ஊடக இந்தியாவும் உண்மையான இந்தியாவும்

ஜவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த இந்திய எதிர்ப்புக் கோஷங்களைத் தொடர்ந்து பலரும் ‘நான் தேசத் துரோகிதான்’ என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவும் விருதைத் திருப்பித் தருதல் அளவுக்குப் போகும் என்றே நினைக்கிறேன். தேசத் துரோகிதான் என்று சொல்லாதவர்கள் மட்டுமே தேசத் துரோகிகள் என்று அழைக்கப்படப்போகும் நாள் தூரத்தில் இல்லை. மிகத் தெளிவாக இந்தியாவின் முகத்தை வரையறுக்கும் விலைபோன ஊடகங்கள் வெளிநாடுகளில் இதையே தலைப்புச் செய்தியாக்கும்.

 

Custom Image

 

காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் எப்படி ஊடகங்களிலும் கருத்தைப் பரப்பும் இடங்களிலும் இந்திய எதிர்ப்பாளர்களும் வெறுப்பாளர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கும் காலம் இது. மோதியின் ஆட்சி தொடங்கியதில் இருந்தே இந்தியா ஒரு சகிப்பின்மையில் சிக்கித் தவிப்பதாக இவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்கள். எந்த ஒரு பிரச்சினையும் மிகச்சரியாக இந்த சகிப்பின்மையில் முடியலாம். யாராவது ஒரு வி ஐ பி சம்பந்தமே இல்லாமல் திடீரென சகிப்புத்தன்மையைப் பற்றிப் பேசுவதைப் பார்க்கலாம். உடனே அங்கிருந்து பற்றிக்கொள்ளும்.

ஆனால் இதெல்லாம் இனிமேல் எடுபடுமா எனத் தெரியவில்லை. இன்றைய உலகம் இரண்டாகப் பிரிந்துகிடக்கிறது. ஒன்று, கருத்துக்களை உருவாக்கி அதை நம்பி அதையே வழிபடும் சோஷியல் நெட்வொர்க் – மீடியா உலகம். இன்னொன்று, இவற்றோடு தொடர்பே இல்லாத மக்களின் உலகம். இந்த மக்களின் உலகம் வழியேதான் மோதி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார். ஏனென்றால் ஷோஷியல் நெர்வொர்க் உலகம் பாஜக தனித்து ஆட்சிக்கு வரும் என்று ஒருமுறைகூட சொல்லவில்லை.

இந்த இரண்டு உலகங்களுக்கு இடையே உள்ள இடைவெறி பிளந்து கிடக்கிறது. இதை எப்படியாவது குறுக்கி தங்கள் கருத்தே மக்களின் கருத்தாக மாற்ற இவர்கள் தொடர்ந்து போராடுவார்கள். சில சமயம் வெற்றியும் கிடைக்கக்கூடும். இங்கேதான் நாட்டுக்காகவும் அறத்துக்காகவும் பேசுபவர்கள் கவனமாக இருக்கவேண்டியது.

அறம், நாடு போன்றவற்றைப் பேசுவதே முட்டாள்தனம், பிற்போக்குத்தனம் என்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் சொல்வார்கள். ஆனால் அதீத நாட்டுப்பற்று பொதுமக்களிடம் என்றுமே தவறாகப் பார்க்கப்பட்டதில்லை. ஒரு கல்லூரியில் இந்திய எதிர்ப்புப் பேச்சு தேவையில்லை என்று சொல்வதிலோ ஒரு பல்கலைக்கழகத்தில் இந்திய தேசியக்கொடி பறக்கவேண்டும் என்று சொல்வதிலோ எவ்வித சுந்திரப்பறிப்பும் இல்லை. இவையெல்லாம் இயல்பாக இருந்திருக்கவேண்டும். இந்தியாவைக் கொண்டாடிக்கொண்டே இருக்க சொல்லவில்லை. இந்திய விமர்சனம் என்பது தேவையானதுதான். ஆனால் அதன் பின்னணி என்ன என்று ஆராய்வது முக்கியமானது. அது இந்தியாவின் வளர்ச்சியை நோக்கியதா அல்லது இந்தியா உடையவேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடா எனப்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு பிஎச்டி தேவையில்லை. மிக மேலோட்டமாகவே புரிந்துகொள்ளலாம்.

இந்தியா உடையவேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் விரும்புவதாக நான் சொல்லவில்லை. ஆனால் இந்தியா உடைந்தால் இவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அல்லது அதில் இவர்கள் நலன் பாதிக்கப்படும் என்றால் மட்டுமே கவலைப்படுவார்கள். ஏன் கம்யூனிஸ்ட்டுகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், மற்றவர்கள் இந்தியாவைப் பயன்படுத்தி தங்களை முன்னேற்றவே முயல்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்தியாவில் இது சாத்தியமில்லை. எனவே இந்திய வெறுப்பு எதிர்ப்புக் குழுக்களோடு கை சேர்த்துக்கொள்கிறார்கள். அதனால்தான் எங்கெல்லாம் இந்திய எதிர்ப்பும் வெறுப்பும் புரண்டோடுகிறதோ அங்கே கம்யூனிஸ்ட்டுகள் முற்போக்காளர்கள் என்ற போர்வையில் உலா வருகிறார்கள். ஒவ்வொரு இந்திய வெறுப்புக்குப் பின்பும் அதற்கான பின்புலத்தை மிகப்பெரிய அளவில் உலகமே ஏற்கும் வண்ணம் வாதத்தை உருவாக்கித் தருவதில் இவர்கள் பெரிய பங்காற்றுவார்கள்.

சாதாரணமாகக் கேட்கும் யாரும் இவர்கள் கருத்தில் உள்ள ‘நியாயத்தை’ ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அது பல்வேறு கருத்தாங்களால் உருவாக்கப்பட்ட ஒரே நியாயமாக இருக்கும் – இந்தியாவுக்கு எதிராக இருப்பதுதான் அது.

இந்தியாவைத் துண்டாடவேண்டும் என்பது இவர்களுக்கு தேச விரோதப் பேச்சாகத் தெரியாது. மாறாக கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகத் தோன்றும். ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வித சுதந்திரமும் ஒரு எல்லைக்குக் கட்டுப்பட்டதே என்பது இவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சுதந்திரம் என்றே பேசுவார்கள். இவர்கள் முன்வைக்கும் மாற்று என்பது ஒட்டுமொத்தமாக மனிதர்களை அடிமையாக்கும் ஒரு கருத்தாக்கமாக இருக்கும். ஆனால் அதையே உலகத்தின் சிறந்த ஒன்று என்று பல்வேறு மொழியில் பல்வேறு குரலில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் விரும்பும் இந்திய முகத்தையே மீண்டும் மீண்டும் ஊடகங்களில் காட்டுவார்கள். ஆனால் உண்மையான இந்தியாவோ எப்போதும்போல் அமைதியாகவும் நாட்டுப்பற்று உடையதாகவும்தான் இருக்கும்.

ஜே என் யு விவகாரத்தில் அமைதியாக இருந்த மாணவர்களை அரசு கைதுசெய்துவிடவில்லை. மிகத் தெளிவாகவே இந்தியாவுக்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைத் துண்டாக்குவோம் என்பதும் அப்சல்கள் முளைப்பார்கள் என்பதும் கருத்துச் சுதந்திரம் இல்லை. அப்பட்டமான இந்திய எதிர்ப்புக் கோஷங்களே. இந்த விஷயத்தில் அரசுத்தரப்பில் இருக்கும் ஒரே பிரச்சினை, கன்னையாவின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே. அதை அரசு கவனமாகவே கையாளவேண்டும். ஓர் அரசுக்கு எல்லாப் பொறுப்புகளும் உண்டு, கன்னையா போன்றவர்களைக் காப்பது உட்பட. தேவைப்பட்டால் கல்லூரிகளில் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கலாம். இதையும் கருத்துச் சுதந்திர எதிர்ப்பென்றும் பிற்போக்கென்றும் சொல்வார்கள். படிக்கப்போன இடத்தில் படி என்ற காலம்காலமான நம் நம்பிக்கையைச் செயல்படுத்தினாலே போதும். மற்றவை கல்லூரிகளில் இருந்தும் பல்கலைக்கழக்கங்களில் இருந்தும் வெளியே இருக்கட்டும்.

மோதி அரசு முற்போக்காளர்களின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அசரக்கூடாது. இத்தனை நாள் தங்கள் வசமிருந்த பிடி நழுவும்போது வரும் பதற்றம் இது. மேலும் பல்வேறு பிரிவினைவாத சக்திகள் ஒன்றிணைந்து எது அவர்களுக்கு வேண்டுமோ அதைச் செய்யத் துடிக்கும்போது இப்படித்தான் எதிர்ப்புகள் நிகழும். எது இந்திய விரோதம் என்பதை அரசு இவர்களுக்குத் தெளிவாகவே காட்டவேண்டும். இந்த எதிர்ப்பெல்லாம் மோதி அரசுக்கு நன்மையையே கொண்டுவரும். ஏனென்றால் மக்கள் உலகம் என்றுமே நாட்டுப்பற்றுக்கு ஆதரவானதாகவும் எதிர்ப்பு சக்திகளுக்கு எதிரானதாகவே இருக்கும். ஊடகம் உருவாக்கும் மாயையை எதிர்கொள்வதும் முக்கியமான சவாலே. ஊடகங்கள் சொல்லும் கருத்தில் தனக்கு வேண்டியதை மட்டுமே இந்த அரசு கவனத்தில்கொள்ளவேண்டும். மற்றவற்றைப் புறம்தள்ளி நாட்டின் வளர்ச்சியை முன்வைத்து நாட்டுப்பற்று, இந்திய ஆதரவு போன்ற விஷயங்களை முன்னிறுத்தியே செயல்படவேண்டும். நாட்டுப்பற்று என்பது இழிவானதல்ல. அதை இழிவு என்று சுற்றி வளைத்துச் சொல்லும் போலி முற்போக்காளர்களே இழிவுக்குரியவர்கள்.

Share

துகிலுரிதல்

எனக்கு அப்போது 13 வயது இருக்கலாம். மதுரையில் அழகரடியில் ஒரு சின்ன வீட்டில் இருந்தோம். வீட்டில் டிவி கிடையாது. எங்கள் காம்பவுண்ட்டில் இருந்த சந்திராக்கா வீட்டில் மட்டுமே டிவி உண்டு. அவர்களின் சௌகரியத்தைப் பற்றியெல்லாம் என்றுமே யோசித்ததில்லை. சனிக்கிழமை தூர்தர்ஷனில் வரும் ஹிந்திப் படங்களிலிருந்து ஞாயிறு வரும் கார்ட்டூன் வரை முக்கியமற்ற நிகழ்ச்சிகளைக்கூட அவர்கள் வீட்டில்தான் பார்ப்போம். அவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி பிடிக்காது என்பதே கிடையாது. அவர்கள் எதைப் பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுத்தால்தான் உண்டு. தண்ணீர் பிடிக்கும்போது அவர்களோடு குடுமிப்பிடி சண்டை நடக்கும்; ஒரு ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி, தன்மானம் விட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்று டிவி பார்க்க வைத்துவிடும். அதெல்லாம் பொற்காலம்தான், சந்தேகமே இல்லை.

அப்போதுதான் சோப்ராவின் மகாபாரதம் தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. ஞாயிறன்று காலையிலேயே தினமலரை வைத்துக்கொண்டு வரிவரியாகப் படித்துவிடுவோம். ஹிந்தியில் ஆயுஷ்மான் பவ என்பதைத் தவிர ஒன்றும் புரியாது. நாங்கள் நண்பர்கள் கிண்டலாக தோ புத்ர பவ என்று சொல்லிக்கொள்வோம். அவ்வளவுதான் எங்கள் ஹிந்தி. பாஞ்சாலியின் துகிலை உரியும் காட்சி அன்று. 13 வயதுக்கேயான குறுகுறுப்புடன் டிவி பெட்டி முன்பு உட்கார்ந்திருந்தேன். சுற்றி பொன்னம்மாக்கா, ஈஸ்வரியக்கா, நாகரத்னமக்கா என பெரியதும் சிறியதுமாக ஏகப்பட்ட அக்காக்கள் கூட்டம். என் தாத்தா, பாட்டி, அம்மா, அக்கா எனப் பெரிய கும்பலே அந்த 100 சதுர அடி வீட்டில் குழுமி இருந்தது. இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ஹிந்தித் தொடரைப் பார்க்க அன்று எப்படியும் 25 பேர் இருந்திருப்போம்.

துகிலுரியும் காட்சி என் வயதில் நான் எதிர்பார்த்ததைப் போல இல்லை. எங்கள் வயதொத்தவர்களெல்லாம் நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டோம். சிரிப்புடன் எங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்தேன். அத்தனை அக்காக்கள் கண்களிலும் கண்ணீர் துளிர்த்து நின்றது. என்னால் நம்பவே முடியவில்லை. மெல்ல என் தாத்தாவைப் பார்த்தேன். இரும்பு மனிதர் அவர். அவரது கண்களும் சற்றுக் கலங்கி இருந்தது. நான் என்னைப் பற்றியே கேவலம் கொண்டேன். ஆனால் எனக்கு எவ்வித கண்ணீரும் எத்தனை முயன்றும் துளிர்க்கவில்லை. பாஞ்சாலியை என் தாயாகவோ என் தங்கையாகவோ யாராகவுமோ என்னால் அன்று யோசிக்கவே முடியவில்லை. ஆனால் அன்று அதனைப் பார்த்த அத்தனை நாற்பது வயதுக்காரர்களின் முகபாவங்களும் இன்னும் என் கண்முன்னே அப்படியே நிற்கிறது.

ஹரிகிருஷ்ணன் (இனி ஹரியண்ணா) எழுதி கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது – பாரதியாரின் பாஞ்சாலி சபதம்: விளக்கவுரையுடன். ஹரியண்ணா இதை பத்து வருடங்களுக்கு முன்பு மரத்தடி யாஹூ குழுமத்தில் எழுதினார். வழக்கம்போல எங்களது உற்சாகமின்மை காரணமாக பாதியில் நின்றது. ஒருநாள் அத்தனை பேரும் திடீர் உற்சாகம் கொள்ள மீண்டும் தொடங்கியது. கிட்டத்தட்ட முடியும் தருவாயில் மீண்டும் தடைப்பட்டது. அப்போதே அதைப் புத்தகமாகக் கொண்டுவரவேண்டும் என்று நானும் ஆசிஃப்பும் பேசிக்கொண்டோம். நான் அப்போது துபாயில் இருந்தேன்.

இப்போது ஹரியண்ணாவுடன் வேறு என்னவோ பேசப்போக, பேச்சு இப்பக்கம் திரும்பியது. அவர் மீதமிருக்கும் பகுதிகளை முடித்துக்கொண்டு வர ஒப்புக்கொண்டு உடனே அதைச் செய்தும்கொடுத்தார். கிழக்கு பதிப்பகம் சார்பாக வருவதால், அதை நானே ப்ரூஃப் பார்க்க எடுத்துக்கொண்டேன் – வேறு யாரையும் எடுக்கவிடாமல் நானே ஓடிப்போய் கிட்டத்தட்டப் பிடுங்கிக்கொண்டேன். 🙂

வியாசரின் காலம்கடந்து நிற்கும் காவியத்தன்மையை அதே தரத்துடன், சில இடங்களில் விஞ்சியும் பாரதி படைத்திருக்கிறான். சந்தேகமின்றி மஹாகவி அவன். அதனை மிக அழகாக விளக்கியிருக்கிறார் ஹரியண்ணா. மேற்கொண்டு பலவற்றை அவரே முன்னுரையில் சொல்லுவார். முன்னுரை வரவும் பகிர்ந்துகொள்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், ஹரியண்ணாவின் இந்த விளக்கவுரை காலம் கடந்து நிறகப்போகும் ஒரு படைப்பு. புரியும் படிச் சொன்னால் – சான்ஸே இல்லை.

முழுக்கப் படித்தபோது பாரதியார் துகிலுரிதலைப் பற்றி எழுதும் காட்சிகளில் என்னையறியாமல் ஒரு புளகமும், கண்களில் கண்ணீர் துளிர்ப்பும் ஏற்பட்டன. என்னைச் சுற்றி நின்ற பொன்னம்மாக்காக்கள் நினைவுக்கு வந்தார்கள். என் தாத்தா நினைவுக்கு வந்தார். நான் இன்று பாஞ்சாலியை யாராக நினைக்கிறேன்? அக்காவாகவா? மனைவியாகவா? மகளாகவா? தெரியவில்லை. ஆனால் கண்ணீர் துளிர்த்தது உண்மை.

எனக்கு 7 வயது ஆகும்போது சேரன்மகாதேவியில் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதன் முதல் ஆண்டுவிழாவில் திரௌபதி வேடம் போட்டு நடித்த ஐந்து வயதுப் பெண் நினைவுக்கு வந்தாள். அன்று அவள் நடித்ததை அந்த ஊரே பேசியது. இதற்கெல்லாம் பின்னால் உள்ள அந்த வியாசனை நினைத்துக்கொண்டேன். என் கண்ணிலும் நீர் வர வைத்த பாரதியாரை நினைத்துக்கொண்டேன். இதைப் படிக்கும் ஒரு வாய்ப்பு தந்த அந்த இறையையும் ஹரியண்ணாவையும் நினைத்துக்கொண்டேன். அத்தனை பேருக்கும் என் வந்தனங்கள்.

Share

கமல் திருப்பித் தர மறுத்த விருது

கமல்ஹாசன் விருதைத் திருப்பிக் கொடுக்காதது அவர் உரிமை. உண்மையில் தன் நடிப்புக்காக தன் திறமைக்காக விருதை வென்றவர் அவர். லாபி செய்து விருதை வாங்கியவர் அல்ல. எனவே தன் திறமைக்காகத் தரப்பட்ட விருதை ஏன் திருப்பித் தரவேண்டும் என்று நினைப்பது சரியான ஒன்றே. சந்து பொந்துகளிலெல்லாம் தேடித் தேடி இவர் கருத்துரிமை மறுக்கப்பட்டுவிட்டது அவர் கருத்துரிமை மறுக்கப்பட்டுவிட்டது அதாக்கும் இதாக்கும் என்று சொல்பவர்கள், கமல்ஹாசனின் கருத்துரிமையை அங்கீகரிக்கும் போர்வையைத் தெளிவாகப் போர்த்திக்கொண்டு அவரை வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகப் பேசினால் மட்டுமே இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எதிராகப் பேசினால் இப்படித்தான். சமீபத்தில் கருத்துரிமையைப் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், இவர்களால் வெளிப்படையாக கமல்ஹாசனின் கருத்துரிமையை நிராகரிக்க முடியவில்லை. இல்லையென்றால் விருதைத் திருப்பித் தரும் கமலின் கருத்துரிமையை நிராகரிக்கவும் தயங்கமாட்டார்கள்.

கருத்துரிமையைத் திருப்பித் தந்தவர்களே மோதியின் எதிர்ப்பாளர்கள் என்று தேவையற்ற ஒரு பிம்பத்தை இந்த கம்யூனிஸ்ட் கூட்டம் கட்டமைத்தது. அதை மேற்கொண்டு கொண்டுசென்று அப்படி திருப்பித் தராதவர்களெல்லாம் மோதியின் ஆதரவாளர்கள் என்றோ, நிதர்சனத்தைக் கண்டு பொங்காதவர்கள் என்றோ சொல்லத் தொடங்கியிருக்கிறது. பரதநாட்டியம் குச்சுப்பிடி கதகளி ஆடுபவர்கள்கூட விருதைத் திருப்பித் தந்துவிடவேண்டும். இல்லையென்றால் மோதியின் ஆதரவாளர்கள். இந்த காமெடியர்களின் ஆட்டம் தாங்கமுடியாததாக இருக்கிறது.

இந்த எதைப் பற்றியும் கவலைப்படாமல், விருதைத் திருப்பித் தரமாட்டேன் என்று சொன்ன கமல் பாராட்டுக்குரியவர். அவர் நிச்சயம் மோதியின் ஆதரவாளராக இருக்கமாட்டார். அப்படி இருந்தும் அவர் சொல்கிறார் என்றால், தன் திறமைமேல் அவருக்கும் இருக்கும் நம்பிக்கை ஒன்றைத் தவிர வேறு காரணங்கள் தோன்றவில்லை. பொதுவாழ்வில் சகிப்புத்தன்மை நாகரிகம் பற்றி தினமும் பொங்குபவர்கள், கமல் ராஜ் தாக்கரேவை சந்தித்ததை அதே நாகரிகம் கருதி இருக்கலாம் என்றுகூட யோசிக்கமாட்டார்கள். என்ன நடந்தது என்று தெரியாமல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். இதை மற்றவர்கள் செய்யும்போது பக்கம் பக்கமாக எழுதுவார்கள் என்பதுதான் இதிலுள்ள முரண்.

விருதைத் திருப்பித் தர மறுத்த கமல் (நாளை மோதியைப் பற்றி இவர் எப்படி பேசுவார் என்று எனக்குத் தெரியும் என்றபோதிலும்) பாராட்டுக்குரியவர்.

Share

வெங்கட் சாமிநாதன் – கண்ணீர் அஞ்சலி

பத்து வருடங்களுக்கு முன்பு வெங்கட் சாமிநாதனை எனக்குப் புத்தகங்கள் வழியாகவே மட்டும் தெரியும். திண்ணையில் அவரது கட்டுரைகளை வாசித்திருந்தேன். இலக்கிய கலை தொடர்பான அவரது கட்டுரைகளில் அவரது அனுபவங்களையும் பரந்த ஞானத்தையும் கண்ட நான் அவரது அரசியல் தரப்பை சரியாக முடிவுசெய்யாமல் விட்டிருந்தேன். எனி இந்தியன் பதிப்பகத்துக்காக வெங்கட் சாமிநாதனின் புத்தகங்களைப் பதிப்பிக்க முடிவு செய்திருந்தார்கள். அது தொடர்பாக அவரிடம் பேசி அவர் தரும் கட்டுரைகளைக் கொண்டுவந்து ஒழுங்கு செய்யவே நான் அவரை முதன்முதலாகச் சந்திங்கச் சென்றேன். நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது என்பதால் பலமுறை அழைத்து வழிகேட்டு அவரது வீட்டுக்குச் சென்றேன்.

வீட்டின் வராண்டாவில் சாய்வு நாற்காலியில் வேட்டி கட்டிக்கொண்டு துண்டு போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அது முதன்முறை ஒரு எழுத்தாளருடனான சந்திப்பு போலவே இல்லை. மிக அன்பாக உபசரித்தார். என் வீட்டைப் பற்றி, குடும்ப சூழல் பற்றி, ஊரைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டார். மாமி காப்பி கொண்டுவந்து கொடுத்தார். எத்தனை மறுத்தும் குடித்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தி வெசா குடிக்க வைத்தார். அவர் தந்த கட்டுரைகளின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டேன். சில கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து மெய்ப்புப் பார்க்கத் தொடங்கி ஐம்பது பக்கங்கள் பார்த்ததும் அவரை அழைத்து ‘வீட்டுக்கு வரலாமா’ என்று கேட்டேன். என் சந்தேகங்களையெல்லாம் மஞ்சள் நிற ஹைலைட்டரில் குறித்துக்கொண்டு வீட்டுக்குப் போனேன்.

vesa_haranprasanna1

வழக்கம்போல மாமி காப்பி கொண்டு வந்து கொடுத்தார். வெசா ‘சந்தேகங்களை போனிலேயே கேட்டிருக்கலாமே’ என்று சொல்லிக்கொண்டே என்னிடமிருந்த குறிப்புகளையெல்லாம் ஒருதடவை பார்த்துவிட்டு ‘என்னய்யா, முப்பது வருஷம் கழிச்சு எனக்கு தமிழே தெரியாதுன்னு சொல்ல வந்திருக்கீறாய்யா’ என்றார். சிரித்துக்கொண்டேதான் சொன்னார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியெல்லாம் இல்லை சார் என்றேன். ‘அதான் மஞ்சள் மஞ்சளா போட்டிருக்கிறே’ என்று சொல்லிவிட்டு அவரது மனைவியிடம் ‘தமிழ் தெரியலைன்னுட்டார். பேசாம இங்கிலீஷ்லயே எழுதிக்கிட்டு இருந்திருக்கலாம்’ என்றார். நான் ‘இல்ல சார், வரிகளெல்லாம் தொங்கல்ல இருக்கமாதிரி இருக்கு’ என்றேன். கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு ‘நீயே திருத்திக்கோய்யா’ என்றார். அவற்றைத் திருத்தி மீண்டும் அவருக்கு அனுப்பி வைத்தேன். ‘இனிமே ப்ரூஃப் பார்க்கறப்போ என்னைக் கேக்கவேண்டாம்யா, நீரே திருத்திக்கோரும். தமிழ் உஸ்தாத்யா நீர்’ என்றார். பின்னர் அவரது புத்தகங்களின் தலைப்புகளெல்லாம் சரியாக இல்லை என்றேன். எனக்காக யோசித்து அவர் வைத்ததுதான் ‘யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை’ என்ற தலைப்பு. ‘இந்தத் தலைப்பு ஓகேவாய்யா’ என்றார்.

அதன்பின் எனக்குத் தெரிந்ததெல்லாம் அன்பே உருவான ஒரு தாத்தாவின் உருவம் மட்டுமே. எப்போது சென்றாலும் காப்பி குடிக்காமல் அனுப்பமாட்டார். மாமி என் தலை தெரிந்ததுமே காப்பியுடன் வந்து நிற்பார். ‘மாமிக்கு ஒம்ம மேல பாசம்யா. நான் கேட்டா தரமாட்டா’ என்பார். மாமியும் அதே வேகத்தில் பதில் சொல்வார். பார்க்கவே அழகாக இருக்கும். ஒருமுறை துக்ளக் இதழை உடனே வாங்கிக்கொண்டு வரவில்லை என்று இருவருக்கும் சண்டை. ‘துக்ளக்கை புதன் கிழமையே படிக்கணுமா, வியாழக்கிழமை படிச்சா ஆகாதா’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். சோவின் மீது மிகப்பெரிய அபிமானம் வைத்திருந்தார் வெசா.

அதன்பின் புத்தகங்கள் தொடர்பாக அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. கணினியில் இகலப்பை, என் எச் எம் ரைட்டர் மூலம் டைப்படிப்பது எப்படி என்றெல்லாம் கேட்பார். கம்ப்யூட்டர் உஸ்தாத் என்பார். எனக்கு ஒண்ணுமே தெரியாது சார் என்றாலும் விடமாட்டார். போனில் அழைத்து வரலாமா என்று கேட்டால் ‘சும்மாதான்யா இருக்கேன், எப்பவேணும்னா வாங்க’ என்பார். நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த உலக / இந்தியத் திரைப்படங்கள் பற்றிப் பார்த்துவிட்டு ‘எனக்கும் சொல்லுங்க’ என்றார். அதிலிருந்து எப்போது திரைப்படம் ஒளிபரப்பானாலும் அவருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்புவேன். சில படங்களைப் பார்த்துவிட்டு போன் செய்து ‘எப்பவோ பாத்ததுய்யா. நீர் மெசேஜ் அனுப்பலைன்னா பாத்திருக்கமாட்டேன்’ என்றெல்லாம் சொல்வார். இப்படியாக வெசா ஒரு நண்பர் போல ஆகிப்போனார். அவரிடம் என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டும் என்ற வேடங்களெல்லாம் மறைந்துபோனது. அவரும் யாரைப் பற்றியும் அவர் நினைக்கும் கருத்துகளை ஒளிவுமறைவின்றி சொல்லுவார். நானும் என் கருத்துகளைச் சொல்லுவேன். வெசா கருணாநிதி பற்றியும் அண்ணாத்துரை பற்றியும் திராவிட, கம்யூனிஸ்ட்டுகள் பற்றியும் கொண்டிருந்த வெறுப்பை எப்போதும் மறைத்ததில்லை. பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி.

அ.மார்க்ஸ் வெசாவின் எழுத்து மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று சொல்லி அதை இருமுறை மேடையில் செய்து காட்டியதாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆமாய்யா. ரெண்டு தடவைய்யா. அங்க மேடைல இருந்த யாரும் கேக்கலைய்யா’ என்றார். ஒரு மூத்த எழுத்தாளரும் அங்கே இருந்ததாகவும் அவரும் அதைப் பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லையென்றும் வருத்தத்துடன் சொன்னார். அந்த மூத்த எழுத்தாளர் வாழ்வின் விழுமியங்களில் நம்பிக்கை உடையவர் என்பது வெங்கட்சாமிநாதனின் எண்ணம். எனவேதான் அவருக்கு அவ்வருத்தம். ஒருமுறை அந்த மூத்த எழுத்தாளரைப் பார்க்க நேர்ந்தபோது அதைப் பற்றிக் கேட்டதாகவும், அவர் தான் அதை ஏற்கவில்லை என்று சொன்னதாகவும் சொன்னார். ஆனால் பொதுவில் சொல்லவில்லை என்பதையும் சொன்னார் வெசா.

vesa_haranprasanna2

வெசா எழுதிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றிக் கேட்டேன். ‘படம் உங்ககிட்ட இருக்கா சார். இருந்தா பாத்துட்டு தந்துடறேன்’ என்றபோது, ‘நல்ல படமா பாக்கீரே, ஒமக்கு எதுக்குய்யா அந்தக் கொடுமை’ என்றார். ‘படத்தைக் கெடுத்தான்யா. சரி, ஒண்ணும் சொல்றதுக்கில்லை. என்னையும் இழுத்துவிட்டு… பழைய கதைய்யா… இப்ப எதுக்கு. ஆச்சா. புத்தகமாவும் வந்துச்சுய்யா’ என்றார். ‘டெல்லில எங்கயாச்சும் படம் இருக்கும். என்கிட்ட காப்பி இல்லை’ என்றார். அதற்குப் பல வருடங்கள் கழித்து நான் டெல்லி புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது ஓர் இரவில் ஒரு சானலில் அக்ரஹாரத்துக் கழுதை ஒளிபரப்பானது. உடனே அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். பெட்டர் யூ ஸ்லீப் என்று ரிப்ளை அனுப்பினார். நான் முழுப்படத்தையும் பார்த்தேன். மறுநாள் தொலைபேசியில் அழைத்து ‘கொடுமைதான் சார்’ என்றேன். ‘அது ஒரு காலம்ய்யா’ என்றார். பேசிமுடித்துவிட்டு புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பி லிஃப்ட்டில் கீழே இறங்கிவந்தால் அதே ஹோட்டலில் வெங்கட் சாமிநாதன் ரிஷப்சனில் உட்கார்ந்திருக்கிறார். என்னால் நம்பவே முடியவில்லை. ‘என்ன சார் இங்க’ என்றேன். இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்துகொண்டே போனிலும் மெசேஜிலும் உரையாடியிருக்கிறோம். எதோ நாடகக் கமிட்டி ஒன்றின் தேர்வுக்காக வந்திருக்கிறார் போல. இரவு வந்து உங்களைப் பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் அன்றே சென்னை செல்வதாக இருந்தது. போனில் அத்தனை பேசிவிட்டு மறுநாள் காலையில் அதுவும் டெல்லியில் அவரைப் பார்த்த இன்ப அதிர்ச்சி இன்னும் மீளவில்லை.

எனி இந்தியன் பதிப்பித்த புத்தகங்களுக்கான ராயல்டியை அவருக்கு அனுப்பி வைத்திருந்தோம். கிட்டத்தட்ட 30,000 ரூபாய்க்கும் மேல் இருக்கும் என நினைவு. மறுநாள் அவரை அழைத்து ராயல்டி வந்துவிட்டதா என்று கேட்டேன். எ ஸ்வீட் சர்ப்பரைஸ் என்றார். தனக்கு இதுவரை யாருமே இத்தனை பெரிய தொகையை அதுவும் ஒரே செக்கில் ராயல்டி தந்ததில்லை என்றார். மிகவும் ரகசியமாக ‘கோபால் ராஜாராம், பிகே சிவகுமார்கிட்டல்லாம் கேட்டுட்டீராவெ’ என்றார். அவங்களுக்குத் தெரியாம நான் எப்படி சார் தரமுடியும் என்றேன்.

அவர் சென்னையில் இருந்தவரை அடிக்கடி போன் செய்து பேசுவேன். எப்போது அழைத்தாலும் அப்போது மூன்று வயதே ஆகியிருந்த என் மகனின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சரியான வாலு போலய்யா என்பார். என் நண்பர் டாக்டர் பிரகாஷ் திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அபிராமைப் பார்த்ததும் உடல்வளைத்து மிக வளைத்து மிக மிக வளைத்து கிட்டத்தட்ட எல் போல வளைந்து அவனுக்கு வணக்கம் சொன்னார். சுற்றி இருந்த அத்தனை பேரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். என் அம்மாவுக்கு அவர் யாரென்றே தெரியாது. நாங்கள் கொடுத்த மரியாதையிலிருந்து அவர் பெரிய எழுத்தாளர் என்று மட்டும் புரிந்திருந்தது. இன்றுவரை என் அம்மாவுக்கு அவர் ‘குனிஞ்சு வணக்கம் சொன்னாரே அவரா’ என்பதுதான். அனைவரையும் சந்திப்பது என்பது வெசாவுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்.

கூகிள் குழுமம் ஒன்றில் அவரும் இருந்தார். அதில் தினம் தினம் மடல் உரையாடல்கள் நடந்த வண்ணம் இருக்கும். ‘எப்படிய்யா எல்லாருக்கும் இவ்ளோ நேரம் இருக்கு’ என்று எல்லோரையும் கேட்டுக்கொண்டே இருப்பார். பெரியவர் சிறியவர் வேண்டியவர் வேண்டாதவர் வேறுபாடின்றி திறமையைக் கண்டதோறும் அதனைப் புகழ்வார். எத்தனை தெரிந்தவர் என்றாலும் அவரால் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றைக் கேட்டாலும் கண்டாலும் சீறுவார். சமீபத்தில் மிக சமீபத்தில்கூட மிக நல்ல நண்பரை அப்படிக் கடிந்துகொண்டார். கனவிலும் சமரசத்தை ஏற்காத மனிதர் வெசா. அவரது சீற்றம் எனக்கு அச்சுறுத்தலாகக்கூடத் தெரிந்தது. ஏன் இத்தனை சீற்றம் என்று. அப்போது நானும் அரவிந்தன் நீலகண்டனும் பேசிக்கொண்டோம் ‘சிங்கம்யா. வயசானாலும் சிங்கம்’ என்று. கடைசிவரை சமசரத்தின் நுனிகூடத் தொடாத சமரசத்தின் நிழல்கூடப் படியவிடாத ஒரு மனிதர் அவர். அவர் அவரையொத்த எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்திலேயே அழிந்துவரும் நேர்மை இனமொன்றின் பிரதியாகத்தான் இருந்தார். அந்தப் பிரதி இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. இனி வெசா எவ்வகையிலும் சமரசமற்ற எழுத்தாளரின் பிரதியாகவே எக்காலத்திலும் நினைவுகூரப்படுவார்.

திராவிட இயக்கத்தின் போலித்தனங்கள், கம்யூனிஸத்தின் அடாவடிகளையெல்லாம் வெசா எக்காலத்திலும் ஏற்கவில்லை. எந்த ஒன்றைப் பற்றிப் பேசினாலும் அவர் திராவிட இயக்கத்தின் தீமையைச் சொல்லாமல் ஓய்ந்ததில்லை. அதற்கான ஆயிரம் ஆயிரம் காரணங்கள் அவரிடம் இருந்தன. அவரை முதன்முதலில் சந்தித்தபோதே இக்குரலை நான் கேட்டேன். ‘சரியான பிராமண வெறியரா இருப்பாரோ’ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் சாதியின் பற்றில் துளிக்கூட கரையாதவர் அவர். சாதியின் கீழ்மைகள் எங்கிருந்தாலும் எச்சாதியில் இருந்தாலும் அதைச் சுட்டிக்காட்டத் தயங்காதவர். இனியொருவர் இப்படி செயல்படமுடியுமா என்பதே ஐயம்தான். இன்றைய உலகம் என்பது சமரசங்களின் உலகம் என்றாகிவிட்டது. குறைவான சமரசம் தவறில்லை என்றாகி, குறைவான சமரசம் இல்லாமல் வாழமுடியாது என்றாகிவிட்டது. சமசரசங்களுக்கான நியாயங்களைப் பட்டியலிடவும் தயாராகிவிட்டோம். இதை இழிசெயலாகவே வெசா என்றும் கருதினார். வெசாவின் வாழ்க்கைப்பாடம் என்பதே எனக்கு இதுதான். என்னால் இன்றுவரை இப்படி இருக்கமுடியவில்லை. நாளையும் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு மனிதராக வெசா இருந்தார் என்பதை நான் வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அறிவேன். வெசா உலகுக்கு விட்டுச் செல்வதும் இந்த சமரசமற்ற நேர்மையைத்தான்.

வெங்கட்சாமினாதனின் மனைவி இறந்தபோது துக்கம் கேட்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். எத்தனை அன்னியான்னியமாக இருந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். வெசா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதும் இனி அவர் எப்படி தனியாக வாழப்போகிறார் என்பதுமே என் எண்ணமாக இருந்தது. வெசா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். உடன் க்ரியா ராமகிருஷ்ணன் இருந்தார். எனக்கு கிரியா ராமகிருஷ்ணனைத் தெரியாது. தன் மனைவி சட்டென ஐந்து நிமிடத்தில் இறந்ததைப் பற்றி வெசா சொல்லிக்கொண்டிருந்தார். ‘இனிமே எங்க இருக்கப்போறீங்க சார்’ என்று கேட்டேன். அன்றைய நிலையில் அக்கேள்வி எத்தனை அபத்தமானது என்று பிற்பாடு மிக மிக வருந்தியிருக்கிறேன். அத்தோடு நிற்கவில்லை என் அபத்தம். அவர் சொன்னார் ‘பையன் தன்கூட வரச்சொல்றான்யா. எனக்குத்தான் இந்த வீட்டைவிட்டுப் போக இஷ்டமில்லை’ என்றார். அப்போது அவர் மடிப்பாகத்தில் இருந்தார். அவரது மகன் பெங்களூருவில். என் அப்பாவுக்கும் இதேபோன்ற எண்ணம் இருந்தது. திருநெல்வேலியை விட்டு வரக்கூடாது என்ற எண்ணம். அது தந்த எரிச்சலா அல்லது வெசாவிடம் எனக்கிருந்த தாத்தா போன்ற பிம்பமா எதுவெனத் தெரியவில்லை, சட்டென்று சொன்னேன் ‘வயசானவங்களோட பிரச்சினை சார் இது. இங்க தனியா எப்படி இருப்பீங்க, பையன்கூட போங்க’ என்று சொல்லிவிட்டேன். சொன்ன மறுநொடியிலிருந்து என் மனம் அரிக்கத் தொடங்கியது. இதோ இந்நிமிடம் வரை அந்த குற்ற உணர்ச்சி இருக்கிறது. எந்த சந்தர்ப்பத்தில் அதுவும் யாரைச் சொல்லி இருக்கிறோம். அவர் பெங்களூரு செல்வதாக முடிவான உடனே எனக்கு போன் செய்து சொன்னார். அப்போது இதையெல்லாம் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அவர் அதையெல்லாம் நினைவு வைத்திருப்பாரா என்ற சந்தேகமும் இருந்தது. கடைசிவரை மன்னிப்பே கேட்கவில்லை. கிரியா ராமகிருஷ்ணன் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்றும் யோசிப்பதுண்டு. வெசா பெங்களூருக்கு போனபின்பும் தொடர்ந்து போன் செய்து பேசுவேன். எப்படி இருக்கிறார், அங்கே வாழ்க்கை எப்படி இருக்கிறது, மகனும் மருமகளும் எப்படி கவனித்துக்கொள்கிறார்கள் என்று பலவற்றைக் கேட்பேன்.

சிறிது நாள் போன் செய்யாமல் இருந்து பின்னர் அழைத்தால் ‘என்னய்யா மறந்துட்டீரா. பேஸ்புக்ல போடு போடுன்னு போடறீரே’ என்று தொடங்கி ‘என்னய்யா மனுஷன் அரவிந்தன் நீலகண்டன். படிச்சிட்டே இருப்பாராய்யா’ என்று தொட்டு ‘ஆச்சா. அப்ப அப்ப போன் பண்ணுமய்யா’ வரை பேசிவிட்டுத்தான் வைப்பார். எப்போது அவர் அழைத்தாலும் ‘நீங்கள்லாம் பிசியா இருப்பீங்க. நான் கிழவன்யா’ என்றுதான் தொடங்குவார். சமீபத்தில் அழைத்து எனி இந்தியன் பதிப்பித்திருந்த அவரது புத்தகங்களைக் கேட்டார். எப்படியோ தேடிப்பிடித்து வாங்கிக்கொடுத்தேன். அத்தனை நன்றி சொன்னார்.

ஒரு மாதத்துக்கு முன்பு அழைத்து சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன். என் புத்தகம் பற்றிப் பேச்சு வந்தது. புத்தகம் வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் அவருக்கு அனுப்பவில்லை. உடனே அனுப்பச் சொன்னார். அனுப்பி வைத்தேன். சில நாள்களுக்கு முன்பு அழைத்து ‘சர்ப்பரைஸா இருக்கட்டும்னு சொல்லலய்யா. கணையாழில ரிவ்யூ வருது. உங்க புத்தகம் வேணும்னுட்டாங்க. அதான் இப்ப சொல்லவேண்டியதாப்போச்சு. அனுப்பி வையும்யா’ என்றார். ‘காலை அந்த வாறு வாறுரீரே, கதைல ஏன்யா இவ்ளோ சோகம்’ என்றார். அத்தனை சோகமா இருக்குன்றதே நீங்க சொல்லித்தான் தெரியும் என்றேன். உடனே அவரது ரிவ்யூவை எனக்கு அனுப்பி வைத்தார். அவரது விமர்சனம் வந்ததே நான் செய்த அதிர்ஷ்டம் என்று ஒரு வழக்கமான பதிலை அனுப்பி வைத்தேன். நான் சொன்னது உண்மைதான், என் அதிர்ஷ்டம்தான் அவரது விமர்சனம் சாதேவிக்குக் கிடைத்தது. ஆனால் அதைப் பற்றி எழுதி, அவர் எழுதிய விமர்சனத்துடன் என் தளத்தில் வெளியிட எண்ணி இருந்தேன். சென்ற வாரமே அதைச் செய்திருக்கவேண்டியது. ஸ்கேன் செய்த பக்கங்களின் அளவு பெரியதாக இருந்ததால் கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்துவிட்டது. ஆனால் இன்றோ வெசா இல்லை.

சில உலகத் திரைப்படங்களின் சிடியை கொடுத்திருக்கிறேன். சில புத்தகங்களைக் கொடுத்திருக்கிறேன். உடனே அழைத்து ‘என்னய்யா ஆளு நீ. இதையும் பாத்துட்டு படிச்சுட்டு எப்படிய்யா ரஜினியை புகழ முடியுது’ என்பார். முடியுதே சார் என்பேன். முடியக்கூடாதேய்யா, எதாவது ஒண்ணுதான சரியா இருக்கமுடியும் என்பார். உண்மையில் வெசா இதுதான். அவரால் இரண்டாக இருக்கமுடியாது. மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டமுடியாது. பதவிக்காகவோ பணத்துக்காகவோ தன் நிலையிலிருந்து சற்றும் கீழிறங்க முடியாது. இனி இப்படி ஒருவரை காலம் நமக்கு அளிக்கவேண்டும் என்பதே நம் விருப்பமாகவும் வேண்டுதலாகவும் இருக்கவேண்டும். http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60609292&edition_id=20060929&format=html இந்தக் கட்டுரையை வாசியுங்கள், வெசாவின் ஒரு துளி என்றாலும் அது நீக்கமற நிறைந்துள்ளது. ஞானரதத்தில் வந்த இலக்கியச் சண்டைகள், யாத்ராவில் வந்தவை என அவரது காலத்தில் எழுதி அவர் விட்டுச்சென்றவை என்றைக்கும் புறக்கணிக்க இயலாத இலக்கியப் பிரதிகளாக இருக்கும். வெசா திராவிட எதிர்ப்பாளர் என்றும் கம்யூனிஸ எதிர்ப்பாளர் என்றும் தனிநபர் தாக்குதல்களைச் செய்பவர் என்றும் காதில் விழுவதெல்லாம் தங்கள் கொள்கையின் கீழே நின்று ஒலிக்கும் மேம்போக்கான குரல்களே. இக்குரல்களில் அவர்கள் உண்மையான வெசாவைக் கடந்து செல்ல முயல்வார்கள். வெசா கடுமையாக எழுதுபவரே அன்றி ஆபாசமாக எழுதியவரல்ல. கடுமையான விமர்சனம் என்பது இலக்கியத்தின் ஆதார சுருதி. அதை வெசா போன்று பலர் செய்யாமல் இருப்பதுதான் பிரச்சினையே அன்றி, பிரச்சினை வெசா அல்ல.

இதையெல்லாம் இன்று இழந்திருக்கிறோம். இத்தனையையும் மீறி மனம் என்னவோ இனி ‘ஆச்சா’ ‘என்னய்யா’ ‘கிழவன்யா’ என்ற குரலையோ விகசிப்பு, விழுமியம், விடம்பனம் போன்ற வார்த்தைகளையோ வெசாவிடமிருந்து பார்க்க/கேட்கமுடியாது என்பதையே நிறைவுசெய்யமுடியாத இழப்பாக நினைத்துக்கொள்கிறது. ஒரு பிதாமகனுக்குரிய கம்பீரத்துடனும் நேர்மையுடனும் இறைவனடி சென்றிருக்கும் வெசா என்றும் என் நினைவில் இருப்பார். அவருக்கு என் கண்கள் பனிக்க அஞ்சலி. இனியாவது இன்று உறங்கமுடியுமா என்று பார்க்கிறேன்.

Share

மூன்று கவிதைகள்

மலைப்பயணம்

மலையிலிருந்த இறங்கிய
குதிரையாகிய நான்
இளைப்பாறிக்கொண்டேன்
சிவந்திருந்த கண்கள்
தன்தோற்றம் கொண்டன
மூச்சு சீராகி
உதறலெடுத்த கால்கள் நின்றன
கைகளின் நடுக்கம் மறைந்தது
குதிரை விடைபெறும் தருணம்
புதிய கல்லொன்று வருமென்று
எதிர்பார்த்துக் காத்திருந்து
ஏமாந்து கழியும் பொழுதில்
மலையுச்சி நோக்கிக்கொண்டே
கல்லொன்றைத் தேடுகிறேன்
குதிரையாகும் நான்

(10-அக்டோபர்-2015)

சடக் சடக் ஒலியில்
கால் மாற்றி
கை விரையும் வேகத்தில்
புதிய புடைவையின்
வண்ண நெளிவுகளில்
உருவாகி வருகிறான்
இன்னுமொரு இறைவன்
உடுக்கையொலியும்
தாளலயமும்
தப்பாத ஆட்டத்தில்
கண்மயங்கிச் சரியும்
அந்திக்குப்பின்னே
காத்திருக்கிறது
இன்னுமொரு சூரியன்

(10-அக்டோபர்-2015)

இருளிரவு

நாளை காலை முதல்
எத்தீச் சொல்லும் காதில் விழப்போவதில்லை
பாலில் நீர் சேர்த்த புகார் வரப்போவதில்லை
இறைவனைப் பற்றிய ஐயங்களில்லை
நெருப்புப் பந்தம் சுற்றிலும் பூச்சிகள் இல்லை
குழந்தைகள் அழப்போவதில்லை
எங்கும் இனியன, எல்லாம் இனியது
சுற்றி வரும் சொற்கள் விலகி
வெற்றுக் கவிதைகள் இல்லை
சுற்றம் இனியது சூழல் இனியது
என்றேதான் கவிகிறது
இவ்விரவும்.

(10-அக்டோபர்-2015)

Share

Sleepless night – தமிழில் ஏன் எப்படி எதற்கு

இது சுரேஷ்கண்ணசுபகுணராஜன்கள் எழுதுவதுபோன்ற முக்கியமான திரைக்கட்டுரை அல்ல. எனவே ரத்தம் கொதிக்க காது மடல்கள் சிவக்க படிக்காமல் சாதா‘ரணமாக’ப் படித்துவிட்டு சிரித்துவிட்டு அப்புறம் யோசித்துக்கொள்ளவும். அதேபோல், ரஜினி படம் வருவதற்கு முன்பாக ‘இந்தப் படம் ஒழியணும், நாசமாப் போகணும்’ என்று நான்கைந்து பக்கத்துக்கு வசவிவிட்டு கடைசியாக ஒரு வரியில் அதன் காரணம் ‘வணிகப் படங்களில்கூட மோசமான படம் வெல்லக்கூடாது என்பதுதான்’ ரகக் கட்டுரையும் அல்ல. கமல்ஹாசனை எனக்கு பிடிக்குமா பிடிக்காதா என்றே எனக்கே இன்னும் சரியாகத் தெரியாத நிலையில் (இப்படித்தான் ஆரம்பிப்போம்), கமல்ஹாசன் உள்ளிட்ட யாரொருவரின் படமும் வணிக வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் ஒரு குப்பைப் படமாக இருந்தாலும் அதன் வணிக வெற்றியை ஒரு தொழிலின் வெற்றியாகவும் அத்தொழிலை நம்பியிருக்கும் கணிசமானவர்களின் பிழைப்பாகவும் நான் பார்க்கிறேன். அதேசமயம் ஒரு நல்ல படம் தோற்றுவிட்டால் பெரிய அளவில் அறச்சீற்றப்பொங்கலெல்லாம் எனக்குள் பொங்காவிட்டாலும் வருத்தம் ஏற்படுவது உண்டு. இத்தனை விளக்கமும் சொல்வதற்கான காரணம், இந்தப் படம் வெற்றி பெறக்கூடாது என்பது என் நோக்கமே அல்ல என்பதற்காகவும், ‘கமல் ரசிகர்களே, இத்துடன் நீங்கள் வெளியேறிவிடுங்கள்’ என்று சொல்வதற்காகவும் மட்டுமே.

கதை தெரியாமல் ‘தூங்காவனம்’ படத்தைப் பார்த்தால்தான் பிடிக்கும் என்று நினைப்பவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்கவேண்டாம். ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

ஸ்லீப்லெஸ் நைட் படம் ஒரே இரவில் நடக்கும் ஒரு படம். மிகச் சாதாரணமான கதை. திரைக்கதையும் ஆஹோ ஒஹோவெல்லாம் இல்லை. பல இடங்களில் கொட்டாவி. பார்வையாளர்களை சீட்டு நுனிக்குக் கொண்டுவரும் பரபரப்பும் இல்லை. சுமாரான படம்தான். கமல்ஹாசன் தமிழில் நடிக்கிறாரே என்பதற்காக மட்டுமே நான் இதைப் பார்த்தேன். இல்லையென்றால் நிச்சயம் பார்த்திருக்கவே மாட்டேன்.

மகனைக் கடத்திக்கொண்டு போகும் போதை மருந்து கேங்கிலிருந்து தன் மகனை தந்தை மீட்கும் கதை. இது போதை மருந்து கொடிகட்டிப் பறந்த கொலம்பியா போன்ற ஊர்களில் எடுக்கப்பட்டிருந்தால் அந்த மக்கள் உறைந்துபோய் பார்ப்பார்கள். தமிழில் எப்படிப் பார்ப்பார்கள்? ஏன் இதனைக் கமல் எடுத்தார்? தமிழ்த்தன்மையோ இந்தியத் தன்மையோ இல்லாத இப்படத்தை தமிழில் கமல்ஹாசன் எடுக்க என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று முழுக்க முழுக்க யூகத்தில் எழுதப்படுவதே இக்கட்டுரை. இக்கட்டுரையில் வரும் அத்தனையும் தவறு என்று படம் வரும்போது நிரூபிக்கப்படலாம். அல்லது அத்தனையும் சரி என்றும் அமைந்து தொலைக்கலாம். ‘ஹேராம்’ படம் வந்தபோது கமல்ஹாசன் சொன்னது, ‘காந்தியைக் கொன்றது கோட்ஸே என்று எல்லோருக்கும் தெரியும். அதை படத்தில் மாற்றமுடியாது. ஆனால் அதுவரை நடப்பதை வைத்து புனைவில் என்னவெல்லாமோ செய்யலாம்’ என்று. அதையேதான் இப்போது நான் சொல்கிறேன், ‘தமிழில் தூங்காவனம் வரும்வரை என்னவேண்டுமானாலும் செய்யலாம்.’ எனவே இது ஒரு புனைவு.

கமல்ஹாசன் இப்படத்தை எடுக்க முதல் காரணம் இப்படத்தில் இருக்கும் கமல்தன்மை என்பதே என் எண்ணம். வயதுக்கேற்றவாறு உத்தமவில்லனில் அப்பாவாக வந்தார். இதிலும் ஒரு வளர்ந்த பையனுக்கு அப்பா. எனவே அதிக விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் இந்த அப்பா-மகன் உறவில் காட்டப்படும் அன்பு குறித்து சொல்லவேண்டும். நம் ஊரில் அப்பா-மகன் உறவென்பது, அப்பா இறந்தபிறகு மகன் அவன் அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அல்லது அப்பாவும் மகனும் நல்ல நண்பர்களாக, ஆனால் அதை சொற்களில் வெளிப்படுத்தாதவர்களாக இருந்துவிடுகிறார்கள். இப்படி இல்லாமல் அப்பாவும் மகனும் விலகி இருப்பதும், அப்பாவின் அன்பைக் கண்டு மகன் நெகிழ்ந்து அப்பாவிடம் அப்படியே வெளிப்படையாகச் சொல்வதும் சமீபகாலமாக இறக்குமதி ஆகிக்கொண்டிருக்கிறது. உத்தமவில்லனில் இது எடுபட்டதற்குக் காரணம், அதில் ஹீரோ மரணத்தை நோக்கிச் செல்கிறார் என்பதுதான். மற்றபடி அப்பா மகன் அன்பென்பது வெளியில் சொல்லப்படாத உணர்வுகளால் நிரம்பியது என்பதுதான் நம் இந்தியத்தன்மை என்று நான் நினைக்கிறேன். அப்படி இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் அப்பா மகன் உறவை நாம் நகலெடுத்தால் அது அந்நியத்தன்மையுடனேயே வந்து நிற்கும். ‘தூங்காவனம்’ இதை எப்படி கையாளப்போகிறது என்று தெரியவில்லை.

ஸ்லீப்லெஸ் நைட்டின் பெரிய ப்ளஸ் அந்த ஹீரோ சாதாரண ஆள் என்பது (குறைந்தபட்சம் படத்தைப் பார்க்கும் தமிழர்களுக்கு). நமக்கோ தமிழில் கமல். இது தரப்போகும் அழுத்தத்தை கமல் படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள் உடைக்கவேண்டும். பாபநாசத்தைப் போல. பாபநாசத்துக்கே சொக்கலிங்கத்தைக் காணாமல் கமலைக் கண்டு பொங்கி எழுந்த தமிழர்கள் உள்ள ஊர் இது!

ஸ்லீப்லெஸ் நைட்டில் ஹீரோ வில்லனிடம் போதைமருந்து என்று சொல்லி மாவைக்கொடுத்துவிட்டு வெளியேறும் காட்சியில் வில்லன் சொல்கிறான், ‘இனிமே உன் முகத்தை நான் பார்க்கக்கூடாது’ என்று. ஹீரோவும் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் வெளியேறுகிறான். தமிழில் ட்ரைலரில் பார்த்தேன். கமல் அப்படி வெளியேற முடியாதல்லவா? எனவே வில்லன் பிரகாஷ்ராஜிடம் ‘நானும் அதையே சொல்லிக்கிறேன்’ என்று என்னவோ சொல்கிறார். இப்படித்தான் இந்திய தமிழ்த்தன்மையைக் கொண்டுவரப் பாடுபடுகிறார்கள். (பாடுபடுத்துகிறார்கள் என்று எழுதிவிடவில்லையே!)

கமலின் க்ளிஷேவாக நான் பார்ப்பது, தொடர்ந்து ஒன்றை படம் முழுக்க செய்துகொண்டிருப்பது. இன்னொன்று, கையில் அடிபட்டிருக்கும்போது கோபத்தில் அதை மறந்து தரையில் அடித்துவிட்டு கையை வலியில் உதறிக்கொள்வது. இதுபோன்ற காட்சிகளை யார் நடித்தாலும் எனக்குப் பிடிக்காது. அதுவும் கமல் நடித்தால் தாங்கவே முடியாது. ஆனால் இந்தப் படம் கமலுக்கு சரியான தீனி போடுகிறது. ஆம், இந்த ஸ்லீப்லெஸ் நைட்டின் ஹீரோ முதல் காட்சியிலேயே குண்டடிபட்டு காயத்தை மறைத்தபடி கோட் அணிந்துகொண்டு வலியைத் தாங்கிக்கொண்டு ஓடுகிறான். அவ்வப்போது வலிக்கிறது. கமல் இதைச் செய்யப்போகிறார் என்பதே எனக்கு பீதியைத் தருகிறது. துர்ப்பிணி அதிலும் கர்ப்பிணி என்பார்களே, அப்படி.

அதிலும் ஒரு காட்சியில் அந்த காயத்துக்கு மருந்து அடித்துக்கொண்டு நம் பிரெஞ்சு ஹீரோ அலறுகிறார். அப்போது சப்தங்கள் அனைத்தும் மறைகின்றன. இசை இல்லை. ஹீரோ அலறுவதும் கேட்பதில்லை. அத்தனை சத்தங்களும் மறைய, ஹீரோ கத்துவதை பார்க்க மட்டும் செய்கிறோம். தமிழில் கமல் இதை என்ன செய்திருப்பார் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பின்னணிக் காட்சியில் ஜிப்ரான் அமைதியாக இருந்துவிட்டால் பெருமாளுக்கு மொட்டை போடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கமலும் ‘நடித்து’ ஜிப்ரானும் கதறிவிட்டால் என்ன செய்வது? இது நடக்கும் என்று சொல்லவில்லை. நடக்காது என்றும் சொல்லமுடியவில்லை. நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே சொல்கிறேன்.

கமலின் புகழ்பாடுபவர்கள் ஒன்றை அடிக்கடி சொல்வார்கள். காட்சியின் பிரசன்ஸைக் கூட்டுவது என்று என்னவோ சொல்வார்கள். அதாவது ஒரு சாப்பாட்டுக் கடைக் காட்சி என்றால் அங்கிருக்கும் டப்ளர் டபரா என எல்லாவற்றையும் பயன்படுத்துவதாம். இப்படத்தில் பிரெஞ்சு ஹீரோ ஒரு உணவகத்தையே ஒட்டுமொத்தமாகக் கபளீகரம் செய்கிறான். இந்த பிரெஞ்சு ஹீரோ சாதாரண ஹீரோ. நம் கமலோ கமல்சார். என்னவெல்லாம் செய்வார் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்னொரு காட்சி பிரெஞ்சு திரைப்படத்தில் வருகிறது. அந்தக் காட்சியை பிரெஞ்சு திரைப்படத்தில் எழுதியவர்கூட கமல்தானோ என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஹோட்டலில் மாமிசம் வெட்டும் இடத்தில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் ஒரு போலிஸ் சொல்கிறார், ‘சீக்கிரம் காப்பாத்துங்க. மாமிச நாத்தம். நான் வெஜிட்டேரியன்’ என்று. தமிழில் இதையே ஒரு பிராமணப் பெண் கேரக்டராக்கி யாரைவாது பாப்பாத்தி என்றுகூடச் சொல்ல வைத்து, ‘சீக்கிரம் காப்பாத்துங்கோ, நார்றது, சைவமாக்கும்’ என்று சொல்ல வைக்கலாம். இப்படி ஒரு காட்சி லட்டுபோல பிரெஞ்சுத் திரைப்படத்தில் வந்ததே ஆச்சரியதான்.

கமல் என்றால் முத்தம் பற்றிப் பேசாமல் எப்படி இருக்கமுடியும்? தமிழர்களுக்கு முத்தம் கொடுக்க கற்றுத் தந்ததே கமல்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! இந்தப் படத்தில் கன்னாபின்னாவென்று முத்தக்காட்சிகள். தமிழில் இத்தனை முத்தக்காட்சிகள் வருமா என்றெல்லாம் தெரியவில்லை. பாபநாசத்துக்கே ‘மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறது, வன்முறையை நியாயப்படுத்துகிறது’ என்றெல்லாம் சொல்லி வரிவிலக்கு மறுக்கப்பட்டது. இத்தனை முத்தக் காட்சிகள் இருந்தால் நிச்சயம் வரிவிலக்கை மறுத்துவிடுவார்கள். வரிவிலக்கு இல்லையென்றால் ஒரு படத்தின் லாபம் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே கமல் எப்படி இதைக் கையாள்கிறார் என்று தெரியவில்லை. இல்லையென்றால், ஹீரோ தன் முகத்தைப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து ஒரு பெண்ணை முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டிய ‘அவசியக்காட்சி’யெல்லாம் ‘காதல் இளவரசனுக்கு’ அல்வா மாதிரி அல்லவா. அதுபோக இப்படம் நடப்பது நைட் கிளப்பில். அங்கங்கே யார் யாரோ கட்டித் தழுவிக்கொண்டும் முத்தமிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். குணா படத்தில் ‘ஹொய்லாலோ’ பாட்டை நினைத்துக்கொள்ளவும். தமிழிலும் அடித்து தூள் பண்ணவேண்டியதுதான். வரிவிலக்குத்தான் பாடாய்ப் படுத்துகிறது. பிரெஞ்சுப் படத்தில் வில்லனுக்கும் ஒரு முத்தக்காட்சி உண்டு. தமிழில் அப்புரட்சி பிரகாஷ்ராஜால் சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. சாத்தியப்படாது என்றே தோன்றுகிறது.

ஒரு காட்சியில் சாதாரண ஒருவன் ஹீரோவை அடிக்கிறான். அப்போது அமைதியாகச் சென்றுவிடும் ஹீரோ, பின்னால் நேரம் கிடைக்கும்போது அவனை மீண்டும் அறைந்து தான் ஹீரோ என்று நிரூபிக்கிறார். தமிழில் இதைக் கைவைக்கத் தேவையிருக்காது. அப்படியே எடுக்கவேண்டியதுதான்.

போதை மருந்தை ஒரு கழிப்பறைக்குள் ஒளித்துவைக்கிறார்கள். அதுவும் பெண்கள் கழிப்பறை. எனவே ஆண்கள் பெண்கள்கழிப்பறைக்குள் வருவதும் போவதுமான காட்சிகள் உண்டு. அதிலும் இரண்டு மூன்று ஆண்கள் ஒரே கழிப்பறைக்குள்ளே இருப்பதும், வெளியிலிருந்து பெண்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பதும் கே என்று கிண்டல் அடிப்பதும் அதற்கொப்ப கழிப்பறைக்குள்ளே இருந்து சத்தம் வருவதும் தமிழில் என்னவாகிறது என்று பார்க்க ஆர்வமாக உள்ளேன். தமிழ்த்திரையை உலகத்திரைக்கு உயர்த்த நல்ல ஒரு சந்தர்ப்பம் வீணடிக்கப்படுமா பயன்படுத்தப்படுமா?

மதம் சம்பந்தப்பட்ட நேரடிக் காட்சியை இத்திரைப்படத்தில் பார்த்ததுபோல் நினைவில்லை. இப்படம் ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. தமிழில் இரண்டரை மணி நேரம் ஓட்டலாம். நான்கைந்து பாடல்கள் போட்டு, மீதி நேரத்தில் மதத்தைக் கிண்டல் செய்தால் சரியாகத்தான் வரும். ஆனால் கமல் இப்படித்தான் செய்வார் என்று நம்மால் சொல்லமுடியாது. பாபநாசத்தில் கடவுளைக் கையெடுத்தே கும்பிட்டுவிட்டார். படமும் ஓடியிருக்கிறது. அந்த நன்றியை மறந்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.

கடைசியாக ஒன்று. கமல்சார்ஆதரவுசுபகுணராஜசுரேஷ்கண்ணன்கள் இப்படத்தின் ஜானரில் இருந்து துவங்குவார்கள். தமிழுக்கு புதுசு என்று தொடர்வார்கள் கமல்சார்ரசிகர்கள். அதிலும் சிலர் மிக நிச்சயம் சொல்லப்போவது ‘பத்து வருடம் கழித்து வந்திருக்கவேண்டிய படம்’ என்று. எத்தனை பார்த்திருக்கிறோம்.

பின்குறிப்புகள்:

* இந்தப் படம் வணிக ரீதியாக வெல்ல கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள். 🙂

* டீஸரில் ‘நான் சொன்னா செஞ்சிருவேன்’ என்றொரு வசனத்தைக் கமல் சொல்லக் கேட்டேன். மிக நல்ல பன்ச் இது. கமல் சொல்லுபோது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் முழுமையான ரீச்சுக்கு இதை ரஜினிக்கே வைத்திருக்கவேண்டும். 🙂 ரஜினியில்தான் முடிப்போம்.

Share

புலி என்னும் கிட்டத்தட்ட அம்புலிமாமா

புலியும் தமிழ்நாட்டு சிறுவர் திரைப்படங்களும் – ‘மாஸ்’ திரைப்படம் பார்த்தபோது இதுபோன்ற கட்டுரை (!) ஒன்றை எழுத நினைத்தேன். ‘புலி’ திரைப்படம் பார்த்ததும்தான் எழுத முடிந்தது. ஒன்றோடு ஒன்று மிக லேசாகத் தொடர்புடைய எண்ணங்களை (கொஞ்சம் தொடர்பற்ற எண்ணங்களையும்கூட) ஒன்று கோர்ப்பதே நோக்கம்.

Puli_vijay

முதலில் ‘புலி’ திரைப்படம் பற்றிச் சொல்லிவிடுவோம். முதல் முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்கமுடியவில்லை. சகிக்கமுடியாத திரைக்கதை, கொஞ்சம் கூட ஒட்டாத விஜய்யின் நடிப்பு. பின்பு ஒரு கட்டத்தில் எப்படியோ ‘கதை’ நம்மைத் தொற்றிக்கொள்கிறது. இதிலும் எந்தப் புதுமைகளும் இல்லை. ஏழு கடல் தாண்டி ஏழு மலைதாண்டிய நம் மரபில் வந்த சிறுவர் கதைகளின் இன்னொரு வடிவம். எத்தனையோ முறை அரைக்கப்பட்டுவிட்ட அதே விடுகதை வடிவங்கள். இவையெல்லாம் நிச்சயம் ஒரு மாஸ் ஹீரோவின் திரைப்படம் ஆகமுடியாது. இந்த மாஸ் ஹீரோ என்ற பதத்தை எழுதும்போதே கொஞ்சம் எரிச்சலாகத்தான் வருகிறது. ஆனால் அதைச் சொல்லித்தானே ஆகவேண்டும். அதிலும் சிம்புதேவனின் திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். 23ம் புலிகேசியே கொஞ்சம் சுமாரான திரைப்படம்தான். பல்லாண்டுகளாக அப்படி ஒரு திரைப்படம் வராமல் போனதாலும், வடிவேலு என்றொரு சரியான நடிகர் அந்தப் படத்தில் அமைந்ததாலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் பார்க்கும்போது தோன்றிய உணர்வு, தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை ஒன்றாக்கிய ஒரு படம் என்பதே. அந்த அபத்தத்தை மட்டும் ‘புலி’ எப்படியோ தாண்டி, முழுநீளத் திரைப்படம் என்று இதைப் பார்க்கமுடிகிறது.

இந்தப் படத்தைக் கெடுத்ததில் முக்கியப் பங்கு தம்பி ராமையாவுக்கே. அவர் வரும் காமெடிக் காட்சிகள் நாலாந்தரக் காட்சிகள். சிம்புதேவன் செய்த மிகப்பெரிய தவறு, தொடக்கக் காட்சிகளில் தேவையின்றி வைத்த தம்பி ராமையாவின் காட்சிகளும் விஜய்-ஸ்ருதிஹாசன் காதல் காட்சிகளும். உண்மையில் நான் என் மகனுடன் சென்றிருக்காவிட்டால் இக்காட்சிகளிலேயே எழுந்து வெளியே வந்திருப்பேன்.

அதன் பின்னர் ஓர் இந்திய சிறுவர் திரைப்படத்துக்கான அத்தனை காட்சிகளையும் இப்படத்தில் பார்ப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எதுவும் புதுமையில்லை என்றாலும் இப்படியெல்லாம் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. நாற்பது வருடங்கள்கூட இருக்கலாமோ? இருக்கலாம்.

இது போன்ற சிறுவர் திரைப்படங்களுக்குத் தேவையானது கொஞ்சம்கூட லாஜிக் பார்க்காத கற்பனை. அதை செயல்படுத்த ஒரு சூப்பர் ஹீரோ. சிறுவர்களைக் கட்டிப்போடும் அரங்க அமைப்புகள், ஒளிப்பதிவு, இசை. இத்தனையும் இப்படத்தில் எல்லா கச்சிதங்களுடனும் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் சில இடங்களில் சொதப்பினாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தேறிவிட்டது என்றே சொல்லவேண்டும். தேவையற்ற பாடல்கள் நாராசமாய் ஒலித்து சிறுவர்களை சோதிக்கின்றன என்றே சொல்லவேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்தப் பாடல்களை இதே சிறுவர்கள் மனப்பாடமாகச் சொல்லக்கூடும். எனவே அவர்களுக்கு இந்தப் பாடல்கள்கூட தடையாக இருக்க வாய்ப்பில்லை.

இப்படத்தைப் பார்க்கும் நாம்தான் சிறுவர் உலகத்துக்கும் முழுமையாகச் செல்லமுடியாமல் வயதுவந்தவர்களுக்கான மெச்சூர்ட் திரைப்படமாக ஏற்றுக்கொள்ளவும்முடியாமல் தத்தளிக்கிறோம். இதற்கான காரணம் பார்வையாளர்களான நம்மிடம் மட்டும் இல்லை. இயக்குநரில் தொடங்கி நடிகர்கள்வரை அனைவருக்கும் பங்குள்ளது.

இந்தப் படத்தைப் பார்க்கத் துவங்கிய சில நிமிடங்களில், மந்திர சக்தி கொண்ட நீர்மத்தைப் பற்றிய காட்சியின்போது நினைத்துக்கொண்டேன். முழுமையான சிறுவர் படத்தில் குள்ளர்கள் வருவார்களே என்று. பாலகிருஷ்ணாவும் ரோஜாவும் நடித்த ஒரு தெலுங்கு மொழிமாற்றப் படத்தைப் பார்த்திருக்கிறேன். (தெலுங்கில் பைரவ த்வீபம் தமிழில் விஜயராகவன் என்ற எதோ ஒரு பெயரில் வந்தது.) அதில் குள்ளர்கள் வருவார்கள். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட் என்று அப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டிருந்தபோதே அடுத்த காட்சியில் குள்ளர்கள் வந்தார்கள். சரி, இது முழுமையான சிறுவர் படம்தான் என்று எனக்கு அப்போதுதான் உரைத்தது. இந்தியத் திரைப்படங்களில் குள்ளர்கள் வரும் திரைப்படங்களில் என்ன என்ன காட்சிகள் வருமோ அவையே வந்தன என்பதுதான் இடைஞ்சல். ஆனாலும் குள்ளர்கள், பறக்கும் மனிதர்கள், ராட்சத வீரன், இறவா வரத்துக்கான அரசியின் யாகம், பேசும் பறவைகள், கொலைகாரத் தளபதி என எதையும் விட்டுவைக்காமல் சிறுவர்களுக்கு ஒரு விருந்தையே படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் இப்படம் வருவதற்கு முன்பு யாரும் வாய் திறந்துகூட இது சிறுவர்கள் படம் என்று சொல்லிவிடவில்லை. சிறுவர்கள் படமெடுக்க உலகெங்கும் பில்லியன் கணக்கில் செலவு செய்துகொண்டிருக்க, இங்கே சிறுவர் படம் என்று சொல்லவே கூச்சம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறுவர் படங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கும் வழக்கமே இல்லை. வயது வந்தவர்கள் என்ன படம் பார்க்க விரும்புகிறார்களோ அதையேதான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அப்படியே அதை மட்டுமே விரும்பத் தொடங்குகிறார்கள். அதோடு உலகத்தில் வெளியாகும் அத்தனை சிறுவர் படங்களையும் நம் சிறுவர்கள் எப்படியோ பார்த்துவிடுகிறார்கள். எனவே தமிழ்த் திரைப்படங்களின் போதாமையே இவர்களின் முகத்தில் முதலில் அறைகிறது. அதுவே அப்படத்தின் தோல்விக்கான முக்கியமான காரணமாக அமைந்தும்விடுகிறது. எனவேதான் சிறுவர்கள் படம் என்று சொல்வதில் யாருக்கும் விருப்பம் இல்லை. சிறுவர்களுக்கான ஒன்றைச் செய்யும் பொறுமையோ வழக்கமோ நம் பெற்றோர்களுக்கும் இல்லை.

ஒரு இயக்குநர் சொன்னாராம், தான் நல்ல கலைப்படம் எடுத்தபோது அதை வெற்றிபெற வைக்காத தமிழர்களுக்கு நல்ல படம் பார்க்கவோ கேட்கவோ தகுதியில்லை என்று. இதில் கூடுதல் குறைவாக இருந்தாலும், கொஞ்சம் உண்மையும் உள்ளது.

ரேவதியும் அரவிந்த் சாமியும் நடித்து ‘பாச மலர்கள்’ என்றொரு திரைப்படம் வந்தது. படம் வந்த ஒரு வாரத்தில் ரேவதி ஒரு தொலைக்காட்சியில் புலம்பிக்கொண்டிருந்தார். ‘இது குழந்தைகள் திரைப்படம். அவர்களை நம்பித்தான் வெளியிட்டோம். ஆனால் எந்தக் குழந்தைகளும் பார்க்க வரவில்லை’ என்று. அதுவரை அது குழந்தைகள் படம் என்று யாருமே சொல்லததால் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது அது குழந்தைகள் படம் என்று. படம் ஓடவில்லை என்றாகவும் மெல்ல சிறுவர் படம் என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.

இம்சை அரசனை விட ‘புலி’ மிக முழுமையான சிறுவர் திரைப்படம். அந்தக் காலம் என்றால் வரிவிலக்கெல்லாம் கொடுத்திருப்பார்கள். இன்று படம் வருவதே வரிவிலக்கு கொடுத்ததற்கு ஒப்பானதாகிவிட்டது. அதிலும் இப்படத்தில் அரசியல் வசனங்கள் உண்டு. தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று ஜெயலலிதா நினைக்காமல் இருந்ததே விஜய் செய்த பூர்வஜென்ம புண்ணியம். திரையரங்கில் ரஜினியின் அந்தக் காலஅரசியல் வசனங்களுக்கு எப்படி ஆர்ப்பரித்தார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். இதில் வரும் அரசியல் வசனங்கள் பலருக்கும் அவை அரசியல் வசனங்கள் என்றே தோன்றவில்லை. விஜய் இந்த அரசியல் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு நல்லது.

விஜய் நடித்ததின் ஒரு ப்ளஸ் அவரது புகழ் என்றால், மிகப்பெரிய மைனஸ், படம் முழுக்க அவரை பெரிய ஹீரோவாகக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம். தேவையற்ற காட்சிகளிலும் ஸ்லோ மோஷனில் நடந்து பின்னணி இசை ஒலிக்க அவர் வருவதைப் பார்க்கும்போது, இப்படத்தை வயது வந்தவர்களுக்கான திரைப்படமாகவே அவரும் எடுத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பல காட்சிகளில் நடிக்கத் திணறுகிறார். இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்கவும் ஒரு திறமை வேண்டும். மிகவும் மோசம் என்று விஜயைச் சொல்லமுடியாது என்றாலும், என்னவோ ஒட்டவில்லை.

இப்படம் வருவதற்குமுன்பே நினைத்தேன், ஒன்று இப்படம் பெரிய வெற்றியடையும் அல்லது ஊத்திக்கொள்ளும் என்று. இன்று நான் பார்த்தபோது திரையரங்கில் என்னுடன் முப்பது பேர் பார்த்திருந்தால் அதிகம். நமக்கு சிறுவர் படங்கள் இனியும் வாய்க்காமல் போவதற்கு இப்படமும் ஒரு காரணமாக இருக்கும். இதில் வரும் காதல் காட்சிகள், பாடல்கள், கேவலமான காமெடிக் காட்சிகள் என பலவற்றைச் சுட்டிக்காட்டி, இவையெல்லாம் உள்ள ஒரு படம் எப்படி குழந்தைகள் படமாக முடியும் என்று யாரேனும் கேட்டால், அக்கேள்வியைப் புறந்தள்ளவும் முடியாது.

எப்படி இருந்தாலும் இப்படி ஒரு படத்தை நடிக்க முன்வந்ததற்காக விஜய்யைப் பாராட்டவேண்டும். முதலில் உள்ள ஒரு மணி நேரத்தில் பல காட்சிகளை வெட்டி நீக்கி, பின்னர் கடைசியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சியை கொஞ்சம் முன்னகர்த்தி நகாசு வேலை செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பிழைத்திருக்கலாம்.

சிம்புதேவனின் பல மொக்கைத் திரைப்படங்களுக்கு மத்தியில் இது ‘சிறுவர் திரைப்படம்’ என்ற அளவில் கொஞ்சம் தேறுகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இதன் வணிகத் தோல்வி தவிர்க்க முடியாததுதான். ஐந்து வயது முதல் பத்து வயது சிறுவர்களுக்கான முழுமையான சிறுவர் படம் கடந்த முப்பது நாற்பது வருடங்களில் வந்தது எது என்று யோசித்தால் நமக்கு பதிலே கிடைக்காது.  தங்கமலை ரகசியம், வேதாள உலகம் அளவுக்கு, அதைவிட அட்டகாசமான ஒரு தரத்தில் இப்படம் வந்திருக்கிறது. இன்னும் ஒரு ஐம்பது வருடம் கழித்து இப்படம் வெறும் ஓர் உதாரணமாக மட்டும் தேங்கும் என நினைக்கிறேன்.

ஒரு பொறுப்பற்ற அவசரத்தாலும் வணிக வெற்றியை நினைத்தே செயல்பட்டதாலும் திரைக்கதைக்கு மெனக்கெடுவது அநாவசிய வேலை என்ற தமிழ்த்திரைப்பட முடிவுகளாலும் இத்திரைப்படம் கண்டிக்கும் வணிகத்தோல்வி, சிறுவர் திரைப்படங்கள் மீண்டும் தமிழில் இல்லாமல் போவதற்கு காரணமாக அமையும். நம் தொழில்நுட்ப வசதி உயரும்வரை, சிறுவர் திரைப்படங்களுக்கான தேவையை வயது வந்தவர்கள் அறியும்வரை தமிழில் சிறுவர் திரைப்படங்கள் வந்து என்னதான ஆகப்போகிறது?

அறிவுரையே சொல்லாத, லாஜிக்கே இல்லாத, கற்பனையின் உச்சத்துடன் இயக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை உங்கள் குழந்தைகள் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? நிச்சயம் இப்படத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். படம் பார்க்க சகிக்காமல் நெளியும் காட்சிகளில் நீங்கள் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் குழந்தை எப்படி வாயை பிளந்து ரசிக்கிறது என்று பார்த்து அதை நீங்கள் ரசிக்கலாம்.

குறிப்புகள்:

* விட்டலாச்சாரியாவின் கேவலமான (டப்பிங்) திரைப்படங்களை நான் கணக்கிலேயெ எடுக்கவில்லை.

* பாகுபலி வந்தபோது புலி டீம் ஏன் பதறியது என்பதற்கான காரணம் கிராஃபிக்ஸ் பிரம்மாண்டம் மட்டுமல்ல, கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பதுதான். இந்த இரண்டின் கதையும் கோச்சடையானின் கதையும்கூட ஓரளவுக்கு ஒன்றுதான். கோச்சடையான் தமிழின் மிக முக்கியமான மேலான முயற்சி. அப்படத்தின் தோல்வியும் ‘புலி’ படத்தின் விமர்சனத்துடன் ஒப்பிடத்தக்கதே.

* சொல்லி வைத்தாற்போல் இப்படத்தில் வரும் எந்த முக்கிய நடிகையும் நெற்றிப் பொட்டு வைத்துக்கொள்வதில்லை. நடிகரும் வைத்துக்கொள்வதில்லை. அதெப்படி?

* மாஸ் திரைப்படமும் நல்ல குழந்தைகள் திரைப்படமும். என்ன பிரச்சினை என்றால் வெங்கட் பிரபுவுக்கோ சூர்யாவுக்கோ அதைப் பார்த்த பெற்றோர்களுக்கோ அது வழக்கம்போல தெரியாது என்பதுதான்.

Share

Five poems

நண்பனுக்கு

நானறியா ஏதோவொன்று
என்னிடமே உள்ளதென்பதைப்போல
நீயறியாத ஏதோவொன்றும்
என்னிடம் இருக்கலாம்.
நம்மிடம் இருக்கட்டும்.
இவ்வுலகில் ரகசியங்களே இல்லை
என்பதற்கொப்பாகவே
இவ்வுலகில் ஒவ்வொன்றும் ரகசியமே.
திடீர் சப்தத்தில்
மரம்விட்டு
வான்வெடிக்கும்
பறவைகளை விலகி
மரத்தில்
விழி உயர்த்தாமல்
ஒரு பறவை அமர்ந்திருந்தால்
அது நானோவென
நீயுணரும் நேரத்தில்
நம்மிடை அமைகிறது நட்பு.

***

இன்மையொன்றில்

அநாதரவாக
அலைந்து கொண்டிருந்த
நெருப்புத்துளியொன்றைப் பிடித்து
வீட்டுக்குள் வைக்க
அனைத்தும் எரிந்து சாம்பலாகியென
ஒன்றும் நிகழவில்லை.
துளியைத் தூக்கிக்கொண்டோடி
மலைமேலிட்டேன்
சலனமற்றிருந்தது அவ்வுலகு.
குடத்துக்குள் இட்டபோதும்
துளியெனவே உயிரசைத்தபடி.
மென்காற்றொன்றில்
அத்துளி இறக்க
இருள் கவிகிறது சட்டென.

***

மலைப்பயணம்

மலையிலிருந்த இறங்கிய
குதிரையாகிய நான்
இளைப்பாறிக்கொண்டேன்
சிவந்திருந்த கண்கள்
தன்தோற்றம் கொண்டன
மூச்சு சீராகி
உதறலெடுத்த கால்கள் நின்றன
கைகளின் நடுக்கம் மறைந்தது
குதிரை விடைபெறும் தருணம்
புதிய கல்லொன்று வருமென்று
எதிர்பார்த்துக் காத்திருந்து
ஏமாந்து கழியும் பொழுதில்
மலையுச்சி நோக்கிக்கொண்டே
கல்லொன்றைத் தேடுகிறேன்
குதிரையாகும் நான்

***

இருளிரவு

நாளை காலை முதல்
எத்தீச் சொல்லும் காதில் விழப்போவதில்லை
பாலில் நீர் சேர்த்த புகார் வரப்போவதில்லை
இறைவனைப் பற்றிய ஐயங்களில்லை
நெருப்புப் பந்தம் சுற்றிலும் பூச்சிகள் இல்லை
குழந்தைகள் அழப்போவதில்லை
எங்கும் இனியன, எல்லாம் இனியது
சுற்றி வரும் சொற்கள் விலகி
வெற்றுக் கவிதைகள் இல்லை
சுற்றம் இனியது சூழல் இனியது
என்றேதான் கவிகிறது
இவ்விரவும்.

***

இன்னுமொரு இன்னுமொரு

சடக் சடக் ஒலியில்
கால் மாற்றி
கை விரையும் வேகத்தில்
புதிய புடைவையின்
வண்ண நெளிவுகளில்
உருவாகி வருகிறான்
இன்னுமொரு இறைவன்
உடுக்கையொலியும்
தாளலயமும்
தப்பாத ஆட்டத்தில்
கண்மயங்கிச் சரியும்
அந்திக்குப்பின்னே
காத்திருக்கிறது
இன்னுமொரு சூரியன்

Share