் அவரைப் பிடிக்காத, அவர் திரைப்படத்தைக் கண்டாலே அலறி ஓடிய பெண்களே அதிகம். அருகிருந்து கண்ட உண்மை இது. #வெரிஃபைட். 🙂
பிராமணக் குலத்தில் பிறந்ததால் கமலுக்கு வாய்ப்புக் கிடைக்காது என்று சாரு ஹாஸன் சொன்னது உண்மைதான். இதுவும் கமலின் பின்னடைவுக்கு ஒரு காரணம், ஆனால் மிகச்சிறிய காரணம் மட்டுமே. கருணாநிதி ஒருவேளை மோடியை ஆதரித்தால் சகித்துக்கொள்பவர்கள், கமல் மோடியை ஒருவேளை ஆதரித்தால் சரியாக நூலுக்குப் போய்த்தான் நிற்பார்கள். தமிழ்நாட்டின் மரபு அப்படி. அதையே சாரு ஹாஸன் சொன்னார்.
சுவாரஸ்யமான பேட்டி. கமல் அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதை அவர் குடும்பமும் நம்பவில்லை என்பது நல்ல விஷயம். அப்படியே ஆகட்டும்.
பின்குறிப்பு 1: திமுக போராளிகள் இன்னுமா சாரு ஹாஸனை விட்டு வைத்திருக்கிறார்கள்?
பின்குறிப்பு 2: முதல் வாரத்திலேயே தான் எழுத நினைத்திருக்கும் அத்தனையையும் சொல்ல முயன்று, கமல் ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியிருக்கும் தொடரை தொடர்ச்சியாக வாசகர்கள் வாசித்தால், கமலுக்குக் கிடைக்கப்போகும் பத்து சதவீத வாக்குகளிலும் பத்து சதவீதம் மட்டுமே கமலுக்குக் கிடைக்கும் என்று யாராவது அவருக்கு எடுத்துச் சொல்வது நல்லது.
குரங்கு பொம்மை, காஸி அட்டாக், விவேகம், ஜாலி எல் எல் பி 2
குரங்கு பொம்மை – பார்க்கலாம். பொறுமையுடன். பாரதிராஜா வெகு யதார்த்தம். விதார்த் வழக்கம்போல பலவீனம். க்ளைமாக்ஸ் அவசியமற்ற இழுவை மற்றும் கொடூரம். சாதாரண கார் ஓட்டுநர்கூட கொலை செய்வார், கை கால் வெட்டுவார் என்பதெல்லாம் அராஜகமான சிந்தனை. யதார்த்தமும் இன்றி, அதற்காக முற்றிலும் வணிகத் தன்மையும் இன்றிச் செல்கிறது படம். பதற வைக்கவேண்டிய க்ளைமாக்ஸ் தராத பதற்றத்தைத் தந்த காட்சி – ஒரு சிறுமி தன் தந்தைக்கு பதிலாக தானே ஒருவரைக் கயிற்றால் அடித்துக்கொண்டே இருப்பது.
-oOo-
காஸி அட்டாக் ஹிந்திப் படம் பார்த்தேன். நல்ல முயற்சி. கடைசி காட்சிகளில் கொஞ்சம் இழுவை, புல்லரிப்பு, வீடியோ கேம் விளையாட்டுகள் போன்ற காட்சிகள் எல்லாம் கலந்து இருந்தாலும், பார்க்கலாம். ‘எல்லையில் வீரர்கள்’ (என்னைப் போன்ற) உணர்வாளர்கள் கை கால் மயிர்களை வழித்துவிட்டுப் பார்ப்பது நலம். இல்லையென்றால் மயிர்க்கூச்செரிந்துகொண்டே இருக்கும். இப்படியும் படம் எடுத்ததற்காகவே பாராட்டலாம்.
இதில் இரண்டு சந்தேகங்கள். தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.
1. நீர் மூழ்கிக் கப்பலின் கேப்டன் கப்பலுக்குள்ளேயே பணியின் போது இறந்துவிட்டால், அப்படியே கடலில் விட்டுவிடுவார்களா?
2. படம் முடிந்து இறுதியில் உண்மைகளைப் பட்டியல் இடும்போது, பாகிஸ்தான் தனது கடற்கண்ணிவெடி (கடற்கன்னி அல்ல!) வெடித்துதான் தன் நீர்மூழ்கிக்கப்பல் காஸி அழிந்ததாகச் சொன்னது என்று காண்பிக்கிறார்கள். இதைப் பற்றிய மேலதிக இந்திய பாகிஸ்தான்சார் தகவல்கள் உண்டா?
-oOo-
விவேகம் பார்த்தேன். ஒரு மணி நேரம் எப்படியோ தாங்கிக் கொண்டேன். அதற்குமேல் மிடில. சமீபத்தில் பார்த்த மிகப் பெரிய மொக்கைகளில் சத்ரியனுக்கு அதீத செலவுடன் சவால் விட்டு நிற்கிறது விவேகம். நல்ல பிரம்மாண்டமான கொடுமை. அஜித் ரஜிகர்களுக்குப் பிடிக்கும் என்ற விமர்சனம் இனி வந்தால் பம்மிவிட முடிவெடுத்திருக்கிறேன். அஜித் ரசிகர்கள் இப்பாவியை மன்னித்துவிடுங்கள்.
இடைவேளையில் ஒரு சொறிக் காக்கா பிரமாண்டமாக வருகிறது. அது ஃபீனிக்ஸாம். செம மாஸ்.
எனக்குப் பிடித்த அழகான காஜோலை அஞ்சலிதேவி ரேஞ்சுக்கு காண்பித்த இயக்குநரை எத்தனை திட்டினாலும் தகும்.
-oOo-
ஜாலி எல் எல் பி2 படம் பார்த்தேன். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பரபரவென்று இருந்தது. நல்ல டிராமா. முன்னா பாய் எம்பிபிஎஸ் வகையறா படம். ஹிந்தியில் இது போன்ற படங்களில் மாஸ்டர் பண்ணிவிட்டார்கள் போல. சில இடங்களில் அதீத நாடகத்தன்மையை ரசிக்க முடியுமானால் உங்களுக்கும் பிடிக்கலாம்.
-oOo-
கமல் 10
ப்ரவீண் – ஹிந்தி
நீட்: திருமாவளனுடனான பாண்டேவின் நேர்காணல்
பாண்டே உடனான திருமாவளவனின் பேட்டி பார்த்தேன். (MP3 கேட்டேன்!) நீட் பிரச்சினை தொடர்பான பேட்டி. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த பாண்டேவின் குரல் ஏற்படுத்திய ஒரு சலிப்பைத் தொடர்ந்து அவரது குரலையே கொஞ்சம் நாளாகக் கேட்கவில்லை. அச்சலிப்பைத் தாண்டிவர எனக்கு இத்தனை மாதங்கள் ஆகி இருக்கின்றன.
இப்பேட்டி மிக அட்டகாசமான பேட்டி என்றே சொல்லவேண்டும். தெளிவான கேள்விகளை முன்வைத்தார் பாண்டே. சுற்றிச் சுற்றி தன் முடிவுகளுக்கே திருமாவளவனைக் கொண்டு வந்தார். நீட்டை நான்கே கேள்விகளுக்குள் அடக்கினார்.
புள்ளிவிவரங்களின்படி,
1. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எவ்விதப் பங்கமும் வரவில்லை.
2. நீட் தேர்வினால் மாநிலப் பாடத்திட்டத்தின்படிப் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்படவில்லை. அதாவது 62% பேர் வென்றிருக்கிறார்கள்.
3. நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டு அல்ல, ஏனென்றால் கடந்த பத்து வருடங்களில் அரசுப் பள்ளியில் படித்துவிட்டு மருத்துவம் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 312 பேர் மட்டுமே.
4. நீட் தேர்வில் பாவப்பட்ட அனிதாவின் இடம் இன்னொரு தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கே சென்றுள்ளது.
இவை அனைத்தையும் திருமாவளவன் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் திருமாவளவன், சமூக நீதிப் பிரச்சினைக்காக நீட்டை எதிர்க்கவே இல்லை என்றொரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். 🙂
நேற்று வந்த புள்ளிவிவரத்தின்படி (உண்மையாக இருக்கும்பட்சத்தில்) நீட் தேர்வால் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் பொய்யாகி இருக்கிறது.
இப்போதைக்கு நீட் எதிர்ப்பாளர்களிடம் இருக்கும் அவர்கள்தரப்பு நியாயங்கள் இவையே:
1. மாநில அரசின் உரிமை பறிபோகிறது. (இதற்கு பாண்டே, கடந்த 20 வருடங்களாகவே கல்வி பொதுப்பட்டியலில்தானே உள்ளது என்றார்.)
2. கோச்சிங் மூலம் சேர்வார்கள். எனவே பணம் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும். (ப்ளஸ் டூவிலும் இதுதான் நடக்கிறது. எதிர்காலத்தில் நீட் தேர்விலும் நாமக்கல் வகையறா மாணவர்கள் இதேபோல் கோச்சிங் மூலம் நிச்சயம் அதிகம் வெல்வார்கள் என்பதும் உண்மைதான். இது ஒரு பிரச்சினைதான். ஆனால் இதை ஒன்றும் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.)
3. நீட் தேர்வை ஒட்டியே மாநிலத்தின் பாடத்திட்டம் அமைக்கப்படும். இதனால் தமிழ்நாட்டின் பண்பாட்டோடு ஒட்டிய பாடப்பகுதிகள் புறக்கணிக்கப்படும். (தமிழ்ப்பண்பாடு புறக்கணிக்கப்படும் என்பதை நான் நிச்சயம் ஏற்கமாட்டேன். இது ஒருக்காலும் நடக்காது என்றே நினைக்கிறேன்.)
இது போக திருமாவளவன் குறிப்பிட்ட ஒரு விஷயம், சி பி எஸ் சி பாடத்திட்டத்தை ஒட்டியே இனி மாநிலப் பாடத்திட்டமும் உருவாக்கப்படும் என்று சொன்னது. நீட் தேர்வால் இந்நிலை வரும் என்றார். ஆனால் உண்மையில் இப்போதே அப்படித்தான் உள்ளது. இதற்கு முன்பும் அப்படித்தான் இருந்தது. எப்போதுமே மாநிலப் பாடத்திட்டம் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பாடத்திட்டத்தை மேம்படுத்தும்போதும் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிக் கொஞ்சம் சேர்த்தும் கொஞ்சம் நீக்கியும் ஒரு பாடத்திட்டத்தை வரையறுப்பார்கள். மாநிலப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை பாடத்திட்டத்தின் தரம் உயர்த்த, ஒரு வகுப்புப் பாடத்தை அதற்கு முந்தைய வகுப்புக்குக் கொண்டுபோவார்கள். அதாவது 8ம் வகுப்பில் உள்ள பாடத்தில் சிலவற்றை 7ம் வகுப்புக்குக் கொண்டு போவார்கள். இப்படித்தான் இவர்களது பாடத்திட்ட வரையறை – என் பார்வையில் – இருந்துள்ளது. எனவே இனி மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிச் செல்வார்கள் என்பது ஒரு கற்பனையே. ஏனென்றால் ஏற்கெனவே அப்படித்தான் உள்ளது.
மாநிலப் பாடத்திட்டத்திலும் புத்தகத்திலும் பெரிய குறைகள் எல்லாம் இல்லை. (இந்த சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது வந்த முதல் புத்தகத்தில் குறைகள் இருந்தன, அவை பின்னர் களையப்பட்டன.) பாடங்களை+ நடத்தும் விதத்தில்தான் பள்ளிகள் மேம்படவேண்டும். 9ம் வகுப்பை ஏறக்கட்டிவிட்டு பத்தாம் வகுப்பு நடத்துவது, பதினோராம் வகுப்புப் பாடத்தை தூக்கி எறிந்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பள்ளி நடத்துவது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை என்கிற ஒன்றை ஒழித்துக்கட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, ஒழுங்காகப் பாடத்தை நடத்தி, புரிய வைத்து அதன்படிக் கேள்விகள் கேட்டுத் தேர்வு நடத்தினாலே போதும்.
அத்துடன் வெறும் நீட் தேர்வு மூலம் வரும் மதிப்பெண்கள் மட்டுமே என்றில்லாமல், பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் கட் ஆஃபில் சேர்ப்பதும் நல்லது. என்னுடைய தனிப்பட்ட விருப்பம், இந்த கட் ஆஃபில் குறைந்த அளவிலாவது ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களைச் சேர்ப்பது. இல்லையென்றால் ஆங்கிலம் மற்றும் தமிழைக் கடனுக்கெனப் படிப்பார்கள். இப்படித்தான் நான் படிக்கும் காலத்திலேயே இருந்தது. இதையும் மாற்றவேண்டும்.
திருமாவளவன் தன் நிலைக்கேற்ற பதிலைப் பொறுமையாகச் சொன்னார். பொய், தேவையற்ற காட்டுக்கத்தல், எதையாவது சொல்லிவிட்டுப் போவது போன்ற வீரமணித்தனங்கள் எல்லாம் இல்லாமல் கேள்விகளின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு கையாண்டது பாராட்டத்தக்கது. நிச்சயம் பார்க்கவேண்டிய நேர்காணல்.
ஒரு கவிதை
அநாதியின் நெருப்பு
ஆதிமலரின்
ஆதிக்கும் ஆதி மலரின்
வாசம் கமழத் தொடங்கி இருந்தபோது
அநாதியின் நெஞ்சுத்தீ
வேகெடுக்கத் தொடங்கி இருந்தது
முதலுக்கும் முதலான சங்கு ஒன்றின் இசையில்
பெயரில்லா மூப்பனின் நடனத்தில்
சங்குகள் முழங்கத் தொடங்க
இசை பேரோசை ஆகியது
பிரபஞ்சமெங்கும் பேரோசை
யாராலும் நிறுத்த இயலாத
எவரையும் உள்ளிழுத்துப் பெருகும்
பெரும் நெருப்பு
அநாதியின் மூச்சுக்காற்று
இப்போதும் சுற்றிச் சுழல்கிறது
மாயத்தின் புதிர்கள் அவிழும்போது
எப்போதும்போல் புலர்கிறது ஒரு காலை
ஒரு பெண்ணென ஒரு ஆணென.