தலைமுறை

என் தாத்தாவிற்கு தனது எழுபதாவது வயதில் சம்பாதித்து எங்களைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தம் இருந்தது. அவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். தனது கடைசிக்கால ஆசிரியப்பணியில் இரண்டு ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். மீண்டும் சம்பாதிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோது அவர் உடனே தேர்ந்தெடுத்தது தனிப்பயிற்சியாகத்தான் இருக்கமுடியும். ஒன்றிரண்டு மாதங்களிலேயே நிறைய மாணவர்கள் அவரிடம் தனிப்பயிற்சிக்குச் சேர்ந்தனர். அவர் ஆங்கிலம் நடத்தும் பாணியே அலாதியானது. தனிப்பயிற்சிக்கு வந்த மாணவர்கள் பலருக்கு ஆங்கிலம் என்றாலே என்ன என்று தெரியாது. அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்கு என் தாத்தா மேற்கொண்ட முயற்சிகளைச் சொல்லி மாளாது. சளைக்காமல் மீண்டும் மீண்டும் சொல்லித்தருவார். அதுவரை இல்லாத வழக்கமாக காலை நான்கரைக்கும் தனிப்பயிற்சிக்கு வரவேண்டும் என்று சொன்னார். தனிப்பயிற்சிக்கு வந்த மாணவர்களுக்கெல்லாம் ஆச்சரியமும் எரிச்சலும் ஒருசேர எழுந்தது. மாணவர்கள் வீட்டில் அதிசயித்துப்போனார்கள். இதுவரை அந்தப் பகுதியில் – அப்போது மதுரையில் இருந்தோம் – யாரும் காலை நான்கரைக்குத் தனிப்பயிற்சி சொல்லித்தந்ததில்லை. நான்கரைக்குத் தனிப்பயிற்சி ஆரம்பிக்கும். தாத்தா மூன்றரைக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஒரு கா·பியோ டீயோ சாப்பிட்டுவிட்டு, தனிப்பயிற்சி நடக்கும் இடத்தைத் தூற்று, மேஜை விளக்கு வைத்து, நான்கு மணிக்குத் தயாராகிவிடுவார். நான்கரைக்கு வரவேண்டிய பையன்கள் ஐந்துமணிக்குத்தான் வரத் தொடங்குவார்கள். ஆனாலும் என் தாத்தா எல்லா நாளிலும் சரியாக நான்கு மணிக்கே தயாராகிவிடுவார். இது எங்கள் தூக்கத்திற்கும் இடஞ்சலாகத்தான் இருக்கும். ஆனாலும் தாத்தாவை எதிர்த்து ஒன்றும் பேசிவிடமுடியாது. தாத்தா முடிவெடுத்துவிட்டால் அதை மாற்ற யாராலும் முடியாது. சரியோ தவறோ அவர் நினைத்ததை அவர் செய்துகொண்டே இருப்பார். உறுதியுடன் செய்வார். இறுதிவரை செய்வார்.

எங்கேனும் ஊருக்குச் செல்லவேண்டுமென்றால் புகைவண்டியின் நேரத்தைக் கேட்டுக்கொள்வார். வண்டி வரும் நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே அங்கிருக்கவேண்டும் என்பது அவர் கொள்கை. ஒருமணி நேரமாவது தாமதமாக வரவேண்டும் என்பது வண்டியின் கொள்கை. அவருடன் ஊருக்குச் செல்லும் தினங்களில் இரண்டு மணிநேரம் புகைவண்டி நிலையத்தில் தவித்துக்கிடப்போம் நேரம் போகாமல். சில சமயம் எரிச்சலில் நான் கத்தியிருக்கிறேன். ஆனாலும் அவர் மசிய மாட்டார். ஒரு மணிநேரத்திற்கு முன்பு போயே ஆகவேண்டும்.

அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவரது துணியையும் என் பாட்டியின் துணியையும் அவரே தன் கைப்படத் துவைப்பார். அவர் நடை தளர்ந்து போகும்வரை, கிட்டத்தட்ட 65 ஆண்டுகள், அதாவது அவரது எழுபத்தி எட்டாவது வயது வரை இதைச் செய்தார். துவைப்பது என்றால் வாஷிங் மெஷின் துவைத்தல் அல்ல. பளீரென்ற வெண்மைக்குச் சான்று என்றால் என் தாத்தாவின் வேட்டி, சட்டைகளைத்தான் சுட்டமுடியும். அப்படி ஒரு வெண்மை. ஒரு நாள் அணிந்த துணியை மறுநாள் அணியமாட்டார். ஒரு சிறிய பொட்டாக அழுக்குப் பட்டுவிட்டாலும் அதைத் துவைக்கும்வரை அவருக்கு ஆறாது. கடைசி காலங்களில் அவர் இதையே எங்களிடமும் எதிர்பார்க்க, எங்களால் அப்படிச் செய்யமுடியாமல் போனது. துணிகளைச் சேர்த்தெடுத்து, வாஷிங் மெஷினில் போட்டு, காலரை ஒரு கசக்குக் கசக்குவதே எங்களுக்குத் தெரிந்த துவைக்கும் முறை. இதைத் தாத்தாவால் ஏற்கமுடியவில்லை. ஆனாலும் அவருக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.

தாத்தாவின் குணநலன்கள் எனக்குக் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு என்னிடமில்லை. அவரைப் போல் என்னால் விஷயத்தை முழுமையாக அணுகமுடியவில்லை. (புத்தகம் படிக்கும் விஷயத்தையும் எழுதும் விஷயத்தையும் தவிர!) நானும் சில வருடங்கள் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். ஐந்து மணிக்கு தனிப்பயிற்சி சென்றால் நான்கு அம்பத்தைந்துக்குத்தான் நான் தயாராவேன். தாமதம் இருக்காது. ஆனால் ஏதேனும் சிறு தடங்கல் ஏற்பட்டால் தாமதாகிவிடும் அபாயம் உண்டு. நெருக்கிப் பிடித்துத்தான் தயாராவேன். ஐந்து மணிக்குப் பேருந்து என்றால் நான்கே முக்காலுக்குத்தான் பேருந்து நிலையத்தில் இருப்பதை விரும்புவேன். போகும் வழியில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அந்தப் பேருந்தைப் பிடிக்கமுடியாமல் போய்விடும்.

நான் மிக இரசித்துச் செய்யும் விஷயத்தில் கூட என்னால் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படமுடியவில்லை என்றே நினைக்கிறேன். வயது ஒரு காரணமாக இருக்கலாம். என் தாத்தா என் வயதில் இப்படி இருக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும். அவர் என் வயதில் மிக அதிகமான பொறுப்புடனும் அதிக அர்ப்பணிப்பு உணர்வுடனும்தான் இருந்தார் என்று அவர் உட்பட பலர் சொல்லியிருக்கிறார்கள்.

இது என் தவறு மட்டும்தானா அல்லது இந்தத் தலைமுறையின், அதாவது என் தலைமுறையின் தவறா எனத் தெரியவில்லை. எல்லா விஷயங்களும் கைக்கெட்டும் தொலைவில் இருப்பதால் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோமோ என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் மேலிடும். தாத்தாவிற்குக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருந்தது. அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வை அவர் அளிக்காதிருந்தால் ஒன்றிரண்டு பையன்கள் தனிப்பயிற்சியிலிருந்து விலகும் அபாயம் இருந்தது. அது குடும்பத்தில் வரவு செலவில் உதைக்கும் நிலை இருந்தது. அதனால் அவருக்கு அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் இருந்ததோ என்றும் யோசிக்கிறேன்.

அதை ஒன்றை மட்டுமே காரணமாகச் சொல்லிவிடமுடியாது. அர்ப்பணிப்பு உணர்வு என்பது பிறப்பிலேயே இருக்கும் ஒன்று என்று நினைக்கிறேன். என்னிடமிருக்கும் அலமாரியை ஒருநாள் சுத்தம் செய்வேன். அதன்பின் அதை எப்போதும் சுத்தமாகவே வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தேவையற்ற காகிதங்களைச் சேர விடக்கூடாது என்றும் நினைத்துக்கொள்வேன். ஆனால் என்னால் அதில் வெற்றி பெற முடிந்ததே இல்லை. ஒருவகை சோம்பேறித்தனமும் அலட்சிய மனப்பான்மையும் தலைதூக்க, என் அலமாரி பழைய நிலைக்கே திரும்பும். இப்படி ஒரு அலட்சியத்தையும் சோம்பேறித்தனத்தையும் என் தாத்தாவிடம் பார்த்ததில்லை.

உறங்கும்போது விரிக்கும் விரிப்பில் ஒரு சிறு சுருக்கம்கூட இல்லாதவாறு நான்கு முனைகளையும் இழுத்து இழுத்து விடுவார் என் தாத்தா. நான் ஒருநாள் கூட இதைச் செய்ததில்லை. ஆனால் என் சித்தியின் பையன் இதைச் செய்கிறான். அவனை அறியாமலேயே செய்கிறான். அப்படியானால் (perfection) கனகச்சிதத்தை எதிர்பார்ப்பது பிறப்பிலேயே நிறுவப்படுவதா?

இதே அர்ப்பணிப்பு உணர்வையும் கனகச்சிதத்தையும் நம்முடைய முன்தலைமுறையில் அதிகம் பேரிடம் காணமுடிகிறது என்றே உணர்கிறேன். என் வயதையொத்த பல நண்பர்களும் கொஞ்சம் சீனியர்களும் உள்ளிட்ட நம் தலைமுறையில் பெரும்பாலானவர்கள் என்னையொத்தே இருப்பதைக் காண்கிறேன். ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு உள்ள இடைவெளியில் அர்ப்பணிப்பு உணர்வும் கனகச்சிதத்தை நோக்கிய நகர்தலும் அடிபட்டுப்போனதா? அல்லது தனிமனிதன் சார்ந்த விஷயமா? நம் தலைமுறைகளில் பலர் இன்னும் அதே கனகச்சிதத்தன்மையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும்தான் இருக்கிறார்களா?

எனக்கென்னவோ இல்லை என்றுதான் படுகிறது.

கடந்த தலைமுறையில் உள்ள நமது முன்னோர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வும் செயலாற்றும் தீவிரமும் நம் தலைமுறையில் குறைந்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். நினைத்த மாத்திரத்தில் எல்லாம் கிடைக்கும் வாழ்க்கையும் வறுமையைக் கொஞ்சம் கடந்துவிட்ட வாழ்க்கை முறையும் இந்த அர்ப்பணிப்பு உணர்வைக் குறைத்து நம்மனதுள் அலட்சியத்தன்மையை வளர்த்துவிட்டது என்றேதான் நினைக்கிறேன். இதில் பணத்தின் அருமையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு ரூபாயின் மதிப்பு நமக்குத் தெரிவதே இல்லை. இன்றும் என் அம்மா ஒரு ரூபாயைப் பெரிதாக நினைக்கிறாள் என்று எனக்குத் தெரியும். எனக்கும் அவளுக்குமான இடைவெளி இந்த ஒரு ரூபாயால் மிகப்பெரியதாவதைப் பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச காலத்தில் எனக்கும் அந்தப் பொறுப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் வருமா இல்லை என் வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டிருக்குமா என்கிற என் கவலையே எனக்கு இப்போது முதன்மையானதாக இருக்கிறது.

இதை எழுதவேண்டுமென்று மூன்று மாதங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

Share

தூவானம் – அ.யேசுராசாவின் பத்திகளின் தொகுப்பு – என் பார்வை


தூவானம், அ.யேசுராசா, மூன்றாவது மனிதன் பப்ளிகேஷன், கொழும்பு


“விமர்சன மனநிலைக் கண்ணோட்டம் என்னிடம் எப்போதும் இருந்துவருகிறது. அது அடிமனதிலும் பதிந்து வெளிப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்குமென்றுதான் சொல்லலாம். படைப்பாளிகளிடம் இத்தகைய நிலை இருக்கவேண்டுமென்றுதான் நான் எதிர்பார்க்கிறேன்” – அ.யேசுராசா.

பொதுவாகவே பத்திகள் படிக்க சுவாரஸ்யமானவை. அவை தொடர்ந்து வாசகனுக்கு நிகழ்காலத்தின் நிகழ்வுகளையும், எழுதுபவனின் அனுபவத்தையும், ஒரு படைப்பின் அறிமுகத்தையும் விவாதத்தையும் முன்வைக்கின்றன. சமூகக்கோபங்களைப் பத்திகளில் பரவலாகக் காணலாம். காலங்கடந்து அந்தப் பத்திகளையோ பத்திகளின் தொகுப்பையோ வாசிக்கும்போது அவை ஒரு பதிவாகவும் அமைவதைக் காணலாம். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் இதே வேலையைச் செய்துவருகிறது. திசை வாரவெளியீட்டில் அ.யேசுராசா எழுதிய பத்திகளின் தொகுப்பே “தூவானம்.”

பத்தி எழுத்துகள் ஆழமான விமர்சனமல்ல என்ற முன்னுரையோடே தொடங்குகிறது நூல். அ.யேசுராசாவின் பத்திகளில் எழுத்தாளர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். ஓவியம் போன்ற கலைகள் இலங்கையில் கண்டுகொள்ளப்படவில்லை என்பதான கோபம் இருக்கிறது. சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நல்ல திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. நல்ல கவிதைகள் பற்றிய பதிவு இருக்கிறது. மிகவும் தெளிவான சிக்கலற்ற மொழியால் எழுதப்பெற்ற பத்திகள் அடங்கிய சுவாரஸ்யமான தொகுப்பு “தூவானம்.”

உமாவரதராஜன் என்னும் இலங்கை எழுத்தாளரைப் பற்றிய குறிப்பொன்றில் சுஜாதா அவரைப் பற்றிச் சொன்னதையும் பதிவு செய்திருக்கிறார் அ.யேசுராசா. தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளை யேசுராசா தொடர்ந்து வாசித்திருக்கிறார். அங்கங்கே தேவையான இடங்களில் குறிப்புகளைக் தந்துவிட்டுச் செல்கிறார்.

ஓவியம் பற்றிய குறிப்பில் இலங்கையில் ஓவியம் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் பரவலைப் பெற்றிருக்கவில்லை என்று சொல்லும் யேசுராசா சிங்களர்கள் மத்தியில் ஓவியக்கலை செழித்து வளர்கிறது என்று குறிக்கிறார். தமிழ்நாட்டில் ஓவியத்தின் பரவல் என்னவென்பதை என்னால் யூகிக்கமுடியவில்லை. நவீன ஓவியங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த பயிற்சிகள் தமிழ்நாட்டில் எந்த அளவில் தரப்படுகிறது என்று யோசித்தாமானால் நாமிருக்கும் நிலைமையின் மோசம் புரியும்.

தூர்தர்ஷனில் கலைப்படங்கள் என்னும் பதிவு மிக சுவாரஸ்யமானது. தூர்தர்ஷனில் மாநில மொழித்திரைப்படங்கள் வரிசையில் எல்லா மொழிகளிலும் இருந்து கலைப்படங்களைத் தேர்ந்தெடுத்து முன்பு ஒளிபரப்பினார்கள். அது தூர்தர்ஷனின் பொற்காலம். ஆங்கில துணைத் தலைப்புகளுடன் (Sub title) ஒளிபரப்பாகிய அத்திரைப்படங்களைத் தவறாமல் பார்த்தவர்களின் இரசனை கொஞ்சம் மேம்பட்டிருக்கும் என்பதில் ஐயமே இல்லை. அப்போது ஒளிபரப்பான “அக்கரே”, “காற்றத்தே கிளிக்கூடு”, “புருஷார்த்தம்”, “சிதம்பரம்” போன்ற மலையாளப்படங்களையும் கன்னடம், வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள பல கலைப்படங்களையும் பார்த்து அது பற்றிய தனது கருத்துகளைப் பதிந்திருக்கிறார் யேசுராசா. உலகின் பல்வேறு மொழிகளிலிருந்தும் வெளிவரும் பல்வேறு கலைப்படங்களைப் பற்றிய பார்வை யேசுராசாவிற்குத் திரைப்படங்கள் பற்றிய கூர்மையான, ஆழமான புரிதலை ஏற்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. சிங்களப் படங்கள் பற்றிய பதிவிலும் இதே நேர்த்தியைக் காண முடிகிறது.

கவிதைகள் பற்றிய பதிவில், “இலங்கைப் பத்திரிகையின் வாரவெளியீடுகளிலும் சஞ்சிகைகளிலும் தரமற்ற படைப்புகளே கவிதைகள் என்கிற பெயரில் – இடம் நிரப்பிகளாகவும் – வெளியிடப்படுகின்றன” என்கிறார். அதற்கு அவர் யூகிக்கும் காரணம், “இக்கவிஞர்களில் பலரும் பெரும்பாலும் வாசிப்புப் பழக்கம் அற்றவராகவே இருப்பார்கள். அவர்களின் கண்களில் கிடைக்கக்கூடிய கவிதைகளில் பெரும்பாலானவை இத்தன்மையனவாக இருப்பதும் அவற்றையே முன்னுதாரனமாகக் கொண்டு இவர்கள் எழுத முனைவதும் ஒரு முக்கியக்காரணியாகலாம் என்று நினைக்கிறேன்” என்கிறார். தமிழ்நாட்டிற்கும் அவர் குறித்திருக்கும் நிலையிலிருந்து அதிக மாறுபாடில்லை. “விரிவும் ஆழமும் தேடி”யிலும் சுந்தரராமசாமி கிட்டத்தட்ட இதே கருத்தையே

முன்வைக்கிறார். வவுனியா திலீபன் என்னும் கவிஞரைப் பற்றிய பதிவில் “தென்னகக் கவிஞர்களான நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து போன்றோரின் பாதிப்பிலிருந்து விடுபட முடியாதவாறு தவிப்பதும்” தெரிகிறது என்பதை ஒப்புகிறார். (திலீபனின் கவிதைத் தொகுப்பில் கவித்துவமான வரிகள் என்று சொல்லி யேசுராசா சொல்லியிருக்கும் வரிகளில் எந்தவிதமான கவித்துவமும்

தென்படவில்லை. அவை வெறும் வசன கவிதைகளாகத்தான் இருக்கின்றன. அதையும் கோடு காட்டியிருக்கிறார் யேசுராசா.)

கவிதைகள் பற்றிய கருத்துகள், கலைப்படங்கள் பற்றிய பதிவுகள், அப்போதைய நிகழ்வுகளும் அதை ஒட்டிய நினைவுகளும் என “தூவானம்” படிக்க சுவாரஸ்யம் மிக்கதாகத்தான் இருக்கிறது. தெளிவான நடை ஒரு பலம். சில விஷயங்களின் பின்புலம் (தமிழ்நாட்டு வாசகர்களுக்குப்) பிடிபடாமல் போகும் அபாயம் இருக்கிறது. “க.நா.சு. சில குறிப்புகள்” என்ற எம்.ஏ.நு·ப்மானின் கட்டுரையைப் பற்றிக் குறிப்பிடும்போது கைலாசபதியின் மீதான நு·ப்மானின் குறிப்பினை

எடுத்தாள்கிறார். யேசுராசா, கைலாசபதியின் உறவு எத்தகையது என்பது புரியாததால் குழப்பமே மிஞ்சுகிறது. இதேபோல் “வாசகரெல்லாம் வாசகரல்ல” என்ற பதிவில் ஒரு எழுத்தாளர் பேசியதைப் பற்றிய அங்கதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த எழுத்தாளர் அவர், என்ன பிரச்சனை என்பது போன்ற விவரங்கள் இல்லை. இவையெல்லாம் பொதுவாக, “பத்தி”களின் தோல்விகள் போல. குறும்பா பற்றிய பதிவில் இப்படிச் சொல்கிறார். “இலக்கிய உலகில் நிலவி வரும் குழு மனோபாவத்தினால் குறிப்பிட்ட காலம் வரை இவர் (ஈழத்து மஹாகவி) உரிய இடத்தைப் பெறவில்லை. எம்.ஏ.நு·ப்மான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் அக்கறை எடுத்துச் செயற்பட்டதன் விளைவாக அவரது நூல்கள் பல வெளிவந்ததோடு அவரது கவிதா ஆளுமையின் முக்கியத்துவமும் தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது” என்கிறார். என்ன விதமான குழு மனப்பான்மை நிலவியது என்பது பற்றிய புரிதல் எனக்கில்லை. இலக்கிய உலகில் குழுமனப்பான்மையும் போட்டியும் எல்லாவிடத்தும் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

“வாசகரெல்லாம் வாசகரல்ல” பத்தியில் “குமுதம், ராணி, கல்கி, ஆனந்தவிகடன் இரசிகர்கள் – சாண்டில்யன்களை, புஷ்பா தங்கதுரைகளை, சுஜாத்தாக்களை, இராஜேந்திரகுமார்களை, குரும்பூர்க் குப்புசாமிகளைத்தான் இரசிப்பார்கள்” என்று போகிற போக்கில் சொல்லிப்போகிறார். சுஜாதாவின் இலக்கியப் பங்கு விவாததிற்குரியது என்றாலும் குரும்பூர்க்குப்புசாமிகளுடன் சேர்க்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை. மேலும் ஆசிரியரே உமா வரதராஜன் பற்றிய பதிவில் சுஜாதாவை

மேற்கோள் காட்டுகிறார். அப்போது “குரும்பூர் குப்புசாமி”ப் பட்டியலில் இல்லாத சுஜாதா சில பக்கங்கள் (வாரங்கள்) கழித்து எப்படி அப்பட்டியலில் சேர்ந்தார் என்பதை யேசுராசாதான் சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்தத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும், சுருங்கச் சொல்லப்பட்ட பதிவுகள். கூரான விமர்சனங்கள். நவீன கவிதைகளைப் பற்றிய சிறந்த புரிதல். கலைப்படங்கள் மற்றும் கலைகளைப் பற்றிய அறிமுகங்கள். இவையே “தூவானம்” எனலாம்.

மிகப்பிடித்த சில வரிகளும் மேற்கோள்களும்.

“எழுதுகிறவரெல்லாம் எழுத்தாளரல்ல என்பது போல், வாசிக்கிறவனெல்லாம் வாசகன் அல்ல”-ஜெயகாந்தன் சொன்னதாக மேற்கோள்.

“பொதுவாக நான் கதைகள் எழுதும்போது, வெறுமனே கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்கள் எழுதுவேன். கதையென்றெடுத்தால் கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன்.” — பாரதி சொன்னதாக மேற்கோள்.

பயணம்

=======

காலிலே தைத்த

…..முள்ளினைக் கழற்ற

ஒரு

கணம் திரும்பவும்

…..காதலியோடு என்

ஒட்டகம் எங்கோ

…..ஓடி மறைந்தது!

ஒரு கணம்

…..திரும்பிய கவனம்;

ஒரு நூற்றாண்டாய்

…..நீண்டது பயணமே.

மேலே சொன்ன கவிதை, சுதந்திர போராட்டத் தலைவர்களில் ஒருவரான மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவரது சுயசரிதையில் எழுதியதின் மொழிபெயர்ப்பு. “ஒரு கணம் திரும்பிய கவனம்” என்கிற வரி பல்வேறு அர்த்த விரிவுகளை தன்னுள் ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் யேசுராசா. எனக்கும்.

பின்குறிப்புகள்:

[1] இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பித் தந்த லண்டன் பத்மநாப ஐயருக்கு நன்றி பல.

[2] புத்தகத்தில் “ஏகாப்பட்ட” அச்சுப்பிழைகள்.

Share

இந்தப் பூக்கள் விற்பனைக்கு (கவிதை)

மரத்தடி யாஹூ குழும போட்டிக்கு உள்ளிட்ட கவிதையைப் படிக்க சொடுக்கவும்.

இவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இவர் யாரென்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளர் என்பது மட்டும் தெரிகிறது. நான் இரண்டு பேரைச் சந்தேகித்து வைத்திருக்கிறேன். அவர்களாக இருக்குமா என்று தெரியவில்லை.

அவர் எழுதிய கடிதத்தில் “அவர் முகமூடி அல்ல என்றும் அதை நான் எனது வலைப்பதிவில் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொன்டிருந்தார்.

சொல்லிவிட்டேன்.

அவர் ஏன் என்னிடம் இதைச் சொன்னார் என்பது எனக்குப் புரியவில்லை. நான் சந்தேகிக்கும் நபர்கள்தானோ என்று என் சந்தேகம் வலுப்பெறுகிறது. அப்படி இல்லாமல் போனால் ஒரு கரும்பு ஜூஸ் குடிக்கவேண்டியிருக்கும்.

Share

நாகலிங்கமரம் – கவிதை

பறிக்கப்படாமல்

உதிர்ந்து

தரையெங்கும் பரவி

வாடிக்கிடக்கும் நாகலிங்கப்பூக்கள்

முனங்கி நிறைக்கின்றன

தினம் பூப்பறிக்கவரும் கிழவனின்

மூச்சுக்காற்றின் வெற்றிடத்தை.

இருந்த இடத்தில் படுத்துக்கொண்டு

கடனெனக் குரைக்கும்

செவலைநாய்க்கு

இனி உறக்கத்தடை இருக்காது.

பாம்புகள் புழங்கும்

மரப்பொந்தினுள்ளிருக்கும்

கிளிக்குஞ்சுகள்

விடலைப்பசங்களுக்குக் கைக்கெட்டும்

எந்தவொரு திட்டுமில்லாமல்.

அந்நாகலிங்கப்பூமரத்தில் சாய்ந்திருக்கும்

ஏணியின் படிகளில்

இப்போதிருக்கும் கிழவனின் கால்தடம்

மெல்ல காற்றில் கலக்கும்.

தொண்டர் நயினார் கோவில் பூசாரி

ரெண்டு நாள் தேடுவான்

நாகலிங்கப்பூவுக்காக கிழவனை.

அக்கிழவன்

அப்பூமரத்தை

இரவுகளில் சுற்றுகிறான் என்று

ஒரு கதை கிளப்பி வைப்பேன்,

ஏதோ என்னாலானது.

Share

எல்லை

துபாயிலிருந்து மஸ்கட்டிற்குச் சாலைவழியே செல்லும் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். நானும் என்னுடன் ஒரு குஜராத்தியும் தேவையான எல்லாப் பொருள்களும் இருக்கின்றனவா என்று மீண்டும் ஒருமுறை பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டு Lab-ல் எங்களுடன் வேலைபார்க்கும் சக நண்பர்களுக்கு பை சொல்லிவிட்டுக் கிளம்பத்தயாரானோம். என் மேலாளர் என்னை அவர் அறைக்கு அழைத்தார்.

என்னுடன் வரும் குஜராத்தியின் மீது எப்போதும் ஒரு கவனம் வேண்டுமென்றும் அவன் வேலையை ஒழுங்காகச் செய்யமாட்டான்; நீதான் அறிவுறுத்த வேண்டும் என்று சொன்னார். குஜராத்திக்கு சாதாரண வேலை நேரத்தில் வேலை செய்யவே பிடிக்காது. எந்தவொரு வேலையையும் இழுத்து இழுத்து, அதிக வேலை நேரத்தில் (Over Time) முடிப்பதே அவனது இஷ்டம், கொள்கை எல்லாம். அதிகவேலை நேரமில்லாத சம்பளத்தை அவன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

முன்பொருமுறை வேலை குறைவாக இருந்த சமயத்தில் சக நண்பர்கள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொருத்தருடைய சர்வீஸ் எத்தனை வருடம் என்ற கேள்வி வந்தது. எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். குஜராத்தியின் முறை வரும்போது “ஆறு வருடம்” என்றான். இதைக்கேட்ட பாகிஸ்தானி இடைமறித்து, “கமான். எப்படி ஆறு வருஷம் ஆகும்? 9 வருஷம் இல்லையா? ஆறுவருஷம் சர்வீஸ், மூணு வருஷம் OT” என்றான்.

மேலாளர் “குஜராத்தி எப்போதும் அதிக வேலைநேரத்திலேயே கண்ணாக இருப்பான்; நேரத்தில் வேலையை முடிக்கமாட்டான்; கவனம்” என்று சொன்னார். “சரி” என்றேன். ஏதோ யோசித்தவர் “எல்லா குஜராத்திகளுமே இப்படித்தான்” என்றார்.

அலுவலகத் திட்டம் படி எங்கள் வேலை தொடங்கியதென்னவோ நிஜம்தான். ஆனால் அலுவலகத்திலிருந்து என்னை காரில் அள்ளிக்கொண்டு புறப்பட்ட குஜராத்தி எனது அறையில் விட்டுவிட்டு காத்திருக்குமாறு சொல்லிவிட்டுப் போய்விட்டான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து வந்தான். அன்றைய கணக்கின்படி வேலை ஆரம்பிக்காமலேயே மூன்று மணிநேரம் அதிகவேலை நேரம் சேர்த்தாகிவிட்டது. மீட்டர் ஓட ஆரம்பித்தாகிவிட்டது. அதே அளவு அதிகவேலைநேரம் எனக்கும் வரும்! “மன்மதலீலை” மேலாளர் நிலைமை எனக்கு. ஒன்றும் சொல்ல இயலவில்லை.

ஒருவழியாகப் பயணம் தொடங்கியது.

குஜராத்தி அவனது இன்னல்களை, அவன் வாழ்வில் பட்ட கஷ்டங்களை, பணியைத் தெய்வமாக மதிக்கும் அவனது பழக்கத்தை, ஒரு வேலையை எத்தனைச் சீக்கிரம் முடியுமோ அத்தனைச் சீக்கிரம் முடிப்பதே அவனது இலட்சியம் என்பதை எத்தனையாவது முறையாகவோ என்னிடம் சொன்னான். நான் வேலைக்குச் சேர்ந்த பொழுதில் அவன் முதல்முறை இதைச் சொன்னபோது அவன் பக்கம் நியாயம் இருக்கிறதென நினைத்தேன். அவன் சொல்லும் லாகவமும் உணர்ச்சிவசப்பட்டு அடிக்கொருதடவை தெய்வத்தைத் துணைக்கழைத்து ‘தான் தவறு செய்தால் ஸ்வாமி நாராயண் சும்மா விடமாட்டார்’ என்றெல்லாம் சொல்லும்போது கேட்பவர் யாருமே அவன் பக்கம் சாய்வார்கள். ஆனால் எனக்குப் பழகிவிட்டது. அவனது முழுமுதல் நோக்கமே “மீட்டரை” ஓட்டுவதே!

துபாய்-ஹட்டா எல்லையில் பலப்பல புதுவிதிகள். நாங்கள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டோம். வெயில் கருணையில்லாமல் 50 டிகிரி செல்ஷியஷில் காய்ந்தது. பாலைவன அனல்காற்றில் மூக்கு எரிந்தது. ஆனால் அதைப் பற்றிய பிரக்ஞையோ கவலையோ குஜராத்திக்கு இருக்கவில்லை. அவனது மீட்டர் ஓடிக்கொண்டிருக்கிறதே!

ஆங்கிலம் என்றாலே எத்தனைக் கிலோ என்று கேட்கும் அராபிகளின் கூட்டத்தில் எங்கள் வேலைக்கான உபகரணங்களைக் (Instruments for Stack emission) காட்டி அவர்களைப் புரியவைப்பதற்குள் குஜராத்திக்கு இன்னொரு ஒரு மணிநேரம் மீட்டர் ஏறிவிட்டிருந்தது. அதே ஒருமணிநேரம் எனது மீட்டரிலும் ஏறும். புகைபோக்கிக்குள் இருக்கும் வாயுவின் திசைவேகத்தைக் காண உதவும் பிடாட் ட்யூபின் [pitot tube] வடிவம் கிட்டத்தட்ட ஒரு ஆயுதம் மாதிரி நீளமான கம்பி போல இருக்கும். அராபிகள் எங்களைச் சந்தேகப்பிரிவில் வைப்பதற்கு அது ஒன்று மட்டுமே
போதுமானதாக இருந்தது.

வளைகுடாவின் பல அரசுடைமை கம்பெனிகளில் காவலாளிகளாகப் [security] பெரும்பாலும் அராபியர்கள்தான் இருப்பார்கள். மருந்துக்கும் ஆங்கிலம் தெரியாது. “மலையாளம் கூடத் தெரியாது!” என்பதும் இங்கே சொல்லப்படவேண்டியதே.

அராபிகளுக்குப் புரியவைக்க “ஹவா காட்சிங் (காற்றுப் பிடிக்க!)” என்று குஜராத்தி சொல்லியதும் கிட்டத்தட்ட அலறினார்கள். அராபி தெரியாதா என்று அவர்கள் கேட்க, “நான் அராபிதான் பேசினேன்” என்று சொல்ல வாயெடுத்த குஜராத்தியை ஓரம்கட்டிவிட்டு, “மா·பி அராபி, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று பதிலுக்குக் கேட்டேன். அவர்கள் “மா·பி இங்கிலீஷ்” என்றார்கள். குஜராத்தியின் மீட்டர் ஓடிக்கொண்டே இருந்தது.

ஒருவழியாக எல்லையைக் கடந்தோம்.

குஜராத்தி ஆரம்பித்தான். அராபிகள் எல்லாருமே முட்டாள்கள் என்றான். நான் ஆமோதித்தேன். இந்தியர்களே புத்திசாலிகள் என்றான். ஆமோதித்தேன். இந்தியர்கள் இல்லாமல் இந்தப் பாலைவனம் சொர்க்கபூமியாக மாறியிருக்குமா என்றான். பாகிஸ்தானிகளையும், இலங்கைக்காரர்களையும், பங்களாதேசிகளையும் பிலிப்பைன்ஸையும் விட்டுவிட்டாயே என்றேன். ஏதோ போனால் போகட்டும் என்று எனக்காக ஒப்புக்கொண்டான். “ஸ்ரீலங்கா தமிழ்-தமிழ் சேம்-சேம் சானல்?” என்றான். சிரித்தேன்.

வண்டி 130கி.மீ. வேகத்தில் எகிறிக்கொண்டிருந்தது. எல்லையிலிருந்து சோஹாரை 35 நிமிடத்தில்
அடைந்துவிட்டிருந்தோம். குஜராத்தியின் வண்டி ஒடிக்கும்வேகம் எனக்குப் புதுமையாக இருந்தது. மீட்டரில் ஒரு அரைமணி நேரத்தை எப்படிக் குறைக்க அவனுக்கு மனம் வந்தது என்பது பிடிபடவேயில்லை. அப்போதுதான் தெரிந்தது, சோஹாரில் ஒரு குஜராத்தியின் கடையில் மதிய உணவு அருந்த வருவதாக நேரம் குறித்துவைத்திருக்கிறான் என்று. குஜராத்திகளின் கணக்கு மற்றவர்களின் கற்பனைக்கு எட்டாததாக இருக்கும் என்று பாகிஸ்தானி சொன்ன நினைவு வந்தது.

குஜராத்தி எந்தவொரு வேகமும் இல்லாமல் மெதுவாக உணவை இரசித்து உண்டான். ரெஸ்டாரண்ட் உரிமையாளருடன் அரைமணி நேரம் குஜராத்தியில் பேசிக்கொண்டிருந்தான். கடையின் சிப்பந்தி ஒருவர் தமிழர். அவரும் நானும் கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம். அவர் எனக்காக சிறிதுநேரம் ஜெயா டிவி வைத்தார். குஜராத்தியின்
மீட்டரும் எனது மீட்டரும் ஒரு மணிநேரத்தை மேலும் ஏற்றிக்கொண்டது.

சோஹாரிலிருந்து மஸ்கட் கிளம்பினோம். இடையில் இரண்டு இடங்களில் காரை நிறுத்திச் சிறிது தூங்கினான் குஜராத்தி. மஸ்கட் கேரி·போர் [carre four] சென்று அங்கு ஒரு அரை மணிநேரம் கழித்தோம். ஒருவழியாக நாங்கள் சேரவேண்டிய நிஸ்வாவை (மஸ்கட்டிலிருந்து 184 கி.மீ.) அடைந்தபோது எங்கள் மீட்டரில் கிட்டத்தட்ட 10 மணிநேரம் ஏறிவிட்டிருந்தது. குஜராத்தி மிகவும் சந்தோஷப்பட்டான். ஸ்வாமி நாராயண்-க்கு நன்றி சொல்லிக்கொண்டான்.

நாங்கள் வேலைக்குச் சென்றிருந்த கம்பெனி ஒதுக்கியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இளைப்பாறினோம். மறுநாள் காலையில் வேலைக்குத் தயாரானோம். காலையில் 8.00 மணிக்கு கம்பெனியில் இருக்கவேண்டும். அதில் மீட்டரில் ஏற்ற ஒன்றும் வாய்ப்பில்லை என்று குஜராத்திக்குத் தெரியும். 7.30க்கெல்லாம் தயாராகி ஒரு சேட்டன் கடையில் புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டுவிட்டு காரில் கிளம்பினோம். காரை இயக்கினான் குஜராத்தி. திடீரென்று ஏதோ நினைத்தவன், ஒரு நிமிடம் ஒரு ·போன் செய்துவிட்டு வருகிறேன் என்று சாவியை காரிலேயே வைத்துவிட்டுக் கீழே இறங்கிப் போனான். மூன்று நிமிடங்கள் பேசியிருப்பான். காருக்குள் இருக்கும் என்னை சைகையால் அழைத்தான். காரை விட்டு இறங்கி வந்து நானும் பேசினேன். மேலாளரிடம் எங்கள் பயணத்தைப் பற்றிச் சொல்வதற்காக அவரை அழைத்திருக்கிறான் குஜராத்தி. பேசி முடித்துவிட்டு மீண்டும் காருக்குள் ஏறச் செல்லும்போது காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

இறங்கும்போது கண்ணாடிகளை ஏற்றிவிட்டு வெளியிலிருந்து திறக்கமுடியாதவாறு நான் அடைத்திருக்கிறேன். வண்டியின் சாவி காருக்குள். குஜராத்தி செம டென்ஷன் ஆகிவிட்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் அரைமணி நேரத்தில் கம்பெனியில் இருக்கவேண்டும். புலம்பிக்கொண்டே குஜராத்தி அங்குமிங்கும் ஓடினான். டீக்கடைச் சேட்டன் போலீஸ¤க்குச் சொல்வதே நல்லது என்றான்.

நான் தொலைபேசியில் மஸ்கட்டில் இருக்கும் அத்தைப் பையனைக் கூப்பிட்டேன். போலீஸ¤க்குப் போ என்றான். அது எனக்குத் தெரியும் என்று சொல்லி ·போனைத் துண்டித்தேன். துண்டிக்கும்போது “கல்லுப்பட்டிக்காரங்க கிட்ட கேட்டா இப்படித்தான், ஒண்ணத்துக்கும் ஆவாத பதிலே வரும்” என்றேன்.

அதற்குள் குஜராத்தி ஒரு ஓமானியைக் கூட்டிக்கொண்டு வந்தான். ஓமானி கையில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவரும், நெம்புக் கம்பியும் வைத்திருந்தான். இரண்டு நிமிடங்களில் கதவைத் திறந்தான். ஸ்க்ரூ ட்ரைவரை வைத்துக் கதவை லேசாக நெம்பிக்கொண்டு, கம்பியை உள்ளே நுழைத்து லாக்கை எடுத்துவிட்டான். கதவு திறந்துகொண்டது. எனக்கும் குஜராத்திக்கும் உயிர் வந்தது. அவனுக்கு ஐந்து ரியால் கொடுத்தோம். நிஜச்சாவி இருந்தால் கூட இத்தனைச் சீக்கிரம் திறந்திருக்க முடியாது என்று அவனை வாழ்த்தினேன். குஜராத்தி “இப்ப பேசு” என்றான். ஓமானியிடம் திரும்பி நன்றி சொல்லி அவனை அணைத்துக்கொண்டான்.

மீண்டும் அத்தைப் பையனைக் கூப்பிட்டேன். கதவைத் திறந்த விஷயத்தைச் சொன்னேன். போலீஸ¤க்குப் போவதே நேரான வழியென்றும் அதைத்தான் தான் சொன்னதாகவும் சொன்னான். இப்படி பல ஓமானிகள் ஐந்து நிமிடத்தில் திறந்துவிடுவதாகவும் மீண்டும் காரை அதே இடத்தில் நிறுத்தவேண்டாம் என்றும் சொன்னான். கடைசியாக “ஓமானிகள் என்ன வேணா செய்வாங்க” என்றான்.

குஜராத்தியிடம் என் அத்தைப்பையன் சொன்னதைச் சொன்னேன். “ஆஹாம்! தமிழ் புத்திசாலிகள்” என்று சொல்லிவிட்டு “இனிமேல் காரை அங்கே நிறுத்தக்கூடாது” என்றான். காலை நேரத்தில் வந்து உதவிவிட்டுப் போன ஓமானிக்கு இது தேவைதான்.

ஐந்து நாள்கள் வேலை. மலையாளிகள் என்றாலே மோசம் என்று தினமும் இரண்டு முறையாவது சொல்வான் குஜராத்தி. அந்தக் கம்பெனியில் இருக்கும் இரண்டு மலையாளிகள் மிக நல்லவர்களாக இருந்தார்கள் என்பதைக் குஜராத்தியால் ஏற்கவே முடியவில்லை. மலையாளிகளை நம்பவேமுடியாது, முன்னாடி ஒன்று பேசி பின்னால் ஒன்று பேசுவார்கள் என்றான். குஜராத்திகளை நம்பாதே என்று என் மேலாளர் மலையாளி சொன்னது நினைவுக்கு வந்தது. குஜராத்தி “தமிழர்கள் அச்சா” என்றான். எல்லாவற்றையும் ஆமோதித்துக்கொண்டே இருந்தேன். அவனிமிருந்து தப்பிக்க அதுவே வழி. இல்லையென்றால் கையிலிருக்கும் நாவல்களைப் படிக்க நேரமிருக்காது. அதுபோக ஒன்றிரண்டு கவிதைகளாவது எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஐந்து நாள் வேலையை முடித்துக்கொண்டு மஸ்கட்டில் அத்தைப்பையனைச் சந்தித்துவிட்டு மீண்டும் துபாய் திரும்பினோம். குஜராத்தி அதிகவேலை நேரம் எத்தனை என்று கணக்கிடச் சொன்னான். ஐந்து நாள்களில் 44 மணிநேரம் அதிக வேலை நேரம் வந்திருந்தது. இன்னும் ஒரு ஆறு மணி நேரம் கூட்டவேண்டும் என்றான் குஜராத்தி.

மேலாளர் பற்றிப் பேச்சுத் திரும்பியது. மீண்டும் மலையாளிகள் புராணம் ஆரம்பித்தான். தமிழர்களை வாயார வாழ்த்தினான். நேரம் கிடைக்கும்போது மலையாளிகளிடத்தில் “தமிழர்கள் ரூட்[rude]. கர்வம் அதிகமிக்கவர்கள்” என்று அவன் சொன்ன விஷயங்கள் என் காதுக்குப் பலமுறை எட்டியிருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவன் சொல்வதை ஆமோதிக்கத் தயங்கவில்லை. இல்லையென்றால் பெரிய பெரிய கதைகளை ஆரம்பித்துவிடுவான். என்னால் பொறுக்க இயலாது.

மீண்டும் ஹட்டா – துபாய் எல்லையை அடைந்தோம். விசா எக்ஸிட் அடிக்க வரிசையில் நின்றிருந்தோம். எங்கள் வரிசையில் எங்களுக்குப் பின் நின்றிருந்த ஒரு அமெரிக்கன் வரிசையைப் புறக்கணித்துவிட்டு, முன்னுக்கு வந்து, எக்ஸிட் வாங்கிப்போனான். காத்திருந்த குஜராத்தி புலம்பத் தொடங்கிவிட்டான். இந்த அநியாயத்தை அராபிகள் கேட்பதே இல்லை; ஐரோப்பியர்கள் என்றால் அவர்களுக்குத் தனிச்சலுகைதான் என்றான். அடுத்த வரியாக, ஐரோப்பியர்களுக்குத் தங்கள் மனதில் தங்களைப் பற்றி எப்போதுமே உயர்ந்த எண்ணம்தான், எல்லா ஐரோப்பியர்களுமே இப்படித்தான் என்றான். நான் ஆமாம் என்றேன்.

நாங்கள் வேலைக்காகக் கொண்டு போயிருந்த உபகரணங்களைச் சோதிக்க ஆரம்பித்தான் அராபி ஒருவன். நிறையக் கேள்விகள் கேட்டான். எல்லாமே அராபியில் இருந்தன. எங்களால் பதில் அளிக்கவே முடியவில்லை. குஜராத்தி சிரித்துச் சிரித்து மழுப்பினான். அப்போது குஜராத்தியைப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லத் தொடங்கும்போதெல்லாம் அராபி “மா·பி இங்கிலீஷ்” என்று சொல்லி என்னை ஒரேடியாக நிராகரித்தான். ஒரு நிலைக்கு மேல் குஜராத்திக்குக் கோபம் வந்துவிட்டது. கொஞ்சம் சூடாகிவிட்டான். ஆங்கிலத்தில் அவன் படபடக்க ஆரம்பிக்க, அந்தக் கட்டத்தில் இருந்த மற்ற அராபிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். எல்லோரும் சேர்ந்து குஜராத்தியை வறுத்தெடுத்து, கடைசித் தீர்ப்பாக “எல்லா இந்தியர்களுமே இப்படித்தான். பொறுமையில்லாதவர்கள். மேலும் இந்தியர்கள் கரப்பான்பூச்சிகள்” என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு மேல் எங்களால் ஒன்றும் பேச இயலவில்லை. அமைதியாக இருந்துவிட்டு, பல விளக்கங்களுக்குப் பின் விசா – எக்ஸிட் வாங்கிக்கொண்டு காரைக் கிளப்பினோம்.

எனது எண்ணம் முழுவதும்

* யார் யார் எப்படி? இப்படி ஒரு இனத்தை வரையறுக்க இயலுமா?

* பொதுவான ஒரு கருத்து எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொருந்துமா? எல்லாத் தனிமனிதர்களும் அவரவர்கள் அளவில் வேறல்லவா? பின் எப்படிப் பொதுப்படுத்த?

* ஒரு ஐரோப்பியன் போல் குணமுள்ள தமிழனோ ஒரு குஜராத்தி போல் குணமுள்ள மலையாளியோ இருந்தே தீர்வார்கள் அல்லவா?

* ஒரு இந்தியன் போன்ற அமெரிக்கனின் பொறுமைக்கு என்ன பெயர்? ஒரு அமெரிக்கத்தனம் கொண்ட இந்தியத் தன்னுணர்வுக்கு என்ன பெயர்?

என்பதிலேயே இருந்தது.

குஜராத்தி வண்டியை ஓரமாக நிழலில் நிறுத்திவிட்டு, “ஹே ஸ்வாமி நாராயண்” என்று மறக்காமல் சொல்லிவிட்டு, அரை மணி நேரம் தூங்கப்போவதாக என்னிடம் சொன்னான். அவனது மீட்டர் ஓடத்தொடங்கியது. அந்த மீட்டரில் எனக்கும் பங்குண்டு.

துபாய் – மஸ்கட்டின் எல்லை என்று சொல்லப்படும் ஒன்றை இன்னும் சிறிது நேரத்தில் கடப்போம்.

Share

சுவர்கள் : சில குறிப்புகள் – கவிதை

[முன்குறிப்பு:

ஒரே சுவர் பிரித்தாலும்

எம் வீட்டின் சுவர் ஆகாது உம் வீட்டின் சுவர்]

எதிர்வீட்டின் வெளிச்சுவரில் பம்பரம் சின்னம்

முனியம்மா வீட்டுச் சுவர் காரைகள் உதிர்ந்து

என் வீட்டுச் சுவரில்

கண்ணீர் விட்டுக்கொண்டு படபடக்கும் போஸ்டர்

(குணசேகர பாண்டியன் செத்துப்போனது பற்றி பிறிதொரு சமயம்)

சில சுவர்களில் கோலியின் புள்ளித் தடங்கள்

இன்னும் சில சுவர்கள்

மழை வெயிலில் பட்டு நீலம் வெளுத்துப்போய்

பாம்புகளும் பல்லிகளும் ஊர்ந்த தடங்களை

சுவர்கள் மறைத்துவிடுகின்றன

வீட்டுக்குள் நடப்பதை உலகிலிருந்து பிரிப்பது போலவே

தெருக்களின் ரேகைகளாக நிற்கும் சுவர்கள்

ஒருவகையில் நம்மை மட்டுப்படுத்துகின்றன

கொஞ்சம் உற்று நோக்குங்கள்,

உங்கள் தெருவில் கிடக்கும் சுவர்கள்

ஒரு கணத்தில் முகிழும் முப்பரிமாணப் பிம்பம் போல

நவீன ஓவியங்களாய் கிடக்கலாம்

எம் தெருக்கள்

சில சமயம்

ஆகலாம் உம் தெருக்கள்

Share

தமிழ்மணம்

http://www.thamizmanam.com/

காசியின் முயற்சிக்குப் பாராட்டுகள். இதுவரை வலைப்பதிவுகளில் ஒவ்வொன்றாகச் சென்று பார்க்கவேண்டியிருந்தது. இனி அப்படியில்லாமல் தமிழ்மணத்திலேயே பார்த்துக்கொள்ளமுடியும். பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை புதிதாக வந்த உள்ளிடுகைகளைச் சேகரிக்கிறது தமிழ்மணம். இதுவரை பார்க்காத வலைப்பதிவுகளையெல்லாம் இன்றுதான் பார்வையிட்டேன். தலைப்பிலிருந்து அதைப் பற்றி வாசிக்கவேண்டுமா வேண்டாமா என்று இனி தீர்மானித்துவிடலாம். ஒவ்வொரு வலைப்பதிவையும் ஓடையில் சேர்த்துப் பார்க்கலாம்தான். ஆனால் காசியின் தமிழ்மணம் ஒவ்வொரு வலைப்பதிவாக ஓடையில் சேர்க்கும் பணியைக் குறைக்கிறது.

காசிக்கு நன்றி பல.

மரத்தடியில் அவர் உள்ளிட்ட மடல் உங்கள் பார்வைக்கு.

==============================================================

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.

தமிழ் வலைப்பதிவுகள் எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் பாலமாக இருக்கும்படி ‘தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்’ என்ற பெயரில் ஒரு மேடைத்தளம் (வெப்போர்ட்டல்) அமைத்துள்ளேன்.

அதன் முகவரி:

http://www.thamizmanam.com/

இயங்கும் வலைப்பக்கங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம் கீழ்க்கண்ட வசதிகளைப் பெற்றிருக்கிறது.

வலைப்பதிவுகளுக்குப் புதியவர்களுக்கு:

– வலைப்பதிவுகளைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு, முழு வலைப்பதிவர் பட்டியலும் காணக்கிடைக்கிறது

– இந்தப் பட்டியல் உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுதும் வலைப்பதிவர்களை பெயரின் முதலெழுத்து வாரியாகவோ, தொடங்கிய தேதி வாரியாகவோ, வசிப்பிடம் வாரியாகவோ தேர்ந்தெடுத்து வாசிக்கவும் முடிகிறது.

வழக்கமான வலைப்பதிவு வாசகருக்கு:

கூடுதலாக

– புதிதாக வலைப்பதிவுகளில் எழுதப்பட்டவற்றின் தலைப்பும் சாரமும் 15 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்பட்டு காட்டப்படுகின்றன. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளுக்கு ஒருவர் தேடிப்போய் புதிதாக எதுவும் எழுதப்பட்டுள்ளனவா என்று தேடுவது தவிர்க்கப்படுகிறது.

– தங்கள் செய்தியோடை படிப்பான்களிலேயே வாசிக்க விருப்பமிருப்பவ்ர்களுக்காக செய்தியோடைத் தொகுப்பும் (OPML file ofNewsfeeds) பதிவிறக்கம் செய்துகொள்ளக்கிடைக்கிறது.

வலைப்பதிவு தொடங்க விருப்பமிருப்பவர்களுக்கும், ஏற்கனவே செய்துகொண்டிருப்பவர்களுக்கும்:

– வலைப்பதிவு தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எளிய ஐயங்களைத் தீர்க்க ஏதுவாகும் சில கட்டுரைகளின் தொடுப்புக்கள் காட்டப்படுகின்றன. (இது இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை)

– வலைப்பதிவு தொடங்கியவர் தன் வலைப்பதிவின் விபரங்களைப் பட்டியலில் உடனடியாக சேர்க்கும் வசதி

– பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட வலைப்பதிவின் செய்தியோடை முகவரி உடனடியாக செய்தியோடைத் தொகுப்பில் ஏற்றப்படுகிறது. எனவே திரட்டியின் மூலம் காட்டப்படும் ‘புதிதாக

எழுதப்பட்ட விஷயங்கள்’ பட்டியலில் இந்தப் புதிய பதிவும் இடம் பெறுகிறது. இதன் மூலம் ஒரு புதிய வலைப்பதிவர் உடனடியாக ஒரு வாசகர் வட்டத்தைப் பெறுகிறார்.

இதுபோக ஒவ்வொரு நிலையிலும் (விருந்தினர், வாசகர், வலைப்பதிவர்) இருப்பவர்களுக்குப் பொருத்தமான தொடுப்புகள் அங்கங்கே காட்டப்படுகின்றன.

எந்த மனித ஈடுபாடும் இன்றி இவை அனைத்தும் தானியங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதால், பிழையின்றி, ஓய்வின்றி இந்தத் தளம் இயங்கிக்கொண்டிருக்கும்.

இத்தகைய புதிய முயற்சிகளில் ஆர்வம் உள்ளவர் என்ற முறையில் இந்தத் தளத்தை பயன்படுத்திக்கொள்ளவும், பொருத்தமானவர்களுக்கு சுட்டிக்காட்டவும் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

இது பற்றி மேலும் கேள்விகள்/கருத்துக்கள்/ஆலோசனைகளை எனக்கு எழுதவும் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

அன்புடன்,

-காசி ஆறுமுகம்

============================================================

Share

English titles Vs Tamil films

சேரன் தனது அடுத்த படுத்திற்கு “டூரிங் டாக்கீஸ்” என்று பெயர் வைத்திருக்கிறார். சட்டென்று மனதில் நிற்கும் பெயர்தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சேரன் துபாய் வந்திருந்தபோது “ஆட்டோகிரா·ப்” என்கிற பெயரை ஏற்கனவே வைத்துவிட்டதாகவும் துபாய் வந்து தூய தமிழில் பேசிக்கொள்ளும் ஆசி·ப் உள்ளிட்ட நண்பர்களைச் சந்தித்தித்திருந்தால் அப்படி ஆங்கிலத்தில் பெயர் வைப்பதைத் தவிர்த்திருப்பாரெனவும் சொன்னதாகத் தெரிகிறது. (மரத்தடியில் முன்பு ஆசி·ப்உள்ளிட்ட மடல் இப்படிச் சொல்கிறது). இப்போது எடுக்கப்போகும் படத்திற்கும் “டூரிங்டாக்கீஸ்” என்று ஆங்கிலத்தில்தான் பெயர் வைத்திருக்கிறார்.

தமிழ்ப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பது தவறு என்று பா.ம.க. உள்ளிட்ட பலஅமைப்புகள் கண்டனம் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. வணிக ரீதியில் எடுக்கப்படும் படங்கள் எல்லா வகையிலும் மக்களைக் கவர்வதையே முக்கியக் குறிக்கோளாகக் கொள்ளும். அப்போது படங்களின் பெயர்களைத் தமிழில் வைக்கவேண்டும் என்றோ தமிழில் வைக்கக்கூடாது என்றோ யோசிக்கமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. எந்தப் பெயர் பொருத்தமானதாகவும் சட்டென்று கவரக்கூடியதாகவும் இருக்குமோ அதை வைக்கிறார்கள்.

எச்சூழ்நிலையிலும் தமிழில் மட்டுமே பெயர் வைப்போம் என்கிறவர்களை மெச்சும் நேரத்தில் தமிழில் படத்திற்குப் பெயர் வைக்காதவர்களைத் தமிழுணர்வு அற்றவர்களாக சிலர் அறிவிக்க முயல்வதை ஏற்கமுடியவில்லை. தமிழ்ப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைப்பதையும் தமிழுணர்வையும் முடிச்சு போடுவது வேடிக்கையானது. தமிழுணர்வைத் தமிழ்ப்படங்களில், அதுவும் “நியூ” மாதிரியான தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் ஏன்பெயர் வைக்கவில்லை என்று வாதம் செய்வது ஒரு வகையில் தமிழ் எதிர் உணர்வு. இன்னும்சொல்லப்போனால் “நியூ” மாதிரியான படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்காததை, தமிழில் பெயர் வைப்பதைக் கட்டாயமாக்க முயல்பவர்கள் பாராட்டவேண்டுமென்பேன்.

சேரனுக்கு வருவோம். சேரன் “டூரிங் டாக்கீஸ்” என்று படத்திற்குப் பெயர் வைப்பதில் என்னளவில் எந்தவிதமான எதிர்ப்புமில்லை. “டூரிங் டாக்கீஸ்” நல்ல பெயர்; சட்டென்று மனதைக் கவரும், மனதில் நிற்கும், பழைய நினைவுகளைக் கிளறிவிடும் பெயர்தான். ஆனால் துபாயில் அப்படிச் சொல்லிவிட்டு, அதை மறந்துவிட்டு அவர் மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை எப்படி ஏற்பது? குறைந்தபட்சம் துபாயிலேயே தன்னிலையை விளக்கியிருக்கவேண்டும். “ஆட்டோகிரா·ப் படத்துக்கு நினைவேடுன்னு பேர்வெச்சா நீங்க மட்டும்தான் பார்ப்பீங்க” என்று ஆசி·பிடம் சொல்லும்போதே “உங்களைச் சந்தித்திருந்தால் அந்தப் பெயர் வைத்திருக்கமாட்டேன்” என்று சொல்வதைத் தவிர்த்திருக்கவேண்டும். அவர் பேச்சுவாக்கில் சொன்னாரா, சீரியஸாகச் சொன்னாரா என்பது ஆசி·ப்பிற்கே வெளிச்சம்.

தமிழ்ப்படங்களுக்குத் தமிழிலிலேயே பெயர் வைப்பது நல்லது. அதே சமயம் ஆங்கிலத்தில் பெயர் வைப்பது தமிழ்த்துரோகம்; கடுங்குற்றம் என்பதை என்னால் ஏற்கமுடியாது. ஆனால் அதைப் பாவமென்றோ தவறென்றோ ஒப்புக்கொள்கிறவர்கள் மீண்டும் ஆங்கிலப்பெயரை வைக்காமல் இருக்கவேண்டும்.

Share