Archive for Uncategorized

Theatres of Tirunelveli in 1990s

தாமிரபரணி பாயும் – ஓடும் அல்ல – நிஜமாகவே பாயும் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் கூனியூர். ‘கூனியூருக்குப் போகணும்னா குனிஞ்சிக்கிட்டே போகணுமா’ என்னும் பழமொழியில் இந்த ஊரின் பேரை நீங்கள் கேட்டிருக்கலாம். எப்படியும் பல இடங்களில் இந்தப் பெயரில் ஊர்கள் நிச்சயம் இருக்கும். இது சேரன்மாதேவியின் கூனியூர்.

சேர்மாதேவியில் இருந்து பொடிநடையாக நடந்தால் அரைமணி நேரத்தில் கூனியூருக்குப் போய்விடலாம். அப்படித்தான் நடப்போம். ஓரளவுக்குப் பெரிய கிராமமான சேரன்மாதேவிக்கு இல்லாத ஒரு பெருமை கூனியூருக்கு வந்துவிட்டிருந்தது. டூரிங் டாக்கீஸ்.

அந்த தியேட்டரின் பெயர் கூட நினைவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டால் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் அந்தச் சாலையில் நடக்கும். ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ பாடல் கேட்டுவிட்டால், அத்தனை கூட்டமும், ஆரம்பிச்சிட்டான் அரம்பிச்சிட்டான் என்று வெரசலாக நடக்கத் தொடங்கும். ஆம், ‘டிக்கெட் கொடுக்கப் போகிறோம்’ என்பதற்கான சமிக்ஞையே அந்தப் பாடல்.
கூனியூரில் மூன்று நாளைக்கு ஒரு படம் மாற்றிவிடுவான். ஒரு வாரம் ஒரு படம் ஓடிவிட்டால் அது வெள்ளிவிழா திரைப்படம். சிவாஜி, எம்ஜியாரெல்லாம் வரிசையாக வந்து கல்லா கட்டுவார்கள். புதிய கலர்ப் படம் வந்துவிட்டால் சேர்மாதேவி, கூனியூர், வீரவநல்லூர் என எல்லா ஊர்களும் வண்ணம் கொண்டு விடும். திரைப்படம் ஓர் அனுபவம் என்றால், திரைப்படத்துக்குப் போய்விட்டு வருவதே ஓர் அனுபவம்.

அனைவரும் ஒரே சாலையில் ஒன்றாக நடந்துவந்தாலும், காதில் ‘விநாயகன்’ விழுந்தவுடன், யாருக்கு டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்பதில் ஒரு வேகம் இருக்கும். மண் தரை ஏழைகளுக்கு. உடைந்து போன மர பெஞ்சு பணக்காரர்களுக்கு. டிக்கெட் வித்தியாசம் ஐம்பது பைசா இருக்கும்.

இடைவேளை ஒரு தடவைதான் என்றாலும், கார்பன் தேய்ந்துவிட்டால், கூடுதலாக இரண்டு இடைவேளைகள் வரும். அந்த சிறிய இடைவேளைகளில், கண்ணாடி போட்டிருக்கும் டின் டப்பாக்களில் வைத்து முறுக்கு விற்பார்கள். சோள மாவு முறுக்கின் மணம் இப்போதும் உங்கள் நாக்கில் எட்டிப் பார்த்தால், நீங்களும் ஏதோ ஒரு கிராமத்தில் படம் பார்த்திருப்பீர்கள் என்றே அர்த்தம்.

அந்த டூரிங் தியேட்டருக்கு லைசன்ஸ் மூன்று வருடங்கள்தான் என்ற செய்தி ஊரெங்கும் நெருப்புப் போல பரவியது. எப்படியோ இன்னொரு மூன்று வருடங்களுக்கு லைசன்ஸ் வாங்கிவிட்டார் அதன் உரிமையாளர்.

வாரத்துக்கு இரண்டு படங்கள் எனப் பார்த்துக் குவித்த படங்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியாது. வேறு பொழுது போக்குகளே இல்லாத நிலையில், ஊரில் இருந்த ஒரே டூரிங் தியேட்டர் மட்டுமே மன அமைதி பெற ஒரே வழி.
டூரிங் தியேட்டர் என்பதால் மாலைக் காட்சியும் இரவுக் காட்சியும் மட்டுமே. மாலைக் காட்சி, இரவு கவியும்போதுதான் தொடங்கும். மூன்று இடைவேளைகள் விட்டு இரவு பத்து மணிக்குத்தான் முடியும். ஆதிபராசக்தி படத்திற்கும், சம்பூர்ண ராமாயணம் படத்திற்கும் கூடுதலாக ஒரு இடைவேளை என்று ஊரெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டோம்.

இந்த டூரிங் தியேட்டர் வருவதற்கு முன்பு சேரன்மகாதேவிக்கார்களுக்கு வீரவநல்லூரே கதி. இல்லையென்றால் திருநெல்வேலிக்குப் போகவேண்டும். அது செலவு பிடிக்கும் வேலை. ஆனாலும் இதையே ஒரு திருவிழாக மாற்றிவிடுவோம். அதிகாலை எழுந்து குளித்து காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதியச் சாப்பாட்டையும் கட்டிக்கொண்டு காலைக் காட்சிக்கு திருநெல்வேலிக்குப் போய்விடுவோம். பாப்புலர், ராயல், ரத்னா, பார்வதி, செண்ட்ரல், சிவசக்தி அத்தனை தியேட்டர்களும் இரண்டு கிலோமீட்டர்களுக்கு உள்ளாகத்தான். காலைக்காட்சி பார்த்துவிட்டு, அடுத்த தியேட்டருக்கு நடந்தே போய், அவன் டிக்கட் கொடுப்பதற்குள் அந்த தியேட்டரிலேயே ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டு நாம் கொண்டு போன சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, படம் பார்த்துவிட்டு, அங்கேயே பஸ் பிடித்தால் இரவு 7 மணிக்கு சேர்மாதேவிக்கு ஹாயாக வந்துவிடலாம். ஒருநாளில் இரண்டு படங்கள், அடுத்தடுத்த காட்சியில்!

அதிலும் ரத்னா தியேட்டரும் பார்வதி தியேட்டரும் எதிரெதிர் வீட்டுக்காரர்கள். அப்படி இரண்டு படம் பார்ப்பதென்றால் மிகவும் எளிது என்பதால், பெரும்பாலும் அப்படி இருக்கும்படிப் பார்த்துக்கொள்வோம்.

இந்த வசதி இல்லாதவர்களுக்கு வீரவநல்லூரே கதி, கூனியூர் டூரிங் தியேட்டர் வரும் வரை. வீரவநல்லூருக்குள் நுழைவதற்கு முன்பாகவே மெய்ன்ரோட்டில் காந்திமதி தியேட்டர் இருந்தது. ஊருக்குள் சண்முகா தியேட்டர். இரண்டிலும் மூன்று நாளைக்கு ஒரு தடவை படம் மாற்றுவார்கள். எந்த நாளில் படம் மாற்றுவது என்பதில் அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. காந்திமதியில் போட்ட படம் சண்முகாவில் வராது. விதிவிலக்காகச் சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் மட்டும் வரும். அப்படி காந்திமதியிலும் வந்து சண்முகாவிலும் வந்த படம், புதுக்கவிதை. இரண்டு தியேட்டரிலும் பார்த்தவர்கள் அதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள்.

கூனியூர் டூரிங் தியேட்டர் வரவும் சேர்மாதேவிக்காரர்கள் வீரவநல்லூர்ப் பக்கம் ஒதுங்குவதைக் கைவிட்டுவிட, சண்முகா தியேட்டர் நலிந்து போனது. ஒரு கட்டத்தில் கூனியூர் தியேட்டரின் லைசன்ஸும் முடிய, சேரன்மகாதேவியிலேயே ஒரு தியேட்டர் எட்டிப் பார்த்தது. டூரிங் தியேட்டர் அல்ல, சிமிண்ட் கட்டட தியேட்டர்!

ஊருக்குள் போலிஸ் ஸ்டேஷன் கிடையாது, தியேட்டர் கிடையாது என்னும் பெருமைகள் பறந்து போக, ஊருக்குள்ள தியேட்டரே இருக்கு என்கிற புதிய பெருமை சேரன்மகாதேவிக்கு ஒட்டிக்கொண்டது. ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பு சேரன்மகாதேவியில் நடந்தபோது ஊரில் தியேட்டர் இல்லை, அந்தப் படம் வரும்போதும் தியேட்டர் இல்லை, தியேட்டர் வந்த பின்பு அந்தப் படம் அங்கே திரையிடப்பட்டபோது, நம்ம ஊர்ல எடுத்த படம் என்று மக்கள் விழுந்து விழுந்து பார்த்தார்கள். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பு எல்லாம் கடைசிச் சொட்டு உயிர் இருக்கும் வரை எனக்கு மறக்காது.

பின்னர் நான் கல்லுப்பட்டிக்குப் போய்விட்டிருந்தேன். அங்கே ஒரு தியேட்டர் இருந்தது, லட்சுமி தியேட்டர். பதினெட்டுப் பட்டி கிராமத்துக்கும் ஒரே சின்ன தியேட்டர் லட்சுமி தியேட்டர். பேரையூரில் ஒரு தியேட்டர் இருந்த நினைவு. நான் போனதில்லை. அல்லது அந்த தியேட்டர் அப்போது இல்லை. லட்சுமி தியேட்டருக்கு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, டிராக்டரில் கும்பலாக ஏறிக்கொண்டு படம் பார்க்க வருவார்கள்.

ரஜினி படம் என்றால் திருவிழா என்று அர்த்தம். எந்தப் படம் வந்தாலும் கூட்டம் வரும். விக்ரம் படம் பார்க்க பெருங்கூட்டம் வரிசையில் நின்றது இப்போதும் நினைவில் இருக்கிறது. டிக்கெட் விலை அறுபது பைசாவோ என்னவோ. அதற்கு மேல் பத்து பைசா கூடச் செலவழிக்காமல் பெண்கள் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’ இருபத்து ஐந்து நாள்களுக்கு மேல் ஓடி சாதனை கண்டது.

எங்கேயும் பார்க்க முடியாத ‘பொம்மை’ போன்ற திரைப்படங்களை எல்லாம் மதியக் காட்சியாகப் போடுவார்கள். தூர்தர்ஷன் திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்ததும், பழைய சிவாஜி எம்ஜியார் படங்களைப் பார்க்க மக்கள் வருவது குறைய ஆரம்பித்தது. தூர்தர்ஷனில் வருவதற்கு முன்பாகத் திரைப்படங்களைத் திரையிடவேண்டிய கட்டாயம் வந்தது. இதனால் தொடர்ந்து புதிய படங்கள் (படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்தும் எங்களுக்கு அவை புதுப்படங்கள்தான்!) பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

கல்லுப்பட்டியில் இருந்து மதுரை அழகரடிக்குப் போனேன். அழகரடியில் எங்கள் தெருவில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருந்த தியேட்டர் பரமேஸ்வரி தியேட்டர். டிக்கெட் விலை ரூ 1.10. ஒன்னு பத்து தாம்மா என்று கேட்டாலே அது படம் பார்க்க என்று அர்த்தம். ஒன்னு அறுபது என்றால் ஹை க்ளாஸ். அங்கே ஒரு ரூபாய்க்கு ஒரு தேங்காய் பப்ஸ் விற்பார்கள். அது மிகவும் பிரசித்தம். அங்கே பார்த்துத் தள்ளிய படங்களுக்குக் கணக்கே இல்லை.

இரண்டு தெரு தள்ளி இருந்த தியேட்டர் என்பதால் சாவதானமாக நடந்து போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம். காலையில் சாம்பார் செய்துவிட்டு, பொடி நடையாக தியேட்டருக்குப் போய் காலைக்காட்சி பார்த்துவிட்டு மதியம் வந்து உலை வைத்து மூன்று மணிக்குச் சாப்பிடுவது பெண்களின் வழக்கமாக இருந்தது. இளையராஜாவின் பாடல்கள் திரும்பும் இடமெல்லாம் கேட்கும். தொடர்ந்து படங்கள் வந்துகொண்டே இருக்கும். இப்போது போல் அல்லாமல், அதிகம் அரசியல், மண்டை பிளக்கும் ஆய்வு என எதுவும் இருக்காது. படம் பார்க்கப் போவதே ஜாலிக்கு என்று இருந்த நேரம். ‘கேளடி கண்மணி’ போல எப்போதாவது சீரியஸ் படங்கள் வரும். அவையும் ஹிட்டடிக்கும்.

பரமேஸ்வரி தியேட்டரை இன்னொரு காரணத்துக்காகவும் மறக்கமுடியாது. நடிகர் சிவாஜியின் மகள் திருமணம் அந்தத் திரையரங்கில்தான் நடந்தது. யார் வேண்டுமானாலும் போகலாம், சாப்பிடலாம் என்று கேள்விப்பட்டு, பள்ளி நண்பர்கள் அனைவரும் பரமேஸ்வரி தியேட்டர் பக்கம் போய் எட்டிப் பார்த்தோம். உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து போனோம். அங்கே வெளியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிகளில், நேரலையாக தியேட்டருக்குள் இருந்த சிவாஜியைப் பார்த்துவிட்டுச் சாப்பிடாலேயே பள்ளிக்கு ஓடினோம்.

என் வாழ்க்கையின் பொற்காலம் என்றால் இங்கே இருந்த இந்த மூன்று வருடங்களைத்தான் சொல்வேன். மனம் இரண்டாகப் பிரிந்து கிடந்த நேரம். ஒரு பக்கம் முழுக்க படிப்பு, இன்னொரு பக்கம் முழுக்க திரைப்படங்கள். இப்படித்தான் பத்தாவது முடித்து ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் வாங்கி மீண்டும் நெல்லைக்குப் போனேன்.

நெல்லையே தியேட்டர்களின் சொர்க்கம் என்பதை என் பதின்ம வயதில் புரிந்துகொண்ட போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. மதுரை, கல்லுப்பட்டி, வீரவநல்லூர், சேரன்மகாதேவியில் எல்லாம் நடந்து போகும் தூரத்தில் ஒரே ஒரு தியேட்டர். ஆனால் நெல்லையில் ஆறு தியேட்டர்கள்! அப்போதுதான் புதியதாக அருணகிரி தியேட்டரைத் திறந்திருந்தார்கள்.

அங்கே சின்னதம்பி 175 நாளாக ஓடியது. நான் பத்தாவது படிக்கும்போது வெளியான படம், 11ம் வகுப்புப் படிக்கும்போதும் ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே பார்த்த படத்தை மீண்டும் பார்க்கவேண்டுமா என்று தோன்றினாலும், அப்போதைக்குப் பெரும் புகழ் பெற்றிருந்த அந்தப் புதிய ‘அருணகிரி’யைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ‘சின்னத்தம்பி’க்கு மீண்டும் போனேன். படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு. ஊர் முழுக்க இதே பேச்சுதான்.

அன்று அந்தக் காட்சிக்கு வந்தவர்களுக்கு மட்டும் ஒரு டோக்கன் தரப்பட்டு மறுநாள் மீண்டும் இலவசக் காட்சி திரையிடப்பட்டது. ஊர் இப்போது இரண்டு மடங்காகப் பேசியது, ‘சே… நமக்கு இப்படி ஒரு பிரைஸ் அடிக்காம போயிட்டே!’ ஆம், நான் தியேட்டரில் ‘சின்னத்தம்பி’யை ஒன்றரை தடவை பார்த்திருக்கிறேன்!

திருநெல்வேலிதான் தியேட்டர்களின் சொர்க்கம். வீட்டுக்கு அப்பால் பெண்களின் ஒரே புகலிடம் தியேட்டர்களே. 11.30க்குக் காலைக் காட்சி. 11.25க்குத்தான் பவுடர் அப்புவார்கள் பெண்கள். 11.30க்குத்தான் டிக்கெட் எடுப்பார்கள். தியேட்டருக்குளிருந்து கேட்கும், ‘மனைவி வீட்டின் மருமகளானாள்’.

ஆரம்கேவியின் உலகப் புகழ் பெற்ற விளம்பரம். ‘சே ரெண்டு நிமிஷம் முன்னாடி வந்திருந்தா இந்த விளம்பரத்தை பாத்துருக்கலாமே’. நிஜமாகவே வருத்தப்படுவார்கள். அந்த விளம்பரத்தின் நாதஸ்வர ஓசைக்குக் கைத்தட்டு விழுவதை இப்போதும் என் காதில் கேட்கிறேன். புல்லரிக்கிறது.

தியேட்டரே வாழ்வாக, வாழ்வே தியேட்டராக திருநெல்வேலி வாழ்ந்தது. ஐம்பதுகளில், அறுபதுகளில் தொடங்கிய அப்பழக்கம் தொண்ணூறுகளின் இறுதி வரை இருந்தது. சிவாஜி கணேசன் ஒரு வார இடைவெளியில் நான்கு திரைப்படங்களை வெளியிட, நெல்லையின் பத்து தியேட்டர்களில் நான்கு தியேட்டர்களின் சிவாஜி கணேசன் படம் ஓட, எம்ஜியார் ரசிகர்கள் காண்டானதெல்லாம் வரலாறு. எத்தனை முறை படகோட்டி படம் போட்டாலும் கூட்டம் அம்முதுப்பா என்று சிவாஜி ரசிகர்கள் எரிச்சலானதும் வரலாறுதான்.

செண்ட்ரல் தியேட்டர்

ரஜினி புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், இது பாதி உண்மைதான். திரையரங்க வரலாற்றில் திருநெல்வேலி இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. வேறெங்கும் பார்க்கவே முடியாத வினோதங்களை திருநெல்வேலி செய்து காண்பித்தது.

ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

ஏதேனும் ஒரு காட்சி, ஹீரோயிஸக் காட்சி வந்துவிட்டால், வெள்ளித்திரையைச் சுற்றி பளபள பல்புகள் மின்னும். சில சமயம் முழுப் பாடலுக்கும் வெள்ளித்திரை பல்புகள் மட்டுமல்ல, தியேட்டர் முழுக்க இருக்கும் பல்புகளும் மின்னும். ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலுக்கு தியேட்டரின் பல்புகள் அப்படி மின்னின. நான் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ‘செம்பருத்தி’ படத்தில், ஒரு பைக்கைத் தாண்டி பிரசாந்த் குதிக்கும் காட்சியில், திரையைச் சுற்றி பல்புகள் மின்ன, அது அந்தக் காட்சியை விட அழகாக இருந்தது. ‘வசந்த காலப் பறவை’ படத்தில் நீதிமன்றக் காட்சியில் பல்பு மின்னியது நினைவிருக்கிறது. ‘கறவை மாடு மூனு காளை மாடு ஒன்னு’ பாடலுக்கு ஒட்டுமொத்த தியேட்டரும் டான்ஸ் ஆட, கூடவே வெள்ளித்திரை பல்புகளும் தியேட்டர் பல்புகளும் ஆடின. ஏ.ஆர்.ரஹ்மானின் புயலில் ‘முக்காலா’ பாட்டுக்கும் ‘ஊர்வசி’ பாட்டுக்கும் ‘பேட்ட ராப்’புக்கும் தியேட்டர் இடிந்து விழாமல் இருந்தது ஆச்சரியம்தான்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து வேலை பார்த்த நண்பன் ஒருத்தன் என்னுடன் திருநெல்வேலியில் படம் பார்க்க வந்து, இந்த பல்புகளின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘சை, சரியான பட்டிக்காடு’ என்றான். அப்போதுதான், ‘ஓ… இதெல்லாம் பிடிக்காத ஒரு கூட்டமும் இருக்கா’ என்று எனக்கு உறைத்தது. அப்படி ரத்தத்தோடு எங்களுக்கு ஊட்டி வளர்த்து வைத்திருந்தது திருநெல்வேலி. இப்போதும் கூட நெல்லையில் ஏதேனும் ஒரு தியேட்டரில் ஒரு முக்கியமான காட்சியில் பல்புகள் மின்னிக் கொண்டிருக்கக் கூடும்.

ரஜினியின் ‘அண்ணாமலை’ மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளி வந்தது. இளையராஜாவின் இசை இல்லாமல் தேவாவின் இசையில் வெளிவந்த படம் என்பதால் கொஞ்சம் எதிர்மறைப் பேச்சுகள் இருந்தன. ரஜினி வெளிப்படையாகச் சொன்னார், ‘இந்தப் படம் என் படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்று.

அது உண்மையானது. ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த மோதலை ஒட்டி திரைப்படத்தின் சில வசனங்கள் புரிந்துகொள்ளப்பட்டன. எனவே ரஜினியே எதிர்பாராத ஒரு வெற்றி அண்ணாமலைக்குக் கிடைத்தது. அண்ணாமலை திருநெல்வேலி திரை வரலாற்றில் இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.

பூர்ணகலாவில் வெளியான இத்திரைப்படத்துக்கு வந்த கூட்டம், மேம்பாலத்தையும் தாண்டி இரண்டு கிலோமீட்டருக்கு நீண்டது. ஜெயலலிதாவின் போலிஸ் கையைப் பிசைந்துகொண்டு நின்றது. இதைப் பணமாக்க நினைத்த திரையரங்க உரிமையாளர், முதலிலேயே இந்த வெற்றியை யோசித்து ஒரு விஷயத்தைச் செய்தார். ஆம், முதல் காட்சி அதிகாலை நான்கு மணிக்கு. அதற்கு டிக்கெட் வாங்க, முந்தைய நாள் இரவு குவிந்த மக்கள் விடிய விடிய தியேட்டரில் கிடந்தார்கள். இதைக் கண்டுகொண்ட அனைத்து தியேட்டர்களும் அடுத்து வந்த எல்லாம் சூப்பர்ஹிட் படங்களுக்கும் இதை வழக்கமாக்கின.

வழக்கமாக்கும்போது அப்படியே செய்தால் அதில் என்ன சந்தோஷம் இருக்கிறது? மெல்ல மெல்ல நேரத்தைக் குறைத்துக்கொண்டே போனார்கள். ஒரு கட்டத்தில் அதிகாலை ஒரு மணிக்கு முதல் காட்சி. அதாவது நள்ளிரவுக் காட்சி. இதுவும் தியேட்டர்களுக்கு பத்தல! இன்னொன்றைச் செய்ய ஆரம்பித்தார்கள். உலகில் எங்கேயும் கேள்விப்பட்டிருக்காத விஷயம். மாலை ஆறு மணிக் காட்சிக்கு மதியம் ஒரு மணிக்கு டிக்கெட் தருவார்கள். இரண்டு மணிக்குத் தியேட்டருக்குள் விட்டு அடைத்துவிடுவார்கள். இரண்டு மணிக் காட்சி அப்போதுதான் தொடங்கி இருக்கும். ஆறு மணிக்காட்சிக்கு ஹவுஸ்ஃபுல் என்று போர்ட் தொங்க விட்டிருப்பார்கள். ஆறு மணிக்காட்சியைக் காண நான்கு மணி நேரம் தியேட்டருக்குள் அடைபட்டிருப்போம். நாங்கள் ஆறு மணிக் காட்சிக்குப் படம் பார்க்க தியேட்டருக்குள் போகும்போது, எங்கள் இடத்தை இரவு பத்து மணிக் காட்சிக்காரன் பிடித்துக்கொண்டிருப்பான். அங்கே வந்து தண்ணீர், போண்டா எல்லாம் வேறு விற்பார்கள். திருப்பதியின் மாடலைத் தியேட்டருக்குள் புகுத்தி வைத்தார்கள்.

விழித்துக்கொண்ட மாவட்ட அரசு நிர்வாகம், அத்தனைக்கும் ஒரேடியாகத் தடை விதித்தது. அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக அன்றைய காட்சிகள் தொடங்கக் கூடாது, உள்ளே அடைத்து வைக்கக் கூடாது என்று அறிவிப்புகள் வந்தன.

மதியம் இரண்டு மணிக் காட்சி என்று நினைத்து, படையப்பாவுக்கு இத்தனை ஈஸியா டிக்கெட் கிடைக்குதே என்று கிண்டல் செய்தபடி என்னுடன் படம் பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த கமல் ரசிகன் ஒருத்தன், டிக்கெட் கிடைத்தது ஆறு மணிக் காட்சிக்கு என்றும், அதுவரை தியேட்டரில் அடைப்பட்டுக் கிடைக்கவேண்டும் என்று தெரிந்து கிட்டத்தட்ட மூர்ச்சையாகிப் போனான். ‘இந்த ஊர் உருப்படவே உருப்படாது’ என்று சாபமிட்டுவிட்டு பஸ் ஏறினான்.

திருநெல்வேலியும் தியேட்டர்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. தேவர்மகனுக்கு போலிஸில் அடி வாங்காமல் படம் பார்த்தவர்கள் குறைவு. திருநெல்வேலியின் ஒரே பொழுதுபோக்கு தியேட்டர்களே. மூன்று கிலோமீட்டர் நீளமான பெரிய சாலைக்குள்ளாக பத்து தியேட்டர்கள். பேருந்து நிறுத்தமே தியேட்டர்களின் பெயர்கள்தான். ஒரு ரத்னா, ஒரு ராயல், ஒரு செண்ட்ரல், ஒரு சிவசக்தி இப்படித்தான் டிக்கெட்டே வாங்குவோம்.
இன்று காணாமல் போன தியேட்டர்களை எண்ணினால், இருக்கும் தியேட்டர்களைவிட அதிக எண்ணிக்கை வருகின்றது. பாப்புலர் (ஸ்ரீ கணேஷ்), லக்ஷ்மி, ராயல், பார்வதி, செண்ட்ரல், சிவசக்தி, ஸ்ரீ செல்வம் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இவையெல்லாம் வெறும் தியேட்டர்கள் அல்ல. வரலாறுகள்.

இது போக, இளமை வரலாறு ஒன்றிருக்கிறது, கலைவாணி தியேட்டர். இந்த இளமை வரலாற்றைத் தனியேதான் சொல்லவேண்டும். அந்த தியேட்டரும் இன்றில்லை. இழந்தவற்றின் வலியும் அங்கே பெற்றவற்றின் சந்தோஷமும் ஒன்றுக்கொன்று முட்டி நிற்கின்றன. இதுதான் வாழ்க்கை. மீண்டும் பெறவே முடியாமல் இழந்தவற்றின் சுகமான தொகுப்புகளே மீதமிருக்கும் வாழ்க்கை.

2022 செப்டம்பரில் மெட்ராஸ் பேப்பர் வலைத்தளத்தில் வெளியான கட்டுரை.

Share

12th fail

12th Fail (H) – ஒரு நல்ல திரைப்படமும் நல்ல புத்தகமும் ஒரு வகையில் ஒன்றுதான். எப்போது அது நமக்கு நிகழ வேண்டும் என்றிருக்கிறதோ அப்போதே நிகழும். இந்தத் திரைப்படத்தைப் பல பல சமயங்களில் பலர் பார்க்கச் சொல்லியும் ஏதோ ஓர் உந்துதல் இன்றிப் பார்க்காமலேயே இருந்தேன். இன்று பார்த்தேன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு மனதைக் கொள்ளை கொள்ளும் மிக அருமையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. இது திரைப்படம் அல்ல, ஓர் அனுபவம். ஒவ்வொரு நடிகரும் எத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அதுவும் இறுதிக் கட்டக் காட்சியில் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது.

ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்படும் திரைப்படம், இருப்பதிலேயே சவாலானது. ஆனால்‌ இதில் கலக்கிவிட்டார்கள்.

ஒரே ஒரு வருத்தம்தான். இந்த ஐபிஎஸ் அதிகாரி அரசுக்கும் சமூகத்திற்கும் மண்டியிடாமல் கடைசிவரை இதே நேர்மையுடன் இருக்க வேண்டுமே என்பதுதான். ஓர் உட்டோப்பியன் உலகமாக இருந்திருக்கும் சாத்தியக்கூறு வந்திருந்தாலும் கூட, இந்தத் திரைப்படத்தில் இது உண்மைக் கதை என்று சொல்லாமல் இருந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அந்த அளவுக்கு இந்தக் கதாபாத்திரம் நேர்மையைத் தூக்கிப் பிடிக்கிறது. இயல்பான வாழ்க்கையில் அது அத்தனை எளிதானதல்ல. இந்தத் திரைக் கதாபாத்திரம் நிஜத்தில் தோற்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது உண்மைக் கதை என்பதை காட்டாமல் இயக்குநர் தவிர்த்திருக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் ஒன்றி விட்டேன்.

பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்து விடுங்கள். இந்தியத் திரை உலகம் பெருமை கொள்ளும் ஓர் அனுபவம் இந்த திரைப்படம்.

ஒவ்வொரு திரைப்படம் சில சமயம் மெதுவாகப் போகும். ஆனால் அப்படி மெதுவாகப் போகும் காட்சிகள் கூட ஒரு பரபரப்பை உருவாக்கினால் அதுவே அந்தத் திரைப்படத்தின் வெற்றி. இந்தத் திரைப்படம் அந்த வகையைச் சார்ந்தது. இறுதிக் காட்சியில் மெல்ல மெல்ல நகரும் விதமும், அந்த இசையும், அந்தப் பாடலும், கண்கலங்க நிற்கும் ஹீரோவும், ஃபோனில் பேசும் அம்மாவும், கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விடும் நண்பர்களும் என உணர்ச்சிமயமான தருணம். மறக்க முடியாத தருணம்.

தமிழ்த் திரைப்படங்களுக்கும் இத்திரைப்படத்தில் ஒரு செய்தி உள்ளது. இந்தப் படமும் ஒரு வகையில் ஒதுக்கப்பட்டவர்களின் நசுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் திரைப்படம்தான். ஆனால் இந்தத் திரைப்படத்தில் எந்த ஒரு சமூகத்தின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ வெளிப்படவில்லை. ஒட்டுமொத்தமான சமூகத்தின் மீதான கோபமும், அந்தச் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்கிற சரியான நோக்கமும் மிகக் கச்சிதமாக வெளிப்படும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்குரிய உண்மையான மனிதர் சம்பல் பள்ளத்தாக்கிலிருந்து வந்த ஒரு பிராமணர் என்று சொல்லப்பட்டாலும், திரைப்படத்தில் அவர் எந்த ஜாதி என்பதைக் காட்டவில்லை. மாறாக, மிகுந்த பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்து ஆங்கிலம் தெரியாமல் போராடும் ஒரு மனிதன், இந்தச் சமூகத்தில் எந்த அளவு கஷ்டப்படுகிறான் என்பதை விரிவாகக் காட்டி இருக்கிறார்கள். அப்படிக் காட்டும்போது அந்த மனிதருடன் சேர்ந்து, வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடும் மற்ற மனிதர்களின் கதைகளைச் சொல்லும் பொழுது, எந்த ஒரு குரோதத்தையும் வெளிப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார்கள். வீம்புக்காக யோசிக்காமல் அன்புக்காக யோசிக்கும் இயக்குநரால் மட்டுமே இப்படி ஒரு திரை அனுபவத்தை வழங்க முடியும்.

Share

Nerungu varum idiyosai audio book

நெருங்கி வரும் இடியோசை நாவலின் ஒலி வடிவம். முழுமையாகக் கேட்பது எப்படி?

ஆராலிட்டி ஆப் அல்லது கூகிள் ஆடியோ ப்ளே புக் அல்லது ஸ்பாட்டிஃபை அல்லது ஸ்டோரி டெல்லில் கேட்கலாம்.

Share

Aangaaram Novel

ஆங்காரம் நாவல் கிண்டிலில் வாசித்தேன். ஏக்நாத் எழுதியது. கதை பல இடங்களில் அலை பாய்வதைக் குறைத்திருக்கலாம். நெல்லை‌ வழக்கும் களமும் ப்ளஸ். வாய்மொழிக் கதைகளுக்குப் பின்னே நாவலுடன் ஒரு தொடர்பு இருப்பது முக்கியம். இல்லையென்றால் அவை வெற்றுக் கதைகளாகவே எஞ்சும் அபாயம் உள்ளது. நாவல் முழுக்க வெளிப்படும் மண் சார்ந்த அனுபவத்துக்காக வாசிக்கலாம்.

Share

Two movies

Little hearts (M) – சுமாரான படம். ஷேன் நிகம்-க்காகப் பார்த்தேன். சிறிய புன்னகை ஆங்காங்கே வருகிறது என்றாலும் மொத்தத்தில் அறுவை.

கோடி (K) – பார்க்கலாம். மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படம். கொஞ்சம் இழுவையால் நீர்த்துவிட்டது. என்னைப் போல் தனஞ்செய் பிடிக்கும் என்பவர்கள் பார்க்கலாம்.

இரண்டும் ப்ரைமில் கிடைக்கிறது.

Share

வாழை

வாழை – ஒரே வார்த்தையில் செல்வதென்றால் வாழ்க்கை.

Spoilers ahead.

நல்ல திரைப்படம். திரைக்கதையில் நம்மை இணைக்க சிறுவனின் வாழ்க்கையையும் அவனது நட்பையும் சித்தரித்த விதம் அருமை. இந்த காட்சிகளில் இருந்துதான் நாம் திரைப்படத்துக்குள் நுழைகிறோம். அங்கங்கே கதிர் அருவாள் கம்யூனிசம் என்று ஊறுகாய் போல் காட்டினாலும் படம் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையின் வலியை விரிவாகப் பேசுகிறது. நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் எல்லை அறிந்து சிறப்பாக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் இரண்டு சிறுவர்கள் அமர்க்களம் செய்திருக்கிறார்கள். கமல் ரஜினி பற்றிய அளவான வசனங்கள் அள்ளிக்கொண்டு போகின்றன.

குறைகளைப் பேசும் நேரம் இதுவல்ல என்றாலும் 90களின் விருதுத் திரைப்பட சாயலைக் கொஞ்சம் தவிர்த்து இருந்திருக்கலாம். கடைசிக் காட்சியில் வரும் அதீத உணர்ச்சியையும் கொஞ்சம் மட்டுப்படுத்தி இருக்கலாம். எதிர்பாராத திடுக்கிடலுக்கு ஏற்ற இதுவும் ஒருவகை யதார்த்தம்தானே என்றால் அதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மறுப்பதற்கில்லை. ஆனால் உச்ச காட்சிக்குப் பின்னர் அந்தச் சிறுவன் சாப்பிட அமர்வது கதையைத் தாண்டிப் பயணிப்பது போல் எனக்குத் தனிப்பட்ட அளவில் தோன்றியது.

மணிகண்டனின் திரைப்பட‌ வகையில் மாரி செல்வராஜின் படம் இது.

இப்படத்தில் இசைக்கு காது இளையராஜாவுக்காக ஏங்குகிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல் தேவா.‌ ஆனாலும் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

பூங்கொடிதான் பூத்ததம்மா பாடலின் தொடக்க இசை ஒலித்தபோது எனக்கு இறக்கை முளைத்தது நிஜம். இந்த அவஸ்தையை இயக்குநரும் அனுபவித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

திருநெல்வேலி வட்டாரத் தமிழைக் கொலை செய்யாமல் நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக திருநெல்வேலி கிராம வட்டார வழக்கைக் கச்சிதமாக அந்த இரு சிறுவர்களும் இன்னும் முகம் தெரியாத பல நடிகர்களும் பேசுகிறார்கள். கதாநாயக நாயகிகள் வழக்கம்போல் சில இடங்களில் சரியாக திருநெல்வேலித் தமிழையும், சில இடங்களில் வாய்க்கு வந்த தமிழையும் பேசிக் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்றாலும், முழுமையான அளவில் திருநெல்வேலி வட்டாரத் தமிழ் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலிக்கே உரிய வட்டார வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் சிறப்பு.

தங்கலான் எனும் அதீத‌ நடிப்புச் செயற்கைக் காவியம் தந்த ரணத்துக்குக் கொஞ்சம் களிம்பு பூசி இருக்கிறது இந்த யதார்த்தம்.

Share

Thangalaan

தங்கலான் – ரஞ்சித்தின்‌ பலமே யதார்த்தத்தில் அரசியல். நுணுக்கமான காட்சிகள். இந்த இரண்டும் இல்லாமல் ஒரு படமாய் வந்திருக்கிறது தங்கலான்‌. தங்கத்தைத் தேடுவதில் அரசியலை நுழைக்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நில உரிமை என்று பேசுகிறார்கள். மாய யதார்த்தம் என்று‌ வைத்துக்கொண்டு ஜல்லியான திரைக்கதை. ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் ஏன் எப்போதும் அடிவயிற்றில் இருந்து நரம்பு தெறிக்கப் பேசுகிறார்கள்? யார் இந்த இயக்குநர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுத்தது? ஒருவர் விடாமல் அனைவரும் வளவளவென்று பேசியே சாவடிக்கிறார்கள். அதிலும் என்னவோ ஒரு காலத் தமிழ். ஆனால் பாட்டு பாடும்போது மட்டும் இன்றைய தமிழாம்! எல்லாக் காலகட்டத்திலும் பிராமணர்களே எதிரிகள் என்று வலுக்கட்டாயமாகக் காட்டி, புத்தரை திணியோ திணி என்று திணித்திருக்கிறார்கள். கடைசி காட்சியில் ஏன் விக்ரம் கதாபாத்திரத்துக்கு உண்மை தெரிந்தது? அது முதல் காட்சியிலேயே தெரிந்து தொலைத்திருந்தால்தான் என்ன? இத்தனை நீளப் படத்தில் ஒரு காட்சி கூட ஒட்டவில்லை. விக்ரம் இத்தனை கஷ்டப்பட்டு ஏன் ஓவர் ஆக்ட் செய்தார் என்றே புரியவில்லை. உள்ளொழுக்கு படத்தில் ரசித்த பார்வதியை வெறுக்க இந்த ஒரு படம் போதும். இதில் பாடாவதியான கிராஃபிக்ஸ் வேறு. மொத்தத்தில் ஒட்டாத குறியீட்டுச் செயற்கைத்தனத்துடன், பாலாவின் படம் போன்ற ஒரு ரஞ்சித் திரைப்படம். பாலாவின் பரதேசி படமும் இப்படித்தான் இருந்தது.

Share

Golam

கோளம் (M) – தவற விடக் கூடாத ஒரு திரைப்படம். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு. ஆட்டம் திரைப்படம் போல. கொலையாளிகளின் பக்கம் நின்று‌ அவர்கள் கொல்வதை நம்மை ரசிக்க வைத்துவிடுவது திரைக்கதையாக எவ்வளவு பெரிய வெற்றி! குறைந்த வசனங்கள், நல்ல பின்னணி இசை என அசத்தி இருக்கிறார்கள். அவர்கள் முகத்தை மறக்க முடியாது என்று டாக்டர் சொல்லவும் அந்த 13 பேரும் நிற்கும் ஃப்ரேம் மறக்க முடியாத காட்சி. ப்ரைமில் கிடைக்கிறது.

Share