பரிகசிப்பு – கவிதை


கேட்டுக்கேட்டு

பார்த்துப் பார்த்து

பழகிப் பழகி

ஒவ்வொன்றாகப் பதித்துக்கொண்டு

சுயம்பு உருவாகிறது

மனதுள், பிம்பமாய்.

சில நிகழ்ந்த கணங்களில்

அணிச்சையாக

தானே வரைந்துகொள்கிறது

ஓர் அருவ ஓவியம், உள்ளுக்குள்.

எதிர்பாராமல் இடறி

கையுதறும் நேரம்

பதறாமல், எதிராளி

சிரித்த நொடியில்,

பொருந்தாத ஓவியப் பிம்பத்தை

கேள்விகளில்லாமல் நெட்டித்தள்ளி

பெரிய பரிகசிப்போடு

உள்வந்தமரும்

இன்னொரு ஓவியம்

தன்னை நிஜமென அறிவித்து.

Share

இரண்டாம் கவனம் – கவிதை

கவனம் ஈர்க்கிறது

முன்னெப்போதோ ஒரு கணத்தில்

மலர்ந்துவிட்ட பூ,

நிறமிழந்து

மணமிழந்து

தேனீக்களின் கவனமிழந்து

காம்பறுத்து

சிதறிய சருகுகளாய்

மென்காற்றிலாடி

கீழே விழும்போதும்.

Share

பெயர் சூட்டிக்கொள்ளும் பறவை – கவிதை

வானத்தில் சுழன்றடிக்கிறது

பெயர் தெரியாத பறவையொன்று

மற்றவையோடு

அதிக வித்தியாசங்களில்லை

அமர்ந்திருத்தலில்

தலைசாய்த்தலில்

இமைத்தலில்

ஓயாமல் இறக்கைகள் அடித்தலில்

வானம் அளத்தலில்

பெண்துணைத்தேடலில்

புதுச்சட்டைச் சகிதம்

தேர் காணப் போகும்போது

“சொத்”தெனப் பொதுப்பதிவு செய்து

பெயர் சூட்டிக்கொள்கிறது

“எச்சமிட்ட பறவை”.

Share

யுகமென – கவிதை

அறையெங்கும் பரவும்

வெளிச்சத்தில்

தன் வீரிய அணுக்களை

விட்டுவிட்டுத் தொலைகிறது

இருள்

விளக்கணைக்கும்

கதவடைக்கும்

ஒவ்வொரு நிகழ்விலும்

சடாரென

முகம்தூக்கும் அணுக்கள்

நீர்த்துப்போகின்றன

மெலிதான வெளிச்ச உட்கசிவில்

முழுதும் இருள்

சாத்தியமே இல்லையென்ற

முடிவை

அசைத்துப் பார்க்கும்

இடியும், அதைத் தொடர்ந்த

மின்வெட்டும்

முற்றாகச் சூழ்ந்த இருளை

துரத்தி

பேய் மழையில் நனையும்

இராட்சத மரத்தைக்

கண்ணுக்குக் காண்பித்து

பயமுறுத்தி

மறையும் நொடி மின்னல்

இவ்வாறாகவும்

வேறாகவும்

தொலைத்துக்கொண்டிருக்கின்றன

இருளும் வெளிச்சமும்

ஒன்றையொன்று

Share

நெருப்புக்கோழி – Ostrich

 

Ostriche

Ostrich

மஸ்கட்டிலிருந்து துபாய் செல்லும் வழியிலுள்ள நெருப்புக்கோழிப் பண்ணைக்குச் சென்றதையடுத்து இந்தக் கட்டுரை. அன்றைக்கு நெருப்புக்கோழிகள் ஐயோ பாவம். இன்றைக்கு நீங்கள்.

நெருப்புக்கோழிகளை ஆங்கிலப்படங்களிலும் மிருகக்காட்சி சாலையில் வலைக்கம்பிகளுக்குள்ளாகவும் கண்டது மட்டுமே என் முந்தைய அனுபவமாக இருந்தது. நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டு நெருப்புக்கோழிப் பண்ணையின் கம்பிக் கதவுகளை நெருங்கும்போதே மிக அன்பாக வரவேற்றது நெருப்புக்கோழிக்கூட்டம்.

நெருப்புக்கோழியின் உடலெங்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் (மாட்டு)ஈக்கள் காருக்குள் நுழைந்து எரிச்சல் மூட்டிக்கொண்டிருந்ததையும் மீறி, காரை நோக்கி விரைந்து வரும் நெருப்புக்கோழிகளைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. நெருப்புக்கோழி மிக அருகில் வந்ததும் கை தானாக காரின் கண்ணாடியை ஏற்றிவிட, நெருப்புக்கோழிகள் கார் கண்ணாடிகளைக் கொட்டத் தொடங்கின.

நெருப்புக்கோழிகள் எந்த வகையானவை, அவற்றிற்கு மனிதர்களைத் தாக்கும் குணம் எப்போது வரும் (பண்ணையின் காவலாளிகள் கோழிகளுடன் பழகுவது மாதிரி நெருப்புக்கோழிகளுடன் பழகுவதைக் கண்டாலும் மனதிற்குள் ஒரு பயம் இருந்துகொண்டுதான் இருந்தது.) போன்ற விவரங்கள் தெரியாததால் முதலில் கொஞ்சம் தள்ளியே இருந்தேன். சீனப்படங்களில் லீ மாதிரி ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறுகாலைத் தூக்கி இடது தோளில் வைத்து ஏறி, வானத்தில் பறந்து டைவ் அடித்து உச்சந்தலையில் ஒரு கொத்து கொத்தினால் யார் காப்பார்கள் என்ற எண்ணம் மனதின் ஓர் ஓரத்தில் சுழன்று கொண்டே இருந்ததால் “துஷ்டாரைக் கண்டா தூர விலகு” என்று முணுமுணுத்துக்கொண்டு விலகிப்போனேன். எங்களுடன் வந்திருந்த ஐந்து தமிழ்க்குடும்பங்களிலுள்ள எல்லா வீரர்களுக்குள்ளும் இந்த எண்ணம் இருந்திருக்கவேண்டுமென்பதே என் யூகம்.

காரை விட்டு இறங்கி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு நெருப்புக்கோழிகளை அருகில் சென்று காணத் தொடங்கினோம். போகப் போக நெருப்புக்கோழிகள் மிண்டாப்பூச்சிகள் என்று தெரிந்துபோனது. அதன்பின் எல்லாரும் அதனருகில் சென்று நின்று கொண்டு ·போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நெருப்புக்கோழிகள் மீதிருந்த பயம் முற்றிலும் விலகிப்போனது. நேரம் ஆக ஆக நெருப்புக்கோழிகள் எங்களைப் பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தது!

ஓரிடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த சோளத்தை தின்று கொண்டிருந்த நெருப்புக்கோழிகள் எங்களைக் கண்டதும் விலகுவதும், நாங்கள் அந்த இடத்தை விட்டு விலகிய பின்பு மீண்டும் சோளம் வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நெருங்குவதுமாக இருந்தன. குணத்தில் வெறும் கோழிகள் போல்தாம் என நினைத்துக்கொண்டேன்.

நெருப்புக்கோழிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழத் தேவையான சூழ்நிலை பண்ணையில் நிலவுகிறது. நெருப்புக்கோழியின் முட்டை, சிறிய குஞ்சு, கொஞ்சம் வளர்ந்த நெருப்புக்கோழி, முற்றிலும் வளர்ந்து இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிட்ட நெருப்புக்கோழிகள் என எல்லா நிலையிலும் நெருப்புக்கோழிகளைக் காணலாம்.

Ostriche Eggs Ostriche Stage -1 Ostriche Stage-2 Grown Ostriches

நெருப்புக்கோழியின் முட்டை அளவில் பெரியது; எடை அதிகம் கொண்டது. நெருப்புக்கோழியின் முட்டையோட்டில் பல விதமான வண்ணங்கள் தீட்டி, ஓவியங்கள் வரைந்து விற்கிறார்கள். நெருப்புக்கோழியின் இறகைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட “வாலுள்ள பேனா” கிடைக்கிறது. இறகையும் தனியே விற்கிறார்கள்.

நெருப்புக்கோழியின் குணநலன்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். அவையாவன:

1. ஆண் நெருப்புக்கோழிகள் கருப்பு மற்றும் வெள்ளை நிற இறகுநுனிகளையும் சிவப்புக் கால்களையும் கொண்டுள்ளன. இனப்பெருக்க காலத்தில் சிவப்பு நிறச் சொண்டையும் கொண்டிருக்கின்றன. பெண் நெருப்புக்கோழிகள் சாம்பல் நிற இறகு நுனிகளைக் கொண்டுள்ளன.

2. நெருப்புக்கோழிகள் பாலைவன வாழிகள். அதிக வெப்பத்தைத் தாங்க வல்லவை. (ஒரு காலத்தில் ஓமானில் மட்டுமே நெருப்புக்கோழிகள் இருந்தன)

3. நல்ல நிலையிலுள்ள பெண் நெருப்புக்கோழி இனப்பெருக்க காலத்தில் சராசரியாக இரண்டு நாளுக்கொருதரம் ஒரு முட்டை இடும். (ஓமானில் குளிர்காலம் நெருப்புக்கோழிகளின் இனப்பெருக்க காலமாகும்)

4. நெருப்புக்கோழிகள் தங்களைத் தாக்கவரும் உயிரினங்களை கால்களைக் கொண்டு உதைப்பதன் மூலம் தங்களையும் தங்கள் கூடுகளையும் தற்காத்துக்கொள்கின்றன. ஒரு நெருப்புக்கோழியால் சராசரியாக 500 கிலோகிராம் ஆற்றலுடன் உதைக்கமுடியும். ( நெருப்புக்கோழியின் கால்நகத்தால் ஏற்படும் வலி ஒரு மனிதனை மரணிக்கச் செய்யும் அளவு வலுவானது)

5. நெருப்புக்கோழிகளின் கண்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவுவரைப் பார்க்கும் திறனுள்ளவை. அவற்றின் மூளையின் எடை 40 கிராம் மட்டுமே. இதனால் நெருப்புக்கொழிகள் தங்கள் உள்ளுணர்வைச் சார்ந்தே செயலாற்றுகின்றன.

6. நெருப்புக்கோழிகளின் முட்டைகள் பலவித அழகுப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் தோல், தோல்பொருள்கள் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

7. ஒரு நெருப்புக்கோழிமுட்டையின் சராசரி எடை 1.5 (ஒன்றரை) கிலோகிராம். (18 முதல் 24 கோழிமுட்டைகளுக்கு ஈடாக நெருப்புக்கோழியின் ஒரு முட்டையைச் சொல்லலாம். நெருப்புக்கோழியின் ஒரு முட்டையைக் கொண்டு ஒரு குடும்ப ஆம்லெட் போடலாம்). ஒரு நெருப்புக்கோழிமுட்டை 250 கிலோகிராம் வரையிலான எடையைத் தாங்கவல்லது.

8. நெருப்புக்கோழி முட்டையில் அதிகக் கொழுப்புச்சக்தி இருந்தாலும் அதன் உடற்கறி மீனை விடக் குறைந்த அளவே கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளது.

9. நெருப்புக்கோழி சராசரியாக 130 -150 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது.

இத்தனைப் பராகிரமங்கள் நிறைந்த நெருப்புக்கோழி சுத்த சைவம் என்பது ரொம்ப முக்கியம். 😉

பண்ணையில் இருந்து வெளியே வரும்போது கூட வந்த நண்பர்கள் சொல்லிக்கொண்டு வந்த “கமெண்டுகள்” ரொம்ப முக்கியமானவை.

“ஆஸ்ட்ரிச்னு சொல்றாளே.. நெருப்புக்கோழியா வான்கோழியா?”

“நெருப்புக்கோழி இங்க ஏதுடா? வான்கோழிதான் எல்லாம்”

“பார்த்தாலே தெரியறதே.. நெருப்புக்கோழி வாய் திறந்தா நெருப்புக் கொட்டும்பா.. இது வாயைத் திறந்து மாட்டுஈயைன்னா கொட்டுறது”

“வான்கோழிக்கு இத்தனைப் பெரிய பண்ணை வெச்சிருக்கான்னா ஆச்சரியம்தான். நெருப்புக்கோழிக்கு வைப்பாளோ?”

“நெருப்புக்கோழி பக்கத்துல போய் நின்னா தூக்கிண்டு போயிடப்போறது”

“பொம்பளை நெருப்புக்கோழின்னா தேவலாம்”

“நாட்டி தாத்தா”

இடையில் புகுந்து நெருப்புக்கோழிப்பண்ணையை இரண்டு மணி நேரம் சுத்திப் பார்த்துவிட்டு, வான்கோழிப்பண்ணையான்னு கேட்டு நெருப்பை அள்ளிக் கொட்டாதீரும்வோய் என்று சொல்லிவிட்டு வந்தோம்.

Bowing Ostriche

சீ யூ பை பை

Share

மரத்தடியில் குளிர்கால இலக்கியப் போட்டி

மரத்தடிக் குழுமத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகவும் சரியான பாதையில் செல்வதாகவும் இருக்கின்றது. ஆக்கங்களைப் பகிர்ந்துகொண்டு, கருத்துகளையும் விமர்சனங்களையும் எந்தவித ஒளிவுமறைவில்லாமல் சொல்லி வந்த மிகச் சில குழுக்களில் மரத்தடியும் ஒன்று. அந்தக் குழுமம் அடுத்த தளத்தில் அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்கவேண்டிய, சந்தோஷப்படவேண்டிய விஷயம்.

விடலைப்பருவத்தில் கதை எழுத ஆசையிருந்தது என்றாலும் அனுபவமற்ற கதைகள் வெறும் விழலுக்கு இறைத்த நீராய் அமைந்துவிடுமென்ற எண்ணத்தால், சிலவற்றைக் கதைகள் என்கிற பெயரில் என் டைரியில் கிறுக்கி வைப்பதோடு நின்று போனது என் எழுத்தார்வம். அப்படிக் கிறுக்கிவைத்த ஒன்றிற்கு தினகரன் தீபாவளி மலர்-நெல்லைப்பதிப்பு முதல் பரிசு அளித்து என்னை உறையச்செய்தது. அதற்குப்பின் எழுத முனைந்த சிறுகதைகள் எல்லாமே வெறும் சம்பாஷனைகளின் தொகுப்பாய் அமைந்துபோக, கதையை எழுதுவதைக்காட்டிலும் என் முதல் தேவை நல்ல கதைகளைப் படிப்பது என்ற முடிவெடுத்தேன். அப்படியே தொடர்ந்த என் கதை படிக்குமார்வம் மெல்ல மெல்ல வளர்ந்து, தமிழ்ப்புத்தகம் படிக்காவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் என்ற் முத்திய ஒரு நிலையில் துபாய் என்னை வரவேற்றுக்கொண்டது. அதன்பின் புத்தகங்கள் கைகளில் கிடைக்காததால் என்னார்வம் ஆனந்தவிகடன், துக்ளக், இந்தியாடுடே என்ற வாரப்பத்திரிகைகள் வாசிப்போடு நின்றுபோக, எனக்குள் நாவல்கள் படிப்பதன் மீதான ஏக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

வந்தது ஒரு சுபநாள்.

மரத்தடிக்குழுமத்தில் இணைந்தேன். மஸ்கட்டிலிருந்து வந்திருந்த ஹரீஷ்குமார் சொன்னதன்பேரில் மரத்தடியில் இணைந்து வாசிப்பாளனானேன். இரண்டாம் நாளே எழுத்தாளனானேன்! மனதுள் குடியிருந்த காதல் என்னைக் காதல் கவிதைகளைத்தான் எழுதத் தூண்டியது. அதைத்தான் நானும் எழுதினேன். அதுமட்டுமல்லாமல் தமிழ் எழுத்துரு, முரசு பற்றிய முறையான பயிற்சியோ அறிவோ இல்லாததால் சிறிய கவிதைகள் எழுதுவது எளிதானதாக இருந்தது. இப்படி எழுத ஆரம்பித்த நான் மெல்ல சிறுகதைகளுக்குள் புகுந்தேன் அல்லது செலுத்தப்பட்டேன்.

அவ்வப்போது சேரியதாகவும் பெரும்பாலும் நகைச்சுவையாகவும் போய்கொண்டிருந்த குழு, ஒரு கட்டத்தில் தன் இருப்பை உணர்ந்து, வெற்றுக் கதையாடல்களைக் குறைத்துக்கொண்டு, கருத்துப்பரிமாற்றம், விமர்சனம் உள்ளிட்ட பல சேரிய செயல்களைத் தொடங்கியது. இதற்கு நட்புக்குழுக்களிலுள்ள வளர்ந்த எழுத்தாளர்கள் முதல் வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் சொல்லிய அறிவுரையும் முக்கியக்காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

இப்படிப் போய்க்கொண்டிருக்கிற குழு இன்னொரு தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. குளிர்கால இலக்கியப் போட்டி. இந்த முயற்சிக்கான ஒட்டுமொத்த பாராட்டிற்கும் உரியவர் நண்பர் பி.கே.எஸ். சிவகுமார். அவருக்கு பாராட்டும் நன்றியும்.

இந்தப் போட்டி முயற்சி புதியதல்ல. ஏற்கனவே ராயர்காபிக்ளப் குழுமம் மாதமொரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. குழுமங்களில் சிறுகதைப்போட்டியை முதன்முதலில் நடத்தியது க்ளப்பாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் நேரமின்மை உள்ளிட்ட சில காரணங்களால் அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது சோகமான விஷயம். மரத்தடியில் போட்டியை ஏற்று நடத்தும் உபயதாரர்களும் மட்டுறுத்தனர்களும் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அறிவுப்புடன் மேள தாளத்துடன் ஆரம்பிப்பது எளிதல்ல. சவால்களை எதிர்கொண்டு அதை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டியதுதான் முக்கியம்.

குளிகாலப்போட்டி வெற்றிகரமாக நடக்க இறையருள் துணைசெய்யட்டும்.

மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்!

மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாஹ¥ குழுமமும் வாழ்வின்\பாலும், வாழ்கின்ற சமூகத்தின் பாலும், விழுமியங்கள் சொல்கின்ற இலக்கியத்தின்பாலும் ஆர்வமும் நேசமும் மிக்க இன்றைய இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படுவன. மனிதர்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கிற எந்த விடயத்தைக் குறித்தும் நாங்கள் அங்கு ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களிலே பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஓர் ஆரோக்கியமான இணையக் குடும்பமாக ஆனால் விதவிதமான வண்ணங்களைப் போன்ற எண்ணங்களுடன் நாங்கள் மரத்தடியில் வாழ்ந்து வருகிறோம். வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும், நல்ல எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, மரத்தடியில் “குளிர்கால சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகளை” அறிவித்திருக்கிறோம். முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்று தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கும், புதுக்கவிதைக்கும் தலா இரண்டு பரிசுகள் வழங்க இருக்கிறோம். முதல் பரிசாக இந்திய ரூபாய் 5000-ம், இரண்டாம் பரிசாக இந்திய ரூபாய் 2500-ம் வழங்க உள்ளோம். திண்ணை ஆசிரியர் குழுவின் மூத்த உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம் அவர்கள் பரிசுக்குரிய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும், எழுத்தாளர் திருமதி. காஞ்சனா தாமோதரன் அவர்கள் பரிசுக்குரிய புதுக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும் இருந்து உதவ அன்புடன் இசைந்துள்ளார்கள். இலக்கியத்தின் மீது ஆர்வம் உடைய புதுமுக மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். போட்டிக்கான விதிகளை மரத்தடி யாகூ குழுமச் செய்திகளில் காணலாம். உங்களுக்காக அவற்றை மீண்டும் கீழே தந்திருக்கிறோம்.

1. மரத்தடி யாகூ குழுமத்தில் இதுவரை உறுப்பினராக இல்லாதவர்களூம்கூட, போட்டியின் இறுதி நாளுக்குள் (பிப்ரவரி 15, 2004 EST) உறுப்பினராகிப் போட்டியில் கலந்து கொள்ளலாம். மரத்தடி யாகூ குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்களே போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முடியும்.

2. பரிசுகள் காசோலைகளாக அனுப்பப்படும் என்பதால் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்களைத் தரத் தயாராக இருக்கவேண்டும். தனிப்பட்ட விவரங்களைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளத் தயக்கமென்றால் அவற்றை குழுமத்தின் மட்டுறுத்துனரிடமோ போட்டியின் ஒருங்கிணைப்பாளருடனோ பகிர்ந்து கொள்ளலாம்.

3. பிரபல பத்திரிகைகளுக்கு இணையான பரிசுகளை மரத்தடி வழங்குவதால், போட்டியில் வெல்கின்ற படைப்புகளை வேறெங்கும் அவற்றின் ஆசிரியர்கள் பின்னர் பிரசுரத்திற்கு அனுப்பக்கூடாது. போட்டியில் வெல்கின்ற படைப்புகள் மரத்தடி இணையதளத்தில் பிரசுரிக்கப்படும். பிற இடங்களில் பிரசுரிப்பது குறித்து மட்டுறுத்துனர் சந்திரமதி கந்தசாமி அனுமதி வழங்கவோ மறுக்கவோ செய்வார். போட்டிக்கு அனுப்பப்படும் எல்லாப் படைப்புகளைப் போட்டியின் முடிவுகள் தெரியும் வரையும் அவற்றின் ஆசிரியர்கள் வேறெங்கும் (இணையக் குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) பிரசுரிக்க அனுப்பக்கூடாது.

4. பி.கே.சிவகுமார் இந்தப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். ஒருங்கிணைப்பாளரோ அவர் குடும்பத்தினரோ இந்தப் போட்டியில் பங்கேற்க இயலாது.

5. மரத்தடி குழுமத்தின் மட்டுறுத்துனர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

6. போட்டியில் பங்குபெறும் படைப்புகளை “மரத்தடி குளிர்கால சிறுகதைப் போட்டி – கதையின் தலைப்பு”, “மரத்தடி குளிர்கால புதுக்கவிதைப் போட்டி – புதுக்கவிதையின் தலைப்பு (தலைப்பு இருக்குமானால்) என்கிற “Subject” உடன் மரத்தடி குழுமத்தில் பொதுவில் மடலிடுங்கள்.

7. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் போட்டிக்காகவென்றே எழுதப்பட்டிருக்க வேண்டும்; அதாவது, வேறெங்கும் (இணையக்குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) முன்னமே பிரசுரமாகியிருக்கக் கூடாது.

8. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் ஆசிரியரின் சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும்.

9. போட்டி விதிகளைக் குறித்து ஒருங்கிணைப்பாளரின் கருத்தும், பரிசுக்குரியனவற்றைக் குறித்து நடுவரின் கருத்துமே முடிவானது; உறுதியானது. போட்டிக்கு உதவலாம் என்கிற எண்ணத்துடனும், முரண்களையும் சர்ச்சைகளையும் களையும் விதத்துடனும், இந்தப் போட்டியின் விதிகளை மாற்றவோ, தளர்த்தவோ, கூட்டவோ ஒருங்கிணைப்பாளருக்கு உரிமை உண்டு.

10. போட்டிக்கான படைப்பு என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டா.

11. போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 15, 2004 11:59 PM EST.

12. போட்டியின் முடிவுகள் பிப்ரவரி 29, 2004 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்படும்.

13. ஒருவர் அதிகப்பட்சமாய் ஒரு சிறுகதையும், ஒரு புதுக்கவிதையும் மட்டுமே போட்டிக்கு அனுப்ப இயலும்.

14. மேலும் விவரங்களுக்கு mathygrps@yahoo.com அல்லது pksivakumar@att.net ஆகிய மின்னஞ்சல்களுக்கு மடலிடுங்கள்.

வளர்ந்து வருகிற, புதுமுக எழுத்தாளர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

….வேண்டுகிறேன்.

Share

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Share

Asif and Anandraghav



10.01.2004 அன்று துபாய் 657 ஏ. எம். இல் ஒலிபரப்பான ஆனந்த்ராகவ் உடனான பேட்டியின் போது ஆசிஃபும் ஆனந்த்ராகவும்.

Share