தங்கலான் – ரஞ்சித்தின் பலமே யதார்த்தத்தில் அரசியல். நுணுக்கமான காட்சிகள். இந்த இரண்டும் இல்லாமல் ஒரு படமாய் வந்திருக்கிறது தங்கலான். தங்கத்தைத் தேடுவதில் அரசியலை நுழைக்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நில உரிமை என்று பேசுகிறார்கள். மாய யதார்த்தம் என்று வைத்துக்கொண்டு ஜல்லியான திரைக்கதை. ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் ஏன் எப்போதும் அடிவயிற்றில் இருந்து நரம்பு தெறிக்கப் பேசுகிறார்கள்? யார் இந்த இயக்குநர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுத்தது? ஒருவர் விடாமல் அனைவரும் வளவளவென்று பேசியே சாவடிக்கிறார்கள். அதிலும் என்னவோ ஒரு காலத் தமிழ். ஆனால் பாட்டு பாடும்போது மட்டும் இன்றைய தமிழாம்! எல்லாக் காலகட்டத்திலும் பிராமணர்களே எதிரிகள் என்று வலுக்கட்டாயமாகக் காட்டி, புத்தரை திணியோ திணி என்று திணித்திருக்கிறார்கள். கடைசி காட்சியில் ஏன் விக்ரம் கதாபாத்திரத்துக்கு உண்மை தெரிந்தது? அது முதல் காட்சியிலேயே தெரிந்து தொலைத்திருந்தால்தான் என்ன? இத்தனை நீளப் படத்தில் ஒரு காட்சி கூட ஒட்டவில்லை. விக்ரம் இத்தனை கஷ்டப்பட்டு ஏன் ஓவர் ஆக்ட் செய்தார் என்றே புரியவில்லை. உள்ளொழுக்கு படத்தில் ரசித்த பார்வதியை வெறுக்க இந்த ஒரு படம் போதும். இதில் பாடாவதியான கிராஃபிக்ஸ் வேறு. மொத்தத்தில் ஒட்டாத குறியீட்டுச் செயற்கைத்தனத்துடன், பாலாவின் படம் போன்ற ஒரு ரஞ்சித் திரைப்படம். பாலாவின் பரதேசி படமும் இப்படித்தான் இருந்தது.
Archive for Uncategorized
Golam
கோளம் (M) – தவற விடக் கூடாத ஒரு திரைப்படம். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு. ஆட்டம் திரைப்படம் போல. கொலையாளிகளின் பக்கம் நின்று அவர்கள் கொல்வதை நம்மை ரசிக்க வைத்துவிடுவது திரைக்கதையாக எவ்வளவு பெரிய வெற்றி! குறைந்த வசனங்கள், நல்ல பின்னணி இசை என அசத்தி இருக்கிறார்கள். அவர்கள் முகத்தை மறக்க முடியாது என்று டாக்டர் சொல்லவும் அந்த 13 பேரும் நிற்கும் ஃப்ரேம் மறக்க முடியாத காட்சி. ப்ரைமில் கிடைக்கிறது.
சிபிஐ 4
CBI (டைரிக்குறிப்பு) 5 (M) – சவட்டித் தள்ளி விட்டார்கள். மூன்று மணி நேரப் படத்தை ஓட்டி ஓட்டிப் பார்த்தாலும் ஆறு மணி நேரம் ஓடுகிறது. பேசுகிறார்கள் பேசுகிறார்கள், வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பயங்கரமான திருப்பம் என்று அவர்களாக நினைத்துக் கொண்டு நம்மைப் போட்டு தள்ளி விடுகிறார்கள். 72 வயதில் மம்மூட்டி அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் கை கால்கள் ஒத்துழைக்கவில்லை. வில்லன் ஓடும்போது வீட்டுக்குள் நின்று தலையை மட்டும் சாய்த்து சாய்த்து மாடியையே பார்க்கிறார், பாவமாக இருக்கிறது.
பல வருடங்கள் கழித்து ஜெகதீஷ் ஸ்ரீ குமாரை திரையில் பார்த்தபோது மனம் கனத்தது. ஜெகதி ஸ்ரீ குமார் முகம் காட்டியது மட்டுமே இந்தப் படத்தின் ஒரே சாதனை.
Some movies
உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.
ப்ரைமில் கிடைக்கிறது.
அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்தவிதம் அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.
அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.
பைரி
பைரி – சில சிறிய சிறிய குறைகள் இருந்தாலும் இத்திரைப்படம் தமிழ்த் திரையுலகின் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று. அசல் திரைப்படம். மிரட்டல். டோண்ட் மிஸ் வகையறா.
மதயானைக் கூட்டத்துக்குப் பிறகு நான் பார்க்கும் அசல் திரைப்படம் இதுவே. கொஞ்சம் கூட ரொமாண்டிசைஸ் செய்யப்படாத ஒரு படம். பந்தயப் புறாவைப் பற்றி இப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை. இனி வரப் போவதுமில்லை. முதல் நொடி முதல் இறுதி நொடி வரை பந்தயம் மற்றும் அதைச் சுற்றிய வன்முறையை மட்டுமே திரைக்கதையாகக் கொண்ட ஒரு படமெல்லாம் தமிழில் அபூர்வம். திகட்ட திகட்ட திரைக்கதையும் வசனமும் எழுதி இருக்கிறார்கள்.
இதைவிட இன்னொரு அபூர்வம், தமிழில் கிராமத்து அம்மாக்களை இத்திரைப்படத்தின் அம்மாவைப் போல் யாரும் இதுவரை சித்திரித்ததில்லை. அம்மா மகன் உறவை இத்தனை குரூரத்துடனும் இத்தனை பாசத்துடனும் இத்தனை அசலாகவும் இத்தனை உயிர்ப்புடனும் எவரும் படமாக்கியதில்லை. அம்மாவாக நடிக்கும் நடிகை கலக்கிவிட்டார். அதேபோல் வில்லுப்பாட்டைப் படத்தோடு இணைத்த விதம் அட்டகாசம்.
நாகர்கோவில் வட்டார வழக்கில் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை. புறா கிராஃபிக்ஸ் மிக மோசம். அனைத்து நடிகர்களும் ஒரே போல் நடிப்பது இன்னொரு குறை என்றாலும், ஒரு கட்டத்தில் நமக்கு இது பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்பது அதிசயம்தான். இந்தத் திரைப்படத்தில் ஒரு நடிகரைக் கூட எனக்குத் தெரியாது. இதற்கு முன்பு எந்தத் திரைப்படத்திலும் அதிகம் பார்த்ததாக நினைவில்லை. அப்படியானால் இயக்குநர் எந்த அளவு உழைத்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.
ரத்தமும் சதையுமான தமிழ்ப்படம் இது. ஹிந்துத்துவ மற்றும் ஹிந்துத்துவ-வெறுப்பு நண்பர்கள் குறியீடுகளில் சிக்காமல் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். ஏனென்றால் ஹிந்து ஆதரவு மற்றும் கிறித்துவ ஆதரவு, இவற்றுக்கிணையாக இரண்டு பக்கங்களுக்கான எதிர்ப்பையும் நாம் யோசித்துப் பிரித்தெடுக்க, படம் நெடுக அத்தனை சட்டகங்களிலும் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் க்ளாடி.
மலையாளத்தில் பல புதிய புதிய இயக்குநர்கள் என்ன என்ன ஜாலமெல்லாமோ செய்துகொண்டிருக்க, தமிழில் இயக்குநர்கள் புரட்சிக்குள் சிக்கிப் பாழாகப் போய், பெரிய வெற்றிடம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஜான் க்ளாடி போன்ற இயக்குநர்களால் முடியும். தடம் மாறாமல், திரைப்படம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தால் போதும்.
இத்திரைப்படத்தில் பிரான்ஸிஸ் கிருபாவைப் பார்க்கும்போது பக்கென்று இருந்தது. 2021ல் கிருபா மறைந்துவிட்டார். அப்படியானால் எப்போது எடுக்கப்பட்ட படம் இப்போது வந்திருக்கிறது பாருங்கள்!
இரண்டாம் பாகம் வருகிறது என்று இறுதியில் காட்டுகிறார்கள். அது வரும்போது வரட்டும். முதல் பாகத்தைக் கட்டாயம் பாருங்கள்.
பைரி ப்ரைமில் கிடைக்கிறது.
Test Post for WordPress
This is a sample post created to test the basic formatting features of the WordPress CMS.
Subheading Level 2
You can use bold text, italic text, and combine both styles.
- Bullet list item #1
- Item with bold emphasis
- And a link: official WordPress site
- Step one
- Step two
- Step three
This content is only for demonstration purposes. Feel free to edit or delete it.
Govt schools of TN
இனியும் ஆங்கிலம் அன்னிய மொழி என்று உருட்டிக்கொண்டிருக்காமல், ஆங்கிலம் கண்ணாடி, தமிழ் கண்பார்வை என்றெல்லாம் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்காமல், ஆங்கிலமும் தமிழ் அளவுக்கு (பிராந்திய மொழி அளவுக்கு) முக்கியம் என்பதை உரக்கச் சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கை தமிழ்நாட்டுக்குள்ளே சாதாரண அளவுக்கு முடியப் போகிறது என்றால் தமிழ் மட்டும் போதும். ஆனால் நீங்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கும் என்றால், குறைந்தபட்ச ஆங்கில அறிவு மிகவும் அவசியம். தமிழ் ரத்தத்தில் கலந்தது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதன் எல்லை, ஆங்கிலம் வேண்டாம் என்பதற்குப் போகக் கூடாது. ஒருவர் மிகச் சாதாரணமாகப் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்காவது ஆங்கில அறிவு அடிப்படைத் தேவை. அதுவும் இன்றைய உலகில் இது அத்தியாவசியம்.
தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இருக்கும் நான்கு தலைமுறைகளைக் கடந்த 40 ஆண்டுகளாக உருவாக்கி விட்டிருக்கிறோம். நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது எங்கள் வகுப்பாசிரியர் நார்மன் சார் செய்த முதல் வேலை, 9ம் வகுப்பில் முழுவாண்டுத் தேர்வில் அனைவரும் உண்மையாக வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பதை வாசித்ததுதான். அதுவரை முழுவாண்டுத் தேர்வு மதிப்பெண்களை நாங்கள் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. பள்ளியிலிருந்து ப்ரொமோடட் என்று ஒரு அஞ்சலட்டை வரும், அவ்வளவுதான். அன்று அவர் வாசித்த மதிப்பெண்கள் பலரைக் கலக்கமடையச் செய்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் 42 பேர் என்ற நினைவு. அரசு உதவி பெறும் பள்ளி. தமிழ் வழிக் கல்வி. ஐந்து பாடங்களிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 15 பேர் கூட இல்லை. மற்ற அனைவரும் குறைந்தது ஏதேனும் இரண்டு பாடங்களிலாவது 15 அல்லது 16தான். ஒரே ஒரு நல்ல விஷயம், தமிழை எழுத்துக் கூட்டி வாசித்துவிடுவார்கள். எழுதச் சொன்னால் முடிந்தது கதை. ஆங்கிலம் – சுத்தம். ஆங்கிலத்தின் மேலேயே தமிழில் எழுதிப் படித்து ஒப்பித்தவர்களே பலர்.
இன்றைய நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது. இதுவே 60 வருடங்களுக்கு முன்பு என்று பார்த்தால், ஆங்கிலத்திலும் தமிழிலும் மாணவர்கள் ஓரளவுக்கு அடிப்படை அறிவு பெற்றவர்களாகவே இருந்தார்கள். அன்றைக்கு ஆங்கிலத்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் இப்போது தரப்படுவதில்லை. அன்றைக்குத் தமிழுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் இன்று சுத்தமாகத் தரப்படுவதில்லை. ஆங்கிலம் அன்னிய மொழி என்றெல்லாம் சொல்லி, தமிழையும் கற்றுத் தராமல் விட்டிருக்கிறோம்.
அரசுப் பள்ளி ஒன்றுக்கோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றுக்கோ இன்று செல்லுங்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களை அழைத்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விடுமுறை விண்ணப்பம் எழுதிக் காட்டச் சொல்லுங்கள். ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து அதைத் தமிழில் வாசிக்கச் சொல்லுங்கள். பின்பு அதையே நீங்கள் சொல்ல சொல்ல அவர்களை எழுதச் சொல்லுங்கள். சாதாரண மூன்றிலக்கக் கூட்டல் கணக்கு, கடன் வாங்கிக் கழித்தல் கணக்கு, சாதா வகுத்தல், மூன்றிலக்கப் பெருக்கலைச் செய்யச் சொல்லுங்கள். ஆங்கிலத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். உங்களால் நம்பவே முடியாத அளவுக்கான பேரதிர்ச்சி காத்திருக்கும். உடனே மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நிலைமை கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஏமாந்துவிடவேண்டாம். அதிலும் இப்படித்தான். அரசுப் பள்ளிகளில் பத்துப் பிழைகள் இருந்தால் இங்கே ஒன்பது பிழைகள் இருக்கும், அவ்வளவுதான் வித்தியாசம்.
இன்றும் அரசுப் பள்ளிகள் பள்ளிகள் திறந்ததும் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா? அனைத்து மாணவர்களுக்கும் அ, ஆ, இ, ஈ மற்றும் க, ங, ச சொல்லித் தருவது. 8 வகுப்பு வரை இதைச் செய்கிறார்கள். 40 வருடங்களுக்கு முன்பு நாம் இத்தனை மோசமாக இல்லை. அதேசமயம் மிக நன்றாகத் தமிழைப் படித்தோம் என்றும் சொல்வதற்கில்லை.
இதன் காரணங்கள் என்ன? ஆசிரியர்களின் தரம் முதல் பிரச்சினை. அடுத்து, ஆங்கிலம் குறித்த தேவையற்ற கற்பிதங்கள். ஆங்கில தெரியாவிட்டால் குடி மூழ்கி விடாது என்பது உண்மைதான். அது யாருக்கு? தமிழைத் தாண்டி தனக்கு எதுவும் தேவையில்லை என்ற நிலை உடையவர்களுக்கு. அப்படி இல்லாமல், இந்திய அளவில் அல்லது உலகளவில் நீங்கள் செல்ல நேரும்போது ஒவ்வொரு நொடியும் அவமானத்தில் கூனிக் குறுகி நின்றிருக்கும் நிலை வரத்தான் செய்யும். உடனே சொல்வார்கள், ஃப்ரான்ஸில் பலருக்கு ஆங்கிலம் தெரியாது என்று. அது தமிழர்களுக்கோ அல்லது மற்ற இந்திய மாநிலக்காரர்களுக்கோ பொருந்தாது.
ஆங்கிலத்தைக் குறைந்த அளவுக்காவது கற்றுக்கொள்ளுங்கள். யாராவது எளிய ஆங்கிலத்தில் பேசினால் அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்காவது ஆற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள். நன்றாக ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் மட்டுமே, ஆங்கிலம் தேவையே இல்லை என்று சொல்லத் தகுதி உடையவர்கள். மற்றவர்கள் அதுவரை அமைதியாக ஆங்கிலம் கற்றுக்கொள்வதே நல்லது. தமிழையும் ஆங்கிலத்தையும் அடிப்படைத் தேவைக்கு அவசியமான அளவுக்குக் கூடக் கற்காத மூன்று தலைமுறைக்காரர்கள் சொல்லும் அரசியல் நியாயங்களைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாதீர்கள். அது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.
ஆங்கிலம் தெரியாவிட்டால் செத்துப் போய்விட மாட்டோம் என்பது உண்மைதான். தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாவிட்டாலும் செத்துப் போய்விட மாட்டோம் என்பது கூட உண்மைதான்.
முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலம் பேசும்போது நிற்பதைப் பாருங்கள். நான் சொல்வது புரியும். அவருக்கும் நிச்சயம் புரியும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழின் தரத்தைக் கூட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து அவர் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்பதே என் விருப்பம்.
பெயர் சொல்லி அழைத்தல்
ஒருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சொல்வது நல்ல விஷயமே. ஆனால் யார் யாரிடம் எப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்பது முக்கியமானது. அதேசமயம் யார் சொல்லவில்லை என்பதுவும் அதன் பின்னணியோடு பார்க்கப்படவேண்டியதே. ராகுல் தன்னை ராகுல் என்று அழைக்கச் சொன்னது மாணவிகளிடம். இதே உரிமை அவரது கட்சிக்காரர்களுக்கு உண்டா என்பதைக் கேட்டால் போதும், பதில் கிடைக்கும். குறைந்தபட்சம் மாணவிகளிடமாவது சொல்கிறாரே என்று பாராட்டுவதும் சரிதான். ஆனால் இதன் எதிர்ப்புள்ளியில் அப்படிச் சொல்லாதவர்களையெல்லாம் திட்டுவது சரியானதல்ல.
ஒருவகையில் எவ்வளவு வயதானவர் என்றாலும் அவர்களைப் பெயர் சொல்லி அழை என்பது மேற்கத்திய மனோபாவம். அதே மனோபாவத்தில் நாம் இந்தியாவிலும் அதை அப்படியே கடைப்பிடிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம், அப்படி அழைக்காதவர்களைத் திட்டவாவது தேவையில்லை. நம் தெருவில் இருக்கும் 50 வயதான ஒருவரை 40 வயதான நாம் பெயர் சொல்லி அழைப்போமா? சம வயதே என்றாலும் அழைப்போமா? பெண்களை அழைப்போமா? அது நம் மரபல்ல. அதை வலிந்து நாம் பயன்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. அண்ணன், மாமா, சித்தப்பா, அத்தை என்று உறவு சொல்லி அழைப்பதே நம் வழக்கம். மறைந்துவரும் இப்பழக்கத்தைக் கைவிடுவது வருத்தம் தரும் என்பது ஒரு பக்கம், இப்படி அழைப்பவர்களையெல்லாம் பழமைவாதிகள் என்னும் போலி மனப்பான்மை இன்னொரு பக்கம். இதில் அமெரிக்காவைப் பார் ஐரோப்பாவைப் பார் என்று சொல்லிக் கிண்டலும் செய்துகொள்வார்கள்.
இன்று ராகுல் என்று தன்னை அழைக்கச் சொன்னதைக் கொண்டாடுபவர்கள் யார் என்பது இன்னுமொரு நகைமுரண். ஒரு மேடையில் நடிகை மீனா கருணாநிதி ஜி என்று சொன்னதற்கு உடன்பிறப்புகள் கொந்தளித்து அவரைக் கலைஞர் என்று அழைக்கச் சொல்லி கருணாநிதி முன்பே பாடம் எடுத்தார்கள். இவர்கள்தான் இன்று ராகுலை ராகுல் என்றழைப்பது குறித்துப் புளகாங்கிதப்படுகிறார்கள்.
கருணாநிதி பலமுறை தன்னைக் கலைஞர் என்று அழைக்காதது குறித்து வருந்தி இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாவும். அவர் ஜெயலலிதாவை அம்மையார் என்று சொல்வது அவர் விருப்பம். அதேபோல் ஜெயலலிதா அவரைக் கலைஞர் என்று சொல்லாமல் இருப்பது அவரது தேர்வு. ஆனால் இந்த வேற்றுமைகளை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதே நேரம் திமுகவினர் கருணாநிதியைக் கலைஞர் என்று அழைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அவர்கள் உரிமை அது, அன்பைச் சொல்லும் விதம் அது. கலைஞர் என்று அழைக்காதவர்களைக் குறிவைக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது.
நேரில் பேசும்போது பெயர் சொல்லி அழைப்பது தவறல்ல. ஆனால் அப்படி அழைக்காதவர்கள், அழைக்கச் சொல்லாதவர்கள் எல்லாம் அடிப்படைவாதிகளும் அல்ல. அதேபோல் ஒரு கட்டுரையிலோ பேட்டியிலோ பெயரை மட்டும் சொன்னால் போதும். அம்மா, சூப்பர் ஸ்டார், கலைஞர் என்ற விளிகள் எல்லாம் தேவையற்றவை. அக்கட்சியினராக விரும்பிப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அடிமைத்தனத்தை அல்லது விசுவாசத்தைக் காட்டிக்கொள்வது இதில் வராது.
எனவே ராகுல், நீங்கள் அழைக்கச் சொன்னது உங்கள் அளவில், உங்கள் மேல்நாட்டுச் சிந்தனையின்படி, சரி. அதேபோல் மற்ற இந்தியத் தலைவர்கள் அப்படி அழைக்கச் சொல்லாமல் இருப்பது எங்கள் பண்பாட்டின் படி சரி.
நன்றி ராகுல் ஜி!


